நூல் : வாங்க மேடையில் பேசலாம்
நூல் ஆசிரியர் :   முனைவர் .பாலசுப்பிரமணியன்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி

நூல் ஆசிரியர் முனைவர் . பாலசுப்பிரமணியன் அவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணை நூலகராகப் பணியாற்றி வருபவர் என்பதால் பேச்சாற்றல் வளர்க்க உதவிடும் பல்வேறு நூல்கள் படித்து வகுத்து தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்.

பேச்சாளராக விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

10 தலைப்புகளில் பேச்சுக்கலையை வளர்க்க உதவிடும் வண்ணம் நூலை வடித்து உள்ளார். பேச்சாற்றலில் தனி முத்திரை பதித்திட்ட ஆளுமைகளின் ஆற்றலை நன்கு விளக்கி உள்ளார். பதச்சோறாக நூலில் இருந்து சில துளிகள். 

பேச்சாளனாகத் தகுதிகள் 

சிறந்த மேடைப் பேச்சாளானாக வேண்டுமென்றால் முதலில் அவர் நல்ல தமிழ் கற்றவராக இருக்க வேண்டும். மொழி நடை, கருத்திலே தெளிவு, தெளிவான உச்சரிப்பு, குரலிலே ஏற்ற இறக்கம், பேச்சிலை உணர்ச்சி பொங்க பேசும் ஆற்றல், இலக்கிய எடுத்துக்காட்டுகள், உடல்மொழி ஆகியவற்றை நன்கு பெற்றவராக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். மேலும் பேச்சாளராக வர வேண்டும் என்று விரும்புபவர்களிடம் நல்ல ஆர்வமும், முயற்சியும், பயிற்சியும், கற்றறிந்தோரின் பழக்கமும் உடையவர்களாகத் திகழ வேண்டும்.

இப்படி விரிவாகவும் விளக்கமாகவும் நூல் முழுவதும் பேச்சுக்கலை வளர்க்க உதவிடும் வழிவகைகளை மிக நுட்பமாகவும் படிப்பதற்கு மிக எளிதாக விளங்கும் வண்ணம் எழுதி உள்ளார்.

பொதுவாக பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வாசிக்க வேண்டும், கிடைத்த எல்லாம் வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலக்கியக் கூட்டங்களுக்கு சென்று பேசுவோரின் பேச்சை உற்றுநோக்க வேண்டும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களைப் பார்க்க வேண்டும். பேசப்போகும் தலைப்பு குறித்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு வாசித்துப் பழக வேண்டும். வீட்டில் தனிமையில் பேசிட வேண்டும். பின்னர் அவையில் பயமின்றி எடுத்துரைத்தால் கவனிக்கப்படுவோம். பாராட்டப்படுவோம்.

திருக்குறளை மேற்கோள் காட்டி பேச்சாற்றல் பற்றி நன்கு விளக்கி உள்ளார். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு பற்றி எடுத்தி இயம்பி உள்ளார். பேச்சை தொடங்கும் போதே எல்லோரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் புகழ்பெற்ற சொற்றொடர் சொல்லி தொடங்குவது சிறப்பு.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழுக்கு முதல் வணக்கம் என்று சொல்லி தொடங்குவதை என் வழக்கமாக வைத்துள்ளேன்.

அவர் போல பேச வேண்டும், இவர் போல பேச வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து நமக்கென ஒரு தனி முத்திரையோடு இயல்பாகவும், உண்மையையும் பேசினால் பேச்சு வெற்றி பெறும்.

பேச்சாளர் என்ன என்ன நூல்கள் படிக்க வேண்டும் என்ற  பட்டியில் நூலில் உள்ளன .

புகழ்பெற்ற கவிஞர்களின் வைர வரிகளை மேற்கோள் காட்டி உள்ளார்.

திருமண விழா, பிறந்த நாள் விழா பேச்சுக்கள் பற்றியும் விளக்கி உள்ளார். ஆம், அவை அறிந்து பேச வேண்டும். என்ன விழா? என்ன தலைப்பு? என்ன கருத்து பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே மனதில் திட்டம் வகுத்துக் கொண்டு பேச வேண்டிய கருத்துக்களை சுருக்கமாக சிறிய தாளில் வைத்துக் கொண்டு வரிசையாக கோர்வையாக கருத்துக்களை எடுத்து வைத்தால் பேச்சு வெற்றி அடையும். வளவள என்று நீளமாக நீண்ட நேரம் பேசுபவர்களை விரும்புவதில்லை, காலம் அறிந்து சுருக்கமாக தெளிவாக பேசிட வேண்டும்.

மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஆளுமைகளைப் பட்டியலோடு விளக்கி உள்ளார். அறிஞர் அண்ணா தொடங்கி காமராஜர், இராஜாஜி என பலரையும் மேற்கோள் காட்டி அவர்களது சுவையான உரைகள் பற்றியும் எழுதி உள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் தம் மேடைப் பேச்சினை நிறைவு செய்யும் போதுஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்கின்ற பாரதிதாசனின் பாடலைக் கூறிப் பேச்சினை முடிப்பார்.

இப்படி பேச்சினை தொடங்கும் போதும் முடிக்கும் போதும் முக்கியமான வைர வரிகளை பயன்படுத்தினால் கேட்பவர்களுக்கு இனிமையாக இருக்கும். மேடைப் பேச்சிற்கும் வெற்றி கிட்டும்.

பட்டிமன்றப் பேச்சுக்கலையில் முத்திரை பதித்தவர்கள் எல்லாம் மதுரைக்காரர்கள். பட்டிமன்ற நடுவராக முத்திரை பதித்தவர்கள் பெரும்பாலும் மதுரைக்காரர்களே. தமிழறிஞர் சாலமன் பாப்பையா, தமிழ்த்தேனீ இரா. மோகன், கலைமாமணி கு. ஞானசம்பந்தன் இவர்கள் அனைவருமே மதுரையைச் சேர்ந்தவர்கள். காரணம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் படித்து வளர்ந்தவர்கள்.

வாங்க மேடையில் பேசலாம் நூலாசிரியர் முனைவர் . பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பாராட்டுகள்.



சங்கர் பதிப்பகம்,
1521,
டீச்சர்ஸ் காலனி 2வது தெரு,
இராஜாஜி
நகர் விரிவு, வில்லிவாக்கம்,
சென்னை
– 600 049.

பக்கம் : 112,



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்