ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேஷ்

 

10-10-2017

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ், தமிழ் ஹைக்கூ கவிதைகள் குறித்த தொடர் இலக்கிய பங்களிப்புக்காகவும், தனது சிறுவர் இலக்கிய நூலுக்காகவும் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

சிவகாசியிலிருந்து வெளிவரும் கந்தகப்பூக்கள் மற்றும் நீலநிலா இலக்கிய இதழ்கள் சார்பில் தமிழ் ஹைக்கூ கவிதை நூற்றாண்டு விழா அக்டோபர்-
8, ஞாயிறன்று சிவகாசியில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமான ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்றனர். ஹைக்கூ கவிதை கண்காட்சி, ஹைக்கூ கவிதை கல்வெட்டு திறப்பு, ஹைக்கூ அஞ்சல் தலை வெளியீடு, ஹைக்கூ நூல்கள் வெளியீடு, ஹைக்கூ கருத்தரங்கம் என நடைபெற்ற இவ்விழாவில், தமிழில் ஹைக்கூ கவிதையை பரவலாக அறிமுகம் செய்தமைக்காகவும், அதன் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயலாற்றியமைக்காகவும் கவிஞர் மு.முருகேஷூக்கு ‘ஹைக்கூ செம்மல் விருது’ வழங்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறை பேராசிரியர் கவிஞர் மித்ரா விருதினை வழங்கினார். விழாவில், முனைவர் பொ.நா.கமலா, நீலநிலா ஆசிரியர் செண்பகராஜன், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, கவிஞர்கள் பாண்டூ, யுவபாரதி, முத்துபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அன்று, மாலை இராஜபாளையத்தில் மணிமேகலை மன்றத்தின்
59-ஆவது ஆண்டு விழாவில் தமிழில் வெளியான சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ சிறுவர் நூல் 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் நூலாக தேர்வு செய்யப்பட்டு, விருதும் ரூ.5000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.

விழாவில், ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில் இயக்குநர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா, எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், மாம்பலம் ஆ.சந்திரசேகரன், கோ.மா.கோதண்டம், ‘திசை எட்டும்’ ஆசிரியர் குறிஞ்சிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவிஞர் மு.முருகேஷ் வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார். இதுவரை 35-க்கும் மேற்பட்ட கதை, கவிதை ,கட்டுரை, சிறுவர் இலக்கிய, விமர்சன நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

இவரது படைப்புகளை இதுவரை
5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

படக்குறிப்பு:

1.சிவகாசியில் நடைபெற்ற ஹைக்கூ நூற்றாண்டு விழாவில். ‘ஹைக்கூ செம்மல் விருதினை’ கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்குகிறார் பேராசிரியர் கவிஞர் மித்ரா. அருகில், கவிஞர் கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி, கவிஞர் மு.தமிழ்க்கனல்.

2.இராஜபாளையத்தில் நடைபெற்ற மணிமேகலை மன்ற விழாவில், ‘குழந்தை இலக்கியக் குரிசல்’ விருதினை வழங்கும் ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில் இயக்குநர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா. அருகில், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், மாம்பலம் ஆ.சந்திரசேகரன், கோ.மா.கோதண்டம், ‘திசை எட்டும்’ ஆசிரியர் குறிஞ்சிவேலன் ஆகியோர் உள்ளனர்.

இணைப்பு: படங்கள்:-

 




 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்