குறிஞ்சி மலர்

 தீபம் நா. பார்த்தசாரதி

முன்னுரை:
 

என்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் நாவலை எழுதப் புகுந்த நாள் மிகச் சிறந்தது. இந்த நாவலுக்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம். 'இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது. தமிழ் மணம் கமழ்வது' என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள்.

சிறந்த பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழ் இனமும் மொழியும், நாடும், பண்பாடும் சிறப்படைய மறுமலர்ச்சி இலக்கியம் உதவ வேண்டுமென்று கருதி வருகிறவர்களில் நானும் ஒருவன். இப்படிக் கருதிப் பணிபுரிவதில் பெருமைப்படுகிறேன்.

தமிழ் நாவல் எழுதுகிறவர்களில் பெரும்பாலோர் சென்னையையும் அதன் சுற்றுப்புறங்களையுமே கதை நிகழும் களமாகக் கொண்டு விடுவதனால் சென்னைக்குத் தெற்கே உள்ள தமிழ் நிலப்பரப்பின் விதவிதமான வாழ்க்கை வடிவங்கள், விதவிதமான வாழ்க்கைச் சாயல்கள் தெரிவிக்கப்படாமலே போய்விடுகின்றன. இதை மனதிற் கொண்டு மதுரையையும் தென் தமிழ் நாட்டுச் சுற்றுப்புறங்களையும் குறிஞ்சி மலர் நாவலுக்குக் களமாக அமைத்துக் கதை எழுதினேன். தலைப்பிலிருந்து முடிவு வரை தமிழ் மணம் கமழும் நாவலாகப் படைக்க வேண்டுமென்று விரும்பினேன்! அப்படியே படைத்திருப்பதாகவும் நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் வார இதலாகிய 'கல்கி'யில் 'மணிவண்ணன்' என்ற பெயரோடு இந்தக் கதையை எழுதத் தொடங்கிய போது 'நல்ல காரியத்தை எந்தப் பெயரில் செய்தாலும் நல்ல காரியந்தானே?' என்பதுதான், என் எண்ணமாக இருந்தது. நான் செய்து கொண்டிருந்தது நல்ல காரியம் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வாசகர்களோ 'மிக மிக நல்ல காரியம்' என்று ஆவலோடு நிமிர்ந்து நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். மருக்கொழுந்துச் செடியில் வேரிலிருந்து நுனித் தளிர் வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணப்பது போல, என்னுடைய இந்த நாவலின் எப்பகுதியிலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தப்படுகிற குரல் ஒலிக்க வேண்டுமென்று நினைத்து நான் எழுதினேன். அந்தக் குரல் ஒலிப்பதாகப் படித்தவர்கள் கூறினார்கள். 'நல்லது செய்தோம்' என்று பெருமைப்பட்டேன். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன். அந்தப் பணியையும் இந்த நாவல் நிறைவேற்றியிருப்பதை எனக்கு வந்த பல கடிதங்கள் விளக்கின, சான்று கூறின.

சைவ சமயக் குரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதி - கலிப்பகையார் ஆகியவர்களின் நிறைவடையாத உறவு - இவற்றைச் சற்றே நினைவுபடுத்திக் கொண்டு இந்த நாவலைப் படித்தால் இதன் இலக்கிய நயம் விளங்க முடியும்.

இந்த நாவலில் பூரணி, அரவிந்தன் இருவரையும் தமிழகத்துப் பெண்மை, ஆண்மைகளுக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்களாக நிலைக்கும்படி அமைத்திருக்கிறேன். தமிழக அரசியல் எழுச்சிகள் வாழ்வில் ஊடுருவுவதை அங்கங்கே காட்டியிருக்கிறேன். நாவல் முடிந்த போது, பூரணி, அரவிந்தன் என்று முறையே தங்கள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து விட்டதாகவும், ஆசிரியரின் ஆசியைக் கோருவதாகவும் 'மணிவண்ண'னுக்குப் பலர் கடிதங்கள் எழுதினார்கள். இந்த நாவலுடன் வாசகர்கள் கொண்டிருந்த உறவு எத்தகைய உயர்ந்த உறவு என்பது, இதன் ஆசிரியருக்கு அப்போது மிக நன்றாகத் தெளிவாயிற்று.

தமிழ் இலக்கிய அறிவை ஓரளவு பரப்ப வேண்டுமென்பதற்காகக் கதை நிகழ்ச்சியோடு ஒட்டிய பாடல் வரிகள் சிலவற்றை வாரா வாரம் தொடக்கத்தில் தந்தேன். இவற்றில் சில நானே எழுதியவையும் உண்டு. வாசகர்கள் இதைப் பெரிதும் விரும்பி வரவேற்றார்கள் என்று தெரிந்து மகிழ்ந்தேன்.

குறிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்; கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சி மலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை. நித்திய வாழ்வு வாழ்பவள் அவள்.

அரவிந்தனைப் போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு. 

நமது தமிழ்நாட்டின் சான்றாண்மைக்கும் இருப்பிடமான பேராசிரியர் மு.. அவர்கள் எக்காலத்துக்கும் என் உள்ளத்தே பேருருவாக நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்நாவலுக்குச் சிறப்புரை அளித்திருக்கிறார்கள் என்பது அடியேனுக்குப் பெரும் பேறு ஆகும்.

குறிஞ்சி மலர் முடிந்த சில நாட்களில் என் முதன் மகளாய் வந்து பிறந்து எனது இல்லத்தில் ஒளிபரப்பி நான் கனவில் கண்ட பூரணியாக நிகழ்வில் தோன்றும் என் செல்விக்கு இந்த நாவலை நூல் வடிவில் படைக்கிறேன்.

 

அன்பன்,

நா. பார்த்தசாரதி

(மணிவண்ணன்)

--------------

 

குறிஞ்சி மலர்

 

1

 

மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும்

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்

மெல்லப் போனதுவே!

 

பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை! உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத ரோஜாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப் பருவத்து இளம்காலை நேரம். கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை. 

பூரணி, கண்களைக் கசக்கிக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களை விழித்ததும் ஜன்னல் வழியாக எதிர்வீட்டுக் கோலம், மங்கிய ஓவியம்போல் அந்த மெல்லிருளிலும் தெரிந்தது. பெரிதாக வெள்ளைக் கோலம் போட்டு நடுவில் அங்கங்கே பறங்கிப் பூக்கள் பறித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த விடிகாலை நேரத்தில் வெள்ளைக் கோலத்தின் இடையிடையே பொன் வண்ணம் காட்டிய அப்பூக்கள் தங்கம் நிறைத்துத் தழல் பெருக்கி எங்கும் உருக்கி வார்த்த இங்கிதங்களைப்போல் இலங்கின. அந்தக் கோலத்தையும் அதன் அழகையும் நினைத்த போது, பூரணிக்குத் துக்கமாய்ப் பொங்கும் உணர்வின் சுமையொன்று மனத்தை அழுத்தியது. கண்கள் கலங்கி ஈரம் கசிந்தன.

அப்படி ஒரு கோலத்தை இன்னும் ஓர் ஆண்டுக்காலத்துக்கு அவள் தன் வீட்டு வாசலில் போடமுடியாது. கொல்லையில் அவள் வீட்டிலும் தான் பறங்கிப் பூக்கள் வண்டி வண்டியாய்ப் பூக்கின்றன. அவைகளை எங்கே பறித்து வைப்பது? யார் வைப்பது? துக்கத்தைக்கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு பழகிவிட்ட நாடு இது. விழுதுகளைப்போல் ஊன்றிக் கொண்டிருக்கும் பழமையான பழக்கங்கள் ஆலமரம் போன்ற தமிழ்நாட்டின் படர்ந்த வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனவே!

கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து விளக்கைப் போட்டாள் பூரணி. 'அப்பா இருந்தால் வீடு இப்படி ஓசையின்றி இருண்டு கிடக்குமா, இந்தக் காலை நேரத்தில்? நாலரை மணிக்கே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் நீராடி விட்டுத் திருவாசகத்தையும் திருவெம்பாவையையும் பாடிக் கொண்டிருப்பாரே. மார்கழி மாதத்தில் விடிவதற்கு முன்னரே வீடு முழுவதும் சாம்பிராணி மணக்கும். அப்பாவின் தமிழ் மணக்கும். அந்தத் தமிழில் இனிமை மணக்கும்!'

இன்று எங்கே அந்தத் தமிழ்? எங்கேயந்த அறிவின் மலை? பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அன்பாலும் அறிவுத் திறனாலும், ஆண்டு புகழ் குவித்த அந்த பூத உடல் போய் விட்டதே! அதோ, அப்பாவின் நீண்ட பெரிய புத்தக அலமாரி. அதையும் துக்கத்தையும்தான் போகும்போது பெண்ணுக்காக அவர் வைத்துவிட்டுப் போனாரா? இல்லை... அதைவிடப் பெரிய பொறுப்புகளை அந்த இருபத்தொரு வயது மெல்லியலாளின் பூந்தோளுக்குச் சுமையாக விட்டுப் போயிருக்கிறார்.

குளிர் தாங்காமல் மரவட்டைகளைப் போல் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்கும் தம்பிகளையும் தங்கைகளையும் பார்த்தாள் பூரணி. தலையணை போனது தெரியாமல், விரிப்புகளும் போர்வைகளும் விலகிய நிலையில் தரையில் சுருண்டு கிடந்த உடன்பிறப்புகளைப் பார்த்தபோது திருமணமாகாத அந்தக் கன்னிப் பருவத்திலேயே ஒரு தாயின் பொறுப்பைத் தான் சுமக்க வேண்டியிருப்பதை அவள் உணர்ந்தாள். 

உடன்பிறப்புகளை நேரே விரிப்பில் படுக்கச் செய்து போர்வையைப் போர்த்திவிட்டு நிமிர்ந்தபோது எதிர்ச் சுவரில் அப்பாவின் பெரிய படம் பூரணியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அவள் அப்படியே அந்தப் படத்தைப் பார்த்தவாறே நின்றுவிட்டாள். அவர் தன்னையே பார்ப்பது போல் அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று.

இயற்கையாகவே அவருக்கு அழகாக மலர்ந்த முகம். ஆழமான படிப்பும் மனத்தில் ஏற்பட்ட அறிவின் வளர்ச்சியும் அந்த அழகை வளர்த்துவிட்டிருந்தன. அவருக்கென்றே அமைந்தாற்போல அற்புதமான கண்கள். அன்பின் கனிவும், எல்லோரையும் எப்போதும் தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறார் போல் ஒரு பரந்த தாய்மை உணர்வும் அமைந்த கண்கள் அவை. எடுப்பாக நீண்டு அழகாக விளங்கும் நாசி. சும்மா இருந்தாலும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தாற் போலவே எப்போதும் தோன்றும் வாயிதழ்கள். அந்தக் கண்களும், அந்த முகமும், அந்தச் சிரிப்பும் தான் மாணவர்களைக் கொள்ளை கொண்டவை. எவ்வளவு பெரிய நிலையில் எத்தனை சிறந்த பதவியில் இருந்தாலும் நான் தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களின் மாணவன் என்று பிற்கால வாழ்விலும் சொல்லிச் சொல்லி மாணவர்களைப் பெருமை கொள்ளச் செய்த திறமை அது.

பூரணி பெருமூச்சு விட்டாள்! அப்படியே விளக்கை அணைத்துவிட்டு, மறுபடியும் இருட்டில் உட்கார்ந்து அப்பா காலமான துக்கத்தை நினைத்துக் குமுறிக் குமுறி அழவேண்டும் போல் இருந்தது. கண்ணீரில் துக்கம் கரைகிறது. அழுகையில் மனம் இலேசாகிறது.

பூரணி மெல்ல நடந்து சென்று அப்பாவின் படத்தை மிக அருகில் நின்று பார்த்தாள். கோயில் கர்ப்பக்கிருகத்தில் உள்ள தெய்வ விக்கிரகத்தின் அருகில் நின்று நேர்ந்தால் உண்மை பக்தனுக்கு மெய்சிலிர்க்கும் அல்லவா! அப்படி மெய்சிலிர்த்தது பூரணிக்கு. நீர்ப்படலங்கள் கண் பார்வையை மூடி மறைக்க முயன்றன.

அப்பாவின் முகத்தில் தெரிகிற சிறிது முதுமைகூட அம்மாவின் மரணத்துக்குப் பின் படிந்த முதுமைதான். அம்மா இறந்தபோது கூட அவர் வாய்விட்டு அழவில்லையே! நாங்களெல்லாம் மூன்று நாட்கள் சாப்பிடமாட்டோம் என்று பிடிவாதமாகக் குமுறி அழுதோம். படிப்பும், அனுபவங்களும் அவர் மனத்தை எவ்வளவுக்குக் கல்லாக்கியிருந்தன அப்போது.

குழந்தைபோல் என்னை அணைத்துத் தலையைக் கோதிக் கொண்டே, "பூரணி! நீ பச்சைக் குழந்தைபோல இப்படி அழுது கொண்டிருந்தால் தம்பிகளையும் புதிதாகப் பிறந்திருக்கும் தங்கைப் பாப்பாவையும் யார் சமாதானப்படுத்துவது? துக்கத்தை மறந்துவிடப் பழகிக்கொள், அம்மா! இனிமேல் இந்தத் தம்பிகளுக்கும் அம்மா விட்டுப்போன தங்கைப் பாப்பாவுக்கும், நீ அக்கா மட்டுமில்லை, அம்மா மாதிரியும் இருந்து வளர்க்க வேண்டும். நீதான் எனக்கு விவரம் தெரிந்த பெண் என்று பேர். நீயும் இப்படி அழுது முரண்டு பிடித்தால் நான் தனியாக யாரையென்று சமாதானப்படுத்துவேன் அம்மா?" என்று அறிவுரை கூறினாரே! தம்முடைய துன்பங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல - சுகங்களையும் இன்பங்களையும் கூடப் பொருட்படுத்தாமல் மறந்துவிடுகிற சுபாவம் அவருக்கு. கல்லூரி வகுப்பு அறைகளிலும், வீட்டில் புத்தக அலமாரிக்கு அருகிலுமே வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரத்தைக் கழித்துவிட்டு மற்றவற்றை மறந்து கொண்டிருந்தவர் அவர். முறையாகப் பழுத்து உதிரும் கனியைப் போல் அறிவினால் காய்த்தன்மை வாய்ந்த சாதாரண உணர்ச்சிகளைச் சிறிது சிறிதாகத் தம்மைவிட்டு நீக்கி விட்டவர், அவர். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விநாடியும் ஒழுங்காகவும் முறையாகவும் கழிப்பதற்குப் பழகிக்கொண்டிருந்த வாழ்க்கை அவருடையது.

"அப்பா போய்விட்டார்" என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான். "நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்" என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்தச் செய்யுள் வரி மாதிரி தான் அப்பாவும் கல்லூரிக்குப் போனார். புத்தக அலமாரிக்கு அருகில் நின்றார். இருந்தார். திடீரென்று எல்லோரையும் தவிக்க விட்டுப் போய்விட்டார்.

மரணத்தைக் கூட ஆர்ப்பாட்டமில்லாமல், நோய் நொடி தொல்லைகள் இல்லாமல் எவ்வளவு எளிமையாக அடைய முடிந்தது அவரால்! செத்துப்போவது போலவா அவர் போனார்? யாரோ எங்கோ இரகசியமாகக் கூப்பிட்டு அனுப்பியதற்காகப் புறப்பட்டுப் போவது போலல்லவா போய்விட்டார்.

சாயங்காலம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர் ஒரு நாளுமில்லாத வழக்கமாகச் சோர்ந்து போனவர் போல் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டார். நான் பதறிப்போய் அருகில் சென்று, "என்னப்பா உங்களுக்கு? ஒரு மாதிரி சோர்ந்து காணப்படுகிறீர்களே?" என்று கேட்டேன்.

"ஒன்றுமில்லை பூரணி; கொஞ்சம் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டு வா. இலேசாக நெஞ்சை வலிக்கிற மாதிரி இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நான் வெந்நீர் கொண்டுவரப் போனேன். தம்பி திருநாவுக்கரசு கூடத்தில் உட்கார்ந்து பள்ளிக்கூடத்துப் பாடம் படித்துக் கொண்டிருந்தான். சின்னத்தம்பி சம்பந்தனும் குழந்தை மங்கையர்க்கரசியும் வீட்டு வாயிலுக்கு முன்னால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

நான் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்த போது, "திருநாவுக்கரசு இருந்தால் இங்கே வரச்சொல், அம்மா" என்று அப்பா கட்டிலிலிருந்தவாறே குரல் கொடுத்தார்.

அதைக் கேட்டு, "இதோ வந்துவிட்டேன், அப்பா" என்று தம்பி கூடத்திலிருந்து சென்றான்.

அப்பா தம்பியிடம் திருவாசகத்தை எடுத்துத் தமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து படிக்குமாறு கூறியதும், தம்பி படிக்கத் தொடங்கியதும், சமையலறையில் எனக்குக் கேட்டன. நான் வெந்நீரோடு சென்றேன். அப்பாவின் இரண்டு கைகளும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன. வலியை உணர்ந்த வேதனை முகத்தில் தெரிந்தது. தம்பி திருவாசகத்தின் திருவண்டப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தான்.

 

"பூவில் நாற்றம் போன்று உயர்ந்தோங்கும்

ஒழிவு அற நிமிர்ந்து மேவிய பெருமை

இன்று எனக்கு எளிவந் தருளி

அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்!"

 

தம்பியின் சிறிய இனிய குரல் அழகாக ஒலித்துக் கொண்டிருந்தது. "அப்பா உங்கள் முகத்தைப் பார்த்தால் அதிகமாக வேதனைப்படுகிறீர்கள் போல் தோன்றுகிறது. நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா?" என்று கவலையோடு கேட்டேன்.

அப்பா மறுமொழி கூறாமல் சிரித்தார். "நான் போய் கூட்டிக் கொண்டு வருகிறேன், அப்பா!" என்று அவர் பதிலை எதிர்பாராமலே நான் புறப்பட்டேன்.

நான் டாக்டரோடு திரும்பியபோது தம்பி ''வென்று அலறியழும் குரல் தான் என்னை வரவேற்றது. அப்பாவின் பதில் பேசாத அந்தப் புன்னகைதான் நான் இறுதியாக அவரிடம் பார்த்த உயிர்த்தோற்றம்.

அப்பா போய்விட்டார். துக்கத்தையும் பொறுப்பையும் பிஞ்சுப் பருவத்து உடன்பிறப்புகளையும் என் தலையில் சுமத்தி விட்டுப் போய்விட்டார். ஊரே துக்கம் கொண்டாடியது. ஆயிரக் கணக்கான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்கள் பலரும், பழைய மாணவர்களும் அப்பாவின் அந்திம ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உள்ளூரிலுள்ள எல்லா கல்லூரிகளும் துக்கத்துக்கு அடையாளமாக விடுமுறைவிட்டன. அனுதாபத் தந்திகளும், கடிதங்களும் எங்கெங்கோ இருக்கிற பழைய மாணவர்களிடமிருந்து இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. 

அப்பா போய் பதினைந்து நாட்கள் பொய்கள் போல் மறைந்துவிட்டன. தினம் பொழுது விடிந்தால் அனுதாபத்தைச் சொல்ல வரும் கடிதங்கள், அனுதாபத்தைக் கொடுக்க வரும் மனிதர்கள், உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றலும் அந்தப் பெரிய துக்கத்தில் தேங்கிவிட்டதுபோல் தோன்றியது பூரணிக்கு.

வாசலில் மாட்டின் கழுத்துமணி ஓசையை அடுத்து, பால்காரனின் குரல் கேட்டது. பூரணி துக்கத்தையும் கலங்கிய கண்களையும் தற்காலிகமாகத் துடைத்துக் கொண்டு பால் வாங்குவதற்குப் புறப்பட்டாள்.

"நெற்றி நிறைய திருநீரும் வாய்நிறையத் திருவாசகமுமாகப் பெரியவர் பால் வாங்க வரும்போதே எனக்குச் சாமி தரிசனம் இங்கே ஆகிறாற்போல் இருக்குமே அம்மா" என்று பாலை ஊற்றி விட்டுப் போகும் போது சொல்லிச் சென்றான் பால்காரன். அவள் மனதில் துக்கத்தைக் கிளறின அந்தச் சொற்கள். அப்பா இருக்கும் போது காலையில் முதலில் எழுந்திருக்கிறவர் அவரே. கையால் தாமே பால் வாங்கி வைத்துவிடுவார். பால்காரனிலிருந்து வாசல் பெருக்குகிற வேலைக்காரி வரை அத்தனை பேருக்கும், அப்பாவிடம் தனி அன்பு, தனி மரியாதை. பெரியவர், பெரியவர் என்கிறதைத் தவிர அப்பாவைப் பேர் சொல்லி அழைத்தவர்களைப் பூரணி கண்டதில்லை. அப்பாவோடு ஒத்த அறிவுள்ள இரண்டொரு பெரிய ஆசிரியர்கள் மட்டுமே அவரைப் பேர் சொல்லியழைப்பார்கள்.

அப்பா எல்லா வகையிலும் எல்லாருக்கும் பெரியவர். அறிவைக் கொடுப்பதில் மட்டுமல்ல... ஏழைப்பட்ட மாணவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தவர் என்று மாணவர்களிடையே பெருமையும், நன்றியும் பெற்றவர். பணத்தைப் பொறுத்தவரையில் பிறருக்கு உதவத் துணிந்த அளவு பிறரிடம் உதவி பெறத் துணியாத தன்மானமுள்ளவர் அப்பா. அவருடைய வலதுகை கொடுப்பதற்காக உயருவதுண்டு! வாங்குவதற்காகக் கீழ் நோக்கித் தாழ்ந்ததே இல்லை. கீழான எதையும் தேடத் துணியாத கைகள்; கீழான எவற்றையும் நினைக்க விரும்பாத நெஞ்சம். அப்பா நினைப்பிலும், நோக்கிலும், பேச்சிலும், செயலிலும் ஒழுங்கான வரையறைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.

ஒரு சமயம், தமிழ் மொழியில் பிழையாகப் பேசுவதையும் பிழையாக எழுதுவதையும் தவிர்க்க ஓர் இயக்கம் நடத்த வேண்டும் என்று அப்பாவின் மதிப்புக்குரிய தமிழாசிரியர்கள் சிலர் யோசனை கேட்டார்கள்.

'எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல, வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்வாழும் நிலமெல்லாம் வாழ்க்கையிலேயே பிழையில்லாத ஒழுங்கும், அறமும் அமைய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று புன்னகையோடு பெருமிதம் ஒலிக்கும் குரலில் அப்போது அப்பா - அவர்களுக்கு மறுமொழி சொன்னார். அதைக் கேட்ட போது அன்று எனக்கு மெய் சிலிர்த்ததே! ஒழுங்கிலும், நேர்மையிலும் அவருக்கு அவ்வளவு பற்று; நம்பிக்கை.

பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சரியான மீட்டரில் வைக்கப்பெறாத வானொலிப் பெட்டி மாதிரி வீதியின் பல்வேறு ஒலிகள் கலந்து எழுந்து விழிப்பைப் புலப்படுத்தின. மானிடத்தின் இதயத்தில் அடி மூலையிலிருந்து மெல்லக் கேட்கும் சத்தியத்தின் குரலைப் போல் தொலைவில் கோயில் மேளம் ஒலித்தது. பூரணி எழுந்து நீராடிவரக் கிணற்றடிக்குச் சென்றாள்.

பக்கத்துப் பெருஞ்சாலையில் நகரத்திலிருந்து திருப்பரங்குன்றத்துக்கும், திருநகருக்கும் வந்து திரும்புகிற டவுன் பஸ்களில் கலகலப்பு எழுந்தது. நகரத்துக்கு அருகில் கிராமத்தின் அழகோட தெய்வீகச் சிறப்பையும் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருந்தது திருப்பரங்குன்றம். மதுரை நகரத்தின் ஆடம்பர அழகும், கம்பீரமும் இல்லாவிட்டாலும், அதற்கு அருகே அமைந்த எளிமையின் எழில் திருப்பரங்குன்றத்துக்கு இருந்தது. என்றும் இளையனாய், ஏற்றோருக்கு எளியனாய்க் குன்றுதோறாடும் குமரன் கோயில் கொண்டிருந்து ஊருக்குப் பெருமையளித்தான்.

எந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்துவிட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் தழுவினாற்போல் சிறியதாய் சீரியதாய் ஒரு கோபுரம் படிப்படியாய்க் கீழ்நோக்கி இறங்குமுகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோயில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும், வாழவும் எழுந்தது போல பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய ரயில்வே நிலையம். அதையடுத்து ஒழுங்காய், வரிசையாய் ஒரே மாதிரியாகத் தோன்றும் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு வீடுகள். அதற்கும் மேற்கே திருநகர்.

திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதிந்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடப்புறமும், தென்புறமும் நீர் நிறைந்த பெரிய கண்மாய்கள். சுற்றிலும் வயல்கள், வாழைத் தோட்டம், கரும்புக் கொல்லை, தென்னை மரங்கள், சோலைகள் அங்கங்கே தென்படும்.

அந்த அழகும் அமைப்பும் பல நூறு ஆண்டுகளாகக் கனிந்து கனிந்து உருவாகியவை போன்று ஒரு தோற்றத்தை உண்டாக்கின. அந்தத் தோற்றத்தில் பல்லாயிரம் காலமாகத் தமிழன் வாழ்ந்து பழகிப் பயின்று ஒப்புக்கொண்ட சூழ்நிலை போன்று ஏதோ ஒரு பழமை தெரிந்தது! தாம் தமிழ்ப் பணிபுரியும் கல்லூரியும், தம்முடைய நெருங்கிய நண்பர்களும், பிற வாழ்க்கை வசதிகளும், நகரத்துக்குள் இருந்த போதிலும் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் திருப்பரங்குன்றத்தை வாழும் இடமாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் மனதுக்குப் பழகிப் போனது போல் தோன்றிய அந்தப் பண்பட்ட சூழ்நிலைதான். உடம்புக்கு நல்ல காற்று, சுற்றிலும் கண்களுக்கு நிறைந்த பசுமை, மனதுக்கு நிறைவு தரும் தமிழ்முருகன் கோயில் - என்ற ஆவலோடுதான் பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பேராசிரியராக வேலைக்கு நுழைந்த போது அவர் அங்கே குடியேறினார். அமைதியும் சமயப் பற்றும், சிந்தனையும் தேவையான அவருக்கு, அந்த இடத்தில் அவை போதுமான அளவு கிடைத்தன. அவருடைய வாழ்க்கையையே அங்கேதான் தொடங்கினார். அங்கேதான் பூரணியின் அன்னை அவரோடு இல்லறம் வளர்த்து வாழ்ந்தாள். அங்கேதான் பூரணி பிறந்தாள். தம்பிகள் திருநாவுக்கரசும், சம்பந்தனும், குழந்தை மங்கையர்க்கரசியையும் பெற்றுவிட்டுப் பூரணியின் அன்னை கண்மூடியதும் அங்கேதான்.

இப்போது கடைசியாக அவரும் அங்கேயே கண்மூடி விட்டார். நல்ல ஓவியன் முடிக்காமல் அரைகுறையாக வைத்துச் சென்ற நல்ல ஓவியத்தைப் போல் அந்தக் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். அழகிய சிற்றம்பலம் பேரையும், புகழையும், ஒழுக்கத்தையும், பண்பையும், தேடிச் சேர்த்துப் பாதுகாத்தது போல் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் கொஞ்சம் செல்வத்தையும் சேர்த்துப் பாதுகாத்திருக்கலாம் அவர்! ஆனால் அப்படிச் செய்யவில்லையே! ஏழ்மை நிறைந்த கைகளும் வள்ளன்மை நிறைந்த மனமுமாக இருந்துவிட்ட காரணத்தால் அவரால் அப்படிச் சேர்த்து வைக்க முடியவில்லை.

பின் பிஞ்சும், பூவுமாக இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு அவர் எதைச் சேர்த்து வைத்துவிட்டுப் போனார்? யாரைத் துணைக்கு வைத்துவிட்டுப் போனார்? தமிழ்ப் பண்பையும் தாம் சேர்த்த புகழையும் - அவற்றிற்குத் துணையாகப் பூரணியையும் தான் வைத்துவிட்டுப் போக முடிந்தது அவரால். பூரணிக்கு இருபத்தொரு வயதின் வளர்ச்சியும் வனப்பும் மட்டும் அவர் தந்து செல்லவில்லை. அறிவை அடிப்படையாகக் கொண்ட தன்னம்பிக்கை; தம்மோடு பழகிப் பழகிக் கற்றுக்கொண்ட உயரிய குறிக்கோள்கள்; எதையும் தாங்கிக்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் இவைகளைப் பூரணிக்கும் பழக்கிவிட்டுப் போயிருந்தார். வளை சுமக்கும் கைகளில் வாழ்க்கையைச் சுமத்தியிருந்தார்.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் நல்ல இளமையில் பிறந்தவள் பூரணி. அந்தக் காலத்தில் தமிழ்க் காவியங்களில் வருகிற பெண் பாத்திரங்களைப் பற்றிய திறனாய்வு நூலுக்காக ஓய்வு ஒழிவின்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் அவர். அந்த ஆராய்ச்சி முடிந்து புத்தகம் வெளிவந்த அன்று தான் பூரணி பிறந்தாள். தமிழ்க் காவியங்களில் தாம் கண்டு திளைத்த பூரண எழில் எதுவோ அது அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் நினைவு வந்தது அவருக்கு. குழந்தையின் நிறைந்த அழகுக்குப் பொருத்தமாகப் பூரணி என்று வாய் நிறையப் பெயரிட்டு அழைத்தார் அவர்.

அந்தப் புத்தகம் வெளிவந்த ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அதன் சிறப்பைப் பாராட்டிப் பல்கலைக்கழகத்தார் அவருக்குக் கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்தார்கள். ஆனால் அதைவிட அவருக்கு இன்பமளித்த பட்டம், தட்டுத் தடுமாறிய மழலையில் பூரணி 'அப்பா' என்று அவரை அழைக்கத் தொடங்கிய குதலைச் சொல்தான். 

பூரணி வளரும் போதே தன்னுடைய பெயருக்குப் பொருத்தமாக அறிவையும் அழகையும் நிறைத்துக் கொண்டு வளர்ந்தாள். அறிவில் அப்பாவையும் அழகில் அம்மாவையும் கொண்டு வளர்ந்தாள் அவள். உயரமும் நளினமும் வஞ்சிக்கொடி போல் வளர்ச்சி.

மஞ்சள் கொன்றைப் பூவைப் போன்று அவளுடைய அழகுக்கே வாய்ந்ததோ என ஒரு நிறம். திறமையும் அழகுணர்ச்சியும் மிக்க ஓவியன், தன் இளம் பருவத்தில் அனுராகக் கனவுகள் மிதக்கும் மனநிலையோடு தீட்டியது போன்ற முகம் பூரணிக்கு. நீண்டு குறுகுறுத்து, மலர்ந்து, அகன்று, முகத்துக்கு முழுமை தரும் கண்கள் அவளுக்கு. எந்நேரமும் எங்கோ எதையோ எட்டாத உயர்ந்த பெரிய இலட்சியத்தைத் தேடிக் கொண்டிருப்பதுபோல் ஏக்கமும் அழகும் கலந்ததொரு வனப்பை அந்தக் கண்களில் காணமுடியும். வாழ்க்கை முழுவதும் நிறைவேற்றி முடிப்பதற்காக மகோன்னதமான பொறுப்புகளை மனதுக்குள் அங்கீகரித்துக் கொண்டிருப்பதுபோல் முகத்தில் ஒரு சாயல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த நாட்டுப் பெண்மையின் குணங்களாகப் பண்பட்ட யாவும் தெரியும் கண்ணாடிபோல் நீண்டகன்ற நளின நெற்றி.

பூரணியைப் போல் பூரணியால்தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கினாள் அவள். பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் பூரணியை வெறும் பள்ளியிறுதி வகுப்புவரைதான் படிக்க வைத்திருந்தார். வீட்டில் தமக்கு ஓய்வு இருந்த போதெல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்து முறையாக இலக்கண இலக்கியங்களைப் பூரணிக்குக் கற்பித்திருந்தார். எவ்வளவோ முற்போக்குக் கொள்கையுடையவராக இருந்தும் பெண்களின் படிப்பைப் பற்றி ஒரு திட்டமான கொள்கை இருந்தது அவருக்கு. கற்பூரம் காற்றுப் படப்படக் கரைந்து போவதுபோல் அதிகப் படிப்பிலும் வெளிப்பழக்கங்களிலும் பெண்மையின் மென்மை கரைந்து பெண்ணின் உடலோடும் ஆணின் மனத்தோடும் வாழுகின்ற செயற்கை நிலை பெண்களுக்கு வந்துவிடுகிறதென்று நினைப்பவர் அவர். பூரணியை அவர் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பாததற்கு அவருடைய இந்த எண்ணமே காரணம். கல்லூரிப் படிப்புத் தரமுடிந்த அறிவு வளர்ச்சியைப் போல் நான்கு மடங்கு அறிவுச் செழிப்பை வீட்டிலேயே தம் பெண்ணுக்கு அளித்திருந்தார் அவர். உண்மைப் பற்றும் ஆர்வமும் கொண்டு தமிழ் மொழியைப் பேச்சாலும் எழுத்தாலும் வளர்த்துவிட்டுப் போயிருந்தது போலவே தம் அருமைப் பெண்ணையும் வளர்த்துவிட்டுப் போயிருந்தார்.

மணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள். 

"ஏண்டா இன்னும் நிற்கிறீர்கள்? பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு நேரமாகவில்லையா?"

மூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே புரிந்து கொண்டுவிட்டாள்.

"! பள்ளிக்கூடச் சம்பளத்துக்குக் கடைசி நாளா? இரு பார்க்கிறேன்." குழந்தைக்குக் கைகழுவி விட்டு உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இருந்ததைக் கொட்டி எண்ணியதில் ஏழரை ரூபாய் தேறியது. பாங்குப் புத்தகத்தை விரித்துப் பார்த்தாள். எடுப்பதற்கு அதில் மேலும் ஒன்றுமில்லை எனத் தெரிந்தது. தம்பியைக் கூப்பிட்டு ஏழு ரூபாயை அவனிடம் கொடுத்து "சம்பளத்தை இன்றைக்கே கட்டிவிடு" என்று சொல்லி அனுப்பினாள். அவர்கள் "வருகிறோம் அக்கா" என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அந்த வீட்டின் எல்லையில் தங்கிய கடைசி நாணயமான அந்த எட்டணாவைப் பெட்டிக்குள்ளே போட்டபோது, பூரணிக்குச் சிரிப்புத்தான் வந்தது. துன்பத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று நினைக்கிறபோது உண்டாகிற வறண்ட சிரிப்புதான் அது.

வாசலில் தபால்காரன் வந்து நின்றான். கூடத்தில் உட்கார்ந்து அம்புலிமாமா பத்திரிகையில் பொம்மை பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி துள்ளிக் குதித்தோடிப் போய் தபால்களை வாங்கிக் கொண்டு வந்தாள். பெரிய ரோஜாப்பூ ஒன்று கையும் காலும் முளைத்து வருவதுபோல் அந்தச் சிறுமி அக்காவை நோக்கி ஓடி வந்தாள். தங்கை துள்ளிக் குதித்து ஓடிவந்த அழகில் பூரணியின் கண்கள் சற்றே மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காட்டின.

வழக்கம்போல் பெரும்பாலான கடிதங்கள் அப்பாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்தவைதான். இரண்டொரு கடிதங்கள் இலங்கையிலிருந்தும் மலேயாவிலிருந்தும் கூட வந்திருந்தன. கடல் கடந்து போயும் அப்பாவின் நினைவை மறக்காத அந்தப் பழைய மாணவர்கள் செய்தித்தாள்கள் மூலம் விபரமறிந்து எழுதியிருந்தார்கள். அவ்வளவு புகழும் பெருமையும் வாய்ந்த ஒருவருடைய பெண்ணாக இருப்பதை நினைப்பதே பெருமையாக இருந்தது அவளுக்கு.

கடைசியாகப் பிரிக்கப்படாமல் இருந்த இரண்டு உறைகளில் ஒன்றைப் பிரித்தாள். தலைப்பில் இருந்த பெயரைப் படித்ததும் அவள் முகம் சிறுத்தது. அப்பாவிடம் வீட்டில் வந்து தனியாகத் தமிழ்ப் படித்தவரும் பெருஞ் செல்வரும் ஆகிய ஒரு வியாபாரி எழுதியிருந்த கடிதம் அது. தமிழ் சொல்லிக் கொடுத்தாலும் அந்த வியாபாரியின் குணமும் முறையற்ற அரசியல் பித்தலாட்டங்களும் அப்பாவுக்குப் பிடிக்காது. கடைசிவரையில் பிடிவாதமாக அந்த மனிதனிடம் கால்காசு கூட வாங்கிக் கொள்ள மறுத்துக் கொண்டே அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து அனுப்பி விட்டார் அவள் அப்பா. 

'ஏழைகளின் இரத்தத்தைப் பிழிந்து பணம் சேர்த்தவன் அம்மா இவன். மனதில் நாணயமில்லாமல் கைகளில் நாணயத்தைக் குவித்துவிட்டான். தமிழைக் கேட்டு வருகிற யாருக்கும் இல்லையென்று மறுப்பது பாவம் என்று நம்புகிறவன் நான். அந்த ஒரே நம்பிக்கைக்காகத்தான் இவனைக் கட்டிக் கொண்டு அழுகிறேன்' என்று பலமுறை வெறுப்போடு அந்த மனிதரைப் பற்றி பூரணியிடம் சொல்லியிருக்கிறார் அவர். உலகத்தில் எந்த மூலையில் எவ்வளவு பெரிய மனிதனிடத்தில் நாணயக்குறைவும் ஒழுக்கக் குறைவும் இருந்தாலும் அந்த மனிதனைத் துச்சமாக நினைக்கிற துணிவு அப்பாவுக்கு உண்டு. பண்புக்குத்தான் அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. வெறும் பணத்திற்கு அதை அவர் தரவே மாட்டார்.

இத்தனை நினைவுகளும், வெறுப்பும் பொங்க அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் பூரணி.

"இதனுடன் தொகை போடாமல் என் கையெழுத்து மட்டும் போட்டு ஒரு செக் இணைத்திருக்கிறேன். தங்களுக்கு எவ்வளவு தொகை தேவையானாலும் எழுதி எடுத்துக் கொள்ளலாம். தந்தை காலமான பின் தங்கள் வீட்டு நிலையை என்னால் உணர முடிகிறது. தயவு செய்து இதை மறுக்கக்கூடாது."

பூரணியின் முகம் இன்னும் சிறுத்தது. கடிதத்தின் பின்னால் இருந்த கனமான அந்த வர்ணக் காகிதத்தைப் பார்த்தாள். அந்த சிவப்பு நிற எழுத்துக்கள் எல்லாம் ஏழைகள் சிந்திய கண்ணீர்த் துளிகளில் அச்சடிக்கப்பட்டனவா? உலகத்திலேயே மிகவும் இழிந்த ஒன்றைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு அருவருப்பு உண்டாயிற்று பூரணிக்கு.

அந்தக் கடிதத்தையும் செக்கையும் வெறுப்போடு கீழே வீசியெறிந்துவிட்டு நிமிர்ந்தாள். எதிரே அதற்காக அவளைப் பாராட்டுவதுபோல் அப்பாவின் படம் சிரித்துக் கொண்டிருந்தது. எப்போது சிரிக்கிற சிரிப்புதான் அப்போது அப்படித் தோன்றியது.

பூரணி உள்ளே போய் பேனாவை எடுத்து வந்தாள். கீழே கிடந்த அந்த செக்கை எடுத்து அதன் பின்புறம் 'அப்பாதான் செத்துப் போய்விட்டார். அவருடைய தன்மானம் இன்னும் இந்தக் குடும்பத்திலிருந்து சாகவில்லை. சாகாது. உங்கள் உதவிக்கு நன்றி! தேவையானவர்களுக்கு அதைச் செய்யுங்கள். இதோடு உங்கள் செக் திரும்பி வருகிறது' என்று எழுதி வேறு உறைக்குள் வைத்தாள். வீட்டில் எப்போதோ வாங்கி உபயோகப்படுத்தப்படாமல் தபால் தலைகள் கொஞ்சம் இருந்தன. அவற்றை ஒட்டி முகவரி எழுதினாள். முதல் வேலையாக அதை எதிர்ச்சாரியில் தெருவோரத்தில் இருந்த தபால் பெட்டியில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள். அதைச் செய்ததும்தான் கையிலிருந்து ஏதோ பெரிய அழுக்கைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொண்ட மாதிரி இருந்தது அவளுக்கு. மனதில் நிம்மதியும் பிறந்தது. 

திரும்பி வந்ததும், பிரிக்கப்படாமல் இருந்த மற்றோர் உறை அவள் கண்களில் தென்பட்டது. குழந்தை மறுபடியும் 'அம்புலிமாமா'வைப் பொம்மை பார்க்கத் தொடங்கியிருந்தாள். பூரணி அதுவும் ஒரு அனுதாபக் கடிதமாக இருக்கும் என்று பிரித்தாள். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரர் மதுரையில் குடியிருந்தார். அவர் எழுதியிருந்த கடிதம்தான் அது.

"வீட்டை அடுத்த மாதம் விற்கப் போகிறேன். அதற்குள் தாங்கள் தரவேண்டிய ஆறு மாதத்து வாடகைப் பாக்கியைச் செலுத்திவிட்டு வேறு இடம் பார்த்துக் கொள்ள வேண்டியது."

கடிதம் அவள் கையிலிருந்து நழுவிக் குழந்தை வைத்திருந்த அம்புலிமாமாவுக்குப் பக்கத்தில் விழுந்தது.

"அக்கா இந்தாங்க" என்று மழலையில் மிழற்றிக் கொண்டே குழந்தை மங்கையர்க்கரசி அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். பூரணி அப்பாவின் படத்தை அந்த அற்புதக் கண்களைப் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள்.

'பெண்ணே! வாழ்க்கையில் முதல் துயர அம்பு உன்னை நோக்கிப் பாய்கிறது. நான் இறந்தபின் நீ சந்திக்கிற முதல் துன்பம் இது. கலங்காதே. துன்பங்களை வெல்லுகிற முயற்சிதான் வாழ்க்கை.'

அப்பாவின் படம் பேசுவதுபோல் ஒரு பிரமையை உண்டாக்கிக் கொண்டாள் அவள். அவருடைய அற்புதக் கண்களிலிருந்து ஏதோ ஓர் ஒளி மெல்ல பாய்ந்து பரவி அவளிடம் வந்து கலக்கிறதா? அவள் மனதில் துணிவின் நம்பிக்கை ஒளி பூத்தது.

 

2

 

"தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ

கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ

அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ

அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ"

                                                                                                        -பரிபாடல்

 

குழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு. படைப்புக் கடவுளைப் போல் கஞ்சத்தனம் உள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது. சுக துக்கங்களை அங்கீகரித்துக் கொள்ளாமல் நினைத்தபோது உண்டு, நினைத்தபோது உறங்கி, அந்த வினாடிகளை அந்தந்த வினாடிகளோடு மறந்துபோகும் குழந்தைப் பருவத்தை மனிதனுக்கு மிகவும் குறைவாக அல்லவா கொடுத்திருக்கிறார் அவர். அறிவு, அனுபவம், மூப்பு எல்லாம் துக்கத்தைப் புரிந்து கொள்கிற கருவிகள்தாமா!

பூரணி நெட்டுயிர்த்தாள். எதிரே தெருவாசல் வெறிச்சோடிக் கிடந்தது. பகல் ஏறிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஏதோ ஒரு தனி அமைதியில் மூழ்கிப் போயிருந்தது தெரு. காலம் என்ற பெரிய இயந்திரத்தை யாரோ சொல்லாமல் இரகசியமாக ஒடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்ட மாதிரி தெருவெங்கும், வெறுமை நிழலாடும் நேரம் அது. உச்சி வேளைக்கு மேல் கோயிலும் மூடி விடுவார்கள். எனவே தரிசனத்துக்காகப் போகிற ஆட்கள் கூட திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் இல்லை அப்போது.

பூரணி வாயிற்புறம் வந்தாள். கம்பிக் கதவைச் சாத்தி உட்புறம் தாழிட்டுக்கொண்டு திரும்பினாள். எங்கோ கோயில் வாயிலில் பூக்கடைப் பக்கமிருந்து வெட்டிவேர் மணம் வந்து பரவியது. அந்த ஊருக்கு மட்டுமே அத்தகையதொரு மணம் சொந்தம். கோயிலுக்கு அருகில் நான்கு தெருக்கள் வரையில் வெட்டிவேர் மணம் கமகமத்துக் கொண்டே இருக்கும்.

'முருகனுடைய அருள் மணம்போல் இது எங்க ஊருக்குத் தனிச்சிறப்பு அம்மா!' என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அந்த மணம் பூரணிக்கு இதை நினைவுபடுத்தியது.

வீட்டுக்காரருக்கு ஆறுமாத வாடகைக் கடனை அடைக்கப் பணம் வேண்டும். அடுத்தபடி குடியிருக்கக் குறைந்த வாடகையில் ஓர் இடமும் பார்த்தாக வேண்டும். இந்த இரண்டுக்கும் மேலாகத் தனக்கு ஒரு வேலையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரும் சிறப்புமாக வாழாவிட்டாலும் மானமாகப் பிழைக்க வேண்டுமே. அப்பா போய்விட்டாலும் அவருடைய புகழும், பெருமையும் இந்த வீட்டைச் சுற்றிலும் ஒளிபரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் புகழினால் மணம்தான் நிரம்பும். வயிறு நிரம்புமா? புகழ் சோறு போடாது. புகழ் குடும்பத்தைக் காப்பாற்றிவிடாது. புகழ் தம்பிகளையும் தங்கையையும் வளர்த்து, படிக்க வைக்காது, வாயால் புகழுகிற மனிதர்களெல்லாம் கைகளால் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படியே செய்கிறவர் முன்வந்தாலும் அவர் காலையில் 'செக்' அனுப்பியிருந்த வியாபாரி மாதிரி நேர்மையற்றவராக இருப்பார். தவறான வழியில் பிறரிடம் உதவிபெற்று நன்றாக வாழ்வதைக் காட்டிலும் முறையான வழியில் உழைத்துச் சுமாராக வாழ்ந்தாலே போதும். வறுமையாக வாழ்ந்தாலும் செம்மையாக வாழ வேண்டும். அப்பாவுக்குப் பிடித்த வாழ்வு அதுதான்.

'பூரணி! குற்றங்களை மறைவாகச் செய்துகொண்டு வெளியார் மெச்சும்படி செல்வனாக வாழ்வதைவிடக் கேவலமான உழைப்பாலும் வெளிப்படையாக உழைத்து வெளிப்படையான ஏழையாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ சிறந்தது அம்மா!' என்று அப்பா வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்பாவுக்கு அறத்தில் நம்பிக்கை அதிகம். கடவுள் பற்றும் அதிகம். 'அறத்தின் வெற்றிக்கு அன்பு காரணமாக இருக்கிறது. அந்த அன்பில் இறைவன் இருக்கிறான்'. அதேபோல் மறத்தின் நடுவே அது நிகழக் காரணமான வலிமையில் நின்று அதை அழிக்கவும் இறைவன் ஆணை காத்திருக்கிறது. 'அனைத்தும் அனைத்தின் உட்பொருளும் இறைவன் மயம்' என்ற பரிபாடல் தத்துவத்தைத் தம்முடைய மேடை சொற்பொழிவுகளில் எல்லாம் தவறாமல் சொல்வார் அப்பா. அவருடைய வாழ்க்கை அறிவுத் துறையில் வெற்றி பெற்றதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். 'தீயில் சூடும், பூவில் மணமும், கல்லில் வைரமும், சொல்லில் வாய்மையும், அறத்தில் அன்பும், கொடுமையில் வலிமையும் நீயே' என வரும் பொருளுள்ள பரிபாடலின் நான்கு வரிகளைத் தம்முடைய படிப்பறையில் புத்தக அலமாரிக்கு மேலே பெரிதாக எழுதித் தொங்கவிட்டிருந்தார் அவர்.

இதை நினைத்ததும் அப்போதே அப்பாவின் புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் போய் நிற்க வேண்டும் போல் இருந்தது பூரணிக்கு. அவருடைய படிப்பறைக்குச் சென்றாள். அறையின் நான்கு புறமும் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் தெரியும். கண்ணாடி பீரோக்களும் அவை காணாததற்குச் சுவரில் அமைந்திருந்த அலமாரிகளும் இருந்தன. வாயிற்கதவுக்கு நேர் எதிரேயிருந்த அலமாரிக்கு மேல், உள்ளே நுழைகிறவர் கண்களில் உடனே படுகிறார் போல் அவருக்குப் பிடித்த அந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதை ஒருமுறை கண்ணால் பார்த்ததும் தூய்மையில் மூழ்கி எழுந்தது போல் புத்துணர்வு பெற்றாள் அவள்.

அப்பாவின் வருவாயில் பெரும் பகுதி புத்தகங்கள் வாங்குவதிலேயே செலவழித்துக் கழிந்தது. அவர் ஆயிரக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் புத்தகங்கள் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருந்தார். பதினைந்து நாட்களாக ஆள் நடமாடாது தூசி படிந்திருந்தது அந்தப் படிப்பறை. அதோ அந்த நாற்காலியில் உட்கார்ந்துதான் அவர் தமிழ் ஆட்சி புரிந்தார். மேஜை மேல் கிடக்கிறதே கறுப்புப் பேனா, அதுதான் அவர் எழுதியது. அதோ மேஜைக்கு அடியில் ஊதுவத்திக் கிண்ணம், கடைசி நாளன்று காலையில் அவர் கொளுத்திய வத்தியின் சாம்பற்கரி இழைகள் கூட இன்னும் அழியவில்லை. மணத்தைப் பரப்பிக் கொண்டே தான் கரைந்து வருகிற ஊதுவத்தி போல்தான் அவரும் வாழ்ந்து போய்விட்டார். 

அந்த அறையில் ஒவ்வொரு பொருளாகப் பார்க்கப் பார்க்க பூரணிக்கு துக்கம் மேலெழுந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் இதயமே வெடித்துக் கொண்டு அழுகை பீறிட்டு வரும்போல் தோன்றியது. அவள் துக்கத்தை மறைக்க முயல்கிறாள். துக்கம் அவளைத் தன்னுள் மறைக்க முயல்கிறது. மரணத்தை எண்ணிக் கலங்கும் துக்கத்துக்கு முன் துணிவும் நம்பிக்கையும் எம்மாத்திரம்?

குறைந்த வாடகையில் குடியிருக்க இடம் மாறினால் அவ்வளவு புத்தகங்களையும் எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. மாதம் ஐம்பது ரூபாய் வீதம் ஆறுமாத வாடகைப் பணம் முந்நூறு ரூபாயைக் கொடுத்து முடித்துவிட்டால் அல்லவா வேறு இடம் பற்றிச் சிந்திக்க வேண்டும். கல்லூரியிலிருந்து அப்பாவின் 'சேமநிதி' (பிராவிடண்ட் பண்டு) கொஞ்சம் வரும். அது அவ்வளவு விரைவில் கிடைக்காது. புதிதாகப் பார்க்கிற வீட்டையும் இவ்வளவு பெரிதாக இவ்வளவு வாடகையில் பார்க்க முடியாது. கையில் எட்டணாக் காசையும் மனத்தில் வேலை தேடும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டுதான் தன் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறாள் அவள்.

மூத்த தம்பி ஐந்தாம் பாரமும், அடுத்தவன் மூன்றாம் பாரமும் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களுடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிகிற வரையாவது அவள்தான் வளர்த்துக் காப்பாற்றியாக வேண்டும். மங்கையர்க்கரசியையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டும். வருகிற தையோடு அவளுக்கு ஆறு வயது நிறைகிறது. ஆரம்பப் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது.

அப்பாவின் மறைவுக்குப் பின் தன்னை நம்பியிருக்கும் பொறுப்புகளை மனதில் ஒழுங்குபடுத்தி வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள் பூரணி. இவற்றுக்கெல்லாம் உடனே ஏதாவதொரு வழி செய்தாக வேண்டும். பிரச்சினைகள் வாயிற்படியில் வந்து நின்றும் கதவை அடைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து இருக்க முடியாது. தைரியத்தோடும், நம்பிக்கையோடும் அவள் தெருவில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் கால்களில் அழுக்குப்படுமே என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது! மனத்தில் மட்டும் அழுக்குப் படாமல் பார்த்துக் கொண்டால் போதும்.

நாவுக்கரசனுக்கும் சம்பந்தனுக்கும் பசுமலையில் பள்ளிக்கூடம். இரண்டுபேரும் நடந்து போய்விட்டு நடந்தே திரும்பி வருவார்கள். அதனால் இடைவேளைக்கு வீட்டுக்குச் சாப்பிட வருவதில்லை. காலையில் போகும்போதே ஏதாவது கையோடு கட்டிக் கொடுத்து அனுப்பிவிடுவாள் பூரணி. மாலையில் அவர்கள் வீடு திரும்ப நாலரை மணிக்கு மேலாவது ஆகும்.

அதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி சுமாருக்காவது புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம். 'பிராவிடண்டு பண்டு' பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு 'வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக'த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார். அவரைப் பார்ப்பதிலும் ஒரு பயனும் இல்லை. வழக்கம் போல் பஞ்சப் பாட்டு தான் பாடுவார்கள். ஆனாலும் பார்த்துக் கண்டிப்பு செய்ய வேண்டும். வேலைக்காக யாராவது இரண்டு மூன்று பேரை பார்க்க வேண்டும். வீடு கூட மதுரையில் எங்காவது நாலைந்து ஒண்டுக் குடித்தனங்கள் சேர்ந்திருக்கின்ற இடத்தில் பார்க்கலாம். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அவ்வளவு பெரிய வீட்டுக்குக் கொடுத்த வாடகையை மதுரையில் இரண்டு அறைகள் ஒண்டுக் குடியிருப்புக்குக் கொடுக்க வேண்டியிருக்குமே. தம்பிகளை வேறு நடு ஆண்டில் பசுமலைப் பள்ளிக்கூடத்தில் இருந்து மாற்றி மதுரையில் சேர்க்க வேண்டும். எனவே மதுரைக்கே குடிபோவது சாத்தியமில்லை என்று அவள் நினைத்தாள். மதுரையில் வீட்டு வாடகையை அவளால் கொடுத்துக் கட்டுப்படியாக முடியுமா?

மதுரையில் மிக உயரமானவை கோபுரங்களும் வீட்டு வாடகையும் தான். அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வீடுகள் மலிவாகக் கிடைக்கமாட்டா. பிச்சைக்காரர்களும், சைக்கிள் ரிக்ஷாக்களும் தான் மலிவாகக் கிடைக்கிற அம்சங்கள். இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குச் செலவும் நிம்மதிக் குறைவும் அதிகமாக இருப்பதுபோல் மதுரை என்கிற அழகு இரண்டு மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்து தொல்லைப்படுற நிலை வெள்ளைக்காரன் காலத்துக்குப் பின்னும் போன பாடில்லை.

மணி இரண்டரை ஆகியிருந்தது. பூரணி கிணற்றடிக்குப் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். புடவை மாற்றிக் கொண்டு திலகம் வைத்துக் கொள்வதற்காகக் கண்ணாடி முன் நின்றபோது குழந்தை தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள்.

சந்தனச் சோப்பில் குளித்த முகம் அப்போதுதான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் புதிய மலர்ச்சி காட்டியது. சித்திரக்காரன் தூரிகையால் அநாகரிகமாக இழுத்துவிட்ட கறுப்புக் கோடுகள் போல் காதுகளின் ஓரத்தில் இரண்டு கரும்பட்டுச் சுருள் மயிரிழைகள் சிவப்பு நிறத்தின் நடுவே எடுப்பாகத் தெரியும் பூரணிக்கு. அழகிய குமிழம்பூ மூக்கு மேலே முடிகிற இடத்தில் புருவங்களின் கூடுவாயில் பெரிதாக ஒரு குங்குமப்பொட்டு வைத்து அதற்கு மேலே சிறிதாக ஒரு கருஞ்சாந்துப் பொட்டு வைத்துக் கொள்வாள் அவள். அப்பா சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அவளுடைய உடம்பை மூளியாக வைத்துவிட்டுப் போய்விடவில்லை. புன்னகையோடு சில பொன்னகைகளும் இருந்தன அவளுக்கு. பொன் வளையல்கள் இருந்தாலும் கை நிறைய கருப்பு வளையல்கள் அணிந்து கொள்வதில் அவளுக்கு மிகவும் பிரியம். இழைத்த தங்கத்தில் வரி வரியாகக் கரும்பட்டுக் கயிறு சுற்றின மாதிரிச் செழிப்பான அவளுடைய வெண்சிகப்புக் கைகளில் அந்தக் கரிய வளையல்கள் தனிக்கவர்ச்சி தரும். 

நகைப்பெட்டிக்குள் கிடந்த பொன் வளையல்கள் இரண்டையும் ஓர் அட்டைப் பெட்டிக்குள் வைத்துக் கையோடு எடுத்துக் கொண்டாள். புத்தகக் கடைக்காரரும் கையை விரித்து விட்டால், பணத்துக்கு எங்கே போவது? வாடகை பாக்கி கொடுப்பதற்கும், வேலை கிடைக்கிறவரை வீட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்வதற்கும் கையில் ஏதாவது வேண்டுமே. வளையல்களைப் போட்டுப் பணமாக மாற்றிக் கொள்ள நினைத்தாள் அவள்.

"அக்கா! உனக்கு இந்தப் பொட்டு ரொம்ப நல்லாயிருக்கு. இனிமேல் தினம் இது மாதிரி வச்சுக்கணும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் மங்கையர்க்கரசி. அப்பா போன துக்கத்தைக் கொண்டாட வீட்டிலேயே அடைந்து கிடந்த நாட்களில் பூரணி குளிப்பதற்கு அதிகமாகத் தன்னை எந்த அலங்காரமும் செய்து கொண்டதில்லை. இன்று திடீரென்று அக்காவின் திலகம் குழந்தைக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது போலும்!

"ஆகட்டும் மங்கை! தினம் இதுமாதிரி பொட்டு வைச்சுப்பேன். நான் சொல்கிறபடி நீ இப்போது கேட்க வேண்டும். நான் அவசரமாக மதுரைக்குப் போய்விட்டு வரவேண்டியிருக்கிறது. உன்னை ஓதுவார் தாத்தா வீட்டிலே விட்டுவிட்டுச் சாவியையும் கொடுத்துவிட்டுப் போகிறேன். நீ அண்ணன் பள்ளிக்கூடத்திலேர்ந்து வரவரைக்கும் அங்கே சமர்த்தாக இருக்க வேண்டும். முரண்டு பிடிக்கக்கூடாது; அழவும் கூடாது."

"நானும் உங்ககூட மதுரைக்கு வரேனக்கா?" சொல்லிவிட்டு குழந்தை கண்களை அகல விழித்துக் கெஞ்சுகிற பாவனையில் பூரணியின் முகத்தைப் பார்த்தாள்.

"நீ வேண்டாம் கண்ணு. உன்னால என்னோடு அலைய முடியாது. நான் போயிட்டு சுருக்க ஓடி வந்துவிடுவேன். கேட்டுக்கிட்டு அவங்க வீட்டிலே இரு." குழந்தை ஒருவழியாக இருக்க ஒப்புக் கொண்டுவிட்டது போல் அடங்கிவிட்டாள். பூரணிக்குத் தலை பின்னிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. அப்படியே எண்ணெய் தடவி வாரி முடிந்து கொண்டாள். கருகருவென்று முழங்கால் வரை தொங்குகிற பெரிய கூந்தல் அவளுக்கு. இரட்டைச் சவுரி வைத்தும் போதாமல் நாய் வால்போலச் சிறிய பின்னல் போட்டுக்கொள்ளும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குப் பூரணியிடம் ஒரே பொறாமை. காமாட்சி ஓதுவார் தாத்தாவின் பேத்தி. அவளுக்குப் பூரணியைவிட இரண்டு மூன்று வயது குறைவு. சிறு வயதிலேயே இருவரும் நெருங்கிப் பழகின தோழிகள். இரண்டு வீடுகளும் ஒரே ஊரில் ஒரே தெருவில் எதிர் எதிரே இருக்கிற உறவில் பிறந்த ஒரு நெருக்கமும் - அந்த குடும்பங்களுக்கு இடையே உண்டு.

பூரணி, வீட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு குழந்தை மங்கையர்க்கரசியோடு எதிர் வீட்டுக்குப் போய் நுழைந்தாள். 

வாசல் திண்ணையில் சிவப்பழமாக உட்கார்ந்துகொண்டு அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி இல்லாமல் தேவாரப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த கிழவர் நிமிர்ந்தார். இந்தக் கிழவர் மேல், அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் பெரு மதிப்பு வைத்திருந்தார்.

"அடடே! பூரணியா... வா, அம்மா! எங்கேயோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே! மதுரைக்கா?" கிழவருக்குக் கணீரென்று வெண்கல மணியை நிறுத்தி நிறுத்தி அடிப்பது போன்ற குரல்.

"ஆமாம் தாத்தா! குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பிகள் வந்தால் சாவியைக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்." பூரணி சாவியை அவருக்குப் பக்கத்தில் வைத்தாள். குழந்தை தானாகவே உரிமையோடு கிழவரின் மடியின்மேல் போய் உட்கார்ந்துகொண்டு "இன்னிக்கு நெறையப் புது கதையாய்ச் சொல்லணும் தாத்தா... பழைய கதையாகச் சொல்லி, 'அம்மையார்க் கிழவி', 'குருவி காக்காய்னு' ஏமாத்தப் படாது" என்று தொணதொணக்கத் தொடங்கிவிட்டாள். வாசலுக்கு நேரே உள்ள கூடத்தில் காமாட்சியும் அவள் பாட்டியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

"பூரணி! இப்படிக் கொஞ்சம் உள்ளே வந்துவிட்டுப் போயேன்" என்று குரல் கொடுத்தாள் காமாட்சி.

"அப்புறம் வருகிறேன் காமு, இப்போது நான் அவசரமாகப் போகவேண்டும்" என்று கிளம்பினாள் பூரணி.

"அப்படி என்ன அவசரம் அம்மா?" என்று கிழவர் குறுக்கிட்டார்.

தந்தைக்கு ஒப்பான அந்தக் கிழவரிடம் தன் துன்பங்களைச் சொல்வதில் தவறில்லை என்று எண்ணினாள் பூரணி. வீட்டுக்காரர் காலி செய்துவிட்டுப் போகச் சொல்வதையும் அவரிடம் கடன்பட்டிருப்பதையும் வீட்டின் ஏழ்மையையும் உடைத்துச் சொல்லிவிடலாமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு நா எழவில்லை. மனமும் நாவும் நெகிழ்ந்துவிட இருந்த அந்தச் சமயத்தில் தந்தையின் இரத்தத்தில் ஊறிவந்த பண்பு காப்பாற்றியது. நம்முடைய ஏழ்மையையும் துன்பங்களையும் கூடுமானவரை நம்மைக் காட்டிலும் ஏழ்மையும் துன்பமும் உள்ளவர்களிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது. குறைந்த வருவாயும் நிறைந்த மனிதர்களும், செலவுகளும் உள்ள ஓதுவார் குடும்பத்துக்கு நம்முடைய துன்பங்களும் தெரிய வேண்டியது அநாவசியம் என்று அவளுக்குப்பட்டது. தனக்கு வந்த துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாமே ஏற்றுக்கொண்டு சமாளிப்பதுதான் நாகரிகம் என்பது அப்பாவின் கருத்து.

அவற்றை அடுத்தவர்களுக்குத் தெரியும்படி நெகிழவிட்டு அனுதாபம் சம்பாதிப்பது கூட அநாகரிகம் என்கிற அளவு தன்மானமுள்ளவர் அப்பா. 

பூரணி அப்பாவின் பெண். அதே தன்மானமுள்ள இரத்தம் தான் அவளுடைய உடலிலும் ஓடுகிறது. "ஒன்றுமில்லை தாத்தா, அப்பாவின் 'பிராவிடண்டு பண்டு' விஷயமாக கல்லூரி முதல்வரைப் பார்த்துச் சொல்ல வேண்டும். வேறு ஒன்றும் இல்லை" என்று நல்லதை மட்டும் அவரிடம் சொல்லி முடித்தாள்.

ஒளியும் எழிலும் நிறைந்த செங்கமலப்பூ உயரமான கொடியோடு ஒல்கி, ஒல்கித் தென்றலில் அசைந்தாடிக் கொண்டு நடப்பதுபோல் பூரணி தெருவில் செல்லும்போதுதான் எத்தனை கண்கள் அவளைப் பார்க்கின்றன! சந்நிதித் தெருவின் வடக்கில் வந்து, மயில் மண்டபத்தைக் கடந்து போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்பில் அவள் பஸ்ஸுக்காக நின்றாள். எதிர்ப்புறம் தென்கால் கண்மாயின் கரையில் துணி வெளுப்போர் கும்பல் கூடியிருந்தது. சலவை செய்வோர் உலர்த்திய பலநிறத் துணிகள் உயர்ந்த மண்கரை மேல் நிறங்களின் கலவைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தன. கண்மாயின் நீர்ப்பரப்புக்கு அப்பால் வடமேற்கே நெல் வயல்களும், கரும்புத்தோட்டங்களும், கொடிக்கால்களும், தென்னைக் கூட்டமுமாக அழகு, திரைகட்டி எழுதியிருந்தது. அந்த நேரத்தில் அந்த 'ஸ்டாப்'பில் பூரணி ஒருத்திதான் தனியாக நின்று கொண்டு பஸ்ஸை எதிர்பார்த்தாள். தெற்கேயிருந்து சென்ட்ரல்-திருப்பரங்குன்றம் ஐந்தாம் நம்பர் பஸ் வந்து நின்றது. அவள் ஏறிக்கொண்டாள். கண்டக்டர் 'வாங்க அம்மா!' என்று முகம் மலர வணக்கம் தெரிவித்தார். அப்பாவுக்கு இப்படி எத்தனையோ பழைய மாணவர்கள். அடிக்கடி அப்பாவோடு அவளையும் பார்த்திருக்கிற காரணத்தால் எல்லோரும் அவளை இன்னாரென்று தெரிந்துகொண்டிருந்தனர். முழுமையாக இருப்பு என்ற பேரில் கைவசம் இருந்த அந்த எட்டணாவைக் கொடுத்துக் கல்லூரி நிலையத்துக்கு ஒரு டிக்கெட்டும், பாக்கியும் வாங்கிக் கொண்டாள். கண்டக்டர் அருகில் வந்து நின்று அவளிடம் அப்பாவின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்தார். அவளும் ஏதோ பதில் சொன்னாள்.

கல்லூரியின் முதல்வர் அவளை அன்போடு வரவேற்று ஆதரவாக மறுமொழி அளித்து அனுப்பினார். அப்பாவின் பிராவிடண்ட் பண்டு பணம் இயன்ற அளவு விரைவில் கிடைக்க உதவுவதாகவும் கூறி அனுப்பினார். அங்கிருந்து புது மண்டபம் வரை நடந்தே போனாள். தெருவில் போவோரும் வருவோரும் முறைத்துத்தான் பார்க்கிறார்கள். மனிதர்களுக்குத்தான் எத்தனை விதமான பார்வை! வண்டியிலோ ரிக்ஷாவிலோ போனால் இப்படி யாரும் விழுங்குவதுபோல் பார்க்க மாட்டார்கள். ஆனால் வண்டிக்காரனும் ரிக்ஷாக்காரனும் சும்மாவா ஏற்றிக் கொண்டு போகிறான்? கையில் இருக்கிற மொத்த ஆஸ்தி ஐந்து அணா. திரும்பிப் போகப் பஸ் சார்ஜ் மூன்றணா ஆகுமே! ஏழ்மையை வெளிக்காட்டி விடுவது தப்பே இல்லை. பொய்யாக நடிப்பது தான் தப்பு.

ஆயிரமாயிரம் சின்னத்தனமான மனிதர்களின் கண்களில் மிதந்து கொண்டு, பூரணி என்கிற அழகு - பழமை வாய்ந்த மதுரை நகரின் தெருக்களில் பூம்பாதங்கள் கொப்பளித்துக் கன்றிப் போகும்படி வெறுங்கால்களால் நடந்து கொண்டிருந்தது. 

புது மண்டபத்தின் தெருக்கோடியில் புகுந்து கவனமின்றியோ அல்லது வேண்டுமென்றோ இடிப்பதுபோல் வரும் ஆண்கள் கூட்டத்துக்குத் தப்பி மெல்ல விலகி நடந்து அப்பாவின் பதிப்பாளர் முன் போய் நின்றாள் பூரணி.

"வாங்க தங்கச்சி; ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேன். நீங்க எதுக்கு சிரமப்படணும்" என்று தம்முடைய வயதின் உரிமையை நிலைநாட்டுவதுபோல் விளித்து வரவேற்றார் அவர்.

பூரணி நெருப்புப் பிழம்புபோல் அந்தக் கும்பலின் நடுவே நின்றுகொண்டு அவரை உறுத்துப் பார்த்தாள். அந்தப் பார்வைக்குக் கடைக்காரனிடம் பதில் இல்லை. அவளுடைய கண்கள் அபூர்வமானவை; கூர்மையானவை. அவற்றுக்குத் தூய்மை அதிகம்.

"தங்கச்சிக்கு கோபம் போலிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்க முயன்றார் அவர்.

"எனக்கு வேண்டியது இந்தச் சிரிப்பும் இந்த மழுப்பல் வார்த்தைகளும் இல்லை. வியாபாரியின் சிரிப்பில் குற்றம் மறைக்கப்படுகிறது. மறைந்து கொள்கிறது. அப்பாவின் புத்தகங்களுக்கு மூன்று வருட இராயல்டித் தொகை உங்களிடம் பாக்கி நிற்கிறது. கேட்டால் புத்தகம் போதுமான அளவு விற்கவில்லை என்று பொய் சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லையானால் நான் சட்டப்படி ஏதாவது செய்துதான் ஆகவேண்டும்!" என்று பூரணி கொதிப்போடு முறையிட்டாள்.

அவ்வளவு பெரிய கும்பலுக்கு நடுவில் ஒரு பெண் பேசி மானத்தை வாங்கிவிட்டதே என்ற உறைப்பு இருந்தாலும் விநயமாகச் சமாளித்தார் பதிப்பாளர். "இந்த மாத முடிவுக்குள் கணக்கெல்லாம் பார்த்து ஏதாவது செய்கிறேன் அம்மா!" என்று விடை கொடுத்ததுபோல் கைகூப்பினார். அந்த கைகூப்புதலுக்கு 'இனிமேலும் நின்று, பேசிக்கொண்டிருக்கக்கூடாது, போய்விடு' என்பது அர்த்தம்போலும்!

பூரணி அங்கிருந்து வெளியேறினாள். அப்பாவே மனம் வெறுத்துச் சலித்துப்போய், "அவன் பணம் தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி" என்று கைவிட்ட ஆள் அந்தப் பதிப்பாளர். "அறிவைப் பெருக்குகிற புத்தக வெளியீட்டுத் தொழிலில், பணத்தைப் பெருக்குகிற மனமுள்ள வியாபாரிகள் ஈடுபட்டு, எழுதுகிறவன் வாயில் மண் போடுகிறார்களே" என்று வேதனையோடு கூறுவார் அப்பா.

புதுமண்டபத்துக்கு எதிரே மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் அழுக்குப் படாத உண்மையாய் மனித உயரத்தைச் சிறிதாக்கிக் கொண்டு பெரிதாய் நின்றது. அதே இடத்தில் தெருவில் இரண்டு ஓரமும் பழைய பூட்டுச் சாவி குடை ரிப்பேர்க் கடைகள் தெருவை அடைத்துக் கொண்டிருந்தன. மாலை நேரமாகிவிட்டாலே அந்த இடத்துக்குத் தனிக் கலகலப்பும் அழகும் வந்துவிடும். பழைய காலத்தில் அதற்கு 'அந்திக்கடை வீதி' என்றே பெயர் இருந்ததாக அப்பா சொல்லுவார்.

அந்தக் கோபுரத்தையும் பெரிய கோயிலையும் ஆரவாரமும் நறுமணங்களும் மிகுந்த அம்மன் சந்நிதி முகப்பையும் கடந்து நடந்தாள் பூரணி. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் ஆயிரம் செயற்கைகள் வந்து கலந்தாலும், மதுரையின் தெய்வீகப் பழமையை யாராலும் மாற்றிவிட முடியாதென்று தோன்றியது பூரணிக்கு. அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தாள். பூக்கடைகளும் சந்தனமும் மணத்தன. வளையல் கடைகள் ஒலித்தன. ஜீவகோடிகள் நுழைந்து புறப்படும் பிரகிருதி வாசலைப் போல் அந்த வாசலில் புனிதமான ஆரவாரம் குறையாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. பொற்றாமரைக் குளத்தைக் கடந்து அம்மன் சந்நிதிக்குள் போய் தரிசனத்தை முடித்துக் கொண்டு தெற்குக் கோபுரவாயில் வழியாகத் தெற்காவணி மூலவீதியை அடைந்தாள் பூரணி. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துக் கொண்டு கூட்டமில்லாத ஒரு நகைக்கடைக்குள் நுழைந்தாள்.

நான்கு பவுன் வளையல்கள். ஏறக்குறைய முந்நூறு ரூபாய்க்கும் அதிகமாகப் பழைய விலைப் பொருளாக எடுத்துக் கொண்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள். பேசாமல் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்காரர் வீட்டுக்குப் போனாள். ஆறுமாத வாடகைப் பாக்கியைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டு, "இந்த மாத முடிவுக்குள் காலி செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்தாள். வளையல் போட்ட பணத்தில் ஏழு ரூபாயும் பழைய ஐந்து அணாவும் மடியில் இருந்தன.

அப்பாவுக்கு வேண்டியவரும் நகரத்தில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருமான பிரமுகர் ஒருவருடைய வீடு பக்கத்துத் தெருவிலே இருந்தது. அவர் நேர்மையானவர். போய்ப் பார்த்துத் தன் நிலையைச் சொன்னால் ஏதாவது வேலைக்கு வழி செய்வார் என்று நம்பினாள் பூரணி. ஆனால் அங்கேபோய் விசாரித்ததில் அவர் வெளியூர் போயிருப்பதாகவும், வர இரண்டு நாட்களாகுமென்றும் தெரிந்தது. வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பினாள்.

மறுபடியும் சென்ட்ரலுக்குப் போய் பஸ் ஏறி அவள் திருப்பரங்குன்றத்தை அடைந்தபோது இருள் மயங்கும் போதாகிவிட்டது. குன்றின் உச்சியிலிருந்து மசூதிக்கருகில் நீல மின்விளக்கு ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தது. தெருவில் கோயிலுக்குப் போகும் கூட்டம் மிகுந்திருந்தது. தெருவில் தன் வீட்டு வாசலில் புத்தகமும் கையுமாக நிறையப் பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூடி நிற்பதைப் பூரணி கண்டாள். குதிரை வண்டி ஒன்று நின்றிருந்தது. ஓதுவார் தாத்தாவும் இருந்தார். 

பூரணி வீட்டை நெருங்கியதும் ஓதுவார்த் தாத்தா, கவலையும் பரபரப்பும் நிறைந்த முகத்தோடு அவளை எதிர்கொண்டு வந்து சொன்னார். "உனக்கு இருக்கிற கவலையும் துக்கமும் போதாதென்று சின்னத்தம்பி சம்பந்தன் பள்ளிக்கூடத்தில் மரமேறி விழுந்து கையை வேறு ஒடித்துக் கொண்டு வந்திருக்கிறான் அம்மா..."

பூரணி பையன்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வேகமாக ஓடினாள்.

 

3

 

"ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின்

ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்

வீடுகின்றன என்செய்வோம் இனி அவ்

வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே"

                                                                                                -நற்றிணை

விளக்கம்
 

துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. "தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன. குப்பைகளையும் இழிவும் தாழ்வுமான நாற்றக் கழிவுப் பொருள்களையும் உரமாக எடுத்துக்கொண்டு மணமிக்கப் பூவாகப் பூத்து தெய்வச் சிலையின் தோளில் மாலையாக விழும் உயர்ந்த பூச்செடி போல் ஏழ்மையும் துன்பமும் உனக்கு உரம் கொடுத்து உன்னை மணம் கமழ வைக்கப் போகின்றன. நீ வாழ்க்கை வெள்ளத்தோடு இழுபட்டுக் கொண்டு போகும் கோடி கோடிப் பெண்களில் ஒருத்தி அல்லள். பெண்ணில் ஒரு தனி வாழ்க்கை நீ; வாழ்க்கையில் ஒரு தனிப் பெண் நீ. வாழ்க்கை வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடப் போகிறவள் நீ.

துன்பங்களை மிக அருகில் சந்திக்கும் போதெல்லாம் பூரணியின் இதயத்தில் இந்தக் குரல் ஒலித்தது. இது யாருடைய குரல்? எதற்காக ஒலிக்கிற குரல் என்பதை யாரால் அறிய முடியும்? விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல் ஆன்மாவோடு ஒட்டி வந்த தொனி அது. வாழ்க்கை மலர மலர அதுவும் மலரலாமோ என்னவோ? மருக்கொழுந்துச் செடியும் துளசிச் செடியும் எப்படி மணக்கும் என்பதை அவை வளர்ந்து பெரிதான பின்பு கண்டு பிடிக்கலாமென்று காத்திருக்க வேண்டாமே! முளைத்து வேர்விடும் போதிலேயே தத்தமக்குரிய மணத்தையும் பரப்பும் சிறப்பும் வாய்ந்த அந்தச் செடிகளைப் போல் சில பேருக்கு உருவாகும் போதே இலட்சியம் தானாக அமைந்துவிடுகிறது.

பூரணி துளசிச் செடி போன்றவள். முளைக்கும் போதே மணந்தவள். துளசியைப் போல அகமும் புறமும் தூய்மையானவள், புனிதமானவள். உள்ளும் புறமும் தமிழ்ப் பண்பு என்னும் மணம் கமழுகிறவள். துன்பங்களை வரவேற்று ஆள்கிற ஆற்றல் அவளுக்கு உண்டு.

பூரணி உள்ளே ஓடிச்சென்று பார்த்தபோது தம்பி சம்பந்தனைக் கூடத்தில் பாய் விரித்துப் படுக்கவிட்டிருந்தார்கள். சுற்றிலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கூட்டம். பெரிய தம்பி திருநாவுக்கரசு என்ன செய்வது என்று தோன்றாமல் சம்பந்தனின் தலைப் பக்கம் நின்று விழித்துக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய தவறைச் செய்து, தவற்றில் சிக்கிக் கொண்டு படுத்துவிட்டது போல் சம்பந்தன் விக்கலும் விசும்பலுமாக அழுதுகொண்டிருந்தான். குழந்தை மங்கையர்க்கரசியும் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

பூரணி பக்கத்தில் உட்கார்ந்து, பாயில் துவண்டு கிடந்த தம்பியின் இடது கையைத் தூக்கித் தாங்கினாற்போல் நிறுத்த முயன்றாள். கை நிற்கவில்லை. நடுவில் முறித்த இளம் வாழைக் குருத்து வெயிலில் வாடி விழுகிற மாதிரி துவண்டு விழுந்தது. அக்காவைப் பார்த்ததும் சம்பந்தனின் அழுகை அதிகமாகிவிட்டது.

"சிறுபிள்ளைக் கைதானே அம்மா! மட்டை வைத்துக் கட்டினால் ஒன்றுகூடிவிடும். நாலு வீடு தள்ளி ஒரு நாட்டு வைத்தியர் இருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லு" என்று ஓதுவார் தாத்தா பூரணிக்குப் பின்புறம் வந்து நின்று கொண்டு சொன்னார். பூரணி, திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள். திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டுவர வேக வேகமாக ஓடினான்.

"அக்கா, நான் ஒண்ணுமே செய்யல அக்கா. பாலுங்கிற முரட்டுப் பையன் ஒருத்தன் எங்ககூடப் படிக்கிறான். அவன் மாடியிலிருந்து என் கணக்கு நோட்டைப் பிடுங்கி கீழே வீசியெறிந்துவிட்டான். மாடிக்கு நேரே கீழே ஒரு பெரிய மாமரம் இருக்கு. அந்த மரத்துக் கிளைக்கு நடுவே நோட்டு விழுந்து சிக்கிடுச்சு. அதை எடுக்கிறதுக்காக ஏறினேன். ஏறுகிறப்போ கால் இடறி விழுந்துவிட்டேன்" என்று அழுகைக்கிடையே நடந்ததைச் சொல்லி குற்றமின்மையை அக்காவுக்கு புலப்படுத்தினான் சம்பந்தன். மற்ற மாணவர்களை விசாரித்தாலும் 'பாலு' என்கிற முரட்டுப் பையனைப் பற்றி கடுமையாகத்தான் சொன்னார்கள். நோவும் வேதனையுமாகக் கை எலும்பு பிசகி விழுந்து கிடக்கும் அந்தச் சமயத்தில்கூடத் 'தவறு தன்னுடையதில்லை' என்று அக்காவுக்கு விளக்கிவிட வேண்டுமென அவன் துடித்துக் கொண்டிருந்த ஆர்வத்தைப் பூரணி குறிப்பாகக் கவனித்துக் கொண்டாள். 

திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரோடு வந்தான். பூரணி சற்று விலகினாற்போல் எழுந்து நின்றுகொண்டாள். வைத்தியர் அருகில் அமர்ந்து முழங்கையை எடுத்துத் தொட்டு அமுக்கிப் பார்த்தார். ஓதுவார்க் கிழவர் அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.

"ஒன்றும் பயமில்லை. விரைவில் சரியாகிவிடும்" என்று சொல்லிவிட்டு மூங்கில் பட்டைகளைக் கொடுத்துக் கையை நிமிர்த்திக் கட்டிக் கோழி முட்டைச் சாறு நனைந்த துணியால் இறுகிச் சுற்றுப் போட்டு முடித்தார் வைத்தியர். "கையை ஆட்டாமல் அசையாமல் வைத்துக் கொண்டிரு தம்பி, கொஞ்ச நாட்களில் எலும்பு ஒன்று கூடிக் கை முன் போல ஆகிவிடும்" என்று சம்பந்தனிடம் அன்போடு சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வைத்தியர். ஓதுவார்க்கிழவர் பூரணியின் காதருகில் ஏதோ சொன்னார். அவள் ஓடிப்போய் ஒரு தட்டில் நான்கு ரூபாய்களை வைத்து வைத்தியரிடம் மரியாதையாக நீட்டினாள்.

வைத்தியர் சிரித்தார். "உன்னிடம் வாங்கி எனக்கு நிறைந்துவிடாது அம்மா. அழகியசிற்றம்பலத்துக்கு நான் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை நீயே வைத்துக்கொள். பையனுக்கு கை சரியான பின் அவசியமானால் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்" என்று அவள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டார் அவர்.

அப்பாவின் பெருமை அந்த வீட்டை ஆண்டுகொண்டு இருப்பதை பூரணி உணர்ந்தாள். காசையும் பணத்தையும் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்து பெருமைப்பட விரும்பும் மனிதர்களையும் உறவையும் நான்குபுறத்தும் தேடி வைத்துப் போயிருக்கிறார் அவர். பணம் வாங்க மறுக்கும் வைத்தியர், தன் குடும்பம் போல் எண்ணிச் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஓதுவார், தனி அனுதாபத்தோடும் அன்போடும் உதவக் காத்திருக்கும் அண்டை அயலார்கள், இவையெல்லாம் அப்பாவின் நினைவாக எஞ்சியிருக்கிற பெருமைகளல்லவா?

பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூட்டம் போகிற வழியாயில்லை. "உங்களுக்கெல்லாம் வேடிக்கையாயிருக்கிறதா? அவன் கையை ஒடித்துக்கொண்டு வந்து விழுந்து கிடக்கிறான். கூட்டம் போடாமல் வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்" என்று ஓதுவார்க் கிழவர் கூப்பாடு போட்ட பின்பே பிள்ளைகள் கூட்டம் குறைந்தது. குழந்தை மங்கையர்க்கரசிக்கு நடந்தது என்னவென்று தெரியாவிட்டாலும் "அண்ணன் சம்பந்தனுக்கு ஏதோ பெரிய துன்பம் வந்திருக்கிறது. இல்லாவிடில் பாயில் படுக்கவிட்டு வைத்தியரெல்லாம் கட்டுப்போடமாட்டார். இத்தனை பேர் கூடமாட்டார்கள்" என்று மொத்தமாக ஏதோ துக்கம் புரிந்தது. அதனால் அந்தக் குழந்தையின் அழுகை இன்னும் ஓயவில்லை. எதிர்வீட்டு ஓதுவார்க் கிழவர் விடைபெற்றுப் புறப்பட்டார். "நான் வீட்டுக்குப் போகிறேன் பூரணி. தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்; ஏதாவது வேண்டுமானால் என்னைக் கூப்பிடு; வாசல் திண்ணையில்தான் படுத்துக் கொண்டிருப்பேன். எதை நினைத்தும் துக்கப்படாதே அம்மா! இன்னாருடைய பெண் எனச் சொன்னாலே மற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன் வருகிற அத்தனைப் பெருமையை அப்பா தனக்குத் தேடி வைத்துப் போயிருக்கிறார். நீ ஏன் அம்மா கலங்க வேண்டும்?" என்று போகும்போது சொல்லிவிட்டுத் தான் போனார் அவர்.

'எல்லோரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். அப்பாவின் பெருமை இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடுபோல் மரணத்துக்குப் பின் இலாபம் சம்பாதிக்கிற உயில் வியாபாரமா என்ன? பண்புள்ளவன் அடைந்த புகழைப்போல் பொதிந்து வைத்துப் போற்ற வேண்டிய பெருமையல்லவா அது? நான் வசதிகளை அடைவதற்காக அப்பாவின் பெருமையை செலவழித்து வீணாக்க வேண்டிய அவசியமில்லையே! என்னுடைய கைகளால் உழைத்து நான் வாழ முடியும். என் உடன்பிறப்புகளையும் வாழ வைத்து இந்தக் குடியை உயர்த்த முடியும். சிறிய ஆசைகளை முடித்துக்கொள்வதற்காக அப்பாவின் பெருமையைச் செலவழிக்க நான் ஒரு போதும் முற்படமாட்டேன். அப்பாவின் பெருமையில் மண்ணுலகத்து அழுக்குகள் படிய விடமாட்டேன்' என்று எண்ணி நெட்டுயிர்த்தாள் பூரணி. இவற்றை நினைக்கும்போது அவளுடைய முகத்திலும் கண்களிலும் ஒளியும் உறுதியும் தோன்றின.

"அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?" அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன.

"இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்" என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த மணத்தையும் கொண்டு செய்தது போன்ற உடம்பு குழந்தை மங்கையர்க்கரசிக்கு. குழந்தையின் உடலைத் தீண்டும் போதும், சிரிப்பைக் காணும்போதும் சின்னஞ்சிறு பூக்கண்களை அருகிலே பார்க்கும்போதும் வாழ்க்கையில் சத்தியத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்கிற மாதிரி ஒரு தூய நம்பிக்கை உண்டாகிறது. அப்பா இருந்தால் கோயிலிலிருந்து வீடு திரும்புகிற நேரம் இது. மாலையில் தென்புறம் திருமங்கலம் சாலையில் நெடுந்தூரம் காலார நடையாகப் போய்விட்டுத் திரும்பும்போது, கோயிலில் முருகனையும் வணங்கிவிட்டு ஏழு ஏழரை மணி சுமாருக்கு வீடு திரும்புவார் அவர். இரவில் கன உணவாகச் சோறு சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. சோறு உண்டால் விரைவில் உறக்கம் வந்து விடுமென்று கோதுமை தோசை, இட்லி மாதிரி குறைந்த உணவாக சிறிது உண்பார். அதிக நேரம் உறக்கம் விழித்தும் படித்துக் கொண்டிருப்பார். அப்பாவின் பழக்கமே வீட்டில் எல்லோருக்கும் அமைந்து விட்டது.

பூரணி அடுப்பு மூட்டி இட்லிக் கொப்பரையை வைத்தாள். அந்த வீட்டில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு மூலையிலும் மறந்துவிடாமல், மறைத்து விடாமல், அப்பாவின் ஞாபகம் இருந்தது. பழக்கத்தில் உறைந்துவிட்ட உயிரின் உறவான நினைவுகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? மனிதர்களைப் போல் அவர்களைப் பற்றிய நினைவுகளுமா விரைவில் அழிகின்றன. அப்படி அழியுமானால் பின்பு இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?

காலம் எதைத்தான் அழிக்காமல் நிலைக்கவிடப் போகிறது? நிற்காமல் ஓடுகிற சூரியனும், அவனைத் துரத்திக் கொண்டு ஒவ்வொன்றாய் பின் தொடரும் நாட்களும் உலகில் எதையோ ஓடி ஓடி தேய்த்துக் கொண்டிருக்கின்றனவே! அல்லது தேய்ந்து கொண்டிருக்கின்றனவே!

ஒரு தட்டில் நாலைந்து இட்லிகளை எடுத்துக் கொண்டு போய் சின்னத்தம்பி சம்பந்தனுக்கு அவன் படுத்துக் கொண்டிருந்த இடத்திலேயே எழுந்து உட்கார்ந்து சாப்பிடுமாறு கொடுத்துவிட்டு வந்தாள் பூரணி. திருநாவுக்கரசையும் குழந்தை மங்கையர்க்கரசியையும் கூப்பிட்டுச் சமையலறையில் தனக்குப் பக்கத்தில் உட்காரச் செய்து கொண்டு பரிமாறினாள். அவ்வளவு இளமையில் தாயின் முதிர்ச்சியும் அன்பின் கனிவும் அவள் எவ்வாறுதான் பெற்றாளோ? பெரிய மீன்கள் தம் குஞ்சுகளைக் கண் பார்வையிலேயே வளர்த்துப் பழக்கிப் பெரிதாக்குமாம். பூரணி தன் தம்பிகளையும் தங்கையையும், அன்பாலும் கனிவாலுமே வளர்த்தாள். கூடியவரை வீட்டையும், தன்னையும் தேடிவரும் துன்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விடுவதில்லை. அவள் மூத்த தம்பி திருநாவுக்கரசுதான் நினைவு தெரிந்த விவரமுள்ள பையன். அவனிடம் கூட வீட்டுத் துன்பங்களைச் சொல்ல விரும்புவதில்லை அவள்.

வீட்டுக்காரரிடம் ஒப்புக்கொண்டு வந்துவிட்டபடி மாத முடிவுக்குள் இந்த வீட்டைக் காலி செய்து கொடுத்தாக வேண்டும். திருப்பரங்குன்றம் கிராமமுமில்லை; நகரமுமில்லை. கிராமத்தின் தனிமையும் நகரத்தின் வசதிகளும் இணைந்த இடம் அது. சுற்று வட்டாரத்தில் சில மில்களும் தொழிற்சாலைகளும், பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இருந்த காரணத்தினால் வீட்டு நெருக்கடி இருக்கத்தான் செய்தது. மதுரை நகருக்குள் வாடகை கொடுக்க இயலாத மத்தியதரக் குடும்பங்களும், கூலிகளும், அமைதியான வாழ்வை முருகன் அருள் நிழலில் கழிக்க விரும்புபவர்களும் நெருங்கிக்கூடும் இடம் ஆகையால் அங்கும் வீட்டுப் பஞ்சம் அதிகமாகிவிட்டது. கிழக்குப் பக்கம் செம்மண் குன்றைத் தழுவினாற்போல் பிருமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொறியியல் தொழிற்கல்லூரி திடீரென்று ஊரையே பெரிதாக்கி விட்டதுபோல் தோன்றுகிறது.

வீட்டுக்காக அப்போதே போய் நாலு தெருவில் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது பூரணிக்கு. இரவானாலும் அதிக நேரமாகிவிடவில்லை. ஊரிலும் தெருக்களிலும் கலகலப்பு இருந்தது. நாலு இடத்தில் நாலு தெரிந்த மனிதர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் காலியிருக்கிற வீடுகளைப் பற்றி ஏதாவது துப்புக் கிடைக்கும். ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு வரன் கிடைப்பது போல வாடகை வீடும் இன்றைய சமுதாயத்தில் எளிதாகக் கிடைத்துவிடாத ஒன்றாயிற்றே. 

"அரசு! வீட்டைப் பார்த்துக்கொள். மங்கைக்குத் தூக்கம் வந்தால் படுக்கையை விரித்துத் தூங்கச் செய். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன். ஒன்பது, ஒன்பதரை மணிக்குள் வந்துவிடுவேன். கதவைத் தாழ்போட்டுக் கொண்டு தூங்கி விடாதே" என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள் பூரணி.

பனி பரவத் தொடங்கியிருந்த அந்த முன்னிரவு நேரத்தில் மங்கிய நிலவொளியில் கீழ் சந்நிதித் தெருவில் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் அழகு தென்பட்டது. வரிசையாக இரு புறமும் வீடுகள், விளக்கு ஒளி தெரியும் ஜன்னல்கள், பூக்களின் பலவித வாசனை, சந்தனம், ஊதுவத்தி மணம், மனிதர்களின் குரல்கள், வானொலி இசை, வாயரட்டைப் பேச்சுக்கள், மாட்டுக் கழுத்து மணி ஓசை, பிரபஞ்சம் என்ற முடிவில்லாப் புத்தகத்தின் முதற்பக்கம் போல் ஓர் எடுப்பு, ஒரு கம்பீரம், ஒரு கலை அந்த வீதியின் அமைப்பில் விளங்கியது. வீதி தொடங்கும் இடத்தில் நிலவில் குளித்தெழுந்தது போல் நீள நிமிர்ந்து தோன்றும் மலைசார்ந்த கோபுரம், கோபுரம் சார்ந்த குமரன் கோயில், கோயில் முகப்பாகிய அகன்ற மேடையை இழுத்துக் கொண்டு பாய்கிறார் போல் யாளிச் சிற்பங்களும், குதிரைகளும், கீழ்ப்புறமும் மேல்புறமும் பிரிந்து படரும் கொடிகள் போல் இரத வீதி.

கோபுரத்துக்கும் மேலே குன்றில் எட்டாத உயரத்தில் மின்விளக்கில் நீல ஒளி உமிழும் 'ஓம்' என்ற பெரிய எழுத்துக்கள் குன்றிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த 'ஓம்' இருளில் தனியாக அந்தரத்தில் தொங்குவது போல் பெரிதாய் உயர்ந்து எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். அந்த 'ஓமை' உற்று மேலே பார்த்துக் கொண்டே பூரணி சந்நிதித் தெருவில் நடந்தாள். இருளில் அந்த 'ஓம்' மின்விளக்கை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது அவளுக்கு. கீழும் மேலும் எங்கும் எதனோடும் தொடர்பின்றி உயர்ந்த வானவிதானத்தில் 'ஓம்' என்ற சக்தியே ஒளிப்பூவாய்ப் பூத்துத் திருப்பரங்குன்றம் முழுவதும் மணம் பரப்பி நிற்பது போல அழகாய்த் தோன்றும் அந்த 'ஓம்'.

வீட்டு மொட்டை மாடியில் நின்று இதைப் பார்த்து மகிழ்வது அவளுக்கு வழக்கமான அனுபவம். இரத வீதிகளிலும், வெள்ளியங்கிரிச் சந்து, திருக்குளச் சந்து, முதலிய சந்துகளிலும் ஒண்டுக் குடித்தனத்துக்கு ஏற்ற சிறிய இடங்கள் இருந்தாலும் இருக்கலாம். சரவண பொய்கைக் கரையிலும் இரயில் நிலையத்துக்குத் தென்கிழக்காகக் கிரி வீதியிலும் பெரிய ஒண்டுக் குடித்தன ஸ்டோர்கள் சில உண்டு. பகல் நேரத்தை விட்டு இரவில் அவள் புறப்பட்டதற்குக் காரணம் இருந்தது. பழகிய மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அப்பாவின் துக்க சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகுமுன் சுற்றித் திரிவது அவமானமாகத் தோன்றியது. அவளுக்கு உடனடியாகப் பெரிய வீட்டைக் காலி செய்துவிட்டு ஒண்டுக் குடித்தனம் வர முயல்வது பற்றித் தெரிந்தவர்கள் தூண்டித் துருவிக் கேள்விகள் கேட்பார்கள். அதிகம் பேர் கண்களில் படாமல் இடம் விசாரிக்க அந்த நேரமே ஏற்றதென்று அவள் நினைத்தாள்.

தேரடியிலும், கோயில் வாயிலிலுள்ள கடைகளிலும் கூட்டமும், கலகலப்பும் இருந்தன. சந்நிதி முகப்பில் ஒரு கணம் நின்று வணங்கிவிட்டு கிழக்கே பெரிய இரத வீதியில் திரும்பினாள் பூரணி. இரவு மூன்று மணி வரை அரவம் குறையாத தெரு அது. தெருக்கோடியில் மேட்டில் இருந்த டூரிங் சினிமாக் கொட்டகைதான் அந்த மாதிரி ஆள் புழக்கத்திற்குக் காரணம்.

வெளியூரிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்றால் முருகனைச் சுற்றிக் குடியிருந்த உள்ளூர்க்காரர்கள் டூரிங் சினிமா கொட்டகையைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். திருக்குளத்து முதல் சந்தில் தன்னோடு படித்த கமலா என்ற பெண்ணின் வீடு இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. திரும்பியவுடன் முதல் வீடு கமலாவுடையது.

கமலா - அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள் - மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்துபோய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக 'கமலா' என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு கொண்டு 'பூரணியா?' என்று கேட்டவாறு கமலா எழுந்து வந்தாள்.

"உனக்கு வருவதற்கு இப்போதுதான் ஒழிந்ததோ, அம்மா? பகலில் வந்து என்னோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தால் பிடித்துக்கொண்டு விடுவேன் என்ற பயமா?"

"அதற்காக இப்போது வரவில்லையடி கமலா? இப்படி வா உன்னிடம் சொல்கிறேன்" என்று கமலாவை அருகில் வரச்செய்து காதோடு மெல்லத் தான் வந்த வேலையைச் சொன்னாள் பூரணி.

"வசதியான சந்நிதித் தெருவை விட்டுவிட்டு இங்கே இந்த சந்துக்கா வரவேண்டும் என்கிறாய்? மதுரைக்குப் போக வர சந்நிதித் தெருவுக்குப் பக்கத்தில் நினைத்த நேரம் பஸ் ஏறலாம். இங்கே வந்துவிட்டால் அவ்வளவு தூரம் நடந்து போய்த்தான் ஆகவேண்டும். உன் தம்பிகளுக்குப் பள்ளிக்கூடம் போக இன்னும் நடை அதிகமாகுமே. எல்லாம் யோசனை பண்ணிக்கொண்டு செய்."

"வசதிகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் மேலும் சில வசதிகளுக்கு ஆசைப்பட முடியும் கமலா. ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாம் வசதி குறைவுகளுமே வசதிகளாகத்தான் தோன்றும்" பூரணி ஏக்கத்தோடு சொன்னாள். கமலா இதற்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை. 

"உன்னிடம் பேசி வெற்றி கொள்ள என்னால் முடியாது அம்மா. ஒரு தடவை பள்ளிக்கூடத்துப் பேச்சுப் போட்டியில் உனக்கு எதிராகப் பேசித் தோற்றது போதும். தமிழ், தத்துவம் எல்லாம் உனக்குத் தண்ணீர் பட்டபாடு. நான் என்ன உன்னைப் போல் தமிழ் அறிஞரின் மகளா? சாதாரண விவசாயியின் பெண். என்னை விட்டுவிடு. கரையில் ஒரு ஸ்டோர் இருக்கிறது. இப்போதே போய்ப் பார்த்துவிட்டு வரலாம். நிலா வெளிச்சத்தில் உலாவி வந்தாற் போலவும் இருக்கும். பள்ளிக்கூட நாட்களுக்குப் பின் நாம் சேர்ந்தாற்போல் நடந்து செல்ல சமயமே வாய்த்ததில்லை."

"நான் வரத்தயார். உன்னைத்தான் உன் அம்மா இந்த நேரத்தில் என்னுடன் அனுப்புவார்களா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது."

"தாராளமாய் அனுப்புவார்கள். இப்போதெல்லாம் இந்தப் பக்கம் எவ்வளவு நேரமானாலும் ஒரு பயமுமில்லை. சினிமாக் கொட்டகையும், பொறியியல் தொழிற் கல்லூரியும் வந்த பிறகே ஊரே பெரிதாகப் போய்விட்டது. இதோ அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு கமலா தன் தாயிடம் சொல்லி வரச் சென்றாள். கமலாவுக்குப் பூரணியை விட நாலைந்து வயது குறைவு. இருவரும் பல ஆண்டுகள் சேர்ந்து படித்தவர்கள். படிப்பு முடிந்த பிறகும் அந்த நட்பு நிலைத்தது என்றால் அதற்குக் காரணம் பூரணிதான். மிக சில விநாடிகளே தன்னோடு பழகியவர்களும் தன்னை தன் முகத்தை தன் கண்களை தன் பேச்சை மறக்க முடியாதபடி செய்து அனுப்பி விடுகிற ஓர் அரிய கம்பீரம் அவளிடம் இருந்தது. சில் விநாடிகள் பழகியவர்களே இப்படியானால் பூரணியுடன் பல ஆண்டுகள் சிறு வயதிலிருந்து சேர்ந்து படித்த கமலாவுக்கு அவளிடம் ஒரு பற்றும் பாசமும் இருந்ததில் வியப்பென்ன?

கமலா வந்தாள். பூரணியோடு கிழக்கு நோக்கி நடந்தாள். "சீக்கிரம் வந்துவிடு, பெண்ணே" என்று கமலாவின் தாயார் தெரு திரும்பும் போது வீட்டு வாயிலில் வந்து நின்று சொல்லிவிட்டுப் போனாள். கிழக்கே போகப் போக வீதி அகன்றது. வீடுகள் குறைந்தன. தோட்டங்களும் வெளிகளும் தாமரை இலைகளும் மொட்டுகளும் மண்டிக்கிடக்கும் சரவணப் பொய்கை நீர்ப் பரப்பும் மலையையொட்டிக் காட்சியளித்தன. வடப்புறம் 'கூடை தட்டிப் பறம்பு' என்னும் மொட்டைச் செம்மண் குன்று சமீபத்து மழையினால் விளைந்த சிறிது பசுமையை நிலவுக்குக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது போலும். இருவரும் நடந்து வந்து அறை அறையாகப் பிரிந்த ஒரு கட்டிடத்தின் முன் நின்றார்கள்.

"இதுதான் அந்த ஸ்டோர். ஊரைவிட்டு விலகி இருக்கிறது. மின்சார விளக்குகள் கிடையாது. இனிமேல் தான் விளக்குத் தொடர்பு கிடைக்க வேண்டும். வீட்டுக்காரர் மின்சாரத் தொடர்புக்கு முயன்றுகொண்டிருக்கிறார். இன்னும் பல அறைகளுக்கு ஆட்கள் குடிவரவில்லை. வாடகை மிகவும் குறைவு. ஒரு சமையல் கட்டு, சிறு கூடம், முன்புறம் வராந்தா மூன்றும் கொண்ட ஓர் அறைக்கு வாடகை பன்னிரண்டு ரூபாய்தான்" கமலா சொல்லி முடித்தாள்.

வாடகை மிகவும் குறைவாக இருந்தாலும் அந்த இடம் ஊரிலிருந்து அதிகம் தள்ளியிருப்பதாக நினைத்தாள் பூரணி. சினிமாக் கொட்டகையையும் கடந்து சிறிதளவு தொலைவு அப்பால் இருந்தது அந்த ஸ்டோர். அந்த நேரத்திலேயே அந்த ஸ்டோர், அதைச் சுற்றியிருந்த இடங்களிலும் ஊர் அடங்கினாற் போன்று சில்வண்டு கீச்சிடும் அமைதி படர்ந்துவிட்டிருந்தது. ஸ்டோர் வாசலில் வேப்ப மரத்தின் கீழே பீடிப் புகையை இழுத்துவாறு உட்கார்ந்திருந்த ஒரு ஆள் அவர்கள் கூப்பிடாமலே எழுந்து வந்து தானாகச் சில விவரங்களை அன்போடு அவளுக்குச் சொன்னான்.

"செட்டியாரு விளக்குக் கனெக்ஷன் வாங்கிட்டாரு அம்மா! இன்னும் ஒரு வாரத்துக்குள்ளாற விளக்கு வந்து விடும். நீங்க சொன்னாப்போல் நாலஞ்சி ரூம் காலியில்லை. இப்போ எல்லாம் வந்து அட்வான்ஸ் கொடுத்திட்டுப் போயிட்டாங்க. ஒரே ரூம் தான் இருந்திச்சு; நானும் ஸ்டோர்காரச் செட்டியாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மரத்தடியிலேதான் பேசிக்கிட்டிருந்தோம். இப்பதான் ஒரு ஆளு அட்வான்ஸோட வந்து கெஞ்சினாரு. செட்டியாரும் அவருமாப் பேசிக்கிட்டே சரவணப் பொய்கை ஓரமா நடந்து போனாங்க. அவருக்கிட்ட இருந்து செட்டியார் முன்பணம் வாங்குறதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்கன்னா ஒரு வேளை பெண் பிள்ளைன்னு இரக்கப்பட்டு ரூமை உங்களுக்கு விட்டாலும் விடுவாரு". நரைத்த மீசையும் பூனைக் கண்களுமாகத் தோன்றும் அந்த நோஞ்சான் கிழவன் சமயத்தில் வந்து கூறியிராவிட்டால் 'நாளைக்கு வந்து பார்த்துப் பேசிக் கொள்ளலாம்' என்று பூரணியும் கமலாவும் திரும்பிப் போயிருப்பார்கள்.

"இப்போது இருக்கிற ஏழ்மையில் பன்னிரண்டு ரூபாய்க்கு வீடு கிடைத்தால் எனக்கு எவ்வளவோ நல்லது கமலா? இதையே பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். தம்பிகளுக்கும் எனக்கும் நடை முன்னைவிடக் கூடும். அதைப் பார்த்தால் முடியாது" என்று கமலாவின் காதில் மெல்லச் சொன்னாள் பூரணி. கமலாவுக்கு பூரணியின் அவசியம் புரிந்தது.

"எனக்கு இந்த ஸ்டோர்காரச் செட்டியாரை நன்றாகத் தெரியும் பெரியவரே! நான் சொன்னால் அவர் தட்டமாட்டார். என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் அவர். நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு அவர் இருக்கிற இடத்தைக் காட்டி உதவினால் நன்றி உள்ளவர்களாக இருப்போம்" என்று கமலா அந்தப் பூனைக்கண் கிழவனைக் கேட்டாள்.

"இடத்தைக் காட்டறதாவது, நான் உங்ககூட துணைக்கு வரேன் அம்மா! சரவணப் பொய்கை கரையிலே அந்த நாவல் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பாரு செட்டியாரு. பார்த்து ஒரு வார்த்தை காதிலே போட்டுட்டா வேற யாருக்கும் விடமாட்டாரு. நமக்கு உறுதி சொன்னது போலத் திருப்தியாயிடும்..." என்று உற்சாகமாகக் கூறித் தானும் உடன் புறப்பட்டான் கிழவன். முன்னால் கிழவனும், அடுத்தாற்போல் கமலாவும், கடைசியாக பூரணியும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். தண்ணீர் பாயும் ஒலி, வயல்களில் தவளைக் கூச்சல், மலையில் காற்று மோதிச் சுளிக்கும் 'சுர்ர்' ஓசை, இவை தவிர, இரவின் அமைதி சூழ்ந்திருந்த அத்துவானமாக இருந்தது அந்த இடம். தூரத்திலிருந்து டூரிங் சினிமா ஒலி நைந்து வந்தது.

மர நிழல்களின் ஊடே சிவந்த மேனியில் தேமல் போல் நிலவொளியும் நிழலும் கலந்து பூமியில் படரும் அழகைப் பார்த்துக் கொண்டே பூரணி தரைநோக்கி நடந்துகொண்டிருந்தாள்.

திடீரென்று, "ஐயோ! சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுகிறானே" என்று கமலாவின் அலறலும் திடுதிடுவென்று ஓடும் ஒலியும் அவளைத் தூக்கிவாரிப் போடச் செய்தன. எதிரே பார்த்தாள். கமலாவும் அந்த ஆளும் தனக்கு மிகவும் முன்னால் போயிருந்தது தெரிந்தது. கமலா பதறி நின்றாள். அந்தப் பூனைக் கண் கிழவன் தான் முன்புறம் ஓடிக் கொண்டிருந்தான். பூரணியின் உடம்பில் எங்கிருந்துதான் அந்தப் பலம் வந்து புகுந்ததுவோ, அவனைத் துரத்தி ஓடலானாள். கீழே கிடந்த ஒரு குச்சுக்கல்லை எடுத்து ஓடுகிறவன் பிடறியைக் குறிவைத்து வீசினாள். அடுத்த கணம் குரூரமாக அலறி விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். பூரணி விடவில்லை. அருகில் நெருங்கி அவனைப் பிடித்துவிட்டாள். நாயைச் சங்கிலியால் பிணைக்கிற மாதிரி அவனுடைய அழுக்குத் துண்டாலேயே அவன் கைகளைக் கட்டினாள்.

 

4

 

"என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே

உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த

பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு

முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே!"

 

ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து, அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கப்பட்ட இடத்தில் நழுவி விழுந்திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்துபோன துணுக்குகளைத் தேடி எடுத்துக் கொண்டாள். 

இந்தக் கலவரத்திலும் கூக்குரல்களிலும் சரவணப் பொய்கைக் கரை மண்டபங்களில் படுத்துக் கிடந்த இரண்டு மூன்று பரதேசிப் பண்டாரங்கள் எழுந்து ஓடி வந்தனர்.

மூப்பினாலும், முதுகில் பிடரி மேல் விழுந்த கல் எறியினாலும் சோர்ந்து பூரணியிடம் மாட்டிக் கொண்ட அந்த நோஞ்சான் கிழவன், ஆட்கள் ஓடி வருவதைக் கண்டதும் திமிறிக் கொண்டு மறுபடியும் ஓட முயன்றான். திருட்டு முகத்தை நாலு மனிதர்களின் கண்களுக்கு முன் காட்ட வேண்டும் என்ற அவசியம் வரும்போது திருடனுக்குக் கூட வெட்கம் வருகிறது. என்ன இருந்தாலும் பூரணி பெண்தானே? திமிறி உதறிக் கொண்டு அவன் ஓட முயலும் முயற்சியில் பூரணியின் கைகள் தளர்ந்தன. குரூரமும், 'அகப்பட்டுக் கொள்வோமோ' என்ற பயமும் கலந்த அந்தக் கிழட்டு முகத்தில் கோலிக்குண்டுகள் போல் கண்விழிகள் பிதுங்கிப் பயங்கரமாகத் தோன்றின.

பூரணியின் மனத்தில் என்ன தோன்றியதோ? கைப்பிடியைத் தானாகவே மேலும் தளரவிட்டாள். அந்தக் கிழவன் விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டான். "சங்கிலி கிடைத்துவிட்டது. அந்தக் கிழவனைப் பிடித்துக் காட்டிக் கொடுப்பதில் என்ன புதுப் பெருமை வந்துவிடப் போகிறது?" என்று எண்ணியே பூரணி அவனைப் போகவிட்டாள்.

அருகில் நெருங்குவதற்கே அஞ்சி அரண்டு நின்று கொண்டிருந்த கமலா, பூரணிக்குப் பக்கத்தில் வந்தாள்.

"காலம் எவ்வளவு கெட்டுப் போய்விட்டது? முகத்தையும் பேச்சையும் பார்த்து எந்த மனிதர்களையும் நம்பி விட முடியாது போலிருக்கிறதே! மிகவும் நல்லவனைப் போலப் பேசிக் கொண்டு வந்தவன் ஒரே கணத்தில் கழுத்தில் கைவைத்து சங்கிலியை அறுத்தானே பார்த்தியா பூரணி! உன்னைப் போல் ஒரு துணிச்சல்காரி மட்டும் உடன் வந்திருக்காவிட்டால் சங்கிலியைத் திருட்டுக் கொடுத்துவிட்டுக் கண்களைக் கசக்கிக் கொண்டு வீட்டில் போய் நிற்பேன்" என்று பூரணியின் துணிவை வியந்து பேசத் தொடங்கினாள் கமலா. பூரணியின் வலது கையால் அவள் வாயைப் பொத்தினாள்.

"போதும் கமலா! ஏதோ கெட்ட சொப்பனம் கண்டு விழித்துக் கொண்ட மாதிரி இதை மறந்துவிடு. இருவருமே முன் யோசனையின்றி இந் நேரத்துக்கு இங்கு வீடு தேடிக் கொண்டு வந்ததே தப்பு. வா, மாற்றவர்கள் வந்து இந்த வெட்கக் கேட்டை விசாரிப்பதற்கு முன் இங்கிருந்து போய்விடலாம்" என்று கமலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினாள் பூரணி.

கீழ இரத வீதி திருப்பத்தில் வந்ததும், தெருவிளக்கின் ஒளியில் பூரணியின் கைகள் தற்செயலாகக் கமலாவின் பார்வையில் பட்டன.

வளையல் உடைந்து நகங்களால் கீறிய காயங்களோடு கன்றிச் சிவந்து போயிருந்த அந்தப் பூக்கரங்களை விளக்கொளியில் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள் கமலா. 

வெண்ணிறக் காகிதத்தில் தாறுமாறாக விழுந்த சிவப்பு மைக் கீறல் மாதிரி அந்த அழகிய முன்கையில் நகக்கீறல்கள் குருதிக்கோடு இழுத்திருந்தன. கமலாவின் கண்களில் அதைக் கண்டதும் நீர் மல்கி விட்டது. பூரணியின் முகத்தைப் பார்த்தாள். அவள் துன்பத்தையும் உணராதது போல் முகம் மலரச் சிரித்தாள்.

"அடி அசடே! இதற்கெல்லாமா அழுவார்கள்? பேசாமல் அந்தச் சங்கிலித் துணுக்குகளை இப்படிக் கொடு. எங்கள் தெருவில் ஒரு பத்தர், பொற்பட்டறை வைத்திருக்கிறார். நாளைக்கு சாயங்காலத்துக்குள் சரிப்படுத்திக் கொண்டு வந்து தந்து விடுகிறேன். அதுவரையில் உன் அம்மாவுக்குத் தெரிந்து விடாமல் பார்த்துக்கொள். நடந்ததைப் பற்றி யாரிடமும் மூச்சுவிடக் கூடாது" என்று அந்தச் சங்கிலித் துணுக்குகளை வாங்கிக் கொண்டாள் பூரணி.

"சங்கிலி போயிருந்தாலும் பரவாயில்லை பூரணி. அதற்காக உன் கைகளை இப்படி இரணமாக்கிக் கொண்டு வந்திருக்க வேண்டாம்."

"கைகளில் இரணம் படாமல் தான் எதையும் செய்து விட ஆசைப்படுகிறோம். ஆனால் கைகளிலும் மனத்திலும் எண்ணங்களிலும் படுகிற புண்களைச் சுமக்காமல் வாழ முடிவதில்லை."

இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வயதுக்கு அதிகமான முதுமையை வரவழைத்துக் கொண்டாற்போலச் சிரித்தாள் பூரணி. அப்படிச் சிரிப்பதற்கு அவளால்தான் முடியும்.

கமலாவை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பூரணி சந்நிதித் தெருவில் திரும்பி நடந்தபோது ஏறக்குறையத் தெரு அடங்கிப் போயிருந்தது. நெடுநேரம் கதவைத் தட்டியபின் திருநாவுக்கரசு விழித்தெழுந்து வந்து கதவைத் திறந்தான். கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே போய் அப்பாவின் படிப்பறையில் விளக்கைப் போட்டாள். காலையில் நினைவாகப் பத்தரிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கிலித் துண்டுகளை ஒரு காகிதத்தில் சுற்றி மேஜை மேல் வைத்தாள். சிறிது நேரம் எதையாவது படித்துவிட்டு உறங்கப் போகலாம் என்று அப்பாவின் புத்தகத்தை உருவினாள்.

கவியரசர் பாரதியாரின் பாடல் தொகுதி அது. தானாகப் பிரிந்த பக்கத்தில் மேலாகத் தெரிந்த அந்தப் பாட்டு பூரணியின் அப்போதைய மனநிலைக்கு இதமாக இருந்தது.

 

"தேடிச்சோறும் நிதம்தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்

வாடப்பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?"

 

அப்பா போன துக்கம், குடும்பத்தைத் தாங்கிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, விட்டைக் காலி செய்துவிட்டுப் புதிய இடம் பார்க்கும் கவலை, கையை ஒடித்துக் கொண்டு வீழ்ந்து கிடக்கும் தம்பி, இருட்டில் வீடு தேடப்போன இடத்தில் திருட்டுக்கு ஆளாகித் தப்பின வம்பு - இத்தனை எண்ணங்களும் சுமையாகிக் கனத்து ஏங்கும் அவள் மனத்தில் பாரதியின் இந்தப் பாட்டு ஏதோ ஓர் உணர்ச்சிப் பொறியைத் தூண்டியது.

நீர்க்கரைத் தவளைகள் விட்டு விட்டு ஒலிக்கும் குரலும், தென்னை மட்டைகள் காற்றில் ஆடிச் சரசரக்கும் ஓசையும் தவிர, இரவு அமைதியில் இணைந்திருந்தது. இடையிடையே பெரிய சாலையில் லாரிகள் போகும் சத்தம் அதிர்ந்து ஓயும். ஊர் உறங்கும் சூழலில் தானும் தன் மனமும் உறங்காமல் விழித்திருந்து அந்தப் பாட்டில் மூழ்கி எண்ணங்களில் திளைப்பது, குளிருக்குப் போர்வை போல் சுகமாக இருந்தது பூரணிக்கு இப்படி எண்ணத்தில் திளைப்பது அவளுக்குப் பழக்கம். "சோற்றை இரையாகத் தின்று காலத்துக்கு இரையாவது தான் வாழ்க்கையா? துன்பத்தில் உழன்றுகொண்டும் பிறரை துன்பத்தில் உழல வைத்துக்கொண்டும் வாழ்வதுதான் வாழ்க்கையா? பிறரைத் தானும், தன்னைப் பிறரும் வம்பு பேசிக் கழிவதுதான் வாழ்க்கையா? இதையெல்லாம் விட பெரிதாக ஏதோ ஒன்று வாழ்க்கையில் இருக்கிறது அல்லது வாழ்க்கைக்காக இருக்கிறது." குளிர்ந்த தண்ணீரைத் தெளித்த மாதிரி இவற்றை நினைத்தபோது அவளுடைய உடம்பும் மனமும் மலர்ந்து சிலிர்த்தாற்போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு சிலிர்த்தாற் போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு உரசுகிறார் போலப் பரிசுத்தமான நினைவுகளுக்கு இப்படி ஒரு சிலிர்ப்பு எப்போதும் உண்டு. நினைவு தெரிந்த வயதிலிருந்து இத்தகைய சிலிர்ப்பை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். பவளமல்லிகைப் பூ மலர்கிறபோது தோட்டம் முழுவதும் ஒரு தெய்வீக நறுமணம் பரவி நிறைவதுண்டு. அபூர்வமான சில மனிதர்களுக்கு மனமும் எண்ணங்களும் வளர்ந்து விகசிக்கிற பருவத்தில் அந்த எண்ணங்களின் மலர்ச்சியால் எண்ணுகிறவர்களைச் சுற்றி ஒருவகை ஞானமணமோ எனத்தக்க புனிதமான சூழ்நிலை நிலவும்.

கண்ணிமைகள் சோர்ந்து விழிகளில் சாய்ந்தன. புத்தகம் இரண்டொரு முறை கை நழுவியது. பூரணி விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டாள். உடலே கனம் குறைந்து இலவம் பஞ்சாகிப் போய்விட்ட மாதிரி சுகமான உறக்கம் அவளைத் தழுவியது.

காலையில் நாட்டு வைத்தியர் வந்து சம்பந்தனின் கையைப் பார்த்துவிட்டுப் போனார். அன்று சனிக்கிழமை திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை. பால்காரனுக்கு மாதம் முடிகிறவரை கணக்கு இருப்பதால் பால் ஊற்றிவிட்டுப் போயிருந்தான். காப்பியைப் போட்டுக் கொடுத்துவிட்டு முதல் நாள் இரவு வாங்கிக் கொண்டு வந்திருந்த கமலாவின் அறுத்த சங்கிலியைச் செம்மைப்படுத்திக் கொண்டு வருவதற்குப் புறப்பட்டாள் பூரணி.

பத்தர் மிகவும் வேண்டியவர் தான். ஆனால் ஏழைகளாயிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டியவராயிருப்பதால் என்ன பயன்? உதவவும் முடியாது. உதவும்படி வேண்டவும் முடியாது. சங்கிலிப் பழைய சங்கிலியாவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. வேலையை முடித்துச் சங்கிலியைக் காகிதத்தில் வைத்துக் கொடுத்த பத்தரை நோக்கி, "இதற்கு நான் என்ன தரவேண்டும்?" என்று கேட்டாள் பூரணி.

"ஐந்து ரூபாய் கொடு, குழந்தை". பத்தருக்கு எத்தனை வயதுப் பெண்ணாயிருந்தாலும் எல்லாரும் குழந்தைதான். கொஞ்சம் வம்பு பேசி வழக்காடியிருந்தால் பத்தர் இரண்டொரு ரூபாய்கள் குறைத்திருப்பாரோ என்னவோ? பண்பட்ட குடிப்பிறப்பைத் தாங்கிய நாக்குப் பேரம் பேச எழவில்லை. ஐந்து ரூபாயை மறு பேச்சின்றிக் கொடுத்து விட்டாள். சங்கிலியை வாங்கிக் கொண்டு கமலாவின் வீட்டுக்குப் போனாள். மணி பதினொன்று ஆகியிருந்தது. நல்ல வெய்யில், ரத வீதியில் மலைப்பாறைகளின் வெப்பமும் சேர்ந்து கொண்டால் சுண்ணாம்புக் காளவாய் மாதிரி ஒரு சூடு கிளம்பும்.

நல்லவேளை, கமலாவின் கூட வேறு யாருமில்லை. வீட்டு முன் அறையில் தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் அவள். பூரணியைப் பார்த்ததும் ஆவலோடு எதிர் கொண்டு எழுந்து வந்து வியப்பான செய்தி ஒன்றைத் தெரிவித்தாள் கமலா.

"பூரணி உனக்குத் தெரியுமா செய்தி! உன்னிடம் திமிறிக் கொண்டு தப்பி ஓடினானே, அந்தத் திருட்டுக் கிழவன் பாம்பு கடித்துச் செத்துப் போனான். காலையில் நானும் அம்மாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போயிருந்தோம். அவன் உடலை அந்த நாவல் மரத்தடியில் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் வயல் வரப்பின் மேல் செத்து விழுந்து கிடந்தானாம். விடிந்ததும் தண்ணீர் பாய்ச்சப்போன ஆட்கள் யாரோ பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்து மரத்தடியில் கிடத்தியிருக்கிறார்கள். அவன் விழுந்திருந்த வரப்பின் மேல் பாம்புப் புற்று இருந்ததாம். பாவம் திருடினதுதான் கிடைக்கவில்லை, உயிரையும் கொடுத்து விட்டானா பாவிப்பயல்!" 

இதைக்கேட்டதும் பூரணியின் உடம்பில் எலும்புக் குருத்துக்களெல்லாம் நெக்குருகி நெகிழ்ந்தாற்போல் ஒரு நடுக்கம் பரவியது. கண்கள் பயந்தாற்போல் பராக்குப் பார்த்து விழித்தன. கைவிரல்களில் கொலை நடுக்கம் போல் ஒரு உதறலை அவள் உணர்ந்தாள். "நான் கொலை செய்துவிட்டேனா?" என்று அவள் உள்மனம் அவளையே கேட்டது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. முகத்தில் வேர்த்துவிட்டது.

பூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். "இதென்ன பூரணி! உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது? அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்?"

"நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா கமலா?"

"மூச்சுவிடுவேனா நான்? உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது, பாவம்."

"மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக இருக்கிறது பார் கமலா. தன் முதுகுக்குப் பின்னால் உயிரைத் திருடிக்கொண்டு போக எமன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் உன் முதுகுக்குப் பின்னால் சங்கிலியைத் திருட ஓடி வந்திருக்கிறானே இந்தக் கிழவன். மனிதன் பொருளைத் திருடினாலே அகப்பட்டு அவமானமும் தண்டனையும் அடைய வேண்டியிருக்கிறது. எமன் இத்தனை உரிமையோடு உயிர்களைத் திருடிவிட்டு இந்தத் திருட்டு உரிமையால் தெய்வமாகவும் வாழ்கிறானே?"

"திருடனாயிருந்தாலும் அவன் செத்த விதத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது, பூரணி!"

"மரணத்துக்கே இந்த ஆற்றல் உண்டு. பக்கத்து வீட்டில் சுவரை இடித்தால் நம் வீடு அதிர்கிற மாதிரிச் சாகின்றவர்கள் வாழ்கின்றவர்கள் மனத்திலுள்ள உயிர் நம்பிக்கையில் அதிர்ச்சியை உண்டாக்குகிறார்கள்."

"அதிருக்கட்டும்! மேலே உன் திட்டம் என்ன? எங்கேயாவது வேறு வீடு பார்த்தாயா? உன் தம்பி ஏதோ மரமேறி விழுந்து கையை ஒடித்துக் கொண்டானாமே, நீ என்னிடம் சொல்லவே இல்லையே?"

"சொல்லவில்லைதான். எனக்கு எத்தனையோ கவலைகள் கமலா. அத்தனையையும் உன்னிடம் சொல்லி உன்னைக் கவலைப்படுத்த வேண்டுமா? முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான். இந்தா, உன் சங்கிலி இதைச் சரிப்படுத்திவிட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முடிந்தால் சாயங்காலம் நீ கொஞ்சம் விட்டுப் பக்கம் வந்து போ! நான் வரட்டுமா?" 

கமலாவிடம் சங்கிலியைக் கொடுத்துவிட்டுப் பூரணி வீடு திரும்பினாள். தேரடியில் ஓதுவார்க் கிழவர் எதிர்ப்பட்டார்.

"மூஞ்சி முகரையெல்லாம் கறுத்துப் போகிறார்போல் இப்படி வெய்யிலில் அலைவாளா ஒரு பெண்? அப்படி என்ன அம்மா தலைபோகிற காரியம்?"

"ஒன்றுமில்லை தாத்தா! இங்கே பக்கத்துத் தெருவில் கமலா என்று ஒரு பழைய சிநேகிதி இருக்கிறாள். அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கிழவரின் அனுதாப விசாரிப்புக்குப் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்தாள் பூரணி. தெரு நடுவிலிருந்த கல்மண்டபத்தருகே தயிர்க்காரி எதிரே வந்து பிடித்துக் கொண்டாள்.

"நான் காசு பணம் சேர்த்து வைத்துக் கொண்டு பிழைக்கிறவள் இல்லை அம்மா! அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் தவிடு, பிண்ணாக்கு என்று வாங்கணும். பூராப் பாக்கியும் தர முடியாவிட்டாலும் ஏதாவது ஒண்ணு ரெண்டு கொடுங்கம்மா."

கையில் மீதமிருந்த இரண்டு ரூபாய் இரண்டரை அணாவில் ஒன்றரை ரூபாயை அவளிடம் கொடுத்து அவளுக்கு நல்லவளானாள் பூரணி. அந்தப் பதினொண்ணே முக்கால் மணி வெய்யிலில் திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் சுறுசுறுப்பும் இல்லை, கலகலப்பும் இல்லை. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் கூட பொழுது போகாமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள். தெருவும், கோபுரமும், மலையும் பரம சுகத்தோடு வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்தன. மேற்கே ரயில்வே லயனில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ஓடிச்சென்று நின்றது. அந்த வழியாகச் செல்லுகிற மூன்று எக்ஸ்பிரஸ்களில் அதற்கு மட்டும் தான் முருகன் மேல் பற்று. மூன்று விநாடிகள் நின்று கரும்புகையை மலை நோக்கி அள்ளி வீசிவிட்டுப் பின் போய்விடும். வேறு எக்ஸ்பிரஸ்களுக்கு அந்தப் பற்றும் இல்லை.

வீட்டில் காலையில் குடித்த ஒரு வாய் காப்பியோடு தம்பி, தங்கைகள் பட்டினிக் கிடப்பார்களென்ற நினைவு பூரணிக்கு வந்தது. ஓட்டலில் நுழைந்து எட்டணாவிற்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு சென்றாள். குழந்தை மங்கையர்க்கரசி, "அக்கா ரொம்பப் பசிக்கிறது" என்று ஓடிவந்து வாயிற்படியிலேயே பூரணியின் காலைக் கட்டிக் கொண்டாள். வாடிப்போன சூரியகாந்திப் பூ மாதிரி குழந்தையின் முகத்தில் பசிச் சோர்வு தென்பட்டது. நாவுக்கரசும் சிறிய தம்பி சம்பந்தனின் படுக்கையருகே துவண்டு களைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். நன்றாக இரசம் பூசிய கண்ணாடியில் எதுவும் தெளிவாகத் தெரிகிற மாதிரி இளம் முகங்களில் பசிதான் எவ்வளவு விளக்கமாகத் தெரிகிறது. மூப்பில் அவஸ்தைகள் பயின்று பழகி மரத்துப் போவதால் உணர்வைத் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடிகிறது. இளமையில் அப்படி மறைக்க முடிவதில்லை.

ஓட்டலில் வாங்கி வந்த சிற்றுண்டிப் பொட்டலத்தைப் பிரித்து மூன்று பேருக்கும் தனித்தனி இலைகளில் வைத்தாள். 

"நீ சாப்பிடலையா அக்கா?" என்று நாவுக்கரசு தனக்கு முன் இலையிலிருந்ததைத் தொடாமல் பூரணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டான்.

"சாப்பிட்டாயிற்று. கமலா வீட்டுக்குப் போயிருந்தேன். விடமாட்டேன் என்று பிடிவாதமாக வற்புறுத்தினாள். அங்கே சாப்பிடும்படி நேர்ந்துவிட்டது; நீங்கள் சாப்பிடுங்கள்."

பொய்யைப் போல சமயத்தில் உதவி செய்கிற நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை.

"உன் முகத்தைப் பார்த்தால் சாப்பிட்ட மாதிரி தெரியலையே அக்கா."

"போடா அதிகப் பிரசங்கி, சாப்பிட்ட மாதிரி தெரியறதுக்கு முகத்தில் 'சாப்பிட்டாயிற்று' என்று எழுதி ஒட்டியிருக்க வேண்டுமோ?"

-இப்படிக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. அந்தச் சிரிப்பினால் அக்காவின் மேல் அவர்களுக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. இலையில் இருந்ததை சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுடைய இலையில் உணவுப் பொருள் குறையக் குறைய பூரணியின் மனத்திலும் முகத்திலும் ஏதோ நிறைந்து மலர்ந்தது.

"அக்கா! தபால்காரர் கொடுத்துவிட்டுப் போனார்" என்று சில கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான் திருநாவுக்கரசு.

வழக்கம்போல் அனுதாபக் கடிதங்கள்தான். அந்த மாபெரும் தமிழறிஞருக்கு திருப்பரங்குன்றத்திலேயே ஒரு நினைவு மண்டபம் எழுப்பியாக வேண்டும் என்று ஆவேசத்தோடு வரிந்து எழுதியிருந்தார் உணர்ச்சிமிக்க இளைஞர் ஒருவர். பூரணி தனக்குள் நகைத்துக் கொண்டாள்.

"நினைவு மண்டபமாம்; நினைவு மண்டபம்! மனிதனை மறந்துவிட்டு மண்டபத்தைக் கட்டி நினைவு வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே! அந்த மண்டபத்துக்குத் தோண்டுகிற அஸ்திவாரத்தில் எங்களையும் தள்ளிவிட்டால் கவலை தீர்ந்தது. இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து பசியோடும் பண்புகளோடும் போராட வேண்டியிராது" என்று வெறுப்போடு வாய்க்குள் மெல்ல இப்படிச் சொல்லிக் கொண்டாள்.

சிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குவது போல் பசி வயிற்றைக் கிள்ளியது. குளித்துவிட்டால் சோர்வு குறையுமென்று குளிக்கப் போனாள்.

கிணற்றில் நீர் இறைக்கும் கயிறு பாதியில் நைந்திருந்தது. எப்போது அறுந்து விழுமோ? எதற்கென்று தனியாகக் கவலைப் படுவது? வாழ்க்கையே அப்படிப் பாதியில் நைந்த கயிறு போல்தான் இருக்கிறது.

பானையில் அரிசி இல்லை; பரணில் விறகு இல்லை. கையில் இரண்டரை அணாவுக்கு மேல் காசு இல்லை. அவற்றைப் பிறரிடம் சொல்லிக் கடன் கேட்க விருப்பமும் இல்லை. பூரணி அழுதுகொண்டே குளித்தாள். குளிக்கும் போது அழுதால் யாரும் கண்டுகொள்ள முடியாதல்லவா? அழுகையும் குளிப்பு தானே? துக்கத்தில் குளிப்பதுதானே அழுகை! நீரில் குளித்துக் கொண்டே துக்கத்திலும் குளித்தாள் அவள். அநாதையாக விட்டுப்போன அம்மாவின் இலட்சுமிகரமான முகத்தை மனக்கண்களுக்கு முன் நினைவுக்கு கொணர முயன்றாள். அப்பாவின் முகமோ முயற்சியில்லாமல் நினைவில் வந்தது. குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றியும் உடம்பு குளிர்ந்ததே யொழிய நெஞ்சின் சூடு தணியவில்லை.

அம்மாவின் முகம் நினைவில் சிக்கிய போது நெஞ்சில் கனல் பிழம்பு போல் ஒரு சுடர் எழுந்தது. மீனாட்சியம்மனின் முகம் போல் தமிழ்ப் பண்பில் வந்த தாய்மை கனியும் அந்த முகம். 'பெண்ணே! நீ வாழு! வாழச்செய்!' என்று சொல்வதுபோல் உறுதியை உமிழ்ந்தது.

குளித்து முடித்ததும் பூரணி வெளியே புறப்படுவதற்குத் தயாரானாள். அழுகையின் காரணமாகக் கெண்டை மீனுக்குச் செந்நிறம் தீட்டினாற்போல் அவள் எழில் நயனங்கள் சிவந்திருந்தன. விரிந்து மலரும் செவியைத் தொடுவதுபோல் அகலும் அழகு அந்தக் கண்களுக்கு உண்டு.

"சாயங்காலம் வைத்தியர் வந்தால் தம்பியைப் பார்க்கச் சொல்லு. குழந்தை வெய்யிலில் தெருவில் அலையாமல் பார்த்துக் கொள். நான் வருவதற்கு அதிக நேரமாகும்" என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக் கொண்டு குடையை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டாள் பூரணி. நகரத்தில் எங்காவது ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டுதான் வீடு திரும்புவது என்று அப்போது அவள் உள்ளத்தில் ஒரு வைராக்கியம் பற்றியிருந்தது. வயிற்றில் பசி, மனதில் வைராக்கியம், கண்களில் ஒளி, கையில் சிறியதாய் நளினமாய்ப் பெண்கள் பிடித்துக் கொள்கிற மாதிரிக் குடை. மண்ணையும் வெப்பத்தையும் அதிகமாக உணர்ந்தறியா அந்த அனிச்சப்பூ கால்கள் நொந்தன. நோவை அவள் பொருட்படுத்தவில்லை.

கையிலிருந்த காசுக்கு எவ்வளவு தூரம் பஸ்ஸில் போக முடியுமோ, அவ்வளவு தூரம் போய் இறங்கிக் கொண்டு நடந்தாள். மனத்தில் தெம்பும், நடையில் வேகமும் கொண்டிருந்தாள் பூரணி. அவளுக்கு இப்போது வாழும் வெறி வந்திருந்தது.

நியாயமான வாழ்வைத்தேடி ஓர் இளம்பெண் இந்தப் பெரிய நகரத்தின் தெருக்களில் இப்படி அலைவதில் வெட்கமும் வேதனையும் படவேண்டியதில்லை. இதே மதுரையின் தெருக்களில்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சிலம்பும் கையுமாக ஒரு சோழ நாட்டுப் பெண் நியாயம் தேடினாள். பூரணி நியாயமான வாழ்வைத் தேடுகிறாள்.

அவளுடைய கண்கள் அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வாழ்வைத் தேடின. உதவி செய்து உழைப்பை வாங்கிக் கொள்ளும் கண்ணியமான மனிதர்களைத் தேடின. கண்ணோட்டமுள்ள (தாட்சண்யம்) நல்ல மனிதர்களைத் தேடின. வயிற்றுப் பசிக்கு வழி தேடின. 

ஆனால் அங்கே கோபுரங்கள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதைச் சுற்றி மனிதர்கள் எல்லாம் மனங்கள் உட்படச் சிறியவர்களாகத்தான் இருந்தார்கள். எங்கும் வேலை காலியில்லை. வேலை காலியிருந்தாலும் அதைக் கொடுக்க மனமில்லை. அப்படியே கொடுத்தாலும் அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மனம் இல்லை. "நீ கோபித்துக் கொள்ளாதே அம்மா! நீ என் பெண் மாதிரி நினைத்துக் கொண்டு சொல்கிறேன். உன்னைப் போல் இலட்சணமாக இருக்கிறவர்கள் இந்த மாதிரி நாலு பேர் நாலுவிதமா இருக்கிற இடத்தில் வேலை பார்க்க வரக்கூடாது. அதனால் வரும் உபத்திரவங்களை என்னால் தாங்க முடியாது" என்று உபதேசம் செய்து அனுப்பினார் ஒரு வயதான மானேஜர். இலட்சணமாயில்லா விட்டால் அதுவும் குறை; இலட்சணமாக இருப்பதும் குறை. அதிகத் திறமையும் குறை; அதிகச் சோம்பலும் குறை. நாக்கும் அதில் நரம்பும் இல்லாத விவஸ்தை கெட்ட உலகம் இது. நியாயத்தை யார் யாரிடம் இங்கே விசாரிப்பது? நியாயம் என்று ஒன்று இருந்தால்தானே விசாரிப்பதற்கு?

ஏமாற்றமும் பசியும் சோர்வுமாக மேலக்கோபுர வாசலும் டவுன் ஹால் ரோடும் சந்திக்கிற இடத்தில் வீதியைக் கடந்து கோபுர வாசலுக்காக நடந்து கொண்டிருந்தாள் பூரணி.

அந்த இடத்தில் - அது ஒரு நாற்சந்தி. தெற்கேயிருந்து ஒரு லாரியும் வடக்கேயிருந்து இன்னொரு லாரியும் மற்ற இரு புறமும் கார்களுமாகத் திடீரென்று பாய்ந்தன. மின்வெட்டும் நேரத்தில் அப்படி ஒரு நெருக்கடி அங்கே நேர்ந்தது. பூரணிக்கு எங்கே விலகுவது என்றே தெரியவில்லை. கண்கள் இருண்டன. தலை சுற்றியது. அப்படியே கையில் குடையோடு நடுவீதியில் அறுந்து விழும் முல்லைக்கொடி போல் சாய்ந்துவிட்டாள்.

இதே நகரத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஓர் இளம்பெண் நடு வீதியில் தடுமாறி விழுந்திருந்தால் எத்தனை மகாகவிகளின் உள்ளங்கள் துடித்துக் கொதித்துப் பாட முனைந்திருக்கும்? ஒரு பெண்ணுக்குத் துன்பம் வந்தால் ஓராயிரம் கவிகளுக்கு உள்ளம் துடிக்குமே? கண்ணகிக்கும் சகுந்தலைக்கும் துன்பம் வந்ததை இளங்கோவும், காளிதாசனும் காவியமாக்கினார்களே! அதற்கென்ன செய்யலாம்? பூரணி கவிகள் வாழும் தலை முறையில் பிறக்கவில்லையே? வெறும் மனிதர்கள் வாழ்கின்ற தலைமுறையில் அல்லவா அந்தப் பேதைப்பெண் வந்துவிட்டாள்.
 

5

சோதியென்னும் கரையற்ற வெள்ளம்

தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,

சோதியென்னும் நிறைவு இஃதுலகைச்

சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்

சோதியென்றதோர் சிற்றிருள் சேரக்

குமைந்து சோரும் கொடுமையிதென்னே!

                                                                                                 -- பாரதி

 

மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத் தள்ளி சோபாவில் அமர்ந்திருந்த அந்த அம்மாள் எழுந்து வந்து அருகில் நின்று ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தாள்.

"புதிய இடமாயிருக்கிறதே என்று கூச்சப் படாதே அம்மா! இதை உன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொள். ஓர் உறவினரை ஊருக்கு வழியனுப்பி விட்டு இரயில் நிலையத்திலிருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். டவுன்ஹால் ரோடு முடிந்து மேலக் கோபுரத் தெருவுக்குள் கார் நுழையத் திரும்பியபோது தான் நீ குறுக்கே வந்து சிக்கிக் கொண்டு அப்படி மயங்கி விழுந்தாய். உன்னை என் காரிலேயே எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். இப்போது நீ எங்கள் வீட்டில் இருக்கிறாய். கீழே விழுந்ததற்கு அதிகமாக ஆண்டவன் புண்ணியத்தில் உனக்கு வேறெந்த விபத்தும் ஏற்படவில்லை. கவலைப்படவோ, பயப்படவோ வேண்டாம்."

தெருவில் வந்து கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்ததைப் பற்றி அந்த அம்மா கூறியதைக் கேட்க வெட்கமாக இருந்தது பூரணிக்கு. என்ன நடந்தது என்பதை அந்த அம்மாள் கூறி விளக்கிய பின்புதான் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. நாத் தழுதழுக்க அந்த அம்மாளுக்கு நன்றி சொல்லத் தொடங்கினாள்.

"உங்களுக்கு எப்படி எந்த வார்த்தைகளால் நன்றி சொல்லப் போகிறேன்? தாயைப் போல் வந்து என்னைக் காப்பாற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்..."

"நன்றி இருக்கட்டும். காரும் வண்டியும் கூட்டமுமாக ஒரே நெருக்கடியாயிருக்கிற நாற்சந்தியில் அப்படித்தான் பராக்குப் பார்த்துக்கொண்டு நடப்பதா பெண்ணே? நல்ல வேளையும் நல் வினையும் உன் பக்கம் இருந்து காப்பாற்றியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறாய்." 

"இந்த விபத்தில் தப்பிவிட்டேன். நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதைவிடப் பெரிய விபத்து ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவரும் விரும்பியோ, விரும்பாமலோ அடைகிற விபத்து அது!"

"நீ என்ன சொல்கிறாய்? எதைப் பற்றிச் சொல்கிறாய்?"

"வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறேன்! அதுவும் ஒரு விபத்தாகத்தான் எனக்குப் படுகிறது."

இதைக் கேட்டு அந்த அம்மாள் சிரித்தாள். தும்பைப் பூச்சரம் போல் தூய்மைக் கீற்றாய்த் தோன்றி மறைந்தது அந்த நகை. ஒழுங்காய் அமைந்த வெண் பல்வரிசை அந்த அம்மாளுக்கு.

"இந்த வயதில் இப்படி நூற்றுக் கிழவிபோல் எங்கே பேசக் கற்றுக் கொண்டாய் நீ!"

"பேசக் கற்றுவிட்டதனால் என்ன இருக்கிறது? அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது?"

அந்த அம்மாள் முகம் வியப்பால் மலர்ந்தது. பித்தளை என்று தேய்த்துப் பார்த்து அலட்சியமாக எறிய இருந்த பொருளைத் தங்கம் என்று கண்டுகொண்டாற் போன்ற மலர்ச்சி அது. 'ஏதோ நடுத்தெருவில் மூர்ச்சையாகி விழுந்த பெண், சிறிது நேரத்துக்கு வைத்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்ற சாதாரண எண்ணம் மாறி பூரணியின் மேல் அந்த அம்மாளுக்கு அக்கறை விழுந்தது. மனோரஞ்சிதப் பூ எங்கிருந்தாலும் எப்போதிருந்தாலும் அதனால் மணக்காமல் இருக்க முடியாது. அழகியசிற்றம்பலம் தம் பெண்ணை அறிவுப் பிழம்பாய் உருவாக்கிவிட்டுப் போயிருந்தார். அவள் எங்கே பேசினாலும், யாரிடம் பேசினாலும், எப்போது பேசினாலும், மனோரஞ்சித மணம்போல் சொற்களில் கருத்து மணக்கிறது. அந்த மணத்தை நீக்கிப் பேச அவளாலேயே முடியாது.

"நிறையப் படித்திருக்கிறாய் போலிருக்கிறது. உன்னைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல், அம்மா! பட்டுக் கத்தரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ!"

தன்னைப் பற்றி அந்த அம்மாளிடம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்தானா என்ற தயக்கத்துடன் அந்தத் தாய்மை கனிந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பூரணி. காலையில் குளிக்கும் பொழுது மனங்குமுறியழுத சமயத்தில் நினைவு வந்ததே தாயின் முகம் அது மறுபடியும் அவளுக்கு நினைவு வந்தது. 

அதிக முதுமை என்றும் சொல்வதற்கில்லை. அதிக இளமை என்றும் சொல்வதற்கில்லை. நடுத்தர வயதுக்குச் சிறிது அதிகமான வயதுடையவளாகத் தோன்றிய அந்த அம்மாளின் முகத்தில் ஒரு சாந்தி இருந்தது. பூரணி தன் மனத்தை மெல்ல மெல்ல நெகிழச் செய்யும் ஏதோ ஓர் உணர்வை எதிரேயிருந்த முகத்தில் கண்டாள்.

"நான் உன்னைப் பற்றி கேட்பது தவறானால் மன்னித்துவிடு; விருப்பமிருந்தால் என்னிடம் சொல்வதில் தவறில்லை. நிறைய விரக்தி கொண்டவள் மாதிரி வாழ்க்கையே விபத்து என்று கூறினாயே, அதிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியுமா என்று அறிவதற்காகத்தான் இதை விசாரிக்கிறேன்."

பூரணி சுருக்கமாகத் தன்னைப் பற்றி சொன்னாள். குடும்பத்தின் பெருமைகளைச் சொல்லிப் பீற்றிக் கொள்ளவும் இல்லை; குறைகளாகச் சொல்லி அழவுமில்லை. சொல்ல வேண்டியதை அளவாகச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

"உன் தந்தையாரைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா. அவருடைய புத்தகங்கள் கூட இரண்டொன்று படித்திருக்கிறேன். எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். நீண்ட காலமாக கடலுக்கு அப்பால் இலங்கையில் இருந்துவிட்டு இப்போதுதான் ஊரோடு வந்துவிட்டோம். எங்களுக்கு அங்கே நிறையத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. என் கணவர் காலமான பின் என்னால் ஒன்றும் கட்டிக்காத்து ஆள முடியவில்லை. எல்லாவற்றையும் விற்றுக்கொண்டு ஊரோடு, வீட்டோடு வந்தாயிற்று. எனக்கு இரண்டு பெண்கள். ஒருத்தி பள்ளிக்கூடத்தில் எட்டாவது படிக்கிறாள். மூத்தவள் கல்லூரியில் படிக்கிறாள். ஏதோ கடவுள் புண்ணியத்தில் நடந்து கொண்டிருக்கிறது."

"உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா அம்மா?"

"என்னை மங்களேஸ்வரி என்று கூப்பிடுவார்கள் பூரணி. பார்த்தாயோ இல்லையோ, நான் எவ்வளவு மங்களமாக இருக்கிறேன் என்பதை?"

அந்த அம்மாள் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொல்வது போல்தான் இப்படிச் சொன்னாள். ஆனாலும் அந்தச் சொற்களின் ஆழத்தில் துயரம் புதைந்திருப்பதைப் பூரணி உணர்ந்தாள்.

சிரிப்பில் எப்போதுமே இரண்டு வகை. சிரிப்பதற்காகச் சிரிப்பது. சிரிக்காமல் இருக்கக்கூடாதே என்பதற்காகச் சிரிப்பது. இரண்டாவது வகைச் சிரிப்பில் துன்பத்தில் ஆற்றாமை ஒளிந்து கொள்கிறது. மங்களேஸ்வரி அம்மையார் தன் நிலையைப் பற்றி கூறிவிட்டுச் சிரித்த சிரிப்பில் ஆற்றாமை தெரிந்தது. 'வாழ்க்கை ஒரு விபத்து' என்று தான் கூறியபோதே அந்த அம்மாளின் வதனத்தில் மலர்ந்த தூய நகையையும் இந்தத் துயர நகையையும் மனத்துக்குள் ஒப்பிட்டுச் சிரித்தாள் பூரணி. 

மெதுவாகக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு பார்த்த போது ஜன்னல் வழியாகத் தெருவின் ஒரு பகுதி தெரிந்தது. அது தானப்ப முதலி தெரு என்று பூரணி அனுமானித்துக் கொண்டாள். தன் அனுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, "இது தானப்ப முதலி தெருதானே?" என்று அம்மாளைக் கேட்டாள். 'ஆமாம்' என்று பதில் வந்தது. பார்க்கும் போது செல்வச் செழிப்பைக் காட்டும் பெரிய வீடாகத்தான் தோன்றியது. பளிங்குக் கற்கள் பதித்த தரை. சுவர் நிறைய பெரிய பெரிய படங்கள். திரும்பின பக்கமெல்லாம் ஆள் உயரத்துக்கு நிலைக் கண்ணாடிகள். பட்டு உறை போர்த்திய பாங்கான சோபாக்கள். விதவிதமான மேஜைகள், வீட்டில் செல்வச் செழுமை தெரிந்தது வீட்டுக்குரியவளிடம் அன்பின் எளிமை தெரிந்தது. தரையிலும், சுவரிலும் செல்வம் மின்னியது. தாய்மை மின்னியது. அடங்கி ஒடுங்கி அமைந்த பண்பு மின்னியது. ஓடியாடித் திரிந்த உலக வாழ்வு இவ்வளவுதான் என்று வாழ்ந்து மறந்த அசதி தெரிந்தது; வாழ்வு முடிந்த அலுப்புத் தெரிந்தது.

குழந்தையின் சுட்டு விரலில் பாலைத் தோய்த்துக் கோடிழுத்த மாதிரி நெற்றியில் வரி வரியாகத் திருநீறு துலங்க மலர்ந்த நெற்றியோடு மங்களேஸ்வரி அம்மையார் பூரணியின் அருகில் வந்து நின்றாள்.

"என்னம்மா இப்படிப் பார்க்கிறாய்? நான் வரும்போது பாழடைந்த அரண்மனை மாதிரி உப்புப் படிந்த சுவரும் பெருச்சாளிப் பொந்துகள் மயமான தரையுமாக இருந்தது இந்த வீடு. மூத்த பெண்ணுக்கு ஆடம்பரத்தில் அதிகப் பற்று. மூன்று மாதத்தில் பணத்தை வாரியிறைத்து இப்படி மாற்றியிருக்கிறாள். எனக்கு இதெல்லாம் அலுத்துவிட்டது, அம்மா! ஏதோ செல்லமாக வளர்ந்துவிட்ட குழந்தைகள் சொன்னால் தட்ட முடியாமல் போகிறது."

"உங்கள் மூத்த பெண் எந்தக் கல்லூரியில் படிக்கிறாள்?"

"அமெரிக்கன் கல்லூரியில் சேர்த்திருக்கிறேன். இந்த ஊரில் இது ஒரு வசதிக் குறைவு பூரணி. கல்லூரிகள் எல்லாம் நகரின் நான்கு புறமும் தனித்தனியே சிதறியிருக்கின்றன. காலையில் தல்லா குளம் போனால் ஐந்து மணிக்கு வீடு திரும்புகிறாள். கார் இருக்கிறது. டிரைவர் இருக்கிறான். இந்த பெரிய வண்டியில் போய் வர வெட்கமாக இருக்கிறதாம் அவளுக்கு. சிறிதாக ஒரு புதுக் கார் வாங்கித் தரவேண்டுமாம். அதுவரையில் பஸ்ஸில் தான் போவேன் என்று பிடிவாதமாகப் போய் வந்து கொண்டிருக்கிறாள். சிறிய காருக்கு சொல்லியிருக்கிறேன். பணத்தைக் கொடுக்கிறேனென்றாலும் கார் சுலபத்திலா கிடைக்கிறது?"

"இந்த ஊரில் இரண்டு பெண்கள் கல்லூரிகள் இருக்கும்போது எப்படி ஆண்கள் கல்லூரியில் சேர்க்க மனம் வந்தது உங்களுக்கு?" இந்தக் கேள்வியைத் துணிந்து கேட்டுவிட்ட பின் அந்த அம்மா முகத்தைப் பார்த்தபோது கேட்காமல் இருந்திருக்கலாம் என்று பட்டது பூரணிக்கு.

"இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் முற்போக்கான கருத்துடையவள், பூரணி! பெண்கள் வாழ்க்கை முழுவதும் ஒரே வட்டத்தில் பழக வேண்டியிருக்கிறது. திருமணமாகும் முன்னும் சரி, திருமணமான பின்னும் சரி, மாறுபட்ட சூழ்நிலையில் பழக வாய்ப்பே இல்லை அவர்களுக்கு. படிக்கிற காலத்திலாவது அந்தச் சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்தால் பிற்கால வாழ்வுக்கு நல்லதென்று நினைக்கிறவள் நான்."

பூரணி மெல்லச் சிரித்தாள். பிறரோடு கருத்து மாறுபடும் போது முகம் சிவந்து கடுகடுப்போடு தோன்றும் பெரும்பாலோர்க்கு. ஆனால் பூரணியின் வழக்கமே தனி. தனக்கு மாறுபாடுள்ள கருத்து காதில் விழும்போது அவள் மாதுளைச் செவ்விதழ்களில் புன்னகை ஓடி மறையும். அப்பாவிடமிருந்து அவளுக்குக் கிடைத்த பயிற்சி அது. பூரணியின் புன்னகையை மங்களேஸ்வரி அம்மாள் பார்த்துவிட்டாள்.

"வட்டத்திற்கு மூலைகள் இல்லை என்பதுதானே கணிதம்! பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே! பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி. அவை வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாகவும் இருக்க வேண்டுமென்று நாமாக நினைப்பதுதான் பெரும் தவறு."

"வாழ்க்கைக்குச் சதுரப்பாடுதான் (சாமர்த்தியம்) அதிகம் வேண்டியிருக்கிறது. சற்று முன் நீ கூட இதே கருத்தைத்தான் வேறொரு விதத்தில் சொன்னாய், பூரணி."

"வட்டத்தில் ஒழுங்கு உண்டு. வழி தவற வாய்ப்பில்லை. சதுரத்தில் சாமர்த்தியம் உண்டு. தவறவும் இடம் உண்டு. பெண்ணின் வாழ்க்கை ஒரே வட்டத்தில் இருப்பதில் தவறு இல்லை என்பது என் தந்தையின் கருத்து."

மங்களேஸ்வரி அம்மாளின் வியப்பு மேலும் அதிகமாயிற்று. 'பின் குஷ'னில் ஊசி இறக்குகிற மாதிரி இந்த வயதில் இந்தப் பெண்ணால் நறுக்கு நறுக்கென்று எவ்வளவு கச்சிதமாகப் பதில் சொல்ல முடிகிறது. தீபத்தில் எப்போதாவது சுடர் தெறித்து ஒளி குதிக்கிறதுபோல் கருத்துக்களைச் சொல்லும்போது இந்தப் பெண்ணின் முகத்திலும் விழிகளிலும் இப்படி ஓர் ஒளியின் துடிப்பு எங்கிருந்துதான் வந்து குதிக்கிறதோ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அந்த அம்மாள்.

தன்னை அங்கேயே சாப்பிடச் சொல்லி அந்த அம்மாள் வற்புறுத்திய போது பூரணியால் மறுக்க முடியவில்லை. அந்தத் திருநீறு துலங்கும் முகத்துக்கு முன்னால், தெளிவு துலங்கும் வதனத்துக்கு முன்னால் பூரணியின்

"நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்" என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேஜையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேஜை அது. பூரணி தடுமாறினாள். அப்படி அமர்ந்து உண்பது அவளுக்குப் புதிய பழக்கம். "உனக்கு மேஜையில் சாப்பிட்டுப் பழக்கமில்லை பூரணி?"

"இல்லை."

"பார்த்தாயா; இதற்குத்தான் மாறுபட்ட சூழ்நிலையில் பழக வேண்டுமென்பது" என்று சொல்லி சிறிது கேலியாக நகைத்தாள் மங்களேஸ்வரி அம்மாள்.

"மன்னிக்க வேண்டும் அம்மா! உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருநீறு அணிந்த நெற்றியும் தூய்மை விளங்கும் தோற்றமுமாகப் பழமையில் வந்து பண்பைக் காட்டுகிறீர்கள். பேச்சிலோ புதுமை காட்டுகிறீர்கள். சிலவற்றுக்குப் பழமையைப் போற்றுகிறீர்கள். சிலவற்றுக்கு புதுமையைப் பேணுகிறீர்கள். நேற்று வந்தப் பழக்கத்துக்கு ஆயிரங்காலத்துப் பழக்கத்தை விட்டுக் கொடுப்பதுதான் மாறுபட்ட சூழ்நிலையா? தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடுவது எனக்குப் பழக்கம். என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும்? அன்புக்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். கேலிக்குப் பயந்து பழக்கத்தை மாற்றக் கூடாது. எனக்கு மேஜையில் சாப்பிடத் தெரியாது. உங்களுக்குக் கேலியாகப் படுமானால் நான் தரையில் இலையை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து விடுவேன். நீங்கள் கீழே வந்தால் நான் உங்களைக் கேலி செய்ய நேரிடும்."

