அறியாமை இருளும்; அறிவென்னும் ஒளியும்

'கவியன்பன்' கலாம், அதிராம்பட்டினம்                  
                                           
கனாவின் பலனறியா மனமாய்;
     கருவின் உருவறியா தாயாய்;
வினாவின் விடையறியா மாணவனாய்;
     விடியலின் வரவறியா இரவாய்;
பணத்தின் மதிப்பறியா குழந்தையாய்;
     படிப்பின் மதிப்பறியா பாமரனாய்;
உணவின் சுவையறியா உப்பில்லா
     உணவாய் அறியாமை இருளாமே

கனாவும் பலித்ததும் புரிதலாய்;
     கருவும் பெற்றபின் தெரிதலாய்;
வினாவின் விடையும் படிப்பிலாய்;
     விடிவெள்ளி கூறும் விடியலாய்;
பணத்தின் மதிப்பறியும் பருவமாய்;
     படித்தபின் பாமரனும் மேதையாய்;
உணவில் உப்பிட்டபின் சுவையாய்;
     உணரப்படும் அறிவும் ஒளியாமே

இறையை அறியா உள்ளமாய்;
     இல்லாளை அறியா கணவனாய்;
நிறையருள் அறியாச் சிந்தையாய்;
     நிம்மதி அறியா எண்ணமாய்;
இறப்பினை அறியா ஆன்மாவாய்;
     இம்மை அறியா வேடிக்கையாய்;
பிறப்பினை அறியாப் பிழைகளாய்;
     பிணைந்துள்ள அறியாமை இருளாமே

மறையைக் கொண்டு இறையும்;
     மகிழ்ச்சி கொண்டு மனைவியையும்;
நிறைந்துள்ளப் பேற்றினால் அருட்கொடையும்;
     நித்தமும் தியானத்தால் நிம்மதியும்;
திறந்திடும் அகக்கண்ணால் இறப்பினையும்;
     தீமைகளின் ஏமாற்றத்தால் இம்மையும்;
சிறந்த பிறப்பான உம்மையும்
     சிந்திக்கும் அறிவும் ஒளியாமே