காலத்தை வென்ற கவி

கவிஞர் இனியன், கரூர்

துன்பத்தைக் கண்டு துவளாத உள்ளத்தான்
இன்பத்தைப் பாட்டிலே இட்டவன்- அன்பெனும்
பாலத்தை ஆக்கிய பாவலர் பாரதி
காலத்தை வென்ற கவி.

செவியில் இனிக்கும்நல் செந்தமிழ்ப் பாட்டு
புவியில் உதித்த புகழ்க்கோ- கவியாலே
ஞாலத்தைச் சுற்றினான் நம்கண்ண தாசனும்
காலத்தை வென்ற கவி.

சிலப்பதி காரம் சிறந்ததோர் ஆக்கம்
உலகம் புகழும் உயர்ந்ததோர் காவியம்
சீலம் மிகுந்த இளங்கோ அடிகளும்
காலத்தை வென்ற கவி.

வான்மீகி தந்த வளமார் கதையினை
மேன்மேலும் சீராக்கி மேன்மைப் படுத்திய
சாலச் சிறந்த செழுந்தமிழ்க் கம்பனும்
காலத்தை வென்ற கவி.

வாழ்வியல் நூலாக வந்த திருக்குறள்
தாழ்வினை நீக்கும் தகைசால் மருந்தாகும்
ஞாலமே போற்றும் நறுந்தமிழ் வள்ளுவனே
காலத்தை வென்ற கவி.


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்