" அப்பா! பெரிய குறும்புக்காரியாக இருக்கிறாயே! உன்னிடம் விளையாட்டாக வாயைக் கொடுத்தால் கூட தப்ப முடியாது போலிருக்கிறதே."

பூரணி தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.

"உன் தந்தை மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் உனக்குப் பொருத்தமானதாகப் பேர் வைத்தாரே, அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்துவேன் நான்."

தந்தையைப் பற்றி பேச்சு எழுந்ததும் பூரணியின் இதழ்களில் சிரிப்பு மறைந்தது. அவள் பெருமூச்சு விட்டாள். முகத்தில் சோகம் கவிழ்ந்தது. பேச்சு நின்று மௌனம் சூழ்ந்தது.

சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பூரணி புறப்படுவதற்காக எழுந்தாள்.

"வீட்டில் தங்கை, தம்பிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போய்த்தான் ஏதாவது சமைத்துப் போட வேண்டும். எனக்கு விடை கொடுத்தால் நல்லது?"

"போகலாம் இரு. இந்த உச்சி வெய்யிலில் போய் என்ன சமைக்கப் போகிறாய்? எல்லாம் ஒரேயடியாகச் சாயங்காலம் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம். ஐந்து ஐந்தரை மணிக்கு சின்னப் பொண்ணும் பெரிய பொண்ணும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்து விடலாம். டிரைவரிடம் சொல்லி காரிலேயே உன்னைக் கொண்டுவிடச் சொல்கிறேன்." என்று கெஞ்சினாற் போல் அன்போடு வேண்டிக் கொண்டாள் மங்களேஸ்வரி அம்மாள். காப்பாற்றி உதவிய நன்றிக் கடமை அந்த அம்மாவிடம் எதையும் உடனடியாக மறுத்துவிட வாய் எழவில்லை பூரணிக்கு. கருத்துக்களை மறுத்துப் பதில் பேச நா எழும்பிற்று; விருப்பங்களை மறுத்துப் பேச நா எழவில்லை; உட்கார்ந்தாள்.

அன்று காலையிலிருந்து நடந்ததை ஒவ்வொன்றாக நினைத்த போது விநோதமாகத்தான் இருந்தது. முதல் நாள் திருட வந்த கிழவன் பாம்பு கடிபட்டு இறந்த செய்தி, வயிற்றுப் பசியுடன் மனத்தில் விரக்தியோடு மதுரை நகரத் தெருக்களில் வேலை தேடி அலையும்போது மயங்கி விழுந்தது - மங்களேஸ்வரி அம்மாள் காப்பாற்றியது, அந்த அம்மாளுடன் பேசிய விவாதப் பேச்சுக்கள் எல்லாம் நினைத்துப் பார்த்த போது கதைகளில் படிப்பது போலிருந்தது. வாழ்க்கையில் நடக்காமலா கதைகளில் எழுதுகிறார்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாய்ப் படிப்பதுபோல் எதிர்பாராத புதிய புதிய நிகழ்ச்சித் திருப்பங்களை நினைப்பதில் சுவை கண்டாள் பூரணி.

மங்களேஸ்வரி அம்மாள் பூரணிக்குப் பொழுது போவதற்காக மாடிக்கெல்லாம் அழைத்துக் கொண்டு போய் வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். இலட்சங்களை இலட்சியமில்லாமல் செலவழித்து வீட்டை அழகுபடுத்தியிருந்தார்கள். மாடி அறையில் பெரிய கடிகாரம் ஒன்று இருந்தது.

"இது மணியடிக்கிறபோது இன்னிசைக் குரல் எழுப்பும். இலங்கையிலிருந்து கொண்டு வந்தது. கொஞ்சம் இரு, நாலரையாகப் போகிறது. இப்போது ஒரு மணியடிக்கும். நீ கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவாய்" என்று பூரணியை அந்த அழகிய பெரிய கடிகாரத்தின் முன் கையைப் பிடித்து நிறுத்தினாள் மங்களேஸ்வரி அம்மாள்.

பியானோ ஒலிபோல் நீட்டி முழக்கி இனிதாய் ஒரு முறை ஒலித்தது கடிகாரம். அந்த ஒலி எதிரொலித்து அதிர்ந்து அழகாய் அடங்கிய விதம் தேன் வெள்ளம் பாய்ந்து பாய்ந்த வேகம் தெரியாமல் வற்றினாற் போலிருந்தது. பூரணி சிரித்துக் கொண்டே சொன்னாள். "கடிகாரம் காலத்தின் கழிவைக் காட்டுவது. மனிதனுடைய உயிர் நஷ்டம் அதில் தெரிகிறது. ஒவ்வொரு மணி அடிக்கும் போதும் அதில் ஓர் அழுகை ஒலி கேட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும். புத்திசாலித்தனமாகவும் இருக்கும்."

"போடி அசட்டுப் பெண்ணே? உனக்கு வாழ்க்கையை ரசிக்கவே தெரியவில்லை. என் வயதுக்கு நான் இப்படி அலுத்துப் பேசினால் பொருந்தும். நீ இப்படிப் பேசுவது செயற்கையாக இருக்கிறது."

"செயற்கையோ, இயற்கையோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்."

"எல்லோருக்கும், தோன்றாததாகத்தான் உனக்குத் தோன்றுகிறது."

"நான் மாறுபட்ட சூழ்நிலையில் பழகாதவள். ஒரே மாதிரி நினைக்கிறவள். எனக்குத் தோன்றுவது தப்பாகவும் இருக்கலாம்." 

"பார்த்தாயா? பழையபடி வம்புக்கு இழுக்கிறாயே என்னை!"

பழமைக்கும் புதுமைக்கும் பாலம் போலிருக்கும் அந்த அம்மாளிடம் பேசுவதே இன்பமாக இருந்தது பூரணிக்கு. குழந்தையைச் சீண்டிவிட்டு அதன் கோபத்தை அழகு பார்ப்பது போல் அந்த அம்மாளுக்கும் பூரணியின் வாயைக் கிண்டிவிட்டு வம்பு பேசுவது இன்பமாக இருந்தது.

ஐந்து மணிக்கு அந்த அம்மாளின் மூத்த பெண் கல்லூரியிலிருந்து வந்தாள். "கல்லூரி வேலை நாட்களை அதிகமாக்கிய பின் சனிக்கிழமை கூட வகுப்பு வைத்து உயிரை வாங்குகிறார்கள் அம்மா" என்று அலுத்தபடியே படிப்பைக் குறை கூறிக் கொண்டு வந்தாள் படிக்கிற பெண். அவளுடைய தோற்றத்தைப் பார்த்ததும் பூரணி அசந்து போனாள். பஞ்சாபி பெண்களைப் போலப் பைஜாமாவும் சட்டையுமாகக் காண்போரை வலிந்து மயக்கும் தோற்றம். மேகப் பிசிறுகளைத் துணியாக்கினாற் போலத் தோளில் ஒரு மெல்லிய தாவணி. பூரணிக்கு கண்கள் கூசின. தமிழ்ப் பண்போடு பார்த்துப் பழகிய கண்கள் அவை.

"பெண் அழகாயிருக்கலாம். அது அவளுடைய தவறு இல்லை. ஆனால் அழகாயிருப்பதாகத் தானே பிறரை நினைக்கச் செய்ய வலிந்து முயல்வது எத்தனை பெரிய பாவம்" என்றுதான் அந்தப் பெண்ணின் கோலத்தைக் கண்டபோது பூரணி எண்ணினாள். எண்ணியதை யாரிடம் சொல்வது? யாரிடமும் சொல்லவில்லை.

மங்களேஸ்வரி அம்மாள் தன் பெண்ணுக்குப் பூரணியை அறிமுகப்படுத்தினாள். அந்தப் பெண்ணுக்குப் பார்வை, பேச்சு எல்லாமே அலட்சியமாக இருந்தன. அந்தப் பெண் ஆங்கிலமும் தமிழும் கலந்து பெரிதாகச் சிரித்து கலகலப்பாகப் பேசினாள். பெண்ணின் பெயர் 'வசந்தா' என்று மங்களேஸ்வரி அம்மாளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் பூரணி. சிறிது நேரம் பேசினோம் என்று பேர் செய்த பின்னர் பூரணியைக் கீழே தனியே தள்ளி விட்டு விட்டு இரட்டைப் பின்னல் சுழல மாடிக்குப் போய் விட்டாள் வசந்தா. அவள் தலை மறைந்ததும் மங்களேஸ்வரி அம்மாள், "இவளுக்கு ஆடம்பரம் கொஞ்சம் அதிகம்" என்று பூரணியின் மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் சிரித்தவாறு சொன்னாள். பூரணி ஒன்றும் கூறவில்லை. பதிலுக்கு மெதுவாகச் சிரித்தாள்.

"இளையவளுக்குக்கூட இன்று பள்ளிக்கூடம் கிடையாது. ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் (தனி வகுப்பு) என்று போனாள். இன்னும் காணவில்லையே" என்று அந்த அம்மாள் சொல்லிக் கொண்டிருந்த போதே இளைய பெண் உள்ளே நுழைந்தாள். அகலக் கரைபோட்ட பட்டுப் பாவாடையும் தாவணியுமாக இந்தப் பெண் அடக்கமாய் அம்மாவைக் கொண்டிருந்தாள்.

"செல்லம்! உனக்கு இந்த அக்காவை அறிமுகப்படுத்தப் போகிறேன். இப்படி வா" என்று இளைய பெண்ணை அழைத்தாள் தாய். இளைய பெண் அடக்கமாக வந்து நின்று கைகுவித்து வணங்கினாள். பூரணிக்கு இவளைப் பிடித்திருந்தது. குடும்பப் பாங்கான பெண்ணாகத் தெரிந்தாள் செல்லம்.

"இவளுக்குப் பேர் மட்டும் செல்லமில்லை. எனக்கும் இவள் தான் செல்லம்" என்று பெருமையோடு இளையப் பெண்ணைப் பற்றிச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள்.

"இந்தப் பெண்ணிடம் தான் உங்களைக் காண்கிறேன்" என்று தயங்காமல் தனக்குள்ள கருத்தை அந்த அம்மாவிடம் சொன்னாள் பூரணி. அப்போது மூத்தவள் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். பூரணி கூறியது அவள் காதில் விழுந்திருக்குமோ என்று தெரியவில்லை; விழுந்திருந்தாலும் குற்றமில்லை என்பதுதான் பூரணியின் கருத்து.

"உன்னைக் காப்பாற்றியதற்கு வெறும் நன்றி மட்டும் போதாது. அடிக்கடி நீ இங்கு வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். நானும் வருவேன். நீ சொல்லியிருக்கிறாயே வாழ்க்கை விபத்து; அதிலிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் ஒரு வழி செய்கிறேன். சீக்கிரமே செய்கிறேன். இப்போது நீ வீட்டுக்குப் புறப்படலாம்" என்று கூறி தன் காரிலேயே பூரணியை ஏற்றி அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி புறப்பட்டாள். தானப்ப முதலி தெருவிலிருந்து திரும்பி மேலக் கோபுரத் தெருவில் கார் நுழைந்தது. மாலை மயங்கி இரவு மலரும் நேரம். வீதியிலே விளக்கொளி வெள்ளம். கண்ணாடி மேல் விழுந்த உளுந்துகள் சிதறிப் பிரிவதுபோல் கும்பல் கும்பலாக மக்கள் கூடிப் பல்வேறு வழிகளில் பிரியும் கலகலப்பான இடம் அது. சினிமாவிற்கு நிற்கிற கியூ வரிசை, கடைகளின் கூட்டம், நீலமும் சிவப்புமாக விளம்பரம் காட்டும் மின்சாரக் குழல் விளக்குகள் எல்லாம் பார்த்துக் கொண்டே பூரணி காரில் சென்றாள்.

கடைகளில் மின்விளக்குகளில் நியாயம் மொத்தமாகவும் சில்லரையாகவும் எரிந்து கொண்டிருந்தது. வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிற கூட்ட நேரம். வடக்கத்திக்காரன் கடை ஒன்றிலிருந்து சப்பாத்தி நெய்யில் புரளும் மணம் மூக்கைத் துளைத்தது. சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய்வது போன்று இலங்கிற்று அந்த வீதி. காரின் வேகத்தில் ஓடுகிற திரைப்படம் போல அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போன அவள் மனதில் சோர்வு வந்து புகுந்தது. வீட்டையும், பசியோடு விட்டு வந்த தங்கை, தம்பியரையும் நினைக்கிற போது கவலை வந்து நிறைந்தது. கார் திரும்பித் திரும்பி வழிகளையும் வீதிகளையும் மாற்றிக்கொண்டு விரைந்தது.

'சாயங்காலம் கமலாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தேன். அவள் வேறு வந்து காத்திருப்பாள். குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து வீட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டிருந்தாளானால் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்குமே! கடவுளே, உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரு இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய்? வயிற்றையும் வாய்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய்?' 

பூரணியின் நினைவு நிற்கவில்லை. ஆனால் கார் நின்று விட்டது. இரயில்வே கேட் அடைத்திருந்தது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் போகும் சாலையில் மூன்று இரயில்வே கேட்டுகள் குறுக்கிடுகின்றன. அந்தச் சாலையில் அது ஓர் ஓயாத தொல்லை. ஆண்டாள் புரத்துக்கு அருகில் உள்ள கேட் மூடியிருந்தது. தெற்கேயிருந்து எக்ஸ்பிரஸ் போகிற நேரம்.

எக்ஸ்பிரஸ் போயிற்று. கேட் திறந்தார்கள். கார் மறுபடியும் விரைந்தது. வீட்டு வாசலில் போய் எல்லோரும் காணும்படி காரிலிருந்து இறங்க விரும்பவில்லை அவள். வீதி முகப்பில் மயில் மண்டபத்துக்கு அருகிலேயே இறங்கிக் கொண்டு விட்டாள். "அம்மா வீட்டைப் பார்த்துக் கொண்டு வரச் சொன்னாங்களே" என்றான் டிரைவர். அவனுக்கு அங்கே நின்றே தன் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு நடந்தாள் பூரணி. கார் திரும்பிப் போயிற்று. வீட்டு வாசலுக்கு வந்தவள் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு திகைத்தாள்.

 

6

 

நிலவைப் பிடித்துச் - சிறு

கறைகள் துடைத்துக் - குறு

முறுவல் பதிந்த முகம்,

நினைவைப் பதித்து - மன

அலைகள் நிறைத்துச் - சிறு

நளினம் தெளித்த விழி

 

பசித்த வயிறும் கொதித்த மனமுமாகப் பூரணி என்னும் பெண் மதுரை நகரத்து நாற்சந்தியில் மயங்கி விழுந்தபோது மங்களேஸ்வரியம்மாளும், இந்தக் கதையின் வாசகர்களும் தான் அனுதாபப்பட்டு உள்ளம் துடித்தார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று அங்கே அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில் ஓர் இளம் கவியுள்ளமும் துடித்திருக்கிறது! வெறும் மனிதர்கள் வாழுகிற தலைமுறையின் துன்பத்தைக் கண்டு கொதித்திட ஒரு கவியுள்ளமா? 'நியூஸ் ரிப்போர்ட்டர்கள்' வாழும் நூற்றாண்டு அல்லவா இது? 'நடுத்தெருவில் பெண் மயங்கி விழுந்தாள்' என்று 'நியூஸ்' எழுதலாம். கவி எழுதத் துடித்த அந்த உள்ளம் யாருடையது? கைகள் யாருடையவை? அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதல்லவா? ஆச்சரியகரமான அந்த இளைஞனைச் சந்திக்கலாம் வாருங்கள்.

 

அதோ, அந்த நாற்சந்திக்கு மிக அருகில் கிழக்கைப் பார்த்த வாயில் அமைந்த 'அச்சாபீஸ்' ஒன்று தெரிகிறதே; அதற்குள் நுழைந்து அங்கே நடப்பதைக் கவனிக்கலாம்.

'மீனாட்சி அச்சகம் - எல்லாவிதமான அச்சு வேலைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். குறித்த நேரம் - குறைந்த செலவு' என்று பெரிய விளம்பரப் பலகை வெளியே தொங்குகிறது. அப்போது சரியான பிற்பகல் நேரம். அச்சகத்து முகப்பு அறையைத் தெருவிலிருந்து பார்த்தாலும் அறையிலிருந்து தெருவைப் பார்த்தாலும் நன்றாகத் தெரிகிற விதத்தில் அது அமைந்திருக்கிறது. வாசலில் வந்து நின்ற காரிலிருந்து அச்சகத்தின் உரிமையாளர் போல் தோற்றமளிக்கும் முதியவர் ஒருவர் இறங்கி வேகமாக உள்ளே வருகிறார். முகப்பு அறைக்குள் நுழைகிறார். மேஜையில் எதையோ தேடுகிறார். நோட்டுப் புத்தகம் போல் பெரிய டைரி ஒன்று விரிந்து கிடக்கிறது. கண்ணாடியை மாட்டிக் கொண்டு எடுத்துப் படிக்கத் தொடங்குகிறார். படிக்கப் படிக்க முகத்தில் சிடுசிடுப்பும் சீற்றமும் பரவுகின்றன.

"இந்தச் சமூகம் எங்கே உருப்படப் போகிறது? உச்சி வெயிலில் கேள்வி முறையின்றி ஒரு பெண் நடுத்தெருவில் சோர்ந்து விழுந்து கிடந்தாள். காரும் லாரியும் கூட்டமுமாக வேடிக்கைப் பார்க்கத்தான் எவ்வளவு நெருக்கம். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு ஒரு பெண் இப்படி மண்ணில் தளர்ந்து விழலாமா? பெண் மண்ணில் விழும் போது இந்த நாட்டின் மங்கலப் பண்புகளெல்லாம் மண்ணில் உடன் விழுகின்றனவே. ஐயோ! என் உள்ளம் கொதிக்கிறதே. இந்த மதுரை நகரத்துத் தெருக்களில் தமிழ் வாழ்ந்து செங்கோல் செலுத்தியதாம். செல்வமும் செழுமையுமாகப் பெருமை முரசறைந்ததாம்! எல்லாம் வாழ்ந்த பெருமைகள், வாழ்கின்ற பெருமை ஒன்றுமில்லை.

இன்று என் கண்கள் இந்த்த் தெருக்களில் எதைப் பார்க்கின்றன? ஏமாற்றத்தைச் சுமந்து திரியும் மனிதர்களைப் பார்க்கிறேன். ஏழ்மையையும் ஏக்கத்தையும் சுமந்து நடமாடும் உடல்களைக் காண்கிறேன். குழந்தைகளும் கையுமாகக் கந்தல் புடவையோடு பிச்சைக்கு வரும் பெண் தெய்வங்களைப் பார்க்கிறேன். நெஞ்சு பொறுக்குதில்லையே! அழகும், படிப்பும், பண்பும் உள்ள ஒரு பெண் இப்படி மண்ணில் விழலாமா? ஏன் விழுந்தாள்? யாரால் விழ நேர்ந்தது? அடே, அரவிந்தா! நீ கவிஞன். உன்னுடைய உள்ளம் இன்னுமா துடிக்கவில்லை? இதைக் கண்டுமா கொதிக்கவில்லை? பாடு, துடிப்பதெல்லாம் திரட்டி ஏதாவது பாடி வை. நீ அச்சாபீஸில் 'புரூப்' திருத்தப் பிறந்தவனா? இல்லை, இல்லவே இல்லை. நீ கவி உள்ளம் படைத்தவன். சமூகத்தைத் திருத்தி நேர் செய்யப் பிறந்தவன்."

படித்துக் கொண்டே வந்த முதியவரின் முகம் சீற்றத்தின் எல்லையைக் காட்டியது. அவ்வளவு சினத்தையும் கையில் சேர்த்து மேஜை மேலிருந்த மணியை ஓங்கிக் குத்தினார். இரண்டு, மூன்று முறை அப்படிக் குத்தி மணி அதிர்ந்த பின் ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து அடக்க ஒடுக்கமாக நின்றான். 

"அந்தக் கழுதை அரவிந்தன் இருந்தால் உடனே கூப்பிடு, வரவரப் பைத்தியம் முற்றித்தான் போய்விட்டது பையனுக்கு!"

சிறுவன், அரவிந்தன் என்று பெயர் குறிக்கப்பெற்ற ஆளைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்காக அச்சகத்தின் உட்புறம் ஓடினான். பலவிதமான அச்சு எந்திரங்களின் ஓசைக்கிடையே அச்சுக் கோர்ப்பவர்களுக்குப் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த ஓர் அழகிய வாலிபனைப் போய் கூப்பிட்டான் சிறுவன். சிவந்த நிறம், உயர்ந்த தோற்றம். காலண்டர்களில் கண்ணனும் இராதையுமாகச் சேர்ந்து வரைந்துள்ள ஓவியங்களில் குறும்பும் அழகும் இணைந்து களையாகத் தோன்றுமே கவர்ச்சியானதொரு கண்ணன் முகம் அதுபோல் எடுப்பான முகம் அந்த வாலிபனுக்கு. கதர் ஜிப்பாவும் நாலு முழம் வேட்டியுமாக எளிமையில் தோன்றினான் அவன்.

"சார் முதலாளி வந்திருக்காரு. உங்களைக் கூப்பிடறாரு. மேஜை மேலிருந்து எதையோ எடுத்துப் படிச்சுட்டு ரொம்பக் கோபமாயிருக்காருங்க..."

தேடி வந்த சிறுவன் பின் தொடர வாலிபன் முன்புறத்து அறையை நோக்கி விரைந்தான். மனத்தில் துணிவையும் நம்பிக்கையையும் காட்டுகிற மாதிரி அவனுடைய நடை கூட ஏறு போன்று பீடு நடையாக இருந்தது!

முன்புறத்து அறை வாசலில் அவன் தலை தென்பட்டதோ இல்லையோ! அவர் சீறிக் கொண்டு இரைந்தார்.

"அரவிந்தா! இதென்னடா இது உளறல்? உன்னை இங்கே நான் 'ப்ரூப்' திருத்துவதற்காகத்தான் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன். சமூகத்தைத் திருத்துவதற்காக அல்ல."

அவர் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தவுடன், அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு சற்றே வெட்கத்தோடு தலை குனிந்தான். அப்போதும் அந்த முகத்தின் அழகு தனியாகத் தெரிந்தது. நீள முகம். அதில் எழிலான கூரிய நாசி எடுப்பாக இருந்தது.

"என்னடா நான் கேட்கிறேன், பதில் சொல்லாமல் கல்லடி மங்கன் மாதிரி நிற்கிறாய்? பத்து மணியிலிருந்து சாயங்காலம் ஐந்து மணி வரையில் இந்த வேலைதான் தினம் இங்கே நடைபெறுகிறதோ?"

"இல்லை சார்!... இன்றைக்கு மத்தியானம் இங்கே எதிர்த்தாற்போல் நடுத்தெருவில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டாள். அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த நான் ஏதோ மனதில் தோன்றியதையெல்லாம்..."

"மனத்தில் தோன்றியதையெல்லாம் அப்படியே கவிதையாகத் தீட்டிவிட்டாயோ?" 

"அதில்லை சார். இப்படி ஏதாவது தோன்றினால் அதை இந்த டைரியில் எழுதி வைப்பது வழக்கம்."

"ஆகா! எழுதி வைக்காமல் விட்டுவிடலாமா பின்னே? அப்புறம் உலகத்துக்கு எத்தனை பெரிய நஷ்டமாகப் போய் விடும். போடா கழுதை; அச்சுக்கு வந்திருக்கிற வேலைகளை யெல்லாம் தப்பில்லாமல் செய்து நல்ல பேர் வாங்க வழியில்லை. கவி எழுதுகிறானாம் கவி. உருப்படாத பயல்."

சொல்லிவிட்டு நோட்டுப் புத்தகத்தை அவன் முகத்துக்கு நேரே வீசி எறிந்தார் மீனாட்சி அச்சகத்தின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. நோட்டுப் புத்தகம் கீழே விழுந்து விடாமல் இரண்டு கைகளாலும் எட்டிப் பிடித்துக் கொண்டான் அரவிந்தன். அவனுக்கு அந்த நோட்டுப் புத்தகம் உயிர் போன்றதல்லவா? எத்தனை எத்தனை உயர்ந்த குறிப்புகளையும் உணர்ச்சிகளைத் துண்டு துண்டாக வெளியிடுகிற கவிதைகளையும் அவன் அந்த நோட்டுப் புத்தகத்தின் பக்கங்களில் செல்வம் போல் எழுதி வைத்திருக்கிறான். அவருக்குத் தெரியுமா அதன் அருமை?

நோட்டை வீசி எறிந்த சூட்டோடு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே அச்சுவேலை நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் தான் எழுதியிருந்த கவிதைகளைத் தானே ஒரு முறை கள்ளத்தனமாக ரசித்து விடும் ஆவலுடன் அவசர அவசரமாக நோட்டைப் பிரித்தான் அரவிந்தன். 'நிலவைப் பிடித்து' என்று தொடங்கிய முதல் இரண்டு வரிகளை மனத்துக்குள்ளேயே விரைவாகப் படித்த பின் மற்ற வரிகளை சத்தத்தோடு வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினான். 

 

"தரளம் மிடைந்து - ஒளி

தவழக் குடைந்து - இரு

பவளம் பதித்த இதழ்

முகிலைப் பிடித்துச் சிறு

நெளியைக் கடைந்து - இரு

செவியில் திரிந்த குழல்

அமுதம் கடைந்து - சுவை

அளவிற் கலந்து - மதன்

நுகரப் படைத்த எழில்"

 

படித்துக் கொண்டே வரும் போது, அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்னநடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுக்குள் மறையாக் காட்சிகளாய் நின்றன. அசை போடுவதுபோல் பாட்டை மறுபடியும் மறுபடியும் சொல்லி இன்புற்றான். 'நான் கூட நன்றாகத்தான் பாடியிருக்கிறேன். என்ன சந்தம், என்ன பொருளழகு' என்று தனக்குத்தானே பெருமையாகச் சொல்லிக் கொண்டான். அதற்குள் முதலாளியின் அதிகாரக் குரல் அவனை விரட்டியது. நோட்டுப் புத்தகத்தை ஒளித்து வைத்துவிட்டு உள்ளே ஓடினான்.

"ஏம்பா அரவிந்தா? அந்த நாவல் புத்தகம் ஒண்ணு வேலை செய்ய எடுத்துக் கொண்டோமே 'அயோக்கியன் எழுதிய அழகப்பனின் மர்மங்கள்' என்று..."

"சார்... சார்... தப்பு அழகப்பன் எழுதிய 'அயோக்கியனின் மர்மங்கள்' என்பதுதான் சரியான தலைப்பு."

"ஏதோ ஒரு குட்டிச் சுவரு... அது எத்தனை பாரம் முடிந்திருக்கிறது."

"பத்துப் பாரம் முடித்தாகிவிட்டது."

"பத்தா! சரி... சுருக்கப் பார்த்து விரைவாக முடி. எதற்குச் சொல்கிறேன் என்றால், நானே சொந்தத்தில் பெரிதாக ஒரு வெளியீட்டு வேலை எடுத்துக் கொள்ள நினைத்திருக்கிறேன். அது சம்பந்தமாக நீ கூட இன்று ஓர் இடத்துக்குப் போய் வர வேண்டும். இந்த நாவலை முடித்துக் கொண்டால் வேறு அதிக வேலையின்றி என் திட்டத்திற்கு ஏற்ற மாதிரி ஓய்வாக இருக்கும்."

"! அதற்கென்ன சார், இதை இன்னும் இரண்டே நாட்களில் முடித்து விடுகிறோம்."

பெரியவர் கோபம் தணிந்து அரவிந்தனிடம் நிதான நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை அவர் பேச்சுக் காட்டியது. எப்போதுமே அவர் இப்படித்தான் காரணமின்றி இரைவார். உடனே தோளில் கைவைத்துப் பேசவும் ஆரம்பித்து விடுவார். சீக்கிரமே கோபம் மறந்து போகும் அவருக்கு. சில சமயத்தில் உரிமையோடு அளவுக்கு மீறி இரைந்து பேசிக் கடிந்து கொண்டாலும் அரவிந்தன் மேல் அவருக்குத் தனி அபிமானமும் பாசமும் உண்டு. அரவிந்தனுக்கு வீடு வாசல் எல்லாம் அதுதான். இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு அங்கேயே நாலு நியூஸ் பிரிண்ட் காகிதத்தை விரித்து அதிலேயே படுத்து உறங்கிவிடுகிறவன் அவன்.

'மீனாட்சி அச்சகம்' என்ற நகரத்தின் புகழ்பெற்ற அச்சகத்துக்கு மானேஜர், புரூப் ரீடர், கணக்கு எழுதுபவர் எல்லாம் அரவிந்தன் தான். சமயங்களில் 'பில் கலெக்டர்' கூட அவன் தான். எந்த வேலையை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்று அரவிந்தனுக்கு அத்துபடி. அவனுக்கு நல்ல முகராசி உண்டு. விநயமும் அதிகம். சுறுசுறுப்பு ஒரு நல்ல மூலதனம். அரவிந்தனிடம் அது குறைவின்றி இருந்தது. அவனால் எதையும் செய்யாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. ஒவ்வொரு வினாடியும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் அவனுக்கு. அப்படி ஒரு கூர்மை. அப்படி ஒரு துறுதுறுப்பு.

'டைரி' எழுதுகிற பித்து அவனுக்கு அதிகம். டைரி என்ற பெயரில் இரண்டு மூன்று பெரிய நோட்டுப் புத்தகங்களைத் தைத்துப் பைண்டு செய்து வைத்துக் கொள்வான். ஒன்றில் பொன் மொழிகளாக குறித்து வைத்துக் கொள்வான். இன்னொன்றில் தனக்குத் தோன்றுகிறதை அப்போதைக்கப்போது கிறுக்கி வைத்துக் கொள்வான். மூன்றாவது நோட்டில் வரவு, செலவு, அச்சக சம்பந்தமான நினைவுக் குறிப்புகள் எல்லாம் இருக்கும். இந்தக் கவி எழுதுகிற கிறுக்கு ஒரு நெறியாகவே அவனைப் பற்றிக் கொண்டிருந்தது. திடீர் திடீர் என்று வரும் அந்த வேகம் எங்கே உட்கார்ந்திருந்தாலும், கையில் எந்தக் காகிதம் கிடைத்தாலும் அந்த வேகத்தை மனத்தில் தோன்றுகிறபடி எழுத்தில் எழுதித் தணித்துக் கொண்டாக வேண்டும். நன்றாக முற்றிவிட்ட ஆமணக்கினால் வெடிக்காமல் இருக்க முடியாது. அதுபோலத் தான் அரவிந்தனின் கவிதை வேகமும். எழுதாவிட்டால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த மாதிரி ஒரு அழகிய வேகமாகும் அது. அச்சக முதலாளியின் நாற்காலியில் அவர் இல்லாதபோது உட்கார்ந்து இது மாதிரி ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்பான். மறந்து நோட்டுப் புத்தகத்தை அங்கேயே அவருடைய மேஜையில் வைத்து விட நேர்ந்து, எதிர்பாராத சமயத்தில் அவரும் வந்து பார்த்துவிட்டால் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொள்வான். அவரும் ஏதோ கோபத்தில் பேசி விடுவாரேயொழிய மனதுக்குள் 'பயல் பிழைத்துக் கொள்வான். கொஞ்சம் மூளைக் கூர் இருக்கிறது. எதை எதையோ கிறுக்கி வைத்தாலும் கருத்தோடு அழகாக கிறுக்கி வைக்கிறானே' என்று அவனைப் பற்றி நினைத்துப் பெருமைப்படுகிறவர்தான்.

மீனாட்சிசுந்தரம் உள்ளே மெஷின்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அரவிந்தன் மனத்திலோ குடை பிடித்த மங்கையும் குமிண் சிரிப்பு முகமுமாக மத்தியானம் மயங்கி விழுந்த பெண் உலா வந்து கொண்டிருந்தாள். அவன் அங்கிருந்து மெல்ல நழுவினான். மறுபடியும் முன்புற அறைக்கு வந்து ஒளித்து வைத்த நோட்டுப் புத்தகத்தை எடுத்து முதலில் எழுதியிருந்த கவிதை வரிகளுக்குக் கீழே,

 

"குடையைப் பிடித்த கரம் - மனக்

கொதிப்பைச் சுமந்த முகம் - பெரும்

பசியில் தளர்ந்த நடை"

 

என்று பதற்றத்தோடு அவசரம் அவசரமாக எழுதி முடித்தான்.

 

"கோவிந்தா தியேட்டர்காரர்கள் ஏதோ சுவரொட்டி அடிக்க வேண்டுமென்றானே; பேப்பர் அனுப்பினாயா?"

"இல்லை சார், காலையிலே வந்தான், 'நீங்களே உங்கள் கணக்கில் கடனாகப் பேப்பர் வாங்கி அடித்துக் கொடுத்தால் பின்னால் கொடுத்துவிடுகிறேன்' என்றான். 'அதெல்லாம் உனக்குச் சரிப்படாது. சாயங்காலம் பேப்பரோடு வா, இல்லையானால் நீயே ஆர்ட் பேப்பர் மாதிரி மழமழவென்று வெலுப்பாயிருக்கே. உன்னையே மெஷினில் விட்டு அடித்துவிடுவேன்' என்று பயமுறுத்தி அனுப்பினேன்."

"சமர்த்துதான் போ. இந்த வாயரட்டைக்கு ஒன்றும் குறைவில்லை."

அரவிந்தன் மெல்லச் சிரித்துக் கொண்டான். ஃபோர்மேன், அச்சுக்கோப்பவர்கள், இரண்டு டிரெடில்மேன் உட்பட எல்லோரும் அரவிந்தனின் நகைச்சுவையை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். அரவிந்தனின் குறும்புக்கு இணையே இல்லை. யாருடைய குற்றத்தையும் எவருடைய தவறுகளையும் ஒளிவு மறைவின்றிப் பளிச்சென்று நாலுபேருக்கு முன்னால் உடைத்து விடுவான். தன்னிடம் குற்றமோ பொய்களோ போன்ற அழுக்குகள் இல்லாததால் அவனுக்கு மற்றவர்களிடம் பயமே இல்லை. இதனால் எல்லோருக்கும் அவனிடம் பயம். அவனுக்கு முன்னால் தப்புச் செய்ய பயம். தப்பாகப் பேசப் பயம். தீயவை எல்லாவற்றுக்குமே அவன் முன் பயம் தான்.

ஒரு சமயம் தொடர்ந்தாற் போல் ஓர் அச்சுக் கோப்பவன் (கம்பாஸிடர்) ஈய எழுத்துக்களைத் திருடித் தன் 'டிபன் பாக்ஸில்' போட்டுக் கடத்திக் கொண்டிருந்தான். அரவிந்தனுக்கு இது தெரிந்துவிட்டது.

மறுநாள் காலை அந்த அச்சுக்கோப்பவன் தன் இடத்துக்கு வந்த போது அங்கே கீழ்க்கண்டவாறு, கம்போஸ் செய்து வைத்திருந்தது.

'நாலே நாட்களில் 150 ''னாக்களையும் 200 ''னாக்களையும் 70 'லை'யன்னாக்களையும் 'டிபன்ஸெட்' மூலம் கடத்திய தீரனே! இன்று மாலை மூன்று மணிக்குள் அவற்றையெல்லாம் திரும்பக் கொண்டு வருகிறாயா? அல்லது இதற்கு மேல் நீயே 'கம்போஸ்' செய்து கொள்ளலாம்.'

 

        அரவிந்தன்

 

இதைப் படித்துவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான் அந்த ஆள். உடனே வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அரவிந்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். ஒரு சினிமா தியேட்டர்காரரிடம் நிறைய பாக்கி விழுந்துவிட்டது. அவருடைய தியேட்டருக்கு அடித்து அனுப்பிய சுவரொட்டிகளில் அச்சகத்தின் பேர் போடுகிற மூலையில் 'உங்கள் பாக்கி விஷம் போல் ஏறிவிட்டது; கடிதம் எழுதியும் பில் அனுப்பியும் எனக்கு அலுத்துப் போயிற்று. விரைவில் பாக்கியைத் தீருங்கள். வேறு வழியில்லாததால் உங்கள் செலவில் உங்கள் பேப்பரிலேயே இதைக் 'கம்போஸ்' செய்து அனுப்புகிறேன்' என்று சிறிய எழுத்துக்களில் அச்சிட்டுக் கீழே அச்சகத்தின் பெயரையும் போட்டு அனுப்பிவிட்டான் அரவிந்தன். சுவரொட்டி ஒட்டப்பட்டபோது ஊரெல்லாம் கேலிக் கூத்தாகி விட்டது. மறுநாளே ஓடோடி வந்து பாக்கியைத் தீர்த்துவிட்டுப் போனார் சினிமா தியேட்டர்காரர்.

இந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிர்வாகத்தையே தனித்தூண் போலிருந்து தாங்கிக் கொண்டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்தியமான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்துவிடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ஒரு தடவை பார்த்தாலும் அவனை மறக்க முடியாது. ஆணியல்புக்குச் சற்று அதிகமாகவே சிவந்து தோன்றும் உதடுகளின் குறும்பு நகை நெளிய அவன் பேசும்போது சுற்றி நிற்பவர்களின் கண்களெல்லாம் அவன் முகத்தில்தான் ஆவலோடு பதிய முடியும். அரவிந்தனுக்குப் பிடிக்காதவை காலர் வைத்த ஆடம்பரமான சட்டைகள் அணிவதும், எட்டு முழம் வேட்டி கட்டுவதும். எளிமையை எல்லாவற்றிலும் விரும்புகிற சுபாவமுள்ளவன் அவன். தமிழ்நாட்டுச் சூழ்நிலையே எளிமைக்கு ஏற்றது என்று வாதாடுவான்.

"இது ஏழைகளின் தேசம். இங்கே ஒவ்வொருவரும் குறைவான வசதிகளை அனுபவிப்பதோடு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும்" என்று அடிக்கடி புன்னகையோடு கூறுவான் அரவிந்தன். காந்தியக் கொள்கைகளைப் போற்றுவதில் விருப்பமும் மதிப்பும் கொண்டிருந்தான் அரவிந்தன். கைப்பிடிக்குள் அடங்கிவிடுகிறாற்போல் ஒரு சின்னஞ்சிறு திருக்குறள் புத்தகம் எப்போதும் அவனுடைய சட்டைப் பையில் இருக்கும்.

"அரவிந்தா! இப்படி வா. உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்" என்று அவனை அன்போடு முன்னறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார், அச்சக உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்.

உள்ளே அழைத்துக் கொண்டு போய் அவனை உட்காரச் செய்து தம் திட்டத்தை விவரித்தார். விளையாட்டுப் பிள்ளை போல் தோன்றினாலும் அவனுடைய திறமையில் அவருக்கு அசையாத நம்பிக்கை. அவனைக் கலந்து கொள்ளாமல் எதுவும் செய்யமாட்டார். அவர் அன்று கூறிய புதுத்திட்டத்தை அரவிந்தன் முழு மனத்தோடு வரவேற்று ஒப்புக்கொண்டான்.

"நிச்சயமாக இந்தத் திட்டம் நமக்கும் பயன்படும், நாட்டுக்கும் பயன்படும். சிறந்த தமிழ் அறிஞர்கள் நூல்களை மலிவான விலையில் வெளியிட்டுப் பரப்ப வேண்டியது அவசியம்தான். சாமர்த்தியமாக வெளியிட்டு விற்றால் நமக்குக் கைப்பிடிப்பு இருக்காது." 

"அப்படியானால் முதலில் இதோ இந்த முகவரிக்குப் போய் உரியவர்களைப் பார்த்து ஆகவேண்டிய காரியங்களை ஏற்பாடு செய்து பேசிவிட்டு வா" என்று முகவரியை நீட்டினார் அவர்.

"நான் ஏழரை மணிவரை இங்கேயே இருக்கப் போகிறேன். காரிலேயே போய்விட்டு வந்துவிடு அரவிந்தா..."

அவருக்குத் தெரியாமல் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டான் அரவிந்தன்.

"நினைவு வைத்துக்கொள். இப்போது நீ போகிற இடத்திலிருந்துதான் முதலில் நாம் வெளியிடப் போகிற நூல்கள் கிடைக்க வேண்டும்; காரியத்தைப் பழமாக்கிக் கொண்டு வா..." என்று வாசல் வரை உடன் வந்து கூறி அவனைக் காரில் ஏற்றி அனுப்பினார் மீனாட்சி சுந்தரம்.

மருள் மாலைப்போதின் ஒளி மயங்கிய மாலை, அழகு மதுரை நகரின் தெருக்கள் எப்படி இருக்கிறதென்று கவியின் கண்ணோடு அனுபவித்துக் கொண்டே காரில் விரைந்தான் அரவிந்தன்.

திண்டுக்கல் ரோட்டின் அருகில் மேற்கே திரும்பியதும் டிரைவர், "எங்கே போகணுங்க?" என்று இடம் கேட்டான். அரவிந்தன் இடத்தைச் சொன்னான். வேகத்தில் மனம் துள்ளியது. நினைவுகள் உல்லாசத்தில் மிதந்தன. 'நினைவைப் பதித்து மன அலைகள் நிறைத்துச் சிறுநளினம் தெளிந்த விழி' என்று வாய் இனிமையில் தோய்த்த குரலை இழுத்துப் பாடியது. மனம் அந்த முகத்தை நினைத்தது. இதழ்களில் குறுநகை நிலவியது.

மங்களேஸ்வரி அம்மாள் வீட்டு டிரைவருக்கு வீட்டை அடையாளம் காட்டித் திருப்பியனுப்பிய பூரணி வீடு பூட்டியிருப்பது கண்டு திகைத்து நின்றாளல்லவா? அந்த சமயத்தில் இன்னொரு சிறிய கார் அவ்வீட்டு வாசலில் வந்து நின்றது.

"பேராசிரியர் அழகியசிற்றம்பலம் அவர்களின் வீடு இதுதானே?"

பூட்டிய கதவைப் பார்த்துக் கொண்டு மலைத்துப் போய் நின்ற பூரணி, விசாரிக்கும் குரலைக் கேட்டுத் திரும்பினாள். திரும்பிய முகத்தைப் பார்த்து அரவிந்தன் ஆச்சரியத்தில் திளைத்தான். அதே முகம். அதே அழகு. நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த வதனம்! அன்று நண்பகலில் அச்சகத்துக்கு எதிரே தெருவில் மயங்கி விழுந்தபோதே அவன் மனத்திலும் மயங்கி விழுந்த அதே பெண். அவனுக்குக் கவிதை தந்த வனப்பு, கனவு தந்த முகம், கற்பனை தந்த சௌந்தர்யம், அந்த வாசற்படியில் நின்று கொண்டிருந்தது.

"நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" - சிறிது சினத்துடன் கேட்டாள் பூரணி.

 

"நான் மீனாட்சி அச்சகத்திலிருந்து வருகிறேன். என் பெயர் அரவிந்தன். புத்தகங்கள் வெளியிடுகிற விஷயமாகப் பேராசிரியரின் பெண்ணைப் பார்த்துக் கொஞ்சம் பேச வேண்டும்" என்றான்.

சிரித்துக் கொண்டே மறுமொழி கூறிய அரவிந்தன் கையில் நோட்டுப் புத்தகத்தோடு வாசல் திண்ணையின் மேல் தானாக எடுத்துக் கொண்ட உட்காரும் உரிமையோடும் துணிந்து அமர்ந்துவிட்டான்.

பூரணிக்கு அப்போது ஒரே கசப்பான மனநிலை. 'உலகத்தில் அத்தனை பேரும் ஏமாற்றுபவர்கள், அத்தனை பேரும் பிறருக்கு உதவாதவர்கள்' என்கிற மாதிரி விரக்தியும் வெறுப்பும் கொதித்துக் கொண்டிருந்த சமயம். புதுமண்டபத்து புத்தக வெளியீட்டாளர் மேலிருந்த கோபம் அத்தனை புத்தக வெளியீட்டாளர் மேலும் திரும்பியது. அரவிந்தன் வந்த விதம், சிரித்துக் கொண்டே உட்கார்ந்து பேசத் தொடங்கிய விதம் ஒன்றும் இவளுக்குக் கவர்ச்சியளிக்கவில்லை. உதடுகள் துடிக்க, அழகிய முகம் சிவக்க அரவிந்தனை வார்த்தைகளால் சாடினாள் அவள்.

"புத்தகமுமாயிற்று; புடலங்காயுமாயிற்று. புண்ணாக்கு விற்கிறவர்கள் எல்லாம் புத்தகம் வெளியிட வந்துவிடுகிறார்கள். இப்போது யாரையும் நம்ப முடிவதே இல்லை. வரும்போது சிரிக்கச் சிரிக்க அரிச்சந்திரன் போல் உண்மை பேசுகிறார்கள். கடைசியில்..." அவள் முடிக்கவில்லை, அரவிந்தன் இடைமறித்துக் குறுக்கிட்டான். அவன் முகத்தில் சிரிப்பு மாறிவிட்டது.

"நிறுத்துங்கள்; உங்கள் மனநிலை இப்போது சரியில்லை போலிருக்கிறது. இன்னொரு சமயம் வருகிறேன். நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால், அதற்கு உலகமெல்லாம் பிணை என்று நினைத்துச் சீற வேண்டியதில்லை." திண்ணையிலிருந்து எழுந்து விறுவிறுவென்று நடந்துபோய் காரில் உட்கார்ந்து கதவைப் படீரென்று அடைத்துக் கொண்டான் அரவிந்தன். கார் தூசியைக் கிளப்பிக் கொண்டு விரைந்தது. கோபத்தோடு ஏதோ சொல்ல வாய் திறந்த பூரணி, அந்தச் சொற்களை வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டாள். தான் தெருவில் மயங்கி விழுந்தது இந்த இளைஞனுக்கு எப்படித் தெரியும் என்ற வினா அவள் மனத்தில் பெரியதாய் எழுந்தது. திரும்பினால், திண்ணையில் அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் அவன் கையில் கொண்டு வந்த நோட்டுப் புத்தகத்தை மறந்து வைத்து விட்டுப் போயிருந்தான்.

அதைக் கையில் எடுத்துக் கொண்டு தெருவில் விரைந்து இறங்கி 'மிஸ்டர் அரவிந்தன்' என்று அவள் எழுப்பிய குயிற்குரலின் ஒலி எட்ட முடியாத தூரத்திற்கு, கார் போயிருந்தது. அந்த முகமும், அந்தச் சிரிப்பும், காளையைப் போல் நடந்து போய்க் காரில் ஏறிய விதமும், அப்போதுதான் அவள் நினைவை நிறைத்தன. ஒரு கணம்தான்; ஒரே கணம் தான் அந்த நினைவு. அடுத்த வினாடி சொந்தக் கவலைகள் வந்து சேர்ந்தன. பூட்டியிருக்கும் வீடு, தங்கையும் தம்பிகளும் எங்கே போனார்களென்று தெரியாத திகைப்பு, எல்லாம் வந்து அவள் மனத்தில் சுமை பெருக்கி அழுத்தின.

 

7

 

பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்

என் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்

மண் வழி நடந்தடி வருந்தப் போனவன்

கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம்

                                                                                                   - கம்பன்

 

பூட்டியிருந்த வீட்டின் முன்பு கையில் அரவிந்தன் வைத்துச் சென்றுவிட்ட நோட்டுப் புத்தகத்தோடு தெரு வாசலில் நின்றாள் பூரணி. அவள் நிற்பதைத் தன் வீட்டு வாசற்படியிலிருந்து பார்த்து விட்டாள் ஓதுவார்க் கிழவரின் பேத்தி காமு. அவள் வந்து கூறினாள்: "பூரணி! சாயங்காலம் கமலா வந்திருந்தாள். நீ வருவாய் என்று காத்திருந்து பார்த்தாள். உன்னைக் காணவில்லை. இருட்டுகிற நேரத்துக்குச் சிறிது முன்னால் தான் ஒரு குதிரை வண்டி வைத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனாள். போகும் போது 'பூரணி வந்தால் என் வீட்டுக்கு வரச்சொல் அவளை' என்று என்னிடம் சொன்னாள்."

"அது சரி காமு, அவள் தான் போனாள்; எங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு தம்பிகளையும் குழந்தைகளையும் எதற்காக அழைத்துக் கொண்டுப் போகவேண்டும்?"

"அதென்னமோ எனக்குத் தெரியாதம்மா. வண்டி வைத்து அழைத்துக் கொண்டுப் போனாள். பார்த்தேன். அதுதான் எனக்குத் தெரியும்."

"இந்தக் கமலாவே இப்படித்தான். புரியாமல் ஏதாவது செய்து வைப்பாள்" என்று கமலாவை மனத்தில் கடிந்து கொண்டே அவளுடைய வீட்டுக்கு விரைந்தாள் பூரணி. சந்நிதிக்கு முன்புறம் சில புதிய கார்கள் சிறிதும் பெரிதுமாகப் பளபளக்கும் நிறத்தோடு நின்றுகொண்டிருந்தன. புதிதாக விலைக்கு வாங்கிய கார்களையும், லாரிகளையும் முருகன் சந்நிதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்திச் சந்தனமும், குங்குமமும் அப்பி மாலை போட்டு வெள்ளோட்டம் விடுவது அங்கு ஒரு வழக்கம். நான்கு டயர் சக்கரங்களுக்கும் நான்கு எலுமிச்சை பழங்களைப் பலியாக வைத்து அது நசுங்கிச் சிதறும்படி புதிய கார்களை ஓட்டிக் கொண்டு போகும் அழகே அழகு. 

பூரணி, கமலாவின் வீட்டுக்காகச் சந்நிதி முகப்பில் திரும்பிய போது அன்னப்பறவை சிறகசைத்துப் பறப்பது போல் ஓர் அழகிய நீண்ட புதுக்கார் கீழே சக்கரங்களில் எலுமிச்சம் பழங்களை நசுக்கி மெல்ல நகர்ந்தது. புது கார் வாங்கிய பெருமை முகத்தில் தெரிய அதற்குள் உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்த பூரணி இருளில் ஒதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு நடந்தாள். அந்த மனிதர் தன்னைக் காணும்படி நேர்வதை விரும்பவில்லை அவள். அப்படி அவளுடைய வெறுப்பைக் கொட்டிக்கொண்ட அந்த மனிதர் யார் தெரியுமா? அப்பாவின் தன்மானம் இந்தக் குடும்பத்திலிருந்து இன்னும் சாகவில்லை என்று எழுதி 'செக்'கைத் திருப்பி அனுப்பினாளே, அந்தப் புது பணக்காரன் தான் இப்போது இந்தப் புது காருக்குள் உட்கார்ந்திருந்தார்.

இவருடைய புதுக்காரின் சக்கரங்களில் இன்று எலுமிச்சம் பழங்கள் நசுங்குகின்றன. இதற்கு முன்பு எத்தனை ஏழைகளின் உள்ளங்கள் இவர் காலடியில் நசுங்கி இருக்கின்றன? உள்ளக் குமுறலோடு இவ்வாறு போகிற போக்கில் நினைத்தாள் அவள். சந்நிதி வாயிற் பிச்சைக்காரக் கும்பல் புதுக்கார் 'வள்ளலை' மொய்ப்பதையும் அவர் முகம் கடுத்துச் சீறி அவர்களை விரட்டுவதையும் கூட பூரணி கண்டாள். அன்று நடுப்பகல் வரை மதுரை நகரத்துப் பெரிய கட்டிடங்களிலெல்லாம் நுழைந்து தான் ஒரு வேலைக்குப் பிச்சை கேட்பது போல் மன்றாடிக் கொண்டு திரிந்தது நினைவில் உறுத்திற்று அவளுக்கு.

பூரணியைப் பார்த்ததும் கமலா மிகவும் கோபித்துக் கொண்டாள். "வரவர நீ மிகவும் பெரியவளாகிக் கொண்டு வருகிறாய். உனக்குத் தன்மானம் அதிகம். எவ்வளவு துன்பமானாலும் நெருங்கிப் பழகியவர்களிடம் கூடச் சொல்லாமல் மறைத்துக் கொள்ளத் தெரிகிறது. நிலைமையைத் தெரிந்து கொண்ட பிறகு எங்களால் அப்படி இருக்க முடிகிறதா, அம்மா? நீதான் கல்மனம் உடையவள். எதையும் சொல்லாமல் பல்லை இறுகிக் கடித்துக் கொண்டு இருந்து விட முடியும் உனக்கு. எங்களுக்குப் பூஞ்சை மனம். உதவி செய்வதும் உதவி பெறுவதும் தான் அன்புக்கு அடையாளம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காலையிலிருந்து நீ பட்டினி கிடக்கிறாய். எனக்குத் தெரியும் பூரணி எங்கள் வீட்டில் சாப்பிட்டதாக உன் தம்பியிடம் பொய் சொன்னாயாம். சாயங்காலம் அங்கே உன் வீட்டில் எல்லாம் பார்த்தேன். இப்படி மறைத்துக் கொண்டு எங்களை ஏமாற்றுவதில் உனக்கு என்ன தான் பெருமையோ?"

கமலாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் பூரணி தலை குனிந்தாள். குழந்தை மங்கை உள்ளேயிருந்து ஓடி வந்தாள்.

"அக்கா, நீங்க பேசாம விட்டுட்டுப் போயிட்டீங்க. கமலா அக்கா சாயங்காலமா எங்களை இங்கே அழைச்சிட்டு வந்து சோறு போட்டாங்க." மானத்தையும் வயிற்றையும் காப்பாற்றிக் கொள்வதற்காக வயதானவர்கள் சொல்லுகிற பொய்யை எல்லாம் குழந்தையும் சொல்ல முடியுமா? குழந்தையின் வாயில் உண்மை வந்தது. தன் நிலைமை தெரிந்துவிட்டதே என்ற நாணமும் கூடவே நன்றியும் ஒளிரக் கமலாவைப் பார்த்தாள் பூரணி.

"இங்கே அழைத்துக் கொண்டு வந்து சாப்பாடு போட்டதற்காக என்மேல் கோபித்துக் கொண்டு விடாதேயம்மா. உரிமை இருக்கிறதாக நினைத்துக் கொண்டுதான் செய்தேன். உன் வீட்டுக் குழந்தைகள் உனக்குக் கொஞ்சமும் இளைத்தவர்கள் இல்லை. நான் இங்கே கூப்பிட்டபோதே, 'அக்காவைக் கேட்காமல் நாங்களாக வரமாட்டோம்' என்று மறுத்தார்கள். அக்காவுமாயிற்று தங்கையுமாயிற்று. இப்படியா கொலைப்பட்டினி கிடப்பார்கள். எல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன் உங்கள் அக்காவிடம்; பேசாமல் என்னோடு வாருங்கள் என்று உன் வீட்டுக் கதவைப் பூட்டி அழைத்து வந்தேன்."

"உன் அம்மா, அப்பா, ஒருவரையும் காணவில்லை போலிருக்கிறதே? அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் கமலா?" என்று பேச்சை வேறு வழியில் திருப்பினாள் பூரணி.

"அப்பாவும் அம்மாவும் மத்தியானம் ஊருக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். திரும்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும்."

"ஊரில் என்ன காரியமோ?"

பூரணியின் இந்தக் கேள்விக்குக் கமலா மறுமொழி கூறவில்லை. முகம் சிவக்க மெல்லச் சிரித்தவாறே தலை குனிந்தாள். செந்தாமரைப் பாதத்தின் சிறு விரல்கள் தரையில் விளையாட்டுப் பயின்றன.

பூரணிக்குப் புரிந்துவிட்டது. கமலாவின் முகத்தில் நாணம் மலர்ந்து நளினம் பரப்புகிற அழகைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் பூரணி.

"! அப்படியா செய்தி? தை பிறக்கப் போகிறதல்லவா? இந்த அருமைப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு வரப் புறப்பட்டு விட்டார்களாக்கும்?"

மலர மலரச் சிரிப்பு அதிகமாகிக் கொண்டு வளருகிற ஒருவட்டப் பூப்போல் கமலாவின் முகம் சிவந்தது. பெண்ணின் முகத்தில் நாணம் பிறக்கும்போதே கவிகளின் மனங்களில் கவிதைகள் பிறப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மைதான் என்று கமலாவின் முகத்தில் அப்போது கொஞ்சி நின்ற அழகைக் கண்டபோது பூரணிக்குத் தோன்றியது.

கமலாவின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டதற்காக அக்கா கோபித்துக் கொள்வாளோ என்று பயந்து போய்ச் சம்பந்தனும் திருநாவுக்கரசும் பூரணியின் முன்னால் வந்து அவள் முகத்தைப் பார்ப்பதற்கே கூசினர்.

"சரி, நான் இவர்களையெல்லாம் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறேன்" என்று பூரணி புறப்படுவதற்கு முற்பட்டபோது கமலா சண்டைக்கே வந்துவிட்டாள். 

"வீட்டுக்காவது, புறப்படுகிறதாவது? வீட்டில் என்ன வைத்திருக்கிறது? எனக்குத் தெரியும் பூரணி, அடுக்கு அடுக்காகப் புத்தகங்களைத் தவிர இப்போது உன் வீட்டில் வேறு ஒன்றும் இல்லை. 'என்னை இன்னும் ஏமாற்றப் பார்க்காதே. புத்தகங்களைப் படித்தால் அறிவுப்பசி தீரும். வயிற்றுப்பசி தீராது. எல்லாம் பார்த்துச் சிந்தித்து தீர்மானம் பண்ணிதான் நான் இவர்களை இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன். இங்கே அம்மா, அப்பா கூட ஊரில் இல்லை. வருகிறவரை உன்னைத்தான் துணைக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். எனக்குத் துணையாக இருந்தாற் போலவும் ஆகும். நீயும் இவர்களும் சில நாட்களுக்கு இங்கேதான் இருக்க வேண்டும். வீட்டுக்குப் போய்விட்டால் யாருக்கும் தெரியாதபடி இவர்களையும் உன்னையும் பட்டினி போட்டுக் கொண்டு கிடக்கலாம் என்று நினைக்கிறாய் போலிருக்கிறது. நான் அதற்கு விடமாட்டேன்."

"விடவேண்டாம் கமலா! நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல்வாயா நீ?"

"கேளேன், என்ன கேள்வியோ?"

"வேறொன்றுமில்லை. என்னையும் இவர்களையும் இப்படி எத்தனை நாளைக்கு உன்னால் காப்பாற்றி விட முடியுமென்று நினைக்கிறாய்?" கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. துன்பங்களைச் ஜீரணிக்கும் சிரிப்பு அது.

"அதுவா பேச்சு? ஏதோ உனக்கு வேலை கிடைக்கிறவரை இங்கே இருக்கலாம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமயங்களில் விட்டுக் கொடுக்காமல் உதவி செய்யத்தான் இருக்கிறோம். ஒன்றும் தலையில் கட்டிக் கொண்டு போய்விடப் போவதில்லை பூரணி."

"என்னவோ நீ சொல்கிறாய் கமலா. எனக்கும் மறுக்கத் தோன்றவில்லை. விட்டுக்கொடுக்காமல் உதவுவதற்கும் அன்பு செலுத்துவதற்கும் இன்றைய வாழ்க்கையின் வேகத்தில் இடம் இருப்பதாகவே தெரியவில்லை. கண்களுக்கு மூடியிட்டு ஓட்டப்படுகிற ஜட்கா வண்டிக் குதிரையைப் போல் வழியைத் தெரிந்து கொள்ள முடியாததொரு அசுர வேகத்தைத்தான் வாழ்க்கையில் பார்க்கிறோம்."

தம்பிகளும், குழந்தையும் தூங்கிய பின் கமலாவும் பூரணியும் வீட்டு மொட்டை மாடியில் போய் சில நாழிகைகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மனம் நெகிழ்ந்து அன்பு உறவோடு பேசிக் கொண்டிருந்ததால் அன்று வேலை தேடி அலையும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கமலாவிடம் கூறினாள் பூரணி. மங்களேஸ்வரி அம்மாளைச் சந்தித்துப் பேச நேர்ந்ததை எல்லாம் சொன்னாள். தெருவில் மயங்கி விழுந்ததை மட்டும் கூறாமல் வேறுவிதமாகத் திரித்துச் சொல்லிவிட்டாள்.

கமலாவின் வீட்டு மாடியிலிருந்து கோபுரம் பக்கத்தில் தெரியும். இருளில் மேலேயிருந்து கீழ்நோக்கித் தொங்கும் மின்சார மல்லிகைச் சரம்போல் தென்படும் வரிசையான கோபுர விளக்குகளையும் ஒளிப்புள்ளிகளாய்ப் பரந்து தோன்றும் ஊரின் அடங்கிய தோற்றத்தையும் பார்த்துக் கொண்டே அங்கு உட்கார்ந்து நேரம் போவது கூடத் தெரியாமல் பேசினாள் பூரணி. எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பேசினாள். இருளோடு கலந்து நிற்கும் குன்றின் உச்சியில் 'ஓம்' சிரித்துக் கொண்டிருந்தது. இரசம் பூசிய கண்ணாடித் துண்டுகள் பாளம் பாளமாக ஆகாயத்திலிருந்து துண்டு துண்டாகப் பூமியில் நழுவி விழுந்தாற்போல் ஊரைச்சுற்றியிருந்த ஏரிகளில் இருளிடையே நீர்ப்பரப்பு மின்னிற்று.

தன் பேச்சைக் கேட்டுக்கொண்டே உணர்வு நழுவி சுவரில் சாய்ந்து தூங்கத் தொடங்கியிருந்த கமலாவை எழுப்பிக் கொண்டு தூங்கப் போனாள் பூரணி. கமலா படுத்தவுடன் தூங்கிவிட்டாள். பலவிதமான கவலைகளால் பூரணிக்குத் தூக்கம் உடனே வரவில்லை. 'ஒவ்வொரு நாளும் உலகத்துக்குப் பொழுது விடிகிறது. எனக்கும் என் வீட்டுக்கும் என்றைக்கும் விடியப்போகிறதோ? முருகா! நான் வாழ்வதற்கு ஒரு வழியைத் திறந்துவிடு! அப்பா, மனிதர்களை நம்பி என்னைவிட்டுப் போகவில்லல. உன்னுடைய ஊரில் உன் திருக்கோயிலுக்கு முன்னால் உன் அருளில் நம்பிக்கை வைத்துத்தான் என்னையும் இந்தச் சிறுவர்களையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார். நீ காப்பாற்று; கைவிட்டுவிடாதே. வாழ ஒரு வழியைக் கொடு.'

பூரணி படுக்கையில் கண்களை மூடி அமர்ந்து மேற்கண்டவாறு நெஞ்சுக்குள் தியானித்துக் கொண்டாள். குனிந்த புருவமும், கோவைச் செவ்வாயும், அருள் குலவும் முகமுமாக வேலேந்திய தாமரைக் கையோடு இளங்கதிரவன் தோன்றினாற் போலத் தோன்றும் பால முருகனை அவள் அகக்கண்கள் உணர்ந்தன.

காரணமோ, தொடர்போ புரியாமல் அதையடுத்தாற்போல் மாலையில் தேடி வந்தானே, அந்த இளைஞனின் முகம் நினைவில் படர்ந்தது. இனிப்பு மிட்டாயை யாரும் அறியாமல் சுவைக்கும் குழந்தையைப் போல் 'அரவிந்தன்' என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள். அப்படிச் சொல்லி பார்ப்பதில் ஒரு திருட்டு மகிழ்ச்சி இருந்தது. கள்ளக் களிப்பு இருந்தது. சொல்லித் தெரியாத அல்லது சொல்லுக்குள் அடங்காத சுகம் இருந்தது. அந்த இளைஞனின் அழகு முகம் அப்போது, எப்படி எதற்காக நினைப்பு வந்ததென்று காரண காரியங்களைக் கூட்டிப் பார்த்துத் தீர்மானம் செய்ய அவளாலேயே முடியவில்லை. நாதத்தை எழுப்ப வேண்டுமென்ற கருத்தே இல்லாமல், நாத லட்சணமே தெரியாமல் தற்செயலாக விரல்கள் பட்டு வருட நேர்ந்தாலும் வீணையில் நாதம் பிறப்பதில்லையா? அப்படித் தற்செயலாய்த் தவிர்க்க முடியாததால் அந்த முகம் அவளுடைய நினைவுக்குள் நழுவி வந்து விழுந்தது.

தூங்கிக் கொண்டிருந்த கமலாவுக்கு இடையூறில்லாமல் மேஜை விளக்கைப் போட்டுக் கொண்டு அரவிந்தனின் நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள் பூரணி. கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும், 'ஙொய்' என்று சுவர்க்கோழிக் குரலுமாகக் கமலாவின் வீட்டுக் கூடத்தில் இருள் அணையிட்டுக் கொண்டு நின்றது. மேஜை விளக்கைச் சுற்றி மட்டும் வெண் நில மின்னொளி, மாவைக் கொட்டின மாதிரி பரவியிருந்தது. ஏறக்குறைய இரண்டரை மணி வரையில் அந்த மேஜை விளக்கு அணையவில்லை.

படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருந்தது பூரணிக்கு. அரவிந்தன் என்ற அறிவுத் துடிப்பு மிகுந்த இளைஞன், வாழ்க்கையில் விதவிதமான வர்ணங்களைத் தான் கண்டு கேட்டு உணர்ந்த அனுபவத்தோடு தீட்டியிருந்தான். அந்த அனுபவக் குறிப்புகளும் தோன்றிய போதெல்லாம் எழுதப்பட்ட கவிதைகளும் இடமும் நிறமும் பொருந்தும்படி நன்றாக வரையப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் புதையல் வைத்திருப்பவன் அதைத் தனிமையில் திறந்து பார்த்து மகிழ்கிற மாதிரி அரவிந்தனின் அனுபவங்களைப் படித்து மகிழ்ந்தாள் பூரணி. தான் மயங்கி விழுந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் எழுதியிருந்த கவிதை வரிகளைப் படித்தபோது தான், மாலையில் 'நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால் அதற்கு உலகமெல்லாம் பிணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை' என்று அவன் கூறியதன் காரணம் அவளுக்கு விளங்கியது. ஓர் இடத்தில் மனம் கொதித்து வெறி கொண்டாற் போன்று சில வாக்கியங்கள் எழுதியிருந்தான் அரவிந்தன்.

"தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கையில் காவியம் இல்லை. வயிற்றுப் பசிதான் இருக்கிறது. ஏமாற்றங்கள் தான் இருக்கின்றன. வேதனைகள் தான் இருக்கின்றன. சிக்கல் விழுந்த நூற்சுருளில் முதல் எங்கே? முடிவு எங்கே? என்று தெரியாத மாதிரி இந்தப் பிரச்சினைகள் எதிலிருந்து தோன்றின? எதனால் தீர்க்க முடியும்? ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு காலத்தில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன. இப்போது பிரச்சினைகளில் வாழ்வு இருக்கிறது. ஒரு காலத்தில் வாழ்க்கையில் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் இருந்தன. இன்றோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது. இன்று நகரங்களில் இதயங்களும், அவற்றையுடைய மனிதர்களும் வாழவில்லை. இரும்பும் பிளாஸ்டிக்கும் வாழ்கின்றன. தெருவோரங்களில் குப்பைகளையும் தூசிகளையும்போல உயிருள்ள மனிதர்களும் விழுந்துகிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையை எப்படி மாற்றியமைப்பது? 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே! மூட்டைப் பூச்சி மருந்தையும், மயில் துக்கத்தையும் தின்று மனிதர்கள் அல்லவா புழுப்பூச்சிகள் போல் அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்."

இந்தச் சில வாக்கியங்களில் அரவிந்தனின் உள்ளம் அவளுக்குப் புரிந்தது. தன்னைப் போலவே தனக்கு மிக அருகில் இந்த நாட்டு வாழ்க்கைப் பிரச்சினைகளை எண்ணி ஓர் ஆண் உள்ளமும் துடித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அரவிந்தனின் அழகும், அறிவும், குணமும், குறிக்கோளும் அவளைக் கவர்ந்தன. இப்படிப்பட்ட இலட்சியவாதியிடமா அந்த மாதிரிச் சீறி விழுந்து துரத்தினேன்? என்று நினைத்துத் தன்னைத் தானே நொந்து கொண்டாள் அவள். காலடியிலே மென்மையும், மணமும் மிக்க பூ ஒன்றை மிதித்து நசுக்கி விட்டாற் போல் வேதனையாக இருந்தது அவளுக்கு. அரவிந்தனுடைய கொள்கைகளின் கம்பீரம் மதுரைக் கோபுரங்களைப் போல் பெரிதாய், உயரமாய் அவள் மனத்தில் கால் ஊன்றி நின்று கொண்டன.

அந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மேஜைமேல் வைத்துவிட்டு விளக்கை அணைத்தாள். பூரணியின் உடலில் உறக்கமும் உள்ளத்தில் அரவிந்தனும் குடிகொண்டு ஆளத் தொடங்கினர். இருட்டில் நீண்ட நேரமாகக் கைகளால் துழாவித் தேடிக்கொண்டிருந்த பொருள் கிடைத்துவிட்டது போல் அரவிந்தன் என்னும் இனிய தத்துவத்தைப் புரிந்து கொண்டு விட்ட மகிழ்ச்சி அவளுக்கு.

தூக்கத்தில் இதழ்கள் நெகிழ சிரித்தது அவள் முகம். இனிமையான கனவு ஒன்று கண்டாள் அவள். அரவிந்தன் அவளுடைய கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போகிறான். இரண்டு பேரும் திருப்பரங்குன்றம் மலை மேல் ஏறுகிறார்கள். வெள்ளி நெகிழ்ந்து உருகிய குளம்போல் வானில் முழுநிலவு உலா வருகிறது. நல்ல காற்று வீசுகிறது. இந்த மாதிரி ஒரு காதல் ஜோடியைக் காண்பதற்கென்றே ஊழி ஊழியாகத் தவம் செய்து வானில் காத்துக் கொண்டிருந்தவை போல் நட்சத்திரங்கள் கண் நிறையக் குறும்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கந்தர்வப் பெண்கள் தத்தம் காதலனைச் சந்திக்கப் போகிற விரைவில் நழுவவிட்ட வெள்ளைச் சல்லாத் துணிகளைப் போல் அங்கங்கே நிலவொளிரும் நீலவானிடையே வெண் மேகங்கள் தெரிகின்றன.

"பூரணி! இந்த வானிலும், நிலவிலும் மென் சீதக் காற்றிலும் காவியம் இருக்கிறது. அழகு இருக்கிறது. இவையெல்லாம் உனக்காகவும் எனக்காகவும் இருக்கின்றன" என்று அவள் காதருகில் புன்னகையோடு சொல்கிறான் அரவிந்தன். அந்தப் புன்னகையில் நயங்கள் பொலிகின்றன.

"இல்லை, அரவிந்தன். நீங்கள்... பொய் சொல்கிறீர்கள். உலகத்தில் காவியம் இல்லை; வயிற்றுப் பசிதான் இருக்கிறது. பூரிப்பு இல்லை; பெருமூச்சுக்கள்தான் இருக்கின்றன." பூரணி அரவிந்தனை மறுக்கிறாள்.

"நீ மண்ணைப் பற்றிப் பேசுகிறாய்! நாம் இப்போது மலை மேல் இருக்கிறோம். உயரத்தில் இருக்கும் போது மனத்தைக் கீழே போகவிடாதே."

"அழகு மேலே இருக்கலாம்; ஆனால் வாழ்க்கை கீழேதான் இருக்கிறது அரவிந்தன்!"

இப்படி இன்னும் என்னென்னவோ பேசிக்கொள்கிறார்கள் இருவரும். மலைமேல் ஏற ஏறப் பூரணிக்குக் கால் வலிக்கிறது. அரவிந்தனின் சுந்தரமணித் தோள் மீது கையை வைத்துக் கொண்டு தடுமாறி விழாமல் நடக்கிறாள் அவள்.

"அதோ எதிரே தொலைவில் பல நிறத்து வைரக் கற்களை அள்ளி இறைத்த மாதிரி விளக்குகள் தெரிகின்றனவே. அதுதான் மதுரை" என்று அரவிந்தன் சொல்கிறான். அவள் பார்ப்பதற்காக நிமிர்ந்து திரும்புகிறாள். கீழே கால்கட்டை விரல் மலைப்பாறையில் எற்றிவிடுகிறது. இரத்தம் கசிந்து விரல் மாதுளைப் பூவாக மாறுகிறது. அரவிந்தன் குனிந்து அந்த விரலைப் பற்றுகிறான். அவன் கையெல்லாம் சிவப்பாகின்றது. துணியைக் கிழித்துச் சுனை நீரில் நனைத்துக் கட்டுப் போடுகிறாள்.

"உங்கள் கையெல்லாம் இரத்தமாகிவிட்டதே! கழுவிக் கொள்ளுங்கள்."

"எதற்காகக் கழுவவேண்டும்? இந்த இரத்தத்தால் உலகத்துப் பெண் குலத்தின் துன்பக் காவியத்தை எழுதிவிடப் போகிறேன் பூரணி" என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் அரவிந்தன்.

பூரணி கனவிலிருந்து விழித்துக் கொள்கிறாள். கால் கட்டை விரலில் உண்மையாகவே வலித்தது. ஈரம் கசிவதுபோல் ஒரு பிரமையும் உணர்வில் ஏற்பட்டது. எழுந்திருந்து விளக்கைப் போட்டுப் பார்த்தாள். சுவரோரமாக இருந்த காய்கறி நறுக்கும் அரிவாள் மணையில் கட்டைவிரல் உரசியிருந்தது. விளக்கைப் போட்ட ஓசையில் கமலாவும் விழித்துக் கொண்டாள்.

"என்னடி பூரணி?"

"தூக்கத்தில் அரிவாள்மணை இருந்த பக்கம் காலைப் போட்டுவிட்டேன் போலிருக்கிறது."

"அடிபாவி! பார்த்து படுத்துக் கொள்ளக்கூடாதோ? இன்னும் கொஞ்ச நேரம் விழித்துக் கொள்ளாமலிருந்திருந்தால் கட்டை விரலே போயிருக்குமே?" என்று சினந்து கூறிக்கொண்டே எழுந்து ஓடி வந்தாள் கமலா. வெட்டுப்பட்ட இடத்தில் சிறிது ஈரச் சுண்ணாம்பு தடவித் துணியைச் சுற்றினாள்.

விட்ட கனவு மறுபடியும் தொடராதா என்ற ஏக்கத்தோடு படுத்துக் கொண்டாள் பூரணி.

காலையில் பூரணியும் கமலாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கச் சென்றார்கள். போகும்போது பூரணிக்குக் குடியிருக்க இடம் பார்ப்பதற்காக இரண்டு மூன்று பெரிய ஸ்டோர்களுக்குப் போய் விசாரித்தாள் கமலா. பெரிய இரத வீதியில் மூன்று அறைகளும் கிணறும் வசதியாக அமைந்து தெற்கு நோக்கி வாசலுள்ள சிறிய வீடு ஒன்று கிடைத்து விட்டது. மாதம் பதினெட்டு ரூபாய் வாடகை. பூரணிக்காக தன் கையிலிருந்து வீட்டுக்கு முன்பணம் கொடுத்தாள் கமலா. பத்து இருபது குடிகளுக்கு நடுவே மாட்டிக் கொள்ளாமல் சிறிதாக இருந்தாலும் தனி இடமாகக் கிடைத்ததே என்று பூரணி மன நிறைவு பெற்றாள். இடம் கமலாவின் வீட்டிற்கு அருகிலும் இருந்தது. அவர்கள் இருவரும் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு திரும்பினார்கள். கமலாவின் வீட்டு வாசல் திண்ணையில் ஓதுவார்க்கிழவர் காத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அரவிந்தனைக் கண்டதும் பூரணி தலைகுனிந்து கொண்டே ஒதுங்கி நடந்து உள்ளே சென்றாள். 

"பூரணி! இவர் உன்னைப் பார்க்க வேண்டுமென்று அங்கே வீட்டுக்குத் தேடிக் கொண்டு வந்தார். நீயும் குழந்தைகளும் இங்கே வந்திருப்பதாக காமு சொன்னாள். அதுதான் இவரை இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன் அம்மா."

"கொஞ்சம் இருக்கச் சொல்லுங்கள் தாத்தா! இதோ வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு விரைந்து உள்ளே மறைந்தாள் பூரணி.

"நேற்று வந்தபோது அந்த வீட்டு வாசல் திண்ணையில் என்னுடைய நோட்டுப் புத்தகம் ஒன்றை மறந்து போய் வைத்துச் சென்றுவிட்டேன். அதை வாங்கிக் கொண்டு போகலாமென்று தான்" என்று அரவிந்தன் எழுந்து நின்று கொண்டு சொன்னதும் உள்ளே போகிற வேகத்தில் அவளுக்குக் கேட்டது. இரவில் கண்ட கனவை நினைத்துக் கொண்டாள். உடைமாற்றிக் கொண்டு அந்நோட்டுப் புத்தகத்தோடு அவள் வெளியே வந்தாள்.

அவள் வெளியே வந்த போது, ஓதுவார்க்கிழவர் கோயிலுக்குப் போயிருந்தார். அவருக்குக் கோயிலில் தேவாரம் பாடுவதற்குப் போக வேண்டிய நேரம். தனியாக உட்கார்ந்திருந்த அரவிந்தன், நோட்டுப் புத்தகமும் கையுமாக அவளைப் பார்த்ததும் வாங்கிக் கொள்வதற்காகக் கை நீட்டிக் கொண்டு எழுந்திருந்தான். பூரணி அதை அவன் கையில் கொடுத்துவிட்டு, "உட்காருங்கள், எனக்கு உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். உங்களுக்கு அவசரம் ஒன்றுமில்லையே" என்று கேட்டாள்.

'இந்த நோட்டுப் புத்தகத்தை இவள் படித்திருப்பாளோ?' என்று கூசித் தயங்கிக் கொண்டே கையில் வாங்கிய அரவிந்தன், அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் கூச்சம் அடைந்தான். 'இவள் மயங்கி விழுந்தது பற்றி நான் இதில் எழுதியிருப்பதையெல்லாம் படித்திருப்பாள் போலிருக்கிறது. அது சம்பந்தமாகத்தான் தன்னை ஏதாவது கேட்பாள்' என்று எண்ணி வெட்கமும் தயக்கமுமாக மீண்டும் திண்ணையில் உட்கார்ந்தான். பனித்துளி நீங்காத செந்தாமரைப் பூப்போல் குளித்த ஈரம் புலராமல் தென்படும் அந்த முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான் அரவிந்தன். அந்த முகத்தில் தான் அவனுடைய கவிதைகள் பிறந்தன. அந்த முகத்துக்குத்தான் லட்சிய வெறியும், கவிப்பித்தும் கொண்ட அவள் மனம் இளகி நெகிழ்ந்தது. அந்த முகத்தில் அப்படி என்னதான் இருக்குமோ?

"நேற்று உங்களிடம் என்னென்னவோ சொல்லி ஆத்திரமாகப் பேசிவிட்டேன். அதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்." மன்னிப்புக் கேட்கும் பணிவான இனிய குரலைக் கேட்டான் அரவிந்தன். அவனுடைய கூச்சம் நீங்கிச் சற்றே துணிவு வந்தது. நன்றாக நிமிர்ந்து நேராகவே அவள் முகத்தைப் பார்த்தான். பூரணியும் பார்த்தாள். கருத்தால் கவர்ந்து கண்விழிப் புகுந்து கனவெல்லாம் அளித்த குறுநகைக் கள்வனைத் தன் விழிகளால் பருகினாள். கல்பகோடி காலமாக அந்தப் பார்வைக்காகக் காத்திருந்தது போல் ஓர் அன்பின் தாகம் அந்த நான்கு கண்களிலும் தெரிந்தது.

"உங்கள் நோட்டுப் புத்தகத்தை முழுவதும் நான் படித்தேன். அதற்காகவும் மன்னிக்க வேண்டும்!"

"பரவாயில்லை! அது ஒன்றும் அப்படி மன்னிக்க வேண்டிய பெரிய குற்றமில்லை. ஏதோ எனக்குத் தோன்றியதையெல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறேன்."

"எல்லாம் நன்றாக இருந்தன. விடிய விடிய அவற்றைத் தூக்கம் விழித்துப் படித்தேன் நான்."

"அப்படியா? உங்களைப் பற்றிக்கூட ஏதோ கிறுக்கியிருந்தேன்."

"அதையும் பார்த்தேன்."

"தப்பானால் நானும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவன் தான்!" அரவிந்தன் தனக்கே உரிய குறுநகையோடு பூரணியின் முகத்தை நோக்கிக்கொண்டே இப்படிச் சொன்னான். அரவிந்தனுடைய சிரிப்புக்கு, எதிரே நின்று பேசுகிறவர்களையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் உண்டு. பூரணியும் சிரித்தாள். சிரித்துக் கொண்டே சொன்னாள்:

"அப்பாவின் புத்தகங்களை நீங்கள் வெளியிடலாம். உங்கள் நோட்டுப் புத்தகத்தைப் படித்த பின் இந்த முடிவுக்கு வந்து விட்டேன் நான். உங்களை நான் நம்புகிறேன். முகவரி கொடுத்து விட்டுப் போனால் நானே நாளை உங்கள் அச்சகத்துக்கு வருகிறேன்."

"நீங்கள் இந்த நல்ல முடிவுக்கு வந்ததற்கு என் நன்றி. இதோ முகவரி" என்று விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான் அரவிந்தன். அவன் விடைபெற்றுப் போகும்போது, தன் உள்ளத்தைப் பூரணியிடம் விட்டு, அவள் உள்ளத்தைத் தன்னோடு கொண்டு போய்விட்டானா, என்ன?

அன்றைக்கு மாலையே புதிதாகப் பார்த்திருக்கும் வீட்டிற்கு சாமான்களை மாற்றி விடுகிற திட்டத்தோடு மூன்று மணி சுமாருக்கு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு திருநாவுக்கரசுடனும், கமலாவுடனும் பழைய வீட்டுக்குப் போனாள் பூரணி. ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. பழைய வீட்டில் சாமான்களை ஒழிக்கத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேஸ்வரி அம்மாள் அவசரமாகக் காரில் வந்து இறங்கி முக்கியமான காரியமென்று கூறி பூரணியைத் தன்னுடன் மதுரைக்கு அழைத்துப் போய்விட்டாள்.

 

8

 

"நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய்

நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய்

பொன்னானாய் மணியானாய் போகமானாய்

பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை

என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்

ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே"

                                                                                                        -- தேவாரம்

 

"முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு..." என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது வீட்டுக்கு மாற்றும் வேலையைத் தம்பி திருநாவுக்கரசு, கமலா, ஓதுவார்க் கிழவர் ஆகியவர்களிடம் விட்டுவிட்டு அந்த அம்மாளோடு உடனே புறப்பட்டாள் பூரணி.

அன்று அவள் கமலாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டே புது வீடு பார்த்துவிட்டு வந்தாள். உற்சாகமாக சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போனாள். பழைய வீட்டுக்காரர் கொடுத்திருந்த காலத்தவணைக்கு முன்பே அதைக் காலி செய்து விடத் துணிந்தாள். உடல்தான் சுறுசுறுப்பாக இவ்வளவையும் ஊக்கத்தோடு செய்தது. இதழ்களில்தான் சிரிப்பு விளங்கியது. உள்ளம் முழுவதும் வேதனை. உள்ளம் எரிந்தது. அங்கே சிரிப்பு இல்லை. சீற்றம் இருந்தது. அமைதி இல்லை, ஆற்றாமை இருந்தது. உற்சாகம் இல்லை, அழற்றி இருந்தது.

தன்னுடைய எந்தத் துன்பங்கள் தன்னைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று அவள் நினைத்தாளோ அவை தெரிந்துவிட்டன; அவளுடைய வீட்டில் பசியும், ஏழ்மையும், பரிவும், வேதனையும் நிறைந்திருப்பதை உலகம் தெரிந்து கொண்டுவிட்டது; உலகம் என்றால் என்ன? கமலம் தெரிந்து கொண்டுவிட்டாள். இந்த அனுதாபத்தைத் தான் காலால் எட்டி உதைக்க நினைத்திருந்தது அவள் மனம். நடைமுறையில் அப்படிச் செய்ய முடியவில்லையே! மிகவும் நெருங்கிப் பழகிய சிநேகிதி செய்கிறாள். அந்த உதவியை வாய் கூசாமல் மறுத்துவிட்டு வீட்டுக்குள் அடைந்து பட்டினி கிடக்க அவளுக்கு ஏது உரிமை?

சந்தனக் காட்டில் நெருப்புப் பிடித்த மாதிரி எண்ணங்களை எரித்து அழிக்கும் அந்தத் துக்கத்தில் மனத்துக்கு இதம் அளிக்கும் மனம் ஒன்றும் இருந்தது. அரவிந்தனைப் பற்றிய நினைவுதான் அந்த மனம். அவனைப் பற்றிக் கண்ட கனவுதான் அந்த மனத்தின் சுகம். அவளுடைய நினைவுப் பசும்பயிர்களுக்கு அரவிந்தன் வித்தாக இருந்தான்.

 

பலவித நினைவுகளோடு மங்களேசுவரி அம்மாளின் காரில் உடன் சென்று கொண்டிருந்த பூரணி தானாக அந்த அம்மாவிடம் எதுவும் பேசவில்லை. தன் சிந்தனைகளின் போக்கிலே மௌனமாக அந்த அம்மாளின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். மேற்குப்புறம் உயர்ந்த மண்மேடும் கிழக்குப் புறம் பசுமை போர்த்திய வயல்வெளிகளும் கடந்து மூலக்கரைச் சாலையின் அடர்த்தியில் திரும்பியது கார். வடக்கே ஒரே மாதிரி வரிசை வரிசையாய்த் தெரியும் சிமெண்டுக் கட்டிடங்களுடன் கூடிய மில் தொழிலாளர் குடியிருப்புத் தோன்றி மறைந்தது. பசுமலையின் பசுமைச் சூழ்நிலைக்குள் புகுந்து மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் அவர்கள். சிறிது தொலைவுவரை ஒருவருக்கொருவர் பேசவில்லை. ஒருவாரத்து உழைப்பின் அலுப்பெல்லாம் கிடந்து உறங்குவது போல் கடைகள் அடைக்கப்பெற்றுச் சோர்ந்து தென்படும் ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறைத் தளர்ச்சி வீதிகளில் வெளிப்படையாய்த் தெரிந்தது.

மங்களேஸ்வரி அம்மாள் தான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். "இப்போது உன்னை நான் எங்கே அழைத்துக் கொண்டு போகிறேன் தெரியுமா?"

"தெரியாது. நீங்கள் சொன்னால்தான் தெரியும் எனக்கு."

"உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுக்கப் போகிறேன். அதாவது வாழ்க்கை விபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றப் போகிறேன்."

பூரணி நம்பிக்கை மலரும் முகத்தோடு அந்த அம்மாளைப் பார்த்தாள். கார் வடக்கு ஆவணி மூலவீதியில் 'மதுரை மங்கையர் கழகம்' என்று எழுதியிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு வந்து நின்றது. "வா உள்ளே போகலாம்" என்று பூரணி பின் தொடர உள்ளே சென்றாள் மங்களேஸ்வரி அம்மாள். கட்டிட வாயிலில் வேறு சில கார்களும் வரிசையாய் நின்றன.

உள்ளே மங்களேஸ்வரி அம்மாளைப் போலவே பெரிய செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த முதிய பெண்கள் ஐந்து, ஆறு பேர்கள் அமர்ந்திருந்தனர். மதுரை நகரின் பிரமுகர்களாகவும் வளமுள்ளவர்களாகவும் இருந்த பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் அவர்கள். பூரணி அவர்களில் பெரும்பாலோரைப் பல இடங்களில், பல சமயங்களில் பார்த்திருக்கிறாள். தெரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவர்கள் அவளை இன்னாரென்று தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. ஏழைகளைப் போலத் தராதரமில்லாமல் பணக்காரர்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் தெரிந்து நினைவு வைத்துக் கொண்டால் பிறகு அவர்களுடைய பெருமையும் கௌரவமும் என்ன ஆவது? "பூரணி! இவர்கள் எல்லோரும் இந்த மங்கையர் கழகத்தின் நிர்வாகிகள். இவர்களுக்கு வணக்கம் சொல்லு, அம்மா!" என்று அவள் காதுக்கருகில் மெல்லச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி மெதுவாக எல்லோருக்கும் சேர்த்து ஒருமுறை கை கூப்பினாள்.

 

"நான் சொன்னேனே, அது இந்தப் பெண் தான். காலஞ்சென்ற பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் இவள். தமிழ் இலக்கண இலக்கியங்களெல்லாம் முறையாகவும் நன்றாகவும் படித்திருக்கிறாள். ஆங்கிலமும் வேண்டியது தெரியும். நாம் புதிதாக தை மாதத்திலிருந்து தொடங்கத் திட்டமிட்டிருக்கும் வகுப்புகளைக் கவனித்துக் கொள்ள இவளையே ஆசிரியையாக நியமித்துவிடலாம் என்று நினைக்கிறேன்" என்று பூரணியையும், அவளை அழைத்து வந்திருக்கும் நோக்கத்தையும் மங்களேஸ்வரி அம்மாள் ஒன்றாக இணைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

"எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் வயது கொஞ்சமாக இருக்கும் என்று தோன்றுகிறதே?" என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள் ஒரு முதிய அம்மாள். மங்களேஸ்வரி அம்மாளும் இந்தச் சந்தேகத்துக்குச் சுடச்சுடப் பதில் தந்தாள். "வயதில் என்ன இருக்கிறது? இவளோடு சிறிது நேரம் பேசிப் பாருங்கள் தெரியும். உங்களுக்கும் எனக்கும் இத்தனை வயதுக்குப் பின்னும் தெரியாத அவ்வளவு அனுபவ ஞானமும் சிந்தனையும் இவள் பெற்றிருக்கிறாள். இவளுடைய தந்தை இவளுக்குப் பூரணி என்று பெயரிட்டிருக்கிறார். இவளது படிப்பும், அறிவுக் கூர்மையும் அந்தப் பெயருக்குப் பொருத்தமாகவே வாய்த்திருக்கின்றன."

"நீங்கள் சொன்னால் சரிதான்; விளையாட்டுக்காகவோ பொழுது போக்குக்காகவோ நாம் நமது மாதர் சங்கத்தில் இந்த வகுப்புக்களைத் தொடங்கவில்லை. உண்மையாகவே நல்ல விதமான மாறுதல்களையும், வளர்ச்சியையும் நமது பெண்கள் இதன் மூலம் பெறவேண்டும்."

மங்களேஸ்வரி அம்மாளும், மற்றவர்களும் பேச்சில் ஆழ்ந்திருந்த போது பூரணி அமைதியாகவும், அடக்கமாகவும் உட்கார்ந்திருந்தாள். அங்கேயிருந்த பெண்களின் முகங்களையும் தோற்றங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து அவற்றின் மூலம் அவர்களுடைய உள்ளங்களையும் குணங்களையும் அனுமானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள். அவளைப் போல் கூர்ந்து பார்க்கும் கண்களும், ஆழ்ந்து சிந்திக்கும் மனமும் உள்ளவளுக்கு ஒவ்வொரு முகமும் ஓர் உலகம்; ஒவ்வொரு முகமும் ஒரு சுவை; ஒவ்வொரு முகமும் ஓர் அனுபவம்; ஒவ்வொரு முகமும் ஓர் வாழ்க்கை; ஒவ்வொரு முகமும் ஓர் அழகு; ஒவ்வொரு முகமும் ஓர் புத்தகம்; அவற்றை அவள் பார்த்துப் படித்துச் சிந்தித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

மங்கையர் கழகத்துக்குள் நுழைகிற இடத்துக்கு நேர் எதிரே தூய்மையே பேருருவெடுத்துப் பெரிதாய் மலர்ந்து சித்திரமானாற் போலச் சாரதாமணி தேவியாரின் படம் மாட்டியிருந்தது. சுவர்களில் விவேகானந்தர், பரமஹம்சர், திருவள்ளுவர் போன்ற வேறு பெரியோர்களின் படங்களும் காட்சியளித்தன. சாரதாமணி தேவியாரின் படத்துக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு குத்துவிளக்குகள் பொற்சுடர் பூத்து எரிந்து கொண்டிருந்தன. சந்தன வில்லைகளைக் கொளுத்தி வைத்திருந்ததால் கட்டிடம் முழுவதும் சந்தனப் புகை மணந்தது. சில பெண்கள் வைத்திருந்த மல்லிகைப் பிச்சிப் பூக்களின் மணமும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்த மணங்களும், எதிரே புனிதமான சாரதாமணி தேவியாரின் ஓவியமும் பூரணியின் உள்ளத்தை என்னவோ செய்தன. மிகப்பெரியதாக எதையோ உணர்ந்து, எதற்காகவோ தாகம் கொண்டது அவள் உள்ளம். பெண்மைப் புண்ணியமெல்லாம் சேர்ந்து பூத்தது போன்ற சாரதாமணி தேவியாரின் முகத்திலிருந்து எதையோ புரிந்து கொண்டாள் அவள். பழுக்கக் காய்ச்சிய இரும்பு நீரை இழுத்து உறிஞ்சிக் கொள்கிற மாதிரி, அந்த முகத்திலிருந்து ஏதோ சில உணர்வுகளை இழுத்து உட்படுத்திக் கொண்டாள் பூரணி.

"உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா, அம்மா?" இந்தக் கேள்வி, தன்னை நோக்கிக் கேட்கப்பட்டதும் பூரணி சாராதாமணி தேவியாரின் படம் அளித்த சிந்தனைத் தூய்மைகளிலிருந்து கீழிறங்கிக் கேள்வி கேட்ட அம்மாளின் முகத்தைத் திரும்பிப் பார்த்துப் பதில் கூறினாள்.

"ஆகவில்லை."

"அப்படியா? வயது நிறைய ஆகியிருக்கும் போல் இருக்கிறதே?"

இந்த மாதிரியே இன்னும் என்னென்னவோ கேள்விகளையெல்லாம் கேட்டார்கள்; செல்வக் குடும்பத்துப் பெண்களின் வாயரட்டைகளுக்கும் வம்புக் கேள்விகளுக்கும் கணக்கு வழக்கு ஏது? அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொன்னாள் பூரணி. இடையிடையே பூரணிக்காக மங்களேஸ்வரி அம்மாளே ஏற்றுக்கொண்டும் பதில் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் கடைசியாக 'தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஒரு பி.. பட்டம் கூடப் பெறாதவளை எப்படி நாம் இங்கே நியமிப்பது? கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் கூட நமது மாலை நேரத்து வகுப்புகளில் கலந்து கொள்வார்களே. இவளால் சமாளிக்க முடியுமா?' என்று புதியதொரு தடையை வெளியிட்டவள் முதலில் பேசிய முதியவள். மங்களேஸ்வரி அம்மாளுக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது.

"பட்டம் மனிதர்கள் கொடுப்பது. நாலைந்து கனத்த புத்தகங்களை ஐந்தாறு ஆண்டுகளுக்குக் கைகளிலும், மனத்திலுமாக மாற்றி மாற்றிச் சுமக்கிற எல்லோருக்கும் அது கிடைக்கும். ஞானம் பிறவியிலேயே வருவது. அதை மனிதர்கள் மட்டுமே தந்துவிட முடியாது. இந்த ஞானம் இந்தப் பெண்ணிடம் குறைவின்றி இருக்கிறது. விருப்பமிருந்தால் இவளை வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள். அதற்காக எதிரே உட்கார்த்தி வைத்துக் கொண்டு இப்படி அவமானப்படுத்துகிறாற்போல் கேள்விகளையெல்லாம் கேட்கவேண்டாம்" என்று மங்களேஸ்வரி அம்மாள் பொறுக்க முடியாமல் பதிலுக்குக் குத்தலாகச் சொல்லிக் காட்டிய பின்பே அவர்களுடைய வம்புக் கேள்விகள் நின்றன. அதற்காக அந்த அம்மாளுக்கு மனதுக்குள்ளேயே நன்றி சொல்லிக் கொண்டாள் பூரணி.

 

அந்த வேலை தனக்கே கிடைத்துத் தானே கற்பிக்கும் பணியை ஏற்றுக்கொண்டால் பட்டம் பெற்றவர்கள் மூக்கில் விரலை வைத்து வியக்கும்படி வகுப்புகளை நடத்திச் சந்தேகப்பட்டவர்கள் முகங்களில் கரி பூசவேண்டும் என்றொரு கொதிப்புக் கலந்த வைராக்கியம் பூரணிக்கு அந்த வினாடியே உண்டாயிற்று. சாரதாமணி தேவியாரின் படத்தைப் பார்த்தவாறே இந்த வைராக்கியத்தை மனத்தில் உண்டாக்கிக் கொண்டாள் அவள்.

மங்களேஸ்வரி அம்மாளின் செல்வாக்கு வெற்றி பெற்றது. அவருடைய விருப்பத்திற்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை. பூரணிக்கே அந்த வேலை கிடைத்தது. தைமாதம் முதற்கொண்டு நாள்தோறும் மாலை ஆறுமணியிலிருந்து எட்டுமணி வரையில் அவள் வகுப்புகளை நடத்த வேண்டுமென்றும், அதற்காக அவளுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் கொடுத்து விடுவது என்றும் முடிவு ஆயிற்று. முதல் தேதியன்று வந்து சந்திப்பதாக மற்றவர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு மங்களேஸ்வரி அம்மாளோடு புறப்பட்டாள் பூரணி. வாசலுக்கு வந்து காருக்குள் ஏறிக்கொள்கிறவரை சாரதாமணி தேவியாரின் தெய்வத் திருமுகம் அவள் கண்களுக்கு முன் மலர்ச்சி காட்டிக்கொண்டு நின்றது.

மாதர் சங்கத்திலிருந்து திரும்பியதும், மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டில் சிறிது நேரம் கழிந்தது.

"பூரணி! என்னால் முடிந்தவரை சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டேன். மாதர் சங்கத்தில் எல்லோரும் வம்புக்காரிகள். நன்றாகக் கற்பித்து நல்ல பேர் எடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு அம்மா."

"நீங்கள் சொல்லவே வேண்டாம். நான் உங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவேன்."

அந்த அம்மாளுக்கு உறுதிமொழி அளித்தாள் அவள். மூத்த பெண் வசந்தா மாடியறையில் பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். செல்லத்தைத்தான் பூரணி காண முடிந்தது.

"பூரணியக்கா! நீங்க தினம் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனால் நல்லது. ரவிவர்மா படத்திலேயே சரசுவதி முகத்தைப் பார்க்கிறாற்போல் உங்க முகத்தைப் பார்த்துப் பேசினாலே மனம் பரிசுத்தமாகப் போயிடுது" என்று களங்கமின்றிச் சிரித்துக் கொண்டே சொன்னாள் செல்லம்.

"செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்" என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள்.

"இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா" என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின் கையோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நகைத்தாள் செல்லம். நேரமாயிற்று. பூரணி புறப்பட்டாள். "டிரைவரைக் காரை எடுக்கச் சொல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் போய் இறங்கிக் கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விடு" என்று அந்த அம்மாள் கூறியதை மறுத்துவிட்டாள் பூரணி.

"என்னை நடந்து போகவிடுங்கள் அம்மா! அதிகப்படியான பெருமைகளைக் கொடுத்து வேதனைப் படுத்தாதீர்கள். இந்த மதுரை நகரத்தில் தெருக்களில் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பிச்சைக்காரத்தனமும், பெருந்தனமும் கலந்து உயிர்களைத் துடிக்க வைக்கிறது. திறந்த புத்தகத்தின் பக்கங்களைப் போல் வாழ்க்கை எழுதுண்டு கிடக்கும். இந்தச் சீரிய வீதிகளைக் கண்களால் அனுபவித்துப் படித்து மனதில் அசைபோட்டுக் கொண்டே போவேன் நான். அது எனக்குப் பிடிக்கும். பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பின்பு பஸ் ஏறிக்கொள்வேன். எனக்குக் காரும் வேண்டாம், டிரைவரும் வேண்டாம்."

தெருவில் பூரணி வேகமாக நடந்தாள். விதவையின் திலகமிழந்த முகத்தைப் போல் ஞாயிற்றுக்கிழமை கடை வீதியில் கலகலப்பு இருப்பதில்லை! களை இருப்பதில்லை! நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த விளம்பரப் பலகையைப் பார்த்துவிட்டு சிறிது திகைத்து நின்றாள். முகம் சற்றே மலர்ந்தது. 'மீனாட்சி அச்சகம், குறித்த நேரம், குறைந்த செலவு' என்று மெல்ல வாய்க்குள் படித்துக் கொண்டாள். அச்சகத்து முன் கதவு அன்று ஞாயிறு விடுமுறையின் அடையாளமாகச் சாத்தியிருந்தாலும் முகப்பு அறையில் விளக்கு எரிவதும் அரவிந்தன் அமர்ந்திருப்பதும் நடைபாதையிலிருந்தே அவளுக்கு நன்றாகத் தெரிந்தன. முதல்நாள் எந்த இடத்தில் மயங்கி விழுந்தாளோ, அந்த இடத்துக்கு மிக அருகில் தான் நிற்பதை அவள் உணர்ந்தாள். இந்த இடத்தில் மயங்கி விழுந்திராவிட்டால் அரவிந்தன் என்னை அப்படிப் பாடியிருக்க மாட்டாரே என்று நினைத்துக் கொண்டபோது இன்பச் சிலிர்ப்பு சிரித்தது அவள் மனத்தில். காலையில் விசிட்டிங் கார்டு வாங்கி வைத்துக் கொண்ட போது மறுநாள் தான் அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாள் அவள். அதனால் என்ன? இப்பொழுது பார்க்கக் கூடாதென்று சட்டம் ஒன்றுமில்லையே!

பூரணி சற்று நெருங்கி ஜன்னல் அருகே நின்று பார்த்தாள். உள்ளேயிருந்து தற்செயலாகத் திரும்பிய அரவிந்தன் அவள் வாய் திறந்து கூப்பிடுவதற்கு முன்பே அவளைப் பார்த்து விட்டான்.

"! நீங்களா? ஏது இந்த நேரத்தில்... நாளைக்கு அல்லவா வருவதாகச் சொல்லியிருந்தீர்கள்?" என்று விசாரித்துக் கொண்டே கதவைத் திறப்பதற்காக எழுந்து வந்தான் அரவிந்தன். 'அந்த இரவு நேரத்தில் வீணாக அவரைத் தொந்தரவு படுத்தாமல், வீட்டுக்குப் போயிருக்கலாமே' என்று முன்பு நினைத்ததற்கு மாறாக இப்போது நினைத்தாள் அவள். சிறிது நாணமும் வந்து தயங்கச் செய்தது. ஒல்கி ஒதுங்கி ஒசிந்து நின்றாள்.

 

"உள்ளே வாருங்களேன்... வாசலில் நிற்பானேன்?" கதவைத் திறந்துவிட்டுக் கூப்பிட்டான் அரவிந்தன். நினைப்பவர் மனதில் வித்தாக விழுந்து கனவுகளை முளைக்கச் செய்யும் அந்த அதியற்புத மாயப்புன்னகை அவன் இதழ்களில் தோன்றி நின்றது. பூரணி உள்ளே போய் உட்கார்ந்தாள். மேஜை மேல் கொஞ்சம் நிலக்கடலைப் பருப்பும் ஒரே ஒரு மலைவாழைப் பழமும், கிளாஸ் நிறைய பாலும் வைத்திருந்தான். பூரணி அவற்றைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.

"இதெல்லாம் என்ன?"

"இவை என்னுடைய இரவு உணவு". உள்ளே வந்து அவளுக்குச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு பதில் கூறினான் அரவிந்தன்.

"இந்தச் சிறிய வாழைப்பழமும், கொஞ்சம் கடலைப் பருப்பும் கொஞ்சம் பாலும் எப்படிப் போதும் உங்களுக்கு?"

இதைக்கேட்டு அரவிந்தன் சிரித்தான்.

"போதுமா, போதாதா? என்று தீர்மானம் பண்ணுகிற உரிமையை வயிற்றுக்கு விட்டால், போதாது என்றுதான் தீர்மானம் ஆகும். நான் அந்த உரிமையை மனதுக்குக் கொடுத்துப் 'போதும்' என்று தைரியமாகப் பழகிக் கொண்டு விட்டேன். இது ஏழைகள் நிறைந்த நாடு. மூன்று வேளை அரிசிச் சோறும் நாலாவது வேளைக்கு சிற்றுண்டியுமாக வாழ்கிறவர்கள், மற்றொரு பக்கத்து நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக்குக் கூட வயிறு நிறையச் சோறு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டில்? அவர்களுடைய குழிந்த வயிற்றுக்காக நூற்றில் ஒருவராவது கவலைப்பட வேண்டாமா? அக்கறை காட்ட வேண்டாமா?"

"அதற்காக நீங்கள் அரை குறையாகச் சாப்பிட்டுவிட்டுப் பட்டினிக் கிடக்க வேண்டுமென்பதில்லையே?"

"தவறு! நான் பட்டினி கிடக்கவில்லை. பகல் உணவைப் பசிக்காக உண்கிறேன். மற்ற நேரங்களில் மனம் நிறைவதற்குத் தான் உண்கிறேன். வயிறு நிறைவதற்கு அல்ல. எனது இந்த உணர்வுக்கு மூன்றே அணாக்கள் தான் செலவு. இப்படி மீதம் பிடிக்கும் காசுகளை இந்தத் தெருவில் குழந்தையும் கையுமாகப் பிச்சைக்கு வரும் பெண்களுக்குத் தருகிறேன். பெண்கள் புனிதமான தாய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தெருப் புழுதியில் நடந்து பிச்சையெடுக்கும் நிலை வருவது ஒரு நாட்டுக்கு எவ்வளவு கேவலம்? வீட்டு வாயில்படியில் வந்து நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு எல்லாம் உணவு அளித்து, அறம் வளர்க்கும் அன்னபூரணிகள் பெண்கள். அவர்களே வீடு வீடாகப் படியேறிப் பிச்சைக் கேட்க வரும்படி விடுவது எவ்வளவு ஈனமான காரியம்?" அரவிந்தன் கொதிப்போடு பேசினான். இதைப் பேசும்போது, முகம் சிவந்து உதடுகள் துடித்தன அவனுக்கு.

 

"நீங்கள் கூறுவது உண்மை. இப்போதெல்லாம் மதுரையில் பெண் பிச்சைக்காரர்கள் அதிகமாகிவிட்டார்கள்" என்ற பூரணியை நோக்கி, மேலும் அவன் கூறலானான்.

"கோபுரமும் கடைவீதியும் பங்களாக்களும் தியேட்டர்களும் நிறைந்த அழகிய மதுரையைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இன்னொரு மதுரையையும் இங்கே நான் பார்க்கிறேன். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற வழியில் தூங்குமூஞ்சி மரங்களின் கீழ் வெய்யிலே கூரையாய், மழையே கருணையாய்ச் சேற்றிலும் புழுதியிலும் வாழ்கிற அனாதைகளின் அழுக்கு மயமான மதுரையைப் பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா? யாராவது நினைக்கிறார்களா?"

அந்தக் கருத்துக்களைக் கேட்கக் கேட்க அந்த முகத்திலே ஒளிரும் இலட்சியச் சாயையைப் பார்க்கப் பார்க்க அரவிந்தனுடைய கம்பீரமும் அவனது இலட்சியமும் மனத்தின் நினைவுகளில் அடங்காத அளவுக்கு உயரத்தில் இருப்பதைப் பூரணி உணர்ந்து கொண்டாள்.

வெளியில் போய்ப் பக்கத்துப் பால்கடையில் இன்னொரு கிளாஸ் பாலும் இரண்டு மலைப்பழமும் வாங்கிக் கொண்டு வந்து "இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பூரணியை உபசாரம் செய்தான் அரவிந்தன். அவள் அந்த உபசாரத்தை ஏற்றுக் கொண்டாள். அரவிந்தனைப் பற்றி நினைக்கும் போது, "உன்னைப் போன்று இன்னொருவர் இருக்க முடியாதபடி நீ உயர்ந்து நிற்கிறாய். நினைக்கின்றவர்கள் மனத்தில் வித்தாக விழுந்து எண்ணங்களாக முளைக்கிறாய்" என்று தேவாரத்தில் வருகிற கருத்துதான் பொருத்தமாகத் தோன்றியது பூரணிக்கு. அவனுடைய மனத்தின் எல்லை பெரியது. அவனோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கழிவதே தெரியவில்லை. முகத்தையும் சிரிப்பையும் போலவே பேச்சும் கவர்ச்சியாயிருந்தது அவளுக்கு. வெளியே இருந்தாற் போலிருந்து மழை தூறத் தொடங்கியிருந்தது. முதலில் தூறலாக இருந்த மழை சிறிது நேரத்தில் தெருவில் நடந்தால் நனைந்து போய்விடுகிற அளவுக்கு வலுத்துவிட்டது. பூரணி அச்சகத்தின் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை ஆவதற்கு இருந்தது.

"அடடா! உங்களோடு பேசிக் கொண்டிருப்பதில் நேரமானதே தெரியவில்லை. பத்தரை மணியோடு பஸ் போக்குவரத்து சரி. அப்புறம் நான் எப்படி ஊருக்குப் போவது?" என்று பரபரப்பாக கூறிக்கொண்டே புறப்பட எழுந்தாள் பூரணி.

"மழை பெய்கிறதே. எப்படிப் போவீர்கள்? நீங்கள் பஸ் ஸ்டாண்டுக்குப் போவதற்குள் கடைசி பஸ் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?"

"எப்படியாவது போய்ச் சேர்ந்தாக வேண்டுமே? வேறென்ன செய்வது?" அவளுடைய தவிப்பு அரவிந்தனுக்குப் புரிந்தது. உள்ளே போய் ஒரு குடை கொண்டு வந்தான்.

"இதை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நானும் பஸ் ஸ்டாண்டு வரையில் உங்களோடு வருகிறேன். கடைசி பஸ் போய்விட்டால் வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்" என்று அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் அரவிந்தன்.

"ஒரு குடைதானே இருக்கிறது. நீங்கள் எப்படி வருவீர்கள்? வீணாக நனைய வேண்டாம். நான் எப்படியாவது போய்க் கொள்கிறேன். நீங்கள் அலையாதீர்கள்" என்று சொல்லி விட்டுத் தெருவில் இறங்கிய பூரணியை அரவிந்தன் தனியாக விடவில்லை. பிடிவாதமாக உடன் புறப்பட்டுவிட்டான்.

"அதனால் பரவாயில்லை! எனக்குச் சிறு பிள்ளையிலிருந்தே மழையில் நனைவதென்றால் மிகவும் பிடிக்கும். வெய்யிலும் மழையும் வானம் பூமிக்குத் தரும் சௌபாக்கியங்கள். அவற்றை நாம் ஏன் வெறுத்துப் புறக்கணிக்க வேண்டும்!" என்று சொல்லி விட்டுச் சிறு குழந்தைபோல் சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தான் அவன். இருவரும் வேகமாக நடந்தார்கள். நல்ல மழை. அரவிந்தனை நனையவிட்டு தான் மட்டும் குடையின் கீழ் நனையாமல் போவது வேதனையாக இருந்தது பூரணிக்கு. அவனோ விளையாட்டுப் பிள்ளைபோல் உற்சாகமாக மழையில் நனைந்து கொண்டு வந்தான். 'மனத்தில் இடம் கொடுத்து விட்டேன். குடையில் இடம் கொடுக்க ஏன் நாணப்பட வேண்டும்?' என்று நினைவுகள் புரளும் மனத்தோடு தெருவிளக்கின் மங்கி நனைந்த மழை வெளிச்சத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.

அழகிய சிவந்த நெற்றியில் முத்து முத்தாக நீர்த்துளி உருள அலை அலையாக வாரிப் படிந்த தலையில் ஈரம் மினுமினுக்க அரவிந்தன் வந்து கொண்டிருந்தான்.

"நீங்களும் உடன் வரலாம். நனையாதீர்கள்" என்று அவளாகவே அருகில் நெருங்கிச் சென்று குடையை அவனுக்கும் சேர்த்துப் பிடித்தாள். வனப்புமயமான அந்தப் பெண்ணின் பொன்னுடல் தனக்கு மிக அருகில் நெருங்கிய அந்த ஒரு கணத்து அண்மையில் மல்லிகைப் பூவின் மணமும் பன்னீரின் குளிர்ச்சியும் பச்சைக் கற்பூரத்தின் புனிதமும் ஒன்றாக இணைந்த ஒரு பவித்ர மயமான உணர்வு அரவிந்தனுக்கு ஏற்பட்டது. அந்த உணர்வில் அவனுடைய நெஞ்சும் உடலும் சிலிர்த்து ஓய்ந்தன. தாமரைப்பூ மலர்வது போல் மனத்தில் ஏதோ நெகிழ்ந்து இதழ்கள் பிரிந்தது.

அடுத்த கணம் தன்னுணர்வுடன், "வேண்டாம்! இந்தச் சிறிய குடையில் இரண்டு பேர்கள் போவதனால் இரண்டு பேருமே நன்றாக நனைய நேரிடும். நீங்களாவது நனையாமல் வாருங்கள்" என்று சொல்லிப் புன்னகையோடு தானாகவே விலகிக் கொண்டு நடந்தான் அரவிந்தன். ஒரே ஒரு விநாடி அன்பில் நனைந்து மூழ்கிய பெருமிதத்தோடு மறுபடியும் அவள் அருகே மழையில் நனையலானான் அவன். பூரணி அனுதாபமும் அன்பும் மிதக்கும் கண்களால் அந்த வயது வந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே கன்னக்கனிகள் கனிய முறுவல் பூத்தவாறே நடந்தாள்.

 

அவர்கள் பஸ் ஸ்டாண்டை அடைந்தபோது கடைசி பஸ்ஸும் போய்விட்டது. அந்த நேரத்தில் தனியாக ரிக்ஷாவிலோ, குதிரை வண்டியிலோ போவதைப் பூரணி விரும்பவில்லை. தயங்கினாள். "நான் வேண்டுமானால் துணைக்கு வருகிறேன். குதிரை வண்டியில் போகலாம்" என்றான் அரவிந்தன். அவள் அதற்கும் தயங்கினாள். மழையில் அவனும், குடையில் அவளுமாக நனைந்து கொண்டும் நனையாமலும் பஸ் நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.

"நடந்தே வேண்டுமானாலும் போகலாம்; நான் துணை வருகிறேன்."

"திருப்பரங்குன்றம் வரையில் நனைந்து கொண்டேயா?"

"திருப்பரங்குன்றம் வரை என்ன? உங்களோடு இப்படியே கன்னியாகுமரி வரையில் கூட நனைந்து கொண்டு வர நான் தயார்" என்று கூறிச் சிரித்தான் அரவிந்தன். சர்ரென்று மழை நீரும் சேறும் வாரி இறைபட ஒரு கார் வந்து நின்றது. அரவிந்தனுடைய சட்டையில் சேறு தெறித்துவிட்டது. கோபத்தோடு அந்தக் கர்வம் பிடித்த கார்க்காரனை விசாரிக்கத் திரும்பினான் அரவிந்தன். மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் காரிலிருந்து இறங்கி அவனை நோக்கி வந்தார்.

 

9

 

"பூப்போலக் கண்கள் பூப்போலப் புன்சிரிப்பு

பூப்போலக் கைவிரல்கள் பூப்போலப் பாதங்கள்

பூப்போலக் கன்னம் புதுமின் போல் வளையுமுடல்

பார்ப்போர் செவிக்குத்தேன் பாய்ச்சும் குதலைமொழி"

                                                                                                    -- சது.சு.யோகி

 

அந்த மழை இரவு பூரணியின் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று. அன்று அரவிந்தன் வெறும் மழையில் நனைந்து கொண்டு தன்னோடு வந்ததாக அவள் நினைக்கவில்லை. தன் உள்ளங் குழைத்து, நெக்குருகி நெகிழ்ந்து ஊற்றெடுத்துச் சுரந்த அன்பிலேயே நனைந்து கொண்டு வந்ததாகத்தான் தோன்றியது அவளுக்கு. அந்த இரவில்தான் அரவிந்தனின் எல்லையற்ற மனப்பரப்பை அவள் கண்டுணர்ந்தாள். அந்த இரவில் தான் மீனாட்சி அச்சக உரிமையாளர் அவளைச் சந்தித்துத் தம் காரிலேயே திருப்பரங்குன்றத்தில் கொண்டு போய் விட்டு அரவிந்தனோடு திரும்பினார். அரவிந்தனும் அவளும் பஸ் நிலையத்துக்கு வெளியே மழையில் நின்று கொண்டிருந்த போது நல்ல வேளையாக அவர் வந்து உதவினார். அந்தப் பெரியவரின் உதவி அவளுக்கு வாழ்நாள் நெடுகிலும் தொடர்ந்து கிடைக்க இருந்ததற்கு அது ஓர் அடையாளமா?

அதன் பின்னர் கடந்த சில வாரங்களில் அவள் வாழ்விலும் அவளைச் சூழ்ந்திருந்த வாழ்விலும் தான் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன. மாளிகை போல் பெரிய வீட்டில் இருந்து பழகிவிட்ட பின் சிறிய இடத்தில் புதிதாகக் குடியேறிய வீட்டில் குறுகிய வசதிகளைப் பழக்கப்படுத்திக் கொண்டாள் அவள். செல்வத்தோடும் வசதிகளோடும் வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டியதில்லை. ஆனால் ஏழ்மையோடும் வசதி குறைவுகளோடும் வாழப் பழகிக் கொள்ள முயற்சி தானே வேண்டும். சிறிய தம்பிக்கு கைக்கட்டு அவிழ்த்தாயிற்று. ஏறக்குறைய கை சரியாகிக் கூடி விட்டது. அவன் முன் போல் தன் அண்ணனோடு பள்ளிக்கூடம் போகத் தொடங்கிவிட்டான். புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் பொய்யும் புளுகுமாகக் கணக்குக் காண்பித்து பூரணி எதிர்பார்த்திருந்த தொகைக்குச் சரிபாதி கூடத் தேறாத ஒரு தொகையைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார். அரிய முயற்சியின் பேரில் அப்பாவின் சேமிப்பு நிதியில் கல்லூரிப் பங்குக்கு உரிய ஒரு பகுதி வந்து சேர்ந்தது. சாதாரணமாக மாதக் கணக்கில் காலந்தாழ்த்தி கிடைக்க வேண்டிய பணம் அது. அனுதாபமுள்ளவர்களின் உதவியாலும், கல்லூரி முதல்வர் காட்டிய அக்கறையாலும் தான் அவளுக்கு அவ்வளவு விரைவில் கிடைத்ததென்று சொல்ல வேண்டும். மீனாட்சி அச்சக உரிமையாளரும், அரவிந்தனும் அவளுடைய தந்தையின் நூல்கள் ஒழுங்காகவும், முறையாகவும் வெளி வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

காலையில் வீட்டு வேலைகளும் மாலையில் மங்கையர் கழகத்தில் வகுப்பு நடத்தும் வேலைகளும் இருந்ததனால் பூரணிக்கு ஓய்வு அதிகமாக இல்லை. துன்பங்களையும் கவலைகளையும் நினைத்தே குமுறிக் கொண்டிருந்த அவள் மனத்தில் சற்றே அமைதி நிலவியது. மின்சார விசிறி ஓடத் தொடங்கி விட்டால் அதிலுள்ள பிளவுகள் மறைந்து ஒரே சுழற்சி வட்டம் தான் தெரிகிறது. நிற்கும் போதுதான் பிளவுகள் தெரிகின்றன. ஒரு செயலுமின்றி உழைப்பு முடங்கிக் கிடக்கும் போதுதான் உலகம் பெரிய துன்பங்களும் மிகுந்த கவலைகளும் உள்ள இடமாகப் பிளவுபட்டுத் தெரிகிறது. உழைப்பு ஒரு நல்ல மருந்து. அதில் மனப்புண்களும், கவலைகளும் ஆறுகின்றன. சோர்வும் தளர்வும் ஒடுங்கிவிடுகின்றன.

கமலாவின் பெற்றோர்கள் பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் பேசிக்கொண்டு திரும்பி விட்டார்கள். அடுத்து எல்லா ஏற்பாடுகளும் தொடர்ந்து நிகழலாயின. கமலாவின் பெற்றோர் ஊர் திரும்பிய மறுநாளைக்கு அடுத்த நாள் மாலையே பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தார்கள். கமலாவின் தாயாருக்கு உதவியாக உடன் இருந்து வந்தவர்களுக்கு உபசாரம் செய்வதற்காகப் பூரணியும் அன்று அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள். பூரணி தன் கைகளால் தானே கமலாவுக்குத் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டி, பார்க்க வந்தவர்களுக்கு முன்னால் கொண்டு போய் அழகுப் பதுமையாய் நிறுத்தினாள். கமலாவை அழகு புனைவதும், அழகு பார்ப்பதுமாக அந்த ஒருநாளை விளையாட்டுத்தனமான மகிழ்ச்சியில் கழித்தாள் பூரணி. கமலாவின் திருமணம் உறுதியாயிற்று. அதே தை மாதம் திருமணத்துக்கென்று நாளும் குறித்துவிட்டார்கள்.

இது நடந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் பூரணிக்கு மிகவும் வேண்டியவர்கள் வீட்டில் இன்னொரு திருமணமும் அவசரமாக முடிவாயிற்று. ஓதுவார்க்கிழவர் பெரிய இடமாக ஆங்கிலப் படிப்பும் படித்துப் பெரிய வேலை பார்க்கும் பையனைத் தன் பேத்தி காமுவிற்குப் பார்க்க முடியாது. அவருக்கு அவ்வளவு வளமான வசதிகள் எல்லாம் இல்லை. உறவுக்குள்ளேயே கோயிலில் தேவாரம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பையனைப் பிடித்துக் காமுவுக்கு முடிபோட ஏற்பாடு செய்துவிட்டார். கமலாவின் திருமணம் நிகழ இருந்த அதே நாள் தான் காமுவின் திருமணத்துக்கும் ஓதுவார்க் கிழவர் பார்த்திருந்தார். அவசரமாகப் போய்ச் சேரவேண்டிய கடிதத்தை உடனே தபாலில் சேர்த்துவிடத் துடிக்கிறாற் போல் அந்தத் தை மாதத்தின் முகூர்த்தங்களுள் தத்தம் பெண்களை வாழ்க்கைக்கு அனுப்பிவிடத் துடிக்கும் பெற்றோர்களைத் தன்னைச் சுற்றிலும் கண்டாள் பூரணி. அப்படி அவசரப்படவும் துடிக்கவும் யார் இருக்கிறார்கள் அவளுக்கு. அவளுக்கு அவள் தான் இருக்கிறாள். ஓதுவார் வீட்டுத் திருமணத்துக்கு முன் தாம்பூலம் மாற்றிக் கொள்கிற அன்று அவளும் போயிருந்தாள். அப்போது ஓதுவார் வீட்டுப் பாட்டி "என்னடி பெண்ணே? இப்படி எத்தனை நாளைக்கு மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்குமாக நடந்து ஒண்டிப் பிழைப்புப் பிழைக்கப் போகிறாய்? கமலாவுக்கும் எங்கள் வீட்டுக் காமுவுக்கும் உன்னைவிடக் குறைந்த வயதுதான் என்பது உனக்குத் தெரியுமோ இல்லையோ, இப்படியே இருந்துவிடலாமென்று பார்க்கிறாயா? யாராவது ஒரு நல்ல பிள்ளைக்கு கழுத்தை நீட்டி விட்டு அவன் நிழலில் போய் இருந்து கொண்டு தம்பிகளையும் தங்கையையும் படிக்க வைக்கலாமே! இல்லாவிட்டால் இப்படித்தான் நீ மட்டும் தனி மரமாக நின்று கொண்டு இருக்கப் போகிறாயா? உனக்கு உன் மனிதர்கள் என்று யார் இருக்கிறார்கள்? நீயாகத்தானே தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்" என்று பூரணியின் அருகில் வந்து நீட்டி முழக்கிக் கொண்டு கேட்டாள்.

பூரணி ஏதும் பதில் சொல்லவில்லை. தலைகுனிந்து மௌனமாக இருந்தாள். 'எதை வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லையோ, எந்த இடத்தைப் பற்றி பேசும்போது என் வார்த்தைகள் வெற்றோசையாய் ஆற்றலற்றுப் போகின்றனவோ, எந்த உணர்ச்சியைத் தேடும்போது என் சொற்களின் பொருளுணர்ச்சி மங்கிவிடுகிறதோ - அந்த உணர்வை - அந்த இடத்தை இந்தப் பாட்டி விளக்கச் சொல்லிக் கேட்கிறாள். எப்படி விளக்குவேன்? எங்கிருந்து விளக்குவேன்?' என்று ஏங்கிக் குமைந்தாள் பூரணி. அன்று முழுவதும் இந்த எண்ணம் அவள் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்கிற நாய்கள் மாதிரி ஏன் இப்படித் தானும் பறந்து கொண்டு மற்றவர்களையும் பறக்க அடிக்கிறார்கள். இப்படித் திருமணம், வளைகாப்பு, குழந்தை - குடும்பம் - மறுபடியும் திருமணம், வளைகாப்பு என்று ஓட ஓட விரட்டுவது தான் வாழ்க்கையா? இந்த விதமான வாழ்க்கைக்குத் தான் நானும் பிறந்திருக்கிறேனா? என்று நினைத்தபோது ஏதோ ஓருணர்வு கல்லாகக் கனத்துப் பரவி அவள் நெஞ்சை இறுக்கி நசுக்குவது போல் இருந்தது. அன்று இரவு படுக்கையில் தலையணை நனைத்து ஈரமாகும்படி நெடுநேரம் அமைதியாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் அவள். எதற்காக அழுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

பூரணி ஒவ்வொரு நாள் மாலையும் மங்கையர் கழகத்துக்குப் போய் அதே வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தாலும் நாள் தவறாமல் அரவிந்தனைச் சந்திக்க நேரமிருக்காது அவளுக்கு. இரண்டொரு நாள் கழகத்து வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது அவனைப் பார்க்க நேரிடும். அப்படிப் பார்க்கும் போது சிறிது நேரம் பேசிவிட்டு வருவாள். சில நாட்களில் பகலில் அரவிந்தனே திருப்பரங்குன்றத்துக்கு வந்து அவள் தந்தையின் வெளிவர வேண்டிய நூல்களுக்கான கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக் கொண்டு போவான். இன்னும் சில நாட்களில் மங்களேஸ்வரி அம்மாளும் இளைய பெண் செல்லமும் வந்தார்கள். முருகனை தரிசனம் செய்துவிட்டு பூரணியின் வீட்டுக்கு வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள்.

புதிய வீட்டில் ஓர் அறையை முழுவதும் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. அப்படியும் இடம் போதவில்லை. நெருக்கடியோடு சிரமப்பட்டுப் புத்தகங்களை அதற்குள் அடுக்கியிருந்தாள். புத்தகங்களைத் தவிர நாற்காலியைப் போட்டுக் கொண்டு ஒருவர் உட்கார இடமிருக்கும் அங்கே. தம்பிகளுக்குச் சாப்பாடு போட்டுப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய பின் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு புத்தக அறைக்குள் நுழைந்து விட்டால் உலகமே மறந்து போகும் பூரணிக்கு. அப்பா சேர்த்து வைத்திருக்கும் அறிவின் உலகில் மூழ்கிவிடுவாள் அவள். அப்படி மூழ்கினால் தான் தினந்தோறும் மங்கையர் கழகத்து வகுப்புகளில் தன்னிடம் படிக்கும் பெண்களுக்குப் புதுப்புதுக் கருத்துக்களைச் சொற்பொழிவு செய்ய அவளால் முடியும். குழந்தை மங்கையர்க்கரசியால் அவள் படிப்புக்கு இடையூறு இருக்காது. வீட்டுக்குள்ளேயோ, வெளியில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனோ விளையாடப் போய்விடுவாள் அவள். சில சமயங்களில் கமலாவாவது காமுவாவது அரட்டைப் பேச்சுக்கு வருவார்கள். திருமணம் நிச்சயமான பின்பு இரண்டு பெண்களுமே வெளியில் வருவதைக் குறைத்துக் கொண்டு விட்டார்கள். அதனால் பூரணிக்குக் கிடைப்பதற்கரிய தனிமை கிடைத்திருக்கிறது. அந்தத் தனிமையில் அவளுடைய மனத்தின் குறிக்கோள்கள் மேலும் நன்றாக மலர்ந்தது. தன் இலட்சிய எல்லைகளை விரிவாக்கிக் கொண்டாள் அவள்.

திருமண நாளன்று பூரணி இரண்டு வீடுகளிலும் மாறி மாறி இருந்து உதவினாள். கமலாவின் வீட்டில் அவள் இருந்து செய்யாவிட்டாலும் செய்வதற்கு வேறு மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் ஓதுவார் வீட்டுத் திருமணம் ஏழைத் திருமணம். குறைவான ஏற்பாடுகளுடன் நடந்தது. பூரணி அங்கே தான் அதிக நேரமிருந்து உதவினாள். வந்தவர்களுக்குச் சந்தனம், வெற்றிலை பாக்குக் கொடுத்தாள். ஓடியாடிச் சாப்பாடு பரிமாறினாள். அந்த இரண்டு வீட்டுத் திருமணங்களிலும் எங்கு பார்த்தாலும் அவள் முகமே தெரிகிறார் போலவும், எல்லா காரியங்களிலும் அவளே முன் நின்று செய்கிறாள் போலவும் வந்திருப்பவர்களுக்குத் தோன்றும்படி பம்பரமாகச் சுழன்றாள் அவள். இரண்டு வீட்டுத் திருமணங்களுக்கும் வந்திருந்த எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவள் இவள் ஒருத்திதான். கமலாவின் கணவனுக்கோ வடக்கே எங்கோ வேலை. திரும்பவும் ஒருமுறை வந்து கூட்டிக் கொண்டு போக வசதிப்படாதாம். திருமணம் முடிந்த நாலாவது நாளோ, ஐந்தாவது நாளோ கூட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான். கமலாவை வழியனுப்ப இரயில் நிலையத்துக்குப் போயிருந்தாள் பூரணி. ஓதுவார்க் கிழவருடைய மாப்பிள்ளை உறவுக்காரனாக இருந்தாலும் வேறு ஊர்க்காரன். தெற்குச் சீமையில் ஏதோ ஒரு சிறிய ஊரில் கோயிலில் ஓதுவார் அவன். ஒரு வாரத்தில் அவனும் காமுவைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டான். அன்றும் இரயில் நிலையத்துக்குப் போயிருந்தாள் பூரணி. தோழிகளை வடக்கிலும் தெற்கிலுமாக வழியனுப்பிவிட்டுத் திரும்பிய பொழுதுகளில் அவள் மனம் நலிந்து வருந்தியது. நல்ல கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் போது யாராவது உடனுக்குடன் அடித்துத் தட்டி எழுப்பிவிடுகிற மாதிரி அந்தப் பிரிவுகள் அவளை வேதனையுறச் செய்தன. என்னென்னவோ எண்ணினாள் அவள்.

வாழ்க்கையே இப்படித் தொடர்ந்து வழியனுப்பிக் கொண்டிருக்கிற ஒரு சடங்குதான் போலும். ஊருக்கு வழியனுப்பினால் பிரயாணம்! உயிர்களை வழியனுப்பினாலும் அது ஒருவகைப் பிரயாணம். தோழிகள் ஊருக்குப் போன பின் இரண்டு மூன்று நாட்களுக்கு அவள் உள்ளம் இத்தகைய நலிவுள்ள நினைவுகளையே நினைத்தது.

ஒவ்வொரு நாளும் அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளுக்காக மாலையில் மதுரைக்குப் புறப்படும்போது தம்பிகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்க மாட்டார்கள். அதனால் குழந்தையையும் வீட்டுச் சாவியையும் ஓதுவார் வீட்டிலோ பக்கத்தில் கமலாவின் தாயாரிடமோ ஒப்படைத்துவிட்டுப் போவாள். தம்பிகள் வந்தவுடன் சாவியை வாங்கிக் கொண்டு குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு பூரணி நகரத்திலிருந்து வீடு திரும்புவாள். சில நாட்களில் தம்பிகளும் தங்கையும் அவள் வருமுன்பு தாங்களாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவார்கள். சில நாட்கள் அவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள்.

அன்று அவள் இரவில் வீடு திரும்பிய போது தம்பிகள் இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள். வழக்கமாக அவள் வருகிற நேரத்துக்குத் தூக்கிப் போயிருக்க வேண்டிய குழந்தை மங்கையர்க்கரசி தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் முகம் நெடுநேரம் அழுதாற்போல் வீங்கியிருந்தது. கண்கள் சிவந்து கன்னம் நனைந்து ஈரக்கறை தெரிந்தது. பசிச்சோர்வு முகத்தில் தெரிந்தது. பூரணி எங்கேயாவது போய் விட்டு வீடு திரும்பினால், "அக்கா வந்தாச்சு" என்று வீடெல்லாம் அதிரும்படி உற்சாக மழலைக் குரல் எழுப்பியவாறே துள்ளிக் குதித்தோடி வந்து அவல் கால்களைக் கட்டிக் கொள்ளும்.

 

அந்தக் குழந்தை அன்று அவளைக் கண்டவுடன் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை. பூரணி இந்தப் புதுமையின் காரணம் புரியாமல் தம்பி திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள்.

"இவளுக்கு ஏதோ கோபமாம். சாப்பிடமாட்டேன்கிறா. முரண்டு பிடிக்கிறா" என்றான் திருநாவுக்கரசு. பூரணிக்கு அந்தக் குழந்தையின் கோபம் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருந்தது. சமாதானப்படுத்திச் சாப்பிட வைப்பதற்காக அருகில் சென்றாள் பூரணி. குழந்தை வெறுப்பைக் காட்டுகிறார்போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சிரித்துக் கொண்டே மங்கையர்க்கரசியின் மோவாயைத் தொட்டு முகத்தைத் திருப்பிக் கேட்டாள் பூரணி.

"உனக்கு என்னடி கோபம்?"

"நீயொன்றும் எங்கூடப் பேசவேண்டாம் போ..." பூரணியைப் பிடித்துத் தள்ளுவது போல் இரண்டு பிஞ்சுக் கைகளையும் ஆட்டினாள் குழந்தை. ஒரு கேவல், அடுத்தடுத்து விசும்பல்கள். அழுகைப் பொங்கி வெடித்துக் கொண்டு வந்துவிடும் போலிருந்தது குழந்தைக்கு.

"யார் மேலே எதற்காகக் கோபம் உனக்கு?"

"எல்லாம் உம் மேலதான்."

"எதுக்காக? நான் உனக்கு என்ன செய்தேன்?" பதில் இல்லை. குழந்தை பொருமியழுதாள். சொற்கள் அழுகையில் உடைந்து நைந்து கரைந்து போய்விட்டன. பூரணியால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. குழந்தையைத் தழுவினாற் போல் அணைத்து எடுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள் அவள். கை, கால்களை உதைத்துக் கொண்டு அவள் அணைப்பிலிருந்து திமிர முயன்றாள் குழந்தை. இதமாகச் சொல்லி அழுகையை நிறுத்திச் சாப்பிடுவதற்குத் தட்டைப் போட்டு உட்கார்த்தினாள்.

"அண்ணன் அடித்தானா உன்னை?"

"இல்லை..."

"விளையாடறபோது தெருவிலே கிழே விழுந்தியா?"

"இல்லை..."

"பின்னே எதற்காக இப்படி அழவேண்டும் நீ?"

"ஓதுவார் வீட்டிலே அந்தப் பாட்டிக் கிட்டப் பேசிக்கிட்டிருந்தேன். 'ஏம் பாட்டி, உங்க காமுவைச் சிவப்பா கழுத்திலே தங்கச் செயின், ருத்திராட்சம் எல்லாம் போட்டுக்கிட்டிருந்தாரே ஒருத்தர், அவரோட இரயில்லே ஏத்தி ஊருக்கு அனுப்பிவிட்டீங்களே இனிமே அவ இங்கே வரமாட்டாளா?' அப்படின்னு கேட்டேன்."

"நீ அந்தப் பாட்டியைக் கேட்டியா?"

"ஆமாம்!"

"ம்...ம்... அப்புறம்?"

"அதுக்கு அந்தப் பாட்டி சிரிச்சுக்கிட்டே வந்து வந்து..." இதைச் சொல்லும் போது குழந்தை மறுபடியும் விசும்பத் தொடங்கிவிட்டாள்.

"அழாமல் முழுவதும் சொல்லு கண்ணு! நீ சமர்த்து குழந்தையில்லையா?"

"உங்க பூரணியக்காவும் ஒருநாள் அப்படித்தான் போவாங்க. பொண்ணுன்னு பொறந்தா என்னிக்காவது ஒருநாள் இப்படி ஒருத்தரோடு போய்த்தான் ஆவணும். நீ கூட வளர்ந்து பெரிசானா அப்படித்தான்னு அந்தப் பாட்டி சொன்னாங்க..."

பூரணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டால் தான் சொல்லிக் கொண்டு வருகிற விஷயத்தில் குழந்தைக்கு நம்பிக்கை குறைந்து, சொல்வதை நிறுத்திவிடுவாளோ? என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

"அந்தப் பாட்டிக்கு நீ என்ன பதில் சொன்னே?"

"எனக்கு இதைக் கேட்டதும் அந்தப் பாட்டி மேலே ஒரே கோவமாயிரிச்சி. 'எங்க பூரணியக்கா ஒண்ணும் அப்படியில்லே என்னிக்கும் எங்களோடதான் இருப்பாங்க. உங்க காமுவுக்குத் தலைமயிர் கொஞ்சம், தெத்திப்பல்லு, குண்டு மூஞ்சி அதனாலே தான் அவள் ரயிலேறிப் போயிட்டா. எங்க அக்கா ரொம்ப அழகு. போகமாட்டாங்க. நீங்க பொய் சொல்றீங்க'ன்னேன். அதுக்கு அந்தப் பாட்டி அடி அசடே! அழகுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டாங்க."

"அப்புறம்?"

"அப்புறம் ஒண்ணுமில்லே... எனக்கு அழுகை அழுகையாய் வந்திடுச்சி. அண்ணன் பள்ளிக்கூடத்திலிருந்து சாவி வாங்க வந்ததும் நான் அண்ணனோட வந்திட்டேன்."

"ஏங்க்கா... ஓதுவார்ப் பாட்டி சொன்னாப்போலே நீ செய்வியா? எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போயிடுவியா?"

பூரணி கலகலவென்று நகைத்தாள். குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு உச்சிமோந்தாள். "அசடே! விளையாட்டுக்குச் சொன்னதையெல்லாம் கேட்டு அழுதுகொண்டு வரலாமா? நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் மங்கை. நீ சாப்பிடு!" என்று குழந்தைக்கு உணவூட்டினாள் பூரணி. பூக்கண்களும் பூஞ்சிரிப்பும், பூங்கரங்களுமாக அந்தக் குழந்தைக் கோலத்தில் தெய்வமே தெரிகிறாற்போல் அப்போது பூரணி உணர்ந்தாள். சிறிய விஷயத்துக்குக் கூட பெரிய துக்க உணர்வைச் செலவழித்து அந்த உணர்ச்சிக்கு மனப்பரப்பெல்லாம் இதமளிக்கும் குழந்தையின் பேதமை அவளைக் கவர்ந்தது. தூசியும் அழுக்கும்பட்டு வாடமுடியாத கற்பகப்பூவா குழந்தையின் மனம்! உணர்ச்சி நிழல்களின் பொய்ச் சாயல்கள் படியாத புனிதக் கண்ணாடியா அந்த உள்ளம்!

பூரணி அன்றிரவு தன் அருகிலேயே குழந்தை மங்கையர்க்கரசியைப் படுக்க வைத்துக் கொண்டு கதையெல்லாம் சொன்னாள்.

"ஏங்க்கா, காமுதான் ரயிலேறி ஊருக்குப் போனா. கமலா எதுக்காகப் போகணும்? அவளும் ஊருக்குப் போயிட்டாளே" என்று திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டு கேட்பவள் போல கேட்டாள் குழந்தை.

' அறியாக் குழந்தையே! பெண்கள் தாய், தந்தையிடமிருந்து பிரிந்து போய்த் தாய் - தந்தையராகித் தாய் - தந்தைகளை உண்டாக்க வேண்டியவர்கள். அவர்கள் பிறக்குமிடத்தில் தங்கினால் உலகத்தின் உயிர் மரபு அற்றுப் போகும்' என்று தத்துவம் சொல்லியா விளக்க முடியும்?

"பேசாமல் தூங்கு மங்கை. நேரமாகிவிட்டது. எல்லாம் காலையில் கேள். சொல்கிறேன்" என்று மழுப்பிவிட்டுக் குழந்தையைத் தூங்கச் செய்தாள் பூரணி. மறக்கவே முடியாத விதத்தில் இந்தக் குழந்தைத்தனமான நிகழ்ச்சி அவள் மனத்தில் பதிந்து கொண்டது.

ஒரு வாரத்துக்குப் பின் ஒருநாள் பகல் அவள் மனம் வருந்தத்தக்க துயர நிகழ்ச்சியொன்று அவளது வீட்டைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது.

நண்பகல் பதினொரு மணி இருக்கலாம். தம்பிகள் சாப்பிட்டு விட்டுப் பகல் சாப்பாடும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போயிருந்தார்கள். குழந்தை மங்கை நாலைந்து வீடுகள் தள்ளி ஒரு மர நிழலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். பூரணி அப்போதுதான் தன் கை வேலைகளையும் உணவையும் முடித்துக் கொண்டு படிப்பறைக்குள் நுழைந்திருந்தாள். குழந்தை எந்த நேரத்தில் திரும்பி வருவாளோ? எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தால் படிப்புத் தடைப்படும் என்று எண்ணி வாயிற் கதவைத் தாழிடாது சாத்தியிருந்தாள் பூரணி.

மங்கையர் கழகத்துப் பெண்களுக்கு அன்று திருக்குறள் சொல்லிக்கொடுக்க வேண்டும். சொல்லிக் கொடுப்பதென்றால் கரும்பலகையில் பதவுரை, பொழிப்புரை எழுதிப் போட்டுச் சொல்லித் தருகிற படிப்பை அவள் சொல்லித் தருவதில்லை. அப்படிச் சொல்லித் தருவதற்கு அது பள்ளிக்கூடமும் அன்று. அங்கே பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரையுள்ள சிறிய பெண்கள் பலரும் வகுப்புகளுக்கு வருகிறார்கள். மணமாகித் தாயானவர்களும் அதில் இருக்கின்றனர். எனவே மனத்தை மலர்விக்கும் சொற்பொழிவுகளாகச் செய்து தன் வகுப்புகளைச் சிறப்புற நடத்தினாள் பூரணி. வகுப்புகள் தொடங்கப் பெற்ற மூன்று நாட்களிலேயே அவளுடைய சொற்பொழிவுகளுக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாயிற்று. கேரம் விளையாடுவதும் வம்பளப்புமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மங்கையர் கழகத்துப் பெண்களுக்கு அவள் ஒரு புதிய உலகினைக் காட்டினாள்! ஒரு புதிய அறிவுச் சுமையை ஊட்டினாள். அவள் காட்டியது அறிவுலகம். அவள் ஊட்டியது தமிழ்ச்சுவை! மங்கையர் கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளங்களில் அவள் ஒவ்வொரு நாளும் மிக உயர்ந்த இடத்தை அடைந்து கொண்டிருந்தாள். முதலில் சாதாரணமாக எண்ணியவர்களும் பின்பு அவளுடைய நாவன்மையைக் கண்டு வியந்தனர்.

இந்தப் பெருமித நினைவுகளுடன் திருக்குறள் புத்தகத்தை விரித்துச் சொற்பொழிவுகளுக்குக் குறிப்பு எடுக்கலானாள் பூரணி.

சாத்தியிருந்த வாயில் கதவைத் திறந்து கொண்டு யாரோ நடந்து வருகிற ஒலி கேட்டது. வேறு யார் இந்த நேரத்தில் இங்கே வரப்போகிறார்கள்? குழந்தைதான் வருவாள் என்று நிமிர்ந்து பாராமல் எழுதிக் கொண்டிருந்த பூரணி அந்த நாகரிகமற்ற முரட்டுக் குரலைக் கேட்டுத் துணுக்குற்று நிமிர்ந்தாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கப் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் சினத்தோடு நின்று கொண்டிருந்தார். பூரணி வரவேற்றாள். "வாருங்கள்... அப்படி அந்த நாற்காலியில் உட்காரலாமே?"

"உட்காருவதற்காக இங்கே நான் வரவில்லை. என் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன்."

"யார் மேல் ஆத்திரம்?"

"ஒன்றும் தெரியாதது போல் பேசவேண்டாம். நான் ஒருவன் புத்தகங்களை வெளியிட்டு விற்றவை பாதியும், விற்காதவை பாதியுமாகத் திணறிக் கொண்டிருக்கும் போது நீ என்னை ஒரு வார்த்தை கூடக் கேளாமல் எவனோ ஒரு மீனாட்சி அச்சகமோ, காமாட்சி அச்சகமோ வைத்திருப்பவனுக்கு வெளியிடுகிற உரிமையைத் தரலாமா?"

நாற்பது வயதுக்கும் அதிகமாகத் தோன்றிய அவருக்குப் பேசும் போது மீசை துடித்தது. பூரணி அடக்கமாக அவருக்குப் பதில் சொன்னாள்.

"மன்னிக்க வேண்டும் அய்யா! நான் இன்னும் பச்சைக் குழந்தை இல்லை. நீங்கள் உண்மைகளை மட்டும் என்னிடம் பேசுங்கள். பொய்களை நான் கேட்கத் தயாராயில்லை."

"எது பொய்?"

"அப்பாவின் புத்தகங்களை விற்றது பாதியும் விற்காதது பாதியுமாக வைத்துக் கொண்டு நீங்கள் திணறுவதாகச் சொல்கிறீர்களே, அது முழுப்பொய்; பல பதிப்புகள் விற்றவைகளை மறைக்கிறீர்கள். உங்கள் கணக்கும் உங்கள் பேச்சும் ஊழல். அப்பா உங்களை மன்னித்தார். நான் மன்னிக்க விரும்பவில்லை. எனக்கு வயிறு இருக்கிறது. நான் வாழ வேண்டியிருக்கிறது."

 

"என்னைப் பகைத்துக் கொண்டு நீ வாழ முடியாது. நான் பொல்லாதவன். போக்கிரி! கேள்விப்பட்டிருப்பாய். இல்லாவிட்டால் இப்போது சொல்வதிலிருந்து தெரிந்து கொள். மீனாட்சி அச்சகத்துக்காரன் புத்தகம் போட்டு விற்பதையும் நான் பார்த்துக் கொள்கிறேன்."

"அதில் சந்தேகமென்ன? நிச்சயம் பார்க்கத்தான் போகிறீர்கள்?" இந்தக் கணீரென்ற புதுக்குரல் யாருடையது என்று திரும்பினார் அவர்.

பூரணியும் வியப்பு மலர தலை நிமிர்ந்து பார்த்தாள். ஓசைப்படாமல் வந்து கதவோரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த அரவிந்தன் தான் அவருக்கு இந்த அறைகூவலை விடுத்தான். எரித்துவிடுவது போல் சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்தார் அவர். திருத்திச் சரிபார்த்த அச்சுப் படிகளை (புரூஃப்கள்) பூரணியிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்திருந்தான் அவன்.

"ஓகோ நீயா...?" அவர் உறுமினார். அவனைத் தெரியும் அந்த மனிதருக்கு.

 

"வாழ்வில் அறம் வேண்டும், ஒழுக்கம் வேண்டும், பண்பும் நியாயமும் வேண்டுமென்று பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் தம் புத்தகங்களில் வரிக்குவரி எழுதியிருக்கிறார். நீங்கள் அந்தப் புத்தகங்களைக் கொண்டே அவரை அறமின்றி, ஒழுங்கின்றி, நியாயமின்றி ஏமாற்றினீர்களே! இவ்வளவு காலம் ஏமாற்றினது போதாதா?" என்று அரவிந்தன் கூறிக்கொண்டே வந்த போது அவன் முகத்தில் ஒரு பேயறை விழுந்தது. அவனுக்குச் சில்லு மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது. அவனுடைய இளமைத் துடிப்பு மிக்க உரமான கைகள் அந்தக் கொடியவனை கீழே தள்ளிப் பந்தாடியிருக்கும். ஆனால் அப்படிச் செய்யவிடாமல் தடுக்கப் பூரணி ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டு விட்டாள்.

 

10

 

உடல்குழைய என்பெலாம் நெக்குருக

விழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்ற

ஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவே

ஓர் உறவும் உன்னியுன்னிப்

படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற...

                                                                                            -- தாயுமானவர்

 

இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது லேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. ரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு உண்டு; ஆடம்பரம் கிடையாது. பள்ளிக்கூடத்தில் படிக்கிற நாளில் ஆசிரியர் சற்று அழுத்திக் கொட்டி விட்டால் கூடச் சில்லுமூக்கு உடைந்து இரத்தம் வந்துவிடும் அவனுக்கு. அவ்வளவு மென்மையான உடல் அவனுடையது.

அன்று தன் வீட்டில் புது மண்டபத்து முரட்டு மனிதனிடம் அரவிந்தன் வாங்கிய அறை தன் முகத்திலேயே விழுந்தது போல் உணர்ந்து, வெதும்பித் துடித்தாள் பூரணி. விழிகளில் நீரரும்பித் துக்கம் ஊற்றெடுத்து வர நெஞ்சம் பதைத்தது. உள் நடுங்கி நின்றாள் அவள். காந்தத்தில் இணையும் ஊசி போல் அவன் அறை வாங்கிய வலியின் வேதனையில் பங்கு கொள்வதற்காக அவள் மனம் விரைந்து அந்த வேதனையில் போய் இணைந்தது.

"நீங்கள் எதற்கு அழுகிறீர்கள்? அரிச்சந்திரனுடைய தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கழுத்தில் மாலை விழுந்திருக்கலாம். நீங்களும் நானும் வாழும் தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கன்னத்தில் அறை விழுகிறது. கூடிய வரை உண்மைகளைச் சொல்லிவிடக் கூசிக் கொண்டு சும்மா இருந்து விடுவதுதான் இன்றைக்கு நாகரிகம். உண்மையைச் சொன்னால் பெருமைப்பட்ட காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் உண்மைகளைச் சொன்னால் யாரைப் பற்றிய உண்மையோ, அவர்களுக்கும் கோபம் தான் வருகிறது" என்று அவளிடம் கூறினான் அரவிந்தன். அடித்தவர் நின்று கொண்டிருக்கவில்லை. கோபத்தோடு வெளியேறிச் சென்று விட்டார். மிகச் சில விநாடிகளே அரவிந்தனின் முகத்தில் மலர்ச்சி இழந்த நிலையைக் கண்டாள் அவள். நீர் கிழிய எய்த வடுபோல் அந்த நிலை அப்போதே மாறி இயல்பான தோற்றத்துக்கு அவன் வந்ததையும் உடனே கண்டாள்.

பூரணி செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். சில்லுமூக்கு உடைந்து குருதி வடிந்திருந்த மூக்கைக் கழுவிக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான் அவன். அப்படிக் கழுவித் துடைத்த போதே சினத்தையும் கொதிப்பையும் சேர்த்துக் கழுவித் துடைத்துவிட்ட மாதிரி அதை மறந்து பூரணியிடம் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்பினான் அரவிந்தன். அவனை வழியனுப்பும்போது பூரணியின் நெஞ்சு பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையால் பொங்கியது.

'அரவிந்தன் நீங்கள் அன்று எனக்காக மழையில் நனைந்தீர்கள். இன்று எனக்காக நாகரிகமில்லாத எவனோ ஒரு முரடனிடம் அறை வாங்கினீர்கள். இன்னும் என்னென்ன துன்பங்களையெல்லாம் உங்களுக்குத் தரயிருக்கிறேனோ இந்தப் பாவி' என்று நினைத்து உள்ளம் புழுங்கினாள் அவள்.

 

இந்த நிகழ்ச்சி நிகழ்ந்த அன்று இரவு தன் டைரியில் அரவிந்தன் கீழ்க்கண்டவாறு எழுதினான்:

"உண்மையைச் சொன்னதற்காக ஒரு கயவன் மூக்கில் இரத்தம் ஒழுகும்படி அறைந்தான். வாழ்க்கை ஓர் உயர்தரமான செருப்புக் கடை. அங்கே சோறு போட்டுத் துணி உடுத்தி, உயிருள்ள தோல்களைப் பதனிட்டு அடுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தத் தோலுக்குள் பண்புகள் பொதிந்து வைக்கப் பெறவில்லை. கயமைதான் கனத்துக் கிடக்கிறது."

கூர்மைக்கு மற்றவைகளைத் துளைத்துக் கொண்டு போகும் ஆற்றல் உண்டு. மற்றவைகள் வழிவிடத் தயங்கினாலும் கூர்மை தன் வழியைத் தானே உண்டாக்கிக் கொண்டு முன்செல்லும். அரவிந்தன் நோக்கிலும், நினைப்பிலும் கூர்மையுள்ளவன். அவன் உள்ளத்துக்கும், பண்புகளுக்கும் மற்றவைகளையும் மற்றவர்களையும் உணரும் ஆற்றல் அதிகம். பயிற்சியும் கருத்தாழமும் உள்ள பாவலன் இயற்றிய கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மேலும் ஒரு புது அழகு புரிவது போல் பழகப் பழக அரவிந்தனின் புதுப்புது பண்புகள் பூரணிக்குப் புரிந்தன.

ஒருமுறை அவள் அரவிந்தனைத் தேடிக்கொண்டு அச்சகத்துக்குப் போயிருந்தாள். அரவிந்தன் இல்லை. முதலாளி மீனாட்சிசுந்தரமும் அவனும் எங்கோ காரில் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்றும், சிறிது நேரத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் என்றும் அச்சகத்து ஆட்கள் அவளிடம் கூறினர். காத்திருந்துப் பார்த்துவிட்டுப் போகலாமா? நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமா? என்று பூரணி தயங்கிக் கொண்டிருந்தபோது வாயிலில் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. அவர்கள் வந்துவிட்டார்கள். மீனாட்சிசுந்தரம் அவளை முகம் மலர வரவேற்றார்.

"வா அம்மா! நீ வந்து நாழிகையாயிற்றா? சிறிது நேரத்துக்கு முன்புதான் நாங்களே இங்கிருந்து வெளியேறினோம். வேறொன்றுமில்லை, சும்மா இவனை அழைத்துக் கொண்டு துணிக்கடை வரையில் போய்விட்டு வந்தேன். நீயே சொல் அம்மா. இராப்பகல் பாராமல் உழைக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா? தன் உடம்புக்கு வராமல் பேணிக் காத்துக் கொள்ளத் தெரிய வேண்டாமோ? இத்தனை வயதான பிள்ளை 'கொள்ளுக் கொள்'ளென்று இருமுகிறான். உதடெல்லாம் பனிப்புண். என்னடா சங்கதி என்று பார்த்தால் ஸ்வெட்டர் இல்லாமல் போர்வை இல்லாமல் பனியில் கிடந்து தூங்குகிறான். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டும்? உடம்பு நன்றாக இருந்தால் தானே இன்னும் உழைக்கலாம்? 'மாட்டவே மாட்டேன், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். கண்டித்துச் சொல்லிக் கையோடுக் கூட்டிக் கொண்டுபோய் இரண்டு ஸ்வெட்டரும் போர்வையும் வாங்கிக் கொடுத்து அழைத்துக் கொண்டு வருகிறேன். தன் தேவை தெரிய வேண்டாமோ மனிதனுக்கு...?"

 

அரவிந்தன் அவருக்குப் பின்னால் ஸ்வெட்டரும் போர்வையும் அடங்கிய துணிக்கடைப் பொட்டலங்களோடு முறுவல் பூத்துக் கொண்டு நின்றான். மீனாட்சிசுந்தரமும் அவற்றை அவன் கையிலிருந்து வாங்கிப் பெருமையோடு பூரணிக்குப் பிரித்துக் காட்டினார். 'அரவிந்தன் மேல் தான் இந்த மனிதனுக்கு எத்தனை பாசம்! எவ்வளவு உரிமை!' என்றெண்ணி வியந்தாள் பூரணி.

இது நடந்து பத்துப் பனிரண்டு நாட்களுக்குப் பின் பஸ் நிலையத்துக்கு வடப்புறம் மேம்பாலத்துக்கு ஏறுகிற திருப்பத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனுடைய உடம்பைப் போர்த்திக் கொண்டு கிடந்தது அந்தப் போர்வை. பூரணி அதைப் பார்த்தாள். 'என் சந்தேகம் வீணானது, இந்த மாதிரியான போர்வை அரவிந்தனிடம் மட்டும்தானா இருக்கும்? வேறு யாராவது கொடுத்திருப்பார்கள்' என்று நினைவை மாற்றிக் கொள்ள முயன்றாள். 'இந்த மாதிரி போர்வைகள் எல்லோரிடமும் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி இரக்கமும் நெகிழ்ச்சியும் எல்லோரிடமும் இருக்க முடியாது' என்று அதே நினைவு மாறாமல் மீண்டும் உறுதிப்பட்டது அவள் மனத்தில். அரவிந்தனையே நேரில் சந்தித்து இந்தச் சந்தேகத்தைக் கேட்டாள். அவன் தலையைக் குனிந்து கொண்டு மௌனமாகச் சிரித்தான். ஆனால் பதிலொன்றும் சொல்லவில்லை.

"இப்படி எத்தனை நாளைக்கு விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? தனக்குக் கண்டு மீதமிருந்தால் அல்லவா தான தருமம் செய்யலாம்?"

