சொக்கி
 

"பழக்கடைதானே இது ; பவுன் நகை விற்கிற கடையா? கூடை இவ்வளவு என்று வாங்கி, டஜன் இவ்வளவு என்று விற்று. அதிலே ஏதேனும் ஆதாயம் கிடைத்தால், அதைக் கொண்டு குடும்பம் நடத்த வேண்டும். பத்துப் பழம் அழுகிப் போனால் ஒரு நாள் வருமானம் போய்விடும்! பதம் கெடா மல் பார்த்துக் கொள்ளவேண்டும். வியாபாரம் முன்பு போலவா இப்போது? இரண்டணாதான் கொடுப்பேன், அசல் நாக்பூர் கமலா கொடுக்க வேண்டும் என்கிறார்கள்! காஷ் மீர் மாதுளம் பழம், விலை ஒண்ணரை ரூபாய் என்று சொன் னால் நம்புகிறார்களா! உடைத்துக் காட்டு என்கிறார்கள்! வாயிலே கொஞ்சம் போட்டுக் குதப்பிக் கொண்டே இதுவா காஷ்மீர்? யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? நான் என்ன இப் போதுதான் புதிதாகக் காஷ்மீர் மாதுளம் பழம் வாங்க வந்தவனா! என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒவ்வொரு நாள் அடக்கிக்கொள்ள முடியாத கோபங்கூடத்தான் வருகிறது. போய்யா! போய் நேரே காஷ்மீர் கடை வீதிச்கே போய் கூடை கூடையாக மாதுளம் பழம் வாங்கிக் கொண்டு வா! என்று கூறிவிடலாம் என்றுகூடத் தோன்றுகிறது. சொல்ல முடியுமா ! வியாபாரம் கெட்டுப் போகுமே! அதனால் பொறுத் துக் கொள்ள வேண்டி இருக்கிறது!

பழக்கடை பரமசிவம் இது போலெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கப்பட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் அந்தக் கடையிலே கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் நாலா யிரம் ரூபாயில் ஒரு மச்சுவீடும் ஆறாயிரத்தில் நிலமும் வாங் கினார். ஒரே மகன்! அவன் வேறு ஏதேதோ வேலைக்குப் போவான் என்று ஆசைப்பட்டார். முயற்சி செய்து பார்த். தார்; முடியவில்லை. பரமசிவத்துக்கு முடக்குவாதம் . பூங்கா வனம் பழக்கடை வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டியதா யிற்று. வியாபார நெளிவு சுளிவுகளை பரமசிவம் தன்னால் கூடுமான மட்டும் மகனுக்குக் கூறிவைத்தார். பயன்? பூங் காவனத்தால் முடியவில்லை, வாடிக்கைக்காரர்களை மகிழ வைத்திட .

அந்த வித்தைக்கென்றே பிறந்தவன் வெளிப்பன் என்று பலரும் கூறத்தக்க விதமாக நடந்து கொண்டான்! பரமசிவம் பழக்கடைக்கு எதிரப்புறத்தில் புதிதாகக் கடை வைத்தவன். எங்கிருந்து தான் கற்றுக் கொண்டானோ தெரியவில்லை. ஒரு ஒய்யாரச் சிரிப்பு ; குழைவான கும்பிடு ; வேளியப்பன் கடை வைத்த மூன்று மாதங்களுக்குள் பரமசிவத்திடம் பத்து வருஷங்களாக வாடிக்கைக்காரர்களாக இருந்தவர்களை யெல்லாம் இழுத்துக் கொண்டான் தம் வலையில். 

'கல்கண்டு சாமி! ஒரு சுளை சாப்பிட்டுப் பாரேன். நீ வாங்காமப் போனாக்கூடப் பரவாயில்லை; நம்ம கடை சரக்கை மட்டும் குறை சொல்லாதே.'

'நாக்பூர் ஆரன்ஜு வேணுமா உங்களுக்கு . கூடை கூடை யாகத் தர்ரேன். ஆனா இது நம்ம சேலத்து சரக்குதான் ; சும்மா வாயிலே போட்டுப் பாருங்க .... எப்படி? நாக்பூரு என்னா செய்யும், இந்தப் பழத்துக்கிட்ட.....

'அது வேறே கொய்யாப் பழமுங்க. வயத்துவலி உண் டாக்கற பழம். விதை அதிகம் இருக்கும். இது பாருங்க, விதையே கிடையாது. வெண்ணெ மாதிரி இருக்கும். '

'மலை வாழைப்பழம், நம்ம கடைக்குன்னு தனியா வருதுங்க, மதுரை கொடைக்கானலிலே இருந்து. வேறே இடத்திலே கிடைக்காது. மூணு டஜன் தான் மிச்சம் இருக் குது. மூணு லாந்தர் தெரு சேட்டு வாரிக்கிட்டுப் போயிட் டாரு எட்டு டஜனை .....'

