நித்திலவல்லி - முதல் பாகம்

முன்னுரை

 

தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததையே 'இருண்ட காலம்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன். 

சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே இப்படிப் பார்ப்பது கூட பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற் போல் மாறி விடுகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு களப்பிரர் காலத்தைப் பற்றி எழுத எண்ணித் திட்டமிட்டு அதன் பின் வரலாற்று நாவல்கள் எழுதுவதை நான் நிறுத்தியிருந்த சமயத்தில் விகடன் காரியலத்தார் 1970 ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினமலரிலிருந்து விகடனில் வெளியிட ஒரு சரித்திர நாவல் எழுதுமாறு வேண்டினார்கள். என் பழைய எண்ணமும் இந்த அவசியமும் இணைந்த வேளையில்தான் நான் 'நித்திலவல்லி' நாவலை மேற்கொண்டு எழுத நேர்ந்தது. ஒரு மங்கலான காலப் பகுதியைப் பற்றி அதிக ஆராய்ச்சிகளையும், சான்றுகளையும் தேடித் தேடி இதை எழுத வேண்டியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:-

"களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து

 

வேலை சூழ்ந்த வியலிடத்துக்

கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்

செங்கோல் ஓச்சி வெண்குடை நிழற்

றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்

பிறர்பால் உரிமை திறவிதின் நீக்கித்

தன்பால் உரிமை நன்கனம் அமைத்த

மானம் போர்த்த தானை வேந்தன்

ஓடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த

கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னவன்."

 

இனி இலக்கிய ஆதாரங்கள் வருமாறு:-

 

கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல்

மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள்வானாய்

யானைக் குதிரைக் கருவிப்படை வீராதிண் டேர்

சேனைக் கடலுங் கொடுதென் திசைநோக்கி வந்தான்.

வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச்

சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்

சிந்திச் செருவென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றல்

கந்தப் பொழில்சூல் மதுராபுரி காவல் கொண்டான்.

(திருத்தொண்டர் புராணம் மூர்த்தி... 1, 12)

 

படைநான் குடன்று பஞ்சவன் துரந்து

மதுரை வவ்விய கருநடர் வேந்தன்

அருகர்ச் சார்ந்துநின் றரன்பணி யடைப்ப

(கல்லாடம் - 56)

 

இந்த இலக்கிய ஆதாரங்களைத் தவிர,

 

பல்லவர் வரலாறு - டாக்டர் இராசமாணிக்கனார்

பாண்டிய வரலாறு - டி.வி. சதாசிவ பண்டாரத்தார்

South Indian Inscriptions (Volumes)

Mahavamsam (Volumes)

Pandyan Kingdom - K.A. Neelakanda Sastry

சாஸனத் தமிழ்க்கவி சரிதம் - மு. ராகவையங்கார்

ஆராய்ச்சிக் கட்டுரைகள் - மு. ராகவையங்கார்

பரிபாடல்

புறநானூறு

கலித்தொகை

பெருந்தொகை

தமிழ் இலக்கிய வரலாறு - கே.எஸ்.எஸ். பிள்ளை

 

ஆகியவற்றிலிருந்து இதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இந்த ஆதாரங்களே முழுமையான கதையாகிவிட முடியாது என்றாலும், முழுமையான கதைக்கு இந்த ஆதாரங்களும் இருக்க வேண்டியதாகிய அவசியம் உண்டு. கதை நிகழ்ந்த காலத்து மதுரை அடிமைப்பட்டுக் கிடந்த மதுரை. ஆகவே கதையின் பெரும் பகுதியில் மதுரையின் கோலாகலங்களை அதிகமாகச் சித்தரிக்க முடியாமல் போயிற்று. பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். இன்னும் சிலர் இரத்தினமாலை தான் நினைத்து நினைத்து மகிழ ஏற்ற பாத்திரம் என்றார்கள். இளையநம்பிதான் கதாபாத்திரங்களில் முதன்மையானவன் என்கிறார்கள் மற்றும் பலர். அழகன் பெருமாள், மல்லன், கொல்லன், யானைப்பாகன் அந்துவன், காராளர் போன்ற துணைக் கதாபாத்திரங்களே சிறந்தவர்கள் என்பதும் சிலருடைய கருத்தாகும்.

ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த வரலாற்று நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை: சமீப காலத்து நூற்றாண்டுகளில் நாட்டைப் பிறரிடமிருந்து மீட்கும் பல சுதந்திர போராட்ட வரலாறுகளைப் பல நாடுகளில் பார்த்திருக்கிறீர்கள். அதுபோல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாண்டிய நாட்டில் நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வரலாற்று நாவல் என்ற எண்ணத்தோடு இதை அணுக வேண்டுகிறேன். இதற்கு மேல் இந்த முன்னுரையில் நான் சொல்வதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை.

 

இந்த நாவலைத் தொடர் கதையாக வேண்டி வெளியிட்ட விகடன் காரியாலயத்தாருக்கும், புத்தகத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனங்கனிந்த அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அன்புடன்

நா. பார்த்தசாரதி

---------

 

1. நல்லடையாளச் சொல்

 

திருக்கானப்பேர்க் காட்டிலிருந்து மதுரை மாநகருக்குப் போகிற வழியில், மோகூரில் மதுராபதி வித்தகரைச் சந்தித்து விட்டுப் போக வேண்டும் என்று புறப்படும் போது பாட்டனார் கூறியிருந்ததை நினைத்துக் கொண்டான் இளையநம்பி. அவன் வாதவூர் எல்லையைக் கடக்கும் போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று. மருத நிலத்தின் அழகுகள் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும், சோலைகளும், நந்தவனங்களும், மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து வளர்ந்த மேடுகளுமாக நிறைந்திருந்தன. கூட்டடையும் பறவைகளின் பல்வேறு விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடென்று காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன.

தோட்கோப்பாக வலது தோளில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த கட்டுச் சோற்று மூட்டையைக் கரையில் கழற்றி வைத்துவிட்டு, ஒரு தாமரைப் பொய்கையில் இறங்கி முழங்காலளவு நீரில் நின்று முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டு அமுதம் போன்ற அந்தப் பொய்கை நீரைத் தாகம் தீரக் குடித்தான் இளையநம்பி. குளிர்ந்த நீர் பட்டதும், வழி நடையால் களைத்திருந்த உடலுக்கு இதமாக இருந்தது. சூடேயிருந்த கண்களில் சில்லென்று தண்ணீர் நனைந்ததும் பரம சுகமாயிருந்தது.

இருட்டுவதற்குள் மோகூரை அடைந்து விட வேண்டும் என்பது அவன் திட்டம். மோகூரில் மதுரபதி வித்தகர் இருக்கும் இடத்தைக் கேட்டறிய வேண்டும். களப்பிரர்களின் கொடுமைக்கு அஞ்சி இப்போதெல்லம் அவர் ஒரே இடத்தில் இருப்பதில்லையாம். பல ஆண்டுகளாக ஆட்சியுரிமையைப் பெற்றிருந்தும், கொள்ளையடித்தவர்கள் தாங்கள் கொள்ளை கொண்ட பொருளுக்கு உண்மையிலேயே உரியவன் எப்போதாவது அவற்றைத் தேடி வந்து மீட்பானோ என்ற பயத்துடனேயே இருப்பது போல்தான் களப்பிரர்களும் பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.

மறுபடி பாண்டியர் குலம் தலையெடுக்க யார் யார் உதவுகிறார்கள் என்று சந்தேகப்பட்டாலும் அப்படிச் சந்தேகத்துக்கு உரியவர்களை ஈவிரக்கமின்றி துன்பப்படுத்தியும், கொலை செய்தும், சிறை பிடித்தும், சித்திரவதைகள் செய்தும் கொடுமை இழைக்கக் களப்பிரர்கள் தயங்கியதில்லை.

பாண்டிய மன்னர்களுக்கு அரச தந்திரங்களையும், உபாயங்களையும் சொல்லும் மதி மந்திரிகளின் பரம்பரையின் கடைசிக் கொழுந்தையும் கூடக் கிள்ளிவிடக் களப்பிரர்களுக்கும் ஆசை தான். ஆனால், அது அவர்களால் முடியாத காரியமாயிருந்தது. மூத்துத் தளர்ந்து போயிருந்தாலும் மதி நுட்பத்திலும், தந்திர உபாயங்களாலும் சிறிதளவு கூடத் தளராமல் மங்கலப் பாண்டிவள நாட்டின் பல்வேறு ஊர்களிலும் மறுபடி பாண்டியராட்சி மலர்வதற்கு ஓர் இரகசிய இயக்கத்தையே கட்டி வளர்த்து உருவாக்கிக் கொண்டிருந்தார் மதுராபதி வித்தகர். மதுராபதி வித்தகரைப் பற்றிப் பாட்டனார் சொல்லியிருந்ததெல்லாம் இளையநம்பிக்கு ஒவ்வொன்றாக நினைவு வந்தன. கொள்ளைக்காரர்களைப் போல் வந்து பாண்டிய நாட்டைப் பிடித்து ஆண்டு கொண்டிருக்கும் களப்பிரர்களிடமிருந்து அதை மீட்க முயன்று கொண்டிருக்கும் ஓர் இணையற்ற இராச தந்திரியைச் சந்திப்பதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. அவரை எப்படி வணங்குவது, எந்த முதல் வாக்கியத்தினால் அவரோடு பேசத் தொடங்குவது, தான் இன்னான் என்று எப்படி அவரிடம் உறவு சொல்லிக் கொள்வது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே மோகூரில் நுழைந்தான் இளையநம்பி.

கணீரென்ற மறை ஒலிகள் ஏறியும் இறங்கியும் சுருதி பிறழாமல் ஒலித்துக் கொண்டிருந்த அந்தணர் வீதியில் நுழைந்து எதிர்ப்பட்ட முதியவர் ஒருவரிடம் -

"ஐயா, பெரியவரே! நான் மதுராபதி வித்தகரைக் காணவேண்டும். அருள்கூர்ந்து இப்போது அவர் எங்கே தங்கி இருக்கிறார் என்பதைக் கூறினால் பேருதவியாக இருக்கும்" என்று தணிந்த குரலில் வினவினான் அவன். தான் இவ்வாறு வினவியதும் அந்த முதியவர் நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புதிராக இருந்தது. அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு ஒரு கணம் தயங்கிய பின் சிரித்துக் கொண்டே போய்விட்டார் அவர். இளையநம்பிக்குக் கடுஞ் சினம் மூண்டது. அடுத்து எதிர்ப்பட்ட மற்றொருவரை வினாவிய போதும் அவரும் அவனை ஏறிட்டுப் பார்த்து ஒருகணம் தயங்கிய பின் வேகமாக நடந்து விட்டார்.

 

எதிர்ப்படுகிறவர்கள் கண்டு பேசத் தயங்கும்படி தன் முகத்தில் அப்படி என்ன மாறுதல் நேர்ந்திருக்க முடியும் என்பது அவனுக்குப் புரியவில்லை. கதைகளில் வருகிற அசுரர்கள் முகம் போல் திடீரென்று தன் கடைவாய்ப் புறங்களில் சிங்கப் பற்களோ, அல்லது முன் தலையில் எம கிங்கரர்களின் கொம்புகள் போல் கோரத் தோற்றமோ உண்டாகி விட்டதோ என்று கூடச் சந்தேகமாயிருந்தது. பாட்டனாரோ-

"மோகூரில் போய்த்தான் வித்தகர் இருக்குமிடத்தை நீ அறிந்து கொள்ள முடியும்! பெரியவர் மோகூர் வட்டத்தில் இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நீ வரப் போகிறாய் என்பதையும், உன்னை எப்படி எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் அவருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் சொல்லியனுப்பியிருக்கிறேன். கவனமாக நடந்துகொள்! எங்கு பார்த்தாலும் களப்பிரர்களின் 'பூத பயங்கரப் படை' நம் போன்றவர்களைப் பிடித்துக் கொண்டு போகக் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு திரிகிறது. நீயோ முரட்டுப்பிள்ளை. எங்கும் எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு உன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடாதே. பாண்டவர்கள் கூட வனவாசமும் அஞ்சாத வாசமும் செய்திருக்கிறார்கள். நாமும் இப்போது ஏறக்குறைய பாண்டவர்களின் நிலையில் தான் இருக்கிறோம்" என்று அறிவுரை கூறியிருந்தார். அப்படி அவர் அறிவுரை கூறுகையில், "பாண்டவர்கள் கௌரவர்களோடு சூதாடினார்கள். நாட்டை இழந்தார்கள். நாம் யாரோடும் சூதாடவில்லையே தாத்தா?" - என்று பதிலுக்குத் தான் கேட்டதும், "சூதாடமலே களப்பிரர்களுக்கு நாட்டைத் தோற்று விட்டோம் நாம்! இப்படி அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளை என்னிடம் கேட்பது போல் மதுராபதி வித்தகரிடம் தவறிப் போய்க் கூடக் கேட்காதே. அவர் வார்த்தைகளைப் பொன்னுக்கு மாற்று உறைத்துப் பார்ப்பது போல் பார்க்கிறவர். சொற்களை எண்ணிச் செலவழிக்கிறவர். எதிராளியின் சொற்களை எண்ணி நிறுத்துப் பார்க்கிறவர்" - என்பதாகப் பாட்டனார் அப்போது தனக்கு மறுமொழி கூறியிருந்ததும் இளையநம்பிக்கு ஞாபகம் வந்தன. நினைக்கும் போது அவனுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மதுராபதி வித்தகர்தான் வார்த்தைகளை எண்ணிச் செலவழிப்பவர் என்று பாட்டனார் சொன்னார். அந்தப் பெரியவரைப் பார்க்க முடிவதற்கு முன்பே வார்த்தைகளைச் செலவழிக்கவே விரும்பாதவர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்படுவது போலிருந்தது. கேட்கிறவர்கள் எல்லாம் தனக்கு ஏன் மறுமொழி சொல்லாமல் போகிறார்கள் என்பது அவனுக்கு விளங்காத மர்மமாக இருந்தது. உலகைச் சூழும் மாலை இருள் அவன் மனத்தையும் சூழ்ந்தது.

அடுத்து அவன் நுழைந்த வேளாண் மக்கள் தெருவில் கலப்பைக்கு கொழு அடிக்க இரும்பைக் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு கொல்லனின் உலைக்களம் எதிர்ப்பட்டது. செங்கீற்றாக மின்னிப் பளபளக்கும் காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்த அந்தக் கொல்லனின் கண்கள் சிவந்து கழன்று விழுந்து விடுவது போல் உலை ஒளிபட்டு மின்னின. வைரம் பாய்ந்த கருந்தேக்கு மரத்தில் செதுக்கி எடுத்து எண்ணெய் பூசினாற் போல் மின்னும் அவனுடைய அகன்ற மார்பையும் திரண்ட தோள்களையும் கண்டபோது

'பாண்டிய மண்டலத்தின் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் நிறைந்திருக்கும் இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த உழைப்பாளிகளின் பயனை எல்லாம் எங்கிருந்தோ வந்த அந்நியரான களப்பிரர்கள் அல்லவா அநுபவிக்கிறார்கள்' என்று கழிவிரக்கத்தோடு நினைந்து நெட்டுயிர்த்தான் இளையநம்பி.

"கரும்பொற் கொல்லரே! மதுராபதிப் பெரியவரைப் பார்க்க வேண்டும்... அவர் இருக்கும் இடத்தைப் பற்றி வினாவத் தொடங்கினாலே இந்த ஊரில் எல்லாரும் ஊமைகளாகி விடுகிறார்கள்."

"கேட்க வேண்டியதைச் சொல்ல வேண்டிய வார்த்தையால் கேட்டால் பதில் சொல்வார்கள்."

"நான் என்ன பாலி மொழியிலா கேட்கிறேன்? தமிழில் தானே கேட்கிறேன்?"

"பாலியில் கேட்டால் பதில் கிடைக்காது... இதுதான் கிடைக்கும்" - என்று சம்மட்டியால் பழுக்கக் காய்ந்த கொழு முனையை மறுபடி ஓங்கி ஓங்கி அறையத் தொடங்கினான் கொல்லன்.

"ஐயா! நான் பேசியதைத் தவறாகக் கொள்ளக்கூடாது. களப்பிரர்கள் பாண்டி நாட்டில் தமிழ் வழக்கை அழித்துப் பாலி மொழியைப் புகுத்துவதை என்னைப் போலவே நீங்களும் வெறுக்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் என்னை நம்ப வேண்டும்."

"சொல்ல வேண்டிய வார்த்தையைச் சொன்னால் நம்பலாம்."

இப்படி மீண்டும் அந்தக் கொல்லன் புதிராகி விடவே இளையநம்பிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தனக்கு மறுமொழி கிடைக்கவில்லையே என்று ஆத்திரமாக இருந்தாலும் களப்பிரர்களையும், பாலிமொழியைப் பாண்டிய நாட்டில் வலிந்து புகுத்த முயலும் அவர்கள் கொடுமையையும் தன்னைப் போலவே அவனும் எதிர்ப்பது இளையநம்பிக்கு ஆறுதலளிக்கக் கூடியதாயிருந்தது. களப்பிரரை வெறுக்கும் தோள் வலிமை வாய்ந்த வினை வல்லான் ஒருவனை முதல் முதலாகச் சந்தித்துவிட்ட மகிழ்ச்சியோடு நடந்தான் அவன்.

இன்னும் அவன் போய்ச் சேர வேண்டிய இடத்துக்கான வழியை அறிந்து கொள்ள முடியவில்லை. மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தை அறிவதில் இவ்வளவு இடர்பாடுகள் வரும் என்பது அவன் முற்றிலும் எதிர்பாராதது. நடந்து கொண்டே இருந்தவன் வீதியில் தனக்கு முன்னால் இரண்டு பாக தூரத்தில் ஒரு பெண் கையில் திருவிளக்கு ஏந்திச் செல்வதைக் கண்டான்.

அவள் காலணிகளின் பரல்கள் எழுப்பிய ஒலி அந்த வீதியின் தனியான சங்கீதமாயிருந்தது. மேகலையிட்டுக் கட்டியிருந்ததாலோ என்னவோ அவளது இடை இல்லையோ உண்டோ என்று நினைக்கும்படி சிறிதாகத் தோன்றியது. பூச்சூடிய கருங்குழலும், விளக்கேந்திய கையுமாக அவள் நடந்து சென்ற பின்னலங்காரத்தில் ஒரு கணம் மயங்கி அடுத்த கணமே தன்னுணர்வு பெற்று அவளைக் கை தட்டிக் கூப்பிடலாமா, அல்லது அருகே சென்று கேட்கலாமா என்று சிந்தித்தான். இருள் மயங்கும் வேளையில் தெருவில் தனியே செல்லும் இளம் பெண்ணைத் தன்னைப் போல் ஊருக்குப் புதிய இளைஞன் கைதட்டிக் கூப்பிடுவது நயத்தக்க நாகரிகமாக இராதென்றும் தோன்றியது. படமெடுத்த நிலையில் அரச நாகம் ஒன்று நடந்து செல்வது போல் மேகலைக்குக் கீழே அவள் நடையின் பின்னலங்காரத்தைக் கண்டபடியே எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து போகலாமென்று கூடத் தோன்றியது. நன்றாக இருட்டுவதற்குள் பெரியவரைச் சந்தித்து விட வேண்டுமென்ற முனைப்பினால் அவன் கால்கள் விரைந்தன.

மிக அருகே யாரோ ஆண்பிள்ளை விரைவாக நடந்து வரவே அவள் திரும்பினாள். தான் நினைத்துக் கற்பனை செய்திருந்ததை விட அவள் பேரழகியாக இருந்ததைக் கண்டு அந்த வியப்பில் பேசவேண்டிய உரையாடலுக்கு வார்த்தைகள் பிறவாமல் அவள் முகத்தைப் பார்த்தபடியே நின்று விட்டான் இளையநம்பி. 'ஒரு தங்க நாணயம் எல்லாப் பக்கங்களிலும் பிரகாசமாகத்தான் இருக்க முடியும்' - என்று தனக்குள் வியப்போடு சொல்லிக் கொண்டான் அவன். பின்பு அவளை அணுகி வினவினான்:-

"பெண்ணே! எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்! மதுராபதி வித்தகரின் இருப்பிடம் தெரிய வேண்டுமென்று அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்வூரில் ஒருவராவது அதைச் சொல்லமாட்டேன் என்கிறார்கள்..."

அவனுக்கு மறுமொழி கூறாமல் புன்முறுவல் பூத்தாள் அந்தப் பெண். விளக்கொளியில் அந்தப் புன்னகையின் அதே வசீகரம் அவள் கண்களிலும், கன்னங்களிலும் பரவினாற் போல் அத்தனை அழகாயிருந்ததை இளையநம்பி கண்டான். சிரிப்பு என்ற வசீகர வனப்பைக் கண்களிலும், கன்னங்களிலும் கூட நிறைத்துக் கொண்டு நிற்பது போல் எதிரே நின்றாள் அவள். சிரிக்கும் போது தானே புன்னகையாக மலர்வது போன்ற அவள் தோற்றமும் வனப்பும் இளையநம்பிக்கும் பிடித்திருந்தாலும் தன்னுடைய வினாவுக்கு அவள் இன்னும் மறுமொழி கூறவில்லை என்பது வருத்தத்தை அளித்தது. சற்றே சினமும் மூண்டது.

"அழகிய பெண்களும் ஊமையாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது."

"முன் பின் தெரியாத அந்நிய ஆடவர்களுக்கு வழி காட்டுவதற்காகத்தான் மோகூரில் அழகிய பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு யாராவது சொல்லியிருந்தார்களா, என்ன?"

"அப்படியில்லை! கையில் விளக்குள்ளவர்கள் வழி காட்டாவிட்டால் வேறு யார் தான் வழிகாட்டப் போகிறார்கள்?"

"சாதுரியமான பேச்சு!"

 

"சாதுரியம் யாருடைய பேச்சில் அதிகமென்றுதான் புரியவில்லை. இந்த விநாடி என்னுடைய வினாவுக்கு நீ பதில் சொல்லாததுதான் மிகப் பெரிய சாதுரியம் பெண்ணே!"

"...."

மறுபடி அவள் சிரித்தாள். மௌனமானாள். அவன் சினத்தோடு தொடங்கினான்:

 

"உரையாடல் என்பது எதிரே நிற்பவரும் கலந்து கொள்ள வேண்டியது. சொல்லுக்கு ஒரு நாகரிகம் உண்டு. நாகரிகமுள்ள எல்லார்க்கும் அது தெரிந்திருக்க வேண்டும்."

"ஐயா! நீர் பெரிய வம்புக்காரராக இருக்கிறீர். பேசினால் கேட்கக் கூடாததைக் கேட்டு மௌனமாக்குகிறீர். மௌனமாயிருந்தால் பேசச் சொல்லி வற்புறுத்துகிறீர். இனிமேல் நாகரிகத்துக்கு உம்மைக் கொண்டு தான் புது இலக்கணமே எழுதுவிக்க வேண்டும் போலிருக்கிறது."

சற்றே கோபத்துடன் அவள் இதைச் சொல்லியது போல் இளையநம்பிக்குத் தோன்றவே, 'இவளோடு நயமாக இன்னும் பேச்சு வளர்த்து உண்மையை அறிவது' என்று கருதி மேலும் அவளோடு உரையாடத் தொடங்கினான். அவன் வினாவியவர்களில் ஒருவர் கூட, 'மதுராபதி வித்தகர் இருக்குமிடம் எனக்குத் தெரியாதே' - என்று மறுமொழி கூறவில்லை. தெரிந்து கொண்டிருந்தும் தன்னிடம் அவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை.

'கேட்கக் கூடாததைக் கேட்டு மௌனமாக்குகிறீர்' - என்று இவள் கூறுவதிலிருந்து இவளுக்கும் அந்த இடம் தெரியும் என்பதை அவன் அநுமானம் செய்ய முடிந்தது. சிறிது பேச்சுக் கொடுத்தால் இவளிடமிருந்து தெரிந்து கொள்ள முடியுமென்று அவனுள் நம்பிக்கை பிறந்தது. சிறிய நேரப் பேச்சிலேயே அவள் ஊர்க் கோடியில் உள்ள கொற்றவை கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றச் செல்கிறாள் என்று அறிய முடிந்தது. அவனுக்கு எது வேண்டுமோ அதைத் தவிர மற்றவற்றை எல்லாம் பேசினாள் அந்தப் பெண்.

"ஒரு மண்டலத்துக்கு கொற்றவை கோவிலில் நெய் விளக்கு ஏற்றுவதாக வேண்டுதல்" என்று அவள் கூறிய போது அவன் சிரித்துக் கொண்டே கேட்டான்:

"பெண்ணே! நான் கூட உங்கள் ஊர்க் கொற்றவையிடம் ஒரு வேண்டுதல் செய்து கொள்ளலாம் என்று பார்க்கிறேன்! வேண்டிக் கொள்ளட்டுமா?"

"என்ன வேண்டுதலோ அது?"

 

"வழிதெரியாமல் மயங்குகிறவர்களுக்கு வழி சொல்லும் நல்லறிவை இந்த ஊர்க்காரர்களுக்குக் கொடு என்று வேண்டிக் கொள்ளப் போகிறேன்."

"நல்லறிவு இந்த ஊராருக்கு வேண்டிய மட்டும் இருக்கிறது. சொல்லப் போனால் உங்களுக்குத்தான் இப்போது அது இருப்பதாகத் தெரியவில்லை."

இந்த மறுமொழிக்குப் பின் அவன் அவளோடு உரையாடலை நிறுத்தி விட்டான். அவன் முகத்தில் மலர்ச்சி மறைந்து விட்டதை அவளும் கண்டு கொண்டாள். இதன் பின் கொற்றவை கோவில் வரை அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. அவள் நெய் விளக்கு ஏற்றினாள். அவன் கொற்றவையை வணங்கினான். அந்த வணக்கத்துக்கு உடனே பயன் கிடைத்தது. அவன் மேல் அவளுக்கு இரக்கம் வந்திருக்க வேண்டும். அவள் அவனைக் கேட்டாள்:

"இப்போது இந்த இடத்தில் கொற்றவை சாட்சியாக எனக்கு ஒரு வாக்குக் கொடுத்தால் உங்களுடைய வினாவுக்கு நான் மறுமொழி கூறலாம்."

"என்ன வாக்கு அது?"

"மதுராபதி வித்தகருடைய இருப்பிடத்தை அறிய விரும்பும் நீங்கள் ஐயப்பாட்டுக்கு இடமில்லாத நல்லெண்ணத்தோடு தான் அதைக் கேட்கிறீர்கள் என்று உங்கள் குலதெய்வத்தின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்ய வேண்டும்! செய்வீர்களா?"

 

"துரோகிகள் செய்ய வேண்டிய சத்தியத்தைப் பாண்டிய குலம் ஒளி பெற பாடுபடும் நல்லவன் ஒருவனையே செய்யச் சொல்கிறாய் நீ. ஆனாலும் நான் அதைச் செய்கிறேன்! எனக்குக் காரியம் ஆக வேண்டும்."

அவன் அவள் கூறியபடி சத்தியம் செய்ததும் அவள் கூறினாள்:

"நீங்களும், நானும், இவ்வூராரும் எல்லாருமே பாண்டிய குலம் ஒளி பெறத்தான் பாடுபடுகிறோம். இப்படிப் பாடுபடுகிறவர்களை அவர்கள் எங்கிருந்தாலும் தேடித் தேடிக் கொல்வதற்காகவே களப்பிரர்கள் பூத பயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மீண்டும் பாண்டியராட்சி மலரப் பாடுபடுகிறவர்களின் இருப்பிடத்தை ஒற்றறிவது, பாண்டியருடைய குலத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்கள் அகப்பட்டால் எந்த நீதி விசாரணையும் இன்றி அவர்களை உடனே கொன்று விடுவது ஆகிய காரியங்களைச் செய்வதற்காகவே பூத பயங்கரப் படை உண்டாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படையிலும் உங்களைப் போல் வலிமையும் வனப்பும் வாய்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களும் மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தைத் தேடி அலைகிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவரா, நம்மவர்களில் ஒருவரா என்று தெரியாத பட்சத்தில் இந்த ஊரில் யாரும் உங்களுக்குப் பதில் சொல்லியிருக்க மாட்டார்கள். நான் துணிந்து பதில் சொல்லிப் பெரியவர் இருக்கும் இடத்துக்கு வழியும் சொல்ல முன் வந்திருப்பதற்குக் காரணம் உண்டு..."

 

"என்ன காரணமோ?"

"நீங்கள் பூத பயங்கரப் படையைச் சேர்ந்தவராக இருந்தால் உங்களால் இவ்வளவு செம்மையாகத் தமிழில் உரையாட முடியாது. அப்படியே உரையாடக் கற்றிருந்தாலும் சாதுரியமும் நயங்களும் அந்த உரையாடலில் இருக்க இயலாது. ஒரு மொழியை அவசியத்துக்காக யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனாலும் நயங்களையும், சமத்காரங்களையும் உண்டாக்கி அணி நலம்பட எழுதவோ பேசவோ அதைத் தாய் மொழியாகக் கொண்டவனால்தான் முடியும்."

"ஆகா என்ன சாதனை? இவ்வளவு நேரம் சிரமப்பட்டு நான் களப்பிரன் அல்லன், தமிழன் தான் என்பதைக் கண்டு பிடித்து விட்டாய்..."

"ஏளனம் வேண்டாம். உங்களிடம் இன்னும் என்னென்ன கண்டுபிடித்திருக்கிறேன் என்பதைச் சமயம் வரும்போது பேசலாம். நன்றாக இருட்டுவதற்குள் நீங்கள் பெரியவரைக் காணச் செல்ல வேண்டும். இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம், நம்மவர்கள் தங்களை இனம் கண்டு கொள்வதற்காகச் சந்தித்தவுடன் சொல்லிக் கொள்ளும் நல்லடையாளச் சொல்லை இன்னும் நீங்கள் கூறவில்லை."

"அதென்ன நல்லடையாளச் சொல்?"

"அதைச் சொல்வதற்காகவே உங்களைச் சத்தியம் செய்யச் சொன்னேன். மதுராபதி வித்தகரின் ஆதரவாளர்கள் சந்தித்துக் கொள்ளும் போது 'கயல்' என்று சொல்லிக் கொள்ள வேண்டும். நீங்கள் அந்நியர் என்று சந்தேகப்பட்டால் உங்களிடமிருந்து முதலில் அந்த வார்த்தை வருகிறதா என்பதைத்தான் மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்களிடமிருந்து அந்த நல்லடையாளச் சொல் கிடைக்காவிட்டால் அவர்கள் பின்பு வாய்திறப்பது அரிது. 'கயல்' என்ற சொல்லால் தான் இங்கே வழிகளையும் கதவுகளையும் பிறர் வாய்களையும் திறக்கச் செய்ய முடியும். இது நன்றாக நினைவிருக்கட்டும்."

அவள் இவ்வாறு கூறியதும் சற்று முன் அந்தக் கரும் பொற்கொல்லன், 'சொல்ல வேண்டிய வார்த்தையால் கேட்டால் பதில் சொல்வார்கள்' - என்று பேசியிருந்த பேச்சின் புதிர் இளையநம்பிக்கு இப்போது விளங்கிற்று.

"பெண்ணே உனக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் இப்போது சொல்ல முடியும். அந்த உதவியைச் செய்ததற்காகக் காலம் உள்ள அளவும் நீ பெருமைப்பட முடியும்..."

இளையநம்பியின் இந்த நன்றியைக் கேட்டு அவள் புன்முறுவல் பூத்தாள். இந்தப் புன்முறுவலின் அழகு பாதாதிகேச பரியந்தம் விரைந்து பரவி நிறைவதைப் போல் தெரியும் இனிய பிரமையிலிருந்து அவன் விடுபடச் சில கணங்கள் ஆயிற்று.

பதிலுக்குப் புன்முறுவல் பூத்தபடி, 'கயல்' என்று தொடங்கி ஒரு கணம் நிறுத்தித் தன் குரலைத் தணித்து, "உன் கண்களைச் சொல்லவில்லை? எனக்கு வழி பிறக்கும் நல்லடையாளச் சொல்லைத்தான் கூறுகிறேன்" என்றான். இதைக் கேட்டு அவள் முகத்தில் நாணம் நிறைந்தது.

"நேர் எதிரே தெரியும் ஒற்றையடிப் பாதையில் கால் நாழிகைத் தொலைவு சென்றால் ஒரு பெரிய ஆலமரம் வரும். அங்கே அவரைக் காணலாம். ஆனால் அந்த இடத்தை அடைகிறவரை நல்லடையாளச் சொல் பலமுறை உங்களுக்குத் தேவைப்படும்" என்று கூறிவிட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றாள் அந்தப் பெண்.

 

2. மதுராபதி வித்தகர்

 

அந்தப் பெண் தன்னை எச்சரித்து விட்டுச் சென்றது எவ்வளவிற்குப் பயன் நிறைந்தது என்பதை அந்தப் பாதையில் சிறிது தொலைவு நடந்ததுமே இளையநம்பி புரிந்து கொள்ள நேர்ந்தது. கயல் என்னும் அந்த நல்லடையாளச் சொல்லின் மந்திர சக்தியையும் அவன் விளங்கிக் கொள்ள முடிந்தது. இருபுறம் மரங்கள் அடர்ந்து செழித்திருந்த பாதையின் மருங்குகளில் அங்கங்கே உருவிய வாளுடன் நின்ற வீரர்கள் அவன் 'கயல்' என்று கூறியவுடனே வாளை உறையிலிட்டு வணங்கி வழி விட்டனர். அவர்கள் தோற்றத்திலிருந்து களப்பிரர் ஆட்சி வந்த பின் பாண்டிய நாட்டில் மறைந்து வாழ்ந்த தென்னவன் ஆபத்துதவிகளின் வழிமுறையினராகவும், எதையும் எதிர்கொள்ளவல்ல முனையெதிர் மோகர்களின் வழிமுறையினராகவும் இருக்க வேண்டுமென்று தோன்றியது.

 

நல்லடையாளம் கிடைத்ததும் அந்த வீரர்களில் ஒருவன் முன் வந்து அவனை அழைத்துச் சென்றான். எதிரே நிலப்பரப்பின் பெரும்பகுதியைத் தன் விழுதுகளால் ஊன்றியிருந்த மாபெரும் குடையை ஒத்த ஆலமரம் ஒன்று தெரிந்தது. இவ்வளவு பெரிய ஆலமரத்தை மிகப் பெரிய திருக்கானப்பேர்க் காட்டில் கூட அவன் கண்டதில்லை. மறைகின்ற கதிரவனின் மஞ்சள் கலந்த செவ்வொளி இடையிடையே தெரியப் பெரும்பெரும் விழுதுகளை ஊன்றியிருந்த அந்த ஆலமரத்தின் அடிப்பாகம் எங்கிருக்கிறதென்று காணவே முடியவில்லை. ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் தூண்கள் இறக்கியது போன்ற விழுதுகளைக் கடந்த ஒற்றையடிப் பாதையில் அவர்கள் நடந்தார்கள். நெடுந்தொலைவு சென்றதும் ஒரு பெரிய கல்மண்டபம் போன்ற அதன் அடிமரம் தெரிந்தது. அந்த அடி மரத்தின் கீழ்ப்பகுதியில் மரப் பொந்து போல் இயல்பாகவே ஒரு வாயிலும் தென்பட்டது. திருக்கானப்பேர்க் காட்டில் பல பழைய மருத மரங்களும், புளிய மரங்களும் இப்படிப் பெரிய பெரிய அடிப்பொந்துகளை உடையதாக இருப்பதை அவன் கண்டிருக்கிறான். ஆனால் இந்த மரப் பொந்திலோ உள்ளே மிகப் பெரிய இடம் இருக்கும் என்று தோன்றியது. அடி மரத்தின் பிலம் போன்ற வாயைச் சுட்டிக்காட்டி உள்ளே போகலாம் என்பது போல் இளைய நம்பிக்குச் சைகை செய்துவிட்டு வெளிப்புறமே ஒதுங்கி நின்று கொண்டான் உடன் வந்த வீரன்.

விரைந்து துடிக்கும் நெஞ்சத்தோடு உள்ளே நுழைந்த இளைய நம்பி தன் கண்களின் எதிரே மெய் சிலிர்க்கும் காட்சியைக் கண்டான். வியப்பினால் அவன் கண்கள் இமையாமல் நேர் எதிரே பார்த்தன.

ஒரு காலைச் சாய்த்து மடக்கி மறு காலைக் கீழே தொங்க விட்டபடி திடீரென்று உள்ளே நுழைகிறவர்களின் கண்களில் தென் திசைக் கடவுள் ஆலமரத்தடியில் யோகியாக அமர்ந்து தென்படுவது போல் தென்பட்டார் மதுராபதி வித்தகர். அந்தத் தட்சிணாமூர்த்தியின் அருள் கூட இனிமேல் பாண்டியர் பரம்பரையினருக்கு இந்தத் தட்சிணாமூர்த்தியின் உதவியால் தான் கிடைக்க வேண்டும் போலும் என்று அவனுக்குத் தோன்றியது. வெண்மையின் ஒளியும், கருமையின் கூர்மையும் தனித்தனியே தெளிவாகத் தெரியும் இரண்டு அற்புதமான கண்கள் அந்தப் பரந்த முக மண்டலத்திலிருந்து வெண்ணெயில் கரு நாவற்பழம் பதித்தது போல் அவனை நோக்கி விழித்தன. வெண்சாமரம் போன்று நன்றாக நரைத்து வெளுத்துவிட்ட சடைமுடிக் கற்றைகள் அவிழ்ந்து தோள்களிலும் பிடரியிலும் சரிந்திருந்தன. ஒரு கிழச் சிங்கம் அமர்ந்திருப்பது போல் அந்தப் பிடரி மயிரும் நேரே பார்க்கும் பார்வையும் அவன் கண்களுக்கு அவரைக் காட்டின. அந்த அரிமா நோக்கின் கூர்மை அவரிடம் பேசுவதற்கு என்று அவன் நினைத்த வார்த்தைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் குத்திக் கீழ் விழச் செய்தது. அங்கிருந்த அகல் விளக்கின் ஒளியில் அவர்கள் கையிலிருந்த வெள்ளெருக்கம் பிரம்பும் மிகப்பெரிய படைக்கருவி போல் தோன்றி அவன் பார்வையை மருட்டியது. சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து அந்த மாபெரும் இராஜதந்திரியை வணங்கினான் இளையநம்பி. அவன் அறிமுக உறவு சொல்லிக் கொள்ளு முன் அவரே அவனைப் பெயர் சொல்லி அழைத்தார்.

அவருடைய கணீரென்ற குரல் அவனை வாழ்த்தியது. எழுந்து நின்றவன் என்னென்ன வார்த்தைகளையோ அவரிடம் பேச நினைத்து முடிவில் தொடர்பில்லாமல் ஏதோ மூன்று வார்த்தைகளைச் சொன்னான்.

"நன்றாக இருட்டி விட்டது."

"ஆமாம்! பாண்டிய நாட்டில் இருட்டிப் போய் நெடுங்காலமாகிறது தம்பீ!"

இந்த வாக்கியத்தின் பொருளாழம் அவனுக்குப் புரிந்தது.

"மன்னிக்க வேண்டும் ஐயா! பொழுது சாய்வதற்குள் தங்களைக் காண்பேன் என்று பாட்டனாரிடம் சொல்லி விட்டு வந்தேன்; இந்த இடத்துக்கு நான் வருவதற்குள்..."

"மிகவும் துன்பப்பட்டிருப்பாய் என்பது எனக்குத் தெரியும். எப்படி வரவேண்டும், என்னென்ன நல்லடையாளச் சொற்கள் பயன்படும் என்றெல்லாம் உன் பாட்டனாருக்கு நான் விவரமாகச் சொல்லியனுப்பியிருக்க முடியும். இவ்வளவு சிரமங்களையும் கடந்து நீ இங்கு வந்து சேர்கிற திறன் உடையவனா, இல்லையா என்று அறிவதற்காகவே நான் எதையும் சொல்லவில்லை."

"பெரிய சோதனை இது!"

"சோதனைகள் அதிகம் எதிர்ப்படாத வாழ்வு வீரனுடைய வாழ்வாக இருக்க முடியாது."

"தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியினால் தான் சோதனைகளைத் தாங்கும் வலிமை அடியேனுக்குக் கிடைக்க வேண்டும்." கூறிக்கொண்டே பிறர் புரிந்து கொள்ள எந்த உணர்ச்சிகளும் தெரியாததும், பிறரைப் புரிந்து கொள்ள எல்லாச் சாதுரியங்களும் கருவிகளும், ஊடுருவுகிற பார்வைகளும், எதுவும் தப்பிவிடாமல் பிடித்திழுக்கும் கண்களும் அமைந்த அந்த விசாலமான முகத்தை நன்றாகப் பார்த்தான் இளையநம்பி. அளக்க முடியாத அளவும் பொருளும், கலக்க முடியாத நிலையும் தோற்றமும் உடைய ஒரு பெரிய மலையோ, கரை காணாத மகா சமுத்திரமோ எதிரே அமைந்திருப்பது போல் பிரமை தட்டியது.

"என்ன பார்க்கிறாய்? பெரும்படையும், ஆயுதங்களும், கோட்டை கொத்தளங்களும் உடைய களப்பிரரை வெறும் வெள்ளெருக்கம் பிரம்போடு ஆலமரத்தடியில் அகல் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்திருக்கிற இந்தக் கிழவனா வென்று விடப் போகிறான் என்று தானே நினைக்கிறாய்?"

 

"நான் அப்படி நினைக்க மாட்டேன் ஐயா! மனிதர்களை எதிர்க்கத்தான் ஆயுதங்கள் வேண்டும். பேய்களை விரட்ட வெள்ளெருக்கம் பிரம்பே போதும். களப்பிரர்கள் பேய்கள் போல்தான் இந்த மண்ணைப் பிடித்திருக்கிறார்கள்."

"வாழ்க! உன் நெஞ்சின் ஆழத்திலிருக்கும் தேசபக்தி என்ற நெருப்பு இன்னும் அவியவில்லை. உன் வார்த்தைகள் அதைக் காட்டுகின்றன."

"இப்படிப்பட்ட உள்நெருப்பு அவியாதவர்கள் இந்த மாபெரும் பாண்டி மண்டலத்தில் எல்லா ஊர்களிலும் இன்னும் நிச்சயமாக இருப்பார்கள் ஐயா."

"அவர்களைத் தேடி ஒன்று சேர்ப்பதுதான் என் வேலையாக இருக்கிறது தம்பீ! இந்தத் திருமோகூரிலும் கூடல் மாநகரிலும் மறையவர் திருவீதிகளில் யாக சாலைகள் இருக்கும். அந்த யாக சாலைகளில் எவனோ ஒரு முதல் முனிவன், என்றோ பல்லூழி காலத்திற்கு முன் ஏற்றிய புனித நெருப்பு ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக இன்னும் அவியாமல் காக்கப்படுகிறது. மிக மூத்த அரச குலங்களில் ஒன்றாகிய பாண்டியர் குலத்தின் தேசபக்தியும் அப்படிக் காக்கப்பட வேண்டும். அந்த நெருப்புச் சிறிதா பெரிதா என்பது கேள்வியில்லை. நெருப்புக்கும் விதை நெல்லுக்கும் சிறிய அளவிலிருந்து பெரிய அளவைப் படைக்கும் ஆற்றல் உண்டு."

"நம்முடைய வேள்விச் சாலையில் நீறு பூத்திருக்கும் தேச பக்தி என்ற நெருப்பை வளர்க்கும் ஒரே முனிவராக இன்று நீங்கள் இருக்கிறீர்கள் ஐயா!"

"தம்பி! உன்னுடைய புகழ் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கமாட்டா. வார்த்தைகளில் நான் என்றுமே மகிழ்வதில்லை. புலவர்களின் சொற்களில் மகிழலாம். இராஜதந்திரிகள் சாதனைகளில்தான் மகிழ முடியும். நீ சொல்லிச் செலவழித்துவிடும் வார்த்தைகள் உன்னிடமிருந்து வெளியேறிப் போய் காற்று என்னும் சப்தங்களை உள்ளடக்கும் மகாசப்த சாகரத்தில் மூழ்கிக் கரைந்து விடுகின்றன. நீ இதுவரை சொல்லாத வார்த்தைகள் தான் இனி உனக்குச் சொந்தம். நம் பாண்டிய மன்னர்களையும், அவர்களது கோநகரான மாமதுரையையும், பூம்புனல் ஆறாகிய வையையும் எத்தனை எத்தனை வார்த்தை அலங்காரங்களால் புகழ்ந்து புலவர்கள் வருணித்தார்கள்? அந்தப் புகழ் இன்று எங்கே போயிற்று? அந்தச் சங்கப் புலவர்கள் இன்று எங்கே போனார்கள்? அவர்கள் கொலுவீற்றிருந்த தமிழ்ச் சங்கம் தான் இன்று எங்கே போயிற்று? அவர்கள் வளர்த்த தமிழ் எங்கே போயிற்று? அந்த நாகரிகம், அந்தக் கலைகள், அந்த வாழ்வு எல்லாவற்றையும் இன்று களப்பிரர்கள் இருளடையச் செய்து விட்டார்களே!"

"ஒவ்வோர் இருட்டுக்குப் பின்னும் ஒரு வைகறை உண்டு ஐயா!"

"வெறும் வார்த்தைகளை அலங்கரித்துப் பந்தல் போடும் அந்தக் கவிகளின் குணம் உனக்கும் சற்று இருக்கும் போலிருக்கிறது தம்பீ! புகழை நம்பாதே. உன்னைப் புகழ்கிறவர்கள் உன்னுடைய கடந்த காலத்துக்கு அந்த வார்த்தைகள் மூலம் உன்னை ஏணி வைத்து ஏற்றிச் செல்கிறார்கள். இருளுக்குப் பின் வைகறை வரும் என்று சோம்பியிராதே. வைகறையை எதிர்கொள்ளப் பாடுபடு! விழித்திரு! நீ உறங்கிக் கொண்டிருப்பாயானால் உன்னால் வைகறையைக் கூடக் காண முடியாது."

"பாட்டனார் என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார் ஐயா! நான் மதுரை மாநகரில் என்னென்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்களோ அவற்றை எல்லாம் குறைவுபடாமற் செய்து வரச் சித்தமாயிருக்கிறேன்."

"களப்பிரர்கள் இப்போது செய்திருக்கும் கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையானவை. அகநகரிலும் புறநகரிலும் பூதபயங்கரப் படையினர் மாறுவேடத்தில் திரிகிறார்கள். எந்த வழியாகவும் நீ அகநகரில் கோட்டைக்குள் நுழைவது என்பது பெரு முயற்சியாகத்தான் இருக்கும்."

"ஐயா! நாளைக்கு வைகறை வேளையில் நான் கோட்டைக்குள் போவது ஓரளவு சுலபமாயிருக்கும் என்று எண்ணுகிறேன். விடிந்தால் மதுரையில் அவிட்ட நாள் பெருவிழா. தலைநகரம் கோலாகலமாகவும், மக்கள் கூட்டம் நிரம்பியும் இருக்கும். பாதுகாப்பு விதிகள் அவ்வளவு கடுமையாக இருப்பது திருவிழாக் காலங்களில் சாத்தியமில்லை. இருந்த வளமுடையாரையும், அந்தர வானத்து எம்பெருமானையும் தொழுவதற்காகப் பாண்டி நாட்டின் பல்வேறு திசையிலிருந்தும் மக்கள் கூடும் நாளில் அடியேனும் அந்நகருக்குள் போவது சுலபமாயிருக்கும் என்றே தோன்றுகிறது."

"இளையநம்பி! நீ நினைப்பது தவறான அநுமானம். நம்முடைய திருவிழாக்களை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாட விடுவதற்குக் களப்பிரர்கள் மனம் ஒப்ப மாட்டார்கள். இந்தப் பேய்கள் விரட்டப்படுகிறவரை பாண்டியர் தலைநகரில் உன்னுடைய முன்னோர்களின் புகழ்பெற்ற திருவிழாக்கள் கிடையாது."

வாளின் நுனிபோல் கூரியதாயிருந்த அவரது நாசியையும், அழுத்தமான பெரிய உதடுகளையும், அதனிடையே வெளேரென்று ஒளிவீசும் பற்களையும், சிவந்த முகமண்டலத்தையும் ஏறிட்டுப் பார்த்து அவர் கூறியதை மறுக்கத் துணிவின்றி நின்றான் இளையநம்பி. அதன் பின் நீண்ட நேரம் களப்பிரர் ஆட்சி சில தலைமுறைகளில் செய்துவிட்ட கொடுமைகளை ஒவ்வொன்றாக அவனுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர். அவற்றைக் கேட்கக் கேட்க அந்த இளம் வீரனின் தோள்கள் தினவு எடுத்து விம்மின. இரத்தம் கொதித்தது.

"தம்பீ! இரவு நெடுநேரமாகிவிட்டது! உன்னுடைய தோட் கோப்பிலிருந்து திருக்கானப்பேர்க் கட்டுச்சோறு மணக்கிறது. திருக்கானப்பேரில் தயிர் அமிர்தமாக இருக்கும். நெடுங்காலத்திற்கு முன் உன் பாட்டனார் விழுப்பரையரோடு விருந்துண்டு மகிழ்ந்திருக்கிறேன். இப்போது நீ உண்டு முடித்த பின் அங்கேயே உறங்கலாம். நீ மதுரை மாநகருக்குப் போவது பற்றி நாளை விவரம் சொல்லுகிறேன்."

 

"ஐயா! திருக்கானப்பேர்த் தயிரை இவ்வளவு புகழும் நீங்கள் இந்தக் கட்டுச் சோற்றை என்னோடு பகுத்துண்ணலாம் அல்லவா?"

"நானா? இரவில் உண்பதை நான் நிறுத்திப் பல ஆண்டுகள் ஆயிற்றுத் தம்பீ! பகலில் கூட நான் உண்ணும் உணவுகள் பிறருக்குக் கசப்பானவை."

"தாங்கள் கூறுவது விளங்கவில்லையே?"

"போகப் போகத் தானே விளங்கிக் கொள்வாய்? இப்போது நீ உண்ணலாம். அந்த மூலையில் மண் கலத்தில் பருக நீர் இருக்கிறது. உண்டு முடித்ததும் இதோ இந்தப் பட்டைக் கல்லில் படுத்து உறங்கு. வழிப்பயணக் களைப்போடு உறக்கத்தையும் கெடுத்துக் கொள்ளாதே. எனக்கு இரவில் சிறிது தொலைவு காலார நடக்கும் வழக்கம் உண்டு. நான் திரும்பி வர இரண்டு நாழிகை ஆகலாம். அதுவரை எனக்காக நீ விழித்திருக்க வேண்டும் என்பதில்லை" என்று கூறிவிட்டு வெளியேறுவதற்காக எழுந்து நின்றார் மதுராபதி வித்தகர். அந்தத் தோற்றத்தின் உயரம் திடீரென்று தன்னைச் சிறியவனாக்கி விட்டது போல் உணர்ந்தான் இளையநம்பி. சாமுத்ரிகா லட்சணங்கள் எல்லாம் அமைந்த ஒரு யவன வீரனைத் தமிழ்நாட்டுக் கோலத்தில் மூப்போடு பார்த்தது போலிருந்தது அவர் நின்ற காட்சி. சிங்கம் பார்ப்பது போல் நேர் எதிரே நிலைக்கும் அந்தப் பெரிய கண்கள், அவர் அங்கிருந்து வெளியேறிய பின்பும் தன்னை இடைவிடாமல் பார்த்துக் கொண்டே இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. எதிராளியின் நினைவில் ஓர் எச்சரிக்கை போல் பதியும் அந்தக் கண்களைப் பற்றியே நினைத்து வியந்து கொண்டிருந்தான் இளையநம்பி.

உண்டு முடித்ததும் பலகை போலிருந்த அந்தக் கல்லில் படுத்த போது தான் சற்று முன் அவர் அமர்ந்திருந்த கல்லை ஒட்டி ஒரு பெரிய புற்று இருப்பதை அவன் காண நேர்ந்தது. எப்போதென்று தெரியாத ஏதோ ஒரு நேரத்தில் அவன் தன்னையறியாமலே அயர்ந்து உறங்கிவிட்டான். அவனுடைய சொப்பனத்தில் கொற்றவை கோயிலுக்கு நெய் விளக்குப் போடும் அந்தப் பேரழகியான திருமோகூர்ப் பெண் வந்தாள். கலப்பைக்குக் கொழு அடிக்கும் அசுர ஆகிருதியோடு கூடிய அந்தக் கரும்பொற்கொல்லன் வந்தான். இன்னும் யார் யாரோ வந்தார்கள்.

குளிர்ந்த காற்றும் வைகறையை வரவேற்கும் பறவைகளின் பல்வேறு ஒலிகளும் அவனை எழுப்பின. எழுந்து உட்கார்ந்து எதிரே பார்த்தவன் குருதி உறைந்து போகும்படியானதொரு காட்சியைக் கண்டான். அவனுக்குப் பேச நா எழவில்லை. உடல் புல்லரித்தது. அந்தப் பெரிய விழிகள் எப்போதும் போல் அவனை இமையாமல் நோக்கிக் கொண்டிருந்தன.

 

3. காராளர் வீட்டு விருந்து

 

ஐயா! இது என்ன கோரம்?” என்று கேட்க நினைத்து நா எழாமல் அவன் மருண்டிருப்பதைப் பார்த்துத் தம்முடைய வெண்பற்கள் தெரியச் சிரித்தார் அவர். அந்த அகன்ற நெற்றியில் உணர்ச்சிகளைப் படிக்க முடியாமல் திகைத்தான் அவன்.

நீ பயப்படுவாய் என்று எனக்குத் தெரியும்! தங்கத்தைப் புடம் போடுவது போல் இந்த உடலைப் புடம் போட்டு எடுத்திருக்கிறேன். எனக்கு எதுவும் கெடுதல் வரமுடியாது.”

அவருடைய கழுத்திலும் தோள்களிலும் முழங்கால்களிலும் கன்னங்கரிய நாகசர்ப்பங்கள் நெளிந்து கொண்டிருந்தன. அருகிலிருந்த புற்றின் துவாரங்களிலே மேலும் சில சர்ப்பங்கள் இருள் வழிவது போன்ற நிறந்த்தில் நெளிந்து கொண்டிருந்தன. கொடிய நஞ்சு அடங்கியது என்று கருதப்படும் காஞ்சிரங்காய் ஒன்றைக் கடித்துத் தின்று கொண்டிருந்தார் அவர்.

எரிகின்ற தழல் போன்ற நிறத்தைக் கொண்டிருந்த மேனியில் கரிய சர்ப்பங்களையும் சேர்த்துப் பார்த்த போது ஓர் அசைப்பில் முதல் நாள் தோன்றியது போலவே ஆலமர் கடவுளின் கோலம் இளைய நம்பியின் கண்களுக்குத் தெரிந்தது. காலங்கள் செய்யும் மூப்புக்களை வென்று காலங்களையே மூப்படையச் செய்யும் வைரம் பாய்ந்த அந்த மேனியின் இரகசியம் அவனுக்கு இப்போது ஓரளவு புரிந்தது.

பாட்டனார் சொல்லியிருந்த பெரியவரின் வயதிலிருந்து அவர் மூத்துத் தளர்ந்து போயிருக்கக்கூடும் என்று திருமோகூரில் நுழைந்த வேளையில் தனக்குத் தானே செய்து கொண்ட அநுமானம் எவ்வளவு பிழையானது என்பதை இப்போது இளைய நம்பி உணர்ந்தான். அந்த உடலில் மூப்பின் சாயல் தெரிந்தது; ஆனால் தளர்ச்சியின் சாயல் கூடத் தெரியவில்லை.

ஐயா! ‘சுடச் சுடரும் பொன்போல் ஒளிரும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு - என்று நம்முடைய செந்நாப் போதர் கூறியருளியிருக்கும் குறளுக்கு இப்போது அடியேனுக்கு நன்றாகப் பொருள் புரிகிறது. இத்தனை மூப்பிலும் தங்கள் திருமேனி பொன் தழலாக மின்னுவது பெரிய சித்தி ஐயா!”

என்னுடைய மூப்பைப் பற்றி நினைக்க எனக்கு நேரமில்லை தம்பீ! புகழ்கிறவர்கள்தான் எனக்கு அதை நினைவூட்டவே செய்கிறார்கள். நான் ஏன் இப்படி விநோதமான வழக்கங்களை உடையவனாக இருக்கிறேன் என்பது உன் ஐயப்பாடாக இருக்கலாம். கபாடங்களில் முத்துக்கள் ஒளிரும் மதுரைக் கோட்டையில் மறுபடி பாண்டியர்களின் புகழ் பெற்ற மீனக் கொடி பறக்கிறவரை நான் சாகக் கூடாது என்று எனக்குள் நானே உறுதி செய்து கொண்டிருக்கிறேன். காடுகளிலும், மலைகளிலும், ஊர்ப்புறமான தோட்டங்களிலும் மறைந்து வாழும் எனக்கு நச்சுப் பிராணிகளாலும், கொடிய விலங்குகளாலும் எதுவும் நேர முடியாதபடி என் சரீரத்தைப் பழைய முனிவர்களின் மருந்து முறைப்படி புடம் போட்டு வைத்திருக்கிறேன். இதோ என் கையிலிருக்கிறதே காஞ்சிரங்காய்; இதில் அணுப்பிரமாணம் நீ தின்றாலும் உன் சரீரம் அடுத்த சில விநாடிகளில் நீலம் பாய்ந்து மூச்சுத் திணறி நீ இறந்து விடுவாய். ஆனால் எனக்கோ இது மாங்காய் தின்பது போல் விருப்பமான காரியம். பாண்டியர்களின் அடையாளப் பூவைத் தருவது என்பதாலோ என்னவோ எனக்கு வேப்பங் கொழுந்து என்றால் கொள்ளை ஆசை. வேப்பங் கொழுந்தை மையாய் அரைத்து வெண்ணெய் போல் மிருதுவாகும்படி செய்து இரண்டு மாங்காய் அளவு உண்பேன். இந்திரியங்களை வற்றச் செய்து இப்படிப் புடம் போட்டு இந்த உடலை நான் காப்பதெல்லாம் எதற்குத் தெரியுமா?”

தெரியும் ஐயா! அதற்காகப் பாண்டிய மரபின் கடைசித் துளி இரத்தமும் உங்களுக்கு நன்றியுடையதாக இருக்கும்நான் உண்ணும் உணவுகள் பிறருக்கு கசப்பானவை என்று நேற்றிரவு தாங்கள் கூறியதன் பொருள் இப்போது புரிந்தது.”

அதனால் உலகோர் உண்ணும் பிற உணவுகளை நான் வெறுக்கிறேன் என்று பொருளில்லை. அவற்றையும் நான் உண்பது உண்டு. ஆனால் எதை எதை நான் உண்ணலாம் என்பதற்கும், எதை எதை நான் உண்ணக்கூடாது என்பதற்கும் கடுமையான நியமங்கள் வைத்துக் கொண்டிருக்கிறேன்.”

அவனிடம் பேசிக் கொண்டே சர்ப்பங்களை ஒவ்வொன்றாகப் புற்று வாயில் எடுத்து விட்டார் அவர். கருமை ஒழுகுவது போல் படமும் உடலும் மின்னும் ஒவ்வொரு சர்ப்பமும் கொடியாய் வழிந்து அவர் கையிலிருந்து புற்றில் இறங்கும் காட்சி மீண்டும் அவனைப் புல்லரிக்கச் செய்தது.

நீ போய்த் தாமரைப் பொய்கையில் நீராடி வரலாம் இளையநம்பீ! இங்குள்ள மிகப்பெரிய தாமரைப் பொய்கை நேர் மேற்கே மூங்கில் தோப்புக்களின் நடுவே இருக்கிறது. உன்னுடைய உணவு வசதிகளைப் பற்றிக் கவலைப்படாதே. திருமோகூர்ப் பெரியகாராளர் மனையில் நெய்யும் மிளகும் கமகமவென்று மணக்க உனக்கு விருந்து கிடைக்கப் போகிறது. இன்னும் சிறிது நேரத்தில் பெரிய காராளர் உன்னை அழைத்துப் போக இங்கு வருவார். உங்கள் திருக்கானப்பேர் நகரம் முல்லை நிலம் சூழ்ந்திருப்பதாலும் பசுக்கள் மிகுந்திருப்பதாலும் நன்றாக உறையிட்ட தயிருக்கு அது புகழ் பெற்றிருக்கிறது. இந்த ஊர்ப் பெரியகாராளர் வீட்டு வெண்பொங்கலும், மோர்க் குழம்பும், நெய் அதிரசங்களும் இணையிலாச் சுவையுடையனவாக இருக்கும். நீ கொடுத்து வைத்தவன்.”

ஐயா! தலைநகருக்கு அடியேன் எப்போது புறப்பட வேண்டியிருக்கும்?”

போய் நீராடிவிட்டு வா... உன்னுடைய பயணமும் பெரியகாராளர் இங்கு வந்த பின்பு தான் முடிவாகும்!”

 

அவன் மரப் பொந்திலிருந்து வெளியேறி இரண்டு பாக தூரம் கூட நடந்திருக்க மாட்டான். பின்புறமிருந்து அவருடைய குரல், “தம்பீ! இதையும் கேட்டு விட்டுப் போ என்று மீண்டும் கூப்பிடவே அவன் விரைந்து திரும்பி அவரை நோக்கி நடந்தான்.

உன்னிடம் ஓர் எச்சரிக்கை; உன்னுடைய வலது தோளின் மேற்புறம் சங்குபோல் ஒரு தழும்பு இருக்கிறதில்லையா, அந்தச் சங்குத் தழும்பை இன்றோ, இனி எதிர்காலத்திலோ நீ நீராடும் போதோ மேலங்கியைக் களைந்து ஓய்வு கொள்ளும்போதோ அந்நியர் எவரேனும் வெறித்துப் பார்த்தால் எச்சரிக்கையாயிரு! அது உன் வாழ்வுக்கு அபாயத்தைத் தேடி வரலாம்.”

ஐயா! அது தங்களுக்கு எப்படித் தெரியும்? ‘இந்தப் பிள்ளையின் எதிர்கால நன்மைக்காக என்று சிறுவயதில் யாரோ ஒரு பெரியவர் அந்த அடையாளத்தை நெருப்பில் காய்ச்சி இட்டதாக என் பாட்டனார் சொல்லியிருக்கிறார். நீங்களோ இப்போது அதனால் தான் எனக்கு அபாயங்களே வரும் என்கிறீர்கள்?”

உனக்கும், இன்னும் வேறு நான்கு குழந்தைகளுக்கும் தாமிரத்தில் சிறிய அழகிய வலம்புரிச் சங்குபோல் வார்த்து அதை நெருப்பில் காய்ச்சி அந்த முத்திரையை இட்டதே நான் தான். ஐந்து குழந்தைகளுக்கு நான் அந்த முத்திரையை இட்டேன். அவர்கள் ஐவருமே இன்று உயிரோடிருந்தால் உன்னைப் போல் சுந்தர வாலிபர்களாயிருப்பார்கள். இரண்டு பேரைக் களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்று விட்டார்கள். இன்னும் மூன்று பேர் மீதியிருக்கிறார்கள். நான் இட்ட மங்கல முத்திரையின் நற்பயனை இவர்கள் மூவருமாவது அடைய வேண்டும் என்பது என் விருப்பம்.”

மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள் ஐயா?”

இப்போது நீ அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தம்பீ! நீங்கள் மூவரும் சந்தித்துக் கொள்ள ஒரு சமயம் வரும். அப்போது பார்க்கலாம்.”

இந்த விஷயம் அவனுக்குப் பெரும் புதிராக இருந்தும் இதைப் பற்றி அவரிடம் மேலும் மேலும் வினாவிக் கொண்டிருப்பது நன்றாயிராதென்று எண்ணி, அவருடைய எச்சரிக்கையை மட்டும் அப்படியே ஏற்றுக் கொண்டு நீராடி வர நடந்தான் இளையநம்பி.

வயல் வெளிகளில் இளங்காற்றில் ஆடும் பசும் பயிர்ப் பரப்பிலும், குளங்களில் மலர்ந்த தாமரைப் பூக்களிலும், பனித்துளி முத்துக் கோத்த புல் நுனிகளிலும், சிவந்து கொண்டிருந்த கீழ் வானத்திலும், வைகறையின் அழகுகள் சிதறியிருந்தன. தண்ணீர் நிரம்பியிருக்கும் இடமெல்லாம் தாமரை பூத்திருந்த அந்த ஊரின் வளமும் செழிப்பும் அவனுக்கு உள்ளக் கிளர்ச்சியை அளித்தன. அந்த ஊரை அவன் மிகவும் விரும்பினான்.

 

பொய்கைக் கரையில் நீராடுவதற்காக மேலங்கியைக் கழற்றியபோது வலது தோளின் செழிப்பான சிவந்த மேற்புறத்தில் மைக்கோடுகளாய் விளங்கிய சங்கு முத்திரையை அவன் தானே ஒரு புதுமையைப் பார்ப்பது போல் இன்று பார்த்துக் கொண்டான். அவன் மறந்திருந்த ஒன்றை அதிகம் ஞாபகத்துக்குரியதாகச் செய்துவிட்டார் மதுராபதி வித்தகர். சிறிய வயதில் யாரோ ஒரு பெரியவர் செய்த மங்கல நல்லாசி என்று அவன் மறந்திருந்த ஒன்றை இன்று நிகழ்கால அபாயத்துக்குரியதாகவும் எதிர்கால நன்மைக்குரியதாகவும் பாதுகாக்க வேண்டியதாய்ப் புரிந்து கொள்ள நேர்ந்து விட்டது. ‘இந்த முத்திரையை உடைய ஐவரில் இருவரை ஏன் களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்றார்கள்? மீதமிருக்கும் தன்னையுள்ளிட்ட மூவருக்கும் இதனால் அபாயங்கள் நேரிடலாம் என்று பெரியவர் கூறுவதற்குக் காரணம் என்ன?’ என்பதை எல்லாம் அவனால் உடனே விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. அவர் கூறியவை யாவும் தனக்கும், அரசிழந்து ஒடுக்கப்பட்டு நலிந்து கிடக்கும் பாண்டியர் பெருமரபிற்கும் நன்மை செய்யக் கூடியனவாகவே இருக்கும் என்பதை நம்பி அவைகளைப் பற்றி மேலும் மேலும் நினைத்து மனத்தைக் குழப்பிக் கொள்வதைத் தவிர்த்தான் இளைய நம்பி.

ஆடைகளை உலர்த்தி அணிந்து கொண்டு அவன் ஆலமரத்திற்குத் திரும்பிய போது மதுராபதி வித்தகரிடம் அவருடைய உயரத்திற்கு சரிபாதி உயரம் கூட இல்லாத சற்றே பருத்த ஒரு நடுத்தர வயது மனிதர் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் தான் திருமோகூர்ப் பெரியகாராளராயிருக்க வேண்டும் என்று அவன் புரிந்து கொண்டான். அவன் உள்ளே நுழைந்ததும் அந்தப் புதிய மனிதர் அவனை நோக்கி முகம் மலர்ந்து கைகூப்பி வணங்கினார். உயர்ந்த குடிப் பிறப்பின் கம்பீரம் அந்த முகத்தில் தெரிந்தது. கண்களில் கருணை மயமான சாயலைக் காண முடிந்தது. இளையநம்பி அவரைப் பதிலுக்கு வணங்கினான்.

தம்பி! இவரை நீ தெரிந்து கொள்ள வேண்டும். என்னை நிழல் போல் நீங்காமல் பாதுகாத்துவரும் முனையெதிர்மோகர் படை இளைஞர்களுக்கும், தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் வயிறு வாடாமல் சோறளித்துக் காக்கும் திருமோகூர்ப் பெரியகாராளர் இவர்தான். இவருடைய செந்நெற் கழனிகளில் விளையும் நெல்லெல்லாம் இந்தப் பகுதியிலும், சுற்றுப் புறங்களிலும் மறைந்திருக்கும் நம்மவர்களுக்குப் பயன்படுகின்றன. மறுபடி பாண்டியராட்சி மலர வேண்டும் என்று அக்கறை காட்டும் நல்லவர்களில் இவர் முதன்மையானவர். அரசியல் காரணங்களுக்காகவும், தான் செய்து வரும் உதவிகள் களப்பிரர்களால் தடுக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காகவும் அந்தரங்கமாகவும் தந்திரமாகவும் இவர் அதைச் செய்து வருகிறார். இன்று நண்பகலில் இவர் நீ தலைநகரை அடைவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார். ஒரு மண்டலம் நீ அகநகரிலும் சுற்றுப் புறங்களிலும் அலைந்து நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன என்று அறிந்து வர வேண்டும். நீ போகிற இடங்களில் எல்லாம் நம்மவர்கள் நிறைய இருக்கிறார்கள். நம்மைத் தொலைத்துப் பூண்டோடு கருவறுத்து அழித்துவிட நினைப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். இரு தரப்பாரையும் நீ இனங்கண்டு கொள்ள வேண்டும். ‘வாயிலிருக்கிறது வழி - என்ற பழமொழி ஞாபகம் இருக்கட்டும். உன்னுடைய நல்லடையாளச் சொல்லுக்கு எந்த இடத்தில் மறுமொழி கிடைக்கவில்லையோ அங்கே சந்தேகம் எழ இடமின்றி உடனே பாலியில் பேசிவிடு. நம்முடைய காரியங்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக உனக்கு ஓரளவு பாலி மொழியும் கற்பித்திருப்பதாக உன் பாட்டனார் திருக்கானப்பேர் விழுப்பரையர் ஏற்கனவே முன்னொரு சமயம் எனக்குச் சொல்லியனுப்பியிருந்தார். தங்களை எதிர்ப்பதற்கு எந்தக் கலகத்தை யார் செய்தாலும் அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும் சாதனங்களை உடையவர்களாகவும் இருக்கக் கூடாது என்பதற்காகக் களப்பிரர், குதிரைகள், யானைகள், தேர்கள், படைக்கலங்கள் போன்றவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி செய்து விட்டார்கள். அதை நாம் பொருட்படுத்தா விட்டாலும் நம்மிடையே நாம் பயன்படுத்துவதற்குக் குதிரைகளும், யானைகளும், தேர்களும், படைக்கலங்களும் இன்று அதிகம் இல்லை.”

