நூல் :  "நாராய்... நாராய்"  (சிறுகதைத் தொகுதி)
நூல் ஆசிரியர் :  
ஆட்டனத்தி
நூல் ஆய்வு: அகிலா

புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதைகள் பற்றி சொல்லும்போது, "கதையை வாசிப்பது,நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை" என்கிறார். இத்தொகுப்பிலும் அவ்வாறே அமைந்து கதையை படித்து முடிந்த பிறகு நமக்குள் அசை போட தூண்டுகிறது.

இத்தொகுப்பின் தலைப்பிலேயே அதன் சாராம்சம் இருக்கின்றது. இயற்கை, வனம், வனம் சார்ந்த உயிரனங்கள், பறவைகள் இவற்றை முதன்மைபடுத்தியிருக்கிற நூல். ஆசிரியர் ஆட்டனத்தி அவர்கள் வனத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் என்பதால் வனத்தை பிராதானப்படுத்திய எழுத்துகள் இந்நூலில்.

அய்யா அவர்களின் முந்தைய சிறுகதை தொகுப்பான பசுமை வளையம் நூலிலும் வனம் சார்ந்த வாழ்க்கை, அவற்றோடு உறவாடும் மனிதர்கள் என்று எழுதப்பட்ட கதைகள் ஒரு சாகசத்தை சொல்லியிருந்தன.

அந்த நூலின் படிவத்தை விட எழுத்து வீரியத்தைவிட அதிகமாய் இந்நூல் ஈர்க்கிறது என்று சொல்லலாம். மொழி நடையிலும் கதை கட்டமைப்பிலும் அதிக மாற்றம் காணமுடிகிறது. ஒவ்வொரு சிறுகதையிலும் விலங்குகளின் கதையைச் சொல்லிவிட்டு அதனுடன் மனிதர்களின் கதையை இணைத்து ஒரு comparative platform கொடுப்பது வழக்கம் அவரின் ஸ்டைல் of writing.

இந்த நூலிலும் அதே போலவே மிருகம் மனிதன் இரண்டுக்கும் சம நீதி கொடுத்து சம அளவில் பேலன்ஸ் பண்ணியிருக்கிறார். blending of characters மிக அருமையாய் நடந்தேறியிருக்கிறது ஒவ்வொரு கதையிலும்.

இயற்கைக்கும் நமக்கும் பெரிய விதமான பந்தம் இல்லாததால்தான், நாம அதனுடன் இயைந்து போவதில்லை. நீர்நிலைகள் எல்லாம் ரியல் எஸ்டேட் ஆக மாற்றுவதும், நீர்நிலைகள் வற்றி, நிலங்களை ஆக்கிரமித்து, தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் யானைகளை ஊருக்குள்ளும் டவுனுக்குள்ளும் வரவைப்பதும் நாம்தான். அவற்றை அடிமைபடுத்தி கோவில்களில் பிச்சையெடுக்க வைப்பதும் நாம்தான். விலங்களுக்கும் பறவைகளுக்கும் மரங்களுக்கும் நாம் செய்யாத கொடுமை கிடையாது.

அவர்களும் நாமும் சரிசமமாக வாழவேண்டும் இந்த பூமியில். அதைவிடுத்து, அவர்களுக்கான எல்லைகளை நாம் சுருக்கிவிடுகிறோம். வறட்சிக்கு அதிகமாய் வித்திடுகிறோம். அசுத்தமாக்குகிறோம். பிளாஸ்டிக் கவர்களை மாடுகளும் ஆடுகளும் யானைகளும் கூட சாப்பிடுகிறதைப் பார்க்கிறோம்.

சென்னை பெருநகரில் ஒரு நாள் மழைக்கே எல்லோரும் அச்சப்படும் நிலை உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகின்றன, அலுவலகங்கள் பூட்டப்படுகின்றன. காரணம் ஒன்றே ஒன்றுதான். இயற்கையை புரிந்து கொள்ளாமை அதனோடு இயைந்து வாழாமை. அதன் படிமங்களான மழை, மரம்,பறவைகளை, விலங்குகளை விட்டு மனிதன் விலகி வந்ததுதான்.

ஆணும் பெண்ணும் அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் மட்டுமே நாம் மையமாக கொண்டு இயங்குகிறோம். மற்ற உயிர்களை எவ்வகையிலும் கணக்கில் கொள்வதில்லை எனும்போது, வெள்ளம், புயல்,மரங்கள் சாய்தல், யானைகள், புலிகள் குடியிருப்புகளுக்குள் நுழைதல், பயிர்களை அழித்தல் போன்ற சிறிதாய் தோன்றும் பிறழ்வுகளுக்கு எங்கே பதில் கிடைக்கப் போகிறது

நகர்ப்புறங்களில் அப்பர்ட்மென்ட்குள்ளே இருப்பவர்களுக்கு இயற்கையை மரங்களை, மரத்தின் வாசனையை, பறவைகளை அதன் பழக்கவழக்கங்களை எப்படி தெரியும். யார் கற்றுக் கொடுப்பது. அதுற்குதான் இந்த மாதிரி புத்தகங்கள் பெருநகரங்களை அடையவேண்டும் என்பது.

