நூல் : சல... சல....
நூல் ஆசிரியர் :   கவிஞர் வசீகரன்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா.இரவி   

நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் இதழாசிரியர் நூல்கள் போட்டி வைத்து இலட்ச ரூபாய்க்கு மேல் பரிசளித்து மாநாடு போல, ஆண்டு விழாவை சென்னையில் நடத்திய செயல் வீரர். திருக்குறள் பற்றிய புலமை மிக்கவர். ‘குட்டியூண்டு நூல் குழந்தைகளைப் போற்றியது, ‘மரவரம் மரங்களின் புகழ் பாடியது. பற பற பறவைகளின் நேசம் கற்பித்தது. சல... சல... உயிர் வளர்க்கும் தண்ணீர் பெருமை கூறும் விதமாக வந்துள்ள ஹைக்கூ நூல்.  ஒரே ஒரு மையக் கருத்தை ஒட்டி ஒரு நூல் வடிக்கும் அளவிற்கு ஹைக்கூ வடிக்கும் ஆற்றல் மிக்கவர் நூலாசிரியர் கவிஞர் வசீகரன். 

தண்ணீர் சல சல என்று ஓடும், அதையே நூலிற்கு தலைப்பாக்கி விட்டார். படித்து முடித்ததும் வாசகர் மனதிற்குள்ளும் ஹைக்கூ கவிதைகள் சல சல என ஓடுகின்றது.  புரவலர் கவிஞர் பொன்மனச் செம்மல் கார்முகிலோன் வாழ்த்துரை வழங்கி உள்ளார். 

வெள்ளத்தில் குடிசைகள்
நிவாரணம்
பெற்றனர்
பங்களாவாசிகள்
! 

நாட்டுநடப்பை அப்படியே படம் பிடித்து உள்ளார். நிவாரணம் நட்டப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களையே குறிப்பாக தன் கட்சிக்காரர்களுக்கு பங்களாவாசிகளுக்கு போய் சேருகின்றன. 

ஆற்றைத் தொலைத்தவன்
இறக்குமதி
செய்கிறான்
கனிம
நீர் புட்டி! 

உண்மை தான். நவீனம் என்ற பெயரில் கையில் தண்ணீர் புட்டியுடன் அலைகின்றனர்.  கனிம நீரில் சத்து இல்லை, வெறும் சக்கை என்று ஆய்வுகள் கூறுகின்றன.  அதைத்தான் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கிறான். இலவசமாக வரும் குழாய் நீரை மதிப்பதில்லை. அது தான் உடலுக்கு நல்லது என்பதை உணரவில்லை. 

குள வீடு தேடி
ஓடி
வரும் மழைநீர்
மனிதகுல
ஆக்கிரமிப்புகள் 

சென்னையில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய காரணத்தால் பெருமழையின் போது சென்னை மூழ்கிய சோக நிகழ்வை நினைவூட்டியது. 

காதுக்குள் சிறு பூச்சி
வெளியே
கொண்டு வந்தது
காதுக்குள் ஊற்றிய நீர். 

நீர் மனிதனுக்கு உயிர் வளர்ப்பது மட்டுமல்ல, இதுபோன்ற உதவிகளும் செய்கின்றது என்பதை உணர்த்தி உள்ளார். இதுபோன்ற அனுபவம் நம்மில் பலருக்கும் நிகழ்ந்ததுண்டு. 

சல சல சல
பாடிக்
கொண்டே ஓடும்
சிற்றாறு
 

சல சல என்ற சத்தத்தை பாடலாகப் பார்க்கும் கவிஞரின் பார்வை சிறப்பு. 

விவசாயம் கொடுத்தது
ஆற்று
நீர்
விரவிய
சாய் நீர் 

குடிநீராகப் பயன்படும் ஆற்றுநீரில் சில மனசாட்சி இல்லாத மனிதர்கள் சாயக் கழிவுநீரைக் கொண்டு வந்து கலந்து மாசாக்கும் மடமையைச் சாடி உள்ளார். 

