தீபம் நா. பார்த்தசாரதியின்

மணிபல்லவம் (சரித்திர நாவல்)

பாகம் 2 (ஞானப் பசி)

 

உள்ளடக்கம்:

1. முதல் நாள் பாடம்            

2. சுரமஞ்சரியின் அச்சம்

3. வீதியில் நிகழ்ந்த விரோதம்   

4. கவலை சூழ்ந்தது!           

5. இவள்தான் விசாகை!   

6. வேழம்பர் விரைந்தார் 

7. பூதம் புறப்பட்டது             

8. வல்லவனுக்கும் வல்லவர்         

9. பெண்ணில் ஒரு புதுமை           

10. தலைவணங்கிய தன்மானம்             

11. வழித்துணை வாய்த்தது!       

12. காவிரியில் கலந்த கண்ணீர்

13. வேங்கை சீறியது

15. பேய்ச் சிரிப்பு!

16. தாயின் நினைவு

17. பயங்கர நண்பர்கள்

18. நாணற் காட்டில் நடந்தது!

19. பவழச் செஞ்சுடர் மேனி

20. செல்வச் சிறை 

21. தெய்வ நாட்கள் சில

22. கடைசி நாளில் கற்றது


-------------

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

ஞானப் பசி

 

மனத்தின் எல்லையில் அறிவு பெருகப் பெருக அதுவரையில் அந்த இடத்தை நிறைத்துக் கொண்டிருந்த அறியாமையின் அளவு நன்றாகத் தெரிகிறது. இந்தக் கதையின் நாயகன் உடலின் வனப்பைப் போலவே மனத்தின் வனப்பையும் வளர்க்க விரும்பி அறிவுப் பசியோடு புறப்பட்டு அந்தப் பசி தீருமிடத்தை அடைந்த சில தினங்களிலேயே அவனுடைய அக உணர்ச்சிகள் மலர்ந்து மணம் பரப்புகின்றன. வில்லினும், மல்லினும் போர் தொடுத்து வென்றும் வீரமுரசறைந்தும் பெறும் புகழ் போல் சொல்லினும், சுவையினும் அடைகிற அறிவின்பம் அவனுக்கு மிக்கதாகத் தோன்றுகிறது. அறிவு என்பதே பேரின்பமாக இருக்கிறது. ‘நல்லதின் நலனும் தீயதின் தீமையும் உள்ளவாறு உணர்தல் என்று அறிவுக்கு வரையறை கூறியிருக்கிறார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு பொருளிலும் அதனதன் மெய்யைத் தெரிவதில் ஓரின்பம் இருக்கத்தான் செய்தது என்பதை இந்தக் கதையின் நாயகனான இளங்குமரன் பரிபூரணமாக உணர்கிறான். வீரமும், உடல் வலிமையும் கைகளால் முயன்று வெல்லும் வழியை அவனுக்குக் கற்பித்திருக்கின்றன. ஞானமோ, மனத்தினாலேயே உலகத்தை வெல்ல வழி கூறுகின்றது. வயிற்றுப் பசிபோல் உண்டதன் பின்னும் தீர்தலின்றி உண்ண உண்ண மிகுவதாக இருக்கிறது ஞானப்பசி. ‘இன்னும் உண்ண வேண்டும். இதுவரை உண்டது போதாது என்று மேலும் மேலும் மனத்தைத் தூண்டும் புதிய ஞானப் பசியை அவன் மிகவும் விரும்புகிறான். அந்தப் பசி ஏற்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்று அவன் தணியாத தாகத்துடன் பெருவேட்கை பெறுகிறான்.

எனவே அவனுடைய பெருவாழ்வில் இந்தப் பருவம் அறிவு மயமாக மலர்கிறது; வளர்கிறது; மணம் விரிக்கிறது. மனிதர்களுக்கு உடலின் செழுமையாலும், தோலின் மினுமினுப்பாலும், அவயவங்களின் அழகாலும் வருகின்ற கவர்ச்சி நிலையற்றது, ஆனால் அறிவினால் வருகிற அழகு நிலையானது; உயர்ந்தது; இணையற்றது. ஏற்கெனவே பேரழகனான இளங்குமரன் இப்போது அறிவின் அழியா அழகையும் எய்தப் போகிறான். அந்த அறிவழகின் மலர்ச்சியில் அவன் முழுமையான மனிதனாக எழுச்சி பெற்று நிற்கும் நிலையை அடையப் போகிறான். அந்தப் புதிய எழுச்சியின் பயனாக அவன் வாழ்வில் மலரும் இரண்டாவது பருவம் இது.

------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

1. முதல் நாள் பாடம்

 

நிலத்தைப் போல் தன்னை அடைந்தவர்களைத் தாங்கும் பொறுமையையும், மலையைப் போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ளக் குறையாத வளமும், மலரைப் போல் மென்மையும், துலாக்கோலைப் போல் நடுநிலை பிறழாத தன்மையும் உடையவர்கள் தாம் பிறருக்குக் கற்பிக்கும் ஆசிரியராக தகுதியுடையவர்கள் என்று இளங்குமரன் பலமுறை பலரிடம் கேட்டிருக்கிறான். ஆனால் அத்தகைய முழுமையான ஆசிரியப் பெருந்தகை ஒருவரை நேற்று வரை அவன் சந்திக்க நேர்ந்ததில்லை. நீலநாகமறவர் அவனுக்குப் போர்த்துறைக் கலைகளைக் கற்பித்த ஆசிரியரானாலும் அவரிடம் நாங்கூர் அடிகளிடமிருந்ததைப் போன்ற மென்மையையும் குழந்தையுள்ளத்தையும் அவன் கண்டதில்லை. நீலநாக மறவர் வீரத்தின் ஆசிரியராக அவன் கண்களுக்குத் தோன்றினாரேயன்றி ஞானாசிரியராகத் தோன்றியதில்லை. கல்லைப் போல் உடம்பும் மனமும் இறுகிப் போன மனிதரான அவரிடம் நாங்கூர் அடிகளின் மென்மையை எதிர்பார்க்க இயலாது என்பதையும் அவன் இன்று தன் மனத்துள் ஒப்பிட்டுப் பார்த்து உணர்ந்தான். அப்படிப்பட்ட இரும்பு மனிதரும் நாங்கூர் அடிகளின் மாணவர் தாம் என்பதை நினைக்கும் போது அவனுக்கு வியப்பாயிருந்தது.

அருட்செல்வ முனிவர் பெரிய ஞானியாயிருந்தாலும் அவரிடமே வளர்ந்ததனால் அவர் மேல் அவனுக்கு அன்பும் பாசமும் தான் உண்டாயின. அவரிடமிருந்து அன்புக்காகவும், பாசத்துக்காகவும் அவன் மனம் ஏங்கியதே அல்லாமல் ஞானத்துக்காக ஏங்கியதே இல்லை! ஞானத்துக்காக ஏங்குகின்ற மனப் பக்குவம் அப்போது அவனுக்கு இல்லை. ஆயிரம் கதிர் விரிக்கும் ஞாயிற்றொளி அலைகடற்கோடியில் மேலெழுந்து விரிவது போல் நாங்கூர் அடிகளின் முகத்தில் கண்டு கனிந்த ஞான மலர்ச்சியை இதற்கு முன் தான் யாரிடமும் கண்டதாக நினைவே இல்லை இளங்குமரனுக்கு. “அறியாமையையும் ஆணவத்தையும் தவிர என்னோடு வேறெவற்றையும் நான் கொண்டு வரவில்லையே, ஐயா!” என்று அந்தப் பேரறிஞருக்கு முன் தலைவணங்கி ஒடுங்கித் தளர்ந்து தான் கூறிய போது அவர் தனக்கு மறுமொழியாகக் கூறிய வார்த்தைகளை நினைத்து நினைத்து மகிழ்ந்தான் இளங்குமரன். நம்பிக்கையளிக்கும் அந்தச் சொற்கள் அவன் மனத்திலேயே தங்கி ஒலித்துக் கொண்டிருந்தன.

 

உன்னையே எனக்குக் கொடு; என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக இரு. இதுவே போதும் இந்தச் சொற்களை எவ்வளவு குழைவாக எவ்வளவு தணிவாக வெளியிட்டார் அந்த ஞானச் செல்வர்! அவர் வாய் திறந்து நிதானமாகப் பேசிய போது இந்தச் சொற்களில் தான் எத்துணை நிறைவுடைமை!

உலகத்தையெல்லாம் விலை கொள்ளும் பெரிய ஞானமும், கள்ளங்கபடமில்லாத பச்சைக் குழந்தை போன்ற மனமும், பழுத்த சொற்களாகத் தேர்ந்து முத்துத் தொடுப்பது போல் கவிதை நயமுள்ள பேச்சும் கண்டு இளங்குமரன் அவருக்கு ஆட்பட்டான். அவர் கேட்டுக் கொண்டாற் போல் தன்னையே அவன் அவருக்குக் கொடுத்துவிட்டான். காவிரிப்பூம்பட்டினத்தில் நேற்று வரை கழிந்த தன் நாட்கள், அந்த நாட்களோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்களுடைய உறவுகள் - எல்லாம் மெல்ல மெல்ல நீங்கி நாங்கூர் அடிகள் என்னும் ஞானக்குழந்தைக்கு வீரவணக்கம் புரியும் மற்றொரு ஞானக்குழந்தையானான் அவன்.

இளங்குமரன் அங்கு வந்து சேர்ந்த மறுநாள் வைகறையில் போது விடிகையிலேயே அவனுடைய புது வாழ்வும் விடிந்தது. பறவைகள் துயில் விழித்துக் குரல் எழுப்பும் பனி புலராத காலை நேரத்தில் நாங்கூர் அடிகள் அவனை எழுப்பினார். அவர் அருகில் வந்து நின்றதுமே அவன் விழித்து எழுந்து விட்டான்.

அந்தப் பெரியவர் அருகில் வந்து நின்றாலே விழிப்பும், எழுச்சியும் தானே உண்டாகும். அவர் நிற்கிற இடத்தில் பச்சைக் கர்ப்பூரமும் பவழமல்லிகையும் சேர்ந்து மணப்பது போல் ஒரு புனித மணம் நிலவும். மூப்பும், தளர்ச்சியும் ஒடுக்கியிருந்த அந்த உடம்புக்கே அத்தனை காந்தியானால் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எப்படி விளங்கியிருப்பார் என்று கற்பனை செய்தான் இளங்குமரன்.

விலகும் இருளும், புலரும் ஒளியும் சந்திக்கும் சிற்றஞ்சிறு காலை நேரத்தில் இளங்குமரனை எழுப்பி, “என்னோடு வா!” என்று அழைத்துக் கொண்டு மலர் வனங்களிடையே நடந்து புறப்பட்டார் அவர். இளங்குமரன் அடக்கமாக அவரைப் பின் தொடர்ந்து சென்றான். இரண்டு பக்கங்களிலும் வழியை ஒட்டி மலர்ப் பொழில்களாதலால் காற்றே மண மண்டலமாகி வீசியது. அந்த நேரத்தில் அந்த வழியில் காற்று, பனி, ஆகாயம், பூமி எல்லாமே மணந்தன. பக்கத்துச் சிற்றோடைகளில் நீர் சிரித்தது. வாகை மரக்கிளைகளில் காகங்கள் கரைந்தன. கீழே நடந்து செல்லும் வழியில் மண் ஈர மணம் கமழ்ந்தது.

சிறிது தொலைவு அமைதியாக நடந்து சென்ற பின், “உன்னுடைய மனமும் இப்போது இந்த நேரத்தைப் போல் இருக்கிறதல்லவா! இருளை அழித்துப் போக்கி விடுவதற்கும் ஒளியை வளர்த்துப் பெருக்கிக் கொள்வதற்கும் தானே தவிக்கிறாய் நீ என்று இளங்குமரனைக் கேட்டார் அடிகள். இளங்குமரன் சிரித்தவாறு பதில் கூறினான்:

 

ஆனால் ஒளியின் அருகே ஒளியைப் பின்பற்றித்தான் நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் ஐயா!”

நல்லது தம்பீ! முதலில் நீ ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். என்னிடமே என்னைப் பற்றி அடிக்கடி நீ புகழ்ந்து சொல்லக் கூடாது. உலகத்தில் நல்ல அறிவாளிகள் எல்லாரும் முதலில் தாங்கள் அத்தகைய பேரறிவைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் என்ற நினைவே இன்றிக் குழந்தைகள் போல் இருக்கிறார்கள். பாமரர்கள் அவர்களிடமே அவர்களைப் புகழ்ந்து சொல்லிச் சொல்லி இழக்கக் கூடாத அந்தக் குழந்தைத் தன்மையை அவர்கள் இழக்கும்படி செய்துவிடுகிறார்கள். புகழைக் கேட்டுக் கேட்டு மனம் மூப்படைந்து விடுகிறது. அதனால் நான் அதை விரும்புவதே இல்லை. என்னுடைய ஞானத்துக்காக எல்லாரும் என்னைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டுமென்று நான் நினைப்பதேயில்லை. நான் வெறும் வாய்க்கால் தான். ஏரியிலிருந்து வாய்க்கால் வழியாகப் பாய்ந்து நிலத்துக்கு நீர் போவதில்லையா? ஞானம் எங்கோ நிரம்பியிருக்கிறது. அதைப் பாய்ச்ச வேண்டிய விளை நிலம் வேறெங்கோ கிடக்கிறது. அந்த விளைநிலத்தைத் தேடி அதில் போய்ப் பாயும்படி செய்யும் வாய்க்காலுக்குத் தனிப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? எங்கிருந்தோ வருகிற நீர் எங்கோ பாயப் போகிற நீர்! வாய்க்காலுக்கு ஏது பெருமை?”

ஞானப்பசியோடு வந்திருந்த இளங்குமரனுக்கு முதல் பாடம் கிடைத்துவிட்டது. ‘தன்னை வியந்து கொள்ளும் மனத்திலிருந்து குழந்தைத் தன்மை போய்விடும். புகழுக்கு ஆட்பட்டுத் தவிக்கிற மனத்தில் இளமை குன்றி மூப்புச் சேரும்.’

இருவரும் மறுபடி சிறிது தொலைவு வரை மௌனமாக நடந்தனர். சிறிது சிறிதாக ஒளிபரவி விடிந்து கொண்டிருந்தது. நாங்கூர் அடிகள் மீண்டும் அவனை நோக்கிக் கூறினார்:

தம்பீ! உன்னையும், என்னையும் சுற்றி இத்தனையாயிரம் பூக்கள் மலர்ந்து மணம் பரப்புகின்றனவே, இவ்வளவு அழகையும் இவ்வளவு மணத்தையும் இவற்றுக்கு அளித்திருப்பவனை யார் புகழ முடியும்? எப்படிப் புகழ முடியும்?”

அவர் கூறுவனவற்றைக் கேட்கக் கேட்க இன்பமாக இருந்தது இளங்குமரனுக்கு. போகிற வழியில் ஒரு பெரிய தாமரைப் பொய்கை வந்தது.

வா! நீராடி விட்டுச் செல்லலாம் என்று இளங்குமரனையும் உடனழைத்துக் கொண்டு நீராடச் சென்றார் நாங்கூர் அடிகள். படிகம்போல் தெளிந்த அந்தப் பொய்கையின் நீர்ப்பரப்பில் சிறுபிள்ளை போல் நீந்தி விளையாடிக் குளித்தார் அடிகள். இருவரும் நீராடி முடித்தபின் வந்த வழியே திரும்பி நடந்து சென்றார்கள். அடிகள் தம் பூம்பொழிலை அடைந்ததும், “இங்கே நீ கற்க வேண்டிய சுவடிகளை எல்லாம் காண்பிக்கிறேன் வா. என்னுடைய பூம்பொழிலில் மலர்களுக்கு அடுத்தபடி அதிகமாக இருப்பவை ஏட்டுச் சுவடிகள் தாம். இங்குள்ள மலர்களுக்கு மணம் அதிகம். திருநாங்கூர் மண்ணுக்கே மணம் மிகுதி. இங்குள்ள ஏட்டுச் சுவடிகளிலோ அறிவின் மணம் கொள்ளக் குன்றாமல் நிறைந்திருக்கிறது என்று இளங்குமரனைத் தம்முடையகிரந்த சாலைக்கு (சுவடிகள் நிறைந்திருந்த சாலை) அழைத்துச் சென்றார் அவர். உடலில் ஈரம் புலராத ஆடையும், நீராடிய பவித்திரமுமாகக் கிரந்த சாலைக்குள் அவரோடு நுழைந்தான் அவன். வரிசை வரிசையாய்ப் பிரித்து அடுக்கியிருந்த ஆயிரக்கணக்கான சுவடிகளைப் பார்த்ததும், ‘இவற்றையெல்லாம் கற்று ஞானப் பசிக்கு நிறைவு காண என்னுடைய வாழ்நாள் போதுமா?’ என்ற மலைப்பு அவன் உள்ளத்தில் உண்டாயிற்று.

இவை எழுத்திலக்கணச் சுவடிகள், இவை சொல்லிலக்கணச் சுவடிகள், இவை பொருளிலக்கணச் சுவடிகள், இவை செய்யுளிலக்கணச் சுவடிகள். இதோ, இவையெல்லாம் தர்க்கம், இவையெல்லாம் சமய நூல்கள், இவை வைத்திய நூல்கள், இவை அலங்கார நூல்கள் என்று ஒவ்வோர் அடுக்காகக் காண்பித்துச் சொல்லிக் கொண்டே போனார் அடிகள். அவர் முகத்தில் அவற்றையெல்லாம் கற்பிக்கத் தகுதியான மாணவன் கிடைத்துவிட்ட உற்சாகம் தெரிந்தது.

அப்போது அந்தக் கிரந்த சாலையில் தூபப்புகை நறுமண அலைகளைப் பரவச் செய்து கொண்டிருந்தது. நெய்யிட்டு ஏற்றிய தீபங்களின் ஒளி அங்கங்கே பூத்திருந்தது. தணிவாகக் கூரை வேய்ந்திருந்த சாலையாதலால் அங்கே எப்போதும் தீப ஒளி தேவையாயிருந்தது போலும்.

இவ்வளவு சுவடிகளுக்கும் மீறி அறிவைப் பற்றிய சிந்தனைத் தலைமுறை இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது, தம்பீ. இவ்வளவையும் எந்தக் காலத்தில் கற்று முடிப்பது என்று நீ மலைப்பு அடையாதே! தைரியத்தை அடைவதற்காகத்தான் கல்வி. துணிந்து கற்க வேண்டும். கற்றுத் துணிய வேண்டும்.”

அந்தத் துணிவைத் தாங்கள் தான் எளியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று கூறியபடியே அவருடைய கால்களில் வீழ்ந்து வணங்கினான் இளங்குமரன். ‘இந்தப் பாதங்களை விட்டு விடாதே! இவற்றை நன்றாகப் பற்றிக் கொள் என்று போகும் போது நீலநாகமறவர் கூறிய சொற்களை இப்போதும் நினைத்துக் கொண்டான் அவன். அவனைத் தம் கைகளாலேயே எழுப்பி நிறுத்தி, “இந்தா இதைப் பெற்றுக் கொள் என்று முதற்சுவடியை அளித்தார் அடிகள்.

