மடமையைக்  கொளுத்துவோம்

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

எண்ணத்தில்   புதியசிந்தை  ஏற்றி  வைப்போம்

            ஏனென்று  கேட்டறிவை   விரிய  வைப்போம்

கிண்ணத்தில்   உள்ளபாலில்   நீரைத்  தள்ளிக்

            கீழிருக்கும்   பாலுறிஞ்சும்   அன்னம்  போல

கண்ணுக்குத்   தெரிகின்ற  காட்சிக்  குள்ளே

            கலந்திருக்கும்  கயமைகளைப்  பிரித்து  ணர்வோம்

எண்ணிறைந்த   அறியாமை   செயல்க  ளாலே

            ஏமாறும்    நிலைமாறத்  தெளிவு  கொள்வோம் !

 

நறுங்கணவன்   உயிர்பிரிந்தால்   விதவை  என்று

            நங்கையினை  இழிவுசெய்யும்   போக்கொ  ழிப்போம்

செருக்குடனே  நானுயர்ந்த  சாதி  யென்று

            செப்புவோரின்   நாவறுத்துப்  பொதுமை  என்போம் !

குறுக்கோடும்  பூனைக்கும்   சுவரின்  பல்லை

            குரலுக்கும்  அஞ்சுகின்ற  மனம்வி  டுப்போம்

சிறுமைசெய்து   மன்றலுக்குப்  பணத்தைக்  கேட்கும்

            சிறுமதியர்   கயமைக்கு   முடிவு  செய்வோம் !

 

பெண்சிசுக்கள்   சுமையென்று  கொல்லு  கின்ற

            பேடியர்க்குப்  பெண்மதிப்பை   உணர  வைப்போம்

கண்முன்னே  பசிக்கழுவும்  குழந்தை  கண்டும்

            கல்லுக்குப்  பாலூற்றும்  செயல்த  டுப்போம் !

மண்மீது   பணம்ஏழை  பாகு   பாடு

            மண்டைவிதி   என்கின்ற   மூடம்  விட்டுப்

பண்பட்ட   உழைப்பாலே   உயர்வோம்  என்ற

            பகுத்தறிவால்   மடமையினைக்  கொளுத்து  வோமே !




       

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்