நெகிழியைத்  தவிர்த்து  நிலத்தை  நிமிர்த்து

பாவலர் கருமலைத்தமிழாழன்
 

காற்றுதனை  மாசாக்கும்  புகையைப்  போல

          கழிவுநீரால்  மாசாகும்  ஆற்றைப்  போல

ஊற்றுதனை  அடைக்கின்ற  நெகிழி  யாலே

          உயிர்காக்கும்  மண்ணெல்லாம்  மலடாய்  ஆகும் !

கூற்றுவன்போல்  நிலம்மீது  பரந்து  நின்று

          கொட்டுகின்ற  மழைநீரைத்  தடுப்ப  தாலே

ஏற்றத்தில்  நீரிறைக்கும்  கிணற்றுக்  குள்ளே

          எங்கிருந்தோ  வரும்நீரும்  நின்று  போகும் !

 

மக்காத  குப்பையாக  நெகிழி  நின்று

          மண்தாயின்  மூக்கோடு  வாய  டைக்கும்

சக்கையாக  மண்சத்தைப்  பாழாய்ச்  செய்து

          சந்ததிக்குச்  சாக்காட்டை  விருந்த  ளிக்கும் !

பொக்கைவாய்  தாத்தாபோல்   பூமி  யாகிப்

          பொலிவிழந்து  மரம்செடிகள்  பட்டுப்  போகும்

தக்கபடி  நெகிழியினைத்  தடுக்கா  விட்டால்

          தங்காது  துளிநீரும்  நிலத்திற்  குள்ளே !

 

தாள்களிலும்  துணிகளிலும்  பைகள்  தைத்தும்

          தரமான  பொருள்வாங்க  எடுத்துச்  செல்வோம்

பால்தயிர்நெய்   எண்ணெயினை  வாங்கு  தற்குப்

          பாத்திரத்தைக்  கடைகளுக்கு  எடுத்துச்  செல்வோம் !

நாள்தோறும்  விழிப்புணர்வை   மக்கட்  கூட்டி

          நஞ்சென்றே  நெகிழிதனைத்  தவிர்க்கச்  செய்து

கால்பதிக்கும்  வரலாற்றை  நமக்க  ளிக்கும்

          கனிமவள   நிலந்தன்னை  நிமிர  வைப்போம் !






       

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்