கூடித் தோண்டினால் மக்களுகுக் கோடி நன்மை!

மதுரை பாபாராஜ்

மாநக ராட்சியின் ஊழியர்கள் சாலையைக்
கோணலாகத் தோண்டுவார்! தங்கள் பணிகளை
ஆனமட்டும் செய்துவிட்டு மூடிவிட்டுச் சென்றிடுவார்!
சேனை பரிவாரம் சூழ தொலைப்பேசி
பாணமென ஊழியர் வந்திடுவார்! தோண்டுவார்!
கோணலை ஒட்டியே நேராக வெட்டுவார்!
தூண்போன்ற கேபிளை உள்ளே பதித்திடுவார்!
தோண்டியதை அங்குமிங்கும் மூடிவிட்டுச் சென்றிடுவார்!
வானலைக் கோபுர செல்போன் நிறுவனத்தார்
ஞானம் பிறந்ததுபோல் வந்து மறுபடியும்
ஊனமாக்கி நீளமாய் சாலையின் ஓரத்தை
ஏனோ அவசரமாய்த் தோண்டிப் பதித்திடுவார்!
மானத்தைக் காப்பதுபோல் சாலையை மூடிவிட்டு
போனவுடன் சாக்கடைத் தொட்டி பதிப்பதற்கு
வானத்தை சாலையோ பார்த்திருக்கத் தோண்டுவார்!
தோண்டுவார்! தோண்டுவார்! தோண்டித்தான் தோண்டுவார்!
தோண்டும் துறையனைத்தும் ஒன்றிணைந்து தோண்டுகின்ற
வேண்டுதல் தீருகின்ற காலமும் வாராதோ?
தூண்டிலுக்குள் மீனாகத் துள்ளித் தவிக்கின்ற
மாண்புமிகு பொதுமக்கள் துன்பங்கள் தீராதோ?
ஏனிந்த வெங்கொடுமை? சொல்.


spbabaraj@gmail.com