கைகளிருந்தால்...

துவாரகன

எமக்குக் கைகளிருந்தால்
ஒருவரைக் கன்னத்தில் அறையலாம்
தடியால் அடிக்கலாம்
சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம்
இன்னும் எதுவும் செய்யலாம்

எமக்குக் கைகளிருந்தால்
ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம்
வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம்
நட்புடன் பற்றிக்கொள்ளலாம்
நாலுபேருக்கு உதவலாம்
நாட்டைக் கட்டியெழுப்பலாம்

கைகளில்லாவிடில்
எல்லாவற்றுக்கும் எல்லாநேரமும்
யாரையும் எதிர்பார்க்கக்கூடும்

ஒரு பயணத்தில்
கையிரண்டும் இல்லாமல்
மிகப் பிரயத்தனப்பட்டாள் அவள்.
ஆனாலும்
அவள் சிரித்தாள்
நட்போடு உரையாடினாள்

மனிதராயிருக்கிற மனிதருக்கு மத்தியில்
இன்னமும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
ஆதலால்
அவள் உயிரோயிருக்கிறாள்.

 

kuneswaran@gmail.com