என்னென்னமோ பேசுகிறான்; எப்படியோ, வருகிற வர்களை வாங்கும்படிச் செய்கிறான்; வியாபாரம் வளருகிறது.

அது அந்தப் பரமசிவத்தோட போச்சி! பையன் ஒன்றும் திறமைசாலி இல்லை .... கடை தூங்குது பாருங்க .... மாம் பழம் கேட்டா வாழைப்பழத்தைக் கொடுக்கறான் .... ஆரஞ்சு . கொடுடான்னா சாத்துக்குடி வேணுமான்னு கேட்கறான்; பூங்காவனம் பழக்கடை வேலைக்கு ஏத்தவனா தெரியல்லை என்று வாடிக்கைக்காரர்களே பேசிக் கொள்வது பூங்காவனத் தின் காதிலேயும் விழத்தான் செய்கிறது. கண்ணுக்குத் தெரி கிறது, எதிரே உள்ள கடையிலே நடைபெறும் சுறுசுறுப்பான வியாபாரம்! தெரிந்து என்ன செய்வான்?

சிறிய நகரம்! விவசாயத்தை நம்பி வாழுகிறவர்களும், உத்தியோகம் செய்து அலுத்துப்போய் ஓய்வு பெற்றுக் கொண்டு வந்த பென்ஷன்காரர்களும் உள்ள இடம். அந்தச் சிறிய ஊருக்கு, இரண்டு பழக்கடை அதிகம். ஒரே கடையாக இருந்தபோது பரமசிவத்தின் வியாபாரம் நல்லபடி இருந்தது. போட்டிக் கடை வந்ததும், வியாபாரம் கெட்டு விட்டது. வேளியப்பனிடம் போய்க் கேட்டுக் கொள்ளவா முடியும், அப்பா! இந்த ஊருக்கு இரண்டு கடை கட்டி வராது. போட்டி போட்டு என்னைப் பாழாக்கிவிடாதே" என்று.

'நேத்து வந்த பயலோடு போட்டி போட்டு வியாபா ரத்தை நடத்த முடியலியே நம்ம மகனாலே ! துப்புக் கெட் டப்பய! வேறே ஒண்ணும் சொல்ல வேண்டாம் இவன் : இது தானுங்க நம்ம பரமசிவத்தோட பழக்கடைன்னு சொன்னாப் போதுமே! வேறே ஒரு கடையைத் திரும்பிப் பார்ப்பார் களா!' என்று நோய் காரணமாக வீட்டோடு அடைபட்டுக் கிடந்த பரமசிவம் மனம் நொந்து பேசிக் கொண்டார்.

மகன் எந்தவிதமான தப்பு தண்டாவுக்கும் போகக் கூடியவனல்ல; கெட்ட நடவடிக்கை எதுவும் கிடையாது. ஆனால் வியாபாரத் திறமை இல்லையே என்று கவலைப் பட்டார்.

 

எப்போதும் போலத்தான் பூங்காவனம் பழத்தை நன் றாகத் துடைத்து வைக்கிறான்; 'பார்வை' யாக இருக்கும் விதமாக அடுக்கி வைக்கிறான். முனையிலே ஒரு மாதிரி ஆகி விட்டால், உடனே, அதைத் தனியாக, மறைவாக எடுத்து வைக்கிறான். எப்போதும் போல, வெங்கடாசலபதி படத் துக்குத் தூபதீபம் காட்டுகிறான்; சகுனம் பார்த்துக் கொண்டு தான் கடைக்கு வருகிறான். 'கல்லாப் பெட்டிக்குக் குங்குமப் பொட்டு இடத்தவறவில்லை. எல்லாம் முன்பு போலத்தான் நடந்து வருகிறது, வியாபாரம் தவிர!!

பூங்காவனத்தைக் காண்பவர்கள், அவனுடைய கண்க ளிலே ஒரு ஒளியும் இதழோரம் ஒரு புன்னகையும் இருந்திடக் காண்கின்றனர். வியாபாரம் சரியாக இல்லை என்பதால் பரமசிவம் கவலைப்படுகிறார், மகனோ இனிய குழலோசை கேட்டு சொக்கிவிடுபவன் போலிருக்கிறான்.

அப்படி இனித்தது சொக்கியின் பேச்சு. பேச்சு மட் டுமா? பார்வை ! நடை! சிரிப்பு!

சொக்கி , வேற்றூரும் அல்ல; வேற்று இடமுமல்ல. மாமன் மகள்!! மாந்தோப்பை குத்தகை எடுத்திருந்தான் மலைச்சாமி ; அவன் மகள், மாம்பழக் கூடையைக் கொண்டு போய்க் கொடுக்கச் செல்வாள், பழக்கடைக்கு . பழக்கடையில் லிருந்து வேறு வகைப் பழங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஊருக்குள் விற்றுவிட்டு வருவதுண்டு.

"அதோ நேத்து கொடுத்தது கிடக்குதே, அப்படியே கூடையிலே ......."

