உலகம் போற்ற வாழ்கிறார் !

கவிஞர் எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்
 

த்தியின்றி ரத்தமின்றி
     யுத்தமொன்று நடத்திய
உத்தமராம் காந்திமகான்
     உயர்வுபெற்று நிற்கிறார்
சத்தியத்தை மனதிலேற்றி
     சாதனைகள் செய்திட்ட
உத்தமராம் காந்திமகான்
     உலகம்போற்ற வாழ்கிறார் !

உணவைமாற்றி உடையைமாற்றி
     உள்ளமதை உறுதியாய்
தெளிவையூட்டி சிறப்பைக்காட்டி
     சிந்தனையை ஊட்டினார்
அழிவில்லாத வழியைக்காட்டி
     அன்புகருணை பேசியே
அகிலவுலகும் போற்றும்வண்ணம்
     அண்ணல்காந்தி வாழ்கிறார் !

உண்ணாநோன்பை உலகம்வியக்க
     உத்தமரும் காட்டினார்
மண்ணின்மாண்பை வியந்துநின்று
     மகான்காந்தி போற்றினார்
தன்னைபெற்ற தாயைக்காந்தி
     தலைவணங்கி நின்றிட்டார்
தரணிபோற்றும் மனிதராக
    காந்தியின்று வாழ்கிறார் !

அடக்குமுறை வெள்ளையரை
    அஹிம்சையாலே வென்றிட்டார்
அன்புகொண்டு காந்திமகான்
     அனைவரையும் அணைத்திட்டார்
அரக்ககுணம் காந்திமுன்பு
     அழிந்தொழுந்து போனதால்
அண்ணல்காந்தி உலகமெங்கும்
     அன்புருவாய் வாழ்கிறார் !

சாந்தி சமாதானம்காண
     காந்திமகான் உழைத்திட்டார்
சக்தியெலாம் ஒன்றுசேர்த்து
     சரித்திரமே படைத்திட்டார்
நீதியினைத் தெய்வமாக்கி
     நெஞ்சமதில் நிறைத்திட்டார்
நீங்காமல் உலகமெங்கும்
     நின்றுகாந்தி வாழ்கிறார் !
 







 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்