இனி சில கதைகள் :

முத்துப்பாண்டி என்னும் கதையில், பெண் மயிலை ஈர்க்க கிணற்றின் சுவரின் மீது ஏறி நின்று நடனமாடிக்கொண்டிருந்த ஆண் மயில் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறது. அதை மீட்கும் முத்துபாண்டிக்கு அன்று பெண் பார்க்க போகவேண்டிய நேரம். மயிலை மீட்டாகிவிட்டது. ஆனால், பெண் பார்க்க போக முடியவில்லை. மறுநாள் இந்த காரணத்தை சொல்லி பெண் பார்க்க போகும் போது, பெண் வீட்டார் இவனை திட்டுகிறார்கள். ஆனால் அந்த பெண்ணோ பெண் மயிலுக்காய் ஆண் மயில் ஆடியதையும் கிணற்றுக்குள் விழுந்த அதை காப்பாற்றிய இவனையும் உறவாய் உறவுக்காய் எண்ணிப்பார்க்கிறாள். இதுதான் கதை. மிருகங்களின் உறவுகளை மனிதர்களின் உணர்வுகளாய் மாற்றி காண்பித்திருக்கிறார்.

நாய் வளர்ப்பு அப்பார்ட்மெண்டில் அதிகமாய் நடக்கிறது. நாயின் வாழ்க்கையுடன் அதாவது மண் சார்ந்த வாழ்க்கையுடன் இவர்கள் ஒட்டுவதில்லை.மாறாக, இவர்களின் அப்பார்ட்மென்ட் ஸ்டைல் வாழ்க்கைக்குள் நாய் வந்து சேர்த்து ஒட்டிக் கொள்கிறது. இதை ஒரு கதையாகவே சொல்லியிருப்பார்.

பைரவர் பதிகம் என்னும் கதையில், ஒரு ஆபிசரின் வீடு கீழேயும் அவரின் அலுவலகம் மேலேயும் இருக்கிறது. அலுவலகத்தில் பத்து பதினைந்து பேர் வேலை பார்க்கிறார்கள். அந்த ஆபிசரின் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு பாமரேனியன் நாய்க்குட்டியும் இருக்கிறது.

அலுவலகத்திற்கு செல்லும் படிகள் அவர் வீட்டின் வராந்தா வழியே செல்லும். ஒவ்வொருவரும் அங்கு கட்டியிருக்கும் நாயை பார்த்து பயந்துக் கொள்வதுண்டு. அந்த நாயும் எல்லோருடைய பேண்டை இழுப்பதும் கடிப்பதுவுமாக இருக்கும். ஒரு நாள் முக்கிய அலுவலர் ஒருவரை அது காலில் கடித்துவிட, இந்த ஆபிசர், ஏன்யா காலைக் கொண்டு போய் நாய்கிட்டே காட்டுறே என்கிற ரீதியில் கண்டும் காணாமல் அவமானப்படுத்துவதும் கடைசியில் அவர் மாற்றலாகிப் போனதும் நிம்மதி அடைந்ததும் நடக்கிறது. ஆனால் அதே கட்டத்தில் அந்த நாய் அவரின் இரண்டாவது மகளைக் கடித்து அப்பெண் இறந்தும் போகிறாள். அந்த நாயும் இறந்து போகிறது. அதை போய் யாருக்கும் துக்கம் கேட்கும் மனசு இல்லை. ஏன்னா அவங்க பட்ட பாடு அப்படி.

இதை நாய்கள் அதிகம் வளர்க்கும் ஒருவரிடம் இதை சொல்லும் போது அவர் , நாய்கள் நன்றியுள்ளவை, அந்த ஆபிசர் செய்த தவறு என்னவென்றால், தன் வீட்டு ஆட்களிடம் மட்டுமல்லாமல் அங்கு அலுவலகத்தில் இருப்பவர்களிடமும் அதை பழக்கியிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. நாயை அவர் வளர்த்தது ஒரு பயம் காட்டலுக்காக. அதை தன் குடும்பத்தில் ஒருத்தராக பார்த்திருந்தால், ஒழுங்காக vacination போட்டிருப்பார், அவரின் குழந்தையும் இறந்திருக்காது என்கிறதை சொல்கிறார். நமக்கும் இதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. விலங்குகளோ பறவைகளோ அவற்றை நம்மைப் போலவே ஒரு உயிராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நம் அடிமை போல நடத்தக்கூடாது என்பதும் புரிகிறது.

