கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!

வித்யாசாகர்

எழுதி நிறைந்ததில்
கவிதையானது - கதைகளானது - புத்தகமானது;
கிழித்து கிழித்து எரிந்ததில் -
குப்பையானது; காகிதம்!

கண்ணீரில் மை தீட்டி,
எண்ணம் வார்த்ததில் கடிதமானது;
நினைவுகளை சுமந்து வந்ததில்
பொக்கிசமானது; காகிதம்!

கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது
காலம் கடந்ததை எழுதி வரலாறானது
காலிடறி பட்டாலும் தொட்டுக்
கும்பிடவைத்தது; காகிதம்!

எரிந்ததில் சாம்பலானது
எழுதிவைக்க குறிப்பேடானது
நேரம் காலம் குறித்ததில் நாளேடானது
நேற்றையும் இன்றையையும் எழுதி வைத்ததில்
நாட்குறிப்பானது; காகிதம்!

வண்ணம் தீட்டியதில் ஓவியமானது -
கையொப்பமிட்டதில் காசோலையானது
அரசு -
அளவு குறித்து முத்திரை பதித்ததில்
பணமானது; காகிதம்!

நீதிமன்றதில் சட்டமானது
நீதிக்கதைகள் சொன்னதில் இதிகாசமானது
தவறு செய்தவனை தண்டிக்க சாட்சியானது
இன்றையினை எழுத்தாய் சுமந்து
நாளையின் வரலாற்றில் - சுவடுகளாய் மிஞ்சியது; காகிதம்!

காதலி கைபட்டதில் உயிருமானது
காதலியின் உருவம் சுமந்து புகைப்படமானது
கல் மண் காற்று வானத்தின் விவரம் கூட
காகிதமே சொன்னது.

ஆக, இத்தனை ஆனதில்
எத்தனை அழிந்ததென்று
காகிதம் அறிந்திட
வாய்ப்பில்லை, ஆனால் -

மரங்களை அழித்து; காடு வளம் குலைத்து
மழையினை குறைத்து -
இயற்கையின் மொத்த அழிவிற்கும்
மறைமுகமாய் காரணமானது; காகிதமே! காகிதமே!!


vidhyasagar1976@gmail.com