வரமான நிதர்சனம்

வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்.

விதையுள் உறங்கும் உயிராய்
விருட்சத்தை உசுப்பும் மழையாய்
முகிழ்ந்து நன்னூல்களான தமிழ்
தவழ்ந்து ஊன்றுகிறது என்னுள்.

காசினியில் காலூன்றத் தீவிரமாய்
தேசுகவியெழுதிப் பெயர் பதிக்க
மகிழ்ந்து நாளும் அருந்துவதால்
அவிழ்ந்து பாவாய்ப் பூக்கிறது.

தனிமையைக் கொல்லும் மந்திரம்
இனிய அறிவுப் பசி தீர்க்கும்
தனியே நான் வளைக்கும்
தனித்துவமான குறுமுனித் தமிழ்.

என்னைத் துன்புறுத்தாது தானாய்
உன்னி வழிந்து உலகுக்காய்
பின்னி உருவெடுக்கும் தமிழ்
இன்னலழிக்கிறது குளிர் நிலவாய்.

இதய வீணையின் நரம்பொலி,
விரல்களாற் குதிக்கும் தமிழ்ச்
சுரங்கள் தவிர உலகில்
வரமெனும் நிதர்சனம் எது!

அவமானம் ஏமாற்றங்களை யொரு
தவமாகத் தியானிக்கும் பெரும்
நவநவ உத்திகள் காட்டும்
சிவம் ' ஓம் ' எனும் தமிழ்.

என் இதயவயலில் தூவும்
தேன் தமிழோர் ரசனைப் பூவாம்.
கூன் விழுந்தோராய்ச் சிலர்
ஏன் தமிழென்பாரும் உளர்.


kovaikkavi@gmail.com