நூல் : தென்றலே வீசி வா
நூல் ஆசிரியர் : கலாபூஷணம் பி.ரி. அஸீஸ்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

லாபூஷணம் பி.ரி. அஸீஸின் எட்டாவது நூல் வெளியீடே தென்றலே வீசி வா என்ற சிறுவர் பாடல்கள் அடங்கிய தொகுதியாகும். பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தின் மூலம் 24 பக்கங்களில் 16 சிறுவர் பாடல்களை உள்ளடக்கியதாக சிறுவர்களுக்கேற்ற விதமான அழகான அட்டைப் படத்துடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. பி.ரி. அஸீஸ் அவர்கள் இலக்கியத்தின் மீது தீவிர பற்றுக்கொண்டவர். இந்த அடிப்படையில் இவர் ஏற்கனவே கவிதை நூல்கள், சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், கிராமியக் கவிகள் என்று பல நூல்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

சிறுவர் இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்யக் கூடியவர்கள் எமது நாட்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். சிறுவர் ஆக்கங்களை அதாவது சிறுவர் கதைகளையோ, பாடல்களையோ அல்லது கட்டுரைகளையோ படைக்கும் படைப்பாளிகள் முதலில் சிறுவர்களது வயது, எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள், ஆசைகளை எல்லாம் தெரிந்துகொண்டு நுட்பமான முறையிலேயே தனது படைப்புக்களை முன்வைக்க வேண்டும். எந்தத் துறையில் இலக்கியம் படைத்தாலும் சிறுவர் இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளன் அல்லது படைப்பாளி தனது பங்களிப்பைச் செய்யும் போதுதான் ஒரு முழுமையான மனநிறைவை அடைந்துகொள்ள முடியுமாக இருக்கும். அந்த வகையில் சிறுவர்களுக்கு தனது பங்களிப்பை வழங்கும் முகமாக கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள, இந்தத் தொகுதியில் உள்ள அணைத்துப் பாடல்களும் சிறுவர்களுக்குப் பயனுடையதாக அமைந்து அவர்களது வாசிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கும்.

 

இந்தத் தொகுதிக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள டாக்டர் ஹில்மி மகரூப் அவர்கள் தனதுரையில் ''அன்று எனது பதவியேற்பு வைபவத்தின் போது வாழ்த்துக் கீதம் பாடியவர் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள். அதன் பின்னரான மூன்றாண்டுகளில் இலக்கியத் துறையில் எவ்வளவோ முன்னேறிச் சென்றுவிட்டார். இவரது விடாமுயற்சியும், ஆற்றலும் என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கைவிட்டுப் போன காலங்களைப் பற்றிக் கவலைப்படாது எதிர்காலத்தை நினைத்து தன்னம்பிக்கையோடு செயற்படும் கவிஞர் அஸீஸ் இலக்கியத்தில் கவிதையோடு மட்டும் நின்றுவிடாது அதன் பல்வேறு பிரிவுகளையும் தொட்டு நின்று பிரகாசிக்கின்றார். குறுகியதொரு காலத்துள் தன்னை நாடறியச் செய்த இவரின் ஆளுமையை நான் பெரிதும் பாராட்டுகின்றேன். ''  என்று தனது வாழ்த்துப் பூக்களைத் தூவுகின்றார்.

 

அதுபோல் நூலுக்கான சிறந்ததொரு முன்னுரையை நிகழ்காலம் சஞ்சிiயின் ஆசிரியர் ஜனாப் நாஸிக் மஜீத் சிறுவர்களுக்கான பாடல் ஆக்க முயற்சி என்ற தலைப்பிட்டு வழங்கியுள்ளார். அதில் பின்வருமாறு தனது கருத்தை முன்வைத்துள்ளார். ''இலக்கியம் என்பது எப்போதுமே உள்ளத்திற்கு இதமானது. இந்த இலக்கியத்தை இயற்றுவதற்கு இரசனை என்ற விடயம் மிக முக்கியமான ஒன்றாகும். சாதாரண ஒரு மனிதனின் பார்வைக்கும் இலக்கியக்காரன் ஒருவனின் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஒரு இலக்கியக்காரன் தன்னைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளில் கவிதையை, சிறுகதையை, சிறுவர் பாடலை, நாவலை, கட்டுரையைக் காண்கிறான். இலக்கிய இரசனையற்ற ஒரு மனிதன் அவற்றை சாதாரண நிகழ்வுகளாகவே பார்க்கிறான்.''

