தித்திக்கும் தீபாவளி !

எம்.ஜெயராமசர்மா -. அவுஸ்திரேலியா



               
 

னமெல்லாம் ஒன்றுபட்டு
மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுத்து
தினமெங்கள் வாழ்வுவரின்
தித்திக்கும் தீபாவளி !

பட்டாசு மத்தாப்பு
பட்சணங்கள் அத்தனையும்
சுற்றிவந்து நின்றுவிடின்
சுவைத்துவிடும் தீபாவளி !

எத்திக்கும் உள்ளவெங்கள்
இரத்தபந்தம் எல்லாரும்
எங்களிடம் வந்துநின்றால்
இனித்துவிடும் தீபாவளி !

புத்தாடை தனையுடுத்தி
புத்துணர்வு கொண்டவராய்
புன்முறுவல் முகம்வந்தால்
பூத்திடமே தீபாவளி !

மதங்களால் மோதும் மனம் மாறிவிட்டால்
இனங்களை சிதைக்கும் குணம் மாறிவிட்டால்
மதுபோதை என்னும் வெறி மாறிவிட்டால்
மண்மீது என்றும் நல்ல தீபாவளிதானே !

பட்டாசு வெடிப்பதை பக்குவமாய் வெடித்தால்
பட்சணங்கள் உண்பதையும் பக்குவமாய் செய்தால்
பலபேரின் மனத்தினையும் மகிழ்ச்சிபெற வைத்தால்
பலநாளும் எங்களுக்குத் தீபாவளி அன்றோ !

நரகாசுரராக நாம்மாறி இருந்து கொண்டே
லாபநட்டம் பேசுவதில் நியாயமென்ன இருக்கிறது
நம்மனதில் அசுரகுணம் நமைவிட்டே அகன்றுவிடின்
நமக்குநல்ல தீபாவளி நாளுமே வந்துநிற்கும் !

மத்தாப்புக் கொளுத்துகின்றோம் மதவெறியும் ஊட்டுகின்றோம்
சத்தியத்தை தர்மமதை தலைகுனியச் செய்கின்றோம்
மாபாதகம் அனைத்தும் மனத்தைவிட்டு வெளியேற்றி
தீயதெல்லாம் தீயிடுவோம் தீபாவளித் தினத்தில் !

தீபாவளித் தினத்தில் சிறுவர்களைக்  காத்திடுங்கள்
தீயினால் வருங்கேட்டை தினம்மனதில் எடுத்திடுங்கள்
மத்தாப்பும்  பட்டாசும் மனமகிழ்ச்சி தந்திடினும்
மனம்வருந்தச் செய்துவிடும் மகிழ்ச்சியையும் போக்கிவிடும் !

ஆதலால் அனைவருமே அகமகிழ்ந்து நிற்பதற்கு
அவசரத்தைக் கைவிட்டு அயர்வகற்றி நின்றிடுவோம்
கோபமதை குறைத்திடுவோம் குணமுயர்வு பெற்றுநிற்போம்
பூதலத்தில் தீபாவளி பொலிவுபெற நாமிணைவோம் !

கோவில் சென்றுகும்பிடுவோம் குறைசொல்லல் தவிர்திடுவோம்
பாவநிறை அத்தனையும் பறந்தோடச் செய்திடுவோம்
தோழமையை வளர்த்திடுவோம் சுயநலத்தை விட்டிடுவோம்
யார்மனமும் நோகாமல் நல்லதீபம் வைத்துநிற்போம் !