நூல் :   அழகுத்தமிழ் கீழடி
நூல் ஆசிரியர் :   நாகராஜ் முருகன்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி


நூலாசிரியர் திரு. நாகராஜ் முருகன்
HcL நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொறியாளர். தமிழ் மீதும், தமிழர் மீதும் உள்ள பற்றின் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க கீழடிக்கு பத்துக்கும் மேற்பட்ட முறைகள் நேரில் சென்று விசாரித்து, ஆய்ந்து, ஆராய்ந்து, அறிந்து கீழடி தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி வடித்துள்ள நூல் இது.


கீழடி பற்றி தொடர்ந்து நூல்கள் வந்தவண்ணம் உள்ளன. திரு. வை. பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய நூல். இவர் தான் கீழடியை உலகிற்கு உணர்த்தியவர். தமிழ்மாமணி மதுரை இளங்கவின் அவர்கள், 'தமிழரின் சங்ககாலப் பெருமை கீழடி' என்ற நூலை எழுதி உள்ளார். அழகுத்தமிழ் கீழடி !இந்த நூல் கீழடிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் சிறப்பாக வந்துள்ளது. பாராட்டுகள். நூல் அட்டை தொடங்கி உள்ளே உள்ள வண்ணப்படங்கள் என யாவும் சிறப்பாக அமைந்துள்ளன.


நட்சத்திரா எழுதிய 'கீழடி நம் தாய்மடி' என்ற கவிதை நன்று. கவிதையுடன் தொடங்கி உள்ளார்.
4 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை வடித்துள்ளார். 1. கீழடி ஒரு தமிழ்குடி சகாப்தம், 2. கீழடி அகழாய்வு கடந்து வந்த இன்னல்களும் பயணங்களும், 3. வரலாற்று ஆய்வின் பெருஞ்சிறப்புகள், 4. பெருமைமிகு கீழடி.


முதல் கட்டுரையின் தொடக்கம் முத்தாய்ப்பான பொன்மொழியுடன் தொடங்கி உள்ளார்.

'தங்களது கடந்த கால வரலாறு, தோற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை அறியாத மக்கள் வேரற்ற மரம் போன்றவர்கள்' – மார்க்கஸ் கார்வே.

நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு :


'ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள், ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து இரண்டு பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒரு பெண் கழுத்தில் முத்துமணி மாலை அணிந்திருக்கிறாள். தூய வெண்ணிற முத்துக்களின் ஒளி, வீடு முழுவதும் சிதறியது இருக்கிறது. அது போதாது என்று, காதுகளில் பளிங்கினால் ஆன பாம்படம் அணிந்திருக்கிறாள், அது முத்துமணி மாலையின் ஒளியையும் விஞ்சுகிறது. அவளோடு எதிரில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருப்பவளோ, தனது கழுத்தில் ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் மூலப்பொருள் கொண்டு செய்யப்படும் சூது பவளத்தால் ஆன மணிமாலை அணிந்திருக்கிறாள். அதன் அழகு எல்லையற்று இருக்கிறது.'

இப்படி கீழே ஆய்வில் கிடைத்த பொருள்களை வைத்தே கற்பனை செய்து எழுதி காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இவ்வளவு செல்வ செழிப்புடனும் நாகரிகத்துடனும் தமிழன் அன்றே வாழ்வாங்கு வாழ்ந்து உள்ளான் என்பதை கட்டுரைகள் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.


மைய அரசு தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனை இடம் மாற்றம் செய்தார்கள். கீழடி ஆய்வையே கைவிட்டனர். பின்னர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆய்வினை மேற்கொண்டது. நீண்ட நெடிய போராட்டம், உழைப்பு, ஊடக உதவியின் காரணமாகவே கீழடி ஆய்வு தொடரப்பட்டது. நடுவணரசிற்கு இந்த ஆய்வு முடிவுகள் கசந்தது. தமிழ்உலகின் முதல்மொழி என நிரூபணம் ஆவது பிடிக்கவில்லை.


இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் தரும் முக்கியத்-துவத்தை தமிழுக்குத் தர விருப்பமில்லை. மற்ற மொழிகளுக்கு கோடிகள் வழங்கினால் தமிழுக்கு இலட்சங்கள் மட்டுமே வழங்குவார்கள்.


'சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்னரே தமிழ் நாகரீகம் பிறந்ததற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. உலகின் முதல்குடி நம் தமிழ்குடி என்பது இப்போது ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வணிகமும், தொழில்நுட்பமும், கலாச்சாரமும் செழித்தோங்கிய முதன்மை நகர் நமது பெருமைக்குரிய கீழடி'.


உலகின் முதல் மனிதன் தமிழன், உலகின் முதல் மொழி தமிழ், எழுத்தறிவோடு தொழில்நுட்ப அறிவோடு வாழ்ந்தவன் தமிழன் என்பதை உலகிற்கு பறைசாற்றி உலகமே தமிழையும் தமிழரையும் கண்டு வியக்க வைத்தது நம் கீழடி. கீழடியின் பெருமையை தக்க புகைப்படங்களுடன் சான்றுகளுடன் நன்கு நிறுவி உள்ளார் நூலாசிரியர் பொறியாளர் நாகராஜ் முருகன். தமிழ்த்துறை சாராத, தமிழ் இலக்கணம் படிக்காத, வேறு துறை சார்ந்தவரின் இந்த ஆர்வம் நூல் வெளியீடு பாராட்டுக்குரியது, வியப்புக்குரியது.


'ஒன்று கூட மத அடையாளம் சார்ந்த பொருட்கள் இல்லை. இவை இப்பொழுது மத பிரிவுகளை ஏற்படுத்தி தமிழர்களையும் தமிழையும் அழிக்க நினைப்பவர்களுக்கு அப்பொழுதே சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக கீழடி கண்டுபிடிப்புகள் உள்ளன. இதன் மூலம் பெரும் மதங்களின் ஆதிக்கம் அல்லாத அடையாளமே உண்மையான தமிழர்களின் அடையாளம் என மார்தட்டி சொல்கிறது கீழடி'. உண்மை தான். அங்கு கிடைத்த பொருட்களில் ஒன்றில் கூட சாமி உருவங்களோ, மத அடையாளங்களோ எதுவுமே இல்லை. சாதி மதமற்ற சமத்துவ சமுதாயமாக செல்வ செழிப்புடன் வாழ்ந்தான் தமிழன் என்பதையே கீழடி கூறி வருகின்றது.


2600 ஆண்டுகளுக்கு முன்பு கல்லால் செய்யப்பட்ட முத்திரையை பயன்படுத்திய நாகரீகம் கீழடி நாகரீகம். அக்காலத்திலேயே முத்திரை பதிக்க முத்திரை செய்துள்ளான் கல்லில். பானை ஓடுகளில் பெயர் பொறித்துள்ளான். எழுத்தறிவுடன் வாழ்ந்து உள்ளான். சுடுமண்ணால் ஆன உறை கிணறு செங்கல், உரை உரைஓடுகள், கருப்பு, சிவப்பு பானைகள். நூல் நூற்க உதவும் தக்களிகள், தங்க அணிகலன்கள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, பகடைக்காய்கள், சுடுமண் உருவங்கள், தொழிற்சாலை இருந்த இடம், பொத்தான், தொங்கட்டான், மணி, ஊசி, தகடு இப்படி அங்கு கிடைத்த பொருட்களை படங்களுடன் எடுத்துக்காட்டி எழுதி உள்ளார்.


இந்த ஆய்வு இன்னும் தொடர் வேண்டும். கீழடியைத் தொடர்ந்து வைகை ஆற்றின் கரையோரம் உள்ள அனைத்து கிராமங்களையும் ஆராய வேண்டும். இன்னும் தரவுகள் கிடைக்கும், சான்றுகள் கிடைக்கும். கீழடி பற்றி வந்துள்ள நூல்களில் சிறப்பான இடம் இந்நூலிற்கு உண்டு. பகுதி
1 என்று தான் குறிப்பிட்டுள்ளார். இனி தொடர்ந்து பகுதி 2ம் எழுதி வெளியிடுங்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நல்ல முயற்சி தொடருங்கள்.

 





வெளியீடு : நேருஜி மெயின் ரோடு,
புது விளாங்குடி, மதுரை – 625 018.
பேச : 74188 41793
மின்னஞ்சல் : mnk.nagaraj@gmail.com
பக்கங்கள் : 64
                                              


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்