"நீங்கள் என்னைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறீர்கள். நான் எல்லோரைப் பற்றியும் கவலைப்படுகிறேன். மூன்று கோடி தமிழருக்குள் ஒவ்வொரு கோடியிலும் ஏழ்மையைப் பார்க்கும் போது என் மனம் நெகிழ்ந்து விடுகிறது. முப்பது கோடி இந்தியர்களில் எல்லோருமா இந்நாட்டு மன்னர்களாக இருக்கிறார்கள்? பலர் இந்நாட்டு மன்னராக - மண்தரையைத் தவிர இருக்க இடமற்றவர்களாக அலைந்து திரிகிறார்களே. இவர்கள் பிறந்த நாட்டில் இவர்களோடு இவர்களில் ஒருவனாகத் தானே நானும் பிறந்திருக்கிறேன்."

"அரவிந்தன் நீங்கள் அபூர்வமான மனிதர். உங்களிடம் வாதம் புரிய என்னால் முடியாது. உங்களுடைய சிந்தனைகள், செயல்கள் எல்லாவற்றையும் சாதாரண மனத்தால் அளவிட முடிவதில்லை" என்று பூரணி கூறியபோதும், பதில் சொல்லாமல் அவள் முகத்தை நோக்கிச் சிரித்துக் கொண்டு நின்றான் அரவிந்தன். இன்னொரு நாள் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற பாதையில் மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி அருகில் விந்தையான சூழ்நிலையில் அரவிந்தனைப் பார்த்தாள் அவள். பரட்டைத் தலைகளும் ஒட்டுப்போட்டும், ஒட்டுப் போடாமலும் கிழிந்த ஆடைகளுமாக அப்பகுதியில் வாழும் அநாதைக் குடும்பங்களின் சிறுவர், சிறுமியர்கள் அரவிந்தனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அந்தக் குழந்தைகளின் முகங்கள் அரவிந்தனை நோக்கி மலர்ந்திருந்தன. பக்கத்து மரத்தடியில் உட்கார்ந்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்த ஒரு கூடைக்காரியிடம் போய் அந்த ஒரு கூடைப் பழத்தையும் மொத்தமாக விலைபேசி அக்குழந்தைகளுக்குப் பங்கிட்டு அளித்தான் அவன். பஸ் நிலையத்தில் இறங்கி மங்கையர் கழகத்துக்குப் போகுமுன் இரயிலில் அவசரமாக ஒரு கடிதத்தை தபால் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தக் காட்சியைக் கண்டாள் பூரணி. அரவிந்தன் தன்னைக் கண்டுவிடாமல் சிறிது விலகி ஒரு மரத்தின் மறைவில் ஒதுங்கி நின்று அதைப் பார்த்தாள் அவள். அவன் தன்னுடைய அந்த அன்பு விளையாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்ட போது அவளும் பின்னால் நடந்தாள். அரவிந்தன் அவள் வருவதைப் பார்க்கவில்லை. மிக அருகில் நெருங்கி, "இதோ இன்னும் ஓர் அநாதைக் குழந்தை பாக்கி இருக்கிறது. ஏதாவது கொடுத்துவிட்டுப் போகக் கூடாதா? கொஞ்சம் திரும்பித்தான் பாருங்களேன்" என்று கையை நீட்டிக் கொண்டே குறும்பாக சொல்லிக் கூப்பிட்டாள் பூரணி. அரவிந்தன் திரும்பினான். அவள் சிரிப்பு மலர நின்றாள். 'நீங்களா அநாதைக் குழந்தை? உங்களுக்குத்தான் என்னையே கொடுத்து விட்டேனே' என்று பதில் சொல்ல நினைத்தான் அரவிந்தன்.

ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். 'புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?'

மெல்ல நகர்வது போலத் தோன்றினாலும் காலம் வேக வேகமாகத் தான் ஓடியது. மதுரையில் சித்திரை மாதத்தில் வெய்யிலும், திருவிழாக்களும் அதிகம். மங்கையர் கழகத்து வகுப்புகளுக்குப் படிக்க வரும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் எல்லாம் வெய்யிலுக்குப் பயந்து உதகமண்டலத்தையும், கொடைக்கானலையும் முற்றுகையிட்டிருந்தனர். வகுப்புக்கு ஒரு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள். பூரணிக்கு அந்த மாதம் முற்றிலும் ஓய்வு இருந்தது. அரவிந்தனுடைய இடைவிடாத உழைப்பின் பயனாக அந்த மாதம் அவள் தந்தையின் நூல்கள் சில முற்றுப் பெற்று வெளியாயின. நூல்கள் நிறைவேறி வெளியானதும், ஏற்கனவே மனம் புகைந்து கொண்டிருந்த பழைய பதிப்பாளர் மேலும் எரிச்சல் கொண்டார்.

வேனிலைக் கழிப்பதற்காக மங்களேஸ்வரி அம்மாள் பெண்களை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்படும் போது பூரணியையும் வற்புறுத்திக் கூப்பிட்டாள்.

"அப்பாவின் புத்தக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நானும் இங்கு உடனிருந்து கவனிக்க வேண்டும். இப்போது வசதிப்படாது. இன்னொரு முறை உங்களோடு கண்டிப்பாக வருகிறேன் அம்மா" என்று சொல்லி அந்த அம்மாவின் அழைப்பை மறுத்துவிட்டாள் பூரணி. இந்த விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை வேளையில் அரவிந்தன் திருப்பரங்குன்றத்துக்கு வந்தான்.

இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டே உலாவப் போனார்கள். தென்புறத்துச் சாலையில் கூத்தியார் குண்டுக் கண்மாய் முடிகிற இடம் வரை நடந்து போய்விட்டுத் திரும்பினார்கள். குன்றில் ஏறினார்கள். திருப்பரங்குன்றத்து மலையில் ஒரு வழக்கம் உண்டு. மலையேறிப் பார்க்க வருகிறவர்கள் அங்குள்ள பாறைகளில் நினைவுக்கு அடையாளமாகவோ என்னவோ, தம் பெயர்களைச் செதுக்கிவிட்டுச் செல்வதுண்டு. இந்த வேலையைச் செய்து காசு வாங்கிக் கொள்வதற்காக உளியும் கையுமாக இரண்டொரு கல் தச்சர்கள் மலையில் திரிவார்கள். பூரணியும் அரவிந்தனும் மலையில் ஏறிப் பார்த்துக் கொண்டிருந்த போது இம்மாதிரி பேர் செதுக்கும் கல்தச்சன் ஒருவன் வந்து அவர்களை நச்சரித்தான்.

"பேர் செதுக்கணுமா? ஐயா பேர்..."

அரவிந்தன் பூரணியின் முகத்தைப் பார்த்தான். பூரணி சிரித்துக் கொண்டே ஒரு முழு எட்டணா நாணயத்தை எடுத்து அந்தக் கல்தச்சனிடம் கொடுத்தாள்.

"பேர்களைச் சொல்லுங்க அம்மா!"

பூரணியின் முகம் சிவந்தது. அவள் வெட்கம் அடைந்தாள். கீழே கிடந்த ஒரு பழைய அழுக்குத்தாளை எடுத்து அரவிந்தன் - பூரணி என்று பேனாவால் முத்துக் கோத்தாற்போல் எழுதி நாணத்தோடு அந்தத் தச்சன் கையில் கொடுத்தாள். இருபது முப்பது பேர்களைப் பொறிக்கச் சொல்லிவிட்டு இரண்டணாவுக்கும் நாலணாவுக்கும் பேரம் பேசுகிற ஆட்களைத்தான் அந்தக் கல்தச்சன் தன் நடைமுறையில் பார்த்திருக்கிறான். இவர்கள் விந்தையாக அவன் மனத்தில் தோன்றியிருக்க வேண்டும்! அல்லது இவர்களின் இணைப்பும் அழகும் பொருத்தமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்! வேறு பெயர்களே செதுக்கப் பெறாத ஒரு தனிப் பாறையில் தனிச்சிறப்போடு கூடிய சித்திர எழுத்துக்களில் அந்த இரண்டு பெயரையும் செதுக்கினான் அவன். தச்சன் செதுக்கி முடிந்ததும் அரவிந்தன் பூரணியிடம் கூறினான் - "நம்முடைய பெயர்களை உயர்ந்த இடத்தில் உயர்ந்த விதத்தில் தனியாகச் செதுக்கியிருக்கிறான். பேர் பரவுவதற்காகவும், பேர் நிலைப்பதற்காகவும் எத்தனையோ மனிதர்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அரை ரூபாய் செலவில் பேரை நிலைக்க வைத்திருக்கிறீர்கள்."

அரவிந்தன் சிரித்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்து இப்படிச் சொன்னபோது அவளுடைய அந்த செழிப்பான கன்னங்களில், சிரிக்கும் இதழ்களில், மலர்ந்த விழிகளில், பிறை நெற்றியில் எங்கும் நாணம் பூத்து நளினச் சாயம் மணந்தது. பூரணி பலமுறை தன்னை ஒருமையில் 'நீ, உன்னை' என அழைத்தால் போதும் என்று வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அரவிந்தன், 'நீங்கள், உங்களை' என்று பன்மையிலேயே அவளை அழைத்துக் கொண்டு வந்தான். மீண்டும் மீண்டும் அவன் அப்படி அநாவசியமாக மரியாதை கொடுக்கும் போதெல்லாம் கடிந்து கொண்டும், அன்புக் கோபம் கொண்டும் பிணங்கியும் பேச மறுத்தும், அவனை வழிக்குக் கொணர்ந்து ஒருமையில் உரிமையோடு கூப்பிடும்படி மாற்றினாள் பூரணி. அவளுடைய அன்புத் தொல்லை பொறுக்க முடியாமல் அரவிந்தனும் அவளை ஒருமையில் உரிமையோடு அழைக்க இணங்க வேண்டியதாயிற்று.

அந்தக் கோடையில் கிடைத்த விடுமுறைக் காலம் இவ்வாறு அரவிந்தனுடன் நெருங்கி மனம் விட்டுப் பேச வாய்ப்பளித்தது பூரணிக்கு. சில நாட்களில் அவர்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் போவார்கள். அப்படிப் போயிருந்த ஒரு நாளில் கோயிலுக்குள்ளேயே உள்ள ஒரு குளத்தின் கரையில் அரவிந்தன் ஒரு கருத்துச் சொன்னான். அந்தக் குளக்கரையில் உப்பும், மிளகும், சர்க்கரையும் சேர்த்து முடிச்சு முடிச்சாகத் தனித்தனியே கட்டி விற்பார்கள். அவற்றை வாங்கித் தண்ணீரில் போட்டால், அவ்வாறு போட்டுப் பிரார்த்தனை செய்கிறவர்களின் பாவங்களும், நோய்களும் கரைந்துவிடும் என்பது பரம்பரையாக இருந்து வரும் முறைமை. பூரணி இரண்டு முடிச்சுகளை வாங்கி ஒன்றைத் தன் கையால் நீரில் கரைத்துவிட்டு மற்றொன்றை அரவிந்தனிடம் நீட்டினாள். "நீயே கரைத்துவிடு. எனக்கு வேண்டாம் பூரணி. நான் சமூகத்தின் பாவங்களையும் நோய்களையும் கரைத்துவிட ஆசைப்படுகிறவன். அவை இந்தச் சிறிய உப்பு முடிச்சைக் கரைப்பதனால் கரைய மாட்டா. அவைகளை கரைத்து அழிக்க உயர்ந்த குறிக்கோள்களை வெள்ளமாகப் பெருக்கி வேறோர் இலட்சியக் குளம் தேக்க வேண்டும்" என்று இவ்வாறு சொல்லி அதை மறுத்தான் அரவிந்தன். பூரணி சினம் தொனிக்கும் குரலில், ஆனால் சிரிப்பு நிலவும் முகத்தோடு, "சமூகம், பிரச்சினைகள், ஏழ்மை, வறுமை எப்போது பார்த்தாலும் இதே பல்லவிதானா? அரவிந்தன் இந்தப் பல்லவிகளை மறந்து வேறு எதையேனும் அளவளாவிப் பேசுவதற்குச் சிறிதுகூட நேரமில்லையா உங்களிடம்?" என்று அவனைக் கேட்டாள்.

"என்ன செய்வது பூரணி? நான் பிறந்த வேளை அப்படி" என பதில் சொல்லிவிட்டு மேலே வெறித்துப் பார்த்தான் அரவிந்தன்.

இப்படி எத்தனன எத்தனையோ நிகழ்ச்சிகளின் மூலம்தான் அரவிந்தனை அவள் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு புரிந்து கொள்ளப் புரிந்து கொள்ள அவளுடைய சின்னஞ்சிறு பெண்மனம் அவனுடைய பெரிய மனத்துக்குள் கலந்து கரைந்து கவிந்து ஒடுங்கலாயிற்று.

கோடை விடுமுறையெல்லாம் கழிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டார்கள். பூரணி, குழந்தை மங்கையர்க்கரசியை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். தம்பிகள் இரண்டு பேரும் மேல் வகுப்புகளுக்குத் தேர்ச்சிப் பெற்றுப் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடச் சம்பளம், புதிய புத்தகங்கள் என்று செலவு நிறைய ஆகிக் கொண்டிருந்தது. மங்கையர்க் கழகத்தில் தந்த மாதச் சம்பளமும், புத்தகங்கள் விற்ற வருமானமுமாக மாதா மாதம் ஒரு கணிசமான தொகை கிடைத்தாலும் அது போதவில்லை. வரவுக்கும் செலவுக்குமாக இழுத்துப் பறித்துக் கொண்டுதான் காலம் ஓடியது. சில நாட்கள் சில்லரை காசுக்குக் கூட தட்டுப்பாடு இருந்தது. தினசரி மாலையில், நகரத்துக்குச் சென்று திரும்புவதற்குப் பஸ் செலவு ஆயிற்று. எளிமையான கோலத்தோடு, எளிமையாக வாழத்தான் அவள் விரும்பினாள். மங்கையர் கழகத்து நிர்வாகிகளும் மாணவிகளும் ஆடம்பரத்தில் தோய்ந்து தோன்றும் செலவ வளமுள்ளவர்களாக இருந்தார்களாகையினால் அவள் அவர்கள் குறை சொல்லாமல் இருப்பதற்காகவாவது தன்னைச் சிறிது பேணிக் கொண்டாள். இந்தச் செலவுகளையெல்லாம் சமாளித்துக் குழந்தைகளுக்கு வயிறு வாடாமல் வேளைக்கு வேளை கவனித்துக் கொள்ள முடிந்தது. அரவிந்தன் கற்றுக் கொடுத்த பழக்கத்தை அவளும் ஏற்றுக் கொண்டு கடைபிடிக்கலானாள். பலவேளை உணவுகளைத் தன்னளவில் மிகவும் சுருக்கிக் கொண்டாள். அரவிந்தன் அதை லட்சியத்துக்காகச் செய்தான். அவளுக்கு இல்லாமையே அந்த லட்சியத்தை அமைத்துக் கொடுத்தது. இல்லாமையே சில வசதிகளைக் குறைத்துக் கொள்ளும் துணிவை அளித்திருந்தது. திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற ரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான்.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லோரும் கலந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்கலாம். பூரணி அன்று 'திலகவதியார் சரித்திரம்' பற்றிப் பேசினாள். அன்றைய தினம் அவள் மனம் பேசவேண்டிய பொருளில் பரிபூரணமாக ஆழ்ந்திருந்தது. சிறுவயதிலேயே இந்தச் சரித்திரங்களையெல்லாம் பற்றிக் கதை கதையாக அவளுக்குச் சொல்லியிருக்கிறார் அப்பா. திலகவதியாருடைய சரித்திரத்தைக் கேட்கும்போதெல்லாம் அவள் மனம் இளகி அழுதிருக்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு வயதானபின் சேக்கிழாருடைய கவிதைகளிலிருந்து அப்பா திலகவதியின் காவியத்தை விளக்கிக் கூறியிருக்கிறார். சிறுமியாக இருந்தபோது கதையாகக் கேட்டிருக்கிற அதே வரலாற்றைக் காவியமாகக் கற்றபோதும் அவள் அதிகமாகத்தான் உருகினாள். அப்பா சொல்லியிருக்கிறார் 'உலகத்திலேயே பெரிய சோகக்கதை இதுதான் அம்மா! இந்தத் திலகவதி என்ற பெண்ணின் கதையைச் சேக்கிழார் எழுத்தாணியால் ஏட்டில் எழுதியிருக்க மாட்டார் பூரணி. ஏட்டில் எழுதுமுன் மனத்தில் இந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீரால் பலமுறை எழுதி எழுதி அழித்திருப்பாரம்மா அவர். ஒரு பெண்ணால் தாங்க முடியாத ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்தவள் திலகவதி. உடலால் செத்துப் போய்க்கொண்டே உள்ளத்தால் வாழ்கின்ற இந்த மாதிரி புனிதப் பெண் தமிழ்நாட்டில் தான் அம்மா பிறக்க முடியும். இந்தத் தமிழ் மண்ணில் அந்தப் பழைய புண்ணியம் இன்றும் மணத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் சில நல்ல காரியங்களாவது இன்னும் இந்த மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.' இந்த வாக்கியங்களை அப்பாவின் வாயிலாகக் கேட்கும்போது தனக்கு முன் சேக்கிழாரின் புத்தகம் விரிந்து கிடப்பதை மறந்து விடுவாள் பூரணி. மாலை மாலையான கண்ணீர் வடியும் அவள் கண்களில். கேட்டுக் கேட்டுக் கற்றுக் கற்று அனுபவித்து உணர்ந்த இந்தச் சோக அனுபவம் அன்று அவள் பேசிய பேச்சில் முழுமையாக எதிரொலித்தது. பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் மனமுள்ள இளகியவர்களுக்குக் கண்களில் ஈரம் கசிந்துவிட்டது.

"திருவாரூரின் அழகிய வீதி ஒன்றில் ஒரு வேளாளர் வீடு, பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி. அந்த வேளாளர் வீட்டில் இளமை அழகு மொட்டவிழ்ந்த முழுமலராய் ஒரு பெண். முல்லை நகை, முழுமதி முகம், மின்னல் நிற உடல், மணப் பருவம், வலது கையில் தம்பியைப் பிடித்துக் கொண்டு அவள் தன் வீட்டு வாயிலில் நிற்கிறாள். அழகு மலர்ந்து அனுபவமிக்கக் கவிதைகளைத் தேடும் கருவண்டுக் கண்களாலேயே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் அந்தப் பெண். கண்களில் எவருடைய வரவையோ தேடுகிற ஆவல். பக்கத்தில் பால்வடியும் முகத்தோடு நிற்கும் சிறுவனாகிய அவள் தம்பிக்கு அக்காவின் ஆவலுக்குக் காரணம் விளங்க முடியாதுதான். யாரோ பல்லக்கில் வந்து இறங்குகிறார்கள். உள்ளே போய் அந்தப் பெண்ணின் பெற்றோர்களிடம் பேசிவிட்டுப் போகிறார்கள். சிறிது நேரம் கழித்து தந்தை வந்து சொல்கிறார்:

"திலகவதி! சோழநாட்டுத் தளபதி கலிப்பகையார் உன்னை மணந்து கொள்வதற்கு விரும்புகிறாராம். மணம் பேச வந்தார்கள். நான் இணங்கிவிட்டேன். நீ பெரிய பாக்கியசாலி, அம்மா. ஒரு நாட்டின் வீரத் தளபதியே உன்னை விரும்பி மணக்க வருகிறார்."

திலகவதி நாணத்தால் முகம் கவிழ்த்துக் கொண்டு ஓடி விடுகிறாள். அக்கா ஏன் இப்படி முகம் சிவக்க ஓடுகிறாள் என்பதும் அந்தத் தம்பிக்குப் புரியவில்லை. காலம் ஓடுகிறது. தாய், தந்தையர்கள் இறந்து போகிறார்கள். விதி பொல்லாதது. முன்பு பேசியபடி திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. திலகவதி உள்ளமெல்லாம் பூரித்து நினைவெல்லாம் கனவாக, கனவெல்லாம் இன்பமாக, மண அழகு பொழியும் கோலத்தோடு இருக்கிறாள். அந்தச் சோழநாட்டு வீரத்தளபதியின் அழகு முகம், திரண்ட தோள்கள், பரந்த மார்பு எல்லாவற்றையும் அவள் கண்கள் கற்பனை செய்து கனவு கண்டு களித்துக் கொண்டிருந்தன. அழித்து அழித்து மேலும் நன்றாகப் போடும் கோலம்போல அவள் மனம் வரப்போகிற கணவனின் அழகை நாழிகைக்கு நாழிகை அதிகமாக்கி, வளர்த்து எண்ணிக் கொண்டிருந்தது. அந்த அழகன் வரவில்லை. செய்தி வந்தது. சோழநாட்டுத் தளபதி போரில் மாண்டு போனாராம். திலகவதி குமுறிக் குமுறி அழுதாள். கனவுகளில் பார்த்துக் கண்ணால் பார்க்காத அந்தக் கணவனுக்காக அழுதாள். அழுதழுது உயிர்மூச்சுக் காற்றையே விட்டுவிட நினைத்தாள். இனி என்ன இருக்கிறது வாழ? 'அக்கா நான் இருக்கிறேனே, எனக்காக வாழுங்கள்' என்று கெஞ்சினான் தம்பி. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் சந்தனக் கட்டைபோல் விதியின் கைகளில் அறைபட்டாள் திலகவதி. அந்த வாழ்வில் மணம் பிறந்தது. அவளுக்கு மணம் கிடைக்கவில்லை. ஆனால் மணம் பெறாத அந்த வாழ்வு உலகத்துக்கெல்லாம் தெய்வீகத் திருமணம் நல்கிற்று. காவியமாய் உயர்ந்தது, கவிதையாய் எழுந்தது."

இந்தச் சொற்பொழிவை உணர்ச்சிகரமாகச் செய்து முடித்தாள் பூரணி. சந்தனத்தைத் தொட்டுவிட்ட பிறகு கழுநீரிலே கை தோய்ப்பதுபோல் மங்களேஸ்வரி அம்மாவின் மூத்த பெண் வசந்தா இந்தப் பேச்சைக் கேட்டு விட்டுப் பூரணியை ஒரு கேள்வி கேட்டு மடக்கினாள்:

"திலகவதிக்கும், கலிப்பகையாருக்கும் மணம்தானே பேசினார்கள்? அவர் இறந்தால் இவள் ஏன் வேறு கணவனுக்கு வாழ்க்கைப்படக் கூடாது?"

"நீ இன்றைய நாகரிகம் பேசுகிறாய் வசந்தா! ஒருவனைக் கணவனாக மனத்தில் நினைக்கும்போதே, அவனுக்கு வாழ்க்கைப்பட்டு விடுவார்கள் இந்த நாட்டுப் பெண்கள். 'அனிச்சம் பூப்போல அவர்களுடைய வாழ்வு மெல்லியது'. அதற்கு ஒரு நுகர்ச்சிதான் உண்டு. அந்த நுகர்ச்சியோடு அது வாடி விடுகிறது" - என்று பூரணி பதில் கூறியதும் மற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். வசந்தாவுக்கு முகத்தில் கரி பூசினாற் போல் ஆகிவிட்டது. அன்று தன்னுடைய சொற்பொழிவு பலபேருடைய உள்ளத்தில் புகுந்து வேலை செய்திருக்கிறதென்பதைக் கூட்டம் முடிந்ததும் அவர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு பாராட்டிய பாராட்டுரைகளிலிருந்து தெரிந்து கொண்டாள் பூரணி. 'அப்படியே உணர்ச்சிகளைப் பிசைந்தெடுத்துவிட்டீர்களே அக்கா' என்று மங்களேஸ்வரி அம்மாளின் இளைய பெண் செல்லம் பாராட்டினாள். பூரணி அந்தப் பாராட்டு வெள்ளத்தில் திணறிக் கொண்டிருந்தபோது, "காரியதரிசி அம்மா மேலே மாடியிலே இருக்கிறாங்க, உங்களைக் கூப்பிடுறாங்க" என்று மங்கையர் கழகத்து வேலைக்காரப் பெண் வந்து அழைத்தாள். பூரணி எழுந்து சென்றாள். அவள் நடையில் ஒரே பெருமிதம் தோன்றியது.

"இதுவரை இப்படிச் சொற்பொழிவு நான் கேட்டதில்லை பூரணி" என்று காரியதரிசியாகிய அந்தம்மாள் மங்கையர் கழகத்து நிர்வாகிகள் சார்பில் தன்னைப் பாராட்டப் போவதைக் கற்பனை செய்துகொண்டே மாடிப்படிகளில் ஏறினாள் பூரணி. மனதுக்குள் புகழின் படிகளில் ஏறுவது போல் ஓர் இன்பப் பிரமை எழுந்தது.

காரியதரிசியின் அறைக்குள் தான் நுழைந்தபோது அந்த அம்மா 'வா' என்று கூடச் சொல்லாதது ஒரு மாதிரிப் பட்டது பூரணிக்கு. வழக்கமாகச் சிரிக்கும் சிரிப்புக்கூட அந்த அம்மாள் முகத்தில் இல்லை. பூரணி நின்றாள். மரியாதைக்காக, 'உட்கார்' என்று கூடச் சொல்லவில்லை காரியதரிசி. பூரணி திகைத்தாள்.

 

"இந்தா! இந்தக் கழகத்தில் இதுவரை யாருக்கும் எதைப் பற்றியும் இந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னாவென்று மொட்டைக் கடிதம் வந்ததில்லை. நீ என்னவோ புனிதம், பண்பு, ஒழுக்கம் என்று பேச்சில்தான் முழங்குகிறாய், நடத்தையில் ஒன்றும் காணோம். போதாக்குறைக்கு இங்கேயே சிலர் உன்னைப் புகழுகிறார்கள். இதெல்லாம் அவ்வளவு நல்லதில்லை."

சொல்லிவிட்டு ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் அந்த அம்மாள். அதைச் சிறிது படித்ததுமே பூரணிக்கு உள்ளம் துடித்தது. "கடவுளே! நீ பாவிகள் நிறைந்த இந்த உலகத்தைப் படைத்ததற்காக உன்னை நான் ஒரு போதும் மன்னிக்க முடியாது. இந்த உலகில் இவர்களிடையே நானும் ஒருத்தியாக இருப்பதற்காக நீ என்னை மன்னித்துத்தான் ஆகவேண்டும்" என்று குமுறினாள் அவள்.

 

11

 

மண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம்! உரிமை கேட்டால்

புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்! இதைத்தன்

கண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின்

விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.

                                                                                                                                     -- பாரதிதாசன்

 

மனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டுவிட்டால் கைகூடாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில்தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ அப்படி ஒரு கொடுமை அவள் முகவரியைத் தேடிக் கொண்டு வந்து அவளைப் பெருமைப்படுத்துவோர் முன்பு அவள் தலைகுனிந்து நிற்கும்படி செய்திருக்கிறது. எவர்களுக்கு முன் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பற்றி அவள் மணிக்கணக்கில் நின்று கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினாளோ, அவர்களே அவளுடைய ஒழுக்கத்தைப் பற்றி ஐயப்படுகிறார்கள். அன்று வந்திருக்கும் அக்கடிதம் அவ்வாறு ஐயப்படச் செய்கிறது. மொட்டைக் கடிதம் தான். ஆனால் அவளை வேலைக்கு வைத்துக் கொண்டு சம்பளம் கொடுக்கிறவர்கள் அதை உண்மை என நம்புகிறார்களே? அரவிந்தனுக்கும், அவளுக்கும் இருக்கும் தூய நட்பைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையுமே இழிவான முறையில் எழுதி அவளை அங்கே வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது அந்த மொட்டைக் கடிதம். யாருடைய வெறுப்பு முதிர்ந்து இந்தத் தீமை தனக்கு வந்திருக்க முடியுமென்பதும் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. சற்றுமுன் சொற்பொழிவில் கிடைத்த புகழும், பெருமிதமும் அவள் மனத்துக்குள் தந்திருந்த நிறைவு இப்போது எங்கே போயிற்றென்று தெரியவில்லை. பரிதாபத்துக்குரியவளாகப் பேச வாயின்றிக் கூனிக் குறுகிக் கொண்டு கூசிப்போய் காரியதரிசி அம்மாளின் முன் நின்றாள் பூரணி. அந்த அம்மாள் கடுகடுப்போடு எரிந்து விழுகிற தொனியில் அவளைக் கேட்டாள்.

"இதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய்? இது கௌரவமானவர்களால் நடத்தப்படும் கண்ணியமான சங்கம். சிறியவர்களும் பெரியவர்களுமாக நல்ல குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பழகுகிற இடம். இங்கே சொல்லிக் கொடுக்கிறவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்த மாதிரி எல்லாமே கெட்டுப் போகும். இப்படி அசிங்கமும் ஆபாசமுமாகக் கடிதம் வருகிறாற்போல் நீ நடந்து கொள்ளலாமா?"

பூரணிக்குக் கண்களில் நீர் மல்கிவிட்டது. தொண்டை கரகரத்து நைந்த குரலில் அவள் அந்த அம்மாளை எதிர்த்து வாதாடினாள்; "உங்களை எதிர்த்துக் குறுக்கே பேசுவதற்காக மன்னிக்க வேண்டும் அம்மா. யாரோ விலாசம் தெரியாத ஆள் என்னைப் பற்றி தவறான கருத்தை உண்டாக்க வேண்டுமென்று என்னென்னவோ எழுதியிருந்தால் அதனால் என் தூய்மை குறைந்ததாக நான் ஏன் ஒப்புக் கொள்ளவேண்டும்? இந்தக் கடிதத்தைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் என்னைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசுவது நன்றாயில்லை."

"நெருப்பில்லாமல் புகையுமா? யார் இந்த அரவிந்தன்? அவனோடு உனக்கு எப்படிப்பட்ட விதத்தில் பழக்கம்? எத்தனை நாட்களாகப் பழகுகிறீர்கள் இருவரும்?"

"அவர் ஓர் அச்சகத்தில் வேலை பார்க்கிறார். என் தந்தையின் புத்தகங்கள் அவருடைய மேற்பார்வையில் வெளியாகின்றன. சிறந்த இலட்சியங்களும், பண்புகளும் உள்ளவர். அந்த இலட்சியங்களையும் அவரையும் மதித்து அன்பு செலுத்துகிறேன். பழகுகிறேன். இதில் தூய்மைக் குறைவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களும் நினைக்க முடியாது."

"மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி நீ தடுக்க முடியாது. பனைமரத்தின் கீழ் நின்று பாலைக் குடித்தாலும் உலகம் வேறு விதமாகத்தான் சொல்லும்."

இதற்கு மேல் அங்கே அந்த அம்மாளுக்கு முன் நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கப் பொறுமை இல்லை பூரணிக்கு. ஒன்றும் பேசாமல் விறுவிறுவென்று கீழே இறங்கி மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டுக்குப் போனாள் அவள்.

 

"வா பூரணி! இன்றைக்கு உன் பேச்சு பிரமாதமாக இருந்ததென்று இப்போதுதான் செல்லம் வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு உடல் நலமில்லை. அதனால் தான் வரமுடியாது போயிற்று. வசந்தா கூட ஏதோ கேள்வி கேட்டாளாமே? நன்றாகப் பதில் கூறினாய் என்று செல்லம் சொன்னாள்..." என்று உற்சாகமாக வரவேற்ற அந்த அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்ததும் திகைத்தாள்.

"என்னவோ போலிருக்கிறாயே! உடம்புக்கு என்ன? முகத்தைப் பார்த்தால் ஒரு மாதிரி தோன்றுகிறதேயம்மா?" என்று பரபரப்படைந்து வினவினாள் மங்களேஸ்வரி அம்மாள். மௌனமாகச் சோர்வுடன் அந்த அம்மாளின் அருகிலே போய் உட்கார்ந்து கொண்டு சற்று நேரம் கழித்து நிதானமாக பதில் சொன்னாள் பூரணி.

"அம்மா! உங்கள் மங்கையர் கழகத்தில் தூய்மையைப் பற்றிப் பேசச் சொல்கிறார்கள், கேட்கிறார்கள், புகழ்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளங்கள், தூய்மையை நம்புவதற்கு மறுக்கின்றன. தங்களைத் தவிர மற்றவர்களிடமும் தூய்மை இருக்க முடியும் என்பதையே ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர்."

"என்னம்மா செய்தி? யார் என்ன கூறினார்கள் உன்னிடம்?"

பூரணி நடந்த விவரங்களைக் கூறி அந்தக் கடிதத்தை எடுத்து மங்களேஸ்வரி அம்மாளிடம் கொடுத்தாள். அந்த அம்மாள் அதைப் படித்துவிட்டுப் பெருமூச்சு விட்டாள். முகத்தில் அக்கடிதத்தில் இருந்த செய்திகளை நம்பாதது போல் சினமும் ஏளனமும் இணைந்த சாயை நிலவ, "இப்படி எல்லாம் கெடுதல் செய்வதற்கு உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருக்கிறார்களா பூரணி?" என்று அனுதாபம் இழையும் மெல்லிய குரலில் கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.

புதுமண்டபத்துப் பதிப்பாளரையும் அவருக்கு வெறுப்பேற்படக் காரணமாக இருந்த நிகழ்ச்சியையும் பற்றிச் சொன்னாள் பூரணி.

"உனக்கு அவர் மேல் சந்தேகமா?" என்று கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.

"வேறு யார் மேலும் சந்தேகப்படக் காரணமில்லையம்மா? இது அவர் செய்த வேலையாகத்தானிருக்க வேண்டும்."

"உனக்கு நான் முன்பே சொல்லியிருக்கிறேனே. மங்கையர் கழகத்தில் வம்பு அதிகம். ஏற்கெனவே நீ இத்தனை சிறுவயதில் இவ்வளவு படிப்பும் புகழும் பெற்றவளாக இருப்பதைக் கண்டு அவர்களுக்குப் பொறாமை. அன்றைக்கு உன்னைச் சிபாரிசு செய்யும்போதே 'வயது ஆகவில்லை, மணமாகவில்லை, பட்டம் பெறவில்லை' என்று குறைகள் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார்கள். எப்படியோ சொல்லிச் சமாளித்து உன்னை உள்ளே நுழைத்து விட்டேன். வெறும் வாயை மென்று கொண்டிருப்பவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி இப்போது இந்தக் கடிதமும் வந்து சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா?"

 

"போதாத காலம் தானாக வருவதில்லை. மனிதர்கள்தாம் இதை உண்டாக்குகிறார்கள். நேருக்கு நேர் நின்று கெடுதல் செய்யத் தெம்பில்லாத துப்புக்கெட்ட மனிதர்கள் இந்தத் தலைமுறையில் அதிகமாக இருக்கிறார்கள் அம்மா. பரவலான கோழைத்தனம் என்பது இந்த நூற்றாண்டில் பொதுச்சொத்தாகி விட்டது. பழைய காலத்தில் வீரம் ஓங்கி நின்றதுபோல் இந்தக் காலத்தில் கோழைத்தனம் ஓங்கி நிற்கிறது. துன்பங்களை நேருக்கு நேர் நின்று செய்ய வேண்டும். நேருக்கு நேர் நின்று தாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டுமே இன்றைக்குச் சமூகத்தில் இல்லை" என்றாள் பூரணி.

"ஆத்திரப்படாதே பூரணி! நான் அவர்களைப் பார்த்துச் சொல்கிறேன். நீ இதை மெல்ல மெல்ல மறந்துவிடு. இதை ஒன்றும் பெரிதுபடுத்த வேண்டாமென்று நான் காரியதரிசி அம்மாளிடம் சொல்கிறேன். நான் காரியதரிசியாக இருந்தால் இந்த மாதிரி குப்பைக் கடிதத்துக்கு இத்தனை மதிப்புக் கொடுத்து உன்னைக் கூப்பிட்டு விசாரித்து இவ்வளவு சிரமப்படுத்தியிருக்க மாட்டேன். கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்திருப்பேன்."

"அக்கா! எடுத்துக்குங்க..." என்று தேநீர் கொண்டு வந்து வைத்தாள் செல்லம். அந்தப் பெண் அப்போது தன்னிடம் காட்டிய ஆவலையும் மலர்ச்சியையும் பார்த்தபோது பூரணிக்குத் தோன்றியது, 'ஐயோ! இப்படி எத்தனை எத்தனை இளம் உள்ளங்கள் எனக்காக மலர்ந்திருக்கின்றன. இந்த உள்ளங்களிலெல்லாம் எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்ததைப் பற்றித் தவறான கருத்துக்கள் பரப்பப்படுமானால் என்ன ஆகும்?" என்று நினைக்கிறபோதே மனம் கூசியது. அருவருப்பு ஏற்பட்டது. உலகத்திலேயே இழக்க முடியாத பொருள் தன்னைப் பற்றிப் பிறர் மனங்களில் உருவாகியிருக்கும் மதிப்புத்தான். ஒருமுறை இழந்து விட்டால் எளிதில் புதுப்பித்துக் கொள்ள முடியாத பொருள் அது.

பூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள்.

"வசந்தா! உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே" என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு போய்விட்டாள் வசந்தா. அவளிடம் ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்று தன்னையே நொந்து கொள்ள வேண்டிய நிலையாகி விட்டது பூரணிக்கு. விடைபெற்றுக் கொண்டு புறப்படும் போது மறுபடியும் பூரணியை எச்சரித்து அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள்.

 

"மறுபடியும் இப்படி ஏதாவது வம்பு வந்து சேராமல் பார்த்துக் கொள் அம்மா! உன்மேல் யாரும் அப்பழுக்குச் சொல்லும்படி நேரக்கூடாது. இந்தச் செய்தியைப் பற்றி வேறு யாரிடமும் மூச்சுவிடக்கூடாதென்று காரியதரிசி அம்மாளிடம் சொல்லிவிடுகிறேன் நான்."

அந்த அம்மாளின் எச்சரிக்கையைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய போது பூரணியின் மனநிலை சரியாக இல்லை. புதுமண்டபத்து வியாபாரியின் சூழ்ச்சிகளையும் முரட்டுத் தனத்தையும் பற்றி அவள் ஓரளவு அறிந்திருந்தாள். சிலந்தி கூடு போட்டுக் கொண்டு உயிர்களைப் பிடித்துக் கொண்டு அழிக்கிற மாதிரிப் பிறரை அழிப்பதில் கூடத் திட்டமிட்டுக் கொண்டு வேலை செய்கிறவர் அவர். இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ? அற்புதமான சொற்பொழிவைச் செய்துமுடித்த பெருமையில் மனம் மலர்ந்து இருந்த போது அன்று தன் மேல் சுமத்தப்பட்ட தீமையை நினைக்க நினைக்க வாழ்க்கையின் மேலும், உலகத்தின் மேலும், மனிதர்கள் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத வெறுப்பு ஏற்பட்டது அவளுக்கு. வாழ்க்கையில் பொறாமை இருக்கிறது! வாழ்க்கையில் வெறுப்புகள் இருக்கின்றன! வாழ்க்கையில் சுயநலம் இருக்கிறது! வாழ்க்கையில் வாழ்க்கை தான் இல்லை என்று கொதிப்போடு எண்ணினாள் அவள். 'ஒரு காலத்தில் வாழ்க்கையில் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருந்தன. இப்போதோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது' என்று அரவிந்தன் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்ததை அவள் மீண்டும் இப்போது நினைத்துப் பார்த்தாள். அந்த வாக்கியங்களின் பொருள், ஆழம் இப்போது அவளுக்கு நன்றாக விளங்கியது. 'கேவலம் முட்டாள்தனமாக எழுதப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் காரியதரிசி அம்மாளின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்குகிறது என்றால் சந்தேகங்களுக்கிடையே தான் வாழ்கிறோம் என்பதில் தவறு என்ன இருக்க முடியும்?'

வழக்கத்தைக் காட்டிலும் அன்று சொற்பொழிவு சற்று விரைவாக முடிந்திருந்ததனால் வீட்டுக்குத் திரும்ப நேரம் ஆகவில்லை. இன்னும் நிறைய நேரம் இருந்தது. மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகலாமென்று அவளுக்குத் தோன்றியது. மனப்புண் ஆறுவதற்கு அந்தப் பெரிய கோயிலின் புனிதமான சூழ்நிலையை அவள் விரும்பினாள். மேற்குக் கோபுரத்தின் கீழே உரித்த பலாச்சுளையைத் தட்டு நிறையப் பரப்பிக் கொண்டு ஈக்களையும், வறுமையையும் ஒன்றாக ஓட்டிக் கொண்டிருக்கும் கூடைக்காரிகள். கோயிலுக்குள் போகிறவர்கள் கழற்றிப் போடுகிற பாதரட்சைகளை அவர்கள் திரும்புகிற வரை பாதுகாத்து அந்தப் பாதுகாப்பு வேலைக்குக் காலணாவும், அரையணாவும் கூலி வாங்கி வயிறு வளர்க்கும் ஏழைக் கும்பல். சொந்தத் தலையில் எண்ணையோ, பூவோ இன்றி உலகத்துக்குக் கூவிக்கூவிப் பூ விற்கிற பூக்காரிகள். தூக்கணாங் குருவிக்கூடு மாதிரி தாறுமாறாக முளைத்த தாடிக்கு நடுவே பொந்துபோல் வாய் தெரிய ஏதோ கேட்கும் பஞ்சைப் பரதேசிப் பிச்சைக்காரர்கள். இவர்களெல்லாம் தான் நிரந்தர வசிப்பாளர்கள். மேலே பார்த்து அண்ணாந்து உயர்ந்த கோபுரத்தின் அடியில் கீழே பார்த்து வயிற்றுக்காகக் குனிந்து தேடும் மனிதர்கள். 'இங்கே போ', 'இங்கே போ' என்று பிடரியைப் பிடித்துத் தள்ளுகிற மாதிரி மேற்குக் கோபுரத்துக்குள் நுழைகிற வழியில் நல்ல காற்று பாய்ந்து வீசியது. கண்ணுக்கு முன் தெரிந்த உலகத்தின் துன்பங்களில் உள்ளத்தின் துன்பங்களை மறக்க முயன்று கொண்டே கோயிலுக்குள் நுழைந்தாள் பூரணி. எல்லா சந்நிதிகளிலும் வழிபாட்டை முடித்துக் கொண்டு பொற்றாமரைக் குளத்தின் படிகளில் போய் உட்கார்ந்தாள். அந்த இடத்தில் குளத்துக்கு நேரே மேலே திறந்த வெளியாக வானம் தெரிந்தது. திரையைக் கிழித்து யாரோ எழுதி வைத்திருந்த சித்திரத்தைக் காட்டினாற்போல் விண்மீன்கள் சிதறிய கருநீல வானம் அழகாய்த் தோன்றியது. அப்போதைய மனநிலையில் நட்சத்திரங்களைப் பற்றித் தமிழகத்துக் கவிஞர் ஒருவர் கற்பனை செய்திருப்பது நினைவு வந்தது அவளுக்கு. 'உலகத்துத் துன்பங்களைப் பகற்போதெல்லாம் கண்டு கண்டு வெதும்பிக் கொதித்ததன் காரணமாக இரவில் வானத்து மேனி மீது கொப்பளித்த கொப்புளங்களே நட்சத்திரங்கள்' - நினைத்துப் பார்ப்பதற்குச் சுவையாயிருந்தது இந்தக் கற்பனை.

"பூரணி! இங்கே உட்கார்ந்து என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" படிக்கட்டுகளுக்கு மேலேயிருந்து அவளுக்குப் பழக்கமான குரல் கேட்டது. மேலே படிகள் முடிந்து கல் தரையுடன் கலக்கிற இடத்தில் நெற்றியில் கோயில் குங்குமமும் இதழ்களில் குறுநகையுமாக அரவிந்தன் நின்று கொண்டிருந்தான். கழுத்தில் வளைத்துச் சுற்றின கைக்குட்டையும் முன் நெற்றியில் வந்து விழும் கிராப்புத் தலையுமாக வெற்றிலைக் காவியேறிய உதடுகளோடு இன்னோர் இளைஞனையும் அரவிந்தனுக்குப் பக்கத்தில் கண்டாள் அவள். மற்போர் செய்பவர்களுக்கு இருப்பது போல் தேகக் கட்டும் இருந்தது அரவிந்தனோடு பார்த்தவனுக்கு. அப்படி ஓர் ஆணோடு சேர்ந்து அரவிந்தனைப் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தது பூரணிக்கு. இருவரும் கை கோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தால் அந்த முரட்டு ஆள் அரவிந்தனுடன் வந்தவன் தான் என்று தோன்றியது. இருவரும் படிகளில் இறங்கி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது படித்துறையில் சிறிது தள்ளித் தனக்கு வலப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் மேல் தற்செயலாக அவள் பார்வை சென்றது.

தேங்காய்ப் பழம் பிரசாதத் தட்டோடு அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் பூரணி மிரண்டாள். பேசிக் கொண்டிருந்த இருவரும் அவளைப் பார்த்துவிட்டனர். அவர்கள் இருவரில் ஒருத்தி மங்கையர் கழகத்துக் காரியதரிசி. மற்றொருத்தி துணைத் தலைவி. இருதலைக் கொள்ளி எறும்பு போல் இரண்டுங்கெட்ட நிலையில் தவித்தாள் பூரணி. பார்ப்பதற்குக் காலித்தனமானத் தோற்றத்தையுடைய எவனோ ஒரு முரட்டு இளைஞனோடு கைகோர்த்துக் கொண்டு முகத்தில் முறுவல் மிளிர அவளை நோக்கிப் படியிறங்கி வருகிறான் அரவிந்தன். அவள் மேல் பழியையும் அபவாதத்தையும் சுத்தத் தேடிக் கொண்டிருக்கும் இருவர் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பம் நேரம் பார்த்து இடம் பார்த்து பொருத்தமாகச் சதிசெய்து கொண்டிருப்பதைப் பூரணி உணர்ந்தாள். திடீரென்று அவள் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அரவிந்தனைப் பார்க்காதவள் போல் இலட்சியமே செய்யாதவள் போல் எழுந்து விடுவிடுவென நடந்து விலகிப் படியேறினாள். பின்புறம் 'பூரணி' என்று அவன், உள்ளத்து அன்பெல்லாம் குழைத்துக் குவித்து ஒலியாக்கி அழைக்கும் குரல் அவளைத் தடுக்கவில்லை, தயக்கமுறச் செய்யவில்லை. அந்தச் சிறிது நாழிகை நேரத்தில் அவள் தன் மனத்தை நெகிழ முடியாத கல்மனமாகச் செய்து கொண்டிருந்தாள். ஓட்டமும் நடையுமாகத் தெற்குக் கோபுர வாசலுக்குச் சென்று தெருவோடு போய்க் கொண்டிருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டாள். வாடகை கூடப் பேசிக் கொள்ளவில்லை. நேரே திருப்பரங்குன்றத்துக்கு விடச் சொன்னாள். பயத்தால்... அல்லது பயத்தைப் போன்ற வேறு ஏதோ ஒரு உணர்வால் உடல் வேர்த்தது அவளுக்கு. செய்யத் தகாததை, செய்யக் கூடாததைச் செய்துவிட்டுப் போவது போலிருந்தது. யாருடைய மென்மையான உள்ளத்துக்கு அவள் தன்னை தோற்கக் கொடுத்தாளோ, அதே மென்மையான உள்ளத்தை மிதித்துவிட்டுப் போகிறாள். இப்போது எந்த முகத்தில் அவள் இதயத்தை மலர்வித்த மலர்ச்சி பூத்ததுவோ அந்த முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டுப் போவதைப் போல் போகிறாள். "பாவி! எவ்வளவு பெரிய கொடுமையைச் செய்கிறாய்? இது அடுக்குமா உனக்கு" என்று அவள் உள்ளமே இறுக்கத்திலிருந்து தானாக நெகிழ்ந்து அவளைக் குடைகிறதே.

'அடி பூரணி! இவ்வளவு வன்மைகூட உன் மலர் மனதுக்கு உண்டா? கோழைத்தனம்தான் இந்தக் காலத்தில் அதிகமாக இருக்கிறதென்று மங்களேஸ்வரி அம்மாளிடம் சினத்தோடு கூறினாயே? அந்தக் கோழைத்தனம் இப்போது எங்கே இருக்கிறதென்று நீயே நன்றாகச் சிந்தித்துப் பார். உன்னிடமல்லவா அசட்டுக் கோழைத்தனமெல்லாம் இருக்கிறது. அன்பு செலுத்துவதற்குக்கூட தைரியமில்லாதவள் நீ. எவன் தன் உள்ளத்தில் உன்னைக் காவியமாக்கி இடைவிடாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறானோ அவனோடு நாலு பேருக்கு முன்னால் நின்று சிரித்துப் பேசக்கூடப் பயப்படுகிறவள் நீ. யாருக்காகப் பயப்பட்டாய்? எதற்காகப் பயந்து நடுங்கி முகத்தை முறித்துக் கொண்டு ஓடி வந்தாய்? நூறு ரூபாய் காசுக்கும் அதைக் கொடுக்கும் ஒரு காரியதரிசியின் குறுகிய மனத்துக்கும் பயந்துதானே இப்படிச் செய்தாய்? உனக்காகத் தன்னையே கொடுத்தானே அவன் பெரியவனாகப் படவில்லை உனக்கு; நீ பெரிய வஞ்சகி.'

மனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்ஷா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கில் ரிக்ஷாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது.

 

ரிக்ஷாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு வாயிலில் இறங்கி உள்ளே நடந்தபோது நடைப்பிணம் போல் பொலிவிழந்து காணப்பட்டாள். தெருவில் மயில் வாகனத்தில் புறப்பட்டு முருகன் தெய்வத் திருவுலா வந்து கொண்டிருந்தான். அதிர்வேட்டுகள் அதிர்ந்தன. மேளக்காரர்களும் நாயனக்காரர்களும் இசை வெள்ளம் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். தம்பிகளும் குழந்தைகளும் மயில்வாகனம் பார்க்க வாசலுக்கு ஓடிப்போய்க் குழுமியிருந்தார்கள். பூரணி உள்ளே உட்கார்ந்து வேதனையளிக்கும் மனத்தை ஆற்ற முயன்று கொண்டிருந்தாள். மனப்புண் ஆறவில்லை. எப்படி ஆறும்? யாருடைய மனத்தைப் புண்படுத்தும்போது தன் மனத்திலும் அந்தப் புண் உறைக்குமோ அவனுடைய மனத்தையல்லவா அவள் புண்படுத்தி இரணமாக்கிவிட்டு ஓடி வந்திருக்கிறாள். அப்பொழுதே மதுரைக்கு ஓடிப்போய் அரவிந்தன் எங்கிருந்தாலும் அவனைச் சந்தித்து உண்மையைச் சொல்லிக் கதறி அழவேண்டும் போலிருந்தது. அன்றிரவு முழுவதும், உறக்கமும் நிம்மதியும் இன்றித் தவித்தாள் அவள்.

மறுநாள் காலை அவளுக்குக் காய்ச்சல் அனலாகக் கொதித்தது. பாறாங்கல்லைத் தூக்கி வைத்த மாதிரி மண்டை கனத்தது. கண்கள் எரிந்தன. எழுந்து நடமாட முடியாமல் உடம்பு தள்ளாடியது. கமலாவின் தாயார் வந்து பார்த்துவிட்டு, "நீ பேசாமல் படுத்துக்கொள் பூரணி. காய்ச்சல் நெருப்பாகக் கொதிக்கிறது. வைத்தியருக்கு ஆள் அனுப்புகிறேன். குழந்தைகள் இன்றைக்கு எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போகட்டும். இந்த உடம்போடு நீ சிரமப்பட வேண்டாம்..." என்று சொல்லிச் சென்றாள். காய்ச்சலோடு மனத்துன்பங்களும் சேர்ந்து கொண்டு அவளை வதைத்தன. பிறரிடம் மனம் விட்டுச் சொல்ல முடியாத ஊமைக் குழப்பங்களால் உழன்று கொண்டிருந்தாள் அவள். அரவிந்தனிடம் உண்மை நிலையைக் கூறி மன்னிப்புப் பெற்றாலொழிய அந்த ஊமை வேதனை அவள் மனத்திலே தணியாது போலிருந்தது.

வைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுப் போனார். குழந்தையும் தம்பிகளும் கமலாவின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போனார்கள். அவளுக்குக் கூட கமலாவின் அம்மாதான் பார்லியரிசிக் கஞ்சி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்தாள். வாய் விளங்காமற் போய்விட்டதுபோல் எதைச் சாப்பிட்டாலும் கசப்பு வழிந்தது. நெஞ்சில் வந்து நிறைந்து கொண்டிருக்கும் கசப்பு எல்லா புலன்களுக்கும் பரவிவிட்டதா, என்ன? இரண்டு நாட்களுக்கு இதே நிலைமை நீடித்து வளர்ந்தது. காய்ச்சல் டிகிரி மேல் டிகிரியாக ஏறியது. மூன்றாவது நாள் காலை மங்களேஸ்வரி அம்மாள் செல்லத்தோடு வந்தாள். "இரண்டு நாட்களாக மங்கையர் கழகத்து வகுப்பு நடத்த வரவில்லை என்று செல்லம் சொன்னாள். 'நீ இப்படி வராமல் இருப்பதனாலேயே உன்னைப் பற்றி அவர்களுக்கு ஏற்பட நேர்ந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறாயே' என்று வருத்தமாக இருந்தது எனக்கு. செல்லமும் உன்னைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று இந்த இரண்டு நாளைக்குள் நூறு தரம் சொல்லியிருப்பாள். அதுதான் இப்படி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீ இந்த நிலைமையில் படுக்கையில் விழுந்து கொண்டிருக்கிறாய். உடம்புக்குச் சரியில்லை என்றால் ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா நீ?"

"யாரிடம் சொல்லி அனுப்புவது அம்மா! தம்பிகள் பள்ளிக்கூடம் போய்விடுகிறார்கள். அன்றைக்கு உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பினேனே அதிலிருந்து மனமே சரியில்லை."

"பார்த்தாயா? இன்னும் அந்த நிகழ்ச்சியை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாயே? அதை மெல்ல மறந்து விடு என்று அன்றே சொன்னேன். மனக்குழப்பத்தால் நீ உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்கு எதற்கு அந்தக் கவலை? நான் காரியதரிசி அம்மாளைப் பார்த்து வேண்டியதெல்லாம் சொல்லிச் சரிசெய்துவிட்டேனே" என்றாள் மங்களேஸ்வரி அம்மாள். 'வேலை போய்விடுமே என்பதற்காகவோ காரியதரிசி அம்மாளின் மிரட்டலுக்காகவோ நான் இப்போது வேதனைப் படவில்லை. சிரித்துக் கொண்டே களங்கமில்லாமல் பேச வந்த அன்பரிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஓடி வந்த அன்புத் துணிவில்லாத கோழைத்தனத்தை எண்ணியல்லவா உருகுகிறேன்' என்று மங்களேஸ்வரி அம்மாளின் வார்த்தைகளைக் கேட்டுத் தன் மனத்துக்குள் எண்ணிக் கொண்டாள் பூரணி. தன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்துப் படியில் கண்டது பற்றிக் காரியதரிசியோ, துணைத்தலைவியோ மங்களேஸ்வரி அம்மாளிடம் சொல்லியிருக்க இடமுண்டு என்று பூரணிக்குத் தோன்றியது. அவள் அந்த அம்மாளிடம் கேட்டாள்.

"நீங்கள் காரியதரிசியைச் சந்தித்த போது என்னைப் பற்றி வேறு ஏதாவது உங்களிடம் கூறினார்களா, அம்மா?"

"சொல்ல என்ன இருக்கிறது. 'நல்ல பெண்ணாக இருந்தாலும் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியது முறை. அதற்காகத்தான் கூப்பிட்டுச் சிறிது கண்டிப்புடனேயே விசாரித்தேன்' என்று என்னிடம் கூறினாள் காரியதரிசி."

காரியதரிசி அம்மாளைப் பற்றிப் பயங்கரமாகக் கற்பனை செய்து வைத்திருந்த பூரணிக்கு இது ஏமாற்றமாக இருந்தது. 'ஒருவேளை கோயிலில் அந்த அம்மாள் தன் பக்கம் பார்க்காமலிருக்கும்போதே தானாக அப்படிக் கற்பனை செய்து கொண்டு பதறி ஓடி வந்திருக்கலாமோ?' என்று ஒரு சந்தேகம் உண்டாயிற்று அவளுக்கு.

"அக்கா நீங்க வராம அங்கே ஒண்ணுமே நல்லாயில்லே. எல்லோரும் வந்து பார்த்திட்டு நீங்க வரலேன்னு தெரிஞ்சதும் திரும்பிப் போயிடறாங்க. களையில்லாமல் கெடக்கு" என்று செல்லம் கூறியபோது பூரணிக்கு ஆறுதலாக இருந்தது. தனக்காக ஏங்கவும், அனுதாபப்படவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறிய நேரும்போது உண்டாகிற ஆறுதல் அது.

 

"மறுபடியும் நாளைக்கு வருகிறேன். பெண்ணே உடம்பைப் பார்த்துக்கொள். மங்கையர் கழகத்து வேலையைப் பொறுத்தமட்டில் உனக்கு ஒரு கெடுதலும் வராது" என்று கூறிவிட்டு அந்த அம்மாள் சென்றாள். எப்படியோ விபரம் தெரிந்து அன்று மாலையிலும் மறுநாள் காலையிலுமாக அவளிடம் வகுப்புகளில் படிக்கும் பெண்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். செல்லம் ஒருத்தி போதாதா? அவளுடைய காய்ச்சலைப் பற்றி அவள் மேல் அனுதாபம் உள்ளவர்களிடமெல்லாம் பறையறைவதற்கு?

யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? எவனைப் பார்த்துக் கதற வேண்டுமென்று அவள் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவன் வரவே இல்லை; கையெழுத்துப் பிரதிகளை வாங்கவும், அச்சுப் படிகளைத் திருத்தவும் என்று தினம் ஒரு தடவையாவது இங்கு வந்து கொண்டிருந்த அரவிந்தன், அவள் காய்ச்சலாகப் படுத்துவிட்ட அந்தச் சில நாட்களில் எட்டிப் பார்க்கவும் இல்லை. அரவிந்தன் மானமுள்ளவன்! நீ அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தாயே, 'அந்த விநாடியிலிருந்தே அவன் உன்னை மறக்கத் தொடங்கியிருப்பான்' என்று அவள் உள்ளமே அவளுக்குப் பதிலளித்தது. வருவான் வருவான் என்று பொறுத்துப் பார்த்தாள். அவன் வருகிற வழியாயில்லை. இனிமேல் ஒரு விநாடி கூட அந்தத் தவிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது போலிருந்தது. எவ்வளவோ படித்திருந்தாலும் அவள் பெண். அன்புக்காக ஏங்குகிற அந்த உள்ளத்தில் இனிமேலும் அவ்வளவு பெரிய ஆற்றாமையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அதனால் மாலையில் தம்பி திருநாவுக்கரசு பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் அச்சகத்துக்குத் துரத்தினாள்.

ஆனால் எத்தனை பெரிய ஏமாற்றம்? ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பி வந்த தம்பி அவளிடம் கூறினான்: "அரவிந்தன் ஊரில் இல்லையாம் அக்கா? அந்தப் பெரியவர் தான் முன்புறத்து அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்."

"எந்தப் பெரியவர்?"

"அவர் தான். அன்றைக்கு ஒரு நாள் உன்னைக் காரில் கொண்டு வந்து விட்டாரே - அந்த அச்சகத்தின் சொந்தக்காரர்..."

"அரவிந்தன் எங்கே போயிருப்பதாகச் சொன்னார் அவர்?"

"அதெல்லாம் ஒன்றும் அவர் சொல்லவில்லை. 'என்ன சமாசாரம்?' என்று கேட்டார். உனக்குக் காய்ச்சல் என்று சொன்னேன். 'நான் இன்னும் சிறிது நேரத்தில் அச்சகத்தை மூடிக் கொண்டு உன் அக்காவை பார்க்க வருகிறேன். போய்ச் சொல்லு' என்று கூறியனுப்பினார். பூரணிக்கு உள்ளமே வெடித்துவிடும் போலிருந்தது. ஏக்கம் நெஞ்சைத் துளைத்து ஊசிக் கண்களாக ஆக்கியது. பெருமூச்சு விட்டாள். வேறென்ன செய்வது?

 

 

12

 

"எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோட

முன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப்

பன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொய்யாய்

என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!"

 

உடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி, ஒடுங்கி, முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது பூரணியை ஆண்டுகொண்டிருந்த ஒரே உணர்வு இந்த அசதிதான். அரவிந்தனைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும், அவன் தன்னை மறந்து புறக்கணிக்கத் தொடங்கிவிட்டானோ என்ற ஐயமும், இந்த அசதியை இரண்டு மடங்காக்கியிருந்தன. 'அவன் ஊரில் இல்லை' என்று தம்பி அச்சகத்துக்குப் போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்லிய செய்தி அசதியோடு வேதனையையும் கலந்தது.

'அரவிந்தன் எங்கே போயிருக்கலாம்? எங்கே போனால் என்ன? போகும் போது என்னிடம் ஒரு வார்த்தைச் சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றாமலா போய்விட்டது? அப்படி ஒரு வெறுப்பும் அரவிந்தனுடைய மனத்தில் உண்டாகுமா? ஐயோ! அன்றைக்குக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே அவசரப்பட்டு ஏன் அப்படி நடந்து கொண்டேன்? யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் அல்லவா ஆகிவிட்டது என்று நோயின் தள்ளாமையோடு அன்பின் ஏக்கங்களையும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பூரணியின் ஏழைச் சிறுமனம். பொருள்களின் இல்லாமையாலும் வசதிகளின் குறைவாலும், ஏழையாவதற்கு அவளுடைய உள்ளம் எப்போதும் தயாராயிருக்கிறது. ஆனால் அன்பின் இல்லாமையால் ஏழையாக அந்த உள்ளம் ஒருபோதும் தயாராயில்லை.

அச்சகத்து வேலை நேரம் முடிந்து பூட்டிய பின் மீனாட்சி சுந்தரம் அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக வந்திருந்தார். அரவிந்தனைப் பற்றி அவள் விசாரிப்பதற்கு முன் அவரே முந்திக் கொண்டு சொல்லிவிட்டார். "புதிய அச்சு இயந்திரங்கள் சிலவற்றுக்கு ஆர்டர் செய்திருந்தேன் அம்மா. அந்த இயந்திரங்களின் பகுதிகள் சென்னைக்கு வந்து சேர்ந்திருப்பதாகக் கம்பெனிக்காரர்கள் எழுதியிருந்தார்கள். அவற்றைச் சரிபார்த்துப் பேசி முடித்து வாங்கிக் கொண்டு வருவதற்காக அரவிந்தனை அனுப்பியிருக்கிறேன். அவன் கூட ஊருக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் மாலை உன்னைக் கோயிலில் சந்தித்ததாகச் சொன்னானே? அப்போது ஊருக்குப் போவது பற்றி உன்னிடம் சொல்லியிருப்பான் என்றல்லவா நினைத்தேன்?" என்று கூறினார் மீனாட்சிசுந்தரம்.

பூரணி கேட்டாள், "என்றைக்குத் திரும்பி வருகிறார் அவர்."

"வருகிற நாள்தான்! அநேகமாக அவன் போன வேலை முடிந்திருக்கும். நாளை அல்லது நாளன்றைக்கு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மேல் அவனும் தங்கமாட்டான். இங்கே அச்சகத்தில் வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. அவன் இல்லாமல் ஒன்றுமே ஓடவில்லை" என்று மறுமொழி கூறினார் அவர். 'அரவிந்தன் அலுவல் நிமித்தமாகத்தான் வெளியூர் சென்றிருக்கிறான். தன்மேல் ஏற்பட்ட கோபமோ, ஏமாற்றமோ அவனுடைய பயணத்துக்குக் காரணமன்று, என்று உணர்ந்தபோது பூரணியின் நெஞ்சத்தில் நம்பிக்கை உற்றுக்கண் திறந்தது.

"இப்படி உடல் நலமில்லாமல் படுத்துக் கொண்டிருக்கிறாயே அம்மா! உன்னைக் கவனித்துக் கொள்ள இங்கே யார் இருக்கிறார்கள்? நான் வேண்டுமானால் ஒரு வேலைக்காரப் பெண்ணைப் பேசி அனுப்பி வைக்கட்டுமா? பணமோ, வேறு வகை உதவிகளோ எது வேண்டுமானாலும் என்னிடம் கூச்சமில்லாமல் கேளம்மா. நான் வேண்டியதைச் செய்து கொடுக்கிறேன்" என்று பாசத்தோடு வேண்டிக்கொண்டார் மீனாட்சிசுந்தரம்.

"அதெல்லாம் இப்போது ஒன்றும் வேண்டாம். அவசியமானால் சொல்கிறேன். 'அவர்' ஊரிலிருந்து வந்ததும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லுங்கள். அவசரம் ஒன்றுமில்லை. வந்தால் நினைவூட்டுங்கள் போதும்" என்று கூறி அவரை அனுப்பினாள் பூரணி. அரவிந்தனை வரச்சொல்லித் தானே வலுவில் வேண்டிக்கொள்ளும் போது பூரணிக்கு நாணமாகத்தான் இருந்தது. ஆனால் அன்பின் ஆற்றாமையிலும் ஏக்கத்திலும் அந்த நாணம் கரைந்தே போய்விட்டது. பச்சைக் கற்பூரம் வைத்திருந்த இடத்தில் அந்த மணம் நிலவுவது போல அரவிந்தன் அருகில் இல்லாவிட்டாலும் அவனைப் பற்றிய நினைவுகளின் மணம் அவள் நெஞ்சில் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது. அன்று இரவு அதற்கு முன் கழித்த நாட்களை விட அவள் சற்று நிம்மதியாகத் தூங்கினாள். தளர்ச்சியும் ஓரளவு குறைந்து நலம் பெற்றிருந்தாள்.

மறுநாள் காலை எழுந்திருந்தபோது சோர்வு குறைந்து உடல் தெம்பாக இருப்பதுபோல் தோன்றியது. அன்று காலை மங்களேஸ்வரி அம்மாளும், செல்லமும் அவளைப் பார்க்க வந்தபோது காரியதரிசி அம்மாளும் உடன் வந்திருந்தாள். காரியதரிசி அம்மாள் தன்னைப் பற்றிய தவறான கருத்துக்களை மறந்து, பார்த்து அனுதாபம் விசாரிக்க வருகிற அளவுக்கு மனத்தை மாற்றிய பெருமை மங்களேஸ்வரி அம்மாளுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று பூரணி நினைத்தாள்.

 

"நானும் துணைத் தலைவியம்மாளும் அன்றைக்கு உன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே பார்த்தோம். அம்மனுக்கு சாத்திய பூ கொஞ்சம் இருந்தது. உன்னைக் கூப்பிட்டுக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமென்று உன் பக்கம் திரும்பினேன். நீ என்னவோ என்னைப் பார்த்ததும், பேயையோ, பூதத்தையோ பார்த்துவிட்டவள் போல் பதறிக் கொண்டு எழுந்து போய்விட்டாய்! நான் என்னம்மா கெடுதல் செய்தேன் உனக்கு? ஏதோ நான் வகிக்கிற பதவிக்கு அப்படி ஒரு கடிதம் வரும்போது கூப்பிட்டு விசாரிக்க வேண்டிய முறை உண்டு. அதற்காக விசாரித்தேன்" என்று காரியதரிசியம்மாள் சொல்லியபோது பூரணியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. தன்னுடைய மனக்குழப்பங்களால் தானே ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் பற்றித் தப்பாகக் கணக்குப் போட்டுக் கொண்டு மயங்கி வந்திருக்கிறோம் என்று அவள் உணர்ந்தாள். காரியதரிசி அம்மாளின் மனமாற்றத்தை முழுவதும் இயல்பாகவே விளைந்ததென்று பூரணியால் நம்ப முடியாவிட்டாலும் மங்களேஸ்வரி அம்மாளின் முயற்சியால் தான் விளைந்திருக்க வேண்டுமென்று அவளால் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வந்தவர்கள் புறப்பட்டுச் சென்ற பின் சிறிது நேரத்தில் வைத்தியர் வந்து பார்த்துவிட்டு "நீ நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்" என்று கூறிச் சென்றார். அவரை அனுப்பிவிட்டுப் பூரணி படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறே காலையில் வந்த செய்தித்தாளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அக்கா ஓர் ஐந்து ரூபாய் வேண்டும்."

முகத்தை மறைத்தாற்போல் தூக்கிப் பிடித்து வாசித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே தணித்துக் கொண்டு எதிரே பார்த்தாள் பூரணி. தம்பி திருநாவுக்கரசு தலையைச் சொறிந்துகொண்டு நின்றான்.

"இப்போது எதற்கடா பணம்? போன வாரம் தானே சம்பளம் கட்டினாய்?"

"சம்பளத்துக்காக இல்லையக்கா. பரீட்சை நெருங்குகிறது! கொஞ்சம் நோட்டுப் புத்தகங்களும் ஒரு புதுப் பேனாவும் வாங்க வேண்டும். இப்போதிருக்கிற பேனா எழுதும்போது மை கசிகிறது..."

பூரணி தம்பியின் முகத்தை நன்றாகப் பார்த்தாள். எதையோ மறைத்து எதற்கோ தயங்கித் தயங்கிப் பேசினான் திருநாவுக்கரசு.

"ஏண்டா சட்டை இவ்வளவு அழுக்காக இருக்கிறது? குளித்தாயோ இல்லையோ? தலைவாரிக் கொள்ளாமல் இப்படிக் காடு மாதிரி ஆக்கிக் கொண்டுதான் பள்ளிக்கூடம் போக வேண்டுமா? என்ன தான் படிப்பு அதிகமாக இருக்கட்டுமே? அதற்காக இப்படியா இருப்பாய்? காலையில் ஒன்பது மணிக்கு முன்னாலேயே பறந்து கொண்டு ஓடுகிறாய். மாலையில் நெடுநேரம் கழித்துத் திரும்புகிறாய். நீ எங்கே போகிறாய், எப்போது திரும்புகிறாய் ஒன்றுமே தெரியவில்லை. வீட்டில் புத்தகத்தையே தொடுவதில்லை. எங்கேதான் படிக்கிறாயோ, என்னதான் செய்கிறாயோ?"

தம்பி தலையைக் குனிந்தான்! கை சட்டைப் பித்தானில் விளையாடியது. கால் தரையைத் தேய்த்தது.

"அலமாரியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு போ. சாயங்காலம் புதுப் பேனாவையும், நோட்டுப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க வேண்டும். வரவர உன் போக்கு எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. வயது ஆகிறதே ஒழியக் குடும்பப் பொறுப்புத் தெரியவில்லை உனக்கு" என்று தம்பியிடம் கண்டித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி. சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டாயிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள வயது ஆண்பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எண்ணெய் வழுக்குகிற கையில் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கல் தரையில் நடந்து போகிற மாதிரிப் பருவம் இது. இந்த வயதில் நல்ல பழக்கங்கள் கீழே விழுந்து சிதறிவிட்டால் பின்பு ஒன்று திரட்டி உருவாக்குவது கடினம். இதனால்தான் பூரணி தம்பி திருநாவுக்கரசைப் பற்றிக் கவலைகொள்ளத் தொடங்கியிருந்தாள். பள்ளிக்கூடத்தில் திருநாவுக்கரசு எப்படி நடந்து கொள்கிறான் என்று சிறிய தம்பி சம்பந்தன் மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தாள் பூரணி. "அண்ணனுக்கு விடலைப் பிள்ளைகளோடு பழக்கம் அதிகரித்திருக்கிறது அக்கா. வகுப்புகளுக்கு வராமல் ஏமாற்றிவிட்டு எங்கெங்கோ போய்விடுகிறான். ஆசிரியர்களுக்கு அடங்குவதில்லை. நான் ஏதாவது கேட்டால், 'அக்காவிடம் சொன்னாயோ, உன் முதுகுத் தோலை உரித்து விடுவேன்' என்று என்னைப் பயமுறுத்துகிறான், அக்கா" என்று சம்பந்தன் அவளுக்குச் சொல்லியிருந்தான். இருக்கிற கவலைகள் போதாதென்று இப்போது தம்பியைப் பற்றிய இந்தப் புதுக் கவலையும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தது.

அவளுக்குச் செய்தித்தாளைப் படிப்பதில் மனம் இலயிக்கவில்லை. திருநாவுக்கரசு பணம் எடுத்துக்கொண்டு போன பின் அலமாரியில் போய்த் தொகையை எண்ணிப் பார்த்தாள். ஐந்து ரூபாய்க்குப் பதில் பத்து ரூபாய் குறைந்தது. அவள் திகைத்தாள். 'இந்தப் பிள்ளையை இனிமேலும் இப்படியே விட்டுக் கொண்டிருக்க முடியாது. அடித்துத் திருத்த வேண்டிய காலம் வந்து விட்டது' என்று கடுமையான சினத்தோடு மனத்தில் எண்ணிக்கொண்டு அலமாரிக் கதவைச் சாத்தியபோது "உள்ளே வரலாமா?" என்று அவளுக்குப் பழக்கப்பட்ட அழகிய குரல் வாயிலில் கேட்டது. நெஞ்சில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த தாகமெல்லாம் தணியப் பூரணி திரும்பிப் பார்த்தாள்.

அரவிந்தன் மட்டும் தனியாக வந்திருந்தால் பூரணிக்கு அப்போதிருந்த துடிப்பில் அவனருகில் போய் கதறியிருப்பாள். அன்று கோயிலில் அவனிடம் அப்படி நடந்துகொண்டதற்கான காரணங்களையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டிருப்பாள். ஆனால் அரவிந்தன் அப்போது தனியாக வரவில்லை. அன்று கோயிலில் உடன் கண்ட அந்த முரட்டு ஆளும் அரவிந்தனோடு வந்திருந்ததால் 'வாருங்கள்' என்பதற்கு மேல் அதிகமாக எதையும் கூறித் தன் ஆர்வத்தைக் காட்டிக் கொள்ள முடியவில்லை பூரணிக்கு. பிரயாண அலைச்சல்களின் காரணமாக அரவிந்தனின் எழில் முகத்தில் சிறிது கருமை நிழலிட்டிருந்தது. அவனுடைய நீண்ட நாசியின் நுனியில் சிறிதாக அழகாக ஒரு பரு அரும்பியிருந்தது. தாமரை இதழ் முடிகிற இடத்தில் முக்கோணமாக வடித்துக் கத்தி நுனிபோல் கூராக இருக்குமே, அதுபோல் அவன் நாசிக்கு எடுப்பாயிருந்தது அந்த அழகுப் பரு. அருகில் வந்து அன்போடு அவளை விசாரித்தான் அரவிந்தன்.

"உனக்கு உடம்பு எப்படியிருக்கிறது இப்போது? நான் ஊருக்குப் போவதற்கு முதல்நாள் உன்னைக் கோயிலில் பார்த்தேன். உன்னிடம் சொல்லிக் கொள்ளலாமென்று நினைத்துத்தான் உன்னைக் கூப்பிட்டேன். உனக்குக் காதில் விழவில்லை போலிருக்கிறது. நீ திரும்பிப் பாராமல் போய்விட்டாய்..." என்று ஒரு பிணக்குமில்லாமல் அரவிந்தன் இயல்பான மலர்ச்சியோடு, இயல்பான புன்னகையோடு பேசத்தொடங்கியபோது பூரணி திகைத்தாள். தன்னைப் பற்றி அரவிந்தன் மனத்தில் அன்றைய நிகழ்ச்சி எத்தனை வெறுப்பை உண்டாக்கியிருக்கும் என்று அவள் கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்தாளோ, அதற்கு நேர்மாறாக இருந்தது அவன் இப்போது நடந்துகொள்கிற முறை.

'உங்கள் மனதுக்கு எதையும் நன்றாகப் புரிந்து கொள்ளவே தெரியாதா, அரவிந்தன்? பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்படும் போதுதான் நீங்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வீர்கள் என்று எண்ணியிருந்தேன்! அன்பு செலுத்துவதில் கூட நீங்கள் குழந்தைதான் போலும்' என்று நினைத்த போது அவள் உள்ளத்தில் அவன் முன்பிருந்ததைக் காட்டிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டான். 'காது கேட்காமல் போகவில்லை. வேண்டுமென்றே உங்களை ஏமாற்றிவிட்டுத்தான் போனேன்' என்று சொல்லிவிட நாக்கு துடித்தது. உடனிருந்த மனிதருக்காக அதை அடக்கிக் கொண்டாள் அவள். அரவிந்தன் கையோடு கொண்டு வந்திருந்த பழக்கூடையைப் பிரித்து அவளுக்கு முன் வைத்தான்.

"இதெல்லாம் எதற்கு?" என்று உபசாரமாகச் சிரித்துக் கொண்டே கேட்டாள் பூரணி. அன்பு கனிய அவன் கூறலானான்:

"இன்றைக்குக் காலையில்தான் சென்னையிலிருந்து வந்தேன், பூரணி! அச்சகத்துக்குள் நுழைந்ததும், பெரியவர் உன்னைப் பற்றிச் சொன்னார். இப்போது எப்படி இருக்கிறது? உனக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டதும் நான் பதறிப் போய் விட்டேன். நேரே இங்குதான் வருகிறேன்."

"நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம் என்று வைத்தியர் கூறிவிட்டுப் போயிருக்கிறார். உங்களைப் பார்த்ததும் பேசித் தீர்த்துவிட வேண்டுமென்று மனத்தில் என்னென்னவோ சேர்த்து வைத்திருந்தேன். இப்போது ஒன்றுமே நினைவு வரமாட்டேன் என்கிறது. உடம்புக்கு ஒன்றுமில்லை... மனக்குழப்பங்களால் நானாக இழுத்து விட்டுக் கொண்டதுதான் எல்லாம்..."

இவ்வாறு அவள் கூறிக்கொண்டு வந்தபோதே அரவிந்தன் குறுக்கிட்டுப் பேசினான். "இவன் இருக்கிறானே என்பதற்காக நீ மனம்விட்டுப் பேசத் தயங்குகிறாய். இவன் அன்னியனில்லை. எனக்கு உயிர்த்தோழன். நாங்கள் இருவரும் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். 'ஆளைப் பார்த்தால் இப்படிக் காலிப்பயல் போல் முரட்டுத்தனமாக இருக்கிறானே' என்று நினைக்காதே. தங்கமான குணம். கொஞ்சம் வாயரட்டை, முருகானந்தம் என்று பெயர். நம்முடைய அச்சகம் இருக்கிறதே, அதே தெருவில் பெரிய தையல் கடை வைத்திருக்கிறான். தையல் தொழிலில் நிபுணன். அதற்காகப் பம்பாயில் போய் பயிற்சி பெற்றுச் சிறப்பான பட்டங்களெல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். இந்த ஊரிலுள்ள நவநாகரிக இளைஞர்களுக்கெல்லாம் இவனுடைய தையலில் ஒரே மோகம்..."

அரவிந்தன் பாதி வேடிக்கையாகவும், பாதி உண்மையாகவும் முருகானந்தத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அந்த அறிமுகத்தை ஏற்றுக் கொள்கிற பாவனையில் பூரணியை நோக்கிக் கைகூப்பினான் முருகானந்தம். அவளும் பதிலுக்குக் கை கூப்பினாள். முருகானந்தம் எப்படிப்பட்ட ஆள் என்பதை உடனே விளங்கிக் கொள்ளப் பூரணிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. "அக்கா! உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். நீங்கள் வருத்தப்படக் கூடாது. எனக்கு எதையும் மனத்தில் ஒளித்து வைத்துக் கொண்டுப் பழகத் தெரியாது. தோன்றுவதை பளிச்சென்று நேரில் கேட்டுவிடுவேன். அரவிந்தனுக்கு நன்றாகத் தெரியும் என்னைப் பற்றி. நான் மிகவும் வெள்ளை. அரவிந்தன் தான் எனக்குக் குரு, நண்பன், வழிகாட்டி எல்லாம். அவன் இல்லாவிட்டால் எப்படியெப்படியோ நான் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிருப்பேன் இதற்குள். அன்று நீங்கள் கோயிலில் அரவிந்தனைப் பார்க்காததுபோல் போனதற்குக் காரணத்தை நான் புரிந்து கொண்டேன். கழுத்தில் சுற்றிய கைக்குட்டையும், வாராமல் நெற்றியில் விழுந்து புரளும் கிராப்புத் தலையும், வெற்றிலைக் காவியேறிய வாயுமாக என்னை அரவிந்தனுக்கு அருகில் பார்த்ததும் அவனைப் பற்றியே சந்தேகம் உண்டாகி விட்டதில்லையா உங்களுக்கு; நான் அன்றைக்கு உங்களை நன்றாகப் பார்த்தேன் அக்கா. அரவிந்தனுடைய கையைப் பற்றி நின்ற என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நீங்கள் முகத்தைச் சுளித்ததையும் நான் கவனித்தேன். அரவிந்தன் கூப்பிட்டது காதில் விழாமலோ, கவனிக்காமலோ நீங்கள் எழுந்திருந்து போகவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்; வேண்டுமென்றேதான் நீங்கள் எழுந்திருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போனீர்கள். 'எவனோ ஒரு காலிப்பயலோடு அரவிந்தன் நிற்கினான்! அவனைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை' என்று தீர்மானித்துக் கொண்டுதான் நீங்கள் எழுந்து விரைந்தீர்கள் இல்லையா? இதை அரவிந்தனிடம் சொன்னேன். அவன் உங்கள் மேலுள்ள அளவற்ற அன்பினால் 'அப்படி ஒரு போதும் செய்திருக்க மாட்டீர்கள்' என்று மறுத்துவிட்டான். ஆனால் உண்மை இதுதான். எனக்குத் தெரியும்" என்று அக்கா முறை கொண்டாடி முருகானந்தம் அவளைக் கேட்டபோது தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. அவளுடைய தலை தானாகவே தாழ்ந்துகொண்டது.

"இந்த முரடன் ஏதாவது இப்படித்தான் உளறுவான்; நீ ஒன்றும் காதில் போட்டுக் கொள்ளாதே பூரணி" என்று அரவிந்தன் அப்போதும் சிரித்துக் கொண்டுதான் சொன்னான்.

"அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது." பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான். தலையணைக்கு அடியிலிருந்து அந்தப் பாழும் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவன் பொறுமையாக முழுவதும் படித்தான். "இந்தா! நீயும் படி" என்று முருகானந்தத்திடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பூரணிக்கு அதைத் தடுக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. முருகானந்தம் யாரோ வேற்று மனிதனாகத் தோன்றினால் தானே தடுப்பதற்கு? அவனைப் புரிந்து கொண்ட பின் அப்படி வேற்று மனிதனாக எண்ண மனம் ஒருப்படவில்லை அவளுக்கு.

"இந்தக் கடிதம் மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாளுக்கு வந்தது. என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அன்று எனக்கு ஏற்பட்ட வேதனைக்கு அளவே இல்லை. குழம்பிய மனத்தோடு நான் கோயிலில் உங்களைப் பார்த்தேன். பக்கத்தில் காரியதரிசி அம்மாளும் இருந்தாள். அந்தச் சமயத்தில் உங்களைப் பார்த்ததும் பேசாமல் இருந்தால் நல்லதென்று முட்டாள்தனமாக ஓர் எண்ணம் ஏற்பட்டது. அப்போதிருந்த ஆத்திரத்தில் அப்படியே செய்துவிட்டேன். அதற்காக உங்களிடமிருந்து மன்னிப்புக் கேட்கும் தகுதி எனக்கு உண்டோ இல்லையோ? நீங்கள் என்னை மன்னித்துதான் ஆகவேண்டும்."

இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். முருகானந்தம் கொதிப்போடு பூரணியை நோக்கிக் கூறினான், "அக்கா! அண்ணன் உங்களை மன்னித்துவிடலாம். ஆனால் உங்களையும் அண்ணனையும் பற்றி இப்படி ஒரு கடிதம் எழுதின கைகளை நான் மன்னிக்க முடியாது. அந்தக் கீழ்மை நிறைந்த விரல்களை என் கைகளாலேயே தேடிப்பிடித்து முருங்கைக் காயை முறிப்பது போல் முறித்தெறிய வேண்டும்."

"பொறு முருகானந்தம்! காலம் வரும். இந்த மொட்டைக் கடிதம் எழுதியதற்கே அந்தக் கைகளின் மேல் நீ இத்தனை ஆத்திரப் படுகிறாயே? அந்தக் கையால் இந்தக் கன்னத்தில் மூக்கு உடையும்படி அறை வாங்கியும் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் நான். ஆத்திரப்படுவதனால் மனிதர்களைத் திருத்த முடியாது. மாறாக அவர்களை இன்னும் கெட்டவர்களாக வளர்க்கத்தான் ஆத்திரம் பயன்படும்" என்று அரவிந்தன் கூறியதை முருகானந்தம் ஒப்புக் கொள்ளவேயில்லை. "நீ சும்மா இரு அரவிந்தா! கருணையால் வாழ முடிந்த காலமெல்லாம் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமல் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமற் போன தலைமுறையில் நாம் வாழ்கிறோம். இன்றைய வாழ்க்கையில் கருணை காட்டுகிறவர்கள் தோற்கிறார்கள். கன்னத்தில் அறைகிறவர்கள் வாழ்கிறார்கள். வயிற்றுப் பசிக்குக் கொடுத்தவர்கள் வருந்துகிறார்கள். வயிற்றில் அடிப்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். மருந்துக் கடைகளில் ஒவ்வொரு மருந்துப் புட்டிக்கும் அது பயன்படுகிற காலத்தின் எல்லை குறித்திருப்பார்கள். இந்தக் கால எல்லை கழிந்த பின் கடைக்காரர் அதை விற்க முடியாதவாறு அரசினால் அனுப்பப்பெறும் ஆய்வாளர் வந்து கண்காணித்து வெளியில் தூக்கி எறிந்தோ, அப்புறப்படுத்தியோ அழித்தல் உண்டு. இதைப் போல் அறம், நியாயம், கருணை என்கிற மாபெரும் மருந்துகள் நம்முடைய சமுதாய வாழ்வுக்குப் பயன்படுகிற காலம் அழிந்துவிட்டதோ என்று சந்தேகமாயிருக்கிறது. இல்லாவிட்டால், இப்படியெல்லாம் நடக்குமா?" என்று குமுறலோடு பேசினான் முருகானந்தம்.

"பூரணி! முருகானந்தம் எப்போதுமே இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு விடுவான். நிதானத்துக்கும் இவனுக்கும் வெகுதூரம்" என்றான் அரவிந்தன்.

"உணர்ச்சிவசப்பட்டாலும் நன்றாகப் பேசுகிறாரே! உங்களுடைய சாயல் இவர் பேச்சில் இருக்கிறதே. இந்த மாதிரிக் கொதிப்பும், குமுறலும் ஆயிரம் இளைஞர்களுக்கு இருந்தால் தமிழ்நாடு என்றோ சீர்திருந்தியிருக்குமே?" என்று பூரணி முருகானந்தத்தை வியப்புடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டே அரவிந்தனுக்குப் பதில் சொன்னாள்.

"எல்லாம் அண்ணன் இட்ட பிச்சை அக்கா. அரவிந்தனின் பழக்கமில்லாவிட்டால் வெறும் தையற்காரனாய் மட்டும் இருந்திருப்பேன். இந்தத் தையற்கடையையும் நடத்திக் கொண்டு இரண்டு மூன்று தொழிற்சங்கங்களுக்கும் தலைவனாக இருக்கிறேன் என்றால் எல்லாம் அண்ணன் கொடுத்த அறிவு" என்று முருகானந்தம் பூரணியிடம் கூறினான். அரவிந்தன் சிரித்தவாறே அதை மறுத்துச் சொல்லலானான்.

"அப்படிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளாதே தம்பீ! உன் வாயிலிருந்து தப்புத் தப்பாக வெளிப்படுகிற கருத்துக்களுக்கும் நான் தான் ஆசிரியனோ என்று பூரணி சந்தேகப்படப்போகிறாள்."

பூரணி இதைக் கேட்டு கலகலவென நகைத்தாள். அரவிந்தனிடம் அமைதியான அறிவையும், பண்பு நிறைந்த கவிதை நயங்களையும் கண்டிருந்த அவள், முருகானந்தத்திடம் கொதிக்கும் உள்ளத்தைக் கண்டாள். குமுறும் உணர்ச்சிகளைக் கண்டாள். அவற்றோடு தீமைகளைச் சாடி நொறுக்கிவிடத் துடிக்கும் கைகளையும் முருகானந்தத்திடம் அவள் பார்த்தாள். அரவிந்தன் இயற்கை அழகு நிறைந்த பசுமையான மலைச்சிகரம் போல் அவளைக் கவர்ந்தான் என்றால், முருகானந்தம் எரிமலை போல் தோன்றினான். அரவிந்தனின் இலட்சியங்களுக்கு நடுவே அன்பு மையமாயிருந்தது. முருகானந்தத்தின் இலட்சியங்களுக்கு நடுவே வெறி மையமாக இருந்தது.

காலைவரையும் படுக்கையில் நோயுற்றுக் கிடந்தவளுக்கு எங்கிருந்துதான் அந்த உற்சாகம் வந்ததோ? இருவருக்கும் தானே தேநீர் தயாரித்துக் கொடுத்தாள் பூரணி.

"நீ ஏன் இந்தக் காய்ச்சல் உடம்போடு சிரமப்படுகிறாய்? தேநீர் வேண்டாம்..." என்று அரவிந்தன் தடுத்தும் அவள் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் புறப்படும்போது பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. "வருகிறேன் அக்கா" என்று ஆயிரங்காலம் பழகிவிட்டாற்போன்ற உரிமையோடு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான் முருகானந்தம்.

அன்று மாலை மூன்று மணி சுமாருக்கு ஓதுவார்க்கிழவர் வந்து சொல்லிவிட்டுப் போன செய்தி தம்பி திருநாவுக்கரசைப் பற்றி அவளுக்குப் புரிய வைத்தது.

"என்னம்மா இந்தப் பயலை இப்படிக் கழிச்சடையாக விட்டுவிட்டாய்? சரவணப் பொய்கைப் பக்கமாகப் போயிருந்தேன். டூரிங் சினிமா வாசலில் அந்தப் பாழ் மண்டபத்தில் இரண்டு மூன்று விடலைப் பிள்ளைகளோடு காசு போட்டு மூன்று சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் உன் தம்பி! வாயில் பீடி வேறு. என்னைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறான். கண்டிக்கக் கூடாதா நீ? இப்படி தறுதலையாய்த் தலையெடுக்கிறதே இந்த வயசில். பள்ளிக்கூடமே போவதில்லை போலிருக்கிறது. கெட்ட பழக்கம், நல்ல சேர்க்கையில்லை. கண்ணால் பார்த்து விட்டேன். உன்னிடம் சொல்லாமல் போக மனமில்லை" என்று கூறிவிட்டுப் போனார் ஓதுவார்க் கிழவர். அவள் உள்ளம் துடித்தது. தவித்து வருந்தினாள். 'இறைவா! என் வாழ்வில் மனநிறைவே இல்லையா? சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் ஒன்றில் நிறைவு கண்டால், இன்னொன்றில் துன்பங்களை அள்ளிக் கொட்டுகிறாயே! நான் பெண், தனியாள், ஒருத்தியாக என்ன செய்வேன்? எதைச் சமாளிப்பேன் என்று நெஞ்சு நெகிழ்ந்தாள்.

ஐந்து மணிக்கு மங்கையர்க்கரசியும் ஐந்தரை மணிக்கு சிறிய தம்பி சம்பந்தனும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார்கள். 'அண்ணன் பள்ளிக்கூடத்துக்கே வரவில்லை' என்று தலைமையாசிரியர் புகார் செய்ததாகச் சம்பந்தன் அக்காவிடம் சொன்னான். ஓதுவார்க் கிழவர் சொன்ன இடத்தை அடையாளம் சொல்லி சம்பந்தனை அங்கே போய்ப் பார்த்து வருமாறு துரத்தினாள் பூரணி. அவன் போய்ப் பார்த்துவிட்டு "அண்ணனை அங்கே காணவில்லை" என்று சொன்னான். திருநாவுக்கரசை எதிர்பார்த்து இரவு பதினோரு மணிவரை வீட்டு வாயிற்படியில் காத்திருந்தாள் பூரணி. அவன் வரவே இல்லை. 'எங்கே போய்த் தேடுவது? எப்படித் தேடுவது?' என்று அவள் கலங்கிக் கொண்டிருந்தபோது, மங்களேஸ்வரி அம்மாளின் கார் வந்து நின்றது. அந்த நள்ளிரவில் வெளிறிப் பயந்து போன முகத்தோடு காரிலிருந்து இறங்கிய அந்த அம்மாளைப் பார்த்தபோது, பூரணிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைப்பாக இருந்தது, பயமாகவும் இருந்தது.

"பூரணி! இந்தப் பெண் வசந்தா தலையில் கல்லைப் போட்டுவிட்டுப் போய்விட்டாளடி! காலையில் கல்லூரிக்குப் போனவள் வரவே இல்லை. கல்லூரிக்கும் வரவில்லையாம். நிறையப் பணம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறாள். எங்கே போனாளென்று தெரியவில்லை. நான் ஒருத்தி எங்கேயென்று தேடுவேன்? வெளியில் சொன்னால் வெட்கக் கேடு" என்று அழுகிறாற் போன்ற குரலில் கூறினாள் அந்த அம்மாள்.

 

13

 

பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்

காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகி

நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ?

                                                                                                                        -- குண்டலகேசி

 

வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில் கடிகாரத்தையும் மனதில் ஆசைகளையும் கட்டிக்கொண்டு எதற்கோ, எங்கோ விரைவாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் கூட்டம் பெருகியும், தனித்தும், பொங்கியும், புடைபரந்தும், வற்றாமல், வாடாமல் உயிர்வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிற துடிப்பு, சந்தித்து விசாரித்துக் கொள்ளும் குரல்கள், பிரிந்து விடைபெறும் குரல்கள், கடைகளின் வியாபாரம், பேரம் பேசுதல், கார்கள், ரிக்ஷா, குதிரை வண்டிகள் ஓடும் ஒலிகள் - வாழ்க்கையை அஞ்சல் செய்து ஒலி பரப்புவது போல் ஒரு தொனி, இந்த வீதியில் கண்ணை மூடிக் கொண்டு நிற்பவர்களுக்குக் கூடக் கேட்கும்.

அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. இந்தக் கலகலப்பான வீதியில் இரு சிறகிலும் பொய்கள் பூத்து மின்னுவதுபோல் விளக்குகள் தோன்றின. மனத்தில் சிந்தனை முறுக்கேறி நிற்கிற சில சமயங்களில் அரவிந்தன் அச்சகத்து வாசலில் நின்று ஒருவிதமான நோக்கமுமின்றிக் கவின்கண்களால் இந்தக் காட்சிகளைப் பருகிக் கொண்டிருப்பது வழக்கம். அன்று அவனால் நெடுநேரம் அப்படி நின்று வீதியின் அழகை அனுபவித்து நோக்க முடியவில்லை. உள்ளே அவன் செய்ய வேண்டிய வேலைகள் நிறையக் கிடந்தன. அன்று காலையில் தான் அவன் வெளியூரிலிருந்து வந்திருந்தான். ஏறக்குறைய நண்பகல் வரை திருப்பரங்குன்றம் சென்று பூரணியைப் பார்த்துவிட்டுத் திரும்புவதில் நேரம் கழிந்துவிட்டது. பின்பு மாலையில் அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரத்தோடு வரவு செலவுக் கணக்கு, புதிய அச்சு இயந்திரங்கள், இவைபற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டான். திருத்த வேண்டிய அச்சுப் பிரதிகள் குவிந்திருந்தன. உடனிருந்து அச்சுப் பிரதிகளை ஒப்புநோக்கிப் படிப்பதற்கும் உதவுவதற்கும் முருகானந்தத்தை வரச் சொல்லியிருந்தான் அவன். இரவு ஒன்பது மணிக்கு மேல் முருகானந்தத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் விழித்திருந்து வேலைகளை முடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த அரவிந்தன் முருகானந்தத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

முருகானந்தம் தையல் கடையைப் பூட்டிவிட்டுச் சாவிக் கொத்தை விரலில் கோத்துச் சுழற்றிக் கொண்டே வந்து சேர்ந்த போது மணி ஒன்பதே முக்கால்.

"இங்கே வேலை முடிய அதிக நேரம் ஆகும். நீ சாப்பிட்டாயிற்றா முருகானந்தம்?" என்று கேட்டான் அரவிந்தன்.

"அதெல்லாம் வரும்போது ஓட்டலில் முடித்துக் கொண்டு தான் வந்தேன். உன்னை நம்பி இங்கே வந்தால் நீ நாலு நிலக்கடலைப் பருப்பையும் பாதி வாழைப் பழத்தையும் கொடுத்துப் பட்டினி போடுவாய். முன்னெச்சரிக்கையாக நானே சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்துவிட்டேன். படுக்கை இங்கே தான். வீட்டுக்குச் சொல்லியனுப்பியாயிற்று" என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினான் முருகானந்தம். அவனுடைய வீடு பொன்னகரத்தின் நெருக்கமான சந்து ஒன்றில் இருந்தது. முருகானந்தத்தின் குடும்பத்தில் அத்தனை பேரும் உழைப்பாளிகள். தாயார், தகப்பனார், சகோதரி மூவருக்கும் மில்லில் வேலை. அவன் தான் அந்த வழியிலிருந்து சிறிது விலகித் தையில கடை வைத்திருந்தான். உள்ளங்கை அகலத்துக்கு ஓர் இடத்தில் ஒரே தையல் இயந்திரத்தோடு அந்தக் கடையைத் தொடங்கினான் அவன். தொடக்கத்தில் அளவு எடுப்பதிலிருந்து பித்தான்களுக்குத் துளை போடுவதுவரை எல்லா வேலைகளையும் ஒரே ஆளாக இருந்துகொண்டு செய்தவன், திறமையாலும் சுறுசுறுப்பாலும் படிப்படியாக வளர்ந்து இன்று தன்னோடு இரண்டு தையற்காரர்களை உடன் வைத்துக் கொண்டு வேலை வாங்குகிற அளவு முன்னேறியிருந்தான். ஒவ்வோர் ஊரிலும் குறிப்பிட்ட தொழிலில் பலர் இருந்தாலும் சிலருக்குத்தான் அந்தத் தொழிலில் பெரும் புகழும் வந்து பொருந்தும். மதுரையில் அத்தகைய பேரும் புகழும் பொருந்திய சில தையற்காரர்களில் முருகானந்தம் முதன்மை பெற்றிருந்தான்.

அரவிந்தனின் நட்பும், பழக்கமும் முருகானந்தத்திற்குத் தமிழ்ப் பற்றும் அறிவு உணர்ச்சியும் அளித்திருந்தன. ஆவேசம் நிறைந்த மேடைப் பேச்சாளனாகவும் அவன் உருவாகியிருந்தான். பொன்னகரம், பிட்டுத்தோப்பு, ஆரப்பாளையும், மணிநகரம் ஆகிய பகுதிகள் மதுரை நகரத்தின் உழைக்கும் மக்கள் பெரும்பாலோர் வசிக்கும் இடம். கைகளில் உழைப்பும், மனத்திலும் வீட்டிலும் ஏழ்மையுமாக வாழும் அந்தத் தொழில் உலகத்தில் முருகானந்தம் ஒரு பிரமுகர் போல் மதிப்புப் பெற்றிருந்தான். இத்தனை சிறு வயதில் அவ்வளவு பெருமை வருவதற்குக் காரணம் அவன் மற்றவர்களோடு பழகுகிற எளிய முறைதான். கூசாமல் எங்கே துன்பத்தைக் கண்டாலும் புகுந்து உதவுகிற மனம், எந்த இடத்திலும் யாருக்கு அநியாயம் இழைக்கப்பட்டாலும் தனக்கே இழைக்கப்பட்டது போல் உணர்ந்து குமுறிக் கொதிக்கிற பண்பு, சுற்றித் திரிந்து பல இடங்களில் அலைந்து பலரோடு பழகும் இயல்பு, இவற்றால் முருகானந்தம் உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியில் அப்படி ஒரு செல்வாக்கைப் பெற்றிருந்தான். வெளியில் இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்த அவன் அரவிந்தனிடம் பழகிய விதமே தனிப்பட்டது. கருத்துக்களையும் இலட்சியங்களையும் கற்கும்போது ஆசிரியனுக்கு முன் பணிவான மாணவனைப் போல் அவன் பழகினான். நண்பனாகப் பழகும்போது தோளில் கைபோட்டுக் கொண்டு உரிமையோடு பழகினான். உதவி செய்ய வருகிறபோது வேலைக்காரனைப் போல் கூப்பிட்டவுடன் வந்து உதவினான். ஆனால் அரவிந்தனுக்கும் முருகானந்தத்துக்கும் உள்ள வேறுபாடு இலட்சியங்களைச் செயல்படுத்துகிற விதத்தில் இருந்தது. ஒழுங்கையும் மனத் திடத்தையும் கொண்டு இலட்சியங்களை நிறைவேற்ற ஆசைப்பட்டான் அரவிந்தன். முரட்டுத்தனத்தையும் உடல் வன்மையையும் கொண்டு இலட்சியங்களை உருவாக்க ஆசைப்பட்டான் முருகானந்தம். அதற்கேற்ற உடல்கட்டும் அவனுக்கு இருந்தது.

அரவிந்தனுக்கு அச்சுப் பிரதிகள் படித்துத் திருத்துவதற்கு உதவும் நாட்களில் இரவில் நீண்ட நேரம் வரை கண்விழிக்க வேண்டியிருக்குமாகையால் முருகானந்தம் அவனோடு அச்சகத்திலேயே படுத்துக் கொண்டுவிடுவான். வேலை முடிந்து படுத்துக் கொண்ட பிறகும் படுக்கையில் கிடந்தவாறே பல செய்திகளைப் பற்றிப் பேசிவிட்டுக் கண்கள் சோர்ந்த பின்பே அவர்கள் உறங்குவார்கள். அன்றைக்கோ அவர்கள் உள்ளே போய் உட்கார்ந்து வேலையைத் தொடங்கும்போதே ஏறக்குறைய இரவு பத்துமணி ஆகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போகிற கூட்டமும், முதல் ஆட்டம் விட்டு வருகிற கூட்டமுமாக வீதி பொலிவிழக்காமலிருந்தது.

"நீ கொஞ்சம் விரைவாகவே வந்துவிடுவாய் என்று எதிர்பார்த்தேன். நேரமாக்கிவிட்டாய் முருகானந்தம்... இந்தா, இதை நீ வைத்துக்கொண்டுப் படி. நான் சரி பார்க்கிறேன். முடிந்த வரை பார்த்துவிட்டுப் படுக்கலாம்" என்று சொல்லிவிட்டுக் கையெழுத்துப் பிரதிகளாகிய மூலத்தாள்களை முருகானந்தத்திடம் கொடுத்தான் அரவிந்தன்.

அவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு "தையல் கடையில் இன்றைக்கு ஒரு வம்பு வந்து சேர்ந்தது. துணியைத் தைத்துக் கொண்டு கடன் சொல்லுகிறவர்களையும் பேரம் பண்ணுகிறவர்களையும் அதிகம் பார்த்திருக்கிறேன். காலையில் ஒரு வெளியூர் மனிதன் தைத்த துணியை வாங்கிக் கொண்டு போகிற போது மணிபர்ஸை மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். வாங்கிக் கொண்டு போக வருவானோ என்று நானாகவே சிறிது அதிக நேரம் காத்திருந்தேன். வழக்கமாக வருகிற மனிதனுமில்லை அவன். ஆனால் எனக்குக் கடையின் நாணயமோ, பேரோ கெட்டுவிடக் கூடாதென்று பயம். அதுதான் காத்துப் பார்த்தேன். ஆள் வரக்காணோம். பையைத் திறந்து பார்த்தால் ஏதோ கடிதம், புகைப்படங்கள். இரண்டு மூன்று நூறு ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் இருக்கின்றன. அதற்காகவே வழக்கமாகக் கடைப் பூட்டுகிற நேரத்துக்கு மேலும் திறந்து வைத்துக் கொண்டு இருந்தேன். இல்லாவிட்டால் ஒன்பது மணிக்கே இங்கு வந்திருப்பேன்" என்று தாமதத்துக்குக் காரணம் சொன்னான் முருகானந்தம்.

"சரி... சரி... நீ படிக்க ஆரம்பிக்கலாம். இன்னும் ஏதாவது கதையளந்து நேரத்தை வீணாக்காதே" என்று அரவிந்தன் துரிதப்படுத்தவே முருகானந்தம் பேச்சை நிறுத்திவிட்டுப் படிக்கத் தொடங்கினான். பூரணியின் தந்தை பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் எழுதிய 'தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை நெறி' என்னும் புத்தகத்துக்கான அச்சுப்பிரதிகள் அவை. முதல் திருத்தத்துக்கான காலி புரூஃப்கள்.

"கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம். தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுக் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கியிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்." சரி செய்து தொல்காப்பியர் கால் இல்லாமல் நின்று திண்டாடிக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் கால் போட்டுத் திருத்தினான் அரவிந்தன். முருகானந்தத்துக்கு இதைக்கேட்டுச் சிரிப்புப் பொங்கியது. "காலி புரூஃபில் மட்டும் இவ்வளவு அதிகமாகப் பிழைகள் இருக்கின்றனவே? இதற்கு என்ன காரணம்?" என்று அரவிந்தனைக் கேட்டான் முருகானந்தம்.

"இந்தக் காலி புரூஃப் படிக்கும்போதெல்லாம் நான் நம்முடைய தமிழ்நாட்டுச் சமூக வாழ்வை நினைத்துக் கொள்வேன் முருகானந்தம். காலியில் திருத்தவேண்டிய பிழைகள் அதிகமாயிருக்கும். நம்முடைய சமுதாய வாழ்விலும் இன்றைக்குத் திருத்தம் பெறவேண்டிய தவறுகள் மிகுதி..." என்று முருகானந்தத்தின் கேள்விக்கு ஆழமான ஒப்பு நோக்கோடு மறுமொழி சொன்னான் அரவிந்தன்.

"உண்மை! ஆனால் இதைப் பேனாவினால் திருத்தமுடியாது அரவிந்தன். ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று பாரதி பாடினானே அப்படியொரு யுகப்புரட்சி ஏற்பட்டால் தான் விடியும். இன்றைக்குள்ள நம்முடைய சமுதாய வாழ்வில் எந்த அறநூல் மருத்துவராலும் இன்னதென்று கண்டுபிடித்துக் கூறமுடியாத எல்லா நோய்களிலும் சிறிது சிறிதாக இணைந்த ஏதோ ஒரு பெரிய நோய் இருக்கிறது. தீய வழியால் ஆக்கப் பெறுவோரைக் கண்டும் அவர்கள் மேலும் மேலும் வளர்ச்சி பெறுதலைக் கண்டும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் உணர்ச்சி மரத்துப் போயிருக்கிறார்கள். சூடு சொரணையற்றுப் போயிருக்கிறார்கள்..." என்று முருகானந்தம் சொற்பொழிவில் இறஙகிவிட்டபோது, அரவிந்தன் குறுக்கிட்டு வேலையை நினைவு படுத்தினான்.

 

"தம்பி! இந்தக் கனல் கக்கும் கருத்துக்களை எல்லாம் இங்கேயே சொல்லித் தீர்த்துவிடாதே. பொன்னகரத்து மேடைகளிலும், பிட்டுத்தோப்புப் பொதுக்கூட்டங்களிலும் பேசுவதற்கு மீதம் வைத்துக் கொள். இங்கே வேலை நடக்க வேண்டும். நேற்று இரவெல்லாம் இரயிலில் பயணம் செய்து வந்த அலுப்பு என்னால் தாங்க முடியவில்லை. பன்னிரண்டு மணிக்காவது நான் படுத்தாக வேண்டும்."

முருகானந்தம் அடங்கினான், வேலை தொடர்ந்தது. வாயிற்புரம் யாரோ ஒரு பையன் வந்து தயங்கி நிற்பதை முருகானந்தம் பார்த்துவிட்டான்.

"வாசலில் யாரோ பையன் வந்து நிற்கிற மாதிரி இருக்கிறது. இங்கே அச்சகத்தில் வேலைப் பார்க்கிற பையன் எவனையாவது வரச் சொல்லியிருந்தாயா நீ?" என்று முருகானந்தம், அரவிந்தனைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே, 'சார்' என்று குரல் கொடுத்தான் வெளியில் நின்ற பையன்.

"நான் யாரையும் வரச் சொல்லவில்லையே? ஒருவேளை தந்திப் பியூனோ என்னவோ? போய்ப்பார்" என்று அரவிந்தனிடமிருந்து பதில் வந்தது.

முருகானந்தம் வெளியே எழுந்துபோய் நின்று கொண்டிருந்த பையனை விசாரித்துக் கொண்டு வந்தான். "பையன் உன்னைப் பார்க்க வந்ததாகத்தான் கூறுகிறான். நீ போய் என்னவென்று கேள் அரவிந்தா."

அரவிந்தன் எழுந்து போய் பார்த்தான். பூரணியின் தம்பி திருநாவுக்கரசு அழுக்குச் சட்டையும் வாரப்படாத தலையுமாக நின்றுகொண்டிருந்தான்.

"என்னடா இந்த நேரத்தில் வந்தாய்?"

"ஒன்றுமில்லை, அக்கா உங்களிடமிருந்து ஒரு அஞ்சு ரூபாய் வாங்கிக்கொண்டு வரச்சொன்னாங்க... அவசரம்..." பையன் வார்த்தைகளைத் தட்டுத்தடுமாறிச் சொன்னான். அவன் விழித்துப் பார்த்த கண்களில் - பார்வையில் ஏதோ பொய்மை மருட்சியைக் கண்டான் அரவிந்தன்.

"ஏண்டா ஐந்து ரூபாய்க்காக இராத்திரிப் பத்து மணிக்குமேல் உன்னை இங்கே துரத்தினாளா உன் அக்கா. நான் காலையில் அங்கே வந்து அக்காவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேனே. அப்போது அக்கா என்னிடம் பணம் வேண்டுமென்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கையிலிருந்ததைக் கொடுத்துவிட்டு வந்திருப்பேனே."

பையன் மேலும் விழித்தான். அவன் நின்ற நிலை, கேட்ட விதம், உருட்டி உருட்டிக் கண்களை விழித்த மாதிரி எல்லாம் அரவிந்தனுக்குச் சந்தேகத்தை உண்டாக்கின. ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் சட்டைப் பையிலிருந்து ஒரு முழு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

"இந்தா இதைக்கொண்டு போ. காலையில் நான் அக்காவைப் பார்க்க வருவேன்."

 

பதில் ஒன்றும் சொல்லாமல் நோட்டை வாங்கிக் கொண்டு நழுவினான் திருநாவுக்கரசு. சிறிது நேரம் அவன் போவதைப் பார்த்துக் கொண்டு வாசலிலேயே நின்ற அரவிந்தன், "முருகானந்தம் கொஞ்சம் இங்கே வா..." என்றான். உள்ளிருந்து முருகானந்தம் வந்தான்.

"வேலை இருக்கட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நான் சொல்லுகிறபடி ஒரு காரியம் செய். இந்தப் பையனைப் பின் தொடர்ந்து போய்க் கண்காணித்துக் கொண்டு வா."

"யார் இந்தப் பையன்?"

"அதைப்பற்றி இப்போதென்ன? சொல்கிறேன். முதலில் நீ புறப்படு."

முருகானந்தம் புறப்பட்டான். அவனை அனுப்பிவிட்டு உள்ளே திரும்பி தானாகவே அச்சுப் பிரதிகளைத் திருத்தத் தொடங்கினான் அரவிந்தன். பூரணியின் தம்பியைப் பற்றிய சந்தேகத்தினால் கலவரமுற்றிருந்த அவன் மனம் அழகியசிற்றம்பலம் தத்துவச் செறிவோடு ஆராய்ந்து எழுதியிருந்த கருத்துக்கள் சில்வற்றை அச்சுப்பிரதியில் கண்டு அவற்றில் இலயித்தது. பண்பாடுமிக்க அவ்வுயரிய கருத்துக்களில் அவன் மூழ்கிவிட்டான் என்றே சொல்லலாம். "வாழ்க்கையில் இறுதி நாள் ஒன்றைத்தான் சாவு என்று உலக வழக்குப்படி கூறுகிறோம். ஆனால் மனித ஆயுளின் நிறைவான காலத்துக்குள் ஒவ்வொரு பருவத்தின் முடிவும் ஒரு சாவு. ஒவ்வொரு பருவத்தின் ஆரம்பமும் ஒரு புதுப்பிறவி. குழந்தைப் பருவம் அழிந்தால் பிள்ளைப் பருவம் பிறக்கிறது. பிள்ளைப் பருவம் அழிந்தால், வாலிபப் பருவம் பிறக்கிறது. வாலிபப் பருவம் இறந்தால் முதுமை பிறக்கிறது. இப்படி ஒரு பருவம் அழிந்து அடுத்த பருவம் பிறக்கும் காலம் மனிதனுடைய பழக்கங்களும் அனுபவங்களும் மாறுகிற காலம். இந்த மாற்றத்தினால் அழிவது மரணம். புதிதாகச் சேர்வது பிறவி. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்து அழித்தவை மரணம்தான். ஆனால் அதற்காக நாம் அழுவதில்லை. அது நமக்குப் புரியாத தத்துவம்" என்று எழுதி குண்டலகேசியிலிருந்து ஒரு செய்யுள் எடுத்து உதாரணம் காட்டியிருந்தார் பேராசிரியர். உடனே அந்தச் செய்யுளையும் அந்த வாக்கியங்களையும் தனது டைரியில் குறித்துக் கொண்டு விட வேண்டுமென்ற ஆர்வம் அரவிந்தனுக்கு உண்டாயிற்று. பேராசிரியர் அழகிய சிறம்பலம் மட்டும் உயிரோடு இருந்து தமிழ்நாட்டின் சார்பில் மேற்கு நாடுகளில் பயணம் செய்திருந்தால் மேலைநாட்டார் மறுபடியும் ஒரு விவேகானந்தரைப் பார்த்திருப்பார்கள். அவருடைய ஆங்கில அறிவிற்கும், தமிழ் அறிவுக்கும், தத்துவ ஞானத்துக்கும் நாடு அவரை மிகவும் குறைவாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டு விட்டதே" என்று ஓர் ஏக்கம் அரவிந்தன் மனத்தில் அப்போது படர்ந்தது. அவன் நெட்டுயிர்த்தான். பழகத் தொடங்கிய புதிதில் ஒருநாள், "உங்கள் தந்தையார் விட்டுச் சென்ற பணிகளில் பெரும் பகுதி உங்களால் நிறைவேற வேண்டும். அதற்குரிய தகுதி உங்களிடம் இருக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் குறைவின்றிக் கற்றிருக்கிறீர்கள். வாய்ப்பு வரும்போது உலகத்து வீதிகளில் தமிழ் மணம் பரப்பி முழக்கமிட உங்கள் குரல் தயாராயிருக்க வேண்டும்" என்று பூரணியிடம் சொல்லியிருந்தான் அவன். அப்போது அவள் சிரித்துக் கொண்டே "நீங்கள் என்னைப் பற்றி மிகப்பெரிய கனவுகள் காண்கிறீர்கள்" என்று தன்னடக்கமாகப் பதில் சொல்லிவிட்டாள்.

"அப்படிச் சொல்லக்கூடாது. உங்களால் அது முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது" என்று அப்போது தான் வற்புறுத்திச் சொன்னதை மீண்டும் நினைத்துக் கொண்டான் அரவிந்தன். அதன் பின் தங்களுடைய பழக்கம் அன்பும் நெருக்கமும் பெற்று இத்தகைய உறவாக மாறியதையும் நினைத்தான். தொடக்கத்தில் பூரணியின் உறவு இந்த விதத்தில் இப்படித் தன்னோடு நெருங்குமென அவன் எண்ணியதே இல்லை. அவனைப் பெருமை கொள்ள வைத்த உறவு இது. இத்தகைய சிந்தனையோடு பேராசிரியரின் அந்த வாக்கியங்களைத் தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்த அவன் அச்சகத்தின் பின்புறமிருந்து ஏதோ ஓசை கேட்கவே திகைப்புடன் எழுதுவதை நிறுத்திவிட்டுக் காதுகொடுத்துக் கேட்கலானான். யாரோ சுவரில் கால் வைத்து ஏறுகிற மாதிரி 'சர சர'வென்று ஓசைகேட்டது.

அச்சகத்தில் வலது பக்கம் ஓர் ஓட்டல், இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறு சந்து உண்டு. கொல்லைப்பக்கத்தில் ஓட்டலுக்கும் அச்சகத்துக்கும் பொதுவாக ஏழெட்டுத் தென்னை மரங்களோடு கூடிய ஒரு காலிமனை இருந்தது. ஓட்டலின் கழிவு நீரும், அச்சகத்துக் கிழிசல் காகிதக் குப்பைகளுமாக அந்தப் பகுதி கால் வைத்து நடக்க முடியாத இடமாக இருக்கும். தினசரி காலையில் சந்து வழியாக வந்து குப்பை வாரிக்கொண்டு போகிற தோட்டியைத் தவிர அந்த இடத்தில் நுழைகிற துணிவு வேறு யாருக்கும் இருக்க முடியாது. அச்சகத்தின் பின் பக்கத்துச் சுவர் அவ்வளவாகப் பாதுகாப்பானதில்லை. பழைய சுவர் என்ற குறை மட்டுமில்லை, அதிக உயரமில்லை என்ற குறையும் கொண்டது. பின்பக்கத்துத் தாழ்வாரத்தில் தான் விசாலமான இடம். தைத்தல், பைண்டிங் போன்ற வேலைகளுக்கு வசதியாகப் புத்தகத்துக்கென்று அச்சாகிய 'பாரங்கள்' அங்கேதான் அடுக்கப்பட்டிருந்தன. கொல்லைக் கதவுக்கு அடுத்தாற்போல் உள்பக்கம் மல்லிகை, அந்திமந்தாரைச் செடிகள் அடங்கிய ஒரு சிறு நிலப்பகுதி உண்டு. இந்த இடத்துக்கு அடுத்து உள்பகுதிதான் அச்சு யந்திரங்களும், 'பைண்டிங்' பகுதியும் அடங்கிய பரந்த தாழ்வாரம். இவ்விடத்தை நம்பிக்கையின் பேரில் காவல் பயமில்லாமல் வைத்திருந்தார் மீனாட்சிசுந்தரம்.

பக்கத்து ஓட்டல் வேலை நாட்களில் இரவு பன்னிரண்டு மணியானாலும் மாவரைக்கிற 'கடமுட' ஒலியும் பாத்திரம் கழுவுகிற ஓசையுமாகக் கொல்லைப்பக்கம் கலகலப்பாயிருக்கும். மறுநாள் ஓட்டலுக்கு வாராந்திர விடுமுறையாதலால் அன்று அந்தக் கலகலப்பு இல்லை. அரவிந்தன் தயங்கிக் கொண்டு நிற்கவில்லை. வாசற்கதவை உள்பக்கமாகத் தாழிட்டுவிட்டுக் கொல்லை பக்கம் விரைந்தான். நீண்ட வீடு அது. போகும்போதே ஒவ்வொரு பகுதிக்கும் உரிய மின் விளக்கைப் போட்டுக் கொண்டு போனான். அந்த அச்சகத்தில் இரவு நேரங்களில் தனியாக இருக்கிறபோது இப்படி ஓர் அனுபவம் இதுவரையில் அவனுக்கு ஏற்பட்டதில்லை. இன்று ஏற்படுகிறது. முதன்முதலாக ஏற்படுகிறது.

அவன் கடைசி விளக்கைப் போட்டுவிட்டுச் செடிகள் இருந்த பக்கம் நுழைந்தபோது மல்லிகைச் செடிகளின் ஓரமாகப் பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்த ஆள் ஒருவன் திடுமென விளக்கு ஒளி பாய்வதையும் யாரோ வருவதையும் உணர்ந்து திரும்பி ஓடிச் சுவரில் ஏறிவிட்டான். "யாரது?" என்று பெருங்குரலில் இரைந்து கொண்டு விரைந்தான் அரவிந்தன். சுவருக்கு மேல் விளிம்பிலிருந்து ஒரு பழைய செங்கல் சரிந்து அரவிந்தனின் கால் கட்டை விரலில் விழுந்ததுதான் மீதம். ஆள் அகப்படவில்லை. இன்னாரெனக் கண்டுகொள்ளவும் முடியவில்லை. பின்புறம் குதித்து ஓடும் ஒலி கேட்டது. அவன் சுவர் ஏறின இடத்தில் கீழே மல்லிகைச் செடியின் அருகில் மண்ணெண்ணெயில் முக்கிய ஒரு துணிச்சுருளும் தீப்பெட்டியும் கிடப்பதைக் கண்டான் அரவிந்தன். வந்தவன் என்ன காரியத்துக்காக வந்திருக்க வேண்டுமென்று அதைக் கண்டபோதுதான் அவன் உணர்ந்தான். கொல்லையில் அந்த ஓசை கேட்டதும் வந்து பார்க்காமல் தான் இன்னும் சிறிது நாழிகைப்போது அலட்சியமாக இருந்திருந்தால் தாழ்வாரத்தில் அச்சிட்டு அடுக்கியிருக்கும் பேராசிரியரது நூற்பகுதிகளின் சாம்பலைத்தான் காண முடியும் என்ற பயங்கர உண்மை அவனுக்குப் புரிந்தது. இந்தவிதமான எதிர்ப்புகளும் பகைகளும் மீனாட்சி அச்சகத்துக்கும் அவனுக்கும் இப்போதுதான் முதன் முதலில் ஏற்படத் தொடங்குகிற புதிய அனுபவங்கள்.

பின்புறம் அந்த இருளில் கொல்லைப் பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு துரத்த முடியாதென்று பட்டது அவனுக்கு. கதவுக்கு அப்பால் தரையில் கால் வைக்க முடியாத ஆபாசம்! வந்தவன் எல்லா ஆபாசங்களுக்கும் துணிந்துதான் வந்திருக்க வேண்டும். வாசல் பக்கம் ஓடி ஓட்டலில் யாரையாவது எழுப்பித் துணைக்குக் கூட்டிக்கொண்டு சந்து வழியாகப் போய்த் தேடிப் பார்க்கலாமா என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. அச்சகத்துக் கதவை அடைத்துப் பூட்டிக்கொண்டு ஓட்டலில் ஆளை எழுப்பிப் போய்த் தேடுவதற்குள் காலம் கடந்த முயற்சியாகி விடும். 'முருகானந்தம் வரட்டும் அவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு இரவு இங்கேயே தாழ்வாரத்தில் படுக்கலாம்' என்று துரத்தும் முயற்சியைக் கைவிட்டான் அவன். எவ்வளவுதான் துணிவு உள்ளவனாயிருந்தாலும் மனத்தில் இனம் புரியாத பயம் எழுந்தது. நடக்க இருந்ததை நினைத்துப் பார்த்தபோது உடல் நடுங்கியது. வந்தவனுடைய விருப்பம் நிறைவேறியிருந்தால் எவ்வளவு பேரிழப்பு ஆகியிருக்கும்? இத்தனை நாட்கள் அரும்பாடுபட்டு அச்சிட்ட நூல்களெல்லாம் அழிந்திருக்குமே.

வாயிற்புறக் கதவு தட்டப்பட்டது. விளக்குகளை அணைக்காமல் முன்புறம் வந்து கதவைத் திறந்தான் அரவிந்தன். முருகானந்தம் திரும்பியிருந்தான்.

 

"சுத்த காலிப்பையன். மங்கம்மாள் சத்திரத்துக்குப் பின் பக்கம் தெருவிளக்கின் அடியில் மூணு சீட்டு விளையாடப் போய்விட்டான். நீ ஒன்றும் சொல்லவில்லையே என்றுதான் பேசாமல் பார்த்துக் கொண்டு வந்தேன். இல்லாவிட்டால் முதுகில் பலமாக நாலு அறை வைத்து இங்கே இழுத்து வந்திருப்பேன். சிறு வயதிலேயே விடலைத்தனமாக இப்படிக் கெட்டுப் போகிற பிள்ளைகளின் தொகை ஊருக்கு ஊர் இப்போது அதிகரித்திருக்கிறது" என்று முருகானந்தம் கூறியபோது அரவிந்தன் திகைத்தான். "பேராசிரியருடைய பிள்ளை இப்படி ஆவதா?" என்ற வேதனை வாட்டியது. வேதனையோடு அரவிந்தன் கூறினான், "முருகானந்தம்! சிரமத்தைப் பாராமல் மறுபடியும் ஒரு நடை போய் நான் சொன்னேனென்று அந்தப் பையனைக் கூப்பிடு. அடி, உதை ஒன்றும் வேண்டாம். காலையில் திருப்பரங்குன்றத்தில் பார்த்தோமே அந்தப் பெண்ணின் தம்பி அவன். பேராசிரியர் பையன். அவன் வந்து பணம் கேட்டபோதே எனக்குச் சந்தேகமாயிருந்தது. அதுதான் உன்னைப் பின்னால் அனுப்பினேன். விரைவாகப் போய் அவனை அழைத்து வந்துவிடு."

 

அரவிந்தன் வேண்டுகோளை மறுக்க இயலாமல் மறுபடியும் போனான் முருகானந்தம். அவன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேஸ்வரி அம்மாளின் கார் அச்சகத்து வாசலில் வந்து நின்றது. பூரணியும் அந்த அம்மாளும் காரிலிருந்து கீழே இறங்கினர். அவர்கள் முகங்களில் கவலையும் பரபரப்பும் குடி கொண்டிருந்தன.

 

பூரணியின் தம்பியைப் பற்றி அறிந்ததனாலும் அச்சக்த்தின் பின்புறம் நடந்த நிகழ்ச்சியாலும் மனம் குழம்பிப்போய் இருந்த அரவிந்தன், அவர்களைப் பார்த்து மேலும் குழப்பமடைந்தான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு வரவேற்றான். மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றி அரவிந்தனிடம் விவரமாகச் சொல்லி, என்ன செய்யலாம், எப்படித் தேடலாம் என்று கேட்டாள் பூரணி. அந்த நள்ளிரவில் தன்னைத் தேடிக்கொண்டு திருப்பரங்குன்றம் வந்து அந்த அம்மாள் கூறிய செய்தியைக் கேட்டபோது தன் தம்பி காணாமற்போனதும் கெட்டுத்திரிவதும் மறந்துவிட்டது அவளுக்கு. வயது வந்து பெண்ணைக் காணாமல் கலங்கித் தவிக்கும் அந்த அம்மாளின் துயரம் தான் பெரிதாகத் தோன்றியது. "என்னைப் போலவே இந்த அம்மாளும் ஆண்பிள்ளைத் துணையில்லாது குடும்பத்தைக் கட்டிக் காக்கிறவர்கள். எவ்வளவோ பணவசதியும், தைரியமும் உள்ளவர்கள்; இந்தச் சம்பவத்தினால் ஒன்றும் செய்யத் தோன்றாமல் இடிந்துபோய் என்னிடம் வந்து கதறினார்கள். நான் என்ன செய்வேன்? உங்களிடம் அழைத்து வந்தேன். நீங்கள் பார்த்து ஏதாவது செய்யுங்கள்; மிகவும் நொந்துபோயிருக்கிறார்கள்" என்று அரவிந்தனிடம் கூறி உதவி கோரினாள் பூரணி. "போலீஸில் சொல்லிப் புகைப்படம் கொடுத்துத் தேடச் சொல்லலாமா? அல்லது செய்தித்தாள்களில் படத்தோடு விளம்பரம் போடலாமா?" என்று பதற்றத்தில் தோன்றிய வழிகளை எல்லாம் கூறினாள் அந்த அம்மாள். இப்படி ஒரு நிலையில் தாயின் வேதனை தாங்க முடியாதது.

 

"பதற்றப்படாதீர்கள் அம்மா! பெண் வயது வந்தவள் என்கிறீர்கள். இப்படியெல்லாம் படம், விளம்பரம், போலீஸ் என்று போனால் பின்னால் பெண்ணின் வாழ்க்கை வம்புக்கு இலக்காகிவிடும். நடந்ததை நீங்களே பெரிதுபடுத்தின மாதிரி ஆகிவிடும். நிதானமாக யோசித்து ஒரு வழி செய்யலாம்" என்றான் அரவிந்தன்.

பின்பு பூரணியைத் தனியாக உட்புறம் அழைத்துப் போய், "உன் தம்பி சங்கதி தெரியுமோ?" என்று தொடங்கி நடந்ததையெல்லாம் அரவிந்தன் சொன்னான். முருகானந்தத்தை அனுப்பியிருப்பதையும் கூறினான்.

"விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை" என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். "காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீஸ் லாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு லாரியில் ஏறிவிட்டான்" என்று முருகானந்தம் கூறியதும் "அது இருக்கட்டும். காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார்?" என்று முருகானந்தத்தை உட்கார்த்தி வைத்து விவரத்தைக் கூறினான் அரவிந்தன்.

 

14

 

"கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி

எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி

பொற்பூர உள்ளிதனை விதைத்தாலும்

அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும்

சொற்பேதையருக்(கு) அறிவு இங் கினிதாக

வருமெனவே சொல்லினாலும்

நற்போதும் வாராது ஆங்கவர்

குணமே மேலாக நடக்குந்தானே"

 

மதுரை நகரத்து வீதிகளில் தேய்ந்து நள்ளிரவு கொலுவிருக்கும் அந்த நேரத்தில் ஒலிகள் தேயாத ஒரு வீதியில் ஒளிகுன்றா ஓர் அச்சகத்து முன் அறையில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். திருத்தப் பெற்றவையும், திருத்தப் பெறாதவையுமாக அச்சுப் பிரதிகள் மேசைமேல் தாறுமாறாகக் கிடந்தன. அவை சிதறிக் கிடந்தவிதம் அங்கிருந்தவர்களின் அப்போதைய மனநிலையையே காட்டுவதுபோல் இருந்தது.

அரவிந்தன் கூறிய விவரங்களையெல்லாம் கேட்டுவிட்டு முருகானந்தம் பதில் சொல்லாமல் இருந்தான். அவன் முகக் குறிப்புத் தீவிரமான சிந்தனையைக் காட்டிற்று. எல்லாவற்றையும் இழந்து பறிகொடுத்துவிட்டாற்போல் சோர்ந்து உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்தாள். பூரணி அரவிந்தனைப் பார்த்தாள். அரவிந்தன் முருகானந்தத்தைப் பார்த்தான்.

"முருகானந்தம்! சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன வழி? பூரணியும் இந்த அம்மாளும் நம்மை நம்பிக்கொண்டுதானே வந்திருக்கிறார்கள். ஏதாவது செய்ய வேண்டாமா? உனக்கு இந்த அம்மாளின் மனநிலையைப் புரிந்து கொள்கிற வாய்ப்பு ஏற்பட்டும் இப்படி ஒரு வழியும் சொல்லாமல் இருக்கிறாயே? சிறு பையன் காசு திருடியதையும் சீட்டு விளையாடியதையும் காலி கும்பலோடு சேர்ந்து கொண்டு திரிவதையும் இன்று கண்டிக்காமல் இன்னும் ஒரு மாதம் கழித்துக் கண்டித்து வழிக்குக் கொண்டு வந்தாலும், கெட்டுப்போவது ஒன்றுமில்லை. ஆனால் வயது வந்த ஒரு பெண், திருமணமாகாதவள் தனியாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்பிப் போனதென்பது எத்தனை பெரிய கொடுமை. பெற்ற மனம் என்ன பாடுபடும் முருகானந்தம்?"

"எல்லாம் புரிகிறது அரவிந்தன். ஆனால் இந்த நேரத்துக்கு மேல் எங்கே போய் என்ன செய்ய முடியும்? நடந்தது வெளியில் தெரியவிடாமல் பெண்ணைக் கண்டுபிடித்து வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கல்லூரியில் படிக்கிற பெண் என்கிறார்கள். யாரும் ஏமாற்றி அழைத்துக் கொண்டு போயிருக்க முடியாது. விவரம் தெரிந்து வேண்டுமென்று தானாகவே போயிருப்பதுதான் சாத்தியம். அப்படியானால் எந்தக் காரணத்துக்காக யாரோடு போயிருக்கலாமென்று தெரிந்து கொள்ள வேண்டும். தேடிப் பார்க்க கிளம்புவதற்கு முன் காணாமல் போயிருக்கும் பெண்ணின் பழக்க வழக்கங்களைப் பற்றி இந்த அம்மாளிடம் நாம் நிறையக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் ஒன்றையும் விளங்கிக் கொள்ள இயலாது. எனக்குக் கொஞ்சம் சிந்திக்க நேரம் கொடு. மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகப்போகிறது. பெண்ணின் படத்தை வாங்கிக் கொண்டு இவர்களை வீட்டுக்கு அனுப்பு. கவலையில்லாமல் கூடியவரையில் நிம்மதியாக வீட்டுக்குப் போய் இருக்கச் சொல்லு. என்னால் முடியுமானால் இந்த அம்மாளுடைய பெண் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சேர்த்துவிடுவேன். உதவி செய்ய நான் தயங்கவில்லை. அதை வகையாகச் செய்ய வேண்டும் என்று தான் தயங்குகிறேன். அவசரப்பட்டு எதையாவது செய்து அந்தப் பெண் ஓடிப்போய் விட்டாளாமே என்று ஊரெல்லாம் அவப்பெயர் பரவும்படி ஆகிவிடக் கூடாது" என்று முருகானந்தம் நிதானமாகக் கூறிய விவரங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாகத்தான் இருந்தன. பூரணி, மங்களேஸ்வரி அம்மாளிடம் இருந்து வசந்தாவின் புகைப்படத்தை வாங்கி அதன் பின்புறமே தேவையான விவரங்களையும் அடையாளங்களையும் குறித்து அரவிந்தனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கி மேஜையின் இழுப்பறையில் பத்திரமாக வைத்தான்.

"அம்மா நீங்களும் என்னோடு திருப்பரங்குன்றம் வந்துவிடுங்கள். உங்கள் மனநிலை சரியில்லை. கவலைகளால் குழம்பியிருக்கிறீர்கள். உங்களை இப்போது வீட்டுக்குத் தனியாக அனுப்ப எனக்குப் பயமாயிருக்கிறது" என்று அந்த அம்மாளையும் தன்னோடு வருமாறு அழைத்தாள் பூரணி. அதற்கு அந்த அம்மாள் இணங்கவில்லை. "காய்ச்சல் உடம்போடு தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளுமுன் உன்னை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்தது போதாதா? என் தலைவிதி; எனக்குப் பெண்ணாகப் பிறந்தவள் இப்படிப் புத்திக்கெட்டுப் போனால் அதற்கு நீங்களெல்லாம் என்ன செய்வீர்கள்; இன்னும் இது போதாதென்று உன் வீட்டில் வேறு வந்து உன் தலையில் என் கவலையையும் சுமக்க வைக்க வேண்டுமென்கிறாயா? என்னைப் பற்றி உனக்குப் பயமே வேண்டாம் பூரணி! இந்த அசட்டுப் பெண்ணுக்காக இசகு பிசகாக நான் எதுவும் செய்து கொண்டு விடமாட்டேன். அன்றொரு நாள் நீ என்னை முதன்முதலாகச் சந்தித்த போது பெண்கள் மாறுபட்ட சூழ்நிலைகளிலும் பழகி இன்றைய நவீன நாகரிகங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வாதாடினேன். நீ ஒப்புக்கொள்ளவில்லை. அந்தக் கருத்தை கடைசி வரை வன்மையாக மறுத்தாய். அதன் உண்மை இன்று எனக்குப் புரிகிறது பூரணி."

"பழைய கதையை எல்லாம் எதற்கம்மா இப்போது கிளப்புகிறீர்கள்? நடக்க வேண்டியதைக் கவனிக்கலாம். உங்களுக்கு ஆறுதலாக இருக்குமே என்பதற்காகத்தான் என்னோடு வருமாறு அழைக்கிறேன்."

"அப்படிச் செய்வதற்கில்லை பூரணி! செல்லத்தை வீட்டில் தனியாக விட்டிருக்கிறேன். சமையற்காரி துணைக்குப் படுத்துக் கொண்டாளோ இல்லையோ? நேரமானாலும் பரவாயில்லை. உன்னை வீட்டில் கொண்டுபோய் விட்ட பின் நான் திரும்பி விடுகிறேன்" என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள் மங்களேஸ்வரி அம்மாள். தங்கை மங்கையர்க்கரசியையும், தம்பி சம்பந்தனையும், கமலாவின் தாயிடம் சொல்லி, அவர்கள் வீட்டில் படுக்கச் செய்துவிட்டுத் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்திருந்தாள் பூரணி. இனி இந்நேரத்துக்கு மேல் திருப்பரங்குன்றம் போனால் கமலாவின் வீட்டுக்குப் போய் குழந்தைகளை எழுப்பி தன் வீட்டுக்கு அழைத்துப் போக முடியாது. இரண்டுங்கெட்ட நேரத்தில் அவர்கள் வீட்டில் போய் கதவைத் தட்டித் தூக்கத்தைக் கெடுப்பது நன்றாக இராது. அவள் மட்டும் தனியாக வீட்டில் போய்ப் படுத்துக் கொள்வதும் இயலாது. அந்த அம்மாளைத் திருப்பரங்குன்றத்துக்கு அழைப்பதற்குப் பதிலாகத் தானே அந்த அம்மாளோடு மதுரையில் தங்கிவிட்டால் என்ன என்று நினைத்துத் தயங்கியது பூரணியின் உள்ளம்.

 

"என்னைக் கொண்டு போய்விடுகிற சிரமம் உங்களுக்கு வேண்டாம் அம்மா. இவ்வளவு நாழிகைக்கு மேல் நான் அங்கே போய் என்ன செய்யப்போகிறேன்? உங்களோடு உங்கள் வீட்டிலேயே இருந்துவிடுகிறேன்" என்று பூரணி தன் விருப்பத்தை வெளியிட்டபோது மங்களேஸ்வரி அம்மாள் இரட்டை மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டாள். அவர்கள் காரில் ஏறிக்கொண்டனர். வழியனுப்புவதற்காக நிற்பது போல் அரவிந்தனும் முருகானந்தமும் அச்சகத்து வாயிற்படிக்குக் கீழே நடைபாதை மேடையில் கார் அருகே நின்றனர். கார் புறப்பட இருந்தபோது முருகானந்தம் மிக அருகில் நெருங்கி "பூரணியக்கா நாளைக்குக் காலையில் நானும் அரவிந்தனும் இந்த அம்மா வீட்டுக்கு வருகிறோம். மேலும் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பதற்றமடையாமல் இருக்கச் சொல்லுங்கள். எங்களால் ஆனதைச் செய்கிறோம். அநேகமாக நாளைக் காலையில் நாங்கள் வரும்போதே உங்கள் தம்பியையும் தேடிப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து விடுவோமென்று நினைக்கிறேன். வருத்தப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்" என்றான். அவன் கூறியதைக் கேட்ட மங்களேஸ்வரி அம்மாள், "இதென்ன பூரணி? உன் தம்பியைப் பற்றி இவர் என்னவோ சொல்லுகிறாரே, அவன் எங்கே போய்விட்டான்?" என்று திகைப்போடு வியந்து வினவினாள். அந்த அம்மாள் அகாலத்தில் தன்னைத் தேடிக் கொண்டு திருப்பரங்குன்றம் வந்து வசந்தா காணாமற் போய் விட்ட செய்தியைத் தெரிவித்தபோது தன் தம்பி திருநாவுக்கரசு பற்றிச் சொல்வதற்குத் தோன்றவேயில்லை பூரணிக்கு. பெரிய துன்பத்தோடு பரபரப்படைந்து ஓடி வந்திருக்கிறவர்களிடம் சிறிய துன்பத்தைச் சொல்லி தன் வருத்தத்தில் அவர்களும் பங்கு கொள்ளச் செய்ய வேண்டாமே என்றுதான் அவள் சொல்லாமல் இருந்து விட்டாள். தனக்குச் சமயம் நேர்ந்த போதெல்லாம் உதவியிருக்கும் அந்தத் தாய்க்குத் தான் ஆறுதல் சொல்லி உதவி பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டிய சமயத்தில் தன் துன்பத்திற்கு ஆறுதல் தேட விரும்பவில்லை அவள். வசந்தாவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க அரவிந்தனின் உதவியை நாடலாம் என்றுதான் அந்த அம்மாளையும் அழைத்துக் கொண்டு உடனே அச்சகத்துக்கு வந்தாள் அவள். நல்லவேளையாக அந்த நேரத்துக்கு முருகானந்தம் அங்கு இருக்கவே அவளுடைய வேலை எளிதாகப் போயிற்று.

இப்போது முருகானந்தம் கூறியதிலிருந்து அந்த அம்மாளே ஏதோ புரிந்து கொண்டு தம்பியைப் பற்றிக் கேட்கிறாள். வலுவில் கேட்கும்போது எப்படிச் சொல்லாமல் இருப்பது? அச்சகத்து வாயிலிருந்து புறப்பட்ட கார் தானப்ப முதலித் தெருவில் அந்த அம்மாள் வீட்டு வாயிலில் போய் நிற்பதற்குள் சில விநாடிகளில் தம்பி திருநாவுக்கரசின் நடத்தை மாறுதல்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்.

பூரணியையும் மங்களேஸ்வரி அம்மாளையும் அனுப்பிவிட்டு உள்ளே திரும்பிய அரவிந்தனும் முருகானந்தமும் சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்குச் செய்தி ஒன்றுமே இல்லாதது போல் வீற்றிருந்தனர். இந்த அமைதியைக் கலைத்துக்கொண்டு அரவிந்தன் கூறலானான்.

 

"உனக்கு இன்னும் ஒரு புதிய செய்தி சொல்லப் போகிறேன், முருகானந்தம். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இந்த அச்சகமும் இதில் நிறைந்துள்ள அறிவுச் செல்வங்களும் தீப்பிடித்து எரிவதற்கும், அழிவதற்கும் ஏற்பாடு நடந்ததென்று சொன்னால் இப்போது நீ நம்புவாயா?"

"தெளிவாகப் பேசு. நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை, அரவிந்தன்!"

முருகானந்தத்துக்கு நன்றாக விளங்கும்படி பின்புறம் அவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டி எல்லாவற்றையும் கூறினான் அரவிந்தன்.

"பாவி! இவ்வளவு கெட்ட எண்ணத்தோடு வந்தவனை எப்படியப்பா தப்பிப் போகவிட்டாய்? நல்ல சமயத்தில் நான் இல்லாமற் போய்விட்டேனே! ஆளைப் பிடித்துச் சுவரிலேயே அறைந்து கொன்றிருப்பேன். சொப்பனத்தில் கூட இனி இந்த மாதிரி கெட்ட வேலை செய்ய வரும் துணிவு அவனுக்கு உண்டாகாமல் பண்ணியிருப்பேனே" என்று கொதிப்படைந்து கூறினான் முருகானந்தம். அதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான்.

"ஆளைப் பிடித்துக் கட்டி வைத்து உதைத்த பின் இம்மாதிரிக் கெட்ட செயல் செய்யும் துணிவு குன்றுவதற்குப் பதிலாக அதிகமாகிவிட்டால் என்ன செய்வாய் முருகானந்தம்? கையில் சிராய்ந்து இரத்தம் வருகிறதே என்பதற்காகக் கையைக் குத்தி நுனியில் கொண்டுபோய்த் துடைத்தால் இரத்தம் குறையுமா அப்பா? கீழ்மைக்குணம் என்பது உள்ளிப் பூண்டைப் போன்றது. கற்பூரத்தினால் பாத்திகட்டி, கஸ்தூரியை எருவாகப் போட்டுப் பன்னீரை தண்ணீராகப் பாய்ச்சினாலும் உள்ளிப்பூண்டு விளைகிறபோது அதன் பழைய நாற்றம்தான் வரும். கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா? என்று பழமொழி உண்டு. நாளைக்கே முதலாளியிடம் சொல்லி ஓட்டலுக்கும் இதற்கும் நடுவிலிருக்கிற சந்துக்கு ஒரு கதவோ சுவரோ போட ஏற்பாடு செய்யப் போகிறேன். நாம் செய்ய முடிந்தது அதுதான்..."

"யாரோ வேண்டுமென்று சொல்லி ஏவிவிட்டுத்தான் இது நடந்திருக்கிறது அரவிந்தன்! நீ சொல்லுகிறபடி பார்த்தால் குப்பை அள்ள வருகிற தோட்டியும் ஓட்டல் வேலையாட்களையும் தவிர வேறு ஆட்கள் கொல்லைப் பக்கம் புழங்குவதில்லை என்று தெரிகிறது. ஓட்டல் ஆட்கள் இந்த வம்புக்கு வர மாட்டார்கள். தோட்டியே காசுக்கு ஆசைப்பட்டு இதைச் செய்ய ஒப்புக் கொண்டிருக்கலாம். எதற்கும் காலையிலே விசாரித்து விடலாம்."

"விசாரித்துத் தெரியப்போவதை நான் இப்போதே சொல்லி விடுகிறேன். கேட்டுக்கொள். எங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் ஒரே பகைவர், அந்தப் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர்தான். அந்த நாளிலிருந்து தொழில் முறையில் மீனாட்சி அச்சகத்துக்கும் அவருக்கும் புகைச்சல் உண்டு. எங்கள் முதலாளியை அவருக்குக் கட்டோடுப் பிடிக்காது. இப்போது பேராசிரியரின் நூல்களை நாங்கள் அவருடைய கொடுங்கோன்மைப் பிடியிலிருந்து விடுவித்து நியாயமாக வெளியிடத் தொடங்கியிருப்பதால் பழைய புகைச்சல் வளர்ந்திருக்கிறது. எதையும் செய்வதற்குக் கூசாத மனிதர் அவர். இருக்கட்டுமே! நாம் முறையான வழியிலேயே நேர்மையாகப் போகலாம். ஒரு நாள் அவரையே சந்தித்து இப்படியெல்லாம் செய்யலாமா? என்று நானே நியாயத்தைக் கேட்கத்தானே போகிறேன்."

"நியாயத்தைக் கேட்கிற ஆளா அவர்? மறுபடியும் அவரிடம் அறை வாங்கிக் கொண்டு வராதே. இந்தத் தடவை நீ அவருக்கு அறை கொடுத்துவிட்டு வா. அதற்குப் பலம் இல்லையானால் அவரிடம் நியாயம் கேட்கப் போகிறபோது என்னையும் உடன் அழைத்துப் போ. நான் கொடுக்கிறேன் அவனுக்கு! நியாயமாம், நியாயம்! இந்தத் தலைமுறையில் நியாயத்தைப் பற்றிப் பேசுவதுதான் நாகரிகம் அப்பனே. கடைப்பிடிப்பது அநாகரிகம்!" கழுத்திலிருந்து கைக்குட்டையை உருவி முழங்கை மணிக்கட்டில் இறுக்கிச் சுற்றியவாறே மேலும் பேசினான் முருகானந்தம்.

"அந்தப் புதுமண்டபத்து ஆளிடமிருந்து பேராசிரியரின் புத்தகங்களைக் காப்பாற்றியதற்காக உனக்கும், உங்கள் முதலாளிக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் தகும் அரவிந்தன். பத்து பன்னிரண்டு நாட்களுக்கு முன் என் சிநேகிதன் ஒருத்தன் அந்த புதுமண்டபத்துக் கடையிலிருந்து அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட புத்தகம் ஒன்று வாங்கி வந்தான். தனிப்பாடல் திரட்டு என்கிற அந்தப் புத்தகத்தின் பெயர் தலைப்பிலிருந்து உள்ளே இறுதிப் பக்கங்கள் வரை எல்லா இடங்களிலும் தனிப்பாடல் திருட்டு என்று அச்சிடப்பட்டிருந்தது. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிகளிலும் இந்தத் தவறு இருக்கத்தானே செய்யும்? தமிழுக்கு எத்தனை பெரிய பாவம் இது?"

"தமிழுக்கு பாவம் ஏது? எல்லா பாவமும் அவருக்குத்தான். ஒருவகையில் அவர் வெளியிட்டிருக்கும் புத்தகத்திற்குத் தனிப்பாடல் திருட்டு என்று பெயர் இருப்பதே பொருத்தம் தான். அவர் சொந்தமான ஓலைச்சுவடிகளைக் கொண்டு ஒப்பு நோக்கி அதைப் பதிப்பிக்கவில்லை முருகானந்தம், வேறு ஒருவர் சிரமப்பட்டுப் பல ஆண்டுகளாக முயன்று பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு புத்தகத்தை அப்படியே ஒரு மாதத்தில் காப்பியடித்துத் திருடி வெளியிட்டு விட்டார். மலிவுப் பதிப்பு என்று பெயராம்! எது மலிவோ? பிழையோ? அல்லது விலையோ? தெரியவில்லை. அதனால் அவர் செய்த காரியத்துக்கு ஏற்பத்தான் புத்தகத்தின் பெயரும் வாய்த்திருக்கிறது" என்று குறும்பு பேசினான் அரவிந்தன்.

அன்று அவர்கள் இருவரும் கொல்லைப் பக்கத்துத் தாழ்வாரத்தின் அருகிலேயே படுத்துக் கொண்டார்கள். அவர்கள் படுக்கும்போது மணி ஒன்றரை இருக்கும். களைப்பும் அலுப்பும் உடல் தாங்காமல் நிறைந்திருந்தாலும் மனக்குழப்பத்தால் தூக்கம் உடனே அணுக மறுத்தது. படுக்கையில் சாய்ந்து முழங்கையை முட்டுக் கொடுத்து தலையை நிமிர்த்திக் கொண்டு முருகானந்தம் கேட்டான், "பூரணியக்காவுக்கும் இந்த அம்மாளுக்கும் என்ன உறவு? இந்த அம்மாள் யார்?"

 

மங்களேஸ்வரி அம்மாளைப் பற்றி பூரணியிடமிருந்து, தான் தெரிந்து கொண்டிருந்தவற்றை முருகானந்தத்திற்குச் சொன்னான் அரவிந்தன்.

"இவ்வளவு நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு இப்படியா புத்தி போகவேண்டும்? இந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிக்கிற பையன்களும், பெண்களும் தவறு செய்யக் கூசுகிற தயக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்களே அரவிந்தன், இதற்கு என்ன காரணமென்று உன்னால் சொல்ல முடியுமா? தமிழ்ப் பண்பாட்டின் உருவாய் வாழ்ந்தவருக்குப் பிள்ளையாய் பிறந்து தமிழ்ப் பெண்மையின் இலட்சியம் போல் நம்மிடையே வாழும் பூரணியக்காவின் கண்காணிப்பில் வளரும் பையன் இப்படி ஆகிவிட்டானே! செல்வமும், செல்வாக்கும் நற்பண்பும் உள்ள மங்களேஸ்வரி அம்மாளின் பெண் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கிறாளே! குருத்துவிடும் வயதிலேயே கெட்டுப் போகத்துணியும் இத்துணிச்சல் இவர்களுக்கு எங்கே கிடைத்தது?"

அரவிந்தன் நெடுமூச்சு விட்டான். முருகானந்தத்தின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனச் சிந்தித்தான். சிறிது நேர அமைதிக்குப் பின் அவன் முருகானந்தத்தை நோக்கிச் சொல்லலானான்:

"வழி தவறுகிற இந்தத் துணிச்சல் எங்கிருந்து பழகத் தொடங்குகிறது என்பதுதான் எனக்கும் விளங்கவில்லை. இன்னும் சிறிது காலத்துக்குக் கணக்கும், வரலாறும், விஞ்ஞானமும் கற்றுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது. சுதந்திரமும் உரிமைகளும் பெருகுவதற்கு முன்னால் படிக்காதவர்களில் சிலர் அறியாமையால் தவறு செய்து கொண்டிருந்தார்கள். இப்போதோ படித்தவர்கள், தவறுகளை அவை தவறுகளென அறிந்து கொண்டே செய்கிறார்கள். கீழ்நாட்டு வாழ்வின் அசௌகரியங்கள் நிறைந்த ஏழைக் குடும்பங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு மேல்நாட்டு வாழ்வின் சௌகரியங்களையும் ஆடம்பரங்களையும் கற்பித்து அனுப்பிவிடுகிறார்கள். வட்டமான டப்பாவுக்கு சதுரமான மூடி போடுகிற மாதிரி ஏழை நாட்டில் ஆடம்பரக் கனவுகள் சிறிதும் பொருந்தமாட்டேனென்கின்றன."

அரவிந்தனை இந்த மாதிரிக் கருத்து வெள்ளமாகப் பேசுவதற்குத் தூண்டிவிட்டுக் கேட்பதில் முருகானந்தத்துக்குத் தனி ஆனந்தம். மனம் உருகித் துடிப்போடு இப்படி அவன் பேசுகிற சந்தர்ப்பங்கள் எப்போதாவது அத்திப்பூத்த மாதிரிதான் வாய்க்கும். அப்படி வாய்க்கிற நேரங்களில் அந்த அறிவு வெள்ளத்தில் நன்றாக மூழ்கி எழுந்துவிடுவது முருகானந்தத்தின் வழக்கம். அரவிந்தன் மேலும் தொடர்ந்தான். "நீதான் தினசரி செய்தித்தாள்களில் படிக்கிறாயே, முருகானந்தம்! ஓடிப்போதல், பணத்தை எடுத்துக் கொண்டு தனியே போதல் என்று இளைஞர்களையும் யுவதிகளையும் பற்றி எவ்வளவு சேதிகள் வருகின்றன? அவ்வளவுமா பொய்யாக இருக்கும்? எப்படி எப்படி எந்தச் சமயங்களில் தவறு செய்யலாமென்பதைச் செய்தித்தாள்களே கற்றுக் கொடுக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா?"

"நீ சொல்வது உண்மைதான் அரவிந்தன். ஒழுக்கத்தைப் பற்றிய ஆர்வம் இளைஞர்களிடையே குன்றிவிட்டது. ஆனால் அதற்கு இளைஞர்கள் மட்டும்தான் காரணமென்று நினைக்கிறாயா?"

இதற்கு அரவிந்தன் பொருத்தமாகவும், நன்றாகவும் பதில் சொன்னான். இப்படிக் கேள்வியும் பதிலுமாகச் சிறிது நேரம் விவாதம் செய்துவிட்டு அவர்கள் உறங்கிப் போனார்கள்.

காலையில் அரவிந்தன் விழிக்கும்போது கொல்லையில் முருகானந்தம் யாருடனோ இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். போய்ப் பார்த்தபோது பின்புறம் குப்பை அள்ள வருகிற தோட்டியை அவன் விரட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. தோட்டி தனக்கு ஒரு பாவமும் தெரியாதென்று கெஞ்சிக் கதறிக் கொண்டிருந்தான். முருகானந்தம் தனக்கு இருந்த கோபத்தில் தோட்டியைக் கீழே தள்ளி மிதித்துவிடுவான் போலிருந்தது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் அரவிந்தன் எழுந்து போய்த் தோட்டிக்கு அடியும் உதையும் விழாமல் காப்பாற்றினான்.

"அவன் என்னப்பா செய்வான்? செய்திருந்தாலும் உன்னிடம் நான் செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருப்பானா? நாம் ஒழுங்காகச் சுவரைப் பெரிதாக்கிச் சந்து வழிக்குக் கதவும் போட்டுவிட்டால் யாரும் நுழைய முடியாது அப்புறம்" என்று முருகானந்தத்தைச் சமாதானப்படுத்திக் கூட்டிக் கொண்டு வந்தான் அரவிந்தன்.

"மயிலே மயிலே இறகு போடு - என்றால் போடாது அரவிந்தன். கன்னத்தில் கொடுத்தால் உண்மையைக் கக்கியிருப்பான். நீ எழுந்திருந்து வந்து காரியத்தைக் கெடுத்து விட்டாய். போய்த் தொலையட்டும். அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கிற காரியத்தையாவது இன்று காலையிலிருந்து தொடங்கலாம்" என்று அன்று செய்ய வேண்டிய வேலையை நினைவுபடுத்தினான் முருகானந்தம்.

அரவிந்தன் மேசை இழுப்பறையைத் திறந்து வசந்தாவின் படத்தை எடுத்து முருகானந்தத்திடம் தந்தான். அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தவுடன் முருகானந்தம் வியப்பால் துள்ளினான் அவன் முகம் அகன்று மலர்ந்தது.

"அடி சக்கை! இப்படியல்லவா வகையாக மாட்டிக் கொள்ள வேண்டும்" என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து வெளியாயின.

அதைக்கேட்டு அரவிந்தன் ஒன்றும் புரியாமல் திகைத்தான். "என்னடா முருகானந்தம்? இந்தப் படத்திலிருக்கிற பெண்ணை இதற்கு முன்பே உனக்குத் தெரியுமா?"

 

"பெண்ணைத் தெரியாது. இந்தப் படத்தை நன்றாகத் தெரியும். இதோ பார் வேடிக்கை..." என்று சொல்லிக் கொண்டே ஒரு மணிபர்ஸை எடுத்துப் பிரித்தான். அதில் சிறிய அளவில் எடுக்கப்பட்ட வசந்தாவின் புகைப்படங்கள் இரண்டும் அவள் கையொப்பத்தோடு கூடிய கடிதம் ஒன்றும், மூன்று நூறு ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மணிபர்ஸின் மேற்பாகம் வெளியே தெரிகிறார் போன்ற 'மைக்கா' உறைக்குள் ஓர் ஆண் படமும் இருந்தது. மணிபர்ஸின் சொந்தக்காரனுடைய படமாக இருக்க வேண்டும் இது. கடிதத்தைப் பிரித்து அரவிந்தனுக்குப் படித்துக் காட்டினான் முருகானந்தம்.

"அன்புடையீர் வணக்கம்.

 

உங்கள் விண்ணப்பத் தாளும் நிபந்தனைகள் அடங்கிய விவரமான கடிதமும் கிடைத்தன. புதிய முகங்களைச் சினிமாவில் அறிமுகப்படுத்த நடிப்புக் கலையை வளர்க்கும் உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன். என்னுடைய ஆர்வத்தை நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி. பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி உடை அழகுப் போட்டிகளிலும் பலமுறை நான் பரிசு வாங்கியிருக்கிறேன். எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற தணியாத ஆசை. என்னுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு முதல் படத்திலேயே என்னைக் கதாநாயகியாக நடிக்க வைக்கலாமென்று எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். நிபந்தனையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தொகையை எப்போது வேண்டுமானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறேன். நீங்கள் எப்போது இங்கே வருவதாயிருந்தாலும் வருகிற சேதியும், தங்கும் இடமும் எழுதுங்கள். கவரிலேயே எழுதுங்கள். எது எழுதினாலும் தயவு செய்து கார்டில் எழுத வேண்டாம். நான் உங்களைச் சந்திக்கிறேன்.