 

சிறுவர் பாடல்கள் ஆக்கத்திற்கான தனது நோக்கத்தை பி.ரி. அஸீஸ் அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''சிறுவர் பாடல்கள் பலவற்றைக் கொண்ட இந்த நூல் நடுநிலை நின்று சிந்திப்பவர்களுக்கு நல்லதெனப்படும். சிறந்த பிரசையாக வாழவிருக்கும் இளம் பருவத்தினருக்கு பல படிப்பினைகள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இவை சிறந்த சமூக உருவாக்கத்திற்கு பெரிதும் துணைபுரியும். அன்பு, அகிம்சை, ஒற்றுமை, இரக்கம் போன்ற இன்னும் பல மனித குலத்திற்குத் தேவையான நன்பண்புகள் இதில் மெருகூட்டப்பட்டு பாடல்களாக்கப்பட்டுள்ளன.''

 

கிண்ணியா பொது நூலகத்தின் பிரதம நூலகர் எம்.ரீ. சபருள்ளா கான் (சமாதான நீதவான்) இந்த நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை வழங்கியுள்ளார். இனி கலாபூஷணம் பி.ரி அஸீஸின் சில சிறுவர் பாடல்களை நயந்திட வாருங்கள்.

 

அணை கடந்தும் பாயுதே (பக்கம் 01) என்ற பாடல் தென்றலின் குளிர்ச்சியை மனதிலும் உடம்பிலும் உணரச் செய்கின்றது. ஓசை நயம் கொண்ட கவிதையாக இது காணப்;படுவதால் வாசிக்கும் போது இன்பமாக இருப்பதுடன், சிறுவர்கள் மிகவும் விரும்பும் ஒரு தொனிப்பொருளாகவும் இருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

 

தென்றலே நீயும் மிதந்து வா.. தெருவில் எங்கும் வீசி வா.. பந்தல் மேலே மலர் இருக்கு.. பார்த்து அதிலே தங்கி வா.. இதமே இதமே உன் வரவு.. இதயம் இன்பம் கொள்ளுதே.. பதமாய் நீயும் வீசுவதில்.. பாசம் நெஞ்சில் ஊருதே.. சுகமே மலரும் தென்றல் உன்னால்.. உள்ளம் மகிழ்வில் துள்ளுதே.. அகமும் விரிந்து ஆசை வெள்ளம்.. அணையைக் கடந்தும் பாயுதே..

 

ஒன்றாய் வாழ்வோம் (பக்கம் 04) என்ற பாடல் ஒற்றுமையை சிறுவர் மனதில் விதைக்கும் ()விதையாக காணப்படுகின்றது. ஒருதாய் மக்களாக வாழ்ந்து பகைகளை நீக்கி சந்தோசம் காணுவோம் என்று கவிஞர் சிறுவர்களைக் கேட்டுக்கொள்கின்றார். சிறு வயதில் மனதில் பதியும் நல்ல குணங்களே ஒரு பிள்ளையின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. கெட்ட புத்திகள் மதலி; வளர்ந்துவிட்டால் அந்தப்பிள்ளை சமூகத்தில் ஒரு நஞ்சு மரமாகத்தான் வளரும். நல் பண்புகளைக் கொண்ட பிள்ளை நறுமணம்; வீசும். எனவே இவ்வாறான பாடல்கள் மூலம் குழந்தையின் மனதை நல்வழிக்கு திருப்பும் முயற்சியை கவிஞர் மேற்கொண்டிருக்கின்றார்.

 

பகமை வேண்டாம் பகமை வேண்டாம் ஒன்றாய் வாழுவோம்.. ஒரு தாய் மகவாய் ஒன்று பட்டு உயர்வு பேணுவோம்.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இதனை உணர்வோம்.. தொன்று தொட்டு இருந்து வரும் உறவைத் தொடருவோம்.. அழிவு செய்யும் எண்ணங்களை தூர வீசுவோம்.. இழிவு நீக்கி காலமெல்லாம் ஒன்றாய் வாழுவோம்..