---------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

2. சுரமஞ்சரியின் அச்சம்

 

சீனத்துக் கப்பலிலிருந்து இறங்கி நடந்த போது, ‘உங்கள் கருணை எனக்குத் தேவையில்லை. என் மாளிகைக்குப் போய்ச் சேரும் வழி எனக்குத் தெரியும் என்று சீற்றத்தோடு அலட்சியமாக இளங்குமரனிடம் பேசியிருந்தாலும் சுரமஞ்சரியின் மனம் அதன் பின்னரும் அவனுக்காகவே ஏங்கியது. அவனுக்காகவே தவித்தது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

அவள் அவனைப் பிரிந்து சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே அந்தப் பக்கத்தில் துறைமுக வாயிலின் அருகே கூடி நின்று கொண்டிருந்த அவளுடைய தந்தையாரின் கப்பல் ஊழியர்கள் பயபக்தியோடு ஓடி வந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் முகங்களில் ஆர்வ வெள்ளம் பாய்ந்தது.

எல்லார் வயிற்றிலும் பாலை வார்த்தீர்கள் அம்மா! நேற்று நீராட்டு விழாவில் நீங்கள் காணாமற் போனதிலிருந்து நமது மாளிகையே கவலையில் ஆழ்ந்திருக்கிறது. நீங்கள் காணாமற் போன செய்தி தெரிந்த உடனே நேற்று மாலை கழார்ப் பெருந்துறையிலிருந்து காவிரியின் சங்க முகம் வரை தேடிப் பார்ப்பதற்காகப் பல படகுகளை அனுப்பினார் உங்கள் தந்தையார். வெகுநேரம் தேடி விட்டுப் படகுகள் எல்லாம் திரும்பிவிட்டன. உங்களைத் தேடுவதற்காக நம் ஆட்கள் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். உங்கள் வரவை இப்போதே ஓடிப் போய் மாளிகையில் தெரிவிக்கிறோம். தெரிவித்து விட்டு உங்களை அழைத்துச் செல்வதற்குத் தேரும் கொண்டு வருகிறோம். அதுவரை இதோ இங்குள்ள நமது பண்ட சாலையில் அமர்ந்திருங்கள் என்று கூறிச் சுரமஞ்சரியை அழைத்துப் போய்த் துறைமுக வாயிலின் பக்கத்திலிருந்த அவள் தந்தையாரின் பண்டசாலையில் அமரச் செய்துவிட்டு மாளிகைக்கு விரைந்தார்கள் அந்த ஊழியர்கள்.

அப்போது, ‘என்னை அழைத்துச் செல்வதற்காக எனது மாளிகையிலிருந்து வரப்போகும் தேரிலேயே இளங்குமரனையும் ஏற்றிக் கொண்டு போய் அவர் தங்கியிருக்கும் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் விட்டுச் சென்றால் என்ன?’ என்று நினைத்தாள் சுரமஞ்சரி. உடனே எழுந்திருந்து போய்அவர் நிற்கிறாரா?’ என்று துறைமுக வாயிலிலும் பார்த்தாள். அங்கேஅவரைக் காணவில்லை. ‘அவர் நடந்து புறப்பட்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டு சுரமஞ்சரி ஏமாற்றத்தோடு திரும்பிப் பண்டசாலைக்கு மீண்டும் வந்து அமர்ந்தாள். அவள் கண்கள் எங்கும் இளங்குமரனைத் தேடின. பண்டசாலையில் வந்து அமர்ந்த பின்பும் எதிர்ப்புறம் தெரியும் துறைமுக வீதியையே கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.

பெண்ணே! என்னுடைய கருணையை நீ அடைய முடியும். ஆனால் அன்பை அடைய முடியாது என்று அவன் திரும்பித் திரும்பி இரண்டு மூன்று முறை தன்னிடம் வற்புறுத்திக் கூறிய அந்தச் சொற்கள் இன்னும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டு தான் இருந்தன. கப்பலிலிருந்து இறங்கியதும், அவள் தான் அவனிடம் கோபித்துக் கொண்டு விலகி வந்தாளே தவிர, அவள் மனம் அவனிடமிருந்து விலகி வரவில்லை. அவள் மனத்தின் நினைவுகளும் கனவுகளும் அவனைப் பற்றியே இருந்தன. அவள் சிந்தனைகளுக்கு இளங்குமரனே இடமாகவும், எல்லையாகவும் இருந்தான். பண்டசாலையின் முன்புறம் இரண்டு அலங்காரத் தேர்கள் வந்து நின்ற ஒலியில் சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தாள் சுரமஞ்சரி.

ஒரு தேரிலிருந்து நகைவேழம்பரும் அவள் தந்தையாரும் இறங்கினார்கள். மற்றொரு தேரிலிருந்து அவளுடைய தாயார், சகோதரி வானவல்லி, வசந்தமாலை ஆகியோர் இறங்கினார்கள்.

பாவிப் பெண்ணே! இப்படி எங்களையெல்லாம் கதிகலங்கச் செய்யலாமா?” என்று நெஞ்சம் கதறியவாறே ஆவலோடு ஓடி வந்து தழுவிக் கொண்டாள், சுரமஞ்சரியின் அன்னை. “என்ன நடந்தது? எப்படித் தப்பிப் பிழைத்தாய்? யார் காப்பாற்றினார்கள்?” என்ரு எல்லாருமே அவளைத் தூண்டித் தூண்டிக் கேட்டார்கள்.

யாரோ ஒரு படகோட்டியின் உதவியால் கப்பல் கரப்புத் தீவை அடைந்ததாகவும், காலையில் அங்கிருந்து ஏதோ ஒரு கப்பலில் இடம் பெற்றுத் துறைமுகத்தை அடைந்ததாகவும் உண்மையைச் சற்றே மாற்றிக் கூறினாள் சுரமஞ்சரி. தந்தையாரையும் நகைவேழம்பரையும் அருகில் வைத்துக் கொண்டு, இளங்குமரன் தன்னைக் காப்பாற்றியதைச் சொல்வதற்கு அவள் விரும்பவில்லை. அந்தச் சமயத்தில் அவள் கூறியதில் யாரும் அவநம்பிக்கை கொள்ளவும் இல்லை.

எப்படியானாலும் மறுபிறப்புப் பிறந்தது போல நீ உயிர் பிழைத்து வந்தாயே, அதுவே போதும். காவிரித்தாய் உன்னைக் காப்பாற்றியிருக்கிறாள்! அந்தப் படகோட்டியும், கப்பல் தலைவனும் யாரென்று சொன்னால் உனக்கு உதவியதற்காக அவர்களுக்கு வேண்டிய பரிசுகளை வாரி வழங்கச் சித்தமாயிருக்கிறேன், மகளே!” என்றார் தந்தையார்.

சமயம் வாய்க்கும் போது அவர்களை உங்களுக்குக் காண்பிக்கிறேன், அப்பா!” என்று பதில் கூறினாள் சுரமஞ்சரி.

சந்தர்ப்பம் எப்படி நேர்கிறது பார்த்தாயா? பெரிய பெரிய கப்பல்களுக்கு உரிமையாளனான என்னுடைய மகள் எவனுடைய கப்பலிலோ இடத்துக்குப் பிச்சையெடுக்க வேண்டியதாய் நேர்ந்திருக்கிறதே என்று தம் மனைவியிடம் கூறினார் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வர். அவருக்கு எப்போதுமே தம்முடைய பெருமைதான் நினைப்பு.

சிறிது நேரத்தில் பண்டசாலையிலிருந்து எல்லாரும் மாளிகைக்குப் புறப்பட்டார்கள். தந்தையாரோடு தேரில் ஏறிக் கொண்டிருந்த நகை வேழம்பர் தேர் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன்பு தேரிலிருந்து கீழே இறங்கி விட்டதைச் சுரமஞ்சரி மற்றொரு தேரிலிருந்து பார்த்தாள்.

ஏன் இறங்கி விட்டீர்கள்? நீங்கள் எங்களோடு மாளிகைக்கு வரவில்லையா?” என்று தந்தையார் கேட்டதற்கு, “நான் துறைமுகத்துக்குள் சென்று வர வேண்டும். அங்கே போய் இன்று காலையில் துறை சேர்ந்த கப்பல்கள் எவை எவை என்று அறிந்து, அவற்றில் உங்கள் தவப் புதல்வியாருக்கு உதவி செய்த கப்பல் எது என்றும் தெரிந்து கொண்டு அப்புறம் மாளிகைக்கு வருகிறேன். வரும் போது சுரமஞ்சரிதேவிக்கு உதவி செய்த கப்பலின் தலைவனையும் கண்டுபிடித்து என்னோடு அழைத்து வருகிறேன். இன்றே அவனுக்கு நம் நன்றியைத் தெரிவித்துப் பரிசும் அளித்து விடலாம் என்று நகைவேழம்பரு கூறிச் செல்வதைக் கேட்டுத் திகைத்தாள் சுரமஞ்சரி.

ஐயா, நகைவேழம்பரே! அதற்கு இப்போது அவசரம் ஒன்றுமில்லை என்று சொல்லி அவரைத் தடுக்கவும் அந்தச் சமயத்தில் அவளுக்குத் துணிவில்லை. அதற்குள் தேர்களும் மாளிகைக்கு புறப்பட்டு விட்டன. நகைவேழம்பர் துறைமுகத்துக்குள் நுழைவதையும் விரைந்து செல்லும் தேரிலிருந்தே அவள் பார்த்தாள். கலக்கம் கொண்டாள். ‘சீனத்துக் கப்பல் தலைவனை நகைவேழம்பர் சந்தித்து மாளிகைக்கு அழைத்து வந்து விட்டால், தன்னோடு ஓர் இளைஞரும் கப்பலில் வந்ததை அவர் கூறுவார். அதையே அவர் வேறுவிதமாகப் புரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில்உங்கள் பெண்ணும் உங்கள் பெண்ணின் காதலர் போல் தோன்றிய ஓர் இளைஞரும் கப்பல் கரப்புத் தீவிலிருந்து இன்று காலை என் கப்பலில் இடம் பெற்று வந்தார்கள் என்று தந்தையிடம் வந்து கூறினாலும் கூறுவாரே! அப்படிக் கூறிவிட்டால் நாம் என்ன செய்வது?’ என்று எண்ணி அச்சம் கொண்டாள் சுரமஞ்சரி.

----------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

3. வீதியில் நிகழ்ந்த விரோதம்

 

தன்னைக் காப்பாற்றியது இளங்குமரனே என்பது தந்தையாருக்கும், நகைவேழம்பருக்கும் தெரிய நேர்ந்து அதன் காரணமாக இளங்குமரனுக்குத் துன்பம் வரக்கூடாதே என்பதுதான் சுரமஞ்சரியின் பயமாக இருந்தது. அந்த பயத்துடனேயே துறைமுகத்திலிருந்து தேரில் புறப்பட்டு மாளிகைக்குச் சென்றாள் அவள்.

அன்று பகலில் சுரமஞ்சரியின் தாய் ஆலமுற்றத்து ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி வருமாறு அவளை வேண்டினாள்.

பெரிய கண்டத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்து வந்திருக்கிறாய். கோவிலுக்குப் போய் இறைவனை வணங்கிவிட்டு வா. வானவல்லியையும், உன் தோழியையும் உடன் அழைத்துக் கொண்டு போ என்று தாய் கூறியபடியே கோவிலுக்குப் புறப்பட்டாள். சுரமஞ்சரி, சகோகதரியும், தோழியும் உடன் வர அவள் தேரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது நாளங்காடியின் அருகே இளங்குமரன் எதிர்புறமிருந்து இன்னொரு தேரைச் செலுத்திக் கொண்டு விரைவாக வருவதை கவனித்தாள். அவனை நோக்கி அவள் முகம் மலர்ந்தது. ஆனால் அவனுடைய தேர் அவளுக்காக நிற்கவே இல்லை. அவளுடைய தேருக்கு எதிரே இளங்குமரனின் தேர் விரைந்து விலகிச் சென்ற போது கடிவாளக் கயிற்றைப் பற்றியிருந்த அவனது வலது கையும் தோளும் அவள் கண்களில் தோன்றி நிறைந்தன. அவனுடைய அழகிய தோள்களிலிருந்து அவளுடைய மனத்தில் நளின நினைவுகள் பிறந்தன. அந்த நினைவுகளில் மூழ்குவதில் தனியானதொரு களிப்பு அவளுக்கு இருந்தது.

கண்ணைக் கவரும் இந்தச் சுந்தரமணித் தோள்களில் ஒன்றின் மேல் நேற்றிரவு ஒரு விநாடி என் தலையைச் சாய்ந்திருக்கிறேன் - என்று நினைக்கும் போது, அந்த நினைப்பிலேயே அவள் மனத்துக்கு ஒரு பெருமிதம் ஏற்பட்டது. செல்வச் செழிப்பு மிகுந்த பட்டினப்பாக்கத்தில் எத்துணையோ அழகிய இளைஞர்களைச் சுரமஞ்சரி பார்த்திருக்கிறாள். தன்னுடைய பார்வைக்காக எத்துணையோ இளைஞர்கள் நினைவழிந்து தவிப்பதையும் உணர்ந்திருக்கிறாள். ஆனால் அவர்களுக்காகவும், அவர்களுடைய பார்வைக்காகவும் அவள் ஒருபோதும் நினைவிழந்தது இல்லை. இறுமாப்பினால் இறுகிப் போயிருந்த அவள் மனம் நினைவழிந்து நிறையிழந்து நிற்கும்படி செய்த அழகும் ஆண்மையும் இளங்குமரனுடையவையாக இருந்தன.

இளங்குமரன் தொடர்ந்து அவளை அலட்சியம் செய்தான். எந்த அழகினால் தன் மனம் கர்வப்பட்டதோ, அந்த அழகையும் பொருட்படுத்தாமல் தன்னை அலட்சியம் செய்யவும் ஓர் ஆண்பிள்ளை இருக்கிறான் என்பதையும் முதன்முறையாக அவள் கண்டாள். அவளால் அவனை அலட்சியம் செய்ய முடியவில்லை. தனக்கும் தோற்காத பேராண்மைக்கு முன் அவள் தானே தோற்றுப் போய் நின்றாள். ஆனால் அவளுடைய தோல்வியைத் தன்னுடைய வெற்றியாக ஏற்கவும் அவன் சித்தமாயில்லை. ‘ஈடு இணையில்லாத பேராண்மையாளருக்கு நான் மனம் தோற்றேன். அவ்வாறு தோற்றதனால் என் மனம் பெருமைப்படுகிறது - என்ற நினைப்பை அவள் அடைவதற்குக் கூட அவன் வாய்ப்பு நல்கவில்லை. அதனால்தான் அவள் அவனிடம் பிணக்குக் கொள்ள நேர்ந்தது. ஆற்றாமையால் விளைந்த இந்தப் பிணக்கும் அவள் உள்ளத்தில் அதிக நேரம் நிலைத்திருக்கவில்லை.

அவளால் கப்பலில் சில நாழிகைகள் தான் அவனோடு பேசாமல் இருக்க முடிந்தது. சிரிப்பையும், முகமலர்ச்சியையும் செயற்கையாக மறைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் எப்போதும் அப்படி இருக்க முடியவில்லையே!

எவ்வளவு காலம் காத்திருந்தாலும் இளங்குமரனின் சுந்தரமணித் தோள்களுக்கு உரிமை கொண்டாடும் பெருமையைத் தானே அடைய வேண்டும் போல் அந்தக் கணத்தில் அவளுக்கு ஒரு தாகம் ஏற்பட்டது.

எதிரே அவருடைய தேர் போயிற்றே, பார்த்தீர்களா அம்மா?” என்று வசந்தமாலை சிரித்துக் கொண்டே கேட்டாள்.

 

பார்த்தேன், அதற்கென்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது?” என்று அவளைக் கடிந்து கொள்வது போல் மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி.

சுரமஞ்சரி, வானவல்லி முதலியவர்கள் அமர்ந்திருந்த தேர் ஆளமுற்றத்துக் கோயிலுக்குச் செல்வதற்காகப் புறவீதியைக் கடந்து கொண்டிருந்த போது, முல்லையும் வளநாடுடையாரும் தங்கள் இல்லத்திலிருந்து புறப்பட்டு எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்துக்கு முன் புறவீதி வழியாக இளங்குமரன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்ற செய்தியைத் தன் தந்தையிடம் கூறியிருந்தாள் முல்லை. தான் வீட்டு வாயிலில் நின்று கைநீட்டி அழைத்த அழைப்பையும் பொருட்படுத்தாமல் இளங்குமரன் தேரை விரைவாகச் செலுத்திக் கொண்டு போய் விட்டதைக் கண்டு முல்லை மனம் நொந்திருந்தாள்.

அப்பா! நேற்று நீராட்டு விழாவில் தான் அவரைச் சந்திக்க முடியாமற் போயிற்று. யாரோ ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்காகக் காவிரியில் குதித்துச் சென்றாராம். அதன் பின்பு அவரை மீண்டும் தான் சந்திக்க முடியவில்லை என்று அண்ணன் வருத்தத்தோடு தேடிக் கொண்டு போயிருக்கிறார். அதைக் கேள்விப்பட்டதிலிருந்து, அவர் மழையிலும் புயலிலும் காவிரியில் நீந்திக் கரையேறினாரோ இல்லையோ என்று நீங்களும் நானும் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவரானால் இந்த வழியாகத் தேரில் போகும் போது என்னைப் பார்த்தும் பாராதவர் போல் போகிறார். நாமும் அப்படிக் கல் மனத்தோடு இருந்து விடலாம் என்றால் முடியவில்லையே அப்பா! அவர் இப்போது கூடப் பட்டினப் பாக்கத்திலிருக்கும் அந்தப் பெண்ணின் மாளிகைக்குத் தான் தேரில் போகிறார் போலிருக்கிறது. அங்கே போயாவது அவரை அழைத்து வரலாம்; வாருங்கள் என்று கூறிப் பிடிவாதமாக வளநாடுடையாரை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தால் முல்லை.

ஆனால் எந்தப் பெண்ணின் மாளிகைக்கு இளங்குமரன் போயிருப்பாளென நினைத்துக் கொண்டு அவள் தந்தையுடன் புறப்பட்டிருந்தாளோ அந்தப் பெண்ணே அப்போது அதே சாலையில் எதிரில் தேரேறி வருவதைக் கண்டதும் வழியை மறித்தாற்போல் வீதியில் நின்று கொண்டு, “தேரை நிறுத்துங்கள் என்று இரைந்து கூவினாள் முல்லை. தேர் நின்றது.