நாம் நினைத்தால் அவற்றைப் படைத்துக் கொள்ள முடியும் ஐயா! அதற்கு வேண்டிய ஆட்களை நாம் மிக எளிமையாகத் தேடி விட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த திருமோகூர் வேளாளர் தெருவில் ஒரு வலிமை வாய்ந்த கொல்லனை நேற்று நான் சந்தித்தேன். மீண்டும் பாண்டியராட்சி மலர்வதற்காக அவன் எந்த ஒத்துழைப்பையும் அளிக்க ஆயத்தமாயிருப்பான்.”

தம்பீ! நீ நேற்று மட்டும்தான் அவனைச் சந்தித்தாய். நானும் காராளரும் நாள் தவறாமல் அவனைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவன் நம்மவர்களில் ஒருவன் தான். ஆனாலும் அவன் தன்னுடைய உலைக்களத்தில் வாளும், வேலும், ஈட்டியும் செய்யக் கூடாதென்பது உனக்குத் தெரியுமா? கலப்பைக்கு கொழு அடிப்பதை மட்டும்தான் களப்பிரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.”

இவ்வளவு பயங்கரமான அடிமைத்தனத்தில் இந்த மங்கலப் பாண்டிவள நாடு முன்பு எந்தக் காலத்திலும் வாழ்ந்திருக்க முடியாது ஐயா!”

கவலைப்படாதே தம்பீ! மக்களின் நியாயமான நல்லுணர்ச்சிகளை ஒடுக்கும் எந்தக் கொடுங்கோல் ஆட்சியும் நிலைக்க முடியாது. அழ அழக் கொள்ளையடித்த செல்வங்கள் எல்லாம் அழ வைத்துவிட்டே நீங்கும். அடிமைப்படுத்துகிற ஒவ்வொருவரும் தன் பிடி இறுக இறுக அதே வேகத்தில் சுதந்திர உணர்ச்சி வளர முடியும் என்பதை மறந்து விடுவது வழக்கம். களப்பிரர்களுக்கும் இன்று அந்த மறதி வந்து விட்டது. இந்த ஆண்டிற் குளித்த கொற்கைத் துறை முத்துக்கள் எல்லாவற்றையும் சோனர்களுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு அதற்கு விலையாக குதிரைகள் பெற ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். சோனகா நாட்டிலிருந்து வரும் இந்தக் குதிரைக் கப்பல் கொற்கைத் துறையை வந்தடையும் நாளையும், துறைமுகத்திலிருந்து அவற்றைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள், எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள் என்பதை எல்லாம் நீ தெரிந்து சொல்லியனுப்ப வேண்டும். இவற்றை உன்னிடமிருந்து தெரிந்து எனக்கு வந்து சொல்லவும், என்னிடமிருந்து தெரிவனவற்றை உனக்கு வந்து சொல்லவும் உரியவர்கள் மதுரை மாநகரில் அவ்வப்போது உன்னைச் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இப்போது நீ புறப்படலாம். காராளர் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். மற்ற விவரங்களைப் போகும் போதே அவர் உன்னிடம் சொல்வார்.”

பெரியவரை வணங்கி ஆசி பெற்றுப் புறப்பட்டான் இளையநம்பி.

 

4. செல்வப் பூங்கோதை

 

ஐயா! முனையெதிர் மோகர் படைக்கும் தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் இவ்வளவு உதவிகளைச் செய்யும் உங்களுக்குக் களப்பிரர்களால் எந்தக் கெடுதலும் வராமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை என்று உடன் நடந்துகொண்டே பெரியகாராளரிடம் கேட்டான் இளையநம்பி. அதற்கு அவர் மறுமொழி கூறினார்:

எனக்கு அப்படிக் கெடுதல் எதுவும் வர முடியாது. களப்பிரர்களின் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு வேண்டிய போதெல்லாம் நான் தான் நெல் அனுப்புகிறேன். அதனால் என்னைக் களப்பிரர்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவன் என்று நம்பியிருக்கிறார்கள். தேசாந்திரிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், நாடோடி யாத்திரிகளுக்கும் உணவிடுவதற்குச் சத்திரங்களும், அறக்கோட்டங்களும், நடத்துவது போல் ஏற்பாடு செய்து அந்தச் சத்திரங்களிலும், அறக்கோட்டங்களிலும் நம்மவர்களுக்கு உணவளித்து வருகிறேன்.”

அதாவது தேசாந்திரிகளாகவும், நாடோடிகளாகவும் வந்த களப்பிரர்களுக்கு வெளிப்படையாக உதவுகிறீர்! இந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கு நாடோடிகளுக்கு உதவுவதைப் போலவும் உதவுகிறீர்.”

என்ன செய்யலாம்? இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படி மிகவும் தந்திரமாகத்தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.”

நான் உம்மை குறை சொல்லவில்லை காராளரே! விதியின் கொடுமையை எண்ணித்தான் கோபப்படுகிறேன். தேசாந்திரிகளாக வந்தவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம் கொண்டாடவும், இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் தேசாந்திரிகள் போல் சோற்றுக்கும் சுதந்திரத்திற்கும் அலையவும் நேர்ந்திருப்பதை எண்ணித்தான் நெஞ்சம் குமுறுகிறேன்.”

 

உங்களைப் போன்றவர்களின் குமுறல் வீண் போகாது! ‘நாட்டு மக்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் ஆட்சியை அந்தக் கண்ணீரே படைகளாகி அழித்துவிடும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.”

யாருடைய கண்ணீரையும் பற்றிக் கவலைப்படாமல் இவ்வளவு காலம் களப்பிரர்கள் ஆண்டு விட்டார்களே?”

பேசிக் கொண்டே வேளாளர் திருவீதிக்கு வந்திருந்தார்கள் அவர்கள். வாழை மரங்கள், மாவிலைத் தோரணம், பச்சை நெற்கதிர்த் தோரணம் எல்லாம் கட்டி அலங்காரம் செய்திருந்த ஒரு பெரிய மாளிகையின் வாயிலில் அவனை அழைத்துச் சென்று நிற்கச் செய்திருந்தார் காராளர்.

ஐயா! இதென்ன மங்கல அலங்காரங்கள்? நீங்கள் நாள் தவறாமல் உணவளித்துக் காப்பாற்றி வரும் எண்ணற்ற நாடோடிகளோடு ஒரு புது நாடோடியாக நானும் இப்போது வந்து சேர்ந்திருக்கிறேன். நாடு களப்பிரர்களிடமிருந்து விடுபடுகிறவரை இப்படி அலங்காரம் செய்யும் மகிழ்ச்சியைக் கூட என்னால் ஏற்க முடியவில்லை.”

அப்படியல்ல! தங்களை எப்படிச் சிறப்பாக வரவேற்க வேண்டும் என்று நல்ல வேளையாக நாங்கள் அறிந்திருக்கிறோம். நான் நடத்தும் அறக்கோட்டங்களில் வைத்து உங்களுக்கு நான் விருந்திடப் போவதில்லை. உங்களை என் இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். சற்றே இந்தச் செம்மண் கோலத்தில் நில்லுங்கள்! என் மனைவியும் மகளும் உங்களுக்கு மங்கல ஆரத்தி சுற்றிக் கொட்ட விரும்புகிறார்கள்...”

முதலில் காராளரின் மனைவியென அவனால் உய்த்துணர முடிந்த முதிய அம்மையாரை அடுத்துக் கையில் ஆரத்திப் பாத்திரத்துடன் வந்தவளைக் கண்டதும் அவன் கண்கள் வியப்பால் மலர்ந்தன. முதல் நாள் அந்தி மாலையில் கையில் விளக்கோடு கொற்றவை கோவில் வாயிலிலிருந்து அவனுக்கு வழிகாட்டிய பேரழகியே அவள்.

பெண்கள் இருவரும் தனக்கு ஆரத்தி சுற்றிக் கொண்டிருந்த போதே அவன் காராளரை நோக்கி, “ஐயா! உங்கள் மகளுக்கு நான் நிறைய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் மகளுடைய உதவி கிடைத்திராவிட்டால், நான் நேற்று மாலை நம் பெரியவருடைய இருப்பிடத்தைக் கண்டு சென்றிருக்கவே முடியாது என்று நன்றி பெருகச் சொன்னான். உடனே அவர் தன் மகளை நோக்கிச் சிரித்தபடி கேட்கலானார்:

செல்லப் பூங்கோதை! இவர் சொல்வது மெய்யா? நீ என்னிடம் சொல்லவே இல்லையே? நேற்றே இங்கு நம் இல்லத்திற்கு இவரை அழைத்து வந்திருக்கலாமே? எனக்கு இவையெல்லாம் ஒன்றுமே தெரியாமற் போய்விட்டது. அப்படியானால் நம் சிறப்புக்குரிய இந்த இளம் விருந்தாளி ஏற்கெனவே உனக்குத் தெரிந்தவராகி விட்டார் என்று சொல்...”

 

ஆரத்தி சுற்றிவிட்டுத் தலை நிமிர்ந்த அவள் இதற்கு ஒன்றும் மறுமொழி கூறாமல் அவரையும் அவனையும் பார்த்துப் புன்னகை செய்தாள். கையில் மஞ்சள் நீர் நிறைந்த அலங்காரத் தட்டுடன் நிமிர்ந்து பார்த்து நகைத்த அந்த வசீகரமான முகம் முதலில் அப்படியே சித்திரமாகப் பதியக் கூடியதாயிருந்தது.

செல்லப் பூங்கோதை என்று அவளுடைய இனிய பெயரை அவள் தந்தை அதே பாசக்குழைவுடன் இன்னொரு முறை கூப்பிட்டுக் கேட்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது அவனுக்கு. ஒளிபாயும் அந்த வெண்முத்துப் பற்களால் அவள் இன்னொரு முறை செவ்விதழ்கள் திறந்து சிரிப்பதைப் பார்க்க வேண்டும் போலவும் விருப்பமாயிருந்தது. இவளைச் சந்திக்கும் முன்பு வேறு எந்த இளம் பெண்ணைக் கண்டும் இவ்வளவு பெரிய தாபத்தையோ, தாகத்தையோ அவன் அடைந்ததில்லை.

யாருடைய புன்சிரிப்பில் உன் மனத்தின் நெடுங்காலத்து கட்டுப்பாடுகள் எல்லாம் மெல்ல மெல்லத் தகர்கின்றனவோ அவள் இதற்கு முன்பும் பல பிறவிகளில் உன்னைப் பார்த்து எப்போதோ இப்படி நகைத்திருக்க வேண்டும். விட்ட குறை தொட்டகுறையாகத்தான் இப்படிப் புன்முறுவல் பிறக்கும். அப்படி முன்பிறவியில் என் முன் முதல்முதலாக மோகப் புன்முறுவல் பூத்த முதற் சிங்காரியை வீதிகளின் முகக் கூட்டங்களில் நான் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்! இது புரியாமல் பித்தன் என்றும் காமநோயாளன் என்றும் ஊரார் என்னை ஏளனம் செய்கிறார்களே என்பதாக இளம் வயதில் திருக்கானப்பேரில் தன்னோடு ஒரு சாலை மாணாக்கனாகக் கற்று நல் வாலிபப் பருவத்தில் அவன் காதலித்த பெண்ணை அடைய முடியாமல் ஏமாறிப் பைத்தியம் பிடித்த ஓர் இளைஞன் இரவெல்லாம் தெருவில் அரற்றிக் கொண்டு திரிந்ததை இப்போது நினைவு கூர்ந்தான் இளைய நம்பி. இந்தத் திருமோகூர்ப் பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதையும் தன்னை அப்படித் தெருவெல்லாம் அலைய விட்டுவிடுவாளோ என்று கூட விளையாட்டாக நினைத்துப் பார்த்தான் அவன்.

அருமைத் தாயின் அணைப்பில் மகிழ்ந்த பருவமும், புதிய புதிய பொருள்களில் மகிழ்ந்த பருவமும், இலக்கண இலக்கியங்களையும், போர் நுணுக்கங்களையும் அறிவதில் மகிழ்ந்த பருவமும், எல்லாம் இன்று ஒரு கன்னியின் புன்முறுவலில் தோற்றுப் போய்விட்டாற் போலிருந்தது. அறிந்தவற்றை அறியாமற் செய்யும் சாமர்த்தியங்களை ஒரு பெண்ணின் அழகிற் சேர்த்து வைத்துவிட்ட படைப்புக் கடவுள் மேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.

 

தோளும் வாளும் நல்முதியோர் பன்னாள்
துணையா
விருந்தளித்த கல்வியுடன்
ஆளும்
பெருமிதமும் என் ஆசாரங்களும்
அத்தனையும்
விழியிரண்டாற் குறிவைத்தே
நாளும்
கிழமையும் பருவமும் பார்த்தந்த
நங்கை
தொலைத்திட்டாள் தன் இள நகையால்
வாளும்
வேலும் படையும் வென்றறியா என்
வன்மையெலாம்
சூறையிட்டாள் விந்தையிதே

 

என்பதாக அந்தத் திருக்கானப்பேர்ப் பைத்தியம் அடிக்கடி பாடிக்கொண்டு திரியும் ஒரு பாடலும் இளைய நம்பிக்கு இன்று நினைவு வந்தது. இப்படி ஓர் அழகிய நளின கவிதை எழுத முடிந்த வாலிபனைப் பித்தனாக்கி விட்டுப் போனவள் யாரோ அவள் மேல் உலகிலுள்ள எல்லா வாலிப ஆண்களின் சார்பிலும் கடுஞ்சினம் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது.

இளைஞர்களின் கண்களில் வசந்த காலங்களாக அலங்கரித்துக் கொண்டு வந்து நின்று அவர்களின் ஆண்மையையும், வீரத்தையும் சூறையாடும் அத்தகைய மோகினிகளில் ஒருத்தியாகத்தான் இந்தச் செல்வப் பூங்கோதையும் இளையநம்பியின் பார்வையில் இன்று தோன்றினாள். முதல் நாள் அந்தி மாலைப் போதாக இருந்ததாலும், பெரியவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரைச் சந்திக்கப் போக வேண்டிய காரிய அவசரம் இருந்ததாலும் தனக்கு வழிகாட்டிய இவளுடைய அழகை அவன் ஓரளவுதான் காண முடிந்திருந்தது. இப்போதோ மேகங்களே இல்லாத நீலநெடுங்குளம் போன்ற கோல வானத்திடையில் குதிபோட்டு வரும் முழுமதியை ஒத்துத் துள்ளித் திரிந்து ஓடியாடி விருந்துக்கான காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த இவள் அழகை அவன் முழுமையாய்க் காணவும் சிந்திக்கவும் முடிந்தது. வேறெதையும் சிந்திக்கவும் முடியாமலிருந்தது.

இளையநம்பிக்குச் சித்திரத்தவிசு இட்டு அமரச் செய்து நீர் தெளித்து இடம் செய்து குமரி வாழை இலை விரித்து அலர்ந்த மல்லிகை பூப்போல் ஆவி பறக்கும் சாலியரிசிச் சோறு படைக்கப்பட்டது. இள மாதுளம் பிஞ்சுகளை நெய்யில் வதக்கி மிளகும், உப்பும் தூவிச் சுவை சேர்த்திருந்த கறியும், நெய் அதிரசங்களும், பிற பணியாரங்களும், காலையில் மதுராபதி வித்தகர் இந்த வீட்டு உணவைப் பற்றித் தன்னிடம் வருணித்திருந்தது ஒரு சிறிதும் மிகையில்லை என்பதை அவனை உணர வைத்தன. இலையிலமர்ந்து உண்ணும் போதும் அதன் பின் கூடத்தில் அமர்ந்து காராளரோடு உரையாடிக் கொண்டிருந்த போதும் காலணிகளின் பரல்கள் கலின் கலின் என்று இனிய ஒலியாய்க் கொஞ்ச அந்த வீட்டில் எங்கெங்கோ மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்த நடையைத் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது அவன் மனம். 

வண்டிகள் மூன்றும் ஆயத்தமாயிருக்கின்றன. தாமரைப் பூக்கள் தான் இன்னும் பறித்து முடியவில்லை. சிறிது நேரத்தில் புறப்பட்டு விடலாம். உண்ட களைப்பாறச் சற்றே ஓய்வு கொள்ளலாம் அல்லவா?” என்று காராளர் இருந்தாற் போலிருந்து அவனைக் கேட்டபோது அவனுக்கு முதலில் அவர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதே புரியவில்லை. அவன் அவரை வினவினான்:

என்ன சொல்கிறீர்கள் ஐயா? நான் மதுரை மாநகருக்குப் புறப்படுவதற்கும் தாமரைப் பூக்கள் பறிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?”

சம்பந்தம் இல்லாமலா சொல்கிறேன்? சம்பந்தம் இருப்பதால் தான் தாமதமாகிறது. ஆவணித் திரு அவிட்ட நாளில் இருந்தவளமுடையாருக்கும், அந்தரவானத்தெம்பெருமானுக்கும் ஆயிரத்தெட்டு தாமரை மலர்களை அர்ச்சிப்பதாக என் மகள் வேண்டிக் கொண்டிருக்கிறாள். இரண்டு வண்டிகள் நிறையத் தாமரை மலர்கள் பறித்து நிரப்பியாக வேண்டும். மற்றொரு வண்டியில் ஆட்கள் ஏறிக்கொள்ளலாம்.”

ஏதேது? நானறிந்த வரையில் கணக்கிட்டுப் பார்த்தால் கூட இந்த வட்டாரத்தில் உங்கள் மகள் வேண்டிக் கொள்ளாத தெய்வங்களே மீதமிருக்க முடியாது போலிருக்கிறதே?” என்று அவரிடம் அவன் கேட்ட ஒலி அடங்கு முன்பாகவே,

இந்த வேண்டுதல்கூடப் போதாமல் இப்போது இன்னொரு புதிய வேண்டுதலையும் எல்லாத் தெய்வங்களிடமும் செய்து கொள்ள வேண்டிய அவசியம் வந்திருக்கிறதென்று அவரிடம் சொல்லுங்கள் அப்பா!” என்று அவனுக்குப் பதில் சொல்வது போல் தன் தந்தையிடம் கூறியபடி அப்போது அவளுடைய அந்த முழு மதியே அங்கு உதயமாயிற்று. உடனே காராளர் சிரித்துக் கொண்டே சொன்னார்:-

பார்த்தீர்களா? பார்த்தீர்களா? திருக்கானப்பேர்க் காரர்களுக்கு நாங்கள் சாதுரியப் பேச்சில் ஒரு சிறிதும் இளைத்தவர்கள் இல்லை என்று என் பெண் நிரூபிக்கிறாள்.”

இந்த நாட்டில் இன்று நிரூபிக்கப்பட வேண்டிய சாதுரியங்கள் வெறும் பேச்சில் இல்லை. அது விளங்காமல் தான் நாம் இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறோம். களப்பிரர்களிடம் நிரூபிக்கப்பட வேண்டிய சாதுரியங்கள் வாள்முனைகளில் தான் இருக்கிறது. வெறும் வார்த்தைகளில் இல்லை.”

இருக்கலாம்! ஆனால் இந்தத் திருக்கானப்பேர் வீரருடைய பேச்சு சாதுரியத்தால்தான் நேற்று இவர் போக வேண்டிய இடத்துக்கு என்னிடம் இவருடைய வழியையே தெரிந்து கொள்ள முடிந்தது என்பதை இவருக்கு நினைவூட்டுங்கள் அப்பா!” 

இதைக் கேட்டு அவன் சிரித்தே விட்டான். அவனது கடுமையைத் தன் சொற்களால் உடைத்தெறிந்திருந்தாள் அவள். வேறு விதமாக அவளை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

திருமோகூர்க் கொற்றவை கோவிலுக்கு ஒரு மண்டலம் நெய் விளக்கு, நான் மாடக் கூடலில் இருக்கும் இருந்தவளமுடைய பெருமாளுக்கும், அந்தரவானத்து எம்பெருமானுக்கும் அவிட்ட திருநாளில் ஆயிரத்தெட்டுத் தாமரைப் பூக்கள், வேண்டுதல்கள் இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது மீதம் இருக்கிறதா என்பதைத் தயை கூர்ந்து உங்கள் திருக்குமாரியிடம் சற்றே கேட்டுச் சொல்ல முடியுமா காராளரே?”

திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் தவப் பெயரர் பத்திரமாக நான்மாடக் கூடல் நகரை அடைந்து காரியங்களை வெற்றி பெற முடித்துக் கொண்டு சுகமாகத் திரும்ப வேண்டும் என்ற புதுப் பிரார்த்தனையையும் இப்போது சேர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள் அப்பா...”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நேருக்கு நேராகவே அந்த முழுமதி முகத்தை ஏறிட்டுப் பார்த்து நன்றியோடு முகம் மலர்ந்தான் இளையநம்பி. அந்தப் பார்வையைத் தாங்க முடியாத நாணத்தோடு காலணிகளின் ஒலியை மட்டும் அவன் செவிகளுக்கு இசையாய் வழங்கிவிட்டு அவள் உள்ளே ஓடிவிட்டாள். முதல் நாள் தன்னோடு கொற்றவை கோயிலுக்குச் செல்லும் வழியில் எல்லாம் சுபாவமாய்ப் பேசி வந்த அவள் இப்போது புதிதாய் நாணப்படுவது அவனுக்கு வியப்பை அளித்தது. பழகப் பழக நாணப்படுவதும், புரியப் புரிய வெட்கப்படுவதும், நெருங்க நெருங்க விலக முயல்வதும் தான் அழகிய பெண்ணின் சுபாவங்களோ என்று சிந்தித்தான் அவன். பெண்களின் நாற்குணங்களில் ஒன்றாகிய பயிர்ப்பு என்பது இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் தோன்றியது அவனுக்கு. ஆடவன் அறிய முயலும் போதெல்லாம் பெண் அறியாமையாகி விடுகிறாளோ என எண்ணினான் அவன். அந்த வேளையில் பெரிய காராளர் அவனுடைய நளின நினைவுகள் கலைந்து போகும்படி வேறு புதிய செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்.

 

5. பூத பயங்கரப் படை

 

பெரிய காராளர், இளைய நம்பியிடம் கூறத் தொடங்கினார்:

 

நீங்கள் எங்களுடைய சித்திர வண்டிகளில் மதுரைக்குப் போய்க் கோட்டைக்குள் நுழைவது மிகவும் எளிதாயிருக்கும். இதே வண்டிகளில் தான் நான் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல் அனுப்பி வைப்பது வழக்கம். அதனால் என்னுடைய இந்த வண்டிகளையும், ஆட்களையும் கோட்டைப் பாதுகாவலர்களுக்கு நல்ல பரிச்சயம் உண்டு. என் மனைவியும், மகளும் தவிர மூன்றாவதாக நீங்கள் போகிறீர்கள். உங்களை அவர்கள் ஐயப்படாமல் இருக்க வேண்டும். கோட்டை வாயில் வரை போய்ச் சேருவதற்குள் வழியில் அங்கங்கே சந்தேகக் கண்களோடு திரியும் பூத பயங்கரப் படையினர் பார்வையிலும் நீங்கள் படாமல் தப்ப வேண்டும்.”

எங்களோடு தாங்கள் மதுரை மாநகருக்கு வரவில்லையா, காராளரே?”

நான் வர முடியாது! சில காரணங்களுக்காகப் பெரியவரோடு இங்கே இன்றியமையாதபடி இருக்கும் கடமை பெற்றுள்ளேன்! தவிரவும் வழக்கமாக நான் அதிகம் கோட்டைக்குள் அகநகரில் போவதில்லை. அப்படிப் போனால் என்மேல் கூடக் களப்பிரர்கள் சந்தேகப்படலாம். விலகி இருந்து அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதால் தான் நான் அவர்களிடம் அடைந்திருக்கும் நம்பிக்கை நம் காரியங்களுக்குப் பயன்படுகிறது. அதையும் கெடுத்துக் கொண்டு விட்டால் ஒரேயடியாக அகநகர் விஷயங்கள் நமக்கு எதுவுமே தெரியாதபடி இருண்டு விடும். என் குடும்பத்துப் பெண்கள் இறையனார் திருக்கோவிலுக்கும், இருந்த வளமுடைய விண்ணகரத்துக்கும் புறநகரில் திருமருதமுன் துறையில் புண்ணிய நீராடவும் அடிக்கடி போய் வருவார்கள். அதனால் அவர்கள் மேல் யாருக்கும் சந்தேகம் வர முடியாது...”

நியாயம் தான். தாங்கள் கூறுவதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். போகும் போது நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதன்படி நடந்து கொள்வேன். அபாயங்களைத் தவிர்க்க முயலவேண்டும். நீங்கள் கவலைப்படுவதை என்னால் மறுக்க முடியவில்லை, காராளரே.”

என் மகள் ஓர் அற்புதமான வழியைச் சொன்னாள்! அதன்படி ஓர் அபாயமும் இல்லாமல் பத்திரமாக நீங்கள் கோட்டைக்குள் போய்விட முடியும். ஆனால்...?”

ஆனால் என்ன?... ஏன் தயங்குகிறீர்கள்?”

திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரரும் மதுராபதி வித்தகரின் பேரபிமானத்துக்குரியவருமாகிய தங்களிடம் அதை எப்படிச் சொல்வது என்பதுதான் என் தயக்கம். பெருவீரராகிய நீங்கள் அப்படி அகநகருக்குள் போக விரும்புவீர்களா, இல்லையா என்பது தெரியாமலே எப்படி அதை நான் உங்களிடம் வெளியிடுவதென்று தான் கலங்குகிறேன்...” 

தங்களுக்குத் தயக்கமாக இருந்தால் தங்கள் மகளிடமே அதை நான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை...”

அவளே உங்களிடம் இதைச் சொல்ல அஞ்சியும் வெட்கப்பட்டும்தான் என்னைக் கூறுமாறு வேண்டிக் கொண்டாள். இருந்தாலும் அச்சம் என்னையும் விட்டபாடில்லை. ‘தோள்களில் வாகைமாலை சூடி மங்கல நிறை குடங்களோடு மறையவர் எதிர்கொள்ளத் தலை நிமிர்ந்த வீரத்திருக் கோலத்துடனே தாங்கள் நுழைய வேண்டிய கோட்டையில் இப்படியா நுழைவது?’ என்று என் மனமும் சொல்லத் தயங்குகிறது.”

காராளரே! இப்படியே தயங்கிக் கொண்டிருந்தால் விடிய விடியத் தயங்கிக் கொண்டிருக்கலாம்! அதற்கு இது நேரமில்லை - என்று அவன் சற்றே கோபத்தோடு இரைந்த பின்பே அவர் அவனிடம் வழிக்கு வந்தார்.

எவ்வளவுதான் அடிமைப்பட்டிருந்தாலும் அவிட்ட நாள் விழாவைக் கொண்டாடும் கோலாகலத்திலிருந்து களப்பிரர்கள், மக்களைத் தடுக்க இயலவில்லை. கோ நகருக்குள் வரும் நான்கு திசைப் புறநகர் வீதிகளிலும் ஆறு பெருக்கெடுத்து வருவதுபோல் மக்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது.

அரிவாள் நுனிபோன்ற மீசையையும் தீ எரிவது போன்ற கண்களையும் உடைய களப்பிர வீரர்களும், பூத பயங்கரப் படையினரும் அங்கங்கே பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர். குதிரைகளில் உருவிய வாளுடன் ஆரோகணித்தபடி சிலர், தேர்களில் வேல்களும், ஈட்டிகளும் ஏந்தியபடி சிலர், எதுவும் அடையாளம் தெரியாதபடி கூட்டத்தோடு கூட்டமாக மாறு வேடத்திற் சிலர், கோட்டை மதில்களில் மறைந்து நின்று கண்காணித்தபடி சிலர், என்று எங்கும் வீரர்களை நிறைத்து வைத்திருந்தது களப்பிரர் ஆட்சி.

அடிமைப்படுகிறவர்கள் அடிமைப்படுத்துகிறவர்கள் ஆகிய இரு சாராரில் எப்போதும் பயந்து சாகவேண்டியவர்கள் அடிமைப்படுகிறவர்களில்லை. அடிமைப்படுத்துகிறவர்கள்தான். ஏனெனில் அடிமைப்பட்டு விட்டவர்களிடம் அந்த அடிமைத் தளைகளைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவுமில்லை. அடிமைப்படுத்துகிறவர்களோ தங்கள் பிடி தளர்ந்துவிட்டால் எதை எதை இழக்க நேரிடும் என்ற பயத்திலேயே செத்துக் கொண்டிருப்பவர்கள். பிறருடைய கால்களிலோ கைகளிலோ ஒரு தளையை இடுகின்ற பாவி தன் இதயத்தில் ஓர் ஆயிரம் தளைகளைச் சுமக்க நேரிடும். பாண்டிய நாட்டைப் பிடித்துப் பல ஆண்டுகள் ஆகியும் களப்பிரர்கள் நிலையும் அங்கு இப்படித்தான் இருந்தது. காலூன்ற முடியாத நிலையே தொடர்ந்து நீடித்தது.

ஒரு பெரிய தாமரைப் பூவின் இதழ்களைப் போல் அடுக்கடுக்காக அமைந்த தெருக்களையும், பூவின் நடுமையம் போன்ற அரண்மனையையும், நெருங்கிச் சூழ்ந்த பூந்தாதுகள் போன்ற மக்கள் கூட்டத்தையும், அந்தப் பூந்தாதுகளில் தேனுண்ண வரும் வண்டுகளைப் போல் பரிசில் நாடிவரும் புலவர்களையும் உடைய அழகிய மதுரை மாநகரம் அந்நியராட்சியில் தன் கலைகள் தன்னுடைய தனிப்பெரும் தமிழ்ச் சங்கம், தன்னுடைய கம்பீரம் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும், அவற்றை எல்லாம் இழந்திருக்கிறோம் என்ற உணர்ச்சிக் குமுறல் மக்களிடையே நீறு பூத்த நெருப்பாக மறைந்திருந்தது. களப்பிரர்கள் சிறைப்பிடிக்க முடியாமற் போன ஒன்று இந்த உணர்ச்சிக் குமுறல்தான்.

மதுராபதி வித்தகர் போன்ற பாண்டிய குலத் தலைவர்கள் மறைந்திருந்தாலும் எங்கிருந்தோ காற்றாய் உலவி இந்த நெருப்பைக் கனிய வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த மூல நெருப்பு எங்கிருந்து கனிகிறது என்று அறியக் களப்பிரர்களால் முடியாமலிருந்தது. முடிந்தால் இந்த மூல நெருப்பைத் தடம் கண்டு சிறுபொறியும் எஞ்சிவிடாமல் அழிக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள் அவர்கள்.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ் கலைகளும், தமிழ் நாகரிகமும், தமிழர் பெரு விழாக்களும், சோதனைகளுக்கு ஆளாயின, என்றாலும் மக்களில் பெரும்பான்மையினருடைய ஆர்வத்துக்குக் களப்பிரர்களால் அணையிட்டு விட முடியவில்லை. ஆனால், கட்டுக் காவல்களும், பூத பயங்கரப் படையினரின் கெடுபிடிகளும் குறைவின்றி இருந்தன.

அவிட்ட திருவிழா நாளில் நண்பகலுக்கு மேல் திருமோகூர்ப் பெரிய காராளர் வீட்டிலிருந்து புறப்பட்ட சித்திர வண்டிகள் மூன்றும், சில நாழிகைப் பயணத்துக்குப் பின் வையை நதியின் வட கரையை அடைந்திருந்தன. நதிக் கரையை நெருங்கும் வரை ஓரளவு விரைவாகச் செல்ல முடிந்த அந்த வாகனங்கள், கோநகர்ச் சுற்றுப்புறங்களில் பெருகியிருந்த திருவிழாக் கூட்டம் காரணமாக அருகில் வந்ததும் நின்று போக வேண்டியிருந்தது. முன்னால் சென்ற வண்டியில் அதை ஓட்டிச் சென்றவனைத் தவிரப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் இருந்தனர். அடுத்த இரண்டு வண்டிகளிலும் பின்புறம் ஓலை வைத்துத் தடுத்துப் பூக்கள் கீழே விழுந்து விடாதபடி தாமரை மலர்கள் நிரப்பப்பட்டிருந்தன. ஆற்றுப் பாலத்தைக் கடந்து வண்டிகள் கரை ஏறியதும், அங்கே குதிரைகளில் அமர்ந்தபடி நகருக்குள் வரும் கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த பூத பயங்கரப் படையைச் சேர்ந்த வீரர்கள் இருவர் வண்டிகளின் அருகே வந்தனர்.

முதல் வண்டியில் பெண்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருப்பதைக் கண்டு விட்டுச் சந்தேகம் தவிர்த்த அந்த வீரர்கள் தாமரைப் பூக்கள் மட்டுமே குவிந்திருந்த மற்ற இரு வண்டிகளையும் சுற்றிச் சுற்றி வந்தனர். குதிரைகளில் அமர்ந்தபடியே சுற்றி வந்ததால் வண்டிகளுக்குள் இருந்த தாமரைப் பூக்களைத் தங்கள் உயரத்திலிருந்து அவர்கள் மிக நன்றாகக் காண முடிந்தது. வண்டியை ஓட்டி வந்த இருவருமே, ‘இவை திருமோகூர்ப் பெரியகாராளர் வீட்டு வண்டிகள்... என்பதை அந்த வீரர்களிடம் தெரிவித்தனர். 

வண்டிகளைச் செலுத்தி வந்தவர்கள் தக்க சமயத்தில் இவ்வாறு தெரிவித்தது பயனளித்தது என்றாலும் அந்த இரண்டு பூத பயங்கரப் படைவீரர்களில் ஒருவன் சிறிது கடுமையானவன் ஆகவும் சந்தேகக் கண்களோடு பார்க்கிறவன் ஆகவும் இருந்தான். மூன்று சித்திர வண்டிகளில் நடுவாக நின்ற வண்டியில் குவித்திருந்த தாமரை மலர்களைக் குதிரை மேலிருந்தபடியே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அவன். அவனுடன் இருந்த மற்றொரு காவல் வீரன்,

போகவிடு அப்பனே, இரண்டு வண்டி நிறையத் தாமரைப் பூக்களைக் கோட்டைக்குள் கொண்டு போவதனால் களப்பிரர் பேரரசு ஒன்றும் கவிழ்ந்து போய்விடாது என்று அலட்சியமாகக் கூறியும் முதல் வீரனின் சந்தேகம் இன்னும் தளர்ந்து விடவில்லை.

அப்படிச் செய்வதற்கில்லை நண்பனே! கவிழ வேண்டிய காலம் வந்து விட்டால் படைகளால் கவிழ்க்க முடியாததை மலர்களால் கூடக் கவிழ்த்து விடலாம்...”

இந்த வண்டிகளைப் பற்றி மட்டும் உனக்கு அந்த ஐயப்பாடு வேண்டியதில்லை. இவை நம் அரண்மனைக்கு மிகவும் வேண்டியவருடைய வாகனங்கள். அவ்வப்போது கோட்டைக் களஞ்சியங்களுக்கு நெல் கொண்டு வரும் வண்டிகள் இவை என்று வாதாடினான் மற்றவன்.

இதற்குள் பின்வரும் வண்டிகள் நிற்பதைக் கண்டு என்னவோ, ஏதோ என்று மனக்கலக்கத்தோடு முன் வண்டியிலிருந்து செல்வப் பூங்கோதையே இறங்கி வந்து விட்டாள். நடையிலே ஒரு நாட்டுப்புறத்துப் பெண்ணின் துணிவும், தோற்றத்திலே எதிர்ப்படுகிறவர்களின் கண் பார்வைகளை வென்றுவிடும் ஓர் இளவரசி போன்ற எடுப்புமாக அவள் வந்து நின்ற கோலத்தில் பரபரப்படைந்த வீரர்கள் இருவருமே, தன்னுணர்வு பெறச் சில கணங்கள் ஆயிற்று.

இறைவனை வழிபடக் கொண்டு போகும் மலர்களுக்குக் கூடச் சோதனையா?” என்று அவள் கோபத்தோடு அவர்களை வினவினாள். இந்த வினாவைக் கேட்டு, உடனே,

வெறும் மலர்களுக்குச் சோதனை கிடையாது. ஆனால், அந்த மலர்களுக்கே கைகள் முளைத்தால் சோதனை உண்டு! நான் சொல்வது புரியவில்லையானால் இதோ பாருங்கள்...” என்று கூறியபடியே தன் கையிலிருந்த நீண்ட வாள் நுனியால் பூங்குவியலில் அந்த வீரன் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்த போது வண்டியை ஓட்டி வந்தவனும் செல்வப் பூங்கோதையும் ஒருங்கே திடுக்கிட்டனர். வண்டி வழி நெடுக ஆடி அசைந்து வந்ததினால் பூங்குவியல் சரிந்து போய் அது நேர்ந்திருந்தது. வேகமாகத் துடிக்கும் நெஞ்சுடன் பயத்தோடு பயமாக அவள் சாகஸமே புரிந்து அவர்களை ஏமாற்ற வேண்டியிருந்தது.

உடனே அவள் விரைந்து, “உங்கள் கண்களில் தான் தவறு இருக்கிறது வீரர்களே! நீங்கள் வீண் பிரமையில் எதை எதையோ பார்ப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் கண்களில் தெரிகிறது. இதோ நான் உங்கள் பிரமை வீணானது என்று நிரூபிக்கிறேன் பாருங்கள்!” என்று கூறியபடியே வண்டியில் ஏறி, அந்த வீரன் வாள் நுனியில் சுட்டிக் காட்டிய இடத்தில் மேலும் சில பூக்களைச் சரியச் செய்து மூடிய பின் அதே இடத்தில் தன் கையை வைத்துக் காட்டி விட்டு, இப்போது நான் என் கையை இந்த இடத்திலிருந்து எடுத்து விடுகிறேன். அப்படி எடுத்த பின்பும் நீங்கள் என் கை இங்கே இருந்த நினைவோடு இந்த இடத்தைப் பார்த்தால் மறுபடியும் என் கை இருப்பது போலவே உங்கள் கண்களுக்குத் தோன்றும். இந்தப் பிரமை ஒரு கண்கட்டு வித்தையைப் போன்றது என்றாள்.

அவளுடைய இந்த சாகஸம் முழு வெற்றியை அளிக்காவிட்டாலும் ஓரளவு பயன்பட்டது. பூத பயங்கரப் படை வீரர்களில் இளகிய சுபாவம் உடையவன் அந்த சாகஸத்தில் மயங்கி அதை ஒப்புக் கொண்டு விட்டான் என்றாலும் மற்றொருவன் இன்னும் கடுமையாகவே இருப்பது தெரிந்தது. வேறுவிதமாக அவனை இளகச் செய்ய முயன்றாள் அவள்.

ஐயா, பூத பயங்கரப் படைவீரரே! உங்களுக்கு நல்ல கவியுள்ளம் இருக்கிறது. இல்லாவிட்டால் தாமரைப் பூவைக் கண்டதும் அது சர்வ லட்சணமும் நிறைந்த ஒரு கையாக உங்கள் கண்களில் பட முடியாது. கவிகள் தான் உவமானப் பொருள்களில் உவமேயங்களையும் மாறி மாறிக் காண முடியும். பாவம்! எழுத்தாணியும் ஓலைச் சுவடியும் ஏந்த வேண்டிய கைகளில் நீங்கள் வாளேந்தும்படி நேர்ந்து விட்டது.”

இதைக் கேட்டு அவன் சிரித்தான். ஆனால், இந்தச் சிரிப்பில் அவள் கூறியதை அவன் நம்பாமல் ஏளனம் செய்யும் தொனிதான் நிறைந்திருந்தது.

உண்மையா, பிரமையா என்பதை நான் எப்படிச் சோதனை செய்ய வேண்டுமோ அப்படிச் சோதனை செய்து கொள்ள எனக்குத் தெரியும் என்று கூறிக் கொண்டே தன் கையிலிருந்த வாளை ஓங்கி அந்தப் பூங்குவியலில் அழுத்திச் சொருக முயன்றான் அவன். அதைக் கண்டு செல்வப் பூங்கோதையும், வண்டியை ஓட்டுகிறவனும் பதறிப் போனார்கள். செல்வப் பூங்கோதை குறுக்கே பாய்ந்து அவன் பூக்குவியலில் வாளைச் செருக முடியாதபடி தடுக்கவும் செய்தாள். உடனே தாங்க முடியாத சினத்தோடு, “எல்லாம் பிரமை என்றால் நீங்கள் ஏன் பதற வேண்டும்? வாளைச் சொருகித் துழாவிப் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்?” என்று இரைந்தான் அவன்.

தெய்வ காரியத்துக்காகக் கொண்டு போகும் பூக்களைப் பல போர்களில் எதிரிகளின் குருதியும் நிணமும் பட்டுக் கொலைக் கறைபட்ட உங்கள் வெற்றி வாளால் தீண்டுகிறீர்களே என்று தான் நாங்கள் பதற்றமும் பயமும் அடைகிறோம். முதலில் நீங்கள் வாளால் சுட்டிக் காட்டிய போதும், இப்போதும், நாங்கள் பயப்படுவது எல்லாம் தெய்வக் குற்றம் நேர்ந்து விடக் கூடாதே என்பதற்காகத்தானே ஒழிய வேறு எதற்காகவும் இல்லை என்று அவள் சமயோசிதமாகக் கூறிய சொற்கள் அவனை வழிக்கு கொண்டு வந்தன. ‘பல போர்களில் எதிரிகளின் குருதியும் நிணமும் பட்டுக் கொலைக் கறைபட்ட உங்கள் வெற்றிவாள் என்று அந்த அழகிய இளம் பெண்ணின் இதழ்களிற் பிறந்த இனிய சொற்களால் தன் தோள் வலிமையும், வாள் வலிமையும் புகழப்பட்டிருந்ததால் அவன் சற்றே கிறங்கியிருந்தான். புகழில் மயங்கி இளகியிருந்தான் அவன்.

ஒரு பெண்ணிடம் இல்லாத வீரமும் வலிமையும் ஓர் ஆண்மகனிடம் இருந்தாலும் அந்த வீரத்தையும் ஆண்மையையும் ஒரு பெண் வந்து தன் கிள்ளை மொழிகளால் புகழ வேண்டும் என்று தவிக்காத ஆணே உலகத்தில் கிடையாது போலும் என்று தோன்றியது அவளுக்கு.

பெண் பிள்ளை புகழ்வதனால் சில வீரர்கள் கோழை ஆகிறார்கள்; சில கோழைகள் வீரர்களாகவும் செய்கிறார்கள் என்று தாயிடம் வம்பு பேசும் போது சில வேளைகளில் தன் தந்தை ஒரு வசனம் சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள். அந்த வசனத்தின் முதற்பகுதி இப்போது இங்கே விளைந்திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

நியாயம்தான்! கோவிலுக்குக் கொண்டு போகும் பூக்களை வாளால் பரிசோதிப்பது நமக்கே பாவம் என்று மற்றொரு பூதபயங்கரப் படை வீரனும் செல்வப் பூங்கோதையோடு ஒத்துப் பாடினான். ஏற்கனவே தன் வாளை அவள் புகழ்ந்து கூறிய சொற்களால் கடுமை குன்றி மயங்கியிருந்தவன் தன் நண்பனின் வார்த்தைகளால் மேலும் நம்பிக்கை வரப்பெற்றவனாக அந்த வண்டிகளைப் போக விட்டுவிட்டான். வடக்குக் கோட்டை வாயிலில் காவல் இருந்தாலும் சோதனைகளோ தடைகளோ எதுவும் இல்லை. தனித்தனியே சோதனைகள் எதுவும் செய்ய முடியாதபடி கூட்டமும் அதிகமாக இருந்தது. வண்டிகள் மூன்றையும் இருந்த வளமுடையார் கோவில் நந்தவனத்தில் கொண்டு போய் மரங்களடர்ந்த பகுதி ஒன்றில் நிறுத்தினார்கள் ஓட்டி வந்தவர்கள். அப்போது மாலை மயங்கத் தொடங்கியிருந்தது.

 

6. யானைப்பாகன் அந்துவன்

 

கோவிலுக்குள் அவிட்ட நாள் பெருவிழாக் கூட்டம் வெள்ளமாகப் பொங்கி வழிந்தாலும் அந்த நந்தவனப் பகுதி, ஆட்கள் பழகாத காடு போல் தனிமையாகவும் அமைதியாகவும் இருந்தது. வண்டிகள் அங்கே நிறுத்தப்பட்டன. செல்வப் பூங்கோதையும், அவள் தாயும் தங்கள் வண்டியிலிருந்து விரைவாகக் கீழிறங்கி வந்து நடு வண்டியை நெருங்கினர். செல்வப் பூங்கோதை வண்டியை அணுகி உள்ளே அம்பாரமாய்க் குவிந்திருந்த செந்தாமரைப் பூக்களை விலக்கியதும் அந்தப் பூக்களின் நடுவேயிருந்து ஓர் அழகிய ஆடவனின் முகம் மலர்ந்தது. பல சிறிய தாமரைப் பூக்களின் நடுவே ஒரு பெரிய செந்தாமரைப் பூ மலர்ந்து மேலெழுவது போல் இளைய நம்பி அந்தப் பூங்குவியலின் உள்ளேயிருந்து எழுந்திருந்தான். செல்வப் பூங்கோதை மிகவும் அநுதாபத்தோடு அவனைக் கேட்டாள்: “மூச்சுவிடச் சிரமமாயிருந்ததா? பூக்களின் ஈரமும் குளிர்ச்சியும் அதிகத் துன்பத்தைத் தந்தனவா?”

ஒரு சிரமமுமில்லை! இப்படிப் பயணம் செய்ய முன் பிறவியில் நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நிலவின் கதிர்களையும், பனி புலராத பூக்களின் மென்மையையும் இணைத்துச் செய்த பஞ்சணையில் உறங்குவது போன்ற சுகத்தை ஆயிரத்தெட்டுத் தாமரைப் பூக்களும் எனக்கு அளித்தன. இத்தனை சுகமான அநுபவம் இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிர மன்னனுக்குக் கூடக் கிடைத்திருக்க முடியாது பெண்ணே?”

அந்தப் பூத பயங்கரப் படையைச் சேர்ந்த முரடன்பூக்குவியலை வாளால் குத்தி சோதனை செய்வேன் என்ற போது எனக்கு மூச்சே நின்றுவிடும் போலாகி விட்டது. நீங்கள் ஏறி வந்த வண்டிப் பூக்களை நாங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்றாலும் அவனிடம் நான் பொய் கூற வேண்டியிருந்தது.”

நீ அவ்வளவு தூரம் பதறியிருக்க வேண்டிய அவசியம் இல்லை பெண்ணே! அப்படியே அவன் வாளால் குத்தியிருந்தாலும் எனக்கு எதுவும் ஆகியிருக்க முடியாது. நான் காதில் கேட்ட பேச்சிலிருந்து எனது கை தென்பட்ட இடத்தில் தான் அவன் வாளைச் செருகிப் பார்ப்பதாக இருந்தான் என்று தெரிந்தது. அதனால் வாள் நுனியில் இரண்டொரு தாமரைப் பூக்கள் குத்திச் சொருகிக் கொண்டு போயிருக்கலாமே தவிர வேறு எதுவும் நேர்ந்திருக்க இயலாது! கோட்டைக்குள் வந்து சேர இப்படி ஓர் அருமையான வழியைக் கூறுவதற்கு முதலில் உன் தந்தை ஏனோ தயங்கினார்?”

பூப்போல் பத்திரமாக வந்து சேர்வது என்பார்கள். அப்படி அக நகருக்குள் வந்து சேர்ந்து விட்டீர்கள்! இனி உங்களை, நீங்களே தான் பொறுப்போடும், கவலையோடும், அக்கறையாகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...”

தலைவிதியா? காலக் கேடா? எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சொந்த நாட்டின் சொந்தத் தலைநகரத்திலேயே ஏதோ அந்நியன் கவலைப்படுவது போல் நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது என்று நெட்டுயிர்த்த வண்ணம் அவளிடம் அவன் கூறிக் கொண்டிருந்த போது கருடனைப் போல வளைந்த கிளிமூக்கும், காது வரை கிழிவது போல் சிரித்த வாயுமாக ஒரு பருத்த மனிதன் அருகிலுள்ள செடிகளின் மறைவிலிருந்து வெளிப்பட்டு இளைய நம்பியின் அருகே வந்தான். கிளி மூக்கும் கோணலாக நீண்ட இளித்த வாயும் பிறவியிலேயே அவனுக்கு அமைந்து விட்டவை என்று தெரிந்தது. அருகில் வந்து சுற்றும் முற்றும் ஒருமுறை நன்றாகப் பார்த்த பின் இளையநம்பியை நோக்கிக்கயல் என்று அவன் கூறிய ஒலி அடங்கு முன் இளையநம்பியும் அதே நல்லடையாளச் சொல்லைத் திருப்பிச் சொன்னான். 

இவன் யானைப்பாகன் அந்துவன். இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களின் ஆட்சியைக் கண்டு வாய் கிழிய ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கிய முதல் சிரிப்பை இன்னும் மாற்றிக் கொள்ள இவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை!” என்று செல்வப் பூங்கோதை, இளைய நம்பிக்கு அந்தப் புதிய மனிதனைப் பற்றிச் சொல்லியபோது,

இது உன் கற்பனையா அல்லது அனுமானமா?” என்று சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான் இளைய நம்பி.

கற்பனை என்னுடையது இல்லை! அந்துவனையே கேளுங்களேன். அவன் தான் அடிக்கடி எல்லாரிடமும் இப்படிச் சொல்வான்.”

இப்படிச் செல்வப் பூங்கோதை மறுமொழி கூறி முடிப்பதற்குள் அந்துவனே முந்திக் கொண்டுஆமாம், ஐயா! என்னைப் படைத்த கடவுளே அழ வைக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவரால் கூட அதைச் செய்யவே முடியாது. என்னைப் படைத்த மறு விநாடியிலிருந்தே நான் அவரைப் பார்த்து இப்படித்தான் சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். இந்த முதற் பேச்சிலேயே இளைய நம்பிக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. பிறவியில் நேர்ந்துவிட்ட ஓர் அவலட்சணத்துக்காக மனம் மறுகி மாய்ந்து கொண்டிராமல் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வாழ்கிற அவனை மிகவும் விரும்பி வரவேற்றான் இளையநம்பி. எப்படிப்பட்டவனாலும் அந்த யானைப் பாகனைத் துயரப்படச் செய்ய முடியாது என்று தோன்றியது. செல்வப் பூங்கோதையும் அவள் அன்னையும் இளைய நம்பியிடம் விடை பெற்றனர்.

இனி உங்களையும் உங்கள் காரியங்களையும் அந்துவனின் பொறுப்பில் விட்டு விட்டு நாங்கள் விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆலயத்தில் வழிபாட்டை முடித்துக் கொண்டு இரவோடிரவாகவே நாங்கள் வண்டிகளோடு திருமோகூர் திரும்ப வேண்டியிருக்கும்.”

பெரிய காராளருக்கும், அவருடைய புதல்வியாகிய உனக்கும் நான் எவ்வளவோ நன்றிக்கடன்...” என்று உபசாரமாக அவன் தொடங்கிய பேச்சை இடைமறித்து -

அப்படி எல்லாம் நன்றி சொல்லி இன்றோடு கணக்குத் தீர்த்து விடாதீர்கள். நமக்குள் இன்னும் எவ்வளவோ பல உதவிகளைத் தரவும் பெறவும் வேண்டும்! நெருங்கிப் பழக வேண்டியவர்கள் நட்பும் பகையும் அற்ற நொது மலர்களைப் போல் நன்றி சொல்லிக் கொண்டு போய் விடக் கூடாது என்றாள் பெரிய காராளரின் மனைவி. அவனும் அதை ஒப்புக் கொள்வது போல் மலர்ந்த முகத்தோடு அவர்களுக்கு விடை கொடுத்தான். நந்தவனத்தில் இருந்து அவர்கள் ஆலயத்திற்குள் சென்ற பின், யானைப் பாகன் அந்துவன் இளைய நம்பியை யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றான். போகும் போதும் அதே உற்சாகமான பேச்சுத்தான். 

ஐயா! நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்நகரத்தில் முதல்முதலாக என் முகத்தில் விழிப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுடைய காரியத்துக்கு நிச்சயமாக வெற்றி உண்டு. இன்று இந்த நகரத்தில் நுழைந்தவுடன் நீங்கள் முதலில் என் முகத்தில் தான் விழித்திருக்கிறீர்கள். இனி நீங்கள் எதற்குமே கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய முகத்துக்கு அப்படி ஓர் இராசி என்பது பிரசித்தமானது...”

நீ சொல்வதை நான் எப்படி நம்புவது அப்பனே? உன்னுடைய முகராசியின் வெற்றிக்கு நிரூபணமோ எடுத்துக்காட்டோ இருந்தால்தானே நம்பலாம்?”

நிரூபணம் வேண்டுமானால் மிகவும் பெரிய இடத்திலிருந்தே அதை எடுத்துக் காட்டலாம் ஐயா. அதிக தூரம் போவானேன்? நம் இருந்த வளமுடைய பெருமானையே எடுத்துக் கொள்ளுங்களேன். நாள் தவறாமல் விசுவரூப மங்கல தரிசனத்தின் போது வையையிலிருந்து குடம் நிறைய என் யானை மேல் தான் திருமஞ்சன நீர் வருகிறது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகராகிய அவரே எண்ணற்ற மக்களுக்கு அருள்புரிவதற்கும் காட்சியளிப்பதற்கும் முன் இந்த ஏழை யானைப் பாகன் அந்துவனின் இராசியான முகத்தில்தான் நாள் தவறாமல் முதலில் விழிக்க வேண்டியிருக்கிறது.”

இதைக் கேட்டுச் சிரிப்பை அடக்க முடியாமல் இளைய நம்பி நன்றாக வாய்விட்டுச் சிரித்து விட்டான்.

இரைந்து சிரிக்காதீர்கள்! நம்மைச் சுற்றிலும் அபாயங்கள் இருக்கின்றன. இந்தப் பாண்டிய நாட்டில் அதிக மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் யார் யாரோ அவர்களெல்லாரும் கூடக் களப்பிரர்களின் சந்தேகத்துக்குரியவர்களே என்று கூறியபடியே எதிரே கையைச் சுட்டிக் காட்டினான் அந்துவன்.

 

7. வெள்ளியம்பலம்

 

யானைப் பாகன் அந்துவன் சுட்டிக் காட்டிய திசையில் எதிர்ப் பக்கத்திலிருந்து களப்பிரர்கள் நாலைந்து பேர் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். நந்தவனப் பகுதிகளைக் கடந்து கோவிலின் யானைக் கொட்டாரம் இருந்த பகுதியை நோக்கி அவர்கள் போய்க் கொண்டிருந்த போது, இது நிகழ்ந்தது. எதிரே நேராக இலக்கு வைத்து வருவது போல் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த அந்தக் களப்பிரர்களை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு கணம் தயங்கினான் இளையநம்பி.

 

நம்முடைய கோவில்களில் கூட இவர்கள் நுழைந்து விட்டார்களா?” - என்று அடக்க முடியாத கோபத்தோடு அந்துவனின் காதருகே இளையநம்பி முணுமுணுத்தபோது-

ஒற்றர்களுக்கும், பிறரைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பவர்களுக்கும் எங்கேதான் வேலை இல்லை?” என்று மெல்லிய குரலில் அந்துவனிடம் இருந்து இளையநம்பிக்கு மறுமொழி கிடைத்தது.

அவர்கள் இருவர் மனத்திலும் ஒரேவிதமான உபாயம் அந்த வேளையில் தற்செயலாகத் தோன்றி வெளிப்பட்டது. அந்த நாலைந்து களப்பிரர்கள் தங்களை நெருங்குமுன் இவர்களே சிறிது விரைந்து முந்திக் கொண்டு, அவர்கள் எதிரே போய்ப் பாலி மொழியில் மிகவும் சுபாவமாகத் தெரிகின்ற உற்சாகத்தோடு அவர்களை நலம் விசாரித்து வாழ்த்தினர். பதிலுக்கு அவர்களும் அதே முகமன் உரைகளைக் கூறவே, ஏற்றுக்கொண்டு சிரித்தபடியே மேலே நடந்து விட்டனர். அந்துவனும் இளைய நம்பியும் சிறிது தொலைவு சென்றதும் அந்துவனிடம் இளைய நம்பி கூறினான்:-

முரடர்களின் மிகப் பெரிய சந்தேகங்களைக் கூடச் சுலபமாக நீக்கி விடலாம். ஆனால் பலவீனமானவர்களின் சிறிய சந்தேகங்களைக் கடுமையாக முயன்றாலும் கூடப் போக்க முடியாது! நல்லவேளையாகக் களப்பிரர்களில் பெரும்பாலோர் முரடர்கள்.”

முரடர்கள் என்றாலும், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நகரத்தில் நுழைந்தவுடன் நீங்கள் என் முகத்தில் அல்லவா விழித்திருக்கிறீர்கள்? இருந்த வளமுடைய பெருமானே இந்தக் கடுமையான களப்பிரர் ஆட்சியில் ஆபத்தில்லாமல் இருக்கக் காரணமாக நாள் தவறாமல் எந்த முகத்தில் விழித்துக் கொண்டிருக்கிறாரோ அந்த முகத்தில் நீங்களும் விழித்திருக்கிறீர்கள்!”

அதாவது நாள் தவறாமல் உன் முகத்தில் முதலில் விழிப்பதனால் தான் எல்லாம் வல்ல பெருமாளுக்கே இவ்வளவு புகழ் என்கிறாய் இல்லையா?”

அதில் சந்தேகம் என்ன?”

பெரிய வம்புக்காரனாக இருப்பாய் போலிருக்கிறதே!... சிரித்துச் சிரித்து வாய் புண்ணாகிவிடச் செய்கிறாய் நீ!”

இந்த நற்சான்று அடியேன் முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து கூடக் கிடைத்திருக்கிறது ஐயா! நம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர் வெற்றுச் சிரிப்பையும், நகைச்சுவையையும் அதிகம் விரும்பாதவர் என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள். காரியங்களைச் சாதிக்காத வார்த்தைகளும், எதிராளியை வெற்றி கொள்ள முடியாத புன்முறுவலும் ஓர் அரச தந்திரியின் வாயிதழ்களிலிருந்து வெளியேறி நஷ்டப்படக்கூடாது என்று அடிக்கடி கூறுகிறவர் அவர். அவரையே சமயா சமயங்களில் என்னுடைய பேச்சுக்களால் சிரிக்க வைத்திருக்கிறேன் நான்.” 

“‘அந்துவா! கடவுள் இன்னும் ஒன்பது பேர் முகத்தில் வைத்திருக்க வேண்டிய சிரிப்பையும் சேர்த்துக் கைத்தவறுதலாகவோ, மறதியாகவோ உன் ஒருவன் முகத்திலேயே வைத்துவிட்டார். இதேபோல் அவர் பத்துப் பேருடைய அழுகையையும் ஒரே முகத்தில் வைத்துப் படைத்த குரூரமான முகமும் உலகில் எங்காவது இருக்கும். உன்னால் படைப்புக் கடவுளுக்குக் கை நஷ்டமாகிப் போன அந்த ஒன்பது பேருடைய சிரிப்பையும் நிரந்து கொள்வதற்காக உன் முகத்துக்கு நேர்மாறான குரூர முகம் ஒன்றையும் அவர் படைத்துத்தான் இருக்க வேண்டும் என்று பெரியவர் ஒரு சமயம் என்னிடம் கூறியபோது உடனே சிறிதும் தயங்காமல் நான் என்ன மறுமொழி கூறினேன் தெரியுமா?”

அவரிடம் என்ன கூறியிருந்தாய் நீ அப்போது?”

நான் அவரிடம், ‘தாங்கள் கூறுவது மெய்தான் ஐயா! இப்போது நம்முடைய பண்டிய நாட்டை அடிமைப் படுத்தி ஆண்டு வரும் களப்பிரக் கலியரசன் முகத்தில் பத்து முகங்களுக்குப் பகிர்ந்து அளிக்கத் தேவையான அவ்வளவு குரூரத்தையும் அழுகையையும் கைதவறிப் படைப்புக் கடவுள் வைத்திருப்பதாகத் தெரிகிறது என்று உடனே கூறிய மறுமொழியைக் கேட்டு நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தார் பெரியவர் என்றான் யானைப் பாகனாகிய அந்துவன்.

சிறிதும் பெரிதுமாகச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த யானைகளைக் கடந்து இளையநம்பியைக் கொட்டாரத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றான் அந்துவன். அவனோடு ஓர் அரை நாழிகை நேரம் பேசிச் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

இரவில் இங்கே தங்குவதை விட நீங்கள் வெள்ளியம் பல மண்டபத்துக்குப் போய்விடுவது நல்லது. இந்தக் கொட்டாரத்தில் சில களப்பிர யானைப் பாகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவாக விரும்பத் தக்கவர்கள் இல்லை; மேலும் இன்றிரவு வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உங்களை இன்னொரு நண்பன் சந்திப்பான். அவனிடம் இருந்து நீங்கள் மிக அரிய செய்திகள் சிலவற்றையும், செயல் திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம். நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள்; அந்தத் தோட்டத்தில் உள்ள கடம்ப மரங்களில் மிகப் பெரிய அடிமரத்தை உடையது எதுவோ அதன் அருகே நீங்கள் காத்திருக்க வேண்டும். அவன் உங்களைச் சந்திக்க நடுச்சாமம் வரை கூட நேரம் ஆகலாம் என்றான் அந்துவன்.

இருந்தவளமுடையாரை வழிபட்ட பின் இருளில் கூட்டத்தோடு கூட்டமாக மதுரை நகரின் வீதிகளில் அலைந்து வெள்ளியம்பல மண்டபத்திற்கு இளையநம்பி போய்ச் சேரும்போது அதிக நேரம் ஆகியிருந்தாலும் இன்னும் மண்டபத்தில் கலகலப்புக் குறையவில்லை. 

பல மொழி பேசும் பல நாட்டு யாத்திரிகர்களும், வணிகர்களும், புலவர்களும், திருவிழாப் பார்க்க வந்தவர்களுமாக எண்ணற்றோர் தங்கியிருந்த கடல்போற் பரந்த அந்த அம்பலத்தை எல்லாப் பகுதியும் சுற்றிப் பார்த்துவிட்டு அவன் தோட்டத்துக்குள் நுழையும்போதே நள்ளிரவாகி விட்டது. கடம்ப மரங்களில் மிகப் பெரிய மரத்தைத் தேடி அவன் அதனருகிற் போய் நிற்கவும் அங்கு இருளில் நன்றாக முகம் தெரியாத மற்றொருவன் வந்து சேர்ந்தான். ஒரு கணம் தயங்கிய பின் புதியவனை நோக்கி இளைய நம்பிகயல் என்று கூறினான். ஆனால் வந்த புதியவனிடம் இருந்து பதிலுக்கு அந்த நல்லடையாளச் சொல் ஒலிக்கவில்லை. உடனே இளையநம்பியின் நெஞ்சம் விரைந்து துடித்தது.

அருகில் வந்தவனோ தள்ளாடினான். அவன் சுயபுத்தியோடு பேசும் நிலையில் இல்லை என்பதை மிகச் சிறு கணங்களிலேயே இளையநம்பி தெரிந்து கொண்டான். நாட்பட்டுப் புளித்த தேறலை அருந்திவிட்டுத் தள்ளாடி அரற்றி அலையும் அந்தக் களப்பிரன் தான் சந்திக்க வேண்டிய மனிதனாக இருக்க முடியாது என்பதையும் அவன் உடனே புரிந்து கொண்டான். தன்னை அங்கே அந்தக் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வரப்போகிற நண்பனுக்கு இடையூறாகக் குடித்துவிட்டு அலையும் இந்தக் களிமகன் நடுவே நிற்கக் கூடாதே என்ற கவலையில் பாலியில் ஏதோ பேசி அவனை அனுப்ப முயன்றான் இளையநம்பி. பாலியில் இளைய நம்பி பேசத் தொடங்கியதும் அவன் மேலும் நின்று உடும்புப் பிடியாக அரற்றத் தொடங்கினான். போரிட்டோ, முரண்பட்டோ அவனை அங்கிருந்து விலக்கி அனுப்புவது தனியே வந்து காத்திருக்கும் தனக்கு நல்லதில்லை என்று தயங்கியே அந்தக் குடிகாரனின் பேச்சோடு ஒத்துப்பாடி அவனை அனுப்ப முயன்றான் இளையநம்பி. அப்போது அவனிருந்த தளர்ச்சியான நிலையில் தான் அவனைச் செம்மையாகப் புடைத்து வீழ்த்தக் கூட முடியும் என்றாலும், அவனைத் தேடி மற்றவர் வரவோ, அவனே எழுந்துப் போய் தன்னைச் சேர்ந்த மற்றவர்களைத் தேடி அங்கே அழைத்து வரவோ செய்தால் தன் நிலை கவலைக்குரியதாகிவிடும் என்ற முன்னெச்சரிக்கையோடு முள்ளில் விழுந்த ஆடையை விலக்குவதுபோல் மெல்ல அவனை அங்கிருந்து விலக்க முயன்றான் இளையநம்பி.

அவனே தான் பாலியில் இயற்றியிருக்கும் சிருங்காரச் சுவைக் கவிதை ஒன்றை இவன் கேட்டே தீர வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாயிருந்த களப்பிரர்கள் தங்கள் நாட்டிலிருந்து படை வீரர்களாகவும் பல்வேறு பணியாளர்களாகவும் பல்லாயிரம் களப்பிர இளைஞர்களைக் கூடல் மாநகரில் கொண்டு வந்து வைத்து அடிமைகளைப் போல் வேலை வாங்குவதால் மணமாகாத அந்த இளைஞர்கள் தவிப்பதையும், வேதனைப் படுவதையும் வேட்கையுற்றுத் திரிவதையும் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்தவற்றை நினைத்தான் இளையநம்பி. தான் கேள்விப்பட்டிருந்தவற்றில் எள்ளளவும் பொய்யில்லை என்பதை இப்பொழுது அவன் உணர முடிந்தது.

வேறு வழியின்றி அந்தக் களிமகனின் பாலி மொழிக் கவிதையைக் கேட்டுத் தொலைப்பதற்காகக் கடம்பமரம் கண்ணில் படுகிற வகையில் அருகே இருந்த மண்டபப் பகுதி ஒன்றில் போய் அவனோடு அமர்ந்தான் இளையநம்பி. அவன் வாயிலிருந்து அடித்த தேறல் நாற்றம் பொறுக்க முடியாததாயிருந்தது. அந்தக் களப்பிர இளைஞன் நல்ல உடற்கட்டுடையவனாக இருந்தான். எந்த அபாயத்தையோ எதிர்பார்த்து அவனிடம் பாலியில் பேசப் புகுந்ததன் விளைவு கள் வெறியில் அவன் அரற்றும் சிருங்காரக் கவிதையைக் கேட்க வேண்டிய தண்டனைக்குத் தன்னை ஆளாக்கி விட்டதே என்ற வெறுப்புடன் அமர்ந்திருந்தான் இளையநம்பி. அந்தக் களப்பிர இளைஞன் திரும்பத் திரும்ப அரற்றியதைத் தமிழில் நினைத்துக் கூட்டிப் பார்த்தால், இப்படி வரும் போலிருந்தது:

 

கட்டித் தழுவிட ஓர் இளம் கன்னிகை வேண்டும் இங்குநான்

மட்டும் படமுடியாக் காமத்தால் மனமும் உடலும் எரிகையிலே

முட்டும் இளநகில்கள் மோதிடவே என் மேனி முழுமையும் வெது வெதுப்பாய்ப்

பட்டுப் பெண்ணுடல் பட்டுக் கலந்தவன் பருகிச் செவ்விதழ் தரவேண்டும்...”

