இதுநம் மரபோ?

கவிஞர் இனியன், கரூர்.
 

(நேரிசை ஆசிரியப்பா)

வளரிளம் வயதினர் வகைவகை யான

இளமைக் கனவில் இன்புற் றிருப்பர்

கண்டதே காட்சி கொண்டதே கோலம்

கண்டதை எண்ணிக் கருத்தழி வார்கொல்!

பள்ளி  வயதில் கொள்ளும் காதல்

பாலினக் கவர்ச்சி; பிறிதொன் றில்லை

இதுதெரி யாமல் இவருள் சிற்சிலர்

மதுகுடிப் பாரென மயங்கித் திரிவர்

கைப்பே சிவழி கைக்கிளை யாக

பொய்க்கா தல்அது பைய வளரும்

முகநூல் வழிபொழி முத்த மழையில்

அகத்தில் காமம் அதிக விளைச்சல்

புதுவிடம் மறைந்து புணர்வா ருளரே

அதுதரு கருவை அழித்த லெனுமோர்

புதுவகை யான போக்குள திங்கே

இதுநம் மரபோ? எண்ணிப் பார்ப்பீர்.

பள்ளி  வயதில் காதல் கொள்ளல்

கொள்ளி யால்தலை வாரல் ஒக்கும்.

பள்ளிப் பருவம் துள்ளும் பருவம்

கொள்ளி நெருப்பாம் காதலில் சிக்கிப் 

பெற்றோ ருற்றோர் பெருந்துய ரெய்த

கற்றலில் தாழ்ந்து நிற்றலும் கூடும்!

இலக்கை அடையா திழிநிலை யுற்றே

உலக்கை எனவே ஒதுங்கி நிற்பர்

காதல் தீதே கற்கும் வயதில்

காதல் செய்யின் மோதல் நிகழும்

சாதலும் உண்டென சாற்றுவென்

ஆதலின் பதின்மர் காதல் தவறே!

 

             

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்