என் குழந்தையும் நானும்!

வித்யாசாகர்



நீ சிரிக்கிறாயென
நான் செய்ததையெல்லாம்
வேறெந்த -
பைத்தியக் காரனும்
செய்திருக்கமாட்டான்;
நிறைய -
அப்பாக்கள் செய்திருக்கலாம்!
----------
நீ என்
மடி மீது படுத்து
பால் குடித்துக்
கொண்டிருக்கிறாய்;

நானுன் -
மடியில் பிறக்கும்
வரம் கேட்டு மீள்கிறேன்!
------------
நீ -
என் செல்லமா
அப்பா செல்லமா
எல்லோரும் கேட்கிறார்கள்;

நாங்கள் தான்
உன் செல்லமென
அவர்களுக்கெப்படித்
தெரியும்!
------------
நீ தூங்கும் போது
பாடும் -
தாலாட்டில்
எந்த ராகமும் இல்லை;
நான் -
அம்மா என்பதை தவிர!
------------
உன்
பிஞ்சு விரல்கள் பதிய
எனை -
கட்டிப் பிடித்துத் தூங்குகிறாய்;

எடுத்துவிட்டால்
எழுந்துவிடுவாயென
எடுக்கவுமில்லை
உறங்கவுமில்லை
நீ தூங்கும்வரை
விழித்திருக்கிறேன் நான்!
------------
ஓரிரு பருக்கைகள் தான்
கீழே விழுகின்றன
நீ எடுத்து வாயில் வைக்கையில்
மிரட்டி -
நீ கீழே போட்டதும்
எடுத்து எங்கோ வீசுவேன்.
நீ நானென்னவோ நீ தின்பதை
பறித்துக் கொண்டதாய்
பார்ப்பாய்.
வேறென்ன, நான் கையில் வைத்திருக்கும்
உனக்கான ஒரு தட்டு சோறு
நான் தின்னாத மிச்சமென
உனக்கு தெரியவா போகிறது!
-------------
இங்கே வா
இதை எடுக்காதே
அதை செய்யாதே
அங்கே போகாதே
அடிப்பேன்.. உதைப்பேன் என்றெல்லாம்
மிரட்டுகையில்,
உனக்கு என் மீது
கோபம் வரும்போல்;
கண்களை கசக்கி நீ
என்னையே பார்ப்பாய்.

நீ மீண்டும் அங்கே போய்
அதை எடுத்து
எதையேனும் செய்து
எங்கேனும் போய்
எனை ஏமாற்றிவிட்டதாய்
துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய்
நான் மீண்டும் காத்திருப்பேன்!


vidhyasagar1976@gmail.com