 

உயர்ந்த கல்வியும், நல்ல குடிப்பிறப்பும் உடைய அவனுக்கு இதை இரண்டாவது முறை நினைத்துப் பார்க்கக் கூடக் கூச்சமாயிருந்தது. காதல் வெறியில் அந்தத் திருக்கானப்பேர்ப் பித்தன் உளறும் கவிதையில் இருந்த நயம் கூட இந்தக் கள்வெறிக் களப்பிரனின் பாடலில் இல்லாததை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து அவன் உணர முடிந்தது. காதலிற் பிறக்கும் சொற்களையும், காமத்திற் பிறக்கும் சொற்களையும் தரம் பிரிக்க இந்த இருவர் நிலைகளும் அவனுக்குப் பயன்பட்டன.

இப்படித் திரும்பத் திரும்ப இந்தப் பாடலை அரற்றியபடியே மெல்ல மெல்லக் குரல் ஓய்ந்து தூங்கிவிட்டான் அந்த இளைஞன். அவனுடைய குறட்டை ஒலி செவித் துளைகளை அறுப்பது போல் ஒலிப்பதைப் பொறுக்க முடியாமல் எழுந்து கடம்ப மரத்தடியில் மீண்டும் போய் அமர்ந்தான் இளையநம்பி. நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. கலகலப்பு நிறைந்திருந்த வெள்ளியம்பல மண்டபமும் உறக்கத்தில் அடங்கிவிட்டது. மண்டபத்தின் வடக்குக் கோடியில் நீண்ட நேரமாய் உரத்த குரலில்மாயை ஏன் அநிர்வசனீயமாக இருக்கிறது?’ - என்று விவாதித்துக் கொண்டிருந்த ஒரு சமணத்துறவியும் வடமொழி வானரும் கூட நடுச் சாமத்திற்கு மேல் உறக்கத்தைக் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு மாயையைப் பற்றிக் கவலைப்பட விரும்பாமல் நன்றாக உறங்கத் தொடங்கியிருந்தனர். வெள்ளியம்பல மன்றின் தோட்டத்தில் ஓர் ஆந்தை இரவின் தனிமைக்கு உருவகம் தருவது போல விட்டு விட்டு அலறிக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் தனியே விழித்திருப்பது பொறுமையைச் சோதிக்கும் காரியமாயிருந்தது. இலைகள் அசையும் ஓசை கூடப் பெரிதாகக் கேட்கும் அந்த நிசப்தமும், அதை இடை இடையே கிழிக்கும் ஆந்தையின் அலறலும், பின்னிரவின் வரவிற்குக் கட்டியம் கூறுவது போன்ற குளிர்ந்த காற்றுமே அந்த வேளையில் அங்கே அவனுக்குத் துணையாயிருந்தன. தன்னைச் சந்திக்க வேண்டியவன் வழி தவறிவிட்டானோ அல்லது வரவில்லையோ என்ற கவலையில் இளையநம்பி நம்பிக்கை இழக்கத் தொடங்கிய வேளையில் மண்டபத்திற்குள் வரிசை வரிசையான தூண்களின் அணி வகுப்புக்கு நடுவே இருபுறமும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை மிதித்து விடாமல் கவனமாக நடந்து வரும் ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அந்த அமைதியில் நெடுந்தூரம் தெரியும் தூண்களின் வரிசைக்கு ஊடே இருபுறமும் படுத்து உறங்குகிறவர்களின் கால்களுக்கு நடுவில் தானாக நேர்ந்திருந்த ஒற்றையடிப் பாதையில் அடிபெயர்ந்து நடக்கும் ஓசை கூடக் கேட்டுவிடாமல் அவன் நிதானமாகவும், கவனமாகவும் நடந்துவருவது மௌனமே உருப்பெற்று எழுந்து வருவது போலிருந்தது.

 

8. திருமருத முன் துறைக்கு ஒரு வழி

 

வருகிறவன் தன்னை நோக்கித்தான் வருகிறானா அல்லது வேறு காரியமாக வருகிறானா என்று இளையநம்பி சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே அவன் சொல்லி வைத்தது போல் இவன் எதிரே வந்து நின்று நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு இவனிடமிருந்து நல்லடையாளம் கிடைத்ததும் வணங்கினான். இருவரும் நல்லடையாளச் சொல்லைப் பரிமாறிக் கொண்டு தங்களுக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவுடன் இளையநம்பி ஏதோ பேசத் தொடங்கிய போது வந்தவன் தன் வலது கை ஆள்காட்டி விரலை வாயிதழ்களின் மேல் வைத்துப் பேச வேண்டாம் என்பது போல் குறிப்புக் காட்டித் தன்னைப் பின் தொடருமாறு சைகை செய்துவிட்டு நடந்தான். வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறத்திலிருந்த தோட்டத்தின் மற்றொரு கோடி வரை அவனை அழைத்துச் சென்றான் வந்தவன். அங்கிருந்த மதிற் சுவரை ஒட்டி ஒரு பாழ் மண்டபத்திற்கு வந்திருந்தார்கள் அவர்கள். அந்த இடத்திற்கு வந்ததும் அவனே தன் மௌனத்தைக் கலைத்து விட்டுப் பேசினான். 

சற்று முன்னே நான் வெள்ளியம்பலத்துக்குள் நுழைந்த போது நகரப் பரிசோதனைக்காகத் தெருவில் அலைந்து கொண்டிருந்த களப்பிர வீரர்கள் சிலர் என்னைப் பின் தொடரக் கூடும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் தான் அங்கே நின்று நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்று பார்த்தேன்! திருமோகூரில் பெரியவர், காராளர் எல்லோரும் நலமாயிருக்கிறார்களா? முதல் முதலாகக் கோநகருக்கு வந்திருக்கிறீர்கள்! கோநகரைக் களப்பிரர்கள் அசோக வனத்திலே சிறைப்பட்ட சீதையை வைத்திருப்பது போல் வைத்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்.”

தொடக்கத்தில் அளவு கடந்த மௌனமாக இருந்து விட்டதற்காகவும் சேர்த்து இப்போது பேசுவது போல பேசினான் அந்தப் புதியவன். இளையநம்பி அவனுக்கு மிகச் சுருக்கமாகச் சில வார்த்தைகளில் மறுமொழி கூறினான். அந்த பாழ் மண்டபத்தை ஒட்டியிருந்த பகுதிகளில் மரங்களின் அடர்த்தி குறைவாக இருந்ததனால் அதிக இருள் இல்லை. அதனால் அந்தப் புதியவனை இளைய நம்பி ஓரளவு காண முடிந்தது. முடி, உடை உடுத்தியிருந்த முறை, மீசை எல்லாவற்றாலும் ஒரு களப்பிரனைப் போல் தோன்றினான் அவன். அதைக் கண்டு இளைய நம்பி அவனைக் கேட்டான்:

களப்பிரர்கள் ஆட்சியில் கள்ளும் காமமும் கொள்ளையாய் மலிந்திருப்பதை இந்த வெள்ளியம்பலத்தில் நுழைந்ததுமே கண்டேன். வருந்தினேன். இப்போது என் எதிரே தெரிகிற தோற்றத்திலிருந்தே, கள்ளும் காமமும் மலிந்திருக்கும் அதே வேளையில், தமிழ் நடை உடை நாகரிகங்கள் எல்லாம் நலிந்திருப்பதையும் காண முடிகிறது.”

கொலை வெறியர்களாகிய களப்பிரர்களின் நடுவே ஊடாடி நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள இப்படி நமக்கே விருப்பமில்லாத பொய்க்கோலங்களை நாம் ஏற்கவும் வேண்டியிருக்கிறது ஐயா...”

விந்தைதான்! பொய்க்கு வேண்டிய கோலம் மெய்க்கும் வேண்டியதாக இருக்கிறது என்று நீ கூறுகிறாய் போலிருக்கிறது.”

ஆம், ஐயா! பொய்யை யாரும் அலங்கரிக்கத் தொடங்காதவரை - மெய்க்கு அது மெய்யாயிருப்பதையே கோலமாகக் கொண்டு நாம் மன நிறைவு அடையலாம். ஆனால் பொய்யை அலங்கரிக்கத் தொடங்கிவிட்ட உலகில் மெய்யையும் நாம் அலங்கரிக்காமல் விட முடிவதில்லை.”

நீ கூறுவது பிழை! எங்கு சத்தியத்தின் வலிமை குறைகிறதோ அங்கு சொற்களின் வலிமையால் அதை அலங்கரிக்கிறார்கள். ஆனால், சத்தியம் நெருப்பைப் போன்றது. தன்வலிமையல்லாத எதனால் தன்னை அலங்கரித்தாலும் அதை மெல்ல மெல்லச் சுட்டெரிக்கக் கூடியது. பூக்களாலும், பொன்னாலும் நீ எதை வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். ஆனால் நெருப்பை மட்டும் பூவாலோ பொன்னாலோ புனைய முடியாது. பூவைக் கருக்கி விட்டுப் பொன்னை உருக்கிவிட்டுத் தன் பிரகாசமே பிரகாசமாய் மேலும் வென்று எரிவது தழல். சத்தியமும் அப்படித்தான். அப்படி ஒரு சத்திய பலம் நம்மிடம் இருக்கிற வரை பாண்டிய குலம் வெல்லும் என்பதைப் பற்றி உனக்குக் கவலை இருக்கக் கூடாது.” 

இந்த மனோ திடத்தையும் நம்பிக்கையையும் கேட்ட வியப்பில் ஒன்றும் மறுமொழி சொல்லத் தோன்றாமல் இருந்தான் அந்தப் புதியவன். சத்தியத்தின் மேலிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையாளனைக் கண்டதும், ‘நம் எதிரே மனம் மொழி மெய்களால் வணங்கத்தக்க இணையற்ற வீரனும் தீரனுமான ஒருவன் நிற்கிறான் - என்ற எண்ணத்தில் அந்தப் புதியவனுக்கு மெய் சிலிர்த்தது. இளையநம்பி அந்தப் புதியவனை வலத் தோளில் தட்டிக் கொடுத்தபடி மேலும் கூறலானான்:

தைரியமாயிரு! இப்படி யார் நாகரிகத்தையோ காட்டும் பொய்க்கோல வாழ்வு போய் மங்கலப் பாண்டிவள நாட்டு மறத்தமிழனாக இதே மதுரை மாநகர வீதிகளில் மீண்டும் நிமிர்ந்து நடக்கும் காலம் வரும். நுட்பத்திலும் சிந்தனை வலிமையிலும் இணையற்ற ஓர் இராஜரிஷி நமக்காக அல்லும் பகலும் திட்டமிட்டு வருகிறார் என்பதை நினைவிற் கொள்...”

தங்கள் நல்வாழ்த்து விரைவில் மெய்யாக வேண்டும் என்றே நானும் ஆசைப்படுகிறேன். இப்போது நாம் போகலாம். எதுவும் தெரியாத காரிருளில் நெடுந்தூரம் தங்களை நடத்தி அழைத்துச் செல்ல நேர்வதற்காகத் தாங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.”

இருளைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை அப்பனே! இன்று பாண்டி நாட்டில் இரவில் மட்டுமல்ல, பகலிலும் இருள் தான் நிரம்பியிருக்கிறது. சில ஆட்சிகள் இருளையும் ஒளி பெறச் செய்யும். வேறு சில ஆட்சிகளோ பகலையும் கூட இருளடையச் செய்து விடும். அப்படி ஒரு கொடுங்கோலாட்சியில் தான் இன்று நீயும் நானும் இருக்கிறோம். ஆனால் எங்கே போகிறோம், எதைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்பதை முதலில் எனக்குச் சொல். நான் அறிய வேண்டிய செய்திகள் சிலவற்றையும், செயல் திட்டங்களையும் உன்னிடமிருந்து அறிந்து கொள்ள முடியும் என்பதாக இருந்தவளமுடையார் கோவில் யானைப்பாகன் அந்துவன் என்னிடம் கூறி அனுப்பினான். அவற்றைப் பற்றி என்ன சொல்கிறாய் நீ?”

அந்துவன் கூறி அனுப்பியவற்றில் பிழை ஒன்றும் இல்லை ஐயா! அவன் அடியேனைப் பற்றித் தங்களிடம் யாவும் கூறியிருக்கிறானோ இல்லையோ தெரியாது. அடியேன் வையை நதிக்கரையில் திருமருத முன் துறையில் உள்ள உபவனக் காப்பாளன், அழகன் பெருமாள் மாறன். பெரியவர் மதுராபதி வித்தகரை அடியேனுடைய குலதெய்வத்தினும் மேலாக மதித்துத் தொழுகிறவன். நம்முடைய எல்லாக் காரியங்களும் கோநகரில் நடைபெற இரண்டே இரண்டு வழிகள் தான் இன்னும் அடைபடாமல் எஞ்சியுள்ளன. அதில் ஒன்று, என்னுடைய உபவனத்தில் இருக்கிறது. மற்றொன்று இங்கே இந்த வெள்ளியம்பல மண்டபத்தில் இருக்கிறது.”

எந்த வழிகளைச் சொல்கிறாய் நீ?” 

இதோ, இந்த வழியைத் தான் சொல்கிறேன் என்று கூறியவாறே கீழே குனிந்து அந்த மண்டபத்தின் கல் தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு கல்லைத் தூக்கிப் புரட்டினான் அழகன் பெருமாள். இளைய நம்பியின் கண்கள் அவன் புரட்டிய கல் விட்ட வழியில் ஆள் இறங்கும் இடைவெளிக்குக் கீழே மங்கலாகப் படிகள் தென்படுவதைக் கவனித்தன.

ஒரு காலத்தில் மங்கல நன்னாட்களில் அரண்மனைப் பெண்கள் இந்தச் சுரங்க வழியாகத் திருமருத முன் துறைக்கு நீராடப் போவார்களாம். கடைசியிற் களப்பிரர்கள் கோட்டையையும் அரண்மனையையும் கைப்பற்றியபின் அந்தப்புர மகளிரும், பாண்டியர் உரிமை மகளிரும் இந்த வழியாகத்தான் தப்ப முடிந்தது என்று கூடச் சொல்வார்கள்...”

இந்த வழி இருப்பதை நம்மவர்கள் தவிர வேறு யாராவது அறிவார்களா? இது நேரே திருமருத முன் துறைக்குத்தான் போகிறதா அல்லது வேறு எங்கேனும் இதிலிருந்து வழிகள் பிரிகின்றனவா?”

நம்மவர்கள் மட்டுமே பயன்படுத்தும் இரகசிய வழியாக இதை வைத்திருக்கிறோம். இங்கிருந்து திருமருத முன் துறைக்கு நெடுந்தூரம் இருப்பதாலும் நடுவே ஏதேனும் அபாயம் வந்தாலும் உடனே தப்ப வழி வேண்டும் என்பதாலும் இடையில் நகரில் புகழ்பெற்ற கணிகையர் வீதி குறுக்கிடும் இடத்தில் அங்குள்ள ஓர் நம்பிக்கையான கணிகையின் மாளிகையோடு ஒரு வாயில் இணைந்திருக்கிறோம்...”

இப்போது நாம் எங்கே புறப்பட்டுப் போகிறோம் அழகன் பெருமாள்?”

உபவனத்துக்குத்தான்! அங்கே எல்லாச் செய்திகளையும் உங்களுக்குக் கூற முடிந்தவர்களாக நம்மவர்களில் நாலைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் பெரியவர் இங்கே சாதிக்க வேண்டிய மிகப் பெரிய அரச தந்திரக் காரியங்கள் எல்லாமே சாதிக்கப்படுகின்றன.”

அதற்கு மேலும் அவனிடம் பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல் மேற்கல்லின் பக்கங்கள் உடலில் உராயாமல் கவனமாக படிகளில் குதிப்பது போல் இறங்கி உள்ளே நுழைந்தான் இளையநம்பி. அவனைத் தொடர்ந்து அழகன் பெருமாளும் கீழே குதித்து இறங்கிக் கைகளை மேலே உயர்த்திப் புரட்டிய கல்லை உள்ளிருந்தபடியே மேற்பக்கம் தாங்கி மெல்ல மெல்ல நகர்த்தி வழியைப் பழையபடியே மூடினான். உட்புறம் இருள் சூழ்ந்தது. அழகன் பெருமாள் இளையநம்பியின் வலது கையைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டு கீழே தடுமாறாமல் படி இறங்கி நிலவறையில் விரைந்தான்.

இந்த இருள் உங்களுக்குப் பழக்கமாயிராது. கவனமாக நடந்து வர வேண்டும் நீங்கள்?” என்று தன்னை எச்சரித்த அழகன் பெருமாளிடம் இளையநம்பி, “என்னைப் பற்றிக் கவலைப்படாதே! ஒளியைத் தேடிக் கண்டுபிடிக்கிற வரை ஒவ்வொரு வீரனும் இருளில் தான் கால் சலிக்க நடக்க வேண்டியிருக்கும். இருளுக்குத் தயங்கினால் எதுவும் நடக்காது என்று சிரித்துக் கொண்டே மறுமொழி கூறினான்.

 

9. நம்பிக்கையின் மறுபுறங்கள்

 

செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் தங்களிடம் இளைய நம்பியும், யானைப் பாகன் அந்துவனும் விடை பெற்றுச் சென்ற பின்பும் நெடுநேரம் அவர்களைப் பற்றிய நினைவுகளையும் கவலைகளையும் தவிர்க்க முடியாமல் இருந்தனர். 

இந்த விநாடியில் யானைப் பாகன் அந்துவனோடு அவர் எங்கே போயிருப்பார்? எவ்வளவு தூரம் போயிருப்பார்? யார் யாரை அவர் எதிர்கொண்டு சந்திக்க நேரிடும் என்று நினைவை இளைய நம்பியின் பின்னே அலையவிட்டபடி உடலால் மட்டும் தன் தாயின் பின்னே இயங்கிக் கொண்டிருந்தாள் செல்வப் பூங்கோதை. தாய் எதையோ கேட்டால் அதற்குத் தொடர்பில்லாமல், வேறு எதையோ அவளிடம் மறுமொழியாகச் சொன்னாள் இவள்.

பயப்படாதே! உனக்கு அபயம் என்பதுபோல் வண்டியில் நிறைந்திருந்த தாமரைப் பூக்களுக்கு நடுவே தென்பட்ட அந்தப் பொன்நிற உள்ளங்கையைச் செல்வப் பூங்கோதையால் மறக்கவே முடியவில்லை. அந்தக் கையைஅது கை இல்லை, தாமரைப்பூ என்று அவள் புனைந்து கூறிய போது, ‘இல்லை! அது கையேதான்என்று மறுக்கத் தயங்கி அந்தப் பூதபயங்கரப் படை வீரனே அது தாமரைப்பூதான் என்று நம்பிவிடும் அளவுக்குப் பூவோடு அது ஒப்பிடப் பொருத்தமாயிருந்தது. அந்தக் கை மலர் அவள் நினைவில் பசுமையாய் வந்து தங்கியிருந்தது இப்போது.

ஒரு வீரனின் கை பூப்போல் மென்மையாக இருக்கக் கூடாதுதான்! வாளும், வேலும் பற்றிச் சுழற்றிக் காய்த்துப் போயிருக்க வேண்டிய கை இது. தாமரைப் பூப்போல் மிருதுவாகவும், குளிர்ச்சியாகவும், சிவப்பாகவும் ஒரு கவிஞனின் கையைப் போல் இருக்கும்படி இந்தக் கை வாளும் வேலும் ஏந்த முடியாமல் செய்துவிட்ட களப்பிரர்கள் மேல் திரும்பியது அவள் ஆத்திரம் எல்லாம். இளையநம்பியின் பூம்பட்டுக் கையை எண்ணியபோது பழைய இலக்கிய நிகழ்ச்சி ஒன்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. பல போர்களில் வெற்றி வாகை சூடிய பேரரசன் ஒருவன், ஒரு கவிஞரின் வலது கரத்தைப் பற்றித் தழுவி அவரைப் பாராட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கல்லைப் போல் காய்ந்துத் தழும்பேறிய தன் கையும் பூப்போல் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடிய புலவர் கையும் இணைந்த போது -

 

ஐயா, புலவரே! உங்கள் கை மட்டும் எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறது!” என்று ஓர் அதிசயத்தைக் கண்டவன் போல் வியந்து வினவினான் அந்த அரசன்.

இதில் வியப்பென்ன அரசே? நீ அன்போடு அளிக்கும் உணவை உண்டு வருந்தும் தொழிலைத் தவிர வேறு உழைப்பின் துயரங்கள் படியாத கைகள் இவை. இவை மென்மையாக இராமல் வேறு எப்படி இருக்க முடியும்? உன் கைகள் வன்மையாக இருப்பதற்கும் இவை மென்மையாக இருப்பதற்கும் காரணம் ஒன்றுதான். துயரங்களை எல்லாம் உன் கைகளே தாங்கிக் கொள்கின்றன என்பதுதான் அந்தக் காரணம் - என்று அந்த அரசனுக்கு அந்தப் புலவர் மறுமொழி கூறினாராம்.

தன் சிந்தனையில் அந்த அரசனோடு பெரியவர் மதுராபதி வித்தகரையும் அந்தப் புலவரோடு இளையநம்பியையும் ஒப்பிட்டு இப்போது நினைத்தாள் செல்வப் பூங்கோதை. இளையநம்பியின் கைகளும் முகமும், தோள்களும், மேனியும் பூப்போல் மிருதுவாக இருப்பதையும் மதுராபதி வித்தகரின் கைகளும், முகமும், தோள்களும் மேனியும் செம்பொன்னில் வார்த்து இறுக்கியது போல் வைரம் பாய்ந்திருப்பதையும் இணைத்து நினைத்தாள் அவள். கோயிலில் வளமுடையாரை வழிபடும் போதும், ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களை அர்ச்சித்த போதும், படிகளில் ஏறி மேல் விதானத்து மாடத்தில் பரவாக தேவராகக் கிடந்த கோலத்தில் இருக்கும் அந்தரவானத்து எம்பெருமானின் மாடக்கோவில் மணி மண்டப முகப்பிலிருந்து பெரிய பெரிய கருடக் கொடிகள் பறக்கும் இருந்தவனத்து மதில்களையும், மேற்புறமும், தென்புறமும் மதில்களை ஒட்டினாற் போல் மாலையெனச் சூழும் வையை நதியின் தென்புறக் கிளையையும், நகரின் பிற பகுதிகளான திருவாலவாய், திருநடுவூர், வெள்ளியம்பலம், திருநள்ளாறு முதலியவற்றையும் அந்திமாலை அழகுகளோடும் விளக்கொலி அலங்காரங்களோடும் கண்டபோதும், செல்வப் பூங்கோதையின் நினைவில் இளையநம்பிதான் நிறைந்திருந்தான். அவ்வளவு பெரிய கூட்டத்தினிடையேயும் தான் தனிமையாக விடப்பட்டதைப் போன்ற உணர்வை அடைந்திருந்தாள் அவள். இன்று அப்படி ஒரு தனிமையை உணரும்படி அவளைத் தாபத்தினால் தவிக்கச் செய்திருந்தது அவனுடைய ஞாபகம்.

வழிபாட்டை முடித்துக் கொண்டு அவளும் அவளுடைய அன்னையும் யானைக் கொட்டாரத்தின் வழியாக வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நந்தவனத்திற்குத் திரும்பிய போது, வேறு நாலைந்து யானைப்பாகர்களோடு அங்கே நின்று கொண்டிருந்த அந்துவன், ‘இளையநம்பி இங்கிருந்து பத்திரமாக வெள்ளியம்பலத்திற்குப் புறப்பட்டுப் போயாயிற்று - என்று சைகை மூலம் அவர்களுக்குத் தெரிவித்தான். சுற்றி மற்றவர்கள் இருந்ததால் அந்துவன் தன்னைச் சூழ இருந்தவர்களுக்குச் சந்தேகம் எழாதபடி பெரியகாராளர் மகளோடும் மனைவியோடும் நெருங்கிச் சென்று விரிவாக உரையாடுவதை அப்போது தவிர்க்க வேண்டியதாயிற்று.

வண்டிகள் பூட்டப்பெற்றுப் புறப்பட்ட போது, “அம்மா அந்துவன் செய்த குறிப்பைக் கவனித்தாயா?... அவர் இங்கிருந்து யாதொரு கெடுதலும் இன்றி அடுத்த இடத்துக்குப் போய்விட்டாராம் - என்று ஆர்வம் பொங்கத் தாயிடம் கூறினாள், செல்வப் பூங்கோதை.

ஆம்! கவனித்தேன். இனி அந்தத் திருக்கானப் பேர்ப் பிள்ளையாண்டானைப் பற்றிப் பயப்பட ஒன்றுமில்லை. அந்துவனும் இங்குள்ள மற்றவர்களும் உயிரைக் கொடுத்தாவது அந்தப் பிள்ளையைப் பாதுகாப்பார்கள். இப்போது நாம் நேரே ஊர் திரும்புகிறோமா அல்லது ஆலவாய்க்குள் போய் இறைவனையும் வழிபட்டு விட்டுப் போகலாமா?”

என்று அன்னையிடமிருந்து வினாவாக மறுமொழி கிடைத்த போது ஆலவாய்ப்பகுதிக்குப் போகலாம் என்றே செல்வப் பூங்கோதையும் இணங்கினாள்.

வண்டிகள் ஆலவாய்ப் பகுதிக்குப் போகுமுன் வெள்ளியம்பலப் பகுதியையும், திருநடுவூரையும் கடந்து சென்ற போது செல்வப் பூங்கோதையின் கண்கள் கூட்டம் நிறைந்த கூடற் கோநகர வீதிகளில் மனிதர்களோடு மனிதர்களாகத் தனக்கு விருப்பமான அந்த முகம் எங்காவது தென்படாதா என்பதையே தேடிக் கொண்டிருந்தன. யாத்திரீகர்களும், பிற தேசத்தவரும் அதிகமாகத் தங்கக் கூடிய வெள்ளியம்பலப் பகுதியில் அங்கங்கே திரிந்து கொண்டிருந்த பூதபயங்கரப்படை வீரர்களைக் கண்ட வேளைகளில் எல்லாம், “ஐயோ! இந்தக் கொலை பாதகர்களிடம் சிக்கிவிடாமல் அவர் தப்ப வேண்டுமே - என்று அவள் மனம் இளையநம்பிக்காகத் தெய்வங்களை எல்லாம் வேண்டித் தவித்தது. அதற்கேற்றார்போல் வெள்ளியம்பலப் பகுதியின் முடிவில் ஓரிடத்தில் பத்துப் பன்னிரண்டு பூதபயங்கரப் படைவீரர்கள் யாரையோ சிறைப்பிடித்துச் செல்லும் காட்சி ஒன்று அவள் கண்களில் பட்டுவிட்டது. உடனே அவள் மனத்தில் என்னென்னவோ பயங்கரமான கற்பனைகள் எல்லாம் எழுந்து வாட்டின. அந்த இடத்திலிருந்து மேலே போகவே அவளுக்கு மனம் இல்லை. வண்டியை நிறுத்திக் களப்பிரர்கள் அப்போது சிறைப்பிடித்துச் செல்வது யாரை என்று அறிந்து கொண்ட பின்பே மேலே செல்ல விரும்பினாள் அவள். தானே இறங்கி ஓடிப் போய்ப் பார்த்து ஐயம் தெளிய வேண்டும் என்று துடித்தாள் அவள். அவளுடைய வேதனையை உணர்ந்து அதற்குச் செவி சாய்த்து, வண்டியை ஓட்டுகிறவன் இறங்கிப் போய்ப் பார்த்துவிட்டு வந்து -

ஒற்றன் என்று சந்தேகப்பட்டு யாரோ ஒருவனை சங்கிலியிட்டுப் பிணைத்து இழுத்துப் போகிறார்கள் - என்று தெரிவித்தான். அவள் மனம் விரைந்து துடித்தது. பயந்து கதறும் குரலில், “அவர்கள் யாரை இழுத்துப் போகிறார்களோ அந்த மனிதரை நீ நன்றாகப் பார்த்தாயா?” - என்று அவனை மீண்டும் வினாவினாள் அவள். “பார்க்க முடியவில்லை என்று மறுமொழி கூறிய போது அவள் நெட்டுயிர்த்தாள். செல்வப் பூங்கோதையின் அன்னை அவள் தவிப்பைக் கண்டு நகைத்தாள்.

பெண்ணே! நமக்கு வேண்டியவர்களைக் கோழைகளாகவும் பலவீனமானவர்களாகவும் கற்பனை செய்கிற அளவிற்கு நாம் தைரியமற்றவர்கள் ஆகிவிடக் கூடாது. உன் தவிப்பு வீணானது. பெரியவர் மதுராபதி வித்தகரின் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாராயினும் அவர்களை இவ்வளவு எளிதாக எதிரிகள் பிடித்து விட முடியாது என்ற நம்பிக்கையாவது உனக்கு இருக்க வேண்டும்.”

இருக்கலாம், அம்மா! ஆனால், ஒரு பலமான நம்பிக்கையின் மறுபுறத்தில் தான் பலவீனமான அவநம்பிக்கைகளும் அச்சங்களும் தோன்றுகின்றன.”

நீ சொல்வது தவறு செல்வப் பூங்கோதை! ஒரு பலமான நம்பிக்கைக்கு மறுபுறமே கிடையாது. பலவீனமான நம்பிக்கைக்குத்தான் மறுபுறங்கள் உண்டு. திடமான முடிவுக்கு முதல் எண்ணம் தான் உண்டு. இரண்டாவது எண்ணமே இல்லை என்பதை நீ ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.”

தாயின் உறுதிமொழியால் ஓரளவு மனநிறைவு அடைந்தாள் அவள். தன்னுடைய அன்பின் மிகுதியால் இணையற்ற வீர இளைஞர் ஒருவரைக் குறைத்து மதிப்பிட நேர்ந்ததை மற்றொரு கோணத்திலிருந்து தாய் சுட்டிக் காட்டிய போது தன் சிந்தனையை எண்ணித் தானே வெட்கப்பட்டாள் அவள்.

திருவாலவாய்க் கோவிலிலும் வழிபாட்டை நிறைவேற்றிக் கொண்டு மோகூர் திரும்புவதற்காகக் கோட்டைக்கு வெளியே புறநகரை அடைந்து வண்டிகள் வையையைக் கடந்து கரையேறிய போது இரவு நெடுநேரமாகி விட்டது. எப்படியும் இரவோடிரவாக அவர்கள் மோகூர் திரும்பியாக வேண்டியிருந்தது. வழிபாட்டுக்கு மட்டுமே அவர்கள் மதுரை வந்திருந்தால் இவர்கள் திரும்பி வந்து சேருவது பற்றிக் காராளர் கவலையின்றி நம்பிக்கையோடிருப்பார். இளையநம்பியைத் தந்திரமாகக் கோநகருக்குள் கொண்டு வந்து விட வேண்டிய பொறுப்பும் சேர்ந்திருந்ததால் தாங்கள் திரும்புவதைத் தந்தை ஆவலோடும், கவலையோடும் எவ்வளவிற்கு எதிர்பார்த்திருப்பார் என்பதைச் செல்வப் பூங்கோதை உணர்ந்திருந்தாள். அவளுடைய மனநிலையையும் அவள் தாயின் மனநிலையையும் உணர்ந்தவர்கள் போல் புறநகரிலிருந்து மோகூருக்குச் செல்லும் சாலையில் வண்டிகளை விரைந்து செலுத்தினார்கள் ஓட்டுபவர்கள்.

 

10. கருங்கல்லும் மலர்மாலையும்

 

மோகூர் ஊரெல்லையை அவர்கள் அடையும் போது நள்ளிரவுக்கு மேலாகி விட்டது. ஊர் அடங்கியிருந்ததால் வண்டிகளை இழுத்துச் சென்ற காளைகளின் கழுத்து மணி ஓசை கூட இரவின் அமைதியைக் கலைத்துக் கொண்டு கணீர் கணீரென்று தனியாக ஒலித்தது. மூன்று வண்டிகளுக்கான ஆறு காளைகளின் கழுத்து மணிகளும் ஒலிக்க விரைந்து ஊர் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வண்டிகள் ஊர் எல்லையில் சாலையருகே யாரோ இருவர் ஒதுங்கி நிற்பதைக் கண்டு, அடையாளம் புரிந்து உடனே நிறுத்தப்பட்டன. நிற்பவரைக் கண்டு மணி ஒலிகள் அடங்கி வண்டிகள் அடுத்தடுத்து நின்ற விதமே தனியானதொரு பணிவையும் அடக்கத்தையும் காட்டின. யார் முன்னிலையில் உலகியலான சிறிய ஓசைகள் அடங்கி விடுமோ அப்படி ஒரு கர்மயோகி வானையும் மண்ணையும் அளப்பது போன்ற உயரத்துடன் தன் அருகே பவ்வியமாகப் பணிந்து நிற்கும் காராளரோடு அங்கே நின்றிருந்தார்.

இருளையும் நிசப்தத்தையும் வென்று ஒலிக்கும் மணிகளின் கிண்கிணி நாதத்தோடு விரைந்து வந்த அவ் வண்டிகள் உடனே அடங்கி நின்ற விதம் எதிரே தோன்றியவரின் தோற்றத்துக்குக் கட்டுப்பட்டு அடங்கி விட்டாற் போலவே இருந்தது.

இரவில் காராளரோடு உலாவ வந்த மதுராபதி வித்தகர் அங்கே நின்று கொண்டிருந்தார். ஒரு பனைத் தொலைவு பின்னால் எந்நேரமும் அவரை நிழல் போல் உடனிருந்து காக்கும் ஆபத்துதவிகள் இருவரும் கூடத் தென்பட்டனர். முதல் வண்டியிலிருந்த செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் கீழே இறங்கிப் பெரியவரை வணங்கினர். காராளரின் மனைவிக்கு மதுராபதி வித்தகரிடம் அளவற்ற பயம். அவரை எதிரே பார்த்து விட்டால் அவளுக்குப் பேச வராது. ஏதாவது தவறாகப் பேசி விடுவோமோ என்ற பயத்திலேயே அவள் அவர் முன்னிலையில் பேச மாட்டாள். செல்வப் பூங்கோதைக்கும் ஓரளவு அந்த அச்சம் உண்டு என்றாலும் தந்தை அனுப்பியும் தானாகவும் அவள் அவரைக் காண ஆலமரத்தடிக்கு அடிக்கடி செல்ல நேரிடுவது வழக்கம் என்பதால் அவருடன் ஓரளவு உரையாட முடியும். அப்படி உரையாடும் வேளைகளில் எல்லாம் செங்குத்தான மலை ஒன்றில் ஏற முயன்று இயலாமல் அச்சத்தோடு பாதியிலேயே கீழே இறங்கிவிடும் ஒரு குழந்தையின் நிலையில் தன்னுடைய சொற்களுக்குப் பிடி கிடைக்காமல் தடுமாறும் ஓர் அனுபவத்தையே அவள் அடைந்திருக்கிறாள். மலர்களைப் போல் நளினமாகவும், பயபக்தியோடும் அவர் முன்னிலையில் அவள் தூவிய சொற்களை உணர்ச்சியோ கிளர்ச்சியோ அடையாமல் கல்லைப் போல் தாங்கியிருந்திருக்கிறார் அவர். தன்னிடம் பேசுகிற எதிராளி வெற்றுச் சொற்களை நிறை அடுக்கலாகாது என்று அவரே வாய் திறந்து கட்டளை இடுவதில்லை, ஆனால் பேசுகிறவன் தான் பேசும் போது எதிரே தெரியும் அவருடைய கண்களையும் முகத்தையும் பார்த்தாலே பேசுவதற்கென்று திரட்டிய பல சொற்கள் கழன்று விழுந்துவிடும். இது தவிர்க்க முடியாதது என்பதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். இப்போது அவள் தந்தை அவளைக் கேட்டார். 

நடந்தவற்றைச் சொல்லம்மா!... ஏன் தயங்குகிறாய்?”

பெரியவரும் வலது கரத்தை மேல் நோக்கி அசைத்துச்சொல்லேன் என்பது போல் குறித்து உணர்த்தினார். ‘சொல்என வார்த்தையால் கேட்காமல் அவர் அப்படிக் குறிப்புக் காட்டியதே அவளை ஓரளவு தாழ்வு உணர்ச்சியடையச் செய்தது. மொழியால் பேச நீயும் நானும் ஓர் எல்லையில் இல்லை என்பது போல் அவளை மருட்டியது அந்தக் குறிப்பு. அவள் மிகவும் நிதானமாக எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினாள். தாமரைப் பூக்குவியலோடு இருந்த வண்டியைப் பூத பயங்கரப் படைவீரர் சந்தேகப்பட்டது. அவனுடைய சந்தேகத்தை நீக்கித் தாங்கள் மேலே சென்றது, யானைப் பாகன் அந்துவனைக் கண்டது முதலிய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாகச் சொன்னாள் அவள். கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மதுராபதி வித்தகர் இளையநம்பி என்னும் சுந்தர வாலிபனின் மேல் செல்வப் பூங்கோதை என்னும் அழகிய இளம்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பிரியத்தையும் மயக்கத்தையும் கொண்ட சொற்களைத் தனியே பிரித்தெடுத்து விலக்கி அவள் தெரிவித்தவற்றை அறிவதற்குப் போதுமான சொற்களை மட்டுமே புரிந்து ஏற்றுக் கொண்டார். இளையநம்பியைப் பற்றிக் கூற நேரிடுகையில் சில இடங்களில் நாணமும், சில இடங்களில் தன்னை மீறி அவன் அழகை வர்ணிப்பது போல் தன் வாக்கில் வந்து சேரும் பதங்களையும் தவிர்க்க முடியாமல் அவள் தான் கூற முற்பட்டவற்றைக் கூறிக் கொண்டிருந்த போது அந்த இணையற்ற அரசதந்திர மாமேதை உள்ளூற நகைத்தபடியே அதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார். மோகூருக்கு அருகே யானைக்குன்றின் சாரலில் சில இடங்களில் அருமையான முல்லைக் கொடிகள் சில தரை மண்ணாயுள்ள இடத்தில் தோன்றி அருகே மலைக் கருங்கல்லாய் இறுகிய பகுதியில் படர்ந்து அந்தக் கருங்கற் பரப்பின் மேல் பூக்களைப் பூத்துக் கொட்டுவது உண்டு. அந்தக் காட்சியைக் காணும் போதெல்லாம், செல்வப் பூங்கோதைஇந்த மலர்களின் மேன்மையையும், குளிர்ச்சியையும் நறுமணத்தையும் அந்தக் கருங்கல் என்றாவது உணர முடியுமா? ஒரு தெய்வத்திற்கு அர்ச்சனை செய்வது போல் எவ்வளவு காலமாக இந்தப் பூக்கள் உதிர்ந்து அந்தக் கல்லை வழிபடுகின்றன! இந்தக் கொடியை ஒருவிதமான உணர்வுமின்றித் தாங்கும் ஆதாரநிலமாக இருப்பதைத் தவிர இதன் இதயத்து மென்மையையும் நறுமணங்களையும் சீதத்தன்மையையும் ஏற்றதற்கு அடையாளமாக அந்தக் கல் எந்த அருளைப் புரிந்திருக்கப் போகிறது இதற்கு?’ - என்று விளையாட்டாகச் சிந்திப்பதுண்டு. தன்னுடைய வியப்புக்கள் அதிசயங்கள் சுகதுக்கங்கள் ஆகியவற்றைப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் அவள் முயன்று கான்பித்துக் கொள்ள விரும்புவதில்லை. எப்போதாவது அவரிடம் பேசும் போது அப்படி வியப்புக்களோ அதிசயங்களோ சுக துக்கங்களோ தழுவிப் பிறக்கும் தன்னுடைய வார்த்தைகள் கருங்கல்லில் உதிரும் முல்லை மலர்களைப் போன்ற அவரிடம் சென்று சேருவதாக அவளுக்குத் தோன்றும். அந்தக் கருங்கல்லில் எல்லையற்ற ஆற்றலும் தெய்வீகமும் இருப்பதாக அவளுள் பழகியிருந்த ஒரு பயபக்தியின் காரணமாக அதை அவள் ஒரு குறையாக எண்ணுவதில்லை. என்றாலும் அவரிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அந்த யானை மலைக் கருங்கல்லில் உதிரும் முல்லைப் பூக்களின் காட்சி அவளுக்கு நினைவு வராமற் போவதில்லை. இதயத்தின் ஒரு கோடியில் அந்தப் பெரியவருக்குப் பேர்த்தி வயது கூட நிரம்பியிராத தன் மேல் அவருள்ளே ஒரு பாசமும் குழைவும், ஆசியும் இருக்கும் என்று அவள் நம்பினாலும், அந்தப் பாசத்தையும் ஆசியையும் சொற்களால் வெளிப்படுத்தி அங்கீகரிக்காத அவருடைய உணர்ச்சிகளின் இறுகிய தன்மையை அவள் பலமுறை நேருக்கு நேர் கண்டு மருண்டதுண்டு.

இன்று இந்த நள்ளிரவிலும் அப்படியே நேர்ந்தது. தன்னருகே அன்னையையும் எதிரே நிற்கும் பெரியவரின் அருகே தந்தையையும் வைத்துக் கொண்டு தான் கூற வேண்டியவற்றுக்கான இங்கிதமான சொற்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துப் புதிதாக மாலை தொடுத்துப் பழகுவது போல் சொற்களை ஒவ்வொன்றாகத் தொடுத்துப் பேசினாள் அவள். இளையநம்பியின் கையும் வண்டியில் குவிந்திருந்த தாமரைப் பூக்களும் வேறுபாடு தெரியாமல் ஒன்றாயிருந்த இடத்தைப் பற்றிக் கூறும் போது அவளையும் மீறிச் சொற்கள் மிக மிக நளினமாய்க் கோர்த்துக் கொண்டு வந்தன. தானும் தன்னுடைய அன்னையும், வெள்ளியம்பலப் பகுதியைக் கடந்து நடுவூர் வழியே திருவாலவாய்க்குச் செல்லும் போது பூத பயங்கரப் படையினர் யாரோ ஒரு மனிதரை ஒற்றர் என்று ஐயப்பட்டு சங்கிலியால் பிணித்து இழுத்துச் சென்றதைச் சொல்லும் போது அதைக் கூறும் தன் வார்த்தைகளில் பதற்றத்தையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. அப்போது மட்டும் மதுராபதி வித்தகரின் குரல் தன் தந்தையை நோக்கி, “இப்படி நம்மால் அன்பு செய்யப்படுகிறவர்களின் சுகதுக்கங்களைப் பல வேளைகளில் நாமே கற்பித்துக் கொள்கிறோம்! ஆனால், நாம் கற்பிக்கின்ற துக்கங்களின்படி துக்கங்களும் வருவதில்லை. நாம் கற்பிக்கின்ற சுகங்களின்படி சுகங்களும் வருவதில்லை - காராளரே?” - என்று கூறியதைக் கேட்டாள் அவள். ‘நாம் கற்பித்தபடி துக்கங்கள் வருவதில்லை என்று அவர் கூறியது அவளுக்குப் பிடித்திருந்தது. ‘நாம் கற்பித்தபடி சுகங்களும் வருவதில்லை என்பதை அவர் ஏன் கூறினார் என்று அந்த வார்த்தைகளை மட்டும் ஏற்க முடியாமல் அவள் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த போது -

ஆனால் நாம் விரும்புகிறபடியே நம் சுகங்கள் அமைய வேண்டும் என்றும், நாம் விரும்புகிறபடியே நம் துக்கங்கள் விலகிப் போய்விட வேண்டும் என்று இளம்பருவத்தில் ஓர் ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு - என்று பெரியவரே மேலும் பேசிய போது தன் மனத்தைப் படித்து விட்டு அவர் மறுமொழி கூறினாற் போல் துணுக்குற்றாள் அவள். கூறுகின்ற சொற்களைக் கேட்டுவிட்டு மறுமொழி சொல்கிறவர்கள் நிறைந்துள்ள உலகில் நினைக்கின்ற சொற்களுக்கும் தீர்மானம் செய்தாற் போல் மறுமொழி கூறுகின்ற அந்தச் சதுரப்பாட்டை வியந்து நின்றாள் அவள். முதல் வாக்கியத்தை, அவர் பேசிய சுக துக்கங்களைப் பற்றி எதற்காக இப்போது இப்படி ஒரு தத்துவம் சொல்லுகிறார் என்று அவள் சிந்தித்தாள். அவளுக்குள்ளே இப்படி ஒரு சிந்தனையை உண்டாக்குவதற்காகவே முன் வாக்கியத்தைச் சொல்லியிருந்தவர் போல் அந்தச் சிந்தனையுடனேயே தனது இரண்டாவது வாக்கியத்தின் மூலம் அவளைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார் அவர். மீண்டும் அந்த யானை மலைக் கருங்கல்லின் மேல் படர்ந்து உதிர்ந்த முல்லைப் பூக்கள் தான் நினைவு வந்தன அவளுக்கு.

அதற்கு மேல் அவளிடமும் அவள் அன்னையிடமும் கேட்டறிய வேறெதுவுமில்லை என்பது போல் வலது கையை மேலே போக வேண்டிய சாலையை நோக்கி அசைத்து விடை கொடுப்பது போல் குறிப்பு உணர்த்தினார் அவர். அன்னையோடு வண்டியில் போய் ஏறிய போது -

பெண்கள் உணர்ச்சி மயமானவர்கள். அவர்களுக்கு வாழ்வின் சுகதுக்கங்களை விடச் சுகதுக்கங்களைப் பற்றிய கற்பனைகளே அதிகம். அவர்கள் கூறுகிறவற்றில் இந்தக் கற்பனைகளையும், உணர்ச்சிகளையும், கழித்துவிட்டுப் பதங்களுக்குப் பொருள் தேட வேண்டும் - என்று தொலைவில் பெரியவர் தன் தந்தையிடம் கூறிக் கொண்டு செல்வதை அவளும் கேட்க முடிந்தது. நீண்ட நேரம் இந்தச் சொற்களையே சிந்தித்துக் கொண்டிருந்தாள். இந்த வாக்கியத்தில் பதங்கள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் பலவீனமான சிந்தனையால் உடைத்துப் பொருள் கண்டுபிடிக்க முடியாத இராஜ தந்திரப் பூட்டுகள் நிறைந்திருப்பது போல் தோன்றி அவளைப் பயமுறுத்தின... நீண்ட நேரம் இந்த வாக்கியத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள்.

இரவு நெடுநேரங் கழித்து பெரியவரை ஆலமரத்திற் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பிய தன் தந்தையிடம்இந்த வாக்கியத்துக்குப் பொருள் என்ன? ஏன் பெரியவர் அவரிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்?” என்று வினாவியதோடு தன் மனத்தில் தோன்றிய யானைமலை முல்லைக்கொடி கருங்கல்லில் உதிர்க்கும் பூக்களின் உவமையையும் அவள் மெல்லச் சிரித்தபடி கூறினாள். அப்போது அவர் அவளை மறுத்தார்.

மகளே! அவரைப் பற்றி அப்படி நினைக்காதே. வருங்காலப் பாண்டிய நாட்டின் பல நூறு தலைமுறைகளை இன்றைய சிந்தனையில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் செயல்வேள்வியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய சொற்களுக்கு நிறைமொழி மாந்தர் ஆணையிற் கூறும் மறைமொழியின் பொருளாழமும் ஆற்றலும் உண்டு! பின்னால் ஒரு சமயம் நீயே இதை உணர்ந்து கொள்வாய்.”

11. மூன்று குழியும் ஒரு வினாவும்

 

இருளில் கால் சலிக்க நடக்கும் துணிவுள்ளவன் தான் காரியங்களைச் சாதித்து முடிக்கும் வீரனாக இயலும் என்று அழகன் பெருமாள் மாறனுக்கு மறுமொழி கூறியிருந்தும் அந்தக் கரந்து படை வழியில் முன்னேறிச் செல்வது மிக அரிய செயலாயிருப்பதைச் சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே இளையநம்பி உணர்ந்தான். வெளி உலகில் பூமியின் தோற்றம் மேற்புறம் இரவென்றும் பகல் என்றும் கால வேறுபாடுகள் இருந்தது போல் அல்லாமல் இந்தச் சுரங்க வழியில் இரவு பகல்களே கிடையாது என்று தோன்றியது. நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் ஒரே இருள் மயமாய் நீண்டு செல்லும் அந்த நிலவறைப் பாதையில் இரவுக்கும் பகலுக்கும் வேறுபாடு இல்லாதது போல் கண்கள் பெற்றதன் பயனும், கண்கள் பெறாததன் பயனின்மையும் கூட வேறுபாடற்றதுதான். சூரியன் உதித்தாலும் மறைந்தாலும் அந்த நிலவறைப் பாதையில் தெரியாது. அத்தகைய பயங்கரமான மாயக் குகை போன்ற காரக்கிருகப் பாதையில் அழகன் பெருமாள் தன்னைத் தடுமாறாமல் வழிநடத்திச் செல்ல வேண்டுமானால், அவன் இந்த வழியிலேயே பல்லாயிரம் முறை சென்று பழகியிருந்தால் தான் முடியும் என்று தோன்றியது. அழகன் பெருமாளின் கையைப் பற்றி நடந்து கொண்டே இளையநம்பி அவனை வினாவினான்.

அழகன் பெருமாள்! இந்தப் பாதை வழியாக அரண்மனை அந்தப்புர உரிமை மகளிரும் அரச குடும்பத்தினரும் திருமருதமுன்துறைக்குப் புண்ணிய நீராடச் சென்றதாகச் சொல்கிறாயே? அரச குடும்பத்துப் பெண்கள் மிக மிக தைரியசாலிகளாக இருந்திருக்க வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது? இத்தனை பெரிய இருட்குகையில் நடக்க எப்படிப் பழகினார்கள் அவர்கள்?”

அப்படியில்லை ஐயா! பல நூறு ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்ததாக நான் கேள்விப்பட்டிருந்ததைச் சொன்னேன். களப்பிரர் ஆட்சி வந்த பின்பு இந்த வழி மூடப்பட்டுப் பாழடைந்து விட்டது. இந்த வழியைக் கண்டுபிடித்து நாம் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் என்பதைத் தவிர இப்படி ஒரு வழி இருப்பது இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களுக்குக் கூடத் தெரியாது. தவிர இந்த வழியின் மறுபுறமாகிய உபவனத்திலிருந்தோ கணிகையர் வீதியிலிருந்தோ புறப்பட்டால் தீப்பந்தங்களை எடுத்து வருவோம். அந்த இரண்டு வாயில்களும் நம் ஆதிக்கத்தில் இருப்பவை. அதனால் பயமில்லை. பெரும்பாலும் வெள்ளியம்பலம் பகுதியின் வாயில் அகநகரில் இருப்பதனால் அதைப் பயன்படுத்துங்கால் மிகவும் விழிப்பாகவும் களப்பிரர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விடாமல் பயன்படுத்த வேண்டும் என்பதும் பெரியவர் கட்டளை. அதனால் வெள்ளியம்பல முனையிலிருந்து புறப்பட நேர்ந்தால் நாங்கள் விளக்கோ தீப்பந்தங்களோ பயன்படுத்துவதில்லை. எதிர்ப்பக்கங்களிலிருந்து வெள்ளியம்பல முனை வழியே நகருக்குள் ஊடுருவும் போது நம்மவர்கள் விளக்கோ தீப்பந்தங்களோ கொண்டு வந்தாலும் வெளியேறு முன்பே அவற்றை அணைத்து விடுவது வழக்கம். பெரும்பாலும் பழகியவர்கள் மட்டுமே அந்தரங்கமாக இங்கு வந்து போவதால் கால் தடத்திலேயே இந்த வழி புரியும். உங்களுக்கு இது சிரமமாயிருக்கும் என்று எனக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தால் மறுமுனையிலிருந்து தீப்பந்தங்களோடு சிலரை நடு வழியில் வந்து எதிர்கொண்டு காத்திருக்கச் செய்திருக்கலாம்.” 

இதில் எனக்குச் சிரமம் எதுவும் இல்லை. மனத்தில் தோன்றிய ஐயத்தைத் தெளிவு செய்து கொள்ளவே உன்னைக் கேட்டேன்.”

மழைக் காலங்களிலும் வையையில் வெள்ளப் பெருக்குக் காலங்களிலும் இந்த நிலவறையில் பெரும்பகுதி முழங்கால் அளவு தண்ணீர் கூட நிரம்பி விடுவது உண்டு ஐயா...” பேசிக் கொண்டே இளையநம்பியை அழைத்துச் சென்ற அழகன் பெருமாள் ஓரிடம் வந்ததும் நின்று கூறினான்.

ஐயா இப்போது நீங்கள் நிற்கிற இடத்திற்கு வலது புறம் உங்கள் வலது தோளின் திசையில் வலப் பக்கமாக நடந்து நூறு பாக தூரம் சென்றால் நான் முன்பே கூறினேனே அந்தக் கணிகையர் வீதி வாயில் வரும்...”

எதுவுமே தெரியாத இந்தக் கொடுமையான இரவில் அந்த வழியை இவ்வளவு குறிப்பாக இலக்குத் தப்பாமல் நீ எப்படிக் கூற முடிகிறது என்பது தான் எனக்கு வியப்பாயிருக்கிறது!”

அது மிகவும் எளிது ஐயா! இந்த இடத்தில் கீழே கல்தளம் பரவியிருக்கிறது. அந்தத் தளத்தில் நடுவில் சிறிதாக மூன்று குழிகள் இருக்கின்றன. நடந்து வருகிற யாரும் அந்தக் குழிகளின் மேல் கால்கள் பாவாமல் நடக்க முடியாது. அதை வைத்து வழியை அநுமானம் செய்ய முடியும். இப்போது நீங்களே இன்னும் ஓர் அடிபெயர்த்து வைத்து முன் நடந்தால் அதை உணர்வீர்கள்.”

உடனே ஓர் அடி முன்னால் நடந்த இளையநம்பி அழகன்பெருமாள் கூறியது போலவே பாதங்களில் கற்குழிகள் தென்படுவதைத் தெளிவாக உணர முடிந்தது. தனக்குத் தோன்றிய இன்னொரு சந்தேகத்தையும் அவன் அழகன் பெருமாளிடம் அப்போதே கேட்டான்.

உபவனத்து முனையிலிருந்தும் வெள்ளியம்பல முனையிலிருந்தும் ஏற்படாத அபாயமோ, இடையூறோ இந்தக் கணிகையர் வீதி முனையிலிருந்து நமக்கு ஏற்படாது என்பது என்ன உறுதி?”

உறுதிதான்! உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் எப்படி இந்த வழியைப் பற்றிய இரகசியம் களப்பிரர்களுக்குத் தெரிய முடியாதோ அப்படியே அந்த கணிகை மாளிகையிலிருந்தும் தெரிய முடியாது. பாண்டிய குலத்துக்காகச் சர்வபரித்தியாகம் செய்யும் நெஞ்சுறுதி படைத்தவர்கள் அந்த மாளிகையில் இருக்கிறார்கள் என்பது பெரியவருக்கு மிக நன்றாகத் தெரியும். அவருடைய நம்பிக்கை பெரும்பாலும் தவறுவதில்லை.”

கணிகையர்களில் நெஞ்சுறுதி படைத்தவர்களும் இருப்பார்கள் என்று நான் இன்று தான் முதன்முதலாக உன்னிடத்திலிருந்து கேள்விப்படுகிறேன் அழகன் பெருமாள்!” 

அது ஒன்றை மட்டுமில்லை ஐயா! பல புதிய விஷயங்களையே நீங்கள் இன்று தான் முதன் முதலாக என்னிடம் கேள்விப்படுகிறீர்கள்...”

இப்போது என்ன சொல்கிறாய் நீ?”

தவறாகவோ, மதிப்புக்குறைவாகவோ எதுவும் சொல்லிவிடவில்லை. கோநகருக்கு நீங்கள் புதியவர். பலவற்றை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியிருக்கிறது என்று தான் கூறினேன்.”

கணிகையர்களின் இயல்பைப் பற்றித் தான் பொதுவாகக் கூறிய ஒரு கருத்து அழகன் பெருமாளுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை இளையநம்பியால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு மிக வலிமையான காரணம் ஒன்று இருக்க வேண்டும் என்று தான் தோன்றியது. என்றாவது ஒரு நாள் நிலவறைப் பாதையின் மூன்றாவது முனையாகிய அந்தக் கணிகையர் மாளிகையைப் பற்றித்தானே அறிந்தாலொழிய அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது என்றும் தோன்றியது அவனுக்கு.

உபவனத்து முனையை அடைவதற்கு இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருப்பதாக அழகன் பெருமாள் தெரிவித்தான். வழியை கால்களால் தடம் பார்த்து அறிந்து மெல்ல மெல்லச் செல்ல வேண்டியிருந்ததால் நேரம் ஆயிற்று. இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டியிருக்கும் என்று இளையநம்பி அவனைக் கேட்காமலே அவன் இதைக் கூறியிருந்தான்.

நான் மட்டும் தனியே செல்வதாயிருந்தால் இன்னும் வேகமாகச் செல்ல முடியும். இந்த வழிக்குப் புதியவராகிய உங்களைத் துன்பப்படாமல் அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால் நாம் விரைந்து போய்ச் சேர இயலவில்லை.” அழகன் பெருமாள் கூறியதற்கு இளையநம்பி மறுமொழி எதுவும் கூறவில்லை. ஆனால் அந்த மையிருட்டில் சுற்றி எதுவுமே கண்பார்வைக்குத் தெரியாமல் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது என்னவோ போலிருந்தது. வேண்டும் என்றே கண்ணைக் கட்டிக் கொண்டு நடப்பது போலிருந்த அந்தச் சூழலில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு போவதன் மூலம் கிடைக்க முடிந்த மனநிறைவை இழப்பானேன் என்று கருதி இளையநம்பி தானே முயன்று அழகன் பெருமாளிடம் பேசத் தொடங்கினான். ஆவலோடும் உற்சாகத்தோடும் பேசிக் கொண்டு வந்த அழகன் பெருமாள் அந்த மூன்று குழிப் பகுதியில் கணிகையர் மாளிகை பற்றித் தான் எழுப்பிய ஒரு வினாவுக்குப் பின் அவனே பேசுவதைக் குறைத்துக் கொண்டு இளையநம்பி கேட்பதற்கு மட்டும் மறுமொழி சொல்வதென்று கருத்தை மாற்றிக் கொண்டு விட்டாற் போல் தோன்றிய, அந்தக் கருத்துப் பிணக்கை மாற்றி அழகன் பெருமாளை மீண்டும் தன்னுடன் இயல்பாகவும், கலகலப்பாகவும் பழகச் செய்ய இளையநம்பி முயல வேண்டியிருந்தது. இருளாயிருந்ததால் ஒருவருக்கொருவர் முகத்தையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இளையநம்பி கேட்டான்: 

இந்த மாபெரும் மதுரை நகரின் எந்தப் பகுதியில் களப்பிரர்களின் பூத பயங்கரப் படை இப்போது அதிகமாகக் கவனம் செலுத்திக் கொண்டு திரிகிறது? அவர்களுடைய கவனம் அதிகம் குவியாத இடம் எது? இத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் களப்பிரர் ஆட்சி அபாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று அவர்களே உணர்ந்திருக்கிறார்களா?”

திருவாலவாய்ப் பகுதியையும் இருந்தவளப் பகுதியையும் பற்றிக் களப்பிரர்கள் அதிகம் கவலைப்படவில்லை. நடுவூர் ஏற்கெனவே அவர்களுடைய கடுமையான பாதுகாப்பில்தான் இருக்கிறது. புறநகரில் வையை ஆற்றை ஒட்டிய பகுதிகளையும், அகநகரில் அயலவர்களும் யாத்திரீகர்களும் தேசாந்திரிகளும் பழகக் கூடிய வெள்ளியம்பலப் பகுதியையும் தான் மிகவும் சந்தேகக் கண்களோடு பார்த்து வருகிறார்கள் அவர்கள்.”

அப்படியானால் சிறிதும் இலக்குப் பிழையாமல் தான் அவர்களுடைய சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நாம் அகநகருக்குள் ஊடுருவுவதற்குரிய ஒரே வழி வெள்ளியம்பலத் தோட்டத்தின் பின்புறம் மதிலோரமாக உள்ள பாழ் மண்டபத்தில் இருக்கிறது. வெளியேறுவதற்குரிய ஒரே வழி ஆற்றங்கரையில் உபவனத்தில் இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளைத் தான் களப்பிரர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்றால் நாம் முதல் வேலையாக அவர்கள் சந்தேகத்தைத் திசை திருப்புவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் அழகன் பெருமாள்!”

கணிகையர் வீதியின் வழியே மூன்றாவதாக ஒரு வாயில் இருப்பது எவ்வளவிற்கு இன்றியமையாதது என்பதை இப்போதாவது நீங்கள் உணர முடிகிறதா ஐயா? வெள்ளியம்பலத்து முனைக்கும் உபவனத்து முனைக்கும் அபாயங்கள் வந்தாலும் நாம் பயன்படுத்த ஒரு மூன்றாவது முனை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.”

அழகன் பெருமாள் மீண்டும் அந்தக் கணிகையர் வீதி நிலவறை வழிபற்றி இப்படிக் கூறியபோது இளையநம்பி ஓரிரு கணங்கள் என்ன பேசுவதென்று தோன்றாமல் வாளா இருந்தான். வெள்ளியம்பலத் தோட்டத்தில் தன்னைச் சந்தித்த போது, ‘எங்கு சத்தியத்தின் வலிமை குறைகிறதோ அங்கு சொற்களின் வலிமையால் அதை அலங்கரிக்கிறார்கள் என்ற வாக்கியத்தைத்தான் அவனிடம் கூறி அவனுக்கு நம்பிக்கை ஊட்டிய போதும் தன்னிடம் ஓர் அடிமையின் விசுவாசத்தோடு பணிந்து நின்ற இதே அழகன் பெருமாள் கணிகையர் வீதி மாளிகையிலுள்ளவர்களின் மன உறுதி பற்றித் தான் எழுப்பிய ஒரு வினாவுக்குப் பின் முற்றிலும் ஒருவிதமான மாறுதலோடு பழகுவதாகவே இளையநம்பிக்குப் பட்டது. அழகன் பெருமாள் பற்றிய இந்தப் புதிரை உடனே புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் என்றாகிலும் ஒருநாள் புரிந்து கொள்ளலாம் என்று அவன் நம்பினான்.

 

12. வையைக்கரை உபவனம்

 

நிலவறைப் பாதை முற்றிலும் நடந்து வையைக்கரை உபவனத்தின் புதரடர்ந்த பகுதி ஒன்றிலிருந்து வெளிப்படும் வாயில் வழியே இளையநம்பியும் அழகன் பெருமாளும் வெளியேறிய போது கிழக்கே சூரியோதயம் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது.

அந்த மாபெரும் உபவனத்தின் சூழ்நிலை திடீரென்று திருக்கானப்பேர்க் காட்டிற்கே மறுபடி திரும்பி வந்து விட்டது போன்ற பிரமையை இளைய நம்பிக்கு உண்டாக்கியது. வனத்தை ஒட்டி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி புண்ணிய நறும்புனல் பெருக்கிக் கொண்டிருந்தாள். கதிரவன் உதிக்கும் கீழ் வானத்து ஒளிக்கதிர்கள் பட்டு மின்னும் வையை நீரின் பிரவாகத்தை மரம் செடி கொடிகளும் பன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கும் பூவகைகளும் நிறைந்த அந்த உபவனத்தில் இருந்து காண்பது பேரின்பம் தருவதாயிருந்தது. சிறு சிறு ஓடங்களில் அக்கரையில் செல்லூருக்கும் பிற பகுதிகளுக்கும் செல்வோர் சென்று கொண்டிருந்தனர்.

கரையோரங்களில் இருந்த புன்னை, பாதிரி, நாகலிங்க மரங்களின் பூக்கள் உதிர்ந்து உதிர்ந்து வையையின் கரையை ஒட்டிய நீர்ப்பரப்புச் சிறிது தொலைவுக்குப் பூக்களாலேயே மூடப்பட்டுப் பூம்பரப்பாகத் தோன்றியது. நெடுநேரம் வௌவால் நாற்றமும் நிலவறையின் புழுக்கமும் படர இருளில் நடந்து வந்திருந்த இளையநம்பிக்கு உபவனத்தின் பசுமை மணமும், பல்வேறு மலர்களின் கதம்பமான வாசனைகளும், சில்லென்று மேனியையும் கண்களையும் வந்து தழுவும் குளிர்ச்சியும் சொல்லால் சொல்லி விளக்க முடியாத சுகத்தை அளித்தன.

உபவனத்தின் புல்வெளியில் இளம் புள்ளிமான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. பூமியில் வந்து நெருக்கமாகச் சிதறிய நட்சத்திரங்களைப் போல் வெகுதொலைவு பசும் பரப்பாகப் பரந்திருந்த மல்லிகைச் செடிகளில் பூக்கள் அடர்த்தியாகப் பூத்திருந்தன. மனோரஞ்சிதப் புதர்களில் எங்கெங்கோ இடம் தெரியாமல் பூத்திருந்த பூமடல்களின் நறுமணம் தேவலோகத்தின் படிகளில் நடந்து போவது போல் அவனுடைய நடையையே கம்பீரமாகவும் உல்லாசமாகவும் மேலே ஊக்கியது. பூக்களின் மிக மிக நுண்ணிய நறுமணத்திற்கும், இசையின் பேரினிமைக்கும் மனிதனின் நரம்புகளில் முறுக்கேற்றி அவன் எங்கோ பெயர் புரியாத மண்டலங்களின் வீதிகளில் மிதப்பது போன்ற களிப்பை அளிக்கும் ஆற்றல் இருப்பதை இளையநம்பி பலமுறை உணர்ந்திருக்கிறான். இன்று இப்போதும் அதே உணர்வை இங்கே அடைந்தான் அவன்.

எதிரே தரையை ஒட்டித் தாழ்வாகச் சாய்ந்திருந்த ஒரு சுரபுன்னை மரத்தின் கிளைகளில் நாலைந்து மயில்கள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒரு மயில் குதூகலமாகத் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது. மாமரங்களில் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தன. கிளிகளும், குயில்களும் கூவிக் கொண்டிருந்தன. தோட்டப்பரப்பில் இடையிடையே இருந்த சிறு சிறு வாவிகளிலும், பொய்கைகளிலும் வட்ட வட்ட இலைகளின் நடுவே வெண்மையும், சிவப்புமாகப் பனிபுலராத பூக்கள் சிலிர்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தன. அந்த உல்லாச மனநிலையில் உடன் வந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் மாறனை மீண்டும் வம்புக்கு இழுத்து அவன் வாயைக் கிளறிப் பார்க்க வேண்டும் போலிருந்தது இளையநம்பிக்கு. அவனுக்கும் தனக்கும் பிணக்கு ஏற்படக் காரணமாக இருந்த உரையாடலையே மீண்டும் இரு பொருள்பட இரட்டுற மொழிதலாகக் கேட்டான்.

மான்களையும், மயில்களையும், கிளிகளையும், குயில்களையும் இந்தச் சோலையில் நிறையக் காண முடிகிறது.”

அவற்றைப் பேணி வளர்ப்பதில் எனக்கு மிகவும் பிரியம் உண்டு ஐயா! அவை யாருக்கும் துயரம் புரியாதவை. யாரையும் புண்படுத்தாதவை. எல்லாரையும் மகிழ்விப்பவை.”

நான் இங்குள்ள மான்களையும், மயில்களையும் பற்றி மட்டும் தான் குறிப்பிடுகிறேன். நிலவறை வழியின் மூன்று குழிப் பாதையாகச் சென்றால் சந்திக்க முடிந்த மான்களையும், மயில்களையும் அல்ல.”

உரை நடையில் கூடத் திருக்கானப்பேரில் ஆகுபெயராகவும், அன்மொழித் தொகையாகவும் கடுநடையிற் பேசுவார்கள் போலிருக்கிறது. திருக்கானப்பேர்த் தமிழ் நடைமட்டுமின்றி மனிதர்களும் கூடச் சிறிது கடுமையாகத் தான் இருக்கிறார்கள்...”

இந்த அனுமானம் எதிலிருந்து உனக்குக் கிடைத்தது அழகன் பெருமாள்?”

எல்லா அனுமானங்களுக்குமே பிரமாணங்களைக் கேட்பதிலிருந்தே திருக்கானப்பேர் மனிதர்களின் மன இறுக்கம் தெரியவில்லையா?”

நிதானமாக நினைத்துப் பார்த்தால் காரண காரியங்களின் நீங்கிய பிரமாணங்கள் இருக்க முடியாது என்பதை நீயும் புரிந்து கொள்ள வேண்டும்.”

போதும் ஐயா! நமக்குள் வீண் வாக்குவாதம் வேண்டியதில்லை. நிலவறை வழியில் நடந்து வரும் போது எந்த விஷயமாக உங்களுக்கும் எனக்கும் பிணக்கு நேர்ந்ததோ அதில் என் நிலையில் எவ்வளவு நியாயமும், தெளிவும் உறுதியும் இருக்கிறது என்பதை நீங்களே ஒரு நாள் தெரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள்.” 

