நூல் : கனவுகளின் தேசம்
நூல் ஆசிரியர் :   கவிஞர் வெ. அஜீத்குமார்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி

கனவுகளின் தேசத்தில் தான் கவிஞர்கள் வாழ்கிறார்கள். கண்ட கனவுகள் தான் கவிதைகளாகப் பிறக்கின்றன. நூல் ஆசிரியர் கவிஞர் வெ. அஜீத்குமார் கவிமலர் டாட் காம் என்ற என் இணையத்தின் ரசிகர். அலைபேசியில் அழைத்து அணிந்துரை வேண்டுமென்றார். அனுப்பிட வேண்டினேன். அனுப்பினார். இது இரண்டாவது நூல். முதல் நூல்வெளிச்சத்தின் வாக்குமூலம் அதுவும் ஹைக்கூ நூல் தான். 

வளரும் கவிஞரின் கன்னிப்படைப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு ஹைக்கூ நுட்பம் அறிந்து திறம்பட கவிதைகளை வடித்துள்ளார். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். 

காலி செய்த வீட்டில்
பத்திரமாய் இருக்கின்றன
பழைய நினைவுகள்! 

உண்மை தான். வீடு மாறியவர்கள் மட்டும் உணர்ந்த உன்னத உணர்வு. புதிய வீட்டிற்கு வந்துவிட்டாலும் பழைய வீட்டின் நினைவுகள் வந்துவந்து போகும். அதுபோல இது இல்லையே என ஏக்கம் பிறக்கும். அதனை அழகிய ஹைக்கூவாக வடித்துள்ளார். 

கை ஏந்தாமலே     
காசு
விழுகிறது
உண்டியலில்! 

கோயிலின் வெளியே கைஏந்தும் யாசகர்களுக்கு பிச்சைப் போடாமல் கைஏந்தாத கோயில் உண்டியலில் காணிக்கைப் போடும் பக்தர்கள் பலர் உள்ளனர். படியளப்பவன் கடவுள் என்பார்கள். பிறகு இவர்களே கடவுளுக்கும் படிஅளப்பார்கள். புரியாத புதிராகவே இருக்கும். 

கயிற்றில்  நடக்கும் சிறுமி
விழவேயில்லை
தட்டில் காசு! 

கயிற்றில் நடக்கும் சிறுமியின் வித்தையைக் கண்டு ரசிப்பார்கள். சாட்டையால் அடிப்பதையும் பார்த்து ரசிப்பார்கள். இறுதியாக காசு கேட்டு தட்டை நீட்டி வரும்போது மெல்ல நகர்ந்து விடும் கல்நெஞ்சக்-காரர்களே அதிகம். 

கழுத்து நிறைய நகை
இரவில் தொலைந்தது
தூக்கம்! 

நிம்மதியாக தூக்கம் வரவே வராது. நகைக்கு ஆபத்து வந்து விடுமோ? நகைக்காக நம் உயிர் போய் விடுமோ? என அஞ்சி அஞ்சியே தூக்கம் தொலைத்தவர்கள் உண்டு. 

வெற்றி பெற்ற அமைச்சர்
அடிக்கடி
தொகுதிக்கு வருகிறார்
நிலம்
வாங்க! 

வெற்றி பெற்ற அமைச்சர் அடிக்கடி தொகுதிக்கு வந்து மக்களை சந்திப்பது நல்ல செயல் தானே என்று யோசித்தால், மூன்றாவது வரியில் ஒரு மின்னல் தாக்கு, ‘சொத்து சேர்க்கநிலம் வாங்க வருகிறார் என்று. நாட்டுநடப்பை அப்படியே காட்சிப்படுத்தி உள்ளார். பாராட்டுகள். 

பறவையின் பாதையில்
மறியல் செய்கிறது
சிறுமி விட்ட பட்டம்! 

சிறுமி பட்டம் விடுவதையும் பறவைகள் பறப்பதையும் படிக்கும் வாசகர் மனதில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் வெ.அஜீத்குமார். 

கவியரங்கம் முடிந்தும்
வீட்டுக்கு வரவில்லை
பறிகொடுத்த மனசு! 

இந்த அனுபவம் எனக்கும் உண்டு. கவியரங்கில் கவி பாடி கைதட்டல் பெற்றால் மனசு பறிபோய்விடும். வீட்டிற்கு வந்தபின்னும் அக்காட்சி மனதில் திரும்ப திரும்ப கடல் அலை போல வந்து அடிக்கும். மகிழ்ச்சி வெள்ளத்தில் மனசு மிதக்கும். 

சாலையில் திருஷ்டிப் பூசணி
சிதறி விழுகிறது
வாகன ஓட்டியின் உடம்பு! 

வெள்ளி, செவ்வாய்க்கும் இன்னும் சிலர் விசேச நாட்களிலும் வாசலில் திருஷ்டி பூசணி உடைத்து விட்டு சென்று விடுகிறார்கள். அந்த வழியாக வரும் வாகன ஓட்டி விபத்துக்கு உள்ளாகின்றார். இது பற்றிய கவலையின்றி பூசணி உடைக்கும் மூட நம்பிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும். உழவன் பார்த்தாலும் உடைக்கப்பட்ட பூசணிக்காக மனம் வருந்துவான். சமுதாயம் திருந்த வேண்டும். 

இலவசமாய்க் கிடைத்தும்
வாசமே இல்லை
இணையத்தில் புத்தகம் 

இணையத்தில் எத்தனையோ நூல்கள் இலவசமாகக் கிடைத்தாலும் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் புதுப்புத்தகம் போல வாசம் வருவதில்லை. புத்தகத்தின் நேசத்தை இணையம் தருவதில்லை என்பது உண்மை. 

பழுதாகாத
மின் விசிறி
சாலையோர மரம்! 

உண்மை தான். மரம் நிழலையும் காற்றையும் தந்துகொண்டே இருக்கும். ஓய்வே எடுப்பதில்லை. மரம் வளர்த்தல் அறம் என்பதை ஹைக்கூ மூலம் உணர்த்தி உள்ளார்

புரியவே இல்லை
கேட்க தூண்டுகிறது
மழலை மொழி!

குழந்தை பேசுவது புரியவில்லை என்றபோதும் கேட்க இனிமையாக இருக்கும். சலிக்கவே சலிக்காது. கவலைகளை மறந்து ரசிப்போம். 

இப்படி நூல் முழுவதும் - கண்ட கனவை, கண்ட காட்சிகளை, சமுதாய சீரழிவை, மீனவர்களின் துன்பத்தை பல்வேறு ஹைக்கூ கவிதைகளாக வடித்து ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். அணிந்துரையில் பதச்சோறாகவே குறிப்பிட வேண்டும் என்பதால் இத்துடன் முடிக்கின்றேன். உள்ளே சென்று படித்துப் பாருங்கள் உள்ளம் கொள்ளை போகும். உறுதி!


                                               



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்