நூல் : வானவில் தூரிகை!
நூல் ஆசிரியர் :   கவிஞர் முல்லை நடவரசு !
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி

நாடறிந்த பட்டிமன்ற நடுவர் முல்லை நடவரசு, திரைப்படப் பாடல்களை வரி விடாமல் பாடும் பா.அரசு, சொல்லாற்றல் மிக்க நா. அரசு, ஹைக்கூ கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்பதை மெய்ப்பித்து உள்ள நூல். வானவில் தூரிகை நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூலை நூலாசிரியர் மனைவி திருமதி பழனீஸ்வரிக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். அகநி பதிப்பகம் ஹைக்கூ கவிதைகளுக்குப் பொருத்தமான படங்களுடன் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர்.

அகநி பதிப்பகம் இனிய நண்பர் ஹைக்கூ முன்னோடி மு. முருகேஷ் அவர்கள் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார். காவல்துறை மேனாள் தலைவர் திரு. . பாரி .கா.. அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார்.

நூலாசிரியரின் முதல் நூலே முத்தாய்ப்பான நூலாக அமைந்து விட்டது. சமுதாயத்தை உற்றுநோக்கி மனம் பாதித்த ரசித்த ருசித்த அனைத்தையும் ஹைக்கூ கவிதை வடிவில் யாத்துள்ளார். 

ஒற்றைச் சொல் தான்உ
ன்னத
மந்திரமானது
அம்மா
! 

அவரவருக்கு அவர் அவர் அம்மா என்றால் என்றும் உயர்வு தான். மனதிற்குள் மாளிகை அம்மாவிற்கு எப்போதும் உண்டு. உயிருள்ளவரை மறக்க முடியாத, மறக்கக் கூடாத ஒப்பற்ற உன்னத உறவு அம்மா. அம்மாவின் மேன்மையை மிகச் சுருக்கமான சொற்களில் அழகாக உணர்த்தி உள்ளார். அம்மாவிற்கு ஈடு இணை இவ்வுலகில் வேறு இல்லை என்பதே உண்மை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால்
குப்பையும்
கூழமுமாய்
இந்திய
ஜனநாயகம்! 

உண்மை தான். உயிர்கள் கொத்துக் கொத்தாக கொரானோவின் கொடுமையால் மடிந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் குதிரை பேர அரசியல் செய்து ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சிக்கு வரத்துடிக்கும் அற்பமான அரசியலைப் பார்த்தால் வேதனேயே மிஞ்சுகின்றது. காந்தியடிகள் இருந்தால் கண்ணீர் வடித்து இருப்பார். 

உலக அதிசயங்கள்
ஒவ்வொன்றிலும்
மணக்கிறது
வியர்வை
வாசம்! 

தாஜ்மகால் உலக அதிசயத்தைப் பார்த்து வியந்து போகிறோம். ஆனால் அதற்காக உழைத்திட்ட உழைப்பாளியின் ஒப்பற்ற உழைப்பை நாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை. உழைப்பாளியை நினைவூட்டியதற்கு நன்றி. 

ஆயிரம் கவிதைகளுக்கு
அச்சாரம்
போட்டது
அவளின்
ஓரப்பார்வை! 

இராமாயணப்பாடல் முழுவதும் அறியாவிட்டாலும்அண்ணலும்  நோக்கினான், அவளும் நோக்கினாள் என்ற வரி எல்லோருக்கும் நினைவில் நிற்கும். அதுபோல ஓரப்பார்வை ஓராயிரம் கவிதைகளை அள்ளி வழங்கும் அட்சயப்பாத்திரம் என்று காதல் ஹைக்கூவும் வடித்துள்ளார். பாராட்டுக்கள். 

மூங்கில் உரசினால் தீ
மூடர்
உரசினால்
சாதீ
! 

சாதியின் பெயரால் நடக்கும் சண்டைகள் வன்முறைகள் மூடர்களின் சதிசெயல்கள் என்பதை ஹைக்கூவின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார். 