இதைக் கேட்டு இளையநம்பி புன்முறுவல் பூத்தான். அழகன் பெருமாள் மாறன் தன் நிலையில் உறுதியோடும் பிடிவாதமாகவும் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அதோடு இன்னோர் உண்மையையும் அழகன் பெருமாளைப் பற்றி இளையநம்பி புதிதாக இப்போது அறிய முடிந்திருந்தது. அவன் உபவனக் காப்பாளனாக இருப்பது மதுராபதி வித்தகரின் வாக்குக்குக் கட்டுப்பட்டே அன்றி உண்மையில் அவன் ஓரளவு விஷயஞானமுள்லவனாகத் தோன்றினான். மான்கள், மயில்கள் என்ற வார்த்தைகளைப் பொருள் வேறுபட்ட அர்த்தத்தில் தான் பயன்படுத்திப் பேசிய மறுகணமே, ‘திருக்கானப்பேரில் பேச்சு வழக்கில் கூட ஆகுபெயரையும், அன்மொழித் தொகையையும் பயன்படுத்துவார்கள் போலிருக்கிறது என்று தயங்காமல் அவன் மறுமொழி கூறியது இளையநம்பிக்கு வியப்பூட்டியது.

மாற்றான் தொடுக்கும் அம்புகளுக்குப் பதிலாக அதை விட வேகமான அம்புகளை ஆயத்தமாக வைத்திருந்து உடனே காலப் பிரமாணம் தவறாமல் தொடுக்கும் போர் வல்லாளர்களைப் போல் உரையாடலில் விடை தருபவர்களிடம் உடனே பதில் தரும் விஷய ஞானம் இருக்கத்தான் செய்யும். அழகன் பெருமாளிடம் அந்த விஷய ஞானத் தெளிவு இருந்தது. மதுராபதி வித்தகர் பயிற்சி அளித்து உருவாக்கிய ஒவ்வோர் ஆளும் ஒரு சீரான வினைத் திறமை உடையவர்களாக இருப்பதையும் அவன் கண்டான். திருமோகூர்ப் பெரிய காராளர், யானைப்பாகன் அந்துவன், இப்போது இந்த வையைக் கரை உபவனத்து அழகன் பெருமாள் எல்லாருமே அப்படி இருப்பதைப் பெரியவரின் கைவண்ணச் சிறப்பாகக் கருதி மதித்தான் அவன்.

உபவனத்தின் உள்ளே நடந்து சென்ற அவர்கள், வனத்தின் அடர்ந்த பகுதி ஒன்றில், பின்புறம் வையையில் இறங்குவதற்குப் படிக்கட்டு இருக்குமளவிற்கு நதியை ஒட்டி வாயிற்புறம் தெற்கு திசையைப் பார்த்தும், புறங்கடை வடக்கே வையை நதியை நோக்கியும் அமைந்திருந்த ஒரு மண்டபத்திற்கு முன்பாக வந்திருந்தனர். களப்பிரர்கள் போன்றே நடையுடை பாவனைகளும் தலை முடியும் வைத்திருந்த ஐவர் முரட்டு மல்லர்களைப் போன்ற தோற்றத்தோடு அங்கே இருந்தனர்.

அழகன் பெருமாள் இளையநம்பியை அந்த மண்டபத்தின் முன்புறத் தாழ்வாரத்தில் கொண்டு போய் நிறுத்திய போது அங்கிருந்த ஐவருமே ஐந்து விதமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருந்த காரியம், தத்தம் குணச்சித்திரத்தின் ஓர் அடையாளமாயிருக்குமோ என்று கூட இளையநம்பி எண்ணினான். பொதுவாக எல்லாருமே ஒரு விநாடி புதிய மனிதர் ஒருவரோடு அழகன் பெருமாள் உள்ளே நுழைந்த போது, தாம் தாம் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து கவனம் கலைந்து, வந்தவர்கள் பக்கமாகத் திரும்பினர். நிமிர்ந்து பார்த்தனர் ஐவரும். 

அரும்பு மீசையும் மலர்ந்த கண்களும் சிவந்த இதழ்களுமாக ஓரளவு எடுப்பான முகத்துடனிருந்த ஒருவன் யாழைக் கையில் வைத்து அறுந்திருந்த நரம்புகளைச் செம்மை செய்வதற்காகப் புதிய நரம்பு பின்னிக் கொண்டிருந்தான்.

சிவந்து உருண்ட கண்களும் முகத்திலும் தோள்களிலும் நன்றாகத் தெரியும் பல வெட்டுக் காயத் தழும்புகளும் உடைய ஒருவன் மின்னலாக ஒளிரும் புதிய வாளின் நுனியை அடித்துக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தான். கட்டை குட்டையான ஒருவன் செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தான்.

வாழ்க்கையின் தளர்ச்சி தெரியும் சற்றே சோர்ந்த கண்பார்வையும் மூப்பும் உடைய ஒருவன் எதிரே நிறையப் பூக்களைக் குவித்து மாலை தொடுத்துக் கொண்டிருந்தான்.

திரண்டு கொழுத்த தோள்களையும் பாயும் வேங்கை போல் ஒளி உமிழும் கூர்மையான விழிகளையும் நீண்ட நாசியையும் உடைய ஒருவன் இழுத்து நிறுத்தி வில்லில் நாண் இணைத்துக் கட்டிக் கொண்டிருந்தான்.

கிளிகளும் பிற பறவைகளும் எழுப்பும் ஒலிகளோடு மண்டபத்தின் பின்புறம் வையை பாயும் ஒலியும், தொலைவிலே திருமருதமுன் துறையின் ஆரவாரங்களும் அப்போது அங்கே கேட்டுக் கொண்டிருந்தன.

சந்தித்த சில கணங்கள் இருதரப்பிலுமே மௌனமே நீடித்தது. முதலில் அழகன் பெருமாள்தான் அந்த மௌனத்தைக் கலைத்து இளையநம்பியை அவர்களுக்கு இன்னாரென்று சொல்லி விளக்கினான்.

பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசி பெற்று இங்கே புறப்பட்டு வந்திருக்கிறார் இவர்! திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரர் இளையநம்பியை இப்போது நாம் நம்மிடையே காண்கிறோம் என்று அழகன் பெருமாள் மாறன் கூறி விளக்கியதும் அங்கிருந்த ஐவரும் மெல்ல ஒவ்வொருவராக எழுந்து நின்று வணங்கினர்.

அந்த ஐவரும் அழகன் பெருமாளின் வாயிலிருந்துபெரியவர் மதுராபதி வித்தகர் என்ற சொற்கள் தொடங்கியதுமே அமர்ந்திருந்த இடத்திலிருந்து மெல்ல எழத் தொடங்கி விட்டதை இளையநம்பி கவனித்திருந்தான். சிறிது நேரத்திலேயே இளையநம்பி அவர்களோடு நெருக்கமாக உறவாடத் தொடங்கி விட்டான். யாழுக்கு நரம்பு கட்டிக் கொண்டிருந்தவனுக்கும் உதவி செய்து அதை விரைவாகச் செம்மைப்படுத்தித் தானே இசைத்தும் காண்பித்தான். வில்லுக்கு நாண் கட்டிக் கொண்டிருந்தவனுடைய கையிலிருந்து அதை வாங்கி வலது காலின் ஒரு நுனியைக் கொடுத்து மேற்புறம் பலங்கொண்ட மட்டும் அழுத்தி வளைத்துக் கொண்டு, “கழற்சிங்கா! இப்போது கட்டு உன் நாணை என்று அப்போது தான் தெரிந்து கொண்டிருந்த அவன் பெயரை அன்போடு கூவியழைத்து அவனை நாண் ஏற்றி இருக்குமாறு செய்தான் இளையநம்பி. கழற்சிங்கன் கட்டி முடித்த பின்பும் நாண் தொய்வாகவே இருப்பதை இழுத்துப் பார்த்துவிட்டு, “நாண் இவ்வளவு தொய்வாக இருந்தால் உன் வில்லிலிருந்து அம்பே புறப்படாது என்றான் இளையநம்பி.

மெய்தான்! நண்பர்களுக்கு முன் என் வில்லிலிருந்து அம்புகள் புறப்படாது. அதன் நாண் ஏற்றப்படாமல் தளர்ந்தே இருக்கும். அதை நான் இறுக்கிக் கட்டி அம்பு மழை பொழிய இன்னும் வாய்ப்பே வரவில்லை. நீங்கள் வந்த பின்பு, இனியாவது உங்கள் தலைமையின் கீழ் எனக்கும் நண்பர்களுக்கும் அந்த வாய்ப்புக் கிட்ட வேண்டும் என்று கழற்சிங்கன் மறுமொழி கூறிய போது நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தான் இளையநம்பி.

 

13. நதியும் நாகரிகமும்

 

இளையநம்பி கழற்சிங்கனை ஏறிட்டு நோக்கி மறுமொழி கூறினான்: “கழற்சிங்கா! உன் ஒருவனுடைய வில் மட்டுமில்லை, இன்னும் பல்லாயிரம் வில்கள் நாணேற்றப்பட்ட பின்னே நீ நினைக்கிற போர்க்களம் உருவாகும். அது வரை நிதானமும் அடக்கமுமே நமக்கு வேண்டும்; போர்க்களத்தை உருவாக்கி விடுவது சுலபம். ஆனால் தன்னைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொள்ளாத பகுதியிலிருந்து, போர்க்களத்தை உருவாக்கச் சொல்லி, வேண்டும் குரல் முதலில் எழக்கூடாது. நாம் இன்னும் அஞ்சாத வாசத்தில் தான் இருக்கிறோம் என்பதையும் நீ மறந்துவிடாதே.”

மறந்து விடவில்லை! என்றாலும் அஞ்சாத வாசமே நம்முடைய முடிவான குறிக்கோளும் பயனுமில்லை. எதிரிகள் நம் கண்காண வளர்ந்து வருகிறார்கள்; உயர்ந்து வருகிறார்கள்.”

நம்முடைய எதிரிகள் வளர்வதும் உயர்வதும் கூட நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் தோல்வியடைந்து கீழே விழும் போது குறைந்த உயரத்திலிருந்து விழக்கூடாது. இறுதியில் தோற்றுக் கீழே விழும் போது நிர்மூலமாகி விடுகிற அளவு பெரிய உயரத்திலிருந்து விழுவதற்கு ஏற்ற அத்துணை உயரத்திற்கு அவர்களை விட்டுவிடுவதும் அரச தந்திரங்களில் ஒன்று தான். அடிப்படை இல்லாத வளர்ச்சிகளையும் உயரங்களையும் அவை தாமாகவே விழுகிறவரை காத்திருந்து பார்ப்பதற்கு நமக்குத்தான் ஓரளவு பொறுமை வேண்டும். ‘இந்த உயரத்திற்கு அடிப்படை இல்லை போலிருக்கிறதே - என்று நம் எதிரிகளே புரிந்து கொண்டு அடிப்படையை பலப்படுத்தித் திருத்திக் கொள்ள முடிகிறாற் போல் அது குறைவான உயரத்தில் இருக்கும் போது நாம் குறுக்கிட்டு அவர்களை எதிர்த்து விடக்கூடாது.” 

மிகவும் பல்லாண்டு காலமாக அடிமைப்பட்டு விட்டோம் நாம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு...”

நியாயம் தான். அதை நம்மை விட நம்முடைய வழிகாட்டியான பெரியவர் மதுராபதி வித்தகர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரே அடக்கமாகவும், பொறுமையாகவும் இருப்பதிலிருந்து தான் இப்படியும் ஒரு தந்திரம் இருக்கிறது என்பதையே நான் உணர முடிந்தது. காலம் கனிகிற வரை நமது விருப்புக்களை விட வெறுப்புக்களைத் தான் அதிகம் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.”

இப்படி இளையநம்பி கூறிய விளக்கம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்ததன் காரணமாக அவர்களும் மன அமைதி அடைந்தனர். அதன் பின் மூன்று நான்கு நாழிகை வரை, தான் அறிய வேண்டிய பல செய்திகளை அவர்களிடமிருந்து விளக்கமாகவும் முழுமையாகவும் அறிந்து கொண்டான் அவன். அந்த வேளையில் அழகன் பெருமாள் அவர்களோடு இல்லை. பின்புறம் வையைப் படித்துறையில் நீராடுவதற்குப் போய்விட்டான். அவன் திரும்பி வந்த பின்பு அவனிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்புறம் தான் நீராடச் செல்ல வேண்டும் என்று காத்திருந்தான் இளையநம்பி. அவ்வாறு காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் பற்றி அவனால் நன்றாக அறிய முடிந்தது.

யாழுக்கு நரம்பு பின்னிக் கொண்டிருந்தவன் பெயர் காரி என்றும், அவன் யாழ்வல்லுநனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகின்றான் என்றும் தெரிந்தது.

வாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தவன் தேனூர் மாந்திரீகன் செங்கணான் என்றும் அவன் மாந்திரீகனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகிறான் என்றும் பூத்தொடுத்துக் கொண்டிருந்தவன் பெயர் சாத்தன் என்றும் அவன் மாலை தொடுப்பவனாக அகநகரில் கலந்து ஊடுருவியிருக்கிறான் என்றும் அறிய முடிந்தது. செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தவனை அவனுடைய உருவத்தின் காரணமாகவோ என்னவோ குறளன் என்று அழைத்தார்கள் அங்கிருந்தவர்கள். அவன் சந்தனம் அறைப்பவனாக நகரில் கலந்திருந்தான். நகரில் இருக்கும் பாண்டிய நாட்டு மக்களின் கருத்தைக் களப்பிரர்களுக்கு எதிராகத் திருப்புவதில் கழற்சிங்கன் உட்பட இவர்கள் ஐவரும் நாளுக்கு நாள் வெற்றியடைந்து வருவதாகத் தெரிந்தது.

மதுரை மாநகர மக்களுக்கு களப்பிரர் ஆட்சியில் வெறுப்பு வளர வளர இவர்கள் செயல்களும் வளர்ந்து கொண்டிருந்தன. களப்பிரர்களிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உணர்வு நெருப்பாய்க் கனிந்து கொண்டிருந்தது என்பதை இந்த நண்பர்களிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. உபவனத்திலிருந்து அகநகரில் வெள்ளியம்பலத்திற்கு இரகசியமான நிலவறை வழி ஒன்று இருப்பதை இவர்கள் வேண்டும் போதெல்லாம் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும், நகருக்கு உள்ளேயும் புறநகரிலும் சுற்றுப்புறத்துச் சிற்றூர்களிலும் தங்கள் காரியங்களுக்குப் பயன்படும் நண்பர்களைப் பெருக்கியிருந்தார்கள் என்பதையும் கூட இளையநம்பி அறிந்து கொண்டான். கோநகருக்கும் பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையும் ஆசியும் பெற்ற சிலர் இப்படி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கழற்சிங்கன் சொன்னான்.

அழகன் பெருமாள் நீராடி விட்டு வந்ததும் பொதுவாக இளையநம்பிக்கு அவன் ஓர் எச்சரிக்கை செய்தான்:

ஐயா! வழக்கமாக இந்த உபவனப் பகுதிக்குக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படையினரோ, பிறரோ சோதனைக்கு வருவதில்லை. எதற்கும் புதியவராகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் பாண்டிய நாட்டின் தொலை தூரத்து ஊரிலிருந்து வரும் ஒருவருடைய சாயல் உங்களிடம் தென்படுகிறது. யாராவது ஐயப்பாட்டோடு வினவினால், ‘நான் அழகன் பெருமாள் மாறனின் உறவினன். அவிட்ட நாள் விழாப் பார்க்க வந்தேன் என்று சொல்லிக் கொள்ளுவது உங்களுக்கு நல்லது.”

அப்படியே சொல்லிக் கொள்வேன்! இந்தச் சூழ்நிலை பழகுகிற வரை சில நாட்களுக்கு அப்படிக் கூறிக் கொள்ள வேண்டியது அவசியம் தான் அழகன் பெருமாள் என்று இளையநம்பியும் அவன் கூறியதில் இருந்த நல்லெண்ணத்தை ஒப்புக் கொண்டு இணங்கினான். நீராடச் செல்லுவதற்கு முன் இளையநம்பி அழகன் பெருமாளிடம் கேட்டான்:

கொற்கைத் துறைமுகத்துக்கு வரவேண்டிய சோனகர் நாட்டுக் குதிரைக் கப்பல் என்று கரையடையப் போகிறது? கப்பலில் இருந்து குதிரைகளைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்? எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள்?”

அழகன் பெருமாள் இதற்கு உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் பின், “நீங்களும் நீராடிப் பசியாறிய பின் அவற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யலாம். இரவெல்லாம் வெள்ளியம்பலத்தில் காத்துக் கிடந்தும், நிலவறையில் நடந்தும் களைத்திருக்கிறீர்கள். முதலில் நீராடிப் பசியாறுங்கள் என்றான் அவன்.

இளையநம்பி அந்த மண்டபத்தின் பின் பகுதிக்குச் சென்று வையைப் படித்துறையில் இறங்கிய போது மண்டபப் புறக்கடையில் இருந்த தாழம்புதரை ஒட்டிச் சிறிய படகு ஒன்று கட்டப்பட்டிருந்ததைக் கண்டான்.

அந்த அதிகாலை வேளையில் வையை மிக அழகாகத் தோன்றினாள். நீர் பாயும் ஓசை நல்ல குடிப் பிறப்புள்ள பெண் ஒருத்தி அடக்கம் மீறாமல் நாணி நகைப்பது போல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் மறு கரைவரை தெரிந்த அந்த நீர்ப்பரப்பைக் காண்பதில் அளவற்ற ஆனந்தத்தை உணர முடிந்தது. மதுரை மாநகரில் புகழ்பெற்ற திருமருத முன் துறை அருகில் இருந்ததாலோ என்னவோ அந்தப் பகுதியின் வையைக் கரை சொல்ல முடியாத வசீகரமும் வனப்பும் நிறைந்து காட்சியளித்தது. 

பாண்டிய மரபின் கீர்த்தி மிக்க பல அரசர்களின் காலத்தை எல்லாம் இதன் கரைகள் கண்டிருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நின்று மணக்கும் தமிழ்ப் புலவர்களின் சங்கங்களை இதன் கரைகள் பெற்றிருந்தன. ஓர் இணையற்ற நாகரிகம் செழித்து வளர்ந்ததற்கு இந்த நதியும் ஒரு சாட்சி என்று நெஞ்சுருக நினைத்த போது அந்த நாகரிகத்தை இன்று அந்நியர்களாகிய களப்பிரர்கள் அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்னும் நிகழ்கால உண்மையும் சேர்ந்தே இளையநம்பிக்கு நினைவு வந்தது. அந்த விநாடிகளில் மயிர்க் கால்கள் குத்திட்டு நிற்கப் பாதாதி கேச பரியந்தம் ஒரு புனிதமான சிலிர்ப்பை உணர்ந்தான் அவன். நெஞ்சில் மூல நெருப்பாக ஏதோ ஒரு கனல் சூடேறினாற் போலிருந்தது.

தனி மண் மட்டுமே ஒரு நாகரிகத்தையோ வரலாற்றையோ படைத்து விட முடியாது. அந்த மண்ணில் ஓடும் நதியும் விளையும் பொருள்களும், அந்த மண்ணையும் நீரையும் கலந்து வளரும் பயிர்களும், அவற்றால் உயிர் வாழும் மக்களும் சேர்ந்தே ஒரு நாகரிகத்தைப் படைக்கிறார்கள்.

நீரில்லாத மண்ணுக்கு மணமில்லை. நாகரிகமில்லை. அந்த வகையில் பல்லாயிரங்காலமாகப் பாண்டிய நாட்டு நாகரிகத்தை செவிலித் தாயாக இருந்து புரந்து வரும் இந்த நதியை மார்பளவு நீரில் நின்று கைகூப்பித் தொழ வேண்டும் போல் ஒரு பக்தி உணர்வு அவனுள் சுரந்தது. அவன் தொழுதான், போற்றினான்.

சேரர் நாகரிகத்தைப் பேரியாறும்*, (* இன்று பெரியாறு) சோழர் நாகரிகத்தைக் காவிரியும் உருவாக்கியது போல் எங்கள் தமிழகப் பாண்டி நாகரிகத்தின் தாயாகிய வையையே! உன் அலைக்கரங்களால் நீ என்னைத் தழுவும் போது தாயின் மடியில் குழந்தை போல் நான் தனியானதோர் இன்பத்தை அடைகிறேன்’ - என்று நினைத்தான் அவன்.

நீராடி வந்த இளைய நம்பிக்கு மாற்றுடையாக மதுரையின் கைவினைத் திறம் வாய்ந்த காருகவினைஞர்* (* நெசவாளிகள்) நெய்த ஆடைகளை அளித்தான் அழகன் பெருமாள். பாண்டி நாட்டின் புகழ் பெற்ற உணவாகிய ஆவியில் வெந்த தீஞ்சுவைப் பிட்டும், உறைந்த நெய் போல் சுவையுடையதாகிய திருநெய்க்கதலி என்னும் வாழை விசேடத்தைச் சேர்ந்த கதலிக்கனிகளையும் உண்ணக் கொடுத்து அழகன் பெருமாளும் நண்பர்களும் இளையநம்பியை உபசரித்தனர். அவன் பசியாறிய பின் அவர்களும் பசியாறினர். சிறிது நேரத்தில் அழகன் பெருமாளையும், செம்பஞ்சுக் குழம்பு குழைக்கும் குறளனையும் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டு நகருக்குள் புறப்பட்டுப் போய்விட்டனர்.

அழகன் பெருமாளிடம் மீண்டும் குதிரைக் கப்பல் துறையடைவது பற்றிய விவரங்களைக் கேட்டான் இளையநம்பி. 

போகலாம்! அதைத் தெரிந்து கொள்ளவே இப்போது நாம் புறப்படுகிறோம் என்று கூறித் தோளில் பூக்குடலையோடும் கையில் செம்பஞ்சுக் குழம்பு நிரம்பிய ஒரு பேழையோடும் ஆயத்தமாக இருந்த குறளனையும் உடன் அழைத்துக் கொண்டு எழுந்தான் அழகன் பெருமாள்.

இப்போது நாம் எங்கே போகிறோம் அழகன் பெருமாள்?”

கணிகை மாளிகைக்கு...”

அவர்களோடு இளையநம்பியும் உடனெழுந்து புறப்பட்டான் என்றாலும்ஓர் அரசியல் அந்தரங்கம் பற்றிய செய்திகளை அழகின் மயக்க உலகமாகிய கணிகையர் மாளிகையில் இருந்து எப்படி அறியப் போகிறான் இவன்?’ - என்ற வினாவே இளையநம்பியின் உள்ளத்தில் நிறைந்திருந்தது அப்போது.

 

14. கண்களே பேசும்

 

மீண்டும் நிலவறை இருளில் புகுந்து அவர்கள் மூவரும் புறப்பட்டனர். மூன்று குழிகள் உள்ள இடம் வந்ததும், வழியில் திரும்பிக் கணிகையர் மாளிகை வாயில் உள்ள பக்கமாக அழைத்துச் சென்றான் அழகன் பெருமாள். கணிகை மாளிகை வழி அருகில் வந்ததும் பத்துப் பன்னிரண்டு படிகள் செங்குத்தாக மேல் ஏறிப் போக வேண்டியிருந்தது! முதலில் அழகன் பெருமாள் தான் படியேறினான். தொடர்ந்து குறளனும் பின் இளையநம்பியும் சென்றனர். அழகன் பெருமாளிடம் பலவற்றைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்க நினைத்தும் அந்தக் கணிகை மாளிகை பற்றித் தான் எது கேட்டாலும் அழகன் பெருமாள் அதை ஏளனமாக எடுத்துக் கொண்டு வருந்தவும், உள்ளூரச் சினமடையவும் நேருவதை உணர்ந்து மௌனமாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் இளையநம்பி.

படியேறியதும் அந்த இடத்தில் எங்கிருந்தோ கம்மென்று பொதியமலைச் சந்தனம் மணந்தது. அழகன் பெருமாள் மாளிகைக்குள் செல்லும் வழியைத் திறந்த பின்பே சந்தன நறுமணத்தின் காரணம் புரிந்தது. ஏறிப் பார்த்த போது மிகப் பெரிய வட்டமான சந்தனக்கல்லை இட்டு அந்த வழியை அடைத்திருந்தார்கள். மாளிகையின் சந்தனம் அறைக்கும் இடத்திற்கு அவர்கள் வந்திருந்தார்கள். வழி மறையும்படி கல்லை மறுபடி பொருத்திய பின் மேலே நின்று பார்த்த போது அந்த வட்ட வடிவச் சந்தனக் கல்லுக்குக் கீழே ஓர் இரகசிய வழி இருக்க முடியும் என்று நம்பவே முடியாமலிருந்தது. கல்லின் மேல் அறைத்த சந்தனமும் சிறிது இருந்தது. பக்கத்தில் ஒரு கலத்தில் நீரும் சந்தனக் கட்டைகளும் கிடந்தன. அங்கு சந்தனம் அறைப்பவர் அமர்ந்து அறைத்துக் கொண்டிருக்கும் போது புதியவர்கள் வந்து பார்த்தால் அதற்குக் கீழே ஒரு வழி இருக்குமோ என்ற நினைவே எழமுடியாதபடி அதைச் செய்திருந்தார்கள். சுற்றிலும் குடலைகளில் பூக்களும் இருந்தன. 

சந்தனம் அறைக்கும் பகுதியிலிருந்து அவர்கள் மாளிகையின் அலங்காரப் பகுதிகளைக் கடந்து நடுக்கூடத்திற்கு வந்த போது அங்கே நாலைந்து அழகிய பெண்களுக்கு நடுவே இளமையும் அழகும் ஒன்றை ஒன்று வெல்லும் பேரழகியாக வீற்றிருந்த ஒருத்தி கை வளைகளும் காற்சிலம்புகளும் ஒலிக்க அவர்களை நோக்கி எழுந்து வந்தாள். அந்தப் பெண்களுக்கு நடுவே அவள் அம்ர்ந்திருந்த காட்சி விண்மீண்களுக்கு நடுவே முழுமதி கொலு இருந்தது போல் கம்பீரமாயிருந்தது. செழுமையான உடற்கட்டும், பெண்களுக்கு அழகான அளவான உயரமும் முனிவர்களைக் கூட வசப்படுத்தி மயக்கி விட முடிந்த கண் பார்வையும் சிரிப்புமாக ஒவ்வோர் அடிபெயர்த்து வைத்து நடக்கும் போதும்இந்த மண்ணில் கால் ஊன்றி நிற்கும் இணையற்ற வசீகரம் நானே என்று நிரூபிப்பது போன்ற நடையுடன் அவர்களை எதிர்கொண்டாள் அவள். அந்த அழகு விரிக்கும் மோக வலையில் சாய்ந்து விடாமல் அவன் தன் மனத்தை அரிதின் முயன்று அடக்கினான்.

இரத்தினமாலை! இவர் திருக்கானப்பேரிலிருந்து வருகிற வழியில் மோகூரில் நம் பெரியவரைச் சந்தித்து விட்டு அவர் ஆசியோடு இங்கு வந்திருக்கிறார் என்று அழகன் பெருமாள் கூறியதும்,

வரவேண்டும்! வரவேண்டும்என அவள் வரவேற்ற அந்தக் குரலை அது தேனிற் செய்து படைக்கப்பட்டதோ என ஐயுற்று வியந்தான் இளையநம்பி.

அழகிய விழிகள் பார்க்கும் என்று தான் இதுவரை அவன் அறிந்திருந்தான். ஆனால் இந்த விழிகளோ நயமாகப் பேசவும் செய்தன. ஆண் பிள்ளைகளைத் தாபத்தால் கொல்ல இந்த வனப்பு வாய்ந்த விழிகளே போதுமானவை என்று தோன்றியது அவனுக்கு. அழகன் பெருமாள் இங்கே எதற்காகத் தன்னை அழைத்து வந்தான் என்று இளைய நம்பிக்கு அவன் மேல் ஆத்திரமே மூண்டது. சில கணங்கள் எதிரே வந்து நிற்கும் அவளிடம் பேச வார்த்தைகள் இன்றி வியந்து நின்றான் அவன். அதே வேளையில் அவளுடைய கண்களின் பார்வை அவனுடைய திரண்டு செழித்த தோள்களிலும் பரந்த மார்பிலும் இலயித்திருந்தது. மீண்டும் அவளே பேசினாள்.

தாங்கள் இந்த மாளிகையை அந்நியமாக நினைக்கக் கூடாது. பெரியவருடைய குற்றேவலுக்கு என்றும் கட்டுப்பட்டவர்கள் நாங்கள்.”

அவளுக்கு என்ன மறுமொழி கூறுவது என்று இப்போதும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அழகன் பெருமாள் முந்திக் கொண்டு அவளுக்கு மறுமொழி கூறினான்.

 

அப்படி ஒரு குற்றேவலோடுதான் இப்போதும் வந்திருக்கிறேன் இரத்தினமாலை! இதோ நம் குறளன் செம்பஞ்சுக் குழம்பு கொண்டு வந்திருக்கிறான். இனி நீ தான் ஆயத்தமாக வேண்டும்.”

 

15. கரந்தெழுத்து

 

இரத்தினமாலை தன் கைகளுக்குச் செம்பஞ்சுக்குழம்பு தீட்டிக் கொள்வதற்கும் தான் வந்திருக்கும் காரியத்திற்கும் என்ன தொடர்பு என்று இளையநம்பிக்குப் புரியவில்லை. ஆனால் இரத்தின மாலையோ உடனே அழகன் பெருமாளின் வேண்டுகோளுக்கு இணங்கிக் குறளனிடம் தன் கைகளை நீட்டி அலங்கரித்துக் கொள்ள முன்வந்தாள்.

ஆகா! நான் காத்திருக்கிறேன் - என்று கூறியபடி குறளனுக்கு அருகே சென்று ஓர் அழகிய மயில் தோகை விரிப்பது போல் மண்டியிட்டு அமர்ந்து வெண் தந்த நிறத்து உள்ளங்கைகளை அவன் முன் மலர்த்தினாள் அவள். எழுத்தாணி போல் யானைத் தந்தத்தில் செய்த ஒரு கருவியால் குறளன் முதலில் அவல் வலது கையில் செம்பஞ்சுக் குழம்பு* (* மருதாணி இடுவது போல் ஓர் அலங்காரம்) தீட்டத் தொடங்கினான். ஓவியம் தீட்டுவது போல குறளன் கை விரைந்து இயங்கியது.

அதைக் கண்டு ஆண்மைச் செருக்கும் மான உணர்வும் நிறைந்த இளையநம்பியின் கண்கள் சினத்தினாற் சிவந்தன.

இருக்கட்டும்! இந்த அழகன்பெருமாள் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்? மயக்கும் சக்திவாய்ந்த அழகிய பெண்களைத் தேடிச் சுகம் அடையவா நான் இங்கே கோ நகருக்கு வந்தேன்? என்னை அழைத்து வந்து இங்கே இவளருகில் நிறுத்திக் கொண்டுபெண்ணே! உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி அலங்கரித்துக் கொள் - என்று ஓர் இளம் கணிகையை வேண்டும் இவன் என்னைப் பற்றி எவ்வளவு கீழாக எண்ணியிருக்க வேண்டும்!’ - என்று குமுறியது இளைய நம்பியின் உள்ளம்.

ஓர் ஆண் மகனின் முன்னே இன்னோர் ஆண் மகனையும் அருகில் வைத்துக் கொண்டு, மூன்றாவதாக மற்றோர் ஆண் மகனிடம் செம்பஞ்சுக் குழம்பு தீட்டக் கைகளை நீட்டும் நாணமற்ற அவளை வெறுக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ‘அவளாவது கணிகை! இந்த அழகன் பெருமாளுக்கு அறிவு எங்கே போயிற்று? என்னைப் போல் நற்குடிப் பிறப்பு உள்ள ஓர் இளைஞனுக்கு முன் இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு இவன் அறிவிலியாயிருப்பான் என்று நான் நம்ப முடியவில்லையே?’ என்று இளையநம்பி எண்ணி எண்ணி வேதனையும், கோபமும் கொண்டான். அந்தச் சினத்தை அடுத்த விநாடியே அவன் அழகன் பெருமாளை விளித்த குரலில் கேட்க முடிந்தது; 

அழகன் பெருமாள்! இப்படி வா! உன்னோடு தனியாக சிறிது நேரம் பேசவேண்டும் - என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டே சந்தனம் அறைக்கும் பகுதியை நோக்கி நடந்தான் இளையநம்பி. அவனுடைய குரலில் இருந்த கோபத்துக்குக் காரணம் புரியாதவனாக அழகன் பெருமாளும் பின் தொடர்ந்தான். இளையநம்பியின் முகத்திலும் குரலிலும் எள்ளும் கொள்ளும் வெடிப்பது எதற்காக என்பது அவனுக்கு விளங்கவில்லை. இருவரும் சந்தனம் அறைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்து அந்த இடத்தின் தனிமையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கிக் கடுமையான குரலில் கேட்டான்:

இங்கே நான் கோநகருக்கு எதற்காக வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?”

நன்றாகத் தெரியும்.”

கொற்கைத் துறையில் குதிரைக் கப்பலை என்றைக்கு எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து சொல்லச் சொன்னால் என்னையும் இங்கு அழைத்து வந்து, என் முன்பே ஒரு கணிகையை அலங்கரித்து அவள் கைகளுக்கு செம்பஞ்சுக் குழம்பு தீட்டச் சொல்கிறாய் நீ...?”

ஆமாம்! மறுக்கவில்லை.”

என்ன நோக்கத்தில் இவற்றை எல்லாம் நீ செய்கிறாய் என்று எனக்குத் தெரியவேண்டும். அழகுள்ள பெண்களையே நான் இன்று தான் வாழ்வில் முதன் முதலாகப் பார்க்கிறேன் என்று எண்ணிக் கொள்ளாதே நீ...”

நான் அப்படி எண்ணியதாக உங்களுக்கு யார் சொன்னார்கள்?”

பின் யாருக்காக அலங்கரிக்கிறாய் இவளை?”

உங்களுக்குத்தான்...”

அழகன்பெருமாள் தன் வார்த்தைகளை முடிப்பதற்குள் இளையநம்பியின் உறுதியான கைகள் அவன் கழுத்திற் பாய்ந்து பிடியை இறுக்கின. அந்தப் பிடி தாங்க முடியாமல் அழகன் பெருமாளுக்கு மூச்சுத் திணறியது. கண் விழிகள் பிதுங்கின.

இது என்ன? நீங்கள் இவ்வளவிற்கு உணர்ச்சி வசப்படுகிறவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லையே? எதற்காக இந்த வீண் ஆத்திரம்? நான் சொல்லியவற்றை எல்லாமே நீங்கள் தவறான பொருளில் எடுத்துக் கொள்கிறீர்கள்.”

திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையர் மரபில் தவறான பொருள்களை விளையாட்டுக்காகவும் நாடுவதில்லை.”

 

ஆனால் விளையாட்டு எது, வினை எது என்று மட்டும் புரியாது போலிருக்கிறது.”

பரத்தைகளை நாடி அலையும் பலவீனமான ஆடவர்கள் அந்த மரபில் இன்று வரை இல்லை. அது அவர்களுக்குப் புரியவும் புரியாது.”

நீங்கள் பலவீனமானவர் என்று யார் சொன்னார்கள்? உங்கள் காரியத்துக்காகத்தான் அவள் அலங்கரிக்கப்படுகிறாள் என்று தானே சொன்னேன்.”

இதன் அர்த்தம்?”

மீண்டும் அங்கே கூடத்துக்கு என்னோடு வந்தால் தெளிவாக விளக்குகிறேன்.”

இளையநம்பி தயங்கித் தயங்கி நடந்து அழகன் பெருமாளைப் பின் தொடர்ந்தான். கூடத்துக்கு வந்ததும் தன் வெண்ணிற உள்ளங்கையின் பளிங்கு நிறத்தை எடுத்துக் காட்டுவது போன்ற சிவப்புக் கோடுகளில் அழகிய சிறிய ஓவிய அலங்காரங்கள் அந்தக் கைகளில் தீட்டப்பட்டிருந்ததை அழகன்பெருமாளிடம் காண்பித்தாள் இரத்தினமாலை. அப்போது அழகன் பெருமாள்-

இந்தக் கைகளை இப்போது நீங்களும் பார்க்க வேண்டும் - என்று இளையநம்பியிடம் கூறினான். இதைக் கேட்டு இளையநம்பி சினத்தோடு அழகன் பெருமாளை ஏறிட்டுப் பார்த்த போது, இங்கே மறுபுறம் அவள் கண்கள் அவனை அன்போடு இறைஞ்சின.

இறைஞ்சும் கண் பார்வையோடு தன் கைகளை அவன் முன்பு காண்பித்து அவனைக் கேட்டாள் இரத்தினமாலை:

இந்தக் கைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?”

அது என் வேலையல்ல.”

கூடலுக்கு வந்தவர்கள் இவ்வளவு புரியாதவர்களாக இருக்கலாகாது.”

என்ன? அந்த வாக்கியத்தை இன்னொரு முறை சொல்லேன், பார்க்கலாம்.”

கூடலுக்கு...”

போதும் நிறுத்து! இவ்வளவு வெளிப்படையாக...? மதுரை மாநகரத்துக் கணிகைகள் இவ்வளவு நாணமற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”

இந்த நகரத்துக்குக்கூடல் என்ற பெயர் வெளிப்படையானது! அதில் இரகசியம் எதுவும் இருப்பதாக இதுவரை எனக்குத் தெரியாது. நல்ல அர்த்தத்தில் கூறுகிற சொற்களைக் கூட இந்த இடத்தின் பாவத்தால் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு நீங்கள் கோபப்பட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? புலவர்கள், அறிவாளிகள் ஒன்று கூடும் இடம் ஆகையால் இந்த நகருக்குக்கூடல் என்பதாகப் பெயர் சூட்டினார்கள். ‘கூடல் என்று சொல்வதில் நாணப்பட என்ன இருக்கிறது?” - என்று அவள் மறுமொழி கூறியபோது ஆத்திரத்திலும் பதற்றத்திலும் அவளது ஒரு சொல்லைத் தான் தவறாகப் புரிந்து கொண்டதற்காக வெட்கி நின்றான் இளையநம்பி. அழகன் பெருமாள் மாறனை ஒரு சிறிய உபவனக் காப்பாளன் தானே என்று தான் நினைத்திருந்த மதிப்பீட்டை மீறி அவன் இலக்கிய இலக்கணங்களையும் தர்க்க நியாயங்களையும் பேசக் கேட்ட போது எவ்வளவு வியப்பை இளையநம்பி அடைந்தானோ, அவ்வளவு வியப்பை இப்போது இந்த விநாடியில் மதுரைமா நகரத்தின் இந்தக் கணிகை இரத்தின மாலையின் முன்பும் அடைந்தான் அவன். ஒரு கணிகையிடம் பேசும் அலட்சிய மனப்பான்மையோடு தன்னிடம் பேசிய அவனிடம் ஒரு பெரிய புலவரிடம் பேசும் மதிப்புடனும் மொழி நுணுக்கத்துடனும் அவள் பேசியிருப்பது புரிந்ததும் தன்னுடைய பதற்றத்துக்காக அவன் நாணினான். ஆயினும் செம்பஞ்சுக்குழம்பு தீட்டி அலங்கரித்த கைகளைத் தன் முன் ஏன் அவள் காண்பிக்கிறாள் என்பது இன்னும் இளைய நம்பிக்கு விளங்கவில்லை.

அந்த நிலையில் அழகன்பெருமாளோ விலகி நின்று சிரித்துக் கொண்டிருந்தான். நளினத் தாமரைப் பூக்களைப் போன்ற அவளுடைய அழகிய உள்ளங்கைகளில் கோடுகளாகவும், ஓவியங்களாகவும் மிக அழகிய முறையில் தீட்டியிருந்தான் குறளன்.

அந்தக் கைகளின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவையாயிருந்தன அவை. அவள் ஏன் தன் முன்பு கைகளை விரித்துக் காட்டுகிறாள் என்று புரியாத நிலையில் எதிரே குறும்புத் தோன்றச் சிரித்துக் கொண்டு நின்ற அழகன் பெருமாள் மாறனின் மேல் மீண்டும் திரும்பியது இளையநம்பியின் சினம். சந்தனம் அறைக்கும் பகுதிக்குத் தனியே அழைத்துச் சென்று கேட்ட போது, ‘மீண்டும் அங்கே கூடத்துக்கு வந்தால் தெளிவாக விளக்குகிறேன் - என்று மறுமொழி கூறித் தன்னைக் கூடத்துக்குக் கூப்பிட்டுக் கொண்டு வந்து ஒன்றுமே சொல்லாமல் அழகன்பெருமாள் சிரித்துக் கொண்டு நின்றதைக் கண்டு தான் அவனுள் கோபம் மூண்டிருந்தது. இந்த மதுரைமா நகரின் புகழ்பெற்ற கணிகை இரத்தினமாலை, உபவனக்காப்பாளன் அழகன்பெருமாள் எல்லாருமே பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதனால் இவர்கள் மேல் அளவற்று ஆத்திரப்படவோ, சினம் கொள்ளவோ முடியாமலும் இருந்தது. சிறிது நேரத்திற்கு முன் சந்தனம் அறைக்கும் பகுதியில் சற்றே நிதானம் தவறி அழகன்பெருமாளின் கழுத்தில் கைகளைப் பதித்து அவனைத் துன்புறுத்தியது போல் மறுமுறையும் சினத்திற்கு ஆளாகி விடலாகாது என்பதில் அவன் கவனமாக இருந்தான் இப்போது, ‘செம்பஞ்சுக்குழம்பு தீட்டிச் சிங்காரித்து இவளை யாருக்காக அலங்கரிக்கிறாய் இப்போது?’ - என்று தான் அழகன்பெருமாலைக் கேட்ட கேள்விக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த போது இளையநம்பி பொறுமையின்றித் தவித்தான். 

எதிரே கை விரித்து நிற்பவளின் அபிநயம் போன்ற கோலமும், அவளது நறுமணங்களும், அந்த மாளிகையின் சிங்காரமயமான அலங்காரச் சூழ்நிலையும், வேறு பகுதிகளிலிருந்து மங்கலாக ஒலித்துக் கொண்டு இருந்த நாதகீத வாத்தியங்களின் இனிமையும் அவனைப் பொறுமை இழக்க விடாமல் தடுக்கவும் செய்தன. அந்த நிலையில் மீண்டும் அழகன் பெருமாளே முன் வந்து அவனை வினாவினான்.

நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் ஐயா! இந்தக் கைகளில் இருப்பதை இன்னும் கூட நீங்கள் புரிந்து கொள்ள முடியவில்லையா?”

நான் தான்அது என் வேலையல்ல - என்று அப்பொழுதே சொன்னேனே? பெண்களின் கைகளை அழகு பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை...”

சிறிது பொறுமையோடு கூர்ந்து பார்த்தால் இந்தக் கைகளில் அதைவிடப் பெரிய காரியம் இருப்பதும் புலப்படும்.”

மீண்டும் மீண்டும் அழகன் பெருமாள் இப்படிக் கூறவே இளையநம்பிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது அந்தக் கணம் வரை புதிராகவே இருந்தது. அழகன் பெருமாளே மேலும் தொடர்ந்தான்:- “நீங்கள் எந்தக் காரியத்திற்காக வந்திருக்கிறீர்களோ அந்தக் காரியமே உங்களுக்குப் புரியவில்லை என்பது விந்தைதான்.”

இப்போது நீ என்ன சொல்கிறாய் என்பதே எனக்கு விளங்கவில்லை அழகன் பெருமாள்?”

அழகன் பெருமாள் இளையநம்பியின் காதருகே வந்து ஏதோ மெல்லிய குரலிற் சொல்லிவிட்டு, “இப்போதாவது புரிகிறதா பாருங்கள்?” - என்றான். உடனே இளையநம்பி செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பட்ட அந்தக் கைகளை உற்றுப் பார்த்து அவற்றில் சித்திர வேலைப்பாடுகள் போன்ற மேற்போக்கான கோடுகளைத் தவிர்த்து நுணுக்கமாக நோக்கி ஆராய்ந்த போது அவன் விழிகள் வியப்பினால் மலர்ந்தன. அங்கே மிக அந்தரங்கமான கரந்தெழுத்துக்களில் (ஒரு குழுவினர் தங்களுக்குள் மட்டும் பயன்படுத்தும் இரகசிய எழுத்துக்கள் - ஆதாரம்: சீவக சிந்தாமணி 1767) அவன் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை வினாவும் வினாக்கள் இருந்தன. தன் கையில் பிறர் எவரும் புரிந்து கொள்ள முடியாத அந்த இரகசிய எழுத்துக்களான வினாக்களோடு அதற்கு மறுமொழி தெரிந்து வர அவள் அரண்மனைக்குப் புறப்பட்டுப் போகிறாள் என்பதும் புரிந்தது. அப்படி புரிந்த சுவட்டோடு இளைய நம்பியின் மனத்தில் இன்னும் ஒரு பெரிய சந்தேகமும் எழுந்தது.

 

16. முத்துப்பல்லக்குப் புறப்பட்டது

இளையநம்பி தன் மனத்தில் எழுந்த ஐயப்பாட்டை அழகன் பெருமாளிடமோ, இரத்தினமாலையிடமோ கேட்பதற்கு முன் அங்கே அந்தக் கூடத்தில் சித்திர வேலைப் பாடுகள் அமைந்த அழகிய சிறிய முத்துப் பல்லக்கு ஒன்றைப் பணியாட்கள் தூக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். ஒளிவீசும் கொற்கை வெண்முத்துக்கள் பதிக்கப்பட்ட அந்தப் பல்லக்கு அங்கே வந்ததும் சந்திரோதயமே ஆகியிருப்பது போன்றதோர் அழகு வந்து பொருந்தியது.

குறளனிடமிருந்து செம்பஞ்சுக் குழம்பு பேழையையும், அதைத் தீட்டும் தந்த எழுதுகோலையும் பெற்றுக்கொண்டு ஒரு தோழிப் பெண் முதலில் பல்லக்கில் ஏறிக்கொண்டபின் இளைய நம்பியையும், அழகன் பெருமாளையும் நோக்கிப் புன்முறுவல் பூத்தபடி கணிகை இரத்தினமாலையும் அதில் ஏறிக்கொண்டாள்.

பல்லக்குப் புறப்படு முன் மீண்டும் வெளியே தலையை நீட்டி இளைய நம்பியைப் பார்த்து ஆளைக்கிறங்கச் செய்யும் ஓர் அரிய மோகனச் சிரிப்போடு, “ஐயா திருக்கானப் பேர்க்காரரே! இந்தக் கைகள் மேற்கொண்ட எந்தக் காரியங்களிலும் இதுவரை தோற்றதில்லை - என்று தன் அழகிய கைகளைக் காண்பித்துச் சொன்னாள் இரத்தினமாலை. அதுகாறும் அவளைப் பொறுத்தவரை கல்லாயிருந்த அவன் மனமும் இப்போது மெல்ல இளகியிருக்க வேண்டும். அந்த நெகிழ்ச்சியின் அடையாளமாக முத்துப் பல்லக்கிலிருந்து தெரியும் அவளுடைய சுந்தர மதிமுகத்தை ஏறிட்டுப் பார்த்து, “புரிகிறது! உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி யோடு திரும்பி வா என்றான் இளையநம்பி.

முதல்முதலாக அந்த அழகிய வாலிபன் தன்னை மதித்துப் புரிந்துகொண்டு சுமுக பாவத்தில் முகமலர்ச்சியோடு பேசிய இச்சொற்கள் அந்தப் பேதைக் கணிகைக்கு உள்ளக் கிளர்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதை அவள் வதனம் சிவந்து நாணி மலர்ந்ததிலிருந்து அறிய முடிந்தது.

தன்னுடைய பதற்றத்தில் அவளைத் தவறாக மதிப்பிட்டு விட்டதற்காக இளைய நம்பியின் மனம் கூசி நாணத் தொடங்கியிருந்தது இப்போது. அழகன் பெருமாளிடமும் குறளனிடமும் கூடக் கண்களாலேயே குறிப்புக் காட்டி விடை பெற்றாள் இரத்தினமாலை.

முத்துப் பல்லக்கு வீதியில் படியிறங்குகிறவரை அவள் பார்வை இளைய நம்பியின் மேல்தான் இருந்தது. பல்லக்கு வீதியில் இறங்கி மறைந்ததும் இப்பால் தன்னுடைய பதற்றங்களையும், சினத்தையும் மறந்து பொறுத்துக் கொண்ட தற்காக அழகன் பெருமாளைப் பாராட்டிச் சில சொற்கள் கூறினான் இளையநம்பி.

ஐயா! நீங்கள் இந்த உபசார வார்த்தைகளைக் கூறாவிட்டாலும் நானோ, இரத்தினமாலையோ, எங்களைச் சேர்ந்தவர்களோ கடமைகளில் ஒரு சிறிதும் தளர்ச்சி அடைந்து விட மாட்டோம். பெரியவர் மதுராபதி வித்தகரிடம் கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்து விட்டுக் களப்பிரர் ஆட்சியை மாற்றுவதற்குச் சூளுரைத்திருக்கிறோம். அந்தச் சபதத்தை நாங்கள் ஒருகாலும் மறக்கவே முடியாது என்றான் அழகன்பெருமாள்.

மேலும் சில சொற்களால் அவனுடைய கடமை உணர்வைப் பாராட்டிய இளையநம்பி, தன்னுடைய ஐயப்பாட்டை மீண்டும் அவனிடம் வினவினான்:-

அழகன்பெருமாள்! இப்போது இரத்தினமாலை தன் கைகளில் சங்கேத எழுத்துக்களின் வடிவில் சுமந்து செல்லும் இந்த வினாக்களுக்கு யார் எப்படி எங்கிருந்து விடை தருவார்கள்?”

கவலைப்படாதீர்கள் ஐயா! கைகளில் சுமந்து செல்லும் வினாக்களுக்கான விடைகளையும், விளக்கங்களையும் இரத்தினமாலை மீண்டும் தன் அழகிய கைகளிலேயே கொண்டு வருவாள். அவள் திரும்பி வந்ததும் நாம் யாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அதுவரை நாம் இங்கேயே காத்திருப்போம் என்றான் அழகன்பெருமாள் மாறன்.

இரத்தினமாலையின் திறமையைப்பற்றி அழகன் பெருமாள் எவ்வளவோ உறுதி கூறியும், இளையநம்பி அப்போதிருந்த மனநிலையில், அவனால் அதை முழுமையாக நம்ப இயலவில்லை.

அரண்மனையில் போய் அவள் அந்தக் காரியத்தை முடித்துக் கொண்டு வர மேற்கொண்டிருக்கும் தந்திரோபாயத்தை அவன் வியந்தாலும் அவளது வெற்றி தோல்வியைப் பற்றி இப்போதே எதுவும் அநுமானம் செய்ய முடியாமலிருந்தது.

களப்பிரர்கள் பொல்லாதவர்கள்! கபடம் நிறைந்தவர்கள். சூழ்ச்சியில் பழுத்தவர்கள். கரந்தெழுத்து முறை அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் இரத்தினமாலையின் தலையே பறிபோய் விடும் - என்று தன் ஐயப்பாட்டைத் தெரிவித்தான் இளையநம்பி.

ஆனால் ஒரே வாக்கியத்தில் திடமாக அதை மறுத்தான் அழகன்பொருமாள்:-

நீங்கள் இரத்தினமாலையின் திறமையைக் குறைத்துக் கணக்கிடுகிறீர்கள்...”

பெண்களின் திறமையை எப்போதுமே நான் பெரிதாகக் கணக்கிட விரும்பவில்லை...”

அப்படியானால் நீங்கள் பிறர் திறமையையே கணக்கிட விரும்பவில்லை என்று தான் இதற்கு அர்த்தம் கொள்ளமுடியும்.”

முத்துப்பல்லக்கில் ஆடல்பாடல்களின் பெயரால் அலங்காரமாக அரண்மனைக்குப் புறப்பட்டுப் போகும் பெண்ணை அப்படிப் புறப்பட்டுப் போவதற்காகவே திறமைசாலி என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி என்னை வற்புறுத்துகிறாயா அழகன் பெருமாள்?”

 

நான் எதையும் வற்புறுத்தவில்லை ஐயா! நீங்களாகவே பின்னால் புரிந்து கொள்ளப் போவதை இப்போதே நான் எதற்காக வற்புறுத்த வேண்டும்?”

இளையநம்பி இதற்கு மறுமொழி சொல்லாமல் சிரித்தான். அழகன்பெருமாளோ விடாமல் மேலும் தொடர்ந்தான்:

முத்துப் பல்லக்கும், ஆடல்பாடலும் உங்களுக்கு ஏனோ கோபமூட்டுகின்றன?”

மிகச் சிறியவற்றிற்காக நான் எப்போதுமே கோபப் படமாட்டேன் அழகன்பெருமாள்.”

கோபப்பட மாட்டேன் என்று நீங்கள் சொல்கிற தொனியிலேயே கோபம் தெரிகிறதே ஐயா!”

அது உன் கற்பனை.”

கற்பனைக்கும் எனக்கும் வெகுதூரம் - என்று அவனைப் போலவே தானும் பதில் சொன்னான் அழகன் பெருமாள். இவ்வளவில் அவர்கள் உரையாடல் மேலே தொடராமல் அப்படியே நின்று போயிற்று.

 

17. என்னென்னவோ உணர்வுகள்

 

மதுரை நகரில் இருந்து மோகூர் திரும்பிய இரவில் செல்வப் பூங்கோதையின் கண்கள் உறங்கவே இல்லை. தந்தை வந்து ஆறுதல் கூறிய பின்பும் அவள் மனம் அமைதி அடையவில்லை. மதுராபதிவித்தகர் தன் தந்தையிடம் கூறியிருந்த அந்த வாக்கியங்களை எண்ணியே அவள் மனம் கலங்கிக் கொண்டிருந்தது.

பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள். அவர்களுக்கு வாழ்வின் சுகதுக்கங்களைப் பற்றிய கற்பனைகளே அதிகம். அவர்கள் கூறுகிறவற்றில் இந்தக் கற்பனைகளையும் உணர்ச்சிகளையும் கழித்துவிட்டே பதங்களுக்குப் பொருள்தேட வேண்டும்.’

ஏன் அவர் இப்படிச் சொன்னார்?’ என்று சிந்தித்து மாய்ந்து கொண்டிருந்தாள் அவள். அறிவும், நல்லது கெட்டது பிரித்து உணரும் மனப்பக்குவமும் வளராமல் அறியாப் பருவத்துப் பேதையாகவே தான் இருந்திருக்கலாகாதா என்று தோன்றியது அவளுக்கு. ஒரு விதத்தில் நினைத்துப் பார்த்தால் அறிவினால் சந்தேகங்களும், கவலைகளும், பயங்களுமே வளர்கின்றன. குழந்தைப் பருவத்தின் அறியாமைகளும் வியப்புக்களும் அப்படி அப்படியே தங்கிவிடும் ஒரு வளராத மனம் வேண்டும் போல் இப்போது உடனே உணர்ந்தாள் அவள். மோகூருக்கும், மதுரைமாநகருக்கும் நடுவே பல காததுாரம் நீண்டு பெருகிவிட்டது போல், தாப உணர்வால் தவித்தது அவள் உள்ளம். தானும் தன் மனமுமே உலகில் தனியாக விடப்பட்டதுபோல் உணர்ந்தாள் அவள்.

பெண்கள் உணர்ச்சி மயமானவர்களாமே, உணர்ச்சி மயமானவர்கள்! உணர்ச்சிகள் இல்லாமல் வாழ்க்கையில் பின் என்னதான் இருக்கிறது? சுகம் - துக்கம், கண்ணிர் - சிரிப்பு, எல்லாமே உணர்ச்சிகளின் அடையாளங்கள் தாமே? உணர்ச்சிகள் இல்லாமல் இவை, எல்லாம் ஏது? இவை எல்லாம் இல்லாமல் வாழ்க்கைதான் ஏது? அவருடைய உயரத் திலிருந்து பார்க்கும்போது வேண்டுமானால் உணர்ச்சிகள் சிறுமையுடையனவாக அவருக்குத் தோன்றலாம். அதற்காக எல்லாருக்குமே உணர்ச்சிகளும், கற்பனைகளும் இல்லாமலே போய்விட முடியுமா? என்று எண்ணினாள் திருமோகூர்ப் பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதை. அவிட்ட நாள் விழாவுக்காக மதுரைக்குப் போய்விட்டுத் திரும்பிய இரவை உறக்கமின்றியே கழித்ததால் இரவும் வைகறையும் அவளைப் பொறுத்தவரை வேறுபாடின்றியே இருந்தன. உறங்காத காரணத்தால் கழிந்து போன ஓர் இரவே ஒராயிரம் இரவுகளின் நீளத்தோடு மெல்ல மெல்ல நகர்ந்து போனாற் போலிருந்தது.

மனத்தில் தாப மிகுதியினாலும், எல்லாரிலுமிருந்து பிரிந்து திடீரென்று தான் மட்டும் தனியாகி விட்டாற் போன்ற ஒரு பிரமையினாலும் விடிந்து வைகறை மலர்ந்த பின்னும் கூடச் சுற்றிலும் இருளே இருப்பதுபோல் உணர்ந்தாள் அவள். இதைக் கண்டு அவள் தாய் பதறிப்போனாள்:-

பெண்ணே இதென்ன துயரக் கோலம்? நீ இரவெல்லாம் உறங்கவில்லை போலிருக்கிறதே? உன் கண்கள் ஏன் இப்படிக் கோவைப்பழங்களாகச் சிவந்திருக்கின்றன? கனவில் ஏதேனும் காணத் தகாதவற்றைக் கண்டு பயந்து கொண்டாயா? உன் கண்களையும் முகத்தையும் பார்த்தால் உறங்கினதாகவே தெரியாதபோது நீ கனவு எப்படிக் காணமுடியும்? ஏன் இப்படி இருக்கிறாய்! உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?”

தாய்க்கு என்ன மறுமொழி கூறுவது என்று புரியாமல் தவித்தாள் செல்வப் பூங்கோதை. ஆனால், அடுத்த விநாடியே தாயிடம் அவள் கேட்ட கேள்வியிலிருந்து தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்று தன் தாயே அனுமானித்துக் கொள்ள இடங் கொடுத்து விட்டாள்:-

அம்மா! நேற்றிரவு வெள்ளியம்பலப் பகுதியில் ஒற்றன் என்று சந்தேகப்பட்டுக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படை வீரர்கள் யாரையோ சங்கிலியாற் பிணித்து இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தோமே; அது அந்தத் திருக்கானப்பேர்க்காரராக இருக்க முடியாதுதானே? என் மனம் அதை நினைத்தே கலங்கிக் கொண்டிருக்கிறது.” 

திருடப் பயன்படும் கன்னக்கோலை பிறர் திருடி விடாமல் ஒளிக்க முயலுகையில் பிடிபட்ட கள்வனைப் போல், எதை மறைக்க முயன்று கொண்டிருந்தாளோ அதன் மூலமே தாயிடம் பிடிபட்டு விட்டாள் செல்வப்பூங்கோதை.

அவள் கூறியவற்றை எல்லாம் கேட்டு விட்டுச் சிரித்தபடியே அவள் முகத்தையும், கண்களில் தென்படும் உணர்வுகளையும் கூர்ந்து நோக்கினாள் தாய். பெண்ணின் கண்களில் தெரியும் நளினமும் மென்மையும் நிறைந்த நுண்ணுணர்வுகளை மிகவும் எளிமையாகப் புரிந்து கொண்டாள் அவள். இங்கிதமாகவும், நளினமாகவும் வினாவ வேண்டிய ஒர் உணர்வின் பிடியில் மகள் கட்டுண்டிருப்பது தாய்க்குப் புரிந்தது.

நன்றாயிருக்கிறது மகளே! இதற்காகவா விடிய விடிய உறக்கமின்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய் நீ! ஆண்மக்கள் மனவலிமை மட்டுமின்றி உடல் வலிமையும் உடையவர்கள். தங்களுக்கு ஏற்படும் அபாயங்களிலிருந்து மீளவும் தப்பவும் அவர்களுக்குத் தெரியும். வீரர்களைப் பற்றிப் பேதைகள் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன?”

பேதைகளின் கவலைகளையும் கண்ணீரையும் பின்தங்க விடாத வீரர்கள் இவ்வுலகில் எங்கேதான் இருக்கிறார்கள் அம்மா?”

ஒவ்வொன்றாய் நீ கேட்கிற கேள்விகளைப் பார்த்தால் உனக்கு மறுமொழி கூற என்னால் ஆகாது பெண்ணே? நேரமாகிறது. பொய்கைக் கரைக்கு நீராடப் போக வேண்டாமா? திருமோகூர்ப் பெரியகாராளர் வீட்டுப் பெண்கள் சூரியோதயத்துக்கு முன் நீராடி வீடு திரும்பி விடுவார்கள் என்று நற்பெயர் பெற்றிருப்பதைக் கெடுத்து விடாதே மகளே!” என்று அவளையும் அழைத்துக் கொண்டு பொய்கைக் கரைக்கு நீராடப் புறப்பட்டாள் தாய்.

பனியும், மெல்லிருளும் புலராத மருத நிலத்து வைகறையில் பசும் பயிர்ப்பரப்பிடையே குடங்களை ஏந்திய படி நீராடச் சென்றார்கள் அவர்கள். நீராடச் செல்லும்போது பெரியகாராளர் மகள் ஏந்திச்சென்ற குடம் வெறுமையாயிருந்தது என்றாலும் மனம் நினைவுகளால் நிறைந்திருந்தது. பார்த்துப் பழகிய மறுநாளிலிருந்து தாயும், தந்தையும், சுற்றமும், உற்றாரும், வீடு வாயிலும் எல்லாம் மறந்து போகும்படி தன்னையே நினைக்கச் செய்துவிட்ட ஒரு சுந்தர இளைஞனைப் பற்றிய நினைவுகளே அவள் மனத்தில் நிறைந்திருந்தன.

கோழி கூவும் ஒலியும் காற்றின் குளிர்ச்சியும், நடந்து சென்ற வழியின் காலை நேரத்து அழகுகளும் பதியாத அவள் மனத்தில், ‘அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது - என்று இதே வழியில் நடக்கும்போது இளையநம்பி கூறிய அந்தப் பழைய சொற்கள் மட்டும் அழியாமற் பதிந்திருந்து நினைவும் வந்தன. அது தொடர்பாக அவன் பேசியிருந்த சாதுரியமான பேச்சுகளும் நினைவு வந்தன. பொய்கைக் கரையை அடைந்ததும் முதலில் தாய்தான் நீராடினாள். தாய் நீராடிக் கொண்டிருந்த அந்த வேளையில் ஆவல் மிகுதியால் செல்வப் பூங்கோதை ஒரு காரியம் செய்தாள். பொய்கைக்கரை அலை ஓரமாக ஈர மணலில் கூடல் இழைத்துப்* பார்க்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. தன் நினைவில் இருக்கும் இனிய எண்ணங்கள் கை கூடுமா, கூடாதா என்று அறியும் ஆசையோடு தியானம் செய்யும்போது மூடிக் கொள்வதுபோல் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு வலது கை ஆள்காட்டி விரலால் மணலில் அழுத்திக் கோடு இழுத்தாள். தொடங்கிய இடத்திற்குப் பொருந்தும்படி தான் இழுத்த கோடு வட்ட வடிவமாக வந்து முடிய வேண்டுமே என்று மனம் வேகமாக அடித்துக் கொண்டது. அந்தக் கோட்டை இழுத்து முடிப்பதற்குள் அவள் அடைந்த பதற்றமும் பரபரப்பும் சொல்லி முடியாது. தொடங்கிய கோடு வட்டமாக முடிய வேண்டுமானால் சிறிதும் விலகாமல் தொடங்கிய இடத்திலேயே வந்து முடிய வேண்டும். அப்படி முடிந்த வட்டம் நிறைவேறினால் தான் எண்ணம் கைகூடும். எனவே, வட்டம் கூடியிருக்கிறதா என்பதைக் கோடு வரைந்து முடித்த பின்பே கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.

(* மகளிர் அறியும் ஓர் ஆருடம்)

 

விரலால் கோட்டை வரைந்து முடித்து விட்டு அவள் கண்களைத் திறந்து பார்க்கவும், அதே நேரத்தில் அவளுடைய தாய் நீர்ப்பரப்பில் அழுந்த முழுகியதனால் உண்டான பெரிய அலை ஒன்று வந்து கரை ஓரத்து மணற்பரப்பை மூடிக் கோடுகளை அழிக்கவும் இணையாக இருந்தது. அலை செய்த அழிவு வேலையால் வட்டம் பொருத்தமாக இணைந்திருந்ததா, இல்லையா என்பதையே அவள் கண்டறிய முடியாமல் போயிற்று. அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.

கண்களை மூடிக் கொண்டு மீண்டும் விரைந்து கோட்டைத் தொடங்கிச் சுழித்து வட்டம் வரைந்தாள். மீண்டும் முன் நேர்ந்தபடியே நேர்ந்தது. அவள் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. வாய்விட்டு அழவும் முடியவில்லை. அந்தப் பொய்கை, அதிலே மூழ்கி நீராடிக் கொண்டிருந்த தாய், அதன் கரைகள், அதில் பூத்திருந்த நீர்ப்பூக்கள், கீழ்வானத்தின் சிவப்பு - எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் காரணம் புரியாது எதற்காகவோ சினம் கொண்டாள் அவள். அந்தச் சினத்தை அவளால் தடுக்க முடியவில்லை.

தான் கண்ணிர் சிந்தி அழுவதைத் தாய் பார்த்துவிடக் கூடாதே என்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தாள் அவள். நினைத்தது கை கூடுமா கூடாதா என்று கூடலிழைத்து அறிய முயன்ற தன் அற்ப ஆவலும் நிறைவேறாது போய் விட்டதே என்று தவித்து வருந்தியது அவள் மனம். நீராடி வீடு திரும்பும்போதும் தன்னுடைய அந்த ஏமாற்றத்தைத் தாய்க்கு மறைத்து விடவே முயன்றாள் அவள். தாய்க்கும் தெரியாமல் மறைக்க ஒர் அந்தரங்கம் வாழ்வில் தனக்குக் கிடைக்க முடியும் என்பதைச் சில நாட்களுக்கு முன் அவளே நம்பியிருக்க மாட்டாள். இப்போது அந்த அதிசயம் அவள் வாழ்விலேயே நடந்து விட்டது. தாயிடமும் பங்கிட்டுக் கொள்ள முடியாத அந்தரங்கம் ஒரு பருவத்தில் ஒரு நட்பைப் பொறுத்து ஒவ்வோர் இளம் பெண்ணுக்கும் உண்டு என்பதே முதல் முதலாக இன்றுதான் செல்வப் பூங்கோதைக்குப் புரிந்தது.

 

18. இன்னும் ஒரு விருந்தினர்

 

தாயும் மகளும் நீராடி வீடு திரும்பியபோது மாளிகை வாயிலில் வேற்றூரைச் சேர்ந்தவன்போல் தோன்றிய ஒருவனோடு பெரியகாராளர் உரையாடிக் கொண்டிருந்தார். வந்து உரையாடிக் கொண்டிருந்தவனுக்கு அவ்வளவு முதுமை என்று சொல்லிவிட முடியாது. இளமை என்று கருதவும் வாய்ப்பில்லை. இளமையைக் கடந்து முதுமையின் எல்லையை இன்னும் தொடாத வயது. நீண்ட நாட்களாகவே காட்டில் வாழ்ந்தவன் ஒருவனின் சாயல், வந்து பேசிக் கொண்டிருந்தவனிடம் தென்பட்டது. புலித்தோலால் தைத்த முரட்டு அங்கி ஒன்றை அணிந்திருந்தான் அவன். வந்திருந்த புதியவனாகிய அவனுக்கும் தன் தந்தைக்கும் எதைப் பற்றியோ கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதைச் செல்வப் பூங்கோதை அறிய முடிந்தது. வந்திருந்தவனால் எதையும் மெல்லிய குரலில் பேச முடியவில்லை. காற்றைக் கிழிப்பது போல் கணிரென்ற குரல் வாய்த்திருந்தது வந்திருந்தவனுக்கு. கண்களிலும், முகத்திலும் இரண்டாவது முறை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சுகிற ஒரு குரூரம் இருந்தது. நீராடி வந்த கோலத்தில் அங்கே அதிக நேரம் நிற்க முடியாததால் செல்வப் பூங்கோதை உடனே தாயுடன் உள்ளே சென்று விட்டாள். எனினும் தன்தந்தைக்கும் அந்தப் புதிய மனிதனுக்கும் நிகழ்ந்த வாக்கு வாதத்தை அவள் உட்புறம் இருந்தே கேட்க முடிந்தது. தந்தையின் மெல்லிய குரலே முதலில் ஒலித்தது.

