நூல் : ஜெயிக்கப் போவது நீ தான் !
ஆசிரியர்: முனைவர் கு .ஞானசம்பந்தன்
விமர்சனம்
கவிஞர்  இரா .இரவி

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் புகைப்படத்துடன் அட்டைப்பட வடிவமைப்பு அருமை .ஜெயிக்கப் போவது நீ தான் ! என்ற நூலின் தலைப்பே படிக்கும் வாசகனுக்கு .ஜெயிக்கப் போவது நீ தான் ! என்று உணர்த்துவதுப் போல இருப்பதால் நூலின் தலைப்பே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .

முனைவர் தொ .பரமசிவம் அவர்களின் அணிந்துரை நூலிற்குத் தோரண வாயிலாக உள்ளது .அணிந்துரையில் அவர் குறிப்பிடுகிறார். அவரது நகைச் சுவையின் வெற்றிக்குக் காரணம் அவரது புத்தக வாசிப்பு மட்டுமல்ல அவரது மனித வாசிப்பும் கூடத்தான்.

உண்மைதான் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் தேனீயைப் போல அடிக்கடி பயணம் மேற்கொள்வார் .காலையில் மதுரையில் இருப்பார். மாலையில் சென்னையில் இருப்பார் இரவு மதுரை வந்து விடுவார். விமானத்தில் மட்டும் அல்ல காரிலும் பட்டி மன்றத்திற்காக பயணம் மேற்கொள்வார்.சலிக்காமல பயணம் செல்வார் .நானே நேரடியாகப் பார்த்து இருக்கிறேன் .அவரிடமே இது குறித்துப் பாராட்டி இருக்கிறேன் .

அமெரிக்கா சென்று வந்து கல்லூரியில் வகுப்பு எடுத்து கொண்டு இருந்தேன். ஒருவர் சொன்னார் கீழ வாசலில் இருந்து வந்தேன் ஒரே அலுப்பு என்பார். எனக்கு அமெரிக்கா கீழ வாசல் மாதிரி அவருக்கு கீழ வாசல் அமெரிக்கா மாதிரி .என்று அதற்கும் ஒரு நகைச் சுவை சொன்னார் .அவர் பயணம் மேற்கொள்ளும் பொது சந்திக்கும் மனிதர்களை வாசிக்கிறார் என்பதே அவரது வெற்றியின் ரகசியம் .

எழுத்தாளர் .தமிழ்ச்செல்வன் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது .நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் என்னுரையில் யாரையும் மறக்காமல் நன்றி கூறி உள்ளார் .குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்தையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .

25 தலைப்புகளில் அவரது வெற்றியின் ரகசியத்தை அம்பலப் படுத்தி வெற்றிப் பெற்று உள்ளார் .ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் நம்மைச் சிந்திக்க வைக்கிறார் . கட்டுரையின் தொடக்கத்தில் வைர வரிகளுடன் பொன் மொழிகளுடன் தொடங்குகிறார் .முகப்பு வரிகளை படித்தவுடனே கட்டுரை கள் முழுவதும் படித்து விட்டுதான் நூலைக் கிழே வைப்பார்கள் .அந்த அளவிற்கு மிக நல்ல நடை .

ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் ,எடுப்பும் ,தொடுப்பும், முடிப்பும் மிகச் சிறப்பாக உள்ளது .உலகப் பொது மறையான திருக்குறளை கட்டுரையில் பல்வேறு இடங்களில் பொருத்தமாக மேற்கோள் காட்டி தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார்.பாராட்டுக்கள .

முதல் கட்டுரையில் நினைத்தது நடக்கும் வரம் தரும் சித்தரை காணச் செல்வதில் தொடங்கி எண்ணிய எண்ணியாங்கு திருக்குறள் நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்கும் வல்லமை மன உறுதி படைத்தவர்களுக்கு உண்டு . முதல் தன்னம்பிக்கை ஆசிரியரான திருவள்ளுவரின் திருக்குறள் .இந்த ஒரு குறள் வழி மனிதன் நடந்தால் போதும் வெற்றி உறுதி .என்பதை உணர்த்தும் விதமாக கட்டுரைகள் உள்ளது .( )அடைப்பு குறிகளுக்குள் உள்ள சில வரிகள் நகைச் சுவை விதைக்கின்றன .எள்ளல் சுவையுடன் உள்ளது .

