காலத்தை வென்ற கவி

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

(பஃறொடை வெண்பா)

நாமகள் ஆசிபெற்ற நாடுபோற்றும் பாவலர்
தேமதுரச் செந்தமிழில் தேன்சிந்தும் பாவினை
பாமரர் யாவரும் பண்புடன் வாழவே
பூமணக்கப் பாடிய பூங்குன்ற னார்கணியன்
யாதுமே ஊராக யாவரும்கே ளிர்ரென்று
ஆதித்தன் போலவே யாவரும் சொந்தமென்று
வேதாந்தத் தத்துவ வாழ்க்கை அறநெறியைப்
போதித்து மானிடர்க்கு பாதையும் காட்டியும்
சீலவாழ்வு என்றும் சிறந்து விளங்கிடவே
ஞாலத்தில் பூத்தமிகு ஞானியே பைந்தமிழர்
கோலமகன் மைந்தர் கணியன்பூங் குன்றனாரே
காலத்தை வென்ற கவி.

னித இயல்புகளை மாண்புடன் உள்வாங்கி
துணிந்து எழுதிய தூய திருக்குறள்
கனிவாய் உலகம் களங்கமின்றிச் சுற்ற
இனிதாக எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கும்
முப்பாலை மக்களுக்கு முன்வைத்து உய்வதற்கும்
தப்பாமல் வாழ்க்கை தரணியில் வாழ்வதற்கும்
இப்பிறப்பில் அன்பே அறநெறி யென்ருரைத்த
காலத்தால் மாறாக் கருத்துக்கள் சொல்லிய
சாலச் சிறப்புமிகு சான்றோன் அசையாத
ஆலம் விழுதான ஆதவன் வள்ளுவரே
காலத்தை வென்ற கவி





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்