உங்களை நான் இதற்கு முன்பு எப்போதும் இங்கு பார்த்ததில்லை. நீங்களோ நெடுநாள் பழகி அறிந்தவர் போல் உறவு கொண்டாடித் தேடி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன மறுமொழி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.”

நீங்களே மறுமொழி சொல்லவில்லை என்றால் நான் வேறு எங்கு போகமுடியும்? யாரைக் கேட்க முடியும்? தயை கூர்ந்து எனக்கு வழி காட்டி உதவ வேண்டும்.”

விருந்தோம்புவதும் பிறருக்கு உபகாரம் செய்வதும் என்னைப்போல் ஒவ்வொரு வேளாளனுக்கும் கடமை. நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்களை நான் உபசரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் முதலில் வினாவியதுபோல் பாண்டிய நாட்டு அரசியல் நிலைமை பற்றி என்னை எதுவும் வினவக்கூடாது. அதைப் பற்றி என் போன்றவர்களுக்கு எதுவும் தெரியாது. முந்நூறு ஏர்கள் பூட்டி உழக்கூடிய நிலக்கிழமை இந்த மருத நிலத்து ஊரில் எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.“ 

ஐயா! நீங்கள் அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளக்கூடாது. பெரியவர் மதுராபதி வித்தகர் இருக்குமிடத்தை அறிந்து நான் அவரைச் சந்தித்தே ஆக வேண்டும். இந்த ஆண்டு ஆவணித் திங்கள் முழுநிலா நாளில் அவிட்ட நட்சத்திரத்தன்று தொடங்கும் திருவோண விழா நாள் முதலான விழா நாள் ஏழில், இரண்டாம் நாளன்று நான் அவரைச் சந்தித்தாக வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. பாண்டிய வேளாளர் மரபில் வந்த தாங்களே இந்த நல்லுதவியைச் செய்யாவிடில் வேறு யார் செய்யப் போகிறார்கள்?”

நான் பாண்டிய வேளாளர் மரபில் வந்தவன் என்று அறிந்து பாராட்டும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் அந்தத் தகுதியைச் சொல்லிப் பாராட்டுவதால் உங்களுக்கு முன்னால் மட்டும் தான் அதற்காக நான் பெருமைப்படலாம். ஆனால், இதே பெருமையை இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களுக்கு முன்னால் நான் கொண்டாடுவேனாயின் என் தலையைச் சீவிக் கழு மரத்தில் தொங்கவிட்டு விடுவார்கள்.”

கடவுள் புண்ணியத்தில் உங்களுக்கு அப்படி எல்லாம் நேராது ஐயா நீங்கள் அறக்கோட்டங்கள் மூலமாகவும் அன்ன சத்திரங்கள் மூலமாகவும் செய்துவரும் தான தருமங்களும் உங்களைக் காப்பாற்றும்.”

தங்களுக்கு என்னைப் பற்றி இவ்வளவு தெரிந்திருப்பது எனக்கே வியப்பைத் தருகிறது. தான தருமங்கள் செய்வது பன்னெடுங்காலமாக எங்கள் குடும்பத்தின் வழக்கம், அதற்காகப் பிறர் புகழைக்கூட நாங்கள் எதிர்பார்ப்பதில்லை.”

பெரிய காராளர் நிலை இருதலைக்கொள்ளி எறும்பு போல் ஆகியிருந்தது. வந்திருக்கும் புதியவனின் பேச்சு அவன் மதுராபதி வித்தகருக்கும், பாண்டிய மரபினருக்கும் மிக மிக வேண்டியவன்தான் என்பதுபோல் காட்டினாலும் நல்லடையாளச் சொல்லைத் தெரிவிக்காதவரை அவனை எப்படி நம்புவது என்று தயக்கமாக இருந்தது. பெரியவரைச் சந்திப்பதற்கும் நாளும் நாழிகையும் குறித்து நினைவு வைத்திருக்கும் இந்தப் புதிய மனிதன் களப்பிரர்களின் ஒற்றனாக இருக்க முடியாது என்று தோன்றினாலும், ஒற்றன் இல்லை என்று முடிவு செய்யவும் இயலாமல் இருந்தது. அதனால்தான் எதிலும் சார்பு காண்பிக்காமல் நடுநிலையாகப் பேசியிருந்தார் பெரியகாராளர். வந்திருக்கும் இந்த அதிசய விருந்தினரிடம் களப்பிரர்களை எதிர்த்துப் பேசுவதும் கூடாது. முற்றாகப் பாராட்டிப் பேசுவதும் கூடாது. நடுநிலையாக இருந்து உண்மையைக் கண்டுபிடித்த பின்பே தன் விருப்பு வெறுப்புக்களை அவனிடம் காண்பிக்க வேண்டும் என்ற கருத்துடன், “ஐயா! நாங்கள் வேளாளர்! நாட்டின் அரசியல் விருப்பு வெறுப்புக்களைப் பற்றி எங்களைக் கேட்டுப் பயனில்லை. நிலத்தை உழுது பயன் கொள்ளுவதுதான் எங்கள் தொழில்.” என்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் உள்ளுர ஒரு நம்பிக்கையும இருந்தது. வந்திருப்பவனைத் தன்னுடைய அறக்கோட்டத்திற்கு அழைத்துச் சென்று உண்ணவும் தங்கவும் ஏற்பாடு செய்துவிட்டுத்தானே ஆலமரத்தடிக்குச் சென்று பெரியவரைக்கண்டு, ‘இப்படி யாரையாவது உங்களை வந்து காணச் சொல்லியிருந்தீர்களா?’ என்று கேட்டு விடலாம் என்பதாக நினைத்திருந்தார் பெரிய காராளர்.

ஆனால், வந்திருக்கும் புதிய மனிதனிடம் அதை எப்படிக் கூறுவது என்றும் அவருக்கு அச்சமாக இருந்தது. பதற்றமும் முன் கோபமும் உள்ளவன்போல் தெரியும் அந்த மனிதன் புலித்தோல் அங்கியோடு எதிரே தெரியும் போது ஓர் அசைப்பில் புலியே நிற்பது போலிருந்தது. நெடுநேரம் பேசி அந்தப் புதிய மனிதனைத் தன் விருந்தினனாக இணங்க வைத்து, அடுத்த வீதியிலிருந்த அறக்கோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியகாராளர். போகும்போதுஐயா! சிறிது மெல்லப் பேசலாமே? ஏன் இவ்வளவு உரத்த குரலில் பேசுகிறீர்கள்?” என்று அவர் அந்தப் புதிய மனிதனை வேண்டிக் கொண்டபோது,

ஏன் இப்படி வேண்டுகிறீர்கள்? உரத்த குரலில் பேசுவதற்கு கூடக் களப்பிரர் ஆட்சியில் தண்டனை உண்டா?” என்பதாக முன்னைவிட உரத்த குரலில் அவரை வினாவினான் அவன். இப்படி எல்லாம் வினாவுவதைப் பார்த்தால் அந்த மனிதனை நம்பலாம் போலவும் இருந்தது. கடந்த காலத்தில் இதேபோல ஆசை காட்டி நெருங்கி வஞ்சகம் செய்த சில ஒற்றர்களைப் பற்றி ஞாபகம் வந்தபோது பயமாகவும் இருந்தது; எதையும் உறுதி செய்ய முடியாமல் இருந்தது.

வந்திருந்த புதிய மனிதனை அறக்கோட்டத்தில் தங்க வைத்துவிட்டுப் பெரியவரைச் சந்திக்க விரைந்து சென்றார் காராளர். அவர் சென்றபோது பெரியவர் ஆலமரத்தின் விழுதுகளிடையே இரு கைகளையும் பின்புறம் கோத்தபடி உலாவிக் கொண்டிருந்தார். காராளரை எதிரே கண்டதுடன் அவரே முன் வந்து தெரிவித்த செய்தி வியப்பை அதிகப்படுத்துவதாக இருந்தது: “காராளரே! இப்போது நீங்கள் எதற்காக என்னைத் தேடி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காணவந்திருக்கும் புதியவனைப் பற்றி அறியத்தானே வந்திருக்கிறீர்கள்? திருவோண முதலாக ஏழு நாள் நிகழும் அவிட்ட நாள் விழாவின் முன் தினம் அந்தத் திருக்கானப்பேர்ப் பிள்ளையாண்டான் என்னைச் சந்திக்க வந்தது போலவே இன்று என்னைச் சந்திக்குமாறு மற்றொருவனுக்கும் ஆணை இடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படிச் சந்திக்க வேண்டியவன் இப்போது உம்மைத் தேடி வந்திருப்பவன்தானா என்று அறிய ஓர் உபாயம் இருக்கிறது. இப்படி அருகே வந்து அதைக் கேட்டுக் கொண்டு போகலாம் - என்று கூறிக் காராளரை அருகில் அழைத்தார். காராளர் அருகில் வந்ததும் அவர் காதருகே மெல்லிய குரலில் ஏதோ கூறிய பின், “இந்தப் பரிசோதனையின் பின் அவன் என்னைத் தேடி வந்திருப்பவன் என்று உறுதியானால் அப்புறம் நம்முடைய ஆபத்துதவிகளில் ஒருவனின் துணையோடு அந்தப் புதியவனை இங்கே அனுப்புங்கள் - என்றார் மதுராபதிவித்தகர். அந்தப் பரிசோதனையைச் செய்யப் பெரியவரிடம் வணங்கி ஒப்புக்கொண்டு திரும்பினாலும் - அதை எப்படி அந்தப் புதிய மனிதனிடம் தெரிவிப்பது என்று முதலில் கலங்கியது காராளர் மனம்.

 

19. சேறும் செந்தாமரையும்

 

அழகன் பெருமாள் மாறன் எவ்வளவோ உறுதி கூறியும் இளைய நம்பிக்கு அந்த விஷயத்தில் இன்னும் அவநம்பிக்கை இருந்தது. அதைப் பற்றி இரத்தினமாலை முத்துப் பல்லக்கில் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்ற பின்பு மீண்டும் மீண்டும் அழகன் பெருமாளுக்கும் இளையநம்பிக்கும் ஒரு தர்க்கமே நிகழ்ந்தது. இளையநம்பி கேட்டான்:-

அந்தரங்கமான செய்திகளையும், சங்கேதக் குறிப்புகளையும் இப்படி மறைவான சித்திர எழுத்துக்கள் மூலம் முகத்திலும் கைகளிலும் எழுதி அனுப்புவதாகப் பழைய காவியங்களில் நிகழ்ச்சிகள் வருகின்றன. அந்தக் காவிய நிகழ்ச்சிகள் பாலி மொழியிலும் இருக்கின்றன. களப்பிரர்களுக்கும் அவற்றைப் பற்றி நன்கு தெரிந்திருக்க நியாயமிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது இரத்தின மாலையின் கைகளிலே நாம் தீட்டி அனுப்பியிருக்கும் வினாக்களை யாருமே சந்தேகக் கண்களோடு பார்க்காமல் விட்டு விடுவார்கள் என்பது என்ன நிச்சயம்?”

இன்றோ நேற்றோ புதிதாக நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை ஐயா! பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையை ஏற்று இதில் ஈடுபட்ட நாளிலிருந்து நீங்கள் கூறுவது போல் எதுவும் நடைபெறவில்லை. மேலும் காவிய நிகழ்ச்சிகளில் கூறப்பட்டுள்ள முகஎழுத்துக்களாகிய சித்திர எழுத்துக்கள் வேறு; நாம் பயன்படுத்தும் கரந்தெழுத்துக்கள் வேறு.”

வேறாயிருந்தால் கவலையில்லை. இந்தக் கை எழுத்துக்களே நம் தலை எழுத்தை நிர்ணயம் செய்யும் முடிவை உண்டாக்கிவிடக் கூடாதே என்பது தான் நான் படுகிற கவலை.”

நம் தலை எழுத்து அவ்வளவிற்கு வலிமைக் குறைவாக இல்லை ஐயா!”

உன்னுடைய எல்லா மறுமொழிகளுமே நம்பிக்கை ஊட்டுவனவாகத் தான் எப்போதும் வெளிப்படுகின்றன அழகன்பெருமாள்.”

நான் எதைப் பற்றியும் இருள் மயமாகச் சிந்திப்பதே இல்லை ஐயா!”

நீ அப்படி இருப்பதனால் தான் எதைப் பற்றியும் ஒளி மயமாகவே சிந்திக்க முடியாமல் இருக்கிறது. ‘சாத்தியமாகும் என்று மட்டுமே உடன்பாடாகச் சிந்திக்கிறவனுக்கு அருகில் அது எவ்விதத்தில்அசாத்தியமாகும் என்று எதிர் மறையாகச் சிந்திக்கிறவன் ஒருவனும் இன்றியமையாதவனாக இருக்க வேண்டும். அவன்தான் அபாயங்களைத் தவிர்க்க முடியும்.” 

இங்கே அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது குறளன் வந்து குறுக்கிட்டான். உடனே அழகன் பெருமாளிடமிருந்து குறளனுக்குக் கட்டளை பிறந்தது:-

குறளா இனி நீ இங்கிருக்க வேண்டிய காரியம் எதுவும் இல்லை. யாருமே காவலின்றி உபவனம் தனியே இருக்கலாகாது. நீ அங்கே போய் இரு. மாலை நேரத்திற்குப் பின் காரி, கழற்சிங்கன், செங்கணான், சாத்தன் எல்லாரும் திருப்பி வந்து விடுவார்கள். ஆனால் நீ மட்டும் தனியாகப் போகிற காரணத்தால் நிலவறை வழியாகப் போக வேண்டாம். அக நகருக்குள் போய்க் கோட்டை வாயில் வழியே வெளியேறிப் புறநகரில் உபவனத்துக்குப் போ. தொடர்ந்து அகநகர் வீதிகளில் தென்படாமல் நிலவறை வழியாகவே வந்து போய்க் கொண்டிருந்தோமானால் ஊருக்குள்ளே நாமும் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆகி விடுவோம். அகநகரிலும் கோட்டையின் உட்பகுதிகளிலும் நடமாட நமக்கு இருக்கும் உரிமையை அவ்வப்போது நிலைநாட்டுவது போல் பழக வேண்டும் நாம் - என்று கூறிக் குறளனைக் கணிகை மாளிகையின் புற வாயில் வழியே உபவனத்துக்கு அனுப்பி வைத்தான் அழகன் பெருமாள்.

குறளன் புறப்பட்டுச் சென்றதும் அழகன் பெருமாளிடம் வேறு சில சந்தேகங்களை வினாவினான் இளையநம்பி.

இரத்தினமாலைக்கு உதவுவதற்கு, அவள் கைகளில் நாம் தீட்டியனுப்பியிருக்கும் வினாக்களுக்கு உடனே மறுமொழி எழுதி அனுப்பக்கூடிய விதத்தில் அங்கே அரண்மனையில் நம்மவர்கள் யாரேனும் இருக்கிறார்களா அழகன் பெருமாள்?”

ஊமைகள் போலவும், செவிடர்கள் போலவும் நடிக்கும் நம்மவர்கள் சிலர் அரண்மனையில் ஊழியம் புரிகிறார்கள். அரண்மனை அந்தப்புர மகளிருக்குப் பூத் தொடுக்கவும் பூணவும், புனையவும், அலங்கரித்துக் கொள்ளவும் உதவுகிற பெண்களில் பலர் இரத்தின மாலையால் அப்பணிக்கு அங்கே அனுப்பப் பெற்றவர்கள். அவர்களில் ஒருத்திக்கு இதே வகையைச் சேர்ந்த கரந்தெழுத்துக்களில் பயிற்சி உண்டு. அவள்தான் இரத்தினமாலை திரும்பும்போது மறு மொழிகளை எழுதி அனுப்புவாள். களப்பிரர்களின் அந்தப்புரப் பெண்களிடமும் உரிமை மகளிரிடமும் நம் இரத்தின மாலைக்குச் செல்வாக்கு உண்டு. நல்ல வாசனையுள்ள பொதிய மலைச் சந்தனம், பூக்கள், பிறவகை நறுமணப் பொருள்கள் இவற்றை வழங்கி வழங்கி அரண்மனைப் பெண்களிடம் தோழமையை வளர்த்திருக்கிறாள் அவள். அந்தத் தோழமையினால்தான் பல காரியங்களை நாம் சாதிக்க முடிகிறது ஐயா!” என்று அழகன் பெருமாள் விளக்கமாகச் சொன்ன பின்புதான் முதல் நாளிரவு நிலவறை வழியாக உபவனத்துக்குச் செல்லும்போது கணிகையர்களைப் பற்றி ஒரளவு குறைவாக மதிப்பிட்ட தன் சொற்கள் ஏன் அவனுக்கு அவ்வளவு சினமூட்டின என்று இளைய நம்பிக்குப் புரிந்தது. அழகன்பெருமாள் இப்போதாவது ஆறுதல் அடையட்டும் என்று இளையநம்பி ஒரு வாக்கியம் சொன்னான்:

சேற்றிலும் தாமரைகள் பூக்கின்றன.”

தவறு! அந்த உவமையை நீக்கிவிட்டே புகழலாம் நீங்கள். சேற்றில்தான் தாமரைகள் பூக்கின்றன! வேர்தான் சேற்றில் இருக்கிறது. பூக்களில் சேறு படுவதில்லை. பூக்களுக்கும் சேற்றுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் பூவில் சேறுபடுவது கிடையாததோடு தெய்வங்களின் கால்களும், பெண்களின் கைகளும் படுகின்றன.”

உபவனத்தைக் காப்பதைவிடத் தர்க்க நியாயங்களையும் இலக்கண விதிகளையும் காக்கப் போகலாம் நீ...”

நான் காவல் செய்யாவிட்டாலும் நியாயங்களும் இலக்கணங்களும் பத்திரமாக இருக்கும். உண்மையில் ஒரு பெரிய புலவர் மரபில் வந்தவன்தான் நான். பெரியவருடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு இந்த உபவனத்தைக் காத்துக் கொண்டு வருகிறேன். அவ்வளவுதான்.”

நான் கூறியவற்றில் எவையேனும் உன் மனத்தைப் புண்படுத்தியிருந்தால் பொறுத்துக்கொள்.”

அப்படி எதுவுமில்லை ஐயா? நாமிருவரும் ஒரே கடமைக்காக ஒரே தலைமையின் கீழ் இயங்குகிறோம். நமக்குள் பொறுத்துக் கொள்வதும் விட்டுக் கொடுப்பதும் இயல்புதான்.”

பலவகையிலும் சோதனை செய்து பார்த்ததில் அழகன் பெருமாளின் உறுதியும், பொன்னான இதயமும் இளைய நம்பிக்குத் தெளிவாகத் தெரிந்தன. கோ நகருக்குள் நுழைந்ததும் சந்தித்த முதல் நண்பனாகிய யானைப் பாகன் அந்துவன், எதையும் சிரிப்பு நீங்காத முகத்தோடு பார்க்கிறவன். இரண்டாவதாகச் சந்தித்த இந்த அழகன் பெருமாளோ, எதையும் சிந்தனையோடும், காரிய நோக்கத்தோடும் பார்க்கிறவனாகத் தெரிந்தான். இருவருமே பெரியவரின் ஊழியத்திலும், பாண்டிய நாட்டைக் களப்பிரர் ஆட்சியிலிருந்து விடுவிக்கும் பணியிலும் கடமை உணர்வு குன்றாதவர்களாக இருப்பதை இளையநம்பியால் புரிந்து கொள்ள முடிந்தது. குணங்களால் வேறுபட்ட பலரை உணர்வினால் ஒன்றுபடச் செய்து பணியாற்ற வைத்திருந்த பெரியவரின் கட்டுப்பாட்டையும் ஏற்பாட்டையும் வியந்தான் அவன்.

மாலை நேரம் வரை அந்தக் கணிகை மாளிகைகளிலேயே கழிந்தது. அகிற்புகை மணமும், பூக்கள், சந்தனம், பச்சைக் கற்பூரம் எல்லாம் கலந்த வாசனைகளும் நிறைந்த அந்த மாளிகையில் பெண்கள் அந்தி விளக்குகளை ஏற்றினார்கள். மங்கல வாத்தியங்கள் இசைத்தன. வீடு இந்திரலோகத்து நடன மண்டபம்போல் அழகு மயமாயிற்று. இளையநம்பியும் அழகன் பெருமாளும் இரவில் அங்கேயே உண்ண வேண்டும் என்று அந்த மாளிகையைச் சேர்ந்த பெண்கள் வந்து வேண்டிக் கொண்டார்கள். அவர்களுடைய விநயமும் பணிவான இனிய சொற்களும் உபசாரமும் இளையநம்பியைத் திகைப்படையச் செய்தன. இந்த மாளிகையில் இவ்வளவு அன்பையும் பண்பையும் அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் உபசாரமோ அவனை வியப்பிலேயே ஆழ்த்தியது.

20. கோட்டை மூடப்பட்டது

 

காத்திருக்கிறோம் என்ற கவலையும் களைப்பும் தெரியாமலிருக்க அங்கிருந்த இளம் பெண்கள் சிலர், குரவைக்கூத்து ஆடி இளையநம்பியை மகிழச் செய்தனர். ஆயர்பாடியில் மாயனாகிய திருமாலிடம் இளம் நங்கையர் ஊடினாற் போன்ற பிணக்கு நிலைகளையும், காதல் நிலைகளையும் சித்திரிக்கும் அபிநயங்களை அவர்கள் அழகுற ஆடிக் காட்டினர்.

மாலை முடிந்தது; இரவு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்கள் அன்பும் இனிமையும் நிறைந்த வார்த்தைகளில் உபசாரம் செய்து படைத்த உணவையும் உண்டாயிற்று. இன்னும் இரத்தினமாலை திரும்பி வரவில்லை. இளையநம்பி அழகன் பெருமாளைக் கேட்டான்:

ஏன் நேரமாகிறது? மாலையிலேயே அவள் திரும்பி விடுவாள் என்றல்லவா நீ கூறியிருந்தாய்?”

சில சமயங்களில் மறுநாள் வைகறையில் திரும்புவதும் உண்டு. போன காரியம் முடியாமல் அவள் திரும்ப மாட்டாள். நம்முடைய வினாக்களுக்கு மறுமொழி தெரிந்து அதைச் சமயம் பார்த்துக் கைகளில் எழுதச் செய்து கொண்டு தானே அவள் திரும்ப முடியும்?”

அகால வேளையில் இரவு நெடுநேரமான பின்பு இங்கே திரும்ப முடியுமா?”

எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனென்றால் இந்த வீதியில் இரவுக்கு அமைதி கிடையாது. இரவிலும் இங்கே ஆரவாரங்கள் உண்டு. இரத்தினமாலை ஒரு வேளை அகாலத்தில் திரும்பி வந்தாலும் தெரிய வேண்டிய செய்திகள் நமக்குத் தெரியும்.”

இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே மாளிகையின் வாயிற் கதவு பலமாகத் தட்டப்பட்டது. இரத்தினமாலைதான் திரும்பி வந்திருக்க வேண்டும் என்று பணிப் பெண்கள் ஒடிப்போய்க் கதவுகளைத் திறந்தார்கள். ஆனால், கதவைத் திறந்ததுமே வந்திருப்பது இரத்தினமாலையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

 

குறளன்தான் திரும்பி வந்திருந்தான். அவன் முகத்தில் இயல்பை மீறிய பரபரப்புத் தென்பட்டது. நிறைய ஒடியாடிக் களைத்திருந்த சோர்வும் தெரிந்தது. அவனை அமைதியடையச் செய்து பேச வைக்கவே சில கணங்களாயிற்று. பின் அவன் அழகன்பெருமாளை நோக்கிச் சொல்லலானான்:

ஐயா அவிட்ட நாள் விழாவை ஒட்டி நகருக்கு வந்த கூட்டத்தில் யாரோ ஒர் ஒற்றன் நேற்றுப் பிடிபட்டு விட்டானாம். யாத்திரீகர்கள் தங்கும் இடமாகிய வெள்ளியம்பலத்துக்கு அருகே அவனைப் பிடித்தார்களாம். இன்று காலை அதே இடத்திற்கு அருகே இன்னும் ஒர் ஒற்றன் அகப்பட்டானாம். அதனால் திடீரென்று வெள்ளியம்பலத்தில் தங்கியிருந்த யாத்திரீகர்களை எல்லாம் விரட்டி விட்டுக் கோட்டையின் நான்கு புறத்து வாயில்களையும் உடனே மூடச் சொல்லி உத்தரவிட்டு விட்டார்கள். அகநகர் முழுவதும் ஒரே பரபரப்பு. யாரும் அகநகரிலிருந்து வெளியேறவும் முடியாது. வெளியேயிருந்து அகநகருக்குள் புதிதாக வரவும் முடியாது. ஒவ்வொரு கோட்டை வாயிலாக அலைந்து போய்ப் பார்த்து விட்டுத்தான் ஏமாற்றத்தோடு இங்கே திரும்பி வந்தேன்.

எப்போது முதன்முதலாகக் கோட்டைக் கதவுகளை அடைத்தார்கள்?”

நடுப்பகலிலிருந்தே அடைக்கத் தொடங்கி விட்டார்கள் போலிருக்கிறது. இது தெரிந்திருந்தால் நான் போயே இருக்க வேண்டாம்.”

ஐயோ! அப்படியானால் நம்மவர்கள் காரி, கழற்சிங்கன், சாத்தன், செங்கணான் நால்வரும் எப்படி உபவனத்துக்குத் திரும்புவார்கள்? நீ கூறுவதிலிருந்து வெள்ளியம்பலத்துப் பக்கம் போய் அந்த நிலவறை வழியையும் வெளியேறுவதற்குப் பயன்படுத்த முடியாது என்று தெரிகிறது.”

முடியவே முடியாது! வெள்ளியம்பலத்தைச் சுற்றிலும் உருவிய வாளுடன் பூத பயங்கரப்படை காவலுக்கு நிற்கிறது.”

பூத பயங்கரப்படை காவலிருப்பது தெரியாமல் அவர்கள் வெள்ளியம்பலத்துக்குப் போய்விட்டு அங்கே அகப்பட்டுக் கொள்ளப் போகிறார்களே, பாவம்?” என்று இளையநம்பி வருந்திக் கூறியபோது-

ஒருபோதும் அவர்கள் எதிரிகளிடம் அகப்பட மாட்டார்கள். தந்திரமாகத் தப்பி நான்கு பேரும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ, இங்கே வந்து சேர்வார்கள் என்று உறுதி கூறினான் அழகன் பெருமாள் மாறன்.

அதெப்படிச் சொல்லி வைத்தாற்போல் இங்கே வந்து சேருவார்கள் என்று உன்னால் உய்த்துணர முடிகிறது?”

நான்கு கோட்டை வாயில்களும் மூடப்பட்டு வெள்ளியம்பலத்து நிலவறையிலும் நுழைய முடியாமல் தவிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டால் புற நகரிலுள்ள உபவனத்திற்கு வெளியேறிச் செல்ல மீதமிருக்கும் ஒரே வழி இந்த மாளிகையில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் நால்வரும் நன்கு அறிவார்கள் ஐயா இந்த மாளிகைக்கு வரும் போது சூழ்நிலைக்கேற்பப் பிறர் ஐயம் அடையாதவாறு வந்து சேர அவர்களுக்குத் தெரியும். இத்துறையில் அவர்கள் மிகவும் செம்மையான முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் - என்று இளையநம்பிக்கு மறுமொழி கூறிவிட்டுக் கணிகை மாளிகையின் பணிப் பெண்களைக் கூப்பிட்டுப் பெருங்கதவுகளை அடைத்துத் தாழிட்டு விட்டு, அவற்றின் நடுவே உள்ள சிறிய திருஷ்டி வாசற் கதவை மட்டும் தாழிடாமல் திறந்து வைக்குமாறு வேண்டினான் அழகன்பெருமாள்.

அந்த மாளிகைப் பெண்களும் அன்றிரவு உறங்காமல் விழித்திருந்தனர். பயத்தினாலும் அகநகரைப் பற்றிக் கேள்விப்பட்ட பரபரப்பான செய்திகளாலும் யாருக்குமே உறக்கம் வரவில்லை.

இரவு நடுச்சாமத்திற்கு மேலும் ஆகிவிட்டது. திருஷ்டி வாசல் கதவு கண்ணில் தெரியும்படியான ஒரிடத்தில் இளையநம்பியும், அழகன் பெருமாளும், குறளனும் அமர்ந்து அந்த வாயிற்புறத்திலேயே பார்வையைப் பதித்துக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் ஆகஆக அவர்கள் மனத்தில் சந்தேக நிழல் படரத் தொடங்கியது. இரத்தின் மாலையும் திரும்பவில்லை. காரி முதலிய நால்வரும் கூட எதிர்பார்த்தபடி அங்கு வந்து சேரவில்லை.

அதுவரை எல்லா விஷயங்களிலும் அளவற்ற நம்பிக்கையோடு இருந்த அழகன் பெருமாள்கூட

நண்பர்கள் ஏன் இன்னும் வரவில்லை? இறைவன் அருளால் அவர்களுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடாது நேர்ந்திருக்க முடியாது என்று தானாகவே முன்வந்து இளையநம்பியிடம் கூறினான். அப்படிக் கூறியபோது அந்தக் குரலில் தளர்ச்சி தொனிப்பதையும் இளையநம்பி உணரத் தவறி விடவில்லை.

 

21. எண்ணெய் நீராட்டு

 

அந்தப் புதிய விருந்தினனை அறக் கோட்டத்தில் தங்க வைத்து விட்டு வந்திருந்த காராளர் இப்போது பெரியவர் மதுராபதி வித்தகர் கூறிய பரிசோதனையை அவனிடம் எவ்வாறு செய்து முடிப்பது என்று சிந்திக்கத் தொடங்கினார். வந்திருப்பவனின் மனம் புண்படாமல், தனக்கு ஆகவேண்டிய காரியமும் பழுதுபடாமல் எப்படி முடித்துக் கொள்வது என்று தெரியவில்லை. சோதனைக்குப் பின் அவன் வேண்டியவன் என்று தெரிந்து விட்டால் சோதனை செய்ததற்காகக் கூசவேண்டிய நிலை ஏற்படும். வேண்டாதவன் என்று தெரிந்துவிட்டாலோ அவனுக்குக் கோபம் வரும். அவனோ உடனே ஆத்திரப் படுகிறவனாகவும், முன் கோபக்காரனாகவும், உரத்த குரலில் சப்தம் போட்டுப் பேசுகிறவனாகவும் இருந்தான். இதையெல்லாம் விடப் பெரிய அபாயம் தன்னுடைய நீண்ட புலித்தோல் அங்கிக்குள் சற்றே மறைத்தாற்போல் உறையிட்ட வாள் ஒன்றையும் வைத்திருந்தான் அவன்.

பாண்டிய நாட்டில் தங்கள் ஆட்சிக்கு எதிராகக் கலகம் எதுவும் எழலாகாது என்ற கருத்தில் களப்பிரர்கள் ஆட்சியில் பொதுமக்கள் வாளும், வேலும் கொண்டு பயில்வது தடுக்கப்பட்டிருந்தும், ‘இவன் எப்படி வாளைக் கைக் கொண்டு வெளிப்பட்டுப் பழகுகிறான்?’ என்பதுதான் காராளரின் மிகப் பெரிய ஐயமாயிருந்தது.

ஒன்று இவன் நம்மை ஆழம் பார்க்க வந்த களப்பிரப்பூத பயங்கரப்படை ஒற்றனாக இருக்க வேண்டும்; அல்லது வருவது வரட்டும் - என்று எதற்கும் துணிந்து வாள் வைத்திருப்பனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது காராளருக்கு. இந்த இரண்டைத் தவிர வேறு எதையுமே உய்த்துணர இயலவில்லை. அவனுடைய வயதைப் பற்றிய தன்னுடைய முதல் அனுமானம் கூடத் தவறானதோ என்று இப்போது நெருங்கி நின்று கண்ட பின் நினைத்தார் அவர். வளர்ச்சியினாலும் முகத்தில் நெகிழ்ச்சியோ முறுவலோ ஒரு சிறிதும் தெரியாத குரூரத்தினாலும் வயது கூடுதலாகத் தோன்றுகிறதோ என்று இப்போது எண்ணினார் அவர். மதுராபதி வித்தகரைச் சந்தித்துவிட்டு அறக்கோட்டத்திற்குத் திரும்பிய பெரிய காராளர் அங்கே அந்த அறக் கோட்டத்தின் கூடத்தில் பசி எடுத்து இரை தேடும் புலி உலவுவதுபோல உலவிக் கொண்டிருந்த அவனை மீண்டும் மிக அருகே நெருங்கிக் கண்டபோது இவ்வாறுதான் எண்ணத் தோன்றியது.

அவன் அவரைக் கண்டதும் அடக்க முடியாத ஆவலோடுஇப்போதாவது என்னைப் பெரியவர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் முடிவோடு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் - என்று கேட்டான்.

அடடா பார்த்தீர்களா? பார்த்தீர்களா? மீண்டும் அரசியலுக்கு வருகிறீர்களே? நான் அதற்காக இப்போது இங்கே வரவில்லை. என்னுடைய அறக்கோட்டத்துக்கு யார் வந்தாலும் எண்ணெய் நீராடச் செய்து உணவளித்து அனுப்புவது வழக்கம். நீங்களோ நெடுந்துாரம் அலைந்து களைத்துத் தென்படுகிறீர்கள். இங்குள்ள மல்லன் ஒருவன் எண்ணெய் தேய்த்து உடம்பு பிடித்து விடுவதில் பெருந்திறமை உடையவன். அவனிடம் எண்ணெய் தேய்த்துக் கொண்டு நீராடிவிட்டு இந்த அறக்கோட்டத்தின் உணவையும் உண்டு முடித்தீர்களா னால் எழுந்திருக்கவே மனம் வராமல் சுகமான உறக்கம் வரும்.”

ஐயா! சுகமான உறக்கத்துக்கு உங்களிடம் நான் வழி கேட்கவில்லை. என்னுடைய இந்த உடல், தொடர்ச்சியாக ஐந்து நாள் உறக்கம் விழித்தாலும் தாங்கும். உறக்கத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ நான் அதிகம் கவலைப் படவில்லை.” 

நீங்கள் கவலைப்படவில்லை என்றாலும் உங்களுக்காக நான் கவலைப்படுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.”

ஒருவரைப் பற்றி மற்றொருவர் கவலைப்படுவதற்கு நாம் இன்னும் அவ்வளவு ஆழமாக நெருங்கிப் பழகிவிட வில்லையே?”

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

காரணத்தோடுதான் சொல்கிறேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பவில்லை என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் கண்காண எதிரே இரண்டு களப்பிரர்களை என்வாளால் குத்திக் கொன்று காட்டினால் தான் நம்புவீர்கள் போலிருக் கிறது என்று தனக்கே உரிய உரத்த குரலில் அவன் இரையவும், காராளருக்கு அவனிடம் ஏன் தான் பேச்சுக் கொடுத்தோம் என்று கவலையாகி விட்டது. அவனைப் போன்று வஞ்சகமில்லாத வெள்ளை முரடனை ஒரளவு இதமாகப் பேசித்தான் வழிக்குக் கொண்டுவர முடியும் போலிருந்தது. சாம, தான, பேத, தண்டம் என்ற உபாயங்களில் முதல் உபாயத்தைத் தவிர வேறெதனாலும் அவனை வழிக்குக் கொண்டு வர முடியாது போலிருந்தது. அவனை வழிக்குக் கொண்டு வர முடியாத வரை தன் பரிசோதனையும் நிறை வேறாதென்று கருதினார் அவர். அடுத்த கணமே அவனிடம் அவருடைய உரையாடலின் தொனியும் போக்கும் மாறின.

நம்பிக்கை என்பது ஒரே அளவில் அன்பைப் பரிமாறிக் கொள்வதுதான் என்றால், என்னுடைய அறக்கோட்டத்தில் நான் செய்யும் உபசாரங்களை நீங்கள் முதலில் நம்பி ஏற்க வேண்டும். இருபுறமும் நிறைய வேண்டிய ஒரு நம்பிக்கையை ஏதாவது ஒருபுறம்தான் முதலில் தொடங்க வேண்டியிருக்கும்...”

இதைக் கேட்டு முதலில் ஒன்றும் புரிந்து கொள்ளாதது போல காராளரை ஏறிட்டு நோக்கி விழித்த அவன் சில விநாடிகளுக்குப் பின்,

இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று சூடாகத் தெரியும் ஒலி தொனிக்கக் கேட்டான். காராளர் சிரித்துக் கொண்டே இதற்கு மறு மொழி கூறினார்:

இந்த அறக் கோட்டத்தின் உபசாரங்கள் எதையும் நீங்கள் மறுக்காமல் ஏற்க வேண்டும்.”

பதிலுக்கு அவன் முகத்தில் சிரிப்போ மலர்ச்சியோ இல்லை. இளையநம்பியின் முகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு சுமுகபாவமும் கவர்ச்சியும் உண்டோ, அவ்வளவிற்கு இவன் முகத்தில் கடுமை இருந்தது. சுமுகத்தன்மை வறண்டிருந்தது.

அவனுடைய மெளனத்தை இசைவாகப் புரிந்து கொண்டு அறக்கோட்டத்து மல்லனை எண்ணெய்ப் பேழையுடன் வரச் செய்தார் அவர். புதியவனை நீராட்ட அழைத்துச் செல்லு முன் மல்லனைத் தனியே அழைத்து இரண்டு விநாடிகள் இரகசியமாக அவனோடு ஏதோ பேசினார். அவர் கூறியதற்கு இணங்கித் தலையசைத்தான் அந்த மல்லன். காராளர் கூடத்திலேயே நின்று கொண்டார். மல்லனையும் புதியவனையும் தனியே விடக் கருதியே அவர் இதைச் செய்தார்.

ஆனால் அங்கே புதியவனோடு தனியே சென்ற மல்லனுக்கோ பயமாயிருந்தது. கையிலிருந்த வாளைக் கீழே வைக்காமலேயே எண்ணெய் பூசி நீவிவிடச் சொல்லும் முதல் மனிதனை அவன் இப்போதுதான் சந்தித்தான். அந்தச் சிறு பிள்ளைத்தனமான பாதுகாப்பு உணர்ச்சியை எண்ணி உள்ளுற நகைத்தாலும், தனக்கு என்ன நேருமோ என்ற பயம் எண்ணெய் பூசுகிறவனுக்கு இருந்தது. புலியோடு பழகுகிற மனநிலையில் இருந்தான் அவன். அரையாடையைத் தார்ப் பாய்ச்சிக் கட்டிக் கொண்டு பாறையாகப் பரந்த மார்பும் திரண்ட தோள்களுமாக எண்ணெய் பளபளக்க நின்று அந்த உடலின் வலிமையை எண்ணித்தான் ஒரு மல்லனாயிருந்தும் அந்த ஊழியனால் அஞ்சாமலிருக்க முடியவில்லை. தயங்கித் தயங்கி அவன் வேண்டினான். “அந்த வாளைக் கீழே வைத்தீர்களேயானால் எண்ணெய் பூசிவிட வாகாயிருக்கும்.”

யாருக்கு வாளுக்கா? எனக்கா?” என்று வந்தவன் சீறியதும் மல்லன் அடங்க வேண்டியதாயிற்று. ஆனாலும் மல்லனுக்கு ஒரு மனநிறைவு இருந்தது. வந்திருப்பவனுடைய உடலில் காராளர் கண்டறியச் சொன்ன அடை யாளத்தை அவன் கண்டு விட்டான். உடனே எண்ணெய் பூசுவதை நிறுத்தி விட்டு உள்ளே ஓடிப் போய்க் காராளரிடம் அதைச் சொல்லிவிட அவன் பரபரப்பு அடைந்தாலும், வந்திருப்பவனுக்கு அது சந்தேகத்தை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் பொறுமையோடு முழுமையாக எண்ணெய் தேய்த்து முடித்தான்.

எல்லாம் முடிந்த பின் அவன் திரும்பி வந்து காராளரிடம்ஐயா! நீங்கள் கூறிய அடையாளம் அவருடைய வலது தோளில் பழுதின்றி இருக்கக் கண்டேன் என்று கூறினான். அதைக் கேட்ட பின்பு வந்திருப்பவனை ஒரு தேசாந்திரி போல் கருதி அறக் கோட்டத்தில் வைத்துச் சோறிடுவதா அல்லது தன்னுடைய மாளிகைக்கு அழைத்துச் சென்று சிறப்பாக விருந்தளிப்பதா என்ற மனப்போராட்டம் எழுந்தது காராளருக்குள்ளே. உடனே காண்பிக்கப்படும் சிரத்தையை வந்திருப்பவன் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக எந்த மாறுதலும் செய்யாமல் விட்டார் அவர். உண்டு முடித்ததும் அந்தப் புதியவனைப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் அழைத்துச் செல்லும் பொறுப்பையும் மல்லனிடமே ஒப்படைத்தார் காராளர். அவருடைய அறக்கோட்டங்களில் பணிபுரியும் அனைவரும் பொது மக்கள்போல் பழகினாலும் அந்தரங்கத்தில் அவர்கள் அனைவரும் பாண்டிய குலத்தின் முனை எதிர் மோகர் படையினரையோ, தென்னவன் ஆபத்துதவிகளையோ சேர்ந்தவர்கள் தாம், அதனால் அவர்களை எதற்கும் நம்பலாம் என்பதைக் காராளர் நன்கு அறிந்திருந்தார்.

 

22. புலியும் மான்களும்

எண்ணெய் நீராடிய களைப்பில் உண்டதும் அயர்ந்து உறங்கி விட்டான் அந்தப் புதிய மனிதன். அறங் கோட்டத்து மல்லனும் காராளரின் குறிப்புப்படி உறங்கி எழுந்திருந்த பின்பே அந்தப் புதியவனைத் தன்னோடு வருமாறு அழைத்தான்.

எங்கே அழைக்கிறாய் என்னை? பயனில்லாத காரியங்களுக்காக அலைய எனக்கு இப்போது நேரமில்லை என்று மல்லனிடம் சீறினான் அவன். ‘ஐந்து தினங்களானாலும் நான் உறக்கத்தைத் தாங்குவேன்?’ என்று சொன்னவன் உண்ட களைப்புத் தாங்காமல் உடனே உறங்கி விட்டதைக் கண்டபோது தொடர்ந்து பல நாட்கள் அவன் உறங்க முடியாமற் கழிந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. வீரம் பேசிச் சூளுரைப்பதும் உடலின் இயலாமையால் உடனே அதற்கு முரண்டு படுவதுமாக இருந்த அவன் மனம் ஆத்திரம் அடையாதபடி,

பயனில்லாது எங்கேயும் உங்களை அழைக்க வில்லை. எங்கே போக வழி கேட்டு வந்தீர்களோ அங்கே உங்களை அழைத்து வரச்சொல்லிக் கட்டளை கிடைத்திருக்கிறது என்றான் மல்லன். மறுபேச்சுப் பேசாமல் உடனே மல்லனைப் பின் தொடர்ந்தான் புதியவன். மல்லனோடு நடந்து செல்லும்போது, “உங்களது அறக்கோட்டத்தைப் புரந்து வரும் அந்த வேளாளர் எங்கே?” என்று கேட்டான் அவன்.

அவர்தான் இந்தக் கட்டளையை என்னிடம் சொல்லி விட்டுச் சென்றார் - என்றான் மல்லன்.

நல்லது! இவ்வளவு நேரத்துக்குப் பின்பாவது அவருக்கு என்மேல் கருணை வந்ததே? முதலிலேயே இந்தக் கருணையைக் காட்டியிருந்தாரானால் எவ்வளவோ பெரிய உதவியாயிருக்கும்.”

இப்படிக் கூறிய புதியவனுக்கு மல்லன் மறுமொழி எதுவும் கூறவில்லை. சிறிது தொலைவுவரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமலே நடந்தனர். நல்லடையாளச் சொல்லைப் பற்றி அந்தப் புதியவனுக்குக் குறிப்பிட்டு விளக்க வேண்டிய சமயம் வந்து விட்டது என்பதை உணர்ந்து, அதைப் பற்றிச் சிறிது நேர மெளன நடைக்குப் பின் சொல்லத் தொடங்கினான். புதியவனும் அதை அமைதியாவும் கவனமாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டான். நல்லடை யாளச் சொல்லைப் பற்றி விளக்கிய சில கணங்களுக்குப் பின் இருந்தாற் போலிருந்து, சற்றே தயங்கித் தயங்கி அந்தப் புதியவனை ஒரு கேள்வி கேட்டான் மல்லன்: -

இந்த ஆட்சியில் களப்பிரர் அல்லாத பொதுமக்கள் வெளிப்படையாக வாளோ, வேலோ, ஆயுதங்களோ ஏந்திப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா ஐயா?”

தெரியும். தெரிந்தால் என்ன? அந்தத் தடைக்கு நான் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும் என்று எந்த வேதத்தில் எழுதியிருக்கிறது?” 

வேதத்தில் எதுவும் எழுதவில்லை என்றாலும் இந்த வாளை வைத்திருப்பது உங்களுக்கு அபாயத்தைத் தேடிக் கொண்டுவரும்...”

என்னைத் தேடிவரும் அபாயங்களை நான் சுகமாகத் திரும்பிச் செல்ல விட்டுவிட மாட்டேன். அந்த அபாயங்களையே நான் இந்த வாள் முனையில்தான் சந்திப்பேன். வருகின்ற அபாயங்கள் இந்த வாளின் கூர்மையான நுனியில் மோதிச் சாகத்தான் முடியும்.” இந்த வாக்கியங்களைக் கூறும் போது அந்தப் புதியவனின் கண்கள் நெருப்புக் கோளங்களாகச் சிவந்து மின்னின. ஒருகணம் பாயப் போகிற புலி போலவே மல்லனின் கண்களுக்குத் தோன்றினான் அவன்.

அதிருக்கட்டும்! உங்கள் அறக்கோட்டத்தை நடத்தும் பெரிய காராள வேளாளர் தனக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாதென்று முதலில் என்னைச் சந்தித்தபோது ஒரேயடியாகச் சாதித்தாரே? இப்போது எப்படி என்னை நம்பினார்?”

நீங்கள் சந்தேகத்துக்கு உரியவர் அல்லர் என்று அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம் என்றான் மல்லன். அவர்கள் பெரியவர் மதுராபதி வித்தகர் தங்கியிருந்த ஆல மரத்தடிக்குச் செல்லுகிற வழியில் அங்கங்கே மறைந்திருந்து வழியைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆபத்துதவிகள் அந்தப் புதிய மனிதனோடு தங்களில் ஒருவனான மல்லன் துணை வருவதைக் கண்டு ஐயப்பாடு தவிர்த்தனர்.

அவர்கள் இருவரும் போய்ச் சேர்ந்தபோது பெரியவர் ஆலமரத்தின் வடபகுதியில் குன்றின் கீழிருந்த புல்வெளியில் இருந்தார். அந்தப் புல்வெளியின் பசுமையில் அப்போது கண் கொள்ளாக் காட்சியாய்ச் சிறுசிறு புள்ளிமான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. மிகவும் சிறியதும் மருண்டு மருண்டு நோக்கும் அழகிய விழிகளை உடையதும் ஆகிய ஒரு புள்ளிமானைத் தடவிக் கொடுத்தபடியே புல்வெளியில் அமர்ந்திருந்த பெரியவர் திடீரென்று தன் கைப் பிடியிலிருந்த மானைத்தவிர மற்றெல்லா மான்களும் தலைதெறிக்க ஓட்டம் எடுப்பதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தபோது புலித்தோல் அங்கியோடு கூடிய அந்த மனிதனுடன் மல்லன் அங்கே வந்து கொண்டிருந்தான். வந்து கொண்டிருப்பவனுடைய புலித் தோல் அங்கி மேய்ந்து கொண்டிருந்த மான்களை மருட்டி விரட்டுவதை எண்ணி உள்ளுறச் சிரித்துக் கொண்டே,

வா! வா! ‘ஏதடா தென்னவன் மாறன் இன்று வர வேண்டுமே! இன்னும் காணவில்லையே என்று நானும் இவ்வளவு நேரமாக உன்னைத்தான் எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னுடைய புலித்தோல் உடையே இங்கு மேய்ந்து கொண்டிருந்த மான்களை விரட்டியதுபோல் களப்பிரர்களையும் இங்கிருந்து விரட்டிவிடப் போதுமானது என்று நினைக்கிறாய் போலிருக்கிறது என்றார் பெரியவர். மறுமொழி கூறாமல் அவர் முன்னிலையில் ஒரு புலி கிடந்து வணங்குவது போல் தரை மண் தோய வணங்கினான்தென்னவன் மாறன் என்று குறிக்கப்பட்ட அந்த மனிதன். அப்போது மிக அருகே தென்பட்ட அவனுடைய புலித்தோல் அங்கியைக் கண்டு பெரியவர் கைகளின் தழுவலில் இருந்த அந்தப் புள்ளி மானும் மருண்டு ஒடத் திமிறியது. அவர் அதை விடுவித்தார். வலது கையை உயர்த்தி அவனை வாழ்த்தினார்.

தன்னிடம்அவர்கள் இருவரும் பேசும்போது நீ அருகே இருக்க வேண்டாம்... என்று காராளர் கூறியனுப்பியிருந்ததற்கு ஏற்ப மல்லன் விலகி நின்று கொண்டான். ஆனாலும் பெரியவரையும் அவரைக் காண வந்திருந்த புதியவனையும் தெளிவாகக் கண்காணிக்க முடிந்த தொலைவில்தான் நின்று கொண்டிருந்தான். காராளரும் மல்லனுக்கு அப்படித்தான் சொல்லியனுப்பி இருந்தார். உரத்த குரலை உடையவனாக இருந்ததால் தென்னவன் மாறன் என்னும் அந்தப் புதிய மனிதன் கூறிய மறுமொழிகள் மல்லன் நின்று கொண்டிருந்த இடம் வரையிலும் கேட்டன. ஆனால் மதுராபதி வித்தகர் அவனை வினாவிய வினாக்கள் மட்டும் அவ்வளவு தெளிவாகக் கேட்கவில்லை. “ஐயா! தென்னவன் சிறு மலையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மட்டும் ஈராயிரம் இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்திருக்கிறேன். விற்போர் வல்லமை, வேலெறியும் திறன், மற்போர் ஆண்மை ஆகிய எல்லாத் துறையிலும் தேர்ந்த அந்த ஈராயிரவர் இந்தக் கணமே நீங்கள் கட்டளையிட்டாலும் புறப்பட்டு வந்து சேரத் தயங்கமாட்டார்கள்.”

இவ்வளவு உரத்த குரலில் இந்த விஷயத்தை அவன் சொல்லியிருக்கக் கூடாது என்று பெரியவர் அவனைக் கடிந்து கொண்டிருக்க வேண்டும் என்று விலகி நின்ற மல்லனாலேயே அநுமானித்துக் கொள்ள முடிந்தது. ஏனென்றால் அடுத்த கணத்திலிருந்து தென்னவன் மாறனின் குரலும் அவனுக்குக் கேட்கவில்லை. பெரியவரிடம் அவன் ஏதோ பேசி வாதித்துக் கொண்டிருப்பதை மட்டும் மல்லன் பார்க்க முடிந்தது.

பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கியைக் கழற்றி வலது தோளின் மேற்புறத்தைப் பெரியவரிடம் காட்டி ஏதோ சொன்னான் தென்னவன் மாறன். பேச்சு வளர்ந்தது.

பேச்சின் நடுவே இருந்தாற் போலிருந்து தென்னவன் மாறன் வாளை உருவவே கண்காணித்துக் கொண்டிருந்த மல்லன் பதறிப்போய் நெருங்கிச் சென்றான். ஆனால் அடுத்த கணமே தென்னவன் மாறன் செய்த காரியத்தைக் கண்டு மல்லனுக்குப் புல்லரித்தது, மெய்சிலிர்த்தது. கூசும் மருண்ட கண்களை மூடி மூடித் திறந்தான் மல்லன்.

 

23. தென்னவன் மாறன்

 

தன் உள்ளங்கையை வாளால் கீறி நேர்கோடாகப் பொங்கி மேலெழும் இரத்தத்தைக் காண்பித்து, “ஐயா! இந்த உடலில் ஒடுவது பாண்டிய மரபின் குருதிதான் என்பதைப் போர்க்களத்தில் நிரூபிக்க வேண்டிய நாள்தொலைவில் இல்லை என்று குருதி பொங்கும் கையை முன்னால் நீட்டி அவரிடம் சூளுரைத்துக் கொண்டிருந்தான் தென்னவன் மாறன்.

திடீரென்று அவன் இருந்தாற் போலிருந்து வாளை உருவியதால் என்னவோ ஏதோ என்ற அருகில் ஓடி வந்திருந்த மல்லன் இப்போது அவர்கள் உரையாடலை நன்றாகவே கேட்க முடிந்தது.

பகைவனைக் கருவறுத்து நிர்மூலமாக்கும் கனலை உள்ளேயே வளர்த்து வருகிற எந்தச் சாதுரியமுள்ளவனும் அந்தக் கனலின் வேர்வையைக்கூடத் தன் புற உடலில் தெரியவிடக் கூடாது. காலம் கணிகிறவரை நாம் எதற்காக வேர்க்கிறோம் என்பதைக்கூட நம் எதிரிகள் அறியலாகாது. நீயோ இரத்தத்தையே கீறிக் காண்பிக்கிறாய்.”

உங்களிடம் தான் அதைக் காண்பிக்கிறேன். எதிரியிடமில்லை...”

ஓர் எதிரியைச் சந்திக்கும்போதும் இதே உணர்ச்சி வேகம் உனக்கு வரமுடியாதென்பது என்ன உறுதி? நீ மான்கள் அஞ்சி ஒடும் புலித்தோல் அங்கியைத் தரித்திருக்கிறாய்! மனிதர்கள் ஐயுறவு கொள்ளும்படி வாளை உருவிக் காட்டுகிறாய். இதுவே உன்னைக் களப்பிரர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும். தென்னவன் சிறுமலையில் ஒருவன் புலித்தோல் அங்கியணிவது இயல்பு. இங்கே இந்த மருத நிலத்து ஊரிலும், நாகரிகமான கோநகரிலும் இதை மருண்டு போய்த்தான் பார்ப்பார்கள். நீ பெரிய வீரன் என்பதிலோ, உடல் வலிமையுள்ள பலவான் என்பதிலோ நான் கருத்து வேறுபடவில்லை. ஆனால், உன்னுடைய உரத்த குரலும், வஞ்சகமில்லாமல் உடனே விருப்பு வெறுப்புக்களையும், கோபதாபங்களையும் காட்டிவிடும் வெள்ளைத் தன்மையுமே உன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்றுதான் கலங்குகிறேன்.”

தென்னவன் மாறன் இதற்கு மறுமொழி எதுவும் கூற முடியவில்லை. குனிந்த தலைநிமிராமல் பெரியவரின் எதிரே நின்றான் அவன். எதிரே அவன் நிற்பதையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார் பெரியவர்.

அவ்வாறு நெடுநேரம் நோக்கிக் கொண்டிருந்த பின்பு கூறலானார்:

நீ சில நாட்களுக்கு இங்கேயே நம்முடைய திருமோகூர்ப் பெரிய காராளரோடு தங்கியிரு! நான் மீண்டும் உன்னைக் கூப்பிட்டுச் சொல்லுகிறவரை தென்னவன் சிறுமலைக்கு நீ திரும்ப வேண்டாம்! கோநகருக்குள் போகவே கூடாது.”

உங்கள் கட்டளைக்குப் பணிகிறேன் என்று கூறித் தென்னவன் மாறன் தலை வணங்கி விடை பெற இருந்த போது தொலைவில் பெரிய காராளர் பரபரப்பாக வருவது தெரிந்தது.

அங்கிருந்த மூவருமே அவருடைய எதிர்பாராத வருகையால் கவரப்பட்டார்கள். காராளர் அப்போது தன்னைத் தேடிவருகிற காரியம் புதிதாக வந்திருக்கும் தென்னவன் மாறன் முன்னிலையில் வெளிப்பட வேண்டாம் என்று கருதிய மதுராபதி வித்தகர், “மல்லா இவனை அழைத்துக் கொண்டு நீ காராளர் திரு மாளிகைக்குப் போ! காராளர் என்னிடம் பேசிவிட்டுச் சிறிது நேரத்தில் அங்கு வந்து உங்களோடு சேர்ந்து கொள்வார் என்று சொல்லி அவர்களிருவரையும் அப்போது அங்கிருந்து மெல்லத் தவிர்த்து அனுப்பினார்.

அப்போது மாலை மயங்கத் தொடங்கியிருந்த வேளை மேற்கு வானம் பொன்மேகங்களாற் பொலியத் தொடங்கியிருந்தது. பெரியவரைத் தேடி வந்திருந்த காராளர் வழியில் தன் எதிரே திரும்பிக் கொண்டிருந்த மல்லனையும், தென்னவன் மாறனையும், “நீங்கள் இருவரும் சிறிது தொலைவு போவதற்குள் நான் பின்னாலேயே வந்து விடுவேன் என்ற சொற்களுடன் சந்தித்து விடைகொடுத்து அனுப்பினார்.

அவர்களும் மேலே நடந்தார்கள். காராளர் அருகே வந்ததும் பெரியவருக்கு எதிரே தயங்கி நின்றார்.

என்ன நடந்தது?”

நேற்றிரவும் இன்று காலையிலும் இரண்டு ஒற்றர்கள் பிடிபட்டதன் காரணமாக வெள்ளியம்பலப் பகுதியிலும் பிற பகுதியிலும் அவிட்ட நாள் விழாவுக்காக வந்திருந்த யாத்திரிகர்களை வெளியேற்றி விட்டு மிகவும் பதற்றமான நிலையில் நண்பகலிலேயே களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விட்டார்களாம்.”

இரவு உங்கள் செல்வப் பூங்கோதை யாரோ ஒற்றன் வெள்ளியம்பலத்தருகே பிடிபட்டதாகச் சொன்ன போதே நான் இதை எதிர்பார்த்தேன். உபவனத்திலுள்ள நம்மவர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்களா?”

யானைப் பாகன் அந்துவன் காலைவரை அவர்கள் பாதுகாப்பைப் பற்றி உறுதி கூறியனுப்பியிருக்கிறான். பகலுக்கு மேல்தான் கோட்டை வாயில்கள் அடைக்கப் பட்டிருக்கின்றன.”

பிடிபட்டிருக்கும் அந்த இருவர் மூலம் நம்மவர்கள் பல்லாயிரக் கணக்கில் யாத்திரிகர்கள் என்ற பெயரில் ஓர் உட் பூசலை எழுப்பும் நோக்குடன் கோ நகருக்குள் வந்திருந்தார்கள் என்ற இரகசியம் வெளிப்படலாம் என்னும் கவலை உங்களுக்கு இருக்கிறதா?”

அறவே இல்லை. சித்திரவதையே செய்தாலும் நம்மவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கத் துணியவும் மாட்டார்கள்.”

இப்படி இந்த அவிட்டநாள் விழாவன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஒர் உட்பூசலுக்கு முயலும் நோக்குடன் நம்மவர்கள் ஆயிரக் கணக்கில் அகநகரில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை நாம் இளையநம்பியிடம் கூடச் சொல்லி யனுப்பாதது நல்லதுதான்!”

அழகன் பெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் அது தெரிந்திருக்கும்.”

 

என் கட்டளைகளை ஒரு மாத்திரை ஒலி கூட மிகையாகவோ, குறைவாகவோ புரிந்து கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்கிறவன் அவன்! அவனிடமிருந்து பிறர் யாரும் அறிந்திருக்க முடியாது.”

பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா! இது மாலையில் தெரிந்த செய்தி. இரவில் மேலும் தெளிவாகத் தெரியும். அவற்றையும் தெரிந்து கொண்டு நீங்கள் உலாவப் புறப்படு முன் மீண்டும் வருகிறேன்.”

வரும்போது நீங்கள் மட்டும் தனியாகவே வாருங்கள் காராளரே! என் குறிப்புப் புரியாமல் அந்தத் தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானையும், உங்களோடு கூப்பிட்டுக் கொண்டு வந்து விடாதீர்கள்.”

உங்கள் குறிப்பு எனக்குத் தெரியும்! நான் தனியாகவே வருவேன் என்பதை நீங்கள் நம்பலாம் என்று காராளர் பெரியவருக்கு உறுதி கூறிவிட்டுப் புறப்பட்டார்.

மீண்டும் அவர் தன் மாளிகைக்குத் திரும்பியபோது செல்வப் பூங்கோதை, தென்னவன் மாறனுக்கும் மல்லனுக்கும் நெய் மணம் கமழும் தேன்குழல்களைக் கொடுத்து உண்ணச் சொல்லி உபசரித்துக் கொண்டிருந்தாள்.

இவர் தேன் குழலைக் கடித்துத் தின்னும் ஒலி மதுரை வரை கேட்கும் போலிருக்கிறதே அம்மா!” என்று தென்னவன் மாறனைச் சுட்டிக் காட்டிக் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார் காராளர்.

என்ன செய்வது? களப்பிரர்களை நினைத்துக் கொண்டு தேன்குழல் தின்றால்கூடப் பல்லை நற நற வென்று தான் கடிக்க வேண்டியிருக்கிறது...” என்றான் தென்னவன் மாறன். மல்லனும், செல்வப் பூங்கோதையும், காராளரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

 

24. மறுமொழி வந்தது

 

உறங்காமல் கண் விழித்திருந்து அந்த அலங்கார மயமான கணிகை மாளிகையில் இளையநம்பி முதலியவர்கள் காத்திருந்த இரவு அவர்கள் பொறுமையைச் சோதிப்பதாயிருந்தது. நேரம் ஆக ஆகப் புதுப் புதுச் சந்தேகங்கள் தோன்றின. இரவு முடியத் தொடங்கிக் காற்றும் சூழ்நிலையும் குளிர்ச்சி அடைகிற அளவு வைகறையும் நெருங்கிக் கொண்டிருந்தது.

 

அரண்மனைக்கு முத்துப் பல்லக்கிலே சென்ற கணிகை இரத்தினமாலையும் திரும்பவில்லை. கோட்டைவாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதனால் கணிகை மாளிகைக்கு வந்து சேரக்கூடும் என்று அழகன் பெருமாள் அதுமானம் செய்து உரைத்த உபவனத்து நண்பர்களும் அங்கு வந்து சேரவில்லை. இளம்பிள்ளை பயமறியாது என்பதுபோல்அவர்களைத்தேடி நகருக்குள் புறப்படலாம் என்றுகூட இளையநம்பி முன் வந்தான். ஆனால் அழகன் பெருமாள்தான் அதற்கு இணங்கவில்லை.

தெளிவாக முடிகிற நன்மைகளை நீங்களாகக் குழப்பி விடாதீர்கள் என்று மறுத்தான் அவன்.

விடிவதற்குள்ளேயே நமக்கு ஒளி பிறக்கும் என்று மேலும் உறுதியாகவும் பிடிவாதமாகவும் சொன்னான் அவன். இளையநம்பிக்கு அவனுடைய உறுதி வியப்பளிப்பதாக இருந்தது. ஆயினும் அவன் பொறுமையாயிருந்தான்.

அழகன் பெருமாள் நம்பியபடியே நடந்தது. சிறிது, நேரத்தில் சந்தனம் அறைக்கும் அறையில் நிலவறையின் மறுபுறம் இருந்து கல் புரட்டப்படும் ஒலி வரவே குறளன், இளையநம்பி, அழகன் பெருமாள் மூவரும் அங்கே விரைந்தனர்.

சந்தனக்கல் விலகியதும் பிறவியிலேயே சிரிப்பு மாறாத யானைப்பாகன் அந்துவனின் முகம் தெரிந்தது அங்கே. அவன் ஒரே அவசரத்திலும் பரபரப்பிலும் இருந்தான். மேலே படியேறி வராமல் தலையை மட்டும் நீட்டியே அங்கிருந்து விஷயத்தைக் கூறத் தொடங்கினான் அவன்.

உங்களுக்குச் சில செய்திகளைக் கூறி எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே நான் வழக்கமாகத் திருமஞ்சனக் குடத்தோடு வைகைத் துறைக்குப் புறப்படும் நேரத்திற்குச் சில நாழிகைகள் முன்பாகவே இன்று காலையில் புறப்பட்டேன். இன்னும் சில நாட்களுக்கு நீங்கள் யாருமே உபவனத்துக்குத் திரும்ப வேண்டாம். உபவனமும் பூத பயங்கரப் படையின் கண்காணிப்பில் இருக்கிறது. திருமருத முன்துறையில் யானையை நிறுத்தி விட்டு உடன் வந்த பாகனிடம் நீராடி வருவதாய்ப் பொய் சொல்லிவிட்டு நீந்தியே உபவனக்கரையில் ஏறிப் பதுங்கிப் பதுங்கி மறைந்து நிலவறையில் நுழைந்து இங்கே ஒடி வருகிறேன். விரைந்து நான் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் மற்றவன் என்னைச் சந்தேகப்படுவான்.”

அவர்களும் அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு உடனே அவனைத் திரும்பிப் போக விட்டு விட்டார்கள். அவனுடைய கடமை உணர்வை எல்லாருமே பாராட்டித் தங்களுக்குள் மகிழ்ந்து கொண்டனர். அவனை அங்கே தாமதப் படுத்தும் ஒவ்வொரு கணமும் அவனுயிருக்கு அபாயம் தேடுவதாகும் என்று அவர்களுக்கு மிக நன்றாகப் புரிந்திருந்தது. யானைப்பாகன் அந்துவன் ஒரு மின்னலைப் போல் வந்து தோன்றித் திரும்பிய பின், “இந்த மாறுபட்ட நிலைமைகளால் இரத்தினமாலை திரும்பவருவது பாதிக்கப் படுமா?” என்று அழகன் பெருமாளைக் கேட்டான் இளையநம்பி. 

நாம் இப்போது கவலைப்பட வேண்டியது உபவனத்திலிருந்து காலையில் நகருக்குள் வந்திருக்கும் நம்முடைய நண்பர்களைப் பற்றியதாக இருக்க வேண்டுமே அன்றி இரத்தினமாலையைப் பற்றியதாக இருக்க வேண்டிய தில்லை!”

ஏன்?”

அவள் உறுதியாகவும், பயன்படுகிற வகையிலும் திரும்பி வருவாள் என்பது சர்வ நிச்சயம் என்று அழகன் பெருமாள் நம்பிக்கையாகத் தெரிவித்தான். ‘சூழ்நிலைகளால் எங்கும் வெளியேறிச் செல்ல முடியாதபடி சில நாட்கள் தானும் பிறரும் அந்தக் கணிகை மாளிகையிலேயே தங்க நேர்ந்திருப்பதால், இரத்தினமாலை உடனே திரும்பினாலும் தான் விரைந்து செய்யப் போவது என்ன?’ என்று எண்ணித் தனக்குத்தானே பொறுமையடைந்தான் இளையநம்பி. அந்த மாளிகைப் பெண்கள் உபசரிப்பதிலும்... விருந்தினரைப் பேணுவதிலும் ஒரு கலையின் மெருகும் நளினமும் பெற்றுத் தேர்ந்தவர்களாக இருந்ததால் அங்கே ஒரு குறையும் தெரியாமல் இருக்க முடிந்தது.

அங்கேயே வைகறை நீராடி முடிந்த இளையநம்பிக்கும் அழகன் பெருமாளுக்கும் பூசிக் கொள்வதற்கு நிறையச் சந்தனம் அறைத்துக் கொடுத்தான் குறளன்.

சந்தனம் பூசிக் கொள்ளும் மகிழ்ச்சியிலா இப்போது நாம் இருக்கிறோம்?” என்று அதை மறுத்த இளைய நம்பியிடம்

அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா! நம் குறளனால் ஒரு பணியும் செய்யாமல் வாளா இருக்க முடியாது. அவனுடைய சந்தனம் அறைக்கும் பணியை நமக்காக அவன் செய்திருக் கிறான். சந்தனத்தை வாங்கிப் பூசிக் கொள்ளுங்கள். நடக்க இருக்கும் காரியங்களைக்கூட மங்கல நிறைவுடைய தாக்கி விடும் சக்தி பொதிகை மலைச் சந்தனத்துக்கு உண்டு ஐயா!” என்று பரிவோடு கூறினான் அழகன் பெருமாள். மனத்தை அதிற் செலுத்தும் சூழ்நிலை அப்போது இல்லை என்றாலும் அந்தச் சந்தன மணம் மாளிகையையே நிறைத்துக் கொண்டிருந்தது. இளையநம்பி தயங்குவது போலத் தயங்காமல் மார்பிலும், தோள்களிலும் அழகன் பெருமாள் சந்தனத்தை வாரி வாரிப்பூசிக் கொண்டான். அறைத்துக் கொண்டு வந்து தருகிறவன் மனத்தை ஏமாற்ற விரும்பாமல் இளையநம்பியும் சிறிதளவு சந்தனத்தை ஏற்றுப் பூசிக்கொண்டான். குறளனோ தானே முன்வந்து அவனுடைய பொன்நிற முன் கைகளில் சந்தனத்தைப் பூசி விடவே தொடங்கி விட்டான்.