அன்று இந்திர விழாவின் போது பூதசதுக்கத்தில் அவருடைய ஓவியத்தை வரைந்து வாங்கிக் கொள்வதற்காக அவரைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பெண் இவள் தான் அப்பா! இவள் பெயர்சுரமஞ்சரி என்று சொல்லிக் கொண்டார்கள். எனக்கு இவளிடம் பேசத் தயக்கமாயிருக்கிறது. நீங்களே இவளைக் கேளுங்கள். இவளைக் கேட்டால் அவர் இப்போது எங்கே போகிறாரென்று தெரிந்தாலும் தெரியலாம் என்று தந்தையிடம் மெல்லிய குரலில் கூறினாள் முல்லை. தேரின் முற்பகுதியிலிருந்த சுரமஞ்சரி மட்டும்தான் முல்லையின் கண்களுக்குத் தென்பட்டாள். உயர்ந்த தோற்றத்தையுடைய வளநாடுடையாரோ பின்புறம் வேறு இரண்டு பெண்கள் இருப்பதையும் அவர்களில் ஒருத்தி முன்புறமிருப்பவளைப் போலவே தோற்றமளிப்பதையும் கண்டு யாரிடம் கேட்பதென்று திகைத்தார். “கேளுங்கள் அப்பா என்று முல்லை மறுபடியும் அவரைத் தூண்டினாள்.

அதற்குள் தேரின் முன்புறம் இருந்த பெண் வளநாடுடையாரை நோக்கி, “நீங்கள் யார் ஐயா? இந்தப் பெண் எங்கள் தேரை எதற்காக நிறுத்தச் சொல்லிக் கூப்பிட்டாள்?” என்று சற்றுக் கடுமையாகவே வினவினாள். எனவே ஒருவிதமாகத் திகைப்பு அடங்கி அவளிடமே தமது கேள்வியைக் கேட்டார் வளநாடுடையார்.

இளங்குமரனைப் பார்ப்பதற்காக நாங்கள் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறோம் பெண்ணே! அந்தப் பிள்ளை இப்போது பட்டினப் பாக்கத்தில் உங்கள் மாளிகையில் இருக்கிறானா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். அதைச் சொன்னால் எங்களுக்கு உதவியாயிருக்கும். உன் பெயர் தானே சுரமஞ்சரி என்பது? உன்னைக் கேட்டால் இதற்கு மறுமொழி கிடைக்குமென்று இதோ அருகில் நிற்கும் என் மகள் சொல்கிறாள்.”

நல்லது ஐயா! சுரமஞ்சரி என்பது என் பெயர்தான். ஆனால் உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் இப்போது இவ்வளவு அவசரமாக அவரைத் தேடிக் கொண்டு போக வேண்டிய காரியம் என்னவோ?”

தேரின் முன்புறம் இருந்த சுரமஞ்சரி தன் தந்தையிடம் இப்படிக் கேட்டவுடன் அவருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த முல்லைக்குச் சினம் மூண்டது.

முடியுமானால் கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள். அவருக்கும் எங்களுக்கும் ஆயிரமிருக்கும். அதையெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டியதில்லை என்று நேருக்கு நேர் அவளிடம் சீறினாள் முல்லை. முல்லையின் கோபத்தைக் கண்டு சுரமஞ்சரி பதற்றமடையவில்லை. அந்தக் கோபத்தையே சிறிதும் பொருட்படுத்தாதவளைப் போல் சிரித்தாள்.

பெரியவரே! புறவீதியிலுள்ள பெண்கள் வீரம் மிக்க மரபைச் சேர்ந்தவர்கள் என்பதை உங்கள் மகள் இவ்வளவு கோபத்தோடு என்னிடம் நிரூபித்திருக்க வேண்டாம். நீங்கள் கேட்கிற மனிதர் எதிரே தேரில் போவதை மட்டும் தான் வரும் போது நாங்களும் பார்த்தோம். அதைத் தவிர வேறு ஒன்றும் அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. உங்கள் வீரப்புதல்வியார் நினைப்பது போல் அவரை நாங்கள் எங்கள் மாளிகையிலேயே சிறைவைத்துக் கொண்டிருக்கவில்லை. வழியை விடுங்கள். தேர் போக வேண்டும் என்று கடிவாளக் கயிற்றைப் பற்றி இழுத்தாள் சுரமஞ்சரி. குதிரைகள் பாய்வதற்குத் திமிறின.

முல்லையும் வளநாடுடையாரும் விலகி நின்று கொண்டார்கள். சுரமஞ்சரியின் தேர் புறவீதி மண்ணை வாரித் தூற்றிவிட்டு விரைந்தது. அந்தத் தேர் சென்ற திசையில் வெறுப்பை உமிழும் கண்களால் பார்த்தாள் முல்லை.

 

மனம் இருந்தால் தாமே தேடி வருகிறார்! நாம் எதற்காக அலைய வேண்டும்? திரும்பிப் போகலாம் வாருங்கள் என்று வெறுத்தாற் போல் கூறிக் கொண்டு தந்தையுடன் வீடு திரும்பினாள் முல்லை. அவள் மனத்தில் இளங்குமரன் மேலும், இறுமாப்பின் இருப்பிடமாகத் தெரிந்த அந்தப் பட்டினப்பாக்கத்து நங்கையின் மேலும் எல்லையற்ற ஆத்திரம் கிளர்ந்திருந்தது. இளங்குமரன் என்னும் அழகை நினைத்து இன்புறும் உரிமையில் தனக்கு ஒரு விரோதியும் இருக்கிறாள் என்பதை முல்லை இப்போது உணர்ந்து கொண்டாள். அந்தப் பேரழகை நினைத்து மகிழும் உரிமையை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்கவும் அவளால் முடியாது. செல்வத்தையும் அலங்கார அழகுகளையும் கொண்டு அவனை நினைத்தும், கண்டும், பழகியும் மகிழ்வதற்குச் சுரமஞ்சரி என்னும் வேறொரு பெண் இருப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுரமஞ்சரி தேரில் நின்று கொண்டு பேசிய பேச்சும் அவளது கர்வம் மிகுந்த அழகும் முல்லையின் மனத்தில் அமைதி குலைந்து போகச் செய்திருந்தன. அமைதியிழந்த மனத்துடனே அவள் வீடு திரும்பிய போது வீட்டில் கதக்கண்ணன் வந்து காத்துக் கொண்டிருந்தான். முல்லையும் தந்தையையும் கண்டதும் அவன் ஆவலோடு கூறலானான்:

முல்லை, இளங்குமரனை நீலநாகமறவர் சிறிது நேரத்துக்கு முன்புதான் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டுப் போயிருக்கிறாராம். நல்லவேளை! நேற்று மழையிலும், புயலிலும் காவிரியிலிருந்து மீண்டும் மறுபிறப்புப் பிறந்தாற் போல் அவன் பிழைத்து வந்திருக்கிறான். அதுவே பெரிய காரியம். படைக்கலச் சாலையில் போய் விசாரித்துத் தெரிந்து கொண்டு வந்த பின்பு தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.”

எனக்கு நிம்மதி போய்விட்டது அண்ணா!” என்று அழுகை நெகிழும் குரலில் முல்லையிடமிருந்து பதில் வந்தது.

-------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

4. கவலை சூழ்ந்தது!

 

துறைமுகத்தில் நீண்ட நேரம் அலைந்து திரிந்து கொண்டிருந்த நகைவேழம்பருக்கு இறுதியில் வெற்றியே கிடைத்தது. சீனத்துக் கப்பல் தலைவனை அவர் சந்தித்து விட்டார். எடுத்துக் கொண்ட காரியத்தை முறையாகத் திட்டமிட்டு முயன்று சூழ்ச்சித் திறனோடு முடிப்பதுதான் அவர் வழக்கமாயிற்றே. அன்று காலை துறை சேர்ந்த கப்பல்களைப் பற்றித் தெரிந்து கொண்டு ஒவ்வொரு கப்பல் தலைவனிடமும் சென்று, “இன்று காலை கப்பல் கரப்புத் தீவிலிருந்து யாராவது ஒரு பெண்ணை உங்கள் கப்பலில் ஏற்றி வந்து கரை சேர்த்தீர்களா? அப்படிக் கரை சேர்த்தவர் நீங்களானால் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் உங்களுக்கு நன்றி செலுத்திப் பரிசளிக்கக் காத்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே வந்தார். சீனத்துக் கப்பல் தலைவனிடம் அதையே சொல்லிய போது நகைவேழம்பருக்கு வேண்டிய செய்தி அவனிடமிருந்து கிடைத்தது.

ஐயா! நீங்கள் கேட்பது போல் ஒரு பெண்ணும் அவளுடைய அன்புக்குரிய காதலர் போல் தோன்றிய ஓர் இளைஞரும் கப்பல் கரப்புத் தீவிலிருந்து எங்கள் கப்பலில் இடம் பெற்றுக் கரை சேர்ந்தார்கள். அந்தப் பெண் கப்பலில் வரும் போது உடன் வந்த இளைஞரிடம் பிணக்குக் கொண்டது போல் கோபமாக இருந்தாள். அவள் இந்த நகரத்தில் உள்ள பெரிய கப்பல் வணிகரின் பெண் என்று உடனிருந்த இளைஞர் எங்களிடம் கூறினார். அதனால் விருப்பத்தோடு எங்களுடைய கப்பலில் கொண்டு வந்த பட்டுக்களையும் மற்ற அலங்காரப் பொருட்களையும் அவளிடம் எடுத்துக் காண்பித்தேன். அவள் அவற்றில் எதுவும் தனக்குத் தேவையில்லை என்று மறுத்துவிட்டாள்! நீங்கள் கூறுவது போல் அவளையும் அந்த இளைஞரையும் கரை சேர்த்ததற்காக அவள் பெற்றோரிடம் பரிசு எதுவும் வாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. உதவி செய்வதில் இருக்கிற ஒரே பெருமை கைம்மாறு கருதாமல் உதவி செய்தோம் என்பதுதானே! பரிசு வாங்கிக் கொண்டால் அந்தப் பெருமையை நான் அடைய முடியாது என்று சீனத்துக் கப்பல் தலைவன் நகைவேழம்பரிடம் கூறினான். அவன் கூறிய அடையாளங்களிலிருந்து அவனுடைய கப்பலில் வந்தது சுரமஞ்சரியாகத்தான் இருக்க வேண்டுமென்பது உறுதிப்பட்டது. உடன் வந்ததாகச் சொல்லப்படும் இளைஞன் இளங்குமரனாகத்தான் இருக்க முடியும் என்பதிலும் நகைவேழம்பருக்குச் சந்தேகம் ஏற்படவில்லை.

இளங்குமரன் எப்படி அங்கே அவளைச் சந்தித்தான்? கப்பலில் அவன் உடன் வந்ததைச் சுரமஞ்சரி ஏன் எல்லோரிடமும் சொல்லாமல் மறைத்தாள்?’ என்ற சிந்தனையில் மூழ்கியது நகைவேழம்பர் மனம். ‘யாரோ ஒரு படகோட்டி தன்னைக் கப்பல் கரப்புத் தீவுவரை காப்பாற்றிக் கரை சேர்த்ததாகக் கூறினாளே? அந்தப் படகோட்டிதான் கப்பலில் அவள் கூட வந்தானோ என்று முதலில் சிறிது மனம் குழம்பினார் அவர். ஆனால் கப்பல் தலைவன் இளைஞனைப் பற்றிக் கூறிய அடையாளங்கள் இளங்குமரனுக்கே பொருந்தின. எண்ணங்களை ஒன்றோடொன்று பின்னிச் சூழ்ச்சிமயமாக முனைந்து உண்மையைக் கண்டுபிடிக்கும் வேகம் அவருக்கே உரிய சாதுரியமாகும். அவர் அச்சாதுரியத்தை எப்போதும் இழந்ததில்லை. இப்போதும் இழக்கவில்லை.

சீனத்துக் கப்பல் தலைவரே! நீங்களே சற்றே சிரமத்தைப் பாராமல் என்னுடன் பட்டினப்பாக்கத்துக்கு வரலாம் அல்லவா? அந்தப் பெண்ணையும், இளைஞரையும் நேரில் பார்த்தால் அடையாளம் சொல்லி விடுவீர்களென நினைக்கிறேன். சீனத்துக் கப்பல் தலைவராகிய செல்வர் ஒருவரை அறிமுகம் செய்து கொண்டாற் போலவும் இருக்கும். என்னோடு இப்போதே புறப்படுங்கள் என்று துணிந்து அவனை அழைத்தார் நகைவேழம்பர்.

 

மறுக்காமல் அவனும் உடனே அவரோடு புறப்பட்டு விட்டான். இருவரும் பட்டினப்பாக்கத்து மாளிகையை அடைந்த போது சுரமஞ்சரி முதலியவர்கள் கோவிலுக்குப் போயிருந்தார்கள்.

சுரமஞ்சரியின் தந்தையாரிடம் அந்தக் கப்பல் தலைவனை அறிமுகம் செய்து வைத்தார் நகைவேழம்பர். அவன் துறைமுகத்தில் தன்னிடம் கூறிய விவரங்களையும் அவரைத் தனியே அழைத்துப் போய்க் கூறினார்:

உங்கள் பெண்ணரசி நம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறாள். தன்னுடன் கப்பலில் வந்த இளங்குமரனைப் பற்றிச் சொல்லாமலே மறைத்து விட்டாள்.”

உடன் வந்தவன் அந்தப் பிள்ளைதான் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

இதோ, அதையும் நிதர்சனமாகத் தெரிந்து கொண்டு விடுகிறேன் என்று கூறிவிட்டுச் சுரமஞ்சரியின் மாடத்துக்குப் போய் அங்கேயிருந்த இளங்குமரனின் சித்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து சீனத்துக் கப்பல் தலைவனிடம் காண்பித்தார் நகைவேழம்பர். கப்பல் தலைவனின் முகம் அந்தச் சித்திரத்தைக் கண்டதுமே மலர்ந்தது.

 

இதே இளைஞன் தான். இதே அழகிய கண்கள் தாம். எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது.”

இதைக் கேட்டவுடன் சுரமஞ்சரியின் தந்தைக்கு அடங்காத சினம் மூண்டது. ‘பெண் உயிர் பிழைத்து வந்தாளே; அதுவே போதும் என்று காலையில் உண்டாகியிருந்த மகிழ்ச்சி கூட இப்போது ஏற்பட்ட இந்தச் சினத்தில் ஒடுங்கிவிட்டது. அந்நியனான அந்தக் கப்பல் தலைவனுக்கு முன் தம் குடிப் பெருமையை விட்டுக் கொடுக்கலாகாதே என்ற நினைவு மட்டும் தடுத்திராவிட்டால் அவர் இன்னும் கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருப்பார்.

சீனத்துக் கப்பல் தலைவன் அவர் நிலையைக் கண்டு ஒன்றும் புரியாமல் மருண்டான். ‘பெண்ணைக் காப்பாற்றியதற்காக அவள் பெற்றோர் தனக்கு நன்றி சொல்லப் போவதாய்க் கூறியல்லவா இந்த ஒற்றைக் கண் மனிதர் நம்மை அழைத்து வந்தார்? நடப்பதென்னவோ வேறு விதமாக இருக்கிறதே என்று எண்ணி வியந்தான் அவன்.

சுரமஞ்சரி நீராட்டு விழாவில் நீந்துவது போல் தப்பிச் சென்று முன்பே இளங்குமரனைப் படகுடன் ஆற்றில் காத்திருக்கச் செய்து அவனுடன் புறப்பட்டுப் போயிருப்பாளோ?’ என்று தம் மனம் எண்ணிப் பழகிய கெட்ட வழியிலேயே எண்ணினார் நகைவேழம்பர். அதைச் சுரமஞ்சரியின் தந்தையிடம் காதருகில் சென்று மெல்லக் கூறினார். தன்னை வரவழைத்து உட்கார வைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசிக் கொள்வதும், எதற்காகவோ கோபப்படுவதும் கண்டு சீனத்துக் கப்பல் தலைவன் வருந்தினான். அவர்கள் பண்புக் குறைவாக நடந்து கொள்வதாகத் தோன்றியது அவனுக்கு. இனிமேலும் தான் அங்கே இருப்பதில் பயனில்லை என்ற எண்ணத்துடன் மெல்ல எழுந்து நின்றான் அவன். “நான் போய் வருகிறேன், ஐயா!” என்று கூறி அவர்களிடம் விடைபெற்றான்.

அந்த நேரத்தில் கோவிலுக்குச் சென்றிருந்த தேர் திரும்பி வந்து வாயிலிலே நின்றது. சுரமஞ்சரியும், வசந்த மாலையும் தேரிலிருந்து இறங்கிச் சேர்ந்தாற் போல நடந்து வந்து உள்ளே புகுந்தார்கள். உள்ளே அந்தக் கப்பல் தலைவனையும், இளங்குமரனின் ஓவியத்தையும் சேர்த்துப் பார்த்தபோது சுரமஞ்சரி திடுக்கிட்டாள்.

உங்கள் கப்பலில் வந்தது இந்தப் பெண் தானே?” என்று சுரமஞ்சரியின் பக்கம் கைநீட்டிக் காண்பித்துச் சீன வணிகனைக் கேட்டார் நகைவேழம்பர்.

அவர்கள் தன்னிடம் பண்புக் குறைவாக நடந்து கொண்டதில் சிறிது மனம் குழம்பியிருந்த சீனத்துக் கப்பல் தலைவன் ஒரே விதமான தோற்றத்தில் தெரிந்த இரண்டு பெண்களையும் கண்டு இப்போது இன்னும் குழப்பமடைந்து தன் கப்பலில் வந்தது யாரென்று சொல்லத் தெரியாமல் மருண்டான். மாறி மாறி இருவரையும் மருண்டு போய்ப் பார்த்தான்.

இவள் தானே?” என்று சுரமஞ்சரியைச் சுட்டிக் காண்பித்து அவனை இரண்டாம் முறையாகக் கேட்டார் நகைவேழம்பர்.

அவசரத்திலும், குழப்பத்திலும் அங்கிருந்து உடனே வெளியேறிப் போக வேண்டுமென்ற பதற்றத்திலும் அந்தக் கப்பல் தலைவன் திகைத்து, “இவள் இல்லை! அவள் தான் என் கப்பலில் வந்தவள். சந்தேகமே இல்லை. அந்தப் பெண் தான் என்று வானவல்லியைச் சுட்டிக் காண்பித்துவிட்டு வேகமாக வெளியேறிச் சென்று விட்டான்.

சீனத்துக் கப்பல் தலைவன் கூறிவிட்டுச் சென்றதைக் கேட்டு நகைவேழம்பர் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார். அவர் அதைச் சிறிதும் நம்பவில்லை என்பதை அந்த சிரிப்பு எடுத்துக் காட்டியது.

