மதுரைக்கு டிக்கட் இல்லை

கலியாணாமாம் கலியாணம் ! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலை வரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு ! அவள் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அது வேண்டும், இது வேண்டும் , அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்ட்த்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாளின் சிரிப்பைப் பார், என்று. இரவிலே ஈட்டியால் குத்த வேண்டும் போலிரிக்கு. இந்த வேதனையை நான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். “ நான் கெட்ட் கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.

டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைப் போல வாங்கவில்லையாஅ பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! இப்படி இருக்கிறது இதுகளுக்கு காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவேலேயாவது ஏதாவது மனக்கோட்டை கட்டியபடி, இப்போது காலந்தள்ள முடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள். கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சி தானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லை தானே! எந்த உருவிலே இருந்தால் என்ன ?

எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவன் எசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லா விட்டால் வேறோர் சமயம். விறைத்துப் பார்க்கலாம், முணு முணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுக துக்கத்துக்குப் பாத்யப் பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவது போல, நவசரத்ன கண்டியல்ல - என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்தது போலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன் தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும்.

காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன். ’அடே கழுதே!’ என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக் கூடியதாகத் தோன்றும். அர்த்த ராத்திரியிலே அவள், "ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?'' என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் சோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்க முடியாத தொல்லையாக இருக்கும்.

அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்து கொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்.....

பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறி வந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்து விடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றி விடவேண்டிய அவசியமும் பிறந்தது. "என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்க வேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோது கூட அவர்கள் மனச்சாந்தி வில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்து விட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற வேளை, பகவான் கண் திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீராட்டுமே.

"கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால் தான் என்பதை மதுரை இது போலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ர மத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம் பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புத்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன் மட்டுந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரிய காயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத்தான்மாட்டார்கள்!!

மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக் கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு"

"ஏன்! சாமி கோயிலுக்கா?"

"அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை''

"எந்த அம்மன் சன்னதி?''

அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத் தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை''

திருமலை! எது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டே போலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே"

ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைர மாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித் தரப்போறோம்? என்னமோ பாபம், நம்மைக் கட்டிக்கிட்ட கோஷத்துக்கு நம்ப சக்தியாலுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா! நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்"

நானா? நான் தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!"

"வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப் பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சி விட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பது தான் இது, மட்டும் என்ன?"

திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்து வந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகி விடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை "ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்து தானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த சோதனை இல்லை" என்று கூறுவான்.

"பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்டாட்டி என்ன, புலியா கரடியா? இப்படித் தான் சிலபேர், எனக்குக் கலியாணமே வேண்டாம்; கலியாணம் தொல்லை என்று பேசுவார்கள். எதற்கு கண்டபடி, ஆடலாமென்று தான். கலியாணம் செய்து கொண்டு குடும்பத்தை நடத்தாவிட்டா, கையிலே வருகிற பணத்தைக் கண்டபடி செலவுசெய்து விட்டு, உடம்பைக் கெடுத்துக் கொண்டு உதவாக்கரையாக வேண்டியது தானே. இல்லை, நான் தான் கேட்கிறேன். என்னமோ பாவம் காலையிலே போறார் வேலைக்கு, சாயங்காலம் வருகிறார். அப்பான்னு அலுத்து வீட்டுக்கு வந்ததும், தாகத்துக்கு வேணுமான்னு கேட்க ஒரு சம்சாரம் வேண்டாமா? நாலு நாளு நோவுன்னு படுத்தாரு, பக்கத்திலே இருந்து பிடிக்க எடுக்க ஒருத்தி வேண்டாமா? அதுக பாவம், இன்னைக்கோ, நாளைக் கோன்னு இருக்கு. அதுங்க சாவதற்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டுப் போக வேணாமா? அந்த ஆணுக்கு என் இதெல்லாம் தோணலையாம் நல்ல மனுஷரு அவரு. அவர் சம்பாரிச்சி அவரே சாப்பிடவேணுமாம், பெண்டாட்டி கூடாது. என்? அவளுக்குச் சோறு போட வேணுமே" என்று சௌபாக்கியம், மள மளவென்று பேசுவாள்.