வறண்ட நிலம்
வாழ்வு
தந்தது
கிணறு
! 

உண்மை தான். வானம் பொய்த்து மழை வராவிட்டால் கிணற்று நீரிலிருந்து விவசாயம் செய்து பிழைக்கும் விவசாயிகள் உண்டு நம் நாட்டில். 

ஊரின் நடுவே
வற்றாத
கிணறு
உயிர்
வலி! 

மனித உயிர் வளர்க்கும் பயிர் வளர்க்கும் காரணி நீர். ஊரின் நடுவே வற்றாத கிணறு ஒன்று இருந்து விட்டால் அந்த ஊரின் குடிநீர் தேவையை அந்தக் கிண்றே நிறைவு செய்து விடும். இன்றைக்கும் பல கிராமங்களில் அப்படிப்பட்ட ஜீவன் மிக்க கிணறுகளைக் காண முடியும். 

ஒப்பற்ற குடிநீர்
உயரத்தில்
தொங்குகிறது
இளநீர்
! 

உடலநலம் காக்கும் ஒப்பற்ற இளநீரின் அருமை பெருமையை இன்றைய இளைய தலைமுறை அறியவில்லை.  பீசா, பர்கர் என்று தீங்கு தரும் உணவை துரித உணவை உட்கொண்டு தண்ணீருக்குப் பதிலாக கொடிய குளிர்பானம் குடித்து உடல்நலத்தைக் கெடுத்து வருகின்றனர்.  இளநீர் வாங்கிக் குடித்து உழவனை வாழ வைப்போம் என்று உறுதி ஏற்க வேண்டும். 

சேற்றில் கால்
சிலிர்ப்பில்
அவன்
நடவில்
விவசாயி! 

சேற்றைக் கண்டு சிலர் முகம் சுளிப்பது உண்டு. ஆனால் உழவனோ ஆனந்தமாக சேற்றில் கால் வைத்து உழுது பண்படுத்தி விளைவிப்பான். அவன் சேற்றில் கால் வைத்ததால் தான் நாம் சோற்றில் கை வைக்கிறோம் என்பதை உணர்ந்து உழவனுக்கு நன்றி செலுத்திட வேண்டும். 

தடுக்கப்பட்ட தண்ணீர்
தடை
தாண்டி வந்தது
கரை
புரண்ட வெள்ளம்! 

கல் நெஞ்சம் படைத்த கர்னாடகம் உழவுக்கு நமக்கு தேவை என்று உழவர்கள் மன்றாடும் போது தண்ணீர் திறக்க மாட்டார்கள். மழை வந்து வெள்ளம் வந்து, அணை உடைந்து விடும் என்ற பயம் வந்தால் மட்டும் திறப்பார்கள். அதனை உணர்த்திய விதம் அருமை. 

சேருமிடத்தின்
நிறமும்
வடிவமும்
ஏற்கும்
தண்ணீர் 

தண்ணீர் தன்மையை மிக அழகாக சுருக்கமாக எடுத்தியம்பும் விதமாக அமைந்த ஹைக்கூ நன்று.  நிறமற்றது தண்ணீர். வட்ட வடிவ பாத்திரத்தில் வைத்தால் தண்ணீர் வட்டமாகும். சதுரவடிவ பாத்திரத்தில் வைத்தால் சதுரமாகும். இப்படி தண்ணீரின் இயல்பை மிக இயல்பாக ஹைக்கூவாக வடித்தது சிறப்பு. 

நூலாசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கு பாராட்டுகள். தண்ணீரை கருப்பொருளாக வைத்து தண்ணீர் போல ஹைக்கூ வடித்துள்ளார்.

 

மின்னல் கலைக்கூடம்,
117,
எல்டாம்ஸ் சாலை,
சென்னை
-600 018. 
பேசி
: 98414 36213

பக்கங்கள் : 80,
விலை
: ரூ.50

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்