நள்ளிரவின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

நடுத்தெருவில் விளையாடும்
பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும்
இரவொன்றின் பாடலை
நான் கேட்டேன்

மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய
எந்தப் பதற்றமுமின்றி
துள்ளுமவற்றைத் தாங்கிக்
கூட விளையாடுகிறது
சலனமற்ற தெரு

யாருமற்ற வீட்டின் கதவைத் தாளிட்டு
அந்த நள்ளிரவில் தெருவிலிறங்கி
நடக்கத் தொடங்குகையில்
திசைக்கொன்றாகத் தெறித்தோடி
எங்கெங்கோ பதுங்கிக் கொள்கின்றன
மூன்று குட்டிகளும்

நான் நடக்கிறேன்
தெரு சபிக்கிறது
நிசி தன் பாடலை
வெறுப்போடு நிறுத்துகிறது

இந்தத் தனிமையும்
இருளும் தெருவும்
வன்மம் தேக்கி வைத்து
எப்பொழுதேனுமென்னை
வீழ்த்திவிடக் கூடும்





mrishanshareef@gmail.com