பகைவன்  யார்

பாவலர் கருமலைத்தமிழாழன் 

பகைவன்யார்  படையெடுத்துத்  தாக்கு  கின்ற

          பக்கத்து  நாடுகளா;  நெஞ்சிற்  குள்ளே

புகைகின்ற  காழ்ப்பாலே   அழிக்க  எண்ணும்

          புறத்தினிலே  தெரியாத  சுற்றத்   தாரா !

நகைத்தபடி   தோளின்மேல்  கையைப்  போட்டு

          நண்பனென   முதுகினிலே  குத்து  வோனா

தொகைதன்னைக்  கடனாகக்  கொடுத்துப்  பின்பு

          தொடர்ந்ததனைக்  கேட்டபதாலே   மாறு  வோனா !

 

யார்பகைவன்   நம்வாய்ப்பைப்  பறித்துக்  கொண்டு

          யாதொன்றும்  அறியான்போல்  எதிர்நிற்  போனா

பார்வையிலே  பரிவுதனைக்   காட்டல்   போன்று

          பக்கத்தில்  நின்றுகுழி  வெட்டு  வோனா !

ஊர்தன்னைக்   காப்பவன்போல்   இனிக்கப்  பேசி

          உள்ளவற்றைச்  சுருட்டுகின்ற  ஆட்சி  யோனா

மார்தட்டித்  தோள்தட்டிக்  கடுஞ்சொல்  வீசி

          மற்றவரை   அடக்குகின்ற  வலிமை   யோனா !

 

பொல்லாத  பகைவன்யார்   சாதி  தன்னைப்

          பொறித்திங்கே   கலவரத்தைத்  தூண்டு  வோனா

சொல்லினிலே   அச்சமூட்டி   மூடத்   தனத்தில்

          சொந்தறிவை   மழுங்கவைக்கும்  சூழ்ச்சி  யோனா !

இல்லையில்லை   அனைத்துவகை  பகைமை  கட்கும்

          இன்னலினை  வளரவைத்துத்  துடிக்க   வைக்கும்

இல்லையென்ற  வறுமையொன்றே   மூல  மாகும்

          இதையொழித்தால்  உலகமெல்லாம்   நட்பாய்  மாறும் !



             

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்