 

தங்கள்,

வசந்தா.

 

கேட்டுவிட்டு ஏளனமாக நகைத்தான் அரவிந்தன். "நாலு எழுத்து படித்து விவரம் தெரிந்த பெண்களுக்கு இன்று இருக்கிற சினிமாப் பித்துக்கு அளவே இல்லை. ஒவ்வோர் இளம் பெண்ணும் நிலைக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் போது தன்னை ஒரு நடிகையாக, அல்லது நடிகையைப் போல் நினைத்துக் கொண்டு தான் பார்க்கிறாள். அந்தக் கலையில் சேர்ந்தவர்களின் நடிப்பைப் பார்த்து ரசிப்பதோடு திருப்தி அடையலாம். ஆனால் எல்லோரும் கவர்ச்சி நிறைந்த அந்தக் கலைப்பள்ளத்தில் கண்ணை மூடிக்கொண்டு குதித்துவிடத் துடிக்கிறார்களே! இந்த மோகம் கன்றிய வெறிக்கு மருந்தை எங்கே தேடுவது?"

 

"மருந்தை அப்புறம் தேடலாம்! முதலில் அந்த ஆளைத் தேடிக் கைக்கு விலங்கு மாட்டி உள்ளே தள்ளவேண்டும். எல்லாம் புத்திசாலித்தனமாகச் செய்த பயல், இந்த மணிபர்ஸ்ஸை மட்டும் என் கடையில் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். நேற்று நான் கடை பூட்டுமுன், தற்செயலாக இதைப் பிரித்துப் பார்த்த போது இந்தப் படம் கண்ணில் பட்டது. அது நினைவிருந்ததனால் தான் நீ கொடுத்த படத்தைப் பார்த்த அளவில் கண்டுபிடித்தேன்" என்று முருகானந்தம் கூறியதைக் கேட்டு, "அது சரி தம்பி! படத்தையும் மணிபர்ஸையும் வைத்துக் கொண்டு ஆளை எப்படி நீ கண்டுபிடிப்பாய்? கடிதம் உறையின்றி இருக்கிறதே? முகவரியும் எழுதப்பெறவில்லையே" என்று சந்தேகத்தை வெளியிட்டான் அரவிந்தன்.

"பயல் இன்னும் நாலைந்து மாதங்களாவது நான் தைத்துக் கொடுத்த உடையைப் போட்டுக் கொண்டுதானே திரிய வேண்டும். போட்டோ வேறு இருக்கிறது நம்மிடம். கண்டுபிடித்துவிடலாம் பயப்படாதே" என்று முருகானந்தம் அரவிந்தனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த போது பூரணி உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு தந்தி உறை இருந்தது. உறையிலிருந்து தந்தியை எடுத்து அவள் அரவிந்தனிடம் தந்தாள். தந்தி விடியற்காலம் நான்கு மணிக்குத் திருச்சியிலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது.

'திரும்பி வர வழிச் செலவுக்குப் பணமில்லை. திருச்சி இரயில் நிலையத்தில் இருக்கிறேன். வந்து அழைத்துப் போகவும். விவரம் நேரில் - வசந்தா."

தந்தி மங்களேஸ்வரி அம்மாள் பேருக்கு வந்திருந்தது. அரவிந்தன் படித்துவிட்டு முருகானந்தத்திடம் கொடுத்தான்.

 

15

 

"மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல

மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா

பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்

பாரில் அறங்கள் வளரும், அம்மா!"

                                                                                           -- கவிமணி

 

பூரணி கொண்டு வந்த தந்தியை முருகானந்தம் படித்தான். தன்னிடமிருந்த புகைப்படங்களையும் வசந்தா கைப்பட எழுதிய கடிதத்தையும் காட்டி அவளுக்கு விளக்கிச் சொன்னான்.

 

"சினிமாவில் கதாநாயகியாய் நடிக்க வாய்ப்பு உண்டாக்கித் தருவதாக இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறானோ அந்த ஆள்? அவனுடைய போதாத வேளை; இங்கே மதுரையில் என்னிடம் உடைகள் தைத்து வாங்கிக் கொண்டு இந்த மணிபர்ஸையும் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். இந்தத் தடவை நிச்சயமாக அகப்பட்டுக் கொண்டு கம்பி எண்ணப் போகிறான் பாருங்கள். அக்கா... நான் இவனைச் சும்மா விடப்போவதில்லை. எப்படியாவது கண்டுபிடித்து உள்ளே தள்ளப் போகிறேன்" என்று மணிபர்ஸின் மைக்கா உறைக்குள் இருந்த ஆணின் படத்தை பூரணிக்குக் காட்டிச் சினமாகப் பேசினான் முருகானந்தம். அப்போது அருகிலிருந்த அரவிந்தன் பூரணியின் முகத்தை நோக்கி முறுவல் செய்தவாறு கேட்கத் தொடங்கினான்:

"நீ என்னவோ நாள் தவறாமல் தமிழ்நாட்டுப் பெண்மையின் சிறப்பையும் பண்பாட்டையும் பற்றி உங்கள் மங்கையர் கழகத்தில் சொற்பொழிவுகள் செய்வதாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறாய்! வளர்கின்ற தலைமுறையைச் சேர்ந்த புதுப்பெண்கள் எப்படி இருக்கிறார்கள் பார்த்தாயா? தொட்டியில் வளரும் குரோட்டன்ஸ் செடி மாதிரி வேரூன்றிக் கொள்ள இடமில்லாமல் வெறும் கவர்ச்சி மட்டும் நிறைந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பதிவின்றி வாழ்கிறார்களே! சினிமாவில் நடிக்க இடம் வாங்கித் தருகிறேன் என்றவுடன் படிப்பு, குடும்பப் பெருமை, செல்வாக்கு எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு முன்பின் தெரியாத ஆணுடன் கிளம்புகிற அளவுக்கு அசடாய்ப் பைத்தியமாய் நிலையிழந்து ஓடலாமா ஒரு பெண்? பாதி வழியில் ஏமாந்து, பணத்தைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பி வரச் செலவுக்கு இல்லாமல் பெற்றவளுக்குத் தந்தி கொடுக்க வெட்கமாக இராதா ஒரு பெண்ணுக்கு! தப்பு செய்த மனமும் கைகளும் அதற்காகக் கூச வேண்டாமோ?"

"பெண் தன்னைப் பற்றி அதிகக் கவலை கொள்ள நேராமல் சமூகத்தின் பொது அறங்களே அவளுடைய நிறைக்குக் காவலாகி அவளைக் காத்த காலத்தில் கூட அவளுக்கு அந்தக் கூச்சமும் வெட்கமும் இருந்தது! ஆனால் இன்றோ சமூகத்தின் பொது அறங்கள் மாறி வளர்ந்துவிட்டன. பெண் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டிய காலம் இது. அசட்டு ஆசைகளால் ஏமாறக்கூடாது. ஆனால் இவள் ஏமாந்துவிட்டாள். நான் கருத்துக்களைக் கூறும் முறையிலும், சொற்பொழிவு செய்வதிலும் கேட்பவர் பின்பற்றத் தூண்டும் சக்தி குறைவு என்பதற்கு இது ஒரு அடையாளமோ என்று தோன்றுகிறது அரவிந்தன்! என் ஆற்றலை நான் இன்னும் அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்" என்றாள் பூரணி. அரவிந்தனுடைய அந்தப் பேச்சு, 'பிறருக்கு வழிகாட்டியாகிற ஆற்றலை உன்னிடம் நீ இன்னும் அதிகமாகத் தூண்டிவிட்டுக் கொள்ளவேண்டும்' என்று தன்னை மென்மையாகக் குத்திக் காட்டியது போல் தொனித்தது பூரணிக்கு. இந்தப் பேச்சை இதற்கு மேல் வளர்க்காமல், "நானும் அந்த அம்மாளும் காரில் திருச்சிக்குப் புறப்படுகிறோம். எங்களோடு உங்கள் இருவரில் யாராவது ஒருவர் உடன் வந்தால் நல்லதென்று அந்த அம்மா கருதுகிறார்கள்" என்று நடக்கவேண்டிய காரியத்தை அவசரப்படுத்திக்கொண்டு சொன்னாள் பூரணி.

"முருகானந்தம்! நீ இவர்களோடு திருச்சிக்குப் போய்விட்டு வா. தையற்கடைச் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டுப் போ. கடை வேலையாட்கள் வந்தால் நான் சாவியைக் கொடுத்து விடுகிறேன்" என்று முருகானந்தத்தைப் புறப்படச் சொன்னான் அரவிந்தன்.

"நான் எதற்கு அரவிந்தன்? அந்த அம்மாவும் பூரணியக்காவும் போனால் போதுமே. துணைக்கு கார் டிரைவர் இருப்பான்."

"இல்லை, நீ கட்டாயம் போக வேண்டும். ஏதாவது வம்பு வந்தாலும் சமாளிப்பதற்கு நீதான் சரியான ஆள். மறுக்காமல் போய்விட்டு வா. கார் பெரியது. மணிக்கு ஐம்பது மைல் போனால் எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடலாம்." அரவிந்தன் இவ்வாறு வற்புறுத்தவே முருகானந்தத்தால் தட்டிக் கழிக்க முடியவில்லை. தையற்கடைச் சாவியைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான். போகும்போது பூரணி அரவிந்தனிடம் கூறினாள்:

"நீங்கள் ஓர் உதவி செய்யவேண்டும் அரவிந்தன். முடிந்தால் இந்தப் பையனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கண்டிக்க வேண்டும். எக்கேடு கெட்டுப் போகட்டும் என்றுதான் பேசாமல் இருக்க முயன்றேன். ஆனால் மனம் கேட்கவில்லை. உடன்பிறந்த பாசம் எதையாவது நினைத்து வேதனைப்படச் சொல்கிறது"

"யார், உன் தம்பி திருநாவுக்கரசைப் பற்றித்தானே சொல்கிறாய். நான் பார்த்து அழைத்து வருகிறேன். நீ போய் வா" என்றான் அரவிந்தன்.

பூரணியையும் முருகானந்தத்தையும் அனுப்பிவிட்டு உள்ளே வந்து அமர்ந்தான் அரவிந்தன். முதல்நாள் மாலைக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தபோது அவன் உள்ளம் தெளிவிழந்து தவித்தது. பூரணியின் தம்பி கெட்ட பழக்கங்களால் இப்படி ஆகிவிட்டானே என்று நினைக்கும் போது துயரமும் கவலையும் கொண்டான். அச்சகத்தின் பின்பக்க வழியாக நெருப்பு வைக்கும் தீயநினைவோடு வந்து போன ஆளை எண்ணியபோது பொறாமையின் சிறுமையை எண்ணி வேதனை கொண்டான். தாயைக் கதிகலங்கச் செய்துவிட்டுப் பணத்தோடு ஓடிப்போன மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றி எண்ணியபோது அனுதாபமும் இரக்கமும் உற்றான். குழப்பமான மன நிலையோடு அறையிலிருந்தவாறே வெளியே நோக்கின அவன் கண்கள். எதிரே சன்னலுக்கு நேர் கிழக்கே பூமியைப் பிளந்துகொண்டு மேலெழுந்து நிற்கும் சத்தியம்போல் கோபுரம் விடியற்காலை வானத்தின் பின்னணியில் அற்புதமாய்த் தெரிந்தது. கூடலழகப் பெருமாள் கோயிலுக்கு வைகை நதியிலிருந்து திருமஞ்சன நீர் சுமந்து செல்லும் யானையின் மணியோசை காலைப்போதின் அமைதி கவிந்த வீதியெல்லாம் நிறைத்துக் கொண்டு ஒலிப்பது போல் அழகாக ஒரு பிரமை. எதிர்ப்பக்கம் ஒரு வீட்டு மாடியிலிருந்து சங்கீதம் பழகும் இளம் பெண் ஒருத்தி உலகத்தின் இன்பமயமான சௌந்தர்ய சக்திகளையெல்லாம் தட்டி எழுப்புவது போல் வீணையையும் தன் குரலையும் இனிமைக்கெல்லாம் இனிமையான ஒரு பேருணர்வில் குழைத்து உதயராகம் பாடிக்கொண்டிருந்தாள். குழாயடியில் குடங்கள் மோதும் விகாரமான ஓசையும் வாய்கள் மோதும் வசைமொழிகளுமாக இது மண்ணுலகம் தான் என்று நினைவுபடுத்துகிறார்போல் ஓர் அடையாளம் அற்புதமான இந்த வைகறைச் சூழ்நிலையில் மலர்வதற்குத் துடிக்கிற அரும்புகள் போல் அவன் மனத்தில் சில நினைவின் அரும்புகள் முறுக்கு நெகிழ்ந்தன. சட்டைப் பையிலிருந்து எப்போதும் தன்னிடம் இருக்கும் சிறிய திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அந்தச் சமயத்தில் தன் மனத்தில் அரும்பியிருந்த சிந்தனைகளுக்கு ஏற்ற சில குறட்பாக்களைத் தேடிப் படித்து அவற்றின் உணர்வில் ஆழ்ந்தான். இந்த மாதிரி மனநிலை அடிக்கடி உண்டாகும் அவனுக்கு. சித்தப்பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருப்பான். சில வேதனை நிறைந்த சிந்தனைகளின் போது கண்கள் கலங்கி விடுவதும் உண்டு. இப்படிப்பட்ட உருக்கமான மனநிலை முற்றும் போது அவன் மன விளிம்பில் கவிதைகளுக்கான செழிப்புள்ள சொற்கள் ஒன்றுகூடி உருவாகி வெளிவரத் துடிக்கும். கருவிலிருந்து வெளிவரத் துடிக்கும் நிறைமாதத்துக் குழந்தைபோல் இந்த வேதனை அவனது மனத்தின் இரகசியம். இத்தகைய சிந்தனைச் சூழ்நிலையில் உள்ளத்தின் மலர்ச்சியையும் சேர்த்து அவன் முகத்தில் பார்க்கலாம். கையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கிறாற்போல் மலர்ந்த முகத்தோடு ஒரு விவேகானந்தர் படம் பார்த்திருப்பீர்களே! அந்த முகத்தில் உங்களைக் கட்டுப்படுத்தி நிற்க வைத்துவிடுகிற ஏதோ ஒரு களை இருக்கும். சிந்தனையில் பார்க்கும் போது அரவிந்தனின் முகத்தில் நிலவும் ஒளி இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

மூழ்கிச் சிந்திக்கிறபோது உடம்பில் வேர்க்கும் அவனுக்கு. ஆனால் அந்த சிந்தனை முடிகிறபோதோ, காயரும்பாக இருந்த பிச்சிமொட்டு இறுக்கம் நெகிழ்ந்துபோய் பிச்சிப்பூவாக மலர்கின்றபோது மணக்குமே ஓர் அற்புத மணம், அதுபோல் மணக்கும் அவன் உள்ளம். மணத்தின் சிறப்பால் மோர்ந்து பார்க்கிறவர்களையெல்லாம் பித்துக்கொள்ளச் செய்வதனால்தான் இந்தப் பூவுக்குப் பிச்சி, பித்திகை என்று பெயர் வந்திருக்கலாமோ? என்று அரவிந்தன் நினைப்பான். இந்தப் பூ அருகில் இருக்க வேண்டுமென்பதில்லை. இதன் மணத்தைப் பற்றி நினைத்தாலே உள்ளம் துள்ளும் அவனுக்கு. 'கடவுள்' உலகத்தைப் படைக்கும்போதே இன்ன இன்ன துர்நாற்றங்கள் உலகத்தில் உண்டாகலாம் என்பதை அனுமானம் செய்துகொண்டுதான் உலகத்தில் மணமுள்ள பூச்செடிகளைப் படைத்தார் என்று கற்பனை செய்து அரவிந்தன் ஓர் அழகான கவிதை எழுதியிருந்தான். எப்போதோ அதை அவனுடைய நோட்டுப் புத்தகத்தில் படித்துவிட்டுப் பூரணி அவனை ஒரு கேள்வி கேட்டாள்.

 

"இன்னோர் அபூர்வமான அழகு உங்களுக்குத் தெரியுமா அரவிந்தன்? அப்பா தமிழ்ச் சொற்களின் ஒலி வனப்புப் பற்றி ஓர் ஆராய்ச்சி நூலை எழுதிக் கொண்டிருந்தபோதே எனக்கு இந்த உண்மையைச் சொல்லிக் கொடுத்தார். 'பூ, மலர்' இந்த இரண்டு தமிழ் வார்த்தைகளில் எதைச் சொல்லிப் பார்த்தாலும், சொல்வதற்காக வாய் திறக்கும் போது உங்கள் உதடுகளே பூ மலர்வதுபோல் மலர்ந்து பிரியும். , இந்த இரண்டு எழுத்துக்களையும் உதடு மலராமல் சொல்லவே முடியாது."

தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்துகொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் 'தமிழ்' என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்றுவித நிலைகள் இருந்தன.

அவள் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண். அவள் தந்தையின் நூல்களை அவளிடமிருந்து வாங்கி வெளியிடுகிற முறையில் ஓர் உறவு. அந்த உறவுதான் மற்ற உறவுகளுக்கும் காரணம். ஒருவருக்கொருவர் தத்தம் இலட்சியங்களையும், உள்ளங்களையும் உணர்ந்து பழகிய அன்புப் பழக்கம் ஓர் உறவு. அது அந்தரங்கமான உறவு. இதயங்களுக்கு மட்டுமே புரிந்த உறவு அது. வாழ்க்கையின் நடைமுறையில் ஆண்களும் பெண்களும் முகத்தையும் உடம்பையும் பார்த்துக் கொள்கிற இச்சைக் காதல் அன்று அது. மெல்லிய மன உணர்வுகளில் நுணுக்கமாகப் பிறக்கும் காவியக் காதல் அவர்களுடையது. மூன்றாவது நிலை அறிவுக்கடலாய் விளங்கும் அவள், தமிழில் நுணுக்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது அவன் சாதாரண மாணவனைப் போல் ஆகிக் கேட்டுக்கொண்டிருக்கிற உறவு. அரவிந்தன் கவிஞன். சிந்தனையாளன். இலட்சியவாதி. அழகன். எல்லாமாக இருந்தும் ஞானச்செல்விபோல் அவள் தமிழை வாரி வழங்கும்போது அவள் முன் தன் கம்பீரங்களை மறந்து சிறுபிள்ளைபோல் கேட்டுத் தெரிந்து கொள்வதே இன்பமாக இருந்தது அவனுக்கு. முருகானந்தம் தன்னிடம் அப்படி இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான். நண்பனைப் போல் தோளோடு தோள் பழகினாலும் சில சமயங்களில் முருகானந்தம் தன்முன் மாணவனாக அமர்ந்து விடுவதைப் போன்று, தன் இதயம் கவர்ந்து, தனக்கு இதயம் கொடுத்தவளாகப் பழகினாலும் பேராசிரியராகிய தந்தையிடம் கற்றிருந்த பேருண்மைகளைப் பூரணி பேசும்போது அவன் குழந்தைபோலாகிக் கேட்டுக் கொண்டிருந்து விடுவதிலேயே இன்பம் கண்டான்.

அன்று காலை எண்ணங்கள் அலைபாயும் நிலையற்ற மனநிலையோடு இருந்தபோது இவ்வளவும் நினைவுற்றான் அவன். தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கீழ்க்கண்டவாறு எழுதினான்.

'பழைய காலத்தில் அசுணம் என்ற ஒருவகைப் பறவை இருந்ததாம். அதன் செவிகளுக்கு இனிய நளினமான இசைகளை உணர்ந்தே பழக்கமாம். விவகாரமான கெட்ட ஓசைகளைக் கேட்க நேர்ந்துவிட்டாலே போதும், துடிதுடித்துக் கீழே விழுந்து உயிர் பிரிந்துவிடுமாம் அந்த அசுணப் பறவை.'

'வாழ்வின் தீமை நிறைந்த கெட்ட செய்திகளை உணரும் போது இந்த அசுணப் பறவைபோல் நாமே அழிந்து விட்டாலென்ன என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. நேற்றுதான் எத்தனை கெட்ட செய்திகளை உணரும்படி நேர்ந்து விட்டது. அந்தச் சிறுபையன் திருநாவுக்கரசு எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து, எந்த மாதிரி கெட்டுப் போய்விட்டான் என்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது. அவனாவது சிறு பையன். கண்டித்துப் பயமுறுத்தி வழிக்குக் கொண்டுவந்து விடலாம். குதிர்மாதிரி வளர்ந்த பெண்ணுக்கு ஓடிப்போக தைரியம் வந்திருக்கிறது! 'பெண்கள்' நம்முடைய சமுதாயப் பண்ணைக்கு விதை நெல்லைப் போன்றவர்கள். வருகின்ற தலைமுறைகளை நன்றாகப் பயிர் செய்ய வேண்டியவர்கள். விதை நெல்லே கெட்டுச் சீரழிந்தால் விளைவு என்ன ஆகும்? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. பாரத புண்ணிய பூமியின் பெருமையெல்லாம் கங்கையும் காவிரியும் போலப் புனிதமாகப் பாய்ந்து வரும் அதன் தூய தாய்மைப் பிரவாகத்தில் அல்லவா இருக்கிறது? இந்தப் பெண்மையின் புனித வெள்ளத்தில் அழுக்குகள் கலந்தால் என்ன ஆகும்? விதை நெல்லையே அழித்துக் கொண்டிருக்கிறோமா நாம்?"

உள்ளே யாரோ நடந்து வருகிற மிதியடி ஒலி கேட்கவே அரவிந்தன் எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்தான். அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளே வந்துகொண்டிருந்தார். அவசர அவசரமாக நோட்டுப் புத்தகத்தை மூடி மேஜை இழுப்பறைக்குள் திணித்துவிட்டு எழுந்து நின்றான் அரவிந்தன்.

"என்னடா அரவிந்தன்! நேற்று இரவு வீட்டில் குழந்தைகள் தொந்தரவு பொறுக்க முடியாமல் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போனேன். ஆங்கிலப் படமாக இருந்ததினால் சீக்கிரம் விட்டுவிட்டான். திருப்பிப் போகிறபோது பார்த்தால் இங்கே அச்சகத்தில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறதே! அவ்வளவு நாழிகை உறக்கம் விழித்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?"

மீனாட்சிசுந்தரம் உள்ளே வருகிறபோது மேற்படி கேள்வியோடு வந்தார். அவருக்கு அவன் பதில் சொல்லுவதற்குள் மேலும் அவரே தொடர்ந்தார்: "என்னதான் வேலை மலையாகக் குவிந்து கிடந்தாலும் இராத்தூக்கம் விழிக்கிற பழக்கம் உதவாது. நேற்று இரவு சினிமா விட்டுப் போகும்போது இங்கே விளக்கு எரிவதைப் பார்த்தவுடனேயே காரை நிறுத்தி இறங்கி உன்னைக் கண்டித்துவிட்டுப் போக நினைத்தேன். நீ தூக்கம் விழித்துக் கண்ணைக் கெடுத்துக் கொள்வது போதாதென்று அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டானை வேற துன்பப்படுத்துகிறாயே?"

 

"உட்காருங்கள், எல்லா விவரமும் சொல்கிறேன்" என்று அவரை உட்காரச் செய்துவிட்டு எதிரே நாற்காலையைப் பிடித்துக் கொண்டு நின்றவாறே கூறலானான் அரவிந்தன்.

அவன் பாதி கூறிக் கொண்டிருக்கும்போதே வாசலில் 'ஐயா' என்று குரல் கேட்டது. அரவிந்தன் வெளியே எட்டிப் பார்த்து தையற்கடை வேலையாள் வந்திருப்பதைக் கண்டான். முருகானந்தம் கொடுத்துவிட்டுப் போயிருந்த சாவியை அந்த வேலையாளிடம் அளித்து, "முருகானந்தம் திருச்சிக்குப் போயிருக்கிறான். சாயங்காலத்துக்குள் வந்துவிடலாம். வழக்கம் போல் கடையைத் திறந்து வேலையைக் கவனித்துக் கொள்ளச் சொன்னான்" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றியோ, பூரணியின் தம்பியைப் பற்றியோ மீனாட்சிசுந்தரத்திடம் விவரிக்கவில்லை. அச்சகத்தின் பின்புறம் இரவில் நடந்த அசம்பாவிதத்தைச் சொல்லி சுவர் எழுப்பி கதவு போட வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினான். அச்சகத்தின் பின் பக்கத்தில் முதல் நாளிரவு நடக்க இருந்த கொடுமையைக் கேள்விப்பட்டபோது, மீனாட்சிசுந்தரம் அப்படியே மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டார். சிறிது நேரம், அரவிந்தனுக்குப் பதிலே கூறவில்லை. அவர் முகத்தில் திகைப்பும், வேதனையும் தோன்ற இருந்தார் அவர்.

"நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்வதில்லையே அப்பா. அறிவுக் களஞ்சியமாகிய பேராசிரியரின் நூல்களை மலிவான விலையில் வெளியிட்டால் நல்ல கருத்துகள் நாட்டில் பரவுமே என்று தான் இந்த வெளியீட்டு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டேன். இதற்காக என்மேல் இவ்வளவு விரோதமும் பொறாமையும் கொள்ள வேண்டுமா?" என்று நொந்து கூறினார் அவர்.

உடனே கொத்தனாரை அழைத்துக் கொண்டு வந்து சுவர் எழுப்பிக் கதவும் அமைக்க ஏற்பாடு செய்தார். அரவிந்தன் அவரிடம் ஒரு மணி நேரம் வெளியே செல்ல அனுமதி வாங்கிக் கொண்டு போய் அந்தப் பையன் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கொடுத்து அழைத்து வந்தான். "இன்னும் நாலைந்து நாட்களில் பெஞ்ச் கோர்ட்டில் விசாரணை நடக்கும்போது பையனை அழைத்து வந்து என்ன அபராதம் போடுகிறார்களோ அதைக் கட்டிவிட்டுப் போகவேண்டும்" என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் அவனிடம் கூறியனுப்பினார். வரும்போதே அந்தப் பையன் மனத்தில் பதியும்படி இதமாக அறிவுரை சொல்லிக் கொண்டு வந்தான் அரவிந்தன். பையன் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்தவாறே உடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

பையனோடு அரவிந்தன் அச்சகத்துக்குத் திரும்பியபோது கொல்லைப் பக்கம் சுவர் எழுப்புகிற வேலை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. செங்கல்கள் வந்து இறங்கியிருந்தன. சிமெண்டு மூட்டைகள் அடுக்கியிருந்தன. மீனாட்சிசுந்தரம் அருகில் நின்று சிற்றாட்களையும் கொத்தனாரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். உட்புறம் அச்சகத்து வேலையாட்களும் வந்து வழக்கம்போல் தத்தம் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அரவிந்தன் நீராடி உடை மாற்றிக் கொண்டான். திருநாவுக்கரசையும் உள்ளே அழைத்துப் போய் முகங்கழுவித் தலை சீவிக்கொள்ளச் செய்தான். காலிப் பையனுக்குரிய தோற்றத்தை மாற்றிப் பள்ளிக்கூடம் போகிற பையன் மாதிரி ஆக்கின பின்பே அரவிந்தனுக்கு நிம்மதி வந்தது. சிற்றுண்டி வரவழைத்து இருவரும் சாப்பிட்டனர். "தம்பி! இந்த விநாடியோடு உன் கெட்ட பழக்கங்களையெல்லாம் மறந்து விடு. பழையபடி உன்னைப் படிக்கும் மாணவனாக்கிக் கொள். மார்ச் மாதத்துக்கு இன்னும் அதிக நாளில்லை. இந்தப் பரீட்சை தவறினால் இன்னும் ஓராண்டு வீணாகிவிடும். இரவு-பகல் பாராமல் உழைத்துப் படித்துத் தேர்ச்சி பெற்று விட்டாயானால் புதிய ஆண்டில் கல்லூரிப் படிப்புக்கு நுழையலாம். உன் குடும்பத்து நிலையை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. உன் அக்கா எவ்வளவு காலம் இப்படித் தானே உழைத்து உங்களைக் காப்பாற்ற முடியும்? நீ படித்த பின் உன் தம்பி படிக்க வேண்டும். தங்கை படிக்க வேண்டும். எல்லாவற்றையும் உன் அக்கா ஒருத்தியே தாங்கிச் சமாளிக்க முடியுமா? வீட்டுக் கஷ்டம் தெரிந்து அதற்கேற்ப உன்னைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் அப்பா!" என்றெல்லாம் மனத்தில் உறைக்கும்படி சொல்லித் திருநாவுக்கரசைப் பசுமலையிலுள்ள அவன் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். பையனைப் பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொல்லித் தனியாக அனுப்பினால் மறுபடியும் "கழுதை கெட்டால் குட்டிச் சுவர்தான்" என்கிற மாதிரி எங்கேயாவது ஊர்சுற்றக் கிளம்பி விடுவானோ என்று அரவிந்தன் சந்தேகப்பட்டான். அதனால் தான் அச்சகத்தில் மேசை நிறையக் குவிந்து கிடந்த வேலைகளையெல்லாம் திரும்பி வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டுவிட்டுத் தானும் பையனோடு பசுமலைக்குச் சென்றான்.

மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறிஸ்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள்.

அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச் சந்தித்தான். அவர் அவனுக்கு வணக்கம் செலுத்தி வரவேற்று எதிரே இருந்த நாற்காளியில் உட்காரச் சொன்னார். அரவிந்தன் அதில் உட்கார்ந்தான்.

"சார்! இந்தப் பையன் விஷயமாக உங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். இவனுடைய அக்காவுக்கு உங்களைச் சந்தித்து இவனைப் பற்றிச் சொல்ல நேரம் ஒழியவில்லை. நான் இவர்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவன்" என்று அரவிந்தன் பேச ஆரம்பித்ததும் தலைமையாசிரியர் அவநம்பிக்கைத் தோன்ற நகைத்தார். அவருடைய தலைக்கு மேலே சிலுவையில் அறைந்த கோலத்தில் ஏசுநாதரின் அழகுருவம் கண்களில் கருணையும், உடம்பில் இரத்தமும் ஒழுகிடக் காட்சி தந்தது. அரவிந்தனின் பார்வை அந்தப் புண்ணிய மூர்த்தியின் படத்தில் பதிந்தது. தலைமையாசிரியர் அவனுக்கு மறுமொழி கூறலானார்:

"இந்தப் பையனைப் பற்றிச் சொல்வதற்கு இனிமேல் என்ன இருக்கிறது? ஒழுக்கத்தையும் நல்ல நடத்தையையும் உன்னிப்பாக ஒவ்வொரு வினாடியும் கவனிக்கும் இங்கேயே வழிகெட்டுப் போய்விட்ட பையனை இனி என்ன செய்வது? பள்ளி இறுதியாண்டுத் தேர்வு, எஸ்.எஸ்.எல்.சி. எழுதும் ஒரு மாணவன் குறைந்தபட்சம் இத்தனை நாட்களாவது பள்ளிக்கூடம் வந்திருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதில் கால்வாசி நாட்கள் கூட இந்தப் பையன் பள்ளிக்கு வரவில்லை. ஆகவே இனிமேல் இவன் பள்ளிக்கூடத்துக்குத் தவறாமல் வந்தாலும் அரசாங்கப் பரீட்சை இந்தத் தடவை எழுத முடியாது. அப்படி முடியாதிருக்கிறபோது வீணுக்குச் சம்பளத்தைக் கொடுத்துக் கொண்டு இங்கு வருவது அநாவசியம். மறுபடியும் புதிதாக அவனை அடுத்த ஆண்டில் இங்கே சேர்த்தாலே போதும்."

"சார்! நீங்கள் அப்படிச் சொல்லிவிடக்கூடாது. இந்தப் பையன் பெரிய தமிழ்க் குடும்பத்துப்பிள்ளை. பழக்கக் கேடுகளால் இப்படி ஆகிவிட்டான். இனி ஒருபோதும் கெட்ட வழியில் போகாமல் கவனித்துக் கொள்கிறோம். எப்படியாவது இந்தத் தடவை..." என்று அரவிந்தன் குழைந்து வேண்டிக் கொண்டதை அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

"மன்னிக்க வேண்டும். உங்களைப் பார்த்தால் இரக்கமாக இருக்கிறது. ஆனால் இது கல்வித்துறையின் சட்டம். இந்தப் பையனுக்காகவோ, உங்களுக்காகவோ நான் இதை மாற்றுவதற்கில்லை" என்று சிரித்தவாறே கூறிவிட்டு மேசை மேலிருந்த காகிதக் கட்டு ஒன்றைப் பிரித்துக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார் தலைமையாசிரியர். அரவிந்தன் மேலே நிமிர்ந்து பார்த்தான். இயேசுநாதருடைய படத்தில் நிமிடத்துக்கு நிமிடம் கண்களில் கருணையும் மார்பின் குருதியும் அதிகமாகி வளர்ந்துகொண்டு வருவதுபோல் தோன்றியதோ என்னவோ!

"வருகிறோம்" என்றான் அரவிந்தன்.

"செய்யுங்கள்" என்று குனிந்த தலை நிமிராமல் மறுமொழி கூறினார் அவர். திருநாவுக்கரசுடன் வெளியேறினான் அரவிந்தன். "தம்பி பார்த்தாயா? முட்டாள்தனமாகப் பள்ளிக்கூடத்துப் படிப்பை அது முடிகிற தறுவாயில் பாழாக்கிக் கொண்டு விட்டாயே? இன்னும் ஓராண்டு காலம் காத்திருந்து உன்னை மறுபடியும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க உன் அக்காவால் முடியுமா?" என்று பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து கீழிறங்கிய போது அரவிந்தன் ஏக்கத்தோடு கூறிய சொற்கள் பையனின் செவிகளில் விழுந்தும் அவன் ஒன்றும் சொல்லாமல் கல்லடிமங்கன் போல் தலைகுனிந்து நடந்துகொண்டிருந்தான்.

 

'எப்படியும் இந்தப் பையனைத் திருத்தி நல்ல வழியில் கொண்டு வந்து விடவேண்டும். சிறிது காலத்துக்கு அச்சகத்திலேயே நம்மோடு பக்கத்தில் வைத்துக் கொண்டு நம் கவனத்திலேயே ஆளை உருவாக்கிவிடலாம்' என்று அரவிந்தன் மனத்தில் அப்போது ஒரு தீர்மானம் உண்டாகியிருந்தது.

திரும்பியதும் முதல் வேலையாகத் திருநாவுக்கரசை உள்ளே அழைத்துப் போய் 'பைண்டிங்' பகுதியில் உட்கார்த்தி அச்சடித்த பாரங்களை மடித்து அடுக்கச் சொன்னான். 'பையனைக் கொஞ்சம் கவனித்துக் கொள்' என்று அச்சகத்து போர்மேன் இடத்திலும் கூறிவிட்டு வந்தான்.

"தம்பி! எனக்குத் தெரியாமல், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நீ எங்கும் வெளியேறிச் செல்லக்கூடாது. வேலையைக் கவனமாகப் பார்" என்று பையனிடமும் எச்சரித்தான். சிறிது நேரம் கழித்து அச்சகத்தில் உட்புறம் சுற்றிப் பார்த்துவிட்டு முன்புறத்து அறைக்கு வந்த மீனாட்சிசுந்தரம் அரவிந்தனைக் கேட்டார்.

"என்னப்பா இது? பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பையன் இங்கே உட்கார்ந்து தாள் மடித்து அடுக்கிக் கொண்டிருக்கிறான். அவன் பள்ளிக்கூடத்தில் படிக்கிறானா இல்லையா? போர்மேனிடம் கேட்டால் நீ கொண்டு வந்து உட்கார்த்தி வைத்துவிட்டுப் போனதாகச் சொல்கிறான்!" என்றார் அச்சக அதிபர் மீனாட்சிசுந்தரம்.

அரவிந்தன் அவருக்கு எல்லா விவரங்களும் சொன்னான். "அடப்பாவமே? அவருக்கு இப்படிப் பிள்ளையா வாய்த்தது?" என்று அதைக் கேட்டு அவரும் அலுத்துக் கொண்டார். அவன் தனது ஏற்பாட்டை அவரிடம் கூறி இணங்க வைத்தான்.

நடுப்பகல் பன்னிரண்டேகால் மணி சுமாருக்கு வேர்க்க விறுவிறுக்க அலைந்த கோலத்தோடு முருகானந்தம் வந்து சேர்ந்தான். அரவிந்தன் அவனைக் கேட்கும் முன் அவனே கூறலானான். "நான் நினைத்தபடி நடந்திருக்கிறது அரவிந்தன்! அந்தப் பெண் வசந்தாவை ஏமாற்றி அழைத்துப்போன ஆள் திருச்சி வெயிட்டிங் ரூமில் அவளை இருக்கச் சொல்லிவிட்டு ஊருக்குள் யாரையோ பார்த்துவிட்டு உடன் திரும்பி வருவதாகவும், அடுத்த எக்ஸ்பிரஸில் சென்னை போகலாமென்றும் கூறிச் சென்றானாம். சென்றவன் திரும்பவே இல்லையாம். பணத்தையும் சாமர்த்தியமாகக் கேட்டு அவளிடமிருந்து முன்பே வாங்கிக் கொண்டானாம். விடியற்காலை நான்கு மணிவரை காத்துப் பார்த்து ஏமாந்த பின் கையில் மீதமிருந்த சில்லறையைத் திரட்டித் தந்தி கொடுத்ததாம் அந்தப் பெண். பயல் நம்மிடம் மணிபர்ஸைக் கோட்டவிட்ட ஆள்தானாம். என்னிடமிருந்த போட்டோவைக் காட்டி அந்தப் பெண்ணிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன்..." என்று முருகானந்தம் கூறியவுடன், "இப்போது எங்கே அவர்கள்? காரில்தானே திரும்பினீர்கள்?" என்று அவனைக் கேட்டான் அரவிந்தன்.

 

"பாவம்யா அந்தப் பெண்! சினிமா நடிப்பு ஆசையில் முதலில் ஏமாந்து போய்விட்டது. இப்போது குமுறிக் குமுறி அழுகிறது. எல்லோரும் அந்த அம்மாள் வீட்டில் தான் இருக்கிறார்கள். பூரணியக்காதான் ஏதேதோ சமாதானம் கூறி அந்தப் பெண்ணை நடந்ததெல்லாம் மறக்கச் சொல்கிறார்கள்" என்று முருகானந்தம் கூறியபோது அரவிந்தனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. சந்தேகத்தை முருகானந்தத்திடமே கேட்டான். "பணம் இரண்டாயிரம் ரூபாய் பறிபோனதைத் தவிர வேறு ஒரு வம்பும் இல்லை" என்று அவன் பதில் கூறிய பின்பே அரவிந்தனுக்கும் நிம்மதி வந்தது. பெண்களின் தூய்மை என்பது ஐசுவரியத்தைக் காட்டிலும் மகத்தானதாயிற்றே.

"பொல்லாத காலம் அப்பா இது! மங்கையராகப் பிறப்பதற்குத் தவம் செய்ய வேண்டுமென்று கவிமணி பாடியிருப்பதாக நீ அடிக்கடி சொல்வாய் அரவிந்தன்! இந்தக் காலத்தில் பெண், பெண்ணாகப் பிறவாமல் இருக்கத் தவம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெண்ணாக இருப்பது மிகவும் அருமையான பாதுகாப்புக்குரிய காரியமாயிருக்கிறது" என்று சொல்லிவிட்டுத் தையல் கடைக்குப் போனான் முருகானந்தம். அவனை அனுப்பிவிட்டு அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாள் வீட்டுக்குப் போனான்.

இது நடந்து பதினைந்து நாட்களுக்குப் பின் ஒருநாள் முருகானந்தத்தின் தையல் கடையில் யாருக்கோ அவசரமாக 'கோட்'டுக்கு அளவெடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

"ஏய் டெய்லர்! உன்னைத்தானே!" என்று வாயிற்புறமிருந்து ஒரு குரல் ஆணவத்தோடு அதிகார அழைப்பு விடுத்தது. முருகானந்தம் திரும்பிப் பார்த்தான். 'பளிச்'சென்று அவன் கண்களில் பதிந்து உறைந்தது அந்த முகம். கொதிப்பும் சினமுமாகச் சிவந்து போக இருந்த முகத்தில் செயற்கையாகச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டே "வாருங்கள் சார்! உங்கள் மணிபர்ஸ் தானே? அது பத்திரமாக இருக்கிறது. முந்நூறு ரூபாயை பதினைந்து நாள் மறந்து போய் பேசாமல் இருந்து விட்டீர்களே? அடடா! வாசலிலேயே நிற்கலாமா சார்! நீங்கள் எவ்வளவு பெரிய சினிமா டைரக்டர் என்பது அப்புறம் தான் எனக்குத் தெரிந்தது. அடேய் பையா! அப்புறம் பித்தானுக்கு ஓட்டைப் போடலாம். ஓடிப்போய் சாருக்கு காப்பி வாங்கி வா. பெரிய சினிமா டைரக்டர் இவர்" என்று வந்தவரை அட்டகாசமாக வரவேற்று உள்ளே உட்கார வைத்தான் முருகானந்தம். வந்தவருக்கோ பயமாயிருந்தது அந்த அபூரவ மரியாதை.

"மணிபர்ஸை எடு எனக்கு நேரமில்லை. அவசரமாகப் போகணும்..." வந்தவர் அவசரப்படுத்தினார்.

"எப்போதும் அவசரந்தானா சார் உங்களுக்கு? கொஞ்சம் பொறுத்துப் போகலாம்! இவ்வளவு நாள் வைத்துக் கொண்டிருந்துவிட்டு வெறும் பணம் மட்டுமா தருவது? வட்டியும் சேர்த்துத் தருகிறேன் சார்" என்று கூறிக்கொண்டே வந்த முருகானந்தம் குபீரென்று முகத்தில் கடுமை குடிபுக... "அயோக்கிய நாயே?" என்று சீறிக்கொண்டு அந்த ஆளுடைய மார்புச் சட்டையைப் பனியனோடு பிடித்து உலுக்கித் தூக்கி நிறுத்தினான்.

 

16

 

அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத்
தேய்க்கும் படை.

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும்
நற்பா லவை.

                                                                    -- திருக்குறள்

 

முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த 'தோல் பெல்ட்'டைக் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று சொல்ல முடியாது.

"போலீஸ் இருக்கிறது, சட்டம் இருக்கிறது, கை வலிக்க நீ ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள், விடு..." என்று தன்னைக் கைப்பற்றி விலக்க முயன்ற அரவிந்தனையும் மீறிக்கொண்டு பாய்ந்தான் முருகானந்தம்.

"விடு அரவிந்தன். இந்த மாதிரி ஏமாற்றுக்காரப் பயல்களைச் சும்மா விடக்கூடாது. எங்கள் தையல் கடையிலே சில முரட்டுத் துணிகளைத் தைப்பதற்கு முன்னால் தண்ணீரில் நனைத்துக் கசக்கி உலர்த்திப் பண்படுத்தினால்தான் தையல் நன்றாக வரும். அதுமாதிரி அடித்து உதைத்து அவமானப்படுத்தினால் தான் இப்படிப்பட்ட பயல்களுக்குப் புத்தி வரும்" என்று கூறிவிட்டு அந்த ஆளை நோக்கி, "ஏண்டா, சினிமாவில் நடிக்கும் ஆசை காட்டி இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறாய்? கைவண்டி இழுத்தாலும் ஒருவரை ஏமாற்றாமல் மானமாக உழைத்துப் பிழைக்கலாமேடா! எப்படியடா உனக்கு இந்தப் புத்தி வந்தது?" என்று கையை ஓங்கிக் கொண்டு போனான்.

அரவிந்தனோடு வாயிலில் கூடியிருந்த கூட்டத்திலிருந்து சிலரும் வந்து சமாதானம் செய்து முருகானந்தத்தின் ஆத்திரத்தை அடக்கினர். ஆளை இழுத்துக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைத்துக் காப்பு மாட்டச் செய்த பின்புதான் முருகானந்தத்தின் கோபம் தணிந்தது. கடந்த நாலைந்து ஆண்டுகளில் பல ஊர்களில் பல பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டு அந்த ஆள் இதே வகையைச் சேர்ந்த மோசடிகளைச் செய்து வந்திருப்பதாகவும், போலீஸார் தேடிக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்ததாகவும் பல உண்மைகள் அப்போது வெளியாயின.

இந்த அசம்பாவிதமான நிகழ்ச்சிக்குப் பின் பூரணி சமயம் வாய்த்த போதெல்லாம் மங்களேஸ்வரி அம்மாளிடம் வசந்தாவைப் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தாள். "உங்கள் மூத்த பெண் பலவீனங்கள் நிறைந்தவளாயிருக்கிறாள். அவளுடைய மனத்திண்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெண்ணுக்கு உடல் பூஞ்சையாகவோ, வலிமையற்றதாகவோ இருப்பது இயற்கை. ஆனால் மனம் நிறைவுடையதாக இருக்க வேண்டும். இதை உணர்த்துகிறாற் போலவே நம்முடைய முன்னோர்கள் பெண்ணின் மனத் தூய்மைக்கு 'நிறை' என்று அழகாகப் பெயரிட்டிருக்கிறார்கள். குடும்ப வாழ்வைப் பழக்கிவிட்டால் உங்கள் பெண் மாறி விடலாம் என்று நினைக்கிறேன். தயங்காமல் விரைவில் திருமணம் செய்துவிடுங்கள். அவளை ஒழுங்காக்குவதற்கு அதுவே சரியான வழி. அடுத்தாற்போல் உங்கள் இளைய பெண் செல்லத்தைப் பற்றி இப்படிப் பயப்படவேண்டாம். அந்தப் பெண் வழி தவற மாட்டாள் என்பதை இன்றைக்கே இந்த வயதிலேயே அவளைப் பார்த்துப் புரிந்து கொண்டு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்னால்" என்றாள் பூரணி.

"நீ சொல்வது நியாயமென்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் திருமணம் என்பது நினைத்தவுடன் முடிகிற காரியமா? நல்ல இடமாகப் பார்த்து ஒப்படைக்க வேண்டுமே" என்று ஏக்கத்தோடு கூறினாள் மங்களேஸ்வரி அம்மாள். அந்த அம்மாளின் தோற்றத்தில் இப்போது பழைய ஒளி இல்லை. மனக் கவலைகளாலும், அவமானத்தாலும் குன்றிப்போயிருந்தாள். வீடு, வாசல், கார், செல்வம், செல்வாக்கு என என்ன இருந்தாலும் மன நிம்மதியில்லாமல் கலகலப்பாக இருக்க முடியாதென்பது அந்த அம்மாளுடைய நிலையிலிருந்து பூரணிக்குப் புரிந்தது. அந்தப் பெண் வசந்தாவும் பழைய திமிர், கலகலப்பு எல்லாம் மாறி புதுப்பிறவி போல் மாடியறையில் அடைந்து கிடந்தாள். கல்லூரிக்குப் போவது நின்று போய்விட்டது. செழிப்பும் மங்களமுமாக இருந்த அந்த வீடு, அந்தக் குடும்பம், நல்ல இருட்டில் விளக்கும் அணைந்த மாதிரி மங்கியிருந்தது. தினசரி மாலையில் மங்கையர் கழகத்துக்குப் போகுமுன் ஒரு நடை அந்த அம்மாள் வீட்டுக்குப் போய் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தாள் பூரணி.

மனிதர்களுடைய நாவுக்குள் கடவுள் கொடுத்த சுவை ஆறுதான். உப்பு, புளிப்பு போன்ற அறுசுவைகளை விடத் தனக்கு அதிகம் விருப்பமான ஏழாவது சுவை ஒன்றை மனிதனாகவே கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான். அதுதான் பிறர் பற்றி நாவு கொழுக்க வம்பு பேசுகிற சுவை. மங்கையர் கழகத்தில் சிலரிடம் இந்தச் சுவைக்கு வரவேற்பு அதிகம். பூரணியிடம் ஒருநாள் வகுப்புகள் முடிந்தவுடன் சில பெண்கள் மங்களேஸ்வரி அம்மாளின் மூத்த பெண்ணைப் பற்றி ஒரு தினுசாகச் சிரித்து கொண்டே கேட்டார்கள். மூடி மறைத்து இரகசியமாக்கிவிட முயன்றிருந்தும், 'அந்தப் பெண் எங்கோ ஓடிப்போய்விட்டு வந்தாள்' என்று ஒருவிதமாகக் கை, கால் முளைத்துப் பரவிவிட்டிருந்தது செய்தி. விசாரித்தவர்கள் பூரணியிடம் படிக்கிறவர்களானாலும் அவளுக்குச் சமவயதுடையவர்களும், அதிக வயதுடையவர்கள் சிலருமாகக் கண்டிப்புக்கு அடங்காதவர்களாக இருந்தார்கள். ஆனாலும் அவள் அவர்களுக்குக் கடுமையாகவே மறுமொழி கூறினாள்.

"இங்கே எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் சம்பளம் தருகிறார்கள். வம்பு சொல்லிக் கொடுப்பதற்கு அல்ல; தயவு செய்து பாட சம்பந்தமான சந்தேகங்களை மட்டும் என்னிடம் கேளுங்கள்."

கேட்டவர்கள் வாய்கள் அடைந்தன. அவளை விட மூத்தவர்கள், அவளை விடச் செல்வத்தால் உயர்ந்தவர்கள், அவளிலும் சிறந்த அழகிய தோற்றத்தையுடையவர்கள் எல்லோரும் அங்கே இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மனம் வைத்தால் அவளுடைய வேலைக்குச் சீட்டுக் கிழித்து வெளியே கூட அனுப்பலாம். ஆனால் அத்தகைய இழிவான நினைவு அவர்கள் மனத்தில் கூடத் தோன்ற முடியாதபடி பூரணியின் தோற்றத்தில் ஏதோ ஒரு புனிதமான கம்பீரம் இருந்தது. அந்த முகம், அந்தக் கண்கள், அந்த அற்புதமான சொற்பொழிவு இவைகளால் அவள் தன்னை அவர்கள் மனத்தில் பதித்துக் கொண்டிருந்தாள். ஆரம்ப நாட்களில் ஒரு மாதிரி இருந்த மங்கையர் கழக நிர்வாகிகள் கூட இப்போது அவள் ஞானம் கனிந்த நாவன்மைக்கும், தூய தோற்றத்துக்கும் முன் தவறாக நினைப்பதற்கே கூசினர். ஆனால் அவளுக்கு இத்தனை பெருமையும் கிடைப்பதற்குப் பாடுபட்ட மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டு நிலை நேர்மாறாக மாறியிருந்தது. வெளியே தலைகாட்டுவதற்கே கூசி வெட்கப்பட்டாள் அந்த அம்மாள். குடிப்பெருமை என்பது நல்ல பால் வெண்கலத்தில் வார்த்த மணியைப் போன்றது. அதில் எங்கேயாவது ஒரு மூலையில் கீறல் விழுந்தாலும் ஒலி கெட்டுவிடுகிறதே - என்று தனக்குள் எண்ணி வருந்தினாள் பூரணி.

சிறிது காலமாக அவள் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாகவும் ஒழுங்குள்ளதாகவும் கட்டுப்பாட்டோடு செயலாற்றிக் கொள்ளப் பயன்படுத்தினாள். மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வருவதற்காகத் திருச்சிக்குப் புறப்பட்ட அன்று அரவிந்தன் சொன்ன வார்த்தைகள் அவள் உள்ளத்தில் உறைத்துத் தைத்திருந்தன. "நீ நாள் தவறாமல் தமிழ்ப் பெண்மையின் சிறப்பைப் பற்றி உங்கள் கழகத்தில் பேசுகிறாய்! அதனால் என்ன பயன்! கெட்டுப் போகிறவர்கள் கெட்டுப் போய்க்கொண்டுதானே இருக்கிறார்கள்" என்று அவன் வேடிக்கையாகக் குத்திக் காட்டிப் பேசியதை மெய்யாகவே தன்னை நோக்கி விடுக்கப்பட்ட அறைகூவலாக எடுத்துக் கொண்டிருந்தாள் அவள். அறிவுத் துடிப்பு நிறைந்த அவள் நெஞ்சத்தில் 'உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்துக்கு நீ ஏதாவது புதிதாகச் செய். பெரிதாகச் செய். உன்னையும் உன் சொற்பொழிவுகளையுமே நீ ஏன் ஓர் இயக்கமாகச் செய்து கொள்ளக்கூடாது?' என்று ஓர் உள்ளுணர்வு கிளர்ந்தது. வளம் நிறைந்த நல்ல மண்ணில் முளைத்த துளசிச்செடி போல் பசுமை தழைத்து மணம் பரப்பி நாளுக்கு நாள் புனிதமாக வளர்ந்தது இந்த உள்ளுணர்வு. மனத்தில் ஞானம் மலர மலர அவளுடைய முகப்பொலிவு அற்புதமாக வளர்ந்தது. அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளை ஏற்றுக் கொண்டு நடத்தத் தொடங்கிய காலத்தில் அங்கும் இங்குமாக சிலருக்குத்தான் மதுரையில் அவளைத் தெரிந்திருந்தது. இப்பொழுது அவளை நகரம் முழுவதும் அறிந்திருந்தது. சுற்றுப்புறத்து ஊர்களிலும் அவள் பெயர் பரவியிருந்தது. அவளுடைய இந்த இணையற்ற வளர்ச்சிக்குப் பாடுபட்ட பெருமையில் மூவருக்குப் பங்கு உண்டு. அரவிந்தன் - அவள் வளர்ச்சிக்கு உற்சாகம் தந்தான். மீனாட்சிசுந்தரம் - அவளுடைய தந்தையின் நூல்களையெல்லாம் வெளியிட்டு நன்றாகவும், நிறையவும் விற்று உதவினார். அதனால் அவளுடைய வாழ்க்கைக் கவலைகள் குறைந்து அமைதி கிடைத்தது. எப்படியோ கெட்டுச் சீரழிய இருந்த தம்பி திருநாவுக்கரசையும் அச்சகத்தில் படிப்படியாகத் தொழில் பழக்கி உழைப்பாளியாக மாற்றி வளர்த்திருந்தார்கள், அரவிந்தனும் அவரும். அவள் அண்மையிலுள்ள வெளியூர்களுக்குச் சொற்பொழுவுகளுக்குப் போக நேரும் போதெல்லாம் மீனாட்சிசுந்தரமும் மங்களேஸ்வரி அம்மாளும் கார் கொடுத்து உதவினார்கள். முருகானந்தம் - வேறு ஓர் உதவியைச் செய்தான். உழைக்கும் மக்கள் நிறைந்த தனது பகுதியில் அடிக்கடி அவளுடைய தமிழ்ச் சொற்பொழிவுகள் நடைபெற ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான ஏழை மக்களைத் தமிழ்ச் செல்வியாகிய அவள் மேல் ஈடில்லா அன்பு கொள்ள வைத்தான்.

வாழ்க்கையில் மிக உயர்ந்ததொரு திருப்பத்தை நோக்கித் தான் விரைவாக வளர்ந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். ஒழுக்கமும், அறமும், பண்பாடும் நிறைந்த ஒரு புதிய சமுதாய இயக்கத்தை தன் கைகளின் உழைப்பால் தோற்றுவிக்க வேண்டுமென்ற தாகம் நாளுக்கு நாள் அவளுக்குள் முறுகி வளர்ந்தது. அந்தப் பெரிய மதுரை நகரத்தில் அவளுடைய செல்வாக்கை அவளே உணர்ந்து கொள்ளத் தக்க ஒரு சந்தர்ப்பத்தை அரவிந்தனும் முருகானந்தமும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அந்த ஆண்டில் கார்த்திகை மாதம் மதுரையில் பயங்கரமான மழை. பஸ்நிலையத்துக்குத் தென்புறமுள்ள பள்ளத்தில் இருந்த அரிஜனங்களின் குடிசைகள் எல்லாம் இந்த மழையில் விழுந்துவிட்டன. ஒதுங்க இடமின்றி நடைபாதைகளில் தவித்தார்கள், திக்கற்ற ஏழை மக்கள். அரவிந்தனும் முருகானந்தமும் பொதுநலப்பணியில் ஆர்வமுள்ள வேறு சில இளைஞர்களும் சேர்ந்து அந்த ஏழை மக்களுக்கு ஏதாவது நிதி உதவி செய்ய வேண்டுமென்று ஆர்வத்தோடு முன்வந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு பூரணியைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள் கூறியவற்றைக் கேட்டு மலர்ந்த முகத்துடன் கட்டாயம் செய்ய வேண்டிய உதவிதான் இது! என்னாலானதை எப்போதும் செய்யக் காத்திருக்கிறேன். இதோ..." என்று உள்ளே சென்று பீரோவைத் திறந்தாள் பூரணி. பழைய வறுமை நிலைகளின்போது விற்றவை போக மீதமிருந்த ஒன்றிரண்டு தங்க நகைகளை எடுத்துக் கொண்டு வந்தாள். "இந்தாருங்கள்! இப்போதெல்லாம் இவைகளை நான் அணிந்து கொள்வதே இல்லை. உங்களுடைய நல்ல காரியத்துக்கு இவை பயன்படட்டும்" என்று சிரித்துக் கொண்டே அரவிந்தன் கைகளில் அவற்றைக் கொடுத்தாள்.

அரவிந்தன் புன்முறுவல் பூத்தான். அவள் கொடுத்த நகைகளை அவன் அப்படியே அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.

"ஏன், இவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ள மாட்டீர்களா?"

"உன்னிடமிருந்து நாங்கள் இதைவிடப் பெரிய உதவியை எதிர்பார்க்கிறோம். முருகானந்தத்தைக் கேள், சொல்வான்."

பூரணி விவரம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் முருகானந்தத்தின் முகத்தைப் பார்த்தாள்.

"அக்கா! எங்களுடைய திட்டத்துக்கு நீங்கள் இணங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு தான் இங்கே வந்திருக்கிறோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை ஒரு தியேட்டர் வாடகைக்குப் பேசியிருக்கிறோம். பத்து, ஐந்து, மூன்று, இரண்டு, ஒன்று ரூபாய் விகிதத்தில் கட்டணம் போட்டு டிக்கெட் விற்க ஏற்பாடாகியிருக்கிறது. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் விரிவானதொரு பொருள் பற்றி நீங்கள் சொற்பொழிவு செய்ய வேண்டும் அக்கா."

"நீங்கள் எல்லோரும் விளையாடுகிறீர்களா என்ன? இதென்ன நாடகமா? சினிமாவா? அல்லது பாட்டுக் கச்சேரியா? சொற்பொழிவுக்கு எங்காவது வசூல் கிடைக்குமா? தியேட்டர் வாடகைக்குக் கூட வசூலாகாமல் கைப்பிடிக்கப் போகிறது. இந்த வீண் யோசனையை விட்டுவிட்டு வேறு காரியம் பாருங்கள்" என்று அவர்களைக் கடிந்து கொண்டாள் பூரணி.

"உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது, அக்கா. வசூல் கவலையெல்லாம் உங்களுக்கு எதற்கு? 'சம்மதம்' என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள் போதும். மற்றதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்."

பூரணி தயங்கினாள். 'என்ன சொல்லட்டும்' என்ற கேள்வி தொக்கி நிற்கும் முகக் குறிப்போடு அரவிந்தனை ஒரு தடவை பார்த்தாள்.

"என்ன பார்க்கிறாய்? முருகானந்தம் சொல்வதுபோல் சம்மதமென்று சொல்லிவிடுவதுதான் நல்லது. இதைத்தவிர வேறு ஏற்பாடு எங்களிடம் இல்லை. இதன் மூலம் அந்த ஏழைகளுக்கு ஒரு கணிசமான தொகை உதவி நிதியாகத் தேறும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றான் அரவிந்தன்.

 

அவள் சம்மதித்தாள். சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தனக்காக அத்தனை கூட்டம் கூடி அவ்வளவு வசூல் ஆகுமா என்பது மட்டும் அவளுக்குச் சந்தேகமாகவே இருந்தது.

அரவிந்தன், முருகானந்தம் ஆகியோரும் நண்பர்களும் டிக்கெட் விற்பனையில் முனைந்து ஈடுபட்டனர். 'வீடிழந்த ஏழை மக்களின் குடியிருப்பு நிதிக்காகப் பூரணியின் சொற்பொழிவு என்று பெரிய பெரிய சுவரொட்டி விளம்பரங்கள் அச்சிடப்பெற்று வீதிக்கு வீதி, சுவருக்குச் சுவர் ஒட்டியிருந்தார்கள். 'தனக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? தான் அவ்வளவு விளம்பரப் பெருமைகளுக்கு உரியவளா?' என்று நினைக்கும்போது அவளுக்கே வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது.

வியாழக்கிழமை மாலைக்குள்ளேயே பெரும்பகுதி டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாக முருகானந்தம் வந்து மகிழ்ச்சியோடு தெரிவித்தான். மதுரை நகரத்தில் பெரிய பஞ்சாலைகளில் கூலி வேலை செய்யும் பெண்களிலிருந்து மங்கையர் கழகத்துக்குக் காரில் வந்து அழுக்குப்படாமல் இறங்கித் தமிழ்ப் படிக்கும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் வரை அத்தனை பேரும் வற்புறுத்தல் இல்லாமல் தாங்களே விரும்பிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியிருப்பதாகவும் அவனே தெரிவித்தான்.

"இன்னொரு ஆச்சரியமான சம்பவமும் நடந்தது அக்கா. உங்கள் மங்களேஸ்வரி அம்மாளிடம் மூன்று பத்து ரூபாய் டிக்கெட்டுகள் கிழித்துக் கொடுத்தேன். அவர்கள் அதை வாங்கிக் கொண்டு பேசாமல் உள்ளே போனார்கள். சிறிது நேரத்துக்குள் ஏதோ ஒரு 'செக்' எழுதிக் கொண்டு வந்தார்கள். அந்த 'செக்'கை வாங்கிப் பார்த்தவுடன் நான் மலைத்துப் போனேன். 'முப்பது ரூபாய்க்குத்தான் டிக்கெட் தந்திருக்கிறேன்' என்று சொல்லி நான் தயங்கினேன். 'பரவாயில்லை! நான் என் நிலைக்கு இவ்வளவாவது உதவி செய்ய வேண்டும். வாங்கிக் கொள்ளுங்கள். இதை யாரிடமும் சொல்லிப் பெருமைப் பட வேண்டாம். உங்கள் பெயர்ப் பட்டியலில் ஓர் அன்பர் ஆயிரம் ரூபாய் என்று மட்டும் எழுதிக் கொள்ளுங்கள் போதும். பெயர் போட வேண்டாம்' என்று பெருந்தன்மையோடு சொல்லிவிட்டார்கள்."

இதை முருகானந்தம் சொல்லியபோது பூரணிக்குப் பெருமிதமாக இருந்தது. "செல்வம் நிறைந்தவர்கள் துன்பங்களால் வேதனைப்படும்போது பிறருக்குத் தருமம் செய்து ஆறுதல் தேட வேண்டும். பழைய காலத்தில் செல்வர்களுக்குச் சாந்தியளித்து மனநிம்மதி தந்த கருவி வள்ளன்மை என்ற கருவிதான். இன்றோ கேளிக்கைகளால் நிம்மதி தேட முயல்கிறார்கள். மங்களேஸ்வரி அம்மாள் போல பழைய முறையில் தருமம் செய்து நிம்மதி தேடுபவர்கள் மிகச் சிலர்தான் இன்று இருக்கிறார்கள்" என்று முருகானந்தத்திடம் பூரிப்புடன் கூறினாள் பூரணி.

 

"செய்தித் தாள்களில் நீங்கள் என்ன பொருள் பற்றிப் பேசப் போகிறீர்கள் என்று அறிவிப்புக் கொடுக்க வேண்டும் அக்கா" என்று கேட்டான் முருகானந்தம்.

பூரணி சிறிது நேரம் சிந்தித்தாள். பின்பு ஒரு சிறிய காகிதத்தை எடுத்து 'கவிகள் காணாத பெண்மை' என்று எழுதி அவன் கையில் கொடுத்து அனுப்பினாள்.

ஓதுவார்க் கிழவர் வீட்டு காமுவைப் பிறந்த வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். வெள்ளிக்கிழமை பூச்சூட்டலும், வளைகாப்பும் நடைபெற இருந்தன. "எங்கேயாவது கூட்டம் சொற்பொழிவு என்று கிளம்பிவிடாதே; என்ன வேலை இருந்தாலும் ஒரு நடை வந்துவிட்டுப் போ" என்று அந்தப் பாட்டி தள்ளாத காலத்தில் சிரமத்தைப் பாராமல் தானே நேரில் வந்து பூரணியை அழைத்துவிட்டுப் போயிருந்தாள். எனவே வெள்ளியன்று மாலை மங்கையர் கழகத்துக்குப் புறப்படுமுன் பூரணி, அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள்.

முழங்கை நிறையக் கண்ணாடி வளையல்கள் குலுங்கிடத் தலை தாங்காமல் பூச்சூடிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் காமு. சுற்றிலும் பெண்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. தாயாகிக் கொண்டிருந்த அந்தக் கோலத்தில் அதிக அழகில்லாத காமுவின் முகத்தில் கூட ஒரு புதிய ஒளி படர்ந்திருப்பதைப் பூரணி பார்த்தாள். புதிதாக ஒரு நல்ல கவிதையை எழுதி வெளியிடத் துடிக்கும் கவியின் முகம்போல் உலகத்துக்குப் புதிய உயிர் ஒன்றைக் கொண்டுவரத் தவமிருக்கும் தாய்மையின் ஒளி காமுவின் தோற்றத்தில் இருந்தது. கூடை நிறைய வைத்திருந்த பூவில் இரண்டு முழம் தன் கையாலேயே கிள்ளிப் பூரணியின் கூந்தலில் வைத்துவிட்டாள் ஓதுவார்ப் பாட்டி. அந்த வயது முதிர்ந்த சுமங்கலி தன் கூந்தலைத் தீண்டிப் பூ வைத்தபோது பூரணிக்கு உடல் சிலிர்த்தது. 'அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படித் தினம் என் தலையைத் தொட்டுப் பின்னிப் பூ வைப்பாளே' என்று உள்ளத்தில் அம்மாவும், அம்மாவைப் பற்றிய நினைவும் பரவிட மெல்லக் கண் கலங்கி நின்றாள் அவள்.

"பாட்டி! என்னை மறந்திட்டீங்களே? உங்களுக்கு எத்தினி ஓரவஞ்சனை. அக்கா தலைக்கு மட்டும் உங்க கையால பூ வைச்சீங்க. என்னைக் கவனிக்காமப் போறீங்களே" என்று மங்கையர்க்கரசி விளையாட்டாகச் சொல்லிச் சிரிக்கவே, கூடம் முழுவதும் பெண்களின் நளின நகையொலி அலை அலையாக எழுந்து 'கிண்கிணி' நாதம் பரப்பியது.

"நீ வந்திருக்கிறாயா அம்மா? பெரிய வால் ஆச்சே நீ" என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவளுக்கும் பூ வைத்து விட்டாள் பாட்டி.

அப்போது அந்தக் கூடத்தில் குழுமியிருந்த சிறியவர்களும், பெரியவர்களுமான எல்லாப் பெண்களைக் காட்டிலும் பூரணி அதிக ஞானமுள்ளவள், அதிகப் புகழுள்ளவள், அதிகத் துணிவும் தூய்மையும் உள்ளவள். ஆனாலும் அங்கே நிற்கக் கூசிற்று அவளுக்கு. அவளுடைய கூச்சத்துக்கேற்றார் போல் அவளை அதற்கு முன்னால் பார்த்திராத வெளியூர் பாட்டி ஒருத்தி அத்தனை பேருக்கு நடுவில் நீட்டி முழக்கி இழுபட்ட குரலில் பூரணியை நோக்கி, "ஏண்டியம்மா, இது உன் பெண்ணா? என்ன வாய்? இந்த வயதிலேயே இப்படி வெடுக்கு வெடுக்கென்று பேசுகிறதே" என்று அசட்டுப் பிசட்டென்று மங்கையர்க்கரசியைச் சுட்டிக்காட்டிக் கேட்டு வைத்தாள்.

"பெண் இல்லை, அவளுடைய தங்கை" என்று யாரோ சொன்னார்கள். கூட்டத்தில் பெண்களின் ஏளன நகை ஒலி மறுபடியும் எழுந்து ஓய்ந்தது. தன்னுடைய புகழ், தன்னுடைய உலகத்தை விலைகொள்ளும் அபார ஞானம், நெருப்புக் கொழுந்து போன்ற பரிசுத்த வாழ்வு இவற்றுக்கெல்லாம் அப்பால் அந்தச் சாதாரணப் பெண்களிடம் இருக்கிற ஏதோ ஒன்று தன்னிடம் இல்லாமல் இருப்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய உள்ளத்தில் ஒரு மூலையில் அந்த ஏதோ ஒன்றின் இல்லாமைக்காக மின்னற்கோடு போல் ஓர் ஆற்றாமை தோன்றி ஒரு கணம் நின்று மறைந்தது.

"சும்மா வந்து வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு நழுவிடப் பார்க்காதே, ஏதாவது இரண்டு பாட்டுப் பாடிவிட்டுப் போ பூரணி" என்று காமுவே உரிமையோடு எழுந்து வந்து அவளைக் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துவிட்டாள். அவள் உள்ளம் பாடுகிற உற்சாகத்திலா அப்போது இருந்தது? மறுக்க முடியாமல் தேவாரத்தில் ஒரு பதிகத்தைப் பாடி முடித்தாள் பூரணி.

"கொல்லர் தெருவில் ஊசி விற்கிறார்போல ஓதுவார் வீட்டிலேயே தேவாரத்தையும் பாடி ஏமாற்றிவிட்டுப் போகப் பார்க்கிறாயே? வேறு ஏதாவது பாடு" என்று மேலும் வம்பு செய்தாள் காமு. அவளுடைய உற்சாகத்தை முறித்தெடுத்து விட்டுப் புறப்பட முடியாமல் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் ஒரு பாட்டு பாடிவிட்டு, "எனக்கு நேரமாகிறது. நான் போக வேண்டும். தங்கை மங்கையர்க்கரசி கடைசி வரை உன்னோடு இருப்பாள், நான் வருகிறேன்" என்று எழுந்திருந்தாள் பூரணி.

'பாட்டியிடமும் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டுப் போய்விடலாம்' என்று உட்பக்கம் போனவள் மற்றொரு அதிர்ச்சியையும் தன் செவிகளில் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அங்கே பாட்டி வேறு யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தாள். பேச்சு தன்னைப் பற்றியது போல் தோன்றவே, பூரணி வெளியிலேயே தயங்கி நின்றாள்.

"யாரு அந்தப் பெண்? கோயில் மாடு மாதிரி வளர்ந்திருக்கு. கல்யாணம் ஆகவில்லை என்கிறாயே?"

"தமிழ் வாத்தியார் அழகிய சிற்றம்பலத்தின் பெண். பூரணின்னு பேர். அதுக்கு இரண்டு தம்பி, ஒரு தங்கை. ஒரு தம்பி படிப்பை விட்டுவிட்டுச் சீர்கெட்டுக் கடைசியாகப் பிரஸ்ஸிலே வேலை செய்யறான். மற்ற இரண்டு பேரும் படிக்கிறாங்க. அப்பா, அம்மா இல்லை. அந்தப் பெண் தான் வளர்த்துக் காப்பாத்தணும். கல்யாணமாவது கார்த்தியாவது. தெருத் தெருவாகப் பிரசங்கம் செஞ்சிட்டிருக்குது அது. நானும் சாடை மாடையா இரண்டு தரம் கேட்டேன். அதுக்குக் கல்யாணத்தைப் பத்தியே நெனைப்பிருக்கிறதாத் தெரியவில்லை. பேர், புகழ் எல்லாம் சம்பாதிச்சிருக்கு. சுவரெல்லாம் அது பேரை கலர் நோட்டீஸ் அடிச்சு ஒட்டியிருக்கான். எது இருந்து என்ன? அதது வயசில ஆகணும். அது மனசிலே என்ன நினைச்சிட்டிருக்குதோ?"

இலட்சியங்களினால் மலர்ந்து ஆயிரமாயிரம் புனித எண்ணங்களில் தோய்ந்திருந்த அந்தப் பரந்த உள்ளத்தில் ஈட்டியாகக் குத்தியது, அந்த உரையாடல். மனத்தில் அந்தப் புண்ணைத் தாங்கிக் கொண்டு சிறிது நேரம் இருந்து பாட்டியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள் பூரணி. ஞாயிற்றுக்கிழமையன்று 'கவிகள் காணாத பெண்மை'யைப் பற்றிப் பேசுவதற்காகச் சிந்தனைகளைத் தொகுத்துக் கோர்வைப்படுத்திக் கொண்டிருந்த உள்ளத்தில் உல்லாசம் பாழ்பட்டு உளைச்சலும், அலுப்பும் வந்து தளரச் செய்தன. ஓதுவார் வீட்டு வளைகாப்புக்குப் போனால் தன் மனத்தில் இவ்வளவு பெரிய ஆழமான புண்கள் உண்டாகும் என்று தெரிந்திருந்தால் அவள் போயே இருக்க மாட்டாள்.

'ஒரு பெண் புகழ் சம்பாதிக்கலாம். அளவற்ற அறிவைச் சம்பாதிக்கலாம். செல்வமும் செல்வாக்கும் சம்பாதிக்கலாம்! ஆனால் சாதாரண உலகத்தில் சாதாரண மனிதர்கள் வாழும் சாதாரண வாழ்க்கையைச் சம்பாதித்துக் கொள்ளாதவரை, சாமானிய உலகில் அவளைப் பெண்ணாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே' என்று நைந்து எண்ணினாள் அவள். பெரிய வாழ்வைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள் அவள். மிகச் சிறிய வாழ்க்கையை அவசரமாக நினைவுபடுத்தினார்கள் அவர்கள். அரவிந்தனோடு பழகத் தொடங்கிய புதிதில் இப்படி ஒரு வாழ்க்கைக்கு ஆசையும், அவசரமும் அவள் மனதில் உண்டாயிற்று. இன்னும் கூட அழகிய இலட்சியக் கனவாக அரவிந்தன் அவள் மனத்தில் பதிந்திருக்கிறான். ஆனால் அவள் இப்போது தாகம் கொண்டு துடிக்கவில்லை. அந்த வாழ்வுக்கு அரவிந்தனும் அப்படித் தாகம் முற்றித் துடித்ததாகத் தெரியவில்லை. இருவரும் அன்பால் ஒன்று சேர்ந்தார்கள். இப்போதோ அகல்விளக்கின் சின்னஞ்சிறு சுடரிலிருந்து குத்துவிளக்கின் பெரிய சுடர்களை ஏற்றி ஒளிர விடுவதுபோல் சிறிய அன்பிலிருந்து பெரிய பொது காரியங்களைச் செய்து சமூகத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கொளுத்தப் பெறாத ஊதுவர்த்திபோல் உள்ளங்களில் மட்டும் மணந்து வெளியே மணக்காமல் இருந்தது, அந்த அன்பு! மங்கையர்க்கழகத்து மொட்டைக் கடித நிகழ்ச்சிக்குப் பின் அவர்கள் விழிப்பாக இருந்தார்கள். ஆனால் உலகம் அதைவிட விழிப்பாக இருந்து தொலைக்கிறதே!

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி. தியேட்டர் நிறையப் பெண்கள் கூடியிருந்தார்கள். பூரணி பேசுவதற்காக எழுந்து நின்றாள். அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாளின் இளைய பெண் செல்லத்திடம் ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையைக் கொடுத்துப் பூரணிக்குப் போடச் சொன்னான். வளையலணிந்த கரங்கள் தட்டப்படும் ஒலி தியேட்டரை அதிரச் செய்தது. பூரணி பேசத் தொடங்கினாள். கூட்டத்தில் அமைதி நிலவியது. "இது ஏழைகளின் உதவி நிதிக்கான கூட்டம். துன்பப் படுகின்றவர்களுக்கு உதவ நாம் கடமைப்பட்டவர்கள். 'துன்பப்பட்டு அழுகின்றவர்களின் கண்ணீர் உலகத்தை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த படை' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அழச்செய்து பிறரை வருத்துகிறவர்கள் பதிலுக்குத் தாங்களே அழவேண்டிய சமயம் வரும். நீங்களெல்லோரும் இந்த நிதிக்கு உதவி செய்திருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது" என்று முன்னுரை கூறிவிட்டுத் தான் எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிப் பேச முற்பட்டாள் அவள். இனிமையும் எடுப்பும் மிக்க அவள் குரல் தேன் வெள்ளமாய்ப் பொங்கியது. பேச்சினிடையே அவள் உணர்ச்சி வசப்பட்டாள். ஒரே ராகத்தை வளர்த்து விரிவாக்கிப் பாடும் நல்ல இசைக் கலைஞனைப் போல் அவள் சொற்பொழிவு வளர்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கிற அளவு அமைதி. "உலகத்துக் கவிகளெல்லாம் தத்தம் காவியங்களுக்கு நாயகியாக எத்தனையோ பெண்களைப் படைத்தார்கள். ஆனால் காவியப் பெண்கள் சித்திரத்துத் தாமரைபோல் வாடாமலும் கூம்பாமலும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மை வாழ்வில் பெண் படுகிற வேதனைகள் அதிகம். பெண் சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளும் அதிகம். கண்ணகிக்கும், சாகுந்தலைக்கும், சீதைக்கும் காவியங்களில் ஏற்பட்ட துன்பங்களை ஊழ்வினையின் பெயர் சொல்லி மறைத்தார்கள். ஆனால் இன்றைக்கு நம்முடைய வாழ்வின் நிகழ்கால வீதிகளில் தான் பெற்ற குழந்தையைத்தானே விற்க வரும் பெண்ணை அல்லவா பார்க்கிறோம்? பெண்களில் வாழ்வு உண்மைத் தாமரைபோல வாடுவதாயிருக்கிறது. கவிகள் அதை சித்திரத்தில் எழுதி ஏமாற்றியிருக்கிறார்கள். துன்பங்களிடையே நாம் இருக்கிறோம். அவற்றைத் தகர்க்க வேண்டும்?" பேச்சுத் தடைபட்டது. கண் விழிகள் வெளிறின. அடித்தொண்டையிலிருந்து இதயத்தை வெளியே இழுத்தெறிந்து விடுவதுபோல் ஓர் இருமல் இருமினாள் பூரணி. கமலப் பூப்போன்ற அவள் வலது கை இருமிய வாயைப் பொத்திக் கொண்டது. இருமி முடித்தவள் தனது உள்ளங்கையைப் பார்த்தாள். அதில் இரண்டு துளி ரத்தம் மின்னியது. முருகானந்தம் சோடாவை உடைத்து எடுத்து வந்தான்.

 

17

 

"எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,

எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன்.

எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!

எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!"

 

பூரணிக்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது. உணர்வு நழுவிற்று. அடிவயிற்றில் இருந்து மேலே நெஞ்சுக்குழி வரையில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்துக் குடைவது போல் ஒரு வலி ஏற்பட்டது. 'அம்மா' என்று ஈனக்குரலில் மெல்ல முனகியபடி மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்துக்குப் பின்னால் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் போய்ச் சாய்ந்தாள். பூத்து இரண்டு நாட்களான பின் ஒவ்வொன்றாகக் காற்றில் அடித்துக் கொண்டு போகப்படும் தளர்ந்த தாமரையின் இதழ்களைப் போல் அவளுடைய தன் நினைவு மெல்ல மெல்ல நழுவி உதிர்ந்து கொண்டிருந்தது. அவளுடைய இதயத்தில் அடி மூலையிலிருந்து தீனக்குரலாய் மெல்ல எழுந்த 'அம்மா' என்ற அந்த ஒரே ஒரு சொல் தியேட்டரின் எல்லாத் திசைகளிலுமிருந்து பல்லாயிரம் அனுதாபக் குரல்களாக மாறி எதிரொலித்தன. உடம்பும் உள்ளமும் உணர்வெனப்பட்ட யாவும் அந்த ஒளிப்புனல் வெள்ளத்தில் கரையத் துவண்டு நெளிந்து விழும்படி நாற்காலியில் கழற்றிப்போட்ட பூமாலையைப் போல் அவள் உடல் சாய்ந்து சரிந்திருந்தது. அவள் கனவு மண்டலத்தில் இருந்தாள்.

'அம்மா அம்மா!' நெஞ்சு தாங்க முடியாத வேதனையால் வாய்பேசத் துடிக்கும்போது, பிறக்கின்ற முதல் வார்த்தை 'அம்மா' என்ற வார்த்தைதானா? துக்கத்தின் போதும் வாயில் பிறக்கின்ற அழைப்பு, தாயை நோக்கித்தானோ? உடம்பிலோ மனத்திலோ வலியின் வேதனையை உணர்ந்து வாய் அம்மா என்ற சொல்லை உணர்கிறதே! இடுப்பிலும் வலியை உணர்ந்த போது 'அம்மா' என்று அலறி முனங்கித் துடித்து அழைத்திருப்பாள்.

மனிதர்கள் வலியின்போது பிறந்தவர்கள். வலியைப் பிறருக்கு அளித்து வலிக்காமல் பிறந்தவர்கள். பிறந்தவுடன் கேட்கும் முதல் சொல் 'அம்மா' என்பது. இறக்கப் போகும்போது தான் அரற்றுகிற சொல்லும் இதுதான்! தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியேறும்போது தாய் 'அம்மா' என்று முனகும் வேதனைச் சொல்தான் உயிரின் செவி உணர்ந்த முதல் ஓசை. உலகத்தின் கர்ப்பத்திலிருந்து உயிர்விடுபட்டுப் போகும் போது மனிதன் தன் வாயால் தான் வருகிறபோது கேட்ட இதே சொல்லை மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டுப் போகிறானா? எப்படியானால் என்ன? 'அம்மா' என்ற இந்தச் சொல்லில் அமுதம் இருக்கிறது. துக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை இந்த வார்த்தையை உருவேற்றி அடைய முடிகிறது. இது தெய்வத் திருமொழி. நினைவழிந்த அந்நிலையில் திடீரென்று தான் குழந்தையாகிவிட்டது போன்று உணர்கிறாள் பூரணி. பட்டுப் பாவாடை புரள மொட்டு மலரிதழ் விரித்தாற்போல் சிரித்துக் கொண்டு சின்னஞ்சிறு சிட்டுக் குருவி போல் அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் அவள். அம்மா அவளுடைய தலைமுடியை அவிழ்த்து எண்ணெய்த் தடவிப் பின்னுகிறாள். அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்த அப்பா வீட்டுக்குள் நுழைகிறார். பூரணி தன் மலர்ந்த கண்கள் விரிய அப்பாவை ஆவலோடு பார்க்கிறாள்.

 

"பார்த்துக் கொண்டே இரு! நான் சொல்வதை எதிர்காலத்தில் நீயே உன் கண்களால் காணப்போகிறாய். உன் பொண்ணுக்கு வாய்த்திருக்கும் கண்கள் அற்புதமானவை. பூரணமானவை. அவள் இந்தக் கண்களாலேயே தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை ஆட்டிப் படைக்கப் போகிறாள். இப்படிக் கண் உள்ளவர்கள் தெய்வீக அம்சம் உள்ளவர்கள்" என்று அப்பா அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொல்கிறார். அதைக் கேட்டு அம்மாவும் சிரிக்கிறாள்.

"கண்ணேறு படக்கூடாது என்று சொல்வார்கள். குழந்தைக்கு உங்கள் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது" என்று சொல்கிறாள் அம்மா.

"யாருடைய கண்ணும் இவளை எதுவும் செய்துவிட முடியாது. அசுத்தங்களையும், குற்றங்களையும் இவளுடைய கண் பார்வையே அழித்துவிடும். நீ கவலைப்படாதே" என்று சொல்லி அம்மாளின் மடியிலிருந்த பூரணியைத் தூக்கி வாரி அணைத்துக் கொள்கிறார் அப்பா. அப்பாவும், அம்மாவும் தென்படாமல் மறைகிறார்கள். கனவுத் தோற்றம் மாறுகிறது.

அன்புமயமாயிருந்த அந்த அம்மா இன்று எங்கே போய்விட்டாள்? கனவு நிலையில் பூரணியின் கண் முன் கவிந்த குடைபோல் வான விதானம் தெரிகிறது. சாம்பல் நிறமான ஆகாயத்தில் நீலமும் சிவப்புமான மேகங்கள் அழித்து அழித்துக் கோலம் போடுவதுபோல் விளையாடிக் கொண்டிருக்கையில் அவற்றின் நடுவேயிருந்து திடீரென்று வானத்தில் யானைத் தந்தங்கள் முளைத்தாற்போல் இரண்டு வளையணிந்த சிவப்புக் கரங்கள் நீள்கின்றன. மேகங்களுக்கிடையே சரத் காலத்துச் சந்திரனைக் கண்டதுபோல் அம்மாவின் முகத்தைக் காண்கிறாள் பூரணி. அடடா! வானமே ஒரு முகமாக மாறினாற்போல் அந்த முகம் தான் எத்தனை பெரிதாகத் தெரிகிறது.

"அம்மா! நீ எங்கிருந்து என்னைக் கைநீட்டி அழைக்கிறாய்? நான் எங்கிருந்து அதனை உணர்கிறேன்? நீ எங்கிருந்து என்னை எண்ணுகிறாய்? நான் எங்கிருந்து உன்னை எண்ணுகிறேன்? எனக்கு எதுவுமே விளங்கவில்லையே? என் உடம்பின் கனம் ஏன் இப்படிக் குறைந்து கொண்டே வருகிறது? எலும்பும் தோலும் சதையுமாக வாழும் புண்ணாகி, வளரும் புண்ணாயிருந்த இந்த உடம்பு மணமும் மென்மையுமாய் ஒரு சிறு பூவாக மாறிப் பூத்துவிட்டதா? என்னுடைய பூவுடம்பு காற்றில் மேலே மேலே பறந்து வானத்தை நிறைத்துக் கொண்டு தெரியும் அம்மாவின் கைகளையும் முகத்தையும் நோக்கிப் பறந்து போகிறதா? ஏன் இப்படி நான் பூவாகிறேன். ஐயோ! முகத்தில் யாரோ ஒரு கந்தர்வப் பெண் அமுதத்தை அள்ளித் தெளிக்கிறாளே!

சோடாவை உடைத்துக் கொண்டு வந்த முருகானந்தம் பூரணி நாற்காலியிலேயே மூர்ச்சையாகியிருப்பதைக் கண்டு சோடா நீரை கையில் கொட்டி முகத்தில் மெல்லத் தெளித்தான். மேடையைச் சுற்றிப் பெண்கள் கூட்டம். பல நிறத்துப் பூக்களைச் சிந்தின மாதிரி கூடிக் குவிந்துவிட்டது. பூரணி கண் மலர்ந்து பார்த்தாள். மூச்சு இழைந்தது. நெஞ்சில் வலியின் வேதனை விழிகள் திறந்து திறந்து சொருகின. 'என்ன ஆயிற்று? தங்கக் குத்துவிளக்கு மாதிரி நின்று பேசிக் கொண்டிருந்தாளே! எந்தப் பாவியின் கண் பட்டதோ?' என்று மேடையருகில் ஒரு வயதான அம்மாள் அனுதாபத்தோடு யாரிடத்திலோ சொல்லிக் கொண்டிருந்தாள். கூட்டம் அலைமோதிற்று. அத்தனை கண்களும் மேடையில் நாற்காலி மேல் சாய்ந்து கிடந்த அவளையே பார்த்து இரங்கி நின்றன. நினைப்பும் நினைப்புமற்ற நிலையுமாக இருந்த அவள் செவியில் சுற்றிலும் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் விழுந்தன.

"பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலாகியிருக்கிறதாம். 'ஏழைகளின் குடிசை உதவி நிதி' என்று இந்தப் பெண் தன்னுடைய சொற்பொழிவினாலேயே இவ்வளவு சேர்த்துக் கொடுத்து விட்டாளே. என்ன வாக்கு! என்ன சொற்சாதுரியம்! எவ்வளவு அழகாகச் சொல்கிறாள்?"

"இது எல்லோருக்கும் வந்துவிடுமா? கருவிலேயே திரு அமைய வேண்டும் என்பார்கள். பழம் பிறவியிலேயே குறைவாக எஞ்சிப்போன ஞானத்தை அடைகிற மாதிரி ஒரு பசி வேண்டும். நாமும் இருக்கிறோமே; அடுப்பங்கரையிலும், புடவைக் கடையிலும், இல்லாவிட்டால் சினிமாக் கொட்டகையிலும் திரிகிறதற்கே போது காணவில்லை."

"மீனாட்சியம்மன் கிருபையால் இந்தப் பெண்ணுக்கு ஒரு குறைவுமில்லாமல் நெடுங்காலத்துக்கு இவள் நன்றாக இருக்க வேண்டும்" இப்படி எத்தனையோ குரல் அவளை வாழ்த்துகின்றன. புகழ் மாலை சூட்டுகின்றன, வியக்கின்றன.

ஓதுவார் வீட்டு வளைகாப்பில் கேட்ட வார்த்தைகள் மனத்தில் உண்டாக்கிய புண்ணை இப்போது செவியில் விழும் இப்புகழ் வார்த்தைகள் ஆற்றுகின்றனவா? தியேட்டரில் தன்னைச் சுற்றிலும் கேட்கும் உரைகள் அவள் உள்ளத்தைக் குளிர்விக்கின்றன! மெதுவாக அவளுக்கு உணர்வு வந்தது. உடலில் சிறிது தெம்பு பிறந்தது. தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்து நின்றாள். தூக்கக் கிறக்கத்திலோ, கனவிலோ எழுப்பி நடத்திக் கொண்டு போகிற மாதிரி நடத்தித் தியேட்டர் வாசலில் கார் ஏறச் செய்து டாக்டர் வீட்டுக்கு அவளை அழைத்துப் போனார்கள். அரவிந்தன் பதறித் தவித்தான். டாக்டர் தைரியம் சொல்லுகிற வரை அவனுக்கும் முருகானந்தத்துக்கும் சுயநினைவே வரவில்லை. தியேட்டரிலிருந்து செல்லம் வீட்டுக்கு ஓடிப்போய் தகவல் கூறினாள் போலிருக்க்றது. மங்களேஸ்வரி அம்மாள் பதறிப்போய் ஓடி வந்தாள். செய்தி கேள்விப்பட்டு அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரமும் வந்தார். திருப்பரங்குன்றத்திலிருந்து சொற்பொழிவுக் கேட்கத் தியேட்டருக்கு வந்திருந்த சிலர் திரும்பச் சென்று ஏதோ சொல்லியிருக்கிறார்கள். 'பூரணி பாதி சொற்பொழிவில் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டாள்' என்பது போல் செய்தி பரவிவிட்டது. வீட்டில் இருந்த தம்பி சம்பந்தனும் மங்கையர்க்கரசியும் அதைக் கேள்விப்பட்டுப் பயத்தில் கதறி அழத் தொடங்கிவிட்டார்கள்.

 

"அதெல்லாம் கெடுதலாக ஒன்றும் இருக்காது. சீக்கிரம் அக்கா திரும்பி வந்துவிடுவாள்" என்று ஓதுவார்க்கிழவர் அவர்களைத் தைரியம் சொல்லிச் சமாதானப் படுத்தினார். அச்சகத்திலிருந்து திருநாவுக்கரசு டாக்டர் வீட்டுக்கு ஓடி வந்திருந்தான்.

அந்தச் சில மணி நேரத்தில் தன் மேல் அன்பு கொண்டிருந்த எல்லோரையும் கதிகலங்கிப் பரபரப்படையச் செய்துவிட்டாள் பூரணி. டாக்டர், அரவிந்தனிடம் வந்து கூறினார்.

"பயப்படுகிறார்போல் இப்போது ஒன்றுமில்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து நாள் தவறாமல் இரண்டு மூன்று பிரசங்கங்கள் வீதம் தொண்டையைக் கெடுத்துக் கொண்டால் பயப்பட வேண்டிய நோயாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'வருமுன் காக்க வேண்டும்'. நான் சொல்கிற யோசனைப்படி செய்யுங்கள். குறைந்த பட்சம் ஆறுமாத காலமாவது இந்தப் பெண்ணுக்கு முழு அளவில் ஓய்வு தேவை. எங்காவது நல்ல இடத்துக்கு அழைத்துச் சென்று ஒய்வு பெற செய்யுங்கள். ஊட்டமான உணவும், உற்சாகம் நிறைந்த சூழ்நிலையும் கிடைக்க வேண்டும். தாமதமின்றி இதைச் செய்து விடுவது நல்லது."

டாக்டர் கூறியதன் அவசியத்தை அரவிந்தனும் உணர்ந்தான். அந்த ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் மதுரையிலும் பக்கத்துச் சிற்றூர்களிலும் அலைந்து பல பொற்பொழிவு செய்திருக்கிறாள் அவள். வேளைக்கு உணவில்லை. தூக்கமில்லை. சொற்பொழிவைத் தவிர சமூகப் பொதுப்பணிகளுக்காக வேறு அலைந்திருக்கிறாள். கார் வசதி, இரயில் வசதி இல்லாத கிராமம் ஒன்றில் மலேரியா பரவி தினம் நான்கு பேர்கள் வீதம் இறந்து கொண்டிருந்தார்கள். மதுரை மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான பிரதேசத்தில் இருந்தது அந்தக் கிராமம். பத்திரிகையில் செய்தி பார்த்தவுடன் அரவிந்தன் அந்தக் கிராமத்துக்குப் புறப்பட இருந்தான். பூரணி அவனை முந்திக் கொண்டுவிட்டாள்.

"எல்லாப் பொதுக்காரியங்களையும் நீங்களே எடுத்துக் கொண்டால் அப்பாவின் புத்தக வேலைகள் என்ன ஆவது? இந்தக் கிராமத்துக்கு நான் போய்வருகிறேன்" என்று மலேரியா ஒழிப்பு மருந்தோடு அவளே புறப்பட்டுப் போய் அந்தக் கிராமத்தில் இருந்து பணிபுரிந்துவிட்டு வந்தது, இப்போது அரவிந்தன் நினைவில் படர்ந்தது. 'அவளுக்கு ஓய்வு அவசியம்தான்! இல்லாவிட்டால் அவள் நிரந்தரமான நோயாளியாகி விடுவாள்!' என்று நினைத்து அஞ்சினான் அரவிந்தன். காற்று மாறுவதற்காக அவளை எந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று அரவிந்தனும் மங்களேஸ்வரி அம்மாளும் கலந்து ஆலோசனை செய்தனர்.

"வசந்தாவும் செல்லமும் என் வயிற்றில் பிறந்த பெண்கள். பூரணி எனக்கு வயிற்றில் பிறவாத பெண். அவள் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு இல்லாத உபகாரமா! கொடைக்கானல் மலையில் எனக்கு ஒரு பங்களா இருக்கிறது. என் கணவர் இருக்கிறபோது வாங்கினார். அப்புறம் எப்போதாவது கோடையில் நானும் குழந்தைகளும் போனால் தங்குவது உண்டு. இப்போது அது காலியாகத்தான் இருக்கிறது. பூரணிக்கு அங்கே வசதி செய்து கொடுத்துவிட்டால் ஆறு மாதமோ ஒரு வருடமோ விருப்பம்போல் இருக்கலாம். இடமும் ஆரோக்கியமான இடம். அவளுக்கும் உற்சாகமாக இருக்கும்" என்றாள் அந்த அம்மாள்.

"பூரணியை உயர்ந்த இடத்தில் போய் இருக்கச் செய்ய வேண்டுமென்கிறீர்கள் அப்படித்தானே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் அரவிந்தன்.

"அவள் என்றும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டியவள் தானே?" என்று இரட்டைப் பொருள்படவே அந்த அம்மாளிடமிருந்து பதில் வந்தது அவனுக்கு. பூரணியின் தம்பி, தங்கை இருவரையும் யார் பார்த்துக் கொள்வதென்று பிரச்சினை எழுந்தது. அந்தப் பொறுப்பையும் மங்களேஸ்வரி அம்மாளே எடுத்துக் கொண்ட போது எப்படி நன்றி கூற்வதென்று தெரியாமல் திணறினான் அரவிந்தன். இந்த ஏற்பாட்டை பூரணியிடம் கூறியபோது, "நான் உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் உங்களுக்கு அதிக உதவிகளில்லை. உங்கள் உதவிகளை நான் அதிகமாக அடைந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்வே ஒரு நோய்போல் ஆகிவிட்டது" என்று அவர்களிடம் ஏங்கிச் சொன்னாள் அவள். குரல் தளர்ந்திருந்தது. தொண்டை கட்டியிருந்ததனால் உடைந்த குரலில் பேசினாள். இரண்டு மூன்று நாட்களில் தோற்றமும், பேச்சும் தளர்ந்து நலிந்திருந்தாள் அவள். கவின் நிறைந்த அவளுடைய கண்களில் கீழிமைகளுக்கு அடியில் கருவளையம் போட்டிருந்தது. ஏதாவது சொல்வதற்கு வாய் திறந்தால் வார்த்தைகளை முந்திக்கொண்டு இருமல் பொங்கிப் பொங்கி வந்தது.

வரையறை இல்லாமல் சொற்பொழிவுகளுக்காகவும் பொதுப்பணிகளுக்காகவும், அவள் ஊர் ஊராக அலையத் தொடங்கியபோதே, அவளை ஓரளவு கட்டுப்படுத்தாமல் போனோமே என்று கழிவிரக்கம் கொண்டான் அரவிந்தன்.

"நீயாகத்தான் இவ்வளவையும் இழுத்துவிட்டுக் கொண்டாய்! உடம்பையும் ஓரளவு கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் நீ. உன்னுடைய உடல் நலமாக இருந்தால்தானே நீ இன்னும் நெடுநாட்கள் பொதுக் காரியங்களில் ஈடுபடலாம்?" என்று அவளைக் கடிந்து கொண்டான் அரவிந்தன்.

புதன்கிழமை அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்படுவது என்று ஏற்பாடு ஆகியிருந்தது. காற்று மாறுவதற்காக அவள் கொடைக்கானலில் தங்கியிருக்கும் காலத்தில் அவளுடைய உதவிகளுக்காக யாரை உடனிருகக்ச் செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.

"வெளியில் வருவதற்குக் கூசிக்கொண்டு கிடக்கிறாள் என் மூத்த பெண். ஏதாவது கேட்டால் என்னோடு பேசுவதும் இல்லை. தனக்குத்தானே அழுகிறாள். நடந்ததை மறந்து கலகலப்பாக பேசமாட்டேன் என்கிறாள். உன்னோடு சிறிது காலம் இருந்தால் மாறலாமே என்று என் மனத்தில் நம்பிக்கை உண்டாகிறது. அவளை உன்னோடு அனுப்பட்டுமா கொடைக்கானலுக்கு. இந்த சித்திரையில் அவளுக்கு எப்படியும் திருமண ஏற்பாடு செய்து விடலாம் என்று இருக்கிறேன். அதுவரையில் வேண்டுமானால் உன்னோடு கொடைக்கானலில் இருக்கட்டுமே. இப்போது அவளே உன் அருமையைப் புரிந்து கொண்டிருக்கிறாள். உன்னோடு அவள் வர ஒப்புக்கொள்வாள்" என்று மங்களேஸ்வரி அம்மாள் கூறினாள்.

"ஒரு நோயாளியோடு இன்னொரு நோயாளியையும் கூட்டி அனுப்பப் பார்க்கிறீர்களே அம்மா இது நியாயமா?" என்று முருகானந்தம் வேடிக்கையாக அந்த அம்மாளிடம் கேட்டான்.

"என்னப்பா செய்வது? அவளை மெல்ல மாற்றி வழிக்குக் கொண்டு வர முடியுமானால் அது பூரணியால் தான் முடியும் போலிருக்கிறது. பூரணியாலேயே முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது. நான் அவளை எப்படியோ வளர்த்துச் செல்லம் கொடுத்துப் பாழாக்கிவிட்டேன்" என்று அவனுக்கு அந்த அம்மாள் மறுமொழி கூறினாள்.

வசந்தாவைத் தவிர ஒரு சமையல்கார அம்மாளையும் பூரணியோடு உடன் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தாள் மங்களேஸ்வரி அம்மாள். மங்கையர் கழகத்துக் காரியதரிசிக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தால் பூரணி.

"உனக்கில்லாத விடுமுறையா பூரணி. நீ போய் உடம்பைத் தேற்றிக் கொண்டு வா அம்மா. இப்படி வரவழைத்து விட்டுக் கொண்டு எல்லோரையும் கவலையில் ஆழ்த்திவிட்டாயே, நீ சுகமடைந்து வந்தாலே போதும் எங்களுக்கு" என்று நேரிலேயே வந்து அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாள் காரியதரிசி.

"அக்கா எங்களையெல்லாம் விட்டு நீ மட்டும் போறியே!" என்று புறப்படும்போது பூரணியின் காலைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கிவிட்டாள் தங்கை மங்கையர்க்கரசி. தம்பி சம்பந்தம் கண்களில் நீர் மல்க நின்றான்.

"புறப்படும்போது இப்படியெல்லாம் அழக்கூடாது அம்மா! நீ ஒரு குறைவுமில்லாமல் எங்கள் வீட்டில் இருக்கலாம்" என்று மங்கையர்க்கரசியைத் தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டாள் மங்களேஸ்வரி அம்மாள். அரவிந்தன், பூரணி கார் ஏறுமுன் அவளிடம் கூறலானான். "புது இடமாயிற்றே என்று தயங்கிக் கொண்டே போகாதே. போய் நிம்மதியாக ஓய்வு கொண்டு இரு. முடிந்தால் அடுத்த மாத நடுவில் நானும் முருகானந்தமும் அங்கே வந்து பார்க்கிறோம். போய்ச் சேர்ந்ததற்குக் கடிதம் போடு. உடல் நலத்தைப் பற்றியும் அடிக்கடி எங்களுக்கு எழுது. பணம் வேண்டுமானாலும் ஒரு வரி கடிதம் எழுதினால் உடனே அனுப்புகிறோம். எழுதிக் கேட்பதா என்று கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் இருந்துவிடாதே."

"அக்கா! உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிக் கை கூப்பினான் முருகானந்தம்.

"அந்தக் குடிசை உதவி வேலையை உடனே தொடங்கிவிடுங்கள் அரவிந்தன். வசூல் ஆன தொகையைக் கண்ட ஆட்களிடம் கொடுத்து ஏழைகளை ஏமாற விட்டுவிடாதீர்கள். நீங்களும் முருகானந்தமும் கூட இருந்து செய்யுங்கள். இந்தச் சமயத்தில் இங்கே உங்களோடு கூட இருந்து அந்தப் பொதுத் தொண்டில் நானும் ஈடுபட முடியாமல் இப்படி எங்கோ புறப்பட்டுப் போகிறேனே என்பதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று நினைவு படுத்தினாள் பூரணி.

"நீ உடனிருந்து செய்யாவிட்டால் என்ன? உன்னுடைய சொற்பொழிவுதானே இந்தப் பொதுப்பணிக்கு இவ்வளவு பணம் வசூல் செய்து கொடுத்தது" என்று அவளுக்குச் சமாதானம் சொன்னான் அரவிந்தன்.

பூரணி, வசந்தா, சமையற்கார அம்மாள் மூவரையும் ஏற்றிக் கொண்டு கார் கொடைக்கானலுக்குப் புறப்பட்டது. அவர்களைக் கொடைக்கானலில் கொண்டுபோய் விட்டுத் திரும்பி வருமாறு சொல்லித் தன் காரை டிரைவருடன் அனுப்பியிருந்தாள் மங்களேஸ்வரி அம்மாள். அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு என்று மதுரைச் சீமையில் அழகிய ஊர்களையெல்லாம் ஊடுருவிக் கொண்டு கார் விரைந்தது. சாலை, மலைப்பகுதியில் ஏறுவதற்கு முன்னால் ஓரிடத்தில் ஆற்றின் கரையோரமாக ஒரு தோப்பில் இறங்கி உணவை முடித்துக் கொண்டார்கள். உணவை முடித்துக் கொண்டதும் அவர்கள் மறுபடியும் தங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தனர்.

வளைந்து, நெளிந்து, முடிவற்று, ஊர்ந்து கொண்டிருக்கும் கருநாகம் போன்ற மலைப்பாதையில் கார் ஏறியது. பாதையின் இருபுறமும் எதேச்சையாய்க் கவனிப்பாரற்றுக் கிடக்கும் செல்வம் போல் இயற்கையின் கொள்ளை கொள்ளையான அழகுக் காட்சிகள். கீழே அதலபாதாளத்துக்கு இறங்கும் நீலப்பசுமை விரிந்த பள்ளத்தாக்குகள். மேலே வீறுகொண்டு வீங்கிய மலைக் கொடுமுடிகள். எத்தனை நிறத்துப் பூக்கள்! எத்தனை விதமான கொடிகள்! எவ்வளவு பெரிய மரங்கள்! எட்டிப் பிடித்து இழுத்துத் தடவுகிறாற்போல் மிக அருகில் மேகம் தவழும் ஆகாயம். கார் வளைவுகளிலும் திருப்பங்களிலும் திரும்பும் போதெல்லாம் 'இதோ இங்கேதான் நான் இருக்கிறேன்' என்று ஓடிவந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போல் புதிய புதிய இயற்கைக் காட்சிகள். குலை தள்ளிய தாய்மைக் கோலம் காட்டும் மலை வாழைத் தோட்டங்கள், கொத்துக் கொத்தாய்க் கொடி முந்திரிப் பழங்கள் தொங்க திராட்சைக் கொடி படர்ந்த பசும் பந்தல்கள், எல்லாம் வனப்பின் வெள்ளமாய்த் தெரிந்தன. 'கை புனைந்து இயற்றாக் கவின் பெருவனப்பு' என்று இயற்கை அழகை நக்கீரர் வர்ணித்ததை நினைத்துக் கொண்டாள் பூரணி. மலை வாசத்தின் சிறப்புக்களைப் பற்றித் தமிழ்ப் பெரியார் திரு.வி.. எழுதியிருக்கும் உருக்கமான கட்டுரை அவளுக்கு நினைவு வந்தது.

 

'கொடைக்கானல் இத்தனை அழகாக இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை, வசந்தா! போன கோடையின் போது உன் அம்மா கூப்பிட்டார்கள். நான் வராதது எத்தனை நஷ்டம் என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது' என்று தன் அருகில் மௌனமாக வீற்றிருந்த வசந்தாவின் பக்கம் திரும்பிக் கூறினாள் பூரணி.

அலுப்படைந்து சலித்தாற் போன்ற குரலில் வசந்தா பதில் சொன்னாள். "முதல் தடவை வருவதனால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறது. எனக்கு என்னவோ வருடந்தவறாமல் பார்த்துச் சலித்து விட்டது. நாங்கள் இலங்கையில் இருக்கும் போது அப்பா ஒவ்வோர் ஆண்டு மார்ச் மாதம் எல்லோரையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்து விடுவார். ஜூலையில் தான் மறுபடியும் இலங்கை திரும்புவோம். அப்பாவின் நினைவுக்காகத்தான் அம்மா இன்னும் இங்கிருக்கிற பங்களாவை விற்காமல் வைத்துக் கொண்டிருக்கிறாள்."

"கண்டிப்பாக விற்கக் கூடாது. உங்கள் அம்மாவிடம் நான் சொல்லிவிடப் போகிறேன். உங்கள் அப்பாவுக்கு இருந்த இயற்கை இரசனை உங்கள் அம்மாவுக்கு இல்லையா, என்ன?"

"அப்பாவுக்கு இந்த மலைப் பங்களாவில் ஒரே பித்து. பங்களாவுக்கு முன்னால் ஒரு பெரிய ரோஜா தோட்டம் போட்டிருக்கிறார். அவர் இருந்தவரை ஆசைப்பட்டு ஒரு பூக்கூட பறிக்க முடியாது. பூக்களைச் செடியிலிருந்து பறிப்பதை அறவே வெறுப்பார் அப்பா."

இவ்வாறு மெல்ல மெல்ல வசந்தாவின் அமைதி மூட்டத்தைக் கலைத்துத் தன்னோடு கலகலப்பாகப் பேசிக் கொண்டு வரச் செய்திருந்தாள் பூரணி. சமையற்கார அம்மாள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சண்பகனூர் வந்தது. வெண்பட்டு நூலிழைகள் ஆகாயத்திலிருந்து இறங்குகிற மாதிரி சாரல் விழுந்து கொண்டிருந்தது. கம்பீரமாக எழுந்து கோணிக்கொண்டு மாடு முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு சிகரம் தெரிந்தது. "இதுதான் இங்கே உயர்ந்த சிகரம். இதைப் பெருமாள் மலை என்பார்கள்" என்று பூரணியிடம் கூறினாள் வசந்தா. மலைச்சாரலை வரை வரையாகப் பாத்தி கட்டி ஏதேதோ பயிர் செய்திருந்தார்கள்.

பச்சை நிறத்துச் சல்லாத் துணியால் திரையிட்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி, அதை சற்றே விலக்கி எட்டிப் பார்த்து மெல்லென நகைப்பது போல் மலைகளுக்கிடையே அழகாகத் தெரிந்தது கொடைக்கானல் நகரம். நகரின் நடுப்பகுதியான ஏரியின் தென்புறத்தில் மலைச்சரிவில் அரண்மனையைப் போல் கட்டியிருந்த வீட்டின் முன் போய் கார் நின்றது. நீல இருள் கவிந்த அந்தச் சாரல் பெய்யும் சூழலில் எட்டாயிரம் அடிக்கு மேல் உயர்ந்த ஒரு மலை நகரத்தில் திருமண வீட்டின் அழகு பொலிவுற்றுத் தெரிந்தது. அவற்றையெல்லாம் பார்த்துப் பூரணியின் உள்ளம் சிறு குழந்தைபோல் உற்சாகத் துள்ளல் பெற்றது. மனதுக்குப் புத்தம் புதிய சுறுசுறுப்பு வந்து விட்டது போலிருந்தது.

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக அந்த மலை நகரத்தின் அழகுகளைச் சுற்றிப் பார்த்தாள் அவள். வந்த அன்றைக்கு மறுநாள் அரவிந்தனுக்கும் மங்களேஸ்வரி அம்மாளுக்கும் கடிதங்கள் எழுதினாள். அரவிந்தனுக்கு எழுதிய கடிதத்தில் தான் உற்சாகமாக இருப்பதாகவும், அந்தச் சூழ்நிலையில் சில புதிய நூல்களைப் படித்து சிந்திக்க விரும்புவதாகவும், அவற்றை மதுரை தமிழ்ச் சங்கத்து நூல் நிலையத்திலிருந்து எடுத்து அனுப்பினால் உதவியாயிருக்கும் என்று எழுதியிருந்தாள். மங்களேஸ்வரி அம்மாளுக்கு எழுதிய கடிதத்தில் வசந்தாவை உற்சாகமாகவும் கலகலப்பாகவும் மாற்றிக் கொண்டு வருகிறேன். சித்திரையில் முகூர்த்தம் பாருங்கள். அதற்கு முன்பே மாப்பிள்ளையையும் பார்த்து விடுங்கள் என்று எழுதியிருந்தாள்.

நான்கு தினங்களுக்குப் பின் அவள் பெயருக்கு ஒரு பெரிய புத்தகப் பார்சல் வந்தது. அரவிந்தன் கடிதமும் எழுதியிருந்தான். அதே தபாலில் வசந்தாவின் பெயருக்கு ஒரு கவர் வந்திருந்தது. அப்போது அவள் கடைவீதிக்குப் போயிருந்ததனால் பூரணியே அந்தக் கவரையும் வாங்கி வைத்துக் கொண்டிருந்தாள். உறையின் மேல் வசந்தாவின் பெயரை எழுதியிருந்த கையெழுத்து மங்களேஸ்வரி அம்மாளுடைய எழுத்தாகத் தெரியவில்லை. செல்லத்தின் கையெழுத்தாக இருந்தது. மனத்தில் சந்தேகம் தட்டினாலும் பூரணி அதைப் பிரிக்கவில்லை. அவள் கடையிலிருந்து வந்ததும் அவளிடமே கொடுத்துவிட்டாள். சந்தேகம் மட்டும் பூரணியிடம் தங்கியது.

அன்று அந்தக் கடிதத்தை வசந்தா படித்தபின் அவளிடம் ஏற்பட்டிருந்த மாறுதல் பூரணிக்கு வியப்பளித்தது. வசந்தாவின் இதழ்கள் அடிக்கடி ஏதோ பாட்டை முணுமுணுத்தன. கூந்தல் ரோஜாப்பூக்களைச் சுமந்தது. இதழ்களில் சிரிப்பு. முகத்தில் புதிய மலர்ச்சி; நடையில் உல்லாச மிதப்புத் தெரிந்தது. மாலையில் "அக்கா! இன்று ஏரிக்குப் போய் படகில் சுற்ற வேண்டும்" என்று வசந்தாவே வலுவில் வந்து பூரணியை வற்புறுத்தினாள்.

"இன்று உனக்கு என்ன வந்துவிட்டது வசந்தா? உற்சாகம் பிடிபடாமல் துள்ளுகிறதே?" என்று வியந்து வினவினாள் பூரணி.

 

18

 

பரபரப்பினோடே பலபல செய்தாங்(கு)

இரவு பகல் பாழுக்(கு) இறைப்ப - ஒருவாற்றான்

நல்லாற்றின் ஊக்கிற் பதறிக் குலைகுலைப

எவ்வாற்றான் உய்வார் இவர்.

                                                                               -- குமரகுருபரர்

 

மேற்கு வானத்திலிருந்து தங்க ஊசிகள் நீளம் நீளமாக இறங்குகிறார் போல் மாலை வெயில் பொற்பூச்சுப் பூசிக் கொண்டிருந்தது. கண்களுக்கு நேரே மஞ்சள் நிறக் கண்ணாடிக் காகிதத்தைப் பிடித்துக் கொண்டுப் பார்க்கிற மாதிரி தெருக்களும், வீடுகளும், மரங்களும் மஞ்சள் கவிந்து எத்தனை எழில் மிகுந்து தோன்றுகின்றன! கோடானுகோடி நெருஞ்சிப் பூக்களை வாரிக் கொட்டிக் குவித்தாற்போல் மஞ்சள் குளித்து மயங்கிய இந்த மாலைப் போதுதான் எவ்வளவு மயக்கம் தருகிறது! தமிழில் மருள்மாலை என்று இதற்குப் பெயர் வாய்த்தது எத்தனை பொருத்தமானது? தமிழ்ச்சங்கம் வீதியில் ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்கு அருகே கையில் துணிப்பையுடன் நடந்து கொண்டிருந்தான் அரவிந்தன். அன்றைக்குச் சந்தை நாள் போலிருக்கிறது. திருவிழாக் கண்டதுபோல் வீதி கொள்ளாமல் மக்கள் கூடிக் கொண்டும், சிதறிக்கொண்டும் இருந்தார்கள். இரண்டு பக்கத்து நடைபாதைகளிலும் கூடைக்காரிகளின் கும்பல் தரைமேல் ஹோலிப் பண்டிகை கொண்டாடின மாதிரி தாறுமாறாகத் துப்பின வெற்றிலைச்சாறு - கால்களைப் பதித்து நடக்கக் கூசிற்று. மழை வந்து விட்டால் கைகளில் தூக்கிச் சுமக்க நேரிடுமே என்று செருப்பணியாமல் வந்திருந்தான் அரவிந்தன். பாதங்களைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் மிகவும் விருப்பமுள்ளவன் அவன். வாதா மரத்தின் பழுத்த இலைகளைப் போல் நல்ல பாதங்கள் அவனுக்கு. செம்பொன் நிறம். அதில் அழகாகவும் அளவாகவும் விரல்கள். நீளமும் அகலமுமான பெரிய பாதங்கள் அவை.

எப்பொழுதாவது அரவிந்தனின் பாதங்களைக் கவனிக்க நேருகிறபோது அவனோடு சம வயதுள்ள நண்பர்கள், "பெண்பிள்ளைகளின் பாதங்களைப்போல் எப்படி அப்படி கால்களை இவ்வளவு அழகாக வைத்துக் கொள்கிறாய்" என்று கேலியாகக் கேட்பதுண்டு. பித்த வெடிப்பும், சேற்றுப்புண்ணுமாக முரடு தட்டிப்போன முருகானந்தத்தின் பாதங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'கால்களைக் கவனி தம்பி; உன்னைப் போலவே அவையும் முரடாகிக் கொண்டிருக்கின்றன' என்பான் அரவிந்தன்.

"எனக்கு இந்த அழகுக் கவலையே உண்டாவதில்லை அரவிந்தன்! எங்கள் வீடு இருக்கிற பகுதிக்குப் பெயர்தான் பொன்னகரம் என்று பிரமாதமாக வைத்துவிட்டார்கள். உண்மையில் பொன்னரகம் தான் அது. சேறும் சகதியும், மேடும் பள்ளமுமான அந்தத் தெருக்களில் நடக்கிற கால் இப்படியில்லாமல் வேறு எப்படி இருக்கும்?" என்று முருகானந்தத்திடமிருந்து பதில் வரும்.

பூரணி கொடைக்கானலில் இருந்து படிப்பதற்காகக் கேட்டிருந்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு வருவதற்காகவே அரவிந்தன் அப்போது தமிழ்ச்சங்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஏராளமான நூல்கள் நிறைந்த பெரிய நூல் நிலையம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்தது. பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் இந்தத் தமிழ்ச் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இருந்தார். இதன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் முன்பாக, மூன்று தமிழ்ச்சங்கங்களும் அழிந்த குறையைத் தீர்ப்பதற்காக இராமநாதபுரம் அரச குடும்பத்தினரும் பாண்டித்துரைத் தேவர் என்ற பெயருள்ளவருமான வள்ளலும் இந்த நான்காம் சங்கத்தைத் தோற்றுவித்தார்கள். செந்தமிழ் வளர்த்த சேதுபதி அரசர்களோடு பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்துக்கு இளமையிலிருந்தே நட்புறவுண்டு. ஒவ்வொரு நவராத்திரி விடுமுறையின்போதும் இராமநாதபுரத்தில் கலைமகள் விழாக் கவியரங்கத்துக்குச் சென்று சிறந்த மரியாதைகளோடு திரும்பி வருவார் அழகிய சிற்றம்பலம். அப்பாவின் அந்த உறவும் பெருமையும் இப்போது பூரணிக்குப் பயன்பட்டன. தன் வீட்டில் இல்லாத சில அரிய நூல்களை அவள் தமிழ்ச்சங்க நூல் நிலையத்தில் எடுத்துப் படிப்பது வழக்கமாயிருந்தது.

பூரணி கொடைக்கானலிலிருந்து எழுதியிருந்த கடிதத்தையும், புத்தகங்களைப் பற்றிய குறிப்பையும் காட்டியவுடனே நூல் நிலையத்தில் சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும் புத்தகங்களை எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். அரவிந்தன் அவற்றைப் பையில் நிரப்பிக் கொண்டு திரும்பினான். அச்சகத்தில் போய் அந்தப் புத்தகங்களை நன்றாகக் கட்டி கொடைக்கானலுக்கு மறூநாள் காலை பார்சல் செய்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டு விரைந்தான் அவன். சந்தை சிறிது சிறிதாகக் கலைந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை சந்தை என்று பேர்தானேயொழிய வியாழக்கிழமையிலும் சந்தை கூடும். அங்கே தேசிய இயக்கக் காலத்தின் சின்னமாகத் 'திலகர் சதுக்கம்' என்ற புதுப்பெயரையும் ஏற்றுக்கொண்டிருந்தது அந்த சந்தை மைதானம். சந்தைக்கு வரும் வியாபாரிகள் காய்கறிகளை விற்று முடித்தபின், மாலை ஆறரை மணிக்கு மேல் அரசியல் சந்தை கூடுகிற இடமாக மாறிவிடும் அது. அதாவது பொதுக்கூட்டங்கள் அங்கே நடைபெறும். உணர்ச்சிமயமான பேச்சாளர்கள் தங்கள் முதல் இல்லாத சரக்கை விற்கிற இடமும் அதுதான். இப்படிப் பகலில் காய்கறியும் இரவில் அரசியலும் விலை போய்க் கொண்டிருந்த அந்த இடத்தின் வாயிலில் வீதி வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முருகானந்தத்தை அங்கே சந்தித்தான் அரவிந்தன்.

"என்ன அரவிந்தன்! தமிழ்ச் சங்கத்தையே பைக்குள் வாரி அடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாய் போலிருக்கிறதே" என்றான் முருகானந்தம்.

"ஒன்றுமில்லையப்பா, பூரணி கொடைக்கானலிலிருந்து புத்தகங்கள் வாங்கி அனுப்பி வைக்கச் சொல்லி எழுதியிருந்தாள். அவளுக்கு அனுப்புவதற்காக வாங்கிக் கொண்டு போகிறேன்."

 

"எனக்குக்கூட கடிதம் வந்தது..." என்று சிரித்துக் கொண்டே களிப்போடு பேச்சைத் தொடங்கிய முருகானந்தம் மின்சாரத் தொடர்பு அற்றதும் பட்டென்று ஒலி நிற்கிற வானொலி மாதிரி உதட்டைக் கடித்துக் கொண்டு பேச்சை நிறுத்தினான். சொல்ல வேண்டாமென்று இருந்ததை வாய்தவறிச் சொல்லியது போன்ற உணர்வு அவன் முகத்தில் நிலவியது. அரவிந்தன் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். உல்லாசமும் தடுமாற்றமும் கலந்த நூதனமானதொரு குழப்பத்தோடு தோன்றினான் முருகானந்தம். அரவிந்தனின் பார்வையைத் தன் முகத்தில் தாங்கிக் கொள்ள இயலாதவன் போல் தலையைச் சாய்த்துக் கொண்டு எங்கோ பராக்குப் பார்த்தான் அவன். மலராத பூவின் மகரந்த மணம்போல் அப்போது அவனுடைய முகத்திலும் கண்களிலும் இதழ்களிலும் நாணமும் கூச்சமும் கலந்து நிற்பதை அரவிந்தன் கண்டான்.

"உனக்கு யாரிடமிருந்து கடிதம் வந்தது முருகானந்தம்? தனியாக உனக்கு வேறு கடிதம் எழுத இயலவில்லை என்றும், உன்னிடம் தன் வணக்கத்தைக் கூறும்படியும் உன்னுடைய பூரணியக்கா எனக்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருக்கிறாளே அப்பா?"

இந்தக் கேள்விக்குப் பின் முருகானந்தத்தின் உல்லாசத் தடுமாற்றம் இன்னும் அதிகமாயிற்று. அரவிந்தன் விடவில்லை மேலும் அவனைத் துளைத்தெடுத்தான்.

"என்னப்பா தம்பி, என்ன சங்கதி? முகம் ஒரு மாதிரிக் கோணிக் கொண்டு போகிறது. கடிதம் வந்திருக்கிறது என்கிறாய். யார் எழுதினதென்று கேட்டால் பதில் சொல்லாமல் பராக்குப் பார்க்கிறாய்?"

"ஒன்றுமில்லை அரவிந்தன் வந்து..."

"வந்தாவது, போயாவது. ஆண்பிள்ளையாய் இலட்சணமாய்க் கூச்சமில்லாமல் பேசு ஐயா."

"அந்தப் பெண் வசந்தா கொடைக்கானல் போய்ச் சேர்ந்ததும் என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதைத்தான் வாய் தவறி உன்னிடம்..."

"சொல்லிவிட்டாயாக்கும்! பலேடா தம்பி. காதல் கதை ஆரம்பமாகியிருக்கிறதா? எத்தனை நாட்களாக இந்தக் கடிதம் எல்லாம் வந்து போகிறதப்பா?"

"சத்தியமாகச் சொல்கிறேன் அரவிந்தன், எனக்கு ஒரு வம்பும் தெரியாது. அந்தப் பெண்ணாகத் தான்..."

"டேய்! டேய்! சத்தியம் என்கிற வார்த்தை ரொம்பவும் பெரிது. அதை இங்கே இழுக்காதே. இது சாதாரண காதல் விவகாரம்" என்று வேடிக்கை பண்ணினான் அரவிந்தன். முருகானந்தம் சிரித்துக் கொண்டே தலைகுனிந்தான்.

"ஓகோ! அப்படியா சங்கதி! பதில் எழுதி விட்டாயோ இல்லையோ!"

 

எழுதி விட்டேன் என்பது போல் தலையாட்டினான் முருகானந்தம். அரவிந்தன் சிரித்தவாறே மேலும் கூறினான்.

"இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது, அப்பனே! சினிமா வம்பிலிருந்து அந்தப் பெண்ணை மீட்டு வரத் திருச்சி போய் திரும்பின அன்றிலிருந்தே நீ தானப்ப முதலித் தெருவுக்கு அடிக்கடிப் போகத் தொடங்கிவிட்டாயே; 'அந்த அம்மா ஏதோ தைப்பதற்குத் தருகிறேன் என்று வரச் சொன்னதாக' அல்லவா போய்க் கொண்டிருந்தாய்? இதுதானா அந்தத் தையல் வேலை".

"இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்" என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம்.

"இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் - இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு விட்டாயோ?" என்று அவனைக் கேலி செய்து அனுப்பிவிட்டு மனம் தாங்க முடியாத வியப்புடன் அச்சகத்திற்குச் சென்றான் அரவிந்தன். உண்மையிலேயே இது மிகவும் வியப்புத் தரும் செய்தியாகத்தான் இருந்தது அவனுக்கு. முருகானந்தத்திடம் கிண்டலும் வேடிக்கையுமாகப் பேசி அனுப்பிவிட்டாலும் பொறுப்புணர்ச்சியோடு நினைத்துப் பார்த்தபோது பயமாகவும் மலைப்பாகவும் இருந்தது அரவிந்தனுக்கு.

'இந்தத் தொடர்பைப் பற்றி மங்களேஸ்வரியம்மாள் என்ன நினைப்பார்? பூரணி என்ன நினைப்பாள்? முருகானந்தத்தின் பெற்றோர்கள் தான் என்ன நினைப்பார்கள்? சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது? நாலு தடவை சந்தித்து சிரித்துப் பேசியும் பழகி விட்டால் மனத்தில் இந்த அசட்டுத்தனமான கனவுகள் உண்டாகிவிடுகின்றன. இராத்திரி அச்சகத்துக்கு வந்தால் முருகானந்தத்தைக் கண்டிக்க வேண்டும்?' என்று தீரச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான், அரவிந்தன்.

'செல்வத்திமிரும் இறுமாப்பும் நிறைந்தவள். ஆடம்பா அசட்டுத்தனங்களும், வெளிப்பகட்டும் உள்ளவள்' என்றுதான் வசந்தாவைப் பற்றிப் பூரணி சொல்லி இருந்தாள். அத்தகைய இறுமாப்பு நிறைந்த பெண் உள்ளம் அதற்கு நேர்மாறான கொள்கைகளும் சாதாரண வாழ்க்கை வசதிகளும் உள்ள முருகானந்தத்தை நோக்கி எப்படி மலர்ந்தது? எவ்வாறு நெகிழ்ந்தது? சிந்திக்க சிந்திக்க அந்த இருவரின் இணைப்பு விளங்காப் புதிராகவே தோன்றியது அவனுக்கு. 'கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபலம் என்ற உணர்வே! உனக்குத்தான் பெண் என்று மறுபெயர் சூட்டியிருக்கிறார்கள்' என்னும் கருத்துப்பட 'ஹாம்லெட்' நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பது நினைவு வந்தது அவனுக்கு. உலகத்து அறிஞர்களின் பொன்மொழிகளைக் குறித்து வைக்கும் தனது நோட்டுப் புத்தகத்தில் இக்கருத்தைக் குறித்திருந்தான் அவன். எல்லாப் பெண்களையும் இந்தச் சட்டத்தில் அடக்க விருப்பப்படவில்லை அவன் மனம். 'பூரணியைப் போல் அறிவு வளர்ச்சியிலும் தொண்டு, தியாகங்களிலும் கரைந்து போய் சொந்தச் சபலங்களை மறந்து விடுகிறவர்களும் இருக்கிறார்களே!' அரவிந்தனின் சிந்தனை எதிரே வந்து கை நீட்டிய ஓர் இளைஞனால் கலைந்தது.

"சார், சாப்பிட்டு ஏழு நாளாச்சு சார்! ஊருக்குத் திரும்பிப் போகலாமென்றால் கையில் காசு இல்லை சார். ஏதாவது உதவி செய்யுங்க சார். வயிற்றுப் பசி தாங்கமுடியலை சார். இன்னும் சிறிது நேரம் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் இப்படியே நடுவீதியில் செத்துப் போய் விழுந்து விடுவேன் போலிருக்கிறது சார்" என்றான் அந்த இளைஞன் கண்ணீரும் கம்பலையுமாக.

வேகமாக நடந்து கொண்டிருந்த அரவிந்தன் நின்றான். துவண்டு ஒடிந்து விழுந்து விடுகிறாற்போல நின்ற அந்த இளைஞனை நன்றாகப் பார்த்தான். நாலைந்து தடவைகள் ரப்பரால் அழித்து எழுதின காகிதம் மாதிரி வாலிபம் வீறுகுன்றிச் செழிப்பற்ற முகம். தொடர்ந்து பல நாட்களாகக் குளிக்காத தோற்றம். வேர்வையேறி அழுக்கடைந்த சட்டை வேட்டி. குழிந்து இமையடியில் பள்ளம் வாங்கிப் பஞ்சடைந்த கண்கள். இந்த நாட்டு ஏழ்மை ஏக்கங்களுக்கும், பசி, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கும் பிரதிநிதியாக வந்தவன் போல் நின்றான் அந்தப் பஞ்சை வாலிபன். தன்னை காண்பவரிடத்தில் இரக்கத்தை உண்டாக்கும் குழைவைத் தன் முகத்திலும் தோற்றத்திலும் கைகளிலும் காட்டினான் அவன். அரவிந்தன் கேட்டான். "உனக்கு என்ன ஊர் அப்பா?"

இராமநாதபுரம் சீமையில் வறட்சியும் பஞ்சமும், நித்திய ஆட்சிபுரியும் பகுதியைச் சேர்ந்த ஒர் ஊரைச் சொன்னான் அந்த வாலிபன்.

"எதுவரை படித்திருக்கிறாய்?"

"எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருக்கிறேன் சார்! டைப்ரைட்டிங் தெரியும். சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதினேன். தேறவில்லை வேலை தேடி மதுரைக்கு வந்தேன், சார்!"

அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. 'படித்துப் பரீட்சை எழுதிவிட்டு மனத்தில் வாழ்க்கையைப் பற்றிய கனவுகளோடு பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து இறங்கும் இளைஞர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் இன்று இந்த நாட்டில் பெரிய நகரத்தின் ஆரவாரமிக்க தெருக்களில் வயிற்றுக்குப் பிச்சை கேட்டுக்கொண்டு திரிகிறார்கள். இவர்களுடைய மானத்தைக் காப்பாற்றாத வரையில் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது இந்த நாட்டில்' என்று கொதித்தது அவன் உள்ளம்.

 

"சார், பசி பொறுக்க முடியவில்லை!" தனது இடது கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலது கையை நீட்டினான் அவன். ஜிப்பா பையில் கையை விட்டு முழு ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் வைத்து, "ஏதாவது வாங்கிச் சாப்பிடு, அப்பா!" என்று கூறிவிட்டுத் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தான் அரவிந்தன். தன்னையே அந்த இளைஞனின் நிலையில் வைத்து எண்ணிப் பார்த்து வருந்தினான் அவன். 'மீனாட்சி அச்சகமும், கருணையும் பெருந்தன்மையும் உள்ள அதன் உரிமையாளரும் தடுத்தாட் கொண்டிருக்காவிட்டால் தான் இப்படி ஏதாவது ஒரு பெரிய நகரத்தின் புழுதி படிந்த தெருக்களில் வயிற்றுக்காக அலைந்து கொண்டிருக்க வேண்டியவன் தானே' என்பதைச் சிந்தித்த போது மேலும் நெகிழ்ந்து குழைந்தது அவன் உள்ளம்.

கையில் தமிழ்ச் சங்கத்துப் புத்தகங்கள் கனத்தை விட மனத்தில் அதிகமாகக் கனத்த சிந்தனையோடு அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். அச்சகத்து வேலை நேரம் முடிந்து வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

"நீங்க தமிழ்ச் சங்கத்துக்குப் புறப்பட்டுப் போனப்புறம் 'ஐயா' வந்தாருங்க. இப்போ கீழாவணி மூலவீதிப் பேப்பர்க் கடைக்குப் போயிருக்காரு. நீங்க வந்தால் உங்களை எங்கேயும் வெளியே போய்விடாமல் இங்கேயே இருக்கச் சொன்னாரு. உங்ககிட்ட ஏதோ முக்கியமான சங்கதி கலந்து பேசணுமாம்" என்று அச்சகத்து ஊழியன் (ப்யூன்) அரவிந்தனிடம் வந்து சொன்னான். அப்போது அரவிந்தனுடைய மனத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் தெருவில் சந்தித்த இளைஞனைப் பற்றியதாக இருந்தது. அதிலிருந்து தற்காலிகமாகத் தன்னை மீட்டுக் கொண்டு, "நான் இங்கேதானப்பா இருக்கப் போகிறேன். இன்றைக்கு வெளியில் எங்கும் போகப் போவதில்லை. நீ உள்பக்கம் போய் அங்கே நம் திருநாவுக்கரசு இருந்தால் நான் கூப்பிட்டேனென்று வரச்சொல்" என்று ஊழியனிடம் சொல்லி அனுப்பினான் அவன். சிறிது நேரத்தில் பூரணியின் தம்பி திருநாவுக்கரசு வந்து நின்றான்.

"சார், என்னைக் கூப்பிட்டீர்களாமே?"

"ஆமாம்! இந்தா இந்தப் புத்தகங்களை நன்றாகக் கட்டி பார்சல் செய்வதற்கேற்ற முறையில் வைத்துவிடு. நாளைக் காலையில் உன் அக்காவுக்கு அவற்றை அனுப்ப வேண்டும்".

கையோடு புத்தகங்களை எடுத்துக் கொண்டு திருநாவுக்கரசு உள்ளே சென்றான். வயிற்றைப் பிடித்துக் கொண்டு 'பசி பசி' என்று பரிதாபமாகக் கதறி நின்ற அந்த வாலிபன், மறுபடியும் நினைவின் வட்டத்தில் வந்து அரவிந்தனை வாட்டினான். நெஞ்சு நெகிழ்ந்து உருகியவாறே தனது குறிப்பு நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதத் தொடங்கினான் அரவிந்தன்.

 

"தாங்க முடிந்ததற்கு மேல் அதிகப்படியான சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறவன் ஏலாமையோடு முனகுகிற மாதிரி வாழ்க்கையில் இன்று எங்கும் ஏலாமையின் முனகல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது. முள்ளோடு கூடிய செடி பெரிதாக வளர வளர முள்ளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருப்பதைப் போல உரிமைகளும் விஞ்ஞான விவேக வசதிகளும் நிறைந்து வாழ்க்கை தழைத்து வளர வளர அதிலுள்ள வறுமைகளும் பிரச்சினைகளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருக்கின்றன. குற்றம் குறைகளோடு தப்பாக எடுக்கப் பெற்ற புகைப்படத்தை அப்படியே என்லார்ஜ் செய்தால் அந்தக் குறைகளும் பெரிதாகத் தெரிகிற மாதிரித்தான் இருக்கிறது இப்போதுள்ள பாரத நாட்டு வாழ்க்கை 'வளர்ச்சி'! இந்த நாட்டு இளைஞர்கள் சோர்வும் பசியும் ஏமாற்றமும் அவநம்பிக்கைகளும் கொண்டு படிப்புக்கேற்ற வேலையின்றி உழைப்புக்கேற்ற புகலிடம் இன்றி வேதனைப்படுகிறார்கள். இரயிலின் முன் விழுந்தும் மரக்கிளையில் தூக்குப் போட்டுக் கொண்டும் நஞ்சு தின்றும் சாவதற்கா இவர்கள் பிறந்தார்கள்?" பேனா வெள்ளைக் காகிதத்தைக் கிழித்து விட்டு நின்றது. மை இல்லை. நல்ல கருத்துகள் மனத்துக்குள் வெள்ளமாகப் புரண்டு வருகிற நேரத்தில் வரண்டு போய்த் தொல்லை மிகக் கொடுக்கும் பேனாவின் மேல் கோபம் வந்தது அரவிந்தனுக்கு. அதை அப்படியே முறித்துப் போட்டுவிடலாமா என்று சினம் தோன்றியது. எழுதும்போது பேனாவில் மை இல்லாமல் போகிற இடையூறு போல் பெரிய இடையூறு உலகத்திலேயே வேறு எதுவும் இருக்க முடியாது என்ற கொதிப்புடன் மேசை இழுப்பறையைத் திறந்து அவன் மைக்கூட்டை எடுத்தான். நீர் வறண்டு தரை தெரியும் வெய்யிற் காலத்து வானம் பார்த்த பூமிக் கிணறு மாதிரி மைக்கூடும் காலியாக இருந்தது. பொறுக்க முடியாத எரிச்சல் மூண்டது அவனுக்கு. அந்த எரிச்சலோடு இரைந்து கத்தி, ஊழியனை மை வாங்கி வரச் சொல்லலாமெனக் கூப்பிட்டான். பின்புறம் ஏதோ கை வேலையாக இருந்ததனால் ஊழியன் உடனே வரவில்லை. "எல்லாப் பையன்களுக்கும் காது அடைத்துப் போய்விட்டது. நாமே போய் வாங்கிக் கொண்டு வந்தால் தான் உண்டு" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு எழுந்து வெளியேறி மேலக்கோபுரத் தெருவில் திரைப்பட நிலையத்துக்கு அருகில் இருந்த 'ஷாப்'பில் போய் மைப்புட்டி வாங்கிக் கொண்டு திரும்பினான். புதுப்படம் போட்டிருந்தார்கள் போலும். திரைப்பட நிலையத்தின் முன் 'கியூ' வரிசை நீண்டிருந்தது. தற்செயலாக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களின் மேற்சென்ற அரவிந்தனின் பார்வை வியப்புடன் ஒரு முகத்தின் மேல் நிலைத்துப் பதிந்தது. கோபுரம் சரிந்து விழுவது போல் மனத்தில் ஓர் உணர்வு உடைந்து சரிந்தது. நெற்றி சுருங்கப் பார்த்தான் அவன்.

ஏழு நாட்களாகப் பட்டினி கிடந்து சாவதாகப் பஞ்சைப் பாட்டுப்பாடி அரவிந்தனுடைய அனுதாபத்தையும் ஒரு ரூபாயையும் பெற்றுக் கொண்டு போனானே, அந்த வாலிபன் வாயில் 'சிகரெட்' புகை சுழலச் சினிமா பார்ப்பதற்காக பன்னிரண்டரையணா டிக்கெட் வரிசையில் நின்று கொண்டிருந்தான். அதைக் கண்டதும் உலகமே தலைகீழாகச் சுழல்வது போலிருந்தது அரவிந்தனுக்கு. முருகானந்தமாயிருந்தால் அந்த வாலிபனை வரிசையிலிருந்து வெளியே இழுத்துச் செம்மையாக உதைத்திருப்பான். அரவிந்தனுக்கும் மனம் குமுறிற்று. அருகில் போய் அவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்ற துடிப்பும் கூட ஏற்பட்டது. ஆனால் வரிசை நகர்ந்ததன் காரணமாக அதற்குள் அந்த வாலிபன் உட்பக்கம் முன்பாகப் போயிருந்தான்.

'எக்கேடும் கெட்டுத் தொலையட்டும்! இவர்கள் உருப்படப் போவதில்லை. இரயிலுக்குப் போகிற அவசரம் போலப் பரபரப்போடு பலப்பல தவறுகளைச் செய்து இரவும் பகலும் பாழாக்கித் தங்கள ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சிந்தனையில்லாமல் கோயில் காளைகள் போல் திரிகிற இந்த விடலைக் கும்பல் எந்த வழியால் உய்யப் போகிறது? இவர்களைத் திருத்துவதற்கு மகாத்மாக்கள் பிறக்கவேண்டும். வெறும் மனிதர்களால் முடியாது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பதவியுடையவர் வாரத்துக்கு ஒருமுறை தான் திரைப்படம் பார்க்கச் செல்கிறார். மாதம் முப்பது ரூபாய் வாங்குகிற கூலியாள் வீட்டில் மனைவி குழந்தையும் பட்டினி கிடக்க ஒரே படத்துக்கு ஏழு தடவைகள் போகிறான். கலைகள் மனிதர்களை ஏழையாக்கிப் பிச்சையெடுக்க வைக்கலாகாது. சமூகத்தில் செழிப்பும், செல்வமும் பொங்குவதற்குத் துணை நிற்க வேண்டிய கலைகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொடுமை எவ்வளவு பயங்கரமாக வளர்ந்து விட்டது? அப்போதே அந்த வாலிபனிடம் ஒரு ரூபாயை முழுசாகத் தூக்கிக் கொடுத்திருக்கக் கூடாது. நானே ஓட்டலுக்குக் கூட்டிப் போய்ச் சாப்பாடு பண்ணி அனுப்பி வைத்திருக்க வேண்டும். பரவாயில்லை, எனக்கு இதுவும் ஒரு பாடம் தான். சுலபமாக நம்பி ஏமாறதபடி என்னை நான் விழிப்பாக வைத்துக் கொள்வேன் இனிமேல்' என்று நினைத்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு திரும்பி வருவதைத் தவிர அரவிந்தனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அச்சகத்தில் போய் உட்கார்ந்து புத்தகப் பார்சலோடு கிடைக்குமாறு தனித் தபாலில் பூரணிக்கு ஒரு கடிதமும் எழுதினான். முருகானந்தம்-வசந்தா கடிதத் தொடர்பு வேறு அவன் மனத்தை உறுத்திச் சந்தேகங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தது. ஆயினும் அதுபற்றி அவன் பூரணிக்கு ஒன்றும் எழுதவில்லை. மீனாட்சிசுந்தரம் ஏதோ முக்கியமான விஷயம் பற்றிப் பேச வேண்டுமென்று தன்னை இருக்கச் சொல்லி விட்டுப் போயிருக்கிறாரே. அது என்ன விஷயமாக இருக்குமோ, என்னும் சந்தேகங்களைப் பின்னலாயிற்று அவன் மனம்.

அரவிந்தன் மீனாட்சிசுந்தரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாள் வந்தாள். 'இரண்டு மூன்று முக்கியமான கடிதங்கள் மங்கையர் கழகத்துக்கு வந்திருப்பதாகவும் அவற்றுக்குப் பூரணியைக் கலந்து கொண்டுதான் பதில் எழுதவேண்டும்' என்றும் சொல்லிப் பூரணியின் கொடைக்கானல் முகவரியை அரவிந்தனிடம் கேட்டாள் அந்த அம்மாள்.

 

"நேரில் நீங்களே போகப் போகிறீர்களா, அம்மா?" என்று புத்தகங்களை அந்த அம்மாள் மூலமே அனுப்பிவிடும் குறிப்போடு கேட்டான் அவன்.

"இல்லை, கடிதம் எழுதிக் கலந்து கொள்ளத்தான் முகவரி கேட்டேன்" என்று அம்மாள் கூறிவிடவே புத்தகம் கொடுத்தனுப்புவது சாத்தியமில்லையென முகவரி மட்டும் எழுதிக் கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனாள் அந்தப் பெண்மணி.

'உடல்நலமில்லாமல் ஓய்வு கொள்ளப் போன இடத்திலும் கூட பூரணியைக் கவலையின்றி நிம்மதியாய் இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறதே' என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டான் அரவிந்தன். இரவு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. மணி ஏழே முக்காலை எட்டிய சமயம், சிறிது நேரத்தில் மீனாட்சிசுந்தரம் வந்து சேர்ந்தார்.

"இப்படி உள்ளே வா அரவிந்தன்! நான் பேசவேண்டிய விஷயம் மிக அந்தரங்கமானது. உன்னுடைய உதவியில்லாமல் இந்தத் தீர்மானத்தையும், நினைவையும் நான் நிறைவேற்றிக் கொள்வதற்கில்லை. இதனால் நமது தொழிலும் செல்வாக்கும் பெருகலாம். எத்தனையோ இலாபங்களும் சௌகரியங்களும் சுலபமாகக் கிடைக்க இது ஒரு வழி" விஷயத்தை விண்டு சொல்லாமல் பூடகமாகவே பேசிக் கொண்டு போனார் அவர். "என்ன விஷயமென்று நீங்கள் சொன்னால்தானே எனக்குத் தெரியும்?" என்று கேட்டுக் கொண்டே அவருடைய மேசைக்கு முன்னால் நின்றான் அரவிந்தன்.

"முதலில் நீ உட்கார்ந்து கொள்!"

அரவிந்தன் எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். தயக்கத்தோடு அவர் முகத்தைப் பார்த்தான்.

"நான் கேட்பதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே! பூரணி நீ சொன்னால் எதையும் தட்டமாட்டாள் அல்லவா?"

எதற்காக, ஏன், என்ன நோக்கத்தோடு இதை அவர் கேட்கிறாரென விளங்காமல் அரவிந்தன் பதில் சொல்லத் தயங்கினான்.

 

19

 

குண்டலந் திகழ் தரு காதுடைக் குழகனை

வண்டலம்பும் மலர்க் கொன்றைவான் மதியணி

செண்டலம்பும் விடைச் சேடனூர் ஏடகம்

கண்டுகை தொழுதலும் கவலை நோய் அகலுமே.

                                                                                           -- திருஞானசம்பந்தர்

 

"நீ மனம் வைத்தால் நிச்சயமாக இந்தக் காரியத்தைச் சாதிக்க முடியும் அரவிந்தன். அதற்கு இதுதான் சரியான சமயம். துணிந்து தான் இதில் இறங்க நினைக்கிறேன்..."

இதற்கு அரவிந்தன் ஒரு பதிலும் சொல்லாமல் தமது முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைக் கண்டதும் மீனாட்சிசுந்தரம் பேச்சை நிறுத்தினார். எழுந்திருந்து கைகளைப் பின்புறம் கோர்த்துக் கொண்டு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். மனத்தில் திட்டங்களும் தீர்மானங்களும் உலாவும் போது கால்களையும் இப்படி உலாவவிட்டுப் பழக்கம் அவருக்கு.

"என்னப்பா இது? நான் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறேன், உன்னிடமிருந்து ஒரு வார்த்தைகூடப் பதில் வரவில்லையே!"

"நீங்கள் சொல்வது என்னவென்று நான் சரியாக விளங்கிக் கொள்வதற்கு முன்னால் எப்படிப் பதில் பேச முடியும்?"

"அதுதான் சொன்னேனே, அரவிந்தன்! பூரணி நீ சொன்னால் எதையும் மறுக்காமல் சம்மதிப்பாள் அல்லவா? முதலில் இது எனக்குத் தெரிய வேண்டும்."

"நான் சொன்னால் தான் கேட்பாள் என்பதென்ன? நீங்கள் சொன்னாலும் கேட்கக்கூடியவள் தானே?"

"அப்படியில்லை! இந்தக் காரியத்தை நீதான் என்னைக் காட்டிலும் தெளிவாக அவளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். ஒப்புக் கொள்ளச் செய்யவும் முடியும்!"

"எதற்கு ஒப்புக் கொள்ளச் செய்ய முடியும்?"

"அவசரப்படாதே! நானே சொல்லிக் கொண்டு வருகிறேன். கவனமாகக் கேள்!"

தனது கூர்ந்து நோக்கும் ஆற்றலையெல்லாம் ஒன்று சேர்த்து அவர் முகத்தையே பார்த்தான் அரவிந்தன். அவர் தொடர்ந்தார். "இன்னும் ஏழெட்டு மாதத்தில் பொதுத் தேர்தல் வருகிறது."

"ஆமாம் வருகிறது."

"அரசியல் துறையில் ஈடுபடுகிறவர்களும், பதவி வகிக்கிறவர்களும், இன்று நாட்டில் எவ்வளவு செல்வமும், செல்வாக்கும் புகழும் குவித்து மாமன்னர்களைப் போல் வாழ்கிறார்களென்பதை நீயே நன்கு அறிவாய்."

"அறிவேன், அதற்காக..."

"நீ மடக்கி மடக்கிக் கேள்வி கேட்பதைப் பார்த்தால் நான் இப்போது சொல்ல இருப்பதைக் கேட்பதற்கு முன்னாலேயே அதன்மேல் உனக்கு எதிர்மறையான அபிப்பிராயம் உண்டாகிவிட்டாற்போல் தோன்றுகிறதே?"

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் மேலே சொல்லுங்கள்."

"நான் உன்னை எதற்காகவோ வற்புறுத்தி ஏமாற்றுகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதே! நல்ல சமயத்தில் இந்த யோசனை என் மனத்தில் உருவாயிற்று. நகரத்தில் முக்கியப் பிரமுகர்கள் எல்லோருக்குமே இந்த யோசனைப் பிடித்திருக்கிறது. நிச்சயம் வெற்றி கிடைக்குமென்று ஆமோதித்துக் கூறி எல்லோருமே ஒத்துழைப்பதாகச் சொல்கிறார்கள். பணச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னால் தாங்க முடியும். சூழ்நிலையும் சாதகமாக இருக்கிறது"

"நீங்கள் தேர்தலுக்கு நிற்கப் போகிறீர்களா?"

"நானா? விளங்கினாற் போலத்தான் விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டுச் சீதைக்கு இராமன் சிற்றப்பாவா என்கிறாயே. நான் நின்றால் ஜாமீன் தொகை இழக்க வேண்டியது தான். எனக்கு ஏது அத்தனை பேரும் புகழும்?"

"பின் யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள்?"

"இன்னும் உனக்குப் புரியவில்லையா, அரவிந்தன்? பூரணியை வடதொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்தலாம் என்பது என் திட்டம். அவள் நின்றால் நிச்சயம் ஆகிவிடும். மேடை மேடையாகப் பேசிப் புகழும் பெருமதிப்பும் பெற்றிருக்கிறாள். அவள் போய்ப் பேசாத கிராமங்கள் இல்லை. அநேகமாகத் தொகுதியின் எல்லாப் பிரதேசங்களிலும் அவளை நல்லமுறையில் தெரிந்திருக்கிறது."

"சுதந்திரம் பெறுகின்றவரை தொண்டாக இருந்த அரசியல் இன்று தொழிலாக மாறிவிட்டது. பூரணியைப் போன்ற ஒரு நல்ல பெண்ணைச் சூதும் வாதும் நிறைந்த அழுக்கு மயமான அரசியல் பள்ளத்தில் இறங்கச் சொல்கிறீர்களே! இப்போது அவள் பெற்றிருக்கும் பேரும் புகழும் அவளுடைய தமிழறிவுக்காகவும், தன்னலமற்ற சமூகத் தொண்டுக்காகவும், தன்னலமற்ற பேரறிஞர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் என்பதற்காகவும் அவளை அடைந்தவை. அரசியலில் ஈடுபடுவதன் காரணமாகவே அவள் இவற்றை இழக்க நேர்ந்தாலும் நேரலாம். தவிர இந்த நூற்றாண்டில் முதல் இல்லாமல் லாபம் சம்பாதிக்கிற பெரிய வியாபாரம் அரசியல் தான். பண்புள்ளவர்கள் அந்த வம்பில் மாட்டிக் கொள்ளாமல் சமூகப் பணி செய்து கொண்டிருப்பதே நல்லது. மேலும் பூரணி இப்போது முழு நோயாளியாகி ஓய்வு கொள்ளப் போயிருக்கிறாள். அவள் கொடைக்கானலிலிருந்து திரும்ப மாதக்கணக்கில் ஆகும் அவளுடைய நிம்மதியைக் குலைத்து இதில் கவனம் செலுத்தச் செய்வது நல்லதாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?"

"அவளுக்கு ஒரு சிரமமும் இல்லையே? வந்து அபேட்சை மனுத்தாக்கல் செய்து விட்டுப் போனால், மறுபடியும் தேர்தலுக்குப் பத்து நாட்கள் இருக்கும்போது திரும்பவும் வந்து நாலு இடங்களில் பேசினால் போதும். மற்ற காரியங்களையெல்லாம் நாம் பார்த்துக் கொள்கிறோம். நீ இருக்கிறாய். அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டான் இருக்கிறான். ஒரு நாளைக்கு நூறு கூட்டம் போட்டு பேசச் சொன்னாலும் அந்தப் பையன் சளைக்காமல் பேசுவான். பிரச்சாரமே அதிகம் வேண்டாம். ஒரு பெண் தேர்தலுக்கு நிற்கிறாள் என்பதே போதும். பூரணியைப் போல் இத்தனை பேருள்ள பெண் நிற்கிற போது போட்டியிருந்தாலும் வலுவிழந்து போகும். நீ என்ன நினைக்கிறாய் அரவிந்தன்? இதில் உனக்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது?"

"நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால்..."

"ஆனால் என்ன ஆனால்?... தைரியமாக எனக்கு நல்ல முடிவு சொல்! பூரணியைப் போல் நல்லவர்கள் நுழைவதாலேயே அரசியல் நிலை சீர்திருந்தலாமல்லவா! தான் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும் அந்தச் சூழ்நிலையைத் தூய்மைப்படுத்துகிற புனிதத் தன்மைதான் அவளிடம் இருக்கிறதே! அப்படி இருக்கும் போது நாம் ஏன் அஞ்சவேண்டும்?"

"நீங்கள் சொல்லுகிறீர்கள். எனக்கென்னவோ பயமாகத்தானிருக்கிறது."

"இதோ பார், அரவிந்தன்! இந்தக் காரியத்தை இவ்வளவு அலட்சியமாக நீ கருதலாகாது. என் மானமே இதில் அடங்கியிருக்கிறது. நகரத்துப் பெரிய மனிதர்கள் அடங்கிய கூட்டத்தில் நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். பூரணியை நிறுத்தினால் தான் இந்தத் தொகுதியில் வெற்றி கிடைக்குமென்று எல்லோரும் நம்புகிறார்கள். அடுத்த ஞாயிறன்று தேர்தல் பற்றிய தீர்மானங்களுக்காக மறுபடியும் நாங்கள் சந்திக்கிறோம். அன்று அவர்களுக்கு இதுபற்றி உறுதி சொல்வதாக நான் ஒப்புக் கொண்டிருக்கிறேன்." மீனாட்சிசுந்தரத்தின் குரல் திட்டமாக உறுதியாக - சிறிதளவு கண்டிப்பும் கலந்து ஒலித்தது.

"இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் போதுமான அரசியல்வாதிகளும் தலைவர்களும் இப்போதே இந்த நாட்டில் நிறைந்திருக்கிறார்கள் விவேகானந்தர் போல், ராமலிங்க வள்ளலார் போல் ஒழுக்கத்தையும், பண்பாடுகளையும் ஆன்ம எழுச்சியையும் உண்டாக்குகிற ஞானிகள்தான் இந்த ஒரு நூற்றாண்டுக்குள் மீண்டும் இந்த நாட்டில் தோன்றவில்லை. தயவு செய்து பூரணியையாவது இந்த வழியில் வளர விடுங்கள்? அரசியல் சேற்றுக்கு இழுக்காதீர்கள்." சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தழுதழுத்த குரலில் கூறினான் அரவிந்தன். இவ்வளவு உறுதியாக வேறெந்தக் காரியத்துக்கும் அவன் இதற்குமுன் அவரிடம் மன்றாடியதில்லை. அவரை எதிர்த்துக் கொண்டு கருத்து மாறுபட்டு வாதாடியதுமில்லை. அவர் அவனுக்குப் படியளப்பவர். அவரிடம் பணிவும் நன்றியும் காட்ட வேண்டியது அவன் கடமை. அவருக்கு அறிவுரை கூறுவது போல், அவருக்கு முன்பே தன்னை உயர்த்தி வைத்துக் கொண்டு பேசலாகாது. ஆயினும் உணர்ச்சிவசப்பட்டுச் சற்று அதிகமாகவே பேசியிருந்தான் அவன்.

மீனாட்சிசுந்தரம் அயர்ந்து விடவில்லை. அவன் அருகே வந்தார். மெல்லச் சிரித்தார். வாஞ்சையோடு அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். தணிந்த குரலில் அவனை நோக்கிக் கூறலானார். "அரவிந்தன்! பச்சைக் குழந்தை மாதிரி அநாவசியமான கவலையெல்லாம் நினைத்துக் கலங்குகிறாயே! உன்னைப் போலவே எனக்கும் பூரணியின் எதிர்கால நலனில் மிகவும் அக்கறை உண்டு. அவளுக்குக் கெடுதல் தருவதை நான் கனவில் கூட நினைக்க மாட்டேன். வெற்றியைத் திடமாக நம்பிக் கொண்டு தான் நானும் இதில் இறங்குகின்றேன். ஆயிரக்கணக்கில் பணம் தண்ணீர் போல் செலவழியும். நம்முடைய திருவேடகத்து மேலக்கால் பாசன நிலம் முழுவதும் விற்றுத் தேர்தலில் போடப்போகிறேன். வைகைக் கரையில் அயனான நன்செய் விலைபோகிறது. பூரணியைத் துன்பப்படுத்துவதற்கா இவ்வளவு செய்வேன்? இத்தனை வருஷங்களாகப் பெற்ற பிள்ளை போல் என்னிடம் பழகுகிறாயே? உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? அப்படியானால் அப்புறம் உன் இஷ்டம்."

சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் சும்மா இருந்தான் அரவிந்தன். அவனிடமிருந்து என்ன பதில் வரப்போகிறதென்று அவனையே இமையாத கண்களால் கவனித்துக் கொண்டு அவரும் நின்றார். அந்தச் சமயத்தில் இடையிடையே பூக்கள் உதிர்ந்து நார் தெரியும் ஒரு ரோஜாப் பூமாலையைக் கையில் ஏந்திக் கொண்டு முருகானந்தம் வந்து சேர்ந்தான். "இப்போதுதானப்பா கூட்டம் முடிந்தது. ஒன்றரை மணி நேரப் பேச்சு. தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி வெளுத்துக் கட்டி விட்டேன். தொண்டை வறண்டு போச்சு" என்று அரவிந்தன் மட்டும் தான் அங்கிருப்பான் என்னும் எண்ணத்தில் இரைந்து கூறிக் கொண்டே உள்ளே நுழைந்த முருகானந்தம் மீனாட்சிசுந்தரம் இருப்பதைக் கண்டு கூச்சமடைந்தான்.

"வா தம்பி! நல்ல சமயத்தில்தான் வந்திருக்கிறாய்! உனக்கு ஆயுசு நூறு! இப்போதுதான் சற்று முன் அரவிந்தனிடம் உன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்" என்று அவரே தாராளமாக வரவேற்ற பின்புதான் முருகானந்தம் கூச்சம் தணிந்து இயல்பு நிலையை அடைந்தான். தன்னுடைய கோடைக்கானல் கடிதப் போக்குவரவு விவகாரத்தை மீனாட்சிசுந்தரம் வரை எட்டவிட்டு அவரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு தன்னை விசாரிக்க அரவிந்தன் காத்திருக்கிறானோ என்னும் தயக்கமும் முருகானந்தத்தின் கூச்சத்துக்கு ஒரு காரணம். அப்படி இல்லை என அப்போதே தெரிந்தது. "இப்போது அவசரமில்லை அரவிந்தன்! உனக்கு நிதானமாக யோசிக்க கொஞ்ச நேரம் தருகிறேன். நீ இந்தத் தம்பியையும் கலந்து சிந்தித்துக் கொண்டு நாளைக்குக் காலையில் எனக்கு முடிவு சொன்னால் போதும். அப்புறம் உன்னையே கோடைக்கானலுக்கு அனுப்புகிறேன். பூரணியையும் ஒரு வார்த்தை கேட்டுத் தெரிந்து கொண்டு வந்துவிடலாம். எனக்கு வீட்டுக்குப் போக நேரமாயிற்று. நான் வருகிறேன். காலையில் பார்க்கலாம்" என்று அவர்கள் இருவரையும் தனிமையில் அங்கு விட்டுவிட்டுக் கிளம்பினார் மீனாட்சிசுந்தரம். அவரை வழியனுப்பும் பாவனையில் எழுந்திருந்த அரவிந்தனும் முருகானந்தமும், வாயில் வரை உடன் போய்விட்டுக் கார் புறப்பட்டதும் உள்ளே திரும்பி வந்தார்கள். திரும்பியதும் கன்னத்தில் கையூன்றியபடி முகத்தில் தீவிர சிந்தனையின் சாயல் தெரிய நாற்காலியில் சாய்ந்தான் அரவிந்தன். அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் புரியாமல் முருகானந்தம், "என்னப்பா இது? கப்பல் கவிழ்ந்து போன மாதிரி கன்னத்தில் கையூன்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டாய்? 'பெரியவர்' என்ன சொல்லிவிட்டுப் போகிறார் உன்னிடம்? ஏதோ என்னையும் கலந்து கொண்டு காலையில் முடிவு சொல்லும்படிக் கூறிவிட்டுப் போகிறாரே என்ன அது?" என்று கேட்டான்.

'முருகானந்தம்-வசந்தா தொடர்பு எப்போது எந்தவிதத்தில் ஆரம்பமாகிக் கடிதங்கள் எழுதிக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது' என்று அவனையே விசாரித்துத் தெரிந்து கொண்டு கண்டிக்க வேண்டுமென்று அரவிந்தன் நினைத்திருந்தான். ஆனால் இப்போது அந்த நினைவே முற்றிலும் மறந்து போய்விட்டிருந்தது அவனுக்கு. மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தும் விஷயம் பற்றிச் சொல்லிவிட்டுப் போனதிலிருந்து அவன் அதைப் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கி விட்டான்.

முருகானந்தம் மீண்டும் வற்புறுத்திக் கேட்டதின் பேரில் மீனாட்சிசுந்தரம் தன்னிடம் கூறியவற்றைச் சுருக்கமாக அவனுக்குச் சொன்னான் அரவிந்தன். அவன் நினைத்தது போல் முருகானந்தம் வருத்தமோ, திகைப்போ அடையவில்லை.

"பூ! இதற்குத்தானா இப்படிக் கவலைப்படுகிறாய்? மகிழ்ச்சிப்பட வேண்டிய செய்தி இது! பூரணியக்கா அரசியலில் புகுந்தால் அரசியலில் இருக்கிற களங்கங்கள் அழிந்து அரசியலுக்கே நல்ல பேர் ஏற்பட்டுவிடும். உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் நன்றாகச் சிந்தித்துக் காரணத்தோடு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். எனக்குப் பிடித்திருக்கிறது இந்த முடிவு" என்று உற்சாகம் பொங்க மறுமொழி தந்தான் முருகானந்தம். உடனே அரவிந்தன் சினமடைந்து பேசலுற்றான்.

"நீங்கள் எல்லோரும் அரசியல் இயக்கம் வளரவேண்டுமென்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். நானோ ஒழுக்கமும் பண்பாடும் வளர்வதற்கு ஓர் இயக்கம் வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இந்த இரண்டாவது இயக்கத்தை வேரூன்றி வளர்க்க இன்று இந்தத் தேசத்தில் ஆளே கிடைக்கமாட்டார்கள் போலிருக்கிறது. நீ என்றுமே அரசியல்வாதி என்பது எனக்குத் தெரியும் முருகானந்தம். உன்னிடமிருந்து இந்தப் பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன்."

"இரண்டையும் வேறு வேறு இயக்கங்களாக நீ நினைப்பதால் தான் உனக்கு இந்தக் குழப்பம் உண்டாகிறது அரவிந்தன். முதல் இயக்கம் சரியாக இருந்தால் இரண்டாவது இயக்கமும் சரியாயிருக்கும். பூரணி அக்காவிடம் இந்த இரண்டு இயக்கங்களுக்குமே பாடுபடத் தகுதி இருக்கிறது. இதை நான் உறுதியாய் நம்புகிறேன்."

 

"தகுதி இருக்கிறது என்பதற்காக அவளுடைய நிம்மதியையும், சுகத்தையும் பாழாக்கலாமா? அவளுக்கு எப்போதுமே தன் சுகத்தைக் கவனித்துக் கொள்ளத் தெரியாது. அன்றைக்குத் தியேட்டரில் உணர்ச்சிவசப்பட்டுக் கொதித்துப் பேசியதன் விளைவை நீயே பார்த்தாயே! அப்படி இருந்தும் இந்த ஆறு மாத ஓய்வு முடிந்து வந்தவுடன் அவளைத் தேர்தல் போர்க்களத்தில் குதிக்கச் செய்ய திட்டமிடுகிறீர்களே!" இதைச் சொல்லும்போது அரவிந்தனின் குரலில் பூரணியிடம் அவனுக்குள்ள பாசம் முழுவதும் கனிந்து ஒலித்தது. பூரணியின் மேல் இவ்வளவு அதிகமாக அனுதாபப்படுகிற உரிமைகூட அவனுக்குத்தான் உண்டு. அவன், அவள் உள்ளத்தோடு இரண்டறக் கலந்தவன். வேறொருவருக்கும் இனி என்றும் கிடைக்க முடியாத இனிய உறவு அது. அந்த உறவை வெளிக்காட்டி விளம்பரப்படுத்திக் கொள்ள அவன் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் அனுதாபத்தை மறைக்க முடியாமல் தவித்தான்.

"இன்று இந்த நாட்டில் அரசியல் என்று தனியாக ஒன்றுமில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் அரசியல் கலந்திருக்கிறது. பெரிய வலையில் ஒரு நூல் அறுந்தாலும் வலை முழுவதும் தொய்ந்து பின்னல் விட்டுப் போகிற மாதிரி அரசியலில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் மற்றவற்றிலும் மாறுதலை உண்டாக்குகிறது. பூரணியக்காவைப் போல் பண்பும் ஞானமும் உள்ள ஒருவர் அதில் ஈடுபடுவது எல்லாத் துறைகளுக்கும் நல்லது தான் அரவிந்தன்" இப்படி நீண்ட நேரம் ஏதேதோ பல நியாயங்களை எடுத்துச் சொன்னான் முருகானந்தன். அரவிந்தன் பேசி அவன் மாணவ நிலையிலிருந்து கேட்பது தான் வழக்கம். அன்று அவ்வழக்கம் மாறியமைந்து விட்டது.

"இதில் எனக்கென்ன வந்ததப்பா? அவரும் சொல்கிறார். நீயும் அதையே ஒத்துப் பாடுகிறாய். அவளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்" என்று மறுப்பின் வேகம் குறைந்து தளர்ந்தாற்போல் பட்டுக்கொள்ளாமல் சொன்னான் அரவிந்தன்.

மறுநாள் மீனாட்சிசுந்தரம் வந்த கேட்டபோதும் இதே மாதிரி மனம் தழுவாமல், பட்டுக் கொள்ளாத விதத்தில்தான் பதில் சொன்னான் அவன். ஆனால் அவர் அவனை அப்படியே விட்டுவிடவில்லை. மீண்டும் கடுமையாக வற்புறுத்தினார்.

"யாருக்கு வந்த விருந்தோ என்கிறார் போல் நீ இப்படி ஒட்டுதல் இல்லாமல் பேசுவதாயிருந்தால் நான் இப்போதே இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விடுவேன். ஒன்றும் தலைக்குக் கத்தி வந்து விடாது. நாலு பெரிய மனிதர்களுக்கு நடுவில் என் மானம் போகும். போனால் போகட்டும். உங்களுக்கெல்லாம் இல்லாதது எனக்கு மட்டும் என்ன. நீ இதற்கு ஒத்துக் கொண்டு எனக்கு உதவி செய்வதாயிருந்தால் இரண்டு நாட்கள் கழித்துக் கோடைக்கானல் போய்க் கேட்டுச் சம்மதம் வாங்கிக் கொண்டு வா. முடியாவிட்டால் முடியாதென்று இப்போதே சொல்லிவிடு."

 

அரவிந்தன் அரைமனத்தோடு கோடைக்கானல் போய்ப் பூரணியைக் கேட்டுக் கொண்டு வர இணங்கினான். இணங்காவிட்டால் அவர் ஆளை விட மாட்டார் போல் இருந்தது.

மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரத்தின் சொந்த ஊர் மதுரைக்கு அருகில் வையைக் கரைமேல் உள்ள 'திருவேடகம்' என்ற அழகிய ஊராகும். அது தேவாரப் பாடல் பெற்ற தலம். மதுரையில் குடியேறி விட்டாலும், நிலங்கரைகள், தோப்புத்துரவு, ஒரு வீடு எல்லாம் அங்கு அவருக்கு இருந்தன. வீட்டைத் தேவாரப் பாடசாலைக்கு விட்டிருந்தார். பத்து பிள்ளைகளுக்கு இலவச சாப்பாடு போட்டுத் தேவாரம் கற்றுக் கொடுத்து வரும் பாடசாலை ஒன்றைத் தம் பொறுப்பில் அங்கு நடத்தி வந்தார் மீனாட்சிசுந்தரம். குடும்பத்தில் பரம்பரைக் கட்டளை போல் அந்தப் பாடசாலைக்காகக் கொஞ்சம் நிலம் ஒதுக்கப் பெற்றிருந்தது. அவருடைய முப்பாட்டனார் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தேவாரப் பாடசாலை அது. இன்னும் ஒழுங்காக நடந்து கொண்டு வருகிறது.

திருவேடகநாதரை வணங்கி வரவும், நிலங்கரைகளைப் பார்த்து வரவும் வாரத்துக்கு இரண்டு முறையாவது ஊருக்குப் போய் விட்டு வருவார் மீனாட்சிசுந்தரம். இன்னொரு பழக்கமும் அவரிடம் இருந்தது. தடங்கல்களும் சந்தேகமும் ஏற்படுகிற எந்தக் காரியமானாலும் திருவேடகநாதர் கோவிலில் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதென்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். இதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அரவிந்தனைத் தேர்தல் விஷயமாகப் பூரணியைக் கலந்து கொண்டு வர கோடைக்கானலுக்கு அனுப்புவதற்கு முன் தினம் அதிகாலை அவனையும் கூட்டிக் கொண்டு திருவேடகத்துப் புறப்பட்டு விட்டார் அவர்.

மதுரைச் சீமையில் சோழவந்தானுக்கு அருகிலிருந்த வையை நதியின் வடபுறமும், தென்புறமும் அமைந்துள்ள பசுமை மயமான கிராமங்களின் அழகுக்கு ஈடு இணை இருக்க முடியாது. 'வையை' என்னும் 'பொய்யாக் குலக்கொடி' என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வர்ணித்திருக்கிறாரே, அந்த வையை நல்லாளின் சீரிளமைத்திறம் காணவேண்டுமானால் தென்னஞ்சோலைகளுக்கு நடுவே அவள் அன்ன மென்னடை நடந்து கன்னிமை ஒயில் காட்டிக் கலகலத்து ஓடும் இப்பகுதியில் காண வேண்டும். பசுமைப் பூத்து எழுந்த வனத்தின் தூண்களை நட்டுப் பயிர் செய்தாற்போல் வாழைத் தோட்டங்கள், போகம் போகமாய் வெறும் நிலம் காண நேரமின்றிப் பசுமை காட்டி விளையும் நெற்கழனிகள், பசுமை குன்று புடைத்தெழுந்தாற் போல செறிந்து தெரியும் கொடிக்கால்கள். அந்தப் பகுதியில் வையைக் கரையின் ஒவ்வொரு கிராமமும் ஓர் இன்பக் காவியம். ஒவ்வொரு காட்சியும் ஒரு சொப்பன சௌந்தரியம். இந்தப் பகுதியின் வையைக் கரை மண்ணில் பிறந்தவரைப் போல் பெருமையும் கர்வமும் கொள்ளத் தகுதியுடையவர் வேறெங்குமே இருக்க முடியாதென்பது மீனாட்சி சுந்தரம் அவர்களின் திடமான எண்ணம். திருஞானசம்பந்தப் பெருமான் மதுரைக்கு அருகில் சமணர்களோடு புனல்வாதம் புரிந்த காலத்தில் அவர் இட்ட ஏடு வையை நதியை எதிர்த்துச் சென்று கரையேறிய தலமாதலால் அந்த ஊருக்குத் 'திரு ஏடகம்' என்று பெயர் ஏற்பட்டிருந்தது. இதற்கு முன்பும் இரண்டு மூன்று அதிகாலையில் அவரோடு திருவேடகத்துக்குக் காரில் வந்திருக்கிறான் அரவிந்தன். அங்கு வரும்போதெல்லாம் அவனைக் கவர்ந்து மனதை அடிமை கொள்வன அந்தத் தேவாரப் பாடசாலையும், அதன் இயற்கைச் சூழ்நிலையும் தான்.

நகரச் சந்தடியின் ஓசை ஒலியற்ற அமைதியில் மூழ்கிக் கிடக்கும் அந்தப் பெரிய தென்னஞ்சோலைகளுக்குள்ளிருந்து தலைநீட்டும் கோபுரத்தின் அருகேயிருந்து தெய்வமே குரல் எடுத்து அழைப்பது போல், 'குண்டலந்திகழ்தரு காதுடைக் குழகனை' என்று அற்புதமான பண்ணில் ஞானசம்பந்தரின் பாடலை இளங்குரல்கள் பாடுகிற ஒரே ஒலிநாதம் என்கிற மதுரசக்தியே விண்ணிலிருந்து அந்தத் தோப்புக்குள் சன்னமாக இழைந்து குழைந்து உருகிக் கொஞ்சமாய் அமுத இனிமையுடன் ஒழுகிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமையை உண்டாக்கும். இந்த அனுபவத்தில் தோய்வதை அரவிந்தன் பேரின்பமாகக் கருதினான். தொலைவிலிருந்து பார்க்கும் போது ஊர் தெரியாது. தென்னை மரங்களின் பரப்புக்கு மேலே அந்தப் பசுமைப் பரப்பையே தனமாகக் கொண்டு முளைத்துப் பூத்தாற் போல் கோபுரம் மட்டும் தெரியும். அங்கு வரும்போதெல்லாம், 'இந்தக் கோபுரம், இந்தத் தேவாரக் குரல் ஒலி, இந்த எளிமை அழகு பொங்கும் தெய்வீகச் சிற்றூர்கள் இவைதான் தமிழ்நாட்டின் உயிர், பெருமை எல்லாம். இவை அழிந்த தமிழ்நாடு தமிழ்நாடாக இராது. இந்தப் பழைய அழகுகள் அழியவே கூடாது. இவற்றைக் கொண்டு பெருமைப்பட என்றும் தமிழன் கூசக்கூடாது, என்று மனமுருக அரவிந்தன் நினைப்பான். ஆனால் ஆடம்பர ஆரவாரங்களைக் கொழுக்கச் செய்து மனங்களை வளர்க்காமல் பணத்தை மட்டும் வளர்க்கும் நகரங்களின் வாழ்க்கை வேகத்திலும், அவசரத்திலும் இந்த அழகுகளைத் தமிழர்கள் மறந்தும், மறைத்தும் எங்கோ போய்க் கொண்டிருப்பதை நினைக்கும்போது அவன் உள்ளம் நோகும். 'ஏடகம் கண்டு கைதொழுதால் கவலை நோய் அகலும்' என்று சம்பந்தர் பாடியிருந்தார். உண்மையிலேயே கவலையைப் போக்குகிற ஏதோ ஒரு ஆற்றல் அந்த ஊரின் செயற்கை அழுக்குகள் படியாத இயற்கை அழகில் இருப்பதை அரவிந்தன் உணர்ந்தான். நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் ஆள் புழக்கமற்ற பெரிய தென்னந்தோப்பு ஒன்றில் பேதைப் பருவத்துச் சிறுமி ஒருத்தி தனியாகப் புகுந்து மருண்டு ஓடுவது போல் வையை நதி அந்தப் பிரதேசத்தில் பாய்ந்தோடுகிற அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமே! ஆற்றின் இருகரையும் நிறைய ஆணவம் பொங்கிடப் பாய்கிற வழக்கம் வையையிடம் இல்லை. புது மணப்பெண் நடந்து செல்லுகிற மாதிரி ஒல்கி ஒசிந்து ஓர் ஓரமாகப் பாய்ந்து செல்வது வையையின் அடக்கத்துக்கு ஓர் அடையாளமோ?

தேவாரப் பாடசாலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீனாட்சி சுந்தரமும், அரவிந்தனும் ஏடகநாதரை வழிபடச் சென்றார்கள். அம்மன் சந்நிதியில் பூக்கட்டி வைத்துப் பார்ப்பதென்று திட்டம். 'ஏலவார் குழலி அம்மை' என்று எழில் வாய்ந்த தமிழ்ப்பெயர் திருவேடகத்து அம்மனுக்கு. திருஞானசம்பந்தர் காலத்துப் பாண்டியன் கட்டியதாக தல வரலாறு கூறும் அந்தக் கோயிலை பின்னாளில் நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பெரிதாக்கி அழகுபடுத்தி இருந்தார்கள். தமிழ்நாட்டுத் திருத்தலங்களில் ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு கல்தூணும், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்குமே!

கோயிலுக்குள் மீனாட்சிசுந்தரம் அவனைக் கேட்டார். "என்னுடைய வழக்கம் தான் உனக்கு நன்றாகத் தெரியுமே. இந்தக் கோயிலில் பூக்கட்டி வைத்துப் பார்த்தபின் முடிவு நன்றாக இருந்தால் நான் எதையுமே நிறுத்த மாட்டேன். எப்பாடுபட்டாவது அந்தக் காரியத்தை நிறைவேற்றியே தீருவேன். இப்போது இங்கே அம்மனுடைய தீர்ப்பு எப்படி ஆகிறதோ அப்படியே செய்வதற்கு நீயும் இணங்குகிறாய், நீயும் கட்டுப்படுகிறாய் அரவிந்தன்! என்ன? உனக்குச் சம்மதந்தானே?"

அரவிந்தனுக்குச் சமய நம்பிக்கை உண்டு, ஆனால் சடங்குகளில் நம்பிக்கை குறைவு. அந்தச் சமயத்தில் அவரை விட்டுக் கொடுக்கலாகாதே என்பதற்காகச் 'சம்மதந்தான்' என்று சொல்லி வைக்க வேண்டியதாயிற்று அவர்கள் ஏலவார் குழலியம்மன் சந்நிதிக்கு முன் நின்றார்கள்.

"இதோ இது நந்தியாவட்டைப் பூ, அது செவ்வரளிப் பூ. இரண்டையும் ஒரே மாதிரி இலையில் கட்டிப் போடுகிறேன். வெள்ளைப் பூ வந்தால் பூரணி தேர்தலில் நிற்கிறாள். சிவப்புப் பூ வந்தால் நிற்கவில்லை" என்று சொல்லிப் பூக்களை அவனிடம் காட்டி விட்டு இலையில் வைத்து ஒரே அளவாக முடிந்து குலுக்கிப் போட்டார் அவர். எலிவால் பின்னலும் அழுக்குப் பாவாடையுமாக அம்மன் சந்நிதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையைக் கூப்பிட்டு, "இந்த இரண்டு பொட்டலங்களில் உனக்குப் பிடிச்ச ஏதாவது ஒண்ணை எடுத்துக் கொடு, பாப்பா!" என்று கூறினார் மீனாட்சிசுந்தரம். சிறுமி சிரித்துக் கொண்டே இரண்டு முடிச்சுக்களையும் பார்த்து இரண்டில் எதை எடுப்பதென்று தயங்கி நின்றாள். பின்பு குனிந்து ஒரு முடிச்சை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள்.

"என்ன பூ என்று நீயே பிரித்துப் பார், அரவிந்தன்!" என்று அவனுடைய கையில் அதை அப்படியே கொடுத்தார் அவர். அரவிந்தனின் உள்ளம் ஆவலும் துடிப்பும் கொண்டு தவித்தது! தவிப்போடு பிரித்தான்.

வெள்ளை வெளேரென்று பச்சை இலைக்கு நடுவே நந்தியாவட்டைப் பூ சிரித்தது! 'நீ தோற்றுவிட்டாய்' என்று சொல்வது போல் சிரித்தது! மீனாட்சிசுந்தரமும் சிரித்தார்.

"தெய்வசித்தமும் என் பக்கம் தானப்பா இருக்கிறது. எல்லாம் நல்லபடியாகவே முடியும்! நீ நாளைக்குக் காலையில் கோடைக்கானல் புறப்படுகிறாய். உன்னோடு அந்த முருகானந்தத்தையும் அழைத்துக் கொண்டு போ. இருவரும் எப்படியோ எடுத்துச் சொல்லி பூரணியைச் சம்மதிக்கச் செய்துவிட வேண்டும். உன்னால் முடியும்! நான் இன்று மாலையே உங்கள் வரவு பற்றிப் பூரணிக்குத் தந்தி மூலமாகத் தெரிவித்து விடுகிறேன்..." என்று பெருமை பொங்கச் சொன்னார் அவர். அரவிந்தன் மௌனமாக 'ஆகட்டும்' என்பது போல் தலையசைத்தான்.

அவர்கள் இருவரும் திருவேடகத்திலிருந்து மதுரை திரும்பி வந்தனர். 'ஒரு முக்கியமான காரியமாகச் சந்தித்துப் பேசிவர அரவிந்தனை அனுப்புவதாக' அன்று மாலையில் கோடைக்கானலுக்கு தந்தி கொடுத்துவிட்டார் மீனாட்சிசுந்தரம்.

 

20

 

"ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப்

பிறவனைத்தும் தானாகி நீயாய் நின்றாய்

தானேதும் அறியாமே என்னுள் வந்து

நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்"

                                                                                                          -- தேவாரம்

 

மேகங்கள் குவிந்து திரண்ட கருநீலவானின் கீழே அன்று அந்த அந்தி மாலைப்போது கோடைக்கானலுக்கே தனி அழகை அளித்தது. யூகலிப்டஸ் மரங்களின் மருந்து மணத்தை அள்ளிக் கொண்டு வரும் காற்று, உடற்சூட்டுக்கு இதமான கிளர்ச்சி. கண்களுக்குப் பசுமையான காட்சிகள், பகலிலும் வெய்யில் தெரியாதது போல் நீலக்கருக்கிருட்டு, மந்தார நிலை. உலாவச் செல்கின்றவர்களும், படகு செலுத்த வந்தவர்களுமாக ஏரிக்கரையில் நல்ல கூட்டம். நடக்க இயலாதவர்களையும் உட்கார வைத்துக் காற்று வாங்க அழைத்துச் செல்லும் குதிரைக்காரர்கள் தத்தம் மட்டக் குதிரைகளோடு நின்றனர்.

பூரணியும் வசந்தாவும் ஏரியில் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரையில் படகில் சுற்றிவிட்டுக் கரையேறினார்கள். குளிருக்கு அடக்கமாக இருவரும் முழுநீளக் கம்பளிக் கோட்டு அணிந்திருந்தார்கள்.

"அக்கா! சிறிது நேரம் இந்தக் குதிரையில் ஏறிச் சவாரி செய்ய வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா? இரண்டு குதிரைகள் வாடகைக்குப் பேசுகிறேன்" என்று உற்சாகத் துள்ளலோடு நடந்து கொண்டே கேட்டாள் வசந்தா. அந்தப் பெண் இருந்தாற் போலிருந்து துள்ளித் திரியும் புள்ளிமான் குட்டியாக மாறிவிட்டாளே என்று வியந்தாள் பூரணி. கார் காலத்து முல்லைப் பூப்போல் ஒரு பெண்ணின் முகத்திலும், விழியிலும், நடையிலும் இத்தனை புது வனப்புப் பொலிய வேண்டுமானால் அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். பூரணி அந்தக் காரணத்தை அறிந்து கொள்ள ஆசைப்பட்டாள். ஆனால் படித்த பெண்ணிடம் நேரடியாக அதைப் பற்றிக் கேட்பது அநாகரிகமாக முடிந்துவிடுமே என்றும் தயங்கினாள். எனவே 'அந்தக் கடிதம் யாரிடமிருந்து வசந்தாவுக்கு வந்தது? அதில் அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக என்ன இருக்கிறது?' என்பன போன்ற ஐயங்களை வாய்விட்டுக் கேட்காமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.

"படகில் சுற்ற வேண்டுமென்றாய்! சுற்றியாயிற்று இப்போதென்னடா என்றால் குதிரையேறிச் சுற்ற வேண்டுமென்கிறாய்? மறுபடியும் கேட்கிறேனே என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதே வசந்தா. இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறாய். உன் மகிழ்ச்சியின் காரணத்தை நானும் அறிந்து கொள்ளலாமா?" என்று மெதுவாக அவளிடம் கேட்டாள் பூரணி.

வசந்தாவின் முகம் அழகாகச் சிவந்தது. இதழ்களில் நகை சுரந்து நின்றது. "போங்கள் அக்கா, எதையோ சொன்னால் வேறு எதையோ கேட்கிறீர்கள் நீங்கள். நான் குதிரையில் ஏறிச் சுற்றப் போகிறேன்" என்று பூரணிக்குப் பதில் சொல்லிவிட்டுக் குதிரைக்காரனைக் கைதட்டிக் கூப்பிட்டாள் வசந்தா.

"அழகுதான் போ! குதிரையேறிச் சுற்றுவதற்கு நீயும் நானும் பச்சைக் குழந்தையா என்ன?"

"நீங்களும், நானும் மட்டுமில்லை அக்கா? இந்த மலைக்கு வந்துவிட்டால், எத்தனை வயதானாலும் பச்சைக் குழந்தையின் உற்சாகம் வந்து விடும். அதோ அங்கே பாருங்கள்."

வசந்தா சுட்டிக் காட்டிய திசையில் பூரணி பார்த்தாள். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியும், அவள் கணவர் போல் தோன்றிய வெள்ளைக்காரரும் செழிப்பாக உடற்கட்டுள்ள செவலைக் குதிரைகளில் கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். உண்மைதான்! மலைச்சரிவிலும் கடற்கரையிலும் மனிதனுக்கு வயது மறந்துவிடுகிறது என்பது சரியாயிருக்கிறதென்று நினைத்துக் கொண்டாள் பூரணி.

வசந்தா மட்டும் குதிரையில் சுற்றி விட்டு வந்தாள். 'கோக்கர்ஸ் வாக்' என்று மலை உச்சியில் ஒரு சாலை சரிவாக அமைந்திருந்தது. அங்கிருந்து பார்த்தால் மதுரைச் சீமையின் தரைப்பகுதி ஊர்கள் ஒளிப்புள்ளிகளாய் இருளில் தெரிந்தன. அதையும் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பினார்கள். ஏழரை மணியாவதற்குள்ளேயே குளிர் அதிகமாகி மலையை மஞ்சு மூடத் தொடங்கியிருந்தது. பூரணிக்கு குளிர் தாங்க முடியவில்லை. அன்று இரவு சாப்பாட்டை விரைவில் முடித்துக் கொண்டு அரவிந்தன் அனுப்பியிருந்த புத்தகங்களில் ஏதாவது ஒன்றைப் படித்து முடித்து விடலாமென்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.

அங்கே தோட்டத்தில் மரு தோன்றிச் செடிகள் (மருதாணி) நன்றாகத் தழைத்து இலை விட்டிருப்பதைப் பூரணி வந்த அன்றே கவனித்தாள். கையில் மருதோன்றி அரைத்து அப்பிக் கொண்டு மறுநாள் காலை உள்ளங்கை பவழமாகச் சிவந்திருப்பதைக் கண்டு மகிழ்வதில் சிறு வயதிலிருந்து அவளுக்குப் பித்து உண்டு. அப்பா இறந்த பின் இவ்வளவு காலமாகக் கைக்கு மருதோன்றி இட்டுக் கொள்ளும் வாய்ப்பே ஏற்படவில்லை. அவளுக்குப் பலவிதமான வாழ்க்கைக் கவலைகளால் அந்த நினைப்பே வந்ததில்லை. அப்பா இருந்தால் கணக்குப் பாராமல் இரண்டு படி மூன்று படி என்று மருதோன்றி இலையைப் பைநிறைய வாங்கிக் கொண்டு வந்து கொட்டுவார்.

"உன்னுடைய சிவப்புக் கைகளுக்கு அது தனி அழகு அம்மா! அரைத்து இட்டுக் கொள். உள்ளங்கையில் பவளம் பூத்த மாதிரி மருதாணி நிறம் தெரிய வேண்டும்" என்று சொல்லி அவ்வளவையும் அரைத்து அப்பிக் கொண்டால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிப்பார் அப்பா. கோடைக்கானல் பங்களாத் தோட்டத்தில் அந்தச் செடியைப் பார்த்ததும் அவளுக்கே ஆசையாக இருந்தது. உடனே சமையற்கார அம்மாளிடம், "பாட்டி! உங்களால் முடிந்தால் ஒருநாள் சாயங்காலம் இந்த மருதாணியை நிறையப் பறித்து வெண்ணெய் போல் நன்றாக அரைத்து வைத்திருங்கள். படுத்துக் கொள்ளும் போது கையில் அப்பிக் கொண்டு படுத்துவிடலாம்" என்று அவள் சொல்லி வைத்திருந்தாள்.

சமையற்கார அம்மாளுக்கும் அன்று தான் அதைச் செய்வதற்குக் கை ஒழிந்தது போலும். படிக்கும் தாகத்தோடு மதுரையிலிருந்து வந்திருந்த புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பூரணிக்கு அன்று படிக்க முடியாமலே போய்விட்டது.

"கைகளில் நன்றாக நிறம் பற்ற வேண்டுமானால் சீக்கிரமாகப் போட்டுக் கொண்டு தூங்கப் போய்விட வேண்டும்" என்று, பூரணியையும், வசந்தாவையும் உட்கார்த்தி உள்ளங்கையிலும், நகங்களிலும் கால் பாதத்தைச் சுற்றியும் மருதாணிக் காப்பு இட்டு ஆடாமல் அசையாமல் படுத்துக் கொள்ளும்படி செய்துவிட்டாள் சமையற்கார அம்மா. குளிரோடு மருதாணி ஈரமும் கைகளில் குறுகுறுத்தது. நெடுநேரம் பேசிக் கொண்டே படுத்திருந்த வசந்தாவும் பூரணியும் தங்களை அறியாமலேயே நன்றாக உறங்கிப் போய்விட்டார்கள்.

மறுநாள் காலை சிவப்பு நிறம் பதித்த உள்ளங்கைகளையும் நகங்களையும் அழகுபார்த்துக் கொண்டே பூரணி படிப்பதற்காகப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அவள் படித்துக் கொண்டிருந்தபோது தபால்காரன் வந்து மங்கையர் கழகத்து முத்திரையோடு கூடிய உறையைக் கொடுத்துவிட்டுப் போனான். உறை கனமாக இருந்தது. உள்ளே இரண்டு மூன்று கடிதங்களை இணைத்து அதோடு தானும் ஒரு கடிதம் எழுதிப் பூரணிக்கு அனுப்பியிருந்தாள் காரியதரிசி அம்மாள்.

 

அவளுடைய புகழ் எங்கெங்கே பரவியிருக்கிறதென்பதையும் அவளது அறிவுச் செல்வத்தை எங்கெங்கோ உள்ள மக்கள் நுகர்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அந்தக் கடிதங்கள் அவளுக்கு உணர்த்தின. பூரணிக்கு அறிவின் பெருமிதம் மனம் நிறையப் பொங்கிற்று.

யாழ்ப்பாணத்தில் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் நடைபெற இருக்கும் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றுவதற்குப் பூரணியை அனுப்பி வைக்க வேண்டுமென்று மங்கையர் கழகத்துக் காரியதரிசியைக் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு கடிதம். நான்குமாதம் கழித்துக் கல்கத்தாவில் நடைபெற இருக்கும் கிழக்கு ஆசியப் பெண்கள் பேரவையில் அவள் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று கோரியது இன்னொரு கடிதம். தை மாதம் மலாயாவில் கோலாலம்பூரிலுள்ள தமிழர்கள் நடத்தும் பொங்கல் விழாவுக்கு வர வேண்டுமென்று மற்றொரு கடிதத்தில் கேட்டிருந்தது. 'உன் விருப்பம் தெரிந்து இந்தக் கடிதங்களுக்கு நான் மறுமொழி எழுத வேண்டும். அல்லது நீயே அவர்களுக்குத் தனித்தனியே பதில் கடிதம் எழுதி விடலாம். எங்கள் எல்லோருடைய அபிப்ராயமும் நீ இவற்றுக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதுதான். உடல்நிலைப் பற்றிக் கவலைப்படாதே! இவற்றில் கலந்து கொண்டு அடைகிற உற்சாகமும் கலகலப்புமே உன் உடம்பைத் தேற்றிவிடும் என்பது எங்கள் கருத்து. மேலும் அவை எல்லாவற்றுக்கும் நீ ஒப்புக் கொண்டாலும் முழுமையாக இன்னும் இரண்டு மாத கால ஓய்வு உனக்கு இருக்கிறது. அது போதுமென்று நினைக்கிறேன். நீ இவைகளில் கலந்து கொண்டால் உனக்கு மட்டுமல்லாமல் நமது கழகத்திற்கும் பெருமை கிடைக்கிறது. 'பாஸ்போர்ட்' (வெளிநாட்டுப் பயண அனுமதி), 'விசா' முதலியவற்றுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய தாள்களும் இவற்றோடு அனுப்பியுள்ளேன். அவற்றை நிறைவு செய்து கையொப்பமிட்டு அங்கேயே சிறிது அளவில் உனது புகைப்படமும் எடுத்து உடன் அனுப்பினால் மற்ற ஏற்பாடுகளை நாங்கள் கவனித்துக் கொள்வோம். இந்தச் சந்தர்ப்பங்களை நீ இழக்கக்கூடாது. நன்றாகச் சிந்தித்து முடிவு செய். இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு மீனாட்சி அச்சகத்திலிருந்து உனது கோடைக்கானல் முகவரியைப் பெற்றுக் கொண்டேன்' என்று காரியதரிசி அம்மாள் எழுதி இருந்தாள்.

இரண்டு மூன்று முறை அந்தக் கடிதங்களைத் திரும்பத் திரும்பப் படித்தாள் பூரணி. சிந்தனையில் ஆழ்ந்தாள். கடுமையான பின்னக்கணக்கில் ஒழுங்காகவும் முழு எண்ணாகவும் விடை கிடைக்காதது போல் அவள் சிந்தனை ஒரு முழுமையான முடிவுக்கு வராமல் சுழன்றது.

'வாய்ப்பு வரும் போது உலகத்து வீதிகளில் தமிழ் மணம் பரப்பி முழக்கமிட உங்கள் குரல் தயாராயிருக்க வேண்டும்' என்று எப்போதோ அரவிந்தன் சொல்லியிருந்ததையும், அப்போது தான் அவனுக்கு மறுமொழி கூறியதையும் நினைத்தாள். இதை நினைத்த போது அவளது மாதுளை மொட்டுப் போன்ற இதழ்களில் நளின மென்னகை மெல்லெனத் தோன்றி மறைந்தது. அந்தச் சமயத்தில்தான் வசந்தா வந்தாள்.

"என்ன அக்கா, நீங்களாகவே சிரித்துக் கொள்கிறீர்கள்! எங்கே கொஞ்சம் முழங்கையை நீட்டுங்கள். அளவெடுத்துக் கொள்கிறேன். 'சீஸனு'க்காகப் புதிது புதிதாய் வளையல் கடைகள் வந்திருக்கின்றன. நான் போய் வளை அடுக்கிக் கொண்டு வரப் போகிறேன். உங்கள் கைக்கும் அளவு கொடுத்தீர்களானால் வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன்" என்று அளப்பதற்காகப் பட்டு நூலை நீட்டிக் கொண்டே பூரணிக்கு அருகில் வந்து அமர்ந்தாள் வசந்தா. பூரணி அவள் ஆர்வத்தை மறுக்கக்கூடாது என்பதற்காகத் தன் முழங்கையை நீட்டினாள். மஞ்சள் கொன்றை நிறம் மின்னும் அந்த வனப்பான முன்கையும் வெண்ணெயைத் தீண்டினாற் போல் மென்மையான வெண்ணிற உள்ளங்கையில் சிவப்பு இரத்தினம் பதித்தாற்போல மருதோன்றிச் சிவப்பும் வசந்தாவுக்கே பொறாமையூட்டுவது போல் அழகு பொலிந்தன. ஒவ்வொரு விரல் நுனியும் ஒரு பவழ மணியாகி விட்டாற்போல் மருதோன்றி நிறம் பற்றியிருந்தது பூரணிக்கு.

"உங்கள் கையில் நன்றாக நிறம் பற்றியிருக்கிறதே அக்கா! இதோ என் கையைப் பாருங்கள்! நிறமே பற்றவில்லை" என்றாள் வசந்தா. பூரணிக்கு அதைக் கேட்டுச் சிரிப்பு வந்து விட்டது. "சில தேகவாகு அப்படி! மருதாணி பற்றாது" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்.

வசந்தா வளைக்கடைக்குப் புறப்பட்டுப் போனபின் பூரணி மீண்டும் தன் நினைவுகளால் சூழப் பெற்றாள். கண்களை மெல்ல மூடிக்கொண்டு அரவிந்தனுடைய முகத்தை மனதில் நினைத்தாள். கண் முன் நிற்கிற உருவத்தைத்தான் திறந்த கண்களால் பார்க்க முடியும். கண் முன் நிற்காத உருவத்தைக் கண்களை மூடிக் கொண்டால்தான் காணமுடியும். கண்களை மூடிக்கொண்டு கண்முன் இல்லாத உருவத்தை மானசீகமாகக் காண முயல்வதற்குத்தான் தியான ஆற்றல் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தத் தியான ஆற்றல் எல்லோருக்கும் அமைவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு அபூர்வமாகக் கிடைக்கிற ஆற்றல் அது. பூரணிக்கு இந்த ஆற்றல் அதிகம். இன்று கூடக் கண்களை மூடிக்கொண்டு அம்மாவின் முகத்தை நினைத்தால் நினைத்தவுடன் அச்சுப்போல் அப்படியே அம்மாவின் முகம் உருவெளியில் தோன்றும். அப்பாவின் முகமும் அப்படித்தான். வேறுபட்ட கருத்துள்ள பலப்பல நூல்களைப் படித்து அவ்வளவையும் நினைவு வைத்துக் கொண்டு சிந்திக்கிற அறிவாளி போல் முகங்களை நினைவு வைத்துக் கொண்டு மனதுக்குள்ளேயே அவற்றைப் புரட்டிப் பார்க்கும் அற்புத சக்தியுள்ளவள் பூரணி.

ஒளியரும்பி மலர்ந்த கண்களும், நகையரும்பிச் சிரிக்கும் இதழ்களும், கூர்மையரும்பி நீண்ட எழில் நாசியுமாக அரவிந்தனின் அழகு முகம் அவளுடைய மூடிய கண்களுக்கு முன் உருவொளியில் தோன்றியது. பாலும் வெண்மையும் போல் சிரிப்பிலிருந்து தன்னையும், தன்னிலிருந்து சிரிப்பையும் பிரித்துக் கொள்ள முடியாத அரவிந்தனின் இதழில் இளநகை ஊறி வழிகிறது. சிவப்பு மொட்டு மலர்வது போல் அந்த வாய் மலர்கிறது.

"பூரணி! நீ உலகத்து வீதிகளில் உன்னுடைய புகழையும், நீ பிறந்த தமிழ்நாட்டின் புகழையும், பரப்புவதற்குப் பிறந்தவள்" என்று அவளை நோக்கிக் கூறுகிறான் அவன். 'எனக்கு அவ்வளவு சக்தி உண்டா?' என்று மலைக்கிறாள் அவள். "உன்னைப் பற்றி நீ நினைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் உன் ஆற்றல் பெரிதுதான். பூவின் வாசனை பூவுக்குத் தெரியாது" என்கிறான் அவன்.

நெஞ்சில் வந்து தைக்கும் அழகான புன்சிரிப்பு மட்டும்தான் அரவிந்தனுக்குச் சொந்தமென்பதில்லை. அழகான வாக்கியங்களில் அழகாக உரையாடும் திறமையும் அவனுக்கே சொந்தம் போலும்.

"அரவிந்தன்! நீங்கள் தீர்க்கதிரிசிதான். என்னைப் பற்றி எனக்கு எவ்வளவு அதிகமாகத் தெரியுமோ அதை விட அதிகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. பூவின் வாசனை பூவுக்குத் தெரியாதிருக்கிறது. நான் பூவா? அப்படியானால் நீங்கள் யார்? அப்பப்பா! எத்தனை பெரிய குறும்புக்காரராக இருக்கிறீர்கள் நீங்கள்? சில வார்த்தைகளில், சிறிய வார்த்தைகளில் இவ்வளவு அர்த்தம் வைத்துப் பேசுகிற வித்தையை நீங்கள் எங்கே கற்றீர்கள்? நீங்கள் கவியல்லவா? எதையுமே சாதாரணக் கண்களால் உங்களுக்குப் பார்க்கத் தெரியாது. சாதாரணமாகப் பேசத் தெரியாது! சாதாரணமாக நினைக்கவும் தெரியாது!"

பூரணி கண்களைத் திறந்து பார்த்தாள். எதிர்ச் சுவரில் சுவரையே அடைத்துக் கொண்டு பெரிய நிலைக் கண்ணாடி. அதில் தெரிவது அவளுடைய அழகுதானா? எண்ணெய் நீராடியிருந்தாள். கூந்தலை விரித்து நுனி முடிச்சுப் போட்டிருந்தாள். கருமேகக் காடு விரிந்தாற் போல் கூந்தல் தரையினைத் தொடுகிறது. அந்தப் பெண் வசந்தா விளையாட்டாக ஒரு சிகப்பு ரோஜாவைப் பறித்து வலது பக்கத்துக் காதுக்கு மேல் விரித்த குழலில் சொருகி விட்டிருந்தாள். அந்தச் சிவப்புப் பூ கருங்கூந்தலில் எடுப்பாகத் தெரிந்தது. பூரணி இனம் புரியாததொரு பூரிப்பை உணர்ந்தாள். தான் இத்தனை பெரியவளாக இவ்வளவு அழகுகளை நிறைத்துக் கொண்டு எப்போது எப்படி வளர்ந்தோம் என்று அவளுக்கே மலைப்பாக இருந்தது. தனக்குத் தெரியாமலே தான் வளர்ந்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது. மனம் வளரவும் அறிவு பெருகவும் உழைத்துப் படித்ததும் கவலைப்பட்டதும் அவளுக்கு நினைவிருந்தன. உடம்பைப் பற்றி அவள் நினைத்ததில்லை; கவலைப்பட்டதில்லை. ஆனால் மனத்தையும் அறிவையும் போல அதுவும் வளர்ந்து செழுமையடைந்திருக்கிறதே! அவள் படாத கவலையைத் தானே எடுத்துக் கொண்டு வளர்ந்தது போல் வளர்ந்து வளமாகியிருக்கிறதே. செழிக்க வேண்டுமென்ற நினைப்பில்லா விட்டாலும் ஆற்றங்கரை மரம் தானாகச் செழிப்பது போல் தன் உடல் செழித்திருப்பதை உணர்ந்தாள் அவள்.

 

சமீபகாலத்தில், அப்பாவின் மறைவுக்குப் பின் இத்தனை பெரிய கண்ணாடியில் இத்தனை புதிய நினைவுகளோடு இவ்வளவு தனிமையில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பே அவளுக்கு ஏற்பட்டதில்லை. உடம்பைப் பொறுத்தவரையில் அப்பாவின் மடியில் உட்கார்ந்து, 'ஆத்திசூடி' சொன்ன காலத்துச் சிறுமியாகவே இன்னும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள். 'அப்படி இல்லை? நீ வளர்ந்திருக்கிறாய்' என்கிறது இந்தக் கண்ணாடி.

அவள் துன்பப்பட்டிருக்கிறாள்! பொறுப்புகளைச் சமாளித்திருக்கிறாள். வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக் கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை.

கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே மனத்தில் சிந்தனைகளைக் காண்பது சுகமாக இருந்தது. சமையற்கார அம்மாள் வந்து 'மருந்து சாப்பிட வேண்டிய நேரம்' என்று நினைவுபடுத்திய போது தான் பூரணி இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தாள். மதுரையில் அவள் உடல்நிலையைப் பரிசோதித்துக் காற்று மாற வேண்டுமென்று கூறிய டாக்டர், ஏதோ 'டானிக்'குகள், மாத்திரைகள் எல்லாம் நிறையக் கொடுத்து அனுப்பியிருந்தார். பழங்கள், காய்கறி, கீரை, காய்ச்சின பால் எல்லாம் நிறையச் சாப்பிட வேண்டுமென்பதும் அவர் கூறி அனுப்பியிருந்த அறிவுரை. டாக்டர் அறிவுரைகளுக்கு ஏற்பப் பூரணியைக் கவனித்துக் கொள்கிற பொறுப்பு வசந்தாவிடமும் சமையற்கார அம்மாளிடமும் விடப்பட்டிருந்தது.

பூரணி உள்ளே போய் மருந்தைச் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் சாய்வு நாற்காலியில் வந்து சாய்ந்து கொண்டாள். கடல் கடந்தும் நெடுந்தொலைவுக்குப் பயணம் செய்தும், ஆற்ற வேண்டிய அந்த சொற்பொழிவுகளை, ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தனக்கு மிகவும் அந்தரங்கமான எவரிடமாவது கலந்தாலோசித்து முடிவு செய்தால் நன்றாக இருக்குமென்று அவளுக்குத் தோன்றியது.

இந்தச் சமயத்தில் அரவிந்தன் அருகில் இருந்தால் அவரைக் கேட்டுக் கொண்டு முடிவு செய்யலாம். என்னுடைய காரியங்களைத் திட்டமிடும் உரிமையைத் துணிந்து அவரை நம்பிக் கொடுத்து விடலாம் என்று எண்ணினாள் அவள். அடுத்த கணமே அவளுக்கு இன்னொரு விந்தையான நினைவும் எழுந்தது.

'இந்த அரவிந்தனிடம் அப்படி என்ன ஆற்றல் இருக்கிறது? எனக்காக நான் எதைச் சிந்தித்தாலும் அந்தச் சிந்தனையின் நடுவில் என் உடம்பிலும் நெஞ்சிலும் சரிபாதி பங்கு கொண்டவர் போல் இவர் ஏன் நினைவுக்கு வருகிறார்? அரவிந்தன் என்னுடைய ஊனிலும், உயிரிலும், அதனுள் நின்ற உணர்விலும் எல்லாவற்றிலும் நீங்கள் எப்போது கலந்து உறைந்தீர்கள்? எப்படிக் கலந்து உறைந்தீர்கள்? நானே தெரிந்து கொள்ள முடியாமல் எனக்குள்ளே வந்து நல்லனவும் தீயனவும் பகுத்துணரும்படி என்னைச் சிந்திக்க வைக்கிறீர்களே!' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். 'ஆணுக்கும் பெண்ணுக்கும் எண்ணங்களின் கலப்பில் உண்டாகும் தெய்வீகப் பேருணர்ச்சியாகக் கவிகள் பாடி வைத்திருக்கிறார்களே, அந்த உணர்ச்சியைத்தான் இந்த அரவிந்தனிடம் நான் காண்கிறேனோ' - இப்படி நினைத்தபோது பூரணிக்கு மெய்சிலிர்த்தது. மலர்கின்ற தாமரையைப் போல் இதயத்தில் ஏதோ ஒரு உணர்வு விகசித்தது.

'எப்போதோ ஒரு பிறவியில் இந்த அரவிந்தனும் நானும் அன்றில் பறவைகளாக இருந்து காதல் வெற்றி பெறாமல் அழிந்திருக்கிறோமோ? எவனாவது கொடிய வேட்டுவன் எங்களை அம்பெய்து கொன்று எங்களையும் எங்கள் கனவுகளையும் அழித்து விட்டானா?' - தாபம் என்கிற உணர்வு என்னவென்று இப்போது அவளுக்குச் சிறிது சிறிதாகப் புரிந்தது.

மலையின் சீத மென்காற்று இதமாக வீசியது! எண்ணெய் நீராடிய அலுப்பில் இனிய நினைவுகளோடு சாய்வு நாற்காலியிலேயே கண்ணயர்ந்து விட்டாள் பூரணி. அந்த மலைத் தொடர்களைக் கடந்து ஓடோடிச் சென்று 'என்னுடைய மனத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நீங்கள் பெரிய திருடர்' என்று சிரித்துக் கொண்டே அரவிந்தனிடம் கூறிவிட வேண்டும் போலத் தேகத்திலும் இதயத்திலும் ஒரு தவிப்பை உணர்ந்தாள்.

அவள் எவ்வளவோ படித்திருக்கிறாள். அவளுடைய இதயம் துன்பங்களால் பக்குவப்பட்டிருக்கிறது. அன்பைக் கூட அந்தரங்கமாக வைத்துக் கொள்ளத் தெரிந்தவள் அவள். ஆனால் இப்போது இந்தக் கணத்தில் அவள் உணருகிற தாபத் தவிப்பை எந்தப் பெண்ணும், எந்தக் காலத்திலும் தவிர்த்திருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றியது. ஊர் ஊராகப் பொதுப்பணிக்கும் சொற்பொழிவுகளுக்கும், அலைந்து கொண்டிருந்த காலத்தில் அவள் மறந்திருந்த அல்லது அவளை மறந்திருந்த இந்தத் தவிப்பு காய்ந்த மரத்தில் நெருப்புப் போல் இந்த ஓய்வில் இந்தத் தனிமையில் அவளை வாட்டுகிறதே! மனிதர்கள் மனிதர்களாகவே இருப்பதற்குக் காரணமான சில உணர்ச்சிகள் உண்டு. அவற்றை வென்றுவிடுவது எளிமை அல்லவென அவள் நினைத்தாள்.

பகல் உணவுக்கு வசந்தா அவளை எழுப்பினாள். சாப்பாடு முடிந்ததும், பூரணியை உட்கார்த்தி தான் வாங்கி வந்திருந்த வளையல்களை அவளுக்கு அணிவித்தாள் வசந்தா. முன் கைகளை மறைத்துக் கொண்டு, 'கலின் கலின்' என்று கைகளை ஜலதரங்கம் வாசிப்பது போல் வளையல்கள் நாதமிட்டன.

"அக்கா! இந்தக் கோலத்தில் கலியாணப் பெண் மாதிரி அழகாக இருக்கிறீர்கள்" என்று சொல்லிச் சிரித்தாள் வசந்தா. பூரணி எதை மறக்க முயன்று கொண்டிருந்தாளோ அதை அதிகமாக்கினாள் வசந்தா. உடம்பு கொள்ள முடியாமல் மனத்திலும் இடம் போதாமல் நிரம்பி வழிகிற இந்தப் பூரிப்பை எங்கே போய்க் கொட்டுவது?

 

கொட்டுவதற்கு இடம் இருந்தது! இரண்டு நாட்களுக்கு எங்கும் அசைவதில்லை என்று தமிழ்ச் சங்கத்துப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு படித்துத் தீர்ப்பதென்று கண்டிப்புடன் உட்கார்ந்தாள் பூரணி. தாகூரின் கீதாஞ்சலி, இராம தீர்த்தர், விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவு நூல்கள், சி..எம். ஜோடின் அறிவு நூல்கள் இவற்றின் சிந்தனை உலகில் நீந்தினாள். எச்.ஜி.வெல்ஸ், ஷா போன்றோரின் நூல்களும் சில இருந்தன.

இரண்டாவது நாள் மாலை சி..எம். ஜோடினது 'நாகரிகத்தின் கதை' (தி ஸ்டோரி ஆஃப் சிவிலிசேஷன்) என்ற நூலின் கடைசிப் பக்கத்தில் கருத்தெல்லாம் அவள் ஒன்றிப் போய் ஈடுபட்டிருந்த போது வாசலில் தந்தி பியூன் குரல் கொடுத்தான். வசந்தா ஓடிப்போய் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு வந்தாள். 'ஒரு முக்கியமான காரியமாக அவளைச் சந்தித்துப் பேசுவதற்கு மறுநாள் அரவிந்தனை அனுப்புவதாக' மீனாட்சி சுந்தரம் தந்தி கொடுத்திருந்தார்.

தன்னுடைய நினைவுகளுக்கு ஏதோ மந்திரசக்தி எற்பட்டுவிட்டது போல் வியப்பாயிருந்தது பூரணிக்கு. எவருடைய வரவை அவள் விரும்பினாளோ அவர் தானாகவே வருகிறார். தனக்காகவே நேருகிறதோ இந்த அற்புதமெல்லாம் என்று கருதிக் களித்தாள் அவள். இரவெல்லாம் கனவுகளில் நீந்தினாள்.

பூரணி மறுநாள் காலையில் சீக்கிரமே நீராடிவிட்டு வாயிற்புறமாகக் கார் வருகிற சாலைக்கு நேரே புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். அரவிந்தனுடைய வரவுக்காகவே அன்று கோடைக்கானல் அவ்வளவு அழகாக இருக்கிறதோ என்று அவள் மனத்தில் ஒரு பிரமை உண்டாயிற்று.

அன்று அவள் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். தலை பின்னி மல்லிகைப் பூ வைத்துக் கொண்டிருந்தாள். 'இந்த அழகு அலங்கார ஆசைகளெல்லாம் சாதாரணப் பெண்களுக்கு அசட்டுத் தனமாக உண்டாவது போல் தனக்கும் உண்டாகி விட்டதே!' என்று நினைக்கும் போதே அவளுக்குக் கூச்சமாக இருந்தது. ஆனால் ஏனோ அன்று அப்படியெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. நீலமேக நிறத்தில் வெள்ளைப் பூப்போட்ட கைத்தறிப் புடவை ஒன்றை தழையத் தழையக் கட்டிக் கொண்டு தோகையை விரித்துக் கொண்டிருக்கும் மயில் போல் வீற்றிருந்தாள் பூரணி.

பதினொரு மணிக்கு அச்சக அதிபர் மீனாட்சிசுந்தரத்தின் கார் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்தது.

கைகளில் வளையல்களும், மனத்தில் குதூகலமும் பொங்க எழுந்து நின்றாள் பூரணி. கண்கள் அந்த முகத்தை நன்றாகப் பார்க்கும் ஆவலோடு அகன்று விரிந்தன. இதழ்களில் அரவிந்தனுக்காகவே இந்தச் சிரிப்பை சிரிக்க வேண்டுமென்று சிரித்தது போல் ஒரு மோகனச் சிரிப்புடன் காரருகே சென்றாள் அவள். மனம் ஆவலினால் வேகமாக அடித்துக் கொண்டது. நெஞ்சுக்குள் கள்ளக் குறுகுறுப்பு ஐஸ் கட்டியை ஒளித்து வைத்தது மாதிரி பனி பரப்பிற்று.

 

காரிலிருந்து மீனாட்சிசுந்தரம் இறங்கினார். முருகானந்தம் இறங்கினான்; அரவிந்தன் வரவில்லை! அவளுடைய நெஞ்சில் மலர்ந்திருந்த ஆசைப் பூக்கள் உதிர்ந்தன. ஏமாற்றத்தால் வந்தவர்களை 'வா' என்று சொல்லாமல் இருந்துவிடலாகாதே என்பதற்காக 'வாருங்கள்' என்று சிரிக்க முயன்றவாறு அவர்களை வரவேற்றாள். "உடம்பெல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று விசாரித்த மீனாட்சிசுந்தரத்தினிடம், "உங்களோடு அரவிந்தன் வரவில்லையா? அவர் வருவதாக அல்லவா நேற்றுத் தந்தி கொடுத்தீர்கள்?" என்று அடக்க முடியாமல் கேட்டு விட்டாள் அவள்.

"வரவில்லை! இன்று காலையில் அவன் அவசரமாகத் தன் சொந்தக் கிராமத்துக்குப் போகும்படி நேர்ந்து விட்டது. உள்ளே வா! விவரம் சொல்லுகிறேன்" என்றார் மீனாட்சிசுந்தரம்.

 

21

 

நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்

கனற்புகைய வேகின்றான்...

                                                                                                 -- புகழேந்தி

 

முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்தமும்தான் கோடைக்கானலுக்குப் புறப்படுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது.

அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக் கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லாவிட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத்தான் அவர்கள் உறவினர்கள், உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள், அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்; தாயாதிச் சண்டைகள் நிறைந்தவர்கள், சொத்துச் சேர்ப்பதும் பணத்துக்கு மரியாதை செலுத்துவதும் தவிர வேறு எதுவும் உலகத்தில் இல்லை என்று நினைப்பவர்கள். இந்த அத்தியாயத்தைத் தொடங்குமுன் அரவிந்தன் இளமைப்பருவம் பற்றியும், பெற்றோர் பற்றியும், பிறந்த ஊர் பற்றியும் சிறிது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அவனுக்கு நோயாளியான சிற்றப்பா ஒருவர் ஊரில் இருந்தார். தனக்கு அவர் ஒரு நன்மையும் செய்ததில்லை என்பதை அரவிந்தன் உணர்ந்திருந்தான். தந்தைக்கும் தன் குடும்பத்துக்கும் ஒவ்வொரு சமயத்திலும் சிற்றப்பா செய்திருக்கிற கொடுமைகளை, துரோகங்களை, ஏமாற்றுக்களை அரவிந்தன் பலமுறை நினைத்துப் பார்த்துக் கொதிப்பு அடைந்திருக்கிறான். அந்தக் கொதிப்பின் காரணமாகவே மதுரைக்கு வந்து படித்துப் பெரியவனாகி, தனக்கென்று ஒரு வாழ்வை வகுத்துக் கொண்டு முன்னேறினான் அவன். அவனுடைய தந்தை தாராளக் கையாக இருந்தவர், தான தருமங்களுக்கு வாரி இறைத்தவர். சிற்றப்பா கருமி, அநாவசியமாகக் கால் காசு செலவழிக்க மாட்டார். அவசியத்துக்காகக் கூட சிந்தித்தே செலவழிப்பார். வட்டியும் முதலுமாக ஏறிப் போய் கடன் வாங்கினவன் திணறும் போது அவனுடைய நிலங்களையோ, வீடு, நகை போன்ற பொருள்களையோ கடனுக்கு ஈடாகப் பறிமுதல் செய்து விடுவார். முக்கால் வட்டியும், முழு வட்டியும் கூசாமல் வாங்குவார். அப்பா நாளுக்கு நாள் கைநொடித்து ஏழையாகப் போய்க் கொண்டிருந்த போது, சிற்றப்பா பணக்காரராகி மாடி வீடு கட்டினதன் இரகசியம் இதுதான் என்பதை வயது வந்த பின் அரவிந்தன் தெரிந்து கொண்டிருந்தான்.

கடைசிக் காலத்தில் அரவிந்தனின் தந்தைக்கு எமனாக நின்றவரும் அவருடைய தம்பிதான். 'உடன் பிறந்த தம்பிதானே? எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்வது போல் நம்மிடம் நடந்து கொள்ளமாட்டான். மூத்தவன் என்றும், அண்ணன் என்றும் தம்மை மதிக்கக் கடமைப்பட்டவன் அல்லவா?' என்று எண்ணிக் கொண்டு தம்பியிடம் விவசாயச் செலவுக்காகச் சில ஆயிரம் கடன் வாங்கினார் அரவிந்தனின் தந்தை. அந்த ஆண்டு விளைச்சல் சுகப்படாததனால் அவரால் தம்பிக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

"என்ன இருந்தாலும் நீ எனக்கு உடன்பிறப்புத்தானே அப்பா! கடவுள் புண்ணியத்தில் செட்டாகச் சேர்த்து வைத்துக் கொண்டு நன்றாகயிருக்கிறாய். என்னைப் போல் வாரியிறைத்துவிட்டு நிற்கவில்லை நீ. அடுத்த மகசூலில் உன் கடனை அடைத்து விடுகிறேன். அதுவரை பொறுத்துக் கொள். ஏதோ என் போதாத காலம் விளைச்சல் சரியில்லை" என்று தம்பியை வீடு தேடிப் போய்க் கெஞ்சினார் அரவிந்தனின் தந்தை. ஆனால் அவருடைய தம்பி அதற்கு இணங்கவில்லை. மனைவி சொல் கேட்டுக் கொண்டு அண்ணனிடம் மரியாதையின்றிப் பேசினார்.

"சொன்னபடி வாங்கின கடனைக் கீழே வைத்து விட்டு மறுவேலை பார். பணத்துக்கும் உடன்பிறப்புக்கும் சம்பந்தமில்லை."

"ஏண்டா! நீ பணத்தோடுதான் பிறந்தாயா? என்னோடு பிறக்கவில்லையா? பெண்பிள்ளை பேச்சைக் கேட்டுக் கொண்டு மூத்தவன் என்கிற மதிப்புகூட இல்லாமல் இப்படி என்னிடம் கண்டிப்புப் பண்ணலாமா?"

"இதெல்லாம் எதற்கு அண்ணா வீண் பேச்சு? பணம் என்றால் கண்டிப்பில்லாமல் முடியாது."

அவர் பெரிய மானி. வேறு வழியில்லாமல் போகவே தம்முடைய சொத்து என்று மீதமிருந்த கொஞ்ச நிலத்தையும் விலைக்கு விற்றுத் தம்பிக்குக் கடன் கொடுத்து நல்லவரானார் அரவிந்தனின் தந்தை. அவருக்கும் அவர் மனைவிக்கும் நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாமல் காலந்தள்ளிப் பிறந்த கடைசிக் கொழுந்துதான் அரவிந்தன். செல்லப் பிள்ளையாக வளர்த்தார்கள் அந்தக் குழந்தையை.

சிற்றப்பாவின் கடனால் மனம் ஒடிந்து தந்தை நிலத்தை விற்கிறபோது, அரவிந்தனுக்குப் பத்து வயது. ஓரளவு நினைவு தெரிந்த காலம்தான் அது. உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்போ நாலாவது வகுப்போ படித்துக் கொண்டிருந்தான் அவன். ஒரே ஆஸ்தியாக மீதியிருந்த நிலத்தை விற்று விட்டபின் அதே ஏக்கத்தில் படுக்கையானார் அரவிந்தனின் தந்தை. அவர் காலமான தினம் இன்னும் அவன் மனத்தில் துக்கப் புண்ணின் வடுவாகப் பதிந்திருக்கிறது. ஒரு விவரமும் சொல்லாமலேயே அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துப் போய் மொட்டை அடித்துவிட்டுப் பிஞ்சுக்கை நோகக் கொள்ளிச் சட்டிக் காவடியைச் சுமக்கச் செய்து அப்பாவின் பிணத்தோடு சுடுகாட்டுக்கு அழைத்துப் போன நிகழ்ச்சி இன்னும் மறக்க இயலாது. பொருமிப் பொருமி அழுதுகொண்டே நடந்து போன அன்றைய நிகழ்ச்சியை நினைத்தால் இப்போதும் கண்கலங்கிவிடும். அரவிந்தனுக்கு அவனுடைய பிஞ்சுப் பருவத்து வாழ்க்கையில் அடுத்த பேரிடி அம்மாவின் மரணம். பன்னிரண்டு வயதுச் சிறுவனாகி ஆரம்பப் பள்ளிக்கூடப் படிப்பை முடித்த தறுவாயில் தாயையும் இழந்து அநாதையானான் அவன். சமுத்திரத்தின் வேகமும் ஆழமும் தெரியாமல் கரையோரமாகக் காகிதத்தில் கப்பல் செய்துவிடலாமா என்று பேதைத்தனமாக எண்ணும் குழந்தை போல் வாழ்க்கைக்கு முன்னால் அநாதையாக நின்றான் அரவிந்தன். எப்படியாவது வாழவேண்டும் என்ற ஆசையும், எப்படி வாழ்வது என்ற மலைப்புமாகத் தவித்தது உலகம் தெரியாத இந்தப் பூ உள்ளம். ஊர்க்காரர்களுடைய பழிக்கு அஞ்சிச் சிற்றப்பா சிறிது காலம் அவனை வீட்டில் வைத்துக் கொண்டார். சித்தி கொடுமையே உருவானவள். "தண்டச்சோறு கொட்டிக் கொள்கிறாயே கடன்காரா! தின்கிற சோற்றுக்கு வேலை வேண்டாமோ! இந்த எருமை மாடுகளையெல்லாம் நன்றாக மேய்த்துக் கொண்டு வா" என்று பள்ளிக்கூடம் போகவிடாமல் தடுத்து மாடு மேய்க்கிற வேலையை அவன் தலையில் கட்டினாள், சித்தி. மாடுகளை மேயவிட்டு வயல்வரப்புகளிலே அமர்ந்து பச்சைப் பிள்ளையாகிய அவன் மனத்தவிப்பு அடங்கக் குமுறிக் குமுறி அழுத நாட்கள் கணக்கிலடங்கா. "அப்பா! அம்மா! என்னை ஏன் இப்படி அநாதைப் பயலாக இந்த உலகத்தில் விட்டுச் சென்றீர்கள்? சித்தியிடம் அடி வாங்கவும், சிற்றப்பாவிடம் திட்டு வாங்கவுமா விட்டுப் போனீர்கள்?" என்று தனக்குத்தானே புழுங்கி அவன் நொந்த நாட்கள்தாம் எத்தனை!

சிற்றப்பாவுக்கும் சித்திக்கும் குழந்தையில்லை! சித்தி தன் உறவுவழிப் பெண் ஒருத்தியை வீட்டோடு அழைத்துக் கொண்டு வைத்து வளர்த்து வந்தாள். அரவிந்தனை அவர்கள் பிள்ளைக் குழந்தையாக எண்ணி வளர்க்கவில்லை. மாட்டுக் கொட்டத்திலே மாடுகள் வளரவில்லையா அப்படி அவனையும் விட்டு விட்டார்கள்! அவன் மாட்டுக் கொட்டத்திலேயே சாப்பிட்டான். அங்கேயே ஒரு மூலையில் உறங்கினான். விடிந்ததும் மாடு பற்றிக் கொண்டு போனான். ஒருநாள் மாடுகளை மேயவிட்டு அவன் புத்தகம் படித்துக் கொண்டிருந்து விட்டதால், பக்கத்து நெல்வயலில் ஒரு பக்கமாக மாடுகள் வாய் வைத்து விட்டன. வயல்காரன் சிற்றப்பாவிடம் போய்ச் சொல்லிவிட்டான். சாயங்காலம் அவன் மேய்ச்சல் முடிந்து திரும்பினதும் மூக்கு முகம் பாராமல் அடித்து விட்டார் சிற்றப்பா. சித்தி வாயில் வராத வார்த்தையெல்லாம் சொல்லி வைத்தாள். அன்று தான் அவனுடைய கண்களும், மனமும் திறந்தன. இனி, இந்த வீட்டில் தான் இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாது. எங்காவது ஓடிப்போய் விட வேண்டும் என்ற துணிவு அவன் உள்ளத்தில் உண்டாயிற்று. இரவு எல்லோரும் உறங்கின பின் தனக்குச் சொந்தமான இரண்டு மூன்று அழுக்குச் சட்டை, துணிகளையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு இரயில் பாதை வழியாக நடக்க ஆரம்பித்து விட்டான். பயங்கரமான இருளில் தண்டவாளத்தையும் சரளைக் கற்களையும் மாறி மிதித்துக் கொண்டே முழங்காலில் சிராய்த்துக் காயம்படுவதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். மதுரையிலிருந்து கிழக்கே இராமேசுவரம் செல்லும் இரயில் பாதையின் அருகில் மதுரையிலிருந்து பதினெட்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துதான் மதுரையை நோக்கி அவன் புறப்பட்டிருந்தான். ஏன்? வாழ்க்கையை நோக்கிப் புறப்பட்டிருந்தான் என்றே கூறலாம். அதன்பின் அரவிந்தன் இன்றைக்கு இருக்கிற அரவிந்தனாக மாறி வளர்ந்தது துன்பங்களும், வேதனைகளும் நிறைந்த கதை. உழைப்பினாலும், தன்னம்பிக்கையாலும் அவன் வளர்ந்தான். படித்தான். காலையில் பத்து மணி வரையும், மாலையில் ஐந்து மணிக்கு மேலும் ஓட்டல்களில் டேபிள் கிளீனர் வேலையோ, சப்ளையர் வேலையோ எது கிடைத்தாலும் பார்த்தான். மதுரை இரயில் நிலையத்துக்கு அருகில் அந்த நாளில் 'பீமவிலாசம்' என்ற பெரிய ஓட்டல் இருந்தது. அதன் முதலாளி தங்கமான மனிதர். அவர் தம் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டே பள்ளிக்கூடத்தில் படிக்கவும் அவனை அனுமதித்தார். ஓட்டலுக்கு அருகில் இரயில் நிலையத்தில் மேற்குப் புறத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தான் அரவிந்தன். அவனோடு படிக்கிற மாணவர்கள் ஐந்து மணிக்கு மேல் அதே ஓட்டலுக்குச் சிற்றுண்டி உண்ண வருவார்கள். அழுக்குத் துணியும் கையுமாக மேசை துடைக்க நின்று கொண்டிருக்கும் அவனைக் கண்டு கேலி செய்வார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். வகுப்பிலே அவனுக்கு 'டேபிள் கிளீனர்' என்ற பட்டப் பெயர். பல்லைக் கடித்துக் கொண்டு இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டான் அரவிந்தன். சில நாட்களில் உடைமாற்றிக் கொள்ள நேரமிருக்காது. ஓட்டலில் வேலை செய்த அழுக்குகள் படிந்த உடையோடு பள்ளிக்கூடத்துக்கு ஓடுவான். சில ஆசிரியர்கள் அவனுடைய தோற்றத்தைப் பார்த்து ஏளனமாக நகைப்பார்கள். பையன்கள், "டேய் டேபிள் கிளீனர், முதலில் உன்னைக் 'கிளீன்' பண்ணிக்கோடா!" என விசில் அடித்துக் கேலி பேசுவார்கள்.

பதின்மூன்று வயதிலிருந்து இருபதாவது வயது வரை உள்ள காலம் அவனுடைய வாழ்க்கையைக் கடுமையான உழைப்பினால் மலர்வித்த காலம். கேவலமோ ஏளனமோ பாராமல் அவன் உழைத்துத் தன்னை வளர்த்துக் கொண்ட காலம் அது. தெருத் தெருவாகத் தினசரிப் பேப்பர்களைக் கூவி விற்று அதில் கிடைக்கும் கமிஷனைப் பள்ளிச் சம்பளமாகக் கட்டியிருக்கிறான். அச்சாபீஸில் தாள் மடித்திருக்கிறான். வேறு ஒரு வேலையும் கிடைக்காத இரண்டொரு சமயங்கள் மூட்டை தூக்கிக் கிடைக்கிற கூலியைக் கொண்டு பள்ளிக்கூடப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறான். அவனுடைய வயதில் அப்படி அவனைப் போல் உழைத்து முன்னுக்கு வருவது என்பது எல்லோருக்கும் முடியாத காரியம். அவன் பிடிவாதமாக முன்னுக்கு வந்தவன்.

இந்த இளமை அனுபவங்கள்தான் வாழ்க்கையைப் பற்றிய ஞானத்தையும், உயர்ந்த லட்சியங்களையும், அவன் மனத்தில் வளர்த்திருந்தன. ஏழைகளின் மேல் இரக்கமும் சமூகப் பிரச்சினைகளில் அனுதாபமும் உண்டாகிற பக்குவமும் அவன் மனத்துக்கு கிடைத்திருக்கிறதென்றால், அதற்கும் அவனுடைய இளமை வாழ்வே காரணம். 'உல்லாசமும் இளமைத் திமிரும் கொண்டு கன்றுக்குட்டிகள் போல் திரிகிற வயதிலேயே உழைத்துத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என்ற தாகமெடுத்து மதுரைக்கு ஓடி வந்தவன் அவன். அந்தத் தாகம் தணிந்த பின்பே அவன் பிடிவாதம் தளர்ந்தது.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவனுடைய தமிழாசிரியர் ஒருவர் அவனை மீனாட்சி அச்சக உரிமையாளரிடம் அழைத்துப் போய் சிபாரிசு செய்ததும், அவன் அங்கு சேர்ந்து தன் திறமையாலும், நேர்மையாலும் முன்னுக்கு வந்ததும் காலத்தின் போக்கில் நிகழ்ந்து நிறைந்தவை. தான் நினைத்தபடியே உழைத்து மேல்நிலைக்கு வந்து விட்டதை நினைக்கும் போது அரவிந்தன் ஆச்சரியம் கொள்வான். தன்னைப் போன்றவர்களுக்காகவே, 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்' என்று திருவள்ளுவர் கூறிச் சென்றிருக்கிறாரோ என்று நினைத்து நினைத்து வியப்புக் கொள்வான் அவன்.

அன்று கோடைக்கானலுக்குப் புறப்படுகிற நேரத்துக்கு அந்தத் தந்தி வந்தபோது துன்பங்கள் நிறைந்த தன் இளமை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் சித்திரங்கள் போல் நினைவு வந்தது அரவிந்தனுக்கு. அவற்றை நினைக்கத் தூண்டியது அந்த தந்திதான்.

"சிற்றப்பா இறந்து விட்டார்! உடனே புறப்பட்டு வரவும்" என்பது தான் தந்தியில் கண்டிருந்த வாசகம். கடைசிக் காலத்தில் அந்தச் சிற்றப்பா நீரிழிவு வியாதியால் படுத்த படுக்கையாகி விட்டார். தன் பிறந்த வீட்டு வழியில் எவரையாவது தத்து எடுத்துக் கொள்ளச் செய்து சொத்துகள் எல்லாம் கைமாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பகற்கனவு கண்டு கொண்டிருந்த சித்தி அவரையும் முந்திக் கொண்டு இறந்து போயிருந்தாள். தனியாக நோயுடன் கிராமத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருடைய காலமும் முடிந்து விட்டதென்று இதோ இந்தத் தந்தி சொல்லுகிறது. அரவிந்தன் மதுரையில் இருப்பது கிராமத்தில் உறவினர்களுக்குத் தெரியும். சிறுமைகளும், பணத்தாசையும் நிறைந்த அவர்களோடு நெருங்கிப் பழகவே இப்போது அவனுக்கு அருவருப்பு ஏற்பட்டிருந்தது. 'இந்தத் தந்தியைக் கொடுத்த உறவினர்கள் என்ன பொருளில் எதற்காக அவனுடைய பெயருக்குக் கொடுத்திருக்கிறார்கள்' என்பது அவனுக்குப் புரிந்தது.

 

அவருக்கு வேறு வாரிசு இல்லை. 'அவன் போய்த்தான் கொள்ளி வைக்க வேண்டும். அவர் தான் அன்று அந்தப் பச்சைப் பிள்ளை வயதில் அவனை அடித்துத் துரத்தினார். அவர் துரத்தியிராவிட்டால் இன்று இப்படி ஆகியிருக்க முடியாது. அவன் சிற்றப்பாவும், சித்தியும் படுத்தி அனுப்பிய கொடுமையில் தான் அவனுக்கு 'வாழவேண்டும், தன் முயற்சியால் வளர வேண்டும்' என்ற வைராக்கியமே உண்டாயிற்று. அந்த வைராக்கியமே அவனை வளர்த்தது.

'மறுபடியும் அவருடைய வீட்டு வாயிற்படியை மிதிப்பதில்லை' என்ற வைராக்கியத்தோடு அன்று அவன் கிளம்பியிருந்தான். அந்த உறுதியான பிடிவாதத்தின் பயனை இன்று அவன் அடைந்து விட்டான். ஆனால் சிற்றப்பா ஊரையெல்லாம் ஏமாற்றி உறவினரை வஞ்சித்து மற்றவர்கள் எல்லாம் ஏழையாகும்படி பிறரை அழச் செய்து பணமும், நிலமும் சேர்த்தாரே, அதன் விளைவை அடையாமலே செத்துப் போய்விட்டாரே? சாவாவது நன்றாக வந்ததோ? நீரிழிவு நோயோடு எழுந்து நடமாட முடியாமல் திணறி வேதனைப்பட்டு, 'நான் விரைவில் சாக வேண்டும்' என்று வருந்திச் சாவுக்கு ஏங்கச் செய்து வந்த சாவு அல்லவா அவருடைய சாவு? 'மனிதர்கள் என்னவோ பணத்தாலேயே எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு போய்விடலாம்' என்று பார்க்கிறார்கள். பணம் ஓர் அழகான சொப்பனம். கனவு எத்தனை அழகாயிருந்தாலும் விரைவில் அதிலிருந்து விழித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் சிற்றப்பாவைப் போல் ஆக வேண்டியதுதான்' என்று தந்தியைப் படித்து விட்டு நினைத்துக் கொண்டான் அவன். சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும் பாதிப் புத்தகம் படித்து நிறுத்தினாற் போல் முடித்துக் கொண்ட விதத்தையும் நினைத்தால் அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. தந்தி வந்தபோது மீனாட்சிசுந்தரமும் முருகானந்தமும் அருகில் இருந்தனர். தந்திச் செய்தியை அவர்களும் படித்து அறிந்து கொண்டிருந்தனர். 'ஏறக்குறைய இலட்ச ரூபாய் சொத்துக்காரர் இறந்து போயிருக்கிறார். அவ்வளவுக்கும் உரிமையாளனாகப் போகிற இவன் ஏன் இப்படி ஒரு பரபரப்பும் அடையாமல் மலைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறான்?' என்று அரவிந்தனைப் பற்றி நினைத்தார்கள் அவர்கள் இருவரும். இந்த இலட்ச ரூபாயையும் சொத்தையும் பற்றித்தான் அவர்களுக்கு நினைக்கத் தோன்றியது. அதே செல்வத்தினால் அவனுடைய தந்தை அழிந்தார் என்பதையும், அவன் அவமதிக்கப்பட்டு ஓடி வந்தான் என்பதையும் அவர்கள் நினைக்கவில்லை. அரவிந்தனின் முகம் கடுமையாக மாறியது.

"எவனாவது அநாதைப் பிணத்துக்குப் போடுகிற மாதிரி கோவிந்தா கொள்ளிப் போட்டுவிட்டுப் போகட்டும். யாருக்கு வேண்டும் இந்த நாய்க்காசு?" என்று தந்தியைக் கிழித்தெறிந்தான் அரவிந்தன். மீனாட்சிசுந்தரம்தான் அவனைத் தனியாக அழைத்துச் சென்று பக்குவமாக உபதேசம் செய்தார்.

 

"அடே அசடு! மரணம் என்பது எத்தனை பெரிய காரியம். அதில் போய்ப் பழைய கோபதாபங்களையும், குரோதத்தையும் காட்டிக் கொண்டிருக்கலாமா? பேசாமல் நான் சொல்லுகிறபடி கேளு! நீ இன்று கோடைக்கானல் போக வேண்டாம். நானும் முருகானந்தமும் போய்க் கொள்கிறோம். நீ புறப்பட்டு உன் கிராமத்துக்குப் போய் சிற்றப்பாவின் காரியங்களை நடத்தி விட்டு வா. இல்லாவிட்டால் எவனாவது மூன்றாவது முறைத் தாயாதிக்காரன் கொண்டு போவான். அந்தச் சொத்து உன் கைக்கு வந்தால் நல்ல காரியத்துக்குச் செலவு செய்யேன். அதற்காக ஒரேயடியாக வேண்டாம் என்று கண்களை மூடிக் கொண்டு வெறுப்பானேன்?" என்றார் மீனாட்சிசுந்தரம்.

"அந்த வீட்டு வாயிற்படியில் கால் எடுத்து வைக்க நினைக்கவே கூசும்படி அத்தனை கெடுதல் எனக்குச் செய்திருக்கிறாரே அவர்!"

"செய்திருக்கட்டுமே, அப்பா! அவருடைய பணத்தை நல்ல காரியத்துக்குச் செலவழித்து அத்தனைக்கும் பழிவாங்கி விடேன் நீ."

என்னென்னவோ சமாதானங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி அரவிந்தனை வழிக்குக் கொண்டு வந்தார் மீனாட்சிசுந்தரம். காலையில் அந்த நேரத்துக்குச் சரியாக இராமேசுவரம் போகிற இரயில் இருந்தது. முருகானந்தமும் அவரும் அரவிந்தனைக் காரில் கொண்டு போய் இரயிலேற்றி அனுப்பி வைத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிற்றப்பனுக்கு அந்திமச் சடங்குகள் செய்ய ஊருக்குப் புறப்பட்டான் அவன். போகும்போது இரயிலில் அவன் மனம் பழைய சிந்தனைகளில் ஆழ்ந்தது. நினைவுகளே பெருங்காற்றாக மாறி அந்தக் காற்றில் நெஞ்சினிடையே மூளும் சிந்தனைக் கனல் கொழுந்து பாய்ச்சிச் சுடர் பரப்பிற்று. எதை எதையோ எண்ணிக் கொண்டு பயணம் செய்தான் அவன்.

'மீனாட்சிசுந்தரமும், முருகானந்தமும் கோடைக்கானல் போகிறார்களே! அவர்கள் சொல்லிப் பூரணி தேர்தலில் நிற்க ஒப்புக் கொண்டு விடுவாளா? இந்தச் சமயத்தில் இந்தப் பெரிய காரியத்துக்கு இணங்கலாமா, வேண்டாமா என்று பூரணி முடிவு செய்ய என்னுடைய கருத்தையல்லவா கேட்பாள்? பார்க்கலாமே என்னைக் கேட்டுக் கொண்டு முடிவு செய்கிறாளா? அல்லது மீனாட்சிசுந்தரம் விவரம் சொல்லிய அளவில் ஒப்புக் கொண்டு விடுகிறாளா? இந்தச் சந்தர்ப்பத்தில் நானே போய் அவளைச் சந்தித்து நல்லது கெட்டது இரண்டையும் சீர்தூக்கித் தேர்தலில் நிற்கலாமா நிற்கலாகாதா என்று தீர்மானம் செய்தால் அவளுக்கு ஆறுதலாக இருக்கும். தந்தியில் நானும் முருகானந்தமும் புறப்பட்டு வருவதாகத்தான் கொடுத்திருக்கிறார். நான் இங்கே இந்தக் கிழவனுக்குக் கொள்ளி வைக்க வந்தாயிற்று. என்னை எதிர்பார்த்துப் பெரிதும் ஏமாற்றமடைந்திருப்பாள் பூரணி' என்று நினைத்தான் அரவிந்தன். எதற்கோ ஆசைப்பட்டுக் கொண்டு அநாவசியமாகப் பூரணியைத் தேர்தலில் வம்புக்கு இழுக்கும் மீனாட்சிசுந்தரத்தின் மேல் கோபம்தான் வந்தது அவனுக்கு. 'நான் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்த மட்டும் அவருடைய இந்த எண்ணத்தைத் தடுத்துவிட முயன்றேன். முடியவில்லையே? பிடிவாதமாகத் திருவேடத்துக்கு கூட்டிக் கொண்டு போய்ப் பூக்கட்டி வைத்தும் பார்த்து உறுதி செய்து கொண்டு விட்டாரே' என்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான் அவன்.

இரயிலிலிருந்து இறங்கி அவன் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது காலை ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. உறவினர்கள் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான பாட்டிமார்கள் அவனிடம் போலியாக அழுதுகொண்டே துக்கம் விசாரிக்க வந்தார்கள். மற்றவர்கள் சம்பிரதாயமாக அழுகையெல்லாம் இல்லாமல் வாய் வார்த்தையில், "சிற்றப்பா காலமாகி விட்டாரே தம்பி!" என்று தொடங்கி விசாரித்தார்கள். விசாரித்தவர்களை விட விசாரித்தோமென்று பேர் பண்ணியவர்கள் தான் அதிகம்.

'கணித பாடத்தில் சரியான விடை வந்தாலும் வழி எழுதாத கணக்குத் தப்புக்குச் சமம்தான். செல்வமும் செல்வாக்கும் அறவழியில் ஈட்டப்படாமல் வேறு வழியில் குவிக்கப்பட்டிருந்தால் வழி எழுதாத கணக்கைப் போல் அவை மதிப்பிழந்து நிற்கின்றது' என்பதை அன்று அங்கே சிற்றப்பாவின் ஈமச் சடங்கிலே கண்டான் அரவிந்தன். உள்ளூரில் நல்லவர்கள் யாரும் மயானம் வரை கூட உடன் வரவில்லை. தன்னைப் பற்றிக் கூடச் சிலர் ஊரில் கேவலமாகப் பேசிக் கொண்டதாக அரவிந்தன் காதுக்குத் தகவல் வந்தது. நேரிலும் கேள்விப்பட்டான். "பணம் அல்லவா பேசுகிறது. இந்தப் பையன் அரவிந்தனுக்காகவா இத்தனை பாடுபட்டுச் சேர்த்து வைத்தான் கருமிப்பயல்" என்று அவன் காதுபடவே ஒருவர் சொன்னார். அவருக்குத் தாயாதிப் பொறாமை.

"என்னவோ விரோதம்! அவன் கொள்ளி போட வரமாட்டான் என்றீரே. சொத்து ஐயா! சொத்து! நாய் மாதிரி ஓடி வந்திருக்கிறான் பாரும்" என்று வேறு ஒருவர் பேசியது காதில் விழுந்த போது அரவிந்தனுக்கும் மனம் புண்பட்டது. 'தன்னைப் பற்றி இவ்வளவு சர்வ சாதாரணமாக மதிப்பிடுகிறார்களே அவர்கள்' என்று தான், அவன் வருந்தினான். கேதத்துக்கு (அந்திமக்கிரியை) மதுரையிலிருந்து இரண்டொரு உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் மதுரை நகரின் அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ளவர். வயது முதிர்ந்தவர். நீண்ட நாட்கள் அனுபவசாலி. ஈமச் சடங்கு முடிந்து மயானத்திலிருந்து திரும்பி வரும்போது அவர் கூறிய செய்தி அரவிந்தனைத் திகைப்பில் ஆழ்த்தி விட்டது. அவன் பரம ரகசியம் என்று நினைத்துக் கொண்டிருந்த செய்தியை எல்லோருக்கும் நடுவில் அவர் வெளிப்படையாக விசாரித்தார்.

"என்னப்பா தம்பி, உன் முதலாளி அந்தப் பெண் பூரணியைத் தேர்தலில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்கிறாராமே? உனக்குத் தெரிந்திருக்குமே?"

அவருடைய கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று அரவிந்தன் தயங்கியபோது அவரே மேலும் கூறினார். அவர் வாயிலாக முக்கியமான தொரு செய்தி வெளிவந்தது.

 

"மீனாட்சிசுந்தரம் இதில் எல்லாம் கெட்டிக்காரர் தான் அப்பா. விவரம் தெரிந்துதான் செய்வார். ஆனால் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். எதற்கும் அவர் காதில் போட்டு வை. அந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. புதுமண்டபத்தில் ஒரு புத்தகக் கடைக்காரன் இருக்கிறான். முரடன், எதற்கும் துணிந்தவன், அவனே நிற்கப் போவதாகக் கேள்வி" என்று அவர் கூறிக் கொண்டே வந்த போது அரவிந்தன் குறுக்கே மறித்து, "யார் தாத்தா அந்தப் புத்தகக் கடைக்காரர்?" என்று கேட்டான். அவன் சந்தேகம் சரியாயிருந்தது. அவர்களுக்கு விரோதியான அந்த ஆளின் பெயரைத்தான் கிழவர் கூறினார். 'அவன் மிகவும் மும்முரமாகத் தேர்தலில் இறங்கி இருப்பதாகவும்' அவர் கூறினார். அப்போதே புறப்பட்டுப் போய்க் கோடைக்கானலில் அவர்களுக்கு இச்செய்தியை அறிவித்து விட வேண்டும் போல் அரவிந்தனுக்குத் துடிப்பு உண்டாயிற்று.

 

22

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தேன்

வீடுதோ றிரந்து பசியறாது அயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோரென்

நேருறக் கண்டுளந் துடித்தேன்

ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

                                                                                                   -- திருவருட்பா

 

தந்தியில் தெரிவித்திருந்தபடி அரவிந்தன் கோடைக்கானலுக்கு வரமுடியாமல் சொந்தக் கிராமத்துக்குப் போக நேர்ந்த காரணத்தை முதலில் பூரணிக்கு விவரித்தார் மீனாட்சிசுந்தரம். அவன் வராதது அவளுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதை மிக நுணுக்கமாக அவர் புரிந்து கொண்டார். அந்த ஏமாற்றம் வெளியே தெரிந்து விடாமல் அவளும் எவ்வளவோ திறமையாகத்தான் மறைக்க முயன்றாலும் மீனாட்சிசுந்தரம் அதைத் தம் கூர்மையான பார்வையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்ப விட்டுவிடவில்லை. பெண், இரசம் பூசிய கண்ணாடியைப் போன்றவள். தன்னில் படிகிற அல்லது படுகிற எந்த உணர்ச்சிச் சாயல்களையும் அவளால் மறைக்க முடிவதில்லை. மறக்கவோ மறுக்கவோ கூட முடிவதில்லை.

"மதுரையில் மங்களேஸ்வரி அம்மாள், செல்லம், என் தங்கை எல்லோரும் சுகந்தானே? மூத்த தம்பி திருநாவுக்கரசு அச்சகத்தில் ஒழுங்காக வேலை செய்கிறானா? அவரும் ஊரில் இல்லாத சமயத்தில் அச்சகத்தைத் தனியே போட்டு விட்டு வந்திருக்கிறீர்கள்? அப்படி என்ன அவசரம்?" என்று தன் ஏமாற்றத்தை மறைக்க முயன்றவாறே விசாரித்தாள், பூரணி.

"அவசரம்தான்! இல்லாவிட்டால் இப்படி உடனே புறப்பட்டு வருவேனா?" என்று தொடங்கி நீளமான அடிப்படை போட்டுத் தாம் வந்த நோக்கத்தை அவளிடம் தெரிவித்தார் அவர்.

பூரணியின் முகபாவம் மாறியது. நெற்றியில் சிந்தனை நிழல் கவிழ்ந்தது. அவருக்கு ஒரு பதிலும் கூறாமல் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள் அவள். பொறுப்புணர்ச்சியோடு சிந்திக்கிற காலத்தில் இவள் முகத்தில் வருகிற அழகு அப்போது வந்திருந்தது. முருகானந்தமும் மீனாட்சிசுந்தரமும் அவளிடமிருந்து என்ன மறுமொழி வரப்போகிறதோ என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

"ஏதோ தெய்வமே பார்த்து 'இதை நீ செய்' என்று தூண்டின மாதிரித் தற்செயலாக என் மனத்தில் இந்தச் சிந்தனை உண்டாயிற்று அம்மா! அரவிந்தனிடமும் இதோ இந்தப் பையன் முருகானந்தத்திடமும் சொன்னேன். அரவிந்தன் முதலில் ஏதோ தடை சொன்னாலும் பின்பு ஒருவாறு சம்மதித்து விட்டான். முருகானந்தத்துக்கும் முற்றிலும் பிடித்திருக்கிறது என் முடிவு. நீ வேறு விதமாகப் பதில் சொல்லி விடாதே. சாதகமான பதிலைத்தான் உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன்" என்று அவளுடைய சிந்தனை தம் கருத்துக்கு எதிர் வழியில் மாறி விடாதபடி அரண் செய்து கொள்ள முயன்றார் மீனாட்சிசுந்தரம்.

பூரணி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்து மெல்ல நகைத்தாள். நகையில் வினாப் பொருள் நிறைந்திருந்தது. "என்னை இந்த மாதிரி வம்பில் மாட்டி வைக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது?"

"இதில் வம்பு என்னம்மா இருக்கிறது? உனக்குத்தான் அரசியலில் ஈடுபடத் தகுதியில்லையா? அல்லது அரசியல்தான் உன்னை ஏற்றுக் கொள்ளத் தகுதியற்றதா? இதன் மூலம் புகழும், முன்னேற்றமும் அடைய வேண்டியவள் தானே நீ!"

இதைக் கேட்டு மீண்டும் பூரணியின் இதழ் ஓரத்தில் நகை பூத்தது. உள்ளே கனிவு உண்டாகிற காலத்தில் பழங்களின் மேற்புறத்தில் மின்னுமே ஒருவகை வனப்பு, அதைப் போல சிந்தனைக் கனிவு அவள் முகத்தை அற்புதமாக்கியிருந்தது. எந்நேரமும் எங்கோ எதையோ, யாரிடமிருந்தோ தேடிக் கொண்டே இருப்பது போன்ற அவளுடைய அழகிய கண்களிலும் உள்ளத்தின் சிந்தனைக் கனிவு ஊடுருவித் தெரிந்தது. புதிய புதிய அனுபவங்கள் ஏற்படும் போது வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று பெரிதாகிக் கொண்டு வருகிறது. 'இன்னும் மேலே போக வேண்டும், இன்னும் மேலே போகவேண்டும்' என்பது போல் மேலே போகிற வெறி பேய்த்தனமாகப் பற்றிக் கொள்கிறது. அந்த வெறிக்கு ஆளாகிவிடாமல் விலகித் தப்பித்துக் கொள்ள வேண்டிய இடத்தில்தான் அப்போது நிற்பதாகத் தோன்றுகிறது பூரணிக்கு. 'நீ தப்பித்துக் கொள்ள வேண்டாம். அதில் ஈடுபட்டு விடு' என்று மாட்டிவிடப் பார்க்கிறார் மீனாட்சிசுந்தரம். 'மாட்டிக் கொண்டு விடாதே! தப்பித்துக் கொள்' என்றது அவள் உள்ளுணர்வு. இரண்டில் எதைச் செய்வது? எதைச் செய்யாமல் இருப்பது?

"அக்கா! இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் என்ன இருக்கிறது? நீங்கள் இந்த வழியில் வெற்றி பெற்று முன்னேறினால் ஏழைகளும் அனாதைகளும் நிறைந்துள்ள இந்த நாட்டுக்கு எவ்வளவோ தொண்டுகள் செய்யலாம்" என்று மீனாட்சிசுந்தரத்துக்கு ஆதரவு தரும் முறையில் அவளை நோக்கிக் கூறினான் முருகானந்தம்.

அவனுக்கு அவள் பதில் சொல்லவில்லை. மேலும் சிந்தித்தாள். அப்பா இறந்து போவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இப்போது அவளுக்கு நினைவு வந்தது. எவ்வளவு பெரிய வாய்ப்பாயிருந்தாலும் அது தன் மனத்துக்கு ஏற்காவிட்டால் அதைத் துணிந்து இழந்துவிடும் தன்மை அப்பாவுக்கு உண்டு. நெஞ்சின் உரம்தான் அவருடைய வாழ்க்கையில் அவர் சேர்த்திருந்த பெரிய செல்வம். எந்த வியாபாரியின் பண உதவியை அப்பாவின் மரணத்திற்குப் பின்பும் அவள் ஏற்றுக் கொள்வதற்குக் கூசி 'செக்'கைத் திருப்பி அனுப்பினாளோ, அந்த வியாபாரியைத் தம் வாழ்நாளிலேயே துச்சமாக மதித்து வந்தார் அப்பா. 'அப்பாதான் செத்துப் போய்விட்டார், அப்பாவின் தன்மானம் இன்னும் இங்கே சாகவில்லை' என்று இறுமாப்போடு எழுதி அந்தப் பண உதவியை மறுத்துத் திருப்பி அனுப்பி வைத்தாள் அவள். இறந்து போவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் அப்பாவை அரசியல் துறையில் ஈடுபடுமாறு வேண்டிக் கொண்டு தாமே பணம் உதவி செய்ய முன்வந்தார் அந்த வியாபாரி. அப்போது அவருக்கு அப்பா கூறியனுப்பிய மறுமொழி பூரணிக்கு இன்னும் நினைவிலிருந்தது.

"நான் உங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன் என்பதற்காக நீங்கள் எனக்குப் பிழைக்க வழி சொல்லிக் கொடுக்கிறீர்களா? நாளை முதல் தமிழ்ப் படிப்பதற்கு மட்டும் நீங்கள் இங்கு வந்தால் போதும், எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க வேண்டாம்" என்று சொற்களில் கடுமையும் முகத்தில் சிரிப்புமாகப் பதில் சொல்லிவிட்டார் அப்பா. அதைக் கேட்டு அந்த வியாபாரி மேலும் கூறினார். "நான் சொல்வதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். இவ்வளவு படித்திருக்கிற நீங்கள் வாழ்க்கையிலும் அதற்கேற்ற வசதிகளையும், சௌகரியங்களையும் அடைய வேண்டுமென்றுதான் இந்த வழியைக் கூறினேன்."

 

"ஒரு சௌகரியமும் ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாமே சௌகரியமாகவும் வசதியாகவும் தான் இருக்கும். 'யாவை யாதும் இல்லார்க்கு இயையாதவே' என்று என்னைப் போன்றவர்களுக்காகச் சொன்னது போல் கம்பன் சொல்லி வைத்திருக்கிறான். ஐயா நான் ஒதுங்கி வாழ ஆசைப்படுகிறவன். நல்லவனாகவே வாழ்ந்து விட நினைக்கிறவன். நீங்கள் சொல்லுகிறது போல் முன்னேற்றம் பெற வல்லவனாக இருக்க வேண்டும். என்னைப் போல் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. இனி என்னிடம் இந்தப் பேச்சை எடுக்காதீர்கள்" என்று வன்மையாகச் சொல்லி மறுத்தார் அப்பா. சிறுசிறு கிளைகளையும், சுவடுகளையும் உதிர்த்துவிட்டு மேல்நோக்கி நெடிதாய் வளரும் சாதித் தேக்கு மரம் போல் சில்லரை ஆசைகளை உதிர்த்து விட்டு உயர்ந்த குறிக்கோள்களினால் உயர்ந்து நின்றவர் அப்பா. அவரைப் பற்றி நினைக்கிறபோதே தன் உள்ளம் சுத்தமாகி விட்டதைப் பூரணி உணர்ந்தாள். கல்லூரி வகுப்பறையில் சொற்பொழிவுகளுக்கான பொதுமேடையில், வீட்டில், படிப்பறையில், எங்கே நின்றாலும், எங்கே இருந்தாலும், தம்மைச் சூழ்ந்து கொண்டு தூய்மையும் ஒழுக்கமும் கொலுவிருப்பது போலத் தோற்றமளித்தார் அப்பா. மனோரஞ்சிதம் தான் பூத்திருக்கிற இடத்தில் நாற்புறமும் நெடுந்தொலைவுக்கு மணப்பது போல் தம்மையும் தம்முடைய சூழ்நிலையையும் காண்கிறவர்கள் மனத்தில் கூட மணப்பவர் அவர்.

அப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சிசுந்தரத்தையும், முருகானந்தத்தையும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி.

"நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள சூழ்நிலையில் கேட்கவே வேண்டாம். அறிவு தோற்று உணர்ச்சிகள் வெல்லும் காலம் இது. பண்பு தோற்றுப் பரபரப்பு வெல்லுகிற காலம், அன்பு தோற்று ஆசைகள் வெல்லுகிற காலம், நிதானம் தோற்று வேகம் வெல்லுகிற காலம். இந்தக் காலத்தில் அரசியல் வாழ்க்கையில் எதிர்நீச்சுப் போட என்னைத் தூண்டுகிறீர்கள் நீங்கள்."

"உன்னால் முடியும் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு தான் தூண்டுகிறேன், அம்மா! அரவிந்தனுக்கும் உனக்கும் ஒரே மனப்பாங்குதான் போலிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை அவனிடம் தெரிவித்தபோது ஏறக்குறைய நீ இப்போது கூறிய தடைகளைத்தான் அவனும் சொன்னான். ஆனால் நான் கூறிய சமாதானங்களைக் கேட்டுவிட்டு என் தீர்மானத்தை ஒருவாறு ஒப்புக் கொண்டான். உன்னையும் ஒப்புக் கொள்ள வைப்பதாகச் சொன்னான். சிற்றப்பாவின் காரியங்களுக்காக அவன் கிராமத்துக்குப் போகும்படி நேரிட்டிருக்காவிட்டால் அவனே இங்கு வந்து உன்னைச் சம்மதிக்கச் செய்திருப்பான். அவன் வந்திருந்தால் என்னுடைய வேலை சுலபமாகியிருக்கும். உனக்கு இத்தனை சிரமப்பட்டு நானே விளக்கம் சொல்ல வேண்டியிராது. அவன் பாடு, உன் பாடு என்று விட்டிருப்பேன்."

வைரம் பாய்ந்த மரத்தில் ஸ்குரு ஆணி இறக்குகிற மாதிரி மீனாட்சிசுந்தரம் அவள் மனத்தில் தம் கருத்தைப் பதித்துவிட முயன்றார். இலங்கை, மலாயா முதலிய இடங்களிலிருந்து சொற்பொழிவுக்கு அழைப்பு வந்திருப்பதைப் பற்றி பூரணி அவரிடம் கூறினாள். அவர் கேட்டதைப் பற்றி ஒரு முடிவும் சொல்லவில்லை. "உன் பேரில் அபேட்சை மனுத் தாக்கல் செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். திருவேடகத்துக்குப் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்ததில் நல்ல பூவே கிடைத்திருக்கிறது. நீ என்னைக் கைவிட்டு விடாதே அம்மா!" என்று சுற்றிச் சுற்றித் தம் வேண்டுகோளையே வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவள் பிடிகொடுத்துப் பேசவில்லை.

"நீ இலங்கை, மலாயா எல்லா இடங்களுக்கும் போய்ப் புகழ்பெற்று வா, அம்மா! அதனால் எங்களுக்கெல்லாம் பெருமைதான். அவற்றோடு இந்தப் பெருமையையும் நாங்களாகப் பார்த்து உனக்கு அளிக்கிறோம். மறுக்காமல் ஏற்றுக் கொள். இதில் வெற்றி பெற உன்னால் முடியும். வெற்றி பெற்றால் இதனால் நீயும் உயர்வு அடையலாம். நாடும் உயர்வு பெறும்" என்றார்.

"பார்க்கலாம்! எனக்குச் சிந்திக்க நேரம் கொடுத்தால் நல்லது. 'வந்தோம், உடனே கேட்டுச் சம்மதம் பெற்றவுடன் திரும்பலா'மென்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. இரண்டு, மூன்று நாட்கள் இருந்துதான் போகவேண்டும் நீங்கள். கோடைக்கானல் மூன்று தினங்கள் தங்குவதற்குக் கூடத் தகுதியில்லாத ஊரா, என்ன?" என்று கேட்டாள் பூரணி.

"இரண்டு, மூன்றுநாள் தங்குவது பற்றி எனக்கு ஒன்றும் மறுப்பில்லை, அம்மா! நீ விரும்பினால் இதுபற்றிப் பேச அரவிந்தனையும் வரவழைக்கிறேன். உன்னுடைய தயக்கத்திற்குக் காரணமே அவன் இல்லாமல் முடிவு செய்யலாகாது என்பதுதான் என்று எனக்குப் புரிகிறது பெண்ணே!"

அவர் இவ்வாறு கூறியதும் அவளுடைய முகத்தில் நுண்ணிய அளவில் நாணம் பரவிற்று. தலை சற்றே தாழ்ந்தது. இதழ்களும் கண்களும் மோன மென்னகை புரிந்தன. அவர் அவளை அப்போது நன்றாகக் கவனித்தார்.

தம்முடைய செல்வாக்கைவிட, செல்வத்தை விட ஏதோ ஒரு பெரிய அற்புதத்தால் மாயம் செய்து அவளுடைய உள்ளத்தை அரவிந்தன் ஆண்டு கொண்டிருப்பதை மீனாட்சிசுந்தரம் அந்தக் கணத்தில் மிக நன்றாகப் புரிந்து கொண்டார். 'சாதாரணமாக ஒரு பெண்ணின் உள்ளத்தை ஆள்வதற்கே ஆற்றல் வேண்டும். இவளைப் போன்ற அபூர்வமான பெண்ணின் இதயத்தையும் ஆள்கிற அளவுக்கு நம் அரவிந்தனுக்கு ஏதோ பெரிய கவர்ச்சியிருக்கிறது. அது முகத்தின் கவர்ச்சி மட்டுமன்று; முகத்தில், பேச்சில், பழக்க வழக்கங்களில் எல்லாவற்றிலும் சேர்ந்து ஏதோ ஒரு பெரிய மாயம் வைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்தன்' என்று எண்ணினார். அப்படி எண்ணியபோதுதான் அவன் அவருடைய உள்ளத்திலும் மிகப் பெரியவனாக உயர்ந்து தோன்றினான். பல ஆண்டுகளுக்கு முன் 'எங்கிருந்தோ வந்தான்' என்பது போலப் போட்டுக் கொள்ள மறுசட்டையின்றி அனாதை இளைஞனாகத் தம்மிடம் வேலைக்கு வந்த பழைய அரவிந்தனையும், தன்னையும் வளர்த்துக் கொண்டு, அவருடைய அச்சகத்தைய்ம் வளர்த்து விட்டிருக்கும் இப்போதைய அரவிந்தனையும் ஒரு கணம் தம் மனத்தில் ஒப்பிட்டுப் பார்த்தார் மீனாட்சிசுந்தரம். நெடுந்தொலைவில் நெடுநாட்களாகப் பிரிந்து போய்விட்ட தம் மூத்த பிள்ளையான ஒருவனைப் பற்றி நினைப்பது போல் பாசம் பொங்கிற்று அவர் மனத்தில்.

"உன் அந்தரங்கம் எனக்குப் புரிகிறது பூரணி. ஒரு நடை வந்துவிட்டுப் போகச் சொல்லி அரவிந்தனுக்குத் தந்தி கொடுக்கிறேன் அம்மா!" என்றார் அவர்.

"சிற்றப்பாவின் காரியங்கள் முடிவதற்கு முன் அங்கிருந்து அவர் புறப்பட்டு வர முடியுமோ, முடியாதோ? தந்தி கொடுத்தால் என்ன நினைப்பாரோ?" என்று சந்தேகம் தெரிவித்தாள் அவள்.

"அப்படியில்லை, அம்மா? தந்தி கொடுத்தால் அவன் நிச்சயம் புறப்பட்டு வருவான். இன்று மரணச் சடங்கு முடிந்திருக்கும். நாளைக் காலையில் மயானத்துக்கும் போய்ப் 'பாலூற்றலை' முடித்தால் அப்புறம் பதினோறாவது நாள் கருமாதிக் காரியங்களுக்குத்தான் அவன் போக வேண்டியிருக்கும். நான் தந்தி கொடுக்கிறேன்" என்று பூரணியிடம் கூறிவிட்டு முருகானந்தம் உட்கார்ந்திருந்த பக்கமாகத் திரும்பினார் மீனாட்சிசுந்தரம். அவன் அங்கே இல்லை. உட்கார்ந்திருந்த நாற்காலி வெறுமையாக இருந்தது.

"இந்தப் பிள்ளை எங்கே போனான்? தபால் ஆபீசுக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டு வரச் சொல்லலாமென்று பார்த்தேன்! பரவாயில்லை, நானே காரை எடுத்துக் கொண்டு போய்விட்டு வந்து விடுகிறேன்" என்று எழுந்திருந்தார் மீனாட்சிசுந்தரம்.

"வேண்டாம்! சிறிது நேரத்துக்கு முன்புதான் இங்கே தோட்டத்துப் பக்கமாகச் சுற்றிப் பார்க்க எழுந்து போனதைப் பார்த்தேன். இதோ கூப்பிடுகிறேன். அவரே போய் வரட்டும்! உங்களுக்கு எதற்குச் சிரமம்?" என்று பூரணி எழுந்திருந்து தோட்டத்துப் பக்கம் போனாள். தோட்டத்தில் ஒருவரும் இல்லை. வீட்டுக்குள் வந்து வசந்தாவை அவளுடைய அறையில் தேடினாள். அவளையும் காணவில்லை. பூரணி சமையற்கார அம்மாளிடம் கேட்டாள்.

"இங்கேதான் இருந்தாள்! அந்தப் பெரியவரோடு வந்திருந்த பிள்ளைக்கு தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தாளே! தோட்டத்தில் தான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நன்றாகப் பாருங்கள்" என்றாள் சமையற்கார அம்மாள். மறுபடியும் தோட்டத்துக்குப் போய் நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள் பூரணி. அங்கிருந்து மேடான ஓர் இடத்திலிருந்து பார்த்தால் ஏரி மிக அருகில் நன்றாகத் தெரியும். பூரணி ஏரியில் பார்த்தபோது முருகானந்தமும் வசந்தாவும் படகில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. பூரணி தனக்குள் சிரித்துக் கொண்டு திரும்பிவிட்டாள்.

"நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா!" என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய முடிந்தது. 'இந்த உறவை மங்களேஸ்வரி அம்மாள் எப்படி வரவேற்பார்கள்?' என்ற கவலையில் மூழ்கிற்று அவள் மனம். 'முருகானந்தம் தங்கமான பிள்ளைதான். ஆனால் செல்வக் குவியலின் மேல் வாழும் வசந்தாவின் குடும்பமும், முருகானந்தத்தின் ஏழைக் குடும்பமும் எப்படி ஒட்டுறவுப் பெற முடியும்?' என்று தயங்கிற்று பூரணியின் மனம். கதைகளில் நம்ப முடியாதது போலப் படிக்க நேர்கிற நிகழ்ச்சி ஒன்றைத் திடீரென்று வாழ்க்கையில் கண்ணெதிரே சந்தித்து விட்டாற் போலிருந்தது பூரணிக்கு. மனங்கள் நெகிழ்ந்து ஒன்று சேர்வதே ஒருவகையில் தற்செயலாகவும் விரைவாகவும் நிகழ்கிற நிகழ்ச்சியாகப்பட்டது அவளுக்கு. முதல்நாள் காலையில் தன்னுடைய உள்ளத்தில் தவிர்க்க முடியாத வகையில் அரவிந்தனைப் பற்றிய நினைவுகள் உண்டானதையும் எண்ணினாள். 'பெண்கள் மிக விரைவாக மனம் நெகிழ்ந்து விடுவது அவர்கள் குற்றமில்லை, நெகிழ்வதற்கென்றே நீ எங்களைப் போன்ற மெல்லியவர்களின் மனங்களைப் படைத்திருக்கிறாய், இறைவா! அல்லது நெகிழச் செய்வதை இயல்பாகப் படைத்திருக்கிறாய்!' என்று நினைத்தாள் அவள். பத்து நிமிடங்களில் தந்தி கொடுத்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டார் மீனாட்சிசுந்தரம்.

எல்லோருமாகச் சேர்ந்து சாப்பிட உட்காரலாமென்று வசந்தாவையும், முருகானந்தத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் பூரணி. சிறிதுநேரத்தில் சிரிப்பும் கும்மாளமுமாகப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

"இவர் இதற்கு முன்னால் கோடைக்கானலுக்கு வந்ததில்லையாம் அக்கா! அழைத்துக் கொண்டு போய் எல்லாம் சுற்றிக் காண்பித்தேன். சாயங்காலம் 'பில்லர் ராக்ஸ்' மலைப்பகுதிக்குப் போகத் திட்டம் போட்டிருக்கிறோம்" என்றாள் வசந்தா.

"ஆகா! தாராளமாகப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள். என்னை மட்டும் கூப்பிடாதீர்கள். எனக்கு வர ஒழிவு இருக்காது. புத்தகங்கள் படிக்க வேண்டும்" என்று கூறிவிட்டு மெல்லச் சிரித்தாள் பூரணி. முருகானந்தத்தின் முகத்தில் மிக மென்மையானதும் நுணுக்கம் நிறைந்ததுமான புதிய அழகு ஒன்று வந்து பொருந்தியிருப்பதைப் பூரணி கூர்ந்து பார்த்து உணர்ந்தாள். ஓர் இளம் பெண்ணின் உள்ளத்தை வெற்றி கொண்டு விட்டோம் என்ற பெருமையில் ஆண் பிள்ளைக்கு உண்டாகிற இன்பமயமான கர்வத்தின் அழகா அது? பகல் உணவு முடிந்ததும் கோடைக்கானலுக்கு அருகில் பட்டி வீரன் பட்டியில் தமக்கு நெருங்கிய நண்பராகிய காப்பித் தோட்ட முதலாளி ஒருவர் இருப்பதாகவும், போய் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு மாலை ஏழு மணிக்குத் திரும்பி விடுவதாகவும் கூறிவிட்டு மீனாட்சிசுந்தரம் காரில் புறப்பட்டுப் போய்விட்டார். பூரணி புத்தகத்தில் மூழ்கி இருந்தாள்.

மாலை மூன்றரை மணிக்கு வசந்தாவும், முருகானந்தமும் அவளிடம் வந்து சொல்லிக் கொண்டு சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். வசந்தா அத்தனை அழகாக அலங்காரம் செய்து கொண்டு பூரணி இதற்கு முன்பு பார்த்ததில்லை. முருகானந்தம் தனது முன் நெற்றியில் வந்து அடங்காப்பிடாரி போல் சுருண்டிருக்கிற தலை மயிரை அன்று வெளியே புறப்படுகிறபோது அழகாக வாரி விட்டுக் கொண்டிருந்த அதிசயத்தையும் பூரணி கவனித்தாள். 'காதல் என்னும் உணர்வுக்கு இத்தனை தூரம் மனிதர்களைக் குழந்தைத்தனம் நிறைந்தவர்களாக்கி விடுகிற சக்தியும் உண்டோ?' என்று எண்ணி வியந்தாள் அவள். 'இந்தக் குழந்தைகளின் இந்தப் பிள்ளைத்தனமான அன்பை, ஏழ்மை ஏற்றத்தாழ்வுகள் இடையே புகுந்து கெடுத்து விடக்கூடாதே' என்ற ஏக்கமும் உண்டாயிற்று பூரணிக்கு. பங்களா வாசலில் இறங்கி, பட்டுப் பூச்சிகள் பறந்து போவதைப் போல் அவர்கள் போவதைப் பார்த்து மனம் மலர்ந்தாள் பூரணி. நியாயமான காதல் உணர்வு என்பது உலகத்துக்கே அழகு உண்டாக்குகிற ஒரு புனிதசக்தி என்று அந்தச் சமயத்தில் அவளுக்குத் தோன்றிற்று. படிப்பு, பண்பு, புகழ், உலகம் மதிக்கிற பெருமை எல்லாமாக ஒன்று சேர்ந்து எந்த ஓர் அன்பு விளையாட்டைத் தானும் அரவிந்தனும் விளையாட முடியாமல் செய்திருந்தனவோ, அந்த விளையாட்டை முருகானந்தமும் வசந்தாவும் கண் காண விளையாடத் தொடங்கி விட்டதைப் பூரணி உணர்ந்தாள்.

மீனாட்சிசுந்தரம் கோடைக்கானலிலிருந்து கொடுத்த தந்தி அன்று இரவு பத்து மணி சுமாருக்கு அரவிந்தனுக்குக் கிராமத்தில் கிடைத்தது. மூன்று கல் தொலைவுக்கு அப்பால் தான் தந்தி நிலையம் இருந்தது. தந்தி அங்கே வந்து, அங்கிருந்து சைக்கிளில் ஆள் கொண்டு வந்து தர வேண்டும், அரவிந்தனுடைய கிராமத்துக்கு. எனவே மெல்லவும் தாமதமாகவும் அந்தத் தந்தி வந்தது அவனுக்கு வியப்பை உண்டாக்கவில்லை.

'நீ அருகில் இல்லாமல் இவளைச் சம்மதிக்கச் செய்ய முடியாது போலிருக்கிறது. ஒரு நடை வந்து விட்டுப் போ' என்ற கருத்துத் தோன்ற அமைந்திருந்தது தந்தி வாசகம். 'நான் அருகில் இல்லாமல் என்னைக் கலந்து கொள்ளாமல் அவள் அவருக்குச் சம்மதம் தரவில்லை' என்று உணர்ந்தபோது அவனுக்குக் களிப்புத்தான் உண்டாயிற்று. அவள் அப்படித் தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்றுதானே அவனுடைய அந்தரங்கத்தின் ஆவல் துடித்தது! அந்தத் தந்தி வராவிட்டாலும் மறுநாள் காலை மயானத்தில் 'பால்தெளி' முடிந்ததும் அவனே மதுரை போய் அங்கிருந்து கோடைக்கானல் போக வேண்டுமென்று தான் எண்ணியிருந்தான். பூரணியை மீனாட்சிசுந்தரம் எந்தத் தொகுதியில் தேர்தலுக்கு நிறுத்த இருக்கிறாரோ அதே தொகுதியில் தான் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரரும் நிற்கப் போகிறார் என்று மதுரை உறவினர் தெரிவித்த போது அரவிந்தன் கோடைக்கானல் போய் அந்தத் தகவலைத் தெரிவித்துவிட வேண்டுமென்று உறுதி செய்து கொண்டுவிட்டான்.

'பால் தெளி' முடிந்த அன்று பகலில் அரவிந்தன் மதுரை புறப்பட்ட போது கேதத்துக்கு வந்திருந்த அரசியல் பிரமுகரும் அவனோடு மதுரை வந்தார். முதல்நாள் ஈமச்சடங்கு முடிந்து திரும்பிய போது, 'பூரணி நிற்கப் போகிற தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும்' என்று அவனிடம் கூறியவர் அவர் தான். அரவிந்தன் அவரை மிகவும் நல்லவரென எண்ணியிருந்தான். ஆனால் கிராமத்திலிருந்து மதுரை திரும்பியதும் அவனைத் தமது வீட்டுக்கு அழைத்துப் போய்ச் சுய உருவத்தைக் காட்டினார் அவர். அரவிந்தன் திகைத்துப் போனான். அத்தனை பயங்கரமும் அரசியலில் இருக்குமோ? ஐயோ அரசியலே!

'வாடிய பயி

ரைக் கண்டால் நான் வாடினேன். பசித்தவனைக் கண்ட போதெல்லாம் நோயை உணர்ந்தேன். ஏழைகளையும் இளைத்தவர்களையும் கண்டபோது நானே ஏழையாய் இளைத்தேன்!' என்று இராமலிங்க வள்ளலார் பாடிய பாட்டின் கருத்துத்தான் இந்த நாட்டில் ஒரு அரசியல் தொண்டனின் இலட்சியமாக இருக்க வேண்டுமென அவன் எண்ணியதுண்டு. ஆனால் அவனுடைய சத்தியத்தை ஐயாயிரம் ரூபாய் விலைக்கு ஏலம் கூறி விற்கப் பார்த்தார் அந்த முதிய அரசியல்வாதி. அவன் மருண்டான். இப்படி அனுபவம் இதற்குமுன் அவனுக்கு ஏற்பட்டதில்லையே?

 

23

 

கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து - இங்கு

உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?

                                                                                                                       -- சித்தர் பாடல்

 

ஒரே கரும்பின் ஒரு பகுதி இனிப்பாகவும் மற்றொரு பகுதி உப்பாகவும் இருக்கிற மாதிரி மனிதனுக்குள் நல்லதும் கெட்டதும் ஆகிய பல்வேறு சுவைகளும், வெவ்வேறு உணர்ச்சிகளும் கலந்து இணைந்திருக்கின்றன. எல்லா கணுக்களுமே உப்பாக இருக்கிற ஒருவகைக் கரும்பு உண்டு. அதற்குப் 'பேய்க்கரும்பு' என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்குக் கரும்பு போலவே தோற்றம் இருக்கும். ஆனால் கரும்பின் இனிமைச் சுவைதான் இராது. பெரிய மனிதர்களைப் போல் தோன்றிக் கொண்டு பெருந்தன்மை சிறிதுமில்லாத கயவர்களாய்க் கொடியவர்களாய் வாழும் மனிதர்கள் சிலர் நல்ல அரிசியில் கல்போல் சமூகத்தில் கலந்திருக்கிறார்கள். இவர்கள் வெளித் தோற்றத்துக்குக் கரும்பு போல் தோன்றினாலும் உண்மையில் சுவை வேறுபடும் பேய்க் கரும்பு போன்றவர்கள் தான்.

கிராமத்திலிருந்து தன்னோடு மதுரைக்கு வந்த அந்தப் பெரிய மனிதரின் சுய உருவம் புரிந்த போது அரவிந்தனுக்கு உள்ளம் கொதித்தது. உள்ளக் கருத்து ஒன்றும் கள்ளக் கருத்து ஒன்றுமாக வாழ்ந்து ஏமாற்றிப் பிழைக்கும் இத்தகைய கொடியவர்களை உலகம் உணர்ந்து கருவறுக்கும் காலம் என்று வரப் போகிறதென்று குமுறினான் அவன். அந்த ஆளை முதலிலேயே சரியாகப் புரிந்து கொள்ளாமல் போனதற்காகத் தன்னை நொந்து கொண்டான். புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்குப் போதாது. மனிதர்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் தான் இந்தக் காலத்துச் சமுதாய வாழ்வில் வெற்றி பெறுவதற்குச் சரியான கருவியாக இருக்கிறது. காரணம்? ஒவ்வொரு மனிதனும் குழப்பங்கள் நிறைந்த ஒரு புத்தகமாக இருக்கிறான். படித்துப் புரிந்து கொள்வது அருமையாக இருக்கிறது.

அரவிந்தனும் அந்த முதியவரும் மதுரையை அடைந்தபோது மாலை மூன்றரை மணி இருக்கும். கிராமத்திலிருந்து புறப்படும் போது இரயிலில் மூன்றாம் வகுப்புக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டிருந்தான் அரவிந்தன். அவர் முதல் வகுப்புக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அவனையும் முதல் வகுப்புக்கு வரச் சொல்லி வற்புறுத்தினார்.

"சீ! சீ! பட்டிக்காட்டுக் கும்பல் புளிமூட்டை மாதிரி அடைந்து கிடக்குமே மூன்றாம் வகுப்புப் பெட்டியில்? நிற்கக் கூட இடம் இருக்காது. அந்த டிக்கெட்டை இப்படிக் கொடு. திருப்பிக் கொடுத்துவிட்டு முதல் வகுப்பாக மாற்றிக் கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து பேசிக் கொண்டே போகலாம்" என்றார்.

"அதனால் என்ன பரவாயில்லை, எனக்கு முதல் வகுப்பில் பயணம் செய்து பழக்கம் கிடையாது. நீங்கள் முதல் வகுப்பில் வாருங்கள். நான் மூன்றாம் வகுப்பிலே வருகிறேன். மதுரையில் இறங்கினதும் சந்திப்போம்" என்று அவரை மறுத்துவிட்டு விலகிச் செல்ல முயன்றான் அரவிந்தன். அவர் விடவில்லை.

"பழக்கம் இல்லையாவது, ஒன்றாவது தம்பி! புதுச் சொத்து எல்லாம் வந்திருக்கிறது, பணக்காரனாயிருக்கிறாய். ஸ்டேட்டஸ் (கௌரவம்) குறைகிறாற் போல் நடந்து கொள்ளலாமா? இந்தக் காலத்தில் புகழும் கௌரவமும் சும்மா வந்து விடாது. பணத்தை முதலீடாக வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் சம்பாதிக்க வேண்டும் அப்பனே!" ஒரு தினுசாகச் சிரித்தவாறே கண்களைச் சிமிட்டிக் கொண்டே, அவனை நோக்கி இப்படிச் சொன்னார் அவர்.

 

அவருடைய இந்தச் சொற்கள் அரவிந்தனின் செவியில் கீழ்மைப் பண்பின் ஒரே குரலாக ஒலித்தன. 'இத்தனை வயதான மனிதர் இவ்வளவு அனுபவங்களும் பெற்று முதிர்ந்த நிலையில் பேசுகிற பேச்சா இது? வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக முடிவு செய்திருக்கிறார். பல பேருக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஒரு மனிதர் இப்படியா பேசுவது?' என்று வருந்தினான் அரவிந்தன். செல்வத்தை முதலீடாக வைத்துக் கொண்டு போலியான வழியில் புகழும், கௌரவமும் ஈட்ட முடிகிற காலமாக இது இருந்த போதிலும், அவரைப் போன்ற பொறுப்புள்ள ஒருவர், அதைப் பொன்மொழி போல் எடுத்துத் திருவாய் மலர்ந்தருளியது தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த மனிதர் மேல் அவனுடைய மனம் கொண்டிருந்த மதிப்பில் ஒரு பகுதி குறைந்துவிட்டது. ஆனாலும் அவர் அவனை மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய விடவில்லை. வலுக்கட்டாயமாக அவனது பயணச் சீட்டைப் பறித்துக் கொண்டு போய் முதல் வகுப்பாக மாற்றிக் கொண்டு வந்தார். அவன் மிகக் கண்டிப்போடு மறுக்க முயன்றான். முடியவில்லை. கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் முதல் வகுப்புப் பெட்டியில் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டு விட்டார். வண்டியும் புறப்பட்டு விடவே, அவன் அங்கேயே இருக்க வேண்டியதாகப் போயிற்று. இரயிலின் இருபுறமும் பசுமையான வெற்றிலைக் கொடிக்கால்கள் நகர்ந்தன.

"நான் என்னப்பா செய்வது? பேச்சுத் துணைக்கு வேறு ஆள் இல்லை. தனியாகப் போவதற்கு என்னவோ போலிருக்கிறது. உன் கொள்கையைப் பலாத்காரமாக மாற்றி விட்டேனே என்று என் மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே" என்று சிரித்து மழுப்ப முயன்றார் அந்தக் கிழவர். பதுங்கிப் பம்மிப் பாய வருகிற காலத்தில் வேங்கைப் புலியின் முகத்தில் தோன்றுகிற தந்திரமும் குரூரமும் இணைந்த சாயலைக் கண்டிருந்தால் அந்தக் கிழவரின் முகத்தைக் காண வேண்டிய அவசியமில்லை. அதே சூழ்ச்சிக் களையோடு கூடிய முகம் தான் அவருக்கும் வாய்த்திருந்தது. மதுரையில் அவரோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு அரவிந்தனுக்கு ஏற்பட்டிராவிட்டாலும் அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். சிறுவயதிலிருந்தே ஊர் உறவுகளிலிருந்து விலகி அநாதை வாழ்க்கை வாழ்ந்து விட்டதனால் அவனுக்குத் தன்னூர் ஆட்களிடம் பழக்கமே இல்லை. அதிலும் இப்போது முதல் வகுப்பில் அவனோடு வந்து கொண்டிருக்கிற இந்த மனிதர் சிறுவயதிலேயே ஊரைவிட்டு, நாட்டை விட்டு பர்மாவுக்குப் போய் வட்டிக்கடை வைத்துப் பணம் திரட்டிக் கொண்டு திரும்பி வந்தவர். திரும்பி வந்தபின் கிராமத்துக்குப் போகாமல் பலவிதமான வாழ்க்கை வசதிகளுக்காக மதுரையிலே பங்களா கட்டிக் கொண்டு குடியேறிவிட்டார். அவருடைய சொந்தப் பெயரைச் சொன்னால் மதுரையில் தெரியாது. 'பர்மாக்காரர்' என்றால் நன்றாகத் தெரியும். வாலிப வயது முடிந்து நடுத்தரப் பருவத்தையும் கடந்து முதுமையை எட்டப்போகிற தருணத்தில் விநோதமான விதத்தில் அவர் பர்மாவிலிருந்து திரும்பியிருந்தார்.

 

வட்டிக்கடை வைத்துச் சேர்த்த பணமும் பகட்டும், வாழ்ந்து சோர்ந்திருந்த முதுமையும் மட்டுமின்றி; பச்சைக் கிளிபோல் எழில் கொஞ்சும் பர்மியப் பெண் ஒருத்தியையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தார் அவர். பர்மாவுக்குப் போகும்போது ஒற்றைக் கட்டையாகப் போனவர் அவர். அதற்காக எப்போதும் ஒற்றைக் கட்டையாக இருக்க வேண்டுமா என்ன? சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்குகிற போது எத்தனையோ நினைவுகள் தானாகவும் எளிதாகவும் நிறைவேறிவிடுகின்றன. உள்ளத்தைப் பித்துக் கொள்ளச் செய்யும் வனப்பு வாய்ந்த பர்மியப் பெண்களின் அழகில் மயக்கமும் சபலமும் கொண்டு ஏங்கிய நாட்கள் அவருடைய பர்மா வாழ்வில் அதிகமானவை. கடைசியில் தாயகம் திரும்புவதற்கு முந்தின ஆண்டில் அவருடைய ஆசை நிறைவேறி விட்டது. தம்முடைய வயதில் மூன்றில் ஒரு பங்கு வயது கூட ஆகாத ஒரு பர்மியப் பெண்ணை அவர் மணந்து கொண்டார். அனுமதியும் பெற்றுத் தம்மோடு இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டார். விளையாடுவதற்குப் பிரியமான பொம்மை வாங்கிக் கொண்டு வந்ததுபோல் களிப்புடன் வந்தார் அவர். கொள்ளக் குறையாத செல்வத்தையும் கொள்ளை அழகு கொஞ்சும் மனைவியையும் இட்டுக் கொண்டு மதுரை திரும்பியபின் அவருக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய யோகங்கள் அடித்தன. பொது வாழ்வில் பல நண்பர்களும் சங்கங்களும் சேர்ந்து அவரைப் பெரிதுபடுத்தினர். பிரமுகராக்கினர். செல்வாக்கும் புகழும் அரசியலுக்கு அழைத்தன. அதிலும் நுழைந்து பதவியும் பகட்டுமாக வாழ்ந்தார் 'பர்மாக்காரர்'.

மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச் சுவர் போலப் பெரிய காம்பவுண்டுச் சுவர். இவ்வளவும் சேர்ந்து அதை ஒரு தனி 'எஸ்டேட்' ஆக்கியிருந்தன. அந்தப் பகுதிக்குப் 'பர்மாக்காரர் எஸ்டேட்' என்று பெயரே ஏற்பட்டுவிட்டது. மகள் வயதில் மனைவியும் கை நிறையச் செல்வமுமாக அந்தக் கிழவர் பர்மாவிலிருந்து வந்து இறங்கிய போது பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகவும் கேலியாகவும் இருந்தது உண்மைதான். ஆனால் பணம் என்பது ஒரு பெரிய பக்கபலமாக இருந்து அவரை மதிக்கவும், பெரிய மனிதராக எல்லோரும் அங்கீகரித்துக் கொண்டு போற்றவும் உதவி செய்தது. அதனால் வளர்ந்து வளம் பெற்றிருந்தார் அவர்.

 

அவரைப் பற்றி அரவிந்தன் அறிந்திருந்தவை இவ்வளவுதான். 'சிற்றப்பாவின் கேதத்துக்கு உறவு முறையைக் கருதிப் 'பர்மாக்காரர்' வந்து போகிறாரா? அல்லது பணக்காரருக்குப் பணக்காரர் என்ற முறையில் விட்டுக் கொடுக்கக் கூடாதென்பதற்காக வந்தாரா' என்று நினைத்து வியந்தான் அரவிந்தன். முதல்நாள் மயானத்திலிருந்து திரும்பும் போது பர்மாக்காரர் தன்னிடம் பூரணி தேர்தலில் நிற்கப் போவது பற்றி அனுதாபத்தோடு எச்சரித்ததும் மீனாட்சிசுந்தரத்தைப் பற்றி விசாரித்ததும் இயல்பான நல்லெண்ணத்தால்தான் என்று சாதாரணமாக எண்ணியிருந்தான் அவன். பர்மாக்காரருடைய கீழ்மைத் தனமான பேச்சுக்களும், வயது வந்த முதுமைக்கும், பொறுப்புக்கும், பொருந்தாமல் அடிக்கடி அவர் கண்களைச் சிமிட்டிக் குறும்பு செய்வதும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லையே ஒழிய, அவர் கெட்டவராகவும், பயங்கரமான சூழ்ச்சிக்காரராகவும் இருப்பாரென்று அவன் நினைக்கக் கூட இல்லை. அவருடைய முகத்துக்குத் தான் புலியின் களை இருந்தது. இரண்டு இதழோரங்களிலும் கடைவாய்ப் பல் நீண்டிருப்பதன் காரணமாக எத்தனையோ சாது மனிதர்களுக்குக் கூட இப்படிப் புலிமுகம் இருப்பதை அரவிந்தன் கண்டிருக்கிறான். எனவே சிந்தித்துப் பார்த்தபின் அது கூட அவனுக்குப் பெரிய தப்பாகப் படவில்லை. இரயில் பயணத்தின் போது கூட அவர் அவனிடம் நெருக்கமாகவும் அன்பாகவும் தான் நடந்து கொண்டார். மதுரை நகரத்து அரசியல் நிலைமையைப் பற்றி, மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தப் போகும் நோக்கம் பற்றித் தனக்குத் தெரியாத இரகசியம் எல்லாம் அவருக்குத் தெரிந்திருப்பதைக் கண்டு அரவிந்தனே அயர்ந்து போனான். யாரைப் பற்றிப் பேசினாலும் ஒருவிதமான அலட்சியத்தோடு தூக்கி எறிந்து பேசினார் அவர். "உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் இன்றைக்குத்தான் ஏதோ கொஞ்சம் வசதியா இருக்கிறான் அப்பா. இந்தப் பிரஸ் வைக்கிறதுக்கு முன்னாலே சண்முகம் மில்ஸ்னு ஒரு மில்லிலேயே நிறையப் பங்கு (ஷேர்) வாங்கினான். மில் திவாலாப் போச்சு. அப்போதே ஆள் மஞ்சள் கடுதாசி நீட்டி .பி. கொடுத்து விட்டுத் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போயிருக்கணும். எனக்கு நல்லாத் தெரியும்" என்று அவன் மனம் விரும்பாத வழியில் கீழான பேச்சை ஆரம்பித்தார் பர்மாக்காரர். முதல் வகுப்பில் உட்கார்ந்து மூன்றாவது வகுப்பு விஷயங்களைப் பேசினார் அவர்.

"எல்லாப் பணக்காரர்களுமே அப்படித்தான் ஐயா! ஒரு சமயம் கைநொடிக்கும். ஒரு சமயம் வளரும்" என்று அவருடைய பேச்சை வேறு வழிக்குத் திரும்ப முயன்றான் அரவிந்தன்.

"அதுக்கு இல்லை தம்பி! இந்தக் காலத்தில் ரொம்பச் சின்ன ஆளுங்க எல்லாம் வேகமாக மேலே வந்திடப் பார்க்கிறாங்க. இந்த பூரணிங்கற பொண்ணு ஏதோ தமிழ்ப் பிரசங்கம், மாதர் கழகமின்னு பேர் வாங்கி நாலுபேருக்குத் தெரிஞ்ச ஆளாயிட்டுது. இதனோட தகப்பன் அழகியசிற்றம்பலம் கஞ்சிக்கில்லாமே பஞ்சைப் பயலா மதுரைக்கு வந்தான். நம்ம வக்கீல் பஞ்சநாதம் பிள்ளைதான் அப்போ காலேஜ் நிர்வாகக் கமிட்டித் தலைவர். போனால் போகுதுன்னு இந்த ஆளுக்குத் தமிழ் வாத்தியாரா வேலை போட்டுத் தந்தானாம் பஞ்சநாதம்! இப்போ என்னடான்னா உங்க முதலாளி, அந்த ஆளோட பெண்ணைத் தேர்தலிலே நிறுத்த வந்திட்டார்."

அரவிந்தன் முகத்தைச் சுளித்தான். அவனுடைய உள்ளத்தில் தெய்வங்களுக்கும் மேலாக அவன் நினைத்திருந்த பெரியவர்களைப் புழுதியில் தள்ளி புரட்டுகிறாற் போல் நாவு கூசாமல் பேசினார் பர்மாக்காரர். வாயடக்கமில்லாமல் இப்படித் தாறுமாறாகப் பேசுகிறவர்களைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்காது. 'பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் சன்மார்க்கமில்லை. பிறருடைய தீமையைப் பேசாமலிருப்பது கொல்லாமையைக் காட்டிலும் உயர்ந்த சன்மார்க்கம்' என்று நினைக்கிறவன் அரவிந்தன். சிறிது சிறிதாகத் தமது பேச்சாலேயே அவனுடைய உள்ளத்தில் மதிப்பிழந்து கொண்டிருந்தார் பர்மாக்காரர்.

மதுரை நிலையத்தின் கலகலப்பினிடையே புகுந்து இரயில் நின்றது. அவருடைய பர்மாக்கார மனைவியும், அவளுடன் அவருக்குப் பிறந்தவளான ஒரே மகளும் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தான் அரவிந்தன். பர்மிய இரத்தமும் தமிழ் இரத்தமும் கலந்த அழகில் அவருடைய மகள் காண நன்றாக இருந்தாள். தமிழ்நாட்டுக் கோலத்தில் நிலவு முகமும், மயக்கும் விழிகளுமாக நின்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் தாய் மட்டும் மதுரைக்கு வந்து இத்தனை காலமான பின்னும் பர்மியத் தோற்றமும் அதற்கேற்ற அலங்காரங்களும் மாறவில்லை. கவிதை உணர்வின் புனிதமான எழுச்சியோடு அவர்கள் தோற்றங்களை அரவிந்தன் பார்த்தானே தவிர, வேறு விரசமான நினைவே இல்லை. அவன் மனதுக்கு விரசமாக நினைக்கவும் தெரியாது.

"நம்ப உறவுக்காரப் பிள்ளையாண்டான். 'அரவிந்தன்' என்று தங்கமான பெயர். இவனுடைய சிற்றப்பாவின் கேதத்துக்காகத் தான் நான் போயிருந்தேன்" என்று பெண்ணுக்கும் மனைவிக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

"நான் என்னவோ பர்மாவில் போய் பணத்தைத் திரட்டிக் கொண்டு வரலாம்னு போனேன் அப்பா! திரும்புகிற காலத்தில் இதோ இருக்கிறாளே, இந்தப் பொல்லாதவள் என் மனத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுவிட்டாள். நான் இந்த அழகியையே கொள்ளையடித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டேனப்பா" என்று மிகவும் நகைச்சுவையாக மனைவியை அவனுக்கு அறிமுகம் செய்தார். அப்போது அந்தப் பர்மிய நங்கை சற்றே தலைசாய்த்து சிவந்த முகம் மேலும் சிவக்க ஒரு நாணப் புன்னகை பூத்தாள். உலகத்து மகாகவிகளின் நளின எழில்கள் யாவும் அந்தப் பர்மிய நங்கையின் சிரிப்பில் போய் இணைந்து கொண்டனவோ எனும்படி அழகாயிருந்தது அந்தச் சிரிப்பு.

 

"எனக்குக் கோடைக்கானல் போக வேண்டும். இப்படியே பஸ் நிலையத்துக்குப் போனால் நாலு மணிக்குக் கோடைக்கானல் போகிற கடைசி பஸ் இருக்கிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன். பதினாறாம் நாள் காரியத்துக்கும் நீங்கள் கண்டிப்பாய் வந்துவிட வேண்டும்" என்று இரயில் நிலையத்திலிருந்தே பர்மாக்காரரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட முயன்றான் அரவிந்தன். இரயிலில் அவர் பேசிய பேச்சுக்களைக் கேட்ட பின்பு அவரிடமிருந்து விரைவில் கத்தரித்துக் கொண்டு புறப்பட்டால் போதுமென்று ஆகிவிட்டது அவனுக்கு.

"நீ ஏனப்பா, பைத்தியக்காரப் பிள்ளையாயிருக்கிறாய். இவ்வளவு தூரம் வந்தவன் வீட்டுக்கு வந்துவிட்டுப் போவாய் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கோடைக்கானலுக்கு நாளைக்காலையில் போகலாம் தம்பி இப்போது வீட்டுக்கு வந்துதான் ஆகவேண்டும்" என்றார் பர்மாக்காரர். அவருடைய மகளும் தந்தையின் பக்கம் பேசி அவனை வரச்சொல்லி வற்புறுத்தினாள். அரைகுறைத் தமிழ்ச்சொற்களோடு கூடிய குயில் குரலில் அவருடைய பர்மிய மனைவியும் அவனை நோக்கி ஏதோ கூறினாள்.

'பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பர்மாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துக்களுக்கு நான் வாரிசு ஆகப் போகிறேன் என்பதற்காகவா? அடடா; பணமே, உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா' என்று எண்ணிக் கொண்டான் அரவிந்தன். பர்மாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஓர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த கடிகாரம் போல் நேரம் பார்த்து, அளவு பார்த்து உள்நோக்கத்தோடு அவர் சிரித்துப் பழகுகிறாரா? அந்த மனிதரைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு விடுவதற்காகவாவது அவருடைய வீட்டுக்குப் போய் வருவதென்று முடிவு செய்து கொண்டு இணக்கம் தெரிவித்தான் அரவிந்தன். இரயில் நிலைய வாயிலில் அவருடைய புதிய கார் பெரிதாக, அழகாக நின்று கொண்டிருந்தது. எல்லோரும் ஏறிக் கொண்டதும் கார் புறப்பட்டது.

"நான் சொல்றேன் இதுதான், தம்பி! இதுவரைக்கும் நீ எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம். இனிமேல் உனக்குன்னு ஒரு அந்தஸ்து வேணும்! இலட்ச ரூபாய்ச் சொத்துக்கு வாரிசாயிருக்கிறாய்! அதுக்குத் தகுந்த உறவு, பழக்கம் எல்லாம் உண்டாகணும். அந்த மீனாட்சி அச்சக வேலையை நீ விட்டு விடலாம் என்கிறது என் அபிப்பிராயம். நீயே சொந்தத்தில் நாலு பிரஸ் வைத்து நடத்துகிற வளமை உனக்கு வந்தாச்சு. இனிமேல் எதுக்கு அந்தப் பொறுக்கிப் பயல் வேலை? என்ன? நான் சொல்வது சரிதானே?" என்று சொல்லிக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தார் பர்மாக்காரர். அவன் கார் சன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கூறியதை இலட்சியம் செய்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

 

கார் வையைப் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. அந்தப் பாலத்தின் மேல் போக நேர்கிற போதெல்லாம் அரவிந்தனுக்கு ஒரு விந்தையான சிந்தனை உண்டாகும். 'இந்தப் பாலம் இலட்சாதிபதிகளும், பங்களாவாசிகளும் நிறைந்த வடக்கு மதுரையையும், சாதாரண மக்களின் நெருக்கடி நிறைந்த தெற்கு மதுரையையும் இணைக்கிறது. ஆனால் இந்த இரண்டு மதுரைகளின் மண் தான் இணைகிறதே ஒழிய மனம் இணையவில்லை. அதற்கு வேறொரு புதிய பாலம் போடவேண்டும். அது பண்பாட்டுப் பாலமாக இருக்கும்' என்று எண்ணுவான்.

அமெரிக்கன் கல்லூரியின் சிவப்பு நிறக் கட்டிடங்கள், தல்லாகுளம் பெருமாள் கோயிலின் பட்டையடித்த மதிற்சுவர் எல்லாவற்றையும் வேகமாகப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு கார் விரைந்தது. எதிரே நீலவானத்தின் சரிவில் மங்கிய ஓவியம்போல் அழகர் மலைக் குன்றுகள் தெரிந்தன.

கார் 'பர்மாக்காரர் எஸ்டேட்'டில் நுழைந்தது. அரவிந்தன் மலைத்துப் போனான். அப்பப்பா? எத்தனை அழகான இடம்! எவ்வளவு பெரிய தோட்டம்! எத்தனை விதமான பூந்தொட்டிகள்! எவ்வளவு பெரிய மாளிகை! ஒரு பெரிய ஊரையே குடி வைக்கலாம். அவ்வளவு விரிவான நிலப்பரப்பில் தோட்டமும் மாளிகையும் அமைந்திருந்தன.

சிற்றுண்டி, தேநீர் உபசாரமெல்லாம் பிரமாதமாக நடந்தது. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட எழுந்தான் அரவிந்தன்.

"என்னப்பா பறக்கிறாய்? இனிமேல் நாளைக் காலையில் தானே கோடைக்கானல் போகப் போகிறாய்! உன்னை என் நண்பர் ஒருத்தருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். கொஞ்சம் இரப்பா, அந்த நண்பருக்கு டெலிபோன் செய்து வரவழைக்கிறேன்" என்று யாருக்கோ டெலிபோன் செய்தார் பர்மாக்காரர். அவர் டெலிபோனில் பேசிய விதம், கண் சிமிட்டிக் கொண்டே கள்ளச் சிரிப்புச் சிரித்த விதம், எல்லாமாகச் சேர்ந்து மொத்தமாக அரவிந்தன் மனத்தில் ஏதோ ஒரு சந்தேகத்தைக் கிளப்பின. சிறிது சிறிதாக அவருடைய அந்தப் புலிமுகம் உண்மையாகவே புலிமுகமாய் மாறிக் கொண்டு வருவதுபோல் தோன்றியது அவனுக்கு. 'நீ ஏதோ வம்பில் மாட்டிக் கொள்ளப் போகிறாய்' என்பது போல் அவன் உள்ளுணர்வு எச்சரித்தது.

'மதுரை மீனாட்சி கோயிலில் வடக்குக் கோபுரத்தில் உட்பக்கம் சில தூண்கள் இருக்கின்றன. அவற்றுக்கு 'இசைத்தூண்கள்' என்று பெயர். அந்தத் தூண்களுக்கு அருகில் நெருங்கி அவற்றைத் தட்டிப் பார்த்தால் ஒவ்வொரு தூணிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஒலி கேட்கும். அதே போல் அருகில் நெருங்கி இதயத்தைத் தட்டிப் பார்க்கும் போதல்லவா மனிதனுடைய சுயமான உள்ளத்தின் ஒலி கேட்கிறது' என்று நினைத்து மருட்சியோடு பர்மாக்காரர் எஸ்டேட்டின் மாளிகைக்குள் அவரெதிரே வீற்றிருந்தான் அரவிந்தன். மருட்சி இருந்தாலும் அவன் தைரியத்தை இழந்துவிடவில்லை.

 

சிறிது நேரத்தில் அவனுக்காக வரவழைப்பதாக பர்மாக்காரர் டெலிபோன் செய்த நண்பர் வந்து சேர்ந்தார். அந்த ஆளைக் கண்டதும் அரவிந்தன் திகைத்தான். அவர் அவனுக்கு இனிமேல் தான் அறிமுகம் ஆகவேண்டிய ஆள் இல்லை. ஏற்கனவே அறிமுகம் ஆனவர் தான். வேறு யாருமில்லை. அன்றொரு நாள் பூரணியின் வீட்டில் அவனைக் கன்னம் சிவக்க அறைந்துவிட்டுப் போனாரே, புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர், அவர் தான் விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தார். அதன் பின் அங்கு நிகழ்ந்தவையெல்லாம் துப்பறியும் மர்மக் கதைகளில் நடப்பது போல் நிகழ்ந்தன. அரவிந்தன் வற்புறுத்தப்பட்டான். பயமுறுத்தப்பட்டான்.

அவர்கள் தன்னிடம் பேசியவற்றிலிருந்து அரவிந்தன் சில உண்மைகளைப் புரிந்து கொண்டான். பர்மாக்காரர் சிற்றப்பாவின் கேதத்துக்கு வந்திருந்தபோது மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தப்போவது பற்றிக் கேட்டது, தன்னிடமிருந்து வாயளப்பு அறிவதற்காகவே என்பது இப்போது அவனுக்கு நன்றாக விளங்கிவிட்டது. பர்மாக்காரர் தம்முடைய ஆளாக, அதே தொகுதியில் புது மண்டபத்து மனிதரை நிறுத்த இருக்கிறார் என்பதும் அவனுக்கு விளங்கிற்று. இரயிலில் அவர் தன்னிடம் பேசித் தெரிந்து கொண்ட உண்மைகளும், தன்னைக் கோடைக்கானலுக்கு அன்றே போகவிடாமல் தடுத்ததும் எதற்காக என்பது அரவிந்தனுக்கு இப்போது புரியத் தொடங்கியது. புலிமுகம் கடுமையாகவும் கண்டிப்பாகவும் அவனை நோக்கிப் பேசியது: "தம்பி! நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன். இந்த ஊரில் என் விருப்பத்தை மீறி ஒரு துரும்பு அசையாது. எனக்குத் தெரியாமல் ஒரு காரியம் நடந்துவிட முடியாது. உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் நேற்றுப்பயல்! எங்களுக்குப் பரம வைரியாக என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது செய்யத் தொடங்கிவிட்டான் அவன். நீ நம் வழிப்பையன். பேசாமல் நான் சொல்கிறபடி கேள், உனக்கு ஐயாயிரம் ரூபாய் பணம் தருகிறேன். அந்தப் பெண் பூரணியைத் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதிக்காமல் செய்து விடு. இது உன்னால் முடியும். அந்தத் தொகுதியில் நான் இவரை நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறேன்."

அரவிந்தன் நெற்றிக்கண் திறந்த சிவபெருமான் போல் கனல் விழிகளோடு அவர்களை முறைத்துப் பார்த்தான். ஐம்பது புத்தம் புதிய நீல நோட்டுகளை எண்ணி நீட்டினார் அவர். அரவிந்தன் விறுட்டென்று எழுந்து நின்றான்.

"சாக்கடையில் கொண்டுபோய்ப் போடுங்கள் அந்தப் பணத்தை. இதன் நாற்றம் சாக்கடையைக் கூட அசுத்தமாக்கி விடும்" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே இடது புறங்கையால் நோட்டுக் கற்றையை அலட்சியமாகத் தட்டிவிட்டான் அரவிந்தன். மின்சார விசிறியின் காற்று வேகத்தில் அவன் தட்டிவிட்ட புது நீல நோட்டுக்கள் சுழன்று பறந்தன. அவன் பணத்துக்குப் பறக்கவில்லை; பணம் எடுக்க ஆளின்றிப் பறந்தது.

 

அவர்கள் முகம் சிவக்க அவனை வெறித்து நோக்கினர். பர்மாக்காரரின் முகம் புலிப் பார்வையின் கடுமையில் அதிகமான இறுதிக் கடுமையை எய்தியது. புது மண்டபத்து மனிதரின் கண்கள் நெருப்புக் கோளங்களாயின.

"இந்தாப்பா, பலராம்! இந்தப் பையன் ஏதோ முறைத்து விட்டுப் போகிறான். நீ வந்து கொஞ்சம் பையனைக் கவனி" என்று யாரையோ கூப்பிட்டார் பர்மாக்காரர். எழுந்து வெளியேறிவிட்ட அரவிந்தன் வாயிற்படியிலிருந்து இறங்கி உட்பக்கம் திரும்பிப் பார்த்தான். அரிவாள் நுனிபோல் மீசையும், தடித்த உடம்புமாகக் கொழுத்த மனிதன் ஒருவன், உள்ளேயிருந்து வந்தான். திரைப்படங்களிலும் கதைகளிலும் கண்டது வாழ்க்கையிலும் இப்போது வருவதை உணர்ந்தான் அரவிந்தன். பெரும்புள்ளிகள் இம்மாதிரி 'அடி ஆட்கள்' வைத்திருப்பது பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு.

நெஞ்சின் வலிமைதான் பெரிது என நினைத்திருந்த அவன் முதன்முதலாகத் தன் வாழ்வில் உடம்பின் வலிமையைக் காட்டிப் போராட வேண்டிய சமயம் மிக அருகில் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். ஜிப்பாவின் கைகளை மேலே மடித்துவிட்டுக் கொண்டான். கவிதைகளையும் புரட்சிக் கருத்துக்களையும் எழுதிய கைகள் போருக்குப் புடைத்து நின்றன.

 

24

 

பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்த

மேம்பால் திசைப்பெண் புலம்பறுமாலை

                                                                                                           -- திருவிருத்தம்

 

இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று. இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப் போல் இயல்பாகவே தங்களிடம் உள்ள நேர்மைக் குறைவால், அதைத் தாங்கள் பிறரிடம் காட்டும்போது பெரிதாக்கிக் காட்டி வாழ்கிறவர்கள் சிலர் சமூகத்தில் உண்டு. அகவாழ்வில் கொடுமையே உருவானவராய்த் தெரியும் 'பர்மாக்காரர்' நகரில் புகழும் பதவியும் பெற்று, நேர்மையானவர் போல் காட்டிக் கொள்வது இந்த விதத்தில் தான் என்பது என்று அரவிந்தனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கிவிட்டது.

 

பிறரை வெறுப்பதற்கும், கடுமையாகப் பகைத்துக் கொண்டு அடி, உதைகளில் இறங்குவதற்குங் கூட ஒருவகை முரட்டுச் சாமர்த்தியம் வேண்டும். ஆனால் அன்பின் நெகிழ்ச்சியும், கலைகளின் மென்மைப் பண்பும் கலந்த மனமுள்ளவர்களுக்கு இந்த முரட்டுத்தனம் வராது. அரவிந்தன் சிறு வயதிலிருந்தே இந்த முரட்டுத்தனம் உண்டாகாமல் வளர்ந்தவன்.

முருகானந்தமோ இந்த முரட்டுத்தனத்தையே வீரமாக்கிக் கொண்டவன். பர்மாக்காரர் எஸ்டேட் மாளிகையில் அவரால் ஏவப்பட்ட முரட்டு அடியாள் தன்னை நோக்கிக் கைகளை ஓங்கிக் கொண்டு வந்தபோது அரவிந்தன் பதில் தாக்குதலுக்கும், தாக்குதலைச் சமாளிப்பதற்கும், தயாரானானே ஒழிய, அவன் மனம் முரட்டு வெறி கொள்ளவில்லை. இத்தகைய கொடுமைத் தாக்குதல்களுக்கு அந்த முரட்டு வெறி உண்டாகாவிட்டால் வெற்றியில்லை. எமகிங்கரனைப் போல் கைகளை ஓங்கிக் கொண்டு வந்த அந்த புண்ணாக்குத் தடியனிடம் மாட்டிக் கொண்டிருந்தால் அரவிந்தனால் போரிட்டுத் தப்பியிருக்க முடியாதுதான்!

 

ஆனால் போரிடாமல், புண்படாமல் தப்பிக்க அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது அரவிந்தனுக்கு. மென்மைக் குணம் படைத்த நல்ல மனிதர்களை அந்த மென்மைக்கு ஊறு நேராமலே தெய்வ சித்தம் காப்பாற்றி விடுகிறது என்பது எத்தனை பொருத்தமான உண்மை! தெய்வ சித்தமோ அல்லது தற்செயலான சந்தர்ப்பமோ எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, அந்தச் சமயத்தில் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அந்த முரடன் அடித்துக் கீழே தள்ளிவிட அரவிந்தனை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரிய கார் காம்பவுண்டுக்குள் நுழைந்து வேகமாக மாளிகை முகப்புக்கு வந்து நின்றது. கண்ணியமானவர்களாகவும், செல்வம் நிறைந்தவர்களாகவும் தோன்றிய யாரோ இரண்டு, மூன்று பேர்கள் பர்மாக்காரரை நோக்கிக் கைகூப்பிக் கொண்டே காரிலிருந்து இறங்கினார்கள்.

அவ்வளவுதான், நாடகத்தில் காட்சி மாறுகிறாற் போல் உடனடியாக அங்கு ஒரு மாற்றம் நிகழ்ந்தது. "வரவேணும்! வரவேணும்!" என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் வந்தவர்களை எதிர்கொண்டழைக்க ஓடி வந்தார்கள். "பலராம்! உள்ளே போய் அம்மாவிடம் காப்பி, பலகாரத்துக்குச் சொல்லு" என்று தடியனை வேறு காரியத்துக்குத் திருப்பி விட்டார் பர்மாக்காரர். 'தன்னைப் பற்றி வந்தவர்களுக்கு முன்னால் அரவிந்தன் ஏதாவது கண்டபடி கூச்சல் போட்டு மானத்தை வாங்கிவிடப் போகிறான்' என்ற பயத்தினால் அவரே முந்திக் கொண்டார். ஒன்றுமே நடக்காதது போல் சிரித்த முகத்தோடு அவனை நோக்கி, "நீ போய்விட்டு நாளைக்கு வா தம்பி! இப்போது நேரமில்லை எனக்கு" என்றாரே பார்க்கலாம்! ஒரே விநாடியில் காட்சியை மாற்றி நடித்து விட்ட அந்தச் சாமர்த்தியத்தை எப்படி வியப்பதென்றே அரவிந்தனுக்குத் தெரியவில்லை.

