நூல் : எனவே தான் மழை!
நூல் ஆசிரியர் :   கலைமாமணி ஏர்வாடியார்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி

கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் எப்போதும் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கும் சுறுசுறுப்பான ஆளுமையாளர். ‘கவிதை உறவு இதழில் எழுதிவந்தஎன் பக்கம் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். புகழ்பெற்ற வானதி பதிப்பகம் கொரோனா நெருக்கடி காலத்திலும் ஏர்வாடியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, உடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளனர் மிக நேர்த்தியான வடிவமைப்பு. 

இந்து தமிழ் நாளிதழ் உதவி ஆசிரியர் மானா பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கி உள்ளார். 28 கட்டுரைகள் உள்ளன. ஏர்வாடியாரின் இனிய நண்பர் கனடா கவிஞர் சண்முகராஜா (மாவிலி மைந்தன்) அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். 

ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வைர வரிகளை, கட்டுரையின் சாரத்தை வைத்து இருப்பதால் தோரண வாயிலாக நம்மை வரவேற்று கட்டுரையைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளன. வாழ்வியல் கருத்துக்களை விதை விதைப்பது போல விதைத்து உள்ளார்.  

எனவே தான் மழை என்று பெயரிட்டு வாழ்க்கைக்குப் பயன் தரும் கருத்து மழை பொழிந்து உள்ளார். பாராட்டுக்கள். 

நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படி சமூகம் நம்மிடமிருக்கிறது. நமக்கான இடம் வேறு யாரும் தருவதல்ல; நாமே தேர்ந்து கொள்வது தான்! உள்வட்டத்திற்கு வா என்று யாரும் அழைக்க மாட்டார்கள். நாம் தான் புகுந்து கொள்ள வேண்டும். 

உள்வட்டம் என்ற முதல் கட்டுரையில் உள்ள வைர வரிகள் இவை. ‘என்னவாக நினைக்கிறாயோ? அதுவாகவே ஆகிறாய் என்று வீரத்துறவி விவேகானந்தர் சொல்லியது போல, “எப்போதும் இயங்கிக் கொண்டே இரு; தயங்கிக் கொண்டே தள்ளி நிற்காதே என்ற கருத்தை மிக நுட்பமாக விளக்கி உள்ளார். 

இணையத்தில், முகநூலில் எனது செயல்பாடுகளை உற்றுநோக்கி கவிதை உறவில்மனதில் பதிந்தவர்கள் பகுதியில் என்னை அட்டைப்-படத்துடன் பதிந்து பலரும் பாராட்டும்படி எழுதி இருந்தார். செயல்படாத சிலர் ஏர்வாடியாரிடம் எங்களைப் பதியவில்லையே என்று கேட்டபோது, இரவியைப் போல நீங்களும் செயல்படுங்கள், நானே பதிவேன், நீங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று சொன்னார். அந்த நிகழ்வு என் நினைவிற்கு வந்து போனது, இந்த நூல் படித்த நேரங்களில். எனவே தான் சொல்கிறேன், ‘எனவே தான் மழை நூல் மலரும் நினைவுகளையும் மலர்விக்கும் என்கிறேன்.  

பிரபலம் மட்டுமிருந்து போதிய வசதிகள் இல்லையேல் போலித்தனங்களுக்கே பெரிதும் நம்மை பலியாக்க நேரும். சுதந்திரமாக இருக்க முடியாது. பேருந்தில் பயணிக்க முடியாது. நகர வீதிகளில் நடந்து போக முடியாது. தெருவோரக் கடைகளில் தேநீர் அருந்த முடியாது, ஒப்பனை இல்லாத உலகத்தை தரிசிக்க முடியாது. 

நம்மில் பலரும் பிரபலமாக வேண்டும் என்றே ஆசைப்படுகிறோம். ஆனால், ஒருவேளை பிரபலமாகி விட்டால் வசதிகள் இல்லாவிட்டால் படும்பாட்டை, இன்னலை விளக்கி உள்ளார். 

தேசப்பிதா மாமனிதர் காந்தியடிகள் வலியுறுத்திய அகிம்சை என்ற மாபெரும் தத்துவத்தை மிக எளிமையான சொற்களின் மூலம் விளக்கி உள்ளார். பாருங்கள். 

பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்பதென்னவோ நம்மவர்க்கு வீரம் போல் தெரிகிறது. ஆனால் அது மிகப்பெரிய மோசமான கோழைத்தனம். பயந்துதான் பழி வாங்குகிறோமே தவிர வீரத்தால் அல்ல. 

அகிம்சை தான் உண்மையான வீரம், பழிக்குப்பழி வாங்குவது கோழைத்தனம் என்கிறார். உண்மை தான், பொறுமை இருந்தால் தான் அகிம்சையைக் கடைபிடிக்க முடியும். கோபம் எளிதில் வந்து விடும், அதை வரவிடாமல் தடுத்து பொறுமை காப்பதே உண்மையான வீரம் என்கிறார். 

இப்படி நூல் முழுவதும் பல பயனுள்ள கருத்துக்களை அறுவடை செய்துள்ளார். பதச்சோறாக சில மட்டும் குறிப்பிட்டுள்ளேன். நூல் வாங்கிப் படித்துப் பார்த்தால் நீங்களே உணர்வீர்கள். மிக்ச்சிறந்த ஆளுமையின் அனுபவத்தை எளிமையான சொற்களின் மூலம் மிக வலிமையான கட்டுரைகளாக வடிவமைத்து உள்ளார். 

இந்த நாட்டில் சிறிய குற்றங்களைச் செய்கிறவர்கள் அரசியல்வாதிகளை அணுகித் தப்பித்துக் கொள்கிறார்கள். அதைவிடச் சற்று பெரிய குற்றம் செய்துவிட்டுத் தப்ப அரசியல்வாதியாகி விடுகிறார்கள். 

நாட்டு நடப்பை அப்படியே படம்பிடித்துக் காட்டி உள்ளார். குற்றப் பிண்ணனி உள்ளவர்கள் தான் அரசியலை முண்ணனிகளாக வலம் வருகின்றனர். காமராசர், கக்கன் காலம் போல் இன்று இல்லை அரசியல் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தி உள்ளார். 

வெற்றிகரமான வாழ்வின் இயக்கமே, ‘எது முதலில் என்பதில் தான் இருக்கிறது. எல்லாம் வேண்டும் தான். ஆனால் எது வேண்டும், எப்போது வேண்டும் என்பதில் எது அவசியமோ அவசரமோ அதற்குத்தான் முதலிடம். இதைத்தான் முன்னுரிமை (PRIORITY) என்கிறோம். 

உண்மை தான். சிலர் ஆடம்பரத்திற்கு முன்னுரிமை தந்து விட்டு, அவசியத்திற்கு அல்லல்படும் நிலையைப் பார்க்கிறோம். பல நுணுக்கமான கருத்துக்களை விளக்கி உள்ளார். பாராட்டுக்கள்.




வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை
-600 017.

பக்கங்கள் : 136,
விலை
: ரூ. 110                                  



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்