இவர்கள் இரட்டைப் பிறவி என்பது அந்தக் கப்பல் தலைவனுக்குத் தெரியாது? ஐயோ பாவம்! போகிற போக்கில் ஏதோ பிதற்றிவிட்டுப் போகிறான் அவன். அவனுடைய கப்பலில் வந்தவர்கள் சுரமஞ்சரி தேவியும் அந்தப் பிள்ளையாண்டான் இளங்குமரனும் தான் என்பதைப் பற்றி உங்களுக்குச் சிறிதும் சந்தேகமே வேண்டாம். இதோ உங்களுக்கு முன் சுரமஞ்சரி தேவியார் திகைத்துத் தலைகுனிந்து நிற்பதே இதற்குச் சான்று இவ்வாறு நகைவேழம்பர் கூறி விளக்கிய போது சுரமஞ்சரியின் தந்தை சீற்றத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் நாணி நடுங்கித் தலை தாழ்ந்து நின்றாள். தந்தையார் சுரமஞ்சரியைக் கோபித்துக் கொள்ளும் போது தாங்கள் அருகிலிருப்பது நாகரிகமல்ல என்று கருதிய வானவல்லியும் தோழி வசந்தமாலையும் அங்கிருந்து மெல்ல விலகி உள்ளே சென்று விட்டார்கள். சுரமஞ்சரி தனியே நின்றாள். நகைவேழம்பர் இவ்வளவு விரைவாக அந்தச் சீனத்துக் கப்பல் தலைவனைத் தேடி அழைத்து வருவாரென்றோ அவனிடம் தனது மாடத்திலுள்ள இளங்குமரனின் ஓவியத்தைக் காண்பித்துத் தன்னுடன் இளங்குமரனும் கப்பலில் வந்ததைக் கண்டுபிடித்து விடுவாரென்றோ அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கோவிலிலிருந்து திரும்பி மாளிகைக்குள் நுழைந்ததுமே தான் இவ்வளவு விரைவில் எதிர்பாராத இந்த நிகழ்ச்சி தன்னை எதிர்கொண்டதைக் கண்ட பின் திகைப்பிலிருந்தும் அச்சத்திலிருந்தும் அவளால் விடுபட இயலவில்லை. தந்தையாரின் குரல் சீற்றத்தோடு அவளை நோக்கி ஒலித்தது:

நமது குடிப்பெருமைக்கு மாசு தேடும் செயல்களையே தொடர்ந்து நீ செய்து கொண்டு வருகிறாய்!”

அப்படியானால் நான் உயிர் பிழைத்து வந்ததே உங்கள் குடிப் பெருமைக்கு மாசு தேடும் செயல்தான். என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவருக்கு நன்றியும் பரிசும் தந்து மகிழ வேண்டிய நீங்கள் அவரைப் பற்றி இப்படி நினைப்பது சிறிதும் நன்றாயில்லை அப்பா!”

இப்போது இப்படி நினைக்கிற நீங்கள் முதலில் உங்களைக் காப்பாற்றியவரைப் பற்றிய உண்மையை ஏன் பொய் சொல்லி மறைத்தீர்கள்? யாரோ ஒரு படகோட்டி உங்களைக் கரை சேர்த்ததாகவும் அங்கிருந்து சீனத்துக் கப்பலில் இடம் பெற்று வந்ததாகவும் கூறி உங்களோடு வந்த உதவியாளரை ஏன் மறைத்தீர்களோ?” என்று குறுக்கிட்டுக் கேள்வி கேட்டார் நகைவேழம்பர்.

உங்களுக்கெல்லாம் அவரைப் பிடிக்காது என்று தெரிந்துதான் கூறவில்லை என்று சுரமஞ்சரியும் இந்தக் கேள்விக்குத் தயக்கமின்றி மறுமொழி கூறினாள்.

நீங்கள் கூறாவிட்டால் என்னம்மா? நாங்கள் கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டோமா, இல்லையா? சொந்த மகளிடமே ஏமாந்து போய் நிற்கிற அளவுக்கு உங்கள் தந்தை ஆற்றல் குறைந்தவரில்லை. அவரும், அவரைச் சுற்றியிருப்பவர்களும் ஏழு உலகத்தை ஏமாற்றி விட்டு வருகிற சாதுரியம் படைத்தவர்கள் என்று நகைவேழம்பர் தற்பெருமை பேசிச் சிரித்த போது, தன் தந்தையும் அவரோடு சேர்ந்து சிரித்ததைக் கண்டு சுரமஞ்சரி தன் மனத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் பொறுமையிழந்து கொதிப்படைந்தாள்.

என் தந்தையார் பெருமைப்படுவதற்கு மற்றவர்களை ஏமாற்றுகிற திறமை அவரிடம் இருப்பது ஒன்றுதான் காரணமென்று அவருக்கு முன்பே துணிந்து கூறுகிற அளவுக்கு அவர் உங்களுக்கு இடமளித்திருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன் என்று சுரமஞ்சரி குமுறிப் பேசத் தொடங்கிய போது, “பேசாதே; நீ உள்ளே போ!” என்று அவளை நோக்கி இரைந்தார் அவள் தந்தையார். தலை குனிந்தபடி உள்ளே செல்வதைத் தவிர சுரமஞ்சரியால் அப்போது வேறு ஒன்றும் பேச முடியவில்லை. தன் தந்தையார் நகைவேழம்பருக்கு அளவு மீறித் தகுதி மீறி இடங் கொடுப்பதன் காரணம் என்ன என்பது அவளுக்கு விளங்காத மர்மமாயிருந்தது.

மாளிகையும், மதிப்பும், செல்வமும், சிறப்பும் உள்ளவருக்கு மகளாகப் பிறந்திருக்கிற தன்னைக் காட்டிலும் புறவீதியில் கிழத் தந்தையோடு தன் தேருக்கு முன் வந்து நின்ற அந்த வீரக்குடிப் பெண்ணே எவ்வளவோ விதத்தில் கொடுத்து வைத்தவள் என்று எண்ணும் தாழ்வு மனப்பான்மையை அப்போது சுரமஞ்சரி அடைந்தாள்.

அந்த வீரக்குடிப் பெண்ணின் தந்தை ஆதரவாக அவளோடு தெருவில் நடந்து வந்ததையும், தன் தேருக்கு முன் நின்று இளங்குமரனைப் பற்றி அறிய முயன்றதையும் நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி. புறவீதியின் வீரக் குடும்பங்களில் ஏதாவதொன்றில் தானும் பிறந்திருக்கக் கூடாதா என்று நினைத்துத் தவித்தது அவள் உள்ளம். செல்வமும் செல்வாக்கும் நினைத்தபடி வாழ முடியாமற் செய்யும் தடைகளாக அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றின. ‘புறவீதியிலுள்ள ஆயிரக்கணக்கான மறவர் குடும்பங்களில் ஏதாவதொன்றில் யாராவதோர் அன்பு நிறைந்த தந்தைக்கு மகளாய்ப் பிறந்திருந்தால் தேரையும், பல்லக்கையும் எதிர்பாராமல் மனம் விரும்பியவரைச் சந்திக்கக் கால்களால் நடந்தே புறப்படலாம். வான்வெளிப் பறவை போல் தன்போக்கில் திரியலாமே!’ என்று எண்ணிய போது புறவீதியிற் சந்தித்த மறக்குலத்து நங்கை மேல் சுரமஞ்சரி சிறிது பொறாமையும் கொண்டாள். தன்னை விட அந்தப் பெண்ணே வசதிகள் நிறைந்தவளாக அந்நிலையில் அவளுக்குத் தோன்றினாள்.

அன்று மாலை சுரமஞ்சரி மேலும் கலக்கமடையும்படியானதொரு செய்தி தோழியின் மூலம் அவளுக்குத் தெரியவந்தது. இளங்குமரனின் ஓவியத்தைக் கொடுத்து அவன் பூம்புகாரிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் எங்கே தென்பட்டாலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்து உடனே தன் மாளிகைக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று நாலைந்து முரட்டு யவன ஊழியர்களைத் தன் தந்தையாரும் நகைவேழம்பரும் சேர்ந்து இரகசியமாக அனுப்பி வைத்திருக்கும் செய்தியை வசந்தமாலையின் வாயிலாக அறிய நேர்ந்த போது சுரமஞ்சரியைப் பெருங் கவலை சூழ்ந்தது.

இந்த செய்தியை முன் அறிவிப்புச் செய்துஅவரை எங்காவது பாதுகாப்பாக இருக்கச் செய்யலாமே என்ற எண்ணத்துடன், “வசந்தமாலை! ஓவியன் மணிமார்பன் எங்கிருந்தாலும் நான் கூப்பிட்டேன் என்று உடனே அழைத்து வா. ஓவியன் மூலமாக அவருக்கு முன்பே இந்தச் செய்தியைக் கூறி எச்சரிக்கை செய்யலாம் என்றாள்.

 

ஓவியன் சில நாட்களாக இந்த மாளிகையில் எங்குமே தென்படவில்லை அம்மா! திடீரென்று காணாமற் போனதன் காரணமும் எனக்குப் புரியவில்லை. ஆனாலும் தேடிப் பார்க்கிறேன் என்று புறப்பட்டாள் வசந்தமாலை.

முன்பு தான் இளங்குமரனுக்கு எழுதிய அன்பு மடல் நகைவேழம்பர் கைக்குக் கிடைத்ததைக் கண்டதிலிருந்தே ஓவியன் மேல் ஐயங்கொண்டு வெறுப்பாயிருந்தாள் சுரமஞ்சரி. ஆயினும் இப்போது இரண்டாம் முறையாகவும் அவன் உதவியை நாடுவது தவிர வேறு வழி அவளுக்குத் தோன்றவில்லை. அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள்.

----------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

5. இவள் தான் விசாகை!

 

திருநாங்கூர் அடிகளின் பூம்பொழிலில் அவரிடமிருந்து முதற் சுவடியை வாங்கிக் கொண்ட அந்தக் கணத்தில் இளங்குமரன் மனம், நாள் தவறாமல் ஊர்வம்புகளையும் அடிபிடி சண்டைகளையும் ஏற்றுக் கொண்டு முரட்டுப் பிள்ளையாகக் காவிரிப் பூம்பட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்த தன் பழைய நாட்களைச் சற்றே நினைவு கூர்ந்தது. அந்தப் பழைய நாட்களின் நிகழ்ச்சியில் ஒன்றைத் தனியே பிரித்து இப்போது தான் சுவடியைத் தாங்கிச் சுமந்து நிற்கும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் அவன்.

அந்த நாளில் காவிரிப்பூம்பட்டினத்தின் அம்பலங்களிலும், பொது மன்றங்களிலும் இளைஞர்கள் தங்கள் பலத்தைப் பரீட்சை செய்வதற்காகத் தூக்கிப் பார்க்கும்இளவட்டக்கல் என்னும் கனமான உருண்டைக் கற்கள் இருந்தன. இவற்றைத் தூக்க முடிகிறதா, இல்லையா என்பதைப் பொறுத்து இளைஞர்களின் தோள் வலிமையைக் கணக்கிட முடிந்தது.

பூம்புகாரின் புறநகரமாகிய மருவூர்ப்பாக்கத்தின் தெரு முனைகளிலும், நாளங்காடிச் சதுக்கத்திலும், மறக்குடி மக்கள் மிகுந்த புற வீதிகளிலும் இத்தகைய இளவட்டக் கற்கள் கிடக்கும். இவற்றைச் சுற்றி எப்போதும் இளைஞர்களின் கூட்டத்தைக் காணலாம். பொன் திணித்தாற் போன்ற அழகிய தோள்கள் புடைக்க, நெற்றியில் குறுவியர் முத்தரும்பக் கல்தூக்கும் காளையர்களின் எழிலைக் காண்பதற்காக அந்தந்த வீதிகளின் மேன் மாடங்களில் அங்கங்கே தாமரை பூத்துத் தயங்கினாற் போல் பெண்களின் மலர்ந்த முகங்கள் தோன்றும். தன் விடலைப் பருவத்தில் நகரத்திலுள்ளவற்றிலேயே மிகவும் பெரியவை என்று கருதப்பட்ட இளவட்டக் கற்களையெல்லாம் அலட்சியமாகத் தூக்கி அருகிலிருந்தவர் முகங்களில் வியப்பை மலரச் செய்திருக்கிறான் இளங்குமரன். தீரர்களின் செயல்களைக் கண்டு வியப்படைகிற பருவத்து இளைஞர்களிடையே அவன் வியப்புகளைச் செய்துகாட்டும் தீரனாக இருந்த காலம் அது!

வலிமை வாய்ந்த இந்தக் கைகளில் இப்போது இந்தச் சுவடி ஏன் அதிகமாக கனப்பது போல் ஒரு பாரத்தை உணர்த்துகிறது? மெல்லிய இந்தச் சுவடியைத் தாங்கிச் சுமக்கும் போது என் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? திடீரென்று நான் இளைத்துப் போய்விட்டேனா? என்னிடமிருந்து இந்த ஒரே ஒரு நாள் போதுக்குள் ஏதோ ஒரு வலிமை குறைந்திருக்கிறதே! அது எங்கே குறைந்தது? யார் முன்னிலையில் குறைந்தது? விதையிடுவதற்கு உழுது வைத்த நிலம் போல் என் மனம் எதை எதிர்பார்த்து இப்படி இறுக்கம் நெகிழ்ந்து குழைந்து போயிருக்கிறது?’ என்ற நினைவுகளுடன் கையில் சுவடியேந்தியபடி தயங்கி நின்றான் இளங்குமரன். சற்றே நிதானமாக எண்ணிப் பார்த்த போது தானும் தன் உணர்வுகளும் இளைத்த இடம் அவனுக்கு மீண்டும் நினைவு வந்தது.

மறுபடியும் எப்போதாவது என்னிடம் கேள்வி கேட்க வந்தால் மனம் நிறைய ஞானத்தோடு வலது கையில் சமயவாதம் புரிவதற்கான கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஞான வீரனாக வந்து சேர்! மற்போர் வீரனைப் போல் உடம்பை மட்டும் வலிதாகக் காண்பித்துக் கொண்டு வந்து நிற்காதே!” என்று உலக அறவியின் வாயிலில் அந்த பௌத்த சமயத் துறவி சிரித்துக் கொண்டே கூறினாரே; அவர் அப்படிக் கூறியதைக் கேட்டுத் தான் தலை குனிந்து நின்ற அந்தக் கணமே தன் வலிமையும் தானும் இளைத்துப் போய்விட்டது போன்று ஒரு பிரமையை இளங்குமரன் உணர்ந்திருந்தான். அவனுடைய தயக்கத்தை அடிகள் கவனித்தார்.

எதை நினைத்துத் தயங்குகிறாய், இளங்குமரா? உன் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? இந்தச் சுவடி அவ்வளவு பெரிய சுமையல்லவே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் நாங்கூர் அடிகள்.

அறிவின் உலகமாகிய இந்தச் சுவடிகளையெல்லாம் பார்க்கும் போது இவற்றின் அருகே நான் மிகவும் இளைத்துப் போய்த் தளர்ந்து விட்டாற் போல் எனக்குத் தோன்றுகிறது ஐயா!”

உடம்பிற்கு அப்பாற்பட்டதாய், உடம்பைக் காட்டிலும் வலியதாய் உள்ள உணர்வுகளுக்கு அருகில் நிற்கிற போது உடம்பு சிறியதாய்த் தோன்றுவது இயல்புதான். அப்படிப்பட்ட சமயங்களில் மனத்தைப் பெரிதாக்கி மலரச் செய்துகொண்டு பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். கல்விக்குக் கரை இல்லை. கற்பவருக்கு நாளும் இல்லை. இருக்கிற நாட்களிலும் அவலக் கவலைகளுக்கும் நோய் நொடிகளுக்கும் கழிகிற நாட்கள் பல. சுருள் சுருளாகப் பிடரியில் படரும் கரிய முடியும், பட்டுக் கரையிட்ட ஆடைகளும், பொன்னுருக்கினாற் போன்ற மேனி நிறமும் உடம்புக்குத்தான் அழகு தரமுடியும். மனத்துக்கு அழகும், வலிமையும் தருவது கல்விதான். இதை இன்று தான் நீ அடையத் தொடங்குகிறாய். தளர்ச்சியையும், சோர்வையும் விலக்கிவிட்டு மலர்ந்த மனத்தோடு என் முன்பாக இப்படி உட்கார்ந்து கொள்.”

கைகளில் சுவடியை விரித்து வைத்துக் கொண்டு அடிகளுக்கு முன்னால் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தான் இளங்குமரன். கிரந்தசாலையைச் சுற்றியிருந்த பூம்பொழிலில் மலர்ந்திருந்த பூக்களின் மணமும், தூபப் புகையின் வாசனையும், காலைப் பொழுதின் தூய்மையும், கற்பதற்காக நெகிழ்ந்திருந்த மனமும், எதிரே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆசிரியன் தோற்றமும் இளங்குமரனுக்குப் புனிதமான எண்ணங்கள் பிறக்கும் சூழ்நிலையைத் தந்தன.

தமக்கே உரிய கோமளமான குரலில் பாடத்தைத் தொடங்கினார் அடிகள்: “ஒவ்வொரு மொழிக்கும் ஆதி வடிவம் ஒலி வடிவம் தான். கண்ணுக்குப் புலனாகாத பரம்பொருளைக் காட்டுவதற்காகக் கண்ணுக்குப் புலனாகிற தெய்வ விக்கிரகங்களைப் படைத்துக் கொண்டு வழிபடுவதுபோல் தோற்றமில்லாத ஒலிக்குத் தோற்றமளிக்க ஏற்பட்ட வரிவடிவங்களே எழுத்துக்கள். ஓசை வேறு; ஒலி வேறு. பண்படாமலும் வரையறை பெறாமலும் வழங்குவன வெல்லாம் ஓசை. பண்பட்டும் வரையறை பெற்றும் வழங்குவன எல்லாம் ஒலி, ஒலியிலிருந்து எழுத்துக்கள் பிறந்தன. எழுத்துக்களிலிருந்து மொழிக்கு உருவம் பிறந்தது. எழுத்துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தன. சொற்கள் பொருள்களை அடைந்தன. பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும் ஒரே பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி நிலத்திற் பதங்கள் விளைந்தன. ஒற்றைத் தனி மலர் போல் ஓரெழுத்தில் விளைந்த சொற்களும், தொடுத்து மலர்கள் போல் பல எழுத்துக்களிணைந்து விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது. சொல் செவிக்குப் புலனாகும் போது ஒலி வடிவில் இலங்குகிறது. கண்ணுக்குப் புலனாகும் போது எழுத்து வடிவில் இலங்குகிறது. பூ என்ற தோற்றமும், மணம் என்ற உணர்வும் தனித்தனி நிலைகளாயினும் இரண்டும் ஒன்றிலிருந்து எழுகிற உணர்வுகள் அல்லவா? அதுபோல் சொல்லும் பொருளும் வேறு வேறு உணர்வுகளாயினும் மலர் மணம் போல் சொற் பொருளுணர்ச்சி ஓரிடத்திலிருந்து எழுவதே...”

சொற்பொருளுணர்ச்சி என்பது என்ன ஐயா?” என்று இளங்குமரன் ஆர்வத்தோடு அவரிடம் குறுக்கிட்டுக் கேட்டான்.

இன்ன சொல்லால் இன்ன பொருள் தான் உணரப்படும் எனப் பழகிய வழக்குக்குச் சொற்பொருளுணர்வு என்று பெயர். பாம்பு என்ற சொல்லைக் கூறினால் உடனே பாம்பு என்னும் பொருளும், பாம்பு என்ற பொருளைப் பார்த்தால் உடனே பாம்பு என்ற சொல்லும் இடையீடு இன்றி ஒருங்கே நினைவு வருகிறதல்லவா? உலகத்து மொழிகளில் எல்லாம் உணர்த்தப்படும் பொருள்களிடையே வேறுபாடு இல்லை. உணர்த்தும் சொற்களில் தான் வேறுபாடு உண்டு. இனிமை என்கிற உணர்வு புல்லாங்குழல், யாழ் முதலிய எல்லா இசை வகைக்கும் பொதுவாவது போல்பொருளுணர்த்துதல் என்பது எல்லா மொழிச் சொற்களுக்கும் பொதுவான குறிக்கோள். ஒன்றாகிய பரம்பொருளை ஒவ்வொரு சமயமும் வேறு மார்க்கங்களில் வந்து முடிவு காண முயல்வது போல் ஒரே பொருளை வேறுவேறு சொற்களால் உணர்த்துவது மொழிகளின் மதம். மொழியுணர்வை ஒட்டிச் சமயவுணர்வும் இறையுணர்வும் இணைந்து வளர்வது நமது தமிழ்நாட்டில் வழக்கமாயிருக்கிறது இளங்குமரா!”