 

அவன் பயத்தையும், வியப்பையும், இன்னும் எண்ணற்ற உணர்ச்சிகளையும் மனத்தில் சுமந்து கொண்டே அந்தப் பெரிய தோட்டத்திலிருந்து வெளியேறிச் சாலைக்கு வந்தான். சிறிது நேரத்தில் பஸ் வந்தது. கையை நீட்டிப் பஸ்ஸை நிறுத்தி ஏறிக்கொண்டான். வெளியூரிலிருந்து மதுரை திரும்பும் பஸ் அது. வையைப் பாலத்து இறக்கத்தில் யானைக்கல்லில் இறங்கிக் கொண்டான் அரவிந்தன். இரவு மணி எட்டுக்கு மேல் ஆகியிருந்தது. சில்லறை விற்பனைக்காகப் பலாப்பழம், மாம்பழம் முதலிய பழங்களை மொத்தத்தில் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் 'பழக்கமிஷன் மண்டிகள்' நிறைந்த யானைக்கல் பிரதேசம் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. ஊரெல்லாம் பலாப்பழமும், மாம்பழமுமே நிரம்பிக் கிடப்பது போல் அந்தப் பகுதிக்கென்றே ஒருவகைப் பழமணம் சொந்தமாயிருந்தது. பலாப்பழத்தின் உடைந்த சக்கைகளும், அழுகின பழச் சிதறல்களுமாக, வீதியே பழக்கடைகளுக்கு அடையாளம் சொல்லி வழிகாட்டுவது போல ஒரு தோற்றம். அரவிந்தன் நடந்து கொண்டிருந்தான். அவன் மனம் பர்மாக்காரர் எஸ்டேட்டில் நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. தேர்தல் காலங்களில் ஆட்களைக் கடத்திக் கொண்டு போய் ஒளித்து வைப்பது, தனியே கூட்டிச் சென்று மிரட்டி பயமுறுத்துவது போன்ற சூழ்ச்சிகள் நடைபெறுவது உண்டு என்று அரவிந்தன் கேள்விப்பட்டிருக்கிறான். அம்மாதிரிப் பயங்கரச் சூழ்ச்சிகளையும் செயல்களையும் பற்றித் தேர்தலை ஒட்டிய காலத்துச் செய்தித்தாள்களில் சில செய்திகளும் படித்திருக்கிறான். அப்போதெல்லாம் இத்தகைய நிகழ்ச்சிகள் இன்றைய உலகில் சர்வசாதாரணமாக நடைபெற இடமிருக்கிறது என்பதையே அவன் நம்பியது கிடையாது. ஒப்புக்கொண்டதும் இல்லை. ஆனால் இன்று தன்னுடைய வாழ்க்கையில் தானே இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஆளாகிவிட்டுத் தப்பி வந்திருப்பதை நினைத்தபோது அவனுக்கு உடல் புல்லரித்தது. மென்மையான பழத்துக்குள்ளே வன்மையான கொட்டை பொதிந்திருப்பது போல அன்பாலும் அறத்தாலும் அப்பாவியாக வாழ்கிறவர்களின் நடுவே கொடுமையாலும் சூழ்ச்சியாலும் வாழ முயல்கிறவர்கள் இலைமறை காய் என இருக்கிறார்கள் என்பதை இன்று அவன் நம்பினான். ஒப்புக் கொண்டான். அனுபவித்தும் உணர்ந்து விட்டான்.

யானைக் கல்லில் இறங்கி நேர் மேற்கே செல்லுகிற சாலையில் நடந்து கொண்டிருந்த அரவிந்தன் பழைய சொக்கநாதர் கோவில் வாயில் தெற்கே திரும்பிய போது யாரோ கைதட்டிக் கூப்பிட்டார்கள். வெறும் கைத்தட்டலாக மட்டும் இருந்தால் அரவிந்தன் திரும்பிப் பார்த்திருக்க மாட்டான். கைத்தட்டலோடு "அதோ அரவிந்த மாமா போகிறாரு" என்று பழக்கமான குரல் ஒன்றும் சேர்ந்து ஒலிக்கவே அவன் திரும்பிப் பார்த்தான். பூரணியின் தங்கை மங்கையர்க்கரசி, மங்களேஸ்வரி அம்மாள், செல்லம், சம்பந்தன் எல்லோரும் கோயிலின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்கள். கீழே வீதியில் அந்த அம்மாளுடைய கார் நின்று கொண்டிருந்தது. சிறுமி மங்கையர்க்கரசி தான் அவன் பாதையோரமாகப் போவதை முதலில் பார்த்து அடையாளங்கண்டு கூப்பிட்டிருக்கிறாள்.

 

"சுகமாயிருக்கிறீர்களா? எங்கேயாவது வெளியூர் போயிருந்தீர்களா? பூரணி கோடைக்கானல் போன பின்பு நீங்கள் கண்ணில் தட்டுப்படவே இல்லையே; இப்போது கூட நான் உங்களைப் பார்க்கவில்லை. இந்தப் பெண்தான் நீங்கள் போவதைப் பார்த்துவிட்டுச் சொன்னாள். அப்புறம் கைதட்டி அழைத்தேன்" மங்களேசுவரி அம்மாள் அன்போடு அவனை விசாரித்தாள். முதுமையின் பொறுப்பும் கண்ணியமான பண்புகளும் நிறைந்த அந்த அம்மாளின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததுமே கைகள் குவித்து வணங்கினான் அரவிந்தன். 'வயது ஆக ஆகப் பெண்களிடமிருந்து பெண்மையின் மயக்கும் அழகு கழன்று தாய்மையின் தெய்வீக அழகு வந்துவிடுகிறது' என்று அவன் படித்திருந்தான். மங்களேசுவரி அம்மாளின் முகத்தில் மூப்பின் நலிவையும் மறைத்துக் கொண்டு ஒரு தாய்மைப் பொலிவு தென்படும். அந்த கௌரவமான அழகை வணங்காமலிருக்க அரவிந்தனால் முடியாது. பாரத நாட்டின் பெண்ணின் பெருமையே இந்தத் தாய்மை அழகுதான் என நினைப்பவன் அவன்.

அவன் தன்னைப் பற்றி அந்த அம்மாள் விசாரித்ததற்கு மறுமொழி சொன்னான். சிற்றப்பாவின் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குப் போய்விட்டு வந்ததையும், மறுநாள் அவசரமாகக் கோடைக்கானல் போவதற்கு இருப்பதையும் விவரித்தான். மீனாட்சிசுந்தரம் முருகானந்தத்தோடு பூரணியைச் சந்திப்பதற்காகக் கோடைக்கானல் போயிருக்கிறார் என்பதையும் அந்த அம்மாளிடம் சொன்னான். 'என்ன காரியமாகச் சந்திக்க அவர் அங்கே போயிருக்கிறார்' என்பதை அந்த அம்மாளும் கேட்கவில்லை. அவனும் அதைப் பற்றிச் சொல்லவில்லை.

"நான் கூட இந்தக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்று தோன்றுகிறது. பூரணி போய்ச் சேர்ந்ததும் அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அப்புறம் ஒன்றும் தகவலே இல்லை. மூத்த பெண்ணையும் அவள் கூட அனுப்பியிருக்கிறேன். அந்தப் பெண்ணுக்குக் கல்யாணத்தை முடித்துவிட வேண்டுமென்று வரன்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. உங்களுக்கு ஒன்றும் அவசரமான காரியமில்லாவிட்டால் கொஞ்சம் வீட்டுக்கு வாருங்களேன். இராத்திரிச் சாப்பாட்டை அங்கே வைத்துக் கொள்ளலாம். எனக்கும் உங்களிடம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேச வேண்டும் போலிருக்கிறது" என்று மங்களேசுவரி அம்மாள் வேண்டிக் கொண்டபோது, அரவிந்தனால் மறுக்க முடியவில்லை.

"நான் இரவில் சாப்பிடுவதில்லை, சிற்றுண்டிதான். காலையில் நீங்களும் வருவதானால் நாம் எல்லோரும் சேர்ந்தே கோடைக்கானலுக்குப் போகலாம்" என்று அந்த அம்மாளோடு காரில் செல்லும் போது அரவிந்தன் சொன்னான். "பூரணியை இலங்கைக்கும் மலேயாவுக்கும் சொற்பொழுவுகளுக்கு அழைத்துக் கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். அவள் அதைப் பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம். மங்கையர் கழகத்திலிருந்து அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்து நச்சரிக்கிறார்கள். அதற்காக நான் கோடைக்கானல் போக வேண்டியிருக்கிறது" என்று மங்களேசுவரி அம்மாள் கூறிய செய்தி அரவிந்தனுக்குப் புதியதாயிருந்தது. பூரணியின் வாழ்க்கையில் எந்தப் புகழ் ஒளி பரவ வேண்டுமென்று அவன் கனவுகள் கண்டு கொண்டிருந்தானோ அது பரவுகிற காலம் அருகில் நெருங்கி வருவதை அவன் இப்போது உணர்ந்து பூரித்தான்.

மதுரை நகரத்து வீதிகளின் வழியெல்லாம் ஒளி வெள்ளம் இறைந்து கிடந்தது. கார் அவற்றிடையே புகுந்து விரைந்து கொண்டிருந்தது. நகரத்துக்குப் பல்லாயிரம் வாய்கள் முளைத்துத் தாறுமாறாகக் குரலெழுப்பிப் பாடிக் கொண்டிருப்பதுபோல் ஒலிபெருக்கிகளும், சினிமா வசன இசைத் தட்டுக்களும் மூலைக்கு மூலை ஒலித்துக் கொண்டிருந்தன. ஒன்றரை நாள் இந்த நகரத்துச் சந்தடிகளிலிருந்து விலகி இராமநாதபுரம் சீமையின் வறண்ட கிராமம் ஒன்றில் இருந்துவிட்டு வந்த அரவிந்தனுக்கு இப்போது நகரமே சிறிது புதிதாய்ப் பெரியதாய் மாறியிருப்பது போல் பிரமை தட்டியது. வெளியூர் சென்றுவிட்டு மதுரை திரும்பும் போதெல்லாம் இந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

தானப்ப முதலித் தெருவில் மங்களேசுவரி அம்மாள் வீட்டு வாயிலில் கார் நின்றதும் அரவிந்தன் இறங்கினான்.

"உள்ளே வாங்க அரவிந்தமாமா!" என்று மங்கையர்க்கரசி அவனைத் தன் பூங்கையால் பிடித்து இழுத்தாள். இந்தச் சிறுமியிடம் அரவிந்தனுக்குத் தனிப்பட்ட பிரியம் உண்டு. பூரணியின் தங்கை என்பதற்காகவோ, பேராசிரியர் அழகியசிற்றம்பலத்தின் கடைசிப் பெண் குழந்தை என்பதற்காகவோ மட்டும் ஏற்பட்ட பிரியமில்லை. அது உயிர் பெற்று நிற்கும் தங்கக் குத்துவிளக்குப் போல் முகமும், கண்களும், சிரிப்பும், கைகளும், கால்களும் எல்லாம் பூக்களாலேயே படைத்துப் பூக்களின் மணமூட்டினாற் போல மாயக் கவர்ச்சி வாய்ந்த சிறுமி இவள். எந்நேரமும் மருட்சியும் வியப்பும் கலந்து கனிந்து, கவிந்து, வெள்ளை அல்லி இதழில் கருப்புத் திராட்சை உருள்வது போல் இந்தச் சிறுமியின் கண்களுக்கு ஓர் அழகு வாய்த்திருந்தது. பெண் குழந்தைகளின் கண்களிலிருந்து இந்த மருட்சியும் வியப்பும் மாறிக் கள்ளத்தனம் குடிகொள்கிற வயது வந்தாலும் மங்கையர்க்கரசிக்கு இந்த அழகு மாறாதது போல் அவ்வளவு நிறைவாகவும், பதிவாகவும் இருந்தது. 'குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும்' என்று குழந்தை அழகைப் பற்றி வர்ணித்திருக்கிறார்களே, அந்த அழகுக் குறுகுறுப்பு, சிறுமியான பின்பும் இந்தப் பெண்ணிடமிருந்து போகவில்லை. அதுதான் அரவிந்தனைக் கவர்ந்தது. பூரணியின் விழிகளிலும் இந்த அழகு உண்டு. ஆனால் அது அறிவொளி கலந்த அழகாயிருந்தது.

வெகு நாட்களாகவே சந்திக்க வாய்ப்பின்றிப் பிரிந்து விட்ட சொந்தத் தம்பியை அன்போடு உபசாரம் செய்தாள் மங்களேஸ்வரி அம்மாள். செல்வச் செழிப்புக்குரிய ஆணவமே சிறிதும் இல்லாமல் இந்த அம்மாள் எப்படி இவ்வளவு அன்பு மயமாக நெகிழ்ந்துவிட முடிகிறதென்று அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பழகுகின்றவர்களோடு ஒட்டிக் கொள்ளும்படி செய்து விடுவதன் காரணமாக அன்புக்குத் தமிழில் 'பசை' என்று ஒரு பெயர் உண்டு. மனிதர்களுடைய மனங்களை இணைத்துத் தொடுத்து விடுகிற சக்தி அன்புக்கு இருப்பதால் 'நார்' என்றும், அன்புக்கு ஒரு பெயருண்டு. அந்த அம்மாள் அன்பு மயமாகப் பழகிய விதத்தைக் கண்டபோது 'பசை', 'நார்' என்னும் சொற்களுக்கு அன்பு என்னும் பொருள் அமைந்த நயம் பற்றிப் பூரணி எப்போதோ தன்னிடம் கூறியிருந்த விளக்கம் அரவிந்தனுக்கு நினைவு வந்தது.

சாப்பாட்டுக்குப் பின் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்து விட்டு மங்கையர்க்கரசியும் செல்லமும், சம்பந்தனும் தூங்கிப் போனார்கள். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தாள். ஒளிவு மறைவு இல்லாமல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான மனிதர்களிடம் எல்லாவற்றையும் சொல்லுவது போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"என்னவோ, பித்துப் பிடித்த மாதிரி இதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நெருக்கமும், உறவும் கொண்டாடிக் கவலையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு மனிதர்கள் என்று யார் இருக்கிறார்கள் இங்கே! நீங்கள் இருக்கிறீர்கள். பூரணி இருக்கிறாள். நீங்கள் இருவரும் தான் எனக்கு அந்தரங்கமானவர்கள் என்று மனதுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டுவிட்டேன். பணத்தையும், செல்வாக்கையும், புகழையும் பகிர்ந்து கொள்ள மனிதர்கள் கிடைப்பார்கள். துன்பங்களையும், வேதனைகளையும் பங்கு கொண்டு தாங்கி நிற்கத்தான் யாரும் கிடைக்கமாட்டார்கள். ஆனால், நீங்கள் இருவரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. கடவுள் உங்கள் இருவருக்கும் தங்கமான மனத்தைக் கொடுத்திருக்கிறார். உலகத்தை எல்லாம் ஒரு குடும்பமாக எண்ணி அன்போடும், அனுதாபத்தோடும் பழகுகிற பக்குவம் உங்கள் இரண்டு பேருடைய மனத்துக்கும் ஒற்றுமையாக அமைந்திருக்கிறது. பூரணிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டதே ஒரு விசித்திரமான நிகழ்ச்சி. அவள் அதையெல்லாம் உங்களிடம் சொல்லியிருப்பாள் என நினைக்கிறேன். அவளை முதன் முதலாக நான் சந்தித்த தினத்திலிருந்து என்னுடைய மூத்த பெண்ணாக வரித்துக் கொண்டு விட்டேன். அவள் மூலமாகத் தான் நீங்கள் எனக்குப் பழக்கமானீர்கள் அரவிந்தன். நீங்கள் வித்தியாசம் வைத்துக் கொண்டு பழகக்கூடாது. பூரணி இந்த வீட்டின் மூத்த பெண்ணானால், நீங்கள் இந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை. இந்த வீட்டிலும், இதன் சுகபோகங்களிலும் என் வயிற்றில் பிறந்த வசந்தாவுக்கும் செல்லத்துக்கும் எத்தனை பாத்தியதை உண்டோ அவ்வளவு உங்களுக்கும் உண்டு. நான் பணத்தோடு பிறக்கவில்லை, நான் பணத்தோடு போகப் போவதும் இல்லை. இப்படியெல்லாம் வாழ நேரும் என்று கனவில் கூடச் சின்ன வயதில் நான் எண்ணியதில்லை. ஏழைக் குடும்பத்திலிருந்து 'அவருக்கு' வாழ்க்கைப்பட்டேன். இலங்கை மண்ணில் போய் உழைப்பினாலும் முயற்சியினாலும் உயர்ந்து இத்தனை பணத்தையும், இத்தனை துக்கத்தையும், இந்தப் பெண்களையும் எனக்குச் சேர்த்து வைத்துச் சென்று விட்டார் அவர். பணமும் பெருமையும் இருந்து என்ன செய்ய? இந்தப் பெண் வசந்தாவுக்கு ஒரு 'நல்ல இடம்' அகப்படாமல் தவிக்கிறேன்" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் மங்களேசுவரி அம்மாள்.

அந்த அம்மாள் கூறியவற்றைக் கேட்ட போது அரவிந்தன் மனம் குழைந்தான். அந்த அபூர்வமான அன்பும், பாசமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. 'பர்மாக்காரர் போல் இதயமே இல்லாதவர்கள் வாழ்கிற உலகத்தில் இவ்வளவு அற்புதமான பெருமனம் படைத்த இந்தத் தாயும் அல்லவா இருக்கிறாள்' என்று நினைத்தான் அவன். முருகானந்தம்-வசந்தா தொடர்பை அந்த அம்மாளிடம் குறிப்பாகச் சொல்லி சம்மதம் பெற வேண்டிய சமயம் அதுதான் என்று அரவிந்தனுக்குப் புரிந்தது. அந்த அம்மாளின் பரந்த மனம் அந்த மணத்தை மறுக்காமல் ஒப்புக்கொள்ளும் என்று அவன் உள்ளம் உறுதியாக நம்பியது. அரவிந்தன் அந்த அம்மாளிடம் கேட்டான்.

"அம்மா! உங்கள் பெண் வசந்தாவின் திருமணத்துக்காக சிரமப்படுவதாகக் கூறுகிறீர்களே! சிரமப்பட வேண்டிய காரணம் என்ன?"

"உங்களுக்குத்தான் தெரியுமே! அசட்டுத்தனமாகச் சினிமாவில் சேர்கிறேன் என்று போய் எவனுடனோ அலைந்துவிட்டு ஏமாந்து திரும்பினாள். ஊரில் அது கை, கால் முளைத்து தப்பாகப் பரவியிருக்கிறது. பெண்ணின் தூய்மையில் நமக்கெல்லாம் நம்பிக்கை நன்றாக இருக்கிறது. ஆனால் ஊரார் அதிலேயே சந்தேகப்படுகிறார்கள். எங்காவது ஒரு வரன் முடிவாகும் போலிருந்தால் யாராவது இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் குறுக்கே புகுந்து கலைத்து விடுகிறார்கள். இதைச் செய்வதில் அவர்களுக்கு என்னதான் பெருமையோ தெரியவில்லை" என்று ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் கூறினாள் அந்த அம்மாள். அரவிந்தன் ஆறுதல் கூறினான்.

"சினிமாவில் நடிக்கிற பித்து அந்த ஏமாத்துக்கார மனிதனோடு புறப்பட்டுப் போகச் செய்து விட்டது. அவ்வளவு தானே தவிர, உங்கள் பெண்மேல் வேறு அப்பழுக்குச் சொல்ல முடியாதே. மதுரையிலிருந்து திருச்சி வரையில் ஓர் ஆண் பிள்ளையோடு இரயிலில் பயணம் செய்தது மன்னிக்க முடியாததொரு குற்றமா அம்மா?"

"அதை நினைத்தால்தானே வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒன்றுமில்லாததை எப்படி எப்படியோ திரித்துப் பெண்ணுக்கு மணமாகாமல் செய்துவிடப் பார்க்கிறார்களே. நான் ஒருத்தி தனியாக எப்படி இந்தச் சமூகத்தின் அநியாயப் பழியை சுமப்பேன்?" - இதைச் சொல்லும் போதே அந்த அம்மாளின் குரல் கரகரத்து நைந்தது. தூய்மையான அந்தத் தாயின் கண்களில் நீர்மணிகள் அரும்பிச் சோகம் படர்வதை அரவிந்தன் கண்டுவிட்டான். அவனுடைய உள்ளம் உருகியது. அந்தத் தாயின் தவிப்பு அவனுடைய உணர்வைக் கரைத்தது. அப்போது அரவிந்தனுடைய மென்மையான உள்ளத்தில் ஓர் இளங்கவியின் குமுறல் எழுந்தது.

 

'உத்தர ராமாயணத்தில் சீதையை ஊராருக்காக இராமன் சந்தேகமுற்றபோது அந்த அபவாதத்தைப் பொறுமைக்கெல்லாம் எல்லையான பூமியே பொறுத்துக் கொள்ள முடியாமல் தன் மண்மேனி வழி திறக்கப் புண்ணாகப் பிளந்து உள்ளே ஏற்றுக் கொண்டதைப் போல இந்தச் சமூகத்தில் ஒவ்வோர் அப்பாவிப் பெண்ணுக்கும் துன்பம் வரும்போது அந்தத் துன்பம் அவளை அணுகவிடாமல் பூமியே பிளந்து ஏற்றுக் கொண்டு விட்டால் எத்தனை நன்றாக இருக்கும்? சமூகத்தின் பழிகளுக்கு நடுவே அபலையாய் சபலையாய் ஆதரவு இழந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு சீதைதான். "நல்வழி தா எனக்கு மண் மகளே!" என்று சீதை மண் புகுந்தது போல் பழிகளிலிருந்து விடுபட்டுப் பிரகிருதியின் அடிமடியில் சரண் புகுந்து விடுகிற தெம்பு இந்தத் தவத்திரு நாட்டுப் பெண்களிடம் இன்று இல்லாமற் போயிற்றே?' என்று கொதித்து வேதனைப்பட்டான் அரவிந்தன்.

"நான் இப்படிப் பளிச்சென்று கேட்பதற்காக வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது அம்மா! என்னையும் பூரணியையும் போலவே நீங்களும் முற்போக்கான கருத்துள்ளவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் கூச்சமும் தயக்கமும் இல்லாமல் இப்படி உடனே உங்களைக் கேட்கிறேன். தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். உங்களை விடத் தாழ்வான - குறைந்த பொருளாதார நிலையிலுள்ள ஏழைக் குடும்பத்து இளைஞன் ஒருவனை உங்கள் பெண்ணுக்குக் கணவனாக ஏற்றுக் கொள்வீர்களா நீங்கள்?" என்று மெல்ல சிரித்துக் கொண்டே அந்த அம்மாள் முகத்தை உற்றுப் பார்த்தவாறே கேட்டான், அரவிந்தன். அந்த அம்மாளும் சிரித்துக் கொண்டே பதில் கூறலானாள்.

"அரவிந்தன்! என்னைப் பற்றி இந்தச் சந்தேகம் உங்களுக்குத் தோன்றி இருக்கவே கூடாது. பணத்துக்காகவும், பகட்டுக்காகவும் மனிதர்களை மதிக்கிற குணம் என்னிடம் என்றும் இருந்ததில்லை. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பணக்காரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டது போல், என் பெண், பணக்கார குடும்பத்திலிருந்து ஏழைக் கணவனுக்கு வாழ்க்கைப்படட்டுமே! என் பெண் விரும்பாத இடத்தில் அவளை வற்புறுத்தித் தள்ளக்கூடாது என்ற ஒரு நோக்கம் தவிர வேறு ஏற்றத்தாழ்வை நான் பார்க்க விரும்பவில்லை. நீங்கள் என்னவோ பூரணியையும் உங்களையும் தான் மிகவும் முற்போக்கானவர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கக் காரணமில்லை. நான் உங்களையெல்லாம் விட முற்போக்கானவள் என்பதைப் பூரணி ஒருவாறு புரிந்து கொண்டிருப்பாள். என் பெண் மாறுபட்ட சூழ்நிலையிலும் பழக வேண்டும் என்பதற்காகத்தான் நான் அவளை ஆண்கள் கல்லூரியில் சேர்த்தேன். உங்கள் பூரணியோ, 'பெண் மாறுபட்ட சூழ்நிலைகளில் அதிகம் பழகலாகாது' என்ற கருத்துடையவள். இந்த வயதான கோலத்தையும் நெற்றியில் விபூதிப் பூச்சையும் கண்டு என்னை மிகவும் பழைய காலத்துக்குச் சொந்தமானவளாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. கல்லூரியில் படிக்கிற வசந்தா மனம் விரும்பி உண்மையான அன்புடன் எந்த இளைஞனோடு பழக நேர்ந்தாலும், அதை வரவேற்று மணம் செய்து கொடுக்கலாம் என்ற அளவுக்கு முற்போக்காக எண்ணி வைத்துக் கொண்டிருந்தவள் நான். அழகு நிறைந்த சந்ததியினரும், வேறுபாடுகளில்லாத சமூக உறவும் வளர்வதற்கு நேர்மையான காதல் மணங்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை நான் நம்புகிறேன்" என்று இவ்வாறு அந்த அம்மாள் உணர்ச்சிகரமானதொரு சொற்பொழிவு செய்வது போல் மறுமொழி கூறியதைக் கேட்டபோது அரவிந்தனுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. 'இந்தப் பழமையான முதிய தோற்றத்துக்குள் இவ்வளவு புதுமையான இளமையான கருத்துக்கள் ஒளிந்திருக்கின்றனவே' என ஆச்சரியப்பட்டான். 'முருகானந்தம் கொடுத்து வைத்தவன் தான்' என்ற மகிழ்ச்சியில் அவன் மனம் நிறைந்தது. 'இந்த முருகானந்தம் பயல் பொதுமேடைகளிலும், தொழிற்சங்கங்களிலும் பேசிப் பேசிச் சாதித்த சாதனைகள் கூடப் பெரிதில்லை. வசந்தா என்ற பெண்ணின் மனத்தை இளக்கி நெகிழச் செய்து தன் பக்கமாகத் திருப்பிக் கொண்டானே, இது பேசாமலே சாதித்த மகத்தான சாதனை' என்று வேடிக்கையாகத் தோன்றிற்று அவனுக்கு. அந்த அம்மாள் மேலும் கூறினாள்.

"ஏழைப்பட்ட வரன் ஆயிற்றே என்று தயங்க வேண்டாம் அரவிந்தன்! உங்களுக்குத் தெரிந்த இடம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். வசந்தாவின் கல்யாணத்துக்கு உங்களையும் பூரணியையும் தான் மலைபோல் நம்பியிருக்கிறேன் நான். நீங்கள் சுட்டு விரலால் காட்டுகிற வரனுக்கு அவளை மணம் முடித்து கொடுத்துவிட நான் தயார்."

"அப்படியானால் உங்கள் பெண்ணுக்கு இப்போதே திருமணம் முடிந்த மாதிரிதான் அம்மா!" என்று புன்னகையோடு கூறினான் அரவிந்தன். அந்த அம்மாள் முகம் மலர்ந்தது.

"விவரம் சொல்லுங்கள் அரவிந்தன்?"

"நாளைக்குத்தான் கோடைக்கானலுக்கு நீங்களும் வரப் போகிறீர்களே, அம்மா! பூரணியையும் உடன் வைத்துக் கொண்டு அங்கே பேசி முடித்துக் கொள்ளலாம். இப்போது உங்கள் பெண்ணுக்காக நான் கூறப் போகிற வரனைப் பூரணிக்கும் தெரியும்" என்று குறும்புச் சிரிப்பு சிரித்தான் அரவிந்தன். வரனைப் பற்றிச் சொல்லுமாறு மங்களேசுவரி அம்மாள் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அவன் கூறவில்லை. "அந்த இரகசியத்தை நாளைக்குக் கோடைக்கானலில் தான் வெளிப்படுத்த முடியும்" என்று விளையாட்டுப் பிடிவாதத்தோடு மறுத்துவிட்டான்.

அவர்கள் நேரம் கழிவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டார்கள். இரவு நெடுநேரமாகியிருந்தது.

"மாடியறையில் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். காலையில் இங்கிருந்தே காரில் கோடைக்கானல் புறப்பட்டு விடலாம்" என்றாள் அந்த அம்மாள்.

"இல்லை! நான் அச்சகத்துக்குப் போய்ப் படுத்துக் கொண்டிருந்துவிட்டுக் காலையில் இங்கே வந்துவிடுகிறேன். அந்தப் பையன் திருநாவுக்கரசு தான் தனியாக இருப்பான். நான் இப்போது அங்கே சென்றால், அந்தப் பையனிடம் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு அச்சகத்தைக் கவனித்துப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, நாளைக்குப் புறப்பட வசதியாயிருக்கும்" என்று அச்சகத்துக்குக் கிளம்பி விட்டான் அரவிந்தன்.

மறுநாள் காலை கோடைக்கானலுக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். வானில் மப்பும், மந்தாரமுமாக வெய்யிலே இல்லாமல் பயணம் மிகவும் சுகமாக இருந்தது. மங்களேசுவரி அம்மாள், குழந்தைகள், அரவிந்தன் எல்லோரும் சேர்ந்து வந்ததைக் கண்டபோது பூரணிக்கு, மதுரையே கோடைக்கானலுக்கு வந்துவிட்டது போலிருந்தது. உடனே திரும்பி விடுவதாகச் சொல்லிவிட்டுப் பட்டிவீரன்பட்டிக்குப் போயிருந்த மீனாட்சிசுந்தரம் இன்னும் திரும்பவில்லையாதலால் அன்று தேர்தல் பற்றி முடிவு செய்யவில்லை அவர்கள். அவருடைய வரவை எதிர்பார்த்தனர்.

அன்று மாலையில் முருகானந்தமும், மங்களேசுவரி அம்மாள், வசந்தா, குழந்தைகள் எல்லோரும் ஏரிக்கரைக்கு உலாவப் போயிருந்தார்கள். அரவிந்தனும், பூரணியும் மட்டும் தமிழ் முருகன் கோயில் கொண்டிருக்கும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார்கள். மாலை நேரத்தில் மலைச்சாலையில் நடப்பது இன்பமாக இருந்தது.

பகல் என்னும் கணவனை இழந்த மாலை என்னும் மேல்திசைப் பெண், பால்வடியும் வாயையுடைய பிறை என்னும் பிள்ளையை இடுப்பில் ஏந்தி நின்று, விதவைக் கோலத்தில் புலம்புகிறாற் போல் தோன்றும் மாலைப் போதாக இருந்தது அது. கோடைக்கானலுக்கு வந்தபின் பூரணியின் நிறம் வெளுத்திருப்பதாகவும் அழகு அதிகமாயிருப்பதாகவும் அரவிந்தனுக்குத் தோன்றியது.

"அலைச்சல் அதிகமோ? நீங்கள் கருத்திருக்கிறீர்களே!" என்றாள் பூரணி. "ஆமாம்!" என்று புன்முறுவல் பூத்தான் அரவிந்தன்.

"முன்பு ஒருமுறை நாமிருவரும் திருப்பரங்குன்றம் மலையில் ஏறியது நினைவிருக்கிறதா உங்களுக்கு? நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்லுகிறோம் இல்லையா?" அரவிந்தனுக்கு மெய்சிலிர்த்தது. எத்தனை அர்த்தம் நிறைந்த கேள்வி இது? 'நாங்கள் இருவரும் உயர உயரப் போவதற்காகவே பிறந்தவர்களா?' மீண்டும் சிலிர்த்தது அவனுக்கு.

 

25

 

பொன்காட்டும் நிறம்காட்டிப்

பூக்காட்டும் விழிகாட்டிப்

பண்காட்டும் மொழிகாட்டிப்

பையவே நடைகாட்டி

மின்காட்டும் இடைகாட்டி

முகில்காட்டும் குழல்காட்டி

நன்பாட்டுப் பொருள் நயம்போல்

நகைக்கின்றாய் நகைக்கின்றாய்

பண்பாட்டுப் பெருமையெலாம்

பயன்காட்டி நகைக்கின்றாய்.

                                                                                        -- அரவிந்தன்

 

கோடைக்கானலிலேயே அழகும், அமைதியும் நிறைந்த பகுதி குறிஞ்சி ஆண்டவர் கோயில் மலைதான். குறிஞ்சியாண்டவர் கோவிலின் பின்புறமிருந்து பார்த்தால் பழநி மலையும், ஊரும் மிகத் தெளிவாகத் தெரியும். நெடுந்தொலைவு வரை பச்சை வெல்வெட் துணியைத் தாறுமாறாக மடித்துக் குவித்திருப்பது போல் மலைகள் தெரியும் காட்சியே மனத்தை வளப்படுத்தும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மலைகளே வாய் திறந்து சிரித்துக் கொண்டிருப்பது போல் பூக்கள் பூத்திருக்கும். அந்த அழகிய சூழலில் பசும்புல் நிறைத்துப் படர்ந்த ஒரு மேட்டின் மேல் அரவிந்தனும் பூரணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து மரத்தில் இரண்டு பச்சைக் கிளிகள் சிறிது தொலைவு இணையாகப் பறப்பதும், கிளைக்குத் திரும்புவதுமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. எங்கோ மிக அருகிலிருந்து சற்றைக்கொருமுறை குயில் கூவியது. அந்தக் குயில் ஒலி ஒருமுறை கேட்டு இன்னொரு முறை ஒலிக்குமுன் இருந்த இடைவெளி விநாடிகள் அதன் இனிமையை உணர்வதற்கென்றே கேட்போருக்குக் கொடுத்த அவகாசம் போல் அழகாயிருந்தது. செம்பொன் மேனிச் சிறுகுழந்தைகள் அவசரமாக ஓடி வந்து கள்ளச் சிரிப்போடு முகத்தை நீட்டிவிட்டுப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிற மாதிரி, பெரிய பெரிய ரோஜாச் செடிகள் தத்தம் பூக்கள் காற்றில் முன்புறம் ஆடிக் கவிழ்வதும், விரைவாகப் பின்னுக்கு நகர்வதுமாகக் காட்சியளித்தன. வான விரிப்பும், மலைப்பரப்பும், திசைகளும், எங்கும், எல்லாம் அழகு மயமாயிருந்தன. ஊழியில் அழிந்து அமிழ்ந்து மீண்டும் மேலெழுந்து மலர்ந்த புது யுகத்துப் புவனம்போல் எங்கும் அழகாயிருந்தது. தனிமையின் இனிமையில் தோய்ந்த அழகு அது!

எதையோ இரண்டாம் முறையாக நினைத்துக் கொண்டு சிரிக்கிறவன் போல் அரவிந்தன் சிரித்தான். அந்தச் சிரிப்பைப் பூரணி கண்டுகொண்டாள்.

"எதற்காகச் சிரிக்கிறீர்கள் இப்போது?" என்று கேட்டாள் பூரணி.

 

"ஒன்றுமில்லை, பூரணி! சற்று முன் நீ சொல்லியதை மறுபடியும் நினைத்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது. 'நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்கிறோம்' என்று நீ என்ன அர்த்தத்தில் கூறினாய்?"

"ஏன், நீங்கள் என்ன அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள், அரவிந்தன்?"

"எனக்கு என்னவோ இப்படித் தோன்றுகிறது பூரணி! உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே நின்று விடும்படி நேரிடலாம். அப்படி நேரிட்டால் அதற்காக நீ வருத்தப்படக்கூடாது" என்று அவன் சிரித்தபடியே இந்தச் சொற்களைக் கூற முயன்றாலும், கூறும்போது ஏதோ ஒரு விதமான உணர்வின் அழுத்தம் அவனையறியாமலே, அவன் உணர்வு இல்லாமலே அந்த சொற்களில் கலந்து விட்டது. எப்படிக் கலந்தது, ஏன் கலந்தது, எதற்காகக் கலந்தது என்பதை அவனே விளங்கிக் கொள்ள இயலாமல் தவித்தான். பூரணி அவனுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இமையாமல் பார்த்தாள். மெல்லச் சிரித்துக் கொண்டே பார்த்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் தன் சட்டைப் பையிலிருந்து சிறிய நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினான்.

"ஏன் இப்படித் தோன்றக் கூடாதோ? உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நான் தான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே நின்று விடுவேன்" என்று கூறிக் கொண்டே அவன் எழுதிக் கொண்டிருந்த நோட்டுப் புத்தகத்தைச் செல்லமாக இழுத்துப் பறித்தாள் பூரணி. அதை அவள் பிரித்துப் படித்து விடாமல் திரும்பப் பறிக்க முயன்றான் அரவிந்தன். முடியவில்லை. மான் துள்ளி எழுந்து பாய்வது போல் எழுந்து ஓடி விட்டாள் பூரணி. சிறிது நேரத்துக்கு முன் அவள் தன்னை நோக்கிச் சிரித்த சிரிப்பின் அழகை ஒரு கவிதையாக உருவாக்கி அந்த நோட்டுப் புத்தகத்தில் அவசரமாய் எழுதியிருந்தான் அரவிந்தன். அதை அவளே படித்து விடலாகாதே என்பதுதான் அவன் கூச்சத்துக்குக் காரணம். ஆனால் அவள் அதைப் பிரித்துப் படித்தே விட்டாள். 'பொன் காட்டும் நிறம் காட்டிப் பூக்காட்டும் வழிகாட்டி நகைக்கின்றாய்' என்ற அந்தக் கவிதை அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. கற்கண்டை வாயிலிட்டுக் கொண்டு சுவைக்கிற மாதிரி வாய் இனிக்க, நெஞ்சு இனிக்க அவள் அந்த வரிகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள். குறும்பு நகையோடு அவனை நோக்கிக் கேட்டாள்.

"உங்களோடு பழகுவதே பெரிய ஆபத்தான காரியமாக இருக்கும் போலிருக்கிறதே! பேசினால், சிரித்தால், நின்றால் நடந்தால் எல்லாவற்றையும் கவிதையாக எழுதி விடுகிறீர்களே?"

 

"என்ன செய்வது? நீயே ஒரு நடமாடும் கவிதையாக இருக்கிறாயே பூரணி!" என்றான் அவன்.

"அது சரி, 'பண்பாட்டுப் பெருமையெல்லாம் பயன்காட்டி நகைக்கின்றாய்' என்று எழுதியிருக்கிறீர்களே, அதற்கு என்ன பொருள்?" - தலையைச் சற்றே சாய்த்து விழிகளை அகலத் திறந்து நோக்கி மெல்லிய நாணம் திகழ அவனைப் பார்த்தும் பாராமலும் கேட்டாள் பூரணி. அவனும் புன்னகையோடு மறுமொழி கூறினான். "உன்னுடைய சிரிப்பிலும் பார்வையிலும் மிகப் பெரிதாக, மிகத் தூய்மையாக ஏதோ ஓர் ஆற்றல் தென்படுகிறது. அந்த ஆற்றலின் உன்னதத் தன்மையை எப்படிச் சொல்லால் வெளியிடுவதென்பது எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் அப்படிக் கூற முயன்றிருக்கிறேன்."

அருகில் நெருங்கிவந்து நோட்டுப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கிக் கொள்ளாமல் தனக்கு மிக அருகில் நீண்டிருக்கும் அவளுடைய வலது கையைச் சிரித்துக் கொண்டே பார்த்தான் அரவிந்தன். பவழ மல்லிகைப் பூவின் காம்பு போல் மருதாணிச் சிவப்பேறிய உள்ளங்கையையும் நகங்களையும், நீண்ட நளின மெல்லிய விரல்களையும் புதுமையாய் அப்போதுதான் பார்க்கிறவனைப் போல் பார்த்தான் அவன்.

"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?"

"பெண்ணின் விரல்களில் நளினம் இருக்கிறது. அதை மின்னலில் செய்திருக்கிறார்கள்" - என்று கூறிக் கொண்டே அவளிடமிருந்து நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டான் அரவிந்தன்.

"ஆண்களின் மனத்தில் கொடுமை இருக்கிறது. அதைக் கொடுமையால் செய்திருக்கிறார்கள். அப்படியில்லாவிட்டால் என்னைக் கேட்காமல், என் கருத்தைத் தெரிந்து கொள்ளாமல், 'என்னைத் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதிக்கச் செய்வதாக' நீங்கள் மீனாட்சிசுந்தரத்தினிடம் வாக்குக் கொடுப்பீர்களா?"

"நேற்று வரை அவருக்கு அப்படி வாக்களித்ததை எண்ணி நானே நொந்து கொண்டிருந்தேன் பூரணி! ஆனால் நேற்று மாலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என் மனத்தையே வேறு விதமாக நினைக்கச் செய்துவிட்டது. பிடிவாதமாக நீ தேர்தலில் நிற்கவேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்."

"நேற்று மாலையில் என்ன நடந்தது?" என்று கேட்டாள் பூரணி.

பர்மாக்காரரோடு கிராமத்திலிருந்து புறப்பட்டது தொடங்கி அவருடைய மாளிகையில் தான் அடைந்த அனுபவங்கள் வரை எல்லாவற்றையும் பூரணிக்குச் சொன்னான் அரவிந்தன். வியப்போடு எல்லாவற்றையும் கேட்டாள் பூரணி.

"மனிதர்கள் ஏழைமையின் காரணமாகத்தான் தீயவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்களே! இந்தப் பர்மாக்காரர் ஏன் இப்படிச் சூழ்ச்சியும், கெடுதலுமாக வாழ்கிறார்? இவருக்கு என்ன ஏழைமை? இன்று இந்தத் தேசத்தைச் சூழ்ந்து நிற்கும் அத்தனை பிரச்னைகளையும் வசதியுள்ளவர்கள்தாம் உண்டாக்கி வளர்த்திருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது பூரணி! ஏழைகள் அப்பாவிகள், வயிற்றுக்குப் போராடுவதற்கே அவர்களுக்கு நேரமில்லை. சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் நினைக்க அவர்களுக்கு நேரம் ஏது?"

"கீழான மனமும், கீழான எண்ணங்களும் கொண்டவர்கள் எத்தனை உயர்ந்த மேலான சூழ்நிலைகளிலிருந்தாலும் பழைய கீழ்மை வாசனைதான் இருக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சரின் அற்புதமான உபகதை ஒன்று உண்டு. அதை நீங்கள் படித்திருக்கிறீர்களோ, இல்லையோ சொல்லட்டுமா அரவிந்தன்?"

"சொல்லேன்! கேட்கிறேன்."

"ஒரு நாள் ஓரூரில் சாயங்காலச் சந்தையொன்று கூடியது. சில செம்படவப் பெண்கள் தாம் கொண்டு வந்த மீனை அங்கு விற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தனர். முன்னிருட்டு வந்துவிட்டது. மழையோ பாட்டம் பாட்டமாகப் பெய்யத் தொடங்கியது. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்? பக்கத்தில் ஒரு பூக்கடைக்காரனுடைய குடிசை இருப்பதைப் பார்த்து அங்கு ஓடினர். அந்தப் பூக்கடைக்காரன் மிகவும் நல்லவன்.

"அவன் அங்கு வந்த அப்பெண்களின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு தனது குடிசையின் ஒரு பகுதியை அவர்கள் தங்குவதற்காக ஒழித்துக் கொடுத்தான். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அவன் தங்களுக்காக ஒழித்துக் கொடுத்த அறைக்குள் சென்றனர். அந்த அறை 'கமகம'வென்று நறுமணம் வீசியதைக் கண்டு நாலுபக்கமும் பார்த்தார்கள். ஒரு மூலையில் சில பூக்கூடைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை வாடிக்கையாகக் கொடுக்கும் சிலருக்கு மறுநாள் காலையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டவை. ஆனால் மீன் வாசனையோடு பழகியவர்களுக்கு நறுமணம் வீசும் வாசனை எப்படிப் பிடிக்கும்? அந்த வாசனை பிடிக்காததனால் அவர்களால் அதைப் பொறுத்துக் கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. தூக்கமும் வரவில்லை. வாசனைகைலும் பரிமள சுகந்தங்களிலுமே பழகியவர்களுக்கு, நாற்றத்தின் நடுவே எவ்வாறு தூக்கம் வராதோ, அவ்வாறே, நாற்றத்திலேயே பழகிவிட்ட அவர்களுக்கு வாசனையின் நடுவே தூக்கம் வரவில்லை. அவர்களில் ஒரு புத்திசாலிப் பெண் மற்றவர்களைப் பார்த்து ஒரு யுக்தி சொன்னாள்.

"நமக்குத் தூக்கமோ வருவதாக இல்லை. இந்தப் பூக்கூடைகளை எடுத்து வேறிடத்தில் வைக்கவும் முடியாது. நம்மிடத்திலுள்ள மீன்கூடைகளைக் கொஞ்சம் நனைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டால் இந்தப் பூவாசனையும் மீறிக் கொண்டு நமக்குப் பழக்கமான நாற்றம் உண்டாகும். உடனே சுகமாய்த் தூங்கிவிடலாம்" என்றாள். யாவரும் அவளுடைய யோசனையை ஏற்று அப்படியே செய்து தமக்குப் பழக்கமான நாற்றத்தை உண்டாக்கிக் கொண்டு தூங்கினார்களாம். 'பழக்கமான வாசனை' என்று சொல்லுகிறோமே, அது இத்தகையதுதான் அரவிந்தன்! "உங்களைத் துன்புறுத்த நினைத்த பர்மாக்காரரையும் புதுமண்டபத்து மனிதரையும் இந்த உபகதையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்."

'எத்தனை அற்புதமான கருத்துக்களை மனத்தில் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். சங்கீதக் கச்சேரிகளுக்குக் கூட்டம் கூடுகிறார்போல் இவள் சொற்பொழிவுகளுக்குக் கூட்டம் கூடுவதின் இரகசியம் இந்தக் கருத்தழகு மிக்க பேச்சுத்தானே' என்று உள்ளத்துக்குள் வியந்து கொண்டான் அரவிந்தன்.

"அரவிந்தன்! நானாகவே என்னைப் பற்றி உங்களிடம் இப்படிச் சொல்லிக் கொள்கிறேனே என்று நினைக்காதீர்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு அடிக்கடி ஒரு கம்பீரமான கனவுத் தோற்றம் உண்டாகும். பசியும், நோய்களும், வறுமையும், வாட்டமும் கொண்டு தவிக்கும் இலட்சக்கணக்கான ஆண், பெண்களின் இருண்ட கூட்டத்துக்கு நடுவே நான் கையில் ஒரு தீபத்தை ஏந்திக் கொண்டு செல்கிறேன். என் கைத் தீபத்தின் ஒளி பரவி, பசியும் நோயும் அழிகின்றன. வறுமையும், வாட்டமும் தொலைகின்றன. இலட்சக்கணக்கான முகங்களில் என்னையும் என் தீபத்தையும் கண்டவுடன் மலர்ச்சி பொங்குகிறது. நான் மேலே மேலே முடிவற்று நிலையற்று அந்த ஒளி விளக்கோடு நடந்து கொண்டே இருக்கிறேன். நடக்க நடக்க அந்த விளக்கின் சுடர் பெரிதாகிறது. சுடர் பெரிதாகப் பெரிதாகச் சுற்றிலும் பரந்து தென்படும் மக்கள் வெள்ளம் என் கண்களுக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்களுக்கு அனுதாபப்படவும், இரக்கம் கொண்டு உழைக்கவுமே நான் பிறந்திருப்பதாக என்னுள் மிக ஆழத்திலிருந்து ஒரு புனிதக் குரல் ஒலிக்கிறது. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போல நினைவு மலராப் பருவத்திலேயே இரக்கத்துக்குரிய ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சேவை செய்வதற்கென்று நான் பிறந்திருக்கிறேன் என்று ஒரு தன் விழிப்பு அடிக்கடி என்னுள் உண்டாகிறது. இதயத்தின் அந்தரங்கமான பகுதியிலிருந்து ஏதோ ஒரு பேருணர்வு கண் திறந்து பார்த்துத் திடீர் திடீர் என்று என்னைப் பரீட்சை செய்கிறது. அப்படி அந்தப் பேருணர்வு என்னைப் பரீட்சை செய்யும்போது தற்சமயம் நான் செய்து கொண்டிருப்பனவெல்லாம் மிகச் சிறிய காரியங்கள் போலவும், பெரிய காரியங்களை இனிமேல் தான் செய்ய வேண்டும் போலவும் ஒரு துடிப்பை உணர்கிறேன். அதை உணரும் போது எனக்கு அழுகை வருகிறது."

பூரணி ஆவேசமாக இதைச் சொல்லிக் கொண்டு வரும்போது அவள் முகத்தில் தெய்வீகமானதொரு பேரொளி பூத்துப் பரவுவதையும் கண்களிலிருந்து முத்து முத்தாக நீர் உருள்வதையும் அரவிந்தன் கண்டான். அப்போது அவளையும் அவள் முகத்தையும் பார்த்தால் இனம்புரியாப் பரவசம் உண்டாவது போலிருந்தது அவனுக்கு. 'இத்தகைய விநோத உணர்வுதான் 'கௌதம புத்தர்' என்ற ஞானியை உண்டாக்கிற்று. இந்தத் தன்விழிப்புப் பரிட்சையில்தான் புத்தர் பிறந்தார். இந்த மாதிரிக் கண்ணீரோடு தான் அரண்மனையின் சுகபோகங்களிலிருந்து கீழ் இறங்கி நடந்தார்' என்றெண்ணியபடி பயபக்தியோடு அவள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன். அப்போதே தன்னைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாக அழியா அழகு ஒன்று அவள் உள்ளத்தில் வளர்ந்து கொண்டிருப்பது அரவிந்தனுக்கு புரிந்தது. 'பக்கத்தில் அமர்ந்து கலகலப்பாகச் சிரித்துப் பேசுகிறபோது அவளுடைய புற அழகும் சாதாரணமான பெண்தன்மையும் தான் தோன்றின. ஆனால் அந்த மனத்தின் அழகைக் காண நேர்கிற போதெல்லாம், தான் வெகு தொலைவுக்கு விலகித் தாழ்ந்து இறங்கிப் போய்விட்டது போல் தோன்றுகிறது. ஒரே காலத்தில் இரண்டுவிதமான பூரணிகளோடு பழகுகிறோமோ?' என்று அரவிந்தன் மருண்டான்.

'உணர்ச்சிகளும், ஆசைகளும், அன்பும், பெண்மையும் நிறைந்த பூரணி என்னும் அழகு மங்கை வேறு, கையில் தீபத்தை ஏந்திக் கொண்டு இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் உரிய மனித வெள்ளத்தினிடையே பாதை வகுத்துக் கொண்டு நடந்து செல்வதாகக் கனவு காணும் பூரணி வேறு. இதில் எந்தப் பூரணி அவனைக் காதலிக்கிறாள்? எந்தப் பூரணியை அவன் காதலிக்கிறான்? இந்த இரண்டு பூரணிகளில் அவனுடைய மானிடக் கைகளினால் எட்டிப் பறிக்க முடிந்த சாமானிய உயரத்தில் பூத்திருக்கும் பூரணி யார்? அல்லது பிஞ்சு அரும்புகிற காலத்தில் பூவிதழ்கள் கழன்று கீழே விழுந்து விடுவதைப் போல் இந்த இரண்டு பேரில் முடிவாகக் கனிகின்ற பூரணி ஒருத்தியாகத்தான் இருக்க முடியுமா?' நீண்ட நேர மௌனத்துக்குப் பின் அரவிந்தன் அவளிடம் மெல்லக் கேட்டான். "அரசியலில் பங்கு கொள்ள நேரிடுவதால் உன்னுடைய இந்த இலட்சியக் கனவு கலைந்து பாழாகிவிடும் என்று நீ பயப்படுகிறாய்?"

"பயப்படவில்லை! ஆனால் தயங்குகிறேன். நீங்களும் அவரும் சேர்ந்து வற்புறுத்தினால் அந்தத் தயக்கத்தைக் கூட நான் உதறிவிடும்படி நேரலாம்."

"நீ அப்படித்தான் செய்ய நேரிடும் போலிருக்கிறது பூரணி!"

"பார்க்கலாம்!"

இதன்பின் அவர்கள் வேறு செய்திகளைப் பற்றிப் பேசினார்கள். முருகானந்தம்-வசந்தா காதலைப் பற்றிக் குறிப்பாகச் சொன்னாள் பூரணி.

"உனக்கு முன்னாலேயே அந்த இரகசியம் எனக்குத் தெரியும் பூரணி. நண்பனின் காதல் வெற்றி பெறுவதற்கான சம்மதத்தையும் ஒருவாறு அந்த அம்மாளிடமிருந்து பெற்றுவிட்டேன்" என்று தொடங்கி முதல்நாள் மதுரையில் மங்களேசுவரி அம்மாளுக்கும் தனக்கும் நடந்த பேச்சுக்களைச் சொன்னான்.

"அந்த அம்மாளின் முற்போக்கு மனப்பான்மையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ஏற்றத்தாழ்வை எண்ணித்தான் நானும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன். அது இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். முடிந்தால் இன்றைக்கு இரவே அந்த அம்மாளிடம் பேசி முடிவு செய்து விடலாம். நாம் இருவரும் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள்" என்றாள் பூரணி.

"முடிவெல்லாம் ஏற்கெனவே செய்த மாதிரிதான். 'மாப்பிள்ளை முருகானந்தம்தான்' என்கிற ஒரு இரகசியத்தை மட்டும் இன்னும் நான் வெளியிடவில்லை" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அரவிந்தன். மாலையில் மெல்ல இருள் சூழ்ந்து சிலேட்டுப் பலகை நிறத்துக்கு மங்கத் தொடங்கியது. வெண்மை நுரைத்துப் பொங்கினாற் போல் மஞ்சு சூழ்ந்தது. அரவிந்தனும், பூரணியும் குறிஞ்சியாண்டவர் மலைப்பகுதியிலிருந்து எழுந்து நடக்கலாயினர். மலைப் பகுதிகளில் எல்லாப் பசுமையும் கலந்து மணக்கும் ஒருவித மணமும் குளிரும் கலந்த அந்தச் சூழ்நிலையில் அவர்கள் இரண்டுபேரும் தனியாக நடந்து கொண்டிருந்தார்கள். அரவிந்தனோடு வீட்டுக்குத் திரும்பி நடந்து கொண்டிருந்தபோது பூரணி தன் உள்ளத்தில் சில ஏக்கங்களைச் சுமந்து கொண்டிருந்தாள்.

இவரைக் காண வேண்டும் என்று நேற்றும் அதற்கு முன் தினங்களிலும் எவ்வளவு ஏங்கிக் கொண்டிருந்தேன். எவ்வளவு தாகமும் தாபமும் கொண்டிருந்தேன். பார்த்த பின்பும் அவற்றை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பும், அறிவும், மனம் கலந்து அன்பு செலுத்துவதற்குப் பெரிய தடைகளா! இவரிடம் என் அன்பையெல்லாம் கொட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏதேதோ அறிவுரை கூறுவது போல் பேசிவிட்டேன். எனக்கு எத்தனையோ அசட்டு இலட்சியக் கனவுகள் சிறு வயதிலிருந்து உண்டாகின்றன. அதை இவரிடம் சொல்லி இவருடைய மனம் தாழ்வு உணர்ச்சி கொள்ளும்படி செய்து விட்டேனே? இவர் என்னைப் பற்றி இன்று என்னென்ன நினைத்திருப்பாரோ? என்னைப் பற்றி அழகு அழகாகக் கவிதை எழுதினாரே? அதைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் சொல்லக்கூடத் தோன்றாமல் போய்விட்டதே. சே! சே! அன்பு வெள்ளமாக நெகிழ்ந்துவிடத் தெரிய வேண்டாமோ இந்த உள்ளத்துக்கு? அன்று தலை நிறையப் பூவும், கைகள் நிறைய வளையல்களும், மனம் நிறைய இவரைப் பற்றிய தாகமுமாக நிலைக்கண்ணாடிக்கு முன்னால் பித்துப் பிடித்தவள் போல் வீற்றிருந்தேனே! அந்த ஏக்கம், அந்த நெகிழ்ச்சி இன்று இவரருகில் நெருங்கி உட்கார்ந்திருந்த போது, உரையாடினபோது எங்கே போனது? பக்திக்கும் காதலுக்கும் அகங்காரம் இருக்கலாகாது என்று பெரியவர்கள் சொல்லியிருப்பது எத்தனை உண்மை! என்னுடைய அகங்காரத்தைக் குத்திக் காட்டும் நோக்கத்தோடுதான் 'உயரத்தில் ஏறிச் செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே தங்கிவிடுவேன்' என்றாரா? அல்லது வேடிக்கையாகச் சொன்னாரா? பரமஹம்சருடைய கதையையும், என்னுடைய இலட்சியக் கனவுகளையும் உண்மையாகவே மனம் உருகித்தான் இன்று இவரிடம் கூறினேன். இவர் என்னிடம் கலகலப்பாகப் பேச முடியாமல் போனதற்கு என்னுடைய இந்த அதிகப் பிரசங்கித்தனமும் ஒரு காரணமோ? குறும்புப் பேச்சும் சிரிப்புமாக மனம் விட்டுப் பழகும் இவர், இன்று நான் இவற்றையெல்லாம் கூறியபின் எதையோ குறைத்துக் கொண்டு ஏதோ ஓர் அளவோடு பழகுவது போல் அல்லவா தெரிகிறது?

அவள் மனத்தின் சிந்தனைத் தவிப்புத் தாங்கமுடியாத எல்லையைத் தொட்டது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருவரும் வழிப்போக்கர் போல் நடந்து செல்வது அவளுக்கு என்னவோ போலிருந்தது. அந்த அவசியமற்ற மௌனத்தை அவளே துணிந்து கலைத்தாள். "இன்று உங்களுக்கு என்ன வந்துவிட்டது. ஒன்றும் பேசாமல் வருகிறீர்கள்? என் மேல் எதுவும் வருத்தமோ?"

இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். அவன் எப்போதும் இப்படிச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் அவள் உள்ளம் தவித்தது.

"நன்றாயிருக்கிறதே கதை! நீ ஏதோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு வருவதுபோல் தோன்றியது. அதனால்தான் பேசவில்லையே தவிரப் பேசாமலே நடந்து போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நான் ஒன்றும் தீர்மானம் செய்து கொள்ளவில்லையே?"

'பண்பாட்டுப் பெருமையெல்லாம் பயன் காட்டி நகைக்கின்றாய்' என்று அவளுடைய சிரிப்புக்கு, இலக்கணம் வகுத்துச் சொன்னாற்போல் அரவிந்தன் பாடினானே, மெய்ப்பிப்பது போல் நகைத்தாள் பூரணி.

"அனுப்பியிருந்த புத்தகங்களையெல்லாம் படித்தாயா பூரணி?"

"எல்லாவற்றையும் மனந்தோய்ந்து அனுபவித்துப் படித்தேன். இந்த மலைப்பிரதேசத்துச் சூழ்நிலையே படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் அதிகமாக சுறுசுறுப்பை அளிக்கிறது."

வானம் நன்றாக இருண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூற்றல் விழுந்தது. இருவரும் வேகமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே மீனாட்சிசுந்தரம் பட்டிவீரன் பட்டியிலிருந்து வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய கார் முன்புறம் நின்று கொண்டிருந்ததிலிருந்தே அதைத் தெரிந்து கொண்டார்கள். மங்களேசுவரி அம்மாள் முதலியவர்களும் ஏரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தார்கள். அன்று இரவும், மறுநாளும் அவர்கள் சேர்ந்து பேசி முடிவாகச் சில தீர்மானங்களைச் செய்து கொண்டார்கள். நீண்ட நேர விவாதத்துக்கும் மறுப்புகளுக்கும் பிறகு பூரணி தேர்தலில் நிற்பதற்குச் சம்மதம் அளிக்க வேண்டியதாயிற்று. அரவிந்தனே தன்னை வற்புறுத்தி வேண்டிக் கொள்ளும்படியான சூழ்நிலை ஏற்பட்ட போது அவளால் தட்டிக் கழிக்க முடியவில்லை. அவள் நிற்க மறுத்துவிட்டால் பர்மாக்காரருடைய கெடுபிடிகளுக்கும், மிரட்டலுக்கும் பயந்துவிட்டதாக ஆகும் என்பதையும் அரவிந்தன் முன்பே குறிப்பாக அவளுக்குச் சொல்லியிருந்தான். எப்படியோ தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியான சூழ்நிலை அவளை அந்தப் பொறியில் மாட்டி வைத்துவிட்டது.

கூச்சத்தோடு நழுவ முயன்ற முருகானந்தத்தை இழுத்து வந்து, "இவன் தான் அம்மா உங்க மாப்பிள்ளை! சந்தேகமிருந்தால் உங்கள் பெண்ணையே ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்" என்று அரவிந்தன் கூறியபோது வசந்தா சிரிப்பும் நாணமும் நிறைந்த முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டு உள்ளே எழுந்து ஓடிவிட்டாள். திடீரென்று ஆரம்பமாகிய அந்த நாடகத்தைக் கண்டு திணறி வெட்கப்பட்டுப் போனான் முருகானந்தம். வசந்தா அறைக்குள்ளிருந்தே ஒட்டுக் கேட்டுப் பூரித்துக் கொண்டிருந்தாள்.

 

"திருப்பரங்குன்றம் கோயிலில் வைத்து எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி விடலாம்" என்று மீனாட்சிசுந்தரம் கூறியதை மங்களேசுவரி அம்மாள் ஒப்புக் கொள்ளவில்லை.

"மூத்த பெண்ணின் கல்யாணம் வீட்டிலேயே நடக்க வேண்டும். ஏனோ தானோ என்று கோயிலில் நடத்தி முடிக்க மாட்டேன். இலங்கையிலிருந்து மதுரை வந்த பின் வீட்டில் ஒரு சுபகாரியமும் நடக்கவில்லை. இந்தக் கல்யாணத்தை என் வீட்டில்தான் செய்யப் போகிறேன்."

"என்னடா முருகானந்தம்! உனக்குச் சம்மதந்தானே?" என்றான் அரவிந்தன். அப்போது முருகானந்தத்தின் முகம் அற்புதமாய்ச் சிரித்தது.

"திருமணத்துக்காக வசந்தாவுக்குத் தைக்கும் புதுத் துணிகளை மட்டும் முருகானந்தத்திடம் கொடுத்து விடுங்கள்" என்று கூறி அவன் முகத்தை இன்னும் அற்புதமாய்ச் சிரிக்க வைத்தாள் பூரணி. திருமணத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பமானதும் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கே ஒரு புதுக்களையும் மங்கலமும் சேர்ந்துவிட்டாற் போலிருந்தது.

மறுநாள் இலங்கை, மலேயா, கல்கத்தா முதலிய இடங்களிலிருந்து வந்த அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு சொற்பொழிவுகளுக்குப் போகச் சம்மதம் தெரிவித்து மங்கையர் கழகத்துக்கு மறுமொழி எழுதிவிட்டாள் பூரணி. எங்கும், எப்பொழுதும், புறப்பட்டுப் போவதற்கு வசதியான வெளிநாட்டுப் பயண அனுமதியை 'இண்டர்நேஷனல் பாஸ்போர்ட்டாக' வாங்கிவிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அரவிந்தன். பாஸ்போர்ட்டுக்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்காக அன்று மாலை பூரணியை அங்குள்ள ஒரு புகைப்பட நிலையத்துக்கு அழைத்துப் போயிருந்தான் அரவிந்தன். அந்தப் புகைப்பட நிலைய உரிமையாளர் அவர்களைப் புதுமணம் புரிந்து கொண்ட இளம் ஜோடியாக எண்ணியதால் ஏற்பட்ட நளினமான குழப்பங்களில் சிறிது நேரம் இருவருமே நாணிக் கூசி நிற்கும் நிலையாகி விட்டது. பூரணியைப் பாஸ்போர்ட் அளவு படம் எடுத்தபின், அவர்கள் இருவரையும், அருகில் ஒன்றாக நிறுத்தி ஒரு படமும் எடுத்துக் கொண்டார் உரிமையாளர். இரண்டு பேருமே பார்க்க இலட்சணமாக இருந்ததினால் காட்சி அறையில் (ஷோரூமில்) அந்தப் படத்தை வைக்கலாம் என்பது அவர் விருப்பமாயிருந்தது.

புகைப்பட நிலையத்தில் தற்செயலாக நிகழ்ந்த இந்த இன்பக் குழப்பங்களால் நெஞ்செல்லாம் மெல்லிய நினைவுகளும் கனவுகளும் குமிழியிட அரவிந்தனும் பூரணியும் வீடு திரும்பியிருந்தார்கள். அப்போது மங்களேசுவரி அம்மாளும் மீனாட்சிசுந்தரமும் வீட்டு வாயிலிலேயே அவர்களை எதிர்கொண்டனர்.

 

"உன்னிடம் தனியாக ஒரு சங்கதி கேட்க வேண்டும். கொஞ்சம் இப்படி என்னோடு வருகிறாயா?" என்று மங்களேசுவரி அம்மாள் பூரணியை தனித்து அழைத்துப் போனாள்.

அதே வார்த்தையை அரவிந்தனிடம் கூறி அவனை வேறொருபுறம் தனியாக அழைத்துக் கொண்டு போனார் மீனாட்சிசுந்தரம். இருவர் நெஞ்சிலும் பெரிதாய்ப் புரிந்தும் புரியாததுமாய்க் கேள்விக்குறிகள் பூத்துப் பொலிந்து நின்றன.

 

26

 

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால்

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல்

இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை

மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.

                                                                                                              -- திருமந்திரம்

 

அரவிந்தனும் பூரணியும் புகைப்பட நிலையத்துக்குச் சென்றிருந்தபோது வீட்டில் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் அவர்கள் இருவரையும் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"எனக்கு ஒன்று தோன்றுகிறது. என் பெண் வசந்தாவின் திருமணத்தை மட்டும் தனித் திருமணமாக நடத்துவதற்குப் பதிலாக அதே மண மனையில் இவர்களுக்கும் முடிபோட்டு இணைத்துவிட்டால் என்ன? இவர்களும் தான் எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துவிட முடியும்? ஆக வேண்டிய நல்ல காரியம் காலா காலத்தில் ஆனால் தானே நன்றாக இருக்கும்? பூரணிக்கு வயதும் கொஞ்சமா ஆகிறது?" என்று மங்களேசுவரி அம்மாள்தான் முதலில் அந்த பேச்சைத் தொடங்கினாள். சரியான நேரத்தில் பொருத்தமாக அந்த அம்மாள் அதை நினைவுபடுத்துவதாகத் தோன்றியது மீனாட்சிசுந்தரத்துக்கு. அவர் ஒப்புக் கொண்டார்.

"செய்ய வேண்டியதுதான்! எனக்குக் கூட முன்பே இப்படி ஒரு நினைப்பு உண்டு. அந்தப் பெண் பூரணிக்கு இதையெல்லாம் காலம் நேரம் பார்த்துச் செய்வதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? அரவிந்தன் நான் சொன்னால் கேட்பான். அவனுக்கும் தான் யார் இருக்கிறார்கள்? அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நாமாகப் பார்த்துச் சொல்லித் தூண்டிச் செய்து வைத்தால் தான் நல்லது. இரண்டுமே அப்பாவிகள். இலட்சியம், கொள்கை, அது, இது என்று ஒரேவிதமான மனமுடையவர்கள். வரட்டும், இருவரையும் முறைக்காக ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டு சேர்த்தே ஏற்பாடு செய்துவிடுவோம்..."

 

"நான் அவளைக் கேட்டுக் குறிப்பறிந்து கொள்கிறேன். நீங்கள் அரவிந்தனைக் கேட்டு விடுவது நல்லது. நாம் தான் இவர்களுக்கு எல்லா உறவும். நீங்கள் அரவிந்தனின் தந்தையாகவும், நான் பூரணியின் தாயாகவும் பாவனை செய்து கொண்டு இருந்து நாமாகப் பார்த்து நடத்த வேண்டிய நல்ல காரியம் இது" என்று மங்களேசுவரி அம்மாள் கூறி வற்புறுத்தினாள்.

இந்தத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகத்தான் புகைப்பட நிலையத்திலிருந்து திரும்பிய அரவிந்தனையும் பூரணியையும் இதைக் கேட்டு முடிவு செய்வதற்காக அவர்கள் தனித்தனியே அழைத்துக் கொண்டு போனார்கள்.

மங்களேசுவரி அம்மாள் தன்னிடம் அதுபற்றிக் கூறிக் கேட்டபோது பூரணி மணப் பெண்ணாகவே மாறிவிட்டது போல் நாணித் தலைகுனிந்து நின்றாள். பரிபூரணமான இன்ப அனுபவத்தை மனம் அடைகிறபோது நெஞ்சுக்கும் நினைப்புக்கும் தான் வேலை. வாய்க்கும் நாவுக்கும் வேலை இல்லை. வாயும் நாவும் பேசும் ஆற்றல் இழந்து போகின்றன. பதில் சொல்லும் உணர்வு தடைப்பட்டுப் போகிறது. எதிரே நின்று கொண்டு கேட்கும் மங்களேசுவரி அம்மாளின் முகத்தை நேரே பார்க்கக் கூசிற்று பூரணிக்கு. தன்னாலும், வெல்ல முடியாத அளவற்ற நாணத்தை அப்போது உணர்ந்து ஒல்கி ஒசிந்து நின்றாள் அவள். அந்த ஒரே கணத்துக்குள் பூரணியின் முகத்தில் புதுப்புது அழகுகள் பூத்தன. ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடுவில் மேடையேறி நின்று ஆற்றொழுக்குப் போல் இடையறாமல் பெரிய கருத்துக்களைப் பேசும் இலட்சிய நங்கை பூரணியா அப்படி நாணி நிற்கிறாள் என்று மங்களேசுவரி அம்மாளுக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது. பெண் எந்த உணர்ச்சிகளைத் தனக்கே உரிமையாகப் பெற்றிருப்பதால் பெண்ணாக இருக்க முடிகிறதோ, அந்த மெல்லிய உணர்ச்சிகளை அவளால் ஒரு போதும் விடமுடியாதென்று அந்த அம்மாளுக்குத் தோன்றியது.

"என்னடி பெண்ணே! நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நீயானால் பதில் சொல்லாமல் நாணிக் கொண்டே நிற்கிறாய்? என்னிடம் சொல்வதற்கு என்ன வெட்கம் வேண்டிக் கிடக்கிறது. நீயும் பச்சைக் குழந்தை இல்லை, அரவிந்தனும் பச்சைக் குழந்தை இல்லை. எங்களை அதிகம் சோதனை செய்யாமல் 'சரி' என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டீர்களானால் திருமணங்களைச் சேர்த்தே நடத்திவிட வசதியாக இருக்கும்."

மேலும் மௌனம் சாதித்தாள் பூரணி. அவளுடைய கண்களும் முகமும் நாணம் சுரந்து, நகை சுரந்தது. உணர்வுகள் சுரந்து தோன்றின.

"என்னை உன் தாய் போல் நினைத்துக் கொண்டு சொல் பூரணி! நான் உனக்கு அந்நியமானவள் இல்லை."

 

நீண்ட நேர மௌனத்துக்குப் பின் உள்ளத்து உணர்வுகளின் இனிமையெல்லாம் கலந்த கோமளமான மெல்லிய குரலில் தயங்கித் தயங்கிச் சொன்னாள் பூரணி. "அவருக்கு எப்படி விருப்பமோ அப்படியே செய்யுங்கள். அவருக்குச் சம்மதமானால் எனக்கும் சம்மதம்தான்."

"அவருக்கு என்றால் எவருக்கு?"

"அவருக்குத்தான்." ஈடில்லா அழகும், இணையில்லாப் புன்னகையுமாகச் சிவந்து சிரித்தது பூரணியின் முகம். சொல்லிவிட்டு அவள் அம்மாளின் முன்னாலிருந்து நழுவி ஓடிவிட்டாள். அவளுடைய உள்ளம் துள்ளியது, பொங்கியது, பூரித்தது. மென்மையும் நுணுக்கமும் பொருந்திய கனவுகளும் நினைவுகளும் அவளுடைய மனப் பரப்பெல்லாம் எழுந்தன.

பூரணியை ஒருவாறு சம்மதிக்கச் செய்துவிட்ட மன நிறைவோடு நின்ற மங்களேசுவரி அம்மாள், மீனாட்சிசுந்தரம் தொங்கிய முகத்தோடு திரும்பி வருவது கண்டு திகைத்தாள்.

"என்ன காயா, பழமா?"

"காய்தான், அவன் சம்மதிக்கவில்லை."

"காரணம் என்னவாம்?"

"காரணமெல்லாம் சொல்லிக் கொண்டு நின்று நிதானமாய்ப் பேசவே இல்லை. 'இப்போது இதற்கு அவசரமில்லை' என்று ஒரே வாக்கியத்தில் அவன் பேச்சை முடித்துக் கொண்டு போய்விட்டான்."

"நீங்கள் விவரமாக அவனுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதோ?"

"கேட்டால்தானே சொல்லலாம்."

"அந்தப் பெண்ணே சம்மதித்த மாதிரிச் சொல்லிவிட்டது. அரவிந்தனுக்கு மட்டும் என்ன தடை? இப்போது அரவிந்தன் எங்கே? நான் சொல்லிப் பார்க்கிறேன்."

"தோட்டத்துப் பக்கமாகப் போனான். நீங்கள் வேண்டுமானால் போய்ச் சொல்லிப் பாருங்கள்" என்று நம்பிக்கையில்லாத குரலில் பதில் சொன்னார் மீனாட்சிசுந்தரம். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனைத் தேடிக் கொண்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள்.

அப்போது காரில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மலையைச் சுற்றிக் காட்டுவதற்காகப் போயிருந்த முருகானந்தமும் வசந்தாவும் திரும்பி வந்தார்கள். வசந்தா காரிலிருந்து குழந்தைகளை இறக்கி உள்ளே கூட்டிக் கொண்டு போனாள். முருகானந்தம் மீனாட்சிசுந்தரத்துக்கு அருகில் வந்து மரியாதையோடு அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டான்.

 

"உட்கார் தம்பி. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்றார் மீனாட்சிசுந்தரம்."

"பரவாயில்லை. சொல்லுங்கள்" என்று நின்று கொண்டே முருகானந்தம் அவர் கூறுவதைக் கேட்கத் தயாரானான்.

"அரும்பாடுபட்டு ஒருவழியாக இந்தப் பெண்ணிடம் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதம் வாங்கிவிட்டோம். நேற்று அரவிந்தன் வந்து சொல்லிய விவரங்களிலிருந்து பார்த்தால் போட்டியும் எதிர்ப்பும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. பூரணி வெற்றி பெறுவதற்காக இராப்பகல் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் நாம். நான் தனியாக என்ன செய்ய முடியும்? உங்களையெல்லாம் நம்பித்தான் இதில் இறங்கியிருக்கிறேன். 'பர்மாக்காரரும் புது மண்டபத்து ஆளும்' ஒன்று சேர்ந்தால் வேறு வினையே வேண்டாம். மதுரையையே எரித்துவிடுகிற அளவு கெட்ட பயல்கள் இரண்டுபேரும்."

"மதுரையை எரித்துவிடுகிற பெருமை இன்று இவர்களுக்குக் கிடைக்காது, ஐயா. தனக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்பதற்காக மதுரையை எரிக்கும் துணிவு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகி என்ற சோழநாட்டுப் பெண்ணுக்கு ஏற்பட்டது. இவர்களோ நியாயத்தையே எரித்து விடப் பார்க்கிற ஆட்கள்" என்று சொல்லிச் சிரித்தான் முருகானந்தம்.

"நீ சொல்கிறாய் தம்பி! ஆனால் இன்றைய தேர்தல் முறைகளிலும் போட்டியிலும் நியாயத்தை யார் பார்க்கிறார்கள்? என்னென்னவோ சூழ்ச்சிகளையெல்லாம் கூசாமல் செய்கிறார்களே. நேற்று அரவிந்தன் சொன்னதைக் கேட்டாயோ, கூட்டிக் கொண்டு போய்ப் பயமுறுத்தி ஆள்விட்டு அடிக்கச் சொல்கிற அளவு நியாயம் வாழ்கிறது நம்முடைய ஊரில்!"

"இருக்கட்டும்! அரவிந்தனை அப்படிச் செய்ததற்கு அந்த ஆளை நான் சும்மா விடமாட்டேன் ஐயா. என்னிடமும் ஆட்கள் இருக்கிறார்கள்" என்று கொதிப்பேறின குரலில் சொன்னான் முருகானந்தம்.

"சே! சே! நாய் கடிக்க வந்ததென்பதற்காகப் பதிலுக்கு நாமும் கடிக்கப் போவதா? நம் முயற்சிகளை நாம் நேரான வழிகளிலேயே செய்ய வேண்டும்." இவ்வாறு அவர்கள் உரையாடல் தேர்தல் ஏற்பாடுகளைப் பற்றி வளர்ந்தது. அரவிந்தன் தோட்டத்துப் புல்தரையில் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தான். மங்களேசுவரி அம்மாள் வந்து அவனுக்கு எதிர்ப்புறம் சிறிது தள்ளி அமர்ந்து கொண்டு "நீங்கள் அப்படிச் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மறுபடியும் விவரமாகப் பேசி எப்படியும் உங்களைச் சம்மதிக்கச் செய்து விடலாமென்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறேன்" எனப் பேச்சைத் தொடங்கினாள்.

உடனடியாகப் பதில் ஒன்றும் சொல்லாமல் அந்த அம்மாள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன். மேலும் தொடர்ந்தாள் அந்த அம்மாள்.

"நாங்கள் இரண்டுபேரும் உங்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவங்களிலும் மூத்தவர்கள், நல்லதற்குத்தான் சொல்கிறோமென்று எங்களை நம்புங்கள். வசந்தாவின் திருமணத்தோடு பூரணியின் திருமணத்தையும், என் செலவில் நன்றாக நடத்திப் பார்த்துவிட வேண்டுமென்பது எனக்கு ஆசை. நீங்கள் புகைப்படம் எடுத்து வரச் சென்றிருந்தபோது நானும் அச்சகத்தின் முதலாளியும் இதுபற்றிப் பேசினோம். நான் கூறிய ஏற்பாடு அவருக்கும் பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டார். நீங்கள் வந்ததும் உங்களை ஒரு வார்த்தை கேட்கிறேன் என்றார். கேட்டபோது அவசரமில்லை என்று சொல்லி மறுத்து விட்டீர்களாம்."

"மன்னிக்க வேண்டும் அம்மா. இப்போது உங்களிடமும் அதே முடிவைத்தான் நான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. எங்கள் திருமணத்துக்கு இவ்வளவு அவசரம் தேவை இல்லை. நாங்கள் சிறு குழந்தைகள் இல்லை. இரண்டு பேரும் விபரம் தெரிந்தவர்கள். நீங்கள் நினைவுபடுத்துகிற மாதிரி மண வாழ்வுக்கு அவசரமோ, அவசியமோ இருவருக்குமே இப்போது இல்லை."

"ஏன் இல்லை? உங்களுக்கும் அவளுக்கும் வயது என்ன குறைவாகவா ஆகிறது, அரவிந்தன்? ஊர் உலகத்துக்கு ஒத்தாற் போல் நாமும் நடந்து கொள்ள வேண்டும். நாலு பேர் நாலுவிதமாகப் பேசுவதற்கு இடம் வைத்துக் கொள்ளக்கூடாது. இந்தத் திருமணம் நடப்பதினால் பூரணிக்கோ உங்களுக்கோ ஒரு குறைவும் வந்துவிடாது. வழக்கம் போல் அவள் தன்னுடைய பணிகளைச் செய்து கொண்டிருக்கலாம். நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை."

இதைக் கேட்டு அரவிந்தன் மெல்லச் சிரித்தான். "தயக்கத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றைச் சொல்வோம். சிலவற்றைச் சொல்ல முடியாது. இன்னும் சிலவற்றைச் சொன்னாலும் உங்களுக்கு விளக்கிக் கொள்ள முடியாது."

"அதெல்லாமில்லை அரவிந்தன். நீங்கள் என்னென்னவோ சம்பந்தமில்லாமல் சொல்லி என்னை ஏமாற்றித் தட்டிக் கழித்துவிடப் பார்க்கிறீர்கள்."

சிரிப்பு மறைந்து உருக்கமாக எதையோ பேசத் தொடங்கப் போகிற பாவனையில் அரவிந்தனின் முகம் மாறியது. அவன் பெருமூச்சு விட்டான். கிழித்துச் சிதறின கருநீலப் பட்டுத் துணிகள் போல் சிதறல் சிதறலாக மேகத் துணுக்குகள் நீந்தும் வானத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். இலட்சியத் துடிப்பும் உயர்ந்த தன்மையும் பொருந்தியவற்றை நினைக்கும் போதும், பேசும்போதும், வழக்கமாக அவனுடைய கண்களிலும், முகத்திலும் வருகிற ஒளி அப்போதும் வந்து சாயலிட்டு நின்றது. அவன் மங்களேசுவரி அம்மாளை நோக்கிச் சொல்லலானான்.

"அம்மா! இன்னும் சிறிது காலத்திற்கு மனத்தினால் வாழ்ந்து கொண்டிருக்க மட்டும் எங்களை அனுமதியுங்கள். உடலால் வாழும் வாழ்க்கையைப் பற்றி நான் இன்னும் எண்ணிப் பார்க்கவே இல்லை. உடம்பைப் பற்றித் தொடர்கிற வாழ்க்கை ஒரு பெரிய பொய் மயக்கமாகவே இந்த விநாடி வரை எனக்குத் தோன்றுகிறது. காக்கை கூட்டில் இடப்பட்ட குயில் முட்டையைத் தன்னுடையது, தனக்கேயுரியது என்று தவறாக மயங்கிப் பேணி வளர்க்கும் பேதைக் காக்கையைப் போல் உடம்பைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு வாழத் தயங்குகிறேன் நான். குயில் முட்டை சிதைந்து குஞ்சு பெரிதாக வளர்ந்து இனிய குரலில் அழுதொழுகக் கூவியவாறே காக்கைக் கூட்டிலிருந்து அது பறக்கும் போதுதான் காக்கை தான் வளர்த்தது தன் குஞ்சன்று, குயிற் குஞ்சு என்று உணர்ந்து ஏமாற முடிகிறது. எனக்கும் பூரணிக்கும் எங்களைப் புரிந்து கொள்ளாமல் இப்போதே அந்த ஏற்பாட்டையெல்லாம் நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டு செய்தால் நாங்கள் வாழ்வதும் காக்கை, குயில் மூட்டையை அடைகாத்த கதையாக ஏமாற்றத்தில் தான் முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது."

"என்னவோ புத்தகங்களில் படிக்கிற மாதிரி சொல்கிறீர்கள். உங்கள் தத்துவம் எனக்கு விளங்கவில்லை. பொருத்தமாகவும் படவில்லை. இருவரும் ஆசையுடனும் அன்புடனும் பழகுகிறீர்கள். புதிதாக, அதிசயமாக உங்களை ஒன்றும் செய்து கொள்ளச் சொல்லவில்லை. உலகத்தில் சாதாரணமாக எல்லோரும் செய்து கொள்வதைத்தான் நீங்களும் செய்து கொள்ள வேணுமென்று வற்புறுத்துகிறேன். உலகத்துக்கு ஒப்ப, நாலு பேரறிய மணம் செய்து கொண்டுவிட்டால் அப்புறம் ஆயிரம் இலட்சியங்களைப் பேசலாம், கடைப்பிடிக்கலாம், உங்களை ஏனென்று கேட்க மாட்டார்கள்."

"நீங்கள் எந்த வாழ்க்கையைப் பற்றி நினைவூட்டுகிறீர்களோ, அந்த வாழ்க்கையை எங்கள் மனங்களிலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் ஒரே சமயத்தில் இரண்டுவிதமான வாழ்க்கையை நடத்த முடியும். எந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்று தவிக்கிறோமோ அந்த வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் ஏற்படும்போதே ஒருமுறை வாழ்ந்துவிடலாம் அம்மா! எண்ணங்களில் வாழும் வாழ்வு உயர்ந்தது. அதற்கு அழிவில்லை. மிக உயர்ந்த வாழ்க்கையை மண்ணில் வாழ முடியாதோ என்று எனக்கும் பயமாக இருக்கிறது. மண் குறைபாடுகளும் அழுக்குகளும் நிறைந்ததாயிருக்கிறது. அதனால் தான் இன்னும் சிறிது காலம் எங்களை மனங்களில் மட்டும் வாழ அனுமதியுங்கள் என்று உங்களைக் கெஞ்சுகிறேன்."

"எனக்கும் உங்களைப் போலவே மேற்கோள், எடுத்துக் காட்டு எல்லாம் சொல்லிப் பேசுவதற்குத் தெரியும் அரவிந்தன். 'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என்றுதான் நம்முடடய பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்."

"பெரியவர்கள் அதைச் சொல்லிய காலத்து வாழ்க்கைச் சூழ்நிலை வேறு. இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை வேறு. ஏற்கெனவே நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மற்றவர்கள் புதிதாக நல்லவண்ணம் வாழ வந்துவிடலாகாதே என்று மனத்தில் அழுக்காறு கொள்கிற காலம் அம்மா இது. பாட்டில் மூடியைப் போல், தான் வசதியாயிருக்கிற ஒரு தொழிலில் அதே வசதியடையும் திறமையுள்ள பிறர் நுழைந்து விடாமல் மூடிக் காக்கும் சூழ்ச்சியான மனிதர்கள் இன்றைய வாழ்க்கையில் நிறைய இருக்கிறார்கள். அதனால் தான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் ஒப்புரவு வாழ்வில் குன்றியுள்ளது."

"பேச்சை எங்கேயோ மாற்றிக் கொண்டு பேசுகிறீர்கள். உங்கள் திருமண ஏற்பாடு பற்றி பூரணியிடம் கேட்டேன். அவள் தேவலாம், 'அவருக்கு விருப்பமானால் எனக்கும் விருப்பம்' என்று சுருக்கமாக இணங்கி வழிக்கு வந்த மாதிரி பதில் சொல்லி விட்டாள். நீங்கள் தான் சுற்றி வளைத்து இழுத்தடிக்கிறீர்கள். முடிவாக ஒன்றும் சொல்லமாட்டேனென்கிறீர்கள்."

"வேறென்னமா செய்வது? கழுத்தில் மூன்று முடிச்சிட்டு உரிமை கொண்டாடி ஆளமுடிந்த சாதாரணப் பெண்ணாக இன்னும் அவளை என்னால் நினைக்க முடியவில்லை. பூரணிக்குள்ளேயே இன்னொரு பூரணியும் இருக்கிறாள். அவள் துயரம் நிறைந்த மனித வெள்ளத்தின் நடுவே ஒளி விளக்கேற்றி நடந்து போவதாகக் கனவு காண்கிற பூரணி. காக்கை குயிற் குஞ்சை அடைகாத்து ஏமாறுவது போல் அவள் விடுபட்டுப் பறந்து போகத் துடிக்கும் நாள் வந்தால் நான் அன்று ஏமாந்து நிற்பேன். அவள் உயரப் போய் விடுவாள். நான் கீழேயே நிற்பேன். நாங்கள் இரண்டு பேருமே உயரத்தில் ஏறிச் செல்கிறோம். அதற்கு இந்த வாழ்க்கைப் பிணைப்பு அவசியமில்லை. மனங்களின் பிணைப்பு மட்டுமே போதும். என்னை வற்புறுத்தாதீர்கள். சிறிது காலத்துக்கு இப்படியே இருக்க விடுங்கள்" என்று சொல்லி விட்டுப் புல் தரையிலிருந்து எழுந்தான் அவன். இந்தப் பேச்சை இதற்கு மேல் அவன் தொடர விரும்பவில்லை என்பது மங்களேசுவரி அம்மாளுக்கு விளங்கிவிட்டது. அவன் கூறிய காரணங்களும் தத்துவங்களும் அந்த அம்மாளுக்கு அசட்டுத்தனமாகத் தோன்றின. ஆனால் அவன் பிடிவாதமாக இருந்தான். புரிந்து கொள்ளவும் புரியச் செய்யவும் சாத்தியமில்லாததான ஒரு விஷயத்தை அரவிந்தன் மனத்தில் வைத்துக் கொண்டு தவிப்பதாக அந்த அம்மாளுக்குத் தோன்றியது.

எது எப்படியானால் என்ன? மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் திட்டமிட்டபடி பூரணியின் திருமணத்தையும் சேர்த்து நடத்தும் தீர்மானம் முறிந்துவிட்டது. அன்று இரவும், அதன்பின் மறுநாள் காலையிலும் பூரணி, அரவிந்தனின் கண்பார்வையில் படவே இல்லை. மறுநாள் காலை கோடைக்கானல் மலைத் தொடர் முழுவதும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. நீலம் போர்த்த மாதிரி மலை முழுவதும் குறிஞ்சிப் பூக்கள் தெரிந்தன. பத்து பன்னிரண்டு நாட்களாகவே அங்கும் இங்குமாகச் சில சில குறிஞ்சிப் பூக்கள் தென்பட்டன. முதல் நாள் உண்டான சாரல் காற்று பருவ மாறுதல்களின் காரணமாக அன்று எங்கு நோக்கினும் அள்ளிக் கொட்டினாற் போல் குறிஞ்சி பூத்துக் குலவிக் கொண்டிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் அந்த ஆண்டு மறுபடியும் குறிஞ்சி பூத்திருந்ததனால் ஊரில் ஒரு கோலாகலப் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. எங்கும் அந்த அழகைப் பற்றியே பேச்சு. ஊருக்குத் திருவிழா களை உண்டாக்கி விட்டிருந்தது குறிஞ்சிப் பூ.

அன்று மதுரைக்குத் திரும்புவதாக இருந்த அரவிந்தன், மீனாட்சிசுந்தரம், முருகானந்தம் மூவரும் குறிஞ்சிப் பூக்காட்சிகளைச் சுற்றிப் பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காகப் பயணத்தை ஒருநாள் தள்ளிப் போட்டிருந்தார்கள். அன்றைக்கு அரவிந்தனும் முருகானந்தமும் காலை பத்து மணிக்குப் புகைப்பட நிலையத்தில் போய்ப் படங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அரவிந்தனையும் பூரணியையும் சேர்த்து நிறுத்தி ஸ்டூடியோக்காரர் எடுத்த படம் மிக நன்றாக இருந்தது. முருகானந்தம் அந்தப் படத்தை மிகவும் பாராட்டினான். அவர்கள் இருவரும் புகைப்பட நிலையத்திலிருந்து வீடு திரும்பும் போது பூரணியும் வசந்தாவும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். படங்களைக் கேட்டு வாங்கிப் பார்க்கும் ஆவலோடு பூரணி சிரித்துக் கொண்டே தன்னை எதிர்கொண்டு வரவேற்பாள் என்று அரவிந்தன் நினைத்திருந்தான். முதல் நாள் மாலையில் திருமண ஏற்பாட்டைத் தான் மறுத்து விட்டதனால், தன் பார்வையில் தென்பட விரும்பாமல் அவள் மெல்லிய ஊடல் கொண்டு பிணங்கியிருப்பதை அவன் புரிந்து கொண்டான். இந்தப் படங்களைப் பார்த்த பின் அவள் பிணக்கு தீர்ந்து விடுமென்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அவன் நினைத்து இருந்தபடி நிகழவில்லை. படங்களோடு அவன் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் விருட்டென்றெழுந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு பக்கத்து அறைக்குள் புகுந்து விட்டாள் பூரணி. வசந்தா எழுந்திருந்து படங்களை வாங்குவதற்காக அரவிந்தனுக்கு அருகில் வந்தாள். "அண்ணா! அக்காவுக்கு உங்கள் மேல் ஒரே கோபம். நேற்று மாலை தோட்டத்தில் புல் தரையில் நீங்களும் அம்மாவும் அமர்ந்து கல்யாண விஷயமாகப் பேசினபோது நானும் பூரணியக்காவும் சவுக்கு வேலிக்கு அப்பால் மறுபக்கத்தில் தான் உட்கார்ந்திருந்தோம். அக்கா நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டார்கள். தோட்டத்திலேயே கண்ணில் நீர் தளும்பிவிட்டது அக்காவுக்கு" என்று அவன் காதருகில் மெல்லச் சொன்னாள் வசந்தா.

"அடப் பாவமே! அதுதானா இந்தக் கோபம்?" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே படங்களை வசந்தாவின் கையில் கொடுத்தான் அரவிந்தன். பூரணியின் கோபத்தைப் போக்கிவிட வேண்டுமென்று அவள் புகுந்து கொண்ட அறையில் நுழையச் சென்றான். அவன் முகத்தில் இடிக்காத குறையாக அறைக்கதவு படீரென்று அடைக்கப் பெற்றது. உட்புறம் தாழிடும் ஒலியும் கேட்டது.

"புகழேந்திப் புலவர் கதவு திறக்கப் பாடின மாதிரி நான் ஏதாவது பாடிப் பார்க்கட்டுமா, அரவிந்தன்?" என்று குறும்பு பேசினான் முருகானந்தம்.

"நீங்கள் அண்ணனுக்கு வேண்டியவர்கள். நீங்கள் பாடினால் அக்கா உள்ளே இரட்டைத் தாழாகப் போடுவார்கள்" என்று வசந்தா முருகானந்தத்தைக் கடைக்கண்ணால் பார்த்துப் புன்னகையோடு கூறினாள். அவளே மேலும் கூறலானாள்.

 

"அண்ணனும் அக்காவும் எடுத்துக் கொண்டிருக்கிற படம் 'கலியாணப் படம்' மாதிரி இல்லையா? மாலை போட்டுக் கொள்ளாததுதான் ஒரு குறை?"

"அதில் சந்தேகமென்ன? இந்தப் படம் எடுத்துக் கொண்டுவரப் போனபோது நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார்கள் பார்த்தாயா!" முருகானந்தமும், வசந்தாவும் அவனைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் அவன் அப்போது அவற்றை இரசிக்கிற நிலையில் இல்லை. 'பூரணி கூடத் தன்னைப் பற்றித் தப்பாகப் புரிந்து கொள்கிறாளே' என்ற வருத்தம் அவன் மனத்தை வாட்டியது.

மாலையில் குறிஞ்சிப் பூ பூத்திருக்கிற மலைப் பகுதிகளையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதற்காக எல்லோரும் கிளம்பினார்கள்.

"எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. நான் வரமாட்டேன்" என்று முரண்டு பிடிப்பது போல் மறுத்தாள் பூரணி.

"அப்படியானால் நானும் வரவில்லை. எனக்கும் ஒன்றும் பிடிக்கவில்லை" என்று அரவிந்தனும் காரிலிருந்து கீழே இறங்கி விட்டான்.

"உங்கள் இரண்டு பேருக்கும் என்ன வந்துவிட்டது இன்றைக்கு. முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியவில்லையே?" என்று மங்களேசுவரி அம்மாள் கடிந்து கொண்டாள்.

அவர்கள் எவ்வளவோ மன்றாடிக் கெஞ்சிப் பார்த்தும் பூரணியும் அரவிந்தனும் வர மறுத்துவிட்டார்கள். கடைசியில் அவர்கள் இருவரையும் வீட்டில் தனிமையில் விட்டுப் புறப்பட்டது கார்.

வீட்டின் முன்புறத்தில் அருகருகே நாற்காலியில் பேசிக் கொள்ளாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் அரவிந்தனும், பூரணியும். சமையற்கார அம்மாள் பின்புறம் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். தோட்டத்து மல்லிகைச் செடியின் பூக்களைப் பறிக்காமல் விட்டிருந்ததனால் காற்று சுகந்தக் கொள்ளையைச் சுமந்து வீசிற்று. பச்சை நிறத்துக் காகிதத் துணுக்குகளை வானில் சிதறின மாதிரிப் பச்சை நிறத்துக் காகிதக்கிளிகள் சேர்ந்தாற் போல் பறந்தன. அழகான சூழ்நிலை நிலவியது. எதிரெதிரே விரோதிகள் போல் பேசாமல் எவ்வளவு நேரம் வீற்றிருப்பது? கோபித்துக் கொள்வது போல் போலியாக உண்டாக்கிக் கொண்ட கடுமைக் குரலில் பூரணிதான் முதலில் கேட்டாள்.

"நான் வரவில்லையானால் உங்களுக்கு என்னவாம்? நீங்கள் பாட்டிற்குப் போக வேண்டியதுதானே?"

"போகலாம்! ஆனால் நான் ஆவலோடு பார்க்க விரும்பும் குறிஞ்சிப் பூ எதுவோ அது அந்த மலைகளில் பூத்திருக்கவில்லை. இதோ இங்கே எனக்கு அருகில் தான் பூத்திருக்கிறது. நேற்று வரை பூத்திருந்தது. இன்று கோபத்தால் கூம்பியிருக்கிறது. அதை மலரச் செய்வதற்காக நான் இங்கே இருக்க வேண்டியது அவசியமாகிறது" என்று அரவிந்தன் அழகாக பேசிய போது அதை இரசிக்கவோ அதற்காக முகமலர்ச்சி காட்டவோ கூடாதென்றுதான் பூரணி எண்ணினாள். ஆனால் அவள் முகம் மலரத்தான் செய்தது. அதில் அவள் அவனுடைய வாக்கியங்கள் இரசிக்கும் குறிப்பும் தோன்றத்தான் தோன்றியது.

"! இதோ என்னுடைய குறிஞ்சி பூத்துவிட்டது" என்று கைகொட்டி நகைத்தான் அரவிந்தன்.

27

 

மாந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம்

மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை

எந்தமார்க்கமுந் தோற்றில தென்செய்கேன்?

ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?

                                                                                                            -- பாரதி

 

அடுத்த நாள் விடியற்காலையில் மீனாட்சிசுந்தரத்தோடு அரவிந்தனும், முருகானந்தமும் மதுரைக்குத் திரும்பி விட்டார்கள். சிற்றப்பாவின் பதினாறாவது நாள் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குத் திரும்பவும் போவதற்கு முன்னால் அரவிந்தன் மதுரையில் செய்ய வேண்டிய செயல்கள் சில இருந்தன. மாவட்ட அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று பூரணியின் வெளிநாட்டுப் பயண அனுமதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து ஏற்பாடு செய்தான். பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து விரைவுபடுத்தினான். அரசினர் அலுவலகங்களில்தான் தொடர்புடையவர்களைப் பார்த்துத் தூண்டிக் கொண்டிருக்காவிட்டால் தானாகவே எந்தக் காரியமும் நடந்து விடுவதில்லையே. வெளிநாட்டுப் பயண அனுமதிக்குத் தானே ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக மங்கையர் கழகத்துக் காரியதரிசிக்கும் தகவல் தெரிவித்து விட்டான் அவன்.

முன்பு பூரணியின் சொற்பொழிவு மூலம் ஏழைகளின் குடிசை உதவி நிதிக்கு வசூலான தொகையை மிகவும் நம்பிக்கையான கொத்தனார் ஒருவரிடம் காண்ட்ராக்ட் முறையில் அளித்து ஏற்பாடு செய்திருந்தார்கள் அரவிந்தனும் முருகானந்தமும். அன்று கொத்தனாரைப் பார்த்துப் பேசிவிட்டு வேலை எவ்வளவில் நிறைவேறியிருக்கிறதென்பதைக் கவனித்து வருவதற்காக அவர்கள் இருவரும் போய் இருந்தார்கள்.

 

மதுரை பஸ் நிலையத்துக்குத் தென்புறமுள்ள பள்ளத்துக்கு அருகே பழைய காலத்தில் புண்ணிய நதியாயிருந்து இப்போது புண்ணியமும் இல்லாமல் கண்ணியமுமில்லாமல் வெறும் சாக்கடையாக மாறிவிட்ட சிற்றாறு ஒன்று இருக்கிறது. அதற்குக் 'கிருதமாலா' நதி என்று பெயர். இந்த ஆறு மழைக் காலங்களில் நீரோட்டம் பெருகிக் கரை மீறி விடுவதால்தான் அரிசனங்களின் குடிசைகளுக்கு அடிக்கடி சேதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆற்றின் போக்கைச் சிறிது வழி விலக்கி உயரமாகக் கரை எடுத்துவிட்டிருந்தும் மழை அளவு மீறிப் பெய்கிற காலங்களில் சிதைவு நேர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால், இந்த முறை கொத்தனாரிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போதே, "நிறைய மண் அடித்துத் தரையைக் கெட்டிப்படுத்தி மேடக்கிக் கொண்டு அப்புறம் குடிசைகளைப் போடுங்கள்" என்று எச்சரிக்கை செய்திருந்தான் அரவிந்தன். இப்போது போய்ப் பார்த்ததில் தான் சொல்லியிருந்தபடியே அந்தக் கொத்தனார் எல்லாம் செய்திருந்தது கண்டு அரவிந்தன் திருப்தியடைந்தான். வேலை ஏறக்குறைய நிறைவேறியிருந்தது. கொத்தனார் அரவிந்தனுக்கு அருகிலே வந்து மெல்லக் கேட்டார். "ஐயா! திறப்பு விழாவுக்கு யாரை அழைக்கப் போறீங்க? மந்திரிங்க யாராச்சும் வராங்களா?"

இதைக் கேட்டு அரவிந்தன் மெல்லச் சிரித்தான். "நம் கொத்தனார் கேட்ட கேள்வியைக் கவனித்தாயா முருகானந்தம்? மதத்திலும், சமயங்களிலும், அனாவசியமான சடங்குகளையும், மூடப் பழக்கங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சி இந்த நாட்களில் நம்மைப் போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு முடிச்சை அவிழ்க்கிற முயற்சியில் இன்னும் பல முடிச்சுக்களைப் போட்டுவிடுவது போல் பழைய அனாவசியச் சடங்குகளை நீக்கும் முயற்சிகளினால் புதிய அநாவசியச் சடங்குகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம் நாம். பழமையிலும் சரி புதுமையிலும் சரி ஏனென்றும் எதற்கென்றும் காரணம் புரியாத சடங்குகளைத் துணிந்து கைவிடும் பழக்கம் நமக்கு வரவேண்டும். அடிப்படைக் கல்நாட்ட ஒருவர், திறந்து வைப்பதற்கு ஒருவர், கல் நாட்டுபவர் காரையை அள்ளிப் பூச ஒரு வெள்ளிக்கரண்டி, மாலை, எலுமிச்சம் பழம், ஒலிபெருக்கி என்று எத்தனை சடங்குகள்? இன்று இந்த நாட்டின் பொருளாதார வளத்துக்குச் சடங்குகள் தாம் பெரிய விரோதிகளாக இருக்கின்றன."

"மிகவும் சரியாகக் கூறினாய், அரவிந்தன்? பள்ளிக்கூடத்துப் பையனின் பவுண்டன் பேனா இறுக்கி மூடிக் கொண்டால் அவன் கூடத் திறந்து வைக்க 'மந்திரியைக் கொண்டு வா' என்பான் போலிருக்கிறதே! ஐயா கொத்தனாரே! இந்தக் குடிசைகளை இத்தனை செம்மையாக உழைத்து நன்றாகப் போட்டுக் கொடுத்தவர் நீர்தான். நாணயமாகவும், நம்பிக்கையாகவும் உழைக்கிற உழைப்பாளியைத் தான் கௌரவப்படுத்த வேண்டும். பெருமை செய்ய வேண்டும். இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்க நமக்குப் பிரமுகர்கள் தேவை இல்லை. மந்திரிகள் தேவையில்லை. காரில் அழுக்குப்படாமல் வந்து இறங்கி பட்டும் படாததுமாகப் பட்டு ரிப்பனைக் கத்தரித்து விடும் சத்துச் செத்த மனிதர்கள் இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்க வேண்டாம் ஐயா! நீர் தான் இதைத் திறந்து வைக்கச் சரியான ஆள்" முருகானந்தம் இப்படிக் கூறியதும் "என்னைக் கேலி செய்கிறீர்களா தம்பி?" என்று நம்பிக்கையின்றித் தலையைச் சொறிந்து கொண்டே கேட்டார் கொத்தனார்.

"கேலியில்லை கொத்தனாரே, நாளைக் காலையில் நீங்கள் தான் இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்கப் போகிறீர்கள்" என்றான் அரவிந்தன். அதிசயமானதாகவும், புதுமையானதாகவும் ஆடம்பரமின்றி மறுநாள் அந்தத் திறப்பு விழா நடந்தது. குடிசைக்குள் நுழைகிற பொதுவான வழியில் ஒரு சிறு குத்துவிளக்கை ஏற்றி வைத்தார் கொத்தனார். ஒலிபெருக்கி இல்லை, மாலை இல்லை, சோடா இல்லை, பத்திரிகை நிருபர்கள் வரவில்லை, பிரபலமானவர்கள் வரவில்லை. விழாவுக்கு வந்திருந்த கூட்டம் அந்தக் குடிசைகளில் குடியேறுவதற்குக் காத்துக் கொண்டிருந்த ஏழைக் கூட்டம் தான்.

"ஐயா! நீங்க எனக்கு பணம் கொடுத்தது பெரிசில்லீங்க. என்னை ரொம்ப கௌரவப்படுத்திட்டீங்க" என்று கொத்தனார் நாத் தழுதழுக்க நன்றியோடு அரவிந்தனிடம் கூறினார். 'இன்று இந்த நாட்டில் உழைக்கும் இனம் எங்கும் ஏங்கித் தவிப்பது இந்தக் கௌரவத்திற்காகத்தான். பணத்தினால் மட்டும் உழைக்கிறவர்கள் நிறைவடைவதில்லை. உழைப்பு கௌரவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அதைச் சொல்லப் பல காரணங்களால் அஞ்சித் தயங்குகிறார்கள்' என்று அப்போது அரவிந்தன் மனத்தில் நினைத்துக் கொண்டான். வயது முதிர்ந்த தாய்மார்களும், கிழவர்களும் இளைஞர்களுமாக அந்தக் குடிசைகளில் குடியேற இருந்த மக்கள் அரவிந்தனையும் முருகானந்தத்தையும் நோக்கிக் கண்களில் நீர் மல்கக் கைகூப்பினார்கள். 'இந்த அன்புக் கண்ணீரும் ஆனந்தக் கைகூப்புதல்களும் பூரணிக்குச் சேர வேண்டியவை அல்லவா! அவள் இன்று இங்கே நேரில் வந்து இதில் கலந்து கொள்ள முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் உரிய மனித வெள்ளத்தினிடையே தீபமேந்திச் செல்வதாகக் கனவு காணும் அவள் உண்மையிலேயே இன்று இங்கே அதைப் பார்த்திருப்பாள்' என்று எண்ணி நெஞ்சுருகி நின்றான் அவன்.

அன்று மாலை அரவிந்தனைப் பொன்னகரத்திலுள்ள தன் வீட்டுக்கு வற்புறுத்தி அழைத்தான் முருகானந்தம். எதற்காக அன்று அவன் தன்னை வீட்டுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான் என்பது முதலில் அரவிந்தனுக்குத் தெளிவாக விளங்கவில்லை. மாதத்துக்கு ஒருமுறை எப்போதாவது ஓய்வு கிடைக்கிற ஞாயிற்றுக்கிழமையில் அரவிந்தனே பொன்னகரத்துக்குப் போய் நண்பர்களையெல்லாம் பார்த்து நலம் விசாரித்துவிட்டு அளவளாவிப் பேசிவிட்டு முருகானந்தத்தின் வீட்டுக்கும் சென்று அவனுடைய பெற்றோர்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவதுண்டு. முருகானந்தத்தின் பெற்றோர்களோடு சிறு வயதிலிருந்தே அரவிந்தனுக்குப் பழக்கமும் பாசமும் உண்டு. அவர்கள் அவனுக்கு உறவில்லையானாலும் அவனுடைய கிராமத்தில் சிறிது காலம் வசித்தவர்கள். பஞ்சத்துக்கு ஊர் மாறின குடும்பமாக அரவிந்தனுடைய கிராமத்தில் அவர்கள் இருந்த காலத்தில் முருகானந்தம் சிறுபையன். அரவிந்தனும் சிறு பையன் தான் அப்போது. ஆனால் முருகானந்தத்தை விட கொஞ்சம் விவரமறிந்து நினைவு தெரிந்த பருவம் அவனுக்கு. இரண்டுபேரும் ஒரே ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்தார்கள். ஆனால் சில ஆண்டுகளில் முருகானந்தத்தின் பெற்றோர் மதுரைக்கு மில் கூலியாய்ப் போய் பிழைக்க நேர்ந்தது. அப்போது முருகானந்தமும் போய்விட்டான். பின்னால் அரவிந்தன் தாயையும் இழந்து, சிற்றப்பா சித்தி கொடுமைகளைத் தாங்காமல் மதுரைக்கு ஓடி வந்த போது உயர்நிலைப் பள்ளியில் தன்னையும் தன் அனாதைப் பிழைப்பையும் ஏளனம் செய்த மாணவர்களின் விடலைக் கும்பலுக்கிடையே தனக்கு ஆதரவு கொடுக்கும் மாணவ நண்பனாக முருகானந்தத்தைச் சந்தித்தான். தற்செயலாகச் சந்தித்து ஒருவரையொருவர் அடையாளம் தெரிந்து கொண்ட அந்தச் சந்திப்புக்குப் பின் அவர்களுடைய நன்பு மீண்டும் தளிர்த்தது, தழைத்து வளர்ந்தது. அரவிந்தனை அண்ணன் போல் எண்ணி மதித்துப் பழகத் தொடங்கியிருந்தான் முருகானந்தம். படிப்பு முடிந்த பின் தன்னுடைய தமிழாசிரியர் சிபாரிசால் அரவிந்தன் அச்சகத்தில் சேர்ந்தான். ஓய்வு நேரத்தில் பொழுது போக்காகத் தையல் தொழில் பழகிய முருகானந்தம், பிழைப்புக்காக ஒரு சிறு தையல் கடையே வைத்தான். தொழில் அவனைக் கைவிடவில்லை. ஆறு மாதமோ என்னவோ, பம்பாயில் போய் இருந்து தையல் நாகரிகங்களைக் கற்று ஒரு பட்டமும் வாங்கி வந்தான். 'பாம்பே டெய்லர்ஸ்' என்ற பெருமையும் சேர்ந்து கொண்டது. எந்தப் பெருமைகள் வந்த போதும் அரவிந்தனின் மதிப்பும் பணிவுமுள்ள நண்பனாகவே பழகினான் அவன்.

"ஏண்டா, முருகானந்தம்! இன்றே உன் வீட்டுக்கு நான் வந்தாக வேண்டுமா, அப்படி என்ன அவசரமப்பா?" என்று கேட்டான் அரவிந்தன். முருகானந்தம் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லத் தயங்கினாற்போல் நின்றான். அரவிந்தனுக்குப் புரிந்து விட்டது.

"ஓகோ? உன் திருமண ஏற்பாட்டைப் பற்றி உங்கள் வீட்டில் பெரியவர்களிடம் எடுத்துச் சொல்லி சம்மதம் பெற வேண்டுமென்கிறாயா? இதை என்னிடம் சொல்லுவதற்கு வெட்கமென்ன வேண்டியிருக்கிறது? நான் வருகிறேனப்பா. இப்போதே வேண்டுமானால் புறப்படு" என்று விவரம் புரிந்து கொண்டதும் முகமலர்ச்சியோடு வருவதற்கு ஒப்புக் கொண்டு விட்டான் அரவிந்தன்.

நண்பகலில் எங்கும் வெளியேற முடியாதபடி அத்தனை நாட்கள் அவன் ஊரில் இல்லாமையால் சுமந்து கிடந்த வேலைகள் அச்சகத்தில் குவிந்திருந்தன. பூரணி தேர்தலில் நிற்கச் சம்மதம் கொடுத்துவிட்டதனால் மீனாட்சிசுந்தரம் அது சம்பந்தமான ஏற்பாடுகளுக்காகவும், வேலைகளுக்காகவும் இப்போதே அலைவதற்குத் தொடங்கியிருந்தார். அத்தனை வயதுக்கு மேல் திடீரென்று இளைஞராகி விட்டாற் போன்று அவ்வளவு சுறுசுறுப்போடும் உற்சாகத்தோடும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். அச்சகத்துக்கு வந்திருந்த முக்கியமான கடிதங்களுக்கு மறுமொழி எழுதியும், கணக்குகளைச் சரிபார்த்தும், திருத்த வேண்டிய அச்சுப் பிரதிகளைத் திருத்தியும், அசைந்து கொடுக்க நேரமில்லாமல் வேலைகளைச் செய்தான் அரவிந்தன். மாலை ஐந்தரை மணிக்கு வேலைகள் முடிந்து முகங்கழுவி உடை மாற்றிக் கொண்டு அவன் தயாராக இருந்தபோது முருகானந்தம் வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டான். இருவரும் பேசிக் கொண்டே நடையில் கிளம்பிவிட்டார்கள். மதுரை மில்லுக்கு அருகில் இரயில் பாதை 'லெவல் கிராசிங்'கில் நடந்து போக இடமில்லாமல் ஒரே கும்பலாக இருந்தது. அந்த வழியாகத்தான் அவர்கள் பொன்னகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

"கொஞ்சம் இரு அரவிந்தன்! அது என்ன கும்பலென்று பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறி அரவிந்தனை நிறுத்திவிட்டுக் கும்பலுக்குள் புகுந்தான் முருகானந்தம்.

சிறிது நேரம் கழித்து அவன் கூட்டத்திலிருந்து வெளியேறி வந்தான்.

"வா... போகலாம் அரவிந்தன்" என்று அரவிந்தனுடைய கையைப் பிடித்துக் கொண்டே மேலே வழி விலக்கிக் கொண்டு நடந்தான் முருகானந்தம்.

"மாலையில் வெளியான செய்தித்தாளில் ஏதோ பரீட்சை முடிவு வெளியாயிற்றாம். பரீட்சையில் தேறாத மாணவன் ஒருவன், 'என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. நான் பரீட்சையில் தேறாத ஏமாற்றமே காரணம்' என்று சட்டைப் பையில் கடிதம் எழுதி வைத்துக் கொண்டு இரயிலுக்கு முன் விழுந்து விட்டான். கையும் காலும் துண்டாகி இரத்த வெள்ளத்தில் எடுத்துக் கிடத்தியிருக்கிறது. பார்க்கச் சகிக்கவில்லை."

"அடப் பாவமே!"

"பாவமாவது, புண்ணியமாவது அரவிந்தன்! நம்முடைய பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் வாழ்வதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்களா? அல்லது இம்மாதிரி சாவதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்களா? வாழும் தைரியத்தைக் கற்பிக்காத கோழைத்தனமான ஏட்டுப் படிப்பு ஒன்று இருக்குமானால் அது இந்த நாட்டுக்கே அவமானம். படிப்பு முயற்சியையும் நம்பிக்கையையும் தூண்டி, உற்சாகப்படுத்துகிற சஞ்சீவி மருந்தாக இருக்க வேண்டாமோ? வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இது என்ன படிப்பு?"

"இங்கே தான் கல்லூரிகளெல்லாம் விளம்பரப்பலகை மாட்டாத 'போர்டிங் அண்டு லாட்ஜிங்' ஓட்டல்களாக இருக்கின்றனவே அப்பா? வாழ்க்கையிலேயே சோர்வடைந்தவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருகிறார்கள். அல்லது ஆசிரியராக வந்தபின் அந்த சோர்வை அடைகிறார்கள். இப்படிச் சோர்வடைந்தவர்கள் கற்பிக்கும் உள்ளங்களில் எப்படி 'வாழும் தைரியம்' வளரும்? கவி தாகூரின் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தையும், சாந்தி நிகேதனத்தையும் போல் மாகாணத்துக்கு ஒரு லட்சியக் கல்லூரியாவது இந்த நாட்டுக்கு வேண்டும். அப்போதுதான் 'வாழும் தைரியத்'தைக் கற்பிக்க முடியும்."

 

"சோர்வடைந்தவர்கள் என்று ஆசிரியர்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை, அரவிந்தன்! பாரத நாட்டுக்குக் குடியரசு வாழ்வு வந்த பின்னும் ஆசிரியர்கள் பாடு பிடியரிசி வாழ்க்கைதான். எல்லாரும் சேர்ந்து மொத்தமாக மறந்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு மறந்துவிட்ட இனம் ஆசிரியர் இனம்தான். இப்போது இந்தப் பையன் விழுந்து செத்திருக்கிறானே, இதே இரயில்வே 'லெவல் கிராசிங்'கில் பதினைந்து நாளைக்கு முன் நாலைந்து பெண்களுக்குத் தந்தையான ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர் 'அந்தப் பெண்களுக்கெல்லாம் திருமணம் செய்து கொடுக்கப் பணவசதி இல்லாததால் சாகிறேன்' - என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செத்தார். அநேகமாக இந்தப் பகுதியில் போகிற இரயில்களின் சக்கரங்களில் மனித இரத்தம் படாத நாளே இருப்பதில்லை."

"வேலை கிடைக்காத வாலிபர்களும், திருமணமாகாத பெண்களும் இன்று இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைகள் முருகானந்தம். பெரும்பாலான தற்கொலைகளுக்கு இந்த இரு பிரச்சினைகளே காரணம். 'புல்லினில் வைரப்படை தோன்றுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுவாள்' என்று பாரதி பாடினான். இந்தப் பெரிய பிரச்சினைகள் வைரம் பாய்ந்தவையாக மாறினால் 'இந்த நாட்டில் ஏன் பிறந்தோம்?' என்று ஒவ்வொருவரும் கொதிப்படைய நேரிடும். தெருவின் இருபுறங்களிலும் நடந்து போகிறபோதே துன்பமும், நோயும், மரணமும் தென்படுவதைக் கண்டால் ஒரே ஒரு கணம் புத்தருக்கு உண்டான உணர்வு போல் 'இந்த உலகத்தை இப்படியே விடக்கூடாது. இவற்றைப் போக்க நிரந்தரமான மருந்து தேட வேண்டு'மென்று தணியாத தவிப்பு உண்டாகிறது. ஆனால் அடுத்த வினாடியே அந்தத் தவிப்பு மரத்துப் போய்விடுகிறதே?"

இருவரும் மனம் நொந்த நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியவாறே நடந்து கொண்டிருந்தார்கள். தலை மயிரிலும் உடம்பிலும் பிஞ்சுப் பிசிறுகள் படிந்து சோர்ந்த கோலத்தில் மில் கூலிக்காரப் பெண்கள் தெருவில் கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள். பஞ்சாலை எந்திரங்களின் ஓசை தெருவின் எல்லை வரை குறைவின்றி ஒலித்துக் கொண்டிருந்தது.

"அரவிந்தன் இந்த வட்டாரத்தில் நாள் ஒன்றுக்கு எப்படியும் நாலைந்து தற்கொலைக்குக் குறைவதில்லை. போதாத குறைக்கு இப்போது மூட்டைப்பூச்சி மருந்து என்று சுலபமாகத் தற்கொலை செய்து கொள்ள ஒரு மருந்து வந்து தொலைத்திருக்கிறது."

"வாழ்வதற்கு மருந்து தெரியவில்லை. அது கிடைக்கிற வரை சாவதற்கு மருந்து தேடிக் கொண்டுதான் இருப்பார்கள்" என்று மனம் புண்பட்ட பொருளில் மெல்லச் சொன்னான் அரவிந்தன்.

பொன்னகரத்தில் முருகானந்தத்தின் வீட்டில் ஒரு மணிநேரத்துக்கு மேல் தாமதித்தான் அரவிந்தன். "பையனுக்கு பெரிய இடத்திலிருந்து பெண் வருகிறது" - என்றவுடன் முருகானந்தத்தின் பெற்றோர் திகைத்து மருண்டனர். அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரமாக எடுத்துக்கூறி விளக்க வேண்டியிருந்ததனால் அரவிந்தனுக்கு அவ்வளவு நேரமாயிற்று. கடைசியில் அவர்களுடைய இசைவையும் பெற்றுவிட்டான். அரவிந்தன் சொல்லி அவர்கள் எதையும் மறுத்ததே இல்லை. 'பொறுப்புத் தெரிந்த பிள்ளை' என்று அவனைக் கொண்டாடுவார்கள் முருகானந்தத்தின் பெற்றோர். அரவிந்தன் கோடைக்கானலிலிருந்து புறப்படும் போது, 'முருகானந்தத்தின் பெற்றோரைக் கலந்து கொண்டு முடியுமானால் நிச்சயதாம்பூலத்துக்கு ஒருநாளும் குறிப்பிட்டு எழுதவேண்டும்' என்று மங்களேசுவரி அம்மாள் அவனிடம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த அம்மாள் வேண்டிக் கொண்டிருந்தபடி அப்போதே அங்கே ஓர் கார்டில் விவரம் எழுதி நான்கு நுனியிலும் மஞ்சள் தடவி மறுநாள் கோடைக்கானலில் கிடைக்கிறாற் போல் அவசரமாகத் தபாலிலும் சேர்க்கச் செய்துவிட்டான் அரவிந்தன். அவர்கள் எல்லோரும் வற்புறுத்தியதால் இரவுச் சிற்றுண்டியை அங்கேயே சாப்பிட வேண்டியதாயிற்று.

பொன்னகரத்திலிருந்து அவன் அச்சகத்துக்குத் திரும்பிய போது, இரவு சுமார் எட்டு மணி இருக்கலாம். அந்த நேரத்திலும் அங்கே முன் பக்கத்து அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. திருநாவுக்கரசு ஏதாவது வரவு செலவுக் கணக்கை எழுதிக் கொண்டிருப்பான் என்று நினைத்து உள்ளே நுழைந்த அரவிந்தன் மீனாட்சிசுந்தரமே அங்கு இருப்பதைப் பார்த்து வியப்புற்றான். கன்னத்தில் கையூன்றிக் கொண்டு சோர்ந்து போனாற் போல் கவலையோடு ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தார் அவர். முகம் பார்க்க நன்றாக இல்லை. இந்த விதமாக மிகவும் தளர்ந்த நிலையில் பெரும்பாலும் அவரைப் பார்த்ததில்லை அவன். மிகச் சில சமயங்களில் மட்டுமே இத்தகைய நிலையில் அவரைக் கண்டிருக்கிறான்.

"உங்களுடைய உடம்புக்கு என்ன?"

"உடம்பெல்லாம் நன்றாக இருக்கிறது. மனதுக்குத் தான் எல்லா இழவும்."

அவருடைய குரலில் இருந்த கடுமையான வறட்சியைக் கண்டு மேலே எதுவும் பேசத் தோன்றாமல் தயங்கி நின்றான் அரவிந்தன். கோபமோ, கவலையோ அதிகமாகி உணர்ச்சி வசப்பட்டால் இரத்தக்கொதிப்பு (பிளட்பிரஷர்) வந்துவிடும் அவருக்கு.

"எல்லாப் பயல்களும் சமயம் பார்த்துத்தான் காலை வாரி விடுகிறார்கள். குனிந்து கொள்ளச் சொல்லிப் பச்சைக் குதிரை தாவி விட்டுக் குப்புறத் தள்ளியும் விடுகிறார்கள். தேர்தல் செலவுகளுக்காக நம்முடைய திருவேடகத்து மேலக்கால் பாசன நிலத்தை விலை பேசியிருந்தேன் அல்லவா?"

"ஆமாம்! நேற்று கிரயப் பத்திரம் எழுதப் போவதாகச் சொன்னீர்கள்."

"நேற்று எழுதலாமென்றிருந்தேன். வாங்குகிற ஆள் வரவில்லை. இன்னும் வரவில்லை. சந்தேகப்பட்டுக் கொண்டே போய் விசாரித்ததில் வாங்குவதற்கிருந்த ஆள் தயங்குகிறான். பர்மாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் போய் அவனை ஏதேதோ சொல்லிக் கலைத்திருக்கிறார்கள்."

 

"ஒன்றும் குடிமுழுகிவிடாது. இவன் வாங்காவிட்டால் என்ன? ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்."

"அப்படியில்லை அரவிந்தன்; அந்த இடத்தில் அவ்வளவு பணம் போட்டு நிலம் வாங்க இப்போது வேறு எவரும் அவசரப்படமாட்டார்கள். பலவிதத்தில் பணநெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறேன் அப்பா. பேப்பர் கடைக்கு ஆயிரக்கணக்கில் பாக்கி நிற்கிறது. தாட்சண்யத்துக்காகத்தான் கேட்கத் தயங்கிக் கொண்டு அவர்கள் பேசாமல் இருக்கிறார்கள்."

அவரையும், அவருடைய தைரியத்ததயும் அதிர்ச்சியடையச் செய்த சூழ்நிலை அரவிந்தனுக்குப் புரிந்தது. ஆறுதலாக ஏதாவது அவரிடம் நிறையப் பேச வேண்டும் என்று நினைத்தான். ஒன்றும் சொல்ல வரவில்லை. நாலைந்து நாட்கள் கழித்து அவன் கிராமத்துக்குப் புறப்பட்ட போது மீனாட்சிசுந்தரம் இரத்தக் கொதிப்பு அதிகமாகிப் படுக்கையில் வீழ்ந்துவிட்டார். முருகானந்தத்தை உடனிருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தான் அவன். கிராமத்தில் சிற்றப்பாவின் பதினாறாம் நாள் கருமாதிக்குப் பர்மாக்காரர் வரவில்லை. அவர் வரமாட்டார் என்பது அரவிந்தன் எதிர்பார்த்ததுதான். 'சிற்றப்பாவின் கேதத்துக்கு அவர் வந்ததே தன்னை வசியப்படுத்தி அழைத்துப் போய் மீனாட்சிசுந்தரத்திடமிருந்து பிரித்துவிடலாம்' என்ற நோக்கத்தோடுதான் என்பதை இப்போது அரவிந்தன் ஒருவாறு உய்த்துணர்ந்து புரிந்து கொண்டிருந்தான். அவன் அவருடைய வலையில் சிக்காமல் வந்துவிட்டதனால் இனிமேல் தன்னையும் மீனாட்சிசுந்தரத்தையும், பூரணியையும் தம்முடைய மொத்தமான எதிரிகளாக வைத்துக் கொண்டு அவர் வைரம் பாராட்டுவார் என்றும் அவன் உணர்ந்திருந்தான்.

மிகச் சிறிய உணர்ச்சிகளையும் சில்லறை நோக்கங்களையும் தவிர பெரிதாக எதையும் நினைக்கத் தெரியாத அப்பாவிக் கிராமத்து மக்கள் அரவிந்தனுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பலவிதமாகக் கற்பனை செய்தார்கள். அவன் கிராமத்துக்கே வந்து குடியேறி சிற்றப்பாவின் சொத்து சுகங்களை ஆளத்தொடங்குவான் என்று எல்லாருமே எதிர்பார்த்தனர். "தம்பி, இனிமேல் ஊரோடு வந்துவிட வேண்டியதுதான். மதுரையில் என்ன காரியம்? ஒருத்தனுக்கு கீழே கைகட்டிச் சேவகம் செய்கிற வேலை இனிமேல் எதற்கு? சொத்துக்களெல்லாம் மேற்பார்க்கணும், சிற்றப்பாவைப் போல் நகை ஈட்டுக்குக் கடன் கொடுக்கிற காரியத்தையும் தொடர்ந்து செய்யலாம். என்னமோ நான் உனக்குச் சொல்கிற அட்வைஸ் இதுதான்" என்று தமக்குத் தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தையை கர்வத்தோடு உபயோகித்து அரவிந்தனிடம் அறிவுரை கூறினார் ஒரு கிழவர். அரவிந்தன் அவருடைய அறிவுரையைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டான். கருமாதி முடிந்த மறுநாள் காலை அரவிந்தன் செய்த முதல் காரியம் சிற்றப்பாவின் வீட்டு வாசலில் 'இங்கே நகை ஈட்டின் பேரில் வட்டிக்குக் கடன் கொடுக்கப்படும்' என்று அழுக்கும் கறையும் படிந்து தொங்கிய அறிவிப்புப் பலகையைக் கழற்றி எறிந்ததுதான்.

"சின்னதம்பி, அதைக் கழற்றாதீங்க! இன்னும் பல பேர் கணக்கு முடிக்காமல் கெடக்கு. ஈடு வைத்த நகையை ரொம்பப் பேர் திருப்பிக்கிட்டுப் போகலை. வட்டி தராமல் பலபேர் கழுத்தறுப்புச் செய்றாங்க" என்று ஒப்பாரி வைத்தார் சிற்றப்பாவின் கணக்குப்பிள்ளை.

சிரித்தவாறே அரவிந்தன் எல்லாக் கணக்கையும் பார்த்தான்; தாலியிலிருந்து மோதிரம் வரை ஏழை எளியவர்கள் கடனுக்காக ஈடுவைத்த நகைகள் குவிந்து கிடந்தன. கணக்குப்பிள்ளையை விசாரித்ததில் நகையை ஈடு வைத்தவர்கள் உள்ளூரிலும், அக்கம்பக்கத்துச் சிறு கிராமங்களிலும் இருப்பதாகத் தெரியவந்தது. "உடனே சைக்கிளில் புறப்பட்டுப் போய் எல்லோருக்கும் தகவல் தெரிவித்து இங்கே வரச் செய்யுங்கள்" என்று கணக்குப் பிள்ளையைத் துரத்தினான் அரவிந்தன். அவரும் என்னென்னவோ சொல்லி மறுத்தார். "கடன் கொடுத்தவங்க கடன் வாங்கியவங்களைப் போய் அழைக்கிறது வளமை இல்லீங்க" என்றார் கணக்குப்பிள்ளை.

"வளமையாவது மண்ணாங்கட்டியாவது. நான் சொல்லுகிறபடி போய் அழைத்து வாரும் ஐயா!" என்று அரவிந்தன் சிறிது இரைந்த பின்பே அவர் தடை சொல்லாமல் புறப்பட்டுப் போனார். பகல் பன்னிரண்டு மணிக்குள் நகை ஈடு வைத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து வீட்டின் முன்புறம் கூடிவிட்டார்கள். வறுமை வாட்டங்களாலும் ஏழைமை ஏக்கங்களாலும் இளைத்த அவர்களுடைய மெலிந்த தோற்றங்களைப் பார்த்து நெஞ்சு நெகிழ்ந்தான் அரவிந்தன். விடுதலையும், உரிமை வாழ்வும் பாரத நாட்டு நகரங்களின் வளர்ச்சிக்கும் வளங்களுக்கும் பயன்பட்டிருக்கிற அளவு கிராமங்களுக்கும் அவற்றில் வாழும் அப்பாவி மனிதர்களுக்கும் பயன்படுகிற காலம் இன்னும் சரியாக வரவில்லை என்று அவன் உணர்ந்தான். 'பாரத நாட்டின் ஆயிரமாயிரம் கிராமங்களில் இருளடைந்த சூழலும் இருளடைந்த உள்ளங்களுமாக வாழும் எளியவர்களை மனத்தில் வைத்துக் கொண்டுதான் காந்தியடிகள் உழைத்தார். அவருடைய உழைப்பின் பயன் நகரங்களின் எல்லையோடு நின்று போய்விட்டதே!' என்று எண்ணிக் குமுறினான் அரவிந்தன். வந்திருந்தவர்களையெல்லாம் உட்காரச் செய்துவிட்டு உள்ளே திரும்பி, "கணக்குப் பிள்ளை! அடகு நகைகளையும் அவற்றுக்கான பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்" என்று கட்டளையிட்டான். அவர் அவனுடைய மனத்தின் குறிப்பைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல், "நகைகளும், பத்திரங்களும் எதுக்குங்க தம்பி? யார் யார், எவ்வளவு வட்டி தரணும், எத்தனை தவணைங்கிறதெல்லாம் தனிக் காகிதத்திலே குறிச்சே வச்சிருக்கேன்" என்றார்.

"அது தேவையில்லை! நகைகளையும் பத்திரங்களையும் கொண்டு வாருங்கள்."

 

அவன் குரலின் உறுதிக்கு அஞ்சி அப்படியே செய்தார் கணக்குப்பிள்ளை. யார் யாருடைய அடகு நகை எதுவோ அதை முறையாக அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, "நீங்களெல்லோரும் இந்தக் கடனுக்கு வட்டி தரவேண்டியதில்லை. அசலைத் தந்தால் போதும், அதையும் இப்போதே என்னிடம் தரவேண்டுமென்று அவசியம் கிடையாது. உங்களுக்கு நான் ஒரு முகவரி தருகிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் உங்களால் முடிகிற போது அந்த முகவரிக்கு நீங்கள் தரவேண்டிய அசலை அனுப்பி ரசீது பெற்றுக் கொண்டால் போதும்" என்றான். 'ஏழைப் பெண்கள் திருமண உதவி நிதிச் சங்கம், மணி நகரம், மதுரை' என்ற முகவரியை எல்லாருக்கும் தனித்தனியே எழுதிக் கொடுத்தான். "தரும தொரையே! நீங்க நல்லாயிருக்கணும்" என்று வாழ்த்தினார் அடகு நகையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு முதியவர். சிலர் அவனுடைய கால்களைத் தொட்டு வணங்க ஓடிவந்தார்கள். அவன் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டான். கால்களைப் பின்னுக்கு நகர்த்திக் கொண்டு எல்லோரையும் வணங்கி விடை கொடுத்தான். கணக்குப் பிள்ளைக்குத் தலை சுழன்று மயக்கம் வரும் போலிருந்தது. தூணைப் பிடித்துக் கொண்டு சமாளித்தார். பையனுக்குப் பைத்தியமோ என்று சந்தேகமாகிவிட்டது அவருக்கு.

அதன் பின்னும் பத்து நாட்கள் வரை அவன் கிராமத்தில் தங்கினான். தேர்தல் செலவுகளையும், அச்சகத்துக் கடன்களையும் சுமக்க வழியின்றி மீனாட்சிசுந்தரம் திணறுவது நினைவை இறுக்கியது அரவிந்தனுக்கு. பக்கத்துக் கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு விலைக்கு எந்தச் சொத்து வருகிறதென்று காத்திருந்தார். அவரிடம் வீடு தவிர மற்ற சொத்துகள் ஐம்பத்தேழாயிரத்துச் சொச்சம் விலை போயிற்று. சிற்றப்பாவின் சொத்துகள் நல்ல சமயத்தில் மீனாட்சிசுந்தரத்துக்கு உதவ வேண்டுமென்று அவன் மனம் ஆர்வத்தோடு உந்தியது. கணக்குப்பிள்ளை, "பெண் கல்யாணத்துக்கு நிற்குதுங்க" என்று பஞ்சப்பாட்டு பாடினார். அவர் கையில் இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, "இப்போதைக்கு இந்த வீட்டிலும் நீரே குடியிருந்து கொண்டிரும்" என்றான் அரவிந்தன். "நீங்க புண்ணியப் பிறவீங்க" என்று நாத்தழுதழுக்கக் கூறினார் அவர்.

'ஐம்பத்தையாயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகளை எண்ணி முன்னால் வைத்தால், தனது நன்றிக்குரிய முதலாளியின் இரத்தக் கொதிப்பு நோய் பஞ்சாகப் பறந்துவிடும்' என்று நம்பி ஆவல் சுரந்தது அவன் மனத்தில். ஆனால் அன்று அவன் ரயிலுக்குப் புறப்படுவதற்கு முன் வந்த தந்தி அவனுடைய ஆவலைக் கொன்று கதறி அழும் அழுகையாய்ப் பொங்கி வரச் செய்தது. தந்தியைப் படித்துவிட்டுச் சிறு குழந்தைபோல் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்து அழுதான் அரவிந்தன்.

 

28

 

ஊரெல்லாம் கூடிஒலிக்க அழுதிட்டுப் பேரினை

நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையல் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்கள்.

                                                                                                                                 -- திருமூலர்

 

தன்னைப் பெற்ற தந்தை இறந்தபோது கூட அரவிந்தன் இப்படி அதிர்ந்து அலமந்து கதறியழவில்லை. அப்போது அவன் சிறுவன். இப்போதோ உணர்வுகளில் நோவும் அளவுக்கு மனம் பக்குவப்பட்ட இளைஞன். 'தன்னை வளர்த்து உருவாக்கி வாழ்வளித்த வள்ளல் இறந்து போய்விட்டார்' என்று அந்தத் தந்தியில் படித்தபோது அதை உண்மையாக ஏற்றுக் கொண்டு நம்பி ஒப்புக்கொள்ளவே, அவன் மனம் தயங்கியது. எவருடைய நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காக அவன் சிற்றப்பாவின் உடைமைகளில் பெரும் பகுதியை விற்றுப் பணமாக்கிக் கொண்டு புறப்பட்டானோ அவர் இறந்து போய்விட்டார் என்று தந்தி வந்திருக்கிறது. 'மீனாட்சிசுந்தரம் இறந்துவிட்டார், உடனே புறப்பட்டு வரவும்' - என்று முருகானந்தம் தந்தி கொடுத்திருக்கிறான். வெண்ணெய் திரண்டு வருகிறபோது தாழி உடைந்தது போல் நல்ல சமயத்தில் அந்தப் பெருந்தன்மையாளர் போய்ச் சேர்ந்துவிட்டாரே என்று கலங்கினான் அவன். கனவிலும் எதிர்பாராத இந்தச் சாவு அவனை பேரதிர்ச்சியடையச் செய்துவிட்டது. 'மீனாட்சிசுந்தரம் எனக்கு மட்டும் நல்லவர் என்பதில்லை. எல்லாருக்குமே அவர் நல்லவர்! ஊருக்கு நல்லவரின் உயிரை இவ்வளவு அவசரப்பட்டுக் கூற்றுவன் கவர்ந்து கொண்டானே' என்று விழி கலங்கி, மனம் கலங்கி, உணர்வுகள் கலங்கி, ஓய்ந்து நின்றான் அரவிந்தன். 'அவர் சாகக்கூடாது. ஆனால் சாகச் செய்துவிட்டார்களே பாவிகள்!' என்று அவரைக் கவலைப்படச் செய்த பர்மாக்காரரையும், புதுமண்டபத்து மனிதரையும் எண்ணிக் கொதித்தான். 'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து என்னை ஆளாக்கிவிட்ட எந்தையே! இனி உங்களுக்கு எந்த வகையில் நன்றி செலுத்தப் போகிறேன்?' என்று நினைத்து நினைத்து ரயில் மதுரை அடைகிறவரை வருந்தித் தவித்துக் கொண்டே வந்தான். தனக்கு அந்தப் பெரிய மனிதர் கருணை காட்டி உதவிய சந்தர்ப்பங்களெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவனுடைய கண்களில் நீர் நெகிழச் செய்தன.

இரயில் மதுரை நிலையத்துக்குள் நுழையும் முன் ஒரு திருப்பத்தில் நகரமும், அதன் மொத்தமான தோற்றப் பரப்பில் உயர்ந்து தெரியும் கோபுரங்களும், மிக அழகாகத் தென்படும். இன்று அந்தக் கோபுரங்களும், அவற்றின் கீழே மங்கித் தென்படும் நகரமும் தன்னைப் போலவே சோகத் தழலில் வெந்து சோம்பிச் சோர்ந்து துயர்பரவிக் கிடப்பவை போல் தோன்றின. நகரமே உயிரும் உணர்வும் செத்துப் போனாற்போல் அவனுக்குக் காட்சியளித்தது. ரயில் நிலையத்தில் நின்றதும், இறங்கி மீனாட்சிசுந்தரத்தின் வீட்டுக்கு விரைந்தான்.

அந்திமக் கிரியைக்காக வீட்டு வாயிலிலும் திண்ணைகளிலும் தெருவோரங்களிலும் மனிதர்கள் கூடியிருந்தார்கள். முருகானந்தம் வாயிலில் நின்று மேற்கொண்டு நடக்க வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். சாவால் வாழ்வற்றுப்போன உடம்புக்குப் பூவால் பல்லக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. சாவு வீட்டுக்கு அடையாள ஒலிகளாக அழுகுரலும் சங்கும் சேகண்டியும் ஒலித்துக் கொண்டிருந்தன. விழிகளில் நீர்ப்படலம் மறைக்க உள்ளே ஓடினான் அரவிந்தன். கூடத்தில் ஊஞ்சல் பலகையைக் கீழே கழற்றிப் போட்டு, அவரைக் கிடத்தியிருந்தார்கள். ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுது, பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்ட பின்னும், சாவுக்களையே முகத்தில் வராமல் பெருந்தன்மை துலங்கும் அந்த உருவத்தை எட்ட நின்று பார்த்தவாறே பொங்கிப் பொங்கி அழுதான் அரவிந்தன். கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு வெடித்துவரும் துக்க வெள்ளத்தை அடக்க முயன்றான், அடங்காமல் பொங்கிற்று அழுகை. கண்முன் மரணத்தைப் பார்க்கும்போது திடீரென்று வாழ்க்கையே ஸ்தம்பித்து நின்றுவிடுகிறாற் போல ஒருபயம் உண்டாகிறது. நம்பிக்கையாகவும், வெற்றிகளாகவும் எண்ணிக் கொண்டிருந்த அனைத்தும் வெறும் துக்கத்தின் முத்திரைகளாகத் தெரிந்தன. நெஞ்சு கொள்ளாமல் துக்கம் குமுறிட நீர் தளும்பும் கண்களால் அவருடைய சடலத்தைப் பார்த்துக் கொண்டே நின்ற அரவிந்தன் ஒன்றுமே தோன்றாதது போல், ஒன்றுமே காணாதது போல், ஒன்றுமே உணராதது போல், வசமிழந்த அவசர நிலையில், தோன்றுவதையும் காண்பதையும், உணர்வதையும் சோக இடிக்குப் பறி கொடுத்து விட்டவனாகத் தோன்றினான்.

அவன் தளர்ந்து தவித்தபோதெல்லாம், "பயப்படாதே, நான் இருக்கிறேன். உனக்கு ஒரு கவலையும் வேண்டாம்" என்று ஆதரவோடு அருகில் வந்து முதுகில் பாசத்தோடு தட்டிக் கொடுத்த கைகளா இப்படி உணரவும் உணர்த்தவும் முடியாத நிலையில் உயிரற்றுக் கிடக்கின்றன? சற்றே கண்கள் சிவந்த நிலையில் அவன் காட்சியளித்தாலும் "ஏண்டா அரவிந்தா! இரவில் அதிக நேரம் விழித்தாயா. இனிமேல் அப்படிச் செய்யாதே, இராத் தூக்கம் இல்லாவிட்டால் உடம்பை உருக்கிவிடும்" என்று அன்புடனே கடிந்து கொண்ட வாயா இப்படி ஈமொய்த்து ஈரம் உலர்ந்து சவக்களை காட்டுகிறது?

நினைக்க நினைக்க மனதிலுள்ள துக்கமெல்லாம் கண் வழிப்பெருகுவதுபோல் அழுகைதான் பெருகிற்று. எவ்வளவு நேரம்தான் அழுது கொண்டிருப்பது? இனிமேல் அழுதுதான் என்ன ஆகப்போகிறது? கண்களைத் துடைத்துக் கொண்டு முருகானந்தத்தோடு சேர்ந்து தானும் மேலே நடக்க வேண்டிய காரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தான் அரவிந்தன். யார் யாரோ வந்தார்கள். என்ன என்னவோ சொல்லித் துக்கம் கேட்டார்கள். எதை எதையோ நினைவுபடுத்தினார்கள். ஒன்றுமே நினைவில்லாமலும், நினைவிலேயே ஒன்றுமில்லாமலும் வேலைகளில் அவன் இயங்கிக் கொண்டிருந்தான்.

 

மீனாட்சிசுந்தரத்தின் மக்களில் மூத்தவர் மூவரும் பெண்கள். முதல் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து கொடுத்திருந்தார். மூத்த பெண்ணுக்குத் திருநெல்வேலியிலும், அடுத்த பெண்ணுக்குத் திருச்சியிலும் சம்பந்தமாயிருந்தது. மூன்றாவது பெண் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுத் திருமண வயதில் வீட்டில் இருந்தாள். கடைசியாகப் பத்து பன்னிரண்டு வயதில் ஒரு பையன் இருந்தான்.

பெண்கள் வருவதற்காகத் திருச்சிக்கும் திருநெல்வேலிக்கும் அவசரமாகத் தந்திகள் கொடுத்திருந்தான் முருகானந்தம். பெண்கள் வந்து பார்ப்பதற்கு முன்னால் சவத்தை எடுக்க வேண்டாமென்று திருமதி மீனாட்சிசுந்தரம் கூறியிருந்தாள். அரவிந்தன் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் கோடைக்கானலிலிருந்து பூரணி, மங்களேசுவரி அம்மாள் முதலியவர்கள் காரில் வந்துவிட்டார்கள். அவர்களுக்கும் முருகானந்தம் தந்தி கொடுத்திருந்தான் போலிருக்கிறது. பெண்கள் கூட்டம் உள்ளே அதிகமாக, அதிகமாக, அழுகைக் குரல் ஒலியும் அதிகமாயிற்று. உறவினர்களும், நண்பர்களும் பழகிய பிரமுகர்களுமாக வாயிலில் ஆண்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு மனிதன் உண்மையிலேயே நல்லவனாகவும், பெருந்தன்மை உள்ளவனாகவும் இருந்தான் என்பதற்கு அடையாளம் அவன் வாழும்போது கூடுகிற கூட்டம் அல்ல. மரணத்தின் போது கூடுகிற கூட்டம் தான், மனிதனுடைய பெருந்தன்மையை மாற்றுக்காணச் சரியான கட்டளைக் கல். மீனாட்சிசுந்தரம் இறந்ததும் அவர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் அவர் பெருமையை நன்றாகக் காட்டியது. அச்சகத்து ஊழியர்கள் கண்ணீர் மல்க கூடி நின்றார்கள். ஊர் நடுவில் நிழல் தந்து கொண்டிருந்த, பெரிய மரம் திடீரென்று சாய்ந்து முறிந்து விட்டாற்போல் அந்த மனிதரின் மரணம் எல்லோருக்கும் வேதனை அளித்திருந்தது. இருட்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன் திருநெல்வேலியிலிருந்தும், திருச்சியிலிருந்தும் பெண்கள் இருவரும் வந்து சேர்ந்துவிட்டார்கள். இரண்டு மாப்பிள்ளைகளுமே உடன் வந்திருந்தார்கள்.

வையையில் வெள்ளம் போனதால் பாலம் சுற்றிச் செல்லூர் வழியாகத் தத்தனேரிச் சுடுகாட்டுக்குப் போய் எல்லாம் முடித்துவிட்டுத் திரும்பும்போது இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும். அரவிந்தன் பித்துப் பிடித்தவன் மாதிரிச் சோர்ந்து நடைப்பிணம் போல் அச்சகத்துக்குத் திரும்பினான். அந்தச் சமயத்தில் அரவிந்தனுக்கு ஆறுதலாக உடனிருக்க வேண்டியது அவசியமென்று தோன்றியதால் முருகானந்தமும் உடன் வந்தான். அச்சகத்துக்குள் நுழையுமுன், "இதோ இதுதான் அப்பா, அவருடைய உயிருக்கு எமனாக வந்து தோன்றியது! நீ கிராமத்துக்குப் போன பின் இரண்டு நாட்களில் ஒருவிதமான உடல் தேறி அச்சகத்துக்கு வந்து போகத் தொடங்கி இருந்தார். இந்தக் கட்டிடத்தைப் பர்மாக்காரர் விலைக்கு வாங்கியதையும், இதில் புதுமண்டபத்து மனிதர் அச்சகம் வைக்கப் போகிறார் என்பதையும் கேள்விப்பட்டாரோ இல்லையோ, மறுநாள் மீண்டும் ரத்தக் கொதிப்பு அதிகமாகிப் படுக்கையில் விழுந்துவிட்டார்" என்று முருகானந்தம் பக்கத்துக் கட்டிடத்தைச் சுட்டிக் காட்டினான். திகைப்போடு பக்கத்துக் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான் அரவிந்தன். 'குமரகுருபர விலாஸ் காப்பி சாப்பாட்டு ஓட்டல்' என்று புகை படிந்த சுவரில் அங்கே வழக்கமாகத் தொங்கும் ஓட்டல் விளம்பரப் பலகையை இப்போது காணவில்லை. புது வெள்ளைப் பூச்சுடன் கூடி அழகாயிருந்த கட்டிடத்தில் ஓட்டல் விளம்பரப் பலகைக்குப் பதில் அதே இடத்தில் 'காமாட்சி அச்சகம்' என்ற எனாமல் பெயர் தெருவிளக்கின் ஒளியில் பெரிதாகிப் 'பளிச்'சென்று தெரிந்தது. கீழே உரிமையாளர் என்ற சிறிய எழுத்துக்களுக்கு நேரே புதுமண்டபத்து மனிதருடைய பெயர் காணப்பட்டது. இரண்டு வாரங்கள் கிராமத்தில் இருந்துவிட்டுத் திரும்பி வருவதற்குள் இங்கே இத்தனை காரியங்கள் நடைபெற்றிருக்கின்றனவா? என்று மலைத்தான் அரவிந்தன். பர்மாக்காரருடைய புலிமுகம் அடித்து கொல்வதற்கு வாயைப் பிளந்துகொண்டு வருகிறது போல் பெரிதாக அவன் கண்களுக்கு முன் தெரிந்தது.

"இது தொடங்கி எத்தனை நாளாயிற்று முருகானந்தம்?"

"நாலு நாளைக்கு முன்னால்தான் திறப்பு விழா எல்லாம் பிரமாதமாகத் தடபுடல் செய்தார்கள். பர்மாக்காரர்தான் திறந்து வைத்தார்."

"ஊம்! இனிமேல் இது ஒரு புது வம்பா?" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டவாறே அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். முருகானந்தமும் பின் தொடர்ந்தான். அன்று இரவு அரவிந்தனுக்கு உறக்கமே இல்லை. பர்மாக்காரரைப் போல் வசதியுள்ளவர்கள் ஒருவர் மேல் பகைமை முற்றி வைரம் பெற்றுவிட்டால் திட்டத்தோடும், தீர்மானத்தோடும், கெடுதல் செய்து விரைவாக அழிக்க முடியும். ஏழையும், ஏழையும் பகைத்துக் கொண்டால்தான் தெருவில் நின்று ஒருவருக்கொருவர் குடுமியைப் பிடித்து அநாகரிகமாகக் கன்னத்தில் அறைந்து கொண்டிருப்பார்கள். வசதியுள்ளவர்கள் பகைவனைப் பழி வாங்குவதில் கூட அழுக்குப்படாமல் நாகரிகமாகப் பழி வாங்குவார்கள். இப்போது பர்மாக்காரர் அப்படிப்பட்ட முறையில்தான் பழிவாங்கத் தொடங்கியிருக்கிறார் என்று அரவிந்தனுக்கு ஒருவாறு விளங்கியது. 'மீனாட்சிசுந்தரம் சாகவில்லை! இத்தகைய வேதனைகளால் சாகடிக்கப்பட்டிருக்கிறார். இந்த வேதனைகளால் அவருடைய மனத்தை அணுஅணுவாகக் கொன்று துடிதுடிக்கச் செய்திருக்கிறார்கள்' என்பதையும் அவன் இப்போது தெளிவாக உணர்ந்து கொண்டான்.

அன்று இரவு அச்சகத்தில், மீனாட்சிசுந்தரம் இறந்த வேதனையையும் சுற்றிலும் உருவாகும் பகைகளையும் எண்ணிக்கொண்டே உறக்கமின்றித் தவித்த அவன் மனத்தில் முடிவாக ஒரு வைராக்கியம் உண்டாயிற்று. 'இவர்களை நான் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் பாடம் கற்பிக்க விரும்புகிறேன். பாடம் கற்பித்தே தீருவேன்' என்று மனத்துக்குள் உறுதி செய்து கொண்டான் அவன். மீனாட்சிசுந்தரம் காலமாகிவிட்டார் என்பதற்காக முன்பு செய்திருந்த எந்த ஏற்பாட்டையும் அரவிந்தன் நிறுத்தத் தயாராயில்லை. 'பூரணியைத் தேர்தலிலும், அரசியலிலும் ஈடுபடச் செய்வது நல்லதன்று' என்று அவரிடம் அன்றைக்கு வாதாடினான் அவன். இப்போதோ அதைப் பற்றி அவனே தன் கருத்தை மாற்றிக் கொண்டு, 'முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடா'தென்று உறுதியாகியிருந்தான்! அவன் கருத்து மாறுவதற்குக் காரணமாயிருந்தவை பர்மாக்காரரின் சூழ்ச்சிகள்தாம். 'இந்த ஊரில் என் விருப்பத்தை மீறி ஒரு துரும்பு அசையாது. உங்களையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்ற ஆள் பலமும், பண பலமும் என்னிடம் இருக்கின்றன' என்று அன்றொரு நாள் தம் மாளிகைக்கு அழைத்துப் போய் அவனை மிரட்டி அனுப்பி இருந்தாரே பர்மாக்காரர்; ஆணவத்தோடு கூடிய அந்த மிரட்டலை அவன் அதற்குள் எப்படி மறந்துவிட முடியும்? அவருடைய கருத்துக்கு இணங்க மறுத்த தன்னை அடித்துக் கீழே தள்ள ஆள் ஏவி விட்டாரே; அதையும் அவன் மறந்துவிடவில்லை. 'பெட்டி நிறையப் பணமும், மனம் நிறைய அயோக்கியத்தனமும், உடல் நிறைய ஒழுங்கீனமுமாகத் திரியும் இம்மாதிரிப் பெரிய மனிதர்களைச் சரியானபடி முகமூடியைக் கிழித்தெறிந்து சமூகத்துக்குக் காட்டிவிட வேண்டும்' என்று முருகானந்தம் ஆவேசமாகக் கொதித்துப் பேசுவது போல் அரவிந்தன் இவர்களைப் பற்றி வாய் அலுக்கக் கண்ட இடங்களில் பேசிக் கொண்டு திரிவதில்லை. 'இவர்கள் கெட்டவர்கள்; அதற்காக இவர்களை நான் அழிக்க விரும்பவில்லை. இவர்களுடைய கெடுதல்களைத்தான் அழிக்க விரும்புகிறேன்' என்று மனத்தில் இவர்களைப் பற்றி ஒரு சிவப்புப் புள்ளி போட்டு நினைவு வைத்துக் கொண்டான்.

மீனாட்சிசுந்தரம் காலமாகி ஒரு மாதத்துக்குப் பிறகு காரியங்களெல்லாம் முடிந்து ஓய்வடைந்த பின் அமைதியான நிலையில் ஒரு நாள் திருமதி மீனாட்சிசுந்தரத்தினிடம் அச்சக நிர்வாகம் பற்றிக் கலந்தாலோசித்தான் அரவிந்தன்.

"வழக்கம் போல் எல்லாம் நடக்கட்டும். புதிதாக நான் என்ன சொல்லப் போகிறேன்? எனக்கு நல்லதைத்தான் நீ செய்வாய். எல்லாப் பொறுப்பையும் ஒப்புக் கொண்டு நம்பிக்கையாய்ச் செய்வதற்கு உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் எங்களுக்கு? எல்லாம் நீ பார்த்துச் செய்தால் எனக்குத் திருப்திதான்" என்று கூறிவிட்டார் திருமதி மீனாட்சிசுந்தரம். மீனாட்சிசுந்தரத்தைப் போலவே இந்த அம்மாளும் பெருந்தன்மையான மனம் கொண்டவர் என்பதை அரவிந்தன் அறிவான்.

அருகருகே இரண்டு அச்சகங்கள் இருந்தால் தொழில்முறைப் போட்டிகளும், வம்பு வழக்குகளும் ஏற்படாமலா இருக்கும்? ஒவ்வொரு வம்பாகத் தலை காட்டியது. ஒரு நாள் காலை மீனாட்சி அச்சகத்து முன் அறையில் அரவிந்தனும் முருகானந்தமும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது நாட்டுப்புறத்து மனிதர் ஒருவர் திருமண அழைப்பிதழ் அச்சிட வேண்டுமென்று வந்தார். உயர்ந்த காகிதத்தில் இரண்டு கலரில் ஆயிரம் பிரதிகள் அச்சிட என்ன செலவாகும் என்று கேட்டார். அரவிந்தன் ஒரு துண்டுக் காகிதத்தில் கணக்குப் போட்டுக் கூட்டி அவரிடம் தொகையைச் சொன்னான்.

 

"அடுத்தாற் போல் இருக்கிற 'காமாட்சி பிரசில்' நீங்க சொல்றதுலே சரிபாதித் தொகைக்கு அச்சடித்துத் தாராங்களே ஐயா! இதென்ன அநியாயமாப் பணம் கேட்கிறீங்க" என்று கோபித்துக் கொண்டு எழுந்து போய்விட்டார் வந்த மனிதர். மறுநாள் அதே நாட்டுப்புறத்து மனிதர் காமாட்சி அச்சகத்தில் அச்சிட்டு வாங்கிக் கொண்ட அழைப்பிதழ்களுடன் மீனாட்சி அச்சகத்தில் ஆத்திரத்தோடு நுழைந்து "இதோ பாருங்க, ஐயா! இந்த பத்திரிகையை, நேற்று நீங்க சொன்னதுலே பாதி ரேட்டுக்குத்தான் காமாட்சி பிரஸ்காரன் அடிச்சுத் தந்திருக்கிறான்? இதற்கு என்ன குறை வந்திருச்சாம்" என்று அரவிந்தனிடம் ஒரு பத்திரிகையை எடுத்துக் காட்டிக் கூச்சல் போட்டார். அவர் காட்டிய பத்திரிகையைக் கையில் வாங்கிக் கொண்டு, "கொஞ்சம் உட்காருங்கள், பெரியவரே!" என்று சமாதானம் கூறி அவரை உட்கார வைத்துவிட்டு அந்த அழைப்பிதழைப் படிக்கலானான் அரவிந்தன்.

"எனது மகள் திருநிறைச்செல்வி மரகதத்துக்கும் மேல்ப்புத்தசரம்... மகன் திருநிறைச்செல்வன் கந்தசாமிக்கும் நடைபெற இருக்கும் மரண வைபவத்துக்குத் தாங்கள் சுற்றமும் உரவும் புடைசூழ வந்திருந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்யுமாறு வேண்டிக்கொல்லுகிறேன்" என்று அச்சிடப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் அரவிந்தனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. அடப்பாவிகளா? கை கூசாமல் 'மண வைபவத்தை மரண வைபவம்' என்று அடித்துக் கொடுத்திருக்கிறீர்களே என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டான். பிழையான பகுதிகளை அடியில் சிவப்புமையால் கோடிட்டு அந்தப் பெரியவரிடம் கொடுத்து "ஐயா பெரியவரே! திருத்தியிருக்கிற இடங்களையெல்லாம் படியுங்கள். இந்த மாதிரித் திருமணப் பத்திரிகைகளில் கொலைச் செய்தி அச்சடித்துத் தருகிற அளவு அலட்சியமாக எங்கள் அச்ச்கத்தின் வேலை நடக்காது. நாங்கள் பிழையில்லாமல் பொறுப்போடு நன்றாக அச்சிட்டுத் தருவோம், அதனால் எங்கள் தொகையும் சிறிது அதிகமாகத்தான் இருக்கும்" என்று சிரித்தவாறே சொல்லிவிட்டான். அழைப்பிதழைக் கூர்ந்து படித்ததும் நாட்டுப் புறத்து மனிதரின் முகமும் கடுங்கோபம் நிறைந்ததாக மாறிற்று.

