கவிஞர் இரா.ரவியுடன் ஒரு நேர்காணல்


அமெரிக்காவில் உள்ள சர்வதேசத் தமிழ் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றது பற்றி?
குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி சென்று பட்டம் படிக்காத எனக்கு எனது படைப்பாற்றலை இனம் கண்டு வழங்கிய இந்த பட்டத்தை மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகின்றேன்.

சிற்றிதழ்களில் மட்டுமே எழுதி வருவதற்கு என்ன காரணம்?
தரம் தாழ்ந்து விட்ட பிரபல இதழ்களின் மீதுள்ள கோபம். சில ஆயிரங்களை இழந்தாலும் இலட்சியத்துடன் தரத்துடன் இயங்கிவரும் சிற்றிதழ்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். அதன் காரணமாக சிற்றிதழ்களில் எழுதி வருகிறேன்

சிற்றிதழ்களுக்கு என்று சிறிய வட்டம் தானே உண்டு இதில் எழுதி என்ன சாதனை செய்ய இயலும்?
சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளைத் தான் பின்னர் நூலாக அச்சிடுகின்றேன். இதுவரை 8 நூல்கள் எழுதி உள்ளேன். 8 நூல்களுக்கும் பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்து உள்ளது. பல்வேறு சாதனைகளை நிகழ்த்திட மூலமாக எனக்குத் திகழ்ந்தது சிற்றிதழ்கள் தான். சிற்றிதழ் வாசகர்கள் சிறிய வட்டம் என்றாலும் மிகவும் நுட்பமானவர்கள்.வாசகர்கள் ஒவ்வொருவருமே படைப்பாளியாக இருப்பார்கள். சிற்றிதழ்களில் எழுதுவதே ஒரு சுகம் தான்

உங்களுடைய இணைதயளம் கவிமலர்.காம் பற்றி குறிப்பிடுங்கள்
உலகம் முழுவதும் 2 லட்சம் பேருக்கு மேல் பார்த்து பலர் பாராட்டி உள்ளனர். கணினியில் தமிழ் எழுத்து இல்லாதவர்களுக்கும் புரியும் வண்ணம் தமிழ் எழுத்துக்களை புகைப்பட வடிவிலேயே வடிவமைத்து இருக்கிறோம். டவுன்லோடு போன்ற தொழில் நுட்ப சிரமங்கள் ஏதுமின்றி யாரும் உலகில் எந்த முலையிலும் எந்தக் கணினியிலும் கண்டுகளிக்கலாம். என்னுடைய 8 நூல்களின் கவிதைகளையும் கண்டு களிக்கலாம்.

ஹைக்கூ கவிதை வடிவை தேர்ந்தெடுத்தற்கு என்ன காரணம்?
இயந்திர உலகில் நீண்ட நெடிய கவிதைகளைப் படிக்கப் பலருக்கு நேரம் இருப்பதில்லை. முன்றே வரிகளில் இருப்பதால் மிகவும் எளிதாக எல்லோரும் படித்து விடுகின்றனர். படிக்கின்ற வாசகர்களையும் படைப்பாளியாக்கும். ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு. 10 பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய செய்தியை 3 வரிகளில் சொல்லிவிட முடியும். அது தான் ஹைக்கூவின் சிறப்பம்சம் முன்றே சொற்களில் எனதுஹைக்கூ

அட்சயப்பாத்திரம்,
திருவோடானது
பட்டச் சான்றிதழ்


வேலை இல்லாத் திண்டாட்டத்தை கூறும் எனது ஹைக்கூ பரவலாக எல்லோரது பாராட்டையும் பெற்றது படைப்பாளியாக உருவானது எப்போது?
மதுரையில் மதுரைமணி என்ற நாளிதழ் உள்ளது. சனிக்கிழமை தோறும் மணிமலர் என இலவச இணைப்பு வரும்.அதில் முதன் முதலில் எனது கவிதைகள் பிரசுரமானது.அந்த மகிழ்ச்சியின் காரணமாக நான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். இன்றுவர தொடர்ந்து மதுரைமணி இதழ் வளரும் கவிஞர்களை வளர்த்து வருகின்றது

படைப்பாளியாக இருப்பதில் என்ன இலாபம்?
நேரடியாக பண இலாபம் என்று இல்லாவிட்டாலும் வாழ்க்கையும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்க முடியும்.எழுதுவது போல நடக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் எண்ணம் செயலாக மாறும். செயல் பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுவரும் எனத ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாடநூலில் இடம் பெற்றது புகழ்பெற்ற எழுத்தாளர், பேச்சாளர் திரு.இறையன்பு குறிப்பிடுவது போன்ற வட்டத்திலிருந்து விடுபட்டு மாறுபட்ட செயல் புரிவது புத்துணர்வவைத்தரும் நான் சுற்றுலாத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். அலுவலக நேரம் போக மற்ற நேரத்தை இலக்கியத்திற்கு செலவழிப்பதால் மனம் மகிழ்ச்சியாக உள்ளது.

வளரும் படைப்பாளிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
தினசரி செய்தித்தாள் வாசியுங்கள்.அருகில் நடப்பதை உற்று நோக்குங்கள். இன்று மூடநம்பிக்கை தலைவிரித்து ஆடுகின்றது. இவற்றை ஒழிக்க சிந்தியுங்கள். நிறைய படைக்கலாம். படைப்பாளிகளுக்கு நிறைய கடமைகள் உள்ளன. சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு படைப்பாளிகளுக்கு உண்டு. காதல் கவிதைகளை எழுதுவதை விடுத்து சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகளும் எழுத முன் வர வேண்டும்.

குடியரசுத்தலைவராக இருந்த போது மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை சந்தித்தது பற்றி?
எனது வாழ்நாள் மிகவும் மகிழ்ச்சியான மறக்க முடியாத, நாள் எதுவென்று கேட்டால் அறிவியல் புயல் மேதகு அப்துல்கலாம் அவர்களை திருச்சியில் சந்தித்த 29.06.2005 தான் குறிப்பிடுவேன். மிகச்சிறந்த மனிதர், கவிஞர் அவரை நேரடியாக சந்தித்து எனது கவிதை நூல்களை வழங்கி பாராட்டைப் பெற்று, பேசி மகிழ்ந்த தருணங்களை இன்றும் அசைபோட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். அருகில் அமர வைத்துப் பேசி குழந்தையென சிரித்து அன்பைப் பொழிந்தார்கள்.

 


eraeravi@gmail.com


(நன்றி - புதுவை கவிதை வானில்)