யாரும் தடுக்காதீர்கள்

கவிஞர் இரா .இரவி

கொள்ளையடித்த பணம்
கொடுத்துவிட்டுப் போகட்டும்
மலையளவு அடித்த கொள்ளையில்
மடுவளவுதான் தருகிறார்கள்
நெற்றி வியர்வை தன்னை
நிலத்தில் சிந்தி சம்பாதிததன்று
குடிமக்களிடமிருந்து அடித்த பணம்
குடிமக்களுக்கே போகட்டும்
தேர்தல் நிதி என்று நியமனங்களில்
திரட்டிய பணம் செலவாகட்டும்
தேர்தல் செலவிற்கு என்று இடமாற்றங்களில்
திரட்டிய பணம் செலவாகட்டும்
தேர்தல் அறிவித்ததும் ஏழைகள் மகிழ்ந்தனர்
ஒரு வாரமாவது பசி போக்கலாம் என்று
யார் கொடுத்தாலும் வாங்கட்டும்
யாரும் தடுக்காதீர்கள் தயவுசெய்து
வறுமையில் பலர் வாடுவது உண்மை
வயிற்றுப் பசி போக்கட்டும்
வாழ்வாதாரங்களைச் சிதைத்துப் பெற்ற
வளமான செல்வங்களை செலவழிக்கட்டும்
கொடுப்பதை வாங்கிக் கொண்டு
கொடுத்தவர்களுக்குப் போடாதீர்கள்
மனதிற்கு நல்லவர் என்று தெரிந்தால்
மனதார வாக்களியுங்கள்
யாருமே நல்லவர் இல்லை என்றால்
யாருக்கும் இல்லை என்பதைப் பதியுங்கள்




eraeravik@gmail.com