"அப்படி எண்ணிகிட்டு இன்னக்கி எங்கே நீ வராமல் போயிடுவயோன்னு நினைச்சு நினைச்சு மனசு பதறிப் போச்சி சொக்கி!"

. . "அய்யே... ஆம்பிள்ளையைப் பாரு! மனசு உருகலாம், கரையலாம், என்னாட்டம் பொம்பளைப் பிள்ளைக்கு! இம்மாம் பெரிய ஆம்பிள்ளைக்கு மனசு பதறலாமா..."

"என்னைக் கேட்கறயா அந்தக் கேள்வி... "

"ஏன்! போயி, உங்க அப்பாவைக் கேட்கவா ....."

'அய்யே..... போய் அனுமார் கோவிலு அய்யரைக் கேளு..."

"கோவிலிலே மட்டுந்தான் இருக்குதா அனுமாரு..."

"என்ன சொன்னே! என்ன சொன்னே , சொக்கிப் பொண்ணு! என்னை அனுமாருன்னு குத்திக் காட்டிப் பேசறியா ....."

"அய்யோவ்! நீ ஏன்யா அனுமாராகப் போறே. பெரிய மலையைத் தூக்கினவரு அனுமாரு. உனக்குத்தான் கூடை நிறைய மாம்பழம் இருந்தா, தூக்க துணைக்கு ஒரு ஆள் வேணுமே, உன்னைப் போய் சொல்லுவனா அனுமாருன்னு."

"வரவர வாய்த் துடுக்கு அதிகமாகுது சொக்கி , உனக்கு ....."

 

"ஆகட்டுமே! அதனாலே உனக்கு என்னவாம்! கட் டிக்கப் போறவனுக்கல்லவா அந்தக் கவலை ஏற்படவேணும். உனக்கு எதுக்கு..."

"அது எந்தப்பய என் பொருளைத் தட்டிக்கொள்ளத் துணியறவன்..."

"உன்னோட பொருளா! யாரு? நானா! ஆசையைப் பாரு , ஆசையை ... நீ இந்த மாதிரி வீண் ஆசையைப் புகுத்திக் கிட்டுத்தான் வியாபாரத்தைக் கெடுத்துக் கொள்றே... தெரிய யுது .... எனக்கு ..."

"வியாபாரம் கெட்டுப்போச்சா ! யாருக்கு? எனக்கா! அந்த வேளியப்பன் கடையிலே எப்பப் பார்த்தாலும் கூட்டம் இருக்குதேன்னு பார்க்கறியா.. பைத்யம், பைத்யம் ! விலையை வேணுமென்றே தள்ளிக் கொடுக்கறான் ..... பய, தலையிலே

ஏகப்பட்ட நஷ்டம் விழப்போவுது பாரேன்..."

"தலையிலே விழப்போறது கிடக்கட்டும்; கையிலே ஏறி இருக்கற மோதிரத்தைப் பார்த்தியா?"

"அவன் கையிலே என்ன மோதிரம் இருக்குதுன்னு பார்க்கறதுதான் என்னோட வேலையா ...?"

பூங்காவனம் அதையெல்லாம் பார்த்தானோ இல் லையோ! சொக்கி , வேளியப்பன் கைவிரல்களில் மோதிரமும், தங்கச் செயின் போட்ட கைக்கடியாரமும், மேனியிலே மினு. மினுப்பும் சேர்ந்து வருவதைக் கவனித்துக் கொண்டுவந். தாள். வேளியப்பன் கடைக்கு மூன்று கூடை மாம்பழம் கொடுத்துவிட்டு வரப் போகும் போதெல்லாம், சொக்கியின் கண்களிலே, வேளியப்பன் வளர்ச்சி தென்படாமலா இருக் கும். வேளியப்பனும் அன்னியன் அல்ல; தூரத்து உறவுதான்!

இங்கு சிறிது நேரம் ; அங்கு சிறிது நேரம் பொழுதுபோக்கு, வாள் சொக்கி . கள்ளங் கபடமற்ற பெண் ; மணமாக வேண் டிய பருவம்; எந்த வீட்டிலும் உலவினால் மகிழ்ச்சி ஒளி வீசிடச் செய்திடும் அழகு!

அழகிலே பலவகை உண்டு என்கிறார்கள். இருவகை அவற்றிலே முக்கியமானவை.

