பெய்யென பெய்த மழை

கவிஞர் இரா. இரவி



றட்சியின் போது வேண்டினோம் பெய்தாய்!
வெள்ளத்தின் போதும் பெய்வது முறையோ?

தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!

பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!

ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல
அடைமழையும் நஞ்சுதான் உணர்ந்தோம்.

மொட்டை மாடியில் மூன்று நாள் தவித்தனர்
மறுபடியும் முதலில் இருந்து பெய்வது சரியா?

கழுதைக்கு கல்யாணம் செய்வித்தது தவறு தான்
கண்மூடித்தனமாக செய்ததற்கு வருந்துகின்றோம்

பெய்யென பெய்த மழையே இனி நாங்கள்
போதும் என்கிறோம் நின்று விடு! வாழ விடு!

மூன்று மாதத்து மழையை ஒரு நாளில் பொழிந்தாய்
மூழ்கி தத்தளிக்கும்படி ஆனது வாழ்க்கை!

அழைத்த போதும் வந்தாய் சரி இப்போது
அழையா விருந்தாளியாய் வருவது ஏனோ?

குடை மழைக்கு காட்டும் கருப்புக்கொடி என்றார்
குடை பிடிக்கிறோம் மழையே போய்விடு!

இரமணன் சொன்ன போது வரவில்லை சில நாள்
இரமணன் சொல்லாத போதும் வருவது ஏனோ?

சாரல் மழையில் நனைந்து மகிழ்ந்ததுண்டு
சாடும் மழையாக நீ ஆனது ஏனோ?

விடுமுறை என்றதும் மாணவர்கள் மகிழலாம்
விடுமுறையில் தொழிலாளிக்கு கூலி கிடைப்பதில்லை!

வெளியேற முடியாமல் தவித்தனர் பலர்
வீடு மூழ்கி வேதனையில் வீழ்ந்தனர் சிலர்!

சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் ஆனால்
பெருதுளி மாபெரும் வெள்ளமாகி வாட்டியது

வெயிலே வா! வா! மழையே போ! போ!
வேதனையில் பாடும்படி ஆனது இன்றோ!

ஆங்கிலப்பள்ளியில் பயிலும் குழந்தைகள்
அடிக்கடி பாடினர் மழையே போ! என்று

இப்போது தான் அந்தப்பாட்டு பொருளுடையதானது
இப்போதைக்கு மழையே வராதே போ! போ!

ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்

பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.