கொரோனா   இது  சரிதானா

பாவலர்  கருமலைத்தமிழாழன் 


நுண்ணுயிரி   தீநுண்மி   கிருமி   என்று
         
நுவல்கின்ற   உயிர்கொல்லி !  கள்ளன்  போன்றே
கண்ணுக்குத்   தெரியாமல்   காற்றின்   மூலம்

         
கண்காது   வாய்மூக்கின்   வழியே   சென்று
தொண்டையிலே   தங்கிமெல்ல   நுரையீ   ரல்மேல்

         
தொற்றிப்பல்   லாயிரமாய்க்   குட்டிப்  போட்டு
வெண்ணெய்போல்   சளிசேர்த்து    மூச்ச   டைத்து

         
வேதனையைத்   தருகின்ற    கொரோனா   கூற்றே !
 

ஒன்றுகூடி   வாழவேண்டும்  என்று  முன்னோர்
         
ஓங்குரைத்த   சொல்மாற்றிப்   பிரித்து   வைத்தாய்
நின்றுநலம்   கேட்பதற்கும்   வழிய  டைத்தாய்

         
நிறைமுகத்தைத்   திரையிட்டு   மறைத்து   வைத்தாய் !
வன்முறைதாம்   வெடித்தபோல   நான்கு   பேர்கள்

         
வருவதற்கும்   நடப்பதற்தும்   தடைவி   தித்தாய்
பன்னூறு   தொழிற்சாலை   முடக்கி   வைத்தாய்

         
பட்டினியில்   பலபேரைத்   துடிக்க   வைத்தாய் ! 

இறைவனையும்   கருவறைக்குள்   பூட்டி   வைத்தாய்
         
இரவுபகல்   சாலைகளில்   வெறுமை   வைத்தாய்
பறையொலியே   நாள்முழுதும்    கேட்கு   மாறு

         
பாடைகளின்   ஊர்வலங்கள்   நடத்தி   வைத்தாய் !
கறைசெய்தான்   பூமிதனை ;  மாசு   சேர்த்துக்

         
காற்றுவானை   இயற்கையினைக்   கொன்றான்   என்றே
அறைந்துமாந்த   இனந்தன்னைத்   திருத்தி   டாமல்

         
அடியோடு   அழிப்பதுவோ   சரியா  சொல்வாய் !

 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்