நூல் :  மு.வ.வாசகம்
நூல் ஆசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்
நூல் விமர்சனம்:   
கவிஞர் இரா.இரவி
 

லக்கிய இமயம் மு.வரதராசனார் பற்றி அவரது செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் இலக்கியத்தேனீ இரா.மோகன் அவர்கள் வடித்துள்ள நூல் அல்ல சிலை. ஒரு சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்துடன் வடித்து உள்ளார். தேவையற்ற ஒரு சொல் கூட இல்லை என்று சொல்லுமளவிற்க்கு மிக நேர்த்தியாக எழுதி உள்ளார்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்(து)
அதனை அவன்கண் விடல். ( 517 )

திருக்குறள் வழி நடந்து வாழ்வில் வெற்றி கண்ட மாமனிதர் பற்றிய நூலை மேலே உள்ள திருக்குறளுக்கு ஏற்ப சாகித்ய அகாதெமி நிறுவனம் மு.வ. அவர்களைப் பற்றி எழுதிட சரியானவர் யார்? என்று தேர்ந்தெடுத்து தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களிடம் ஒப்படைத்தமைக்கு பாராட்டுக்கள். செவ்வன செய்துள்ளார். செம்மையாக தொகுத்துள்ளார். தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களுக்கு மு.வ. அவர்கள் அருள்வாக்குப் போல இரண்டு வரிகள் எழுதி இருந்தார்கள்.

தமிழ் உன்னை வளர்த்தது
நீ தமிழை வளர்க்க வேண்டும்!

நூலாசிரியர் தமிழை வளர்த்து வருவது மட்டுமன்றி தனது ஆசான், ஞானகுரு, வழிகாட்டி இப்படி எல்லாமுமான மு.வ. அவர்களுக்கு மு.வ. வாசகம் என்ற நூல் எழுதி மகுடம் சூட்டி உள்ளார்.ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளார் .இன்றைய இளைய தலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டியது .

மு.வ. அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. என் போன்று மு.வ. அவர்களைப் பார்த்திராத பலருக்கு அவரைப்பற்றி எழுதி அவரது படைப்பைப் பற்றி எழுதி, அவரை நம் கண்முன் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். நூல்ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .அட்டைப்பட வடிவமைக்கு, உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளது.சிறப்பாகப் பதிப்பித்த சாகித்ய அகாதெமிக்கு பாராட்டுக்கள்.

நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில துளிகள்.

"இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சான்றோர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒருவர் மு. வரதராசனார் (1912-1974) ஆவார். தமிழ்கூறு நல்லுலகம் மு.வ. என்ற இரண்டு எழுத்துக்களால் அவரை மதிப்போடும், மரியாதையோடும் அழைத்து மகிழ்ந்த்து. மு.வ. என்ற இரண்டு எழுத்துக்களீன் விரிவு ‘முன்னேற்ற வரலாறு என்பதாகும்."

இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் இலக்கிய வடிவங்களான கடிதம், கதை, நாவல், கட்டுரை என்று எல்லாவற்றிலும் தனி முத்திரை பதித்த மிக்ச்சிறந்த ஆளுமையாளர், ஆற்றலாளர். அவரின் படைப்புகளில் உள்ள தேன்துளிகளை சேகரித்து வழங்கி உள்ளார் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள்.

மு.வ. அவர்கள் அன்னைக்கு எழுதிய கடிதத்தில் சிறு துளிகள் :
“நீ ஒரு தமிழன் ; பழங்காலப் பிற்போக்குத் தமிழனாக இருந்து வாயால் மட்டும் விளங்காதே ; உணர்வால் மட்டும் உயராதே ; செயலாலே சீர்ப்படு என்று எனக்கு எழுதிய கடிதத்தை மறந்து விடவில்லை”.

உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரும் செயலாலே சீர்பட்டால் தமிழ்மொழி சிறந்து விளங்கும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் மு.வ.. அதனை இந்நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், மு.வ. அவர்கள் எழுதிய எல்லா நூலும் படித்திராத புதியவர்களுக்கு இந்நூல் ஒன்று படித்தால் போதும். மு.வ. அவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும்.

திருமணமான தங்கைக்கு எழுதிய மடலில் உள்ள வைர வரிகள் இதோ:

“நல்லவர் நட்பு வளர்பிறை போல் வளரும் என்கிறார் திருவள்ளுவர். உங்கள் அன்பான இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர் வேண்டும் என்று விரும்புகின்றேன். அது என் வாழ்த்துதலில் இல்லை ; நீங்கள் வாழும் முறையில் இருக்கிறது”.

இலக்கிய இமயம் மு.வ. அவர்கள், திருமணமான தங்கைக்கு எழுதும் மடலில், நான் வாழ்த்துவதால் மட்டுமே நீ சிறப்பாக வாழ்ந்து விட முடியாது, நீ வாழும் முறையில் தான் உள்ளது, எனவே சிறப்பாக நீ வாழ வேண்டும் என்கிறார். வாழ்த்துவதால் மட்டும் ஒருவர் வாழ்ந்து விட முடியாது என்பதையும், செம்மையாக வாழ வேண்டும் என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார்.
இப்படி மடல்கள் தம்பிக்க்கு, நண்பர்க்க்கு என்று எழுதியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தனி நூலாக வந்தவற்றை சிறு கட்டுரையாக, சுருக்கி சுண்டக் காய்ச்சிய பாலாக வழங்கி இலக்கிய விருந்து வைத்துள்ளார் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள்.