மறு மாலை, திருமலை இந்தத் திவ்யப் பிரபந்தத்தை மதுரைக்குச் சமர்ப்பிப்பான். ஆறணா பத்தணாவாகி, ஒரு ரூபாயுமாகிவிட்டது. ஆறணா கிடைத்தபோது, "திருமலை! உன் வீட்டுக்காரம்மா வாயாடி போலிருக்கு'' என்று கூறின மதுரை, ஒரு ரூபாயான சமயத்திலே அதே பிரபந்தத்துக்கு "உன் சம்சாரம் சொல்வது போலத் தான் எல்லோரும் சொல்லுவாங்க" என்று சாந்தமாகப் பதில் கூறினான். கூலியும் உயர்ந்தது, அதே சமயத்திலே, பெரியநாயகியின் புன்சிரிப்பும் கிடைத்தது. அவள் அவனுடைய பிரம்மச்சரியத்தைக் கலைக்க அச்சிரிப்பை ஏவவில்லை. அவனைக் கண்டாள், அக்கா அவனைப்பற்றிச் சொன்னதை எண்ணினாள், சிரித்தாள்! அது அவனுடைய விரதத்தைக் குலைத்து விட்டது. பெரியநாயகி, சௌபாக்கியத்தின் தங்கை!

கிரஹஸ்தாஸ்ரமத்திலே புகுந்தான், மதுரை. பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டியதற்கு எவ்வளவு பாலமான காரணம் அவனுக்குத் தோன்றிற்றோ, அவ்வளவு காரணம் தோன்றிற்று இந்தப் புது ஆஸ்ரமத்துக்கும்!

வீடுன்னு இருந்தா அதிலே நமக்குன்னு ஒரு சம்சாரம் உலாவுனாத்தான் களையா இருக்கு. ஒண்டிக்கட்டையாக எத்தனை காலந்தான் இருந்தோம், என்ன பலன்! நாயகி நம்மைப் பார்த்து, வெந்நீர் வேணுங்களா? என்று கேட்டவுடனே, காலை யெல்லாம் பட்ட கஷ்டமத்தனையும் காற்றுப் பறந்து போயிடுது. என்னமோ அழைக்கிறோம், பெரிய நாயகி அன்போடு சாப்பாடு போட்டு, காலையிலே செய்த கறியிலே நமக்குன்னு கொஞ்சம் எடுத்துவைத்திருந்து இரவிலே போடுவதும், இன்னும் கொஞ்சம், ஒரே ஒரு பிடி, என்று உபசரிப்பதும், என்னாங்க! எவ்வளவு பாடு உங்களுக்கு வயிறாரச் சாப்பிடவேண்டாமா? எல்லாம் உடலிலே பலம் இருந்தாத்தானே என்று கனிவாகப் பேசும்போதும், வர வரத் துரும்பாக இளைத்துப் போறிங்க என்று வைத்தியராகும் போதும், தலை வலிக்குத் தைலம் தடவும் போதும், அடடா! அது ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு எவ்வளவு கஷ்டந்தான் இருக்கட்டும், வீட் டிலே ஒரு மனைவி இருந்தாலே, அது ஒரு சந்தோஷம் தானே!- என்று மதுரை எண்ணிக் களித்தான். பெரிய நாயகி, தாயானதும், அவனுடைய சந்தோஷம் அதிகரித்தது. இரண்டு குழந்தைகளான போதும் சந்தோஷமாகத் தான் இருந்தது. "அவன் எங்கே? சின்னவனை ஜாக்ரதையாகக் கவனி! ஜலதோஷம் போல இருக்கே" என்று சொல்லுவான் மதுரை, பூரிப்பு தழுவிய பொறுப்புடன். நாலு குழந்தைகளாகிவிட்டன. சந்தோஷம் சஞ்சலத்தைப் பெற்றுவிட்டது.

"அடடா! காச்சு மூச்சுன்னு, ஏன் இதுகள் இப்படிக் காக்காயாக் கத்துதுங்க!''

"குழந்தைகள் இருந்தா அழாமே இருக்குமா?"

குழந்தைகள்! மகா குழந்தைகள்! கோட்டான்கள் மாதிரி கூவி உயிரை வாங்குதுங்க"

இந்தப் பாவி வயிற்றிலே வந்து பிறந்து துங்களே, அதுகள் இப்படித்தான் சீரழியும். அப்பாப்பா! குழந்தைகளை அப்படி அலற அடிக்கக் கூடாது"

கிருஹஸ்தாஸ்ரமத்திலே, விசாரம் குடி புகுந்தது. குடும்பம் வளர்ந்தது! கூலி வளர வில்லை. கோபம் பெரு கீற்று மதுரைக்கு. பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தைவிட்டு விலகியது தவறு என்று தோன்றிற்று. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு, பழைய ஆஸ்ரமத்திலே பாசம் வைத்துப் பயன் என்ன?

