வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம் !

கவிஞர் எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்



நிலவென்போம் மலரென்போம் நீதானே உலகென்போம்
       அழகெல்லாம் உன்னிடத்தே ஆரம்பம் ஆகுதென்போம்
வரமாக வந்திருக்கும் வாழ்வென்று கூறிநின்று
       வையத்தில் மகளிர்தமை வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம் !

பொன்னென்போம் புகழென்போம் பொறுமைக்கு நிகரென்போம்
       மண்ணினையும் பெண்ணென்போம் மதிப்புடனே வணங்கிடுவோம்
ஓடிகின்ற நதியினுக்கும் பெண்பெயரைச் சூட்டிநின்று
       உலகினிலே பெண்மைதனை உயர்வென்றே வாழ்த்திநிற்போம் !

மனிதனது வாழ்க்கையிலே மகளிர்நிலை உயர்வாகும்
       மகளிர்நிலை தாழ்வுற்றால் மனிதவாழ்வு கீழாகும்
ஒழுக்கமுடை மகளிர்தாம் உன்னதத்தின் இருப்பிடமே
       ஒழுக்கமது குலைந்துவிடின் உலகவாழ்வே சீரிழக்கும் !

நாடுயர வீடுயர நல்மகளிர் தேவையன்றோ
       நல்லொழுக்கப் பிறப்பிடமே நல்மகளிர் பிறப்பாகும்
தீயொழுக்கம் மகளிரிடம் குடிகொண்டு விட்டுவிட்டால்
       திறலுடைய சமுதாயம் சிறப்பிழந்து போகுமன்றோ !

அடக்கு முறைக்குள் அடங்கிநின்றார் மகளிர்கள்
       அவர்வாழ்வில் சோதனைகள் அலையலையாய் வந்தனவே
இலக்கியத்தில் உயர்வாக வலம்வந்த மகளிர்கள்
       இவ்வுலகில் இடர்பட்டு ஏக்கமுற்று இருந்தனரே !

பாரதியின் பாட்டாலே பலமகளிர் துடித்தெழுந்தார்
       பட்டதுன்பம் எடுத்தெறிய பாய்ச்சலுடன் வந்தார்கள்
எட்டய புரத்தாரின் வழிவந்த பலபுலவர்
       கொட்டிநின்ற வார்த்தைகளால் கொடிபிடித்தார் மகளிரெலாம் !

மகளிர்தொடா துறைகளிப்போ மாநிலத்தில் இல்லையன்றோ
       மண்தொட்டு விண்வரைக்கும் மகளிர்தமைக் கண்டிடலாம்
பட்டம்பல பெற்றுவிட்டார் திட்டம்பல தீட்டுகிறார்
       பாருலகில் மகளிரிப்போ பகலவன்போல் வந்துவிட்டார் !
 

 

சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்