ஐயா! தமிழ் என்ற சொல்லால் நம்முடைய மொழியையும், நாட்டையும் இணைத்துப் பேசி வருகிறோம். இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்?”

ஆகா! நீ இப்படியல்லவோ தொடர்ந்து தூண்டிக் கேட்க வேண்டும்! நீ கேட்கக் கேட்க எனக்கு உற்சாகம் வளருகிறது அப்பனே! தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள். இந்தத் தெய்வத் திருமொழியின் ஒலி செவிக்கு இனியது. எழுத்து கண்ணுக்கினியது. சொற்கள் வழங்குவதற்கு இனியன. பன்னூறு ஆண்டுகளாகப் பண்பட்டு வளர்ந்த மொழியைப் பேசும் பாக்கியம் செய்தவர்களாயிருக்கிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தலைமுறைகள் செய்த தவத்தால் வளர்ந்து வளர்ந்து சொற்களெல்லாம் மந்திரமாய் ஆற்றல் பெற்ற மொழி இது என்று பெருமிதத்தோடு பதில் கூறினார் அடிகள்.

இதைக் கேட்ட அந்த விநாடியில் தான் ஒரு தமிழ்மகன் என்பதனால் இளங்குமரனுக்கு மனத்தில் ஏற்பட்ட பெருமை ஒப்பற்றதாயிருந்தது.

எழுத்திலக்கணத்தைப் பற்றிய சிறந்த கருத்துக்கள் பலவற்றை நுணுக்கமாக இளங்குமரனுக்குக் கூறி விளக்கினார் அடிகள். அவற்றையெல்லாம் கேட்கக் கேட்கப் புதிய உலகம் ஒன்றைத் திறந்து காண்பித்தாற் போலிருந்தது இளங்குமரனுக்கு.

பாடம் முடிந்ததும் அடிகள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே இளக்குமரனிடம் இப்படிக் கூறினார்:

கடவுள் மனிதர்களின் தலையெழுத்தை நிர்ணயித்து அவர்களை உலகத்துக்கு அனுப்பினார்! அவர்கள் உலகத்தில் எத்தனையோ எழுத்துக்களையும் மொழிகளையும் நிர்ணயித்துக் கொண்டு வாழப் பழகி விட்டார்கள். உலகத்தில் தலையெழுத்தைக் கணக்கிடுகிற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். தங்கள் தலையெழுத்தை மாற்றிக் கொள்ள வழி தெரியாவிட்டாலும் காலத்தின் தலையெழுத்தைப் புறங்காணும் காவியங்களையும், இலக்கிய இலக்கியங்களையும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். எவ்வளவு விந்தையான உலகம் இது! தெய்வம் விதியை வகுத்து எழுதிப் படைத்தது. மனிதர்கள் எழுதிப் படைத்து விதி வகுத்திருக்கிறார்கள். ‘சொல்லையும் பொருளையும் போல் சக்தியும் சிவமுமாய் இணைந்திருக்கும் சொற்பொருட் காரணமான பெருமானைச் சொல்லும் பொருளுமாக இணைத்துப் பாவித்துச் சொற்பொருளால் வணங்குகிறேன் என்று பரம்பொருளை வணங்குகிற அளவுக்கு பெருமை படைத்திருக்கிறார்கள். மண்ணுலகத்துக்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள், தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் என்ற பெயரும் சூட்டியிருக்கிறார்கள். விதியின் எழுத்துக்கு வடிவம் தெரியவில்லை, பொருளும் தெரியவில்லை. மனிதர்கள் படைத்த எழுத்துக்கு வடிவும் பொருளும் வகையும் எல்லாம் இருக்கிறது அல்லவா?”

இளங்குமரன் ஆவல் மீதூரக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் இருவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த கிரந்தசாலையின் வாயிற் பக்கமிருந்துதாத்தா! நான் உள்ளே வரலாமா?” என்று பெண் குரல் ஒன்று வினாவியது.

யார்? விசாகையா? வா, அம்மா! இரண்டு மூன்று நாட்களாக உன்னை இந்தப் பக்கமே காணவில்லையே, எங்கே போயிருந்தாய்?” என்று அடிகள் அந்தக் குரலுக்குரியவளை வரவேற்றுக் கூறிக் கொண்டே வாயிற்பக்கம் திரும்பினார்.

தலையில் நிறுத்திய சங்குபோல் எடுத்துக் கட்டிய சடைமுடியும், எளிய தோற்றமும், அட்சய பாத்திரம் ஏந்திய கைகளுமாக மேக மண்டலத்திலிருந்து தூய்மையே வடிவாய் இறங்கிவரும் மின்னல்போல் உள்ளே நுழைந்தாள் துறவுக்கோலம் பூண்ட புத்த சமயப் பெண் ஒருத்தி. அழல்கொண்டு செய்தாற் போன்ற நிறமும், துறவிக் கோலத்துக்குரிய சீவர ஆடையும், நடந்து வருகிற போதே தன்னைச் சுற்றிலும் தூய்மை சூழச் செய்கிற தனித் தன்மையுமாக அந்தப் பெண்ணைக் கண்டதுமே இளங்குமரனின் மனம் வணங்கியது. பேதமை மாறாத இளம் வயது நிலவைக் கறை துடைத்தாற் போன்ற தூயமுகம். அதில் உணர்ச்சியலைகள் படியாது அமைதி திகழும் கண்கள். சிவந்த இதழ்களில் நிறைந்த சாந்தம். சாந்தத்திலிருந்து தனியே பிரிக்க முடியாததொரு புன்னகை. தோற்றம் நிறையப் பாதாதிகேச பரியந்தம் வார்த்தைகளார் சொல்ல முடியாதொரு பேரமைதியோடு அந்தத் துறவி நின்றாள். அவளுடைய வெண்கமலப் பூங்கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய கோலமும் நின்ற நிலையும் மின்னலிற் செய்து நிறுத்திய சிற்பமோ எனக் காண்பார் கண்களைத் தயங்கச் செய்தன. பெரியதாய், அழகாய், அளவாய்த் தொடுத்துத் தொங்கவிட்டிருந்த முல்லை மாலை சரிந்து நழுவுவது போல் தரையில் மெல்ல அமர்ந்தாள் விசாகை.

இளங்குமரா! இந்தப் பெண்ணின் பெயர் விசாகை. உன்னைப் போலவே என்னிடம் கற்றவள். இவள் இந்தக் கோலம் பூண நேர்ந்தது ஒரு விந்தையான வரலாறு. தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது; மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான் என்று சிறிது நேரத்துக்கு முன் உன்னிடம் கூறியது உனக்கு நினைவிருக்கிறதல்லவா? விதி வகுத்த வாழ்வை மீறித் தான் வகுத்த வாழ்வுக்கு விதி அமைத்துக் கொண்ட பெண் இவள். இத்துணை இளம் வயதில் இவள் மனத்துக்குக் கிடைத்திருக்கிற வைராக்கிய முதிர்ச்சி அற்புதமானது; பிறர் வியக்கத் தக்கது என்று நாங்கூர் அடிகள் இளங்குமரனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

விந்தை! விந்தை! என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்கிற அளவுக்கு என் வாழ்வில் அப்படி என்ன இருக்கிறது, தாத்தா? துர்பாக்கியங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த பழங் கதையை மறுபடியும் நினைவூட்டுவதில் உங்களுக்கு என்ன தான் இன்பமோ?” என்று சொல்லிச் சிரித்தாள் விசாகை. அந்தச் சிரிப்பில் பாவ நினைவுகளை அழிக்கும் தெய்வீகத் தூய்மை தெரிந்தது. துன்பம், பயம், சோர்வு, சிறுமை எல்லாமே அந்தச் சிரிப்பில் எரிந்து பொசுங்கின.

 

ஓகோ! நீ விரும்பவில்லையானால் உன்னைப் பற்றிச் சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன் விசாகை! உன்னுடைய கதை இந்தப் பிள்ளைக்கு அவசியம் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் சொல்ல நினைத்தேன்...” என்று தயங்கினாற் போலக் கூறி நிறுத்தினார் அடிகள்.

நன்றாகச் சொல்லுங்கள், தாத்தா! எனக்கு மறுப்பேயில்லை. ஆனால் கதைக்கு உரியவளாய்க் கதைக்கு ஆளாகிக் கதையாகி விட்ட எனக்கு என்னவோ அதில் அப்படிப் பெருமைப்பட ஒன்றுமில்லை என்பது போல் தோன்றுகிறது.”

 

கதாபாத்திரங்களே தங்கள் கதையை நினைத்துப் பெருமைப்பட்டால் கதை சொல்கிறவன் கதி என்ன ஆவது? நீ பேசாமல் கேட்டுக் கொண்டிரு விசாகை! இந்தப் பிள்ளை உன் கதையைக் கேட்டதும் எவ்வளவு பெருமைப்படுகிறான் என்பதைப் பார்க்கலாமே!” எனச் சிரித்துக் கொண்டே கூறியபடி இளங்குமரன் முகத்தைப் பார்த்தார் அடிகள். அந்த முகத்தில் நிறையத் தெரிந்து கொள்ளும் ஆவல் நிறைந்திருந்தது.

------------


மணிபல்லவம்
- இரண்டாம் பாகம்

6. வேழம்பர் விரைந்தார்

சுரமஞ்சரியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவசரமாக ஓவியன் மணிமார்பனைத் தேடிக்கொண்டு புறப்பட்டாள் தோழி வசந்தமாலை. சில நாட்களாக அவள் அறிந்த மட்டில் ஓவியன் மணிமார்பன் அந்த மாளிகையின் எல்லையில் இருப்பதாகவே தெரியவில்லை. ஓவியன் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி எங்காவது ஓடிப்போயிருக்க வேண்டும் அல்லது நகைவேழம்பருடைய குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் சிறை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நகைவேழம்பருடைய கட்டுக்காவலில் அவன் இருக்கிறானா, இல்லையா என்பதை அறிந்து கொள்வது அவ்வளவு எளிய காரியமில்லை என்பதை வசந்தமாலை உணர்ந்திருந்தாள். அந்த மாளிகையின் எல்லைக்குள் நகைவேழம்பர் இருக்கும்போது அவருடைய பகுதிக்குள் நுழைந்து ஓவியனைத் தேடுவதென்பது இயலாத காரியம். அவர் இல்லாத நேரங்களிலும் காவல் உண்டு. நகைவேழம்பரின் மனத்தைப் போலவே அவருடைய குடியிருப்பு மாளிகையில் பாழடைந்த பகுதிகளும், இருண்ட கூடங்களும் அதிகமாக இருந்தன.

 

தன் தலைவியிடமிருந்து இளங்குமரனுக்கு மடல் வாங்கிக் கொண்டு போன நாளுக்குப் பின் ஓவியன் மணிமார்பனைத் தானும் தன் தலைவியும் மீண்டும் சந்திக்கவே இல்லை என்பதை நினைத்த போது வசந்தமாலைக்குப் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின. ‘அந்த மடலைக் கொண்டு போனபின் அவன் திரும்பி வராமலே ஓடியிருக்கலாமோ என்று எண்ண இடமில்லை. ஏனென்றால், அந்த மடல் நகைவேழம்பர் கையில் சிக்கியிருக்கிறது. மடலோடு அதைக் கொண்டு சென்றவனும் அகப்பட்டிருக்கத்தான் வேண்டும். முடிவாக ஓவியன் மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்றிருக்க முடியாது என்ற உறுதியே வசந்தமாலையின் உள்ளத்தில் வளர்ந்தது. பெருமாளிகைத் தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த நகைவேழம்பரின் பகுதியை அவள் அடைந்த போது, அது இருளில் மூழ்கியிருந்தது. அதன் பெரிய கூடத்தில் சிறிய தீபம் ஒன்று காற்றுடன் போராடிக் கொண்டிருந்தது. வாயிற்புறம் ஒரு காவலன் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான். நகைவேழம்பர் எங்கோ வெளியே போயிருந்தார் போலிருக்கிறது. வசந்தமாலை ஓசைப்படாமல் அடிமேல் அடிவைத்து அந்த மாளிகைக்குள் நுழைந்தாள். கூடத்திலிருந்து தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாகத் தேடினாள். வெளிப்புறம் தாழிட்டிருந்த இருட்டறை ஒன்றைத் திறந்த போது அவள் எதிர்பார்த்துத் தேடிய மணிமார்பன் அங்கே தளர்ந்து ஒடுங்கிப் பொழிவிழந்து அமர்ந்திருப்பதைக் கண்டாள். தன் பின்னால் புறப்பட்டு வருமாறு அவனுக்குக் குறிப்புக் காட்டிவிட்டு முன்னாள் நடந்தாள் அவள். ஓவியன் பயந்து நடுங்கினான்.

வந்த வழியே திரும்பிப் போய்விடுங்கள் அம்மா! அந்தக் கொலைகார மனிதர் இப்போது வந்து பார்த்தால் உயிரையே வாங்கிவிடுவார். இந்த மாளிகையின் பாதாள அறைகளில் கூண்டிலகப்பட்ட கொடும் புலிகள் இருப்பது தவிர, மாளிகைக்குள்ளேயே கூண்டிலடைபடாத புலிகளாய் மனிதர்களே இருக்கிறார்கள். இங்கு ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை. நான் இன்னும் சிறிது காலம் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு உதவுவதாக முயன்று அதையும் அந்தக் கொடுமைக்காரர் கைகளினால் அழியச் செய்து விடாதீர்கள் என்று பேசத் தொடங்கிய ஓவியனின் வாயைத் தன் வலது கையால் பொத்தி மேலே பேசவிடாமற் செய்தாள் வசந்தமாலை.

உங்களுக்கு ஒரு கெடுதலும் வராது. பேசாமல் என் பின்னால் வாருங்கள் என்று அவன் காதருகில் கூறிவிட்டு, அவனுடைய மறுமொழியை எதிர்பாராமலே அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு நடந்தாள் அவள். மென்மையான அவள் பிடியிலும் ஓவியனின் கை நடுங்கியது. நகைவேழம்பரது மாளிகையின் பின்புறமுள்ள தோட்டத்துக்குள் வந்து சேர்ந்ததும் ஓவியனைப் பிடித்துக் கொண்டிருந்த கைப்பிடியை விட்டாள் வசந்தமாலை.

பார்த்தால் பயந்த மனிதரைப் போல் நடந்து கொள்கிற நீங்கள் செய்கிற காரியங்களெல்லாம் பயமில்லாத காரியங்களாகச் செய்து விடுகிறீர்களே, ஐயா! எங்கள் தலைவி கொடுத்தனுப்பிய தாழை மடலை அதற்குரியவரிடம் சேர்க்காமல் நகைவேழம்பரிடம் கொடுத்திருக்கிறீர்களே; அது எப்படி நேர்ந்தது? உங்களை நம்பிக்கையான மனிதர் என்று எண்ணி மடலைக் கொடுத்தனுப்பிய எங்களுக்கு நல்ல பாடம் கற்பித்து விட்டீர்களே!” என்று வசந்தமாலை கடுமையான குரலில் கேட்ட போது,

அம்மணீ! அது என் பிழையில்லை. உங்கள் மடலை அதற்குரியவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். மாளிகைக்குத் திரும்பி உங்கள் தலைவியைச் சந்தித்து மடலைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்தோடு வந்தவனை அந்தக் கொடுமைக்கார மனிதர் வழிமறித்துப் பயமுறுத்தி மடலையும் பறித்துக் கொண்டு இந்த இருட்டறையில் கொண்டு வந்து தள்ளிவிட்டாரே! என்ன செய்வது?” என்று தன் இயலாமைக்குக் காரணத்தை ஓவியன் விளங்கினான். அவன் குற்றமற்றவன் என்பது வசந்தமாலைக்குப் புரிந்தது. ஒரு பாவமும் அறியாத அந்த அப்பாவி ஓவியன் சிறைப்பட்டுக் கிடந்து ஒளியிழந்து போயிருப்பதைப் பார்த்து அவள் மனம் இளகினாள்.

கவலைப்படாதீர்கள். மறுபடியும் நீங்கள் அந்த இருட்டறைக்குப் போகும்படி நேராது. அந்தக் கொடுமைக்காரருடைய முகத்திலும் விழிக்க வேண்டிய அவசியமிராது. இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் தலைவி ஒரு காரியமாக உங்களை இந்த மாளிகையிலிருந்து வெளியே அனுப்பப் போகிறாள். வாருங்கள், தலைவியை சந்திக்கப் போகலாம் என்று ஓவியனை அழைத்துக் கொண்டு சுரமஞ்சரியின் மாடத்துக்குச் சென்றாள் வசந்தமாலை. நகைவேழம்பரோடு தந்தையாரும் எங்கோ வெளியே போயிருந்ததனால் அவர்கள் திரும்புவதற்குள் ஓவியனிடம் செய்தியைச் சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டுமென எண்ணினாள் சுரமஞ்சரி. ஓவியனைப் பற்றிய எல்லா செய்திகளையும் கூறி அவன் குற்றமற்றவன் என்பதையும் வசந்தமாலை தன் தலைவிக்கு விவரித்தாள்.

வசந்தமாலையிடமிருந்து இதைக் கேட்ட பின் சுரமஞ்சரியின் உள்ளத்தில் ஓவியன் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பு மாறி அநுதாபமே நிறையப் பெருகிற்று. ஆறுதலாக அவனை நோக்கிக் கூறலானாள் சுரமஞ்சரி:

உங்களைப் போன்றவர்கள் கலைத்திறமையோடு மன உறுதியையும், துணிவையும் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டும். கொடுமைகளுக்கு அஞ்சி அடங்கிவிடக் கூடாது. கொடுமைகளை எதிர்த்துக் கொடுமைகளிலிருந்து மீளவும் மீட்கவும் தான் அறிவு, கலை எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன.”

இருக்கலாம், அம்மா! ஆனால் கொலை செய்யும் கைகளுக்கு முன்னால் கலை செய்யும் கைகள் வலுவிழந்து நடுங்குகின்றனவே! நான் என்ன செய்வது? வெள்ளையுள்ளம் படைத்தவனாகவே வளர்ந்து விட்டேன். மாறமுடியவில்லை. அன்று இந்திர விழாவின் போது நாளங்காடிப் பூத சதுக்கத்தில் உங்களைச் சந்திக்க நேர்ந்த போதே என்னுடைய போதாத காலத்தையும் சேர்த்துச் சந்தித்து விட்டேனோ என்னவோ?”