இந்தச் சந்தனத்தைப் பூசு முன்பே உங்கள் கைகள் இயல்பாகவே மணக்கின்றன ஐயா! இந்தச் சந்தனத்தின் நிறத்திற்கும் உங்கள் மேனி நிறத்திற்கும் நான் வேறுபாடு காண்பது முடியாத காரியமாயிருக்கிறது - என்றெல்லாம் குறளன் புகழ்ந்த புகழ் வார்த்தைகள இளையநம்பியை நாணப்படச் செய்தன. அழகன் பெருமாளும், இளைய நம்பியும், சந்தனக்கல் இருந்த அறையிலிருந்து மாளிகையின் கூடத்திற்கு வரவும் வெளிப்புற வாயிலில் முத்துப் பல்லக்கு வந்து சேரவும் ஒன்றாயிருந்தது. அழகன் பெருமாள் களிப்போடு கூறினான்:

பார்த்தீர்களா நம்முடைய புகழ் பெற்ற பொதிகை மலைச் சந்தனத்தைப் பூசிக் கொண்டால், நாம் எதிர்பார்க்கிற மங்கல நிகழ்ச்சிகள் உடனே நடைபெறும் என்று நான் கூறியது எவ்வளவு பொருத்தமாய் நிகழ்கிறது.”

அப்போதுதான் துயிலெழுந்து வந்த மயில் போல் அழகாய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்தாள் இரத்தின மாலை. அவர்கள் தன்னை எதிர்கொள்ளக் கண்டு புன்முறுவல் பூத்து முக மலர்ந்தாள் அவள்.

அழகு மின்னும் இளமூங்கிலாய்த் திரண்ட அவள் தோள்களையும் கைகளையுமே பார்க்கத் தொடங்கியிருந்த இளையநம்பி அந்த உள்ளங்கைகள் பளிங்கு போல் வெண்மையாயிருந்ததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தான். அழகன் பெருமாளுக்கும் ஏமாற்றமாயிருந்தது. சிலம்பொலி குலுங்கத் தென்றல் அசைந்து வருவது போல பணிப்பெண் பின்வர வந்து கொண்டிருந்த அவளை நோக்கி,

என்ன இது? நீ மறுமொழியோடு வருவாய் என்றல்லவா எதிர்பார்த்தேன், இரத்தினமாலை?” என்று வினாவினான் அழகன் பெருமாள்.

முதலில் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறத் தயங்கிய அவள் முகம் எதற்கோ நாணிச் சிவந்தது. சிறிது நேரத்திற்குப் பின்...

நான் மறுமொழியோடு வரவில்லை என்பதை நீங்களாகவே எப்படி முடிவு செய்தீர்கள் அதற்குள்?” என்று அவள் அவர்கள் இருவரையும் திருப்பிக் கேட்டதும், புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு விழித்தார்கள் அவர்கள்.

 

25. பாதங்களில் வந்த பதில்

 

கணிகை இரத்தினமாலை மறுமொழியோடு திரும்பியிருப்பதாகக் கூறினாலும் அவளுடைய உள்ளங்கைகள் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பெறாமல் பளிங்குபோல் வெறுமையாய் வெண்மையாயிருப் பதைக் கண்டு இளைய நம்பியும் அழகன் பெருமாளும் மருண்டனர்.

அவர்கள் இருவரையும் சிறிது நேரம் அப்படித் திகைக்க வைப்பதையே விரும்பியவள் போல் முத்துப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்து எதிரே நின்று இரத்தினமாலை சிரித்துக் கொண்டிருந்தாள். பின்தொடர்ந்து வந்த பணிப் பெண்ணும் அவளருகே நின்று கொண்டிருந்தாள். அழகன்பெருமாள் அவளைக் கேட்டான்: 

இரத்தினமாலை! நேற்று நீ இங்கிருந்து புறப்பட்ட போது இருந்ததைவிட இப்போது நம்மைச் சுற்றிலும் சோதனைகள் அதிகமாகி இருக்கின்றன. நீ திரும்பி வந்து தெரிவிக்கும் மறுமொழிகளாவது அந்தச் சோதனைகளை அகற்றும் என்று எதிர்பார்த்திருந்தோம். நீயும் இப்படி எங்களைச் சோதனை செய்தால் என்ன செய்வது?”

அங்கே கோட்டைக்குள்ளும் அரண்மனையிலும் கூடச் சோதனைகள் அதிகமாக இருக்கின்றன. நான் நேற்று இரவிலேயே திரும்ப முடியாமற் போனதற்குக் காரணமே அரண்மனைச் சூழ்நிலைதான். நேற்றுப் பகலில் நான் அரண்மனைக்குப் புறப்பட்டபோதே நகரில் பரபரப்பான நிலைமை உருவாகி விட்டது. என்ன நேருமோ என்ற பயத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை உடனே அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள். அரண்மனைக்குள் போகிறவர்கள் வருகிறவர்கள் கடுமையான கண்காணிப்பிற்கு ஆளாகிக் கொண்டிருந்தபோதுதான் அங்கே நானும் போய்ச் சேர்ந்திருந்தேன்.”

அப்புறம்...? என்ன நடந்தது?”

என்ன நடக்கும்? இந்த இரத்தினமாலை சென்ற பின்பும் திறக்காத அரண்மனைக் கதவுகள் ஏது? இந்த விழிகளைச் சுழற்றியும் இந்தப் புன்சிரிப்பைக் காண்பித்தும் நான் எங்கும் எதற்கும் தோற்க நேர்ந்ததே இல்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே?”

ஆனால், இப்போது தோற்றுவிட்டு வந்திருக்கிறாய் என்றல்லவா தோன்றுகிறது?”

அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்! நான் இப்போது முழு வெற்றியில் காலூன்றி நிற்கிறேன் என்று கூறியபடியே அழகியதொரு கூத்துக்கு அபிநயம் செய்வது போல் அவள் தனது வலது பாதத்தை மேலே தூக்கினாள், என்ன ஆச்சரியம்? கைகளில் இல்லாததை அவள் உள்ளங்காலில் காண முடிந்தது. அப்போது செந்தாமரைப் பூவின் அகஇதழ்போல் வெண்சிவப்பு நிறத்தில் விளங்கிய அந்த உள்ளங்காலில் அவர்களுக்கு வேண்டிய விடை இருந்தது. சித்திரம்போல் கரந்தெழுத்துக்கள் அங்கே இருந்தன. “மூன்று ஆண்மக்களுக்குமுன் வெட்கமில்லாமல் இப்படிக் காலைத் தூக்குகிறாளே இவள் என்று சிறிதே சினம் அடையத் தொடங்கியிருந்த இளையநம்பியின் கண்களும்கூட இப்போது வியப்பினாலும் மகிழ்ச்சியினாலும் மலர்ந்தன.

முதலில் தூக்கிய வலது பாதத்தை ஊன்றிக் கொண்டு இடது பாதத்தைத் தூக்கி அதிலிருந்த செம்பஞ்சுக் குழம்பு எழுத்துக்களையும் அவர்களுக்குக் காண்பித்தாள் அவள். ‘நான் இப்போது முழு வெற்றியில் கால் ஊன்றி நிற்கிறேன் என்று இரத்தினமாலை புன்னகையோடு கூறிய சொற்களின் முழுப் பொருளும் இப்போது அவர்களுக்குத் தெளிவாக விளங்கியது. 

இளையநம்பி நன்றி தொனிக்கும் குரலில் அவளை நோக்கிக் கூறினான்: “கைகளில் சுமந்து சென்ற கேள்விகளுக்குக் கால்களில் விடைகள் கிடைத்திருக்கின்றன.”

ஆம்! இந்த மாறுதலுக்குக் காரணம் இருக்கிறது. நேற்றிரவு நான் அரண்மனையில் தங்கி என்னுடைய கைகளில் இங்கிருந்து சுமந்து சென்ற எழுத்துக்களைக் காட்ட வேண்டியவர்களிடம் காட்டி அவர்கள் அறிந்து கொண்டதும் மறுமொழியை எழுதுவதற்காகக் கைகளைக் கழுவிவிட்டு மீண்டும் நீட்டினேன், அப்போது அங்கே எதிர்பாராத விதமாக அந்தப்புரத்தைச் சேர்ந்த களப்பிர நங்கை ஒருத்தி வந்து சேர்ந்து விட்டாள். வந்ததோடு மட்டுமல்லாமல் அவள் என்னருகே நெருங்கி

நள்ளிரவுக்குமேல் ஏற்கெனவே அலங்கரித்துக் கொண்டிருந்த அலங்காரங்களை அழித்து விட்டுப் புதிதாகச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிக் கொள்ள என்ன அவசரம் இரத்தினமாலை?” -என்று வினாவி விட்டாள். வினாவிய பின்பு அந்தக் களப்பிரப் பெண் உடனே எங்களை விட்டு அகலவில்லை. ஏதோ எங்களைச் சந்தேகப்படுகிறவள் போல் நெடுநேரம் எங்களோடு தொடர்பாகவும் தொடர்பின்றியும் எதை எதையோ உரையாடிக் கொண்டிருந்தாள். அந்த உரையாடலின் நடுவே, “அடி இரத்தினமாலை! இந்த அரண்மனையில் உன்னால் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட தமிழ்ப் பணிப் பெண்கள் அனைவரும் உன்மேல் நிறைய விசுவாசம் வைத்திருக்கிறார்கள். உனக்கு அலங்கரிக்கும் போதும் உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசும்போதும் இவர்கள் அளவற்ற சிரத்தையோடு தோன்றுகிறார்கள். உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு எழுதும்போது மட்டும் உன்மேல் தங்களுக்குள்ள பக்தி விசுவாசத்தையே இவர்கள் எழுத்தாக எழுதுகிறார்களோ என்றுகூட நான் நினைப்பதுண்டு என்பதாகக் கண்களைச் சுழற்றி என்னைப் பார்த்தபடியே சொன்னாள் அந்தக் களப்பிரப் பெண். நேற்றிரவு மட்டும் அவள் என்னிடம் பழகிய விதம், பேசிய சொற்கள் எல்லாமே சந்தேகப்படத் தக்கதாய் இருப்பது போல் தோன்றியது; அவள் என்னை ஆழம் பார்க்கிறாளோ என்று தயக்கத்தோடு நினைத்துச் சிந்தித்தேன் நான்.”

அப்படியும் சிந்திக்க வேண்டியதுதான் இரத்தினமாலை! எதிரிகளைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கணத்திலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை, மேலும் தொடர்ந்து கூறலானாள்:

அந்தக் களப்பிரப் பெண்ணைப் பற்றிச் சந்தேகம் வந்தபின் அவள் கவனத்தை மாற்றுவதற்காக நான் என்ன செய்தேன் தெரியுமா? அவள் கண்காணவே என் கைகளில் எழுதியிருந்த அலங்காரங்களை அழித்தேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்தக் களப்பிரப் பெண் போய்ச் சேர்ந்தாள். அவள் போய்ச் சேர்ந்தபின் நான் அரண்மனையில் தங்கியிருந்த பகுதியின் கதவுகளை நன்றாக உட்புறம் தாழிட்டுக் கொண்டு ஊரடங்கிப் போன அந்த இரவு வேளையில் என் முழு நம்பிக்கைக்குரியவர்களும் என்னாலேயே அந்த அரண்மனையில் தொண்டுழியும் புரிவதற்குச் சேர்க்கப்பட்டவர்களும் ஆகிய பணிப் பெண்களைக் கொண்டு என் உள்ளங்கால்களில் எழுதச் செய்தேன். உள்ளங் கால்கள் ஈரம் புலர்கிறவரை காற்றாட நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்படி உட்கார்ந்து ஆடாமல் அசையாமல் இந்த எழுத்துக்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். உறக்கத்தை இழந்ததனாலும் நீண்ட நேரம் கால்களை ஒரே பக்கமாக நீட்டி அமர்ந்திருந்ததனாலும் கண்கள் எரிகின்றன. முழங்கால் எலும்புப் பூட்டுகளில் வலி தாங்க முடியவில்லை.”

எங்களுக்கு உதவுவதற்காக உன் நளினப் பொன்னுடல் மிகவும் நலிவடைய நேர்ந்திருக்கிறது பெண்ணே! இந்த உதவிக்காக நானும், அழகன் பெருமாளும் இன்னும் அழியாமல் எஞ்சியிருக்கும் பாண்டியர் மரபும் உனக்கு எவ்வளவோ நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் இரத்தினமாலை!” இளையநம்பி குறுக்கிட்டுப் பேசியபோது, இந்தப் பேச்சில் ஒன்றிற்காக மகிழ்ச்சியும் வேறொன்றிற்காகச் சினமும் கொள்ள வேண்டும் போலிருந்தது இரத்தின மாலைக்கு. நளினப் பொன்னுடல் என்று அந்தக் கம்பீரமான கட்டிளங்காளையின் வார்த்தைகளால் தன் அழகு புகழப்பட்டிருப்பதை அவள் எண்ணிப் பூரித்தாள். அதே சமயத்தில் பாண்டியர் மரபுக்கு ஆதரவான இந்த இயக்கத்தில் நினைவு தெரிந்த நாளிலிருந்து பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசியோடு ஈடுபட்டிருக்கும் தன்னை அந்நியராக வந்த யாரோ ஒரு புதியவருக்கு நன்றி சொல்லி ஒதுக்குவது போல் அவன் ஒதுக்கியது அவளுக்குச் சினம் ஊட்டியது. அந்த நன்றியின் மூலம் இளையநம்பி தன்னை அவமானப் படுத்தி விட்டது போல் உணர்ந்தாள் அவள். அழகிய பொன் நிறக் கைகளும், பரந்த மார்பும் கட்டிளமையும், ஆண்மையின் காம்பீர்யம் நிறைந்த முகமுமாக எதிரே நின்று கொண்டிருந்த இளையநம்பியைக் கோபித்துக்கொள்ள அவள் பெண்மை தயங்கினாலும் தன்மானம் வென்றது. இவள் அவனை நோக்கிக் கேட்டாள்:

நன்றியை எதிர்பாராமல் செயல்படும் கடமைகளை நன்றிகூறி விடுவதன் மூலமாகவும்கூட அவமானப்படுத்த முடியும் என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள் ஐயா!”

நீ இப்படிச் சொல்லக் கூடாது பெண்ணே! ‘நன்றி மறப்பது நன்றன்று என்று நம் தமிழ்மறையே கூறுகிறது.”

இளையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு என்று அதே வேறோர் இடத்தில் கூறியிருப்பது தங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரே காரியத்தில் ஈடுபட்டுப் பழகுகிறவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் புனைவதும் புகழ்வதும் சிறுமையாகிவிடும் அல்லவா?”

இரத்தினமாலை இப்படி வினவியதும் இளையநம்பி அதிர்ச்சி அடைந்தான். இதுவரை அவளுடைய மயக்க மூட்டும் உடலழகை மட்டும் கண்டு கொண்டிருந்தவனுக்கு அதையெல்லாம் விட அழகாகவும் நாகரிகமாகவும் அவளுக்கு ஒர் இதயம் இருப்பது இப்போது புரிந்தது. பழகுகிற இருவருக்கு நடுவே கடைப்பிடிக்க வேண்டிய மிக உயர்ந்த நாகரிக நிலையைச் சுட்டிக் காட்டும் ஒரு குறளைக் கூறியதன் மூலம் தன் உள்ளத்தின் பேரழகையும் இப்போது அவனுக்குக் காண்பித்து விட்டாள் இரத்தினமாலை. அவன் இந்த மறுமொழியில் அயர்ந்து போனான். குறளனும், அழகன் பெருமாளும் அவள் பாதங்கள் மூலமாக வந்திருந்த பதிலை எழுத்துக் கூட்டிக் கண்டு பிடித்துத் தன்னிடம் சொல்வதற்கு முன்வந்த பின்பு தான் இளையநம்பி அவளைப் பற்றிய வியப்புக்களில் இருந்து விட்டுபட்டுத் தன் நினைவடைந்து இந்த உலகிற்கு மீண்டுவர முடிந்தது.

 

26. அபாயச் சூழ்நிலை

 

கணிகை இரத்தினமாலை தன் கால்களின் வழியே கொண்டு வந்த மறுமொழியும், விடிவதற்கு முன் நிலவறை வழியே அவசர அவசரமாக வந்து யானைப்பாகன் அந்துவன் தெரிவித்து விட்டுச் சென்ற செய்திகளும் சூழ்ந்திருக்கும் அபாயங்களை நன்றாக எடுத்துக் காட்டின. இரத்தின மாலையின் இருந்த வினாக்களுக்குக் கால்களில் கிடைத்திருந்த மறுமொழிகள் ஓரளவு அவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பவை யாகத்தான் இருந்தன. விடைகளுக்குப் பதில் எச்சரிக்கைகள் பெரும்பாலும் கிடைத்திருந்தன என்றாலும் அவை பயனுள்ள எச்சரிக்கைகளாகவே இருந்தன.

சோனகர் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு இறக்குமதியாகும் குதிரைகள் நிறைந்த கப்பல் கொற்கைத் துறைமுகத்திற்கு எப்போது வந்து சேரும்? அப்படி வந்து இறங்கும் குதிரைகளை எப்படி எப்போது கோநகருக்குக் கொண்டு வரப் போகிறார்கள்? கோநகருக்குக் குதிரைகளைக் கொண்டு வரும்போது களப்பிரர்கள் அதற்காகச் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?’ -ஆகிய வினாக்களைத் தான் இவர்கள் கேட்டிருந்தார்கள்.

குதிரைகளைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். கொற்கைத்துறையில் கரை இறங்கிய பின்பும் ஒரு மண்டலக் காலத்துக்கும் அதிகமாக அவற்றை அங்கே கொற்கையின் அருகிலுள்ள மணல் வெளிகளிலே பழக்கி வசப்படுத்தப் போகிறார்கள். அப்படிப் பழக்கி வசப்படுத்திய பின்புதான் அவற்றை கோநகருக்குக் கொண்டுவருவதைப் பற்றியே சிந்திப்பார்கள். இப்போது நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் சிறிது காலம் மிக எச்சரிக்கையாகவும் தலைமறைவாகவும் இருக்கவேண்டியதுதான். ஒற்றர்கள் இருவர் பிடிபட்டதிலிருந்து களப்பிரர்கள் மிகக் கடுமையாகியிருக்கிறார்கள். எங்கும் எதையும் சந்தேகக் கண்களோடு பார்க்கிறார்கள் - என்பதுதான் மறுமொழியாகக் கிடைத்திருந்தது. ஏறக்குறைய இதையேதான் வேறு வார்த்தைகளில் காலையில் வந்த யானைப்பாகன் அந்துவனும் சொல்லிவிட்டுப் போயிருந்தான். தாங்கள் செய்வதற்கிருந்த காரியங்களையும், இந்த மறுமொழியையும் வைத்துச் சீர்தூக்கிச் சிந்தித்தார்கள் அவர்கள். அழகன் பெருமாள் இந்த எச்சரிக்கையையும் இதற்கு முன்பே கிடைத்திருந்த அந்துவனின் எச்சரிக்கையையும் மிகவும் பொருட்படுத்தினான். இளைய நம்பியோ இந்த எச்சரிக்கைகளைப் பற்றி ஒரளவு அலட்சியம் காண்பித்தான்.

இந்த ஆண்மையற்ற எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தத் தொடங்கினால் நாம் நெடுங்காலம் இன்னிசையைச் செவிமடுத்துக் கொண்டும் ஆடல் அபிநயங்களை இரசித்துக் கொண்டும் இந்தக் கணிகை மாளிகையிலேயே முடங்கிக் கிடந்து நாட்களைக் கழிக்க வேண்டியதுதான். இன்னும் திரும்பி வந்து சேராத உபவனத்து நண்பர்கள் சிறைப்பட்டு விட்டார்களா, இல்லையா, அவர்கள் நிலை என்ன? என்பதையெல்லாம் கூட அறியவே முடியாது. வீரர்கள் அபாயங்களின் இடையேயும் வெளிப்பட்டு அவற்றை எதிர்கொள்வதுதான் முறை. அலை ஒய்ந்தபின் கடலாட முடியாது. அலை ஒயப் போவதும் இல்லை என்று கோபம் வெளிப்படையாகத் தெரிகிற குரலிலேயே பேசினான் இளைய நம்பி. அழகன் பெருமாளும் இரத்தினமாலையும் இதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. இளையநம்பி சூழ்நிலையின் அபாயங்களை நன்றாக உணரவில்லை என்றே அவர்கள் கருதினார்கள்.

அழகன் பெருமாள் சாந்தமான குரலிலேயே இளைய நம்பிக்கு மறுமொழி கூறினான்:

ஐயா! உலகியல் அனுபவம் அதிகமுள்ளவன் என்ற முறையில் நான் கூறுவதை நீங்கள் சிறிது பொறுமையாகக் கேட்க வேண்டும். அபாயங்களை வெல்லவேண்டும் என்ற ஆசையில் அபாயங்களிலேயே போய்ச் சிக்கிக் கொண்டு விடக்கூடாது. அலை ஒய்ந்து நீராட முடியாதுதான், என்றாலும் நீராடுவதற்காக அலைகளிலே போய்ச் சிக்கிக் கொண்டு அழிந்துவிடக் கூடாது. அந்துவன் மூலமோ, அரண்மனையில் இருக்கும் நம்மைச் சேர்ந்த ஒற்றர்கள் மூலமோ, மீண்டும் நற்குறிப்பு அறிவிக்கப்படுகிறவரை நாம் இந்த மாளிகையில்தான் மறைந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் பல நாளாக முயன்று செய்த எல்லாச் செயல்களும் பாழாகிவிடும். நம்முடைய அந்தரங்கமான பல செய்திகள் களப்பிரர்களுக்குத் தெரிந்து விடும். நிலவறை வழிகள் கண்டு பிடிக்கப்பட்டு விடும். எல்லா நேரங்களிலும் குமுறிக் கொண்டிருப்பது மட்டும் வீரனின் அடையாளமில்லை. சில நேரங்களில் மிகவும் பொறுமையாக இருப்பதும் வீரனின் இலட்சணம் தான்.”

அழகன் பெருமாள் இலட்சியங்களைக் காட்டிலும் இலட்சணங்களைப் பற்றியே எப்போதும் அதிகம் கவலைப் படுகிறாய் நீ.”

உண்மைதான் ஐயா! ஒரு முதல் தரமான இலட்சியத்தை மூன்றாந்தரமான இலட்சணங்களால் அவசரப்பட்டுத் தொட என்னால் முடியாது. நான் சிலவற்றில் மிகவும் நிதானமானவன். ஆனால், பல ஆண்டுகளாக இங்கேயே கோநகரில் இருந்து களப்பிரர்களின் போக்கை நன்கு அறிந்திருப்பவன். களப்பிரர்களின் மனப்பான்மையைப் பற்றி அந்தரங்கமாகவும் நம்பிக்கையாகவும் எதை அறிய விரும்பினாலும் பெரியவர் மதுராபதி வித்தகர்கூட அதை அடியேன் மூலம்தான் கேட்டறிவது வழக்கம். அந்த நம்பிக்கை இன்று என்மேலே உங்களுக்கும் வேண்டும்...”

நீயும் உன் நிதானமும் இங்கு தவிர்க்கப்படமுடியாமல் இருப்பது எனக்குப் புரிகிறது என்று வேண்டா வெறுப்பாக மறுமொழி கூறினான் இளையநம்பி. அப்போது இரத்தின மாலையும் அழகன் பெருமாளோடு சேர்ந்து கொண்டாள்.

அரண்மனைப் பெண்களிடமும் அந்தப்புரத்திலும் மிகவும் வேண்டியவள் என்று பெயரெடுத்திருக்கும் என்னிடமே நேற்றிரவு சந்தேகப்பட்டுப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்கள். தந்திரமாகவும், நுண்ணறிவுடனும் கைகளை விடுத்து யாராலும் பார்க்க முடியாதபடி உள்ளங் கால்களில் எழுதி வந்ததால்தான் நான் பிழைத்தேன். இல்லா விட்டால் என் கதியே அதோகதி ஆகியிருக்குமோ என்று பயந்திருந்தேன் நான்.”

பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம் ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் இங்கே பரிதாபத்துக்குரிய காரியம் என்று இளையநம்பி உடனே வெட்டியது போற் கூறியதைக் கேட்டு அழகன்பெருமாள் வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஒரு கோபத்தில் வெடுக்கென்று இப்படிச் சொல்லி விட்டாலும் அடுத்த கணமே இப்படி ஏன் சொன்னோமென்று இளைய நம்பியே தனக்குள் தன் நாவின் துடுக்கைக் கடிந்து கொண்டான்.

ஆனால், இளையநம்பி கூறியதைக் கேட்டு அழகன் பெருமாள் கோபித்துக் கொண்டதைப் போல் இரத்தினமாலை கோபப்படவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்து வாய் நிறையச் சிரித்தாள். கன்னங்கள் சிவந்து கண்களில் நீர் ததும்பும் வரை சிரித்தாள். நடனம் ஆடிவரும் மயில் போல் ஒவ்வோரடியாகப் பாதம் பெயர்த்து நடந்து வந்து அவனெதிரே அவனருகே மூச்சுக் காற்றோடு மூச்சுக் காற்று உராயும் இடைவெளியின் நெருக்கத்தில் நின்று கொண்டாள் அவள். தன்னுடைய மேனியின் மோகன நறுமணங்களை அவன் சுவாசிக்க முடிந்த அண்மையில் நின்று கொண்டு.

ஐயா, திருக்கானப்பேர் வீரரே! நீங்கள் ஒரு விஷயத்தை முற்றிலும் மாற்றிச் சொல்கிறீர்கள். உங்கள் வாக்கியம், ‘ஆண்கள் செய்ய முடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் சாதித்து கொடுக்க வேண்டியிருக்கிறது என்றிருக்க வேண்டும். ஏதோ கோபத்தில் வார்த்தைகளை மாற்றிச் சொல்லி விட்டீர்கள் என்று அவனை நயமாகச் சாடினாள் இரத்தினமாலை. அந்தக் கணிகையின் இந்தச் சொற்கள் மனத்தில் நன்றாக உறைந்து விட்டதன் காரணமாக இளையநம்பி கடுங்கோபமுற்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறிவிட முற்பட்டபோது, அதுவும் முடியவில்லை. மிகவும் விநயமாக அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

 

27. ஊமை நாட்கள்

 

ஆறாக்கனல்போல் சிறி மேலெழும் அடக்க முடியாத சினத்தோடு வெளியேறுவதற்கு இருந்த இளையநம்பியைக் கைகூப்பி வழி மறித்தாள் இரத்தினமாலை. சற்று முன் அவனுக்குக் கடுமையாக மறுமொழி கூறிச் சாடி அவனைக் குத்திக் காட்டிப் பேசிய போது எவ்வளவுக்கு அவள் பெண் புலியாகக் காட்சியளித்தாளோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது ஒரு பேதையாகி இறைஞ்சி அவனை மன்றாடினாள் அவள்.

கருணை கூர்ந்து நான் பேசியதில் ஏதாவது பிழையிருந்தால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். இந்த வீட்டிலோ இந்த வீதியிலோ நீங்கள் கோபப்பட்டுப் பயனில்லை. ஆண்களின் கோபமோ, பிடிவாதமோ வெற்றி பெற முடியாத வீதி இது. பெண்கள் புன்னகைகளாலும் பார்வைகளாலும், நிரந்தரமாக வென்று கொண்டிருக்கும் போர்க்களம் இது. ஒருவகைப் பிரியத்தாலும், உரிமையாலும் நான் உங்களிடம் கூறிவிட்ட சில சொற்களைப் பெரிதாக நினைத்து நீங்கள் வைரம் பாராட்டக் கூடாது. உங்கள் அடிமை அழகாகப் பேசி நன்றாக விவாதித்தால் அதில் உங்களுக்குப் பெருமை இல்லையா?”

தலைவனாக இருப்பவன்தான் யார் யார் தன் அடிமைகள் என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்கோ அடிமைகளே தங்கள் தலைவன் யார் என்பதையும் கூட முடிவு செய்கிற அளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்...”

தலைவன் பெருந்தன்மை உடையவனாக இருந்தால் அடிமைகளும்கூடச் சுதந்திரமாய் இருக்கமுடியுமே!” இந்தச் சொற்களைக் கேட்டு அவளைச் சுட்டெறித்து விடுவதுபோல் ஏறெடுத்துப் பார்த்தான் இளையநம்பி.

அவளை அவனால் வெறுக்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. அவன் வழியின் குறுக்கே அவள் நின்றாள். துணிவாகவும் வாதத் திறமையுடனும் நேருக்கு நேர் நின்று பேசிவிட்டாள் என்பதற்காக ஒருத்தியை வெறுப்பது நியாயமில்லை என்று அவன் மனத்திற்கே புரிந்தாலும் சுளிரென்று அறைந்தாற்போல் அவள் கூறிய வார்த்தைகளின் சூடு இன்னும் ஆறாமல் அவன் செவிகளில் இருக்கத்தான் செய்தது. அதை அவனால் மறக்கவே முடியவில்லை.

அவள் பேசியிருந்த வார்த்தைகள் அவனுடைய நெஞ்சின் மென்மையிலே இன்னும் உறுத்திக் கொண்டிருந்தன. அவள் கண்களின் பார்வையும், சிரிப்பின் நளினமும் அவனைச் சினம் அடையவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அவள் அவன்முன் மண்டியிட்டு மன்றாடத் தொடங்கியிருந்தாள்.

கடைந்தெடுத்துத் திரட்டிய வெண்ணெயாற் செய்தது போன்ற மென்மையும் குளிர்ச்சியும் வாய்ந்த இரத்தின மாலையின் கைவிரல்களைத் தன் பாதங்களின் மேல் உணர்ந்தான் அவன். வாதிடுவதில் இருந்த உறுதி வணங்குவதிலும் இருந்ததைக் கண்டு ஒரு கணம் அவன் அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தயங்கினான். தன்னுடைய வார்த்தைகளுக்குப் பதில் வார்த்தைகள் சொல்லி உடனே குத்திக்காட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் அவள் இப்படிப் பேசியிருந்தாலும், இப்படிப் பேசுவதற்கு முன் அவள் தனக்காகச் சாதித்துக் கொண்டு வந்திருந்த சாதனைகளை அவனும் மதித்தே ஆக வேண்டியிருந்தது. சாதனைகள் மறுக்க முடியாமல் இருந்தன.

இறுதியில் வெற்றி பெற்றது அவள்தான். கால்களைப் பற்றிக்கொண்டு, அவனிடம் மன்றாடி அவன் அங்கிருந்து வெளியேற முடியாதபடி தடுத்துவிட்டாள் அவள். ஒரு கணிகையிடம் இருந்தே தீரவேண்டிய திறமைகள் அவளிடம் குறைவின்றி இருப்பதை இப்போது அவனால் நன்றாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

பிறரை மயக்குவதும் மனத்தை மாற்றுவதும், வசப் படுத்திக் கொள்வதும், ஆண் பிள்ளையின் பிடிவாதங்களை வெல்வதுமே ஒரு கணிகையின் திறமைகளானால் அவை அவளிடமும் இருந்தன.

தன்னை அறியாமலே தான் அவளிடம் மயங்கியிருப்பதும், மாறியிருப்பதும், வசப்பட்டிருப்பதும், பிடிவாதத்தைத் தோற்றிருப்பதும் மெல்ல மெல்ல அவனுக்கே புரியத் தொடங்கியது. ஒரு கணிகையின் மாளிகையில் ஒருநாள் தங்கியதிலேயே இப்படியாகுமானால், இன்னும் நாட்கணக்கில் இங்கே மறைந்து வசிக்க நேரிடுகையில் என்னென்ன ஆகுமோ என்று தயக்கமாக இருந்தது அவனுக்கு அன்று பிற்பகல் வரை இளையநம்பி அழகன் பெருமாளுடனோ, குறளனுடனோ கூடப் பேசவில்லை. அவர்களும் அவனிடம் எதையும் கேட்க வரவில்லை. இரத்தினமாலை மட்டும் அவனை அளவுக்கும் அதிகமாகவே விநயமும் விருப்பமும் தெரிய ஒடியாடி உபசரித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய முகமலர்ச்சி யையோ, பாராட்டையோ பெறாத ஒருதலைப் பட்சத்துக்குக் கைக்கிளைப் பிரியமாயிருந்தன அந்த உபசாரங்கள். அந்த கைக்கிளைப் பிரியத்தையே இரு பக்கத்து அன்பும் கலக்கும் பிரியமாக மாற்றலாம் என்ற நம்பிக்கை இரத்தினமாலைக்கு இருப்பதாகத் தோன்றியது. அவள் அயராமல் உபசரித்தாள்.

இதே நிலைமையில் சில தினங்கள் கழிந்தன. எவ்வளவு தான் உபசாரங்கள் இருந்தாலும் சிறை வைக்கப்பட்டு விட்டதுபோல் ஒரு மாளிகையின் உள்ளே இருக்க நேர்ந்தது குறையாகவே தோன்றியது அவனுக்கு.

இப்படி முடங்கிக் கிடப்பதற்காகவா திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தேன்? களப்பிரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாண்டிய நாட்டை மீட்டுக் கொள்வதற்குச் செயலாற்ற முடியாமல், யாழிசையையும் அபிநயங்களையும், சந்தன நறுமணத்தையும் அனுபவித்துக் கொண்டு, கூடல் மாநகரின் கணிகையர் வீதியில் ஒர் இல்லத்தில் இப்படி அகப்பட்டுப் போகவா என் தலையில் எழுதியிருக்கிறது? எதற்காக, யாருக்காக பயந்து நான் இங்கே அடைந்து கிடக்கவேண்டும்? ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. இந்த நாட்டுப் பண்பாடு, சாவை வாழ்வின் முடிவாக ஒப்புக் கொள்வதில்லை. ஒரு வாழ்வின் முடிவுதான் மரணம் என்றால், இன்னொரு வாழ்வின் தொடக்கம்தான் சாவு. உடலும் ஆன்மாவும் சேர்ந்து உலகை அனுபவிப்பது ஒருவித மான வாழ்க்கை என்றால், உடலை இழந்து ஆன்மாவினால் மட்டும் உலகை அனுபவிப்பதும்கூட மற்றொரு வகையாகத் தான் இருக்கவேண்டும் அப்படிப் பட்ட வாழ்வைக் களப்பிரர் கூட்டத்துக்குத் தரவேண்டும். முடியாவிட்டால் நானே அடையவேண்டும் என்று எண்ணினான் அவன். நாட்கள் கழியக் கழிய அந்த மாளிகையின் இசை ஒலி சலிப்பூட்டியது. பகலும் இரவும் அர்த்தமில்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. அழகன் பெருமாளும் அவனும் பேசுவதற்குப் பொதுவாக எந்த விஷயமும் இல்லை. அவனோடு எதைப் பேசினாலும் அது ஒரு விவாதத்துக்குத் தோற்றுவாயாகவே முடிவது வழக்கமாகி இருந்தது. குறளன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தனத்தை அரைத்துக் குவித்து அந்த மாளிகையையே மணக்கச் செய்து கொண்டிருந்தான். நாட்கள் பேச்சற்ற ஊமைகளாய் இயக்கமற்று, முடம் பட்ட பொழுதுகளை உடையவையாய்க் கழிந்து கொண்டிருந்தன. ஒருநாள் அந்த மாளிகையின் மற்றொரு பகுதியில் அடுக்கியிருந்த தமிழ் ஏட்டுச் சுவடிகளை அவனுக்குக் காண்பித்தாள் இரத்தின மாலை. பழந்தமிழ் இலக்கியங்கள் அடங்கிய அந்தச் சுவடிகளைப் பார்த்ததும் அவனுக்கு நான்மாடக்கூடல் நகரத்தின் புகழ்பெற்ற தமிழ்ச் சங்கம் நினைவு வந்தது. களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும், தமிழ்ப் புலவர்களும், தமிழ் நாகரிகமும், தமிழ்ச் சங்கமும் பொலிவுடனோ, புகழுடனோ இராதென்று தானே கணித்துக்கொள்ள முடிந்தாலும் கோநகரிலேயே வாழும் கணிகை இரத்தினமாலையிடம் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளக் கருதி அவளை வினவினான் இளையநம்பி:

களப்பிரர் ஆட்சியில் தமிழ்ச் சங்கத்தாரும், சங்கமும், புலவர்களும் என்ன ஆனார்கள்? நான் கோநகருக்கு வந்த பின்பு உன்னிடமோ, அழகன் பெருமாளிடமோ சங்கத்தைப் பற்றியும் அதன் புகழ்பெற்ற புலவர்களைப் பற்றியும் இதுவரை இங்கே எதுவுமே கேள்விப்படவில்லை!”

எதாவது இருந்தால் அல்லவா கேள்விப்படுவதற்கு? கபாடபுரத்திலும், தென் மதுரையிலும் இருந்த புகழ் பெற்ற தமிழ்ச்சங்கங்களை எல்லாம் கடல்கோள் அழித்தது என்றால், இதைக் களப்பிரர் ஆட்சியே அழித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு புலவர்கள் அமர்ந்திருந்த மண்டபங்களில் களப்பிரர்கள் இப்போது தங்கள் குதிரைகளைக் கட்டி இருக்கிறார்கள். ஏடுகளும், சுவடிகளும் குவித்திருந்த இடங்களில் எல்லாம் வாள்களையும் வேல்களையும் குவித்து விட்டார்கள். ஒலைகளில் எழுத்தாணிகள் கீறிய ஒலிகள் கேட்ட இடமெல்லாம் பாலிமொழி இன்று ஒலிக்கத் தொடங்கி விட்டது.”

ஆயிரங்காலத்து மொழி அழியும்போது அதை ஒட்டி வளர்ந்த எல்லா நாகரிகமும் நலியத்தான் வேண்டும் போலிருக்கிறது.”

 

நலிந்தாலும், வளர்ந்தாலும் அது எதிர்காலத்திற்கு வரலாறு ஆகிறது. தமிழ் நாகரிக வரலாற்றில் தங்கள் காலத்தின் அடிமை முத்திரையாகக் களப்பிரர்கள் இருளைப் பூசியிருக்கிறார்கள். ”

இரத்தினமாலை இருளை எப்போதும் நான் முடிந்த முடிவாக ஒப்புக்கொண்டு ஏற்பதில்லை. ஒவ்வோர் இருட்டுக்குப் பின்பும் ஒரு வைகறை உண்டு என்று திடமாக நம்புகிறவன் நான்.”

நீங்கள் மட்டு மின்றி எல்லாருமே அப்படித்தான் நம்புகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக வெளியே இரவும் பகலும் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைக் கூட அறிய முடியாமல் நாம் இங்கே முடங்க நேரிட்டதே ? யாரிடமிருந்தும் எந்தச் செய்தியும் தெரியவில்லை. காரி, கழற்சிங்கன், சாத்தன், தேனூர் மாந்திரீகன், செங்கணான் ஆகிய நம் நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரிய வில்லையே?” என்று கேட்டுக்கொண்டே சற்று முன்பு அங்கு வந்திருந்த அழகன் பெருமாள் காரியக் கவலையோடு பேசினான். அந்த மாளிகையில் கழிந்த ஊமை நாட்களில் முதன் முதலாக அழகன் பெருமாள் தன்னிடம் மெளனத்தைக் கலைத்துக்கொண்டு பேசவந்திருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. சில நாட்களாக அவனுக்குத் தன் மீது ஏற்பட்டிருந்த மனத்தாங்கல் மாறித் தன்னோடு மேலே என்ன செய்வது என்பது பற்றிப் பேச முன்வரும் நிலைமை இயல்பாக ஏற்பட்டிருப்பதை இளையநம்பி வரவேற்றான் என்றாலும் அழகன் பெருமாளின் வினா அவனுள் கோபமூட்டியது:

காரி, கழற்சிங்கன் முதலிய நண்பர்களைத் தேடவும், உயிருக்கு ஆபத்தின்றிப் பாதுகாக்கவும் நாம் விரைந்து ஆவன செய்யவேண்டும் என்று கோட்டைக் கதவுகள் அடைக்கப் பட்டபோதிலிருந்து நான் விடாமல் உன்னிடம் வற்புறுத்தி வருகிறேன் அழகன் பெருமாள். அப்போதிருந்து நீதான் அவர்களைப் பற்றிக் கவலைக்கு இடமின்றி மறுமொழி கூறியிருக்கிறாய். ‘அவர்கள் எவ்விதத்திலும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பிவந்து விடுவார்கள் - என்று உறுதியளித்திருக்கிறாய். உன்னுடைய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை எனக்கே வியப்பை அளித்திருக்கிறது. இப்போதோ நீயே என்னிடம் வந்து வேறுவிதமாகக் கேட்கிறாய். நான் என்ன மறுமொழி கூறுவது உனக்கு?’’ -என்று சிறிது சினத்துடனேயே அழகன் பெருமாளைக் கேட்டான் இளையநம்பி.

 

28. கபால மோட்சம்

 

அழகன் பெருமாள் மீண்டும் அதையேதான் சொன்னான். ஆனால், கோபப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் சொன்னான்: “காரி, கழற்சிங்கன் முதலிய நால்வரும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பி வந்து சேரக் கூடியவர்கள் என்பதைப் பொறுத்து இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நகரத்தின் பரபரப்பான சூழ்நிலைக்கேற்ப அவர்கள் முயற்சியையும் மீறி ஏதாவது நடந்திருக்குமோ என்றுதான் இப்போது சந்தேகப்படுகிறேன்.”

இளையநம்பி இதற்கு மறுமொழி கூறவில்லை. புன்முறுவல் பூத்தான். சிறிது நேரம் பொறுத்து அழகன் பெருமாளை நோக்கி,

உன்னிடம் நம்பிக்கையும் இருக்கிறது! சந்தேகமும் இருக்கிறது! இந்த இரண்டில் எது எப்போது இருக்கிறது என்பதைத்தான் உன்னோடு பழகுகிறவர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றான் அவன்.

சொல்லப் போனால் வாழ்க்கையே இந்த இரண்டிற் கும் நடுவில் எங்கோதான் இருக்கிறது - என்று அவர்களுடைய உரையாடலில் குறுக்கிட்டாள் இரத்தினமாலை. அவளுடைய இந்த வாக்கியம் தன்னையும் அழகன் பெருமாளையும் ஒன்று சேர்த்து வைக்கும் தொனி உடையதாக இருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. அவன் உள்ளுற நகைத்துக் கொண்டான். மதுராபதி வித்தகரின் பயிற்சிக்குப் பின் ஓர் இளம் கணிகையும் கூடத் தேர்ந்த அரச தந்திரியா யிருப்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. அதேசமயத்தில் முழுவேகத்துடனே குத்திக் காட்டுவது போலவோ சாடுவது போலவோ ஏதாவது பேசினால்தான் அங்கிருந்து கோபித்துக் கொண்டு போய் விடக் கூடும் என்ற எச்சரிக்கையும் அவளுடைய பேச்சுக்களில் இப்போது கலந்திருப்பதை அவன் உணர முடிந்தது. ‘இவ்வளவு பெரிய சாகஸத்துக்குரியவளை உணர்வின் வசப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ள இருந்தோமே - என்று இப்போது, அவனுக்கே வருத்தமாகவும் வெட்கமாகவும்கூட இருந்தது. கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்ட தினத்தன்று அரண்மனைக்குப் போய் விட்டு வந்தபின், இரத்தினமாலை மறுபடி அரண்மனைக்குப் போகாததால் அரண்மனை ஒற்றர்கள் மூலமும் புதிதாக எதுவும் தெரியவில்லை. உபவனத்து முனையிலும், வெள்ளியம்பல முனையிலும் யாரும் புகுந்து புறப்பட்டு வர முடியாததாலோ என்னவோ நிலவறை மூலமாகவும் செய்திகள் தெரியவில்லை. அந்த மாளிகையில் அவர்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. இப்படியே பல நாட்கள் கழிந்தன.

உணவு முடிந்த பின் அன்றிரவு முதல் முறையாக அழகன் பெருமாளும், இளையநம்பியும், இரத்தினமாலையும் மாளிகையின் நடுக்கூடத்தில் அமர்ந்து வட்டு ஆடிக் கொண்டிருந்தனர். குறளன் சந்தனம் அறைக்கும் பகுதிக்கு உறங்கப் போயிருந்தான். விளையாடத் தொடங்கியவர்கள் இரவு நெடு நேரமாகியும் நிறுத்தாமல், ஆடிக் கொண் டிருந்தார்கள். நள்ளிரவுக்கு மேலும் ஆகிவிட்டது. விளையாட்டில் தொடர்ந்து இரத்தின மாலையின் காய்களே வென்று கொண்டிருந்தன. 

ஆட்டத்தின் காய்கள்கூட அழகிய பெண்களிடம் மயங்கி விடுகின்றன என்றான் இளையநம்பி.

ஆனால் ஆடுபவர்கள் ஒருபோதும் மயங்கு வதில்லை என்று உடனே மறுமொழி கூறிவிட்டு, அவனை ஒரக் கண்களால் பார்த்தாள் இரத்தினமாலை. அழகன் பெருமாள் இதைக் கேட்டுச் சிரித்தான். அப்போது யாரோ ஓடிவரும் ஓசை கேட்டு விளையாட்டில் கவனமாயிருந்த மூவருமே திடுக்கிட்டுத் தலைநிமிர்ந்தனர்.

கைகால் பதறி நடுங்கக் குறளன் தூக்கம் கலைந்து சிவந்த கண்களோடு அவர்கள் எதிரே வந்து நின்றான்.

உடனே பேசுவதற்குச் சொற்கள் வராமல் சந்தனம் அறைக்கும் பகுதியைச் சுட்டிக்காட்டிப் பயத்தோடு வார்த்தைகளை அரற்றினான் அவன். உடனே விளையாட்டை நிறுத்தி விட்டு மூவருமே எழுந்து விட்டனர். அவனோடு சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றதும் அங்கே நடுவாக இருந்த சந்தனக் கல்லருகே காதை வைத்து உற்றுக் கேட்டு விட்டு, அழகன் பெருமாளையும் கீழே படுத்தாற்போல் சாய்ந்து அதைக் கேட்கச் சொல்லிச் சைகை செய்தான் குறளன். நால்வரிடையேயும் எதையோ எதிர்பார்க்கும் பேச்சற்ற மெளனம் வந்து சூழ்ந்தது. அழகன் பெருமாள் சந்தனக் கல்லை ஒட்டிச் செவியைச் சாய்த்துக் கேட்டபின் இளையநம்பியையும் அப்படியே கேட்குமாறு குறிப்புக் காட்டினான். அவனும் அவ்வாறே செய்தான். பின்பு இரத்தினமாலையும் கீழ்ப்பக்கமாகக் குனிந்து உற்றுக் கேட்டாள்.

கீழே நிலவறைப் படிகளில் யாரோ நடக்கும் ஒலி கேட்டது. அப்படி நடப்பவர் வேண்டியவராகவோ, வழிதெரிந்தவராகவோ இருந்தால் அடையாளமாகக் கல்லைத் தூக்கிக் கொண்டு மேலே வந்துவிட முடியும். அப்படி வராமல் கீழேயே நடப்பதிலிருந்து அந்நியன் யாரேனும் வந்து விட்டானோ என்ற பயம் அவர்களைச் சூழ்ந்தது. ஒருவனுடைய காலடி ஓசைதான் கேட்கிறது என்றாலும் பின்னால் வரிசையாகப் பல பூத பயங்கரப் படை வீரர்கள் நிற்கலாமோ என்று அழகன் பெருமாளின் கற்பனையில் ஒரு சந்தேகம் மருட்டியது. பல நாட்களாக அந்த வழியின் மூலம் அங்கே யாரும் வராததாலும், வந்திருப்பவரும் உடனே அடையாளமாக மேல் வாயிலின் மூடுகல்லைத் தூக்காமல் கீழே படிகளிலேயே தடம் தெரியாமல் நடமாடுவதாலும் அவர்கள் சந்தேகப்படுவதற்கும், தயங்குவதற்கும், பயப்படுவதற்கும் நிறைய நியாயமிருந்தது. ஒரு தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டிய நிலையில் அப்போது அவர்கள் இருந்தார்கள். வருகிறவன் அந்நியனாயிருந்து அவன் இந்த வழியாக வெளியேறி இப்படி ஒரு வழி இருப்பதைக் கண்டு உயிர் பிழைத்து விடுவானாயின் அப்புறம் தாங்கள் உயிர் பிழைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். மின்வெட்டும் நேரத்தில் இளையநம்பி ஒரு திட்டமிட்டான். அந்த அறையின் ஒரு மூலையில் கருமரத்தில் செய்த இரும்புப் பூண்பிடித்த உலக்கைகள் இரண்டு இருந்தன. அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளும்படி அழகன் பெருமாளுக்குக் குறிப்புக் காட்டிவிட்டு இன்னொன்றைத் தான் கையில் எடுத்துக் கொண்டு சந்தனக்கல்லை மேற்புறம் இருந்தபடியே மெல்லத் தூக்கி நகர்த்தும்படி குறுளனுக்கும் இரத்தின மாலைக்கும் சைகை செய்தான் இளையநம்பி. அவன் திட்டப்படி வந்திருப்பவனோ, வந்திருப்பவர்களோ எவ்விதமாகவும் உயிர் தப்பமுடியாது. இந்த வழி கண்டுபிடிக்கப்பட்டுக் களப்பிரர்களிடம் அகப்பட்டு விட்டால் தங்களுடைய எல்லா வழிகளும் அடைப்பட்டு விடும் என்ற இறுதிப் பாதுகாப்பு உணர்வின் எல்லையில் அவர்கள் அப்போது மிக எச்சரிக்கையோடு இருந்தார்கள். கீழே இருப்பவன் ஏதோ வலியில் அரற்றுவது போன்ற தீன ஒலிகளுடன் மூச்சு இரைக்க இரைக்க நடந்து கொண்டிருப்பதைக் கூட அவர்கள் வெளிப்புறம் கேட்க முடிந்தது. வந்திருப்பவன் நிலவறை வழிக்கு முற்றிலும் புதியவனாக இருந்தாலொழிய இப்படி மூச்சு இரைக்க நேருவது சாத்தியமில்லை என்றும் அநுமானம் செய்தார்கள் மேலே இருந்தவர்கள்.

எதிரெதிர்ப் பக்கங்களில் உலக்கைகளோடு அழகன் பெருமாளும், இளையநம்பியும் நின்று கொண்டபின் மேற்புறம் மூடியிருந்த சந்தனக்கல்லை மெல்ல நகர்த்தி எடுத்தார்கள் குறளனும் இரத்தினமாலையும். ஓரிரு கணங்கள் மயான அமைதி நிலவியது அங்கே. கீழே நிலவறைத் துவாரத்தின் இருளிலிருந்து யாரும் மேலே வரவில்லை. ஆனால் உட்புறம் மூச்சுவிடுகிற ஒலி கோரமாகக் கேட்டது. மேற்பக்கம் கைகளில் உலக்கைகளோடு நின்ற இருவரும் இந்த வழியாக வெளியே நீட்டப்படும் தலைக்குக் கபால மோட்சம் அளிப்பதென்ற உறுதியுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோதே கீழ்ப்புறமிருந்து வெண்மையாக ஏதோ மேல் நோக்கி எழுவது தெரிந்தது. வந்திருக்கும் மனிதனின் தலைப்பாகை என்று அதை அவர்கள் நினைத்தனர். ஆனால்... என்ன கோரம் பச்சை மூங்கில் பிரம்பில் ஒரு பயங்கரமான கபாலமே மெல்ல மெல்ல மேலே வந்தது. எதிர்பாராதவிதமாக மேலே கழியில் கோத்த மண்டை ஒடு வரவே முந்திக்கொண்டு அதை அடிப்பதற்கு ஓங்கியிருந்த உலக்கைகள் திடுக்கிட்டுப் பின் வாங்கின. இருட்பிலத்திலிருந்து மேல் நோக்கி வந்து ஆடும் அந்தக் கபாலம் அவர் களை நோக்கிக் கோரமாக நகைப்பது போலிருந்தது. கீழே அந்த மூங்கில் பிரம்பைப் பிடித்திருந்தவனின் கை நடுங்கியதாலோ என்னவோ மேலே அந்தக் கபாலமும் நடுங்கி ஆடியது. பயத்தினால் இரத்தினமாலை இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள். எல்லாருக்கும் மேனி புல்லரித்திருந்தது.

தொடர்ந்து வேறெதுவும் நிகழாமல் அந்தக் கபாலமே கழியில் ஆடிக்கொண்டிருக்கவே அழகன் பெருமாள், “ஒரு தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு வா என்று மெல்லிய குரலில் குறளனிடம் கூறினான். குறளன் உள்ளே விரைந்தான். சில கணங்களில் தீப்பந்தத்தோடு அவன் திரும்பி வந்தான்.

 

29. தேனூர் மாந்திரிகன்

தன் கையிலிருந்த இரும்பு உலக்கையை குறளனிடம் கொடுத்து விட்டுத் தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டு நிலவறைக்குள்ளே சிறிது தொலைவு ஒளி தெரியுமாறு அதை கீழே தணித்துப் பிடித்தான் இளைய நம்பி. அதே சமயத்தில்இந்தக் கபாலத்தையும் கழியையும் பற்றி இழுத்து மேலே எறி என்று இரத்தினமாலையிடம் கூறினான் அழகன்பெருமாள். அந்தக் கபாலத்தைக் கைகளாலே தொடுவதற்குக் கூசி அருவருப்புக் கொண்டிருந்தாலும் அவள் நடுங்கும் கைகளால் அதைக் கழியோடு பற்றி இழுத்தாள். கீழே அதைப் பிடித்துக் கொண்டிருந்தவன் அழுத்திப் பிடித்துக் கொள்ளாததாலோ அல்லது அவன் கைகள் தளர்ந்திருந்ததாலோ இரத்தினமாலை பற்றி இழுத்தவுடன் அந்தக் கழியும் கபாலமும் மேலே வந்து விழுந்து விட்டன. ஆனால், அதேசமயம் கீழே நிலவறையில் அதைப் பிடித்திருந்தவன் ஈனக்குரலில் வலி எடுத்து முனகுவது போல் கேட்கவே அவர்கள் நால்வருமே ஏக காலத்தில் வியப்படைந்து விட்டனர்.

உடனே அழகன் பெருமாளுக்கு முற்றிலும் புதிய தொரு சந்தேகம் எழுந்தது. அவன் தன் கையிலிருந்த உலக்கையை மூலையில் வைத்து விட்டுத் துணிந்து கீழே நிலவறைக்குள் இறங்கினான். கீழே இறங்கிக் கொண்டு மேற்புறம் இளையநம்பியிடம் இருந்த தீப்பந்தத்தைக் கை நீட்டி வாங்கிப் படிமேல் தளர்ந்து கிடந்தவனைப் பார்த்ததும், “ஐயோ! இதென்ன கோரம்?- உனக்கு இது எப்படி நேர்ந்தது செங்கணான்?” என்று கதறாத குறையாக உருகிய குரலில் வினாவினான் அழகன்பெருமாள். செங்கணானை மேலே தூக்கும் முயற்சிகள் உடன் மேற்கொள்ளப்பட்டன. நிலவறை வழியின் ஏதோ ஒரு முனையிலிருந்து அதைக் கண்டுபிடித்து அந்த மாளிகையைக் கைப்பற்றுவதற்காகக் களப் பிரர்கள் பூத பயங்கரப் படை வீரர்கள் சிலரை அனுப்பியிருக்கக் கூடுமோ என்ற பயத்துடனேயே அந்த விநாடி வரை கவலைப்பட்டுக் காரியங்களைச் செய்த அவர்களுக்கு, இப் போது படவேண்டிய கவலையும் வருத்தமும் வேறாக இருந்தது. தோளிலும் முன் கைகளிலும் இரணகளமாய் இரத் தம் பீறிட்டுப் பாயக் காயமுற்று வந்து சேர்ந்திருந்த தேனூர் மாந்திரீகன் செங்கணானைத் தன் கைகளால் மேலே தூக்கினான் அழகன்பெருமாள். இளையநம்பி மேற்புறமிருந்து கைத்தாங்கலாகச் செங்கணானின் உடலை வாங்கினான்.

தேனுர் மாந்திரீகனுக்கு என்ன நேர்ந்தது? அவன் ஏன் இப்படிப் படுகாயமுற்று நிலவறை வழியே வந்து இங்கே விழுந்தான்?” என்பதை எல்லாம் அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அவன் அப்போது இல்லை. பேசக்கூடச் சக்தியற்றுச் சோர்ந்து போயிருந்தான் அவன். மேலே அவனைத் தூக்கியதும் நிலவறை மூடப்பட்டது.

இவ்வளவு ஆபத்தான நிலையிலும் தேனூர் மாந்திரீகன் மூங்கில் கழியில் கபாலத்தைக் கோத்து மேல் நீட்டியது ஏன்?’ என்றும் அவர்களுக்குப் புரியவில்லை.

உடனே காயங்களுக்கு மருந்திட்டு அவனைத் தேற்றும் முயற்சிகளை அவர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டியிருந்தது. மருந்தரைப்பதற்கும், தைலம் காய்ச்சிக் கொண்டு வரவும் பறந்தாள் இரத்தினமாலை. அவளுடைய சுறுசுறுப்பு இளையநம்பிக்கு வியப்பை அளித்தது. பெண் ஒர் அழகு என்றால் அவளுக்குக் குறிப்பறியும் தன்மையும் விரைவும் சுறுசுறுப்பும் இன்னோர் அழகு. அழகுக்கு அழகு செய்வதுபோல் இவை இரண்டுமே இரத்தின மாலையிடம் அமைந்திருந்தன.

தவிட்டைத் துணியில் கட்டிக் கொதிக்கும் வெந்நீரில் நனைத்துச் செங்கணானின் உடலில் ஒத்தடம் கொடுத்தார்கள் அழகன் பெருமாளும் இளையநம்பியும். செங்கணான் ஏதோ நலிந்த குரலில் சொல்ல முயன்றான். அப்போதிருந்த நிலையில் அவன் பேசுவது நல்லதில்லை என்று கருதிய இளையநம்பி, ‘அமைதியாயிருக்குமாறு அவனுக்குச் சைகை செய்தான்.

இப்போது நீயிருக்கும் தளர்ந்த நிலையில் எதுவும் பேசவேண்டாம். பின்னால் நாங்களே எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம் - என்று அவனிடம் கூறி அவனை அமைதியடையச் செய்தார்கள் அவர்கள். செங்கணான் முற்றிலும் எதிர்பாராதவிதமான இந்த நிலையில் வந்து சேர்ந்ததால் அன்றிரவு அவர்கள் உறக்கத்தை இழந்து அவனுக்குப் பணி விடை செய்ய நேர்ந்தது. அந்தப் பணி விடைகளால் அவர்களில் யாரும் சோர்வடையவில்லை.

இந்தப் பணி இழிந்தது. இந்தப் பணி உயர்ந்தது என்று பாராமல் கணிகை இரத்தினமாலை, தன் பொன்னுடலும், பூங்கைகளும் வருந்த அன்றிரவு உழைத்ததைப் பார்த்தபோது இளையநம்பியின் மனம் அவளிடம் கருணைமயமாய் நெகிழ்ந்தது. இளகி இணைந்தது.

கோநகரில் கணிகையரின் சிரிப்புக்கும் அன்புக்கும் கூட விலை உண்டு என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் கண் காணவே என்ன கேள்விப்பட்டிருந்தானோ அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. அந்த மாளிகையில் தான் தங்கியிருந்த நாட்களில் காரணமின்றி அந்த இளம் கணிகையைச் சந்திக்கும் முன்பே, அவள் மேல் தன் மனம் கொண்டிருந்த வெறுப்பு மாறி நம்பிக்கை வரப் பெற்றிருந்தாலும் செங்கணானுக்கு உதவிய இரவில் இளையநம்பிக்கு அவள் மேல் இனம் புரியாத பாசமே உண்டாகியிருந்தது. இவளைச் சந்திக்கும் முன் ஒரு குறும்புக்காக இவளைக் குறைத்துப் பேசிய தன்னுடைய சொற்களைக் கேட்ட போதெல்லாம் அழகன் பெருமாள் ஏன் உடனே சினந்து சீறினான் என்பது இப்போது இளையநம்பிக்கு நன்றாகப் புரிந்தது.

ஆண்கள் செய்யவேண்டிய காரியங்களையே இங்கே பெண்கள்தான் செய்தாக வேண்டியிருக்கிறது - என்று இரத்தினமாலை தன்னைக் குத்திக்காட்டிப் பேசியபோது கூட அவளைத் தான் புரிந்து கொள்ளாத காரணத்தால், ‘அளவு மீறி அவளிடம் சினம் கொண்டு விட்டோமோ -என்று இப்போது எண்ணிக் கொண்டான் அவன். புண்பட்டு வந்திருக்கும் ஒருவனிடம் அவள் காட்டிய பரிவு, அவளிடம் அவன் பரிவு கொள்ளச் செய்வதாயிருந்தது; மிகவும் கனிவு கொள்ள வைப்பதாயிருந்தது. 

மறுநாள் விடிந்ததும் தேனூர் மாந்திரீகன் ஒரளவு தெளிவடைந்திருந்தான். அவனிடமிருந்து என்னென்ன செய்திகள் தெரியப் போகின்றன என்று அறியும் ஆவலில் அவர்கள் காத்திருந்தனர். ஓரளவு அவன் பேச முடியும் என்ற அளவிற்கு நிலைமை தேறியிருந்ததை அறிந்து அழகன் பெருமாள் அவனைக் கேட்டான்.

செங்கணான் உனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது? எவரால் ஏற்பட்டது? உன்னோடிருந்த காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகியோர் என்ன ஆனார்கள்?”

எனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதை அப்புறம் சொல்கிறேன்... காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகிய மூவரும் இங்கே வரவில்லையா? அவர்கள் மூவரும் இங்கே வந்து உங்களோடு பத்திரமாக இருக்கிறார்கள். என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? நாங்கள் நால்வருமாக உபவனத்திலிருந்து கோட்டைக்குள் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று ஆலவாய்ப் பகுதியில் நான் தனியாகப் பிரிந்து சென்றேன். அவர்கள் மூவரும் என்னிடம் விடைபெற்று வெள்ளியம்பலப் பகுதிக்குப் போனார்கள். நண்பகலுக்குச் சிறிது நேரம் இருக்கும்போது இன்னும் சிறிது நாழிகைகளில் கோட்டைக் கதவுகள் மூடப்படலாம் என்பது போன்ற பரபரப்பு ஆலவாய்ப் பகுதியிலேயே தெரிந்தது. யாத்ரீகர்கள் மூட்டை முடிச்சுகளோடு ஓடினர். பூத பயங்கரப் படை அங்கங்கே புகுந்து நெருக்கத் தலைபட்டது. உடனே ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப் போகிறது என்று புரிந்து கொண்டு நான் ஆலவாய்ப் பகுதியிலிருந்தே கிழக்குக் கோட்டை வாயிலுக்கு விரைந்து அகநகரிலிருந்து வெளியேறி விட்டேன். கோட்டைக்கு வெளியேயும் கடுமையான பாது காப்பு இருந்தது. என்னைச் சில பூத பயங்கரப்படை வீரர்கள் பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்களோ என்ற ஐயப்பாடு இருந்ததனால் உபவனத்துக்குத் திரும்பாமல் நான் நேரே தேனுருக்குச் சென்றேன்.

தேனூரிலும் என்னை அபாயம் சூழ்ந்திருந்தது. சுற்றுப்புறச் சிற்றுரர்களிலும் கோநகரின் உள்ளேயும் ஆயிரக்கணக்கானவர்கள் களப்பிரர் ஆட்சியை எதிர்த்துத் திடீரென்று கலகம் புரியக்கூடும் என்ற அநுமானத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கடுமையான பாதுகாப்புகளைச் செய்துவிட்டார்கள். நான் தேனூரில் இருந்து பல நாட்கள் வெளியேறவே முடியாமல் போயிற்று. கடைசியில் நேற்று முன் தினம் மாலை தேனுர் மயானத்தின் வன்னி மரத்தருகே தன் மனைவிக்குப் பேய் ஒட்டுவதற்காக ஒரு மறவன் வந்து கூப்பிட்டான். அதுதான் நல்ல சமயமென்று அந்த மறவனுடைய வண்டியில் மறைந்து தப்பி மயானத்துக்குப் போனேன். அன்றிரவு, மயானத்திலிருந்து நான் திரும்பவே இல்லை. ஊருக்குள்ளும் சுற்றுப்புறங்களிலும் களப்பிரர்கள் என் தலையைச் சீவி எறியக் காத்திருப்பது எனக்குப் புரிந்தது. மயானத்தில் இருந்த வன்னி மண்டபத்துப் புதரிலேயே பதுங்கியிருந்தேன். சுடுகாட்டு நரிகள் என் மேல் படை எடுத்தன. பசிச் சோர்வில் நான் சக்தியற்றிருந்தேன். நரிகளை நான் வெல்ல முடியவில்லை. அவற்றின் பசிக்கு நான் இரையாகி முடிந்துவிடாமல் தப்ப முயன்றும் நான் முழு வெற்றி அடையவில்லை.

தேனுாரிலிருந்து முன்னிரவில் புறப்பட்டு வையையின் மறுகரையில் வந்து நீந்தியே இக்கரைக்கு வந்தால் இங்கே உபவனத்திலும் பூத பயங்கரப் படை இருந்தது. பேய் ஒட்டுவதற்குக் கொண்டு வந்திருந்த என் சாதனங்களைப் பயன்படுத்தி மிகத் தந்திரமாக நடுஇரவுக்கு மேல்தான் நிலவரை வழியில் நான் இறங்க முடிந்தது. நரி கடித்த காயங்களின் வலியும், கடும் பசியும் என்னை வாட்டின. ஏறக்குறைய முக்காலும் செத்துவிட்டது போன்ற நிலையில் தான் நிலவறையில் நான் நடக்க முடிந்தது. இங்கே வந்த பின்பும் எனக்கிருந்த பயத்தில் இந்த மாளிகையும் களப்பிரர் வசப்பட்டிருக்குமோ என்று அஞ்சியே முதலில் மூங்கிற் கழியில் என் கைவசமிருந்த கபாலத்தைக் கோத்து நீட்டினேன். குரல் கொடுத்து நிலைமை அறியவும் அஞ்சினேன். நல்ல வேளையாக நீங்கள் என்னைக் காப்பாற்றினர்கள். சுடுகாட்டு நரிகள் என்னைக் கிழித்துப் பாதி கொன்று விட்டன.”

அட பாவமே நிலைமைகள் இவ்வளவு கெட்டுப் போயிருப்பதால்தான் எங்கிருந்தும் எதுவுமே நமக்குத் தெரியவில்லை. மோகூரில் பெரியவர் எப்படி இருக்கிறாரென்று தேனூரில் ஏதாவது கேள்விப்பட்டாயா நீ?” என்று இளையநம்பி கேட்டபோதுஇல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் செங்கணான். அவர்கள் யாவரும் கவலையில் ஆழ்ந்தனர். அந்த நிலையில் இரத்தின மாலையே மீண்டும் உதவுவதற்கு முன்வந்தாள். இளைய நம்பியின் கண்கள் கனிவுடன் அவளை நோக்கின. அந்தக் கனிவை அங்கீகரித்துக் கொள்வதுபோல் அவளும் அவனைப் பார்த்தாள். இருவர் கண்களும் குறிப்பினாற் பேசின.

 

30. சாகஸப் பேச்சு

 

நீங்கள் ஒப்புக் கொண்டால் இப்போதும்கூட நான் ஒர் உதவி செய்யமுடியும்!... இன்று மாலையிலேயே இருந்த வளமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபாட்டைச் செய்தபின் உங்களுக்காக யானைப் பாகன் அந்துவனைக் கண்டுவர முடியும்.”

இப்போதுள்ள நிலையில் அது அபாயகரமானது - என்றான் அழகன் பெருமாள்.

நீண்ட நாட்களாக இங்கே வராததிலிருந்து அந்துவனைப் பற்றியே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. அவனுக்கும் ஏதாவது நேர்ந்திருக்குமோ என்னவோ?” என்று ஐயத்தோடு கூறினான் இளைய நம்பி. அதைக் கேட்டுக் கலீரென்று சிரித்தாள் இரத்தினமாலை. இளையநம்பி உடனே கடுமையாக அவளை நோக்கிக் கேட்டான்:

ஏன் சிரிக்கிறாய்?”

ஒருகணம் தயங்கியபின் பருகிவிடுவது போலவும், ஆவல் நிறைந்து ததும்பும் தன் விழிகளின் ஓரங்களால் அவனுடைய முகத்தைப் பார்க்க முயன்றபடியே-

அந்துவனைப் பற்றி நாம் இங்கிருந்து கவலைப் படுவது போல் நம்மைப் பற்றி அவனும் அங்கிருந்து கவலைப்படலாம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது என்றாள்.

அப்படியானால் அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடும் என்று நினைக்கவும் அவசியமில்லை என்கிறாயா நீ?”

சந்தேகமென்ன? நான் இப்போது சென்றாலும் யானைக் கொட்டாரத்தில் அவனைக் காண முடியும்!”