 

உன் அருகிருந்து பார்ப்பேன் (பக்கம் 06) என்ற பாடல் சிறுவர்கள் விரும்பும் தும்பிப் பூச்சியை வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. பொதுவாக தும்பியின் வாலில் நூலைக் கட்டி அதற்கு தொல்லை கொடுக்கும் சிறுவர்களின் மனதில், தும்பி பற்றிய இரக்கத்தை ஏற்படுத்துகின்றது இப்பாடல். உயிர்களுக்கு அன்பு காட்டும் நல்ல பழக்கங்கள் குழந்தைகளுக்கு உணரச் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்த வகையில் கவிஞர் பி.ரி. அஸீஸ் அந்த முயற்சியிலும் தனது பங்களிப்பைச் செய்திருக்கின்றார் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

 

பறந்து செல்லும் தும்பியாரே பாவை என்னைப் பாரீர்.. பயப்படாமல் துணிவு கொண்டு என்னிடத்தில் வாரீர்.. நீர்; பயப்படாமல் துணிவு கொண்டு என்னிடத்தில் வாரீர்.. உலாவரும் சுகம்காண அழைத்துப் போவேன்.. என் தோளின் மீதும் வைத்து உன்னை சுமந்து செல்வேன்.. பூந்தோட்ட மத்தியில் விளையாடச் செய்வேன்.. அங்கே நீ மகிழ்ந்திருக்க நான் அதனைப் பார்த்து ரசிப்பேன்.. மகிழ்ந்திருக்க நான் அதனைப் பார்த்து ரசிப்பேன்.. உன் கூட்டத்தோடு நீ வாழும் குதூகலத்தைக் காண்பேன்.. ஆட்டம் போட்டு நீ மகிழ உன் அருகிருந்து பார்ப்பேன்.. ஆட்டம் போட்டு நீ மகிழ உன் அருகிருந்து பார்ப்பேன்.. 

 

சின்னப் பாப்பா (பக்கம் 11) என்ற பாடல் சிறுவர்களின் மாலைநேர விளையாட்டை மனக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. மனதுக்கினிய மாலை வேளையில் தோழர்களோடு இணைந்து விளையாடும் கவிதையாக இது அமைந்திருக்கின்றது. பாரதியாரின் ஷஓடி விளையாடு பாப்பா| என்ற பாடலை இக்கவிதை ஞாபமூட்டிச் செல்கின்றமை இந்தக் கவிதையின் சிறப்பாகும்.

 

சின்னப் பாப்பா சின்னப் பாப்பா ஓடிவா.. சிறகடித்து பாடி மகிழ்வோம் ஓடிவா.. கூடி மகிழ்வார் நம்மைப் போல சிறுவர்கள் அந்த குதூகலிப்பில் இணைந்துகொள்வோம் ஓடிவா.. மாலை நேரம் மனதுக்கினிய தோழரோடு சுற்றி வருவோம் ஓடிவா.. அன்புகொண்டு அனைவரையும் ஒன்று சேர்த்து வம்பு இல்லா வாழ்க்கையினை தோற்றுவிப்போம் ஓடிவா..

வண்டி வருகுது பார் (பக்கம் 16) என்ற பாடலில் வண்டியானது திருமண ஜோடியை சுமந்து வரும் காட்சியும், வீதியெங்கும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சியும் சிறுவர் மனதைக் கவரும் விதமாக எடுத்துக்காட்டப்படுகின்றது

 

ஓடி ஓடி வருகுது பார்.. வண்டி ஓடி வருகுது பார்.. மாட்டு வண்டி வேகத்துடன் ஓடி ஓடி வருகுது பார்.. வெள்ளை மாடு சுமந்த வண்டி.. சீக்கிரம் காட்டி வருகுது பார்.. சலங்கை ஒலியும் சங்கீதமும்.. இசைத்து வருகுது பார்.. வீதி எங்கும் தோரணங்கள் விரைந்து அதுவும் வருகுது பார்.. பாதி நிலவு வெளிச்சத்திலேயே பாய்ந்து ஓடி வருகுது பார்.. திருமண ஜோடி சுமந்த வண்ணம் வண்டி அங்கே வருகுது பார்.. பெருமையோடு வருகுது பார்.. பெருமிதத்தால் ஜொலிக்குது பார்..

 

சந்தக் கவிதைகளாக ஓசை நயம் மிக்கதாக எழுதப்பட்டுள்ள பி.ி. அஸீஸ் அவர்களின் கவிதைகள் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பிப் படிக்கும்விதமாக அமைந்திருக்கின்றன. அவரது முயற்சிகள் மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்!!!

 

நூல் - தென்றலே வீசி வா

நூல் வகை - சிறுவர் பாடல்

நூலாசிரியர் - கலாபூஷணம் பி.ி. அஸீஸ்

வெளியீடு - பாத்திமா ருஸ்தா பதிப்பகம்

விலை - 200 ரூபாய்

 

   

                         www.tamilauthors.com