 

இப்படி இன்னொரு முறை சொல்லாதீர்கள், ஓவியரே! உங்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று உங்களிடம் அவரது ஓவியத்தை வரையும் பணியை ஒப்படைத்தேனே தவிர இப்படியெல்லாம் நீங்கள் உங்களுடைய துணிவின்மையால் அடையும் துன்பங்களுக்கு என்னைக் காரணமாகச் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் வரைந்தளித்த ஓவியம் அழியாச் சித்திரமாக எனது ஓவியச்சாலையில் எக்காலத்தும் இருக்கும் என்று கனவு கண்டேன். இன்று பிற்பகல் நான் கனவு கண்டு கொண்டிருந்ததற்கு நேர்மாறான விதத்தில் பயன்படுவதற்காக அந்த ஓவியம் பறிபோய்விட்டது. அந்த ஓவியத்திலுள்ள மனிதரைத் துன்புறுத்திச் சிறைப்பிடித்துக் கொண்டு வருவதற்காக அதையே அடையாளமாகக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். எப்பாடு பட்டாயினும் அதைத் தவிர்த்து அந்த மனிதருக்குக் கெடுதல் நேராமல் தடுப்பதற்கு உங்கள் உதவியை நாடவேண்டியவனாக இருக்கிறேன் ஓவியரே!”

சுரமஞ்சரி கூறிய இந்தச் செய்தியைக் கேட்டு மணிமார்பன் திடுக்கிட்டான். ஆனாலும் சிறைப்பட்டு அடங்குகிற அளவுக்கு இளங்குமரன் வலிமையற்றவனில்லை என்ற உறுதியான நம்பிக்கை அவனைப் பதற்றமடைவதிலிருந்து தவிர்த்தது.

ஓவியத்தை இங்கிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்களே என்பதற்காக வேண்டுமானால் நீங்கள் கவலைப்படலாம் அம்மா! ஆனால் அதை வைத்து அவரைத் தேடிப்பிடித்துத் துன்புறுத்துவார்களோ என்று நினைத்துக் கவலைப்படுவதற்கு அவசியமில்லை! சிறைப்பட்டு அடங்குகிற வலிமைக் குறைவுள்ள மனிதரில்லை அவர். தேடிப் போகிறவர்கள் அவரிடம் சிறைப்படாமல் மீண்டு வந்தால் போதும்! வலிமையான சூழ்நிலையில் வலிமை வாய்ந்த மனிதர்களுக்கிடையே வலிமையோடு தான் இருக்கிறார் அவர் என்று ஓவியன் சமாதானம் கூறிய பின்னும் சுரமஞ்சரி நிம்மதியடையவில்லை.

ஐயா, ஓவியரே! என்னை உங்கள் சகோதரியாக எண்ணி மறுக்காமல் எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள். அவர் எங்கிருந்தாலும் உடனே சந்தித்து இதைக் கூறி முன்னெச்சரிக்கை செய்த பின் நீங்கள் உங்கள் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். கொடுமைக்காரர்கள் நிறைந்த இந்த மாளிகைக்கு மறுபடியும் திரும்பி வரவேண்டுமென்று அவசியங்கூட இல்லை. வெளியேறிப் போகிற போக்கில் எனக்காக நீங்கள் இந்த உதவியைச் செய்துதானாக வேண்டும்.” “நீங்கள் என்னவோ அந்த மனிதருக்காக உயிரையே விடுகிறீர்கள். உங்களைப் பொறுத்த வரையில் அந்த மனிதர் நெகிழ்ச்சியே இல்லாத கல்லாயிருக்கிறாரே அம்மா. அன்றைக்கு அந்த மடலை ஏற்றுக் கொள்ளாமல் என்னைத் திருப்பியனுப்பி அவமானப்படுத்தியது போதாதென்ற் இன்றைக்கு இன்னொரு முறையும் அவரிடம் போய் அவமானப்படச் சொல்கிறீர்களே!” என்று அதுவரை சொல்வதற்குத் தயங்கிக் கூசியதை அவளிடம் மாம் விட்டுச் சொன்னான் ஓவியன்.

 

இதைக்கேட்டுச் சுரமஞ்சரி ஓவியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு கணம் சுட்டெரித்து விடுவது போலிருந்தது அந்தப் பார்வை. மறுகணம் நிதானமாய் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறலானாள் அவள்.

அவர் என்னை மதிக்காமல் இருக்கிறார் என்பதற்காக நானும் அவரை மதிக்காமலிருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு, ஒவியரே! அவர் என்னிடமிருந்து விலக விலக நான் அவருடைய அண்மையை நாடித் தவிக்கிறேன். இன்னதென்று உங்களுக்குச் சொல்லி விளக்க முடியாததொரு நுண்ணிய உணர்வு இது!... இதைப் பற்றி மேலும் என்னிடம் தூண்டிக் கேட்காமல் நான் உங்களிடம் கோரும் உதவியைச் செய்ய முடியுமா, இல்லையா என்பதற்கு மட்டும் மறுமொழி கூறுங்கள்.”

அந்த அன்புப் பிடிவாதத்தைக் கேட்டு ஓவியன் திகைத்துப் போனான். என்ன பதில் கூறுவதென்று தோன்றாமல் தயங்கினான் அவன். அவளுடைய பார்வை அவனைக் கெஞ்சியது.

நீங்கள் கூறியபடி அவரைச் சந்தித்து இந்தச் செய்தியைக் கூறி எச்சரிக்கை செய்கிறேன், அம்மா! ஆனால் நான் மறுபடியும் இந்த மாளிகைக்குத் திரும்பி வருவேனென்று நீங்கள் எதிர்பார்க்கலாகாது. இந்த ஒற்றைக்கண் மனிதர் நான் இங்கிருந்தால் எளிதில் வாழவிடமாட்டார். இன்று நள்ளிரவுக்குள் உங்களுடைய செய்தியை உரியவரிடம் கூறிக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு நான் புறப்பட்டு விடுவேன்.”

எங்கே புறப்படப் போகிறீர்கள்?”

எங்காவது நல்லவர்கள் இருக்கிற இடத்தைத் தேடிப் புறப்பட வேண்டியதுதான்!”

அப்படியானால் நாங்களெல்லாம் கெட்டவர்களா ஓவியரே?”

நீங்கள் நல்லவர்களாயிருந்தால் மட்டும் போதுமா? உங்களுக்கும் இப்போதிருந்தே இந்த மாளிகையில் பல துன்பங்கள் வரத் தொடங்கிவிட்டனவே! உங்கள் மனதுக்குப் பிடித்தவரை உங்கள் தந்தையாருக்குப் பிடிக்கவில்லை! உங்கள் தந்தையாரையும் அவருடன் சூழ்ந்திருப்பவர்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.”

அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஓவியரே! நான் இந்த மாளிகையில் வாழப் பிறந்தவள். இங்கு விளைகின்ற எல்லா இன்ப துன்பங்களையும் அநுபவித்துத்தான் ஆகவேண்டும்! நீங்கள் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள். போகுமுன் எனக்கு இந்த உதவியைச் செய்துவிட்டுச் செல்லுங்கள்.”

ஓவியன் வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.

 

இதோ இதைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள்.” ஓவியன் திரும்பினான். தன் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையைக் கழற்றி அவனிடம் நீட்டினாள் சுரமஞ்சரி. ஓவியன் அதைப் பெற்றுக் கொள்ளத் தயங்கி நின்றான்.

இவ்வளவு பெரிய பரிசுக்குத் தகுதியானவனா நான்?”

தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இருந்தால் போதும். வாங்குகிறவர்களுக்கு மறுக்காமல் வாங்கிக் கொள்வதுதான் பெரிய தகுதி. இப்போது நீங்கள் எந்த மனிதரைத் தேடிக் கொண்டு போகிறீர்களோ, அந்த மனிதர் ஒருமுறை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்ள மறுத்த பரிசு இது! நீங்களும் இதை மறுத்தால் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.”

அவர் இதை மறுத்த காரணம் என்னவோ?”

அவர் காரணங்களைக் கடந்த மனிதர். எதையுமே பிறரிடமிருந்து ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்?”

உங்கள் அன்பு உள்பட...”

கேட்க வேண்டாததைக் கேட்க நேர்ந்து விட்டதுபோல் சுரமஞ்சரியின் முகம் சுருங்கிச் சிறுத்தது. போகிற போக்கில் ஓவியன் தன்னைக் குத்திக் காட்டிப் பேசிவிட்டு போகிறானே என்று அவள் மனம் புண்பட்டது. அதை மறைக்க முயன்றவாறே மணிமாலையை அவன் கைகளில் கொடுத்துவிட்டு வணங்கினாள் அவள். அவன் வாங்கிக் கொண்டான்.

வசந்தமாலை மாளிகையின் வாயில் வரை துணை வந்து ஓவியனை வழியனுப்பினாள். அதே சமயம் அவர்கள் வெளியே போயிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நகைவேழம்பர் என்ற ஒற்றைக்கண் புலி வேறொரு பக்கமாக வெளியேறித் தன்னைப் பின் தொடர்ந்து விரைந்ததை ஓவியன் கவனிக்கவில்லை. வசந்தமாலை கவனித்தாள். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஓவியனை அனுப்பிவிட்டு மாளிகைக்கு உள்ளே திரும்பும்போதுதான் கவனித்தாள்.

----------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

7. பூதம் புறப்பட்டது

 

வானளாவி நின்ற அந்தப் பெருமாளிகையிலிருந்து வெளியேறிப் பட்டினப்பாக்கத்தின் அகன்ற வீதியில் விரைந்து நடந்த போது ஓவியன் மணிமார்பனின் உள்ளத்தில் துன்பங்களின் கோட்டையிலிருந்து விடுதலையடைந்து வந்துவிட்டாற் போன்ற மகிழ்ச்சி நிறைந்திருந்தது. வீதியின் இருபுறமும் இரவின் அழகுகள் விவரிக்க இயலாத சோபையுடன் திகழ்ந்தன. இரவு கண் விழித்துப் பார்ப்பது போல் எங்கு நோக்கினும் விளக்கொளிகள் தோன்றின. மாளிகையின் முன்புறங்களில் படர்ந்திருந்தஇல்வளர்முல்லை என்னும் வகையைச் சேர்ந்த முல்லைக் கொடியில் பூக்கள் பூத்துக் குலுங்கி வீதியில் வீசிய காற்றையே மணக்கச் செய்து கொண்டிருந்தன.

மணிமார்பனுக்கு மணங்களிலிருந்து எண்ணங்கள் பிறந்தன. எண்ணங்களிலிருந்து புதிய எண்ணங்கள் கிளைந்தன. மணங்களைத் தூண்டுதலாகக் கொண்டு பிறந்த எண்ணங்களும் எண்ணங்களைத் தூண்டுதலாகக் கொண்டு பிறந்த வாசனைகளும் மணந்தன, நெஞ்சிலும் உடம்பிலும். வாழ்க்கையைப் பற்றிய துணிவுகளும், நம்பிக்கையும் அப்போதுதான் புதியனவாகப் பிறப்பதுபோல் தோன்றின. மணங்கள், இனிய இசைகள், குளிர்காற்று இவற்றின் அருகில் இவற்றை உணரும் போதுவாழ்க்கையில் மகிழ்வதற்கு ஏதோ இருக்கிறது, எங்கோ இருக்கிறது. அதைத் தேடு!” என்பது போல் ஒரு நம்பிக்கையுணர்ச்சியை மணிமார்பன் பலமுறை அடைந்திருக்கிறான். மடியில் முடிந்து வைத்துக் கொண்டிருந்த மணிமாலையைப் பற்றி நினைத்து மகிழ்ந்தான் அவன். சிறிது நேரத்துக்கு முன்பு அந்த மாளிகையிலிருந்து அவன் வெளியேறிய போது சுரமஞ்சரி அவனுக்கு மனம் விரும்பிக் கொடுத்த பரிசு அல்லவா அது? அவ்வளவு பெரிய பரிசை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை அவன். தான் அந்த மணிமாலையை வாங்கிக் கொள்வதற்குத் தயங்கிய போது அவள் கூறிய வார்த்தைகளை மறுபடியும் நினைத்துக் கொண்டான் அவன். தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இருந்தால் போதும், வாங்கிக் கொள்கிறவர்களுக்கு மறுக்காமல் வாங்கிக் கொள்வதுதான் பெரிய தகுதி என்று கூறினாளே அவள்! செல்வர்கள் வார்த்தைகளைக் கூட பெருந்தன்மையாகச் செலவழிக்கிறார்களே என்று அவளுடைய வார்த்தைகளை எண்ணியபோது அவனுக்கு ஒரு வியப்பு உண்டாயிற்று. சுரமஞ்சரி மணிமாலையளித்ததில் எவ்வளவு பெருந்தன்மை இருந்ததோ, அவ்வளவுக்குச் சிறிதும் குறையாத பெருந்தன்மை அவள் அதை அளிக்கும்போது கூறிய வார்த்தைகளிலும் இருந்ததை அவன் உணர்ந்தான்.

அடடா! மனத்துக்குப் பற்றுதல் இல்லாத சூழ்நிலையிலிருந்தும், ஒட்டுதல் இல்லாத உறவுகளிலிருந்தும் விடுபட்டு வெளியேறிச் செல்வது எத்துணை மகிழ்ச்சியாயிருக்கிறது. இங்கே அமரலாமோ, அங்கே நிற்கலாமோ, கூடாதோ என்றெல்லாம் பெருஞ்செல்வர் இல்லத்தில் கூசிக்கொண்டே பழகும் வறுமையாளனாக நான் இனி வாடித் தவிக்க வேண்டியதில்லை. நாளையிலிருந்து என்னுடைய நல்ல காலம் தொடங்குகிறது. மீண்டும் இனிமேல் இந்தப் பட்டினப்பாக்கத்து மாளிகைக்குத் திரும்பி வர வேண்டிய தீவினை எனக்கு இல்லை. இதோ என் மடியிலிருக்கும் இந்த மணிமாலையை விற்றால் கவலையில்லாமல் வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான பொற்கழஞ்சுகள் கிடைத்துவிடும். நானும் என்னுடைய ஓவியக்கலையும் வளர்ந்து பெருகி வாழலாம். ஆனால், அதற்கு முன் இன்னும் ஒரே ஒரு துன்பம் எனக்கு இருக்கிறது. சுரமஞ்சரி தேவியின் மெல்லிய உள்ளத்தைக் கவர்ந்த அந்த முரட்டு மனிதரைச் சந்தித்து அவள் கூறியவற்றைச் சொல்லி, எச்சரிக்கை செய்துவிட்டுப் போக வேண்டும். அந்த மனிதரைச் சந்தித்து இரண்டாம் முறையாக அவமானப்பட நேர்ந்தாலும் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அந்த மனிதரிடமிருந்து அடைகிற கடைசி அவமானமாக இருக்கட்டும் அது என்று இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டே வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான் மணிமார்பன்.

வெளியே சென்றிருக்கும் நகைவேழம்பர் எதிரே திரும்பி வர நேர்ந்து தான் கண்களில் தென்பட்டுத் துன்புறும்படி ஆகிவிடக் கூடாதே என்று அஞ்சியே அவன் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். ‘நாளங்காடியின் அடர்த்திக்குள் புகுந்துவிட்டால் அப்புறம் கவலை இல்லை. பெரிய தெருக்கள் தவிர குறுகிய வழிகளும், சிறிய முடுக்குகளும் மருவூர்ப்பாக்கத்தில் அதிகமாக இருப்பதனால், நாளங்காடியைக் கடந்து மருவூர்ப்பாக்கத்துக்குள் செல்லும் போது பிறர் கவனத்துக்கு ஆளாகாமல் மறைந்து சென்று விடலாம். மருவூர்ப்பாக்கத்தில் ஆலமுற்றத்துப் படைக்கலச்சாலையில் அந்த மனிதரைச் சந்தித்துவிட்டு இரவோடு இரவாக இந்த நகரத்திலிருந்து வெளியேறி விட வேண்டும் - என்று திட்டமிட்டிருந்தது அந்த ஏழை ஓவியனின் மனம். தன் தாய்நாட்டையும் தாயையும் ஏக்கத்தோடு நினைத்தான் அவன்.

வைகை வளநாடாகிய பாண்டிய நாட்டில் தமிழ் மதுரைக் கோநகரில் ஆற்றின் வடகரைமேலே திருமருத முன்துறை என்னுமிடத்தில் மருத மரங்களின் நடுவே அமைந்திருந்த தனது சிறிய வீட்டையும் மூப்படைந்த தன் பெற்றோர்களின் நிலையையும் மனக் கண்களால் நினைத்துப் பார்த்துக் கொண்டான் ஓவியன் மணிமார்பன். இரண்டு திங்களுக்கு முன், இந்திர விழாவைக் காண்பதற்காக மதுரையிலிருந்து பூம்புகாருக்கு புறப்பட்ட யாத்திரைக் குழுவினருடன் தானும் சேர்ந்து புறப்பட்ட அந்த நாளில், வீட்டு வாயிலில் கிழப் பெற்றோர் தனக்கு விடை கொடுத்த துயரக் காட்சியும் மணிமார்பனுக்கு நினைவு வந்தன. ‘காவிரிப்பூம்பட்டினத்து இந்திர விழாவில் நிறைய ஓவியங்கள் எழுதி விற்றும், பரிசு பெற்றும் தான் பெரும் பொருளோடு திரும்பி வரப் போவதனைக் கற்பனை செய்தபடி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் தன் பெற்றோரைப் பற்றி நினைத்த போது மணிமார்பனுக்கு மனம் நெகிழ்ந்தது. கண்கள் கலங்கின. அப்போதே அந்த விநாடியே பறந்து சென்று மதுரையில் வைகைக் கரையில் குதித்துத் தன் வீட்டுக்குப் போய், கிழப் பெற்றோரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்ய வேண்டும் போல் ஆசையாயிருந்தது மணிமார்பனுக்கு.

தனக்குச் சுரமஞ்சரி அளித்திருந்த மணிமாலையை நாளங்காடிச் சதுக்கத்திலுள்ள பொன் வணிகர் எவரிடமாவது விற்றுப் பொற்கழஞ்சுகளாக மாற்றிக் கொண்டு மதுரைக்குப் புறப்படலாமென எண்ணினான் அவன். நீலநாகர் படைக்கலச்சாலைக்குப் போய்ச் சுரமஞ்சரி கூறியனுப்பியிருந்த செய்தியை அதற்குரியவரிடம் கூறி விட்டுத் திரும்பி வந்து மணிமாலையை விற்கலாம் என்றால் நாளங்காடிக் கடைகளை அதற்குள் அடைத்து விடுவார்கள். இரவு நேரத்தில் அல்லங்காடிக் கடைகள் திறந்திருக்குமாயினும், இவ்வளவு மதிப்பீடு உள்ள அரிய மணிமாலையை விலை பேசி விற்கிற அளவுக்குப் பெரிய கடைகள் அங்கு இல்லை. நாளங்காடி நாற்சந்திக்கு வந்தவுடன் பூதசதுக்கத்துக்கு எதிரே தயங்கி நின்றான் மணிமார்பன். இந்திர விழாவின் இரண்டாம் நாள்தான் அந்த இடத்தில் சுரமஞ்சரி என்னும் செல்வக் குடும்பத்துப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்ததும், அவளுக்காக இளங்குமரனை நிற்கச் செய்து ஓவியம் வரைந்ததும், அதன் காரணமாகப் பின்பு தனக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் அவன் நினைவில் படர்ந்தன. அவன் நினைப்பிலும் நோக்கிலும் காவிரிப்பூம்பட்டின நகரம் இப்போது கூட அழகும் பெருமையும் நிறைந்ததாகத்தான் தோன்றியது. ஆனால் நகைவேழம்பர் என்னும் குரூரமான மனிதரையும், அவரை வைத்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரையும் நினைத்த போதுதான் காவிரிப்பூம்பட்டினம் பயங்கரமும் சூழ்ச்சியும் மிகுந்த நகரமோ என்ற அச்சம் அவன் மனத்தில் எழுந்தது.