ஒரு சமயம், மதுக்கரையிலிருந்து யானைகளை பிடித்துக் கொண்டுபோய் அவை இறந்துபோனது நமக்கு தெரியும். அந்த சமயத்துல ஆட்டனத்தி அய்யா கிட்டே பேசியிருக்கேன். கஷ்டப்பட்டு பிடிச்சுட்டு போன யானை இறந்துப்போய்விட்டதே என்று வருத்தப்பட்டிருக்கேன். அவர் அதுக்கு, பிடிக்கிறது மட்டும் இதில் பெருசில்லை, அதன் மீதான மனிதனின் ஆதிக்கம், அதை கொண்டு விடுகிற புது சூழல், போடப்பட்ட ஊசியின் தாக்கம், அதன் சோர்வு, அதன் மனநிலை என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கிறதென சொன்னார். யாரையும் இதில் குறை சொல்ல முடியாது என்பதை புரியவைத்தார் ஆசிரியர்.

வனங்களை விட்டு தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் வெளியே வரும் அந்த பெரிய மிருகங்களை திரும்ப வனத்துக்குள்ளேயே அனுப்ப வனத்துறையினர் படும் சிரமங்கள், அதில் ஏற்படும் ஊழியர்களின் உயிரிழப்பு, கொண்டுபோய் விட்டு வந்தபின் மறுபடியும் அவை ஊருக்குள் வந்து ரயிலில் அடிபட்டு உயிர் விடும் பரிதாபம் எல்லாமே அய்யா அவர்கள் ஒரு கதையில் எழுதியிருக்கிறார்.

இப்படி காட்டை பற்றிய யோசிக்கிற ஒரு மனிதர், காட்டை விட்டு வந்த ஒரு யானையின் கதையை அதன் உணர்வுகளிலேயே சொல்லியிருப்பார். 12 பேரை கொன்றவன் என்னும் அவச்சொல் தனக்கு எப்படி வந்தது, அதை நீக்கியது எப்படி என்பதெல்லாம் யானை சொல்வதாக சொல்லியிருப்பார்.

புரனபி ஜனனம் என்னும் கதையில், யானையின் பிரசவம் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார். அதனருகில் மனிதர்கள் போகாமல் மற்ற யானைகளையே உடனிருக்க செய்வது, ஈனும் குட்டியை கால் கொண்டு உருட்டியே அதன் மீதிருக்கும் மெல்லிய திரையை கிழிப்பது போன்ற விஷயங்கள், இதற்கிடையில் அதன் மாவுத்தனுக்கும் குழந்தை பிறத்தல், யானை பிரசவம் முடியும் வரை தன் மனைவியை பற்றி கண்டுகொள்ளாமை, முடிந்ததும் அங்கு ஓடுவது, அங்கு முடிந்ததும் இவளுக்கு சுற்றி நின்று கவனிக்க ஆட்கள் இருக்கிறார்கள், அது வாயில்லா ஜீவன் என்று நினைத்து யானையை அப்படியே விட்டுட்டு வந்தோட்டோமேன்னு திருப்பி உடனே ஓடி வருதல் அப்படிங்கிற விதத்தில் கதை போகிறது. நம்மை சேர்த்து அந்த பிரசவத்துக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறார்.

என்னை மிகவும் நெகிழ வைத்த கதை என்பது கடைசியாய் அவர் எழுதியிருந்த விடுபூக்கள் கதைதான். முதியவர்கள் பற்றியது. பெற்ற பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு, தோட்டம் வீடு என இருந்தும் அவருக்கு விஷம் கொடுத்து தானும் அதை குடித்து மரிக்கும் முதுமையின் வலி குறித்த கதை. மொழி கோவை வட்டார மொழிவழக்கில் எழுதப்பட்டிருக்கிறது.

வாசிப்புக்காக ஏதாவது ஒரு நூலை, அது கவிதையாக இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும் சரி, அதில் ஏதாவது சமூக கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதே நம்மை போன்ற இலக்கியவாதிகளின் எண்ணமாக இருக்கின்றது. என்ன சொல்ல வருகிறார் என்றே தேடத் தொடங்குகிறோம். நம் அதிமேதாவித்தனத்தை முன் வைத்தே வாசிப்பைத் தொடங்குகிறோம். அப்போது வாசிக்கும் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமாய் தோன்றும்.

இதே நமக்கு பிடித்தமான எழுத்தாளர் என்றால், விருப்பப்படுகிறோம். விழைந்து வாசிக்கிறோம். சில கட்டங்களில் பெண் படைப்பாளிகளின் நூலைத்தான் படிக்கவேண்டும், இந்த எழுத்தாளரின் நூலைத் தான் படிக்கவேண்டும் என்று குறுகிக் கொண்டே போகிறோம். ஒரு தளத்திலேயே போனால் நம் வாசிப்பு அனுபவம் நமக்கு சுருங்கிவிடும்.