ஒன்று பால் போன்றது; மற்றொன்று கள் போன்றது. முன்னது இனிப்புடன் வலிவைக் கூட்டித் தருவது; மற்றது போதை தருவது. சொக்கி , பாற்குடம்! போதை ஏற்றிடும் மினுக்கு, குலுக்கு . தளுக்கு, அவள் அறியாதது. இளமை இருந்தும் அதற்கேற்ற கவர்ச்சி அமையப் பெறாததால், பூசுவனவும் பூண்பனவும் தாங்கிக் கொண்டு உலவிடும் நாகரிக நாரிமணி அல்ல சொக்கி; ஆற்றோரத்து தென்னை யிலே தொங்கிடும் செவ்விளநீர் -- கொல்லை மேட்டுச் செங்கரும்பு - மூங்கிலுக்கு வண்ணம் பூசி செங்கரும்பு போலாக் கிக் காட்டலாம் - செங்கரும்பு ஆகிவிடாது. கூடையை இடை யில் வைத்து சொக்கி நடந்து வரும் அழகு கண்டு, நாட்டிய மாடிடும் நங்கை அதுபோல நடந்து காட்டலாம். ஆனால் அதுபோலத்தான்! அது வேறு. முற்றிலும் வேறு! பழகிப் பெற்றதல்ல, பயிற்சியால் கிடைத்ததல்ல; உடற்கட்டும் உள்ளத்தில் கள்ளங் கபடமற்ற தன்மையும் கொடுத்திட்ட இயற்கை அசைவு அது.

பாவம்! பூங்காவனத்தால் இவ்விதமாகவெல்லாம் எண்ணிப் பார்த்திட முடியவில்லை; தெரியவில்லை. அவ ளைக் கண்டாலன்றி அன்று அவன் மனம் அமைதி பெறாது.

சற்றுத் தொலைவிலே சொக்கி வருகிறபோதே, யாருடனாவது ஏதாவது பேசி, குரல் கொடுப்பாள்; அந்தக் குரலோசை கேட்டதும் பூங்காவனம் தன்னை மறந்து விடுவான்.

சொக்கி பேசப் பேச அவன் பழச்சாறு பருகியவன் போலாகிவிடுவான்; முகத்திலே ஓர் புதிய பொலிவு மலர்ந்து விடும்; இயற்கையிலேயே கூட பூங்காவனம், கெம்பீரத் தோற்றம் உடையவன்.

அவனைக் கண்டதும் மறந்தும் இவன் எவருக்கும் ஒரு கெடுதலும் செய்யமாட்டான் என்று எவரும் கூறுவர். அப்படிப்பட்ட தோற்றம். இப்ப எதுக்கு எனக்குக் கல்யா ணம்? என்று குழைவாகக் கூறிடும் வயது. உன் வயதுதாண் டாப்பா சின்னப்பனுக்கு ; மூணு குழந்தை அவனுக்கு என்பார் தகப்பனார் . "போப்பா! சொக்கியைவிட நான் மூணு வருஷந் தான் மூத்தவனாமே!' என்பான் பூங்காவனம் ; தன் மனதி லுள்ள விருப்பத்தை மறைமுகமாகக் காட்ட, புரிந்து கொண்ட தகப்பனார், சொக்கியை வேளியப்பனுக்கு முடிக்கப் போவ தாகக் கேள்வி என்று சொல்லி வைப்பார். கோபம் கோப் மாக வரும் பூங்காவனத்துக்கு. சாப்பிடாமலே படுக்கச் செல்லுவான்; தூங்காமலே படுத்துக் கிடப்பான்; கண்ணீர் விடாமலே அழுது கொண்டிருப்பான். பட்டினத்தார் பாடலை முணுமுணுத்தபடி இருப்பான். எல்லாச்சனியனுக்கும் சேர்த்து ஒரே தலைமுழுக்காகப் போட்டுவிட்டு, சாமியார் ஆகிவிடப் போவதாகத் தாயாரிடம் கூறுவான். 'பிள்ளையாண்டா னுக்குச் சொக்கி சொக்குப்பொடி போட்டு விட்டாற்போல இருக்குதே" என்று பரமசிவத்திடம் அவர் மனைவி கூறு வாள். "கண்ணைச் சிமிட்டிக் கழுத்தை வெட்டி என்று பாடுவார் பரமசிவம், பழைய நினைவுடன். 'வாலிபம் திரும் புதோ' என்று கேட்டுவிட்டு, வாயை விட்டுச் சிரிப்பு வெளியே வராதபடி பார்த்துக் கொள்வாள் பரமசிவத்தின் மனையாட்டி .

சொக்கியை வேளியப்பனுக்கு முடிக்கப் போகிறார் களாமே!' என்று பரமசிவம் சொன்னதிலிருந்து சொக்கிm வேளியப்பன் கடைக்குச் செல்வதைக் கண்டால் கூட ஆத். திரம் கொள்ளத் தலைப்பட்டான் பூங்காவனம்.

"எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு நேரம். பேச்சு நடந்ததோ?"

"அந்தப் பேச்சை உன்னிடம் சொல்லித்தான் ஆக ணுமோ ...."

 

"மத்தவங்களிடம் சொல்லக்கூடிய விஷயமாகப் பேசி இருந்தாத்தானே, பளிச்சுன்னு சொல்ல..."

"ஏன் உனக்கு இத்தனை பொறாமை வெளியிடம்..."

"அண்ணன்னு சொல்லுவியே முன்னே..."

