நன்றி கூறிடுவோம்!

கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம்
 

மிழர் கலைபண் பாடுகளை – என்றும்
தமிழர் காத்துப் பேணுதற்குத்
தமிழர் மரபுத் திங்களிது – நமக்குத்
தந்த வாய்ப்பின் பயன்பெறுவோம்!

மரபுத் திங்கள் தையென்று – தமிழர்
மகிழ்வாய்ச் சேர்ந்து கொண்டாட
அரசு வழங்கிய வாய்ப்பிதனை – நாங்கள்
அனைவரும் ஏற்றிப் போற்றிடுவோம்!

தமிழர் கனவை நனவாக்கி - எமக்குத்
தந்த கனடா அரசிற்குத்
தமிழர் மரபின் வழிநின்று – நாங்கள்
தயவாய் நன்றி கூறிடுவோம்!

இனவுணர் வோடெம் ஒற்றுமையை - இங்கு
எடுத்துக் காட்ட அணிதிரள்வோம்!
மனமகிழ் வோடு கைகோர்த்து – எங்கள்
மதிப்பைக் காக்கப் பணிபுரிவோம்!!

பல்லினம் வாழும் கனடாவில் - எங்கள்
பண்டைத் தமிழர் பெருமைகளை
சொல்லிட வைக்கும் திங்களிதில் - நம்
தொன்மை அறிந்து பிறர்க்குரைப்போம்!

எங்கள் பெருமை நாமறிவோம்! - பின்னர்
எடுத்ததைப் பிறர்க்கும் உணர்த்திடுவோம்!!
எங்கும் என்றும் தமிழ்வளர்க்க – இங்கு
இளையோர் நாங்கள் முன்வருவோம்!
 







 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்