பூம்புகாரின் மாபெரும் துறைமுகத்துக்கு, நெடுந்தொலைவிலுள்ள நாடுகளிலிருந்தெல்லாம் கப்பல்கள் வந்து போவதனால் பலநாட்டு வணிகரும் நிறைந்து வாணிகமும் செழிப்பும் சிறப்புமாக நடைபெற்று, வாழவும் பொருள் சேர்க்கவும் வழிகள் அதிகமாயிருந்தன. அதை நினைத்துக் கொண்டு தான் மணிமார்பன் அந்த நகரத்துக்கு வந்திருந்தான். ஆனால் அவன் அங்கு வந்ததிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் என்னவோ வேறு விதமாக அமைந்து விட்டன. ‘உடும்பைப் பிடிக்க வேண்டாம். உடும்புப் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு ஓடினால் போதும் என்ற மனநிலையை அடைந்து விட்டான் அவன்.

எதிரே நாளங்காடிப் பூதங்கள் இரண்டும் பாசக் கயிற்றையும், கதாயுதத்தையும் ஓங்கிக் கொண்டு இருளில் பயங்கரமாகக் காட்சியளித்தன. ‘பொய்த் தவவேடம் பூண்டோர், நிறையிலாப் பெண்மணிகள், கீழ்மைக் குணமுள்ள அமைச்சர்கள், ஒழுக்கமற்ற ஆடவர்கள், பொய்ச் சாட்சி சொல்வோர், புறம் பேசுவோர் இவர்களையெல்லாம் எங்கள் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்போம் என்று நள்ளிரவு நேரங்களில் நான்கு காத தூரம் கேட்கும்படி இடிகுரலில் அந்தப் பூதங்கள் முழக்கமிடுவதாகப் புனைந்து கூறிப் பொல்லாத குழந்தைகளைப் பெற்றோர் அடக்குவது வழக்கம். அந்த நகரில் குழந்தைகளைப் பயமுறுத்தும் வழக்கம் இதுதான்.

இந்த பாவி நகைவேழம்பர் எத்தனையோ முறை நள்ளிரவு நேரங்களில் தனியாக இதே வழியாக வருகிறாரே, பூத சதுக்கத்துப் பூதங்கள் இன்னும் இவரைப் புடைத்து உண்ணாமல் ஏன் விட்டு வைத்திருக்கின்றனவோ?’ என்று கொதிப்போடு எண்ணினான் அவன். பொற்கடைக்குப் போய் மணிமாலையை விற்பதற்கு முன்னால் யாரும் காணாத தனிமையில் தான் மட்டும் அதை ஒரு முறை நோக்கி மகிழ வேண்டுமென்று விரும்பினான் ஓவியன். ஆனால் மக்கள் புழக்கமும் நெருக்கடியும் நிறைந்த அந்த நாளங்காடிச் சதுக்கத்தில் அவன் எதிர்பார்த்த தனிமை கிடைக்குமென்று தோன்றவில்லை. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான் மணிமார்பன். பூதச் சிலையைச் சுற்றி ஓரளவு இருண்டிருந்தது. திருவிழா முடிந்திருந்ததால் பூதங்கள் இரண்டும் அடுத்த ஆண்டின் திருவிழாவை எதிர்பார்த்து இருளின் அமைதியில் தவம் செய்து கொண்டிருந்தன போலும். இருட்டைப் பிசைந்து இயற்றியவை போலத் தோன்றிக் கொண்டிருந்த அந்தக் கரும்பூதச் சிலைகளின் கீழே மின்மினிப் பூச்சி போல் ஒரு சிறு விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. விளக்கைச் சுற்றிலும் பல காரணங்களுக்காக வேண்டுதல் செய்து கொண்டவர்கள் காணிக்கையாக வைத்திருந்த மண் பிரதிமைகள் நின்றன. உடைத்த தேங்காய் மூடியின் உட்புறம் போன்ற குழிந்த கண்களும், கோரப் பற்களும், பயமூட்டும் தோற்றமுமாகச் சூழ்ந்திருந்த இம்மண் உருக்கள் பெரும் பூதத்தைச் சூழ்ந்து படை திரண்ட குட்டி அசுரகணம் போலக் காட்சியளித்தன.

முதலில் ஓவியன் அந்த இடத்துக்குப் போவதற்குப் பயந்தான் என்றாலும் ஆசை வளர்ந்து துணிவாயிற்று. நாளங்காடியைப் போலக் கூட்டம் அதிகமான பகுதியில் நல்ல மனிதர்கள் மட்டும் தான் சூழ்ந்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது. நல்லவர்களும் இருக்கலாம், கெட்டவர்களும் இருக்கலாம். அப்படிக் கெட்டவர்களும் நல்லவர்களும் கலந்திருக்கும் இடத்தில் பெறுமானமுள்ள பொருளாகிய மணிமாலையை எடுத்துப் பலர் காண நோக்குவது அறிவுக்கு அழகன்று என முடிவுக்கு வந்தவனாகப் பூதச்சிலைக்கு அருகே சென்றான் மணிமார்பன்.

வாடிக் காய்ந்த பூக்களின் வெதும்பிய மணமும் பூதச் சிலையிலிருந்து வழிந்திருந்த எண்ணெய் வாடையுமாக அந்த இடத்துக்குத் தனிச் சூழ்நிலையை நல்கின. தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்துவிட்டுப் பூதச் சிலையின் கீழே விளக்கின் அடியிலிருந்த மண் பிரதிமைகளுக்கு நடுவே முழந்தாளை மண்டியிட்டு அமர்ந்தான் ஓவியன். சுற்றியிருந்த எல்லாப் பிரதிமைகளின் கோரக்கண்களும் கொள்ளிவாய்களும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் அவனுக்கு ஒரு பொய் உணர்வு தோன்றிக் கணநேரம் மருட்டியது. வேகமாக அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் நடுங்கும் கைகளால் மடியிலிருந்து அந்த மணிமாலையை எடுத்து விளக்கருகில் பிடித்தான் அவன். ஒளிக்குலம் முழுவதும் ஒன்றுபட்டு வளைந்து ஆரமாகித் தொங்கினாற் போல் சுடர் வெள்ளம் பாய்ச்சியது அந்த மாலை. மாலையிலுள்ள மணிகள் மின்னும் போதெல்லாம், ‘இந்த உலகில் எங்களுக்கு விலை ஏது? விலை கொடுப்பார் தாம் எவர் இருக்கின்றனர்? எங்கு இருக்கின்றனர்?’ என்று தன் ஒளி வீச்சுக்கள் முழுவதும் கேள்விகளை நிறைத்துக் கொண்டு மின்னுவது போல் ஓவியனுக்குத் தோன்றியது. ‘இவ்வளவு பெரிய பரிசுக்கு நான் தகுதியானவனா?’ என்று மறுபடியும் தனது மன எல்லையில் கேள்வி எழுந்த போது இந்த மாலையின் ஒளிவட்டத்துக்கு நடுவே சுரமஞ்சரியின் பேரழகு முகம் தோன்றித்தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இருந்தால் போதும் என்று கூறிச் சிரிப்பதுபோல் ஓவியன் உணர்ந்தான்.

 

ஒருவிதத்தில் நான் கொடுத்து வைத்தவன் தான்! காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்து சில நாட்கள் துன்பமும், கொடுமையும் அநுபவித்து விட்டாலும் திரும்பிச் செல்லும் போது மிகவும் மகிழ்ச்சியோடு பெரும் பரிசு பெற்றுச் செல்கிறேன் என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டான் ஓவியன்.

அப்போது பின்னால் ஏதோ ஓசை கேட்டாற் போலிருந்தது. ஓவியன் மணிமாலையை மறைத்துக் கொண்டு பதற்றத்தோடு திரும்பிப் பார்த்தான். வரிசையாக நிறுத்தியிருந்த மண் பிரதிமைகள் தாம் கண்களை உருட்டி விழிப்பது போல் தோன்றின வேயன்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. ‘தன் மனத்தில் ஏற்பட்ட பிரமையினால் அப்படி ஓசை கேட்டது போல் தானாக எண்ணியிருக்க வேண்டும் என்று பயம் நீங்கிச் செல்வதற்காக எழுந்தான் மணிமார்பன். மறுபடியும் முன்பு கேட்ட அதே ஓசை கேட்பது போலிருந்தது. நெஞ்சத் துடிப்பு மேலிட நடுக்கத்துடன் ஓடிவிடுவதற்கும் சித்தமாகி அவன் தன் கால்களை வேகத்துக்குரிய நிலைக்குக் கொண்டு வர முற்பட்ட போது பூதச்சிலையில் அடிப் பக்கத்து இருளிலிருந்து யாரோ மெல்லக் கனைப்பது போல் கேட்டது. பயந்தவாறே பார்த்தான்.

அவனுக்குக் கண்கள் விரிந்து வெளிறின. எதிரேயிருந்த பூதப் பிரதிமை ஒன்று குரூரக் கண்களை விழித்துக் கொண்டு கோர வாய் பிளந்து அவனருகே நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மண் பிரதிமை நடக்குமா? இப்படி பயமுறுத்துமா?

அந்தப் பூதம் அருகில் வந்ததும் தான் அதற்கு ஒரே கண் என்பதும் அது நகைவேழம்பர் என்கிற மனிதப் பேய் என்பதும் ஓவியனுக்குப் புரிந்தது. தன் கால்களின் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி ஓட்டமெடுத்தான் மணிமார்பன். அவன் ஓடிய வேகத்தில் தள்ளிய மண் பிரதிமைகள் சில கீழே விழுந்து உடைந்தன.

-------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

8. வல்லவனுக்கும் வல்லவர்

 

பெருமாளிகையின் வெளிப்புறம் முதல் தலைவாயில் வரை உடன் வந்து, ஓவியன் மணிமார்பனை வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பிச் சென்ற வசந்தமாலை, நகைவேழம்பர் ஓவியனைப் பின் தொடரும் செய்தியைச் சுரமஞ்சரியிடம் போய்க் கூறினாள்.

நடப்பதெல்லாம் நாம் நினைத்ததற்கு மாறாக இருக்கிறது அம்மா! நகைவேழம்பர் மாளிகைக்குள் இல்லையென்று நினைத்துக் கொண்டு இவ்வளவு ஏற்பாடும் செய்தோம். கடைசி விநாடியில் புற்றுக்குள்ளிருந்து பாம்பு புறப்பட்டது போல் இந்த மனிதர் எங்கிருந்தோ வந்து பாய்ந்து விட்டாரே! இனிமேல் என்னம்மா செய்வது? ஓவியர் இவர் கையில் சிக்கிக் கொண்டு விட்டால் நீங்கள் கூறியனுப்பியிருக்கும் செய்தி உரிய இடத்துக்குப் போய்ச் சேராதே!”

இதைக் கேட்டுச் சுரமஞ்சரி அதிர்ச்சியடைந்து உட்கார்ந்து விட்டாள். “இப்படி நடக்குமென்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை வசந்தமாலை! இந்த மாளிகையில் நினைத்தபடி எந்தக் காரியத்தைத்தான் செய்ய முடிகிறது? ஒவ்வொரு முயற்சியும் தொடங்கும்போதே அதற்கு எதிர் முயற்சியும் எங்காவது ஒரு மூலையிலிருந்து தொடங்கிவிடுகிறதே! நமது முயற்சிகளும், எண்ணங்களும் தோல்வியடைந்து முறியும் போது தான் நீயும் நானும் நிராதவானவர்கள் என்பதை நாமே புரிந்து கொள்ள முடிகிறது. இன்று நேற்று ஏற்பட்ட கெடுதல் அன்று இது. இந்த மாளிகையின் வரலாற்றில் என்றோ, எங்கோ ஏற்பட்டிருக்கிற கெடுதல் இது. இந்தக் கெடுதலுக்குத் தந்தையாரும் துணையிருக்கிறார் என்றே தெரிகிறது.”

சற்றும் மகிழ்ச்சியின்றிச் சலிப்போடு பேசினாள் சுரமஞ்சரி. அவள் சிறிது நேரம் கழித்து வசந்தமாலையையும் அழைத்துக் கொண்டு தன் மாடத்திலிருந்து கீழிறங்கித் தேரில் குதிரைகளைப் பூட்டச் சொல்லிப் பணியாட்களுக்கு உத்தரவிட்டாள். தேர், புறப்படுவதற்குரிய நிலையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இருவரும் தேரில் ஏறிக் கொண்டு புறப்பட்டார்கள்.

சுரமஞ்சரியும், வசந்தமாலையும் இருந்த தேர் மாளிகை வாயிலைக் கடந்து வெளியேறு முன் பெருநிதிச் செல்வராகிய தந்தையார் சிரித்தபடி விரைந்து வந்து தேருக்குக் குறுக்கே வழிமறித்தாற் போல் நின்றார். சுரமஞ்சரி தேரை நிறுத்திவிட்டுக் கோபத்தோடு தன் தந்தையைக் கடுமையாகப் பார்த்தாள்.

சுரமஞ்சரி! நான் எப்போதும் உன் வழியில் குறுக்கிட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று தானே இப்படிக் கோபப்படுகிறாய்?”

கேட்டுவிட்டு மர்மமாகச் சிரித்தார் அவர். அவளும் விடவில்லை. கோபத்தில் சுடச்சுட பதிலளித்தாள்:

பிறருடைய வழிகளில் குறுக்கிடாமல் வாழ்வதற்குச் சிலரால் முடியாது அப்பா!”

அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதைத்தானே இப்படிக் குறிப்பாய் மறைத்துச் சொல்ல வருகிறாய்? நல்லது. என் மகள் சாதுரியமாகப் பேசினால் நானும் பெருமை அடைய வேண்டியதுதானே? ஆனால் நீ சொல்வதைச் சிறிது மாற்றிச் சொன்னால் தான் நான் ஒப்புக் கொள்ள முடியும். நான் என்னொருவனுடைய வழியில் இயல்பாக நடந்து போனாலே அது பல பேருடைய வழிகளில் குறுக்கீடாக முடிகிறது. நான் நடந்து போகிற வழியே அத்தகையதென்பதா, அல்லது வேறுவிதமான வழியில் நடந்து போக என்னால் முடியாதென்பதா? எப்படிச் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை, மகளே!”

 

எதற்காகப் பேச்சை வளர்க்கிறீர்கள் அப்பா? இப்போது நாங்கள் வெளியே புறப்பட்டுப் போகலாமா, கூடாதா? அதை முதலில் சொல்லுங்கள்.”

போகலாம் சுரமஞ்சரி! ஆனால் எங்கே புறப்பட்டுப் போகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

சுரமஞ்சரி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கினாள். தந்தையார் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்துச் சிரித்தார்.

அதனால் என்ன? எங்கே போகிறாயென்று என்னிடம் சொல்ல வேண்டாம். நீ எங்கே போக வேண்டுமானாலும் போய்விட்டு வா. ஆனால் இந்த இரவு வேளையில் தனியாகப் போக வேண்டாம். இதோ இவனை உங்களோடு துணைக்கு அனுப்புகிறேன் என்று வாயிற்பக்கம் காவலுக்கு நின்று கொண்டிருந்த ஓர் ஊழியனைக் கூப்பிட்டுத் தேரைச் செலுத்துகிறவனாக அமரச் சொன்னார் அவர்.

உடனே சுரமஞ்சரி தேரோட்டியின் இடத்தை அவனுக்காக விட்டு உள்ளே அமர வேண்டியதாயிற்று. தந்தையின் தந்திரமான ஏற்பாடு அவளுக்கு நன்றாகப் புரிந்தது. தன்னுடன் துணைக்கு ஆளனுப்புவது போல் தன்னைக் கண்காணிக்கவே அவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை அவள் விளங்கிக் கொண்டாள்.

தன் மனத்தில் அவள் நினைத்துக் கொண்டு புறப்பட்ட காரியம் பின் தொடர்ந்து செல்லும் நகைவேழம்பரால் ஓவியனுக்குத் துன்பம் ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டுமென்பதாயினும் இப்போது அதை மாற்றிக் கொண்டாள்.

நெய்தலங்கானல் கடற்கரைக்குப் போய்ச் சிறிது நேரம் காற்றாட இருந்து வரலாம் என்று வசந்தமாலையிடம் சொல்லுவது போல் தேரோட்டுவதற்கு அமர்ந்திருந்தவனுக்கும், தந்தையாருக்கும் நன்றாகக் கேட்கும்படி இரைந்து சொன்னாள் சுரமஞ்சரி. ‘நெய்தலங்கானல் கடற்கரையை நினைத்தவுடன் சிறு வயதில் தானும் வானவல்லியும் தாயுடன் அங்கே சென்று விளையாடிய நாட்களெல்லாம் சுரமஞ்சரிக்குத் தோன்றின. மருதநிலம் முடிந்து நெய்தல் நிலம் ஆரம்பமாகும் அழகிய கடற்கரை அது. அங்கே ஒரு பக்கம் தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்களும், இன்னொரு பக்கம் புதராக அடர்ந்த தாழை மரங்களும் சேர்ந்து காட்சியளிக்கும். நடுநடுவே உப்பங்கழிகள் சிற்றாருகளைப் போல் மணல் வெளியைப் பிளந்து பாய்ந்து கொண்டிருக்கும். மனத்தில் யாரைப் பற்றியோ, எதைப் பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அந்தக் கடற்கரையின் அழகுகளையெல்லாம் தன்னால் அனுபவிக்க முடியாதே என்று சுரமஞ்சரி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள். தேர் சென்று கொண்டிருந்தது.

