முரண்...

லறீனா அப்துல் ஹக், இலங்கை

சுற்றிச் சுழன்றடிக்கும் சூறைக்காற்று வந்து
ஓங்கி
அறைந்து சாத்திற்று
என்
மனசின் கதவுகளை...

உச்சிக்கிளையின் ஒய்யாரப் பூவை
எட்டிப்
பறித்தெடுத்த மகிழ்ச்சியரும்புதற்குள்
குத்திக்கிழித்ததொரு
முள்ளின் வெற்றிமட்டும்
ரத்தத்துளிகளாய்
சிந்திற்றென் விரலிடுக்கில்...

நிதானம் தவறியோ வேண்டுமென்றோ
உடைத்துத்தான்
விட்டாய், நீ -இனி
நியாயப்படுத்தல்கள்
எத்தனை இருந்துமென்,
ஒட்டவைக்கவா
முடியும்
சிதறிச்
சிதிலமான - ஒரு
கண்ணாடிப்
பாத்திரத்தை?

தீக்குச்சியொன்றை உராய்ந்து பற்றவைக்கும்
அதே
கணப் பொழுதுக்குள்
குமுறிக்
குமுறியழும் கண்ணீர்நதியொன்றை
கடந்து
போகின்றாய், நீ.
வெற்றிப்
பெருமிதமோ
குறுகுறுத்துக்
குறுக்கறுக்கும்
குற்றமுள்ள
மனதின் படபடப்பை
மற்றவர்
அறியுமுன்பு 
மறைக்கும்
அவசரமோ
காரணத்தை
யாரறிவார்

சிட்டுக் குருவியொன்றின் 
சிறகுடைத்துச்
சிறையிலிட்டும்
பட்டும்படாமலுமோர்
 
புன்னகையை
மேலுதட்டில்
பூசித்
திரிதலென்ன
பேசரிய
சாதனையோ,

விட்டில் எரிதழலில் 
வீழ்ந்தழிந்து
போவதனைப்
பாட்டில்
எழுதிடுவார்
பாவமென்பார்
பலதுரைப்பார்
வீட்டில்
ஆறறிவு உள்ளதொரு 
ஜீவனையே
தளைகளிட்டு
பூட்டிடுவார்
பெண்பெருமை 
பேசிடுவார்
மேடையெங்கும்!  


lareenahaq@gmail.com