வைசூரியின் பிரவேசத்தால், மதுரைக்கு மூன்றாம் ஆஸ்ரமம் சித்தியாயிற்று. பெரியநாயகி வைசூரிக்குப் பலியானாள். நாலு குழந்தைகள்! நாரும் நரம்புமாகப் பெற்றோர்கள். இந்நிலையிலே, முதலாளியிடம் சண்டை ! வேலை போயிற்று! கிருஹஸ்தாஸ்ரமத்தின் முழு விஷயமும் அவனுடைய உள்ளத்திலே புகுந்தது. உருமாறினான். உள்ளமும் மாறிவிட்டது. வானப்பிரஸ்தம் புகுந்தான் - அதாவது திருமலையிடம், குமுந்தைகளை அடைக்கல மாக்கினான்! பெற்றோர்களை ஈசனிடம் ஒப்படைத்தான்.

கங்காணி கனசு சபையின் காலைக் கும்பிட்டுக் கூலி வேலை பெற்று, ரப்பர் காட்டுக்குப் போனான்! பர்மாவிலே, பாடுபட்டான்; குடும்பம் இல்லை, வானப்பிரஸ்தாள்ரமம்! அது ஓரளவுக்குத் திருப்தி தந்தது. வேலை செய்வான். கிடைப்பதை உண்பான்! கை, தலையணை , உறக்கத்துக்குப் பதில் ஏக்கம். இந்நிலையிலே சில ஆண்டுகள் இருந்தான். வானப்பிரஸ்தம், குடும்பத்தை எற்று நடத்தவேண்டிய பொறுப்பிலிருந்து விலகிய நிலைமை, அதிகநாள் நீடிக்கவில்லை. மூத்த பையன் முடிச்சவிழ்த்தான், மூன்று மாதம் தண்டனை! இரண்டாவது பையன் இன்ன இடம் போனானென்று தெரியவில்லை, எவனோ ஜால வித்தைக்காரன் வந்தான் அவனோடு ஓடிவிட்டான். மூன்றாவது பெண்! அது, மூன்றேநாள் ஜுரத்திலே, போய் விட்டது. நாலாவது பையன்; அவன் தோட்டத்துக் கிணற்றிலே தவறி விழுந்து விட்டான்.

அடுத்தடுத்துக் கிடைத்தன இத் தபால்கள். வானப்பிரஸ்தத்திலே இருந்த மதுரையின், துக்கம் சம்பூர்ணமாக, அவனுடைய பெற்றோர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்றோர் தபாலும் கிடைத்தது. உடனே, அவன் ரப்பர் தோட்டவேலையையும் விட்டுவிட்டான். அலைந்தான் ! அலைந்தான்! ஐயா கொஞ்சம் சோறு என்று கேட்டுப் பார்த்தான்! எச்சில் இலைகளிடம் உறவுகொண்டான். ஆண்டி சிலரின் நேசம் பெற்றான். காவி அணிந்தான். நீறு பூசினான்! கஞ்சாவுடன் கொஞ்சினான். சன்யாஸ் ஆஸ்ரமத்திலே பிரவேசித்தான். வேலை கிடையாது! கூலி கேட்கத் தேவையில்லை! குடும்பம் இல்லை, எனவே பொறுப்பு கிடையாது! கிடைத்தால் புசிப்பது! கிடைக்குமட்டும் பஜிப்பது!! இந்தச் சன்யாச ஆஸ்ரமத்திலே, வானப்பிரஸ்த வாட்டமோ கிருஹஸ்தாஸ்ரமக் கஷ்டமோ இல்லை! அது மட்டுமா! பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தின் தனிமையும் இதில் இல்லை! சன்யாசி மதுரைக்குச் சன்யாசினி ஒருவளும் கிட்டிவிட்டாள்! அவளுக்கும் "அரோகரா" கூறத் தெரியும் இவன் போலவே!! ஆகவே இவனால் தான் பிழைத்தாக வேண்டுமென்ற நிலை இல்லை அவளுக்கு. ஆனால் அவளுக்கு ஒரு "அவன்" தேவை! சன்யாஸ ஆஸ்ரமத்திலே, மதுரை சஞ்சலமின்றி இருந்து வந்தான்.

இந்து மார்க்கத்திலே உள்ள இலட்சிய எழில்கள், சாமான்யமானவையல்ல. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற உன்னதமான கொள்கைகள் என்ன! பிரமச்சர்யம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் எனும், நான்கு ஆஸ்ரமங்களென்ன! இவைகளின் உத்தம உறைவிடமாக விளங்குவது நமது மார்க்கம்.

தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக் கூடாது - என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ண மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவி சேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், "இந்த இலட்சியங்கள் எழிலுள்ளன தான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும்" பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்து கொண்டு பசியால் பாதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும் போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்து வங்களின் போதனைகளை உணருவான்" என்று கேட்டார்.

ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, தெருக்கடி, நாட்டுப் பொரு ளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்து வரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!

 

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)