அதிர வருவதோர் நோய்

கவிஞர் அ.இராஜகோபாலன்





தொட்ட போதி லொட்டு மாம்நம்
       தொடர்ந்து கைக ழுவல்கள்
விட்ட போது தொற்றி நோயில்
       வீழ்ந்தி றக்க நேருமாம்
ஒட்டி வாயில் மூக்கி னோடு
       கட்டு மூடி இல்லையேல்
கெட்ட நேரம் வந்த தாகும்
       கேடு வந்து சேருமாம்.

முன்ன ராய றிந்து காக்க
       முயன்று செய்த வாறெலாம்
பின்ன ரேதும் பயனி லாது
      போன தின்று காண்கிறோம்.
இன்னும் வேக வேக மாக
      எண்ணி லாத வாகியே
சொன்ன வாறி லாது மாறி
       சூழ்ந்து நின்று கொல்லுதே!

கண்ட போது நன்ப ரோடு
       கைகு லுக்க லின்றியும்
கொண்ட மேலை பாணி மேனி
      தழுவ லென்ப தின்றியும்
முண்டி மோதிச் சென்றி டாது
     மூன்ற டிக்கி டைவெளி
கொண்டு நாமும் சென்று நின்று
     கூடி வாழ்தல் நன்மையே!





                        

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்