"படுபாவிப் பயல்கள்! மூஞ்சியில் நெருப்பை அள்ளி வைக்க. இப்படியா அச்சடிப்பானுக? இவனுக வீட்டிலே எழவு விழுக. கையிலே கொள்ளியைத்தான் வைக்கணும்" என்று கூறிக் கொண்டே ஆத்திரத்தோடு வெளியேறிக் காமாட்சி அச்சகத்துக்குப் போர் தொடுக்கக் கிளம்பினார் அவர். இன்னொரு முறை ஏதோ ஓர் இடத்தில் பாரதி விழா அமைத்திருந்தவர்கள் நிகழ்ச்சி நிரல் அச்சடிக்க வந்தார்கள். அரவிந்தன் கூறிய தொகையை விட காமாட்சி அச்சகத்தில் மலிவு என்று அங்கே போய் மலிவாக அச்சிட்டு வந்தனர். நிகழ்ச்சி நிரல் தலைப்பில் 'பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்' என்றிருக்க வேண்டிய பாரதியின் கவிதை வரி, 'பாரத தேசமென்று தேள் கொட்டுவோம்' என்று சந்தி சிரிக்க அச்சாகியிருந்தது. அதே பாரதி விழாவில் முருகானந்தம் சொற்பொழிவு செய்ய நேர்ந்தது. சொற்பொழிவின் நடுவே 'தேள் கொட்டுவோம்' என்று அச்சாகியிருக்கும் ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டான் முருகானந்தம்.

 

"சொந்தப் பகை ஆயிரம் இருக்கலாம்; பொதுக்கூட்டத்தில் போய் இதையெல்லாம் எதற்குப் பேசுகிறாய்? தப்பாக எண்ணிக் கொள்ளப் போகிறார்களே?" என்று அரவிந்தன் அவனைக் கண்டித்தான். ஆனால் அதற்குச் சிறிதும் அஞ்சாமல் முருகானந்தம், "நீ சும்மா இரு, அரவிந்தன். நான் எவனுக்கு பயப்பட வேண்டும்! தப்பு என்று பட்டதைக் கூசாமல் கண்டிக்க வேண்டியதுதான்" என்று கூறிவிட்டான்.

தொழிற்போட்டிகளையும், பொறாமை, பகைகளையும் கூடியவரை நியாயமாகவும், கண்ணியமாகவும் தீர்க்க முயன்றான் அரவிந்தன். அனாவசியச் சண்டைகளை முன்கூட்டியே தவிர்த்தான். தான் கிராமத்தில் நிலம் விற்றுக் கொணர்ந்த பணத்தில் அச்சகத்துக் கடன்களை அடைத்தவை போக எஞ்சிய பகுதியை தேர்தல் செலவுக்கென ஒதுக்கி வைத்தான். தன்னுடைய திறமையான நிர்வாகத்தினாலும் நாணயமான நடவடிக்கைகளாலும் மீனாட்சி அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்த எந்த வேலைகளும் குறையாமல் பார்த்துக் கொண்டான் அரவிந்தன். பக்கத்தில் புதிதாக ஏற்பட்டிருந்த அச்சகம் அவனையோ, அவனுடைய தொழிலையோ எந்த வகையிலும் கெடுத்துவிட முடியவில்லை. கெடுக்க முடியாவிட்டாலும் கெடுப்பதற்காக அரவிந்தனுக்கு எதிராக அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். எந்நேரமும் அவர்களை நினைத்துக் கவலைப்படவோ, போட்டி போடவோ அரவிந்தன் தயாராயில்லை. தனது விலை மதிப்பற்ற நேரத்தைப் பல நல்ல காரியங்களுக்குச் செலவிட வேண்டியிருந்தது அவனுக்கு. வசந்தா முருகானந்தம் திருமணம் நிச்சயமாகி முகூர்த்த நாளும் பார்த்துவிட்டார்கள். இரண்டு குடும்பங்களுக்கும் பொது மனிதனாக இருந்து அவன் தான் திருமண ஏற்பாடுகளையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது. மீனாட்சிசுந்தரத்தின் இறுதிச் சடங்குகளுக்காக வந்தபின் பூரணியோ, மற்றவர்களோ திரும்பவும் கோடைக்கானலுக்குப் போகவே இல்லை. பதினைந்து இருபது நாட்கள், திருப்பரங்குன்றத்து வீட்டில் ஓய்வாக இருந்தாள் பூரணி. ஓதுவார்க்கிழவர் வீட்டுக் காமுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. போய்ப் பார்த்துவிட்டு வந்தாள். கமலா பிள்ளைத்தாச்சியாகப் பிறந்து வீட்டுக்கு வந்திருந்தாள். சில நாட்களில் மாலையில் அவளுடைய வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தாள். மங்களேசுவரி அம்மாளின் பெண்ணுக்குத் திருமணம் நெருங்கிய போது மதுரையிலேயே அந்த அம்மாவோடு வந்து தங்கி உதவியாக இருக்கலானாள். நகைக்கடை, புடவைக்கடை என்று மங்களேசுவரி அம்மாளோடு அலைய வேண்டிய இடங்களுக்கு எல்லாம் அலைந்தாள்.

திருமணம் நடக்க இருந்த நாளுக்கு அப்பால் பூரணி இலங்கை புறப்பட ஒரு வாரமோ, என்னவோ இருந்தது. வெளிநாட்டுப் பயண அனுமதி வந்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் தமிழ் இலக்கிய மகாநாட்டிலும், இலங்கையில் பிற பகுதிகளிலும் அவள் சொற்பொழிவாற்றுவதற்காகப் புறப்பட இருந்தாள்.

 

வசந்தாவின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஊரே வியக்கும் அதிசயத் திருமணமாக அமைந்தது அது. திருமண நாளன்று திரும்பத் திரும்ப எப்போது நினைத்தாலும் மனதில் மகிழ்ச்சி ஊறும் அனுபவம் ஒன்று பூரணிக்கு ஏற்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் கூட்டத்தில் பெண் குழந்தை ஒன்று வாயாடியாகவும், படு சுட்டியாகவும் இருந்தது. மாலையில் முன்புறம் பந்தலில் யாரையோ வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தான் அரவிந்தன். 'ஸ்டோர் ரூம்' சாவி அவனிடம் இருந்தது. மங்கையர் கழகத்துப் பெண்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து வந்திருந்தது. அவர்களுக்கெல்லாம் தாம்பூலப்பை கொடுப்பதற்காக ஸ்டோர் ரூம் சாவி வேண்டியிருந்தது பூரணிக்கு. பக்கத்தில் பட்டுப் பாவாடை புரளச் சிரித்துக் கொண்டே நின்ற அந்த வாயரட்டைச் சிறுமியிடம், "வாசலிலே அதோ உயரமாக, சிவப்பாக, அழகாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே ஒருத்தர், அவரிடம் ஸ்டோர் ரூம் சாவி இருக்கிறது. நான் கேட்டேனென்று போய் வாங்கிக் கொண்டு வா!" என்று அரவிந்தனை அடையாளம் காண்பித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி. அந்தச் சுட்டிப் பெண் திருமணத்துக்கு வந்த நாளிலிருந்து அரவிந்தனையும் பூரணியையும் நன்றாகக் கவனித்து வைத்திருந்தது. அவர்கள் இருவரும் அடிக்கடி சிரித்துப் பேசிக் கொள்வதையும், சேர்ந்து கடைகளுக்குச் செல்வதையும் பார்த்து இருவரும் கணவன், மனைவி என்று தானாக நினைத்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. இயல்பாகவே குறும்பும், சுட்டித்தனமும் நிறைந்த குழந்தை அது. பூரணி அனுப்பியதும் சிறிது கூடக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் துள்ளிக் குதித்து வாயிற்புறம் ஓடிப்போய் அங்கே பல பேருக்கு நடுவே நின்று கொண்டிருந்த அரவிந்தனை நோக்கி, "மாமா! மாமா, உங்க வீட்டுக்காரி உங்களைக் கூப்பிடறாங்க. நீங்க அழகா, உயரமா, சிவப்பா இருக்கீங்கன்னு அவர்களுக்கு ரொம்பத் தற்பெருமை. எங்கிட்டச் சொல்லி அனுப்பிச்சாங்க. ஸ்டோர் ரூம் சாவி வேணுமாம் உங்க வீட்டுக்காரிக்கு... தரப்போறீங்களா இல்லையா! எனக்கு நேரமாவுது" என்று வெடிப்பாகப் பேச ஆரம்பித்தது. சுற்றியிருந்த நண்பர்களும் மாப்பிள்ளைக் கோலத்தில் வீற்றிருந்த முருகானந்தமும் அந்தச் சிறுமி கூறியதைக் கேட்டு அடக்க முடியாமல் சிரித்துவிட்டார்கள். அரவிந்தன் ஒன்றும் புரியாமல் நாணித் தயங்கி நின்றான். தன் பிஞ்சுக் கையை அவனது வலது கையில் கோர்த்துக் கொண்டு உள் இழுத்துச் செல்லத் தொடங்கிவிட்டது அந்தக் குழந்தை. அது இழுத்துக் கொண்டு சென்ற வேகத்தில் தொடர்ந்து அவன் நடந்து செல்லத் திணறினான். கூட்டத்தில் அத்தனை பெண்களின் கூட்டத்துக்கு நடுவே அரவிந்தனைப் பூரணிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தி, "அழகா, உயரமா, சிவப்பா என்று பெருமையடிச்சிக்கிட்டிங்களே! இதோ உங்க வீட்டுக்காரரைக் கொண்டாந்து நிறுத்தியாச்சு. சாவியோ, பூட்டோ எது வேணுமோ வாங்கிக்குங்க" என்று கூறி இரண்டு கைகளையும் கொட்டிக் குதித்துச் சிரித்தது அது! சின்னஞ்சிறு பவழ இதழ்களை அழகாகக் கோணிக்கொண்டு சுழித்துச் சுருக்கிக் குறும்பாக அது சிரித்த சிரிப்பில் கூடியிருந்த பெண்களும் கலந்து கொண்டார்கள். பூரணியும் அரவிந்தனும் நாணித் தலை குனிந்தார்கள் ஒரு கணம். அந்தத் திருமண வீட்டில் மணந்து கொண்டிருந்த மல்லிகை மணமும், சந்தன மணமும், ஒன்றாகிக் கலந்து அவர்கள் இரண்டு பேருடைய இதயத்துள்ளும் புகுந்து இடம் காணாமல் நிறைந்து கொண்டு மணம் பரப்புவது போல் இருவருமே உணர்ந்தனர். அந்த ஒரே ஒரு கணத்தில் அவனும் அவளும் மூப்பு முதிர்வற்ற கந்தர்வக் காதல் வாழ்வை எண்ணற்ற பிறவிகளில் மனங்களிலேயே வாழ்ந்து வாழ்ந்து நிறைவு கண்டுவிட்டாற் போன்றதொரு பரிபூர்ணமான உணர்வை எய்தினர். பரிபூரணமானதொரு சிலிர்ப்பை அடைந்தனர். அவற்றில் மெய் மறந்து நின்றனர்.

"ஐயையே, வீட்டுக்காரரும் வீட்டுக்காரியும் வெக்கப்படறாங்கடோய்!" என்று மீண்டும் பந்து எழும்பித் தணிவது போல் துள்ளிக் குதித்துக் கைகொட்டிச் சிரித்தாள் சிறுமி. அரவிந்தன் அந்தச் சிறுமியை எட்டிப் பிடிக்கக் கையை நிட்டிக் கொண்டு பாய்ந்தான். சிறுமி சிட்டாகப் பறந்து ஓடிவிட்டாள். பெண்களுக்கு நடுவில் மணக்கோலத்தில் புத்தழகும் பூரிப்புமாக அடக்கத்தோடு உட்கார்ந்திருந்த வசந்தா மெல்லத் தலை நிமிர்ந்து 'அண்ணனுக்கு நல்லா வேணும்' என்று சொல்லிச் சிரித்தாள். "குழந்தை வாக்கு தெய்வ வாக்கு மாதிரி, இல்லாததை அது ஒன்றும் சொல்லிவிடவில்லை? என்றாவது ஒருநாள் நடக்க வேண்டியதுதானே?" என்று மங்களேசுவரி அம்மாள் புன்னகையோடு கூறினாள். அந்த சிறுமி செய்த வம்பினால் விளைந்த சிரிப்பும் கலகலப்பும் அடங்க சில விநாடிகள் ஆயின. அரவிந்தன் தன் நினைவுக்கு வந்து பையிலிருந்து ஸ்டோர் ரூம் சாவியை எடுத்து, "இந்தா சாவியை வாங்கிக் கொள்" என்று பூரணியிடம் நீட்டினான். ஒதுங்கி நாணித் துவண்டு நின்ற பூரணி மெல்லத் தலை நிமிர்ந்து நெஞ்சைக் கொள்ளையிடும் எழில் விழிகளால் நோக்காதது போல் நோக்கி முல்லைச் சிரிப்பில் நெகிழும் கொவ்வை இதழ்களில் குழைவு கனிய அவன் கையிலிருந்து சாவியை வாங்கிக் கொண்டாள். அப்போது தன் கண்கள் பருகிச் சிறைப்பிடித்த அவள் முகத்தின் ஒப்பிலா வனப்பை அவன் தன் இதயத்தில் பதிய வைத்துக் கொண்டான். 'நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த முகமல்லவா அது?' தன்னுடைய பழைய கவிதை நினைவு வந்தது அவனுக்கு. அத்தர், புனுகு, சவ்வாது எல்லாம் இணைத்துக் கலந்து பூசின மாதிரி நினைவுகளிலும் உடம்பிலும் சுற்றி இலங்கிடும் சூழ்நிலையிலும் ஏதோ மணந்தது அரவிந்தனுக்கு. ஆனால் மறுவிநாடியே, கையில் தீபத்தையும் கண்களில் கண்ணீரையும் ஏந்திக் கொண்டு இருளடைந்த மனிதக் கும்பலின் நடுவே, ஒளி சிதறி நடந்து செல்லும் வன தேவதை போன்று பூரணி நினைவில் வந்து அவன் நினைவைச் சிலிர்க்க வைத்தாள். மனத்தைக் கோவிலாக்கினாள்.

பெண்ணுக்குத் திருமணம் நன்றாக முடிந்த திருப்தியில் மங்களேசுவரி அம்மாளும் பூரணியோடு இலங்கைக்குப் புறப்பட்டு விட்டாள். அந்த அம்மாளிடம் பாஸ்போர்ட் ஏற்கெனவே இருந்தது. 'விசா' மட்டும் அவசரமாக ஏற்பாடு செய்து அரவிந்தன் வாங்கிக் கொடுத்தான். சென்னையிலிருந்து திருச்சி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் 'ஏர் சிலோன்' விமானத்தில் அவர்கள் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். பிரயாண நாளிலே திருச்சி விமான நிலையத்துக்கு மங்கையர் கழகத்துக் காரியதரிசி, அரவிந்தன், முருகானந்தம், வசந்தா எல்லாரும் வழியனுப்பச் சென்றிருந்தார்கள். பூரணி விமானத்தின்மேல் ஏறும் பெட்டி ஏணியின் கடைசிப் படியில் நின்று கைகூப்பியபோது, "உயரத்தில் ஏறிச்செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்" என்று நகைத்துக் கொண்டே தரையிலிருந்து இரைந்து கூறினான் அரவிந்தன். அதைக் கேட்டுப் பதிலுக்கு அவள் சிரிக்க முயன்றாள். ஆனால் அவள் கண்களில் நீர் திரண்டு விட்டது.

 

29

 

புண்ணிய நல்வினை திரண்டனைய

பொன்னொளிர் பொலிவினை

கண்ணிற்கரந்தானே மறுபடி

கண்ணுள் கலந்தானே!

 

விமானம் மேலே உயரச் சென்று பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் ஏதோ புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டாள். 'உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்' என்று விமானம் புறப்படுமுன் நகைத்துக் கொண்டே கூறினானே அரவிந்தன். அப்போது அவன் முகம் எப்படி இருந்ததென்பதைக் கண்களை மூடிக்கொண்டு இப்போது உருவெளியில் நினைத்துப் பார்க்க முயன்றாள் அவள். விமானம் புறப்பட்டு மேலெழுந்ததுமே கீழே நின்று கொண்டிருந்த அரவிந்தன் அவள் கண்களின் பார்வைக்கு மறைந்துவிட்டான். ஆனால் அவனை நினைத்துப் பார்ப்பதற்குத்தான் எப்போதும் அவள் சிரமப்பட வேண்டியதே இல்லையே. கண்ணில் கரைந்து போனாலும் கண்ணுள் கலந்து நிறைந்தவனாயிற்றே அவன். சிவப்பு வெல்வெட் துணியில் முத்து மாலை சரிவது போல் நகைத்தவாறே விமானத்துப் படியினருகில் நின்ற அரவிந்தனின் முகம் அவளுக்கு நினைவு வந்தது. 'அரவிந்தன்! உங்கள் சிரிப்பில் அமுதம் இருக்கிறது. அமுதத்துக்குத்தான் உயிரை வளர்க்கும் ஆற்றல் உண்டு' என்று அவன் முகம் நினைவுக்குள் வந்த போது தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் பூரணி. அரவிந்தனின் இந்தச் சிரித்த முகத்தை நினைவிலிருந்து அழியாமல் வைத்துக் கொண்டாலே போதும். உலகம் முழுவதும் சுற்றிப் புகழ் மாலை சூடிவரும் துணிவை இந்த முகத்தின் நினைவிலேயே நான் அடைய முடியும் என்று எண்ணிக் கொண்டாள் அவள். விரைவாகச் செல்லும் ஊர்திகளில் பயணம் செய்ய நேரும் போதெல்லாம் தன் மனத்தில் தனித்தன்மை வாய்ந்த தூய நினைவுகள் குமிழி குமிழியாகப் பொங்கி மேலெழுவதை அவள் உணர்ந்திருக்கிறாள். சிந்தனைத் துடிப்பும், புதுச்சட்டை போட்டுக் கொண்டிருக்கும் குழந்தையின் உற்சாகமும், பெரிய சாதனைகளை உடனே சாதித்து விட வேண்டும்போல் ஒரு தவிப்பும், வேகமான வாகனங்களில் உட்கார்ந்து செல்லும்போது தவிர்க்க முடியாமல் அவளுக்கு ஏற்படும். வாழ்க்கையில் அவள் செய்கிற முதல் விமானப் பயணம் இது. எனவே அவளுக்கு அத்தகைய நேரங்களில் ஏற்படும் இயல்பான மன எழுச்சி இன்று இரு மடங்காயிருந்தது.

ஈழ நாட்டைப் பற்றியும், யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் சிறப்பைப் பற்றியும் அப்பா எப்போதோ கூறியிருந்த செய்திகளெல்லாம் அவளுடைய நினைவில் பசுமையாகத் தோன்றின. ஆறுமுக நாவலர், குமாரசாமிப் புலவர், சி.வை. தாமோதரம் பிள்ளை, கதிர்வேல் பிள்ளை, விபுலானந்தர், பண்டிதமணி கணேச அய்யர் போன்று ஈழநாட்டில் தோன்றித் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்துக்கும் முடிசூடா மன்னர்களாக விளங்கிய பெரும் புலவர்களை நினைத்துக் கொண்டபோது பயபக்தியினால் மெய் சிலிர்த்தது அவளுக்கு. 'தமிழும், சைவமும், பழைய நற்பண்புகளும் குன்றாமல் வாழும் ஒரு சூழ்நிலையைக் காண முடிந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்' என்று நினைப்பதற்கே பெருமையாக இருந்தது. 'விபுலானந்த அடிகளைப் போல் துறவியாகி தமிழுக்கும் சமய ஒழுக்கங்களுக்கும் எனது முழு நேரத்தையும் கொடுத்துத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இளமையில் இருந்தது அம்மா! அந்த ஆர்வம் நிறைவேறாமல் செய்தது உன் தாய்தான்' என்று அம்மா இறந்த பின் பலமுறை பூரணியிடம் ஏக்கத்தோடு கூறியிருக்கிறார் அவள் தந்தை. உலகம் முழுவதும் தமிழும் தமிழ்ப் பண்புகளும் வாழும்படி செய்துவிட வேண்டும் என்று அப்பாவுக்கு ஒரு பேராசை உண்டு. அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் சிலர். இந்த இலட்சியப் பேராசையை வெறி என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். வெறிக்கும் அவருக்கும் வெகுதூரம். "பூரணி தமிழ் மொழி பேசுகிற இனம் உலகம் முழுவதும் தன் உறவுகளைப் பரவ விட்டிருக்கும் பெரிய குடும்பம் அம்மா! நிறையப் பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒவ்வொருவராக வளர்ந்து ஆளாக்கித் தகுதியான இடங்களுக்கு அனுப்பி விட்டுத் தான் மட்டும் தாய்மைப் பெருமிதத்தோடு இருந்த இடத்திலே தெய்வமாக மாறிக் கொண்டிருப்பது போல் உலகத்து மூலை முடுக்குகளுக்கு எல்லாம் தன் மக்களை வாழ்வதற்கு அனுப்பியிருக்கிறவள் தமிழ்த்தாய். அருகில் இருக்கும் மக்களைவிட அவளைப் பிரிந்து தொலை தூரத்துக்குச் சென்றிருக்கிறவர்கள் தாம் அவளுடைய அருமை பெருமைகளை நன்றாக உணர்ந்து வாழ்கிறார்கள். இந்த வகையில் தமிழ்த்தாயைப் போல் பெருமைப்படத்தக்க நிலை வேறு யாருக்கும் கிடையாதம்மா" என்று அப்பா சமயம் வாய்த்தபோதெல்லாம் கூறுவார். 'நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும், குன்றியவர்களை யாழ்ப்பாணத்தாருடனாவது வங்காளிகளுடனாவது ஆறு திங்கள் பழகச் செய்ய வேண்டும்' என்பார் அப்பா. 'நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் இல்லாமல் சமயம், ஒழுக்கம், பண்பாடு எதிலும் பற்று ஏற்பட இயலாது' என்று பலரிடம் அவர் கடுமையாக வாதங்கள் புரிந்திருப்பதைப் பூரணி அருகிலிருந்து கண்டிருக்கிறாள்.

விமானத்தில் பயணம் செய்துகொண்டே யாழ்ப்பாணத்தையும், தமிழையும், தமிழ்த் தொடர்புடையவர்களளயும் நினைக்கும் போது தந்தையின் பண்புகளும் பெருமைகளும் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவளுக்குத் துணிவு அளித்தன. அடிக்கடி அவள் உள்ளத்தில் உண்டாகும் ஒரு தன் விழிப்புத் தவிப்பு - அது இப்போதும் உண்டாயிற்று. உயரத்தில் விமானமும், விமானத்தில் தானுமாகப் பறந்து கொண்டிருந்த பூரிப்பின் ஊடே, தன்னைச் சுற்றி எல்லாமும் எல்லாரும் ஒழுங்ககவும், நிறைவாகவும், இனிமையாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பது போல் ஒரு திருப்தி அவளுள் பரந்து விரிந்து நிறைந்து நிலைத்துக் கொண்டிருந்தது. பெரிதாகவும் இணையற்றதாகவும் சிறந்ததாகவும் எதையோ நினைக்கவும், பேசவும், செய்யவும் வேண்டும் போல் மனமும் புலன்களும் கிளர்ந்தன. இந்தப் பரவச மனநிலை நீடித்தது. கம்பீரமான இலட்சியக் கனவுகளோடு பறந்து சென்றாள் அவள்.

மங்களேசுவரி அம்மாள் விமானப் பணிப் பெண்ணை அழைத்து ஆங்கிலத்தில் ஏதோ விசாரித்தாள். பூரணி தீவிரமான சிந்தனையில் இருந்ததனால் அந்த அம்மாள் விசாரித்ததைக் கவனமாகக் கேட்க இயலவில்லை.

"இன்னும் சிறிது நேரத்தில் யாழ்பாணத்து விமான நிலையத்தில் இறங்கிவிடுவோம் பூரணி!" என்று விசாரித்து அறிந்து கொண்ட செய்தியைப் பூரணியிடம் அந்த அம்மாளே கூறினாள். விமானம் சிறிது சிறிதாகக் கீழே இறங்கலாயிற்று. கண்மூடித் திறப்பதற்குள் விரைவாக யாழ்ப்பாணம் வந்துவிட்டதைப் போல் பூரணிக்கு வியப்பாக இருந்தது. 'தமிழ்நாடும் ஈழநாடும் மொழியால் தான் நெருங்கியிருக்கின்றன என்று எண்ணினேன்; இடத்தாலும் நெருங்கியிருக்கின்றனவே' என்று அதிசயப்பட்டாள் அவள்.

மங்களேசுவரி அம்மாள் பின் தொடரப் பூரணி விமானத்திலிருந்து கீழே இறங்கினாள். 'ஆறுமுக நாவலர் தமிழ் மணம் பரப்பிய மண்ணில் இறங்கப் போகிறோம்' என்று எண்ணிய போது இறும்பூது கொண்டாள். தமிழ் இலக்கிய விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அவளை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். ஆண்களும், பெண்களுமாக கைகளில் மாலைகளோடு தன்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தமிழன்பர்களின் கூட்டத்தைக் கண்டு மலைத்தாள் பூரணி. "இவ்வளவு பேர்கள் வந்திருக்கிறார்களே" என்று அவள் மங்களேசுவரி அம்மாவிடம் மெல்லச் சொன்னாள். "இதைவிட அதிகமான கூட்டம் வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, பூரணி! அன்பும், விருந்தோம்பலும், மரியாதையும் உலகத்துக்காகப் பள்ளிக்கூடம் வைத்துச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அளவு இங்குள்ளவர்களிடம் நிறைந்திருக்கின்றன. இவர்களிடம் ஒருநாள் பழகினாலும் இதை நீ விளங்கிக் கொள்ளலாம் அம்மா!" என்று பூரணிக்கு அந்த அம்மாள் பதில் கூறினாள்.

 

தமிழ் இலக்கிய விழாவின் செயலாளர் திரு. இராசநாயகமும் அவருடைய மனைவி கனகம்மாள் இராசநாயகமும், மலர்ந்த முகமும் கூப்பிய கரமுமாக எதிர்கொண்டு வரவேற்றார்கள். முன்பு இலங்கையில் வசித்திருந்த பழக்கத்தால் மங்களேசுவரி அம்மாளுக்கு இராசநாயகம் தம்பதிகளை நன்றாகத் தெரிந்திருந்தது. பூரணியை அவர்களுக்கும், அவர்களைப் பூரணிக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் மங்களேசுவரி அம்மாள்.

"நீங்களும் உடன் வந்தது எங்களுக்கு மெத்த மகிழ்ச்சியாயிருக்கிறது" என்று மங்களேசுவரி அம்மாவிடம் அன்பொழுகக் கூறினாள் கனகம்மாள் இராசநாயகம். விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியேற அரை மணி நேரம் பிடித்தது. கனகம்மாள் இராசநாயகமும் வேறு சில பெண்களும் மாலை மேல் மாலையாக அணிவித்துப் பூரணியைக் கழுத்து நிமிர முடியாமல் திணறச் செய்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்தாரின் முகங்களிலும், கனிவான பேச்சுக்களிலும், பழகுகிறவர்களைக் கவரும் ஒருவித இனிமையும் குழைவும் இருப்பதைப் பூரணி கண்டாள். யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்களின் முகங்களில் எல்லாம் ஒருமுறை பார்த்தாலும் மறக்க முடியாதது போல் ஏதோ ஒரு மங்கலமான சாயல் இருப்பதையும் அவள் கூர்ந்து பார்த்து உணர்ந்தாள். தமிழ்த்தாயின் தனிப்புதல்வியைக் கண்டது போல பூரணியைச் சூழ்ந்து கூட்டம் கூடி மொய்த்துக் கொண்டார்கள் அவர்கள். இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்ச்செய்தித்தாளின் நிருபர்கள் சிலர் புகைப்படக் கருவிகளோடு வந்து அவளைப் புகைப்படம் பிடித்துக் கொண்டு சென்றனர். திரும்புகிற பக்கமெல்லாம் அன்பும் ஆர்வமும் பொங்கும் முகங்களும், கூப்பிய கரங்களுமாகத் தோன்றி அவளை மகிழ வைத்தன. விமான நிலையத்திலிருந்து மங்களேசுவரி அம்மாளையும், பூரணியையும் இராசநாயகம் தம்பதிகள் தம் காரில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் வீட்டில் தங்களுக்கு நடந்த உபசாரங்களையும் விருந்தோம்பலையும் பார்த்தபோதுதான் யாழ்ப்பாணத்தவரின் விருந்தோம்பல் பற்றி மங்களேசுவரி அம்மாள் சொல்லியிருந்ததில் மிகைப்படக் கூறல் சிறிதும் இல்லையென்று பூரணிக்குப் புரிந்தது.

மறுநாள் காலை முதல் தொடங்கி தமிழ் இலக்கிய விழா மூன்று நாட்கள் தொடர்ந்து நிகழ இருந்தது. பெரியதொரு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது போல தமிழ் விழாவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதுபெருந்தமிழ்ப் புலவர் ஒருவர் விழாவைத் தொடங்கி வைத்தார். மேடையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்துத் தேவாரம் பாடி விழாவைத் தொடங்கிய அழகே பூரணிக்கு மிகவும் பிடித்திருந்தது. விழாப்பந்தல் காணாமல் நெருக்கி அடித்துக்கொண்டு ஆடவரும், பெண்டிரும் கூடியிருந்தனர். சொற்பொழிவுகளுக்குப் பெண்களும் அதிக ஆர்வத்தோடு விரும்பி வருவதைப் பூரணி அங்கே கண்டாள். விழாவைத் தொடங்கி வைத்த புலவர், பூரணியைக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்துகிற தொடர்பில் பேராசிரியர் அழகியசிற்றம்பலம் அவர்களைப் பற்றிக் கூறினார். பேராசிரியரின் நூல்களையும், ஆராய்ச்சித் திறனையும், பாராட்டிப் பேசினார். கடல் கடந்து வந்து தந்தையின் புகழைச் செவிகளில் கேட்டபோது அவளுக்குக் கர்வமே ஏற்படுவது போலிருந்தது. முதல் நாள் விழாவில் 'இலக்கிய உணர்ச்சிகள்' என்ற பொருளைப் பற்றி அழகாகப் பேசினாள் பூரணி.

"உணர்ச்சிகளை வெறும் அனுபவங்களாக நுகர்ந்து மறந்து விடுகிறார்கள் மனிதர்கள். உணர்ச்சிகளைக் காவியம் செய்கிறார்கள் கவிகள். இன்பமும் துன்பமும், ஏக்கமும் வாழ்க்கையில் வரும்போது வெறும் உணர்ச்சிகளாக இருக்கின்றன. இலக்கியத்தில் வரும்போது, அழகும் அழிவற்ற நன்மையும் பெற்ற பேருணர்ச்சிகளாகின்றன. வாழ்க்கையில் காணும் உணர்ச்சிகள் காய்ச்சின பால்போல் சிறிது நேரம் அதிகமாக நீடித்தாலும் திரிந்து போகின்றன. இலக்கிய உணர்ச்சிகள் திரட்டுப் பால்போல் உருவாகி நின்று சுவை தருகின்றன. உணர்ச்சிகள் தாம் கவிகளின் வியாபாரத்துக்கு முதல்" என்று தொடங்கி எழிலுற வளர்ந்தது அவள் பேச்சு. உதாரணங்களும், நகைச்சுவைக் கதைகளும் தத்துவக் கருத்துக்களுமாக ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் பேசியும் அவர்கள் விடவில்லை. "முடித்து விடாதீர்கள். இன்னும் அரைமணித் தியாலம் (அரைமணி நேரம்) பேசுங்கள்" என்று முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கனகம்மாள் இராசநாயகம் எழுந்து கூறினாள். அவர்கள் அன்பை பூரணியால் மறுக்க முடியவில்லை. இரண்டாம் நாள் விழாவில் 'சங்க இலக்கியச்சாறு' என்பது பற்றியும் மூன்றாம் நாள் விழாவில் 'ஐம்பெருங்காப்பியங்கள்' என்பது பற்றியும் பேசினாள் அவள். கனவுகளில் மிதக்கச் செய்வது போல் தான் பேசுகிற நேரத்தில் கூட்டத்தினரைப் பழைய தமிழ்நாட்டுக்கே அழைத்துச் சென்றுவிட்டாள் பூரணி. மூன்றாம் நாள் விழா முடிவில் நன்றி கூறும் போது இராசநாயகம் கூறினார்: "நாமெல்லாம் ஔவையாரைப் பார்க்கவில்லை. ஆனால் இவர் ஔவையாராகி, ஔவையார் இப்படித்தான் தமிழ் வழங்குமிடமெல்லாம் சென்று அறிவும், அன்பும் வளர்த்தார் என்று நமக்கு வாழ்ந்து காட்டிவிடுவார் போலிருக்கிறது" என்று இராசநாயகம் கூறியபோது கூட்டத்தில் கைத்தட்டல் ஒலி திசைகளை அதிரச் செய்தது. அந்தக் கூட்டத்தில் பூரணிக்குத் 'தமிழ்ச் செல்வி' என்று ஒரு சிறப்புப் பட்டம் எழுதிய பொற் பதக்கத்தை அளித்தார்கள். அந்தப் பட்டம் எழுதிய பொற் பதக்கத்தை முதிய புலவர் ஒருவர் மேடையேறி அளித்தபோது மனத்தில் தந்தையை நினைத்துத் தியானம் செய்துகொண்டு அதை அவள் வாங்கிக் கொண்டாள். மாபெரும் கூட்டத்துக்கு முன் ஒளி நிறைந்த மேடையில் பூக்களும், ஊதுவத்தியும் மணக்கும் பொன்னான சூழலில் அந்தப் பொற் பதக்கத்தைக் கையில் வாங்கிக் கொண்டபோது ஒரே ஒரு கணம் 'அந்தப் பொற்பதக்கமே கலியிருள் நீக்கும் ஞானக் கைவிளக்காக மாறுகிறாற் போலவும், அந்தக் கைவிளக்கைத் தாங்கிக் கொண்டு அவலக் கவலைகளால் இருண்டு போன மனிதக் கும்பலுக்கு நடுவே தான் சோதிப் பிழம்பாக நடந்து செல்வது போலவும்' அவளுக்கு ஒரு தோற்றம் உண்டாயிற்று. அன்று இரவு மங்களேசுவரி அம்மாள் பூரணிக்குக் கண்ணேறு கழித்தாள். கனகம்மாள் இராசநாயகத்தின் வீட்டில் பூரணியை ஒரு மூலையில் நிறுத்தி உப்பு மிளகாயை எடுத்து மூன்று முறை அவள் தலையைச் சுற்றி அடுப்பில் கொண்டுபோய்ப் போட்டாள் மங்களேசுவரி அம்மாள்.

"இதெல்லாம் என்ன அம்மா!" என்று சிரித்துக் கொண்டே அந்த அம்மாளைக் கேட்டாள் பூரணி.

"இந்த மூன்று நாட்களாக நீ பேசியிருக்கிற பேச்சுக்குக் கண்ணேறு பட்டுவிடக் கூடாதடி பெண்ணே! உடம்புக்கு ஒன்றும் வந்துவிடாமல் சுகமாக ஊருக்குப் போய் சேர வேண்டும்! அடுப்பில் எவ்வளவு மிளகாயைப் போட்டேன்? கொஞ்சமாவது நெடி ஏறுகிறதா பாரேன். நிறையக் கண்பட்டிருக்கிறதடி அம்மா?" என்று ஆதரவோடு அருகில் வந்து பூரணியின் கூந்தலைக் கோதிவிட்டாள் அந்த அம்மாள்.

தமிழ் விழா முடிந்து மறுநாள் உள்ளூர் ரோட்டரி சங்கத்தில் 'பழைய அற நூல்களும், புதிய வாழ்க்கை நெறிகளும்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு சொற்பொழிவு செய்தாள் பூரணி. செல்வமும் அறிவும் நிறைந்த ரோட்டரி உறுப்பினர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது அந்தச் சொற்பொழிவு. மூன்று நாள் விழாவில் அவளுடைய நாவன்மை தமிழை அழகு செய்ததைக் கண்டவர்கள் அன்று ஆங்கிலத்தையும் அழகுற ஆட்சி புரிந்ததைக் கண்டு போற்றினார்கள். "ஏதோ ஒரு பேனாவுக்கு அதைவிடச் சிறிதாகவோ, பெரிதாகவோ வேறு ஏதோ ஒரு பேனாவின் மூடியைப் பொறுத்த முயல்வது போல் நமது பழைய அற நூல்களின் முடிவுகள் புதிய வாழ்க்கை நெறிகளோடு நன்றாகப் பொருந்துவதில்லை. கிழக்கு நாடுகள் எளிமையில் தூய்மை கண்டவை. கீழ்நாட்டு வாழ்வின் வசதிக்குறைகளை வைத்துக் கொண்டு மேல்நாட்டு ஆடம்பரங்களை விரும்பும் புதிய வாழ்க்கை நெறியைப் பழகிக் கொண்டு விட்டோம். பழைய அற நூல்கள் 'அறமும் ஒழுக்கமும் தான் வாழ்க்கையை நன்றாக நடத்த ஏற்ற கருவிகள்' என்கின்றன. பணமும் சூழ்ச்சித் துணிவும் தான் வாழும் நெறிகள், என்பது புதிய வாழ்வில் தெரிகிறது." இப்படி எடுப்பாகத் தொடங்கிய சரளமான ஆங்கிலச் சொற்பொழிவு மிக தரமாகவும் புதுமையாகவும் இருந்தது. மங்களேசுவரி அம்மாள் பேச்சுக்களைப் பதிவு செய்யும் 'டேப் ரிக்கார்டர்' கருவியைக் கொண்டு வந்திருந்ததினால் பூரணி பேசுகிற இடங்களில் எல்லாம் அதைப் பதிவு செய்து கொண்டாள். பூரணி இலங்கையில் பல பகுதிகளில் செய்யும் சொற்பொழிவுகளை ஊருக்குத் திரும்பியதும், மங்கையர் கழகத்துப் பெண்களும், மற்றவர்களும் கேட்கச் செய்ய வசதியாயிருக்கும் என்றே 'டேப் ரிக்கார்டர்' கொண்டு வந்திருந்தாள் அந்த அம்மாள்.

அடுத்தாற்போல் யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்காக ஒரு சொற்பொழிவு. இராமகிருஷ்ணா மடத்திற்காக வைத்தீசுவர வித்தியாலயத்தில் ஒரு சொற்பொழிவும் செய்தாள் பூரணி. திருக்கேதீச்சுரத்துக்கும் நல்லூருக்கும் சென்று தரிசனம் செய்டுவிட்டு வந்தார்கள். யாழ்ப்பாணப் பகுதியில் அக்கம் பக்கத்திலிருந்த சிறு ஊர்களுக்கும் தீவுகளுக்கும் சென்று வருவதில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. இராசநாயகம் தம்பதிகள் பயணங்களுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நன்றாகச் செய்திருந்தார்கள். யாழ்ப்பாணத்துக்கு அருகில் ஊர்க்காவல்துறை என்ற இடத்திலிருந்து எந்திரப் படகு மூலம் 'நயினார் தீவு' என்ற தீவுக்கும் அவர்கள் போயிருந்தார்கள். அந்தத் தீவுப்பகுதிதான் பழங்காலத்தில் மணிபல்லவமாக இருந்ததென்று சில தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியிருப்பதாக இராசநாயகம் கூறினார். அந்தத் தீவின் தனிமையான சூழ்நிலையும் சூழ்ந்திருந்த கடற்பரப்பும் பூரணியைக் கவர்ந்தன. கால வெள்ளத்தின் அளந்தரிய முடியாத ஆழத்துக்கடியில் எப்போதோ பழம் பிறவியில் துறவுக் கோலத்தோடு சடைமுடி சுமந்து அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டும், அந்தத் தீவின் மணற்பரப்பில் தானே மணிமேகலையாகச் சுற்றித் திரிந்திருப்பது போல் பூரணிக்குப் பொய்ம்மாயப் புத்துணர்ச்சி ஒன்று உண்டாயிற்று. மணிமேகலையைப் பற்றி எண்ணியபோது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக அழவேண்டும் போலப் பைத்தியக்காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக் கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். யாழ்ப்பாணத்து அன்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு திருகோணமலை, அனுராதபுரம், மட்டக்களப்பு முதலிய பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுக் 'கொழும்பு' வந்து சேர மேலும் ஐந்தாறு நாட்கள் கழிந்தன. சென்ற இடங்களில் முன் ஏற்பாடு இல்லாமல் திடீர் திடீரென்று ஏற்பாடான சொற்பொழிவு நிகழ்ச்சிகள் சிலவற்றையும் பூரணி மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. உலகத்தின் எந்தப் பகுதிக்குப் போனாலும் அன்பைப்புறக்கணிக்க மட்டும் துணிவு வருவதில்லையே! கொழும்பில் மங்களேசுவரி அம்மாளுக்குத் தெரிந்தவர்கள் நிறைய இருந்தார்கள். கொழும்பிலிருக்கும் போதே ஒரு நாள் கதிர்காமத்துக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள். மங்களேசுவரி அம்மாளுக்குத் தெரிந்தவர்கள் யாரோ சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாகக் கார் ஒன்றும் கொடுத்திருந்தார்கள். மாணிக்க கங்கையில் நீராடிய புனித உணர்வோடு கதிர்காமத்துக் கோவிலில் நின்றபோது பரவசத்தால் பூரணிக்குக் கண்களில் நீர் அரும்பிவிட்டது. கதிர்காமத்திலிருந்து திரும்பிக் கொழும்பு வந்து தங்கியிருந்த இரண்டு மூன்று நாட்களில் விவேகானந்த சபையிலும், வெள்ளவத்தையிலுள்ள சைவ மங்கையர் கழகத்திலும் சில சொற்பொழிவுகளைச் செய்தாள் பூரணி.

கண்டி, நுவரெலியா நாவலப்பிட்டி, இரத்தினபுரம் ஆகிய மலைநாட்டு நகரங்களைச் சுற்றிப் பார்க்கச் சில நாட்கள் ஆயின. நாவலப்பிட்டியில்தான் மங்களேசுவரி அம்மாளின் கணவருக்குத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தனவாம். மலைநாட்டில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தமிழ்நாட்டு ஏழைகளின் கூட்டங்கள் சிலவற்றிலும் பூரணி பேசினாள். கண்டிக்கு அருகில் இருந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மாணவர்கள் ஒரு சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இலங்கையின் மலைப்பகுதி ஊர்கள் பூரணிக்கு மிகவும் பிடித்திருந்தன. மலைத் தொடர்களில் முத்தாரம் நெளிவதுபோல் மாவலி கங்கை நதியும் இயற்கையின் எண்ணரிய பேரெழில்களும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. கண்டியில் அவள் பௌத்த நாகரிகத்தின் பழமையான சின்னங்களைக் கண்டாள். சென்ற இடங்களில் எல்லாம் அங்கங்கே இருந்த தமிழர்கள் அவளைத் தம் அன்புப் பெருக்கில் திக்குமுக்காடச் செய்தார்கள். இலங்கைச் செய்தித்தாள்கள் எல்லாம் அவள் சொற்பொழிவுச் செய்திகளாலும், படங்களாலும் நிறைந்திருந்தன. மலைநாட்டு ஊர்களில் சுற்றிவிட்டு, அவர்கள் மறுபடியும் கொழும்பு திரும்பியதும், இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்புப் பகுதியில் பூரணியை அழைத்து இரண்டு சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள்.

"வந்து நாளாகிவிட்டது அம்மா! ஊர் திரும்ப வேண்டும். தேர்தல் வேலைகளுக்காக அவரும் உங்கள் மாப்பிள்ளையும் தனியாக அலைந்து கொண்டிருப்பார்கள். நாம் விரைவில் ஊருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கலாம். அடுத்தாற்போல் கிழக்கு ஆசியப் பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கல்கத்தாவுக்கு வேறு போயாக வேண்டும் எனக்கு" என்று பூரணி மங்களேசுவரி அம்மாவிடம் ஊர் திரும்ப அவசரப்படுத்தினாள்.

"ஏன் தான் இந்தத் தேர்தல் வம்பை இழுத்துக் கொண்டு திணறுகிறாயோ? அரவிந்தன் எவ்வளவோ நல்ல பிள்ளை. இதில் மட்டும் ஏன் பிடிவாதமாக இருக்கிறாரென்று எனக்கே விளங்கவில்லை, பூரணி! மீனாட்சிசுந்தரம் போன பின் தேர்தல், அரசியல் வம்புகளிலிருந்து உனக்கு விடுதலை கிடைத்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீ என்னவோ அரவிந்தன் வற்புறுத்துகிறதாகச் சொல்கிறாய்?"

"இல்லை, அம்மா! அவருக்கும் இதெல்லாம் பிடிக்காது. 'என்னைத் தேர்தலில் நிறுத்துவதற்கு இணங்கச் செய்ய வேண்டும்' என்று முதன் முதலாக மீனாட்சிசுந்தரம் அவரிடம் வேண்டிக் கொண்டபோது அவர் கடுமையாக அதை எதிர்த்திருக்கிறார். ஆனால் இப்போதோ சூழ்நிலை வேறு மாதிரி ஆகிவிட்டது. அவரே இந்தத் தேர்தல் முயற்சியைக் கைவிட முடியாத இன்றியமையாத நிலை ஏற்பட்டுவிட்டது" என்று தொடங்கிப் பர்மாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் செய்கிற சூழ்ச்சிகளைப் பற்றியும் சொன்னாள் பூரணி. மறுநாள் கொழும்பிலிருந்தே அவர்கள் விமானம் மூலம் ஊர் திரும்பிவிடத் தீர்மானம் செய்து கொண்டார்கள். புறப்படுவதற்கு முதல் நாள் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் சில பொருட்கள் வாங்கிக் கொள்வதற்காக கடைத் தெருவுக்குப் போயிருந்தார்கள். பூரணிக்கும், அவள் தம்பி, தங்கைகளுக்கும், தன் பெண்களுக்குமாக இலங்கையில் கிடைக்கும் உயர்தரத் துணிமணிகள் நிறைய வாங்கிக் கொண்டாள் மங்களேசுவரி அம்மாள். கொழும்பு - செட்டியார் தெருவில் ஒரு நல்ல கடையில் துணிகள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது, பக்கத்தில் இருந்த கடிகாரக்கடை ஒன்றின் வாயிலில் பூரணி தயங்கி நின்றாள்.

"அம்மா! இலங்கையில் மிகவும் தரமான நல்ல கைக்கடிகாரங்கள் எல்லாம் கிடைக்கும் என்று சொல்வார்களே?"

"ஏன்? உனக்கு வேண்டுமானால் பார்க்கலாம் வாயேன்! சிறிதாக அழகாக உன் கையில் ஒரு கடிகாரம் கட்டிக் கொண்டாயானால் நன்றாகத்தான் இருக்கும். வா! நல்லதாக உனக்கு வாங்கித் தருகிறேன்."

"கடிகாரம் எனக்கு இல்லையம்மா..."

"பின்னே யாருக்கு?" இப்படிக் கேட்டு விட்டு மங்களேசுவரி அம்மாள் வியப்புடன் பூரணியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். பூரணியின் முகத்தில் நாணமும் இளநகையும் மலர்ந்தன.

"இத்தனை வயதான பின்பு தேவையும் வசதியும் இருந்தும் கூடக் கைக்கடிகாரம் இல்லாமல் வெறுங்கையோடு இருக்கிறாரம்மா அவர்..."

"! அரவிந்தனுக்குக் கைக்கடிகாரம் வாங்கிக் கொண்டு போக வேண்டுமென்கிறாயா? அதைச் சொல்வதற்கு இத்தனை கூச்சப்படுவானேன், பூரணி? அரவிந்தனுக்கு வாங்கிக் கொண்டு போவதோடு உனக்கும் ஒன்று வாங்கித் தருகிறேன், கட்டிக்கொள்."

இருவரும் கடிகாரக் கடைக்குள் நுழைந்தார்கள். தனக்குக் கைக்கடிகாரம் தேவையில்லை, அரவிந்தனுக்குக் கொடுப்பதற்கு மட்டும் ஒன்று வாங்கிக் கொண்டால் போதுமென்று பூரணி எவ்வளவோ பிடிவாதமாக மறுத்துப் பார்த்தாள். ஆனால் மங்களேசுவரி அம்மாள் அவளை வெறுங்கையோடு விடவில்லை. அரவிந்தனுக்கும் வாங்கிக் கொண்டு அவளுக்கும் சிறிய 'லேடீஸ் வாட்ச்' ஒன்றை வாங்கி அங்கேயே கையில் கட்டி அழகு பார்த்த பின்புதான் திருப்தி ஏற்பட்டது. அந்த அம்மாளுக்கு அவர்கள் ஊருக்குப் புறப்படும் தினத்துக்கு முதல் நாள் மாலை கொழும்புத் தமிழன்பர்கள் ஒரு பெரிய விருந்து வைத்து வழியனுப்புதலை விழாவாகவே நடத்திவிட்டார்கள். அந்த விழாவிற்கு யாழ்ப்பாணத்திலிருந்து இராசநாயகம் தம்பதிகளும் வந்திருந்தார்கள். அவர்கள் புறப்படும்போது கொழும்பு இரத்துமலானை விமான நிலையத்தில் ஏராளமான தமிழன்பர்கள் வழியனுப்ப வந்திருந்தார்கள். அந்த அன்புப் பிணைப்பிலிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு அவர்கள் பிரிந்தார்கள். சேய் தமிழகத்திலிருந்து தாய்த் தமிழகத்துக்குப் பறந்தார்கள்.

சென்னை திரும்புகிற விமானத்தில் உடன் பயணம் செய்து கொண்டிருந்த தமிழர் ஒருவரிடமிருந்து தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றைப் படிப்பதற்காக வாங்கினாள் மங்களேசுவரி அம்மாள். அது மதுரையிலிருந்து வெளியாகிற செய்தித்தாள். நாலு நாட்களுக்கு முந்திய தேதியில் வெளியானது. இலங்கைக்கு வர நாலு நாட்களாயிருந்ததோ என்னவோ. ஆனாலும் இலங்கை வந்தபின் தமிழகத்துச் செய்தித்தாளே பார்க்காததினால் அதில் இருக்கிற செய்திகள் தனக்குப் புதியனவாக இருக்குமென்று மங்களேசுவரி அம்மாள் படிக்கலானாள். 'மதுரை நகரத்துச் செய்திகள்' என்ற தலைப்பின் கீழ் வரிசையாகப் படித்துக் கொண்டு வந்தவள், 'தேர்தல் பகையினால் இளைஞர் கடத்தப்பட்டார். அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. நண்பர் போலீசில் புகார் செய்திருக்கிறார்' என்ற தலைப்பு வாக்கியங்களின் கீழே காணப்பட்ட செய்தியைப் படிக்கத் தொடங்கியதும் முகம் வெளிறியது. கண்கள் மருண்டு விரிந்தன. "அடி பூரணி இந்தக் கூத்தைப் பார்த்தாயோ? இப்படியும் அநியாயம் நடக்குமா?" என்று திகைப்பான குரலில் கூறிக்கொண்டே செய்தித்தாளின் அந்தப் பகுதியை மடித்துப் பூரணியிடம் நீட்டினாள் மங்களேசுவரி அம்மாள். அந்தச் செய்தியைப் படித்ததும் பூரணியின் முகம் இருண்டது.

 

30

 

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

 

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண்

கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று.

                                                                                                        -- திருவள்ளுவர்

 

மதுரைக்கே ஒரு புதிய சுறுசுறுப்புக்களை உண்டாகியிருந்தது. நகரம் முழுவதும் ஏதோ பெரிய போருக்குத் தயாராகிற மாதிரித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பழைய காலத்து அரசியல் வெள்ளாற்றுப் போர், தலையாலங்கானத்துப் போர் என்றெல்லாம் போர்கள் நடந்த மாதிரி அடிக்கடி போர்கள் ஏற்பட இன்றைய அரசியலில் வாய்ப்பும் இல்லை; வீரமும் இல்லை. இன்றைய அரசியலில் நாகரிகமாகவும் அழுக்குப் படாமலும் நடக்கிற மௌனமான போராட்டத்துக்குத்தான் தேர்தல் என்று பெயர். மக்களுக்காக அரசர்கள் போட்டியிட்டுப் பகைத்து அடித்துக் கொண்ட போர், பழைய காலத்துப் போர். எவரோ சிலர் தேர்தலுக்கு நிற்க அவர்களுக்காக மக்கள் போட்டியிட்டுப் போரிடும் நாள் இது. பழைய போரில் இருந்ததைக் காட்டிலும் இந்த நாகரிகப் போரில் சூழ்ச்சிகளும், சூதுகளும், வஞ்சனைகளும், புதியனவாகவும், அதிகமானவையாகவும்தான் இருக்கின்றன.

 

திரைப்படங்களில் சில முகங்களைப் பெரிதாக நெருங்கிய தோற்றத்தில் காட்டும் போது அதிலுள்ள வடுக்களும், பருக்களும் விவரமாகத் தெரிவதுபோல், தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தொடர்புடையவர்களின் அந்தரங்கமான வடுக்களும், புண்களும் அரவிந்தனுக்கு ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங்கின. மனிதர்களின் சிறுமைகளும் அற்பத்தனமான ஆசைகளும் புரியப் புரியத் திடீரென்று உலகமும் அதிலுள்ளவர்களும் உள்ளவைகளும் கேலிக்கும் கேவலத்துக்கும் உரிய பொருட்களாக மாறிக் கொண்டு வருவது போல் அச்சம் உண்டாயிற்று அவனுக்கு. ஆனால் நல்லதில் நம்பிக்கையும் நியாயமான முயற்சியும் உள்ளவனுக்கு இந்த அச்சம் தேவையற்றது என அவன் மனச் சான்று அவனுக்கு உரைத்தது. சிறுமைகளையும் சூழ்ச்சிகளையும் கண்டு ஏளனமாகச் சிரித்துவிடுவதோடு சமாளித்துக் கொண்டு போகத் தெரியாவிட்டாலும் உலகம் பகற்பொழுதிலும் இருண்டிருப்பதாகத்தான் தோன்றும்.

முருகானந்தத்தை உதவிக்கு வைத்துக் கொண்டு தேர்தல் ஏற்பாடுகளைத் தொடங்கியபோது அரவிந்தனுக்குப் பலவிதமான அனுபவங்கள் ஏற்படலாயின. இரவு பகல் பாராமல் தேர்தலுக்கு அலைந்து உழைக்க வேண்டியிருந்தது. பர்மாக்காரர் அங்கேயே தேர்தல் அலுவலகங்கள் திறந்து வெளிச்சமாகவும் ஆடம்பரமாகவும் புதுமண்டபத்து மனிதருக்காக விளம்பரங்கள் செய்து கொண்டிருந்தார். தேர்தல் அடையாளங்களாகப் பூரணிக்குத் தாமரைப்பூச் சின்னமும் புது மண்டபத்து மனிதருக்குக் கழுகுச் சின்னமும் அமைந்திருந்தன.

தேர்தல் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டுவதில்தான் முதன் முதலாகத் தகராறு ஆரம்பமாயிற்று. அரவிந்தன் மனம் கொதித்துக் குமுறும்படியான நிகழ்ச்சி அப்போதுதான் நடந்தது.

மதுரையைப் போன்ற பெரிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்குப் பெரும்பாலும் பகல் நேரங்களில் வசதிப்படாது. அதனால் ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு வாடகைக்குப் பேசின குதிரை வண்டியொன்றில் சுவரொட்டிகளை நிரப்பி, பசை, ஏணி முதலிய கருவிகளோடு பூரணியின் தம்பி திருநாவுக்கரசையும் வேறு சில கூலிக்காரப் பையன்களையும் உடன் அனுப்பினான் அரவிந்தன். பொழுது நன்றாக விடிவதற்குள் முடிந்தவரை சுவரொட்டிகளை ஒட்டி விட்டுத் திரும்பிவிட வேண்டுமென்றும், எஞ்சிய இடங்களில் மறுநாள் இதே நேரத்துக்குப் போய் ஒட்ட வேண்டுமென்றும் ஏற்பாடு. கூலிக்காரப் பையன்களுக்கு முக்கியமான இடங்களைக் காட்டி ஒட்டச் செய்யவும் அவர்கள் சுவரொட்டிகளைத் திருடிக் கொண்டு போய் வீசைக் கணக்கில் விலைக்கு நிறுத்துவிடாமல் கவனித்துக் கொள்ளவுமே திருநாவுக்கரசை உடன் அனுப்பியிருந்தான் அரவிந்தன்.

அரவிந்தன் இரவில் அதிக நேரம் கண் விழிக்க நேரும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இருள் புலருமுன்பே எழுந்திருந்து நீராடிக் காலை வழக்கங்களை முடித்துக் கொண்டு தூய்மையடைந்து விடுவான். நீராடி உடை மாற்றிக் கொண்டு அச்சகத்து முன் அறையில் ஊதுவத்திகளைப் பொருத்திவிட்டு அந்த நறுமணச் சூழலில் அமர்ந்து எப்போதும் தன்னை விட்டுப் பிரியாமலிருக்கும் சின்னஞ்சிறு திருக்குறள் புத்தகத்தை எடுத்துச் சிறிது நேரம் ஆழ்ந்து படிப்பான். குறள் படித்து மனத்தில் தூய எண்ணங்களை வளர்த்துக் கொண்டபின் தன்னுடைய கவிதை நோட்டுப் புத்தகத்தையும், டைரியையும் எடுத்து அப்போதுள்ள துறுதுறுப்பான எண்ணங்களில், எழுச்சியில் எவையேனும் கவிதைகளோ, புதிய சிந்தனைகளோ தோன்றினால் அவற்றை எழுதுவான். ஒவ்வொரு நாளும் இந்த விடியல் நேரத்துக்கு அவன் வாழ்வில் தனிச்சிறப்பு உண்டு. காலை நாலரை மணியிலிருந்து ஏழு மணி வரை உள்ள நேரம் தான் மனிதனுடைய இதயத்தில் மங்கலமும் தூய்மையும், இறைமையும் கனிவிக்கின்ற நேரமாகும் என்று கருதினான் அரவிந்தன். அந்த வைகறையில் தான் பூக்கள் இதழ் விரிக்கின்றன. கோவில்களுக்குள்ளிருந்து வைகறை மேளமும், மணியும் ஒலிக்கின்றன. உலகத்துக்கு எல்லாம் அமைந்து அடங்கிய சாந்தமே தேவை என்று நினைவூட்டுவது போல் வெம்மை சிறிது மற்றதொரு பூங்குளிர் பொலியும் நேரமும் இந்த வைகறைதான். தன்னுடைய வாழ்க்கையைப் பண்படுத்தி ஒழுங்காக்கிய பழக்கங்களுள் வைகறைத் துயிலெழும் பழக்கமும் ஒன்று என்பதை அரவிந்தன் நன்கு உணர்ந்திருந்தான்.

விடிகிற நேரமாகாவிடினும் அன்று சுவரொட்டிகளை வண்டியில் ஏற்றி அனுப்பியவுடனேயே பல் விளக்கிவிட்டு நீராடச் சென்றுவிட்டான் அரவிந்தன். குறள் படித்துவிட்டு அவன் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தபோதே எதிர்புறத்து சுவரில் அட்டையில் ஒட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பூரணியின் தேர்தல் சின்னமான தாமரைப்பூ அவன் கண்களில் தென்பட்டது. 'இந்த நேரத்துக்கு இலங்கையின் எந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறாளோ?' என்று பூரணியைப் பற்றி நினைத்தான் அவன். எதிரே தெரிந்த வண்ணச் சுவரொட்டியில் இருந்த பெரிய தாமரைப் பூச்சின்னம் அப்படியே அந்தப் புலர்காலை மெல்லிருளில் சிறிது சிறிதாய் மாறி மறைந்து பூரணியின் முகமாகத் தோன்றிப் பேரின்பப் புன்னகை புரிவது போல் அரவிந்தன் கண்களுக்குக் காட்சியளித்தது. முழுமதியில் கருநாவற்கனி பதித்தாற் போன்ற அந்த முகமும் கண்களும் நினைவுக்கு வந்தபோது முன்னும் பின்னும் தொடர்பு இன்றி ஒரே ஒரு கவித்தொடர் மட்டும் அவனுடைய நாவில் சொற்களாகத் துடித்தது. 'நீலங்குழைத்து நீட்டிப் பின் நிலவிற் பதித்த நாவற்பழம்' என்ற இந்த அழகிய தொடரை அவன் எழுதிக் கொண்டான். திடீரென்று கற்பனைக் கதவு திறந்து கொண்டு தானாக வந்து குதித்த இந்த ஒரு வரியை முழுக் கவிதையாக நிறைவு செய்யும் சிந்தனையில் கவிதா ஆவேசத்தை வரவழைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான் அரவிந்தன். மனத்தில் மண்ணுலகின் பாமர நினைவுகளே இல்லாத நிலை. அப்போது "ஐயா! பாவிப்பயலுக அடிச்சுப் போட்டுட்டு ஓடிவிட்டானுங்க..." என்று அலறிக்கொண்டே உள்ளே ஓடி வந்த குதிரை வண்டிக்காரன், அவனுடைய கவிதா வேகத்தைக் கலைத்து மண்ணுலகத்து நினைவுக்குக் கொண்டு வந்தான். திகைப்போடு வாயிற்புறம் எழுந்து ஓடிப்போய் அங்கு நின்றுகொண்டிருந்த குதிரை வண்டிக்குள் எட்டிப் பார்த்தான் அரவிந்தன். அடிப்பட்டு மயங்கிய நிலையில் துவண்டு வண்டிக்குள் கிடந்தான் திருநாவுக்கரசு. கொண்டு போன சுவரொட்டிகளில் ஒன்று கூட வண்டிக்குள் இல்லை. ஏணியும் இல்லை. பசையும் இல்லை.

"ஐயா! வைகைப் பாலத்துப் பக்கம் ஓர் இடத்திலே நம்ம ஆளுங்க சுவரில் ஒட்டிக்கிட்டிருந்தப்போ தற்செயலா வருகிறாப்போலக் கழுகுப்பெட்டி ஆளுங்க நம்ம பையன்கள் ஒட்டின நோட்டீசு மேலேயே கழுகுப்பெட்டி நோட்டீசை ஒட்டினாங்க. நம்ம பையன்களும் இந்தத் தம்பியும், 'நீங்களும் ஒட்டனுமுன்னாப் பக்கத்தில் ஒட்டுங்க, மேலே ஒட்டி எங்க நோட்டீசை மறைக்கிறது நியாயமில்லே'ன்னு அந்த ஆளுங்களோட வாதாடினாங்க. 'மகா நியாயத்தை கண்டவங்க தாண்டா! மரியாதையா ஓடிப்போறீங்களா? உதை வேணுமா'ன்னு கழுகுப்பெட்டி ஆளுங்க நம்ம பையன்களை மூக்கு முகம் பாராமே அடிக்கத் தொடங்கினாங்க. அடி தாங்க முடியாமல் கூலிக்கு வந்த பையன்க மூலைக்கு ஒருத்தனா பிச்சுக்கிட்டு ஓடிட்டாங்க. இந்தத் தம்பிதான் கடைசிவரை நின்று அவர்களை எதிர்த்தது. அவங்க அத்தனை பேரும் முரடங்க. செம்மையா அடிச்சுப் போட்டுட்டுப் பசை, நோட்டீசு, ஏணி எல்லாம் பிடுங்கிக்கிட்டு ஓடிப்போயிட்டாங்க. நடுவிலே புகுந்து தடுத்ததிலே எனக்குக்கூட நாலஞ்சு அடிங்க. ஊரே கெட்டுப் போய்க் கிடக்குதுங்க. நல்லவனுக்கே காலமில்லே" என்று மூச்சுவிட இடைவெளியின்றிக் கூறி முடித்தான் குதிரை வண்டிக்காரன். ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றாண்மையும், சாந்த குணமும் உள்ளவனான அரவிந்தனுக்கே அதைக் கேட்டதும் இரத்தம் கொதித்தது. உடனே ஓடிப்போய் என்னென்னவோ செய்துவிட வேண்டும் போல நரம்புகள் முறுக்கேறித் துடித்தன. உணர்ச்சி வசப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்று தன்னடக்கமாக நடந்து கொண்டான். குதிரை வண்டிக்காரன் உதவியுடன் திருநாவுக்கரசை வண்டியிலிருந்து உள்ளே தூக்கிக் கொண்டு போய்க் கிடத்தினான். திருநாவுக்கரசுக்கு முதலுதவி செய்து பிரக்ஞை வரவழைத்துச் சிறுசிறு காயங்களுக்கு மருந்து போட்டு முடிக்க ஒரு மணி நேரம் கழிந்தது. அதற்குள் ஏறக்குறையப் பொழுது நன்றாக விடிந்து தெருவில் ஆள் நடமாட்டம் ஆகியிருந்தது. அதுவரையில் குதிரை வண்டிக்காரனை இருக்கச் சொல்லியிருந்தான் அரவிந்தன். அடிப்பதற்கு வந்த ஆட்களில் எவரையாவது அடையாளம் சொல்லச் சொன்னான். அவன் கூறிய அடையாளங்களிலிருந்து அந்த மனிதன் அன்று பர்மாக்காரர் மாளிகையில் அவருடைய ஏவுதல் பெற்றுத் தன்னை அடிக்க வந்த முரடனாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து கொள்ள முடிந்தது அரவிந்தனால். அவன் உள்ளம் அவரைப் பற்றி எண்ணிக் குமுறியது.

'இந்தப் பர்மாக்கார மனிதர் தம்முடைய மனத்தில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். கெடுதல் செய்வதற்கும் ஒரு எல்லை கிடையாதா என்ன! எவ்வளவு தான் பொறுத்துக் கொள்ள முடியும்! பச்சை மண் குடத்தில் தண்ணீர் நிரப்பி ஏமாற்ற முயல்கிற மாதிரி சூழ்ச்சியில் வளர்ந்த செல்வம் எத்தனை நாள் உடையாமல் இவர் திமிரை வளர்க்கப் போகிறது?'

 

'துணிவாக அவருக்கு முன்னால் போய் நின்று கொண்டு நீங்கள் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டு இதெல்லாம் செய்கிறீர்கள்? அடி உதைகளுக்கு ஆட்களை ஏவிப் பயமுறுத்தினால் நாங்கள் தைரியம் இழந்து விடுவோம் என்றுதானே? அப்படி பயந்து கொண்டு பூரணியின் தேர்தல் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்று உங்களுக்குப் போட்டியின்றி விட்டுவிடுவோம் என்று சொப்பனத்தில் கூட நீங்கள் நினைக்க வேண்டாம். நீங்கள் போடுகிற விளம்பர வெளிச்சங்கள் எல்லாம் இல்லாமல் சத்தியத்தின் பலத்திலேயே வெற்றி பெற எங்களால் முடியும். தயவு செய்து இனிமேலாவது அந்த மாதிரியான அசட்டுத்தனங்களை நிறுத்திவிட்டுப் பெருந்தன்மையாக நடந்து கொள்ளப் பாருங்கள்' என்று சொல்லிச் சாடிவிட்டு வந்துவிட வேண்டும் போல் துடிப்பு உண்டாயிற்று. 'ஊரிலுள்ள நல்ல மனிதர்கள் எல்லாம் ஏழையாகிக் கொண்டிருக்கும் போது கெட்ட மனம் படைத்த இந்த மனிதர்கள் செல்வம் மட்டும் குன்றாமல் பெருகித் தீமைகளை குன்று போல் வளர்க்கிறதே என்றும் அரவிந்தன் மனம் வருந்தியது. அப்போது, திடீரென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தது போல் அவன் முகபாவம் மாறியது. அச்சகத்தைப் பார்த்துக் கொள்ளும்படி ஊழியர்களிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான்.

"பர்மாக்காரர் எஸ்டேட் வரையில் வருவாயா?" என்று வண்டிக்காரனிடம் வினவினான்.

"அவ்வளவு தூரம் வண்டியில் போய்த் திரும்ப நேரம் ஆகுங்களே?" என்று வண்டிக்காரன் இழுத்தான்.

"பரவாயில்லை. போய் வரலாம் புறப்படு!" என்று கூறிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான் அரவிந்தன். வண்டி புறப்பட்டு விட்டது.

அன்று மங்களேசுவரி அம்மாளின் இளைய பெண் செல்லத்துக்குப் பிறந்தநாள். அதற்காக அரவிந்தனை விருந்துச் சாப்பாட்டுக்கு அழைத்துக் கொண்டு போகலாம் என்று வசந்தாவும் முருகானந்தமும் அச்சகத்துக்குத் தேடிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தேடிக்கொண்டு வரும்போது பகல் பதினொரு மணிக்குமேல் இருக்கும். அப்போதும் அரவிந்தன் திரும்பி வந்து சேரவில்லை. முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிவரை அரவிந்தனுடன் முருகானந்தமும் அச்சகத்தில் தான் இருந்தான். அப்போதே மறுநாள் 'செல்லத்தின் பிறந்த தின விருந்துக்கு வர வேண்டும்' என்று அரவிந்தனிடம் சொல்லியிருந்தான். அப்படிக் கூறியிருந்தும், அரவிந்தன் அதை மறந்து எங்கே போயிருப்பான்? என்று முருகானந்தமும் திகைத்தான். அந்தச் சமயத்தில் அச்சகத்து ஊழியன் வந்து உள்ளே திருநாவுக்கரசு படுத்திருப்பதைச் சொன்னான். பிளாஸ்திரி ஒட்டும் துணிக்கட்டுமாகப் பரிதாபப்படத்தக்க நிலையில் படுத்துக் கிடந்த திருநாவுக்கரசைக் கண்டதும் முருகானந்தத்துக்கே முக்கால் பகுதி என்ன நடந்திருக்க வேண்டும் என்று புரிந்து விட்டது. மீதிக் கால் பகுதி விவரம் திருநாவுக்கரசு கூறிவிட்டான்.

 

"வசந்தா! நீ வீட்டுக்குப் போ. இங்கே ஏதோ கோளாறு நடந்திருக்கிறது. அரவிந்தன் வந்ததும் நான் சாப்பிடுவதற்கு அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று கூறி மனைவியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அச்சகத்தில் தங்கிக் காத்திருந்தான் முருகானந்தம். 'நேற்றிரவே சொன்னேன். இந்த அரவிந்தன் கேட்டால்தானே? நானே அச்சகத்தில் படுத்திருந்து காலையில் சுவரொட்டி ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகிறேன்' என்று மன்றாடினேன். 'கல்யாணம் ஆவதற்கு முன் அதெல்லாம் சரி, நீ பாட்டுக்கு எங்கேயாவது பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு அதே மேடையில் கூட்டம் கலைந்ததும் மேல் துண்டை விரித்துப் படுத்துத் தூங்கி விட்டுக் காலையில் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து வருவாய்? இனிமேல் அதெல்லாம் பலிக்காது, தம்பி! மரியாதையாக வீட்டுக்குப் போய்ச் சேர். வசந்தாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே!' என்று வாயால் அடித்து என்னை வீட்டுக்குத் துரத்தி விட்டான் என்று முதல் நாள் நடந்ததையெல்லாம் எண்ணி முருகானந்தம் வருந்தினான்.

சின்னப் பையன்களாகப் போனதினால்தானே ஏணியையும் பசையையும் பறித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டார்கள். நான் போயிருந்தால் தெரியும்? அத்தனை 'கழுகுகளையும் கையை முறித்து அனுப்பியிருப்பேன்!' என்று எண்ணிக் கொதித்தான்.

பகல் மணி பன்னிரண்டு. அரவிந்தன் இன்னும் திரும்பி வந்து சேரவில்லை. வீட்டிலிருந்து செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் மூன்று பேரையும் துரத்தியிருந்தாள் வசந்தா. "அக்கா உங்களையும் அரவிந்தன் மாமாவையும் சாப்பிடக் கூட்டி வரச் சொன்னாங்க" என்று அவர்கள் வந்து கூப்பிட்ட போது, 'அரவிந்தன் வந்ததும் கூட்டிக் கொண்டு வருகிறேன். பசித்தால் நீங்கள் எல்லாரும் முதலில் சாப்பிடுங்கள்' என்று பதில் கூறி அனுப்பினான் முருகானந்தம். ஒரு மணி சுமாருக்கு அச்சகத்து வாயிலில் குதிரை வண்டி வந்து நின்றது. முருகானந்தம் ஆவலோடு எழுந்து ஓடினான். அதே வண்டிதான். அவர்களுக்கெல்லாம் பழக்கமான அதே வண்டிக்காரன் தான். முகமலர்ச்சியோடு போய்ப் பார்த்தான் முருகானந்தம்.

ஆனால் என்ன ஏமாற்றம்! வண்டிதான் வந்திருக்கிறது. வண்டிக்குள் யாரும் வரவில்லை. வண்டிக்காரன் முகம் கெட்ட சொப்பனம் கண்டு பயந்தது போல் இருந்தது. "ஐயா! ஒன்பது மணிக்கு வண்டியிலிருந்து இறங்கிப் போனவரு. பத்து நிமிஷத்திலே திரும்பி விடுவேன். நீ இருன்னுட்டு போனாரு. நானும் பதினொண்ணரை வரை காத்துப் பார்த்தேன். இவரு திரும்பவில்லை. எனக்கு என்னென்னமோ சந்தேகமாயிடிச்சி. வண்டியிலேயிருந்து இறங்கி உள்ளே போறப்போ கோபமாய் போனாரு. எனக்கு அந்தத் தோட்டத்தையும் பேய் குடியிருக்கிறாற் போலத் தனியாகப் பெரிய அரண்மனை மாதிரி மாளிகையும் பார்க்கவே நல்லாப் படலீங்க. பயந்துக்கிட்டே உள்ளே போய், 'வண்டியிலே சவாரி வந்தவரு இன்னும் திரும்பவில்லை. திரும்பி வருவேன், இருன்னாரு. நான் போவலாமான்னு கேட்கணும்'னேன். அங்கு நிற்கவே விடாம துரத்தியடிச்சாங்க. அந்தப் பங்களா வாசல்லே ஒரு தடி ஆளு நின்னான். அவனைப் பார்த்தா நேத்து ராத்திரி நம்ம ஆளுகளை அடிக்க வந்தவன் மாதிரி இருந்ததுங்க" என்று ஒடுங்கிய குரலில் முருகானந்தத்திடம் கூறினான் வண்டிக்காரன்.

அதைக் கேட்கக் கேட்க முருகானந்தத்தின் முகம் கடுமையாகிக் கொண்டு வந்தது. அவனது கைவிரல்கள் குவித்து யாரையோ பலமாகக் குத்தப் போகிற மாதிரி முட்டி எலும்புகளும் மணிக்கட்டும் நரம்புகளும் புடைத்துத் தோன்றின. "அப்படியா சேதி! பர்மாக்காரப் பயலுக்கு அத்தனை துணிச்சலா! பார்க்கிறேன் ஒரு கை" என்று கூறி விட்டு மடக்கிக் குவித்த வலது கையை இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்திக் கொண்டான் முருகானந்தம். அப்போது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் சினத்தோடு வசந்தா காரில் வந்து இறங்கினாள். "நீங்க இருவரும் சாப்பிட வரப் போகிறீர்களா இல்லையா?" என்று அரவிந்தனும் அங்கே இருப்பதாகவே நினைத்துக் கொண்டு கேட்டாள் வசந்தா.

"சாப்பிடுவதைவிட முக்கியமான காரியம் எல்லாம் இருக்கிறது இப்போது! தொந்தரவு செய்யாமல் வீட்டுக்குப் போய்ச் சேர்!" அவளிடம் எரிந்து விழுந்தான் அவன். அவள் பதில் பேசாமல் திரும்பிவிட்டாள். முருகானந்தம் தன்னுடைய தையற்கடைக்கு விரைந்தான். பொன்னகரம், அழகரடி ஆகிய பகுதிகளில் உள்ள குஸ்திப் பள்ளிக்கூடங்களையும் பயில்வான்களையும் முருகானந்தத்துக்குத் தெரியும். அவனுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் அவர்கள். தனது தையற்கடையிலுள்ள நம்பிக்கையான பையன் ஒருவனைக் கூப்பிட்டு அழகரடிக்கும், பொன்னகரத்துக்கும் சொல்லி அனுப்பினான் முருகானந்தம். அடி உதைகளில் இறங்கிக் கலவரம் விளைவிப்பது அரவிந்தனுக்குப் பிடிக்காத காரியம் என்பதை முருகானந்தம் அறிவான். ஆனால் அறத்தையும் நேர்மையையும் பற்றி வாய் ஓயாது பிதற்றிக் கொண்டிருக்கும் அரவிந்தனே கொடுமையின் வஞ்சகக் கூண்டில் மாட்டிக் கொண்டு கிடக்கும் போது வேறென்ன செய்ய முடியும்? 'முற்றிலும் கருணையாலேயே வாழ்வதற்கு இன்றைய உலகில் முடியாது. கருணை காட்ட வேண்டிய இடத்தில் தான் கருணை காண்பிக்க வேண்டும். இல்லாத இடத்தில் கன்னத்தில் அறைந்துதான் ஆக வேண்டும்' எனத் தனது வழக்கமான உணர்ச்சித் துடிப்பே முருகானந்தத்தின் மனத்தில் அப்போது விஞ்சி நின்றது. அரவிந்தன் பர்மாக்காரரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமில்லாமல் நம்பினான் அவன். ஆளையே எங்காவது கடத்திக் கொண்டு போய்ச் சிறை வைத்துக் கொண்டு தேர்தல் முடிகிற வரை வெளியே விடாமல் இருக்கவும் பர்மாக்காரர் தயங்க மாட்டார் என்பது அவனுக்குப் புரிந்தது. அவருடைய கடந்த கால அரசியல் வரலாறுகளில் அப்படி நடந்த சூழ்ச்சிகள் ஏராளமாயிற்றே!

மாலை மூன்று மணிக்குள் மல்யுத்தத்துக்காகக் கூடினவர்கள் போல ஐந்தாறு முரட்டு ஆட்கள் முருகானந்தத்தின் தையல் கடையில் கூடிவிட்டார்கள்.

"நம்ப பையன் மேலே எவண்டா கை வைச்சான்? சொல்லு! அப்படியே 'எலும்பு மார்க் பல்பொடி' தயார் பண்ணி விடுகிறேன்" என்று முண்டாவை மடக்கிக் கொண்டு முருகானந்தத்திடம் கேட்டான் பெரிய பயில்வான். உடல் வலிமைமிக்க அந்தத் தோழர்களையெல்லாம் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு நடந்ததை விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தான் முருகானந்தம்.

அந்த நேரத்தில் தொள தொளவென ஜிப்பா அணிந்து கொண்ட தோற்றத்தோடு கையில் தோல்பை ஏந்திய நெட்டை மனிதர் ஒருவர் தையற்கடைக்குள் படியேறி நுழைந்தார். தோல் பையின் நடுவில் மைக்கா உறையில் ஆர்.எஸ். பாண்டியன், நிருபர், 'தினச்சுடர்' என்று பளிச்சென்று அச்சிட்ட அட்டை வைத்திருந்தது. "என்னப்பா முருகானந்தம்! ஜிப்பா தைக்கத் துணி வாங்கிக் கொடுத்து ஒரு வாரம் ஆகிறது? உன் ஆட்கள் இன்னும் தைத்துக் கொடுத்த பாடில்லை! கல்யாணம் ஆனபின் உன்னைப் பார்ப்பதே அத்திப் பூத்த மாதிரி இருக்கிறதே!" வெற்றிலைச் சாறு வாயில் நிறைந்திருந்ததனால் குழறிக் கொண்டே பேசினார் நிருபர். முருகானந்தம் அவரை வரவேற்றான்.

"வாருங்கள் பாண்டியன் சார். ஜிப்பா சாயங்காலம் ஆறு மணிக்குள் தயாராகிவிடும்.

"உள்ளே வருவதற்கே பயமாயிருக்கிறது அப்பா! ஒரே பயில்வான்களாகக் கூட்டி வைத்துக் கொண்டு ஏதோ மல்லர்கள் மகாநாடு நடத்துகிறாய் போலிருக்கிறது!"

"அதெல்லாம் ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயமில்லை. வந்து உட்காருங்கள் நிருபர் சார்! உங்களுக்குத் தெரிய வேண்டிய சமாச்சாரம் தான்."

நிருபர் பாண்டியன் சட்டைப் பையிலிருந்து புகையிலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து ஒரு கொத்து அள்ளி உள்ளே தள்ளிவிட்டு முருகானந்தத்துக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார். எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

"சும்மா விட்டுவிட மாட்டேன், நிருபர் சார். இந்தப் பயல்கள் வாலை ஒட்ட நறுக்கப் போகிறேன்" என்று முத்தாய்ப்புடன் முடித்தான் முருகானந்தம். நிருபர் பாண்டியன் சிரித்தார். "கொஞ்சம் இப்படித் தனியே வா முருகானந்தம். உனக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும்" என்று அவனைக் கைப்பற்றி எழுப்பி தையற்கடையில் ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு போனார்.

"சுத்த அசட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே அப்பா? தும்பை விட்டு வாலை பிடிப்பதால் பலன் கிடையாது. பர்மாக்காரர் எந்த முரட்டுத்தனத்தைத் துணிந்து கடைப்பிடித்ததனால் குற்றவாளியாகிறாரோ அதே முரட்டுத்தனத்தைத் தானே நீயும் பதிலுக்குக் கையாள முற்படுகிறாய். நீயும் அதையே செய்வதால் உன் பக்கம் எப்படி நியாயம் இருக்கும்! பெரிய மனிதர்கள் எது செய்தாலும் போலீசில் மாட்டிக் கொள்ள இடமின்றிப் பத்திரமாகச் செய்வார்கள். நீ முரட்டுத்தனமாக எதையாவது செய்தால் மாட்டிக் கொள்வாய். அதனால் அரவிந்தனுக்கும் பூரணிக்கும் பேர் கெட்டுப் போகும். தொடர்ந்து கெடுதல்களாகவே செய்து கொண்டிருப்பவர்கள் செய்யும் வஞ்சக வினைகள் விளம்பரம் பெறாது. நீங்கள் என்றும் இதுமாதிரி வம்பு வழிகளுக்குப் போகாதவர்கள், திடீரென்று இன்று போனால் பெரிதாக விளம்பரமாகிவிடும். பத்திரிகையில் பெரிதாக வரும். இதையே துஷ்பிரச்சாரம் செய்வார் பர்மாக்காரர். பரம சாதுவான அரவிந்தனையும் தூய்மையே உருவான பூரணியையும், உன் செயல்களால் மக்கள் சந்தேகமுறும்படி செய்து விடாதே! இந்த நல்ல நேரத்தில் சிறிது இழிவு வந்தாலும் தேர்தலில் பூரணியைப் பாதிக்கும். அரவிந்தனை மீட்க நான் ஒரு வழி சொல்கிறேன். அது படி செய்" என்றார் பாண்டியன்.

"என்ன வழி சொல்லுங்க" என்று கேட்டான் முருகானந்தம்.

"எங்கள் பத்திரிகையில் மதுரைச் செய்திகள் என்ற பகுதிக்கு நியூஸ் சேகரிக்க வேண்டியது என் பொறுப்பு என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? நாளை பேப்பரில் என் பகுதியில் ஒரு கால் பகுதிக்கு நியூஸே இதுவரை கிடைக்கவில்லை. பேசாமல் ஓடிப்போய் போலீசில் கம்ப்ளெய்ண்ட் செய்துவிட்டு, என்னிடம் ஒரு செய்தி அறிக்கை மாதிரி எழுதிக் கொடு. பர்மாக்காரர் போன்ற பெரிய மனிதர்கள் தங்களைப் பற்றிப் பேப்பரில் தாறுமாறாக வரக்கூடாதே என்பதற்காகச் சதாகாலமும் பயந்து கொண்டிருப்பார்களே ஒழிய, அடி, உதை, கலவரங்களுக்கு அவ்வளவாக அயர மாட்டார்கள். அயோக்கியத்தனங்கள் செய்யப் பயப்பட மாட்டார். இந்த நியூஸ் வந்த மறு நாழிகை அரவிந்தன் திரும்பிவராவிட்டால் என்னை ஏனென்று கேள். கால் பத்தி இடத்திலும் பிரமாதமாகத் தலைப்புக் கட்டிப் போட்டு விடுகிறேன். நான் சொல்லுகிறபடி செய்!" என்றார் நிருபர் பாண்டியன்.

அவர் கூறுவதில் நியாயம் இருப்பதாகவே முருகானந்தத்துக்குத் தோன்றியது. அப்படியே செய்தான். ஆனால் மீண்டும் அன்றிரவே பழைய மாதிரி வம்பு வந்து சேர்ந்தது.

 

31

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ என்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னாது என்றலும் இலவே...

                                                                                           -- புறநானூறு

 

இரவு மூன்று மணி ஆவதற்கு இருந்தது. மதுரை நகரத்து வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. எப்போதாவது ஓசையெழுப்பிக் கொண்டு போகும் லாரி அல்லது வேறு வாகங்கள் தவிர ஒலியவிந்து கிடந்தன பெரிய வீதிகள். அந்த நேரத்தில் மீனாட்சி அச்சகத்தில் விளக்கு எரிந்தது. வாயிலில் இரண்டு குதிரை வண்டிகள் நின்றன.

ஒரு குதிரை வண்டியில் சுவரொட்டிகள், பசை, ஏணி ஆகிய பொருட்களை நிரப்பிவிட்டு முருகானந்தமும் உடன் ஏறிக் கொண்டான். மற்றொரு குதிரை வண்டியில் முருகானந்தத்தின் பயில்வான் நண்பர்கள் ஏறிக்கொண்டார்கள். முந்திய நாளிரவு எந்த இடத்தில் சுவரொட்டிகள் ஒட்டும் போது திருநாவுக்கரசையும் அவனோடு சென்ற கூலிக்கார பையன்களையும் பர்மாக்காரரின் ஆட்கள் வம்பு செய்து அடித்துத் துரத்தினார்களோ, அதே இடத்துக்குத்தான் இன்றும் வண்டிகளைச் செலுத்தச் சொல்லிப் புறப்பட்டிருந்தான் முருகானந்தம் பர்மாக்காரரைச் சந்தித்து நியாயம் கேட்கப் போன அரவிந்தன் திரும்பவில்லை என்று தெரிந்ததுமே, உடல் வலிமை மிக்க தனது முரட்டு நண்பர்களோடு நேருக்கு நேர் அவரிடம் போய் வம்போ, கலவரமோ அடிதடியோ எது நேர்ந்தாலும் சமாளித்து வென்று அரவிந்தனை மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்றுதான் அவன் துணிந்தான். ஆனால் அந்தத் துணிவையும் வேகத்தையும் நெருங்கிய நண்பரான நிருபர் பாண்டியன் வேறுவிதமாக மாற்றிவிட்டார். பாண்டியன் கூறிய காரணங்களுக்காகத் தன் ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டாலும் சுவரொட்டிகள் ஒட்டுவது பற்றி எதிரிகள் தொடர்ந்து வம்புக்கு வருகிறார்களா? என்பதைச் சோதனை செய்து தெரிந்து கொள்ள விரும்பினான். அதனால் தான் சம்பவம் நடந்த அதே பகுதியில் சுவரொட்டியை ஒட்டிப் பார்க்கலாம் என்ற திட்டத்துடனும், முன்னேற்பாட்டுடனும் கிளம்பியிருந்தான்.

குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும் நண்பர்கள் இருந்த வண்டியைத் தெருத் திருப்பத்தில் இருள் மறைவில் மிக அருகே நிறுத்திவிட்டுத் தான் இருந்த வண்டியை மட்டும் தெருவுக்குள் விட்டுக் கொண்டு சென்றான். பர்மாக்காரரின் அடி ஆளான முரடனும் அவனைச் சேர்ந்த கைக்கூலிப் பட்டாளமும் வாழ்கிற தெரு அது. நள்ளிரவில் அமைதி பயங்கரமாகக் கவிழ்ந்திருந்தது. தெரு நடுவில் மின்விளக்கு வெளிச்சம் சிறிது பரவியிருந்த ஓரிடத்தில் சுவரருகே வண்டியை நிறுத்தச் சொன்னான் முருகானந்தம். வண்டி நின்றதும் ஏணியை எடுத்துக் ஒண்டு கீழே இறங்கிச் சுவரில் சாத்தினான். சுவரொட்டியில் பசை தடவி எடுத்துக் கொடுக்க வேண்டுமென்று வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு ஏணியில் ஏறினான்.

ஒரு தடையும் இல்லாமல் நான்கு ஐந்து இடங்களில் பூரணியின் தாமரைப் பூச்சின்னம் மின்னும் சுவரொட்டிகளை ஒட்டியாயிற்று. ஆறாவது சுவரொட்டியை ஒட்டுவதற்காக அவன் ஏணியில் ஏறிக் கொண்டிருந்த போதுதான் "டேய்! எவன்டா அது! ஏணியோட கீழே தள்ளிக் காலை முறியடா, சொல்கிறேன்" என்று கலகக் குரல் எழுப்பிக் கொண்டு வந்து சேர்ந்தது கழுகுச் சின்னத்துக் கைக்கூலிப்படை. முருகானந்தம் சிறிதும் அதிர்ச்சியடையாத குரலில் "இருங்கப்பா, இதை ஒட்டிவிட்டு வருகிறேன். அதற்கப்புறம் நீங்கள் காலை முறிக்கலாம்!" என்று சிரித்துக் கொண்டே கூறியவாறு கையில் வாங்கிய சுவரொட்டியை நிதானமாக ஒட்டிவிட்டு வாயிதழ்களைக் குவித்துப் பெரியதாகச் சீழ்க்கை ஒலி எழுப்பினான். அந்த இரவின் அமைதியில் முருகானந்தத்தின் சீழ்க்கை ஒலி அடங்கி ஓய்வதற்குள் பாய்ந்து வந்தது, தெருத்திருப்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு குதிரை வண்டி.

அதன் பின் நிகழ்ந்ததை இங்கு விவரிக்க வேண்டாம். கழுகுச் சின்னம் ஆட்களுக்குச் செம்மையாக வேண்டிய மட்டும் குறைவின்றிப் பூசைக் காப்புக் கொடுத்து அனுப்பினார்கள். அந்த கும்பலில் ஓர் ஆள் மட்டும் தப்பி ஓட முடியாமல் முருகானந்தத்திடம் சிக்கிக் கொண்டான். "வன்முறைச் செயல்களில் தான் இறங்கினால் அரவிந்தனுக்கோ பூரணிக்கோ அதனால் பெருமை குறை நேரிடலாம்" என்று நிருபர் பாண்டியன் எச்சரித்திருந்ததெல்லாம் உணர்வு மயமான அந்த நேரத்தில் முருகானந்தத்துக்கு மறந்தே போய்விட்டது. கழுகுச் சின்னம் ஆட்களில் தப்பி ஓடினவர்களைத் தவிர அகப்பட்டுக் கொண்ட ஒருவனை நான்கு மணியிலிருந்து ஐந்து மணி வரை கசக்கிப் பிழிந்து பயமுறுத்தியும் துன்புறுத்தியும் பார்த்ததில் அவன் அவர்களுக்கு ஒரு முக்கியமான ரகசிய உண்மையைச் சொல்லிவிட்டான். சொல்லும் நிலைமைக்கு அவனைக் கொண்டு வந்துவிட்டார்கள் அவர்கள். விடிந்தால் நிருபர் பாண்டியன் கேட்டு வாங்கிச் சென்றிருந்த செய்தி பத்திரிகையில் வந்துவிடும். அந்தச் செய்தியைப் பார்த்தே தன் குட்டு வெளியாகிவிடுமோ என்று பயந்து பர்மாக்காரர் தாமாகவே அரவிந்தனை அனுப்பிவிடுவார் என்று பாண்டியன் கூறியிருந்தார்.

ஆனால் விடியுமுன்பே அரவிந்தனைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்லும் நல்வாய்ப்பை அவர்களுக்கு உண்டாக்கித் தந்துவிட்டான் அகப்பட்டுக்கொண்ட கோழை மனிதன்.

வைகை நதியின் கரையில் செல்லூர் திருவாய்ப்புடையார் கோவில் தெருவில் புது மண்டபத்து மனிதர் புத்தகங்களை 'ஸ்டாக்' வைத்திருந்த கிடங்கு ஒன்று உண்டு. பெரிய மாடி வீடு அது. புது மண்டபத்துக் கடை சிறிதாதலால் ஏராளமான அச்சடித்த பழைய புதிய புத்தகங்களை ஸ்டாக் வைக்கத் தமது செல்லூர் வீட்டைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். புது மண்டபத்து மனிதர் வீடும் தனியாக ஆளரவமற்ற பகுதியில், கோடியில் அமைந்திருந்தது. அதனால் இந்த செல்லூர் வீடு புத்தகங்களுக்கு மட்டும் அல்லாமல் புது மண்டபத்து மனிதரின் அக்கிரமங்களுக்கும் 'ஸ்டாக் ஹவுஸாக' இருந்து வந்தது. அரவிந்தன், பர்மாக்காரர் மாளிகையில் அவரைச் சந்திக்கச் சென்று காணாமற் போன அன்றே காரில் வைத்துக் கொண்டு வந்து இந்த வீட்டில் ஓர் அறையில் தள்ளிப் பூட்டியிருப்பதாக உண்மையைச் சொல்லிவிட்டான் முருகானந்தத்திடம் அகப்பட்டுக் கொண்ட ஆள்.

 

"நீயே நேரில் வந்து வீட்டைக் காட்டு அப்பனே. நீ சொல்வது பொய்யாயிருந்தால் உன் முதுகுத் தோலை உரித்து வைத்துவிடுவேன்" என்று அவனையும் கூப்பிட்டுக் கொண்டு இரண்டு வண்டிகளையும் அங்கிருந்து அப்படியே செல்லூர் திருவாய்ப்புடையார் கோவில் பகுதிக்குச் செலுத்தச் செய்தான் முருகானந்தம்.

அவர்கள் இருந்த அந்த இடத்திலிருந்து செல்லூர் மிகவும் பக்கமாதலால் வண்டிகள் மிக விரைவில் சென்றுவிட்டன. முருகானந்தத்திடம் அகப்பட்டுக் கொண்ட ஆள் இறங்கி வீட்டைக் காண்பித்தான். பிசாசு குடியிருக்கிற இடம் மாதிரிப் பெரிய வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. ஆள் அரவமே இல்லை. முன்புறம் வாயிற்கதவில் பெரிய இரும்புப் பூட்டுத் தொங்கியது.

"ஏண்டா நீ கூறியது மெய்தானா? அல்லது புளுகுகிறாயா?" என்று மீண்டும் அந்த ஆளை மிரட்டினான் முருகானந்தம். அந்த ஆள் அதே வீட்டில் தான் அரவிந்தன் சிறை வைக்கப்பட்டிருப்பதாகச் சத்தியமே செய்தான். வேறு வழியில்லாமற் போகவே அந்த வீட்டைப் பூட்டியிருந்த இரும்புப் பூட்டு கதவுக் கொக்கியோடு தனியே பேர்த்து எடுக்கப்பட்டது. அகப்பட்ட ஆள் வழிகாட்டிக் கொண்டு முன்னால் சென்றான். உள்ளே ஒரே இருள். நிறைய மின்விளக்குகள் இருந்தும் விசையை அமுக்கினால் எரியவில்லை. 'மெயின் விசை'யில் வேண்டுமென்றே கோளாறு செய்துவிட்டுப் போயிருக்கிற மாதிரித் தோன்றியது. உள்ளே போவதற்கு ஒற்றையடிப் பாதை போல் வழிமட்டும் வீட்டு இருபுறமும் மேலே உத்திரத்தைத் தொடுகிற உயரம் வரை புத்தகங்களும், புத்தகங்களுக்காக அச்சிட்டு அடுக்கிய பாரங்களும் நிறைந்திருந்தன. பிள்ளை இல்லாத வீட்டுக்குச் செல்லப் பிள்ளைகள் போல் எலிகள் ஓடித்திரிந்தன. பழைய காலத்துப் பாணியில் கட்டப்பட்ட பெரிய வீடாதலால் சுற்றி அறைகளும் கூடமுமாக இடம் மிகுந்திருந்தது. கூட்டிக் கொண்டு வந்தவன் முன்னால் செல்ல முருகானந்தமும் நண்பர்களும் பின் தொடர்ந்து மௌனமாக இருளில் சென்று கொண்டிருந்தார்கள். நண்பர்களில் ஒருவனிடம் இருந்த கைவிளக்கை (டார்ச் லைட்) முருகானந்தம் வாங்கிக் கொண்டான். அந்த வீட்டுக்குள்ளிருந்து மாடிக்கு ஏறுகிற மரப்படிக்கு அருகில் வெளியே பூட்டியிருந்த ஓர் அறையைக் காண்பித்தான் அந்த ஆள். வாயிற் கதவும் பூட்டும் பெயர்க்கப்பட்டது போலவே இங்கேயும் பெயர்க்கப்பட்டது.

அந்த ஆள் கூறியது மெய்தான்! இரண்டு மூன்று அழுக்குக் காகிதங்களையே விரிப்பாக விரித்து வலது கையைத் தலையணை போல் மடித்து வைத்துக் கொண்டு அறைக்குள் சுருண்டு துவண்டு படுத்துக் கொண்டிருந்தான் அரவிந்தன். கைவிளக்கின் ஒளி வட்டத்தில் இந்தப் பரிதாபக் காட்சியைக் கண்டபோது முருகானந்தத்துக்கும் நண்பர்களுக்கும் வேதனையாக இருந்தது. அருகில் சென்று அரவிந்தனை மெல்லத் தொட்டு எழுப்பினான். "பாவம்! பட்டினி போட்டிருப்பார்கள் பாவிகள், கதவுப் பூட்டைப் பெயர்த்துத் திறக்கிற ஓசை கேட்டுக்கூட எழுந்திருக்கவில்லை!" என்றான் முருகானந்தத்துடன் வந்திருந்த பெரிய பயில்வான்.

 

கண் விழித்து எழுந்த அரவிந்தனுக்கு, அந்த நேரத்தில் திடீரென்று அங்கே அவர்களைச் சந்தித்ததும் ஒன்றுமே விளங்கவில்லை. முருகானந்தம் அவசர அவசரமாகத் தன்னால் முடிந்த மட்டும் சுருக்கமாய் விளக்கிவிட்டு, "இப்போது முதலில் இங்கிருந்து தப்பிச் சென்றாக வேண்டும். விடிந்து வெளிச்சம் பரவுகிற நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. மற்றவற்றை அச்சகத்துக்குப் போய்ப் பேசிக்கொள்ளலாம். முதலில் புறப்படு! உடனே இங்கிருந்து வெளியேறாவிட்டால் வம்பு" என்று அரவிந்தனை அவசரப்படுத்தினான்.

"நீ செய்கிற காரியம் நியாயமில்லை, முருகானந்தம். என்னை இவ்வளவு பத்திரமாக இங்கே கொண்டு வந்து வைத்திருப்பவர்களிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இப்படி ரகசியமாக மீட்டுக் கொண்டு போக முயல்கிறாயே அப்பா!" என்று சிரித்துக் கொண்டே கேலியாகக் கூறியபடி அவர்களோடு புறப்பட்டான் அரவிந்தன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற சாயலும் அழகும், பொலிவும், ஒளியும் நிறைந்த அரவிந்தனின் முகம் சோர்ந்து வாடியிருந்தது. அப்போது நண்பர்களைச் சந்தித்ததும் சிரிக்கிற சிரிப்பாக ஏதோ சிரித்துப் பேசினானே ஒழியச் சோர்வு நன்றாகத் தெரிந்தது. தளர்ச்சி தெளிவாகப் புலப்பட்டது.

வண்டிகள் அச்சகத்து வாயிலில் திரும்பி வந்து நின்ற போது விடிந்து ஒளி பரவிக் கொண்டிருந்தது. பக்கத்து வெற்றிலைப் பாக்குக் கடைகளின் முன் அன்றைய தினச்சுடர் செய்தித்தாளில் தலைப்பு விளம்பரத் (போஸ்டர்) தாளிலேயே 'தேர்தல் பகையினால் இளைஞர் கடத்தப்பட்டார்' என்று வெளியாகி இருந்தது. ஒரு தினச்சுடர் வாங்கிப் படித்துப் பார்த்தான் முருகானந்தம். நிருபர் பாண்டியன் தாம் சொல்லிவிட்டுப் போனபடியே மதுரைச் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் பார்வையில் படத்தக்க இடத்தில் நன்றாக அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார். முருகானந்தம் அதை அரவிந்தனிடம் படித்துக் காட்டினான்.

"'இளைஞர் மீட்கப்பட்டார்' என்று மறுபடியும் வேண்டுமானால் நிருபர் பாண்டியனை அழைத்து இன்னொரு செய்தி நாளைக்கு வெளியிடச் சொல்லேன்" என்று முருகானந்தத்தைக் கேலி செய்தான் அரவிந்தன். அழகரடியிலிருந்தும் பொன்னகரத்திலிருந்தும் வந்திருந்த தன் நண்பர்களையெல்லாம் ஓட்டலுக்கு அழைத்துப் போய்ச் சிற்றுண்டு காப்பி உபசாரம் செய்து நன்றி சொல்லி அனுப்பி வைத்தான் முருகானந்தம்.

பர்மாக்காரர் மாளிகையில் அரவிந்தன் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறான் என்பதும், அவ்வாறு நெடுநேரம் துன்புறுத்தப்பட்ட பின்பே பர்மாக்காரராலும் புது மண்டபத்து மனிதராலும் செல்லூர் வீட்டுக்குக் கொண்டு போய் அடைக்கப்பட்டான் என்பதும் முருகானந்தத்துக்கு ஓரளவு தெரிந்து தான் இருந்தது. பர்மாக்காரரின் கைக் கூலிப்படையிலிருந்து அவனிடம் பிடிபட்ட ஆள் ஓரளவு அவற்றைக் கூறியிருந்தான். இருந்தும் அரவிந்தன் தன்னடக்கம் காரணமாக அத்துன்பங்களைப் பற்றி அதிகம் சொல்லாமல் இருப்பதை முருகானந்தம் உணர முடிந்தது. அவன் சிரிப்பதும் கேலி செய்வதும் கூடக் கயவர்களிடம் பட்ட அந்த வேதனைகளை மறந்துவிடவும் மறைத்து விடவும் செய்கிற முயற்சிதான் என்பதும் முருகானந்தத்துக்குப் புரிந்தது.

அரவிந்தன் எப்போதுமே இப்படித்தான் பிறருடைய துன்பங்களையும் வேதனைகளையும் தூண்டித் தூண்டிக் கேட்டு உதவுவான்; வழி செய்வான். அனுதாபப்படுவான். தன்னுடைய துன்பங்களையும், வேதனைகளையும் கூடியவரை பிறர் தெரிந்து கொள்ள விடமாட்டான். தூண்டிக் கேட்டாலும் சிரித்து மழுப்பிவிடுவான். 'மகா நெஞ்சழுத்தக்காரன் அப்பா நீ?' என்று முருகானந்தம் எத்தனையோ முறை அரவிந்தனைக் கடிந்து கொள்ள நேர்ந்ததுண்டு. பணம் சேர்த்து வைத்துக் கொண்டு செலவழிக்காத கருமிபோல் தன்னுடைய துன்பங்களைப் பிறரிடம் கலந்து கொண்டு கொடுத்து அனுதாபம் சேர்க்கத் தெரியாத கருமி அவன். தன்னுடைய சுகங்களை எல்லோரும் பங்கிட்டுக் கொள்ள விடுகிற வள்ளல் அவன். துன்பங்களைப் பிறர் கேட்டு அறிந்து கொள்ள வரும்போது மட்டும் கருமியாக மாறிவிடுவான். அவனுக்குச் சிறு வயதிலிருந்தே பழக்கமான பண்பு அது.

அரவிந்தனை அச்சகத்தில் இருக்கச் சொல்லிவிட்டுச் சிறிது நேரத்தில் திரும்பி வந்து சந்திப்பதாகக் கூறி வெளியேறினான் முருகானந்தம். அரவிந்தனின் மனம் அப்போது தீவிரமான சிந்தனையில் இருந்தது. நியாயம் கேட்பதற்காக அமைதியான முறையில் சென்ற தன்னைப் பர்மாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் என்னென்ன விதமாக வேதனைப்படுத்தினார்கள் என்பதை நினைத்துப் பார்த்தபோது, 'உலகத்தில் இனிமேல் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் இடமே இல்லையோ?' என்கிற அளவு இதயம் புண்பட்டு வருந்தினான் அவன். தன்னை வெளியேற விடாமல் வீட்டுக்குள் அடைத்துப் போட்டுக் கொண்டு நான்கைந்து பேர்களாகச் சேர்ந்து அவர்கள் படுத்திய கொடுமைகளையெல்லாம் முருகானந்தத்திடமோ மற்றவர்களிடமோ சொல்ல விரும்பவிலை அவன். ஆனால் நீறுபூத்த கனலைப் போல் உள்ளேயே குமுறினான்; எண்ணி எண்ணிப் புழுங்கலானான்.

'கொள்ளைக் கூட்டத்து நடைமுறைகளைப் போல் அரசியல் எவ்வளவு ஒழுங்கற்றதாக இருக்கிறது இங்கே? யாதும் ஊரே யாவரும் நண்பரே! தீமையும் நன்மையும் பிறரால் இல்லை. துயரமும் இன்பமும் பிறர் காரணமாக ஏற்படுவதில்லை. வாழ்வும் சாவும் நியதிகள். இன்பக் காலத்தில் துள்ளித் திரிவதும், துயரக் காலத்தில் துவண்டு கிடப்பதும் அற்ற ஒருமை நிலைதான் சிறந்த வாழ்வு' என்று தத்துவம் கண்டு வாழ்ந்த தமிழகத்திலா இன்று இப்படி வாழ்கிறோம். எத்தனை பொறாமைகள்! எத்தனை காழ்ப்புகள்! அடுத்தவர்களைக் கவிழ்க்க முயல்வதில் எவ்வளவு இன்பம் இவர்களுக்கு? பண்பாட்டையும் ஒழுக்க நேர்மைகளையும் வளர்ப்பதற்குப் பதிலாக அரசியல் கட்சிகள் இந்த நாட்டு மக்களை எவ்வளவு கெட்ட வழிகளுக்கு இழுத்துப் போகின்றன? பிழைத்துக் கிடந்தால் பூரணி, சத்தியத்தின் பலத்தால் ஆடம்பர விளம்பரங்களும் ஆவேசப் பேச்சுக்களும் இல்லாமலே தேர்தலில் வெற்றி பெறுமாறு செய்து மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். பேசுவதையும் எழுதுவதையும் விட வாழ்ந்து காட்டிவிடுவது தான் இன்றைய நிலையில் மற்றவர்களைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவரச் சரியான கருவி. பூரணியின் விளம்பரத்துக்காகச் சுவரொட்டிகள் அச்சடித்ததே பேதமை. எல்லோரையும் போல் தன்னைப் பற்றி விளம்பரம் செய்து தன் புகழையும், பெருமையையும் பறைசாற்றி ஏலம் போட்டுத்தான் இந்தப் பதவியை அடைய வேண்டுமானால் பூரணிக்கு என்ன பெருமை? 'ஏழைகளுக்கு ஒரு வேளை கஞ்சி வார்க்காதவர்கள், பள்ளிக்கூடத்துக்குப் பந்துக்காக நன்கொடை தர பஞ்சப் பாட்டுப் பாடுகிறவர்கள், தேர்தலுக்குப் போட்டியிடும்போது அவசியம் அனாவசியம் பாராமல் லட்ச லட்சமாக வாரி இறைக்கிறார்களே! எளிமையில் நிறைவு கண்டு தூய்மையில் பெருமை பேணும் உயரிய பண்பு காந்தியடிகளோடு இந்த நாட்டை விட்டுப் போய்விட்டதா?' என்று எண்ணி மனம் தவித்த அரவிந்தன் ஏதோ தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தவன் போல் அச்சிட்டுக் குவித்திருந்த சுவரொட்டிகளையெல்லாம் கொல்லைப் பக்கம் திறந்த வெளியில் அள்ளிக்கொண்டு போய்க் கொட்டினான். இது நடந்த கால் மணி நேரத்துக்குப் பின் வெளியே சென்றிருந்த முருகானந்தம் அச்சகத்துக்குத் திரும்பி வந்தான். முன்பக்கத்து அறையில் அரவிந்தன் காணப்படவில்லை. கொல்லைப் பக்கமிருந்து பெரிதாக புகைப்படலங்கள் தெரிந்தன. அரவிந்தனைத் தேடிப் பின் பக்கம் திறந்த வெளிக்கு வந்த முருகானந்தம் அங்கே அவன் பூரணியின் தேர்தல் சின்னம் அச்சிட்ட சுவரொட்டிகளுக்கு நெருப்பு வைத்துக் கொண்டிருப்பது கண்டு திடுக்கிட்டான்.

"என்ன அரவிந்தன்? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? எவ்வளவு பணம் செலவழித்து அச்சிட்ட சுவரொட்டிகள் இவை? எதற்காக இப்போது இவற்றைக் கொளுத்துகிறாய்?" என்று கேட்டான்.

"இந்தச் சுவரொட்டிகளில் இல்லை பூரணியின் பெருமை. சத்தியத்தின் பலத்தில் அவள் வெற்றி பெற வேண்டும். நேர்மையின் துணையால் அவள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்! உண்மையான காந்தீயத்தை அவள் மூலம் நாட்டுக்குக் கற்பிக்க வேண்டும்! அதற்கு இவை தேவை இல்லை."

"சுத்த அசட்டுத்தனம்!"

"இருக்கலாம்! ஆனால் இப்படி ஒரு அசட்டுத்தனத்தைத் தொடர்ந்து செய்யும் மகாத்மாக்கள் காந்திக்குப் பின் இல்லாததால் தான் இந்த நாடு எப்படியோ போய்க் கொண்டிருக்கிறது."

"என்னதான் லட்சியம் இருந்தாலும் நடைமுறையை ஒத்துக் கொண்டு அதன்படிப் போக வேண்டும் அரவிந்தன்! விளம்பரம் செய்யாமல் தேர்தலுக்கு நின்று பயனே இல்லை!"

 

"நேர்மையாகவும் சத்தியமாகவும் தகுதியுடனும் நாம் இருப்பதே நமக்குப் பெரிய விளம்பரம்தான் முருகானந்தம்!"

"பேச்சுக்கு இதெல்லாம் சரி. ஆனால் உலகியல் தெரிந்து செய்யாமலிருந்தால் ஒன்றும் நம்ப முடியாது."

"நீ முன் அறையில் இரு முருகானந்தம்! நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறிக் கொண்டே ஜிப்பாவைக் கழற்றிய அரவிந்தனின் முதுகைப் பார்த்த முருகானந்தம் திகைத்தான். சட்டையைக் கழற்றிவிட்டு அரவிந்தன் உட்கார்ந்திருக்கும் போது பார்த்தால் நெருப்புச் சோதி போல் வளமாக மின்னும் அவனது சிவந்த மேனி. எலுமிச்சம்பழத்தின் மஞ்சள் நிறத் தளதளப்புள்ள மேனி அது. அத்தகைய அழகிய நிறத்துக்கு நடுவே முதுகில் இரண்டு கரிய கோடுகள் கன்றிச் சிவந்து தெரிந்தன.

"என்னப்பா இது?" என்று கேட்டவாறு அந்த இடத்தைத் தொட்டுக்காட்டி வினவினான் முருகானந்தம். அவன் குரல் கொதிப்பின் எல்லையைக் காட்டியது.

"ஒன்றுமில்லை! சவுக்கடியப்பா, சவுக்கு அடி. நியாயத்தை எடுத்துச்சொல்லி வாதிட்டதற்காக ஒரு பெரிய மனிதர் கொடுத்த பரிசுகள் இவை!" என்று நிதானமாகப் பதில் சொன்னான் அரவிந்தன். முருகானந்தத்துக்குக் கண்கள் சிவந்தன. இரத்தம் கொதித்தது. அவன் உதடுகள் ஏதோ ஆவேசமாகக் கூறத் துடித்தன! அப்போது கவலையைக் காட்டும் முகபாவத்துடன் அங்கே நிருபர் பாண்டியன் வந்து நின்றார்.

 

32

 

பெருத்திடும் செல்வமாம் பிணிவந்துற்றிடில்

உருத்தெரியாமலே ஒளிமழுங்கிடும்

மருத்துளதோ எனில் வாகடத்திலை

தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே.

 

கவலை நிறைந்த முகச்சாயலோடு வந்த நண்பர் பாண்டியன், அரவிந்தனை அங்கே கண்டதும் வலிந்து சிரிப்பை வரவழைத்த மாதிரி இருந்தது. நிருபர் பாண்டியன், அரவிந்தனை அன்புடன் நலம் விசாரித்தார். அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு "நீங்களும் முருகானந்தமும் முன்புறத்து அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருங்கள், அதற்குள் நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறி அவரையும் முருகானந்தத்தையும் முன்புறத்துக்கு அனுப்பிய பின் அரவிந்தன் குளிக்கும் அறைக்குள் புகுந்தான்.

அரவிந்தன் பொன்னிற மேனியில் கண்ட புண்களைப் பற்றிய அதிர்ச்சியிலிருந்து முருகானந்தம் இன்னும் விடுபடவில்லை. தங்கத்தட்டில் கரிக்கோடு விழுந்ததுபோல் நண்பனின் அழகிய மேனியில் தெரிந்த சவுக்கடிக் கோடுகள் அவன் உள்ளத்தைக் கொதிக்கச் செய்தன. குமுறச் செய்தன. முன்புறத்து அறையில் வந்து அமர்ந்ததும், நிருபர் பாண்டியன் தம் பேச்சில் அவன் கவனத்தைத் திருப்பினார்.

"முருகானந்தம் உனக்கு நான் எவ்வளவு சொல்லியிருந்தும், நீ உணர்ச்சிவசப்பட்டுப் பெரிய தப்பு பண்ணிவிட்டாய் அப்பா"

"எதைச் சொல்கிறீர்கள், பாண்டியன்?" என்று கேட்டான் முருகானந்தம்.

"இதோ இந்தச் செய்தியைப் படித்துப் பார் தெரியும். சிறிது நேரத்துக்கு முன் பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் அவசரமாகக் காரில் வந்து இறங்கி எங்கள் ஆசிரியரிடம் இந்தச் செய்தியைப் பிரசுரிக்கும்படி சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்று உறுதிப்படுத்திக் கொள்ளத் தயங்கினாலும் ஆசிரியர் பர்மாக்காரரின் செல்வாக்குக்கு முன் அஞ்சுகிறார்" என்று கூறி நாலைந்து முழுத்தாளில் துப்புரவாக டைப் செய்திருந்த அந்தச் செய்தியை முருகானந்தத்திடம் கொடுத்தார் பாண்டியன்.

அதை ஒவ்வொரு வரியாகக் கருத்தூன்றிப் படித்தான் அவன். 'பூரணியின் தாமரைப்பூ சின்னத்துச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு வந்த ஆட்கள் ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த தமது கழுகுச்சின்னம் சுவரொட்டிகளை மறைத்தும் கிழித்தும் வம்பு செய்ததாகவும், அப்படிச் செய்ததைக் கண்டிக்க வந்த தம் ஆட்களை அடித்தும் உதைத்தும் காயப்படுத்தியதாகவும் அறிக்கையில் கூறியிருந்தார் புதுமண்டபத்து மனிதர். மேலும், செல்லூர் திருவாய்ப்புடையார் கோயில் தெருவிலுள்ள தமது 'ஸ்டாக் ஹவுசை' பூரணியின் ஆட்கள் வன்முறைச் செயல்களால் பூட்டை உடைத்துத் திறந்து புத்தகங்களையும், பிற பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டதாகவும்' அந்தச் செய்தியில் அவர் விவரித்திருந்தார். வன்முறைச் செயல்களைச் செய்தவர்களின் பெயர்களாக அவர் கொடுத்திருந்த பட்டியலில் வேண்டுமென்றே முருகானந்தத்தின் பெயர் பெரிதுபடுத்தப்பட்டிருந்தது. 'ஸ்டாக் ஹவுஸ்' கொள்ளையிடப்பட்டதற்கு முதல் நாள் காலை அரவிந்தன் பர்மாக்காரர் எஸ்டேட்டுக்கு வந்து தன்னைச் சந்தித்துக் 'கன்னா பின்னா'வென்று பேசிப் பயமுறுத்தியதாகவும் ஒரு பொய்ச் செய்தி திரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

 

இதைப் படித்துவிட்டு முகத்தில் சினம் துடிக்க நிமிர்ந்தான் முருகானந்தம். அவன் பார்வையில் ஆத்திரமும் படபடப்பும் தெரிந்தன. நிருபர் பாண்டியனை நோக்கிக் கேட்கலானான்.

"இந்தச் செய்தி அறிக்கையை இப்படியே நீங்கள் வெளியிடப் போகிறீர்களா பாண்டியன்?"

"என்னைக் கேட்டால் நான் என்னப்பா பதில் சொல்ல முடியும்? நேற்றைக்குத் 'தேர்தல் பகை காரணமாக இளைஞர் கடத்தப்பட்டார்' என்று நீ எழுதிக் கொடுத்த செய்தி அறிக்கையை நான் வெளியிடவில்லையா? நீ கொடுத்த செய்தி மெய் என்று எனக்கு தெரிந்து, நானே உன்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டது. இப்போது இவர் கொடுத்திருகும் செய்தி 'பொய்' என்று எனக்குத் தெரிகிறது. தெரிந்தும் நான் ஒன்றும் செய்வதற்கில்லையே? நாங்கள் பத்திரிகைக்காரர்கள், எல்லோருக்கும் வேண்டியவர்கள். நான் எங்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டவன். எங்கள் ஆசிரியர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டுப்பட்டவர். பெரிய மனிதர்கள் எல்லோரும் பர்மாக்காரருக்குக் கட்டுப்பட்டவர்கள். பயப்படுகிறவர்கள். தினப்பத்திரிகை என்பது ஊர்ப்புறத்தில் இருக்கிற குட்டை; அதில் நல்ல தண்ணீர்தான் வந்து நிறையும் என்று சொல்ல முடியாது. இந்த மாதிரி எல்லாம் வம்பு வரும் என்று தெரிந்துதான் நேற்று உனக்கு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும், என்பதை வற்புறுத்திச் சொல்லியிருந்தேன்."

"நீங்கள் சொல்லியிருந்தீர்கள் பாண்டியன். ஆனால் அவர்கள் என்னை நிதானமாக நடந்து கொள்ள விடவில்லையே!" என்று தொடங்கிச் சுவரொட்டி ஒட்டுவதற்குச் சென்றதிலிருந்து செல்லூருக்குப் போய் அரவிந்தனை மீட்டு வந்ததுவரை உண்மையாக என்னென்ன நடந்தனவோ அவற்றை அவரிடம் விவரித்துச் சொன்னான். முருகானந்தம் சற்றுமுன் அரவிந்தனின் முதுகில் தான் கண்ட சவுக்கடிக் காயத்தைப் பற்றியும் சொன்னான்.

"அநியாயமும் கொடுமையும் செய்திருக்கிறார்களென்று நமக்கு நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது முருகானந்தம். ஆனால் சமூகத்துக்கு இவைகளைப் புரிய வைக்கிறவரை நிதானமாகத்தான் போகவேண்டும். பூரணி இப்போது இந்த நாட்டுக்குள்ளேயே இல்லை. இலங்கையில் இருக்கிறாள். புது மண்டபத்து மனிதர் கொடுத்துள்ள இந்த செய்தி அறிக்கை வெளியானால் அவளுடைய நல்ல பெயரும் கெடத்தான் செய்யும். அரவிந்தனை சாது, நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சந்தேகப்படுவார்கள், உன்னைப் பற்றி..."

"ஏற்கெனவே கெட்டவன், முரடன், தடியன் என்று எல்லோருக்கும் தெரியுமாக்கும்? ஏன் நிறுத்திவிட்டீர்கள், பாண்டியன்? நன்றாகச் சொல்லுங்களேன். எனக்கும் என்னைப் பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்களென்று தெரிந்து கொள்ள ஆசையாயிருக்கும் அல்லவா? பூரணி-அரவிந்தன் இவர்களுக்கு நான் உதவியிருக்கிறேன் பாருங்கள்! ஏதாவது பெரிய குற்றம்சாட்டி என்னை ஓர் ஆறு மாதம் உள்ளே தள்ளிவிட்டால் தேர்தல் முடிகிற வரை என்னுடைய தொந்தரவு இருக்காதென்று நினைக்கிறார் பர்மாக்காரர். இல்லாவிட்டால் செல்லூர் வீட்டுக்குள் நுழைந்து அடைபட்டுக் கிடந்த அரவிந்தனை மீட்டு வந்த நிகழ்ச்சியைத் திரித்து நான் என் ஆட்களோடு கொள்ளையிட வந்தேனென்று வல்வழக்குத் தயார் செய்வாரா?"

"பதற்றமடையாதே முருகானந்தம். பர்மாக்காரனின் இந்தச் சூழ்ச்சி பலிக்காமல் போகும்படி செய்வதற்கும் ஒரு வழி இருக்கிறது. பத்திரிகையில் அறிக்கை விடுகிற தகுதி அவர்களுக்குத்தான் உண்டு என்பதில்லையே? உன்னுடைய தகுதி என்ன குறைவு? நீயும் தொழிற்சங்கங்களின் தலைவன், தொழிலாளர்களின் மதிப்புக்குரியவன். பர்மாக்காரர் அரவிந்தனைக் கடத்திக் கொண்டு போய் துன்புறுத்தியதையும், செல்லூர் வீட்டில் சிறை வைத்ததையும் பற்றி நீயும் விரிவாக ஓர் அறிக்கை எழுதிக் கொடு; உன் அறிக்கையை அவர்களிடம் எடுத்துச் சென்று காண்பித்து வெளியிடப் போவதாகச் சொல்லி மெல்ல மிரட்டிப் பார்க்கிறேன். அப்படிச் செய்தால், 'இரண்டு அறிக்கைகளையுமே வெளியிட வேண்டாம். பேசாமல் விஷயத்தை அப்படியே அமுக்கிவிடுங்கள்' என்று அவர்களே எங்கள் ஆசிரியருக்கு 'டெலிபோன்' செய்து தடுத்து விடுவார்கள்.

"நீங்கள் எதிர்பார்க்கிறபடி நடைபெறாமல் பர்மாக்காரரின் செல்வாக்குக்குப் பயந்து உங்கள் ஆசிரியர் அவர்களுடைய அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டால்?"

"வெளியிடமாட்டார்! அதற்கானதை எடுத்துச் சொல்வது என் பொறுப்பு!"

முன்புறத்து அறையில் அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது நீராடி உடை மாற்றிக்கொண்டு தூய தோற்றத்தோடு அரவிந்தன் வந்தான். "அரவிந்தன் ஏற்கெனவே மிகவும் மன வேதனைப்பட்டுப் போயிருக்கிறான். இதில் ஒன்றையும் அவன் காதில் போட வேண்டாம்" என்று பின்புறமிருந்து அரவிந்தன் காலடி ஓசை கேட்டதுமே, பாண்டியனிடம் மெதுவான குரலில் கூறி எச்சரித்திருந்தான் முருகானந்தம். உள்ளே வந்த அரவிந்தன் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான்.

"பூரணி எப்போது இலங்கையிலிருந்து திரும்புகிறாள்?" என்று அரவிந்தனை நோக்கிக் கேட்டான் பாண்டியன்.

"திரும்புகிற சமயம் தான். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவள் திரும்பிவிடுவாள்."

"நீங்கள் எது நடந்தாலும் கவலையோ, சோர்வோ அடையக் கூடாது அரவிந்தன்! தேர்தல், அரசியல் போட்டி என்று வரும் போது இந்தநாளில் இவையெல்லாம் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. பூரணி திரும்பி வந்து நான்கு கூட்டங்களில் பேசினால் போதும்; இந்தத் தொகுதியில் அவளுக்குத்தான் வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை."

 

"நியாயத்திலும் நேர்மையிலும் நம்பிக்கையிருந்தால் பூரணியைத் தேர்ந்தெடுக்கட்டும். அதற்காக 'என்னைத் தேர்ந்தெடுங்கள், எனக்கே வாக்களியுங்கள்' என்று இனிப்பு மிட்டாய்க்கு அடித்துக் கொண்டு பறக்கிற சிறுபிள்ளை மாதிரி அவள் கூட்டம் கூட்டமாக, மேடை மேடையாக வந்து கதறமாட்டாள். இலங்கையிலிருந்து திரும்பி வந்ததுமே சில நாட்களில் கல்கத்தாவில் நடைபெறவிருக்கும் கிழக்கு ஆசிய பெண்கள் மாநாட்டுக்கு அவள் போக வேண்டும். கல்கத்தாவிலிருந்து திரும்பியதும் மலேசியாவில் சில வாரங்கள் சுற்றுப் பயணம் செய்யப் போகவேண்டும். தேர்தலை ஒரு வியாபாரமாகக் கருதி அதற்காக முதல்போட்டு செலவழித்து அலைய அவளுக்கு நேரமில்லை. நானும் அதை வியாபாரமாக நடத்த விரும்பவில்லை" என்று நிருபர் பாண்டியனிடம் சுடச்சுட பதில் கூறினான் அரவிந்தன்.

"நீங்கள் சொல்வதெல்லாம் உயர்ந்த இலட்சியம்தான். ஆனால் உங்களை எதிர்த்து நிற்பவர் பணபலமும், ஆள் பலமும் சூழ்ச்சிகளும் உள்ளவராயிற்றே!"

"மனித உரிமைகளும், சமத்துவமும் உருவாகிற சமுதாயத்திலே பணத்துக்கென்று தனிப்பலமே இருக்கக்கூடாது. அதிக ஏழ்மையைப் போல, தனித்தனி மனிதர்களிடம் அதிகச் செலவம் தேங்கிவிடுவதும் நாட்டுக்கு ஒரு பெரிய நோய்; மனித உடம்பு முழுவதும் சதைப்பற்று இருந்தால், வளமான உடல் என்கிறோம். உடலில் பல பகுதிகள் இளைத்து எங்காவது சில இடங்களில் மட்டும் சதை வைத்திருந்தால் அது கட்டி, நோய். செல்வமும் நமது சமுதாயத்தில் கட்டி விழுந்து விகாரமான உடல் மாதிரி சில இடங்களிலேயே தேங்கி நாறுகிறது. உலகத்து நோய்களையெல்லாம் மருந்தால் தீர்க்கலாம். ஆனால் செல்வக் கொழுப்பு என்கிற நோய்க்கு மட்டும் எந்த மருத்துவ நூலிலும் மருந்து இல்லை. ஏழ்மை என்ற இன்னொரு நோய்தான் முன்னைய நோய் தீர ஏற்ற மருந்து. சமூக நோய்களுக்கு மருந்து கிடைக்கிற வரை அரசியல் போட்டிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டம் தான்" என்று ஏக்கத்துடன் நிருபர் பாண்டியனை நோக்கிக் கூறினான் அரவிந்தன்.

அங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபின் முருகானந்தத்தையும் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் பாண்டியன். அரவிந்தன் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான். முருகானந்தத்தைத் தினச்சுடர் அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார் நிருபர் பாண்டியன். அரவிந்தன் செல்லூர் வீட்டில் அடைத்து வைக்கப் பெற்றிருந்தது பற்றியும், கொடுமைப் படுத்தப்பட்டது பற்றியும் முருகானந்தத்தின் கைப்பட ஒரு விரிவான அறிக்கை எழுதி வாங்கி அதை ஆசிரியரிடம் கொண்டுபோய்க் காட்டினான் பாண்டியன்.

'தினச்சுடர் ஆசிரியர்' இரண்டு அறிக்கைகளிலும் எது மெய்யென்று கண்டுகொள்ள முடியாமல் திணறினார்.

 

"சார்! பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் கொண்டு வந்து கொடுத்த அறிக்கையில் உண்மையே இருப்பதாக தெரியவில்லை. 'அரவிந்தனை அவர்கள் கடத்திக் கொண்டு போய் கொடுமைப்படுத்தினார்கள்' என்பதுதான் உண்மை. ஊரெல்லாம் இந்த உண்மை தெரிந்திருக்கிறது! அப்படியிருக்கும் போது பொய்யும் புரட்டுத்தனமுமான அவர்கள் அறிக்கையை வெளியிட்டால் நமது பத்திரிகையின் பேர்தான் கெடும். இரண்டு பக்கத்தாருடைய அறிக்கைகளையுமே வெளியிடாமல் விட்டு விடலாம். இப்போது முருகானந்தம் எழுதிக் கொடுத்திருக்கும் இந்த அறிக்கையைப் பற்றி நீங்களே அவர்களிடம் டெலிபோனில் கூறுங்கள். அவர்களே தம் அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று கூறி விடுவார்கள்" என்று சமயம் பார்த்து ஆசிரியருக்கு வழி கூறினான் பாண்டியன். ஆசிரியர் உடனே பர்மாக்காரருக்கு டெலிபோன் செய்து கூறினார். பாண்டியன் அனுமானம் சரியாயிருந்தது. 'எங்கள் அறிக்கை, அவன் அறிக்கை, ஒரு மண்ணாங்கட்டியும் வெளியிட வேண்டாம். இந்தச் செய்தி பற்றி மூச்சுக் காட்டக்கூடாது!' என்று டெலிபோனில் பதில் கூறிவிட்டாராம் பர்மாக்காரர். ஆசிரியருக்கும் பாண்டியனுக்கும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டான் முருகானந்தம்.

கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சென்னை சென்று அங்கிருந்து ரயில் மூலம் மறுநாள் காலை மதுரையை அடைந்து விடுவதென்ற திட்டத்தோடுதான் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் கிளம்பியிருந்தார்கள். விமானத்தில் கிடைத்த செய்தித்தாளில் 'அரவிந்தன் கடத்திக்கொண்டு போகப்பட்டான்' என்ற திடுக்கிடும் செய்தியைப் படித்தவுடன் இருவருக்குமே பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையும் தவிப்பும் ஏற்பட்டன. பூரணியின் முகம் அழுவதுபோல் களை குன்றித் துயரச் சாயலுடன் தோன்றியது. கண்களில் நீர் கோர்த்தது. மங்களேசுவரி அம்மாள் கூறலானாள்:

"வர வர அரசியல் நேர்மை குன்றிய துறையாக மாறிவிட்டது பூரணி. கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கருத்துக்களோடு மட்டும் பகைத்துக் கொண்டு அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். கருத்துக்களுக்குப் பதிலாக ஆட்களை எதிர்க்கிற அநாகரிகத்தைத் தான் இங்கே காண்கிறோம்."

"தவறு என்னுடையதுதான் அம்மா! நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று முதலிலேயே கண்டிப்பாக மறுத்திருக்க வேண்டும். தேர்தல் வேதனைகளால் தான் மீனாட்சிசுந்தரம் இறந்தார். தேர்தல் பகையினால்தான் இவர் காணாமல் தலைமறைவாகக் கடத்திக் கொண்டு போகப்பட்டிருக்கிறார். இதனால் இன்னும் என்னென்ன துன்பங்களும் தொல்லைகளும் வருமோ!"

"கவலைப்படாதே அம்மா! அரவிந்தனுக்கு ஒரு கெடுதலும் நேராது. அவரைப் போல் நல்லவர்களுக்கு இறைவனுடைய அருள் துணை எப்போதும் கெடுதல் நேராமல் அருகிலிருந்து காக்கும். விமானம் சென்னைக்குப் போய்ச் சேர்ந்ததும் இறங்கி (டிரங்க் டெலிபோனில்) வெளியூர்த் தொலைபேசி மூலம் மதுரைக்குப் பேசுவோம். விவரம் தெரிந்துவிடும். இது நாளு நாளைக்கு முந்திய செய்தித்தாள். ஒருவேளை இதற்குள் அரவிந்தன் மீண்டு வந்தாலும் வந்திருக்கலாம். என் மாப்பிள்ளை ஒரு விநாடி கூடச் சும்மா இருக்க மாட்டார். ஏதாவது செய்து இதற்குள் அரவிந்தனை மீட்டுக் கொண்டு வந்திருப்பார்" என்று மங்களேசுவரி அம்மாள் பூரணிக்கு ஆறுதல் கூறினாள்.

கொழும்பிலிருந்து புறப்படும் முன்பே சென்னையிலிருந்த தன் உறவினர்க்குத் தந்தி மூலம் தங்களது வரவு பற்றி அறிவித்திருந்தாள் மங்களேசுவரி அம்மாள். அதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அந்த அம்மாளின் உறவினர்கள் காருடன் வந்து காத்திருந்தனர். சுங்கப் பரிசோதனை முடிந்து உறவினர்களுடன் பூரணியையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றாள் மங்களேசுவரி அம்மாள். உறவினர்கள் வீட்டில் தொலைபேசி இருந்தது. அங்கிருந்து மதுரையில் தன் வீட்டுத் தொலைபேசி எண்ணுக்கு அவசரமாகப் பேசுவதற்கு முயன்றாள் அந்த அம்மாள். பூரணி துடிப்பும் தவிப்புமாக விவரம் அறிந்து கொள்ளும் ஆவலோடு மங்களேசுவரி அம்மாளின் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். கால்மணி நேரத்தில் மதுரை எண்ணுடன் தொலைபேசித் தொடர்பு கிடைத்துவிட்டது. மதுரையிலிருந்து வசந்தா பேசினாள். கொழும்பிலிருந்து விமானத்தில் வரும்போது செய்தித்தாளில் படித்த செய்தியைப் பற்றி கூறி விவரம் கேட்டாள் மங்களேசுவரி அம்மாள். வசந்தாவிடமிருந்து கேட்ட மறுமொழியால் மங்களேசுவரி அம்மாளின் முகம் மலர்ந்தது. அருகில் இருந்த பூரணியின் மனத்தில் அதைக் கண்டதும் நம்பிக்கை மலர்ந்தது. வசந்தா சிறிது நேரம் பேசிவிட்டு "இதோ பக்கத்தில் உங்கள் மாப்பிள்ளையே வந்து நிற்கிறார் அம்மா! அவரிடம் விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!" என்று தொலைபேசியை முருகானந்தத்தின் கையில் கொடுத்துவிட்டாள். முருகானந்தம் நடந்தவற்றை மிகச் சுருக்கமாக மாமியாருக்கு தெரிவித்தான். "நீங்கள்தான் நாளைக்குக் காலையில் இங்கே மதுரைக்கு வந்துவிடப் போவதாகக் கூறினீர்களே. மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம். காலையில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸுக்கு நானும் அரவிந்தனும் இரயில் நிலையத்துக்கு வருகிறோம்... அவ்வளவுதானே? வைத்துவிடட்டுமா?" என்று முருகானந்தம் பேச்சை முடித்துவிட்டுத் தொலைபேசியை வைக்க இருந்தபோது, "இதோ பூரணி பக்கத்தில் கவலையோடு நிற்கிறாள். நான் சொன்னால் நம்புவாளோ மாட்டாளோ? 'அரவிந்தன் திரும்பி வந்துவிட்டான்' என்று நீங்களே அவளிடம் போனில் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் மாப்பிள்ளை" என்றாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி தொலைபேசியைக் கையில் வாங்கிக் கொண்டாள். பூரணியிடம், "அக்காவுக்கு வணக்கம். இலங்கைப் பயணம் எல்லாம் சுகமாயிருந்ததோ? இங்கே வசந்தா மிகவும் பொல்லாதவள் ஆகிக் கொண்டு வருகிறாள். திருமணத்துக்குப் பின் ஒரே அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது அக்கா! எனக்குச் சுதந்திரமே இல்லை" என்று சிரித்துக் கொண்டே முருகானந்தம் பேசியபோது இடையில் ஒரு கணம் 'போன்' அவன் கையிலிருந்து மாறி "இவர் சொல்வதெல்லாம் சுத்தப் பொய் அக்கா, கிண்டல் செய்கிறார்" என்று வசந்தாவின் நாணம் விரவிய மென்குரல் ஒலித்தது. மீண்டும் முருகானந்தம் பேசினான். "அரவிந்தன் சுகமாக இருக்கிறான். உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். காலை எக்ஸ்பிரஸில் உங்களை எதிர்பார்க்கிறோம். புறப்பட்டு வந்து சேருங்கள்" என்று அவன் உறுதி கூறிய பின்பே பூரணியின் மனம் நிம்மதியை முழுமையாக அடைந்தது. தவிப்பும் கவலைகளும் குறைந்தன.

சென்னையில் அவர்கள் தங்கியிருந்த உறவினர் வீடு மயிலாப்பூர் பகுதியில் இருந்தது. 'அரவிந்தன் திரும்பி வந்து விட்டான். சுகமாக இருக்கிறான்' என்ற செய்தி தெரிந்ததும் மங்களேசுவரி அம்மாளையும் அழைத்துக் கொண்டு மயிலைக் கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று கற்பகாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டு வந்தாள் பூரணி. அன்று மாலை திருவனந்தபுரம் விரைவு வண்டியிலேயே அவர்கள் சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுவிட்டார்கள். இரயிலில் வரும்போது அரசியல் நிலைகளையும் அதிலுள்ள வம்புகளையும் பற்றிக் கதை கதையாகச் சொல்லிக் கொண்டு வந்தாள் மங்களேசுவரி அம்மாள். "இன்று இந்த தேசத்தில் ஆன்மிக எழுச்சி இல்லை. கவிதைகளும் காவியமும் உருவாகிற இலக்கிய எழுச்சியும் இல்லை. மூடப்பழக்க வழக்கங்களைப் போக்கித் துணிவான வாழ்க்கையைக் காட்டும் சமுதாய எழுச்சியும் இல்லை. தேள் கொட்டினவனுக்கு மற்றைய உணர்வுகளெல்லாம் மறந்து மறைந்து வலி ஒன்று மட்டுமே உறைப்பதுபோல், பள்ளிக்கூடச் சிறுவனிலிருந்து பல்போன கிழவர்கள் வரை அரசியல் எழுச்சி ஒன்றே இருக்கிறது. முழங்காலுக்குக் கீழே சதைபோட்டுப் பருத்துவிடுகிற யானைக்கால் வியாதி போல அரசியல் ஒன்றே கதி என்று ஆகிவிட்டது!" என்று அந்த அம்மாள் கூறியதை பூரணி கவனித்துக் கேட்டாள். விழுப்புரம் கடந்த பின் தான் இரண்டு பேருக்கும் நல்ல தூக்கம் வந்தது.

காலையில் இரயில் சரியான நேரத்துக்கு மதுரையை அடைந்துவிட்டது. மங்கையர்க்கழகத்துப் பெண்கள் முதல் பிளாட்பாரத்தை நிறைத்துக் கொண்டு பூரணியை வரவேற்கக் கூடியிருந்தார்கள். முதல்நாள் சென்னையிலிருந்து டெலிபோனில் செய்தி வந்ததுமே, வசந்தா மங்கையர் கழகத்துக்குத் தகவல் தெரிவித்து, இந்த ஏற்பாடு செய்திருந்தாள். பிளாட்பாரம் பல வண்ண மலர்கள் குலுங்கும் வண்ண மலர்ச்சோலையாக காட்சியளித்தது. அரவிந்தனும் முருகானந்தமும் நிருபர் பாண்டியன் முதலிய மற்ற நண்பர்களும் ஒருபுறம் நின்று கொண்டிருந்தார்கள்.

பூரணி இரயிலிலிருந்து இறங்கும்போதே அவளுடைய கண்கள் அரவிந்தனைத் தேடிச் சுழன்றன. யாருடைய சிரிப்பில் அமுதத்தின் ஆற்றல் இருந்ததாக உணர்ந்து வியந்தாளோ, அவனுடைய சிரிப்பையும் மலர்ந்த முகத்தையும் பருகிவிடுவது போல் காணும் ஆவலில் அவள் கண்களும் மனமும் விரைந்தன. ஆனால் வசந்தா, மங்கையர் கழகத்துக் காரியதரிசி முதலிய பெண்கள், மாலைகளோடு வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு பார்வையை மறைத்துவிட்டனர். ஆனால் அரவிந்தனுடைய கண்கள் இரயிலிலிருந்து இறங்கும் போதே அவளை நன்றாகப் பார்த்துவிட்டன. புதிய பெருமிதமும் புதிய அழகும் அப்போது அவள் முகத்தில் தோன்றுவது போலிருந்தது அவனுக்கு. தன்னைப் பற்றிப் புகழும் பெருமையும் நிலவும் சூழலில் போய்க் கலந்து பழகிவிட்டு மீளும்போது மனிதருக்கு முகத்தில் உண்டாகிற அபூர்வமான எழில் ஒளியைத்தான் அப்போது பூரணியின் முகத்திலும் காண முடிகிறதென நினைத்தான் அவன். இரயில் பயணத்தினால் கலைந்து சுருள் சுருளாகக் காதோரத்தில் சரிந்து சுழன்ற இணைந்த ஒளிவட்டமாய்த் தெரிந்த அந்த முகம் அவன் உள்ளத்துக்கு அழகிய சிந்தனைகள் அளித்தது.

பெண்கள் கூட்டத்திலிருந்து விடுவித்துக் கொண்டு பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் அரவிந்தன் முதலியவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு வந்தார்கள். "கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்ட போது பேப்பரில் அந்தச் செய்தியைப் பார்த்தோம். இரண்டு பேருக்கும் ஒரே தவிப்பு. மனம் ஒரு நிலையில் இல்லை" என்று மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்.

பேசுவதற்கே ஒன்றும் தோன்றாத மனப்பூரிப்போடு நின்ற பூரணி, அரவிந்தனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். "இரயில் நிலையத்தில் நின்று இதையெல்லாம் பேசுவானேன்? வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக் கொள்ளலாம்" என்று முருகானந்தம் கூறினான். மங்களேசுவரி அம்மாளின் பெரிய கார் வெளியே காத்திருந்தது. எல்லோரும் புறப்பட்டார்கள். தானப்ப முதலி தெரு வீட்டுக்குப் போனதும், சில மணி நேரம் விசாரிப்புகளிலும் கலகலப்பான பேச்சுக்களிலும் கழிந்துவிட்டது. தேர்தல் சுவரொட்டி ஒட்டப்போன இடத்தில் விளைந்த கலவரத்தில் அடிபட்டுப் படுக்கையில் கிடந்த தம்பி திருநாவுக்கரசைப் பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் அச்சகத்துக்குச் சென்று பார்த்து வந்தனர்.

வசந்தா, வீட்டில் அன்றைக்குப் பெரிய விருந்துச் சாப்பாட்டுக்கே ஏற்பாடு செய்திருந்தாள். பகல் உணவு முடிந்ததும் நடுக்கூடத்தில் டேப்ரிகார்டரை வைத்து பூரணி இலங்கையில் பேசிய சொற்பொழிவுகளை ஒலிபரப்பத் தொடங்கினாள் செல்லம். அரவிந்தன், முருகானந்தம், வசந்தா எல்லோரும் சூழ அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பூரணி மாடி அறையில் இருந்தாள். டேப்ரிகார்டு போட்ட சிறிது நேரத்துக்குப் பின் பூரணியின் தங்கை மங்கையர்க்கரசி வந்து, "அக்கா உங்களைக் கூப்பிட்டாங்க, ஏதோ தனியா பேசணுமாம்" என்று அரவிந்தனை மாடிக்கு அழைத்துப் போனாள். பூரணி மாடியில் முன் வராந்தாவிலேயே இருந்தாள். அவள் கைகள் பின்புறம் எதையோ ஒளித்து வைத்துக் கொண்டிருந்தன.

"கூப்பிட்டாயாமே?" என்று சிரித்துக் கொண்டே அவள் முன் போய் நின்றான் அரவிந்தன். அவளும் சிரித்தாள்.

"தயவு செய்து உங்கள் கையை நீட்டுங்கள்" என்றாள் பூரணி.

"எதற்காக?"

"நீட்டுங்களேன் சொல்கிறேன்."

 

அரவிந்தன் கையை நீட்டியவாறே சிரித்தபடி நின்றான். அவள் அவனுடைய பொன் நிறமுள்ள கையில் புதிய தங்கக் கடிகாரத்தைக் கட்டினாள்.

"காலத்தை உங்கள் கையில் கட்டி ஓடச் செய்துவிட்டேன்."

"தவறு பூரணி. நாம் மனிதர்கள்! காலத்தின் கையில் கட்டுண்டு ஓடுபவர்கள்" என மறுமொழி கூறி அழகாக நகைத்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன்.

 

33

 

மாட்சியிற்... பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

இன்னாது அம்ம இவ்வுலகம்

இனிய காண்() இதன் இயல்புணர்ந்தோரே!

                                                                                                 -- புறநானூறு - 192 - 193

 

மதுரை திரும்பியதும் ஒரு வாரம் பூரணிக்கு ஓய்வே இல்லை. விருந்துகளும், பாராட்டுக் கூட்டங்களும் ஒன்றன்பின் ஒன்றாக இருந்தன. இலங்கைப் பயண அனுபவங்கள் பற்றி மங்கையர் கழகத்தில் அவள் சில சொற்பொழிவுகள் செய்தாள். ஒரு திங்கட்கிழமை மாலையில் மங்களேசுவரி அம்மாள் முதலிய எல்லோருடனும் திருப்பரங்குன்றம் போனாள் பூரணி. கோயிலில் சோமவார தரிசனம் முடித்த பின் ஓதுவார்க் கிழவர் வீட்டுக்குப் போய்ச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஓதுவார் வீட்டுப் பாட்டி பூரணியிடம் பலமுறை கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அந்தக் கேள்வியை இம்முறை மங்களேசுவரி அம்மாளிடம் கேட்டாள்.

"நான் சொல்லியதைத்தான் இவள் கேட்கவில்லை. நெருங்கிப் பழகுகிற நீங்களாவது காலாகாலத்தில் கல்யாணத்தைப் பற்றி இந்தப் பெண்ணுக்கு நினைவு படுத்த வேண்டாமோ அம்மா! இவளுக்கு வயதென்ன, கொஞ்சமாகவா ஆகிறது? மனத்துக்குள் என்னதான் நினைத்துக் கொண்டு பேசாமல் இருக்கிறாளோ? இவள் பேசாமல் இருந்தாலும் விவரம் தெரிந்த நீங்களெல்லாம் பேசாமல் இருக்கலாம் அம்மா?"

 

"எல்லாம் தானே நடக்கும் பாட்டி! அது அதற்குக் காலம் வரவேண்டாமோ?" என்று பொதுவாகப் பதில் கூறி பாட்டியின் கேள்வியைச் சமாளித்தாள் மங்களேசுவரி அம்மாள். அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு பூரணியின் பழைய தோழி கமலாவின் வீட்டுக்குப் போய் சிறிது நேரம் இருந்தார்கள். கமலாவுக்குப் பெண் குழந்தை பிறந்து இரண்டு மூன்று நாட்களாகியிருந்தன. கமலாவின் தாய் வெள்ளித்தட்டு நிறையச் சர்க்கரையும் தாம்பூலமும், பூவும் வைத்து பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தோடு அவர்களுக்கு உபசாரம் செய்தாள்.

பிள்ளைப்பேறு நிகழ்ந்த அறைக்குள் தாய்மைக் கோலத்தின் பெருமிதப் பொலிவோடு படுத்திருந்த கமலாவையும், அருகில் சண்பகப் பூங்குவியல் போல் மஞ்சள் பொன் நிறத்துக்குத் தவழ்ந்த குழந்தையையும் பார்த்தாள் பூரணி. அந்த அறைக்குள் உலகத்திலேயே இணையற்றதும் பெரியதுமான புனித அழகு ஒன்றைக் கண்டுகொண்டிருக்கிற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. கலைந்த கூந்தலும், கருவளையமிட்ட கண்களும், தாயாகிப் பெற்ற எழிலும் குலவ உயிருள்ள தெய்வச்சிலை தளர்ந்து துவண்டு கிடப்பது போல் படுத்திருந்தாள் கமலா.

"வா பூரணி! அப்படியே உட்கார்ந்து கொள். இலங்கைக்கெல்லாம் போய்ச் சுற்றிவிட்டு வந்தாயாமே? பிரயாணம் சுகமாக இருந்ததா?" என்று கமலா அன்புடன் விசாரித்தாள். அவளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள் பூரணி.

"போய்விட்டு வருகிறேன், கமலா. அடுத்த வாரம் கல்கத்தாவுக்குப் போகிறேன். திரும்பி வந்ததும் மறுபடியும் உன்னைப் பார்க்க வ்ருகிறேன். உடம்பை நன்றாகக் கவனித்துக் கொள்" என்று விடைபெற்றுக் கொண்டு பூரணி எழுந்திருந்த போது...

"உனக்கென்ன அம்மா! கல்கத்தாவுக்குப் போவாய், அமெரிக்காவுக்குப் போவாய். எங்களையெல்லாம் போலவா நீ! தேர்தலுக்குக்கூட நிற்கிறாய் என்று கேள்விப்பட்டேன். தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியாக வந்தாலும் வருவாய். அப்படியெல்லாம் வந்தால் எங்களை மறந்துபோய் விடாதேயம்மா" என்று சிரித்துக் கொண்டே கூறினாள் கமலா.

சாதாரணமாகச் சிரித்துக் கொண்டுதான் அவள் இப்படிக் கூறினாள். ஆனால் பூரணியின் செவிகளில் சிந்தனையைக் கிளறும் விதத்தில் ஒலித்து உள்ளத்தில் பதிந்து கொண்டன இந்தச் சொற்கள். 'எல்லா பெண்களையும் போல் சர்வ சாதாரணமாக வாழாத காரணத்தாலேயே தன்னையறியாமலே தான் பலருடைய உள்ளங்களில் பெருமையையும் பெருமையோடு கலந்த பொறாமையையும் உண்டாக்கிக் கொண்டு வருகிறோமோ?' என்று ஒரு கணம் பொறுத்துக் கொள்ள முடியாத சந்தேகம் பூரணியின் மனத்தை வாட்டியது. 'உயரத்தில் இருப்பவர்கள் தகுதியுடையவர்களாக நல்லவர்களாக இருந்த போதிலும் அவர்கள் உயரத்தில் இருக்கிறார்களென்ற ஒரே காரணத்தால் கீழேயிருக்கிற அத்தனை பேருடைய கண்களும் அவர்கள் மேல் பட்டுக் கொண்டிருக்கிறதென்பதை உணர்கிற நிலை பூரணிக்கும் அப்போது ஏற்பட்டது. இரண்டு உயிர்கள் சேர்ந்து மூன்றாவது உயிரை உண்டாக்குகிற வாழ்வுக்குத்தான் உலகம் முழுவதும் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவசரப்படுத்துகிறது. ஓதுவார் வீட்டிலும் கமலாவின் வீட்டிலும் தன்னைச் சந்தித்த கண்களில் தன்னோடு பேசிய வாய்களில் தன்னை நினைத்த உள்ளங்களில் இந்த அவசரம் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் வற்புறுத்தப்படுவதை அவள் புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருந்தது. எப்படியெல்லாமோ இலட்சிய வாழ்வு வாழத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது அவள் மணம். 'அப்படியெல்லாம் கனவுகள் காணாதே. இப்படித்தான் வாழவேண்டும். இப்படி வாழ்வது தான் வழக்கம். இப்படித்தான் எல்லோரும் வாழ்கிறார்கள்' என்று உலகம் சமயம் வாய்க்கும்போதெல்லாம் அவளுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. அவளுடைய அரவிந்தனோ, 'உடம்பால் வாழ்கிற வாழ்வுக்கு இப்போது அவசரமில்லை இன்னும் சிறிது காலத்துக்கு எங்களை மனங்களிலே வாழவிடுங்கள்' என்று மங்களேசுவரியம்மாளிடம் தத்துவம் பேசுகிறான். அவள் மட்டும் என்னவாம்? குறிஞ்சிப் பூப்பது போல் அபூர்வமாக தன் மனத்தில் அந்தக் கம்பீரம் பூக்கும் போது, ஆசைகளும் பாசங்களும் நிறைந்த சிறிய வாழ்வை மறந்து ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் முதியவர்களுமாக உறங்கித் தளர்ந்து இருளில் மூழ்கியிருக்கும் தமிழினத்து மக்களின் நடுவே ஒளிவிளக்கேற்றி அருள் நடை நடக்கும் வாழ்வையல்லவா அவள் உணர்கிறாள். அந்த வாழ்வின் நினைவு குறிஞ்சி போல் அரிதாய் மனத்துள் உயரமான இடத்தினதாய்ப் பூக்கும் போது அவள் கண்களில் நீர் மல்கி விடுகிறதே. கருத்தில் தெய்வீகம் மணக்கிறதே! தான் மட்டுமே உணர முடிந்தது, பிறர்க்கு உணர்த்த முடியாததுமான இந்த உணர்வுக்கு என்ன பெயர்?

திருப்பரங்குன்றத்தில் கமலாவின் வீட்டில் அந்த அனுபவம் ஏற்பட்ட சிறிது நாழிகை நேரத்தில் இத்தனையும் எண்ணித் தவித்தது பூரணியின் உள்ளம். அவள் குடியிருந்த வீட்டின் சாவியும் கமலாவின் தாய் வசம்தான் கொடுத்து வைக்கப்பட்டிருந்தது. வெகுநாட்களாக வீடு பூட்டிக் கிடந்ததனால் சாவியை வாங்கிக் கொண்டு போய்த் திறந்து பார்த்துவிட்டு வந்தாள் பூரணி.

"எதற்காக இங்கு ஒரு வீட்டைப் பூட்டிப் போட்டுக் கொண்டு தண்டத்துக்கு வாடகை கொடுக்கிறாய்? பேசாமல் எல்லாவற்றையும் ஒழித்துக் கொண்டு மதுரைக்கே வந்துவிடு. நம் வீட்டு மாடி முழுவதும் உனக்கு விட்டுவிடுகிறேன்" என்றாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி அதற்கு உடனடியாக இணங்கிவிடவில்லை. "பார்க்கலாம் அம்மா. இப்போது அவசரமில்லை" என்று கூறினாள்.

தம்பி சம்பந்தனும் தங்கை மங்கையர்க்கரசியும் மங்களேசுவரி அம்மாள் வீட்டிலேயே தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். செல்லத்தைப் போல் ஏறக்குறைய அவ்வீட்டுக் குழந்தைகளாகவே ஆகியிருந்தார்கள். மூத்த தம்பி திருநாவுக்கரசு அச்சகத்திலேயே அரவிந்தனோடு இருந்து வந்தான். இவற்றையெல்லாம் சிந்தித்துத் தீர்மானமாய் முடிவு செய்து கொண்ட பின்புதான் அந்த அம்மாள் பூரணியிடம் அக்கேள்வியைக் கேட்டாள்.

 

"நீ மட்டும் தனியாக இங்கே வீடு வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய் பெண்ணே? ஒரே குடும்பமாகப் பழகிக் கொண்டிருக்கிற நாம், ஒரே குடும்பமாக வசிக்க ஆசைப்படுவதிலே என்ன தவறு?" என்று மீண்டும் இரண்டொருமுறை வற்புறுத்திச் சொல்லிப் பார்த்தாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி இதற்குச் சரியாக மறுமொழி கூறவில்லை.

அன்றைக்கு மாலையில் திருப்பரங்குன்றம் சென்ற அவர்கள் மதுரை திரும்பும்போது எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. அங்கிருந்து காரில் திரும்பிப் புறப்படும்போது காரின் பின்புறத்துக் கண்ணாடி வழியாக ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள் பூரணி. குன்றின் உச்சியில் நீல ஒளி உமிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தது ஓம். காரின் ஓட்டத்தில் விரைவாகப் பின்னுக்கு நகர்ந்து கொண்டு போகும் அந்த ஊரிலும், குன்றின் உச்சியில் ஒளி மலராய் மலர்ந்து வெண்நீலச் சுடர் திகழும் 'ஓமி'லும் தான் எத்தனை அழகு. 'இந்த அழகில்தானே அப்பாவின் மனம் தோய்ந்து நின்றது. இந்த அழகில் தானே அப்பாவின் சிந்தனைகளும் தத்துவங்களும் மலர்ந்தன. அந்த அழகில்தானே அப்பா என்னை வளர்த்து அறிவாக்கி ஆளாக்கி விட்டார்' என்று பழையனவும் புதியனவுமாகிய நினைவுகளை நினைத்து நினைத்து நெட்டுயிர்த்தாள் அவள். அன்று இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் பூரணி. சிந்தனைகளின் தவிப்பில் புழுங்கியது அவள் உள்ளம்.

திருப்பரங்குன்றத்தில் சிறிய தெருக்களில் மதுரை நகரத்தின் அகன்ற வீதிகளில் தான் நடந்தும், காரிலும் சென்றபோது சில ஆண்டுகளுக்கு முன் பழகியவர்களும், பழகாதவர்களும், தன்னை எப்படிப் பார்த்தார்களோ அதைவிட அதிகமான பயத்துடனும் மரியாதையுடனும் இப்போது பார்ப்பதை அவள் தெரிந்து கொண்டிருந்தாள். மேடை, பிறர் புகழ்ச்சி, வெளிநாட்டுப் பயணம், தேர்தல் எல்லாமாகச் சேர்ந்து சாதாரண மக்கள் அருகில் நெருங்கக் கூசியும் தயங்கியும் ஒதுங்குகிற கௌரவத்தைத் தன்னிடம் சேர்த்து விடத் தொடங்கியிருப்பதும் அவளுக்கு விளங்கிற்று. செல்வமும், செல்வாக்கும், புகழும் சேரச் சேர அதைக் கண்டு சாதாரண மக்கள் பயப்படத் தொடங்கி மதித்து நிற்கிறார்கள். ஆனால் அவற்றுக்குரியவர் மேல் அன்பை நெகிழவிடக் கூசுகிறார்கள். அன்பால் நெகிழாமல் பயத்தால் நெகிழும் இந்தக் கௌரவம் என்னவோ போல், ஏற்றுக் கொள்ள அருவருக்கும் விதத்தினதாகப் பட்டது பூரணிக்கு. இப்போது அவளை எங்கே சந்தித்தாலும் யார் சந்தித்தாலும், தேர்தலைப் பற்றியும் அரசியலைப் பற்றியுமே பேசினார்கள். சந்திக்கிறவர்கள் தேர்தலையும் அரசியலையும் விட்டு வேறு ஏதாவது நெகிழ்ந்து பேசமாட்டார்களா என்று அவளே ஏங்கும் படியாகிவிட்டது.