திருக்குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதி இருக்கிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரைக்கு ஈடான உரை இதுவரை வந்ததில்லை. இனிவரப் போவதும் இல்லை என்று அறுதியிட்டுக் கூற முடியும். அந்த உரை படித்த பண்டிதர் தொடங்கி பாமரர் வரை எல்லோருக்கும் எளிதில் விளங்கும் எளிய உரை. விற்பனையிலும் சாதனை படைத்த உரை.

மு.வ. அவர்களுக்கு மிகவும் பிடித்த இருவர் யார்? என்றால் திருவள்ளுவர், காந்தியடிகள் என்பார். மூன்றாவதாக பிடித்தவர் யார் என்றால் இரா.மோகன் என்பார். இது வெறும் புகழ்ச்சி அல்ல, உண்மை. மு .வ .அவர்களின் செல்லைப் பிள்ளை என்று இலக்கிய உலகால் அழைக்கப் பெற்றவர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள் .

அவர் வழியிலேயே நூலாசிரியரும் தடம் பதித்து வருகிறார். பேச்சு காற்றோடு கலந்து விடும், எழுத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற மு .வ .அவர்களின்அறிவுரையை அறவுரையை, ஏற்று, ஓய்வின்றி தொடர்ந்து எழுதி வருகிறார். எழுதுக என்று சொன்ன ஆளுமையாளர் மு.வ. பற்றியும் எழுதியது கூடுதல் சிறப்பு.

மு.வ. அவர்கள், இரா. மோகன் அவர்களை இலக்கியத்தில் உருவாக்கியது போலவே, தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள்,என் போன்ற பலரை இலக்கியத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இலக்கிய இமயம் மு.வ. அவர்களின் இலக்கியப் பரம்பரை தொடர்கிறது எனலாம் .

இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் காந்தியடிகள் பற்றி தனி நூல் எழுதி உள்ளார்கள். அவற்றிலிருந்து கனிச்சாறாக பிழிந்து தந்துள்ளார், இலக்கியத் தேனீ இரா.மோகன் அவர்கள்.

இன்றைக்கு அரசியல்வாதிகள் உள்பட பலரும் காந்தியடிகள் பெயரை உதட்டளவில் உச்சரிக்கின்றனர். ஆனால் உள்ளத்தளவில் அவர் கொள்கைகளை ஏற்று உள்ளனரா? என்பது கேள்விக்குறி தான். அதனை படம்பிடித்துக் காட்டும் விதமாக எழுதி உள்ளார், பாருங்கள்.

“அண்ணலைப் புகழ்வோர் பற்பலர் ; போற்றுவோர் மிகப்பலர் : வழிபடுவோர் பலர் ; ஆயினும் அவருடைய வாழ்க்கை உணர்த்தும் உண்மைகளை நாடுவோர் சிலர் ; அவற்றை உணர்த்தும் உண்மைகளை நாடுவோர் சிலர் ; அவற்றை உள்ளவாறு உணர்வோர் மிகச் சிலர் ; உணர்ந்து பயன்படுத்துவோர் ஒரு சிலரே ! படைப்பின் சட்டங்களை ஒட்டி இயங்கிய தூய வாழ்க்கை ! ஆகையால் அது எல்லா மக்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நல்வாழ்க்கையாகும்”.

இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் அன்று எழுதியது இன்றும் பொருந்துவதாக உள்ளது பாருங்கள் .

மு.வ. அவர்கள் குறிப்பிட்ட மிகச் சிலர், மிகப் பலராக வளர்ந்தால் நாடு நலம் பெறும், உலகம் அமைதி அடையும். அமெரிக்காவின் அதிபர் ஒபாமா வரை காந்தியடிகளின் சிறப்பை அறிந்து வைத்துள்ளார், மதிக்கிறார், போற்றுகிறார். நம்மை ஆண்ட இங்கிலாந்திலேயே சமீபத்தில் காந்தியடிகளின் சிலை திறக்கப்பட்டது..இந்த நிகழ்வு காந்திய வெற்றிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நம் நாட்டில் தான் இன்னும் காந்தியடிகள் பற்றி, அவரது உன்னத வாழ்வு காந்தியம் பற்றி, இன்னும் உணரவில்லை என்பது கசப்பான உண்மை. நூல் படிக்கும் போது பல்வேறு நினைவுகளை மலர்விக்கின்றன.

நோபல் நாயகர் கவியரசர் தாகூர் பற்றி, மு.வ. அவர்கள் எழுதிய நூலில் உள்ள சாரத்தை வழங்கி உள்ளார். தாகூர் அவர்களுக்கு நோபல் பரிசு வாங்கித் தந்த கீதாஞ்சலி பாடல்களின் வைர வரிகள் இந்த நூலில் தமிழில் உள்ளன.

இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் வடித்த இலக்கியங்கள் அனைத்திலும் தேர்ந்தெடுத்த முத்துக்களை எடுத்து புகழ்மாலை தொடுத்து தனது ஆசானுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .பாராட்டுக்கள் . .

 

சாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை
– 600 018. விலை : ரூ. 190