ஏழைக் குழந்தைகளின் பசிப் போக்கிக் கல்வி தந்த வள்ளல் காமராசர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்த வரலாறு நூலில் உள்ளது .நூல் முழுவதும் தமிழின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக ,சங்க இலக்கியப் பாடல்களும் மேற்கோள் காட்டி உள்ளார் .

கட்டுரைகளின் தலைப்பே தன்னம்பிக்கை விதைக்கின்றது .எல்லாம் இன்ப மயம்,சோதனைய சாதனை ,காலம் உயிர் போன்றது ,பெரிதினும் பெரிது கேள் ,நினைவாற்றலே பெருஞ்செல்வம் இப்படி தன்னம்பிக்கை விதைக்கின்றது .

கைகளே இல்லாத தூக்கனாங் குருவி அருமையான கூடு கட்டுகிறது.கரையான்கள பெரிய புற்றை கட்டுகின்றன. தேனீக்கள் ஆயிரம் அறைகள் கொண்ட கூ ட்டை உருவாக்குகின்றன. சிலந்திப் பூச்சி தன உணவிற்கான வலையைத் தானே பின்னுகிறது .அவர் பெரியவர் இவர் சிறியவர் என்று யாரையும் எளிதாக எடை போட வேண்டாம். எல்லா மனிதருக்குள்ளேயும் தனித் தனித் திறமைகள் உண்டு என்னும் கருத்தில் அவ்வை பாடிய பாடலுடன் கட்டுரை மிக அருமை .

நூல் முழுவதும் அனைத்து வயதினரும் விரும்பிடும் மிக எளிய நடையில் மிக இனிய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் .நன்றாகப் பேசுபவர்களுக்கு நன்றாக எழுத வராது என்ற பழமொழியை முறியடிக்கும் வண்ணம், முந்தைய அவரது நூல்களை விஞ்சும் வண்ணமும் நன்றாகப் பேசவும் வரும் நன்றாக எழுதவும் வரும் என்பதைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது.

என்ன வளம் இல்லை நம் இலக்கியத்தில் ஏன்? கையை ஏந்த வேண்டும் பிற இலக்கியத்தில் என்று சொல்லும் விதமாக தன்னம்பிக்கை என்றால் சிலர் அமெரிக்காவில் அவரைப் பார் ,ஜெர்மனியில் இவரைப் பார் என்று எழுதிவரும் காலத்தில் .தன்னம்பிக்கை வேண்டுமானால் திருக்குறளைப் படி, அவ்வையின் ஆத்திச் சூடிப் படி, சங்க இலக்கியம் படி என்று கூறும் விதமாக நூல் உள்ளது .

மரணம் குறித்த அச்சமோ மறுபிறப்புப் பற்றிய நம்பிக்கையோ இல்லை. இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்கள் கிடைத்தால் இந்த அறிய நூல் முழுவதையும் படித்து விடலாம் .என்று அறிஞர் அண்ணா மருத்துவரிடம் வேண்டியதும் ,மருத்துவர் இரண்டு நாட்கள் தள்ளி அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வரலாறு நூலில் உள்ளது .

இந்த நூல் படித்தால் படித்த வாசகர்களுக்கு தன்னம்பிக்கை தொடர்பான வேதியல் மற்றம் நிகழும் என்று அறிதியிட்டுச் சொல்லலாம் .வாசகர் மனதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தருகின்றது .தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளும் வண்ணம் நூல் எழுதிய முனைவர் கு .ஞானசம்பந்தன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

அமுதம் பதிப்பகம் 155.டெபுடி கலெக்டர் காலனி வது தெரு .கே .கே .நகர்
மதுரை.20. விலை ரூ 80


 

eraeravik@gmail.com