பூமுகம்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

மொழியின் கிரீடமதை விரல்களிலேந்திச்
சூடிப்
பரவசிக்கும்
 
கர்வம் மிகைத்த கணங்களிலும்
பேரழகியலின்
முகடுதனில்
பாதி
ஒடுங்கிய முகில் போர்த்தபடி
நுகர
முனைந்து வெடவெடக்கையிலும்
ஒளிருமது
தொடர்பில்
பேசிபேசிக்
களிக்கையிலும் மட்டுமன்றி
வேலிக்கதியாலோடு
ஒன்றிப் படர்ந்தேறும்
 
பசுங்கொடியின் செவ்விளம்பூ
அதன்
அகன்ற கிடுகுப் பின்னலுக்குள்
முகம் புதைந்து தரும் வெகுஅபூர்வமான
தரிசனங்களுக்குள்ளும்
கூட
தவிர்க்க
முடியாதபடி
தலைநீட்டுதே
உன் பூமுகம்.


sfmali@kinniyans.net