புதுமலர் தூவி வரவேற்போம்!         (அந்தாதி)

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்

 

 

எங்கும் மங்கலம் பொங்குகின்ற
இனிய
தமிழர் நாளாகப்
பொங்கற்
திருநாள் மலர்கவென
புதுமலர்
தூவி வரவேற்போம்! 

வரவேற் கின்ற பொங்கல்நாள்
வாழ்வில்
அமைதி தருமென்று
உரமாய்
மனதில் நினைத்திடுவோம்
உள்ளம்
மகிழ்ந்து அழைத்திடுவோம்!

அழைக்கும் தமிழர் புத்தாண்டு
அமைதி
கொடுத்து நம்பிக்கை
தழைக்கும்
ஆண்டாய் மாறிடநாம்
தமிழர்
சேர்ந்து பணிபுரிவோம்!

புரியும் பணிகள் எல்லாமே
புதிய
வாழ்வைத் தமிழர்முன்
விரியச்
செய்ய வேண்டுமென
விரும்பி
நாங்கள் செயற்படுவோம்!

செயலில் உள்நோக் கில்லாமல்
சேர்ந்து
தமிழர் உழைத்தாலே
உயரும்
தமிழர் வாழ்வென்று
உளமாய்
ஏற்று நடந்திடுவோம்!

நடந்த பழைய வரலாற்றை
நாங்கள்
மறந்து போகாமல்
தொடர்ந்து
புதிய வரலாறு
தோன்ற
முயற்சி மேற்கொள்வோம்!

மேற்கொள் கின்ற முடிவெல்லாம்
மிஞ்சி
நாளை வாழ்வோரும்
ஏற்கும்
வண்ணம் இருந்திடநாம்
இணைந்து
செயலில் இறங்கிடுவோம்!

இறங்கி யாற்றும் செயல்யாவும்
எமக்கு
விடிவைத் தருகின்ற
சிறந்த
தொண்டைச் செய்திடுவோம்
சிறிதும்
பாரோம் தன்னலத்தை.

தன்னலம் துறந்த மனிதர்களாய்
சமூகம்
மதிக்கும் புனிதர்களாய்
உன்னால்
முடிந்தால் மாறிவிடு!
உழைத்து
இன்பம் பொங்கவிடு!!

பொங்கும் இன்பம் தமிழர்க்குப்
பொங்கும்
நாளாய் உருமாறி 
எங்கும்
துளிர்க்க வழிசெய்வோம்!
இனிய
பொங்கல் நாளிதிலே!!

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்