காந்திமகான்

பாவலர் கருமலைத்தமிழாழன்
 

மிழகத்து வள்ளியம்மை கண்ட ளித்த
       தவமணிதாம் காந்திமகான் ! தில்லை யாடி
நிமிர்ந்துநிற்க மண்தொட்டு வணங்கி சென்னி
       நிமிர்ந்தவர்தான் காந்திமகான்! தென்னாப் பிரிக்கா
அமிழ்தாகக் கடைந்தெடுத்து அள்ளித் தந்த
       அண்ணல்தாம் காந்திமகான்! புவிவி யக்க
அகிம்சையெனும் புதுவழியில் வெற்றி கண்ட
       அறமகன்தாம் காந்திமகான்! நாட்டின் தாயாம் !

நிறையாடை இல்லாமல் தமிழ கத்தில்
       நின்றிருந்த விவசாயி கோலம் கண்டே
அரையாடை அரைகட்டி இந்தி யாவை
       அடியடியாய்க் காலடியால் அளந்த வர்தாம்
திறைசெலுத்த மறுத்தவீர கட்ட பொம்ம
       தீரன்போல் நேத்தாசி எழுந்த போதும்
சிறைக்குள்ளே நேருவுடன் பொறுமை காட்டிச்
       சிந்திக்க வெள்ளையனை வைத்த வர்தாம் !

வீதிவழி இரவில்பெண் தனியாய் செல்லும்
       விரிந்தராமர் ஆட்சியினை விழைந்த வர்தாம்
நீதிநெறி சத்தியமும் உண்மை யொன்றே
       நிலைத்தவாழ்வைத் தருமென்று வாழ்ந்த வர்தாம்
சாதிமதப் பேதமற்ற நாடாய் ஆக்கும்
       சாந்திவழி தனிலுயிரை விட்ட வர்தாம்
போதிமரப் புத்தரேசு பிறப்பாய் வந்து
       பொலிந்தமகான் காந்திவழி நடந்தால் வாழ்வோம் !
 





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்