"இப்ப நான் அவரை அண்ணன்னு சொல்றதில்லே..."

"அவரு ஆயிட்டானா வேளியப்பன்..."

"அவரு நல்ல சுபாவக்காரரு; உனக்குத் தெரியாது. ரொம்ப 'சாலக்கா' பேசறாரு , தெரியுமா . அவரோட பேசிக் கிட்டே இருந்தா பொழுது போறதே தெரியாது..."

"கண்ணை மறைக்குதுன்னு சொல்லு..."

"என்ன, ஒரு மாதிரியாப் பேசறே? எதுக்காக அவரிடம் உனக்கு இத்தனை குரோதம்..."

"அவரு பெரிய சக்ரவர்த்தி! என்னோட பட்டத்து ராணியைத் தட்டிகிட்டுப் போயிட்டாருன்னு கோபம் - போயேன், உனக்குப் பிடித்தமானதைச் செய்துக்க... நான் தடுக்கவா முடியும்..."

"நான் சொல்றேன், உனக்கு அவரிடம் பொறாமை! ஆமாம்... வியாபாரத்திலே மளமளன்னு அவரு முன்னேற் றம் அடைந்து விட்டாரே, அதைப் பார்த்து உனக்குப் பொறாமை. அவரு செய்கிறது போலச் சாமர்த்தியமா, வியாபாரம் செய்து, அவரு சேர்த்திருக்கிறது போலப் பணத் தைச் சேர்த்துக் கொள்றதுதானே! யார் வேண்டாமென் கிறாங்க , அவரா குறுக்கே நிற்கறாரு..."

'எனக்கு ஒண்ணும் பணம் சேரவேண்டாம்..."

'ஏனாம்! ! புரியுது. புரியுது! நீதான் சாமியாரு . ஆயிடப் போறயாமே, உனக்கு எதுக்குப் பணம்."

அம்மா சொன்னாங்களா சொக்கி?'

"சொன்னாங்களே! சொக்கி என் மகனைச் சாமான் யமா எண்ணிக் கொள்ளாதே. சாமியாராகிவிடப் போறாரு. அப்புறம் அவரு தொட்டா இரும்பு பொன்னாகும்; இலுப் பைப்பூ மல்லியாகும் ; சேலம் நாக்பூராகும் என்றெல்லாம்..."

எவ்வளவு கோபமாக இருந்தாலும் சொக்கியின் வேடிக் கைப் பேச்சு, அதனை ஓட்டியே விடுகிறது. ஆனால் சொக்கி வேளியப்பன் கடைக்குச் சென்று பேசுவதையும் சிரிப்பதை யும் பார்க்கும்போது, ஓடிப்போய் இரண்டு பேர்களையும் ஒரே வெட்டாக வெட்டிவிடலாமா என்ற அளவு ஆத்திரம் வருகிறது.

 

அந்த எரிச்சலால், ஒரே விலை . ஆமாம்! வேறே இடம் பார்த்துக்க" என்று பேசி, வாடிக்கைக்காரர்களைக்கூட விரட்டிவிடுகிறோமே என்று சில வேளைகளில் தோன்று கிறது. ஆனால் அந்த எரிச்சல் அடங்கினால் தானே ......

"தெரியுமா விஷயம்... ரொம்ப நல்லாப் பாடுறாரு வேளி"

"அப்படியா! நீ தாளம் போட்டே போல இருக்குது "

"உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு, நானு; உனக்கு அவரிடம் இருக்கற பொறாமை தெரிந்திருந்தும்..."

"எனக்கு என்ன பொறாமை அவன்கிட்டே! பெரிய மெடல் வாங்கிவிட்டானா அவன், சங்கீத வித்துவான்னு..."

"வாங்கறாரா இல்லையான்னு பாரேன் மெடலு: வரப்போற வைகாசி மாதம்..."

"நாள்கூடப் பார்த்தாச்சா, நல்ல முகூர்த்தம் தானா ...."

"எதுக்காக நீ ஒண்ணு கிடக்க வேறொன்னு பேசறே? நான் வைகாசியிலே நடக்கப்போகுதே அம்மன் திருவிழா, அதிலே 'டிராமா' நடக்குமேல்லே, அதிலே வேஷம் போடப் போறாரு வேளியப்பன், அதைச் சொன்னேன். நிச்சயமா அவருக்குத்தான் மெடல். அவ்வளவு நல்லாப் பாடறாரு..."

வேளியப்பன் மட்டுந்தானா, நாமும்தான் வேஷம் போடுவோமே என்று எண்ணினான் பூங்காவனம் ; வேளியப் பன் உட்பட அனைவரும் வரவேற்றார்கள். சொக்கி மட்டுந் தான் எதிர்ப்பு. 'உன்னாலே போட்டி போட முடியாது; பாரேன், நடைபெறப்போவதை' என்று மிரட்டினாள். பூங்காவனம் அதனால் சோர்வு அடையவில்லை.