அள்ளி வழங்கிய
அமைச்சரின்
நன்கொடை
ஊழல்
நெடி 

சில அமைச்சர்கள் சுறாமீனை விழுங்கிவிட்டு சின்ன மீனைப் போட்டு புகைப்படத்திற்கு ஊடக வெளிச்சத்திற்கு முகம் காட்டிச் சிரிப்பதை பார்த்து உணர்ந்து நொந்து யாத்திட்ட ஹைக்கூ, நாட்டு நடப்பை படம் பிடித்துக் காட்டுகின்றது. 

பார்த்துப் போ
பாதையெல்லாம்
புதைகுழிகள்
டாஸ்மாக்
கடைகள் 

சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஓரிருவர் மட்டும் குடிப்பார்கள். மற்றவர்கள் குடிப்பதில்லை. ஆனால் இன்றோ ஓரிருவர் குடிப்பதில்லை, மற்றவர் எல்லாம் குடிக்கின்றனர். பள்ளி மாணவன், பள்ளியின் இருக்கையை விற்றுக் குடிக்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. காந்தி தேசத்தில் மதுக்கடைகளை மூடி ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கு செய்யும் மரியாதையாக அமையும். 

ஆறு வயது பாரதிக்கு
அடர்த்தியான
மீசை
மாறுவேடப்
போட்டி 

இந்த ஹைக்கூ படிக்கும் அனைவருக்கும் மகாகவி பாரதி உருவம் மனதில் வந்து விடும் என்று உறுதி கூறலாம். அது தான் படைப்பாளியின் வெற்றி. மூன்றாவது வரியில் ஒரு எள்ளல் சுவை, முதல் இரண்டு வரிகளில் ஒரு வியப்பு என ஹைக்கூ கவிதையின் நுட்பத்தை நன்கு கையாண்டு நூல் முழுவதும் நல்ல பல ஹைக்கூ கவிதைகளை வடித்துள்ளார். பாராட்டுகள். 

சிற்றுளி என்று எண்ணாதீர்
சிதறி
விடும்
மலை
! 

உருவத்தைப் பார்த்து யாரையும் குறைவாக, தாழ்வாக எண்ணி விடாதீர்கள். மிகப்பெரிய மலையையும் சிறிய உளி தகர்த்து விடும் என்ற உவமையின் மூலம் உணர்த்தியது சிறப்பு. 

அணிந்த சேலையில்
சிறகசைக்கின்ற

 
வண்ணத்துப்பூச்சிகள்! 

பல வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வை முடித்துத் தான் பட்டுப்புடவை உருவாகின்றது. எனவே உயிர்களின் மீது நேயம் உள்ளவர்கள் பட்டுப்புடவை அணியாதீர் என்று சொல்லாமல் சொல்லும் ஹைக்கூ  நன்று. 

ஆதார் இல்லையென்று
இனி அனுமதி மறுப்பானோ
வெட்டியானும்! 

கவிஞர் இனி என்று பாடியது உண்மையாகி விட்டது. ஆதார் நகல் இல்லாமல் எந்த ஒரு பிணத்தையும் மயானத்தில் அனுமதிப்பதே இல்லை. தேவை இல்லை, கட்டாயம் இல்லை என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறுவார்கள். ஆனால் மறைமுகமாக கட்டாயமாக்கி விட்டார்கள். இனி சிறுநீர் கழிக்கும் இடத்தில் கூட ஆதார் கேட்கும் நிலை வந்தாலும் வரலாம். 

நீரூற்றி என்ன பயன்?
அணைய
மறுக்கிறதே
பசித்
தீ! 

ஒரு பக்கம் கொரோனா கொடுமை என்றால் மறுபக்கம் பசிக்கொடுமை ஊரடங்கு ஊரடங்கு என்று நீட்டிக் கொண்டே செல்கின்றனர். தனியார் நிறுவனங்கள் வேலை இல்லை, எனவே ஊதியம் இல்லை என்று கைவிரித்து விட்டனர். பணக்காரர்களுக்கு பணம் இருப்பதால் கவலை இல்லை. ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் பசி பட்டினியில் தவித்து வருகின்றனர். அந்த இன்னலை உணர்த்திய ஹைக்கூ நன்று. வானவில் நிரந்தரமில்லை. இந்த ஹைக்கூ வானவில் நிரந்தரம்.



 


அகநி வெளியீடு,
3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி
-604 408.
திருவண்ணாமலை
மாவட்டம்

பக்கங்கள்
: 128,
விலை
: ரூ. 120


                                    

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்