தீபாவளி சீர்வரிசை

வித்யாசாகர்

மார்மீது உதைக்காமல்
தோள்மீது சாய்ந்தவளே..
மனசெல்லாம் பாசத்தால
மழைபோல பெய்தவளே..

சீர்வரிசை தட்டெடுத்து
சின்ன அண்ணன் வாறேண்டி..
தெருவெல்லாம் -
கண்ணீரால் நனைக்காம என் முதல் பொன்னே ஓடியாடி!!

பட்டமரம் பூத்தது போல்
உன் மனசெல்லாம் பூத்திடுமா..
இந்த அண்ணன் முகம் பார்த்ததுமே -
பத்து வயதுனக்குக் குறைந்திடுமா..?!!

தூக்கி நான் தாலாட்ட
அண்ணா என்றுருகிடுமா..
உன் தீபாவளி வரிசையில
என் உயிரெல்லாம் கரைந்திடுமா?!!

குறும்பு செய்து சிரிப்பவளே
அடிக்கும் முன்னே அழுபவளே..

உன் சின்ன மனசு இதயத்துல -
அண்ணனையே -
உயிர்வரைக்கும் சுமந்தவளே ஓடியாடி..

ஒரு நாள் பிரிந்தாலே
ஓயாது அழுபவளே..

பள்ளிக்கூட  பையில் கூட
என் பிரிவை தூக்கிப் போனவளே..

காலை எழுந்து விழிக்கக் கூட
என் முகத்தையே கேட்பவளே.. ஓடியாடி..

கணவன் அடித்தானோ..
மாமியார் வைதாளோ..
நாத்தனா முறைத்தாளோ ..
துரும்பாட்டம் இளைத்தாயோ -
எனைக் கண்டதும்; பொய்யாய் சிரிப்பா???!!!

சிரிப்பு தான்.. சிரிப்புதான்..
உன் ஒற்றை சிரிப்புதான் போதுமடி -

அது என் ஆயுள் வளர்க்கும்
சாமியாடி..

ஆழிக் குள்ள புதைந்து போன
ஏஞ் சோகம் தீர்க்கும் வாஞ்சையடி!!

எனக்கு கருவா பிறந்தவளே..
மகளா பிறந்தவளே..

உனக்கு பாசத்துல பட்டுடுத்தி
கண்ணீரால் நகைபோட்டு
என் உயிரை பிடுங்கி வரிசை வைப்பேன்;

நீ -
உயிரோடில்லை யென்றே
எப்பவுமே நினைக்க மாட்டேன்!!




vidhyasagar1976@gmail.com