கூத்து நடைபெற்றது. ஓரே ஆரவாரம், பாராட்டு, கை தட்டுதல் - வேளியப்பன், பாட்டுக்கு. 'போ உள்ளே! பழம் வில்லு டோய் பழம்! பாடாதே! பாட்டாடா இது. டஜன் எவ்வளவு விலை!' - இப்படிப்பட்ட கேலிக் குரல், பூங்காவனத்துக்கு.

சொக்கி சொன்னபடி, தங்க மெடல் வெளியப்ப னுக்கு.

அந்த வருஷம், திருவிழாவை முன்னின்று நடத்திவைத்த மூர்த்தி என்பவர், அந்த ஊர்க்காரர்; பல வருஷங்களுக்கு முன்பு நகரம் சென்று, சினிமாப் பட முதலாளியாகி விட்ட வர். அவர் கரத்தால், 'மெடல்' தரப்பட்டது வேளியப்பனுக்கு .

மெடல் கொடுத்ததைப் பூங்காவனம் பார்க்கவில்லை. கேலிக் குரல் வலுத்ததும் வேஷத்தை அவசர அவசரமாகக் கலைத்துவிட்டு, வீட்டுக்குப் போய்ப் படுத்தவன் மூன்று நாளா யிற்று வெளியே நடமாட - குளிரும் காய்ச்சலும் பிடித்தாட் டிற்று.

"எப்படி நம்ம ஜோசியம்? மெடல் நான் சொன்னபடி கிடைச்சுது, பார்த்தயா"

 

"பெரிய மெடல் ..! நீதான் மெச்சிக்கொள்ளணும்.... நான் என்ன , டிராமாவிலேயா சேரப் போறேன் ..... பாடத் தெரியாமப் போனா என்ன ....."

"அவரு சினிமாவிலே சேரப் போறாரு , தெரியுமா .... கடையை இழுத்து மூடிட்டாரே, தெரியல்லே..."

"கடை கிடையாதா இனி? நெஜமாத்தானா .... அடப் பாவிப் பய! பிழைப்பிலே மண்ணைப் போட்டுக் கொண் டானே ...."

"அவரோட பொழப்பு ஒண்ணும் கெட்டுப் போகல்லே. கூத்திலே அவருடைய பாட்டையும் பேச்சையும் கேட்டு, மெடல் கொடுத்தாரே மூர்த்தி, அவரு, சினிமாவிலே சேர்த்து விடுவதாகச் சொல்லிக் கூட்டிகிட்டே போயிட்டாரு."

"இவனும் போயிட்டானா அந்தப் பேச்சை நம்பி ...."

"இவருதான், எப்போ எப்போன்னு காத்துக்கிட்டு இருந்தாரே, சினிமாவிலே சேரவேணும்னு..."

"அவன் சினிமாவுக்காக ஏங்கிக்கிட்டு இருந்தது உனக்கு எப்படித் தெரியும்..."

"என் கிட்டத்தான் ஒவ்வொரு நாளும் சொல்லுவாரே, சொக்கி ! சொக்கி! நீதான் உதவி செய்யணும்னு..."

"நீ என்ன உதவி செய்யறதாம் அவனுக்கு? விளங்க வில்லையே..."

"உனக்கு எது விளங்கிச்சி, இது விளங்க! வேளியப்ப னுக்கு மெடல் கிடைச்சதும், சினிமாவிலே இடம் கிடைச்ச தும் என்னாலே என்கிற உண்மை உனக்கு எங்கே தெரியப் போகிறது. உனக்குத்தான் பழம் வதங்கிப்போச்சா, அழுகிப் போச்சா என்கிற விஷயமே தெரியறதில்லையே.....

"கேலி கிடக்கட்டும்; விவரத்தைச் சொல்லு சொக்கி"

"மூர்த்தியோட அக்கா தெரியுமேல்லோ , எங்க தோட் டத்துக்குப் பக்கத்திலே தான் அவங்க வீடு ... மீனாட்சியம்மா தெரியாது..."

"தெரியும், சொல்லு; அவங்களுக்கும் இதுக்கும் ...."

'என்ன சம்பந்தம்னு கேட்பே. இந்த வருஷம் திரு விழா நடத்தப் போறவரு மூர்த்தின்னு தெரிஞ்சதும், வேளி யப்பன் திட்டம் போட்டாரு, எப்படியாவது கூத்திலே சேர்ந்து தன்னோட திறமையை மூர்த்தி ஐயாவுக்குக் காட்டி, சினிமாவிலே சேர வழி செய்து கொள்ள வேணும்னு. அத னாலே என்னிடம் சொன்னாரு. எப்படியாவது மீனாட்சி அம்மாவிடம் சொல்லி', மூர்த்தியோட உதவியைப் பெற்றுத் தரவேணும்னு .... நான் அந்த அம்மாவிடம் வேளியப்பன் நல்லாப் பாடுவாரு , நடிப்பாரு, வேஷம் போட்டா பிரமா தமா இருக்கும் என்றெல்லாம் சொல்லிவைத்தேன். இந்த வருஷம் மெடலு வேளியப்பனுக்குக் கிடைக்க வேணும்னு வேண்டிக் கிட்டேன்.... ஆகட்டும் சொக்கின்னு சொன்னாங்க ... சொன்னபடியே செய்தாங்க .... மூர்த்தி ஐயா வேளியப் பனை சினிமாவுக்கே அழைத்துக் கொண்டு போயிட்டாரு. என் பூஜை பலிச்சது. பழம் நழுவிப் பாலிலே விழுந்துது..."