தெய்வ வழிபாட்டுக்குப் போகிற நீ என்ன காரணத்தோடு யானைக் கொட்டாரத்தில் போய் அவனிடம் பேசிக் கொண்டு நிற்க முடியும்?”

அது நான் படவேண்டிய கவலை. என்னால் முடியும் என்பதால்தான் நான் கவலைப்படாமல் போய்த் திரும்ப முன் வருகிறேன். ”

இப்படி வெடுக்கென்று மறுமொழி கூறும்போதெல்லாம்தான் உன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது இரத்தினமாலை!”

ஆகா! நிறையக் கோபித்துக் கொள்ளுங்கள். எனக்கும் அது பிடிக்கிறது. திருக்கானப்பேர்க்காரர்கள் முகங்களில் புன்சிரிப்பைவிடக் கோபம்தான் அழகாக இருக்கும் போல் தோன்றுகிறது.”

அப்படியானால் என் கோபத்திற்கு நீ பயப்பட மாட்டாய்! அல்லவா?”

ஆண்களின் கோபத்தை எப்படி வெற்றிகொள்வ தென்கிற இரகசியம் எனக்குத் தெரியும்?”

இதைச் சொல்லும்போது அவள் குரலில் தொனித்த இங்கிதமும் முகத்தில் ஒளிர்ந்த நாணமும் கண்களிலும் இதழ்களிலும் தோன்றி மறைந்த முறுவலும் இளைய நம்பிக்குப் புரிந்தன. அவள் ஒரு தேர்ந்த மந்திரவாதியின் சாகஸத்தோடு அவனை மயக்கினாள் அப்போது.

காரணம் புரியாத வெறுப்போடு தொடங்கிய ஒரு நட்பு இப்போது இப்படிக் காரணம் புரியாத மயக்கத்தில் ஆழ்த்தத் தொடங்கியிருந்தது. அவன் மாறியிருந்தான். அவள் மாற்றியிருந்தாள். அவன் அவளுடைய இதயத்தின் யாழ் ஒலியை இன்னும் நெருங்கிக் கேட்க முடியாதபடி அழகன் பெருமாளும், குறளனும், மாந்திரீகன் செங்கணானும் அருகில் இருந்தார்கள்.

 

ஆயிரம் பேர் அருகிலிருந்தாலும், புரிகிறவனுக்கு மட்டும் புரிய வைக்கும் நயமான வார்த்தைகளில் பேசும் சாகஸம் அந்த இளம் கணிகையிடம் இருந்தது. சொற்களைக் கவியின் நயத்தோடு தொடுத்துத் தொடுத்து அனுப்புகிற வித்தையை அவள் கற்றிருப்பது போல் தோன்றியது. மனத்தினால் தங்களுக்கு இடையே ஏதோ புரிவது போலவும் நெருங்குவது போலவும் உணர்ந்தான் இளையநம்பி. ஒரு வெறுப்பின் முடிவு இவ்வளவு பெரிய பிரியமா என்று நினைத்த வேளையில், தான் சுலபமாகத் தோற்றது எப்போது என்று அவனுக்கே புரியவில்லை. தோற்றிருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. வென்றவள் மேல் சீறவோ, சினம் கொள்ளவோ முடியாமல் இருந்ததுதான் ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. -

அன்று மாலை அவள் இருந்தவளமுடையார் கோவிலுக்குச் சென்றுவர அவர்கள் எல்லோரும் இணங்கினார்கள். அந்துவனைக் காணவும் அவனிடமிருந்து ஏதாவது தெரிந்தால் அதை அறிந்து வரவும் அவள் சென்று வருவதில் தவறில்லை என்றே இளையநம்பிக்கும் தோன்றியது இப்போது.

இரத்தினமாலை தன் வலது கையில் பூக் குடலையோடு பணிப்பெண் பின்தொடரப் புறப்பட்டபோது- “இருந்த வளமுடைய பெருமாளிடம் இன்று என்ன வரம் வேண்டுவதாக உத்தேசமோ?” - என்று அவளைக் கேட்டான் இளையநம்பி. அவள் அவனை ஏறிட்டுப் பார்த்து முக மலர்ந்தாள். பின்பு நிதானமாக மறுமொழி கூறினாள்:

நேற்றுவரைநாட்டைக் களப்பிரர்களிடமிருந்து காப்பாற்று என்று வேண்டுவதைத் தவிர வேறு சொந்த வரம் எதற்கும் என்னிடம் விருப்பமின்றி இருந்தது. இன்று அதற்கும் அதிகமாகச் சொந்த முறையிலும் கூட ஒருவரம் வேண்டலாம் என்று தோன்றுகிறது.”

இதன் அர்த்தத்தை உள்ளுற உணர்ந்து அவன் புன்னகை பூத்தான்.

பல்லக்கில் ஏறுவதற்கு முன் அவனை அவள் கேட்டாள்:

இன்றும் நான் திரும்பி வந்த பின்பு நீங்கள் என்னைக் கோபித்துக் கொள்வீர்கள். என் மாளிகையிலிருந்து உடனே வெளியேறி விடுவதாகப் பயமுறுத்துவீர்கள்.”

உனக்கு ஏன் மீண்டும் அப்படி ஒரு கற்பனை?”

கற்பனையில்லை - மெய்யாகவே நீங்கள் அப்படிக் கோபித்துக் கொண்டால்தான் நான் பாக்கியம் செய்தவளாவேன்...”

அது எப்படி?”

 

நீங்கள் கோபித்துக் கொண்டால்தான் இன்றும் உங்கள் பாதங்களை தீண்டிப் பொறுத்தருளும்படி வேண்டிக் கொள்ள நான் வாய்ப்புப் பெறுவேன். இல்லையானால் உங்களை நான் வேறெப்படி அருகில் நெருங்கவும் வணங்கவும் தீண்டவும் முடியும்?”

அவளுடைய இந்தச் சொற்கள் அவனை மிகவும் நெகிழச் செய்தன. ஒரு புதிய உணர்வின் சிலிர்ப்பில் இந்தச் சமர்ப்பணத்தை எப்படி எந்தச் சொற்களைக் கூறி உபசரித்துத் தனக்குள் ஏற்பதென்ற சிந்தனையில் ஓரிரு கணங்கள் அவனுக்குப் பொருத்தமான பதில்களே கிடைக்கவில்லை.

பல்லக்கில் ஏறுமுன் சாகஸமான சொற்களின் உரிமைக்காரியாகிய அவள் கூடச் சொற்களின் எல்லைக்கு அப்பால் போய் விழிகளில் நீர் மல்க இருப்பதை அவனும் கண்டான். அவளுடைய அந்தக் கண்ணிரைச் சொற்களால் உபசரிப்பதா, உணர்வினால் ஏற்பதா என முடிவு செய்யவே இயலாமல் சில கணங்கள் திகைத்தான் அவன்.

 

31. கனவும் நினைவும்

 

இரத்தினமாலையின் அந்த அன்பையும், விநயத்தையும் உடனே விரைந்து எதிர் கொண்டு உபசரிக்கும் பொருத்தமான பதங்களும், உரை யாடலும் கிடைக்காத காரணத்தால் உள்ளம் மலர்வதன் உவகையை முகத்திற் காட்டும் மிகச் சிறந்த மொழியாகிய முறுவலை அவளுக்குப் பதிலாக அளித்து விடை கொடுத்தான் இளையநம்பி. மனத்தின் களிப்பை வெளியிடும் ஆயிரம் பதங்கள் மொழியில் இருக்கலாம். ஆனால் அவை ஓர் அழகிய முகத்தின் முறுவலை இன்னோர் அழகிய முகத்தின் முறுவலால் சந்திக்கும் சுகத்துக்கு ஈடாவதில்லை என்று தோன்றியது. மனம் நெகிழ்ந்து கனிந்து பிறக்கும் ஒரு சிரிப்பை அதே நெகிழ்ச்சியும், கனிவும் உள்ள இன்னொரு சிரிப்பால் தான் உபசரிக்க முடியும் என்பதை அப்போது இளையநம்பி மிக நன்றாக உணர்ந்திருந்தான். தேர்ந்த கவியின் சொற்கள் ஒவ்வொருமுறை நினைக்கும் போதும் ஆராயும் போதும் ஒரு புது நயத்தையும், பொருளையும் தருவது போல் இரத்தின மாலையின் புன்னகை அவன் சிந்தனையில் புதுப்புது அணி நயங்களை அளித்துக்கொண்டிருந்தது. அவளை இருந்த வளமுடையார் கோவிலுக்கு* வழியனுப்பி விட்டு இளையநம்பியும், அழகன் பெருமாளும், குறளனும் பணிப் பெண்களும் மாளிகைக்குள்ளே திரும்பினர். பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு உடனே அந்த மாளிகையின் கதவுகள் உட்புறமாகத் தாழிட்டு அடைக்கப்பட்டன. உள்ளே திரும்பியதும் உடனே இளையநம்பியும் அழகன் பெருமாளும் தேனூர் மாந்திரீகன்படுத்த படுக்கையாகக் கிடந்த கட்டிலருகே சென்று அமர்ந்தனர். குறளன் நிலவறை முனையைக் காவல் புரிவதற்காகச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றான். முதல் நாளிரவு உறக்கம் இல்லாமற் கழித்திருந்த காரணத்தால் இளைய நம்பிக்கு மிகவும் களைப்பாக இருந்தது. மாந்திரீகன் செங்கணானோடு ஆறுதலாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அங்கேயே அருகிலிருந்த மஞ்சம் ஒன்றில் போய்ச் சாய்ந்தான் இளையநம்பி. அவன் உடல் மிகவும் அயர்ந்து போயிருந்தது. படுத்த சில கணங்களிலேயே அவன் விழிகளும் நினைவும் சோர்ந்து உறங்கி விட்டான். அழகன் பெருமாளும், தேனூர் மாந்திரீகனும் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த சொற்கள் அவன் செவிகளில் மயங்கி ஒலித்தன. தன்னை மறந்து உறக்கத்தில் இளைய நம்பி ஒரு கனவு கண்டான்.

* இப்போதுள்ள கூடலழகர் கோவில் இந்தக்கதை நிகழும் காலத்து மதுரையில் இருந்த வளமுடையார் கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. ஆதாரம் :- சி லம்பு அரும்பதவுரை.

ஒளிவீசும் முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரிக்கப் பட்டதும், மகாமேரு மலையைப் போல பொன் மயமாக உயர்ந்ததுமான ஒரு பெரிய மாளிகையின் படிகளில் ஏறி உள்ளே நுழைவதற்காக வாயிலருகே நின்றுகொண்டிருந்தான் இளையநம்பி. ஏதோ ஞாபகத்தில் வாயிற் கதவுகளைக் கடந்து அந்த மாளிகைக்குள் நுழையுமுன் அவன் திரும்பிக் கீழ் முகமாகத் தான் ஏறிவந்த படிகளைப் பார்க்கிறான். பார்த்ததும் அவன் கண்களும் கால்களும் தயங்கின. கீழே கடைசிப் படியில் கணிகை இரத்தினமாலை தலைவிரி கோலமாக நிற்கிறாள். காடாய் அவிழ்ந்து தொங்கும் கருங்கூந்தலின் நடுவே அவளுடைய எழில்முகம் மேகங்களின் நடுவே நிலவு பூத்தாற்போல் வனப்பு மிகுந்து காட்சியளித்தது.

அவன் பார்த்தபின்பும் அவள் அந்த முதற்படியிலேயே தயங்கி நின்று கொண்டிருந்தாள். மைதீட்டிய அவள் விழிகளில் ஏக்கம் உலவிக் கொண்டிருப்பதை அவன் காணமுடிந்தது. அவளுடைய சிறிய அழகிய இதழ்கள் அவனிடம் ஏதோ பேசுவதற்குத் துடித்துக் கொண்டிருந்தன. கோவைக் கனிகளைப் போன்ற அந்தச் செவ்விதழ்கள் அவள் முகத்தில் துடிப்பது மிக மிகத் தனியானதொரு கவர்ச்சியை உடையதாயிருந்தது. அப்படியே கீழே இறங்கி ஓடிப்போய் அந்த முகத்தைத் தன் முகத்தோடு அணைத்துக் கொண்டு அதன் மென்மையையும், வெம்மையையும் அளந்தரிய வேண்டும் போல அவ்வளவு ஆவலிருந்தும் தான் ஏறி வந்துவிட்ட படிகளின் உயரத்திலிருந்து மீண்டும் திரும்பிக் கீழே இறங்கிப் போக முடியாமல் ஏதோ தன்னைத் தடுப்பதையும் அவன் உணர்ந்தான். அப்படித் தன்னைத் தடுப்பது எது என்பதையும் அவனால் உடனே புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த வேளையில் கீழேயிருந்து சோகம் கன்றிய குரலில் கதறுவதுபோல் உரத்த குரலில் அவள் அவனைக் கேட்கிறாள்: 

ஐயா! நான் இன்னும் கீழே தரையில்தான் இருக்கிறேன், நீங்களோ முத்துக்களும் நவரத்தினங்களும் நிறைந்திருக்கிற எட்டமுடியாத உயரத்துக்குச் சென்று விட்டீர்கள்...”

இல்லை! இல்லை என்னுடைய விலை மதிப்பற்ற முத்து இன்னும் தரையில்தான் இருக்கிறது. நான் ஒளி நிறைந்ததாகக் கருதும் இரத்தினம் இன்னும் பூமியில்தான் இருக்கிறது பெண்ணே!” - என்று உரத்த குரலில் தன் உயரத்திலிருந்து அவளுக்குக் கேட்கும்படிக் கதறினான் அவன். அந்தக் குரல் அவளுக்குக் கேட்டதோ இல்லையோ?

இவ்வளவில் யாரோ அவன் தோளைத் தீண்டி எழுப்பவே அவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். உடல் முழுவதும் குப்பென்று வேர்த்திருந்தது.

வாய் அரற்றுகிற அளவு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறதே!” என்று வினாவியபடியே அழகன் பெருமாள் அவனது மஞ்சத்தின் அருகில் நின்று கொண்டிருந்தான். எதிர்ப்புறம் கட்டிலில் படுத்தபடியே முகத்தைத் திருப்பி இளையநம்பியை நோக்கிப் புன்னகை பூத்தான், தேனூர் மாந்திரீகன். ‘அவர்கள் இருவரும் கேட்க நேரும்படி கனவில் அரற்றிவிட்டோமே என்பதை எண்ணி நாணினான். அவன் மீண்டும் விழித்த நிலையில் நினைவுகூட்ட முயன்றபோது அந்தக் கனவும் காட்சிகளும், வார்த்தைகளும் தொடர்பின்றி இருந்தன.

இளையநம்பி உறக்கத்தில் வாய் அரற்றியதும் அழகன் பெருமாள் அவனை எழுப்பிவிட்டாலும், மஞ்சத்திலிருந்து உடனே எழவில்லை அவன். கண்களை மூடியபடியே உடற் சோர்வு நீங்கி மஞ்சத்திற் சாய்ந்திருந்தான் அவன். இதைக் கண்டு அவன் மீண்டும் உறங்கிவிட்டதாக எண்ணிக்கொண்ட அழகன் பெருமாள்,

செங்கணான்! யார் எழுப்பினாலும் எழுந்திருக்க முடியாதபடி திருக்கானப்பேர் நம்பிக்கு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறது என்று கூறியபடியே தேனூர் மாந்திரீகனிடம் மீண்டும் உரையாடப் போய் அமர்ந்தான். இதைக் கேட்டு மஞ்சத்தில் விழிகளை மூடியவாறு படுத்திருந்த இளைய நம்பி உள்ளூற நகைத்துக் கொண்டான். தான் உறங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தது இளையநம்பிக்கு. உறங்குகிற பாவனையிலேயே தொடர்ந்து கண்களை மூடியபடி மஞ்சத்தில் கிடந்தான் அவன்.

அங்கே அழகன்பெருமாளுக்கும், செங்கணானுக்கும் உரையாடல் தொடங்கியது. முதலில் அழகன்பெருமாள் தான் செங்கணானிடம் வினாவினான்:-

செங்கணான் காரியம் காயா, பழமா?”

பழமாகும் என்றுதான் நினைத்தோம். ஆனால் காலம் மாறிப்போய்ச் சூழ்நிலையும் ஒத்துவராததால் அது கனிய வில்லை! வெறும் காய்தான்.”

 

அப்படியானால் யாத்திரீகர்கள் என்ன ஆனார்கள்?”

சூழ்நிலையை உணர்ந்து பெரும்பாலோர் கோட்டைக் கதவுகள் மூடப்படுவதற்கு முன்பாகவே அகநகரிலிருந்து வெளியேறி விட்டார்கள்...”

நீ ஏன் தேனூருக்குத் திரும்பினாய்? உனக்குத் தேனூரில் என்ன வேலை இப்போது?”

கோட்டையை விட்டு வெளியேறிய நம்மவர்களைப் பிரித்துத் தனித்தனியே செல்லவிடும் பொறுப்பு எனக்கு இருந்தது. திட்டமிட்டபடி அகநகரில் எதுவும் செய்ய முடியவில்லை என்றாகிய பின்பும் வெளியேறிவிட்ட யாத்திரீகர்களுக்குக் குறிப்பாக மேலே என்ன என்ன செய்யவேண்டுமென்று நெறி கூறவும், செயல் காட்டவும் வேண்டாமா?”

திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்பது மோகூருக்குத் தெரியுமா செங்கணான்?” “ஒற்றர்கள் இருவர் அகப்பட்டுக் கொண்டதனால் கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டதையும் யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்டதையும் அந்துவன் மோகூருக்கு கூறியனுப்பியிருக்க வேண்டும். ‘நினைத்தபடி எதுவும் நடக்க முடியாது என்பதைப் பெரியவரும் காராளரும் இதிலிருந்தே அறிந்துகொள்ள முடியும்தானே?”

இந்தச் சமயத்தில் மஞ்சத்தில் படுத்திருந்த இளைய நம்பிக்கு அடக்கிக்கொள்ள இயலாத பெருந்தும்மல் ஒன்று வந்தது. அவன் தும்மினான். உடனே அவர்களுடைய உரையாடல் நின்றது. தொடர்ந்து சில கணங்கள் அவர் களுடைய மெளனம் நீடிக்கவே இனிமேல் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தவனாக இளையநம்பி மஞ்சத்தில் எழுந்து அமர்ந்தான்.

அவன் மனம் அப்போது மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்து போயிருந்தது. நினைவிழந்து உறங்கிய உறக்கத்தின் போது கண்ட ஒரு கனவையும் அவனால் புரிந்துகொள்ள முடிய வில்லை. உறக்கம் கலைந்தபின் தன் நினைவோடு செவிமடுத்த ஓர் உரையாடலையும் அவனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘யாத்திரீகர்கள் பத்திரமாக வெளி யேறித் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் பிரிந்து சென்றார்களா இல்லையா என்பதில் தேனூர் மாந்திரீகனுக்கும் இந்த அழகன் பெருமாளுக்கும் ஏன் இவ்வளவு கவலை? இவர்கள் இந்த அவிட்ட நாள் திருவிழாவின் போது நகருக்குள் என்ன காரியத்தைச் சாதிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்? அதற்கு யாத்திரீகர்கள் எப்படி உதவி செய்ய இருந்தார்கள்?’ என்றெல்லாம் அவன் மனத்தில் நினைவுகள் ஐயமாக எழுந்தன.

நல்ல உறக்கம் போலிருக்கிறது! களைப்பு மிகுதியினால் முன்னிரவிலேயே உறங்கி எழுந்து விட்டீர்கள். உறக்கத்தில் ஏதோ முத்து, இரத்தினம் என்றெல்லாம் அரற்றினர்கள்? வந்து எழுப்பினேன். மீண்டும் உறங்கி விட்டீர்கள். இரத்தினமாலை இருந்த வளத்திலிருந்து திரும்பும் நேரம்கூட ஆயிற்று என்றான் அழகன் பெருமாள். இந்தச் சொற்களுக்கு மறுமொழி கூறாமல் மெளனமாக அவனைப் பார்த்துச் சிரித்தான் இளையநம்பி. தன்னுடைய வார்த்தைகளுக்கு வார்த்தைகளால் எந்த மறுமொழியும் கூறாமல் ஒரு மெளனமான புன்னகையை மட்டும் புரிந்த இளையநம்பியைக் கண்டு தங்கள் உணர்ச்சிகளுக்கு நடுவே ஏதோ ஒரு மெல்லிய பிணக்கு இடறுவதை அழகன் பெருமாளும் புரிந்து கொண்டான்.

 

32. வித்தகர் எங்கே?

 

இரத்தினமாலை இருந்த வளத்திலிருந்து திரும்புகிற வரை அங்கிருந்த அவர்கள் மூவரும் தங்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவே இல்லை.

நீண்ட நாட்களாகக் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. அந்துவனைச் சந்தித்து விட்டு இரத்தினமாலை திரும்பி வந்ததும் ஏதாவது விவரம் தெரியும் என்று நம்புகிறேன் என்று இடையே அழகன் பெருமாள் பேசியபோது கூட,

இப்படி நமக்குள் பொதுவாக நம்பவும் செயலாற்றவும் காரியங்கள் இருப்பதால்தான் நாம் ஒரு குழுவாகச் சேர்ந்திருக்கிறோம் அழகன் பெருமாள்!” என்று மறுமொழி கூறிவிட்டு மீண்டும் சிரித்தபடியே அவன் கண்களில் மின்னும் உணர்ச்சிகளை ஆழம் பார்த்தான் இளையநம்பி. அழகன் பெருமாளும் விட்டுக் கொடுக்காமல் பதிலுக்கு முக மலர்ந்து சிரித்தானே ஒழிய இளையநம்பியின் சொற்களில் இருந்த குத்தலைப் புரிந்து கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.

இருந்த வளமுடைய விண்ணகரத்தில் அர்த்த சாம வழிபாடும் முடிந்த பின்பே இரத்தினமாலை திரும்பினாள். பல்லக்கிலிருந்து இறங்கி வந்ததும் வராததுமாக, “உன் முகம் மலர்ச்சியாயிருப்பதைப் பார்த்தால் இருந்த வளமுடைய பெருமாள் பரிபூரணமாகத் திருவருள் புரிந்திருப்பார் என்றல்லவா தோன்றுகிறது?” என்று கூறி அவளை வரவேற்றான் இளையநம்பி. அவள் முகமும் அவனை நோக்கி மலர்ந்தது. அவள் அவனிடம் கூறினாள்:

திருவருளுக்கு எதுவும் குறைவில்லை! ஆனால் என்ன தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன் என்பது எனக்கே புரியாமல் எதையோ தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன்.”

அப்படியானால் போன காரியம் ஆகவில்லையா?” என்று கேட்டான் அழகன் பெருமாள்.

இனிமேல்தான் தெரியவேண்டும் என்று கையோடு திரும்பக் கொண்டு வந்திருந்த பூக்குடலையைக் காண்பித்தாள் அவள். குடலை நிறைய அடர்த்தியாகத் தொடுத்த திருத் துழாய் மாலை ஒன்று பொங்கி வழிந்தது. திருத்துழாய் நறுமணம், எங்கும் கமழ்ந்தது.

அவள் கூறியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை; அவளே மேலும் தொடர்ந்து கூறலானாள்:

அகநகரின் நிலை மிகமிகக் கடுமையாகி இருக்கிறது! என்னுடைய பணிகளைப் பாராட்டி அரண்மனை அந்தப்புர மகளிர் மூலம் நான் பெற்றிருக்கும் முத்திரை மோதிரத்தைக் கையில் அணிந்து சென்றதனால் தான் நானே பாதுகாப்பாக இருந்த வளத்துக்குச் சென்று திரும்ப முடிந்தது. எங்கும் ஒரே பரபரப்பும் பதற்றமும் நிறைந்து அகநகர வீதிகளும், சதுக்கங்களும் அமைதி இழந்திருக்கின்றன. சந்தேகப்படுகிறவர்களை எல்லாம் இழுத்துப் போய்க் களப்பிரர்கள் கழுவேற்றுகிறார்கள். எல்லாரையும் பயம் பிடித்து ஆட்டுகிறது. நான் இருந்த வளமுடையார் கோவிலுக்குப் போய் யானைக் கொட்டாரத்தை அடைந்தபோது அந்துவனைக் கொட்டாரத்தின் வாயிலிலேயே பார்த்தேன். அவன் வேறு சில யானைப்பாகர்களோடு சேர்ந்து நின்று கொண் டிருந்தான். ஆனால் என்னைப் பார்த்த பின்பும் அவன் என்னோடு பேசவோ தெரிந்தவன் போல் முகம் மலரவோ இல்லை. மற்ற யானைப் பாகர்களோடு பாலி மொழியில் சிரித்துப்பேசிக் கொண்டிருந்தான் அவன். நிலைமையை நான் விளங்கிக் கொண்டேன். எதையும் தெரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏமாற்றத்தோடு, ஆலயத்திற்குள்ளே சென்று நான் கொண்டு போயிருந்த மாலைகளைச் சாற்றச் செய்து இருந்த வளமுடையாரையும், அந்தரவானத்து எம் பெருமானையும் வழிபட்டு வணங்கித் திரும்பும்போது, மீண்டும் அந்துவனைக் காண முயன்று வெகு நேரம் காத்திருந்தேன். அர்த்தசாம வேளைகூட நெருங்கி விட்டது. என்ன முயன்றும் அந்துவனைக் காண முடியவில்லை. வந்த காரியத்தை இறைவனிடம் விட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்த மனத்துடன் குடலையும் கையுமாகப் பணிப் பெண்ணோடு நான் திரும்புவதற்கு இருந்தேன். அப்போது விண்ணகரத் திருக்கோயிலைச் சேர்ந்த நந்தவனத்து மாலை கட்டி ஒருவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கைகளில் ஒரு பெரிய திருத்துழாய் மாலையோடு என்னை நோக்கி வந்தான்.

இருந்தவளமுடைய பெருமாளின் திருவருள் இந்த மாலையில் நிரம்பியிருக்கிறது. ‘தாங்கள் நினைப்பதை அருளும் தெய்வீகப் பயனை இந்தத் திருத்துழாய் மாலை தங்களுக்குத் தரும் என்று அந்துவனார் கூறினார். அவருடைய வேண்டுகோளின்படி இந்தத் திருத்துழாய் மாலையைத் தங்களிடம் சேர்க்க வந்தேன் என்று கூறி மாலையை உடனே என் கையிலிருந்த குடலையில் திணித்துவிட்டு அந்த மாலை கட்டி விரைந்து நந்தவனப் பகுதியில் புகுந்து மறைந்து விட்டான். அவனை ஏதாவது கேட்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் மின்னலாக மறைந்து விடவே எனக்குத் திகைப்பாயிருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. கோயிலிலிருந்து வெளியே வந்ததும் பல்லக்கில் அமர்ந்து மாலையைக் கை விரல்களால் நன்கு ஆராய்ந்தும் எதுவும் புலப்படவில்லை. இந்த மாலையைக் கொடுத்து அனுப்பியதன் மூலம் அந்துவன் நமக்கு என்ன தெரிவிக்கிறான் என்பதே எனக்குப் புரிய வில்லை. மாலை இதோ இருக்கிறது என்று அந்த மாலையை அவள் எடுத்து நீட்டுவதற்கு முன்பே விரைந்து அதைத் தன் கைகளில் ஏற்றான் அழகன்பெருமாள். மாலையை மேலிருந்து கீழாகத் தொங்கவிட்டபோது ஒரு பெரிய தேங்காயளவு அதன் நுனியில் தொங்கிய திருத்துழாய்க் குஞ்சம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.

அழகன்பெருமாள் நிதானமாகக் கீழே தரையில் அமர்ந்து மாலையை மடியில் வைத்துக் கொண்டு அதன் குஞ்சத்தை மெல்லப் பிரித்தான். எல்லார் விழிகளும் வியப்பால் விரிந்தன.

என்ன விந்தை? அந்தக் குஞ்சத்தின் நடுப்பகுதியில் இருந்து ஒடியாமல் சுருட்டப்பட்டு நாரால் கட்டியிருந்த ஒலைச்சுருள் ஒன்று வெளிப்பட்டது. எல்லார் கண்களிலும் மலர்ச்சி தெரிந்தது.

பெருமாளின் திருவருள் இதோ கிடைத்து விட்டது! அந்துவன் பொய் சொல்லமாட்டான் என்று கூறியபடியே அந்த ஒலைச்சுருளை எடுத்துப் பிரித்தான் அழகன் பெருமாள். ஒடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நன்கு முற்றிக் காய்ந்த ஓலையைப் பயன்படுத்தாமல் ஓரளவு ஈரமுள்ள பதத்து ஓலையைப் பயன்படுத்தி அதில் எழுதியிருந்ததால் எழுத்துக்கள் ஒலையில் நன்கு பதியவில்லை. கீறினாற்போல் ஏதோ மங்கலாகத் தெரிந்தது. அதை எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாமல் அழகன் பெருமாள் சிரமப்பட்டான். கைத்தீபத்தின் அருகே நெருக்கமாகப் பிடித்துப் படிக்க முயன்றும் முடியவில்லை.

என்னிடம் கொடு அழகன்பெருமாள் என்று அதை வாங்கிக்கொண்ட இளையநம்பி இரத்தினமாலையின் பக்கம் திரும்பி, “நீ கண்ணுக்குத் தீட்டிக் கொள்ள மை சேர்த்து வைத் திருப்பாயே அந்த மைக் கூண்டைக் கொண்டு வா!” என்றான். உடனே அவள் பணிப்பெண்ணுக்குச் சைகை செய்தாள்.

பணிப்பெண் உள்ளே ஓடினாள். சிறிது நேரத்தில் மைக் கூண்டுடன் திரும்பி வந்து அதை இளையநம்பியிடம் கொடுத்தாள். ஒலையைப் பளிங்குத் தரையில் வைத்து அதன் ஒரு முனையை அழகன் பெருமாளும், மறுமுனையை இரத்தினமாலையும் கட்டை விரல்களால் அழுத்திக் கொள்ளச் செய்தபின் அது சுருண்டு விடாமல் இருந்த நிலையில் அதன்மேல் மென்மையாக மையைத் தடவினான் இளைய நம்பி. எழுத்துக்களாகக் கீறப்பட்டிருந்த இடங்கள் ஒலைப் பரப்பில் பள்ளமாகி இருந்ததால் அந்தப் பள்ளங்களில் மை ஆழப் பதிந்திருந்தது. அப்படிப் படிந்ததன் காரணமாக ஒலையில் எழுதியிருந்த வாக்கியங்கள் இப்போது தெளிவாகத் தெரியலாயின.

பெரியவர் மதுராபதி வித்தகர் இப்போது திருமோகூரில் இல்லை. அவரைத் தேடும் முயற்சியைச் செய்யவேண்டும் - என்ற அந்த முதல் பகுதி எழுத்துக்களை இளையநம்பியே வாய்விட்டுப் படித்ததும், மற்றவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் எல்லா விழிகளும் விளக்கொளியின் துணையுடன் ஒலைக்கருகே தணிந்து பார்க்க விரைந்தன. பலருடைய மூச்சுக்காற்று ஒரே திசையில் பாயவே எதிர்பாராத விதமாக அந்த விளக்கே அணைந்து போய்விட்டது.

 

33. அடிமையும் கொத்தடிமையும்

 

தாகத்தோடு பருகுவதற்குக் கையில் எடுத்த நீரைப் பருக முடியாமல் மறித்துப் பறித்தது போல் அரிய செய்திகள் அடங்கிய ஒலையைப் படிப்பதற்குள் விளக்கு அவிந்ததன் காரணமாக அவர்களது ஆவலும் பரபரப்பும் அதிகரித்திருந்தன. பணிப்பெண் அவிந்த கைவிளக்கை உள்ளே எடுத்துச் சென்று ஏற்றி வந்தாள். விளக்கு மீண்டும் அவிந்து விடலாகாதே என்ற கவலையில் அனைவரையும் விலகி நிற்குமாறு வேண்டிய பின் ஒலையில் எழுதப்பட்டிருந்த இரண்டாவது வாக்கியத்தைப் படிக்கலானான் இளையநம்பி:

தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் சிறை மீட்க எல்லா வகையிலும் முயலுக!’

இந்த இரண்டாவது வாக்கியத்தின் பொருளை இதிலுள்ள சொற்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சி எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது என்னும் சூழ்நிலை புரியவில்லை.

மூன்றாவது வாக்கியத்தோடு அந்த ஓலையில் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் முடிந்து விட்டன. மூன்றாவது வாக்கியம்: ‘திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தன்னைப் பற்றியே இருந்ததனால் அதை அவன் வாய்விட்டுப் படிக்கவில்லை. அப்படியே ஒலையை அழகன் பெருமாளிடம் கொடுத்து விட்டான். அவன் வாக்கியங்கள் மூன்றும் முடிந்த பின் செய்திகளை நம்புவதற்கு ஒரு நல்லடையாளமாகக் கயல் என்றும் அதில் கீழே எழுதியிருந்ததை அவன் காணத் தவறவில்லை.

அந்த ஒலையை அழகன் பெருமாள் படித்த பின்பு இரத்தினமாலையிடம் கொடுத்தான். இரத்தினமாலையும் படித்த பின்பு மீண்டும் அது இளைய நம்பியின் கைகளுக்கே வந்து சேர்ந்தது. திருத்துழாய் நறுமணம் கமழும் அந்த ஒலையை இரண்டாவது முறையாகவும் படித்தான் அவன். கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டபின் பல நாட்களாக அந்தக் கணிகை மாளிகையிலேயே இருந்து விட்டதினால் ஒலையில் குறிப்பிட்டிருக்கும் சூழ்நிலைகளை உணரவும் அநுமானம் செய்யவும் முடியாமல் இருந்தது.

பெரியவர் மதுராபதி வித்தகர் ஏன் இப்போது மோகூரில் இல்லை? அவர் எங்கே இருக்கிறார் என்று தேடும் முயற்சியில் நாங்கள் ஏன் ஈடுபடலாகாது?’

தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் யார் எப்போது எதற்காகச் சிறைப் பிடித்தார்கள்?’

ஒன்றும் விளங்காமல் மனம் குழம்பினான் இளைய நம்பி. அப்போது இரத்தினமாலை சிரித்த முகத்தோடு அவனைக் கேட்டாள்:

பார்த்தீர்களா? திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்த ஓலையும் எங்களுக்கு நினைவூட்டுகிறது. அன்றொரு நாள் கோபித்துக் கொண்டு புறப்பட்டதுபோல் இனி நீங்கள் இங்கிருந்து எங்கள் பாதுகாப்பை மீறி எங்கும் புறப்பட முடியாது!”

என்னைப் பாதுகாப்பதில் உங்களுக்குள்ள அக்கறை பற்றி மகிழ்ச்சி. ஒருவரைப் பாதுகாப்பதற்கும் சிறை வைப்பதற்கும் உள்ள வேறுபாடு மட்டும் உங்களுக்கு நினை விருந்தால் போதும். சில சமயங்களில் நீயும் அழகன் பெருமாளும் செய்கிற காரியங்கள் மூலம் நான் பாதுகாக்கப் படுகிறேனா, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகி விடுகிறது.”

பாதுகாப்பதும் கூட ஒருவகைச் சிறைதான்! பாது காக்கிறவர், பாதுகாக்கப்படுகிறவர், இருவரில் யாருடைய அன்பு அதிகம், யாருடைய உரிமை அதிகம், என்பதைப் பொறுத்தே சிறையா இல்லையா என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இங்கே நாங்கள் உங்கள் மேல் உயிரையே வைத்து அன்பு செலுத்துகிறோம். நீங்கள் பதிலுக்கு எந்த அளவு அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை எதிர்பாராமலும் கணக்கிடாமலுமே உங்கள் விருப்பம் போல் பழக உரிமைகள் அளித்திருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் இது சிறையா அன்புப் பாதுகாப்பா?”

அன்பு என்பது நிறுவைக்கும், அளவைக்கும் அப்பாற் பட்டது இரத்தினமாலை! இப்போது அதை நிறுக்கவும் அளக்கவும் நீ விரும்புவதாகத் தெரிகிறது...”

அல்லவே அல்ல, செய்வதையும் செய்து விட்டுக் குற்றத்தை என் தலையில் சுமத்தாதீர்கள்! நான் பாதுகாக்கப் படுகிறேனோ, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனோ, என்று முதலில் வினாவியதே நீங்கள்தான். நீங்கள் வினாவியதற்கு நான் மறுமொழி கூறினால் என்னையே குறை சொல்கிறீர்களே?”

இரத்தினமாலையின் இந்தப் பேச்சுக்கு இளையநம்பி மறுமொழி எதுவும் கூறவில்லை என்றாலும் குறும்பாகவும் அங்கதமாகவும்* தான் கூறிய ஒரு பேச்சு அவள் மனத்தின் உணர்வுகளை இவ்வளவு பாதித்திருக்கும் என்றும் அவன் எதிர்பார்க்கவோ, நினைக்கவோ இல்லை.

* குத்தலாகவும்

 

சிறிது நேர மெளனத்துக்குப் பின்னர் அவர்கள் உரையாடல், ஒலையில் கண்டிருந்த பிற செய்திகளைப் பற்றித் திரும்பியது. இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கி வினவினான்:

இந்த ஒலையின் இரண்டாவது வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கும் தென்னவன் மாறனையும், திருமோகூர் மல்லனையும் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, அழகன் பெருமாள்! அவர்கள் எப்படிச் சிறைப்பட்டிருப்பார்கள், எவ்வகையில் மீட்க வேண்டும் என்றெல்லாம் நீ தான் முடிவு செய்ய வேண்டும்... செய்வாய் அல்லவா?”

நம்மைப் போல் அவர்களும் களப்பிரர் ஆட்சியை எதிர்ப்பவர்கள். பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைக்குத் தலை வணங்குகிறவர்கள். தென்னவன் மாறன் சிறு மலைக் காட்டில் இருப்பவன். மல்லன் திரு மோகூர்ப் பெரிய காராளரின் அறக்கோட்டத்தில் இருப்பவன். எல்லோரும் நம்மவர்கள். பாண்டிய மரபு சிறப்படையப் பாடுபடுகிறவர்கள். அவர்களைச் சிறை மீட்பது பற்றிய காரியங்களை நானே செய்கிறேன். உங்கள் ஒத்துழைப்பும், உறுதுணையும் எனக்கு இருந்தால் போதும் ஐயா!” என்றான் அழகன் பெருமாள். அவ்வளவில் இரத்தினமாலை அவர்களை உண்பதற்கு அழைத் தாள். இரவு நெடுநேரமாகி யிருந்ததனால் உண்ணும் வேளை தவறியிருந்தது. நிலவறைக் காவலுக்காகச் சந்தனம் அறைக்கும் பகுதியிலிருந்த குறளனுக்கும் இரத்தக் காயங்களுடன் கட்டிலில் கிடந்த தேனூர் மாந்திரீகனுக்கும் பணிப் பெண்கள் அங்கேயே உண்கலங்களில் உணவு எடுத்துச் சென்று படைத்தனர்.

இளையநம்பியையும், அழகன் பெருமாளையும் அமரச் செய்து இரத்தினமாலையே பரிமாறினாள். இளையநம்பி போதும் போதும் என்று கைகளை மறித்த பின்னும் நெய் அதிரசங்களை அவன் இலையில் படைத்தாள் இரத்தினமாலை.

இரத்தினமாலை! இதென்ன காரியம் செய்கிறாய்? அதிரசங்களை நான் உண்ண வேண்டுமா? அல்லது அதிரசங்கள் என்னை உண்ண வேண்டுமா? வீரர்கள் உண்பவர்கள் மட்டும்தான்; உண்ணப்படுபவர்கள் இல்லை! வீரர்கள் வாழ்வதற்காக உண்ணுகிறார்கள். மற்றவர்களோ உண்பதற்காகவே வாழ்கிறார்கள். இந்த உலகில் உணவை உண்ணுகிறவர்களும் உண்டு; உணவால் உண்ணப்படுகிறவர்களும் உண்டு. இப்படிக் கலத்தில் மிகையாகப் படைப்பதன் மூலம் நீ என்னைப் பாராட்டுகிறாயா, வஞ்சப் புகழ்ச்சி செய்கிறாயா என்பது புரியவில்லை.”

வீரர்கள் முனிவர்களைப் போல் உண்ணக் கூடாது. முனிவர்களைப் போல் பழகக் கூடாது.” அவள் இந்தச் சொற்களின் மூலம் குறிப்பாகத் தனக்கு எதையோ புலப்படுத்த முயல்வது போல் இளையநம்பிக்குத் தோன்றியது. இந்தச் சொற்களைச் சொல்லி முடிந்த உடனே அவள் முகத்தையும் கண்களையும் பார்க்க முயன்றான் அவன். அவளோ சொற்களால் கூறியதை முகத்தினாலும், கண்களாலும் அவனிடமிருந்து மறைக்க முயலுகிறவள்போல் வேறு புறம் பார்த்துக் கொண்டு நின்றாள். அழகன் பெருமாள் இந்த நாடகத்தைக் கண்டும் காணதவன்போல் உண்பதில் கவனமாயிருந்தான். உள்ளுற அவனுக்கு ஒருவகை மகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ‘பெண்களின் கைகளை அழகு பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை என்று இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாளில் முதல் சந்திப்பின்போது எந்த இளைஞன் சினங் கொண்டு பேசியிருந்தானோ, அதே இளைஞன் இந்த வளைக்கரங்கள்கிணின் கிணின் என்று ஒலிக்கத் தன் இலையில் பரிமாறும் அழகை இரசிப்பதை இன்று இந்தக் கணத்தில் அழகன் பெருமாள் தன் கண்களாலேயே காண முடிந்தது. இந்த மாறுதல் தனக்கும் இரத்தினமாலைக்கும் மிகப் பெரிய வெற்றி என்பது அழகன் பெருமாளுக்குப் புரிந்திருந்தாலும் அந்த வெற்றிப் பெருமிதத்தை வெளிப்படையாக்கி விட விரும்பவில்லை அவன்.

உலகில் வென்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. தோற்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. இது வென்றவர்கள் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றி வகையைச் சேர்ந்தது. தான் தோற்றுப் போயிருக்கிறோம் என்று தோற்றவனைப் புரிந்து கொள்ளவிடாமல் வென்றவர்கள் கொண்டாடும் வெற்றியில் தோற்றிருப்பவனும் கூடக் கலந்துகொள்ள முடியும். அப்படியின்றி நீ தோற்றதால் ஏற்பட்ட வெற்றிதான் இது என்று தோற்றவனுக்கும் அவன் தோல்வியைப் புரியவிடுவதால் அவன் மற்றொரு போருக்குக் கிளர்ந்தெழும் நிலைமை உருவாகி விடும் அபாயமும் ஏற்படலாம். அழகன் பெருமாளைவிட இரத்தினமாலை இந்த அபாயத்தை மிக நன்றாக உணர்ந்திருந்தாள். பெண் தன்னை வென்றவனுக்கு அடிமையாகிறாள் என்றால், அறிந்தோ அறியாமலோ தனக்குத் தோற்றவனுக்குக் கொத்தடிமையாகவே ஆகிறாள். ஆனால் தோற்றிருப்பவனுக்கு அவன் தோற்றிருக்கிறான் என்பது தோன்றவே விடாமல் பார்த்துக்கொள்ள அவள் எவ்வளவிற்குத் தேர்ந்திருக்கிறாள் என்பதைப் பொறுத்தே இந்த வெற்றியின் முடிவான பயன்களை அவள் அடைய முடியும். அவன் அந்த மாளிகைக்குள் வந்த முதல் நாளன்று அவனுடைய திரண்ட தோள்களையும், பரந்த மார்பையும் கண்டு மனம் தோற்ற கணத்தில், அவள் அவனுக்கு அடிமை யாவதற்கு மட்டுமே ஆசைப்பட்டாள். இன்றோ அவனுக்குக் கொத்தடிமையாவதற்கே ஆசைப்பட்டாள். மெல்லியபட்டு நூலிழை போன்ற இந்த வெற்றிப் பிணைப்பு அறுந்துவிடக் கூடாது என்பதில் அழகன் பெருமாளைவிட விழிப்பாயிருந் தாள் இரத்தினமாலை. ஒருமுறை ஏற்கெனவே இந்த விழிப்பு உணர்ச்சி இல்லாத காரணத்தால் தவறு செய்திருந்தாள் அவள். எனவே மறுமுறையும் அப்படித் தவறு நேர்ந்து விடக் கூடாது என்பதில் அவள் மிகமிகக் கவனமாயிருந்தாள். அரண்மனை அந்தப்புரத்துக்குத் தான் சென்று திரும்பியிருந்த தினத்தன்று அழகன் பெருமாளுக்கும், இளைய நம்பிக்கும், தனக்கும் நிகழ்ந்த ஒர் உரையாடலின் போது, ‘பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம், இங்கே ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் பரிதாபம் என்று இளையநம்பி சினங் கொண்டு கூறியவுடன், ‘ஆண்கள் செய்யமுடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது - என்று தான் சுடச்சுட மறுமொழி கூறியதன் மூலம் அவன் கோபித்துக் கொண்டு வெளியேறி விட இருந்ததை நினைவு கூர்ந்து இப்போதும் அப்படி நேர்ந்து விடாமல் கவனமாக இருந்தாள் இரத்தினமாலை.

உண்டு முடித்தபின் தேனூர் மாந்திரீகன் படுத்திருந்த கட்டிலருகே அமர்ந்து திருத்துழாய் மாலையில் வந்த ஒலையை வைத்துக்கொண்டு மேலே என்னென்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள் அவர்கள். நீண்ட நேரம் சிந்தித்தும் எதையும் திட்டமிட முடியவில்லை. அழகன் பெருமாள் செங்கணானின் கட்டிலருகே இருந்த மஞ்சத்தில் உறக்கச் சென்றான்.

அன்று செங்கணான் புதிதாக வந்திருந்ததனால் இளைய நம்பிக்குத் தான் எந்தக் கட்டிலில் படுத்து உறங்குவது என்ற தயக்கம் வந்தது. செங்கணானுக்கு அருகிலிருந்த கட்டிலில் அவனுக்குத் துணையாயிருக்கும் எண்ணத்தோடு அழகன் பெருமாள் படுத்துவிட்டதால் அவனை அங்கிருந்து எழுப்புவதற்கு இளைய நம்பி விரும்பவில்லை. அவனது தயக்கத்தைக் குறிப்பறிந்த இரத்தினமாலை, “இந்த மாளிகையின் மேல் மாடத்தில் ஒரு சயனக்கிருகம் இருக்கிறது, நிலாவின் தண்மையையும், தென்றல் காற்றின் சுகத்தையும் அனுபவித்த படி உறங்கலாம் அங்கே...” என்றாள். அவன் மறுக்கவில்லை... அவள் அவனை மேலே அழைத்துச் சென்றாள்.

 

34. மணக்கும் கைகள்

 

மாளிகையில் எல்லாரும் உறங்கிவிட்ட நிலையில் தனியாக இரத்தினமாலையோடு மேல் மாடத்திற்குச் சென்றான் அவன். தன்னை மேல் மாடத்திற் கொண்டு போய் விட்டுவிட்டு, அவள் உடனே திரும்பி விடுவாள் என்று நினைத்தான் இளையநம்பி. அவளோ மேல் மாடத்தில் இருந்த பள்ளியறையை ஒட்டி அமைந்த நிலா முற்றத்தில் நின்று அவனை விட்டுப் பிரிய மனமில்லாதவள் போல் உரையாடிக் கொண்டிருந்தாள்.

தென்றல் பொதிகை மலையில் பிறக்கிறது. ஆனால் மதுரைக்கு வரும்போது அது இன்னும் அதிகச் சிறப்படைகிறது. அதிகப் புகழ் பெற்று விடுகிறது.”

அதாவது மதுரைத் தென்றல் தமிழ்த் தென்றலாக வீசுகிறது என்றுதானே சொல்கிறாய்? ஆம். ஒரு தென்றல் இன்னொரு தென்றலுடன் இங்கே கூடுகிறது. மொழிகளிலே தென்றலாகிய தமிழ் காற்றின் இளவரசியாகிய மந்தமாருதத்தைச் சந்திக்கும் இடம் இந்த நான்மாடக்கூடல் நகரம்தான்.” 

நீ கூறுவதை ஒப்புக் கொள்கிறேன் இரத்தினமாலை! ஆனால் ஒரு சிறு பாடபேதம். இந்த இடத்தில் இப்போது இரண்டு தென்றல்கள் இருப்பதாக நீ சொல்கிறாய். ஆனால் மூன்று தென்றல்கள் இங்கு சூழ்ந்து கொண்டு குளிர்விப்பதை இப்போது நான் காண்கிறேன்.”

அது எப்படி?”

பொதியமலைத் தென்றலாகிய மந்தமாருதம்! மதுரைத் தென்றலாகிய தமிழ்! அழகுத் தென்றலாகிய நீ!”

இதைக் கேட்டு அவள் தலை குனிந்தாள். அவளது வலது கால் கட்டைவிரல் தரையில் மனத்தின் உணர்வுகளைக் கோலமிட்டுப் பார்க்க முயன்றது. ‘நீ வென்று கொண்டிருக்கிறாய், வென்று கொண்டிருக்கிறாய் என்று அவளுடைய மனம் அவளை நோக்கி உள்ளேயே குதூகலக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ‘உன் வெற்றியை உன் முன் தோற்றுப் போய்க் கொண்டிருப்பவனுக்கே புரிய விடாமல் அவனே வென்றிருப்பதுபோல் உணரச் செய்!’ என்றும் அவள் உள் மனம் அவளை எச்சரித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அவள் உணர்ச்சிகளால் மிகவும் நெகிழ்ந்து, மலர்ந்து, தளர்ந்து பலவீனமான அனிச்சம் பூப்போல் ஆகியிருந்தாள். தன்னால் அழகுத் தென்றல் என்று புகழப்பட்ட அந்த மந்த மாருதம் தன்னுடைய தோள்களையும் மார்பையும் தழுவி வீசிக் குளிர்விப்பதை இளையநம்பி உணர்ந்தான்.

இனிமையாக யாழ் வாசிப்பதற்கென்றே படைக்கப் பட்டாற் போன்ற அவளுடைய மெல்லிய நீண்ட பொன் விரல்களைத் தன் விரல்களோடு இணைத்துக் கொண்டான் அவன். இணைப்பிற்கும் அணைப்பிற்கும் ஆளான கைகளை விட்டுவிடாமல்,

இந்தக் கைகளில் சந்தனம் மணக்கிறது பெண்ணே!” என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே கூறினான் அவன். பொன்னாற் செய்த பேரியாழ் போன்ற அவள் உடல் இப்போது இளையநம்பியின் அரவணைப்பில் இருந்தது. அவள் இனிய குரலில் அவன் கேட்க உழற்றினாள்:-

இந்தப் பரந்த மார்பிலும், தோள்களிலும் என் கைகளினால் அள்ளி அள்ளிச் சந்தனம் பூச வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது அன்பரே!”

சந்தனத்திற்கு வேறெங்கும் போக வேண்டாம் இரத்தின மாலை! உன் கைகளே சந்தனத்தால் ஆகியவைதான். உன் கைகள் மணக்கின்றன. மணக்க வேண்டிய கைகள் இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது.”

எங்கே, அந்த வார்த்தைகளை என் செவி குளிர இன்னொரு முறை சொல்லுங்களேன்.”

 

மணக்கவேண்டிய கைகள் இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது!...” ஒரக் கண்களால் அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான் அவன். ‘உனக்குத் தோற்றுவிட்டேன் என்பது போலிருந்தது அந்தச் சிரிப்பு. அவன் அவளைக் கேட்கலானான்:-

இந்த மாளிகையில் நுழைந்த முதற்கணத்திலிருந்து நீ என்னை அதிகமாகச் சோதனை செய்திருக்கிறாய் பெண்ணே! நான் உன்மேல் காரணமே புரியாத வெறுப்போடு இங்கே வந்தேன். காரணம் புரியா வெறுப்பு எல்லையற்ற அன்பாக முடிவதும், காரணம் புரியாத அன்பு எல்லையற்ற வெறுப்பாக முடிவதும், ஏனென்றே விளங்காத உலகம் இது! உன்னைப் போல் பெண்களின் விழிகளைக் கவிகள் வேல் நுனிக்கு உவமை சொல்லுவார்கள். இத்தனை ஆண்டுகளாக நான் கட்டிக் காத்த உறுதியையும், ஆணவத்தையும், ஆசாரங்களையும் உன் கண்களாகிய வேல்கள் இன்று கொலை செய்துவிட்டன.”

நீங்கள் மட்டும் நிரம்ப நல்லவர்போல் பேசி முடித்து விடவேண்டாம்! இங்கு வந்ததிலிருந்து என்னைக் கொல்வது போன்று நீங்கள் எத்துணை வார்த்தைகளைக் குத்திக் காட்டிப் பேசியிருக்கிறீர்கள்.”

உன் பங்குக்கு நீயும் என்னிடம் அப்படிப் பேசி யிருக்கும் சமயங்களை மறந்துவிடாதே பெண்ணே!”

இருவருமே மறக்க வேண்டியவற்றை மறந்துவிட்டவற்றை நீங்கள்தான் இப்போது மீண்டும் எடுத்துக்காட்டி நினைவூட்டுகிறீர்கள்.”

போகட்டும்! எல்லாவற்றையும் மறந்துவிடலாம். இப்போது, இந்த நிலையில் அழகன் பெருமாளோ, தேனூர் மாந்திரீகனோ, குறளனோ நம்மைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் இரத்தினமாலை?”

எதுவும் வேறுபாடாக நினைக்கமாட்டார்கள். மனமார வாழ்த்துவார்கள். வந்த நாளிலிருந்து குறளன் அறைத்துக் குவிக்கும் சந்தனத்துக்கு இன்று பயன் கிடைக்கிறதே என்று அவன் மகிழ்ச்சி அடையக்கூடும். வந்த நாளிலிருந்து நீங்கள் காரணமின்றி என்னை வெறுப்பதை மன வருத்தத்தோடு கண்ட அழகன்பெருமாள் உங்கள் மன மாற்றத்தை விழாக் கண்டதுபோல வரவேற்கலாம்!”

பொய்! அவ்வளவும் பொய்... வேண்டும் என்றே அழகன்பெருமாளைத் தேனூர் மாந்திரீகனுக்கருகே உறங்கச் செய்து நான் மேல் மாடத்தைத் தேடி உன்னோடு வரச் சதி செய்திருக்கிறாய் நீ! உண்மையா, இல்லையா?”

காதல் சம்பந்தமான சதிகள் செய்யப்படுவதில்லை. அவை பெரும்பாலும் நேர்கின்றன.” 

செய்து திட்டமிடும் சதிக்கும், நேரும் சதிக்கும் வேறுபாடு என்ன இரத்தினமாலை?”

திட்டமிட்டசதி இங்கு வந்ததிலிருந்து நீங்கள் என்னை வெறுக்க முயன்றது. நேரும் சதி முடிவில் நான் உங்கள் அன்பை அடைந்தது.”

என் கட்டுப்பாட்டை நீ சதி என்று வருணிக்கிறாய்! அது தவறு.”

தேரை வடத்தால் கட்டவேண்டும்! பூக்களை நாரால் கட்டவேண்டும்! அதுதான் முறையான கட்டுப்பாடு. நீங்களோ தேர்களை நாராலும், பூக்களை வடத்தாலும் கட்டுகிறவராயிருக்கிறீர்கள்! ‘நார் என்ற பதத்திற்குத் தமிழில் நுண்ணிய அன்பு என்று ஒர் அர்த்தமிருப்பதை நீங்கள் அறிந் திருப்பீர்கள்.”

நார் எதற்கு? இந்தப் பூவைக் கைகளாலேயே கட்டலாமே!” - என்று கூறியபடியே மீண்டும் இரத்தின மாலையின் பொன்னுடலைத் தழுவினான் அவன்.

இந்தக் கட்டுப்பாட்டில் நான் மலராகிறேன். மணக்கிறேன். மாலையாகிறேன்.”

போதும்! உன் உடல் அழகிலேயே நான் மயங்கித் தவிக்கிறேன். சொற்களின் அழகையும் தொடுத்து என்னைக் கொல்லாதே இரத்தினமாலை! உன் பார்வையே பேசுகிறது. இதழ்களும் பேசினால் இரண்டில் நான் எதைக் கேட்பது?” என்றான் அவன்.

அவள் அவன் நெஞ்சில் மாலையாய் குழைந்து சரிந்தாள். “இப்போது இது சிறையா, பாதுகாப்பா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்...” என்று அவனை வம்புக் கிழுத்தாள். புது நிலவும் பொதிகைத் தென்றலும் மதுரைத் தென்றலும் அழகுத் தென்றலும் வீணாகாத அந்த மேன் மாடத்து நல்லிரவுக்குப் பின்விடிந்த வைகறையில் ஒரு புதிய செய்தியோடு புதிதாக அங்கு வந்து சேர்ந்திருந்தவனோடும் இளையநம்பியை எதிர்க்கொண்டான் அழகன்பெருமாள்.

 

35. இன்னும் ஒர் ஒலை

 

தோளிலும் மார்பிலும் சந்தனம் மணக்க, பூக்களின் வாசனை கமழ, முந்திய இரவின் நளின நினைவுகள் நெஞ்சில் இனிமை பரப்ப இளையநம்பி விழித்து எழுந்திருந்து மேன்மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது அழகன் பெருமாள் திருமோகூர் வேளாளர் தெருக் கரும்பொற் கொல்லனோடு காத்திருந்தான். அவனும், கொல்லனும் இளையநம்பியின் வருகைக்காகவே காத்திருப்பது போலிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்பும் தோற்றத்தின் தனித்தன்மை காரணமாக அந்தக் கரும்பொற்கொல்லனை இளையநம்பிக்கு நன்றாக நினைவிருந்தது. திருமோகூர்ப் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திப்பதற்காக வந்தபோது தான் காணநேர்ந்தது முதல் தன் மனிதன் இவனே என்ற ஞாபகத்தையும் தவிர்க்க முடியவில்லை. மலரும் முகத்தில் புன்னகையைப் புன்னகையால் எதிர்கொண்டு அந்தக் கரும்பொற்கொல்லனை வரவேற்றான் இளையநம்பி. இளையநம்பி எதிர்பார்க்கவில்லை என்றாலும்கயல் என்று நல்லடையாளச் சொல்லைக் கூறிவிட்டே அவனை வணங்கினான் கரும் பொற்கொல்லன். சிரித்தபடியே இளையநம்பி அவனிடம் கூறினான்: “நண்பனே பயப்படவேண்டிய அவசியமில்லை! நீ அழகன் பெருமாளோடு வந்து என் எதிரே நிற்கிறாய்... நல்லடையாளச் சொல்லைக் கூறாவிட்டாலும் உன்னை நான் நம்புவேன். நீ நம்மைச் சேர்ந்தவன்.”

இப்படிக் கூறிய சுவட்டோடு இந்த வார்த்தைகளால் தான் முன்பு திருமோகூரில் நுழைந்த நாளன்று அவன் தன்னை நம்பாமல் நல்லடையாளச் சொல்லை எதிர்பார்த்துச் சோதனை செய்ததை இப்போது அவனிடம் குத்திக் காட்டத் தான் முயல்வதாக அவன் புரிந்துவிடக் கூடாதே என்று தயங்கவும் செய்தான் இளையநம்பி.

நீ அன்று திருமோகூரில் நான் முதல் முதலாக நுழைந்த தினத்தன்று என்னிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்காத வரை எனக்கு வழி கூறாமலிருந்த பிடிவாதத்தை நான் பாராட்டுகிறேன். கட்டுப்பாடும் உறுதியும்தான் இன்று நமக்கு வேண்டும். இனிய வார்த்தைகளைக் கேட்டு மனம் நெகிழ்கிறவனை நண்பனும் நெகிழச் செய்யமுடியும். பகைவனும் நெகிழச் செய்துவிட முடியும். நீ அப்படி நெகிழாதவனாக இருந்ததை நான் வரவேற்கிறேன் - என்று அந்தக் கொல்லன் தன்னுடைய முன்வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாமலிருப்பதற்காக இளையநம்பி மேலும் தொடர்ந்து அவனோடு பேசினான். ஆனால் அவனோ மிகமிக விநயம் தெரிந்தவனாக இருந்தான். அவன் பணிவாகப் பேசினான்: “ஐயா எப்படி இருந்தாலும் அன்று தங்களுக்கு மறுமொழி கூறாததற்காகத் தாங்கள் எளியேனைப் பொறுத்தருள வேண்டும். இரும்போடு பழகிப் பழகிப் பல வேளைகளில் என் மனமும் இரும்பாகி விடுகிறது.”

அப்படி இருப்பதை நான் வரவேற்கிறேன். ஒவ்வொருவர் மனமும் இரும்பாக இல்லையே என்பதுதான் இப்போது என் வருத்தம். இரும்பைப்போல் உறுதியான மனம் நம்மவர்கள் எல்லோருக்கும் இருந்தால் என்றோ களப்பிரர்களை இந்த நாட்டிலிருந்து நாம் துரத்தியிருக்கலாம்...”

-என்று இளையநம்பி கூறிய மறுமொழி கொல்லனின் முகத்தை மலரச் செய்தது. சிறிது நேரத்தில் அந்தக் கரும்பொற்கொல்லன் எப்போது வந்தான், என்ன காரியமாக வந்தான் என்பதையெல்லாம் இளையநம்பி அழகன் பெருமாளிடம் வினாவினான். 

நேற்று முன்தினம் இரவில் தேனூர் மாந்திரீகன் வந்தது போல்தான் இவனும் நிலவறை வழியாகப் பின்னிரவில் நேற்று இங்கே வந்தான். நாம் கலந்து பேசவும் திட்டமிடவும் நிறையச் செய்திகள் இருக்கின்றன. நீங்கள் உறங்கி எழுந்த சோர்வோடு இருப்பதாகத் தெரிகிறது. நீராடி வாருங்கள்! பேசலாம் -என்றான் அழகன்பெருமாள். தன்னைத் தவிரப் பிறர் அனைவரும் நீராடிக் காலைக் கடன்களை எல்லாம் முடித்து ஆயத்தமாயிருப்பதைக் கண்டு இளையநம்பி நீராடுவதற்கு விரைந்தான். காலந்தாழ்ந்து எழுந்ததற்காக அன்று அவன் வெட்கப்பட்டான்.

கூடத்தில் மயில்தோகை விரித்திருப்பதுபோல் அமர்ந்து இரத்தினமாலை ஈரக் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் வரக் கண்டதும் அவள் நாணத்தோடு எழுந்து நிற்க முயன்றாள்.

நீ எழுந்து நிற்க வேண்டாம் உன் செயலைக் கவனி என்பது போல் கையினாற் குறிப்புக் காட்டிவிட்டுப் புன்முறுவல் பூத்தபடி மேலே நடந்தான் அவன். அவள் கூந்தலின் நறுமணமும், அகிற்புகை வாசனையும் வந்து அவன் நாசியை நிறைத்துக் கிறங்கச் செய்தன. இந்த நறுமணங்கள் எல்லாம் அவள் பொன்மேனியின் நறுமணங்களை அவனுக்கு நினைவூட்டின. நீராடுவதற்குச் செல்ல இருந்தவன் தேனூர் மாந்திரீகனின் நினைவு வரப்பெற்றவனாகத் திரும்பச் சென்று அவனைக் கண்டான். இளையநம்பி காணச் சென்றபோது, அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தான். புண்கள் ஒரளவு ஆறியிருந்தன. இளையநம்பியைக் கண்டதும், அவன் முகம் மலர்ந்தான். அவனை அன்போடு விசாரித்த பின் சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிக் கொண்டிருந்துவிட்டுப் பின்பு நீராடச் சென்றான் இளையநம்பி, அவன் உடல் நீராடியது என்றாலும் மனம், வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற் கொல்லன் சொல்லப் போகும் செய்திகள் என்னவாக இருக்கும் என்று அறிவதிலேயே இருந்தது.

நீராடி முடிந்ததும் நகரின் திருவாலவாய்ப் பகுதி இருந்த திசை நோக்கி இறையனார் திருக்கோயிலை நினைத்து வணங்கினான் அவன். தமிழ்ச் சங்கத்தின் முதற்புதல்வராக அமர்ந்து பெருமைப்பட்ட கண்ணுதற் பெருங்கடவுளைக் கோயிலுக்கே சென்று வழிபடவும் வணங்கவும் முடியாதபடி இருப்பதை எண்ணி அவன் உள்ளம் வருத்தியது. ஈர உடையோடு கண்களை மூடி தியானித்து இறையனார் நினைவுடனே வழிபட்டு விழிகளைத் திறந்து கண்டால் எதிரே அவன் அணியவேண்டிய மாற்றுடைகளோடு இரத்தின மாலை நின்றாள்.

ஒரு பெண்ணின் காதலால் எவ்வளவு கெடுதல் பார்த்தாயா இரத்தினமாலை? விழித்துக் கொள்ளவேண்டிய நேரத்தில் உறங்கிப்போய் விடுகிறோம்...”

உறங்க வேண்டிய நேரத்தில் உறங்காவிட்டால் விழித்துக் கொள்ளவேண்டிய நேரத்தில் விழித்துக் கொள்ள முடியாதுதான்.” 

அப்படியா? தயை செய்து அதற்கு யார் காரணமென்று இப்படி என் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்து மறுமொழி சொல்லேன் பார்க்கலாம். உறங்கவேண்டிய நேரத்தையும், விழிக்க வேண்டிய நேரத்தையும் மாற்றிய குற்றத்துக்குக் காரணம் யாரோ?”

இதைக் கேட்டு நாணிச் சிவக்கும் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு ஓடிவிட்டாள் அவள். இந்தப் புதிய வெட்கம், இந்தப் புதிய வேற்றுமை எல்லாம் அவனுக்கு வியப்பைத் தந்தது. உடை மாற்றிக்கொண்டு அவன் கூடத்துக்கு வந்தபோது அங்கே அழகன் பெருமாள், திருமோகூர்க் கொல்லன் கட்டிலில் அமர்ந்தபடியே தேனூர் மாந்திரீகன், இரத்தினமாலை எல்லாரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையநம்பி வந்ததும் அவர்கள் பேச்சுத் தணிந்து ஓய்ந்தது. திருமோகூர்க் கொல்லனைப் பார்த்து இளையநம்பி கேட்டான்.

நீ உபவனத்து முனை வழியேதான் நிலவறையில் நுழைந்து வந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உபவனத்து நிலைமை எப்படி இருக்கிறது? களப்பிரர்கள் அதைக் கடுமையாகக் கண்காணிக்கிறார்களா?”

அடியேன் முன்வாயில் வழியே நேராக உபவனத்தில் நுழைந்து வரவில்லை. இருளோடு இருளாக வையையில் குறுக்கே நீந்தி நீரைக் கடந்து மறைந்து வந்து உபவனத்து நிலவறை முனையில் இறங்கி இவ்விடத்தை அடைந்தேன். உபவனத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இப்படி ஒரு நிலவறைப் பாதை தொடங்குமென்று பூதபயங்கரப் படையினருக்குச் சந்தேகம் இருக்குமானால் வனம் முழுவதும் படைவீரர்களை நிரப்பிக் காவல் செய்திருப்பார்கள்.” 

அப்படியானால் இப்போது உபவனத்தில் கடுமையான காவல் இல்லையா?” 

நான் அப்படிச் சொல்லவில்லையே! அந்தக் கடுமையான காவலை நான் ஏமாறச் செய்துவிட்டு வந்திருக்கிறேன் என்பதனால் காவலே இல்லை என்று ஆகிவிடாது...” என்று கொல்லன் கூறிக் கொண்டிருக்கும் போதே -

காவல் மிகவும் கடுமையாக இருக்கிறது என்பதற்கு நான் சாட்சி -என்பதாகத் தேனூர் மாந்திரீகன் குறுக்கிட்டுச் சொன்னான். “பாதுகாப்பும், கட்டுக்காவலும் அகநகரில் வெள்ளியம்பலத்து முனையில் கடுமையாக இருக்கும். நம் தேனூர் மாந்திரீகன் செங்கணான் கூறுவதிலிருந்து பாண்டிய வேளாளர்கள் வசிக்கும் சுற்றுப்புறத்துச் சிற்றுார் களையும் களப்பிரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லாமற் போனதற்குக் காரணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும் - என்று அழகன்பெருமாள் கூற முற்பட்டான். புதியவன் வாயிலாக நிலைமைகளை அறிய முற்படும் தன்னிடம் செங்கணானும் அழகன்பெருமாளுமே நிலைமைகளைக் கூற முற்படவே இளையநம்பிக்கு அவர்கள் மேல் கோபமே வந்தது. அழகன்பெருமாளையும், செங்கணானையும் உறுத்துப் பார்த்தான் அவன். அந்தப் பார்வை அவர்கள் பேச்சைத் தடுத்தது. அவர்கள் பேச்சு நின்றதும், “இத்தகைய சூழ்நிலையில் உயிரைப் பொருட்படுத்தாமல், நீ இங்கே எங்களைத் தேடிவந்திருக்கிறாய் என்றால் அதற்குரிய காரியம் ஏதேனும் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் - என்று அவன் திருமோகூர்க் கொல்லனை நோக்கிக் கேட்டவுடன் அந்தக் கொல்லன் தன் கையோடு கொண்டு வந்திருந்த தாழை ஓலையால் நெய்து, முடியும் இட்ட ஓலைக் குடலையை எடுத்துத் திறந்தான். அடுத்த சில கணங்களில் சிறிய ஓலைச் சுவடி ஒன்றைப் பத்திரமாக எடுத்து இளைய நம்பியிடம் கொடுத்தான் அவன். இளையநம்பி அதை வாங்கினான்.