ஒன்று அரசியலைப் பற்றிப் பேசினார்கள். அல்லது திருமணத்தைப் பற்றி நினைவு மூட்டினார்கள். உறக்கம் வந்துவிட்டாலும் இந்த நினைவுகளை மறக்கலாம். ஆனால் உறக்கம் கண் இமைகளில் வந்து கலக்கவில்லை. மனிதர்களின் நினைவுகள் தான் கண் இமைகளுக்கு முன்னே வந்து அவளைக் கலக்கியது. அரவிந்தன் தோன்றி, 'எண்ணங்களில் வாழும் வாழ்வுக்கு அழிவில்லை. இன்னும் சிறிது காலத்துக்கு எண்ணங்களிலேயே வாழலாம்' என்கிறான். ஓதுவார் வீட்டுப் பாட்டியும், கமலாவின் தாயும், மங்களேசுவரி அம்மாளும் தோன்றி 'எண்ணங்களால் வாழ்வதெல்லம் உலகத்துக்குத் தெரியாது. உலகம் ஒப்புக்கொள்கிற மாதிரி வாழுங்கள்' என்று அழுத்திச் சொல்கிறார்கள். அவள் கண்களில் இருபுறமும் உருவெளியில் தோற்றங்கள். நீண்ட நாழிகைத் தவிப்புக்குப் பின் மெல்லத் தளர்ந்து உறங்கிய போது, அவள் ஒரு கனவு கண்டாள்.

மேக மண்டலத்தின் உயரத்துக்கு வளர்ந்து வீறெய்தி நிற்கும் ஒரு பெரிய மலைச்சிகரத்தில் அவள் நிற்கிறாள். தூய பஞ்சுப் பொதிகள் போல் குவிந்திருந்த மேகங்களையே எட்டுகிறவரை கொய்தெடுத்து இடையில் சுற்றி உடுத்துக் கொண்டது போல் வெண்துகில் உடுத்து நிற்கிறாள். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை அந்த மலைமேனியெல்லாம் நீலநிறப் பூக்கள் தேன் துளி சிலிர்க்கப் புது மலர்ச்சி கொண்டு இலங்குகின்றன. அந்தப் பூக்களை எங்கோ எப்போதோ பலமுறை பார்த்திருப்பது போல் ஒரு ஞாபகம் நெஞ்சடியில் முறிமுள்ளாய் உறுத்துகிறது. அந்த உயரத்திலிருந்து காணும் போது கீழே மண்ணுலகம் சிறியதாய் இருண்டதாய்ச் சீவனற்றுத் தெரிகிறது. மேலிருந்தபடியே அந்த உயரத்தில் நின்று கொண்டு பூக்களைத் தூவுவதுபோல கீழே இருண்டிருக்கும் உலகத்துக்கு இரண்டு கைகளும் நிறைய ஒளியை அள்ளித் தூவ வேண்டும் போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது. கைகளில் ஒளிப் பூக்களைப் போல் அவள் எவற்றையோ அள்ளுகிறாள். கீழே அவற்றைத் தூவுவதற்காக மேலெழுந்த இரண்டு கைகளின் பத்து விரல்களிலிருந்தும் பொன்னொளிக் கதிர்க்கோடுகள் சுடரிட்டு பாய்கின்றன! இப்படி இன்னும் என்னென்னவோ அற்புதமாய்த் தோற்றங்கள் தொடர்கின்றன. தொடர்புடனும் தொடர்பின்றியும் தொடர்கின்றன. கனவு கலைந்து விழித்துக் கொண்டபோது தலையணை நனைந்திருந்தது. கன்னங்களில் ஈரக்கரை. கண்களில் நீர் பெருகித் தணிந்திருந்தது. கனவின் போது தானாக அழுதிருப்பதும் புரிந்தது பூரணிக்கு.

அடுத்த சில நாட்களில் கல்கத்தாவுக்குப் புறப்படுவதற்காக உற்சாகமான ஏற்பாடுகள் தொடங்கவே சிறிது நிம்மதியடைந்தாள் பூரணி. தேர்தலுக்கான ஆடம்பர ஏற்பாடுகளை அறவே கைவிட்டு விட்டான் அரவிந்தன். 'பூரணியும் தேர்தலுக்கு நிற்கிறாள்' என்று மக்களுக்குத் தெரிவதை விட அதிகமாக எந்த விளம்பர ஏற்பாடும் செய்யக்கூடாதென்று முருகானந்தத்திடம் வாக்கு வாங்கிக் கொண்டிருந்தான் அவன். ஆனால் முருகானந்தம் உலகியல் தெரிந்தவனாக நடந்துகொண்டான். அரவிந்தனுக்கு வாக்குக் கொடுத்த கண்டிப்புக்காகத் தான் ஒன்றும் செய்யாமலிருந்தாலும் பொது மக்களாகவே கூட்டம் போட்டு விளம்பரம் செய்கிற மாதிரி அங்கங்கே நண்பர்களிடம் இரகசியமாகச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தான் முருகானந்தம். அவனுடைய ஏற்பாட்டால் ஆடம்பரமின்றித் தாமாகவே பூரணியை ஆதரிக்கும் தேர்தல் கூட்டங்கள் சில இடங்களில் நடந்தன. இதே சமயத்தில் புது மண்டபத்து மனிதரும் பர்மாக்காரரும் விளம்பரத்துக்குப் பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள்.

பூரணிக்குத் துணையாக மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தாவுக்குப் போய்வர வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் கல்கத்தாவுக்குப் புறப்படுவதற்காகப் பயணம் தொடங்க இருந்த தினத்துக்கு முதல்நாள் காலை அரவிந்தனுடைய வாழ்க்கையில் இமயமலை சரிந்ததுபோல் ஒரு மாபெரும் மாறுதலை உண்டாக்கியது பர்மாக்காரரின் புதுவிதமான சூழ்ச்சி ஒன்று. தனது நிகரற்ற தன்னடக்கப் பண்பினால் அந்த மாறுதலையும் சிரித்துக் கொண்டே சர்வ சாதாரணமாகத் தாங்கிக் கொண்டான் அரவிந்தன். ஆயினும் அதனால் அவன் மனம் எல்லையற்றுப் புண்பட்டது. வருந்தி வாடியது. பொறுக்க இயலாமல் உள்ளுக்குள்ளேயே தவித்தான் அவன்.

அன்று காலை வழக்கம் போல் அச்சக வேலைகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன. அரவிந்தன் அறையில் ஊரிலிருந்து சிற்றப்பாவின் நிலங்களை விற்று அவன் கொணர்ந்திருந்த தொகையில் தேர்தலுக்காக முதலில் செலவழித்த சிறிய பகுதி தவிர எஞ்சியதெல்லாம் அச்சகக் கடன்களை அடைக்கவும் புதிய எந்திரங்கள் வாங்கவும் செலவிடப்பட்டிருந்தது. அவன் அப்படித் தன் பணத்தைச் செலவிட்டு நிலைமையைச் சரிக்கட்டியிருக்கா விட்டால் அச்சக நிர்வாகம் கடனில் மூழ்க நேரிட்டிருக்கும். அது நேரிடாமல் காப்பாற்றிவிட்ட பெருமிதத்தோடு வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அப்போது மீனாட்சிசுந்தரத்தின் வீட்டிலிருந்து வேலையாள் வந்து கூப்பிட்டான். "பெரியம்மா உங்களை கூட்டிக் கொண்டு வரச்சொன்னாங்க." பெரியம்மா என்றுதான் திருமதி மீனாட்சிசுந்தரத்தை வேலைக்காரர்கள் அனைவரும் மரியாதையாக அழைப்பார்கள்.

'கடைசிப் பெண்ணின் திருமண ஏற்பாடு பற்றி ஏதாவது நம்மைக் கலந்து பேசவேண்டியிருக்கும். அல்லது சிறிய பையனின் படிப்பைப் பற்றி இருக்கும். இரண்டும் இல்லாவிட்டால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி எனக்கு அறிவுரை கூறுவதற்காக இருக்கும்' என்று நினைத்துக் கொண்டு புறப்பட்டுப் போனான் அரவிந்தன். ஆனால் முற்றிலும் வேறான நிகழ்ச்சி அங்கே அவனை எதிர்கொண்டது.

திருநெல்வேலியிலிருந்தும், திருச்சியிலிருந்தும் மீனாட்சிசுந்தரத்தின் இரண்டு மாப்பிள்ளைகளும் வந்திருந்தார்கள். மீனாட்சிசுந்தரத்தின் இறுதிச் சடங்குகளுக்கு வந்துவிட்டுச் சென்ற பின்பு இப்போதுதான் அவர்களை மீண்டும் பார்க்கிறான் அரவிந்தன்.

"வாருங்கள்! ஏது இரண்டு மாப்பிள்ளைகளும் கட்சி சேர்ந்து கொண்டு வந்திருக்கிறார் போலிருக்கிறதே?" என்று கலகலப்பாக வரவேற்ற அரவிந்தன், பதிலுக்கு அவர்களிடம் கலகலப்பைக் காணாமல் மருண்டான். உட்புறம் கதவருகில் திருமதி மீனாட்சிசுந்தரம் தென்பட்டாள்.

"என்னம்மா? கூப்பிட்டனுப்பினீர்களாமே" என்று அந்த பெரியம்மாவிடம் கேட்டான் அரவிந்தன். அந்த அம்மாள் முகத்திலும் வழக்கமாக இருக்கும் ஏதோ ஓர் ஒளி குறைந்திருக்கிறதாகப்பட்டது அவனுக்கு. உடனடியாக அந்த அம்மாளும் அவனுக்குப் பதில் சொல்லத் தயங்கி நின்றாள்.

"இப்போது நீங்கள் எல்லோரும் ஏதோ மனத் துன்பத்தோடு இருக்கிறார் போலத் தோன்றுகிறது. நான் வேண்டுமானால் போய்விட்டு அப்புறம் வருகிறேன்" என்று அரவிந்தன் திரும்பிப் புறப்பட முயன்ற போதுதான் அந்த அம்மாளிடமிருந்து பேச்சுப் பிறந்தது. "இல்லை! உட்காரு தம்பி! உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும். அதற்காகத்தான் கூப்பிட்டனுப்பினேன்."

அரவிந்தன் உட்கார்ந்தான். அந்த அம்மாள் தொடங்கினாள்.

"மாப்பிள்ளை இரண்டு பேரும் வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். 'பிரஸ்' நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு புதிதாக என்னென்னவோ மாறுதல் எல்லாம் செய்து வியாபாரத்தைப் பெரிதாய் வளர்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பெரிதாக முதலீடு செய்து இன்னும் புது மெஷின்கள் எல்லாம் வாங்கிப் பிரஸ்ஸை விரிவாக்க இந்த ஊரிலேயே தெரிந்தவர்கள் யாரோ பணம் புரட்டித் தருவதற்கு இணங்கியிருக்கிறார்களாம்." அந்த அம்மாள் தயங்கித் தயங்கி ஒருவிதமாகக் கூறி முடித்தாள். அதுவரை பேசாமலே இருந்த இரண்டு மாப்பிள்ளைகளில் மூத்த மாப்பிள்ளை அரவிந்தனை நோக்கிச் சிறிது கடுமையாகவே இரைந்தான்.

"யாரோ ஒரு தமிழ்ப் பண்டிதருடைய பொண்ணுக்குத் தேர்தல் விளம்பரம் அடிக்கவும், மனம் போன போக்கில் நீயும் உன் நண்பர்களும் குடியிருக்கவும் அரட்டையடிக்கவும் மாமா பிரஸ் வைத்துக் கொடுத்துவிட்டுப் போகவில்லை உன்னிடம். பிரஸ் ஆகவா இருக்கிறது அது? சந்தை மடமாக அல்லவா ஆக்கியிருக்கிறாய்."

"கொள்ளை போவதற்கு இது ஒன்றும் பிள்ளையில்லாச் சொத்து இல்லை தம்பி" என்று சேர்ந்து கொண்டான் இளைய மாப்பிள்ளை. உட்புறம் திருமதி மீனாட்சிசுந்தரம் தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். அரவிந்தனுக்குக் நெஞ்சம் கொதித்தது. வாய் ஏதேதோ பேசிவிடத் துடித்தது. அந்தப் பெரியம்மாளின் பெருந்தன்மையில் நம்பிக்கை வைத்து ஏதோ கூறுவதற்காக "அம்மா!" என்று அந்தம்மாளை நோக்கிப் பேச வாயெடுத்தான். 'நீ சொல்ல ஒன்றுமில்லை, நான் கேட்கவும் ஒன்றுமில்லை' என்று கூறாமல் கூறுவது போல் விருட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்புறம் போய் மறைந்துவிட்டாள் திருமதி மீனாட்சிசுந்தரம்.

 

மாற்ற முடியாத விதத்தில் யாரோ வேண்டுமென்றே முயன்று அவர்கள் மனங்களில் வஞ்சக வித்துக்களைத் தூவியிருக்க வேண்டுமென்று அரவிந்தன் அனுமானித்துக் கொண்டான். யார் விதைத்த வஞ்சனையென்று அவனுக்குப் புரிந்தது. புரிந்து என்ன செய்ய? பெருந்தன்மை நிறைந்த திருமதி மீனாட்சிசுந்தரம் தான் சொல்ல முயன்றதைக் கேட்கவே தயாரில்லாதபோது செய்ய என்ன இருக்கிறது? முரட்டுத்தனமாகத் தன்னைத் தூக்கியெறிந்த மாப்பிள்ளைகளைப் பதிலுக்கு ஏதாவது பேசியிருக்கலாம் அவன். அப்படியும் பேசவில்லை. உயர்ந்தவர்களைப் புகழவும், இழிந்தவர்களை இகழவும் செய்யாத அவன் நடுநிலை பழகிய நாவுக்கு இறைந்து கூச்சலிடத் தெரியவில்லை. ஏசி வம்புக்கு இழுக்கத் துணிவில்லை. 'இன்னாது அம்மா இவ்வுலகம்' - என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துணிந்து இந்த உலகத்துக்கு முட்டாள் பட்டம் கட்டிவிட்டுப் போன கவிஞன் அகப்பட்டால் அவன் வாயில் பிடி சர்க்கரையைப் போடவேண்டும் போல் இருந்தது. உள்ளேபோய் "இந்தாருங்கள் சாவிக்கொத்து" என்று அந்த அம்மாளின் காலடியில் சாவிக்கொத்தை வைத்து வணங்கிவிட்டு மௌனமாகத் தலைகுனிந்து வெளியேறினான் அரவிந்தன்.

பல ஆண்டுகளுக்கு முன் அநாதைச் சிறுவனாக இரயில் பாதையிலே நடந்து கிராமத்திலிருந்து வெளியேறிய பழைய சம்பவம் இன்று நினைவு வந்தது அவனுக்கு. தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த இந்தச் சரிவை யாரிடமும் வெளியிடவில்லை.

ஒன்றுமே நிகழாததுபோல் பழைய கலகலப்புடன் அன்று மாலையே பூரணியோடும் மங்களேசுவரி அம்மாளோடும் சென்னைக்குப் புறப்பட்டுப்போய் மறுநாள் மாலை சென்ட்ரல் நிலையத்தில் ஹௌரா மெயிலில் அவர்களைக் கல்கத்தாவுக்கு இரயிலேற்றிவிட்டு மதுரை திரும்பினான். பூரணி, முருகானந்தம் எவருக்கும் தன் வாயால் அந்தச் செய்தியைத் தெரியவிடவில்லை அவன்.

 

34

 

கரையா எனது மனக்கல்லும் கரைந்தது

கலந்து கொளற்கு என் கருத்தும் விரைந்து

புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று

பொய்படாக் காதல் ததும்பிமேற் பொங்கிற்று.

                                                                                                                -- இராமலிங்க அடிகள்

 

பூரணியையும் மங்களேசுவரி அம்மாளையும் கல்கத்தா மெயிலில் ஏற்றிவிட்டுச் சென்னையிலிருந்து மதுரை திரும்பிய அரவிந்தன் வாழ்க்கையிலேயே அதுவரை உணர்ந்திருக்க முடியாத வேதனையையும் தனிமையையும் முதல் முதலாக உணர்ந்தான். மீனாட்சி அச்சகத்திலிருந்து தன்னுடைய வாழ்வு பிரியும் என்றோ, பிரிக்கப்படும் என்றோ கனவில் கூட எண்ணியிருக்கவில்லை அவன். எண்ணியிருந்தால் என்ன? எண்ணியிருக்காவிட்டால் என்ன? திடீரென்று கண்ட பயங்கரக் கனவுபோல் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. மீனாட்சிசுந்தரம் உயிரோடிருந்தால் இப்படி நடந்திருக்குமா? கேட்பார் பேச்சைக் கெட்டுக்கொண்டு மனிதர்கள் எவ்வளவுக்கு நன்றி கெட்டவர்களாகவும், நன்மையற்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அந்த அச்சகமும் அதன் பொருள் வளமும் சிறப்படைவதற்கு இரவு - பகல் பாராமல் துன்புற்று உழைத்ததெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து நொந்தான் அரவிந்தன். தகப்பனுக்கு மூத்தபிள்ளை உழைப்பதை விட அதிகமாக உழைத்தானே அவருக்கு? அந்த உழைப்புக்கு உண்மைக்கு செலுத்தப்பட வேண்டிய நன்றியுணர்வெல்லாம் அவரோடு அவரைப் போலவே மாய்ந்துபோய் விட்டனவா? மறக்கப்பட்டு விட்டனவா?

கல்கத்தாவுக்குப் புறப்படுகிற நேரத்தில் பூரணிக்கோ மங்களேசுவரி அம்மாளுக்கோ இந்த நிகழ்ச்சி தெரிந்திருந்தால் பயணத்தைக்கூட நிறுத்தியிருப்பார்கள். அவ்வளவுக்கு வருந்தத்தக்க செய்தி இது. அது தெரிந்து அவர்கள் பயணம் தடைப்பட நேராமல் தன் துயரத்தைத் தன்னோடு மறைத்துக் கொண்டு விட்டதில் அவனுக்கு மகிழ்ச்சியே. திருமதி மீனாட்சிசுந்தரத்தின் காலடியில் அச்சகத்தின் சாவிக்கொத்தை வைத்து வணங்கிவிட்டு வானமே நிழலாய்ப் பூமியே நிலையாய் ஒரு பற்றுக்கோடும் இன்றி அவன் கிளம்பிய பின்புதான் பூரணியோடும் மங்களேசுவரி அம்மாளுடனும் சென்னைக்கு இரயிலேறினான். எவ்வளவோ தன்னடக்கத்தோடு தன் வேதனையை மறைத்துக் கொண்டு அவன் கலகலப்பாகத்தான் இருக்க முயன்றான். ஆயினும் "இன்று உங்கள் முகம் ஏதோ களை குன்றிக் காணப்படுகிறது. உங்களுக்கு உடல் நலமில்லை போல் தோன்றுகிறது. இவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் எங்களை வழியனுப்பச் சென்னை வரை வருவானேன்? நாங்கள் பார்த்துப் போய்க் கொள்ளமாட்டோமா?" என்று இரயிலில் போகும் போது பூரணி அவனைக் கேட்டுவிட்டாள். 'மெய்த் திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திருத் துறந்து ஏகு என்ற போதிலும், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை' போல இராமன் இருந்ததாகப் பள்ளிப் பருவத்தில் கம்பராமாயணம் படித்திருந்தானே, அப்படி இருந்துவிட வேண்டுமென்றுதான் முயன்றான் அரவிந்தன். ஆனால் நுணுக்கமான நோக்குள்ள பூரணி அவன் முகத்தையும் சிரிப்பையும் கடந்து உண்மையைக் கண்டு விட்டாள். அவளைக் கல்கத்தா மெயிலில் ஏற்றியனுப்புகிற வரையில் ஏதேதோ சொல்லி உண்மையை மறைத்துவிட்டு வந்திருந்தான் அவன்.

 

சென்னையிலிருந்து திரும்பிய அன்று காலையில் தன் பெட்டிப் படுக்கை முதலிய பொருள்களை எடுத்துக் கொண்டு வருவதற்காகக் கடைசியாய் அச்சகத்துக்குச் சென்றான். பெட்டி படுக்கைகளையும், வேட்டி துணிமணிகளையும் எடுத்துக் கொண்டு அவன் கிளம்பின போது அவற்றில் சிலவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு பூரணியின் தம்பி திருநாவுக்கரசும் உடன் வெளியேறி விட்டான். விசாரித்ததில், "எனக்கு நேற்றோடு கணக்குத் தீர்த்து வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். இனிமேல் இங்கென்ன வேலை" என்றான் திருநாவுக்கரசு. அச்சகத்திலிருந்து ஒழித்துக் கொண்டு வெளியேறும்போது, கூடியவரை எவருடைய கண்களிலும் படாமல் வெளியேற வேண்டும் என்றுதான் அரவிந்தன் எண்ணியிருந்தான்.

ஆனால் அப்படி முடியவில்லை. அவன் வெளியேறுகிற நேரம் பார்த்தா அவனைத் தேடிக் கொண்டு வசந்தாவும் முருகானந்தமும் அச்சக வாயிலில் காரில் வந்து இறங்க வேண்டும்? முருகானந்தம் புன்னகையோடு கேட்கலானன்.

"என்ன கோலம் இது. எங்காவது வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறாயா அரவிந்தன்? அவர்களை இரயிலேற்றிவிட்டு நீ இன்று திரும்பியிருப்பாயென எதிர்பார்த்துதான் உன்னை இங்கே காண வந்தோம். நீ என்னடா என்றால் மறுபடியும் எங்கோ பயணம் கிளம்பிக் கொண்டிருக்கிறாய்?"

"முருகானந்தம்! இது வெளியூர்ப் பயணம் அல்ல! என்னுடைய வாழ்க்கைப் பயணம்" என்று சொல்லி மெல்லச் சிரித்தான் அரவிந்தன். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று தானே அவனுடைய திருக்குறள் சொல்லுகிறது. ஆனாலும் தான் சிரித்த சிரிப்பு அப்போது முழுமையாக இருந்திருக்க முடியுமென்பதில் அவனுக்கே நம்பிக்கை ஏற்படவில்லை.

"விளங்கும்படியாகச் சொல் அரவிந்தன். எனக்குப் புரியவில்லை" என்றான் முருகானந்தம். அதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியவில்லை அரவிந்தனுக்கு.

"இன்னும் எப்படியப்பா விளக்குவது? பதவுரை, பொழிப்புரை சொல்ல வேண்டுமா என்ன? இந்த மீனாட்சி அச்சகத்தை மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளை இருவரிடமும் ஒப்படைத்தாயிற்று. எனக்கும் இதற்கும் இனியொரு தொடர்பும் இல்லை. எனக்கும் இந்தப் பயல் திருநாவுக்கரசுக்கும் தங்கிக் கொள்ள இடம் தேடிப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். மங்கம்மாள் சத்திரத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு விடுதியிலோ இரண்டு மூன்று நாட்கள் தங்கிக் கொண்டு அப்புறம் வேறு இடம் பார்க்கலாமென நினைக்கிறேன்."

"நன்றி கெட்ட உலகம்" என்று கருவினான் முருகானந்தம். அரவிந்தனுக்கு இப்படி நடக்குமென்று நினைத்துப் பார்க்கவே முருகானந்தத்துக்கு வேதனையாயிருந்தது.

 

"ஒரு சத்திரத்துக்கும் போக வேண்டாம். நம் வீடு எங்கே போயிற்று? மாடியில் எல்லா அறையும் காலிதான். நீங்கள் நம் வீட்டுக்குத்தான் வரவேண்டும். பூரணியக்காவிடமே திருப்பரங்குன்றம் வீட்டை ஒழித்துக் கொண்டு நம் வீட்டோடு வந்துவிடும்படி அம்மா வற்புறுத்திக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு இது மாதிரி ஏற்பட்டு வெளியிடத்தில் போய் நீங்கள் தங்குவதை நாங்கள் பார்த்துக் கொண்டு பேசாமலிருந்தோமென்றால் அம்மா திரும்பி வந்ததும் கோபித்துக் கொள்வாள். கண்டிப்பாக நீங்கள் வேறு இடத்துக்குப் போகக்கூடாது" என்று அரவிந்தனிடமும் திருநாவுக்கரசிடமும் இருந்த பெட்டி படுக்கைகளை வாங்கி காருக்குள் திணிக்கலானாள் வசந்தா. முருகானந்தம் உள்ளம் துடித்துப் பேசினான். "என்ன இருந்தாலும் மற்றவர்களை மன்னிக்கிற பண்பு உனக்கு இத்தனை அதிகமாக இருக்கக்கூடாது அரவிந்தன். உன்னுடைய சாது குணத்தாலும், மன்னிக்கிற சுபாவத்தாலும் பலரைக் கெடுதல் செய்ய துணியும்படி ஆக்கியிருக்கிறாய் நீ. கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி என்று தான் உலகம் கணக்கிடுகிறது. ஒரு தரமாவது கொட்டிக் காண்பிக்க வேண்டுமப்பா நீ."

"மன்னிக்கவும், பதிலுக்குக் கெடுதல் செய்யவும் இது என்ன பெரிய விரோதமா! ஏதோ அந்த அம்மாள் கூப்பிட்டு அனுப்பினார்கள். மாப்பிள்ளைகள் அச்சகத்தை எடுத்துக் கொண்டு புதிய முதலீட்டுடன் பெரிய அளவில் என்னென்னவெல்லாமோ விரிவாகச் செய்யப் போகிறார்களென்றும் கூறினார்கள். 'நன்றாகச் செய்யட்டும் எனக்கும் மகிழ்ச்சிதான்' என்று சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன், அவ்வளவுதான்."

"அப்படிச் சாதாரணமாக இருக்க முடியாது அரவிந்தன். யாரோ பின்னால் நின்று கொண்டு திட்டமிட்டுக் கெடுதல் செய்திருக்கிறார்கள். நீ என்னிடம் மறைக்கிறாய்! ஆனாலும் என்னால் இந்தச் சூழ்ச்சி நாடகத்துக்குக் காரணம் யார் என்று அறிந்து சொல்ல முடியும். இன்று மாலைக்குள் கண்டுபிடித்துச் சொல்லவில்லையானால் என் பெயர் முருகானந்தம் இல்லை. நீ என்னவோ ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை போல் சிரித்துப் பேசினாலும் மனம் வேதனைப்படுகிறது என்று உன் முகம் காட்டுகிறதே அப்பா."

"அதெல்லாம் ஒன்றுமில்லை முருகானந்தம்! இந்த விநாடியோடு நீ இதை மறந்துவிடுவதுதான் நல்லது" என்று அமைதியாகக் கூறி முருகானந்தத்தைச் சமாதானப்படுத்தினான் அரவிந்தன். அவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் வசந்தாவும் முருகானந்தமும் வற்புறுத்தி தானப்ப முதலித் தெரு வீட்டுக்கே அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

"ஆனாலும் நீ கெட்டிக்காரன் தானப்பா. இவ்வளவு பெரிய காரியம் நடந்தும் அன்று அவர்களோடு சென்னை புறப்படும்போது கூட என்னிடமோ அவர்களிடமோ ஒரு வார்த்தை சொல்லவில்லையே நீ" என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றபின் மறுபடியும் அரவிந்தனைக் கடிந்து கொண்டான் முருகானந்தம். "தம்பி! கவலைப்படாதே! வேறு ஓர் அச்சகத்தில் உனக்கு வேலை தேடித்தருவது என் பொறுப்பு. ஒரு வேலையுமே கிடைக்கவில்லையானால் என்னுடைய தையல் கடைக்கு வந்துவிடு. தொழில்களில் எதுவுமே குறைவுடையதில்லை. தொழிலையும் சொல்லிக் கொடுத்து மீனாட்சி அச்சகத்தில் கொடுத்ததை விடப் பத்து ரூபாய் கூடவே சம்பளம் தருகிறேன் நான்" என்று பூரணியின் தம்பி திருநாவுக்கரசை முதுகில் தட்டிக் கொடுத்து முருகானந்தம் உற்சாகப்படுத்தினான். தனக்கு வேண்டியவர்கள் சோர்வடைந்து கிடப்பதை ஒரு கணமும் பொறுக்காதவன் அவன்.

மங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியில் வசதியான அறை ஒன்றில் அரவிந்தனைத் தங்கச் செய்திருந்தாள் வசந்தா. குளியலறையும் இணைந்த வசதியான இடம் அது. "கூச்சமோ தயக்கமோ இல்லாமல் இங்கேயே பழகலாம். இது உங்களுக்கு புது இடம் இல்லை அண்ணா. உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ள வேண்டும். இங்கேயே மாடியில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன" என்றாள் வசந்தா. மரியாதையோடும் அன்புடனும் அரவிந்தனுக்கு ஓடியாடி உபசாரங்கள் செய்தாள் அவள்.

"எனக்காக நீங்கள் எல்லோரும் அதிகமான சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள். இதற்கு நான் எப்படி நன்றி செலுத்தப் போகிறேனோ? நிம்மதியாக எங்கள் கிராமத்துப் பக்கம் போய் பத்து பன்னிரண்டு நாட்கள் சுற்றிவிட்டு வரலாமென நினைக்கிறேன்" என்று முருகானந்தத்தையும் வசந்தாவையும் நோக்கி அரவிந்தன் கூறினான்.

"அதெல்லாம் எங்கும் போகக்கூடாது. உங்களுக்கு இப்போது ஓய்வு தேவை. பல வகையிலும் மன வேதனைப்பட்டுப் போயிருக்கிறீர்கள். அக்கா கல்கத்தாவிலிருந்து திரும்புகிறவரை எங்கும் நகரக் கூடாது" என்று இருவருமே அவனைத் தடுத்துவிட்டார்கள். காப்பி, சிற்றுண்டி, உணவு என்று வேளை தவறாமல் வாராது வந்த விருந்தாளியைப் போற்றி உபசரிப்பது போல் அரவிந்தனைக் கவனித்துக் கொண்டாள் வசந்தா.

அன்று தையற்கடையைப் பூட்டிக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்த போது முருகானந்தம் அரவிந்தனுக்கு அந்தச் செய்தியைச் சொன்னான்.

"நான் விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டுவிட்டேன் அரவிந்தன். எல்லாம் பர்மாக்காரர் செய்த வினைதானப்பா. திருச்சியிலும் திருநெல்வேலியிலும் மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளைகள் வேலை பார்த்த கம்பெனிகளின் முதலாளிகள் பர்மாக்காரருக்கு வேண்டியவர்கள்; அவரே முயன்று தகவல் கூறி அவர்களை அங்கிருந்து நீக்கச் செய்ததுடன் மாமனாரின் அச்சகத்தை எடுத்து நடத்தலாம் என்று யோசனையும் கூறி வேறோர் ஆள் மூலம் முதலீடு செய்வதற்கு நிறைய பண உதவியும் அளித்திருக்கிறாராம். அசுர வேலைகள் செய்கிறார் அப்பா அவர். அவருடைய ஆட்கள் நாம் எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் என்று ஒவ்வொரு வினாடியும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களாமே. நீ கல்கத்தா மெயிலில் அவர்களை ஏற்றிவிடப் போனது, திரும்பியது, அச்சகத்திலிருந்து எல்லாவற்றையும் ஒழித்துக் கொண்டு இங்கே வந்தது எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்களே அவர் ஆட்கள்! இந்த அசுர சாமர்த்தியம் தான் இன்றைய அரசியலில் வெற்றி பெறும் கருவி அரவிந்தன். நீ என்னவோ நேர்மையையும் உண்மையையும் முதலாக வைத்துத் தேர்தலில் வெற்றியை எதிர்பார்க்கிறாய். இந்தக் காலத்தில் பிழை செய்யத் தெரிந்தவனுக்குத் தான் பிழைக்கத் தெரிகிறதப்பா" என்று முருகானந்தம் வந்து கூறிய போது 'பர்மாக்காரர்தான் இதை செய்திருக்க வேண்டும்' என முன்பே, தான் புரிந்து கொண்டிருந்த கருத்து அரவிந்தன் மனத்தில் இப்போது தெளிவாக உறுதியாயிற்று. அதை இன்னும் உறுதிப்படுத்துவது போல் அன்றிரவு பத்து மணிக்கு மேல் அந்த வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

தனக்கு விடப்பட்டிருந்த மாடியறையில் உட்கார்ந்து தன் மனத்தின் வேதனைகளையும் எண்ணங்களையும், பித்தன் போல் டைரியில் கிறுக்கிக் கொண்டிருந்தான் அரவிந்தன். மணி பத்தேகால் ஆகியிருந்தது. கீழ் வீட்டில் எல்லோரும் உறங்கிப் போயிருந்தார்கள். இரவு விளக்கு நீல ஒளி பரப்பிக் கொண்டிருந்தது. கீழ் வீட்டில் அந்த நேரத்தில் டெலிபோன் மணி அடித்தது. கீழே யாராவது விழித்துக் கொண்டு எடுத்துப் பேசுவார்கள் என்று அரவிந்தன் சிறிது நேரம் சும்மாயிருந்தான். கீழே எல்லோரும் ஆழ்ந்து தூங்கிப் போயிருந்ததனால் யாருமே டெலிபோனை எடுக்கவில்லை. மணியடிக்கிற ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் மாடியிலிருந்து இறங்கிப் போய் டெலிபோனை எடுத்தான். 'யாருக்கு ஃபோன்' வந்திருக்கிறதென்று தெரிந்து கொண்டு அப்புறம் உரியவர்களை எழுப்பிப் பேசச் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டே அதை எடுத்த அரவிந்தன், 'மிஸ்டர் அரவிந்தன் இருக்கிறாரா?' என்று தன் பெயரே டெலிபோனில் விசாரிக்கப்படுவது கேட்டுத் திகைத்தான். ஒரு கணம் தயங்கிவிட்டு, "ஏன்? அரவிந்தன் தான் பேசுகிறேன். நீங்கள் யார்?" என்று அவன் பதிலுக்கு விசாரித்த போது, "இதோ கொஞ்சம் இருங்கள்" என்று எதிர்பக்கம் ஃபோன் யாரிடமோ மாற்றிக் கொடுக்கப்பட்டது. அடுத்த வினாடி, பர்மாக்காரரின் கடுமையான கட்டைக்குரல் அவன் செவிகளில் நாராசமாக ஒலித்தது. "நான் தான் பேசுகிறேன் தம்பி. குரலிலிருந்தே உனக்குப் புரியுமென்று நினைக்கிறேன். இந்த நிமிஷம் கூட எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது. இப்போதும் குடி முழுகி விடவில்லை. கடைசியாக உன்னை கேட்கிறேன். தேர்தல் அபேட்சை மனுவை வாபஸ் வாங்க இன்னும் ஒரு வாரம் தவணை இருக்கிறது. நீ மட்டும் அந்தப் பெண்ணை வாபஸ் வாங்கச் செய்வதாயிருந்தால், மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளைகள் அச்சக நிர்வாகத்தை மறுபடியும் உன்னை அழைத்து ஒப்படைத்துவிட்டுப் போவார்கள். இன்னும் உனக்கு என்னென்ன வேணுமோ, அத்தனையும் நான் செய்து தரத் தயாராயிருக்கிறேன். அபேட்சை மனுவைத் திரும்பப் பெற அந்தப் பெண் கல்கத்தாவிலிருந்து வந்து போவதற்குத் தனி விமானம் (ஸ்பெஷல் ப்ளேன்) என்னுடைய செலவில் ஏற்பாடு செய்கிறேன். தயவு செய்து..."

 

"தயவு செய்வதற்கில்லை. முடியாது" என்று சுருக்கமாகக் கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைத்தான் அரவிந்தன். தனது பதிலைக் கேட்டு பர்மாக்காரரின் புலி முகம் எவ்வளவு கொடிய மாற்றம் அடைந்திருக்கும் என்று கற்பனை செய்துகொண்டே மாடிப்படியேறித் தன் அறைக்குச் சென்றான் அரவிந்தன். 'நான் பூரணிக்காக விளம்பரங்கள் செய்வதை நிறுத்தியாயிற்று. ஆடம்பரமான கூட்டங்களையும், ஆதரவு திரட்டும் ஏற்பாடுகளையும் நிறுத்திவிட்டேன். பர்மாக்காரர் விளம்பரங்களுக்கும், ஆதரவு திரட்டும் ஏற்பாடுகளுக்கும் ஆயிரமாயிரமாகச் செலவழிக்கிறார். அப்படியிருந்தும் அவர் ஏன் என்னைக் கெஞ்சுகிறார்? ஏன் என்னைக் கண்டுப் பயப்படுகிறார்? பயமுறுத்துகிறார்? உண்மையின் ஒளியைக் கண்டு பொய்க்கு ஏற்படும் பயமா இது?' என்று எண்ணி வியந்தான் அவன். பூரணிக்காக முருகானந்தம் தொகுதியின் எல்லா இடங்களிலும் நம்பிக்கை வாய்ந்த மனிதர்கள் மூலம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பது அரவிந்தனுக்குத் தெரியாது. இரண்டு மூன்று நாட்கள் வெளியே செல்வதற்குக் கூசிக் கொண்டு மங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியிலேயே படிப்பதிலும் எழுதுவதிலும் நேரத்தைக் கழித்தான் அரவிந்தன். பூரணியின் இலங்கைச் சொற்பொழிவுகளை 'டேப்ரிக்கார்டரி'லிருந்து மீண்டும் மீண்டும் வைக்கச் சொல்லிக் கேட்டான். அந்தக் குரல் அவன் உள்ளத்தை குழப்பங்களிலிருந்து விடுவித்து சாந்தியளித்தது. பேராசிரியர் அழகியசிற்றம்பலத்தின் நூல்களை உள்ளம் தோய்ந்து திரும்பத் திரும்பப் படித்தான். சோர்வு தோன்றிய போதெல்லாம் பூரணியின் முகத்தையும் சிரிப்பையும் நினைத்துக் கொண்டான். ஆழ்ந்த கருத்துக்கள் ஒலிக்கும் அமுதக் குரலைக் கேட்டு மகிழ்ந்தான். இலங்கையில் சைவ மங்கையர் கழகத்தில் பூரணி பேசியிருந்த ஒரு பேச்சு மிக அற்புதமாயிருந்தது. டேப்ரிக்கார்டரில் அந்தப் பேச்சை வைத்துக் கேட்கும் போதெல்லாம் அரவிந்தனுக்குக் கண்களில் ஈரம் கசிந்தது. உணர்ச்சிமயமான உயிரோட்டமுள்ள சிறந்த சொற்பொழிவு அது. 'திருவாரூர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டு பரவை நாச்சியார் காதல் கொண்ட' பகுதியைப் பற்றிய பெரிய புராணப் பேச்சு. அந்தப் பேச்சின்போது பரவை நாச்சியாருக்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் ஏற்பட்ட தெய்வீகக் காதலுக்கு விளக்கமாகக் 'கரையா எனது மனக்கல்லும் கரைந்தது' என்று இராமலிங்க அடிகள் வள்ளலார் பாடலைத் தேனொழுகப் பாடுகிறாள். 'பொய்படாக் காதல் தும்பி மேற்பொங்கிற்று' என்ற கடைசி வரியை அவள் பாடும்போது அவளுடைய உள்ளமே பொங்குவதைக் கேட்கிறான் அரவிந்தன்.

இலங்கையில் அந்தச் சொற்பொழிவின் நடுவே இந்தப் பகுதியைப் பேசும்போது பூரணிக்குத் தன்னைப் பற்றிய நினைவு வந்திருக்க வேண்டுமென்று அரவிந்தனுக்குச் சந்தேகமற விளங்கிற்று. எத்தனை முறை கேட்டும் இந்தப் பேச்சு அரவிந்தனுக்கு அலுக்கவில்லை. 'பொய்படா காதல் ததும்பி மேற்பொங்கிற்று' என்று அந்தப் பாடலில் இறுதி வரியை அவள் மேற்கோளாகப் பாடிக் கூவும் போது நெஞ்சைப் பிழிந்து அன்பாய் நெகிழவிட்டு அவனையே கூவியழைக்கிற மாதிரி இருந்தது. திரும்பத் திரும்ப அந்தப் பகுதியைக் கேட்டு அவளுடைய இலங்கைச் சொற்பொழிவுகள் அரவிந்தனுக்கு மனப்பாடமே ஆகிவிட்டன. அவற்றின் கருத்தையும் கம்பீரத்தையும் உணர்ந்த போது அவள் தன்னைக் கீழே தள்ளிவிட்டு தொடர முடியாத உயரத்துக்குப் போய்விட்டதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. அவளுடைய பேச்சுக்களில் மிகவும் கவனம் கரைந்து பொய்படாக் காதல் ததும்பி மேற்பொங்கிய சமயத்தில் அரவிந்தன் தன் டைரியை எடுத்துக் கீழ்க்கண்டபடி எழுதினான்.

"பூரணி! நீ குறிஞ்சிப் பூவைப் போலச் சூடிக்கொள்ள முடியாத உயரத்தில் எட்ட இயலாத அருமையோடு பூத்திருக்கிறாய். தரையில் பூக்கும் எல்லாப் பூக்களையும் போல் அல்லாமல், மானிடக் கைகளால் எட்டிப் பறிக்க முடியாத மலைச்சிகரத்தில் எப்போதும் பறிக்க முடியாத கால அருமையோடு அலர்ந்திருப்பவள் நீ. குறிஞ்சிப்பூ மதிப்பதற்கும் வியப்பதற்கும் உரியது! சூடிக்கொள்ள முடியுமா! உயரத்தில் பூத்திருப்பதைக் கீழிருப்பவன் எட்டிப் பறிக்கலாமா? பறிக்க முடியுமா?"

பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தா போய்ச் சேர்ந்த தினத்தன்று நலமாக வந்து சேர்ந்த விவரத்தை அறிவிப்பதற்காக அங்கிருந்து டெலிபோனில் பேசினார்கள். டெலிபோன் வந்த போது அரவிந்தன் அருகில்தான் இருந்தான். வசந்தா பேசினாள். "உங்கள் செய்தி பற்றிச் சொல்லவா அண்ணா? நீங்கள் பேசுங்களேன்" என்று வசந்தா வேண்டிக் கொண்டபோது அரவிந்தன் மறுத்துவிட்டான். "இங்கு நடந்திருப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்லிப் போன இடத்தில் வீண் மனக்குழப்பத்தோடு இருக்கும்படி செய்து விடாதே. 'எல்லோரும் நலம்' என்று சொல்லி டெலிபோனை வைத்துவிடு, நான் ஒன்றும் பேசவேண்டாம்" என்றான் அவன்.

பூரணியின் தம்பி திருநாவுக்கரசுக்கு வேறு இடங்களில் சரியான வேலை கிடைக்காததனால் முருகானந்தம் தன் தையற்கடையிலேயே அவனை வைத்துக் கொண்டுவிட்டான். நாலைந்து நாட்களில் அரவிந்தனும் மனம் தேறி வெளியே நடமாடத் தொடங்கியிருந்தான். பொதுத் தொண்டுகளில் பழைய ஆர்வத்தோடும் துடிதுடிப்போடும் ஈடுபட்டு வேதனைகளை மறக்கலானான் அவன். மணி நகரத்திலிருந்த ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவிச் சங்கத்திலிருந்து திருமணம் செய்ய பணமில்லாமல் வயது வந்த பெண்களை வைத்துக் கொண்டு திண்டாடும் பல ஏழைப் பெற்றோருக்கு உதவி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தான். பஸ் நிலையத்துக்குப் பக்கத்திலும் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வழியிலும் உள்ள நடைபாதைவாசிகளாகிய அநாதைகளுக்கு விடிவு உண்டாக ஏதாவது நல்ல காரியம் செய்ய முடியுமா என்று நண்பர்களைக் கலந்து ஆலோசனை செய்தான். 'நாகரிகப் பெண்களும், குழந்தைகளும் பிச்சையெடுக்க வருகிற இழிநிலையைப் போக்க உடனே ஏதாவது வழி செய்தாக வேண்டும்' என்று முனிசிபல் கவுன்சிலராகிய தன் நண்பர் ஒருவரைக் கொண்டு நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தான். பொன்னகரத்து உழைப்பாளி மக்களின் சிறுவர்களுக்கு மாலை நேரங்களில் இலவசத் திருக்குறள் வகுப்புகள் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவனுக்கு இருந்தது. அரவிந்தனுக்கே தெரியாமல் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததனால் முருகானந்தம் அவனுடன் அதிகம் அலைய முடியாமல் இருந்தது. "எங்கே அலைகிறாய் முருகானந்தம்? ஆளையே பார்க்க முடியவில்லையே?" என்று அரவிந்தன் கேட்டதற்குத் தையல் கடையைப் பெரிதாக்கி விரிவு செய்யும் காரியங்களுக்காக அலைவதாகப் பொய் சொல்லி வைத்திருந்தான் முருகானந்தம். எப்பாடு பட்டாவது தேர்தலில் பர்மாக்காரரின் ஆளுக்குத் தோல்வியும் பூரணிக்கு வெற்றியும் கிடைக்கச் செய்துவிட வேண்டுமென்ற வைராக்கிய வெறியுடன் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தான் அவன். பொய்யின் முகத்தில் கரி பூசிவிட வேண்டுமென்று அவன் சபதம் செய்து கொண்டிருந்தான்.

கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாம் நாளோ நாலாம் நாளோ, பூரணி அங்கிருந்து விமானத் தபாலில் அரவிந்தன் அச்சக முகவரிக்கு ஒரு விரிவான கடிதம் எழுதியிருந்தாள். அச்சக ஊழியன் அந்தக் கடிதத்தை முருகானந்தத்திடம் தையல் கடையில் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான். அன்று அரவிந்தன் தன்னுடைய கிராமத்துக்குப் போயிருந்ததனால் மறுநாள் மாலை அவன் திரும்பிய பின்பே பூரணியின் கடிதத்தை முருகானந்தம் அவனிடம் சேர்க்க முடிந்தது.

கடிதத்தின் உறையைப் பிரித்ததும், உள்ளே கம்மென்று சண்பகப்பூ மணம் எழுந்து பரவியது. ஆறேழு பக்கம், எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்த கடித மடிப்பின் நடுவே இருந்து உலர்ந்து பாடமாகிப் படிந்த சண்பகப் பூக்கள் இரண்டும் உதிர்ந்தன. பூரணியே தலைநிறையச் சண்பகப் பூ வைத்துக் கொண்டு மணக்க மணக்க பக்கத்தில் வந்து நிற்பது போல் அரவிந்தனுக்கு அப்போது ஒரு பிரமை உண்டாயிற்று. வாடி ஒட்டிச் சப்பட்டையாய்ச் செப்புத் தகடு போல் படிந்திருந்த அந்தப் பூக்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சட்டைப் பையில் போட்டுக் கொண்டபின் கடிதத்தைப் படிக்கலானான்.

அன்பிற்கினியவருக்கு,

பூரணியின் வணக்கங்கள். இப்படி ஒரு பெரிய கடிதத்தை இலங்கைக்குப் போயிருந்த போதே உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அங்கு ஓய்வே இல்லாமற் போய்விட்டதனால் அதற்கு வாய்க்கவில்லை. இப்போது இங்கே வாய்க்கிறது. மனத்தில் நிறைந்திருக்கும் உற்சாகமான அனுபவங்களையும் புதுமைகளையும் இந்தக் கடிதத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்தக் கடிதத்தின் உறையைப் பிரித்தவுடன் உங்களுக்குப் பிரியமான சண்பக மணத்தை நுகர்ந்திருப்பீர்கள். நேற்று இங்கே ஒரு கூட்டத்தில் அபூர்வமானச் சண்பகப் பூமாலை போட்டார்கள் எனக்கு. அப்பப்பா...! என்ன மணம்! என்ன மணம்! அந்த மாலையை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடிவந்து உங்கள் மேசையில் வைத்து நுகர்ந்து பார்க்கச் சொல்லி மகிழவேண்டும் போல் ஆசையிருந்தது எனக்கு. இரண்டு முழுப்பூக்களை மாலையிலிருந்து எடுத்து இந்தக் கடிதத்தில் வைத்து எழுதி முழு மாலையையும் வைக்க முடியாத குறையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறேன். பேலூர் இராமகிருஷ்ணா மடத்தின் வடபுறம் ஹுக்ளியாற்றின் கரையில் பசும்புல் தரையில் அமர்ந்து கொண்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் அருகில் மங்களேசுவரி அம்மாள் உட்கார்ந்து தம் மக்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பார்வைக்கு எட்டின தொலைவு வரை ஹுக்ளியின் அக்கரையில் தட்சிணேசுவரத்துக் காளி கோயிலும் அப்பால் எல்லையற்ற கல்கத்தா நகரமும் மங்கிய ஓவியம் போல் தெரிகின்றன. கல்கத்தாவைப் போல் இத்தனை பெரிய நகரத்தை இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு அழகான நகரம்.

தனியாக அரவிந்தன் மாடியறையில் உட்கார்ந்து கடிதத்தின் இந்த இடத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கீழேயிருந்து வசந்தாவின் குரல் அவனை அழைத்தது.

"அண்ணா! உங்களை யாரோ டெலிபோனில் கூப்பிடுகிறார்கள்."

அரவிந்தன் கடிதத்தை மடித்துப் பையில் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்தான். தனியாய் மேசையில் எடுத்து வைத்திருந்த டெலிபோனைக் கையில் எடுத்தான்.

"கடைசித் தடவையாகக் கேட்கிறேன். வாபஸ் வாங்க நாளைக்கு ஒரே நாள் தான் மீதமிருக்கிறது. மரியாதையாக வாபஸ் வாங்கச் செய்! என்னை மிகவும் பொல்லாதவன் ஆக்காதே. நான் கெட்ட கோபக்காரன்" என்று பர்மாக்காரரின் குரல் சீறியது. பதில் சொல்லாமல் ஓசை எழும்படி 'ணங்'கென்று டெலிபோனை வைத்தான் அரவிந்தன். அவன் முகம் சிவந்தது. பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்தா, "என்ன அண்ணா, யார் அது? ஏதாவது நியூஸென்ஸா?" என்று வினவினாள்.

"இல்லை வேறு ஒரு வம்பு" என்று ஏதோ சொல்லி மழுப்பினான் அரவிந்தன். அப்போது வெளியிலிருந்து முருகானந்தமும் வந்து சேர்ந்தான். "கொஞ்சம் மாடிக்கு வா அரவிந்தன்! உன்னிடம் தனியாக ஒன்று சொல்லவேண்டும்" என்று முருகானந்தம் வந்ததும் வராததுமாகக் கூறியது அரவிந்தனின் கலக்கத்தை அதிகமாக்கியது.

 

35

 

ஊண் பழித்து உள்ளம் புகுந்து - என்

உணர்வு அது ஆய ஒருத்தன்

                                                                     -- மாணிக்கவாசகர்

 

அரவிந்தனிடம் தனியாகப் பேச வேண்டுமென்று அவனை மாடிக்கு அழைத்துக் கொண்டு போன முருகானந்தம் கூறலானான்: "இப்போது நான் சொல்லப் போகிற இந்தச் செய்தியில் நீ அவ்வளவு அக்கறை காட்டமாட்டாய் என்பது எனக்குத் தெரியும், அரவிந்தன். ஆனாலும் உன்னிடம் சொல்லி எச்சரிக்கை செய்துவிட வேண்டியது என் கடமை. உனக்காக இல்லாவிட்டாலும் பூரணியக்காவுக்கும் எங்களுக்கும் வேண்டியாவது இதில் நீ கவனமாக இருந்துதான் ஆகவேண்டும்."

"செய்தியைச் சொல் அப்பா! என்னவோ அடிப்படை பலமாகப் போடுகிறாயே?"

"வேறொன்றுமில்லை அரவிந்தன். தேர்தல் முடிகிறவரை நேரமில்லாத நேரங்களில் தனியாக ஒண்டியாக நீ வெளியே அதிகம் நடமாட வேண்டாம். காலம் சரியில்லை. நம்மை எதிர்த்துப் போட்டியிடுகிற மனிதர்களும் சரியில்லை. கெட்ட எண்ணங்களோடு மதம் பிடித்து அலைகிறார்கள்."

இதைக் கேட்டதும் முருகானந்தத்தின் முகத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு மெல்லச் சிரித்தான் அரவிந்தன்.

"சிரிப்பதற்கு இது வேடிக்கை இல்லை. என் காதுக்குப் பல விதமான செய்திகள் வருகின்றன. எல்லாவற்றையும் கேள்விப்பட்டுத் தெரிந்து கொண்ட பின்புதான் உன்னைக் கவனமாக இருக்கச் சொல்லி எச்சரிக்கிறேன். இது விளையாட்டுக் காரியமில்லை" என்று சிறிது கண்டிப்புக் கலந்த குரலில் கூறினான் முருகானந்தம். அரவிந்தன் இதற்கு மறுமொழி கூறவில்லை.

பர்மாக்காரர் தொலைபேசி மூலம் இரண்டு முறை தன்னை அழைத்து மிரட்டியதையும் முருகானந்தத்திடம் சொல்லி விடலாமா என்று நினைத்தான் அரவிந்தன். அதை அவனிடம் தெரிவிப்பதனால் அவனுக்கு ஆத்திரம் உண்டாகி ஏதாவது வீண் வம்பு இழுத்துக் கொண்டு வருவான் என்று தோன்றியதால் சொல்லாமல் இருப்பதே நல்லதென்று அடக்கிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் முருகானந்தம் வெளியே சென்றதும் பாதி படிக்காமலே பைக்குள் வைத்திருந்த பூரணியின் கடிதத்தை எடுத்து மீண்டும் தொடர்ந்து படிக்கத் தொடங்கினான். வெப்பம் மிகுந்த சூழலில் குளிர்ந்த சுனை நீரில் மூழ்கினாற் போல் முருகானந்தத்தின் எச்சரிக்கையும், பர்மாக்காரரின் மிரட்டலும் குழப்பியிருந்த மனத்தைப் பூரணியின் கடிதம் மறுபடியும் இங்கிதக் கனவுகளிலே மூழ்கச் செய்தது. தான் கண்டு மகிழ்ந்த கல்கத்தா நகரத்தையும், தன் உள்ளத்து உணர்வுகளையும் ஓவியமாக்கி வரைந்தனுப்பினாற் போல் அந்தக் கடிதத்தையும் எழுதியிருந்தாள் அவள். அந்தக் கடிதத்தில் சண்பகம் மட்டும் மணக்கவில்லை. கருத்தும் மணந்தது, கருத்தோடு கலந்த உணர்வும் மணந்தது.

 

"பாரதத்தின் தலைசிறந்த கவிஞரையும் நாவலாசிரியரையும் ஆத்ம ஞானியையும் வீரரையும் அளித்த வங்கநாட்டு மண்ணில் அமர்ந்து உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்பதை நினைக்கும்போது எனக்குச் சொல்லரிய பெருமிதம் உண்டாகிறது அரவிந்தன். தாகூரின் கவிதைகளிலுள்ள ஆழ்ந்த சோகமயமான அழகைக் காணும்போது, சரத்சந்திரரின் நாவல்களில் காணும் உயிருணர்வு ததும்பும் பாத்திரங்களையும், கிராமச் சூழ்நிலைகளையும் படிக்கும்போது மானசீகமாக வங்க நாட்டுக்கு வந்ததுண்டு. பலமுறை இராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோரின் உள்ளொளி வெள்ளத்தில் திளைத்தபோதும், சுபாஷ்சந்திரரின் வீர வாழ்வை எண்ணி எண்ணி வியந்தபோதும் வங்கநாட்டுப் பொங்குபுகழ்ச் சிறப்புக்காக மெய்சிலிர்த்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் உள்ளத்தால் நூல்களின் உலகத்தில் சுற்றிப் பார்த்த கனவுப் பயணங்கள். இந்த வங்க பூமியின் வளம் நிறைந்த இடங்களில் சுற்றிப் பார்க்கும் போது இப்போதெல்லாம் இதன் அழகை நன்றாக உணர முடிகிறது! நன்றாகக் காண முடிகிறது!

அரவிந்தன்! இங்கு வந்த சில நாட்களாக இந்த இராமகிருஷ்ண மடத்துச் சூழலும், பல நாட்டுப் பிரதிநிதிகளாக மகாநாட்டுக்கு வந்திருப்பவர்களிடம் பழகுவதும் சேர்ந்து என் மனதுக்கு மிக உயர்ந்த பூரிப்பை அளிக்கின்றன. நான் உயர்ந்ததாக எதை அடைந்தாலும் அதில் உங்களுக்குப் பங்கு வேண்டும் என்பீர்கள் நீங்கள். அந்தப் பங்கை உங்களுக்குக் குறைவின்றி அளித்து விடுவதற்காகத்தான் இப்படி வளர்த்து நீட்டி எழுதிக் கொண்டே போகிறேன். கல்கத்தாவுக்கு நீங்களும் எங்களோடு வந்திருந்தால் எனக்கு எத்தனையோ மகிழ்ச்சியாயிருந்திருக்கும். உங்களுக்குத்தான் அச்சக நிர்வாகம், என் தேர்தல் வேலைகள், ஏழைப் பெண்கள் திருமண நிதி என்று ஊரிலிருந்து நகர முடியாமல் வேலைகள் சுமந்து கிடக்கின்றனவே!

வங்காளத்தில் நாட்டுப்புறத்துக் கிராமங்களைக் காணும்போது எதையும் உள்ளடக்கிக்கொண்டு நிறைந்திருக்கும் பெரிய மௌனம் தொடர்ந்த அமைதி தென்படுகிறது. நீர் நிறைந்த அல்லிக் குட்டைகள், பசுமைத் தவழும் வயல்வெளிகள், அடர்ந்த மரக் கூட்டங்கள், மாடிபோல் மேலே எடுத்துக் கட்டிய கூரைக் குடிசைகள், இவைதான் வங்கத்தின் கிராமங்கள். இந்தக் கிராமங்களில் தான் வங்காளத்து வாழ்வின் உயிர்த்துடிப்பைக் கண்டு மகிழ்ந்தேன் நான். தமிழ்நாட்டின் வாழ்வில் இருப்பது போல் ஒரு பழமையான பண்பாட்டின் சாயல் வங்காளிகளின் வாழ்க்கையிலும் இருப்பதைக் காண்கிறேன். 'வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்' என்று நம்முடைய பாரதியார் பாடியிருக்கிற பாட்டின் அழகை இங்கு கண்டுகளிக்கிறேன். மூலத்தார் வேட்டியும் முழுக்கை ஜிப்பாவுமாக வீரநடை நடக்கும் வங்கத்து ஆண்களையும், காதுகளில் பொன் வளையங்கள் அசைந்தாட நெற்றிக்கு மேல் கூந்தல் வகிட்டில் பளிச்சென்று மின்னும் குங்குமத் திலகத்துடன், எளிய புடவைகளையும் அரிய அழகுடன் அணிந்திருக்கும் வங்கத்துப் பெண்களையும் காணும்போது முழுமையான குடிமக்களுக்குரிய இயல்புகள் தோன்றுகின்றன. இங்குள்ள சகோதரிகளின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் பெருமைப்படத்தக்க ஓருணர்வு உண்டாகிறது எனக்கு.

நேற்று மாலை நானும் மங்களேசுவரி அம்மாளும் மாநாட்டுக்கு வந்திருந்த வேறு சில பிரதிநிதிகளும் கல்கத்தா நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்தோம் அரவிந்தன்! நீங்கள் உடன் வரவில்லையானாலும் இந்தப் பெரிய நகரத்தைச் சுற்றிப் பார்க்கும்போது, என் மனம் நிறையக் கண்கள் நிறைய நீங்களும் இருந்தீர்கள், பார்த்தீர்கள், உணர்ந்தீர்கள், வியந்தீர்கள்!

கல்கத்தாவை ஹுக்ளி ஆறு இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது. ஹுக்ளிக்கு இப்பால்தான் ஹௌரா, இராமகிருஷ்ணா மடம் உள்ள பேலூர் எல்லாம் இருக்கின்றன. ஹௌராவையும், கல்கத்தாவையும் இணைக்கும் பெரிய பாலத்தைப் பார்க்கும்போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது எனக்கு. தட்சிணேசுவரத்துக்குக் காளி கோயிலுக்குப் போயிருந்தோம். அந்தக் கோயிலில் முன்பு இராமகிருஷ்ண பரமஹம்சர் பூசாரியாக இருந்தபோது எந்த அறையில் தங்கி வசித்து வந்தாரோ அதே அறையில் இன்றும் அவர் வாழ்ந்தபோது உபயோகித்த புனிதப் பொருள் எல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தட்சிணேசுவரத்துக் காளி கோயிலின் முன்னால் ஹுக்ளிக் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. கோயில் பூசை நேரம் தவிர எஞ்சியபோதெல்லாம் பரமஹம்சர் இந்த ஆல மரத்தடியில் அமர்ந்து தான் ஆன்மீகச் சிந்தனைகளில் ஈடுபட்டிருப்பாராம். அவர் வாழ்ந்த அறையிலும் சிந்தித்த ஆலமரத்தடியிலும் நின்றபோது எம்மனத்தின் ஆழத்தில் வார்த்தைகளின் பொருள் எல்லைக்குள் அடக்கிச் சொல்ல முடியாத ஒரு தாகம், ஒரு தவிப்பு, மிகப்பெரிதாக, மிகச்சிறந்ததாக, மிக நல்லனவாக இந்த நாட்டுக்கு என்னென்னவோ செய்ய வேண்டும்போல் உண்டாயிற்று. மனதுக்குள் பூத்துச் சொரியும் நறுமண் மலர்களைப் போல் விரைவாகப் பேசிய பெரிய நினைவுகள் மலர்ந்தன. நினைவு தெரிந்த நாளிலிருந்து பலமுறை நான் உணர்ந்திருக்கும் இந்தத் தவிப்பைக் கொடைக்கானலில் தங்கியிருந்தபோது உங்களிடம் கூடச் சொல்லி விளக்க முயன்றதாக எனக்கு நினைவிருக்கிறது. முழுமையாகச் சொல்லி விளக்க என்னாலேயே முடியாத இந்த உணர்வு அண்மையில் சிறிது காலமாக அடிக்கடி உண்டாயிற்று எனக்கு.

நாங்கள் இங்கு வந்து சேர்ந்ததும், முதல்நாள் மகாநாட்டில் எனக்கு விந்தையான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. நான் மேடையில் பேசிவிட்டுக் கீழே இறங்கி என் இடத்தில் வந்து அமர்ந்ததும், மகாநாட்டுக்கென்று விசேடப் பிரதிநிதியாகச் சீனாவிலிருந்து வந்திருந்த சீனப்பெண்மணி ஒருத்தி என்முன் வந்து நின்று கொண்டு, "கண்களை இமைக்காமல் இப்படியே சிறிதுநேரம் உங்கள் முகத்தைக் காண்பிக்க வேண்டும்" என்று ஆங்கிலத்தில் வேண்டிக் கொண்டாள். நான் அந்த வேண்டுகோளின் பொருள் புரியாமல் மருண்டேன்.

 

"ஏன், எதற்காக?" என்று அருகில் இருந்த மங்களேசுவரி அம்மாள் அந்தப் பெண்மணியைக் கேட்டார்கள். "இந்த முகத்தையும் இதன் அகன்ற நெடுங்கண்களையும் காணும் போது அளவற்றதொரு தெய்வீக மகிழ்ச்சி என் உள்ளத்தில் ஏற்படுகிறது. இந்த முகத்தையும் விழிகளையும் காணும்போது விண்டுரைக்க மாட்டாததொரு தெய்வீகப் புனித உணர்வு பெறுகிறேன். இந்தப் பெண் பேசியபோது இவள் முகத்தையே தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆயினும் என்னுடைய பார்க்கும் தாகம் இன்னும் அடங்கவில்லை" என்று உருக்கமான குரலில் பதில் கூறினாள் அவள். எனக்கு ஒரே வெட்கமாகப் போயிற்று. அந்தச் சீனப் பெண்மணி என்னை அப்படியே உட்காரச் சொல்லிப் படம் பிடித்துக் கொண்டாள். 'தென்னிந்தியாவின் தெய்வீக அழகு (தி டிவைன் பியூட்டி ஆப் சவுத் இண்டியா) என்ற பொருள்படும் ஆங்கிலச் சொற்றொடரைச் சொல்லி அப்பெயருடன் தங்கள் நாட்டுப் பத்திரிகைகளில் என் படத்தை வெளியிடப் போவதாகக் கூறினாள். இங்கு நடைபெற்ற கிழக்கு ஆசியப் பெண்கள் மகாநாட்டில் முக்கால் மணி நேரம் ஆங்கிலத்தில் பேசினேன். என்னுடைய பேச்சு சிறப்பாகவும் புதுமையாகவும் இருந்ததென்று நம் மங்களேசுவரி அம்மாள் உட்பட எல்லோரும் சொல்கிறார்கள்.

'ஆண்கள் நிகழ்காலத்துக்காக மட்டும் வாழ்கிறார்கள். பெண்களாகிய நாம் அப்படி அல்ல. நம்முடைய ஒரு தலைமுறையைச் சேர்ந்த வாழ்வு பல தலைமுறைக்கு மணமும் பண்பும் நல்கிக் கொண்டே தொடரவேண்டிய வாழ்வாக இருக்கிறது. பெண்கள் நாற்றங்காலைப் போன்றவர்கள். பின்னால் விரிவான நிலத்தில் பெரிதாக வளர்ந்து விளையாட வேண்டிய பயிர்கள் முதலில் நாற்றங்காலில்தான் தோன்றுகின்றன. பூத்திருக்கும் இடத்திலிருந்து நெடுந்தொலைவுக்குத் தன் மணத்தைப் பரப்புகிற மனோரஞ்சிதப் பூவைப்போல் தாய்மை என்ற நிலையில் இல்லத்துக்கு அரசியாக இருந்து கொண்டே எல்லா காலத்துக்கும் மணம் பரப்புகிற சிறப்பும் பெண்களுக்கு உண்டு' என்று இப்படிப் பல கருத்துக்களைச் சொன்னேன். மறுநாள் இங்குள்ள பிரபல அமிர்தபசார், ஸ்டேட்ஸ்மென் ஆகிய இதழ்களில் ஆசியப் பெண்கள் மாநாடு பற்றி எழுதியிருந்த தலையங்கங்கள் என்னுடைய பேச்சை முக்கியமாக எடுத்துக் காட்டியிருந்தன. அதைப் பார்த்ததும் மங்களேசுவரி அம்மாளுக்கு பெருமை தாங்கவில்லை. 'இந்தப் பேச்சாற்றலாலும் இந்தக் கண்களாலும் நீ உலகத்தையே வென்று வாகை சூடி வாழப் போகிறாயடி பெண்ணே' என்று என்னை வாய் நிறையப் புகழ்கிறார்கள் அந்த அம்மாள். அப்போது நான் யாரை நினைத்துக் கொண்டேன் தெரியுமா, அரவிந்தன்! அப்பாவை நினைத்து மெய் சிலிர்த்தேன். 'உலகத்து வீதிகளில் பண்பாட்டுப் பெருமையை முழக்கமிட வேண்டும்...' என்று நீங்கள் கூறியிருப்பதை நினைத்தேன்.

இங்கே ராஷ்பிகாரி அவென்யூ என்ற பகுதியிலும் ஹௌராவிலும் தமிழர்கள் நிறைய வசிக்கிறார்கள். இன்று இரவு அந்தத் தமிழ் அன்பர்களின் சங்கங்கள் சிலவற்றில் என்னைப் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள். நாளைக் காலையில் இங்கிருந்து காரிலேயே புறப்பட்டுக் கவி தாகூரின் சாந்தி நிகேதனம் இருக்கும் கிராமத்துக்குப் போய்விட்டு வரத் திட்டமிட்டிருக்கிறோம். வேறு நாட்டுப் பிரதிநிதிகள் சிலரும் எங்களோடு சாந்திநிகேதனுக்கு வருகிறார்கள்.

 

இப்போது தமிழ் அன்பர்களின் கூட்டத்துக்குப் புறப்பட நேரமாகிக் கொண்டிருப்பதால் இந்தக் கடிதத்தை இவ்வளவில் முடித்துத் தபாலில் சேர்க்கிறேன். சாந்தி நிகேதனத்திலிருந்து திரும்பியதும் ஊருக்குப் புறப்படுகிறோம். 'ஊருக்கு ஒன்றும் அவசரமில்லை, இவ்வளவு தூரம் வந்தது வந்தாயிற்று, காசிக்கும் போய்விட்டு ஊர் திரும்பலாமே' என்று மங்களேசுவரி அம்மாள் கூறுகிறார்கள். அப்படிப் போவதாயிருந்தால் சாந்தி நிகேதனத்திலிருந்து திரும்பியதும் உங்களுக்கு மறுபடியும் ஒரு கடிதம் எழுதுவேன். தேர்தல் எப்படி ஆனாலும் சரி, நீங்கள் கண்டபடி அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். முருகானந்தம், வசந்தா எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள். செல்லம், எம் தம்பிகள், தங்கை எல்லோருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்.

        உங்கள் அன்பிற்கினிய பூரணி.

ஆர்வமும் அன்புப் பெருக்கும் போட்டியிடக் கடிதத்தை இன்னும் இரண்டு முறை படித்தான் அரவிந்தன். நவில் தொறும் நூல் நயம் போல் படிக்கப் படிக்கப் புதிய நயங்கள் நல்கிற்று அந்தக் கடிதம்.

அன்று இரவு உணவின் போது வசந்தா, பூரணியின் கடிதத்தைப் பற்றி அரவிந்தனிடம் விசாரித்தாள். அரவிந்தன் பதில் கூறினான். "பூரணியும் உன் அம்மாவும் காசிக்குப் போய்விட்டுத்தான் திரும்புவார்கள் போலிருக்கிறது."

"அம்மா எனக்கு எழுதிய கடிதத்தில் கூட அப்படித்தான் எழுதியிருந்தாள் அண்ணா. கேட்டவர்களெல்லாம் அக்காவின் பேச்சைக் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகளெல்லாம் அக்காவின் சொற்பொழிவுகளைப் பற்றித் தலையங்கங்கள் எழுதியிருக்கின்றனவாம்."

அரவிந்தன் இரவு உணவாகிய சிற்றுண்டியை முடித்துக் கொண்டு எழுந்திருந்தபோது வசந்தா இன்னொரு நல்ல செய்தியையும் தெரிவித்தாள். "அண்ணா, உங்களிடம் சொல்வதற்கே மறந்து போய்விட்டேனே. முந்தா நாள் இலங்கை வானொலியிலிருந்து கடிதம் வந்தது. இன்றிரவு எட்டரை மணிக்குத் தேசிய ஒலிபரப்பில் அக்காவிடமிருந்து சிறப்புப் பேச்சாக பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கும் 'இறையுணர்வு' என்ற பேச்சை ஒலி பரப்புகிறார்களாம். நீங்கள் எங்கும் வெளியில் போய்விடாதீர்கள். இப்போது மணி எட்டு. இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கிறது. அக்காவின் பேச்சை நாம் எல்லோரும் கேட்கலாம்."

மாடிக்குப் போய் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு மணி எட்டரை ஆவதற்கிருந்தபோது கீழே இறங்கி வந்து வானொலிப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்தான் அரவிந்தன். அப்போது முருகானந்தத்தைத் தவிர எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். வானொலிப் பெட்டியைச் சுற்றி எல்லோரும் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

பூரணியின் அந்த வானொலிப் பேச்சில் ஒரு பகுதி அரவிந்தனைப் புல்லரிக்கச் செய்தது.

"இறையுணர்வு பெருகப் பெருக உடம்பால் வாழும் வாழ்க்கை அலுத்துப் போகிறது. வெறும் உடம்பு மட்டும் வளர்வதற்கு இறையுணர்வு தேவையில்லை. இரையுணர்வே போதும். பல்லாயிரம் ஆண்டுகளாக மனத்தைக் கோயிலாக்கி நினைவுகளில் தெய்வம் நிலைக்க வாழ்ந்தவர்கள் நிறைந்த சமயம் நம்முடையது. 'ஊண் பழித்து உள்ளம் புகுந்த என் உணர்வு அது ஆய ஒருத்தன்' என்றுதான் நம்முடைய மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். உணர்வுகளாலும் எண்ணங்களாலும்தான் மெய்யாக வாழ்கிறோம். வாடகைக் குடியிருப்பு மாதிரித் தேகம் நமக்குச் சொந்தமில்லாதது. தத்துவக் கண்கொண்டு பார்த்தால் நம்முடைய உடம்பு ஒரு பெரிய புண். தினசரி நீராடும் போது புண்ணைக் கழுவுகிறோம். வியர்வை தான் சீழ். வியர்வையும் அழுக்குமாகக் கற்றாழை நாற்றமும், முடை நாற்றமும் நாறுகிறதே, அதுதான் புண்ணின் நாற்றம். சோறு, கறி, நீர் எல்லாம் உடம்பாகிய புண்ணுக்குச் செலுத்துகிற மருந்துகள். புண்ணைக் கழுவி மருந்திட்டுத் துணியால் கட்டுப்போடுவார்களே, அதுபோல்தான் வேட்டி சட்டை அணிந்து கொள்வது. 'ஊண் பழித்து, உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய...' என்று மாணிக்கவாசகர் பாடியிருப்பதில் இத்தனை தத்துவமும் அடங்கியுள்ளது. கீழைநாட்டுச் சமயங்கள் பக்தி செலுத்துவதற்கு மனம் தான் இடம் என்று கருதியவை. ஆனால் வறுமையும் வாழ்வும் போட்டிகளும் மிகுந்துவிட்ட இந்தக் காலத்தில் இரையுணர்வுதான் எங்கும் நிறைந்திருக்கிறது. இறையுணர்வைக் காணோம். ஒழுக்கம், நாணயம், பண்பு ஆகிய பொதுவாழ்க்கையின் நியாயங்கள் பறிபோகாமற் காக்கும் ஒரே வேலி இறையுணர்வுதான். மனம் வளர்வதற்கு மருந்தும் அதுதான்."

பூரணியின் இந்த வானொலிப் பேச்சு அன்றிரவு அரவிந்தனைப் பெரும் சிந்தனனக்கு ஆளாக்கிற்று. அன்றொரு நாள் கொடைக்கானலில் 'பூரணியை மணந்து கொள்ளுமாறு மங்களேசுவரி அம்மாள் என்னிடம் கூறியபோது நான் எந்தக் கருத்துக்களைச் சொல்லி மறுத்தேனோ அதையே பூரணியும் பேசுகிறாள். ஆனால் 'ஊண் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்' என்று திருவாசகத்தைக் கூறும்போது என்னுடைய மெல்லிய உணர்வுகளையும் இந்தச் சொற்களில் புகழ்கிறாளா? அல்லது குத்திக் காட்டுகிறாளா? எடுத்துக் கொண்ட பொருளுக்காக இந்தத் தத்துவங்களைச் சொல்லி இப்படிப் பேசுகிறாளா?' என்று பலவாறு எண்ணினான் அரவிந்தன். அவளுடைய வானொலிப் பேச்சைக் கேட்ட அன்று மீண்டும் தன் குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் அவளைப் பற்றி சில வரிகளை எழுதினான் அவன். 'பூரணி! நீ என்னோடு சம உயரத்தில் நின்று சிரித்துப் பொன் காட்டும் நிறமும், பூக்காட்டும் விழிகளுமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே, நான் நிற்கிற எல்லை உங்களுக்கு ஒப்பானதில்லை. இன்னும் உயரமானது, உயரமானது என்று கூறுவதுபோல் மேல் எல்லைக்குப் போய் நின்று பேசிவிடுகிறாய் நீ. உயரத்தில் ஏறிச்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். அதுதான் இப்போது என் மனத்தில் மறுபடியும் உறுதிப்படுகிறது. மலை நிலத்தில் பூத்த பூவைத் தரை நிலத்து மனிதன் சூடுவதற்குக் கை எட்டாது போலும்.'

இதைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிய பின்புதான் அன்றிரவு அவனுக்கு உறக்கம் வந்தது. மறுநாள் காலை ஐந்து மணிக்கு முன்பே அவன் எழுந்துவிட்டான். தலைக்கனமும் சளியுமாக உடம்பு வலிப்பது போலிருந்தது. வெந்நீரில் குளித்தால் நல்லது என்று தோன்றியதால் வசந்தா எழுந்திருந்து விட்டாளா என்று பார்க்கக் கீழ் வீட்டுக்குச் சென்றான். கீழ்வீட்டில் யாருமே எழவில்லை. எழுந்த பிறகு வசந்தாவிடம் வெந்நீருக்குச் சொல்லிக் கொள்ளலாமென்று திரும்பிய அரவிந்தன் வெளியிலிருந்து சைக்கிள் மணி ஒலியும் அதையடுத்துச் செய்தித்தாள் ஜன்னல் வழியாக வீசி எறியப்படும் ஒலியும் கேட்டு நின்றான். போய்ச் சன்னல் அருகே விழுந்திருந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். விளக்கைப் போட்டுக் கொண்டு வராந்தாவில் செய்தித்தாளைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். தேர்தல் செய்திகளும் அடிதடி வம்புகளும் மூலைக்கு மூலை நிரம்பியிருந்தன. செய்தித்தாளில் படித்தால் மனம் தூய்மையும் நிம்மதியும் அடைகிறவிதமான செய்தியாக ஒன்றும் தெரியவில்லை. செய்தித்தாளின் நடுப்பக்கத்தில் மனம் அதிர்ந்து கலக்கமுறும்படியான இரண்டு செய்திகளையும் அரவிந்தன் கண்டான். மீனாட்சி அச்சகத்திலிருந்து நடிகர் நடிகையர்களின் கவர்ச்சிகரமான படங்களைத் தாங்கிக் கொண்டு 'சினிமா சுரங்கம்' என்ற பத்திரிகை ஒன்று வெளிவரப் போவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தைக் கண்ணுற்றதும் அரவிந்தன் வேதனையுற்றான். 'பேராசிரியர் அழகியசிற்றம்பலம் அவர்களின் மிக உயர்ந்த நூல்களையெல்லாம் மலிவு விலையில் வெளியிட்ட இடத்திலிருந்தா இப்படி ஒரு பத்திரிகை வெளியாகப் போகிறது? மீனாட்சிசுந்தரம் எவ்வளவு பெரிய மனிதர்? அவர் காலமான பின் இப்படியா ஆகவேண்டும் இந்த அச்சகம்? இதற்கு எல்லாம் நான் அங்கிருப்பது இடையூறாக இருக்குமென்றுதானே என்னைப் பிரித்து வெளியேற்றியிருக்கிறார்கள்? சே! சே! எவ்வளவு கீழ்மைக் குணம் இவர்களுக்கு?' என்று எண்ணிப் புண்பட்டான். 'நான் வருத்தப்பட்டு இனி ஆவதற்கு என்ன இருக்கிறது? வருத்தப்படுவதற்குத்தான் எனக்கு உரிமை ஏது?' என்று நினைத்து அதை மறந்துவிட முயன்று கொண்டே அடுத்த பக்கத்தைப் புரட்டினான் அவன்.

அடுத்த பக்கத்தில் 'விஷக் காய்ச்சலால் கிராமத்தில் பலர் சாவு' என்ற தலைப்பின் கீழ் பிரசுரமாகியிருந்த செய்தி ஒன்றில் அவன் பார்வை பதிந்தது. மதுரை மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்திலுள்ள ஊர் ஒன்றில் அந்தக் கொடுமைக் காய்ச்சல் பரவி ஏழை மனிதர்களைப் பலிகொண்டு தொடர்கிற செய்தி அவனை வாட்டியது. அப்போதே அந்தக் கிராமத்துக்கு ஓடிப் போய்த் தன்னாலான சிறிய உதவிகளையாவது ஏழைகளுக்குச் செய்ய வேண்டுமென்ற துடிப்பு அரவிந்தனுக்குத் தவிர்க்க முடியாமல் உண்டாயிற்று. முருகானந்தமும் வசந்தாவும் எழுந்திருந்த பின் அவர்களிடம் சொல்லிக் கொண்டு போவதென்பது நடக்காது. அவர்கள் இருவருமே அவனைப் போகவிடமாட்டார்கள். தேர்தல் முடிகிற வரை எங்கும் வெளியேற வேண்டாமென்று முருகானந்தம் எச்சரித்திருக்கிறான். எனவே விஷகாய்ச்சல் பரவியிருக்கிற கிராமத்துக்குத் தொண்டனாகச் சென்றுவர வேண்டுமென்ற என் விருப்பத்தை முருகானந்தம் ஒப்புக்கொள்ள மாட்டானே! என்ன செய்யலாம் என்று சிறிது பொழுது தயங்கினான் அரவிந்தன். தயக்கம் தோற்றது. அவன் மனத்தில் எப்போதும் நிரம்பியிருக்கிற எல்லையில்லாக் கருணையுணர்வும் காந்தீயமும் வெற்றி பெற்றன. தான் அங்கே போவதை அவர்கள் தெரிந்து கொள்வதற்காக அந்தச் செய்தியைச் சுற்றிச் சிவப்பு மையால் கோடிட்டு வைத்த பின் ஒரு பையில் இரண்டு மூன்று சட்டை வேட்டிகளை அடைத்துக் கொண்டு தன் பெட்டியிலிருந்து கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் அரவிந்தன். ஐந்தே முக்கால் மணிக்கு மதுரை பஸ் நிலையத்திலிருந்து விஷக்காய்ச்சல் பரவியிருக்கும் அந்தக் கிராமத்துக்குப் போகிற பஸ் ஒன்று உண்டு. அதற்குள் பஸ் நிலையத்தை அடைந்துவிட வேண்டுமென்ற ஆவலுடன் விரைந்தான் அவன். நேரம் போதுமான அளவு இருக்கும்போதே, பஸ் நிலையத்தை அடைந்தான். பஸ்ஸில் இடம் கிடைத்துவிட்டது. புறப்படுவதற்கு சிறிது நேரமும் இருந்தது. ஒருவேளை முருகானந்தம் செய்தித்தாளில் தான் கோடிட்டு வைத்த பகுதியைப் பார்க்காமலோ புரிந்து கொள்ளாமலோ விட்டுவிட்டால் தன்னைப் பற்றி வீண் கவலைப் படக்கூடாது என்பதற்காகச் சட்டைப் பையில் எப்போதோ வாங்கி வைத்திருந்த அஞ்சல் அட்டையில் (போஸ்ட் கார்டு) அவசரமாக விவரம் எழுதி அங்கிருந்த தபால் பெட்டியில் போட்டுவிட்டுப் புறப்பட்டான் அரவிந்தன்.

அரவிந்தன் பஸ் ஏறுவதற்கு முன் தபாலில் இட்ட கடிதம் அன்று பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அதற்கு முன்பே முருகானந்தமும், வசந்தாவும் செய்தித்தாளைப் பார்த்து புரிந்து கொண்டிருந்தார்கள்.

"அடுத்த பஸ்ஸிலேயே நீங்கள் பின் தொடர்ந்து போய்த் திருப்பி அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள். இல்லாவிட்டால் டிரைவர் வந்ததும் காரை எடுத்துக் கொண்டு புறப்படுங்கள். எங்கேயோ விஷக் காய்ச்சல் வந்திருந்தால் இவருக்கென்ன வந்தது?" என்று முருகானந்தத்திடம் கூறினாள் வசந்தா.

"நடக்காது வசந்தா! இந்த மாதிரி பிறருக்கு உதவுகிற காரியங்களில் அரவிந்தன் பிடிவாதக்காரன். யார் தடுத்தாலும் கேட்க மாட்டான்" என்று முருகானந்தம் மறுத்துவிட்டான். மேலும் இந்தச் சமயத்தில் அரவிந்தன் வெளியூரில் இருப்பது நல்லதென்று தோன்றியது முருகானந்தத்திற்கு. தேர்தல் பகைகளும், வம்புகளும் உள்ளூரில் அரவிந்தனை வட்டமிடுகிற சமயத்தில் அவன் யாருக்கும் தெரியாமல் வெளியூர் சென்றிருப்பது ஒருவகையில் நல்லதென்று நினைத்தான், முருகானந்தம். அரவிந்தனுடைய தடைகளுக்கு அஞ்சாமல் தான் தாராளமாகப் பூரணிக்குத் தேர்தல் ஆதரவு தேடும் வேலைகளில் இறங்கவும் வசதியாயிருக்கும் என்று எண்ணினான் அவன். அதனால் அதிக அக்கறை காட்டவில்லை.

தேர்தல் சுறுசுறுப்பிலும், வேலைகளின் வேகத்திலும் நாட்கள் கழிவதே தெரியவில்லை. முருகானந்தம் பம்பரமாய்ச் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். காலையில் ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் இரவு அவன் வீடு திரும்பப் பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிடும். பர்மாக்காரர் போட்டி கடுமையாயிற்று. 'உண்டு இல்லை' என்று அவர் இரண்டிலொன்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அரவிந்தன் கிராமத்துக்குப் புறப்பட்டுப் போன மூன்றாம் நாளே பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தாவிலிருந்து திரும்பிவிட்டார்கள். மங்களேசுவரி அம்மாளுக்கு உடல்நிலை நன்றாயில்லாததால் காசிப்பயணத்தை நிறுத்திவிட்டுக் கல்கத்தாவிலிருந்து நேரே திரும்பிவிட்டார்கள். இருவரும் மதுரை திரும்பியதும், அரவிந்தன் மீனாட்சி அச்சகத்திலிருந்து பிரிந்த செய்தி அவர்கள் இருவருக்கும் தெரிந்தது. பூரணிக்குத் தாங்கிக் கொள்ள முடியாத பேரிடியாய் இருந்தது அந்தச் செய்தி. தான் கல்கத்தா புறப்படும் முன்பே அது நிகழ்ந்திருந்தும் அதைப்பற்றித் தன்னிடம் கூறாமல் மறைத்த அவன் நெஞ்சுரம் அவளை மலைப்படையச் செய்தது. தங்களை வழியனுப்புவதற்காகச் சென்னை வரும்போது இரயிலில் அரவிந்தன் களையில்லாமல் இருப்பது போல் தனக்குத் தோன்றியதை நினைத்துக் கொண்டாள் பூரணி. அவளுக்கு உடனே அரவிந்தனைச் சந்திக்க வேண்டும்போல் இருந்தது. தானே அரவிந்தன் சென்றிருக்கும் அந்தக் கிராமத்துக்குப் புறப்படத் தயார் ஆனாள் அவள். "வேண்டாம் அக்கா? இரண்டு மூன்று நாட்களில் அரவிந்தனே திரும்பிவிடுவான். பார்த்துக் கொண்டு வரவில்லையானால் அப்புறம் அவசியம் அவனை நான் போய்க் கூட்டி வருகிறேன்" என்று பூரணியைத் தடுத்துவிட்டான் முருகானந்தம். ஆனால் அதற்குப் பின் ஒரு வாரம் கழித்தும் அரவிந்தனைப் பற்றித் தகவலேதும் தெரியவில்லை. பூரணியின் மனம் இனம் புரியாக் கவலைகளால் வருந்தலாயிற்று.

 

36

 

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து ஊற்று எழும்

கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து...

 

கிராமத்துக்குச் சென்ற அரவிந்தன் என்ன ஆனான் என்ற விபரமே தெரியாமல் பூரணி, மங்களேசுவரி அம்மாள், வசந்தா எல்லோரும் கவலைப்பட்டு மனம் தவித்துக் கொண்டிருந்த போது, முருகானந்தம் மட்டும் அதைப் பற்றிய நினைவே இல்லாதவன் போல் தேர்தலில் பூரணிக்கு ஆதரவு தேடி அலைந்து கொண்டிருந்தான். அப்படி அவன் அலைவதற்காக வழக்கம் போல் அன்று காலையிலும் அவசரமாக வெளியில் கிளம்பிய போது வசந்தா சீற்றத்தோடு வந்து வழி மறித்துக் கொண்டாள்.

"நீங்கள் செய்வது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா? எதற்கு இப்படி வீட்டு நினைவில்லாமல் அலைந்து திரிகிறீர்கள்? அக்கா இரவிலிருந்து சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார். அறைக்குள்ளேயே அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நீங்கள் அந்தக் கிராமத்துக்குப் போய் அரவிந்தன் அண்ணனை எங்கிருந்தாலும் தேடிக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டு மறுவேலை பாருங்கள். அக்கா அங்கே போகிறேன் என்றாலும் போகவிடாமல் தடுத்துவிட்டு, நீங்களும் போகாமல் இருந்தால் என்ன அர்த்தம்? வீடே களையில்லாமல் போய்விட்டது. பூரணியக்காவின் வாடிய முகத்தைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது எனக்கு. உடனே காரில் அந்தக் கிராமத்துக்குப் போய் அண்ணனைத் தேடிக் கொண்டு வாருங்கள்."

வசந்தா இப்படி விரட்டியதும் வேகமாகத் திரும்பி உள்ளே சென்று மாடிக்குப் போய் பூரணியின் அறையில் பார்த்தான் முருகானந்தம். பூரணி கண்களில் நீர் நெகிழ வாட்டத்தோடு வீற்றிருந்தாள். மங்களேசுவரி அம்மாள் அருகில் உட்கார்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சிரிப்பின்றி கலகலப்பின்றிச் சிறுவர்களும் சிறுமிகளும் வெறும் பொம்மைகள் போல் அந்த அறைக்குள் சூழ்ந்திருந்தார்கள். முருகானந்தத்தைக் கண்டதும் மங்களேசுவரி அம்மாள் எழுந்து அருகில் வந்தாள். "மாப்பிள்ளை, வேறு எவ்வளவு முக்கியமான வேலையிருந்தாலும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் தயவு செய்து அந்தக் கிராமத்துக்குப் போய் அரவிந்தனைக் கூட்டிக்கொண்டு வந்து சேருங்கள். இவள் நேற்றிலிருந்து சாப்பிட மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறாள். 'என்னை விட்டுவிடுங்கள்! நான் திருப்பரங்குன்றம் வீட்டுக்குப் போய்விடுகிறேன்' என்கிறாள். அரவிந்தன் திரும்பி வரவில்லை என்றதும் என்னென்னவோ நினனத்துச் சிறு பிள்ளைபோல் கலங்குகிறாள். இவள் கலங்கினால் வீடே கலங்கிப் போகிறது. தயவு செய்து எனக்காக நீங்கள் உடனே புறப்படுங்கள். இவளுக்குத் தேர்தல் வேண்டாமாம்! வெற்றியும் பதவியும் வேண்டாமாம்! அரவிந்தன் நலமாக இருப்பதை அறிந்து கொண்டால் போதுமாம்."

"அக்கா இவ்வளவு குழந்தைத்தனமாக இருப்பார்கள் என நான் நினைக்கவேயில்லை. அரவிந்தன் பொதுத்தொண்டு செய்யத்தான் போயிருக்கிறான். அங்கே அவனுக்குக் கெடுதல் செய்ய யாரும் இல்லை. தானே சுகமாகத் திரும்பி வருவான்" என்று பூரணியின் செவிகளிலும் கேட்கும்படி இரைந்து மங்களேசுவரி அம்மாளுக்குப் பதில் சொன்னான் முருகானந்தம். மங்களேசுவரி அம்மாளிடம் கூறுவது போல் அவனுக்கும் சேர்த்துப் பதில் கூறிலானாள் பூரணி.

"எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது அம்மா. நான் அமைதி செய்து கொள்ள முயன்றாலும் மனம் கேட்காமல் தானாகவே சஞ்சலப்படுகிறது. அவர் சென்றிருக்கிற கிராமத்துக்கே நானும் போய் அவருடைய பொதுத்தொண்டுக்கு உதவியிருக்கலாம் அல்லவா?"

"நீ எப்படி அங்கெல்லாம் போக முடியும் பூரணி? மலேயாவில் அந்த விழாவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறாயே? இன்னும் சில நாட்களில் புறப்பட வேண்டுமே? நச்சுக்காய்ச்சல் பரவியிருக்கிற கிராமத்துக்குப் போய் அலைந்து ஏதாவது உடம்புக்கு இழுத்துக் கொண்டு விட்டாயானால் பிரயாணம் தடைப்பட்டு நின்று போகுமே அம்மா. நான் சொல்லுகிறபடி கேள். இன்று மாப்பிள்ளையை நம் வீட்டுக் காரில் அனுப்பி அரவிந்தனை அழைத்து வரச் சொல்கிறேன். அவர் மாப்பிள்ளையோடு திரும்பி வரவில்லையானால் அப்புறம் நீயே அங்கு போகலாம்" என்று பூரணியை சமாதானப்படுத்திவிட்டு முருகானந்தத்தைத் துரிதப்படுத்தினாள் மங்களேசுவரி அம்மாள். முருகானந்தம் தேர்தல் வேலைகளுக்காக அன்று சில முக்கியத் தொகுதிகளில் சுற்றுவதாக இருந்தான். அதைக் கைவிட்டு அரவிந்தனை அழைத்து வருவதற்காகக் காரில் புறப்பட்டான்.

சில நாட்கள் கல்கத்தாவிலிருந்து திரும்பியது முதற்கொண்டு பூரணியின் மனத்தில் சொல்லமுடியாத ஊமைத் துயரங்கள் தோன்றித் தவிப்படையச் செய்தன. மழை வருவதற்கு முன் மண்ணிலிருந்து கிளம்பும் ஈரமும் வெப்பமும் இணைந்த புழுக்கத்தைப்போல் தாங்க முடியாத விதத்தில் பெரிதாக எதையோ தாங்கிக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் அருகில் அணுகிக் கொண்டிருக்கிறதோ என அவளுக்கு ஓர் ஐயம் உண்டாயிற்று. நல்ல இருட்டில் எதிரிகள் நிறைந்த இடத்தில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது முதுகுக்குப் பின்னால் ஒவ்வொரு கணமும் யாரோ ஓங்கி அறைய வந்து கொண்டிருப்பது போன்ற பொய்யான ஒரு தோற்றம் உண்டாகுமே, அப்படி ஒரு நடுக்கம் அவளுள் மெய்யாய் வருவது போலவும், வராதது போலவும் தோன்றித் தோன்றி ஊமைத் துன்பமாய் உறுத்திக் கொண்டிருந்தது. இருட்டறையில் தனிமையாய்த் திரிய நேர்ந்த குழந்தைபோல் அவளுக்குத் தனியாக இருக்கும் போதெல்லாம் பெரிதாய் அழவேண்டும் போலிருந்தது. மனத்துக்குள் மௌனமாக அப்படி அழுதழுது ஓர் இனம் புரியாத பேரவல உணர்வு, புறத்திலும் அழத்தூண்டியது. மதுரை திரும்பியதும் ஒவ்வொன்றாய் உற்சாகக் குறைவான அனுபவங்கள் அவளுக்கு ஏற்பட்டதுதான் அதற்குக் காரணமா?

கல்கத்தாவிலிருந்து ஊர் திரும்பியதும் அரவிந்தன், அச்சகத்திலிருந்து சூழ்ச்சியால் நீக்கப்பட்ட விவரம் அவளுக்குத் தெரிந்தது. தனக்குத் தேர்தலில் ஆடம்பரமான ஆதரவு தேடாமல் இருக்கும் போதே எதிர்ப்பாளர்கள் கொடுமையான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அரவிந்தன் மிகப் பொல்லாததும் பயங்கரமாகத் தொற்றக் கூடியதுமான நச்சுக் காய்ச்சல் பரவியிருக்கும் கிராமத்துக்குத் தொண்டு செய்ய ஓடியிருப்பதும் திரும்பிய பின்பே அவளுக்குத் தெரிந்தது. எல்லாவற்றையும் நினைக்க நினைக்க 'பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்' மனிதர்களிடம் சிறுமை சிறிது சிறிதாக விளங்கலாயிற்று அவளுக்கு. அவளும் அவளுடைய அரவிந்தனும் மனிதர்களின் கீழ்மையிலிருந்து விலகி உயரத்தில் ஏறிச்செல்ல இணையாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் உலகத்தின் கீழ்மைகள் இருவரையும் பாதிக்கின்றன. நிலத்துக்கு எட்டாதவனாய் எங்கள் நினைவுகளை ஏன் இப்படிக் குறிஞ்சியாகப் பூக்கச் செய்கிறாய் இறைவா! கமலாவையும் காமுவையும் போல் வாழும் ஆசையையாவது எனக்குத் தந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியது அவள் உள்ளம். 'அரவிந்தன் அருகில் இருக்கும் போது மறந்துவிடுகிற உடம்பின் நினைவு அவன் அருகில் இல்லாதபோது ஏன் இந்த உள்ளத்தை இப்படிப் பிழிகிறது?' என்று தன் உள்ளமே தானறியாத முரண்பாடுகள் நிறைந்ததாயிருப்பதை எண்ணி வாடினாள் அவள். அவளுக்கே புரியாத மன வேதனைகள் அவளை நிம்மதி இழக்கச் செய்திருந்தன. மௌனமாகத் தனியே இருந்து நெடுநேரம் நன்றாக அழவேண்டும் போல் வருத்தமாயிருந்தது அவளுக்கு.

அன்று இரவு முருகானந்தம் அரவிந்தனோடு கிராமத்திலிருந்து காரில் திரும்பி வீடு வந்தபோது பதினோரு மணிக்கு மேலிருக்கும். வாயிலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு, மாடியில் உறங்காமல் விழித்திருந்த பூரணிதான் ஓடிவந்து ஆவலோடு கதவைத் திறந்தாள். அங்கே கண்ட காட்சி அவளுடைய ஆவலை அவலமாக மாற்றிற்று. அரவிந்தன் அரவிந்தனாகத் திரும்பி வரவில்லை. உலகத்துத் துன்பங்களைப் போக்கும் முயற்சியில் அந்தத் துன்பங்களை எல்லாம் தன் நெஞ்சில் நினைவுகளாகச் சுமந்து கொண்ட புத்தனைப் போல் எந்த விஷக்காய்ச்சலிலிருந்து கிராமத்து மக்களை விடுவிப்பதற்காகத் தொண்டு செய்ய அவன் சென்றிருந்தானோ, அதே காய்ச்சலை உடல் நிறைய ஏற்றுக் கொண்டு வந்திருந்தான். எலும்பும் தோலுமாய் இளைத்துக் கறுத்துப் போயிருந்தது அரவிந்தனின் அழகு மேனி. சிரித்துக் கொண்டே இருப்பது போல் ஒரு கவர்ச்சிகரமான சாயல் அமைந்த அவனுடைய கண்கள் சோர்ந்து பள்ளமானவை போல் ஆகியிருந்தன. கார் டிரைவரும் முருகானந்தமும் கைத்தாங்கலாக அவனை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார்கள். தளர்ந்து தள்ளாடி நடந்தான் அரவிந்தன்.

"அக்கா உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் கிராமத்துக்குப் போனது நல்லதாயிற்று. வேளைக்குச் சோறு தண்ணீரின்றிக் கிராமத்து வெய்யிலில் இவன் பாட்டுக்கு அலைந்து திரிந்திருக்கிறான். தொண்டு தொண்டு என்று சுற்றி கடைசியில் தன் உடம்புக்கே காய்ச்சலை இழுத்துவிட்டுக் கொண்டுவிட்டான். நமக்காவது ஒரு வரி கடிதம் எழுதிப் போடக்கூடாதோ? அதையும் செய்யாமல் எவனோ ஒரு குடியானவனுடைய குடிசையில் விழுந்து கிடக்கிறான். அந்தக் கிராமத்தில் டாக்டர் கூட இல்லை. பத்து மைலுக்கு அப்பால் பக்கத்துக் கிராமத்திலிருந்து இரண்டு நாளைக்கு ஒரு தடவை ஒரு எல்.எம்.பி. வைத்தியர் வந்து போகிறார். அவன் அவரிடமும் சரியாக மருந்து சாப்பிடவில்லையாம். அவர் இவனைத் தேடிக் கொண்டு வந்தபோதெல்லாம், 'எனக்கு ஒன்றுமில்லை. நான் பிழைத்துக் கொள்வேன். கிராமத்து மக்களை இந்தப் பாழும் தொற்று நோயிலிருந்து காப்பாற்றுங்கள் போதும்' என்று கூறி அவரை அனுப்பிவிட்டானாம். நூற்று மூன்று டிகிரி காய்ச்சலோடு அந்தக் குடிசையின் ஈரம் கசியும் மண் தரையில் முள்ளாய்க் குத்தும் வைக்கோல் மெத்தையின் மேல் அநாதைபோல் விழுந்து கிடந்த இவனைக் கண்டபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது அக்கா. மறுபேச்சு பேசாமல் காரில் தூக்கிப் போட்டு இங்கே கொண்டு வந்தேன்" என்று துயர் கனிந்து தளர்ந்த குரலில் பூரணியிடம் கூறினான் முருகானந்தம்.

அந்தக் கோலத்தில் அரவிந்தனைக் கண்டபோது அப்படியே 'கோ'வென்று வாய்விட்டுக் கதறி அழுதுவிட வேண்டும்போல் துக்கம் பொங்கிற்று பூரணிக்கு. அரவிந்தனை மாடியறையில் கிடத்தினார்கள். பூரணி அவன் தலைப்பக்கமாய்ப் போய் நின்றாள். என்ன விசாரிப்பது என்று அப்போது இருந்த உணர்ச்சிமயமான நேரத்தில் அவளுக்குச் சொற்களே தோன்றவில்லை. கண்களில் நீர் நெகிழ அரவிந்தனை இமையாமல் பார்த்தாள். கண்ணீரில் அவன் உருவம் மங்கிக் கலைகிற வரை பார்த்துக் கொண்டே நின்றாள். அரவிந்தனுடைய கண்களிலும் நீர் திரண்டது. கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதுபோல் தளர்ந்து உள்ளொடுங்கின குரலில், "உன்னுடைய கடிதம் கிடைத்தது. சண்பகப்பூ மணத்தையும் சேர்ந்தே நுகர்ந்தேன். இலங்கை வானொலியில் உன் பேச்சையும் கேட்டேன்" என்றான் அரவிந்தன்.

"அதெல்லாம் இருக்கட்டும்! என் பெருமையை யார் கேட்டார்கள் இப்போது? என்னால்தானே இப்போது இத்தனை காலமாக உரிமையோடு வேலை பார்த்த அச்சகம் உங்களை வெளியேற்றி அனுப்பியிருக்கிறது? என்னால்தானே தேர்தலில் கீழான துன்ப அனுபவங்களை அடைந்தீர்கள்? என்னால் என்ன நன்மை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது? உங்களால் எனக்கு உலகம் புகழுகிற பெருமை கிடைத்திருக்கிறது. என்னால் உங்களுக்கு என்ன கிடைத்தது? என்ன கிடைக்கப் போகிறது?"

பூரணி தன் வாழ்விலேயே அரவிந்தனுக்கு முன் முதல் முறையாகக் கண்ணீர் சிந்தி அழுதாள். சாதாரணப் பெண்ணாகச் சாதாரண ஆசைகளுடன் அப்போதுதான் மாறிப் பிறந்தவள் போல் அழுதாள்.

"இப்படி அசட்டுத்தனமாக அழக்கூடாது பூரணி! நீ அழுவது எனக்குப் பிடிக்காது. இப்போது எதற்காக நீ இப்படி அழுகிறாய்? யாருக்கு என்ன வந்துவிட்டது?"

 

"நீங்கள் இந்த நிலையில் அரை உடம்பாய் வந்திருப்பதைப் பார்த்து அழாமல் என்ன செய்வது? அந்தக் கிராமத்துக்குத் தொண்டு செய்ய நீங்கள் போகவில்லை என்று யார் குறைபட்டுக் கொண்டார்கள்? எப்படி இருந்தவர் எப்படி இளைத்துப் போய்விட்டீர்கள்?"

"'உடம்பு ஒரு பெரிய புண்' என்று நீயே உன்னுடைய இலங்கை வானொலிப் பேச்சில் பேசியிருக்கிறாயே. அரை உடம்பானாலும் பாதிப்புண் ஆறிவிட்டதென்று தானே பொருள்?" என்று அந்தத் தளர்ந்த நிலையிலும் குறும்பாகச் சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான் அரவிந்தன். வந்ததும் வராததுமாக முருகானந்தம் டாக்டர் வீட்டுக்கு ஓடியிருந்தான். பேச்சுக்குரல் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மங்களேசுவரி அம்மாளும், வசந்தாவும் எழுந்திருந்து மாடிக்கு விரைந்து வந்தார்கள். பூரணி, "அம்மா! இவரைப் பார்த்தீங்களா? எப்படி ஆகிவிட்டார்?" என்று துயரம் பொங்க கூறினாள். அவள் குரல் நைந்து அழுவது போலிருந்தது. அரவிந்தன் படுக்கையில் கிடந்த நிலையைக் கண்டதும் மங்களேசுவரி அம்மாளும் வசந்தாவும் அதிர்ச்சியடைந்தார்கள். வசந்தா ஓடிப் போய் 'தர்மாமீட்டரை' எடுத்து வந்தாள். காய்ச்சல் நூற்றிரெண்டு டிகிரிக்கு மேல் இருந்தது. முருகானந்தம் டாக்டரோடு வந்தான். டாக்டர் பார்த்து முடிந்ததும் காய்ச்சல் தணிவதற்கு 'குளோரோ மைஸின்' மாத்திரை கொடுத்துக் கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டுப் போனார். போகும்போது முருகானந்தத்தை தனியே வாயில் வரை அழைத்துச் சென்று அவனிடம் மட்டும் 'டைபாய்டு' மாதிரி தோன்றுகிறது. ஐந்தாறு நாள் சரியான கவனிப்பில்லாமல் வேறு இருந்திருக்கிறார். எதற்கும் நீங்கள் பயப்பட வேண்டாம். ஆனாலும் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைதான். பத்து பதினோரு நாளில் விட்டாலும் விடும். நாற்பது நாள் வரை வதைத்தாலும் வதைக்கும். சனியன் பிடித்த காய்ச்சல் இது. மறுபடியும் நாளைக்கு வந்து பார்க்கிறேன். பெண்களிடம் இதையெல்லாம் இப்போது ஒன்றும் சொல்லிப் பயமுறுத்த வேண்டாம்" என்று கூறிவிட்டுப் போனார் டாக்டர். அதை அறிந்ததும் முருகானந்தத்தின் உள்ளத்தில் கவலை சூழ்ந்தது. எந்த நிலையிலும் மனோதிடத்தை இழக்காத அவனுடைய இறுகிய உள்ளமும் அப்போது அரவிந்தனுக்காக உருகி நெகிழ்ந்தது. கண்கள் கலங்கினான் அவன். நண்பனை இவ்வளவு பெரிய நலிவோடு காண்பது புது அனுபவம் அவனுக்கு. "நீங்கள் இப்படி அசட்டுத் தனம் பண்ணியிருக்கக்கூடாது அரவிந்தன். விஷக் காய்ச்சல் பரவியிருக்கிற கிராமத்துக்குப் போனதே தப்பு. போனதுதான் போனீர்கள், மற்றவர்களுக்குத் தொண்டு செய்ததோடு உங்கள் உடம்பையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாமோ? எப்போது உங்களுக்குக் காய்ச்சல் வந்துவிட்டதோ, உடனே புறப்பட்டு இங்கு வந்திருக்க வேண்டும். எந்த விதமாவது ஆகட்டும் என்று அங்கே இருந்தால் எப்படி?" என்று மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனை கண்டித்துக் கடிந்து கொண்டார்.

அன்றிரவு ஒருவருக்கும் அந்த வீட்டில் உறக்கம் இல்லை. மறுநாள் காலையில் அரவிந்தனுக்குக் காய்ச்சல் குறைந்திருந்தது. இரவு அவன் மட்டும் நன்கு அயர்ந்து உறங்கியிருந்தான். ஆனால் மாலையில் மறுபடியும் காய்ச்சல் நூற்றிரண்டு டிகிரிக்கு ஏறிவிட்டது. டாக்டர் வந்து போய்க் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் காய்ச்சல் இறங்குவதும், மாலையில் மறுபடியும் உச்ச நிலைக்கு ஏறிக் கொள்வதுமாக ஒன்றும் உறுதி சொல்ல முடியாமல் இருந்தது. அந்த வீட்டில் ஒருவர் மனத்திலும் நிம்மதி இல்லை. ஒருவர் முகத்திலும் ஒளி இல்லை. அரவிந்தனுடைய காய்ச்சல் இறங்குகிற நேரத்தில் அவர்கள் கவலையும் சிறிது இறங்கியது. மாலையில் 'டெம்பரேச்சர்' ஏறுகிற போது அவர்கள் கவலையும் ஏறியது. பூரணி அரவிந்தனின் கட்டிலருகிலேயே அமர்ந்து பணிவிடைகள் புரிந்து கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் நீரும் மனத்தில் வருத்தமும் நீங்கிய நேரம் சிறிதும் இல்லை.

பூரணி மலேயாப் பயணத்தைக் கைவிட்டுவிட்டாள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அதைப் பற்றி யாருமே நினைக்கவில்லை. முருகானந்தம் கூடத் தேர்தல் வேலைகளாக அலைவதை நிறுத்திவிட்டான். அரவிந்தன் உடல்நிலை தேறி எழுந்தால் போதும் என்ற ஒன்றுதான் அப்போது அவனுடைய கவலையாயிருந்தது. ஏற்கெனவே தன்னால் தூண்டிவிடப் பெற்று அந்தந்த பகுதியில் தேர்தலுக்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை மட்டும் முருகானந்தம் தடுக்கவில்லை. தானாக நடப்பதைத் தடுப்பானேன் என்று வாளாவிருந்தான். அரவிந்தன் உடல் நலம் பெற வேண்டும் என்று திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலிலும், மதுரை மீனாட்சி கோயிலிலும் பழைய சொக்கநாதர் கோயிலிலும் நாள் தவறாமல் பிரார்த்தனைகளும் அர்ச்சனைகளும் நடத்திக் கொண்டிருந்தாள் மங்களேசுவரி அம்மாள். சின்ன டாக்டர், பெரிய டாக்டர் என்று டாக்டர்கள் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். காய்ச்சல் தணிய என்னென்ன விதமான உயர்ந்த வைத்திய வசதிகள் எல்லாம் உண்டோ அவ்வளவும் அரவிந்தனுக்குச் செய்யப் பெற்றன. ஒவ்வொரு நாளும் காலையில் காய்ச்சல் தணிந்து போய்விட்டது போல் டெம்பரேச்சர் இறங்கும். மாலை மூன்று மணிக்கு மேல் மறுபடியும் பயப்படத்தக்க அளவு ஏறிவிடும். பூரணி அவன் தலைமாட்டிலேயே அமர்ந்து அழுவது நாள் தவறாத நிகழ்ச்சியாகி விட்டது. ஜன்னியில் பிதற்றும் போதெல்லாம் அவன் தன் பெயரைச் சொல்வதைக் கேட்டு அவளுக்கு மெய்சிலிர்க்கும்.

அரவிந்தன் கிழிந்த நாராகத் துவண்டு படுக்கையில் கிடக்கும் இளைத்த நிலையைக் காணக்காண நெக்குருகி நெகிழ்ந்து துடித்தது அவள் உள்ளம். எந்தச் சிரிப்பையும் முகத்தையும் நினைவு வைத்துக் கொண்டால் உலகம் முழுவதும் சுற்றி வாகை சூட முடியும் என்று அவள் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தாளோ அந்த முகத்தில் ஒளியில்லை. நகையில்லை. களையில்லை. காளைபோல் பீடுநடை நடந்தவன் கட்டிலில் துவண்டு கிடந்தான். பொன் போலும் மேனி எலும்பும் தோலும் தெரியப் பொலிவிழந்து காட்சியளித்தது. பகலில் அரவிந்தன் காய்ச்சல் குறைந்து தன் நினைவோடு இருக்கும் போது நா தழுதழுக்க கண்களில் நீரும் நெஞ்சில் உணர்வும் மல்கிக் கரைந்த குரலில், "இப்படி ஆகிவிட்டீர்களே?" என்று பூரணி கேட்கும்போது மெல்லச் சிரிக்க முயன்று கொண்டே, "நீ எதற்காக அழுகிறாய்? அழாதே பூரணி! தேறி எழுந்திருந்து மறுபடியும் பழைய மாதிரி ஆகிவிடுவேன். உன்னோடு மலேயா, பர்மா எல்லா இடத்துக்கும் நானும் இனிமேல் கூட வரலாம். அச்சகத்தையும் விட்டாயிற்று. எனக்கு முழுநேரமும் ஓய்வுதான்" என்று பதில் கூறுவான் அரவிந்தன். அப்போது அவன் கண்கள் தனி ஒளியுடனே மின்னும்.

"நீ பார்த்துக் கொண்டே இரு பூரணி! டாக்டர் கூடச் சொல்லியிருக்கிறார். இம்மாதிரிக் காய்ச்சல் வந்து போகிறபோது உடம்பிலுள்ள கெட்ட இரத்தமெல்லாம் போய் மறுபடி வளர்கிற போது மிக நன்றாக ஆகிவிடுவேனாம். நீதான் 'உடம்பு பெரிய புண்' என்று பேசியிருக்கிறாயே? எனக்கு அந்தப் புண் ஆறிக் கொண்டிருக்கிறது. தலைக்குத் தண்ணீர் வீட்டுக் கொண்டு அடுத்த திங்கள்கிழமை உன்னோடு போட்டி போட்டுத் திருப்பரங்குன்றம் மலையில் ஏறுகிறேனா, இல்லையா என்று பார். மலையேறும் போது பின் தங்கினால் உனக்குக் கோபம் வந்துவிடுமே? நீதான் உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம், நாம் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டும் என்பாயே?"

தன் கட்டிலருகில் உட்கார்ந்து வாடிய முகத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டு கண்கலங்கித் தோற்றமளிக்கும் பூரணிக்குத் தைரியமூட்டி உற்சாகப்படுத்துவதற்காக அடிக்கடி அவ்வாறெல்லாம் சிரித்தபடி சொல்வான் அரவிந்தன். பூரணி மலேயாப் பயணத்தைக் கைவிட்டதைக் கூறியபோது அவன் அவளை கோபித்துக் கொண்டான்.

"எனக்காக நீ உன் பயணத்தை ஏன் நிறுத்த வேண்டும்? இங்கே மனிதர்களே இல்லையா, என்ன? வசந்தாவும் முருகானந்தமும் என்னைப் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? நீ உன் திட்டப்படி மங்களேசுவரி அம்மாளுடன் புறப்பட்டுப் போயிருக்கலாமே?" என்று அவன் கோபித்தபோது பூரணி அவனைக் கடிந்து கொண்டாள்.

"நன்றாயிருக்கிறது உங்கள் பேச்சு. எனக்கு ஒரு இடத்துக்கும் போக வேண்டாம். இப்போது நீங்கள் பிழைத்தெழுந்தால் போதும். உங்களை விட எனக்கு எதுவும் பெரிதில்லை" என்று இதைக் கூறும்போது அவளுடைய அழகிய இதழ்கள் உணர்ச்சிவசப்படத் துடித்தன.

நான்கு வாரங்கள் காலையில் காய்ச்சல் இறங்குவதும், மாலையில் ஏறிவிடுவதுமாக அலைக்கழித்தன. நாற்பதுநாள் அந்த நிலையில் இருக்குமென்று டாக்டர் சொல்லியிருந்தார். இதற்கிடையில் தேர்தல் நாள் வந்து சேர்ந்தது. அவர்கள் யாருமே அதை ஆவலோடு எதிர்பார்க்கவும் இல்லை. வரவேற்கவுமில்லை. தற்செயலாக அரவிந்தன் அன்று சிறிது நலமடைந்து தெம்பாகவே இருந்தான். நண்பர்கள் வந்து முருகானந்தத்தை வற்புறுத்தவே அவன் அன்று காலையில் ஓட்டுச் சாவடிக்குப் போய்ச் சுற்றினான். முருகானந்தம் எதிர்பார்த்த ஆதரவுகள் கூடியிருந்ததே ஒழியக் குறையவில்லை. ஊரிலுள்ள கார்களும் குதிரை வண்டிகளும் பர்மாக்காரருக்காக அலைந்து வாக்காளர்களைத் தேடிக் கொண்டு வந்து ஓட்டுச் சாவடிகளில் சேர்த்துக் கொண்டிருந்தன. ஆனால் அதில் இரகசியம் என்னவென்றால் சில இடங்களில் பர்மாக்காரருடைய காரில் முருகானந்தத்தின் மனிதர்களே சவாரி செய்து ஓட்டுச் சாவடிக்குப் போய் பூரணிக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்கள். புது மண்டபத்து மனிதருக்குப் பர்மாக்காரர் செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்க்கும் போது வெற்றி அவர்களுக்குத்தான் என்பதில் சந்தேகமே இருப்பதாகத் தெரியவில்லை. ஊரிலும் அப்படித்தான் பேசிக் கொண்டார்கள். முருகானந்தம் மட்டும் நம்பிக்கை இழக்காமல் உற்சாகமாகவே இருந்தான். பெரும் போர் நிகழ்ந்து ஓய்ந்த களம் போல தேர்தல் நாள் முடிந்து முடிவுகளை எதிர்பார்க்கும் ஆவல் மட்டும் நகர் முழுவதும் தேங்கி நின்றது. தேர்தலன்று இரவு முருகானந்தம் வீடு திரும்பியபோது அரவிந்தனிடம் தன் நம்பிக்கையைத் தெரிவித்தான். அதைக்கேட்டு அரவிந்தன் நகைத்தான். "பார்க்கலாம் நீ சொல்கிறபடி பூரணிக்கு வெற்றி கிடைப்பதாயிருந்தால் அது மாபெரும் இலட்சிய வெற்றியாக இருக்கும்" என்றான். அரவிந்தனுடைய உடல்நிலை அன்றும் மறுநாளும் காய்ச்சல் ஏறாமல் சுமாராகவே இருந்தது.

மறுநாள் பூரணியை அருகில் உட்காரச் செய்து பிரயாண அனுபவங்களைக் கூறச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தான் அவன். 'டேப் ரிகார்டர்' போடச் சொல்லி அவளுடைய பேச்சுக்களை மீண்டும் அவள் அருகில் இருக்கும் போதே கேட்டு மகிழ்ந்து பாராட்டினான்.

"பொய்படாக் காதல் ததும்பி மேற்பொங்கிற்று என்று முடியுமே. அந்தப் பாட்டை ஒரு தடவை நீயே நேரில் பாடு. உன்னை எதிரில் வைத்துப் பார்த்துக் கொண்டே அந்தப் பாட்டைச் செவிகள் குளிரக் கேட்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது" என்று குழந்தையைப் போல் வேண்டினான். அவள் அவன் விருப்பப்படியே அதைப் பாடினாள். பாடி முடித்துவிட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தபோது அங்கே கண்களில் நீர் தளும்பி நிற்பதைக் கண்டாள்.

"ஏன் அழுகிறீர்கள் இப்படி? சிறு குழந்தையல்லவே நீங்கள்?"

"அழவில்லை; பூரணி! ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறேன். உன் பேச்சும், பாட்டும் என்னைக் குழந்தையாக்கி விடுகின்றன."

"உங்களுக்கு வேறு வேலையென்ன? எதையாவது சொல்லிக் கொண்டிருங்கள்!"

அரவிந்தன் இமையாமல் அவள் முகத்தைப் பார்த்தான். சிரித்தான். பூரணி தலைகுனிந்தாள். "இந்தா! இவைகளைப் படித்துப் பார். என் மனத்திலே உன் பேச்சுக்கள் உண்டாக்கிய மணம் எத்தகையதென்று நீயே புரிந்து கொள்வாய்" என்று தன் குறிப்பு நோட்டுப் புத்தகங்களை எடுத்து அவள் கையில் கொடுத்தான். அவள் நாணத்தோடு வாங்கிக் கொண்டாள். அரவிந்தனின் முகம் ஒருகணம் அற்புதமாக மலர்ந்தது; நகைத்தது. அடுத்த கணம் அவன் பெருமூச்சு விட்டான். கண்களிலும் முகத்திலும் ஏக்கம் நிழலிட்டது. வேதனையோடு கட்டிலில் புரண்டு படுத்தான் அவன்.

இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் மறுபடியும் அவனுடைய காய்ச்சல் அன்று மாலை உச்சநிலைக்குப் போய்விட்டது. டாக்டர், வந்து பார்த்து ஏதோ மருந்தைக் கொடுத்து விட்டுப் போனார். அன்று மாலை பூரணியின் தொகுதியில் பதிவான ஓட்டுக்களை எண்ணி முடிவு சொல்ல வேண்டிய நாளாததால் முருகானந்தம், வசந்தாவையும் வீட்டில் இருந்த செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் முதலியவர்களையும் அழைத்துக் கொண்டு ஓட்டுகள் எண்ணப்படும் இடமாகிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குப் போயிருந்தான். மங்களேசுவரி அம்மாள் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போயிருந்தாள்.

வீட்டில் பூரணி மட்டுமே அரவிந்தன் அருகிலிருந்தாள். காய்ச்சல் கணத்துக்குக் கணம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நூற்று மூன்று டிகிரிக்கு மேலே போய் ஜன்னி கண்டு பிதற்றுகிற நிலையில் சுயப்பிரக்ஞையின்றி இருந்தான் அரவிந்தன். அவளுக்கு மிகவும் பயமாயிருந்தது. அப்போது மாடிக்குக் கீழேயிருந்து மங்களேசுவரியம்மாள், "பூரணி நீ தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டாயாம். ஐயாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் உனக்கு வெற்றியாம்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறிக்கொண்டே படியேறி வரும் ஒலி கேட்டது. அந்த அம்மாள் மலர்ந்த முகத்தோடு மாடியறைக்குள் வந்தாள்.

"அம்மா! தேர்தல் எக்கேடும் கெட்டுப் போகட்டும். டாக்டருக்கு உடனே டெலிபோன் செய்யுங்கள். இங்கே இவருக்கு ஜன்னி கண்டுவிட்டது. பேச்சுமூச்சு இல்லை" என்று வெடித்துப் பொங்கிவரும் அழுகைக்கிடையே அலறினாள் பூரணி.

 

37

 

சொல்லரிய பல துறையும்

துயர பெரிய தமிழ் நாட்டில்

மெல்ல மெல்ல நலம்காண

மேலெழுந்தமிழ்ச் செல்வன்

செல்லரித்த பழமையெல்லாம்

சீர்திருத்த முன் வந்தோன்

புல்லரித்து மனம் வாடப்

போகின்றான் போகின்றான்

 

மதுரை மாவட்ட அதிகாரியின் அலுவலகத்தில் தேர்தல் முடிவு தெரிவிக்கப்பட்ட போது, மாலை மங்கி, இருள் சூழும் நேரம் ஆகியிருந்தது. வானத்தில் முழு நிலவு பால் வண்ணமாய்த் தன் கதிர் பரப்பத் தொடங்கியிருந்தது. அன்று பௌர்ணமி நாள். நல் முடிவைக் கேட்ட மகிழ்ச்சியோடு வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட்ட அலுவலகத்து வாயிலுக்கு வந்து நின்ற முருகானந்தம் அங்கு கூடியிருந்தவர்கள் 'பூரணி தேவி வாழ்க!' என்று விண்ணதிர வாழ்த்தொலி முழங்கியதைக் கேட்டுக் களித்தான். கூடியிருந்த முகங்களிலெல்லாம் நியாயம் வென்றதென்ற பெருமிதப் புன்னகை நிலவியது. கைகளிலெல்லாம் வெற்றி பெற்ற பூரணிக்கு அணிவிக்கக் கொணர்ந்த மாலைகள் மலர்ந்தன. பூரணி அங்கு வரவில்லை என்றதும் அவள் வெற்றியை எதிர்பார்த்துப் பாராட்ட வந்தவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. "வசந்தா! நீ காரில் புறப்படு. முன்னால் போய் நல்ல செய்தியை அக்காவுக்கும் அரவிந்தனுக்கும் அம்மாவுக்கும் சொல். இவர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதைப் பாராட்டி அக்காவுக்கு மாலை அணிவிக்க வந்திருக்கிறார்கள். நான் எல்லோரையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். அக்காவை தயாராக இருக்கச் சொல். இன்றிரவு எல்லோருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்துவிடு. அரவிந்தனுக்குக் கூட காலையில் நாம் வரும்போது காய்ச்சல் குறைந்து தெம்பாக இருந்தது. மாடியறையிலிருந்து நடத்தி வந்து கூடத்தில் அரவிந்தனை உட்காரச் சொல். பின்னாலேயே நாங்களும் வந்து விடுகிறோம்" என்று கூறி வசந்தாவையும் சிறுவர்களையும் முன்னால் வீட்டுக்கு அனுப்பினான் முருகானந்தம். வந்தவர்கள் யாவரும் ஆர்வத்தோடு முருகானந்தத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் வார்டிலிருந்தும் மாலைகளோடு மனிதர்கள் வந்திருந்தார்கள். ஒரு பெரியவர், "ஆச்சரியப்பட வேண்டிய வெற்றியப்பா இது. வெளிப்பகட்டு இல்லாமல், விளம்பரம் இல்லாமல் மனிதர்களின் நம்பிக்கையில் பெற்ற வெற்றி. சத்தியத்துக்கு கிடைத்த வெற்றி. இதை நன்றாகக் கொண்டாட வேண்டும். பால் போல் நிலா காய்கிறது. இரட்டை குதிரைச் சாரட்டில் புஷ்பாலங்காரம் செய்து நான்கு மாசி வீதிகளிலும் அந்தப் பெண்ணை ஊர்வலமாக அழைத்துப் போகவேண்டும். பாண்டு வாத்தியம், இரட்டை மேளம், வாண வேடிக்கை எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்" என்று தணியாத ஆசையோடு முருகானந்தத்துக்கு அருகில் வந்து கூறினார். யாருடைய அன்பையும் புறக்கணிக்க முடியாத நிலையில் இருந்தான் முருகானந்தம். பூரணிக்கோ அரவிந்தனுக்கோ இந்த ஏற்பாடுகள் பிடிக்காதவையாக இருக்குமென்று அவன் உணர்ந்திருந்தாலும் மக்களின் அன்பு வெள்ளம் கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. பூரணியின் வெற்றியே அதற்காக உழைத்துப் பாடுபட்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் சொந்த வெற்றியாகத் தோன்றியது. அதனால் அடக்க முடியாத கோலாகலப் பெருக்கில் என்னென்னவோ ஏற்பாடுகள் செய்தார்கள் அவர்கள். அவர்களை எந்த உற்சாகத்திலிருந்தும் விலக்காமல் தானும் அவர்களோடு ஒருவனாகக் கலந்து கொண்டு விடுவதைத் தவிர முருகானந்தத்தால் வேறெதுவும் அப்போது செய்ய முடியவில்லை. நகர மண்டபத்துக்கருகில் அம்மன் சந்நிதியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுத் தானப்ப முதலித் தெருவுக்குப் போய் அங்கே பூரணியை அழைத்துக் கொண்டு நான்கு மாசி வீதிகளிலும் சுற்றுவது என்று ஏற்பாடு ஆயிற்று. ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடந்தன.

திருமண ஊர்வலங்களுக்கு வழக்கமாகப் போகும் இரட்டை வெண்புரவிச் சாரட்டு மல்லிகைச் சரங்களால் அலங்கரிக்கப் பெற்று அம்மன் சந்நிதி வாயிலில் அழகாய் நின்றது. பாண்டு வாத்தியக் குழுவினரின் உற்சாக முழக்கமும் இரட்டை மேளமும் அற்புதமாய் ஒலித்தன. திருவிழாக் கூட்டம் போல் மக்கள் வெள்ளம் கூடி விட்டது. முருகானந்தம் கையில் ஒரு பெரிய தும்பிக்கை ரோஜா மாலையோடு ஊர்வலத்தின் முன் பகுதியில் நின்றான். அருகில் வேறு பலரும் மாலைகளோடு நின்றார்கள். பூரணியை வாழ்த்தியும், தேர்தல் வெற்றியைப் பாராட்டியும் வாழ்த்தொலிகள் ஒலித்தன. ஊர்வலம் ஒலிவெள்ளமாய் எழில் வெள்ளமாய் மெல்ல மெல்ல நகர்ந்தது. தெற்குக் கோபுர வாயில் வழியாகச் சுற்றி மேலக் கோபுரத் தெருவில் புகுந்து தானப்ப முதலித் தெருவில் திரும்பியது.

அழகாக எடுப்பாக நீண்டு அகன்ற அலங்காரச் சாரட்டை இழுத்துக் கொண்டு கம்பீரமான வெண்புரவிகள் சென்றன. வானத்தில் வாணவேடிக்கை ஒளிக்கோலங்கள் பரப்பியது. மகிழ்ச்சி என்ற பேருணர்வு ஒளி, ஒலி வடிவமாகவே மாறிவிட்டதுபோல் பாண்டு வாத்தியக்குழு, மனமும் நடக்கும் கால்களும் குதூகலத் துள்ளல் பெறத்தக்க அற்புதமானதொரு பண்ணை முழக்கியது. நாயனக்காரர்களும் இசை மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். கூட்டமெங்கும் பூக்களின் மணம், செவிகள் எல்லாம் இசைகளின் ஒலி, வீதியின் இருபுறத்து வீடுகளிலும் ஊர்வலத்தைக் காண முந்தும் மலர்ந்த முகங்கள். மங்களேசுவரி அம்மாளின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது ஊர்வலம். வீட்டு வாயிலை அடைவதற்குச் சிறிது தொலைவே இருந்தது. இதோ வீட்டை அணுகிவிட்டார்கள். ஐயோ! அந்த மகிழ்ச்சியினிடையே இதென்ன குரல்? "நிறுத்துங்கள் நிறுத்துங்கள்" என்று தலைவிரி கோலமாக அழுது கொண்டே ஓடி வந்தாள் வசந்தா. முருகானந்தத்தின் கையிலிருந்த மாலை நழுவியது. மனமும் உடம்பும் நடுங்கின. பாண்டு மேளம், வாழ்த்தொலிகள் எல்லாம் திடீரென்று வீதியே ஊமையாகி விட்டதுபோல் ஒலியவிந்து நின்றன. ஒரே ஒரு விநாடியில் எல்லோரும் எல்லாமும் இயக்கமற்றுப் பொம்மைகளாய் பொலிவிழந்தவர்களாய் அப்படியே கட்டுண்டு நகராமல் நின்றுவிட்டார்கள். முருகானந்தம் அலறிக் கொண்டு வீட்டுக்கு ஓடினான். டாக்டர் களையற்ற முகத்துடன் தலைகுனிந்து வெளியேறிக் கொண்டிருந்தார். கீழே கூடத்தில் செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் ஆகியோர் இரைந்து கதறியழுது கொண்டிருந்தார்கள். மாடியில் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் உரத்த குரலில் உள்ளத்தை வாள் கொண்டு அறுப்பதுபோல் அலறி அழுது கொண்டிருந்தார்கள். வானமும் பூமியும் மற்றெல்லாப் பூதங்களும் இடிந்து சிதைந்து தலைமேல் விழுந்து அமுக்குவது போலிருந்தது முருகானந்தத்துக்கு. மாடியறைக்குப் போய்ப் பார்த்ததும், 'அரவிந்தா' என்று அலறிப் பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு குமுறினான் முருகானந்தம். பூரணி வேரற்ற மரம்போல் தரையில் கிடந்து கதறிக் கொண்டிருந்தாள்.

அந்த அறையில் கட்டிலில் அரவிந்தன் தெய்வமாகியிருந்தான். கண்ணால் பார்த்து, வாயால் பேசி, காலால் நடந்து, மண்ணில் உடம்போடு வாழும் சின்னப் பொய் வாழ்விலிருந்து விடுபட்டுப் போயிருந்தது அந்த அன்புப் பெருமகனின் நல்லுயிர். ஊராரின் துன்பங்களுக்கெல்லாம் விடிவு தேடிய நல்லவன் உடம்பாகிய துன்பத்திலிருந்து விடுதலையடைந்திருந்தான். பூரணி தேர்தலில் சத்தியத்தின் பலத்தால் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்பட்ட கருணை வள்ளல் அந்த வெற்றியின் மகிழ்ச்சியைத் தான் இருந்து நுகராமல் போய்ச் சேர்ந்துவிட்டான்.

"எல்லோர் வாயிலும் மண்ணைப் போட்டுப் போய் விட்டாயே, என் தங்கமே" என்று மங்களேசுவரி அம்மாள் கதறினாள். ஒவ்வொன்றாகப் பழைய நிகழ்ச்சிகளை நினைக்க நினைக்க அணை உடைந்த வெள்ளம் போல் அழுகை பொங்கிற்று பூரணிக்கு. நிராதரவான பேதைபோல் அவள் அலமலந்து அலறினாள்.

"பார்த்துக் கொண்டே இரு! தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டு அடுத்த திங்கள்கிழமை உன்னோடு போட்டி போட்டுத் திருப்பரங்குன்றம் மலையில் ஏறுகிறேன்" என்று சில தினங்களுக்கு முன் அரவிந்தன் தன்னிடம் சிரித்துக் கொண்டே கூறிய சொற்களை இப்போது அவள் எண்ணினாள், உள்ளம் துடித்தது. அப்படியே தன்னுடைய மூச்சும் நின்று போய்விடக் கூடாதோ என்று தவித்தாள் அவள். "சிலப்பதிகாரத்தில் பாண்டியன் இறந்தவுடன் அவன் தேவி தன்னுயிரைக் கொண்டு அவனுயிரைத் தேடுவாள் போல் இறந்தாளென்று இளங்கோ பாடியிருக்கிறாரே! அதே போல் என்னுயிரைக் கொண்டு நான் அரவிந்தன் உயிரினைத் தேட முடியுமா?" என்று நினைந்து நினைந்து அழுதாள்.

வீட்டுக்கு வெளியே மாலைகளோடு காத்திருந்த மனிதர்கள் நிழல்கள் நகர்வது போல் நடந்து மௌனமாக ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்கள். அந்த அறைக்கு வெளியே வந்து கண்கலங்கித் தலைகுனிந்து சோக வடிவங்களாய் நின்றார்கள். அவர்களில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் மெல்ல அறைக்குள் நுழைந்து நா தழுதழுக்க உணர்வு நெகிழ்ந்து துடிக்கும் அவலக் குரலில்,

"இளைஞனே நீ இன்று சாகவில்லை; சாகமாட்டாய். வறுமையும், வாட்டமும் ஏழ்மையும் ஏக்கமும் நிறைந்த இந்தத் தமிழ் மாநிலத்தில் தலைமுறைக்கு ஒரு தரம் நீ பிறப்பாய்; பிறக்க வேண்டும். பிறந்து நல்லனவெல்லாம் செய்ய வேண்டும்" என்று உருக்கமாக நிறுத்தி நிறுத்தி கூறிவிட்டுத் தம் கையிலிருந்த மாலையை அரவிந்தன் உடலில் சூட்டினார். எல்லோருடைய உள்ளத்தையும் உருகச் செய்தன அவர் செய்கையும் சொற்களும். பூரணி அழுகைக் கிடையே நிமிர்ந்து பார்த்தாள். இச்சொற்கள் அவள் மனத்தைப் பிழிந்தெடுத்தன. மாலையணிந்த தோற்றத்தில் உயிரோடும், உணர்வோடும் குறும்புநகை குலவ அரவிந்தன் படுத்திருப்பதுபோல் அவள் கண்களுக்குத் தோன்றியது. திருப்பரங்குன்றத்து மலையில் அவளோடு போட்டி போட்டுக் கொண்டு ஏறப்போவதாகக் கூறின போது இப்படித் தானே சிரித்தான் அவன்! சவமாகக் கிடக்கும் இந்த நிலையிலும் இந்த மாலை அவனுக்கு எத்தனை அழகாக இருக்கிறது? எழுந்து நிற்க முடியாதபடி, கீழே விழுந்துவிட்ட அந்தத் துக்கத்துக்கு நடுவே அவளுக்கு விந்தையானதொரு பேராசை உண்டாயிற்று. மெல்ல எழுந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். அறைக்கு வெளியே நிழல்கள் போல் மௌனமாக நின்று கொண்டிருந்தவர்கள் கைகளில் இருந்து பெரிய பெரிய பூ மாலைகளை ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டு வந்து அரவிந்தனுடைய உடலில் சூட்டி அழகு பார்த்தாள். உயிரோடு வாழும்போதே, 'இப்படி ஒரு மண மாலையை அவனுடைய கழுத்தில் அவள் சூட்டியிருக்க வேண்டும்.' எல்லார் கையிலுமாக எல்லா மாலைகளையும் வாங்கிச் சூட்டிவிட்டு நின்று அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இப்படி நினைத்த போது மீண்டும் கண்களில் நீர் பனித்தது அவளுக்கு. பல நாட்களுக்கு முன் எப்போதோ மங்கையர்கழகத்தில் தான் உள்ளமுருகிப் பேசிய திலகவதியின் பேச்சு இப்போது அவளுக்கு நினைவு வந்தது. திலகவதியைப் போல் மனத்தால் மட்டும் வாழ்ந்து மணம் பரப்பும் வாழ்வுதான் தனக்கும் விதியால் நேரப்பட்டிருக்கிறதென்று அப்போது அவளுக்குத் தெரியாது. 'திலகவதியின் கலிப்பகை சோழ நாட்டுப் போரில் மாண்டான். என்னுடைய அரவிந்தனை வாழ்க்கைப் போரே மாய்த்துவிட்டது' என்று நினைத்த போது மேலும் துயரம் கொதித்தது. அவள் மனத்தில் 'உடலால் செத்துப் போய்க் கொண்டே உள்ளத்தால் வாழ்ந்த திலகவதி போன்ற புனிதப் பெண் தமிழ்நாட்டில்தான் அம்மா பிறக்க முடியும்' என்று தந்தை சொல்லிக் கொடுத்திருந்ததை நினைத்தபோது உடல் புல்லரித்தது அவளுக்கு. 'எனக்கும் திருநாவுக்கரசு என்ற பெயரில் தம்பி இருக்கிறான். உடன்பிறந்த தம்பிகளையும் தங்கைகளையும் காத்து வாழ வைப்பதற்காக நானும் வாழவேண்டும்' என்று அவள் உள்ளத்தில் ஒரு மெல்லிய குரல் ஒலித்தது. சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே திலகவதியார் கதை தன் மனத்தைக் கவர்ந்து உருக்கி வந்திருப்பதைப் படிப்படியாக நினைத்துக் கண் கலங்கினாள். அவள் நெஞ்சை உணர்வுகள் சூழ்ந்து கொண்டு தேள்களாய்க் கொட்டின.

சிறிது நேரத்துக்குப் பின் அவள் கண்களில் மீண்டும் ஒளி தென்பட்டது. அழுகை நின்றது. அரவிந்தனின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். குனிந்த தலை நிமிராமல் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியேறிப் பக்கத்து அறைக்குள் புகுந்தாள். உள்ளே ஏதோ உடைபடுகிற ஓசை கேட்டது.

பின்னும் சிறிதுநேரம் கழித்துப் பக்கத்து அறையிலிருந்து மீண்டும் அவள் வெளியே வந்தபோது நெற்றியில் திலகம் இல்லை. கைகளில் வளையல்கள் இல்லை. செவிகள், மூக்கு, கழுத்து எங்கும் அங்கிருந்த அணிகலன்கள் கழன்று மூளியாகியிருந்தன. அலைகள் அடங்கிய பெண் கடல்போல் மெல்ல வந்து முருகானந்தத்தை நோக்கி "மேலே நடக்க வேண்டியதைச் செய்யுங்கள்" என்று நிதானமாகச் சொன்னாள் பூரணி. அவள் முகத்தில் உலகமெல்லாம் தேடினும் கிடைக்காத சாந்தி நிலவிற்று அப்போது.

 

நடக்க வேண்டியவைகள் நடந்தன. தேர்தல் வெற்றியைக் கொண்டாட வந்த ஊர்வலம், சோக ஊர்வலமாக மயானம் வரை தொடர்ந்தது. அந்த நள்ளிரவின் அமைதியில் முழுநிலா வானத்தின் கீழே வையையின் வடகரையிலே அரவிந்தன் என்னும் பேரெழில் வாழ்க்கை மண்ணில் கலந்து பொய்யாய்ப் போய்விட்டது. நிலவைப் பிடித்துச் சில க்றைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த முகத்துக்குத் திலகம் இல்லாமல் துடைத்துப் போய்விட்டான் அரவிந்தன். தரளம் மிடைத்து ஒளிதவழக் குடைந்து இருபவழமும் பதித்த இதழ்களில் சிரிப்பில்லாமல் செய்துவிட்டுப் போய்விட்டான். உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் உடன் வரும் துணையைப் பூரணி இழந்துவிட்டாள்.

அன்றிரவு எல்லோரும் வீடும் திரும்பும்போது இரண்டு மணிக்கு மேலிருக்கும். அரவிந்தன் இருந்த அறையில் அவனுடைய குறிப்பு நோட்டுப் புத்தகங்களும், அவற்றின் மேல் அவள் இலங்கையிலிருந்து வாங்கி வந்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்த கைக்கடிகாரமும் இருந்தன. அந்த கடிகாரத்தை அவனுடைய கையில் கட்டும் போது 'காலத்தை உங்கள் கையில் கட்டி ஓடவிடுகிறேன்!' என்று அவள் கூறியதற்கு 'நாம் மனிதர்கள், காலத்தின் கையில் கட்டுண்டு ஓடுபவர்கள்' என்று அரவிந்தன் புன்னகையோடு கூறிய பதிலை நினைத்தாள் பூரணி. குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் தன்னைக் குறிஞ்சிப் பூவாக உருவகம் செய்து அவன் எழுதியிருந்த வாக்கியங்களைப் படித்தபோது புனிதமானதொரு உணர்வை அடைந்தாள் அவள். அன்றிலிருந்து அவள் மனமே நினைவுகளின் மயானமாகிவிட்டதோ? அங்கே புதைந்த நினனவுகளின் கழிவிரக்கத்தில் அமிழ்ந்து வாடினாள் அவள். சில வாரங்கள் கழித்துச் செய்தித்தாளில் பூரணி, தான் தேர்தலில் வெற்றி பெற்றடைந்த பதவி தனக்குத் தேவையில்லை என்று விட்டுவிட்டச் செய்தி வெளியாகியிருந்தது. அதை விடுவதற்கு முன் பலர் வேண்டிக் கொண்டிருந்தும் அவள் அரசியல் தனக்குத் தேவையில்லை என்றும் சமூகத்துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தன் வாழ்வை செலவழிக்கப் போவதாகவும் கூறி மறுத்துவிட்டாள். அவள் மறுப்பு ஏனையோரை வியப்பில் ஆழ்த்தியது.

ஈடுசெய்ய முடியாத அந்தப்புண் அவளைச் சிறிது காலம் துன்புறுத்தியது. துக்கத்தில் ஞானம் பிறந்தது. அகக்கண்கள் திறந்தன. வாழ்க்கையின் மெய்யான தத்துவம் புலப்பட்டது. பெண்மையின் பயனை வழிமாற்றிக் கொண்டு மணிமேகலை போல் அறச்செல்வியாக மேலெழுந்தாள் பூரணி. 'வாழ்க்கை அவரவருக்கும் நேர்ந்தபடி வருவது. தாயின் கையிலிருக்கும் தின்பண்டத்துக்கு அவசரப்பட்டு அடித்துக் கொண்டு குழந்தைகள் மாதிரி விதியின் கையிலுள்ள வாழ்வுக்கு நைப்பாசைப்பட்டுப் பயனில்லை' என்று அவள் உணர்ந்து ஆற்றிக் கொள்ள முயன்றாள். வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஞான ஒளிபரப்பும் சொற்பொழிவுகளைச் செய்தாள். பொதுப்பணிகளில் ஈடுபட்டு அலைந்தாள். உலகத்து நாடுகளில் எல்லாம் அறிவு முழக்கமிட்டு வாகை சூடினாள். கைகளில் தீபத்தை ஏந்திக் கொண்டு இருளடைந்த மனிதக் கூட்டத்தின் நடுவே ஒளி சிதறி நடந்து செல்வதாக அவள் அடிக்கடி கண்ட கனவை இப்போது நனவாக்கிக் கொண்டிருந்தாள். பூரணமான ஞானத்தோடும் பூரணமான பயன்களோடும் பூரணி பெரு வாழ்வு வாழ்ந்தாள். தான் வளர்த்து வாழவிட்ட தம்பிகளும் தங்கைகளும் இன்ப வாழ்வு வாழ்வதைக் கண்டுகொண்டே தான் வாழாமல் இழந்து விட்டதை மறக்க முயன்றாள் அவள். மறைக்க முயன்றாள் எனினும் பொருந்தும்.

ஆனால் ஊருக்கெல்லாம் ஞானத்தைப் போதித்தும் அறிவுரை கூறியும் வாழும் தனக்குள் ஏதோ ஓர் ஆறாப்புண் இருந்து வதைப்பதை மட்டும் அவளால் மறக்க இயலவில்லை. திருப்பரங்குன்றத்து மலை ஏறும் போதெல்லாம் அங்கு சாசனம் போல் பூரணி-அரவிந்தன் என்று கல்மேலிட்ட எழுத்துக்கள் தெரிந்து அவளைக் கண்கலங்க வைத்தன. அழகும் தூய்மையும் பண்பும் உள்ள தமிழ் இளைஞர்களை எங்கு கண்டாலும் அரவிந்தனின் நினைவு வந்தது அவளுக்கு. அன்று அந்தப் பெரியவர் கூறியதுபோல், அரவிந்தன் தலைமுறை தோறும் பிறக்க வேண்டுமென்று அவள் உள்ளத்தில் ஓர் ஏக்கம் புண்ணாக இருந்தது. தத்துவத்திற்கும் ஞானத்திற்கும் ஆறவில்லை அந்தப் பெரும்புண்.

காலம் ஓடுகிறது. வயது ஐம்பதுக்கு மேல் ஆகியும் தளராத உடலோடும் நரையாத குழலோடும் அழகான பல் வரிசையோடும் அவள் இருப்பதைப் பார்த்து அவளுடைய தம்பியின் சிறு பெண் குழந்தை, "எங்க அம்மா இந்த வயசிலே பல்லெல்லாம் விழுந்து தலை நரைச்சுக் கிழவி ஆகிவிட்டது. நீ மட்டும் இப்படி இருக்கிறாயே!" என்று சிரித்துக் கொண்டே மழலை மொழியில் வக்கணையாகக் கேட்கிறது!

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் உட்கார்ந்து விடுகிறாள் பூரணி. அவள் மனம் துக்கத்தை உணருகிறது. கண்கள் நீர் சிந்துகின்றன. சதா காலமும் எதற்காக அவள் மனம் மௌனமாகவே அழுது கொண்டிருந்ததோ அதற்காக வாய்விட்டே அழுகிறாள். குழந்தை அவளுடைய அழுகைக்குக் காரணம் புரியாமல் மருண்டு பார்க்கிறது, மயங்கித் திகைக்கிறது!

கால ஓட்டத்தில் எத்தனையோ பன்னிரண்டு ஆண்டுகள் கழிகின்றன. பூரணி ஏதோ பெண்கள் மாநாட்டுக்காகக் கோடைக்கானலுக்கு மீண்டும் வந்திருக்கிறாள். அந்த ஆண்டும் குறிஞ்சி பூக்கும் முறை; மலை நிறைய குறிஞ்சி பூத்திருக்கிறது. காலையில் மாநாடு முடிந்துவிட்டதனால் அன்று மாலை உடன் வந்திருக்கும் வேறு சில பெண்களோடு ஏரிக்கரைக்குச் செல்கிறாள் பூரணி. இளம்பெண்கள் எல்லோரும் படகில் சுற்றப் போய்விடுகிறார்கள். பூரணி அருகிலிருந்த வீதியில் தனியே உலவச் செல்கிறாள். அங்கே ஒரு புகைப்பட நிலையத்தின் வாயிலில் வந்ததும் எதையோ கண்டுவிட்டு இமையாமல் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அவள் கண்களைக் கவர்ந்தது அந்தப் புகைப்பட நிலையத்தின் காட்சியறையில் இருந்த ஒரு படம். முன்பு பல ஆண்டுகளுக்கு முன் அரவிந்தனும் அவளும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அங்கே வைக்கப்பெற்றிருக்கிறது! நினைவுபடுத்தக்கூடாத பழைய துயரக் கனவை யாரோ நினைவு படுத்திவிட்டதுபோல் ஆறுதலணை உடைந்து வேதனை பாய்கிறது அவள் மனதில். அந்தப் படம், அந்த மாலைகள், அளவற்று பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் எல்லாம் அவள் மனத்தின் பழைய நினைவுகளைக் கிளறுகின்றன. அந்தப் பூக்களையும் அவை குலவிக் காட்சியளிக்கும் மலைத்தொடர்களின் அழகையும் இரசிக்கத் தூண்டும் எழிலுணர்ச்சியையும் தன் மனத்துக்குத் தந்துவிட்டு மறைந்தவனை எண்ணித் தவித்து நிற்கிறாள் அவள். 'படத்தில் வாழ்கிறோம்; வாழ்வில் இல்லை' என்ற தாபம் மனம் கொள்ளாமல் பெருகுகிறது. எங்காவது ஓடிப்போய்க் குமுறிக் குமுறி அழுது அந்த அழுகையின் முடிவில் இதயமே தானாக வெடித்துச் சிதறிச் செத்துப் போய்விட வேண்டும் போலிருக்கிறது அவளுக்கு. படிப்பும், புகழும், பெருமையும், வயதும் மறந்து சர்வசாதாரணமாக பேதைச் சிறு பெண் போல் அங்கே கண் கலங்கி நிற்கிறாள் அவள். துக்கத்துக்கு முன் படிப்பும் ஞானமும் என்ன செய்துவிட முடியும்?

தனியாகக் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்குப் போய் அங்கே தானும் அரவிந்தனும் முன்பு அமர்ந்து பேசிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு நெஞ்சில் தாங்க முடியாமல் சுமையேறிக் கிடக்கும் துக்கங்களை அழுது கரைக்க வேண்டும்போல ஒரு துடிப்பு அவளுக்கு உண்டாகிறது. உலகத்து மக்களின் துக்கத்துக்கெல்லாம் ஆறுதல் கூறி அறிவுரை வழங்கித் தன் பார்வையாலும், பேச்சாலும், பண்பட்ட தூய வாழ்வாலும், உதாரண நங்கையாயிருக்கும் அவள் அப்போது தன் இதயச்சூடு தணியாமல் அநாதைபோல் மலைத்து மயங்கி நிற்கிறாள்.

குறிஞ்சியாண்டவர் கோயில் அருகில் இருந்த மேட்டில் போய் அமர்ந்து தன்னைப் பிறரும், பிறரைத் தானும் கவனிக்காத தனிமையில் வாய்விட்டுக் கதறி அழுகிறாள், பூரணி. உலகத்தில் மனிதப் பூண்டே அடியோடு அழிந்து அமிழ்ந்து மூச்சுப் பேச்சற்று மூழ்கிப் போன தனிமையில் அந்த மலைத்தொடர்கள் மட்டும் மௌனமாய்ப் பரந்து கிடப்பது போலவும் அதனிடையே எல்லா துக்கங்களுக்கும் எல்லா ஆற்றாமைகளுக்கும் எல்லா ஏக்கங்களுக்கும் எல்லா வேதனைகளுக்கும் எஞ்சி மிஞ்சிய ஒரே ஒரு சொந்தக்காரியாய் தான் மட்டுமே உட்கார்ந்து குமுறியழுது கொண்டிருப்பது போலவும் சொற்களின் துணைகொண்டு விளக்க முடியாததொரு தவிப்பை அடைகிறாள்.

 

அருகே கோயில் மணியோசை கேட்கிறது! துக்கத்திலிருந்து விடுபட்டு 'இங்கே வா' என்று குறிஞ்சி ஆண்டவனாகிய முருகனே அவளை அழைக்கிறானா! கனவில் எழுந்து நடப்பது போல் தட்டுத்தடுமாறி தயங்கி நடந்து முருகன் சந்நிதிக்கு முன் போய் நின்றாள் அவள்.

அர்ச்சகர் கற்பூரச் சோதியை முருகன் முகத்தருகே தூக்கிக் காண்பிக்கிறார். பூரணிக்கு மெய் சிலிர்க்கிறது. தன் கண்கள் காண்பது மெய்யா? பொய்யா? என்று விழியகல மீண்டும் பார்க்கிறாள். முருகனுடைய முகமே அரவிந்தனின் முகமாகத் தெரிகிறது அவளுக்கு. சிறிய கற்பூரச் சோதியே பெரிய சோதியாக மாறி அரவிந்தனின் முகமாகி அழகாய் நகைக்கிறது. 'துக்கத்திலிருந்து விடுபட்டு இங்கே வா' என்ற பொருளா அந்தச் சிரிப்புக்கு? 'அரவிந்தன்! உங்களுடைய சிரிப்பில் அமுதம் இருக்கிறது, அமுதம் உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது' என்று பித்து பிடித்தவள் போல் முனகிக் கொள்கிறாள் அவள். அவளுடைய இதயத்தில் சோகம் நிறைந்திருந்த இடமெல்லாம் அரவிந்தனின் சிரிப்பு நிறைந்து ஒலி பரப்புகிறது.

 

"பிறவாமை வேண்டும்!

மீண்டும் பிறப்பு உண்டேல்

உன்னை மறவாமை வேண்டும்!"

 

என்று மெல்லப் பாடிக்கொண்டே கண்களில் வடிந்து கொண்டிருக்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறாள். கண்களில் நீரையும், மனத்தில் துயரத்தையும் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கிற போது முருகனே அரவிந்தனாக மாறி நின்று மீண்டும் சிரிக்கிறான்! கைகூப்பி வணங்கிவிட்டு முடிவற்ற மலைத் தொடர்களின் தனி வழியே இறங்கி நடக்கிறாள் அவள். வழியின் இருபுறமும் வெள்ளம்போல் நிறைந்து விளங்கும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாலைப்போது வீறுகுன்றி இருள் வீறு கொள்ளத் தொடங்குகிறது. பூரணி மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள். பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் வாடி உதிர்கிறது.

 

குறிஞ்சி மலர்

கனவு நிறைகிறது

 

காலமெனும் பூச்செடியில்

கனவு மலர் பூத்தாச்சு

சாலமிகும் விதிக்கொடுமை

சார்ந்துவர உதிர்ந்தாச்சு!
 

இந்த முடிவுரையைப் படிக்கத் தொடங்குமுன்பே வாசகர்கள் என்மேல் சீற்றமடைந்திருப்பார்கள் என்று என்னால் உய்த்துணர முடிகிறது. 'அரவிந்தன்' என்ற இலட்சிய இளைஞன் 'இறந்திருக்கக் கூடாது' என்று கடுமையாக வாதமிடுவார்கள், கண்டிப்பார்கள், கடிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்தக் கதையின் ஆசிரியன் ஒரே பதிலைத் தான் கூறமுடியும். அரவிந்தன் சாகவில்லை! இந்தத் தலைமுறையிலோ நாளைக்கு வரப்போகும் தலை முறையிலோ, இந்தத் தமிழ் மண்ணில் அன்பும் அருளும் பண்பும் அழகும் நிறைந்து தோன்றும் இளைஞனை - இளைஞர்களை - எங்கே கண்டாலும் அங்கே அரவிந்தன் பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள்! வாழ்த்துக்கள்!

நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டு ஞானப் பூங்கோதையாய் நின்று நோயும், வறுமையும் நிறைந்த மனிதர்களிடையே அருளொளி பரப்பி உயரிய வாழ்வு காண ஆசைப்படும் பெண் திலகத்தை - திலகவதிகளை எங்கே கண்டாலும் அங்கே பூரணி பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள்! வாழ்த்துங்கள்! பூரணியும், அரவிந்தனும் வெறும் கதாபாத்திரங்களல்லர். அவர்கள் தமிழனத்து ஆண்மை, பெண்மைக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்கள். மனிதர்களுக்குத் தான் அழிவு உண்டு. தத்துவங்களுக்கு அழிவில்லை. அவை உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவை, உயர்ந்தவை. இந்தக் கதையில் பூரணி இறக்கவில்லை. அவள் என்றும் அழியாதவள்.

ஞான ஒளி பரப்பித் தமிழும் தொண்டுமாக நூறு வயதுக்கு மேலும் ஔவையார் போல் தாய்த் தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கிறாள் பூரணி. உயர்ந்த மலைச் சிகரங்களில் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பாக மலரும் குறிஞ்சி மலரைப் போல் காலவெள்ளத்தில் எப்போதாவது ஒரு முறைதான் அவளைப் போல் பெண்மலர் பூக்கிறது. இலக்கியங்களில் வாழ்கிற குறிஞ்சி மலரின் பெருமை போல் காவியங்களில் வாழ வேண்டிய பெண் அவள். என்னால் அவளுடைய கதையை வெறும் வசனத்தில் தான் எழுத முடிந்தது. என்ன செய்வது? அரவிந்தனைப் போல் கவியுள்ளம் எனக்கு இல்லையே! 

என் பூரணி கையில் தீபத்தையும், கண்களில் நீரையும் ஏந்திக் கொண்டு இரக்கத்துக்குரிய ஆண், பெண்களின் இருண்ட வாழ்வில் ஒளி சிதறி நடந்து கொண்டே இருக்கட்டுமென்று உங்கள் சார்பில் அவளை வாழ்த்தி முடிக்கிறேன். வாழ்க பூரணி! வாழ்க அரவிந்தன்!

 

மணிவண்ணன்.

-------------------

 

  நா.பார்த்தசாரதியின் படைப்புக்கள் சிலவற்றைப் பார்க்க

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)