"பூஜை பலிச்சுதா, ரொம்ப சந்தோஷம். வேளியப் பன் சினிமாவிலே இலட்ச இலட்சமாச் சம்பாதிப்பான்..... வைரத்தாலேயும், தங்கத்தாலேயும் செய்த நகைகளைப் பூட்டுவான்; மோடாரிலே சவாரி செய்யலாம்; பங்களா விலே வாழலாம். சுகமா இரு; சந்தோஷமா இரு..."

"இரு, இரு ! இப்ப நீ என்ன எண்ணிக்கிட்டுப் பேசறே..."

"நல்லாப் புரிஞ்சிக்கிட்டுத்தான் பேசறேன் ..... மெடல் வாங்கிக் கொடுத்தது, சினிமாவிலே 'சான்சு' வாங்கிக் கொடுத்தது எதுக்காக? இதுகூடவாப் புரியாது. வேளியப் பனைக் கட்டிக் கொள்ளத்தானே! அதனாலேதானே அவனி

டம் அவ்வளவு அக்கரை ...."

"பேசு ! பேசு! உனக்கு என்னென்ன தோணுதோ அவ்வ ளவும் பேசு..."

"எனக்கு என்ன வேறே வேலையே இல்லையா? யாரை யாரு காட்டிகிட்டா எனக்கு என்ன? எல்லாம் இந்தக் காலத் திலே குணத்தையா கவனிக்கறாங்க, பணத்தைத்தானே!

நீ மட்டும் வேறே விதமாகவா இருக்கப் போறே..."

அதற்கு மேல் பேச மனமில்லை பூங்காவனத்துக்கு; வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினான். சொக்கி சிரித்தபடி சென்றுவிட்டாள். வேளியப்பன் கடை மூடப் பட்டு விட்டதால், வாடிக்கையாக அங்கு போகிறவர்களும், பூங்காவனம் கடைக்கு வந்தனர். நல்ல வியாபாரம்.

சில நாட்களுக்குப் பிறகு, வீட்டிலே , பூங்காவனத்தின் தாயாரும் தகப்பனாரும் பேசிக் கொண்டிருந்தது. பூங்கா வனம் காதிலே விழுந்தது.

"உண்மைதானுங்களா நான் கேள்விப்பட்டது....."

"எதைக் கேள்விப்பட்டே?"

"சொக்கியை வேளியப்பனுக்குக் கொடுக்கச் சொல்லி, வேளியப்பனோட அப்பா போய்க் கேட்டாராமே..."

"ஆமாம்... நானுந்தான் கேள்விப்பட்டேன்..."

பூங்காவனத்தால் அதற்குமேல் அந்தப் பேச்சைக் கேட் டுக் கொண்டிருக்க விருப்பம் இல்லை. கோபமும் துக்கமும் மனதைப் பிய்த்துவிடும் போலிருந்தது. வெளியே உலாவச் சென்றுவிட்டான்.

 

பல நாட்களாகக் கடைப் பக்கம் வராமலிருந்தவர்கள் ளெல்லாம் வரலாயினர்; பூங்காவனத்தின் வியாபாரம் மளமள வென்று வளர்ந்தது. வேளியப்பன் காலி செய்து விட்ட கடையையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு, சரக்கு இருப்பு வைக்க அதை உபயோகப்படுத்திக் கொண்டான். பரமசிவம் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார்.

"எப்ப கல்யாணம்? நாள் பார்த்தாச்சா ..."

"பெரியவங்கதானே நாள் பார்க்கவேணும். நானே வா பார்ப்பேன்."

"பெரியவங்க எதுக்கு. தனக்குத் தேவையான மாப் பிள்ளையை பெண்ணே தேடிக் கொள்கிற காலமாச்சே இது."

"எதுக்கும் பெண்ணைப் பெத்தவங்களை வந்து கேட்க வேண்டாமா , கொடுக்கச் சம்மதந்தானான்னு..."

"வந்து கேட்டாங்களாமே உங்க அப்பாரை ...."

"கேட்டது மட்டுந்தான் தெரியுமா? எங்க அப்பா என்ன சொன்னாருன்னு தெரியாதா?

