திருநங்கைகள்

கவிஞர் இரா .இரவி

உயிர் எழுத்தும் மெய்  எழுத்தும் கலந்த
உயிர் மெய் எழுத்துகள்   திருநங்கைகள்

உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லை
திருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை

ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள்
அன்பு செலுத்துங்கள் அப்புறம் பாருங்கள்

அவர்களைப் போல நல்லவர்கள்
அகிலத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள்

நடனத்தில் சாதனை புரிந்த நர்த்தகி நடராஜ்
ஊடகத்தில் சாதனை புரிந்த ரோஸ்  

ஆண்பால் பெண்பால் இரண்டும் இல்லாத
மூன்றாம் பால் இவர்கள் திருநங்கைகள்

ஆண் இனத்திலும் சேர்ப்பதில்லை  
பெண் இனத்திலும் சேர்ப்பதில்லை 

தனி ஒரு இனமாக எல்லோரும்  பார்க்கிறார்கள்
தனிப்படுத்தப் பட்டதை எண்ணி வருந்துகிறார்கள்

குடும்பத்தில் தொடங்கிய புறக்கணிப்பு
சமுதாயத்திலும் தொடர்வது வெறுப்பு

திரைப்படங்களில் காட்டிய கேலி கிண்டல்
தெருவெங்கும் தொடர்கையில் வேதனை

பார்ப்பவர்கள் சிரிக்கையில் உள்ளத்திற்குள்
அழுகிறார்கள்  என்பதை யாரும்  உணர்வதில்லை
 
ஏன்? இப்படி ஆனோம் என்று தினமும்
எண்ணி  எண்ணி வருந்துகின்றனர்

திருநங்கையாகப் பிறந்தது அவர்கள் பிழையன்று
இயற்கை செய்த பிழைதான் இன்று

ஆதியில் தெரிவதில்லை திருநங்கை என்று
பாதியில் வந்த மாற்றம்தான் இது 

உழைத்து வாழ விரும்பினாலும்
உழைக்க வாய்ப்பு வழங்குவதில்லை

மனிதநேயம் மனிதர்களுக்கு வேண்டும்
மனிதநேயம் மறந்தால் மனிதனே அன்று

சங்கடப் படும் படி தயவுசெயது  பார்க்காதீர்கள்
சக மனுசியாக எல்லோரும் நேசியுங்கள் 
       

eraeravik@gmail.com