அரசைக் கைது செய்வோம்

பாவலர்  கருமலைத்தமிழாழன்
 

விஞ்சுகின்ற போதையினைத் தருவ தாலே
       விற்பனைக்குத் தடைசெய்த பொருளா மென்றே
கஞ்சாவை விற்றவரைக் கைது செய்து
      காவலர்கள் அடைத்தார்கள் சிறையி னுள்ளே !
நஞ்சாகும் வாழ்க்கையினை நாச மாக்கும்
      நல்லறிவை மழுங்கடித்து மயங்க வைக்கும்
எஞ்ஞான்றும் உடலுக்குத் தீமை செய்யும்
     என்பதாலே வைத்திருத்தல் குற்ற மென்றார் !

ுற்றுநோயை உண்டாக்கும்1 போதை யேற்றிப்
     புலனைந்தின் செயல்பாட்டை முடங்கச் செய்யும்
குற்றங்கள் பலவற்றைப் புரியச் செய்யும்
     குட்காவென் றதனைவிற்கத் தடைவி தித்தார் !
முற்றாக ஒழிக்காமல் காவல் காரர்
    முன்நின்றே உதவுகின்றார் என்ப தற்காய்க்
குற்றவாளி என்றுகடைக் கார ரோடு
    கூண்டினிலே நிற்கவைத்துச் சிறைய டைத்தர் !

போதையினைத் தருமிந்தப் பொருளை யெல்லாம்
    பொறுப்புடனே தடைசெய்த அரசாங் கந்தான்
போதைதரும் என்றறிந்தும் மதுக்க டையைப்
    பொழுதெல்லாம் திறந்துளது தெருக்கள் தோறும் !
பாதைமாறி இளைஞர்தாம் பாழா தற்குப்
    படுகுழியை வெட்டிட்ட அரசாங் கத்தின்
காதையார் திருகுவது எனநிற் காமல்
    காவலராய் நாமெழுவோம் கைது செய்வோம் !

 

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்