"என்ன சொல்லுவாரு : சினிமாவிலே சேர்ந்திருக்க றாரு , சீமானாவப் போறாரு, அவருக்குப் பெண் கொடுக்க இஷ்டமில்லாமலா போகும்..."

"இஷ்டம் இல்லைன்னுதான் சொல்லிட்டாரு."

"என்னது. என்னது! இஷ்டம் இல்லைன்னா?...."

"சினிமாவிலே சேர்ந்துவிட்ட ஆசாமிக்கு என் பெண் ணைக் கொடுக்கமாட்டேன். அது கிராமத்துப் பொண்ணு ; ஏழைப் பொண்ணு ; சினிமாவிலே இருக்கற் பளபளப்பு மினுமினுப்பு இதைப்பார்த்து மயங்கிப்போனா, சொக்கியை விரட்டிவிடலாம்னு பின்னாலே ஒரு காலத்திலே எண்ணம் வந்துவிடக் கூடும். அதனாலே சொக்கியை தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு..."

"அடப் பாவமே! நீதானே கஷ்டப்பட்டு, மீனாட்சியம் மாவோட சிபாரிசு பிடிச்சி வேளியப்பனை சினிமாவிலே சேர்த்துவிட்டே..... உங்க அப்பா இப்படிச் சொல்லி உன் னோட மனக்கோட்டையை இடித்துப் போட்டுவிட்டாரே..."

"என்னோட மனக்கோட்டையை இடிக்க அவராலேயும் ஆகாது; வேறு எவராலேயும் ஆகாது."

"இதோ இப்ப இடித்துப் போட்டுட்டாரே.... சினிமா விலே சேர்ந்ததாலே சந்தோஷமா , பெருமையா உன்னைக் கொடுக்கச் சம்மதிப்பாரு உங்க அப்பாருன்னு நினைச்சே .... நடக்கல்லியே......"

 

"சினிமாவிலே சேர்ந்துவிட்டா, வேளியப்பனுக்கு என் னைக் கட்டிக் கொடுக்க எங்க அப்பா சம்மதிக்கமாட்டார் என்பது எனக்கு முன்னாலேயே தெரியும்..."

"உங்க அப்பாவுடைய சுபாவம் தெரிந்திருந்தும் வேளி யப்பன் சினிமாவிலே சேர்த்துவிட நீ எப்படிச் சம்மதித்தே ...."

"ஏன் சம்மதித்தேன்னு கேளு... வேளியப்பனுக்கு என் -னைக் கொடுக்க அப்பாரு திட்டம் போட்டாரு. வியாபாரம் நல்லபடி செய்துகிட்டு இருக்கறான், உள்ளூரோடு இருக்கி றான், நமக்கு ஏற்ற இடம், அடக்கமான இடம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாரு. அப்பா தெரியுமேல்லோ.. பிடி வாதம், பார்த்தேன், ஒரு தந்திரம் செய்தேன். அண்ணேன்! உன் குரல் பிரமாதமா இருக்குது : சினிமாவிலே சேர்ந்தா பெரிய ஆள் ஆயிடுவேன்னு தூபம் போட்டேன். வேளியப்ப னுக்கும் அந்தப் பைத்தியம் போல இருக்குது ; சினிமாவிலே சேரவேணும் என்கிற பைத்யம். நமக்குயாரு சொக்கி சிபாரிசு செய்ய இருக்கறாங்கன்னு சொல்லி வருத்தப்பட்டாரு. மீனாட்சிம்மா கவனம் வந்தது. அந்த அம்மாவுக்குத் தூபம் போட்டேன்; பலித்துவிட்டது..."

"பாரேன் உன்னோட தந்திரத்தை ..."

"என்னோட காரியத்தை நானே தானே கவனித்தா கணும்; உனக்குத்தான் அந்தத் துப்பு கிடையாதே. சினிமா விலே சேர்த்து விட்டா, அப்பா என்னை வேளியப்பனுக்குக் கொடுக்க மறுத்துவிடுவாரு என்பது தெரியும். அது போலத் தான் மறுத்துவிட்டாரு. அதுமட்டுமா! வேளியப்பன் இங்கே பழக்கடை நடத்திக்கிட்டு இருக்கிறவரைக்கும், உன்னோட கடை தூங்கி வடியும் என்பதும் புரிந்து போச்சி. இப்ப, ஒரே கல்லிலே இரண்டு மாங்கா ! பார்த்தியா, சொக்கியோட வேலையை..."

"சொக்கி ! சொக்கி! அப்படின்னா , உனக்கு என்னைக் கட்டிக் கொள்ள வேணும் என்கிற விருப்பம்..."

"எழுதி ஒட்டிக் கொள்ளவா நெற்றியிலே. பைத்யம்! பைத்யம்! வியாபாரத்தைக் கவனி! பெத்தவங்க பெரியவங்க வந்து மத்ததைக் கவனிப்பாங்க..."

----------

'காஞ்சி' வார இதழ் - 13-6-1965

 

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)