அப்படிக் கொடுப்பதற்காகக் குடலையிலிருந்து சுவடியை எடுத்தபோது கையோடு வந்த மற்றோர் ஓலையை மறுபடியும் குடலையிலேயே இட்டு மூடிவிட்ட அவன் செயலை இளையநம்பி கண்டான்.

அது என்ன ஓலை நண்பனே? என்னைத் தவிர வேறெவர்க்கும் கூட நீ ஓலை கொண்டு வந்திருக்கிறாயா?”

அந்தக் கொல்லன் மறுமொழி சொல்லத் தயங்கினான். விடாமல் மீண்டும் இளையநம்பி அவனை துளைத்தெடுப்பது போல் கேட்கவே அவன் பதிலளிக்க வேண்டியதாயிற்று.

ஐயா! இதுவும் தங்களிடம் சேர்க்கப்பட வேண்டியது தான். ஆனால்... அவ்வளவிற்கு முதன்மையானதல்ல... தாங்கள் அந்த ஓலையை முதலில் படிக்கவேண்டும் என்பது அவ்விடத்து விருப்பம்...”

சற்றே தாமதமாகத் தன்னிடம் சேர்க்கப்படுவதற்கு இன்னோர் ஓலையும் இருக்கிறது என்று தெரிந்ததும் அதைப் பற்றிய ஆவலுடன் விரைந்து இதைப் பிரித்தான் இளைய நம்பி. சுவடியின் ஒவ்வோர் ஓலையிலும் நல்லடையாளச் சொல் பொறிக்கப்பட்டிருந்தது.

பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லை என்ற அந்துவனின் ஓலைச் செய்தி நினைவு வரவே, தன் கையிலிருந்த ஓலையைப் படிக்கு முன், -

இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்?” -என்று கொல்லனைக் கேட்டான் இளையநம்பி,

நான் எங்கிருந்து வருகிறேனோ அங்கிருந்து ஓலையும் வரவேண்டும் என்பதாக அனுமானித்துக் கொள்ள முடியாது - என்றான் அவன். இளையநம்பிக்கு முதலில் அது புரிய வில்லை. ஆனால் அந்த ஓலையைப் படிக்கத் தொடங்கியதும் அவன் கூறிய மறுமொழியின் பொருள் புரியலாயிற்று.

 

36. பெரியவர் பேசுகிறார்

 

திருக்கானப்பேர் பாண்டிய குல விழுப்பரையர் தவப்பேரன் இளையநம்பி காணவிடுக்கும் ஓலை. இந்த ஓலையை நான் எங்கிருந்து எழுதுகிறேன் என்பதைவிட எதற்காக எழுதுகிறேன் என்பதையே இதைப் படிக்கத் தொடங்கும்போது நீ சிந்திக்க வேண்டும். இவ்வோலை உன்னை நலனோடும் திடனோடும் கூடிய நிலையில் காண வாழ்த்துகிறேன். பல நாட்களுக்கு முன்பாக யான் அந்துவன் மூலம் உனக்கு அறிவிக்கச் சொல்லியிருந்த மூன்று குறிப்புகள் இதற்குள் உனக்கு அறிவிக்கப்பட்டனவா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. களப்பிரர்களின் கொடுமை அதிகரிப்பதால் அகநகருக்கும் நமக்கும் தொடர்புகள் பெரும்பாலும் அற்றுவிட்டன. எதுவும் தெரியவில்லை. எதையும் தெரிவிக்கவும் முடியவில்லை. சிற்றூர்கள் தோறும் தங்கள் எதிரிகளைத் தேடிக் கருவறுக்கக் களப்பிரர்கள் பூதபயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள். முறையோ, நியாயமோ, நீதியோ இன்றிச் சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவும், சிறைப் பிடிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நம்மைச் சேர்ந்தவர்களில் மிகவும் சாதுரியமுள்ளவனும், உடல் வலிமை மிக்கவனும் ஆகிய திருமோகூர்க் கரும்பொற்கொல்லன் மூலமாக இந்த ஓலையை உனக்குக் கொடுத்துவிட எண்ணியுள்ளேன்.

நானும், காராளரும், மற்றவர்களும் நினைத்துத் திட்டமிட்டதும், எதிர்பார்த்ததும் வேறு; நடந்திருப்பது வேறு. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போய்விட்டது. உனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று யானைப்பாகன் அந்துவன் மூலம் ஏற்கெனவே தெரிவித்தவற்றை இந்த ஓலை மூலம் மேலும் விளக்குவதுதான் என் நோக்கம். பொதுவாக நான் எழுத்தாணி பிடித்து ஓலைகள் எழுதுவதில்லை. எழுதினாலும் நீண்ட வார்த்தைகளால் பெரிதாக எழுதுவது வழக்கமில்லை. அதிக வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். திருமோகூர்ப் பெரியகாராளர் என் அருகே இல்லாததால் நானே எழுதவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிகம் எழுதவேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை.

அன்று பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதையின் சித்திரவண்டிகளின் பூங்குவியலில் மறைந்து நீ கோநகருக்குள் நுழைந்தபோது எல்லாம் சோதனை இன்றி முடிந்து விட்டதாகவே நீயும் பிறரும் நினைக்கிறீர்கள். அப்போது உங்கள் வண்டிகளைச் சோதித்த இரு பூதபயங்கரப்படை வீரர்களின் ஒருவனின் ஐயப்பாட்டாலும், வெள்ளியம்பலத் தருகே அடுத்தடுத்துப் பிடிபட்ட இருவராலும் எல்லாத் திட்டமும் பாழாகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்ட போதே கோநகரின் கோட்டை மதில் களுக்குள்ளிருந்து நமது வலிமையும் அகற்றப்பட்டு விட்டது. பிடிபட்ட ஒற்றர்களிடம் ஆயுதங்கள் இருந்திருக்கும். களப்பிரர்கள் அவர்களை யாத்திரீகர்கள் என்று நம்புவதற்கும், ஒப்புக்கொள்வதற்கும் அந்த ஆயுதங்களே தடையாகியிருக்கும். புறத்தே வெளிப்பட்டுத் தெரியாததும், அங்கியிலும் இடுப்புக் கச்சையிலும் மறைந்துவிடக் கூடியதுமான சிறுசிறு வாள்கள் ஒவ்வொரு யாத்திரீகனிடமும் இருக்கலாம். நல்ல வேளை சூழ்நிலை பொருந்தி வரவில்லை என்றால் யாத்திரீ கர்களாகவே உள்ளே நுழைந்தது போல் யாத்திரீகர்களாகவே கோட்டைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்திகள் எல்லாம் ஒரு நிலைமைவரை உனக்கே தெரிய வேண்டாம் என்று நானும் காராளரும், பிறகும் நினைத்தோம். அழகன்பெருமாள்கூடச் சொல்லியிருக்க மாட்டான். ஆண்டாண்டுகளாகத் திட்டமிட்ட பூசலில் வெற்றி அடைந்தபின் அந்த வெற்றியை உனக்கு அறிவித்து உன்னை மகிழச் செய்யலாம் என்றிருந்தோம். அப்படிச் செய்ய இயலாமல் போய்விட்டது. இதற்காக அழகன் பெருமாளைக் கோபித்துக் கொள்ளாதே. அவனைப்போல் நம்பிக்கையும், பாண்டிய மரபின்மேல் அரச விசுவாசமும் உள்ள ஓர் ஊழியனை ஈரேழு பதினான்கு புவனங்களிலும் தேடினால்கூட நீகாணமுடியாது.”

இந்த இடத்தில் ஓரிரு கணங்கள் ஓலையைப் படிப்பதிலிருந்து சிந்தனை விலகி முந்தியதினம் முன்னிரவில் தான் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்டு அழகன் பெருமாளும், தேனுர் மாந்திரீகன் செங்கணானும் தங்களுக்குள் உரையாடிய வார்த்தைகளை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் இளையநம்பி. அந்த உரையாடலின் பொருள் இப்போது அவனுக்குத் தெளிவாக விளங்கத் தொடங்கியது. மேலே ஓலையைப் படிக்கத் தொடங்கினான் அவன்.

வெள்ளியம்பலத்தருகே நம்மவர்கள் பிடிபட்ட செய்தி யானைப்பாகன் அந்துவனால் எனக்குக் கூறியனுப்பப்பட்ட நாளன்றுதான் தென்னவன் சிறுமலை மாறன் என்னும் பாண்டியகுல வேளாளன் என்னைச் சந்திக்க மோகூர் வந்திருந்தான். இந்தத் தென்னவன் மாறன் யார் என்பதை நீ தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. பின்பொரு சமயம் நீ இவனைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது அதற்காகக் கவலைப்படாதே! இந்தப் பிள்ளையாண்டான் என்னைச் சந்திக்க வந்த தினத்தன்று நள்ளிரவில்தான் சோதனைகள் மோகூரிலும் வந்து சேர்ந்தன. திடீரென்று தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் போல் பலநூறு பூதபயங்கரப் படை வீரர்கள் இருளோடு இருளாகப் பெரிய காராளரின் மாளிகையையும், அறக்கோட்டத்தையும் வந்து வளைத்துக் கொண்டார்கள். பெரிய காராளரின் விருந்தினனாகத் தங்கியிருந்த தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானும், அறக் கோட்டத்து மல்லனும் தந்திரமாக நடந்து கொள்ளத் தோன்றாமல் களப்பிரப் பூதபயங்கரப் படையினரை எதிர்த்து உணர்ச்சி வசப்பட்டுப் போரிட முயன்றதால், எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். காராளரும் அவர் குடும்பத்தினரும் மாளிகையோடு சிறை வைக்கப்பட்டதுபோல் முடக்கப்பட்டு விட்டார்கள். உடனே இரவோடு இரவாக நானும் ஆபத்துதவிகளும் முனையெதிர் மோகர் படையினரும் மோகூரிலிருந்து வேறு திசையில் புறப்பட்டுக் குடிபெயர்ந்து விட்டோம். காராளரின் நிலைமைதான் இரங்கத்தக்கதாகி இருக்கிறது; பாண்டியகுலம் தலையெடுக்க உதவிய அந்த உபகாரிக்குச் சோதனை நேர்ந்திருக்கிறது. அவருடைய களஞ்சியங்களிலிருந்து அரண்மனைக்கு நெல் எடுத்துச் செல்லும் வண்டிகளைக்கூட இப்போது களப்பிரர்களே கோட்டைக்குள் ஓட்டிச் செல்கிறார்களாம். அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லனுப்புகிறவர் என்பதனால் அவர்மேல் களப்பிரர்களுக்கு இருந்த அன்பும், பிரியமும்கூட மாறிவிட்டதாம். ஆனாலும் இவ்வளவு நாள் தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் வரையாமல் வாரி வழங்கிய ஒரு வள்ளலைத் திடீரென்று கடுமையாகத் தண்டிக்கவும் மனம் வராமல் மாளிகையை விட்டு வெளியேற முடியாமல் கண்காணிக்கிறார்களாம். இந்த நிலையில் எனக்கும் அவருக்கும் நடுவே அறியவும் அறிவிக்கவும் பயன்படும் ஒரே பொது மனிதன்தான் திருமோகூரில் எஞ்சியிருக்கிறான். உழவர்களின் கலப்பைக்குக் கொழு அடிக்கும் அந்தக் கொல்லன் தன்மேல் களப்பிரர்களின் கண்கள் சந்தேக முற்று விடாதபடி மிக மிகச் சாதுரியமாக இருக்கிறான். இப்போது நான் இருக்கும் புதிய இடத்திற்கு அவனை வரவழைத்து, அவனிடம் இந்த ஓலைகளைக் கொடுத்து முதலில் காராளரை இதைப் படிக்கச் செய்துவிட்டுப் பின்பு அவரிடமிருந்து மீண்டும் வாங்கி உன்னிடம் இதைக் கொண்டு வந்து சேர்க்கச் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எழுத என்னால் முடியவில்லை. உன்னை விளித்து எழுதப்பட்டிருக்கும் இந்த ஓலையை நீ உரிய காலத்தில் அடைவாயானால் உனக்கு முன்பே இதைப் பெரிய காராளரும், இந்த ஓலையைக் கொண்டுவரும் கொல்லனும் படித்திருப்பார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். நீ இதனைப் படித்தபின் அழகன்பெருமாளும், இரத்தின மாலையும் இதைப் படிக்குமாறு செய்யவேண்டியதும் உன் கடமை.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய புதிய இருப்பிடத்தை அறிவிக்காமல் இதை எழுதுவதற்குக் காரணம் உண்டு. ஒருவேளை இந்த ஓலை உங்களுக்கு வந்து சேராமல் அசம்பாவிதங்கள் நேருமானால் அபாயம் எங்கள் இருப்பிடத்தையும் தேடி வராமல் தடுப்பதுதான் என் நோக்கம். என் இருப்பிடம் தெரிந்தால் ஆர்வத்தை அடக்க முடியாமல் உங்களில் யாராவது காண வந்து என்னையோ, உங்களையோ அபாயத்துக்கு ஆளாக்கிக் கொள்வதையும் இப்போதுள்ள சூழ்நிலையில் நான் விரும்பவில்லை. ஆலவாய் அண்ணல் திருவருள் இன்னும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. அது கிடைக்கும் வரை நாம் விழிப்பாகவே இருக்க வேண்டும். குறிப்பாய் நீ மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இளையநம்பி விதை நெல்லை அழித்து விட்டால் அப்புறம் பயிரிட முடியாமற் போய்விடும். எனவே, இப்போது உங்களை என் சார்பில் தேடி வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற் கொல்லனை அவன் அறிந்திருக்கக் கூடும் என்ற காரணத்தினால் நான் தங்கியிருக்கும் இடத்தைக் கூறுமாறு உங்களில் எவரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. இது என் கடுமையான கட்டளை. இதை நீங்கள் மீறினால் நம்மைச் சுற்றி தப்ப முடியாத பயங்கர விளைவுகள் ஏற்பட்டு விடும்.

என்னுடைய மூன்று கட்டளைகளில் - அதாவது அந்துவன் மூலம் நான் தெரிவித்தவற்றில் - முதற் கட்டளை எல்லாருக்குமே பொருந்தும். என்னை நீங்கள் எல்லாருமோ, உங்களில் ஒருவரோ வந்து காணவேண்டிய காலத்தையும் இடத்தையும் நானே அறிவிப்பேன். அதுவரை நீங்கள் தேடவோ, ஆர்வம் காட்டவோ கூடாது. இரண்டாவது கட்டளையை அழகன் பெருமாளும் அவனைச் சேர்ந்தவர் களுமே நிறைவேற்ற வேண்டும். தென்னவர் மாறனையும், மல்லனையும் சிறை மீட்கும் முயற்சியில் இளையநம்பி ஈடுபடக் கூடாது. மூன்றாவது கட்டளைக்கு எல்லாருமே பொறுப்பாவார்கள். கணிகை இரத்தினமாலை, அழகன் பெருமாள், பிறர், அனைவருமே திருக்கானப்பேர் நம்பியைப் பாதுகாக்க வேண்டும். இவற்றை என் ஆணையாக அனைவரும் மதிக்க வேண்டுகிறேன்.” ஓலையின் ஒவ்வொரு சொல்லும் பெரியவரே எதிர் நின்று பேசுவன போலிருந்தன.

இவ்வளவில் ஓலைகள் முடிந்து அடையாள இலச்சினை பொறித்திருந்தது. அந்த ஓலைகளை அடுத்துப் படிக்க வேண்டிய முறைப்படி அழகன்பெருமாளிடம் உடனே கொடுத்து விட்டு மிகவும் ஞாபகமாக,

எங்கே? அந்த மற்றோர் ஓலை?'-என்று கொல்லனை நோக்கிக் கை நீட்டினான் இளையநம்பி.

கொல்லன் மீண்டும் தயங்கினான். அந்த ஓலையை அவர்கள் அனைவருக்கும் நடுவில் அவன் இளையநம்பியின் கையில் எடுத்துத் தரத் தயங்குவதாகத் தெரிந்தது.
 
 

37. கொல்லனின் சாதுரியம்

 

திருமோகூர்க் கொல்லன் அந்த இரண்டாவது ஓலையைத் தன்னிடம் கொடுப்பதற்கு அவ்வளவு தூரம் ஏன் தயங்குகிறான் என்பது இளைய நம்பிக்குப் புதிராயிருந்தது. ஆனாலும் அந்தத் தயக்கமே ஆவலை வளர்ப்பதாகவும் இருந்தது. தன்னைச் சுற்றி இருந்தவர்களை ஒருமுறை பார்வையால் அளந்த பின் தன்னைத் தொடர்ந்து வருமாறு அவனுக்குக் குறிப்புக் காட்டிவிட்டுச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றான் இளையநம்பி. கொல்லன் பின் தொடர்ந்து வந்தான்.

ஆனால் சந்தனம் அறைக்கும் பகுதியிலும் அவர் களுக்குத் தனிமை வாய்க்கவில்லை. அங்கே நிலவறை வழிக்குக் குறளன் காவலாக இருந்தான். குறளனைச் சில கணங்கள் புறத்தே விலகி இருக்குமாறு வேண்டிக் கொண்ட பின் திருமோகூர்க் கொல்லனை உள்ளே அழைத்தான் இளைய நம்பி, உள்ளே வந்ததுமே இளையநம்பி எதிர்பார்த்ததுபோல் உடனே ஓலையை எடுத்து நீட்டி விடவில்லை அவன்.

ஐயா! இந்த ஓலையைக் கொடுப்பதற்கு முன் நான் ஏன் இவ்வளவு எச்சரிக்கையும், பாதுகாப்பும் தேடுகிறேன் என்று நீங்கள் வியப்பு அடையலாம். இதை யார் என்னிடம் சேர்த்தார்களோ அவர்களுடைய விருப்பம் அப்படி. அந்த விருப்பத்தைக் காப்பாற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.”

புரியும்படியாக விளக்கிச் சொல்! ‘நீ என்ன கடமைப் பட்டிருக்கிறாய்? யாருக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்?’ என்பதை எல்லாம் என்னால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.”

அரசியற் கடமைகளைவிட அன்புக் கடமை சில வேளைகளில் நம்மை அதிகமாகக் கட்டுப்படுத்தி விடுகிறது ஐயா!”

பாயிரமே பெரிதாகயிருக்கிறதே அப்பனே! சொல்ல வேண்டியதைச் சொன்னால் அல்லவா இவ்வளவு பெரிய பாயிரம் எதற்கென்று புரியும்?”

கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! பெரியவரைக் காண்பதற்கு அவர் இருப்பிடம் செல்லுமுன் மாளிகையோடு மாளிகையாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் திருமோகூர்ப் பெரிய காராள வேளாளரைச் சந்திக்க முயன்றேன். பூத பயங்கரப் படையினர் முதலில் கடுமையாக மறுத்தார்கள். அந்தப் படையினரை என்னை நம்ப வைப்பதற்காக என் உலைக் களத்தில் அவர்கள் வாள், வேல்களைச் செப்பனிடும் பணிகளை மறுக்காமற் செய்திருந்தேன். மேலும்காராளருடைய உழுபடைகளுக்கு எல்லாம் கலப்பைக்குக் கொழு அடிப்பவன் என்ற முறையில் அவரைப் பார்க்க வேண்டுமே தவிரச் சொந்த முறையில் அவரிடம் எனக்கு எந்த அரசியல் வேலையும் இல்லை! சந்தேகம் கொள்ளாமல் என்னை அவரைக் காணவிட வேண்டும் என்று அவர்களிடம் மன்றாடினேன். நான் அவ்வளவு மன்றாடியபின்கால் நாழிகைப்போது அவரைக் காணலாம் என்று அவர்கள் இணங்கினார்கள். நான் அவ்வாறு பெரிய காராளரைச் சந்தித்தபோது அவருடைய திருக்குமாரி செல்வப் பூங்கோதையும் உடனிருந்தாள். நான் அந்த மாளிகையிலிருந்து வெளி யேறும்போது, பெரியகாராளர் மகள் என்னருகே வந்துஇந்த விஷயம் என் தந்தைக்கோ பெரியவருக்கோ தெரியக்கூடாது. தயைகூர்ந்து நான் தரும் ஓலையைத் திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரிடம் சேர்த்துவிட முடியும் அல்லவா?’ என்று பரம ரகசியமாக என்னிடம் உதவிக்கோரினாள். அதற்கு, ‘அம்மா! இப்போது நான் கூடல் மாநகருக்குச் செல்லப் போவதில்லை. இரவோடு இரவாகப் பயணம் செய்து பெரியவர் மதுராபதி வித்தகர் புதிதாக அஞ்ஞாத வாசம் செய்யும் இடத்திற்கு வரச் சொல்லிக் கட்டளை வந்திருக்கிறது. மீண்டும் எப்போதாவது நான் கூடல் மாநகருக்குச் செல்லவேண்டியதாக நேர்ந்தால் அப்போது உனக்கு இந்த உதவியைச் செய்வேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டேன். பெரியவரைச் சந்தித்த பின் அவரே தம்முடைய ஓலையை முதலில் பெரியகாராளரைப் படிக்கச் செய்த பின்புதான் மதுரை மாநகருக்கு எடுத்துச் சென்று தங்களிடம் ஓலையைக் காண்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதனால் நான் மீண்டும் திருமோகூரை அடைந்து அரிய முயற்சி செய்து கட்டுக் காவலில் இருந்த பெரியகாளாரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் தந்தைக்கும் தெரியாமல் இந்த ஓலையை என்னிடம் கொடுத்து உங்களிடம் சேர்த்துவிடச் சொல்லி அந்தப் பெண் கண்களில் நீர் நெகிழ வேண்டினாள். அந்தப் பெண்ணின் கைகளால் காராளர் வீட்டில் எவ்வளவோ நாட்கள் நான் வயிறார உண்டிருக்கிறேன் ஐயா! அவள் கண்களில் நீரைப் பார்த்ததும் என் மனம் இளகிவிட்டது. அவளுடைய வேண்டு கோளை நான் மறுத்துச் சொல்ல முடியவில்லை. அவள் கொடுத்த ஓலையையும் நான் வாங்கிக் கொண்டேன். பெரியவர் கொடுத்த ஓலை, நீங்கள், நான் காராளர், அழகன்பெருமாள் எல்லாரும் அறிந்தது. எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் இந்த ஓலை இதை எழுதியவரைத் தவிர நீங்கள் மட்டுமே அறியப்போவது. உங்களுக்கு மட்டுமே உரியது.”

சிரித்துக்கொண்டே பட்டுக்கயிறு இட்டுக்கட்டிய அந்த இரண்டாவது ஓலையை எடுத்து இளைய நம்பியிடம் நீட்டினான் அவன்.

இவ்வளவு அரிய முயற்சிகளும், செய்திகளும் அடங்கிய ஓலையையா, அவ்வளவிற்கு முதன்மையான தல்ல என்று தொடக்கத்தில் என்னிடம் கூறினாய் நீ?” என்று வினாவியபடி கொல்லன் கொடுத்த ஓலையை வாங்கினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் தயங்காமல் உடனே அதற்கு மறுமொழி கூறினான்:

தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ஐயா! ஒரு காரணத்துக்காகத் தங்கள் நன்மையையும், பெரிய காராளரின் மகளுடைய நன்மையையும் நினைத்தே நான் முதலில் எல்லார் முன்னிலையிலும் அப்படிச் சொல்லியிருந்தேன். சுற்றி நின்று கொண்டிருந்த மற்றவர்கள் கவனம், ‘இந்த இரண்டாவது ஓலை என்னவாக இருக்கும்?’ என்று இதன் பக்கம் திரும்பக் கூடாது என்பதற்காகவே, அவ்வளவிற்கு இது முதன்மையானது அல்ல என்று எல்லாரும் கேட்கக் கூறியிருந்தேன். மற்றவர்கள் கவனம் எல்லாம் உங்களிடம் நான் முதலில் படிக்கக் கொடுத்த பெரியவரின் கட்டளை ஓலையைப் பற்றியதாக மட்டுமே இருக்கட்டும் என்பதற்காக நான் இந்தத் தந்திரத்தைச் செய்தேன். இதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்குப் பதிலாக நீங்களே குறை சொல்கிறீர்களே ஐயா?”

இன்னும் சிறிது நேரம் உன்னைப் பேசவிட்டால் எது எதற்காக நான் உன்னைப் பாராட்ட வேண்டியிருக்குமோ அதற்கெல்லாம் எனக்கு வாய்ப்பே இல்லாமல் நீயாகவே உன்னைப் பாராட்டிக்கொண்டு விடுவாய் போலிருக்கிறதே? பாராட்டை எதிர்பார்க்கலாம். ஆனால் வற்புறுத்தவோ, கோரிக்கை செய்யவோ கூடாது அப்பனே!” 

இப்படிக் காரியங்களுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று முடிவு செய்த முதல் நாளிலிருந்தே அதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன் ஐயா! ஒரு விளையாட்டுக்காக அப்படி வேண்டியதை நீங்கள் என் விருப்பமென்று எடுத்துக் கொண்டு விடக் கூடாது.”

விளையாட்டு இருக்கட்டும்! இந்த ஓலையைப் படிக்குமுன் எனக்குச் சில நிலைமைகள் தெரியவேண்டும், சொல்வாயா?”

தாங்கள் கேட்பவற்றிற்குப் பணிவோடும் உண்மையோடும் மறுமொழி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன் ஐயா!”

பெரியவர் இப்போது மாறிப்போய்த் தங்கியிருக்கும் ஊரையோ, இடத்தையோ எனக்கு மட்டும் சொல்லேன். உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு...”

தங்களைவிட நான் பெரியவருக்கு இன்னும் அதிகமாகக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் இப்போது என்னைக் கேட்பதுபோல்தான் பெரிய காராளரும் பெரியவருடைய ஓலையைப் படித்து முடித்ததும் என்னைக் கேட்டார். அவரிடமும் இதே மறுமொழியைத் தான் நான் கூறினேன். பெரியவரே யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கும் ஒன்றைத் தெரிந்து கொள்ள முயல்வது உங்களுக்கு அழகில்லை...”

அது போகட்டும் நீ கருங்கல்லைப் போன்றவன். உன்னைப் போன்ற கருங்கல்லிலிருந்து நார் உரிக்க முடியாது. பெரிய காராளர் மாளிகையைக் காவலிருக்கும் பூதபயங்கரப் படை வீரர்களால் அவருக்கு ஏதேனும் கெடுதல்கள் உண்டா? இல்லை வெறும் காவல் மட்டும் தானா?”

கெடுதல்கள் எதுவும் கிடையாது சொல்லப் போனால் காராளரை அவர்கள் இன்னும் மதிக்கவே செய்கிறார்கள் என்று தெரிகிறது. காராளர் வீட்டைச் சுற்றி அவர்கள் விரித்திருக்கும் வலை காராளருக்காக அல்ல.”

பின் யாருக்காக என்று நினைக்கிறாய்?”

உங்களுக்காக, எனக்காக, இன்னும் அவரைத் தேடி வந்து போகிறவர்களில் யார் யார் களப்பிரர்களுக்கு எதிரிகளோ அவர்கள் எல்லாருக்காகவும் தான்!”

அப்படியானால் உன்னை ஏன் இன்னும் அவர்கள் ஆபத்தானவனாகக் கருதவில்லை?”

அது என் சாதுரியத்தையும் அவர்களுடைய சாதுரியக் குறைவையும் காட்டுகிறது.”

இனி என்னை நம்பிப் பயனில்லை என்று இப்போது உன்னை நீயே புகழ்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது அப்பனே!” 

வஞ்சப் புகழ்ச்சி எனக்கு வேண்டியதில்லை ஐயா! இன்றுவரை களப்பிரர்கள் நம்பும்படியாக நான் நடந்து கொள்கிறேன். அவர்கள் சந்தேகமும் சோதனையும் தீவிரமானால் அவர்களிடமிருந்து நானும் தப்ப முடியாது. காராளர் மகள் இன்னும் கொற்றவை கோயிலுக்கு நெய் விளக்குப் போட மாலை வேளைகளில் போய் வருகிறாள். அவளை யாரும் தடுப்பதில்லை.”

அப்படியானால் இந்த ஓலையைப் படித்தபின் தேவைப்படும் என்று நான் விரும்புகிற பட்சத்தில் ஒரு மறுமொழி ஓலை கொடுத்தால் நீ அதனை அவளிடம் கொண்டு போய்ச்சேர்ப்பதில் சிரமம் எதுவும் இராதல்லவா?”

சிரமம் இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஒரு வேளை சிரமங்கள் இருந்தாலும் அதைச் செய்ய நான் பின் வாங்கவோ தயங்கவோ மாட்டேன்.”

உன் துணிவைப் பாராட்டுகிறேன் என்று அவனுக்கு மறுமொழி கூறிவிட்டு அந்த ஓலையைப் படிப்பதற்காகப் பிரிக்கலானான் இளையநம்பி. அவன் அதைப் படிப்பதற்கான தனிமையை அவனுக்கு அளிக்க வேண்டும் என்கிற நாகரிகத்தைத் தனக்குத்தானே குறிப்புணர்ந்து புரிந்து கொண்டவனாகத் திருமோகூர்க் கொல்லன் அந்தப் பகுதியிலிருந்து விலகி வந்து வெளியே நின்ற குறளனோடு சேர்த்து நின்று கொண்டான். அவன் இவ்வாறு செய்ததை இளையநம்பி உள்ளூறப் பாராட்டினான்.

 

38. மனமும் நறுமணங்களும்

 

அப்பகுதியில் சந்தனக் கல்லின் மேல் குறளன் அறைத்துக் குவித்திருந்த சந்தனத்தின் வாசனையையும், திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப்பூங்கோதை தன் ஓலையை பிறர் அறியாமல் பாதுகாக்க, அவள் தன் மஞ்சத்தில் தலையணையில் வைத்துப் பாதுகாத்ததாலோ என்னவோ அவள் கூந்தலின் நறுமண வசீகரங்களின் வாசனையுமாக நுகர்ந்து கொண்டே அந்த ஓலையைப் படிக்கலானான் இளையநம்பி. பள்ளி எழுந்து நீராடி வந்த உற்சாகமும், காலை நேரத்தின் உல்லாசமும், அறையின் நறுமணமும், கைக்கு வந்திருந்த ஓலையின் சுகந்தமும் அவனை மயக்கிக் கொண்டிருந்தன. அந்தக் கணங்களில் எல்லாக் கவலைகளையும் மறந்து மிகமிக மகிழ்ச்சியாயிருந்தான் அவன். அவனைச் சூழ்ந்திருந்த நறுமணங்கள் அவன் மனத்தையும் குதூகலம் கொள்ள வைத்திருந்தன.

அவள் தன் ஓலையை இணைத்துக் கட்டியிருந்த பட்டுக் கயிறும் மணந்தது. அந்தப் பட்டுக்கயிற்றை எடுத்துப் பார்த்த போது அது பெண்கள் தங்கள் கூந்தலை முடிந்து கட்டும் வகைளைச் சேர்ந்த பட்டுக் கயிறாக இருப்பதைக் கண்டு அவன் மனத்துக்குள் நகைத்துக் கொண்டான். 

அன்று காலையில் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்த இரத்தினமாலையின் அருகேயும் அப்படி ஒரு பட்டுக் கயிறும் கிடந்தது நினைவு வந்தது அவனுக்கு.

ஓலையின் வாசகங்களைப் படிக்குமுன் அந்தக் கூந்தல் பட்டுக் கயிற்றின், மனத்தைக் கிறங்கச் செய்யும் நறுமணங்களை நாசியருகே உணர்ந்தான் அவன்.

முன்பு எப்போதோ தன்னோடு கற்ற ஒரு சாலை மாணவனாகிய திருக்கானப்பேர்ப் பித்தன் பாடிய ஒரு பாடல் இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தது. பூக்களைப் பார்த்து ஓர் இளம் பருவத்துக் கவி கேட்பது போல் அமைந்திருந்தது, அந்தப் பாடலின் கருத்து. மிக அழகிய அந்தக் கற்பனையை நினைத்தான் அவன்.

காலையில் மலர்ந்து மாலையில் வாடும் இவ்வுலகின் பூக்களே! உங்களில் யாருக்கு வாசனையும், தோற்றப் பொலிவும் அதிகம் என்று நீங்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டுப் பயனில்லை! உங்களில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவிதமான வாசனையும் ஒருவிதமான தோற்றப் பொலிவும்தான் உண்டு. ஆனால் உங்களில் அனைவரின் வாசனைகளும் அனைவரின் தோற்றப் பொலிவும் ஒரே வடிவத்திற் சேர்ந்தே அமைந்திருக்குமானால் அந்த வடிவத்திற்கு நீங்கள் அனைவரும் தோற்றுப் போக வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு வடிவத்தைப் பற்றி இன்று எனக்குத் தெரியும்.

உங்களில் மல்லிகைப் பூவுக்கு மல்லிகையின் வாசனை மட்டும் தான் உண்டு. தாழம்பூவுக்குத் தாழம்பூவின் வாசனை தான் உண்டு. சண்பகப்பூவுக்குச் சண்பகப்பூவின் வாசனை தான் உண்டு. பித்திகைப் பூவுக்கு அந்த வாசனை மட்டும்தான் உண்டு. நான் காதலிக்கும் பெண்ணின் கூந்தலிலோ அத்தனை பூக்களின் வாசனையையும் ஒரு சேர நுகர முடிகிறது. அவ ளுடைய தோற்றத்திலோ அத்தனை பூக்களின் பொலிவையும் ஒருசேரக் காண முடிகிறது. அவளோ முகத்தைத் தாமரைப் பூவாகவும், கண்களைக் குவளைப் பூக்களாகவும், இதழைச் செம்முருக்கம் பூவாகவும், நாசியை எட்பூவாகவும், கைவிரல்களைக் காந்தள்பூக்களாவும் காட்டி, ஆயிரம் பூக்களின் அழகும் ஒன்று சேர்ந்த ஒரு பெரும் பூவாக வந்து என்னைக் கவருகிறாள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணின் வடிவிலும் வாசனைகளிலும் தோற்றுப் போய் மானம் இழந்த வேதனை தாங்காமல் அல்லவா நீங்கள் ஒவ்வொரு பெண்ணின் கூந்தலிலும் வாழை நாரினால் தூக்குப் போட்டுக்கொண்டு தொங்கி வாடுகிறீர்கள்?

உங்களில் சில மலர்கள் பெண்களில் கைபட்டாலே மலர்ந்துவிடும் என்று இலக்கியங்கள் சொல்கின்றன. உங்களைவிட அழகும் மணமும் உள்ளவர்கள் உங்களைத் தொடப் போகிறார்களே என்று கூசி நாணி நீங்கள் தோற்பதைத் தானே அது காட்டுகிறது?’ என்று இளமையில் திருக்கானப்பேர்ப் பித்தன் காதல் மயக்கத்தில் அழகாகக் கற்பனை செய்திருக்கும் ஒரு கவிதையின் கருத்தை இளையநம்பி இப்போது நினைவு கூர்ந்தான்.

அவள் அனுப்பியிருந்த அந்தக் கற்றையில் மூன்று ஓலைகள் சுவடிபோல் இணைக்கப்பட்டிருந்தன. எழுத்துக்கள் ஓலையில் முத்து முத்தாகப் பதிந்திருந்த காரணத்தால் ஏட்டில் எழுதும் வழக்கமும் பயிற்சியும் அவளுக்கு நிறைய இருக்கவேண்டும் என்று அவனால் உய்த்துணர்ந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு அவள் தீட்டிய மடல் பணிவாகத் தொடங்கியது.

திருக்கானப்பேர் நம்பியின் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்கி அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடல் தங்களை நலத்தோடும் உறவோடும் காணட்டும்.

ஒருவேளை இந்தப் பேதையைத் தாங்கள் தங்களுடைய பல்வேறு அரச கருமங்களுக்கு நடுவே மறந்து போயிருந்தாலும் இருக்கலாம். நினைப்பதும், மறப்பதும் ஆண்களுக்குச் சுலபமான காரியங்கள். என்னைப் போல பேதைப் பெண்களுக்கு ஒன்றை நம்பிக்கையோடு நினைத்து விட்டால் அப்புறம் மறக்க முடிவதில்லை. எங்களை அறவே மறந்து போய் விடுகிறவர்களைக்கூட நாங்கள் மறக்க முடிவதில்லை. இதனால் எல்லாம் தான் பெண்களாகிய எங்களைப் பேதைகள் என்று சொல்லியிருக்கிறார்களோ என்னவோ?

மதுரை மாநகரில் தங்களைக் கொண்டுவந்து விட்டு விட்டுத் திரும்பிய நாளிலிருந்து இந்தப் பேதைக்கு ஒவ்வொரு கணமும் உங்கள் நினைவுதான். என்னிடம் நேர்ந்துவரும் சுபாவ மாறுதல்களை இப்போது என் தாய்கூடக் கவனித்து என்னை வினவுகிற அளவு உங்கள் ஞாபகம் என்னைப் பித்துப்பிடித்தவள் போல் ஆக்கி விட்டது. ‘பூப்போல் பொதிந்து கொண்டு செல்வது என்று வசனம் சொல்லுவார்கள். நாங்களோ உங்களைப் பூக்களிலேயே பொதிந்து கொண்டு போய்க் கோநகருக்குள் சேர்த்தோம்.

உங்களை இருந்த வளமுடையார் கோயில் நந்தவனத் தில் விட்டுவிட்டு ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு நானும் என் தாயும் திரும்புகிற வழியில் பூத பயங்கரப் படையினர் யாரையோ ஒற்றன் என்று சிறைப்பிடித்துச் செல்வதை வழியிலேயே கண்டோம். அந்த வினாடி முதல் உங்கள் நலனுக்காக நான் வேண்டிக் கொள்ளாத தெய்வங்கள் இல்லை. இங்கு எங்கள் வீட்டிற்கு நீங்கள் விருந்துண்ண வந்தபோது, என் தந்தையிடம் இந்த வட்டாரத்தில் உங்கள் மகள் வேண்டிக் கொள்ளாத தெய்வங்களே மீதமிருக்க முடியாது போலிருக்கிறதே என்று குறும்பாகச் சிரித்தபடியே வினாவியிருந்தீர்கள்.

அப்படி நான் தெய்வங்களை எல்லாம் வேண்டியது அன்று எப்படியோ? இன்று மெய்யாகவும் கண் கூடாகவும் ஆகியிருக்கிறது. கோநகருக்குள் களப்பிரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் உங்களைக் காக்கவேண்டும் என்று இப்போது நான் எல்லாத் தெய்வங்களையும் எப்போதும் வேண்டிய வண்ணமிருக்கிறேன். ஏற்கெனவே நான் கொற்றவை கோவிலுக்கு நெய் விளக்குப் போடத் தொடங்கியதை ஒரு மண்டலம் முடிந்த பின்பும் நிறுத்தவில்லை. உங்களுக்காக வேண்டிக் கொண்டு தொடர்ந்து விளக்கேற்றிக் கொண்டு வருகிறேன்.

மாலை மயங்கிய வேளையில் திருமோகூர் வீதியில் நான் கொற்றவை கோயிலுக்கு விளக்கேற்றச் சென்று கொண்டிருந்த போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்து வழி கேட்டீர்கள்! ‘உங்களிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்க வில்லையே, உங்களுக்கு என்ன மறுமொழி சொல்லுவது!’ என்று நான் மறுமொழி கூறத் தயங்கிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே,

அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது என்று என் வாயைப் பேசத் துண்டினர்கள். அன்று நான் ஊமையாயில்லை. உடனே துடிப்புடன் உங்களுக்கு விரைந்து கடுமையான சொற்களால் மறுமொழி கூறினேன். ஆனால் என் அந்தரங்கத்தைப் பேசுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் யாருமில்லாத காரணத்தால் இன்று இப்போது தான் ஏறக்குறைய நான் ஊமையைப் போலாகி விட்டேன். என்னை இப்படி ஆக்கியது யார் தெரியுமா? நீங்கள்தான்!

இந்த மடலை உங்களுக்காக வரையும்போது என் ஏக்கத்தின் அளவைச் சொற்களால் உணர்த்த முடியாது. இந்த ஊரில் என் பருவத்துக்குச் சமவயதுள்ள தோழிகளிடம் பேசிப் பழகிக் கொண்டிருந்த நான் இப்பொழுதெல்லாம் அவர்களோடு பேசுவதற்கு எதுவுமே இல்லாததுபோல் ஆகி விட்டது. யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. எனக்கு நானே சிந்தித்து மாய்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் கண்களில் நீர் நெகிழப் பிரமை பிடித்தாற்போல் அப்படியே அமர்ந்து விடுகிறேன். என் கைகள் மெலிந்து வளைகள் கழன்று போய்ச் சோர்கின்றன. தோள்களும் மெலிந்து விட்டன. நான் இப்படி எல்லாம் வேதனைப் படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்னை நினைக்கிறீர் களா? என் வேதனைகளைப் புரிந்து கொள்கிறீர்களா? என் தாபங்களையும் தவிப்புக்களையும் கற்பனையிலாவது உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா?

இன்னொரு செய்தி யாருக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் தங்கள் மேல் அடியாள் கொண்டிருக்கும் இந்தப் பிரேமையைப் பற்றியும், இந்த மடலைப் பற்றியும் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு மட்டும் தெரியவே வேண்டாம். நெகிழ்ந்த உணர்வுகளையும், மனிதர்களுக்கு இடையேயுள்ள ஆசாபாசங்களையும் அவர் அதிகம் பொருட்படுத்துவதில்லை. உணர்ச்சிகளை மதிக்க மாட்டார் அவர். இதனால் எனக்கு அவரிடமுள்ள பக்தியோ மதிப்போ குறைந்து விட்டது என்று பொருளில்லை. கல்லின்மேல் விழும் பூக்களைப் போல் பிறருடைய மென்மையான உணர்வுகளைத் தன் சார்பால் கடுமையாகவே ஏற்று வாடச் செய்யும் அவரது மன இறுக்கம் தான் எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய இந்த அநுபவம் அவரைப் பொறுத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம், அல்லது ஏற்படாமலும் போயிருக்கலாம். ஆனால் இது நம்மோடு இருக்கட்டும் என்பதற்காகவே இதனை இங்கே எழுதினேன். மறுபடி உங்களை எப்போது காணப் போகிறேனோ? என் கண்கள் அதற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றன. தவம் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த ஓலையை உங்களிடம் எப்படி அனுப்பப் போகிறேனோ தெரியவில்லை. இது உங்களிடம் வந்து சேரு முன் திருமோகூரிலும், கோநகரிலும் என்னென்ன மாறுதல்கள் நேருமோ? அதுவும் தெரியவில்லை. உங்கள் அன்பையும் அநுக்கிரகத்தையும் எதிர்பார்த்து இங்கு ஒரு பேதை ஒவ்வொரு கணமும் தவித்துக்கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும்...’

இப் பகுதியை அவன் படித்துக் கொண்டிருந்தபோது மாளிகைப் பணிப் பெண் வந்து அவசரமாகக் கூப்பிடுவதாய்க் குறளன் உள்ளே வந்து தெரிவித்தான்.

இளையநம்பி கையிலிருந்த ஓலைக் கற்றையைப் பார்த்தான். படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதமிருந்தது. அதை அப்புறம் வந்து படிக்கலாம் என்ற எண்ணத்தில் எல்லா ஓலைகளையும் அப்படியே இடைக் கச்சையில் மறைத்துக் கொண்டு பணிப் பெண்ணோடு அவள் அழைத்துச் சென்றபடியே மாளிகையின் முன் வாயிற்பகுதிக்கு விரைந்தான் அவன்.

 

39. மூன்று எதிரிகள்

 

இளையநம்பி தன்னை அழைத்துச் சென்ற பணிப் பெண்ணுடன் கணிகை மாளிகையின் முன் வாயிற் பக்கம் சென்றபோது ஏற்கெனவே அங்கே அழகன் பெருமாள் பதற்றத்தோடு, கைகளைப் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தான். வெளிப்புறம் யாராலோ கதவுகள் பலமாகத் தட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இரத்தினமாலையும் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தாள்.

வெளிப்புறம் வந்து நின்று கதவைத் தட்டுவது யார்? நீ ஏன் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறாய்?” -என்று அழகன்பெருமாளை வினவினான் இளையநம்பி.

உடனே அழகன் பெருமாள் பிரம்மாண்டமான அந்த நிலைக் கதவில் இருந்த சிறிய துவாரம் ஒன்றைச் சுட்டிக் காண்பித்து. “நீங்களே பாருங்கள்; வந்திருப்பது யார் என்பது புரியும் என்றான். கதவைத் திறப்பதற்கு முன் வெளியே வந்திருப்பவர்களைக் காண்பதற்காக ஓர் மானின் கண் அளவிற்கு அங்கே கதவில் துளை இருந்தது.

இளையநம்பி இரத்தினமாலையின் முகத்தைப் பார்த்தான். 

நான் பார்த்தாயிற்று! நீங்கள் பார்த்தால்தான் உங்களால் நிலைமையின் அபாயத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்றாள் அவள்.

கதவை நெருங்கித் தன் வலது கண்ணைத் துளையருகே அணுகச் செய்து பதித்தாற்போல ஆவலையும் பரபரப்பையும் தவிர்க்க முடியாமல் வெளியே பார்த்தான் இளையநம்பி.

பூதபயங்கரப் படைவீரர் மூவர் உருவிய வாளும் கையுமாக வாயிற்படிகளில் நின்று கொண்டிருந்தனர். வெளிப்படையாக நன்கு தெரியும் பூத பயங்கரப் படையின் தோற்றத்திலேயே அவர்கள் வந்து அந்த மாளிகை வாயிற்படியில் நின்று கதவைத் தட்டுவதிலிருந்து ஏதோ தீர்மானமுற்றுச் சந்தேகத்துடனேயே அவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

பார்த்தாயிற்று! இனி நாம் செய்யவேண்டியது என்ன?’ என்று இரத்தினமாலையும் அழகன்பெருமாளையும் வினவுகின்ற முகபாவனையோடு திரும்பிப் பார்த்தான் இளையநம்பி.

கதவைத் திறப்பது தாமதமாகத் தாமதமாக வெளியே அவர்களுடைய சந்தேகமும், சினமும் அதிகமாகும். விரைந்து முடிவு செய்து செயற்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம் என்றாள் இரத்தினமாலை. அழகன்பெருமாள் இதையே வேறுவிதமாகக் கூறினான்:

இரண்டே இரண்டு வழிகள்தான் நாம் நம்புவதற்கு மீதமிருக்கின்றன. கதவைத் திறப்பதற்குக் கால தாமதம் செய்யுமாறு இரத்தினமாலையிடம் சொல்லிவிட்டு - அவள் அப்படிக் காலதாமதம் செய்யும் அதே நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நலிந்த நிலையில் படுத்திருக்கும் தேனுர் மாந்திரீகன் உட்பட நாமனைவரும் நிலவறை வழியே இங்கிருந்து தப்பி வெளியேறிவிட வேண்டும். அல்லது கதவை உடனே திறந்து அவர்களை உள்ளே விட்டபின் தந்திரமாக நாமனைவரும் சேர்ந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு வந்திருக்கும் மூவரையும் எதிர்த்து அழிக்க வேண்டும்.”

அப்படியே அவர்களை அழித்துவிட்டாலும் நாம் உடனே இங்கிருந்து வெறியேறித் தப்ப வேண்டுமே தவிர தொடர்ந்து இங்கே தங்கியிருக்க முடியாது. வந்திருக்கும் மூவரைக் கொன்றுவிடுவதால் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பூதபயங்கரப்படை வீரர்கள் வந்து இந்த மாளிகையை முற்றுகையிட்டு வளைக்கமாட்டார்கள் என்பது என்ன உறுதி? அப்படியே கதவைத் திறப்பதற்குக் காலதாமதம் செய்து விட்டுத் தப்புவதானால், இரத்தினமாலை, அவள் பணிப் பெண்கள் நீங்கலாக நாமனைவரும் தப்பலாம். பூத பயங்கரப் படை வீரர்கள் மூவரையும் தந்திரமாக உள்ளே விட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு அவர்களை அழித்த பின் தப்புவதானால் இரத்தினமாலையும், அவளைச் சேர்ந்தவர்களும் கூட நம்மோடு தப்பி வெளியேறத்தான் வேண்டியிருக்கும். பூதபயங்கரப் படைவீரர்கள் இந்த மாளிகை எல்லைக்குள் வைத்துக் கொல்லப்பட்ட பின்னர், இங்கே இரத்தினமாலை தங்கினாலும் அவளுக்கு அபாயம்தான். களப்பிரர்கள் இரத்தினமாலையை ஐயுறுவதற்கும் தொடர்ந்து சித்திரவதை செய்வதற்கும் அதுவே காரணமாகிவிடும். ஆகவே நாம் மட்டும் தப்புவதானால் எதிரிகள் மூவரும் உள்ளே வருவதற்கு முன்பே தப்பிவிடலாம். ஆனால் எதிரிகளை உள்ளே வர வழைத்து அழித்த பின் தப்புவதானால் வெறும் மாளிகையை மட்டுமே விடுவித்து எல்லாரும் தப்பிவிட வேண்டியதுதான் அழகன்பெருமாள்!” -என்றான் இளையநம்பி.

அழகன் பெருமாள் இதைக் கேட்டு எதற்கோ தயங்கிச் சிந்தித்தான்.

இவர் சொல்லுவதுதான் முற்றிலும் பொருத்தமான முடிவு! வந்திருப்பவர்கள் இங்கே வைத்துக் கொல்லப்பட்டு விட்டபின் அதற்கு மேலும் களப்பிரர்களின் நம்பிக்கைக்கு உரியவளாக இந்த நகரிலோ, இந்த மாளிகையிலோ, நானும் என்னைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து ஒற்றறிவது என்பது சாத்தியமில்லை - என்றாள் இரத்தினமாலை.

வெளிப்புறம் கதவைத் தட்டுவது இடையறாது தொடர்ந்தது. நல்ல வைரம்பாய்ந்த கருமரத்தினால் செதுக்கி இழைத்து உருவாக்கப்பட்ட அந்தப் பூதாகாரமான கதவுகளை அவ்வளவு எளிமையாக வெளியே இருப்பவர்கள் உடைத்து விட முடியாது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது.

சிந்தனையில் நேரம் கடந்து கொண்டே இருந்ததனால் விரைந்து முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையில் இளையநம்பியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அழகன் பெருமாளும், இரத்தினமாலையும் உடன்பட்டனர். இளையநம்பி தன் மனத்தில் அப்போது தோன்றிய முடிவைச் சொன்னான்:

எப்போது இந்த மாளிகையையும் இதில் தங்கியிருப்பவர்களையும் சந்தேகப்பட்டுச் சோதனையிடுவதற்குப் பூத பயங்கரப் படைவீரர்கள் முன் வந்து விட்டார்களோ அதற்கப்புறம் இனிமேல் இரத்தினமாலை இதில் தங்கினாலும் ஆபத்து வராமலிருக்க முடியாது. ஆகவே நீ, நான், குறளன், திருமோகூரிலிருந்து வந்திருக்கும் கொல்லன் ஆகிய நால்வரும் கதவருகே அணிவகுத்து நின்று வெளியேயிருந்து உள்ளே வருகிறவர்களை எதிர்க்க வேண்டும் அழகன் பெருமாள் உள்ளே வருகிறவர்களை நமனுலகுக்கு அனுப்பி விட்டுப் பின்னர் எல்லோருமே இங்கிருந்து தப்பி விடலாம் என்பது என் கருத்து. கொல்லனையும், குறளனையும் உடனே கூப்பிடுவதுடன் நம் நால்வருக்கும் நான்கு வாள்களும் வேண்டும் அழகன் பெருமாள்.”இந்த மாளிகையில் படைக்கலங்களை இரகசியமாக மறைத்து வைத்திருக்கும் இடம் எனக்கு மட்டுமே தெரியும். வாள்களை நான் கொண்டு வருகிறேன் - என்று இரத்தின மாலை விரைந்தாள். குறளனையும் திருமோகூர்க் கொல்லனையும் அழைத்து வர அழகன் பெருமாள் ஓடினான். இயல்பை மீறிய பரபரப்பும் வேகமும் அப்போது அங்கே வந்து சூழ்ந்தன. ஒவ்வொரு விநாடியும் விரைவாகவும் அர்த்தத்தோடும் நகர்வது போலிருந்தது. 

ஒளி மின்னும் கூரிய வாள்கள் வந்தன. கொல்லனும், குறளனும் வந்தார்கள். அழகன் பெருமாள், இளைய நம்பி, கொல்லன், குறளன் ஆகிய நால்வரும் உருவிய வாள்களுடன் நின்று கொண்டனர். கதவை இரத்தினமாலை திறக்க வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தான் இளையநம்பி.

அவள் கதவைத் திறக்கு முன் கொல்லன் மூலம் வந்து சேர்ந்திருந்த பெரியவரின் ஓலையை, ‘அழகன்பெருமாள் வாசித்து முடித்த பின் அவள் வாசித்தாளா -என்பதைக் கேட்டுவாசித்தேன்... என்பதற்கு அடையாளமாக அவள் தலையசைத்த பின் ஒரு வியூகமாக அவர்கள் நால்வரும் நின்று கொண்டார்கள். அவள் திறக்கப் போகிற கதவுகளின் உட்புற மறைவில் நின்று வெளியே இருக்கும் பூதபயங்கரப்படை வீரர்கள் உள்ளே காலடி வைத்ததும் நால்வருமாகப் பாய்ந்து ஒரே சமயத்தில் தாக்குவது என்று அவர்கள் நினைத்திருந்தனர். கதவைத் திறக்கிறவள் பெண்ணாயிருப்பதைக் கண்டு வெளியே இருந்து உள்ளே புகுகின்றவர்கள் அலட்சியமாகவும், எச்சரிக்கை உணர்வு அற்றவர்களாகவும் இருக்கும்போது திடுமெனத் தாக்க வேண்டுமென்பதை அவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இரத்தினமாலை மாளிகையின் உள்ளே ஏதோ காரியமாக இருந்தவள் - அப்போதுதான்கதவைத் தட்டும் ஒசை கேட்கத் திறப்பது போல் மெல்ல வாயிற் கதவைத் திறந்தாள். பக்கத்துக்கு இருவராகப் பிரிந்து உருவிய வாளுடன் நின்ற இளையநம்பி முதலியவர்கள் திறக்கப்படும் கதவின் பின்புறமாக மறைவிடம் தேடினர்.

அப்போதிருந்த மனநிலையில் திறக்கப்படுகிற கதவு கிறிச்சிடும் மர்மச்சப்தம் கூட உள்ளே நுழைகிற மூவரின் மரண ஒலத்துக்கு முன்னடையாளம் போல் இரத்தினமாலைக்குக் கேட்டது. முகத்தில் மலர்ச்சியுடனும், முறுவலுடனும் ஒரு வேறுபாடும் காட்டாமல் சுபாவமாக வரவேற்கிறவள் போல் அந்த முன்று பூதபயங்கரப் படைவீரர்களையும் அவள் எதிர் கொண்டாள்.

வந்தவர்கள் மூவரும் கடுமையான கேள்விகள் எதையும் தன்னிடம் கேட்காமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்த விதம் அவளுக்கு வியப்பை அளித்தது. ‘உருவிய வாளுக்கும், பூதபயங்கரப் படையின் உடைக்கும் தகுந்த மிடுக்கோ, சினமோ, இன்றி உள்ளே வரும் அவர்கள், ஒருவேளை இந்தக் கணிகை மாளிகையில் ஆடல் காணலாம், பாடல் கேட்கலாம் என வருகிறார்களோ என்று சந்தேகப் பட்டாள் அவள். அவர்கள் மூவரும் நிலைப்படியைக் கடந்து இரண்டுபாக தூரம்கூட உள்ளே வந்திருக்க மாட்டார்கள். திறக்கப்பட்ட கதவுகளின் பின் மறைவிலிருந்து இளையநம்பி முதலிய நால்வரும் உருவிய வாளோடு அவர்கள் மேல் பாயவும், இரத்தினமாலை தான் திறந்த கதவுகளையே மீண்டும் அவசர அவசரமாக அடைக்க முற்பட்டாள். 

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. உள்ளே வந்த மூவரும்கயல் - என்று நல்லடையாளச் சொல்லைச் சற்றே உரத்த குரலில் கூறவும், உருவிய வாளுடன் பாய்ந்த நால்வரும் ஒன்றும் புரியாமல் தயங்கிப் பின்வாங்கினர்.

அடுத்த கணம் விரைந்து பூதபயங்கரப் படை வேடத்தைக் கலைத்துவிட்டுக் காரி, கழற்சிங்கன், சாத்தன் ஆகிய உபவனத்து நண்பர்கள் மூவரும் எதிரே நிற்பதைக் கண்டதும், அழகன்பெருமாள் முதலியவர்கள் வாளைக் கீழே எறிந்துவிட்டு ஓடிவந்து அவர்களைத் தழுவிக் கொண்டனர்.

எங்களையே ஏமாற்றி வீட்டீர்களே? மெய்யாகவே பூதபயங்கரப் படையினர் மூவர் இங்கு சோதனைக்காகத் தேடி வந்திருக்கிறீர்களோ என்று அஞ்சி நாங்களே ஏமாறும் அளவு நடித்து விட்டீர்கள் நண்பர்களே - என்றான் இளையநம்பி.

இவ்வளவு செம்மையாகவும் திறமையாகவும் நடிக்கா விட்டால் வெளியே நாங்கள் உயிர் பிழைத்துத் தப்பி வந்திருக் கவே முடியாது ஐயா!” என்றான் கழற்சிங்கன். எதிர்பாராத இந்தப் புதிய திருப்பத்தைக் கண்டதும், ‘காப்பாற்றப்பட வேண்டியவர்கள் தாங்கள் மட்டுமில்லை வந்திருப்பவர்களும் கூடத்தான் -என்று புரிந்து கொண்டு, அடைத்த கதவையே நன்றாக அழுத்தித் தாழிட்டாள் இரத்தினமாலை.

 

40. மங்கலப் பொருள்

 

நல்லடையாளச் சொல்லைக் கூற நாங்கள் ஒரு விநாடி காலந் தாழ்த்தியிருந்தால் எங்களைக் கொன்று நமனுலகுக்கு அனுப்பி யிருப்பீர்கள் அல்லவா?” -என்று உள்ளே வந்ததும் கழற்சிங்கன் இளையநம்பியைக் கேட்டான்.

இந்தப் பயம் உங்களுக்கு முன்பே இருந்திருந்தால் நீங்கள் பூதப்யங்கரப் படை வீரர்களைப் போன்ற மாறுவேடத்தில் இங்கு வந்திருக்கக் கூடாது - என்று அதற்கு இளையநம்பியை முந்திக் கொண்டு இரத்தினமாலை மறுமொழி கூறினாள். அவர்களில், சாத்தன் அதற்கு விடை கூறினான்:

இந்த வேடத்தைத் தவிர, வேறு எந்த மாறு வேடத்தாலும் நாங்கள் உயிர் பிழைத்து இங்கே வந்து சேர்ந்திருக்க முடியாது.”

கோநகரிலேயே வேண்டிய நண்பர்கள் பலர் வீடுகளில் மறைந்து வாழ்ந்தது முதல், கடைசியாக இன்று கணிகை மாளிகை வந்து சேர்ந்தது வரை தாங்கள் பட்ட வேதனைகளை எல்லாம் காரி சொன்னான். 

எப்படியோ ஆலவாய்ப்பெருமாள் அருளால் இங்கே வந்து சேர்ந்து விட்டீர்கள். களப்பிரர்களிடம் சிறைப்பட்டு விட்ட நம்மவர்களான தென்னவன் மாறனையும், திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் விடுவிக்கும் பொறுப்பைப் பெரியவர் நம்மிடம் விட்டிருக்கிறார். இனி நாம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் - என்றான் அழகன் பெருமாள். அப்போது அந்த மூவரும் தேனூர் மாந்திரீகனைப் பற்றி விசாரிக்கவே, ‘அவன் காயமுற்று வந்து அங்கு படுத்திருக்கும் நிலைமையை அவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மூவரையும் அவன் இருந்த கட்டிலருகே அழைத்துச் சென்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை படைக் கலங்களை மறுபடி மறைத்து வைக்கச் சென்றாள்.

இந்நிலையில் ஏற்கெனவே தான் அரைகுறையாகப் படித்துவிட்டு வைத்திருந்த செல்வப் பூங்கோதையின் ஓலையில் படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதியிருப்பதை நினைவு கூர்ந்தவனாகச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குத் திரும்பினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் குறிப்பறிந்து அவனைப் பின்தொடர்ந்தான். தான் படிக்காமல் எஞ்சியிருந்த அவளது மூன்றாவது ஓலையில் என்னென்ன அடங்கியிருக்குமோ என்ற ஆவல் ததும்பும் மனத்துடன் இடைக் கச்சையிலிருந்து அந்த ஓலையை எடுத்து மீண்டும் படிக்கத் தொடங்கினான் இளையநம்பி.

ஏற்கனவே நான் எழுதி வைத்துவிட்ட இந்த அன்புமடலை உங்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இவ்வூர்க் கொல்லன் இங்கு வந்தபோது மன்றாடி வேண்டிக் கொண்டேன். ‘திருமோகூரிலிருந்து வேறு எங்கோ மாறிச் சென்று விட்ட பெரியவர் மதுராபதி வித்தகரைக் காணச் செல்வதாகவும் மீண்டும் எப்போதாவது கோநகருக்குச் செல்ல நேர்ந்தால் என் ஓலையை உங்களிடம் சேர்ப்பதாகவும் - கொல்லனிடமிருந்து எனக்கு மறுமொழி கிடைத்தது. அப்போது நாங்கள் எந்த நிலையிலிருக்கிறோம்? ஊர் எந்த நிலையிலிருக்கிறது? களப்பிரர்களின் கொடுமைகள் எப்படி உள்ளன? என்பன பற்றி எல்லாம் இந்த ஓலையை உங்களிடம் சேர்க்கும்போதே கொல்லன் விரிவாகச் சொல்லக்கூடும். அவற்றை எல்லாம் நான் விவரித்து எழுத இயலவில்லை.

ஓர் அன்பு வேண்டுகோளுடன் அடியாள் இதை முடிக்க விரும்புகிறேன். இதை நான் கொடுத்தனுப்பி, இது உங்கள் கைக்குக் கிடைத்தால் - அப்படிக் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியை நானடைவதற்காக நீங்கள் எனக்கு மாற்றம் தந்து எழுதத்தான் வேண்டும் என்பதில்லை. எழுதினால் இப்பேதை எல்லையில்லாப் பெருமகிழ்ச்சியை அடைவேன் என்றாலும் நான் உங்களிடம் இப்போது வேண்டப் போவது வேறு. உங்களுக்கு இது கிடைத்து நீங்கள் இதைப் பார்த்து விட்டதன் மாற்றாக, ஏதாவதொரு மங்கலப் பொருளை எனக்குக் கொடுத்தனுப்புங்கள். அது போதும். நீங்கள் கொடுத்தனுப்புவது எதுவாயிருந்தாலும் அந்தப் பொருள் அடியாளுக்கு மங்கலமும் சுபசகுனமும் உடையதாயிருக்கும் என்பது உறுதி. உங்கள் நினைவுகள் என்னுள்ளே மணக்கும்படி எனக்கு எதையாவது கொடுத்தனுப்புவீர்களா? உங்களுடைய பேதையின் இந்த வேண்டுகோளை நீங்கள் மறக்க வேண்டாம் என்று முடிந்திருந்தது அவளுடைய அந்த ஓலை. எந்த மங்கலப் பண்டத்தை அவளுக்காகக் கொடுத்தனுப்புவது என்று ஒரு விநாடி தயங்கினான் இளையநம்பி. அடுத்த கணமே அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக அந்தப் பகுதியிலிருந்த பூக்குடலையிருந்து ஒரு பெரிய செந்தாழம் பூவை எடுத்தான். வாசனை நிறைந்த அதன் மடல்களிலே இரண்டை உருவி அவற்றைப் பட்டையாகத் தைத்து அதனுள் இரண்டு கழற்சிக்காய் அளவு பொதிய மலைச்சந்தனத்தை உருட்டி வைத்துக் கட்டினான். ஒரு பெண்ணுக்கு ஆண் அளிக்க முடிந்த பொருள்களில் பூவையும் சந்தனத்தையும்விட மங்கலமான பொருள்கள் வேறு எவையும் இருக்க முடியாதென்று அவனுக்குத் தோன்றியது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே யுள்ள ஞாபகங்களுக்குப் பூவும் சந்தனமுமே இனிமையான சாட்சிகள். ஒன்று பெண்ணின் கூந்தலை மணக்கச் செய்வது. மற்றொன்று அவள் உடலை மணக்கச் செய்வது. அந்த இரு மங்கலப் பொருள்களையும் ஒன்றாகப் பொதிந்து - ஒன்றில் ஒன்றை இட்டு நிறைத்து அனுப்புவதன் மூலம் அவைகளை அடைகிறவளின் மனம் எவ்வளவு மகிழ்ச்சிப் பெருக்கினால் துள்ளும் என்பதை இப்போதே கற்பனை செய்ய முயன்றான் இளையநம்பி.

தாழையையும், பூவையும், சந்தனத்தையும் ஒரு பெண்ணுக்கு அனுப்புவதில் எத்தனை குறிப்புக்களை அவள் புரிந்து கொள்ள முடியுமென்று சிந்தித்தபோது அவனுக்கு மகிழ்ச்சி பெருகியது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே மணமுள்ள பூவே ஒரு மெளனமான உரையாடல் என்றால் சந்தனம் இன்னோரு சீதப் பனிச் சொற்கோவை. அது அவளுக்கும் புரியும் என்று நம்பியவனாக, “நான் கொடுத்தேன் என்று இதைப் பெரிய காராளர் மகளிடம் சேர்த்தாலே போதுமானது - என்று அதைத் திருமோகூர்க் கொல்லனிடம் அவனைக் கூப்பிட்டுக் கொடுத்தான் இளையநம்பி. கொல்லனும் அதைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டான். பெரியவருக்கு ஏதேனும் மறுமொழி ஓலை தரலாம் என்றால் அவர் எந்த மறுமொழி ஓலையையும் எதிர்பார்க்கவில்லை. நிலைமையை அறிந்து வருமாறு மட்டுமே தன்னைப் பணித்தார் என்பதாகக் கொல்லன் கூறிவிட்டான். மறுபடி நிலவறை வழியே அவன் புறப்பட்டுச் செல்ல அன்று நள்ளிரவு வரை அங்கேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. நள்ளிரவில் கொல்லன் புறப்பட்டுப் போனான். அவனை வழியனுப்பிவிட்டு அழகன்பெருமாள், இளையநம்பி முதலியவர்கள் உறங்கப் போகும்போது இரவு நடுயாமத்திற்கு மேல் ஆகிவிட்டது.

மறுநாள் அதிகாலையில் இளைய நம்பியைத் துயிலெழுப்ப அவன் கால்களினருகே மஞ்சத்தில் அமர்ந்து இரத்தினமாலை யாழ் வாசித்துக்கொண்டிருந்தாள். அந்த இனிய யாழொலி கேட்டு எழுந்த இளையநம்பி சிரித்துக் கொண்டே அவளை வினவினான்:

இதென்ன புது வாத்திய உபசாரம்?”

இப்படியெல்லாம் தங்களை நோகாமல் உறங்கச் செய்து நோகாமல் துயில் எழுப்பிப் பாதுகாக்கச் சொல்லிப் பெரியவரின் ஆணை - என்றாள் அவள். அதற்கு மறுமொழி கூறாமல் ஏதோ நினைத்துக் கொண்டவனாக மேன் மாடத்திலிருந்து படிகளில் இறங்கி விரைந்து கீழே அழகன்பெருமாளைக் காணச் சென்றான் இளையநம்பி.

அங்கே அழகன் பெருமாள் படுத்திருந்த இடம், தேனூர் மாந்திரீகனின் கட்டில் எல்லாமே வெறுமையாயிருந்தன. வியப்போடும் சினத்தோடும் திரும்பினான் அவன்.

அவர்கள் நால்வரும் அழகன் பெருமாளும் இப்போது இங்கு இல்லை!” என்று கூறியபடியே படியிறங்கி வந்து கொண்டிருந்தாள் இரத்தினமாலை. இளையநம்பி அதைக் கேட்டுத் திகைப்படைந்தான்.

--------------

 

 

நித்திலவல்லி-பாகம்-2


 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)