ஒரு சாதாரண வாசகனாய் ஒரு புத்தகத்தை திறந்து அதை நுகர்ந்து அதற்குள் ஐக்கியமாகி படிக்க தொடங்குகையில் மட்டுமே நம்முள் அந்த எழுத்துகளின் வாசம் இருக்கும். ஆசிரியரின் எழுதுகிற வடிவம் பிடிபடும். சந்தோசம், துக்கம், மௌனம், சிரிப்பு என்று எல்லாவற்றிலும் ஆசிரியருடன் பயணிக்க முடியும். மனம் லேசாகும். open ended perception என்பது தான் அது.

ஆட்டனத்தி அவர்களின் இந்த நூலைப் படிக்கும்போது, தமிழின் முதல் வந்த சிறுகதைகளில் ஒன்றான, குளத்தங்கரை அரசமரம் வே சு ஐயர் எழுதியது நினைவுக்கு வந்தது. அதில் அந்த அரசமரம் பேசுவதாக இருக்கும். ருக்மணியைப் பற்றியும், அவளின் பால்ய விவாகம், மனிதனை மற்ற உயிர்கள் பார்க்கும்விதமாய் அந்த கதை இருக்கும். அதே போலதான் ஆட்டனத்தி அய்யா அவர்களின் கதைகளும்.

நிறைய நுணுக்கங்கள் சார்ந்த அறிவு அவரிடம் இருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொன்றை கையில் எடுத்திருக்கிறார். ஒரு கதையில் யானைப் பற்றி, ஒன்றில் நாயைப் பற்றி, ஒன்றில் புறாவைப் பற்றி அதன் வளர்ப்பு புறா சண்டை பற்றி ஆடுகளைப் பற்றி, கிடையிடுவது பற்றி...இவருக்கு எது தெரியாமல் இருக்கிறது என்னும் எண்ணம் நமக்கு வந்துவிடும், அத்தனை விஷயங்கள்,

வெறும் அனுபவமாக மட்டும் அவர் அந்த வனத்துறை வாழ்க்கையை பார்க்கவில்லை. உணர்வு ரீதியாகவும் ஒன்றியிருக்கிறார். துறை சார்ந்த பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் உணர்வு ரீதியாக அணுகாததால் அவர்கள் ஒய்வு பெற்ற பிறகு தகவல்கள் மட்டுமே அவர்களிடம் மிஞ்சியிருக்கும். அதனோடு சேர்ந்த உணர்வுகள் இருப்பதில்லை. அதனால் அவர்களால் நிறைய விஷயங்களை எழுத முடிவதில்லை.

இன்னொரு அருமையான விஷயம், விலங்குகளோடு அந்த சூழலில் பணிபுரியும் அல்லது உடனிருக்கும் மனிதர்கள் அவர்களின் பிரச்சனைகள் அதை தீர்க்கும் விதத்தை விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ளுதல் போன்றவற்றையும் சொல்லித்தருகிறார்.

மனிதனும் விலங்குகளும் ஒருவருக்கொருவர் உறவாடிக் கொண்டுதான் வாழவேண்டும் என்பதை தெளிவாய் சொல்லும் நூல் இது. இயற்கையோடு இயைந்து வாழனும் என்பதை நம்ம தலையில் குட்டு வைத்து சொல்கிற நூலாக இதை நான் பார்க்கிறேன். அய்யா கிட்டே என் வேண்டுகோள் ஒன்றுதான். பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் என்றில்லாமல் பெருநகரத்தில் எல்லோர் கைகளிலும் இந்நூலைக் கொண்டு சேருங்கன்னு கேட்டுகிறேன்.

இந்த நூல் எழுத அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், அவர் இப்போது பணியில் இல்லை. இருந்தும் தெப்பக்காடு வரை போய் யானைகளின் விவரங்களை நேரில் கண்டுதான் எழுதியிருக்கார். பணி நீங்கியப்பின் ஆசுவாசமாய் உட்காரனும் என்று நினைக்கும் மனிதர்களுக்கு இடையில், அதனோடு ஒன்றி வேலையைத் தொடர்வது அதை பற்றி எழுதுவது எழுதியதை நூலாக்கி பகிர்வது என்பதை மிக பெரிய விஷயமாக கருதுகிறேன். அதுக்காகவே அவரை பாராட்ட வேண்டும்.

ஆட்டனத்தி அவர்கள் இன்னும் அதிக நூல்கள் இதே நுணுக்கங்களுடன் கொண்டு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன், படிக்கும் வாசகர்களுக்கும் வனம் சார்ந்த அறிவு கிடைக்கும் என்பதால்.

வாழ்த்துகள் ஆசிரியருக்கு..

(கோவை இலக்கிய சந்திப்பில் உரையாற்றியது)