அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!

வித்யாசாகர்

திறக்காத கதவின்
மனத் தோன்றல்களாகவே
சப்தமிழந்துக் கிடக்கின்றன நம் முயற்சியும்
லட்சியங்களும் நம்பிக்கையும்..

வீழும் மனிதர்களின்
ஏழ்மை குறித்தோ அவர்களின்
பசி பற்றியோ
பிறர் நலமெண்ணி வாழாமையோ மட்டுமே
வீழ்த்துகிறது - நம்
சமூகம் தழைக்கச் செய்யும் மனிதத்தை;

தெருவில் கிடப்பவர்
யாரென்றாலும் விடுத்து
அவர் மனிதர் என்பதை மட்டுமேனும்
கருத்தில் கொண்டு அக்கறை வளர்த்தல்
நாம் இழக்கும் ஓர் -
உயர் உணர்வாகி வருகிறதே தவறில்லையா?

ஓடுடைத்து உலகைப்பார்க்கும்
பறவையின் உயரம் தாண்டியே
காத்துக்கிடக்கிறது நமக்கான வெற்றிகளும்
வாழ்வின் வசந்தமும் என்பதை
இளைய சமதாயம் -
முற்றிலும் உணர்வதென்பது நம்
எதிர்காலக் கனவுகளின் பலமில்லையா??

சொடுக்கி முடிக்கும் அத்தனை
சாதனைகளையும்
சூழ்ச்சுமமுடைத்து
விரல்நுனியில்  நிறுத்தும்
கொம்பன்களின் துணிவுக்கு
வாய்ப்பென்னும் வாசல் திறக்க
முயற்சியென்னும் சாவிகளெல்லாம் அதோ
வானில் குவிந்த நட்சத்திரங்களாய்
கைக்கெட்டியே கிடப்பதை அகல விரிந்த கண்களே
பார்த்தும் முயற்சித்தும் வென்றும் விடுகின்றன' என்பதை
ஏன் நீயும் நானும் -
சரிசமமாய் உணர்வதில்லை???

வெளியில் காட்டாத திறன்
இறுகி இராத மனோதிடம்
எடுத்தாய்ந்துக்கொள்ள இயலாத் தெளிவு
இயல்பாய் இருந்திடாத உண்மை நிலை
எடுத்தாண்டிடா முயற்சி
இரும்பெனக் கொள்ளாத நம்பிக்கை
இருப்பதில் நகர்ந்து வெல்லும் உத்தி
அல்லது உறுதியென நீளும் -
பொத்தான்களில்லாத சட்டைதான் நம்மை
உலகின் பார்வையில் வெற்றியணியா நிர்வாண
மனிதர்களெனக் காட்டிவிடுகிறது..,

உயிரணையும் கடைசி தருணத்தில்
காற்றுமறைத்த கைகளென நம்பி
அந்த ஒவ்வொரு பொத்தான்களையும்
வாழ்வென்னும்
சட்டைக்கென
நம்பிக்கையோடு கட்டிவருவோம்;

மெல்ல மெல்ல நகர்ந்து நாளை
உச்சி ஏறி நிற்கையில்
வெற்றியோ அல்லது
அதை போதிப்பதற்கான அனுபவ அறிவோ
நம் உயிர்பையில் நிறைந்து
பெயருக்குப் பின் விழுந்து கிடக்கையில்
கண்ணடைக்குமந்த
கடைசிநாளில் -
வெளிச்சமான உலகில் கலக்கும்
அணையா ஜோதியாய்
சுடர்விட்டு எரியட்டும் நம் உயிர்விளக்கு,

விளக்குகளின் ஒளிவெண்மையில்
ஜொளிக்கட்டும் இப்போதைய கருத்த மனிதம்!!




vidhyasagar1976@gmail.com