 

சுரமஞ்சரி எந்த இடத்துக்கோ புறப்பட நினைத்து வேறு எந்த இடத்துக்கோ போக நேர்ந்து விட்ட அந்த இரவில் மருவூர்ப்பாக்கத்தின் குறுகிய தெருக்களில் நகைவேழம்பர் ஓவியனை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தார். ஓவியனுக்கு எப்படியாவது அந்த மனிதப் பேயிடமிருந்து தப்பிவிட வேண்டுமென்று தவிப்பு ஏற்பட்டிருந்ததால் அவன் பூத சதுக்கத்திலே தொடங்கிய ஓட்டத்தை இன்னும் நிறுத்தவில்லை. அதேபோல் ஓவியனைப் பிடித்துவிட வேண்டுமென்ற பிடிவாதம் நகைவேழம்பருக்கு இருந்ததனால் அவர் பின்பற்றித் துரத்துவதையும் நிறுத்தவில்லை. ஏமாற்றி ஏமாற்றி இன்பம் கண்ட மனமுடைய அவர் எந்த நிலையிலும் தாமே ஏமாந்து போக விரும்பியதில்லை; நேர்ந்ததும் இல்லை. அப்படியே தப்பிவிடுவதாயிருந்தாலும் அந்த அரும் பெரும் மணிமாலையோடு அவன் தப்புவதை அவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஓவியனுடைய போதாத காலமோ என்னவோ நடுவழியில் நகைவேழம்பரோடு அவனைத் துரத்துவதற்கு இன்னும் நாலைந்து பேர் சேர்ந்து கொண்டுவிட்டார்கள். அப்படிச் சேர்ந்து கொண்டவர்கள் வேறு யாருமில்லை, மாலையில் இளங்குமரனின் ஓவியத்தோடு அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருவதற்காகப் பெருமாளிகையிலிருந்து புறப்பட்டுப் போன முரட்டு யவன ஊழியர்களேதான். தற்செயலாக இளங்குமரனைத் தேடி மருவூர்ப்பக்கத்துப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த அவர்கள் இப்போது நகைவேழம்பரோடு சேர்ந்து கொண்டு துரத்தவே ஓவியன் மிகவும் அச்சம் கொண்டு தலைதெறிக்கிற வேகத்தில் ஆலமுற்றத்தை நோக்கி ஓடலானான். எப்படியாவது படைக்கலச் சாலைக்குள் போய் நுழைந்துவிட வேண்டுமென்பது அவன் வேகத்தின் இலட்சியமாக இருந்தது. படைக்கலச் சாலைக்குள் போய் நுழைந்து கொண்டால் அங்கே இளங்குமரன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்குப் பாதுகாப்புத்தான் என்று எண்ணினான்.

இளங்குமரன் இருந்தால் அவரிடம் அடைக்கலம் புகுந்து விடுவேன். அவர் இல்லாவிட்டால் அவரைத் தேடி வந்ததாகச் சொல்லி அங்கிருப்பவர்களிடம் அடைக்கலம் புக வேண்டியதுதான் என்று நினைத்து அவசரமும், அவசியமும் உண்டாக்கியிருந்த சக்தி மீறிய விரைவுடன் முன்னேறிக் கொண்டிருந்தான் மணிமார்பன்.

பின்னால் துரத்திக் கொண்டு வந்தவர்கள் அவனைச் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

திருட்டுப் பயலே! இன்று நீ அகப்பட்டால் உன்னை உயிரோடு விடுகிற உத்தேசம் இல்லை. உன்னால் முடிந்த வரை ஓடு, எதிரே இனிமேல் கடல் தான் இருக்கிறது என்று பின்னாலிருந்து நகைவேழம்பர் சீறுவது ஓவியன் செவிகளில் ஒலித்து அவனை நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தது. ‘இவ்வளவு தொலைவு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்த பின்பு இந்தக் கொடுமைக்காரரிடம் அகப்பட்டுக் கொள்வதைப் போல் பேதமை வேறு இருக்க முடியுமா?’ என்று எண்ணி எண்ணி அந்த எண்ணத்தினால் இன்னும் சிறிது நம்பிக்கையை உண்டாக்கிக் கொண்டான் மணிமார்பன். படைக்கலச் சாலையின் வாயில் தென்பட்டதும் அடைத்து மூடியிருந்த அதன் பிரம்மாண்டமான மரக்கதவுகளைப் பார்த்துத் தன் உயிர் தப்புவதற்கு உதவுமென்று தான் நம்பிக்கை கொண்டு வந்த ஆசையின் வழியே அடைபட்டுப் போய் விட்டது போல் பரிதவித்துப் பதைபதைத்து நின்று விட்டான் அவன்! அந்தப் பக்கம் ஆலமுற்றத்துக் கோவிலுக்கு அப்பால் அலைபாய்ந்து ஆர்ப்பரிக்கும் கடல், இந்தப் பக்கம் கொல்லப் பாய்ந்து வரும் கொடும் புலிகளைப் போல் எதிரிகள், எதிரே அடைத்த கதவுகள் - மணிமார்பன் நம்பிக்கையிழந்து விட்டான். அவன் கண்களுக்கு முன்னால் உலகம் முழுவதுமே இருண்டு சுழன்று கொண்டிருந்தது.

அவனுக்கு நினைவு தப்புவதற்கு முன் மிக அருகில் வேகமாக வரும் தேரின் மணிகள் ஒலித்தன. எதிர்ப்பக்கமிருந்து படைக்கலச் சாலையின் வாயிலை நோக்கி ஒரு தேர் விரைந்து வருவதைப் பார்த்தான் மணிமார்பன். தள்ளாடி விழுவதற்கிருந்தவன் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றான். திருநாங்கூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நீலநாகமறவரின் அந்தத் தேர் நின்றதும் அவர் கீழே இறங்கினார். மணிமார்பன் ஓடிப்போய் அவர் அருகே நின்று கைகூப்பி, “ஐயா! நான் இளங்குமரனுக்கு மிகவும் வேண்டிய நண்பன். உங்களுக்கு அடைக்கலமாக ஏற்றுக்கொண்டு என்னை இந்தக் கொடுமைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள். இவர்கள் இளங்குமரனைச் சிறைப்பிடித்துக் கொண்டு போவதற்காக அவனுடைய ஓவியத்தோடு அவனைத் தேடிக்கொண்டு திரிகிறார்கள். என்னையும் பிடித்துக் கொண்டு போய்க் கொன்றுவிடலாமெனத் துரத்துகிறார்கள். நல்லவேளையாக தெய்வமே வந்தது போல் நீங்கள் தேரில் வந்தீர்கள்.” அவன் மூச்சிறைக்கப் பதறி நடுங்கிப் பேசுவதை அநுதாபத்தோடு பார்த்தார் நீலநாகமறவர். அவர் அவனைக் கைப்பற்றிக் கொண்டு கூறலானார்:

நான் உனது தெய்வம் இல்லை, தம்பீ! தெய்வம் அதோ அங்கே ஆலமுற்றத்துக் கோவிலில் இருக்கிறது. உனக்கும், எனக்கும் மிக அருகில் தான் இருக்கிறது.”

ஆனால் நீங்கள் அதை விட மிகவும் அருகில் இருக்கிறீர்களே ஐயா!” என்றான் ஓவியன்.

பயப்படாதே! உன்னையும், என்னையும் போலத் தேடித் தவிப்பவர்களுக்குத் தெய்வம் எங்கிருந்தாலும் மிக அருகில் தான் இருக்கிறது. இதோ நிற்கிறார்களே இவர்களைப் போல் கருணையும், அன்பும் இல்லாத கொடியவர்களுக்காகத்தான் அது வெகு தொலைவில் இருக்கிறது என்று சொல்லி ஓவியனைப் பின்னால் நிறுத்திவிட்டு வளைத்துக் கொண்டாற் போல் முன்புறம் நின்றிருந்த அந்த எதிரிகளை நெருங்கினார் நீலநாக மறவர்.

உங்களுக்கு என்ன வேண்டும்?”

பெருமலை நகர்ந்து வந்தது போல் முன் வந்து நின்று கொண்டு இப்படிக் கேட்ட அந்தத் தோற்றத்தை நகைவேழம்பரும் அவருடனிருந்த முரட்டு மனிதர்களும் அண்ணாந்து பார்த்தார்கள். நகைவேழம்பர்தான் துணிந்து பதில் பேசினார்:

 

உங்களுக்குப் பின் ஒளிந்து கொண்டு அடைக்கலம் கேட்கிறானே, அந்தப் பிள்ளையாண்டான் திருடன். பட்டினப்பாக்கத்துப் பெரு மாளிகையிலிருந்து மணிமாலையைத் திருடிக் கொண்டு ஓடிவந்து விட்டான். அவனை எங்களிடம் விட்டு விட வேண்டும்.”

நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை. இந்தப் பிள்ளையின் பயத்தையும் நடுக்கத்தையும் பார்த்தால் இவனைத் திருடும் தொழிலுக்குத் துணிந்தவன் என்று திருடர்களே ஒப்பமாட்டார்களே! நியாயமாகப் பார்க்கப் போனால் இந்தப் பிள்ளைதான் தைரியத்தை உங்களிடம் திருட்டுக் கொடுத்து விட்டு நிற்கிறான் இப்போது!” என்று கூறிக்கொண்டே நகைவேழம்பருக்கு அருகிலிருந்தவன் கையில் வைத்திருந்த இளங்குமரனின் ஓவியத்தை வலிந்து அவனிடமிருந்து பறித்தார் நீலநாகமறவர். அவன் படத்தை விடாமல் இறுகப் பற்றினான்.

ஓகோ! அவ்வளவு பலமிருக்கிறதா உன் உடம்பிலே என்று படத்தை ஓங்கி இழுத்தார் நீலநாகர். படம் அவர் கைக்கு வந்ததும், படத்தை விட்டுவிட்ட அதிர்ச்சியில் அதை வைத்துக் கொண்டிருந்தவன் தடுமாறிக் கீழே விழுந்தான். நகைவேழம்பர் ஒற்றைக் கண்ணில் சினம் பொங்க, இடுப்பிலிருந்து குறுவாளை உருவிக் கையை ஓங்கிக் கொண்டு நீலநாக மறவர் மேல் பாய வந்தார்.

ஓங்கிய கையை நீலநாகர் தமது இடது கையால் அலட்சியமாகப் பிடித்து நிறுத்தினார். பின்பு மெல்லச் சிரித்துக் கொண்டே ஏக வசனத்தில் விளித்துக் கேட்டார்: “அப்பனே, கண்களில்தான் ஒன்றை இழந்துவிட்டாய்! உயிரையும் இப்போது என்னிடம் இழக்க விரும்புகிறாயா நீ?”

-----------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

9. பெண்ணில் ஒரு புதுமை

 

பெண்மை என்னும் தமிழ்ச் சொல்லுக்குக்கண்ணிற் புலனாவதோர் அமைதித் தன்மை என்று இளங்குமரன் பலரிடம் பொருள் விளக்கம் கேட்டு அறிந்திருந்தான். இன்றுவிசாகை என்னும் பெண்ணைப் பார்த்தபோது கேட்டு அறிந்திருந்த அந்தப் பொருளைக் கண்டு அறிந்தான். கண்களின் பார்வையில், முகத்தின் சாயலில், இதழ்களின் சிரிப்பில் எங்கும் எதிலும் அமைதி திகழ அமர்ந்திருந்தாள் விசாகை.

 

திருநாங்கூர் அடிகள் இளங்குமரனை நோக்கிப் புன்னகை புரிந்தவாறு கூறலானார்:

இளங்குமரா! விசாகையின் கதை அழிவற்றது. ‘மனிதர்களால் இவ்வளவுதான் முடியும் என்று வரையறை செய்திருக்கும் அளவுக்கும் அப்பாற்பட்டது. ‘இன்ன காரணத்தினால் இப்படிச் செய்தாள் என்று இணைத்து விளக்குவதற்குத் தொடர்பும் அற்றது. அழிவு அற்றதை அழிவைக் கொண்டும், அளவு அற்றதை அளவைக் கொண்டும், தொடர்பு அற்றதைத் தொடர்பைக் கொண்டும் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? விசாகையின் வாழ்க்கையிலிருந்து ஒரு புதிய தத்துவமே மலர்ந்திருக்கிறது. பெண்ணில் இவள் ஒரு புதுமை! வாழ்வில் அறம் செய்கிறவர்கள் பலர். ஆனால் வாழ்வையே அறமாகச் செய்கிறவர்கள் விசாகையைப் போல் சிலரினும் சிலர் தான் தோன்றுகிறார்கள்.

இந்தப் பெண் இங்கு வந்து சேர்ந்த முதல் நாளை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி அது. கார்த்திகை மாத நடுப்பகுதி, அடைமழை பெய்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து வானம் கண்விழிக்கவே இல்லை. ஆறுகளும், வாய்க்கால்களும், குளங்களும், ஓடைகளும் கரை நிமிரப் புனல் நெருங்கிப் பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்தன. ஊரே நீர்ப்பெருக்கில் மூழ்கியெழுந்ததுபோல் குளிர்ந்து போயிருந்தது. பூக்கள் வாடவில்லை. செடிகள் கொடிகள் துவண்டு சோரவில்லை. கார்காலம் என்னும் தம்முடைய பருவத்தைக் கொண்டாடிக் குலவுவதுபோல முல்லைப் புதர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.

இப்போது நான் அமர்ந்து கொண்டிருக்கிற இதே கிரந்த சாலையில் இதே இடத்தில் தான் அன்றும் அமர்ந்து கொண்டிருந்தேன். நாலைந்து மாணவர்கள் என்னைச் சுற்றிலும் இருந்து ஏதோ ஒரு நூலைப் பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியில் மின்னலும் இடியுமாகப் பெருமழை பெய்து கொண்டிருந்தது. பாடத்தின் இடையே என்னுடைய மாணவர்களில் ஒருவன், ‘இன்ன செயலை இந்த நேரத்தில் இப்படிச் செய்ய வேண்டும் என்னும் ஊக்கம் மனித மனத்தில் எப்படி எழுகிறது? எப்படி வளர்கிறது? எப்படி நிறைவேறுகிறது?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு என்னிடமிருந்து விடையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கிரந்த சாலையின் வாயிற்புறத்து மறைவிலிருந்து ஒரு பெண் குரல், ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும். ஊக்கமாவது செயலைச் செய்வதற்குரிய நினைவைத் தூண்டும் முனைப்பு. ஊக்கத்தின் வழியே இதை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று துணிகிற ஒழுக்கம் நிகழும். கற்று அடங்கி அமையாத மனத்தில் பண்பு இல்லை. பண்பில்லாத மனத்தில் ஊக்கம் இல்லை. ஊக்கமில்லாத மனத்தில் ஒழுக்கம் இல்லை என்று பதில் கூறியது. உடனே நானும் மாணவர்களும் திகைப்படைந்து எழுந்து போய் வாயிற்புறம் பார்த்தோம். சொட்டச் சொட்ட மழையில் நனைந்தவளாய்ப் பால்வடியும் வதனத்தில் அமைதியே புன்னகையாய்ச் சாயல் காட்டக் கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திக் கொண்டு துறவுக் கோலத்தில் அந்தப் பெண் நின்றாள். என்னைக் கண்டவுடனே அட்சய பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு வணங்கினாள்.

 

இந்த மழையில் யாராவது பிட்சைக்குப் புறப்படுவார்களா? புறப்பட்டு வந்ததுதான் வந்தாய்; எதற்காக வெளியே நனைந்து கொண்டு நிற்கிறாய்? உள்ளே வரலாமே?’ என்றேன். துறவு நெறி மேற்கொண்ட எவளோ ஒரு புத்த சமயப் பெண் பிட்சைக்கு வந்திருக்கிறாள் என்று எண்ணியே நான் அப்படிக் கேட்டேன். இவளுடைய பேதைமை மாறா இளமையைக் கண்டுஇந்தப் பருவத்திலேயே இப்படி ஒரு துறவா?’ என்று எண்ணி வியந்து கொண்டிருந்தது என் மனம். அதற்குள் என்னுடைய மாணவன் ஒருவன் எங்கள் பூம்பொழிலின் மடைப்பள்ளிக்குச் சென்று நெய்யிட்ட வெண்சோறும், சில காய்கனிகளும் கொண்டு வந்து இவளுடைய பிட்சைப் பாத்திரத்தில் இடுவதற்குப் போனான். சிரித்தபடியே தான் அதற்காக வரவில்லை என்று குறிப்பினாற் புலப்படுத்துகிறவளைப் போல் தன்னுடைய பிட்சைப் பாத்திரத்தைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விலகி நின்றாள் இவள்.

நான் ஏற்க வந்திருக்கிற பிட்சைக்கு நானேதான் பாத்திரம். இது அன்று என்று சொல்லி அட்சய பாத்திரத்தை ஒதுக்கி வைத்தாள். பின்பு தான் மழைக்கு ஒதுங்கினாற் போல் நின்ற இடத்தினருகே வைத்துக் கொண்டிருந்த துணி முடிப்பை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு மூன்று ஓலைகள் அடங்கிய திருமுகம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினாள். மனத்தில் இன்னதென்று விளங்காமல் பெருகும் வியப்புடன் இவள் கொடுத்த ஓலையை வாங்கிப் படித்தேன். ஓலை பாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. மணிபல்லவத்தீவுக்கு அருகில் சமந்தகூட மலையில் வாழ்ந்த துவந்த புத்ததத்தர் என்னும் துறவி எனக்கு நெருங்கிய நண்பர். பலமுறை காவிரிப்பூம்பட்டினத்துக்கும், திருநாங்கூருக்கும் வந்து பழகியவர். சமயவாதம் புரியுமிடங்களில் எல்லாம் இருவரும் சந்தித்திருக்கிறோம். இரண்டொரு சமயங்களில் நானே அவரை வாதத்தில் வென்றுநாவலோ நாவல் என்று வெற்றி முழக்கமிட்டுக் கூவியிருக்கிறேன். அவர் பாலி மொழியில் எனக்கு எழுதியிருந்த ஓலையில் அந்தப் பெண்ணைப் பற்றிய வரலாற்றைக் கூறி அறிமுகப்படுத்தியிருந்தார். அப்படியே தமிழில் இன்று உனக்கு விவரித்துச் சொல்கிறேன் இளங்குமரா!

( அந்தக் காலத்தில் சமயவாதம் செய்ய விரும்புவோர் ஒரு நாவல் மரக்கிளையை நட்டுப் பிறரை வாதுக்கு அழைப்பதும், எதிர்வாதம் புரிய வருவோர் வாதத்தில் வென்ற பின்பே அக்கிளையைப் பறித்து எறிய வேண்டுமென்பதும் வழக்கு. வாதத்தில் வென்றவர்நாவலோ நாவல்என வெற்றிக் குரல் முழக்குவதும் உண்டு.)

முற்றா இளமையும் முதிராப் பருவமுமாக உங்களிடம் வந்து நிற்கும் இந்தப் பெண்ணின் பெயர் விசாகை. உடம்பும் பருவமும் முதிர்ச்சியடையா விட்டாலும் மனத்தில் முதிர்ச்சியும் செம்மையும் பெற்றவள் இவள். மற்றப் பெண்கள் பாவையும், அம்மானையும் கொண்டு கன்னி மாடங்களில் பிள்ளைப் பருவத்து விளையாட்டுக்களை விளையாடிப் பொழுது போக்கிக் கொண்டிருந்த வயதிலேயே இவள் அறநூல்களையும் ஞானநூல்களையும் தக்க ஆசிரியரிடம் பாடங்கேட்கத் தொடங்கிவிட்டாள். சில செடிகள் முளைக்கும் போதே தமக்குரிய மணத்தை மண்ணுக்கு மேலே பரவச் செய்து கொண்டு முளைக்கும். அதைப் போல், விட்ட குறை தொட்ட குறையை நிறைவு செய்யப் பிறந்தவளோ என்று பெற்றவர்களே மருண்டு அஞ்சும் புண்ணியப் பிழம்பாயிருந்தாள் இவள்.

இவளைப் பெற்றவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். சாவகநாட்டுச் சிற்றரசர்களில் சிறந்தவனும், பெருஞ் செல்வத்துக்குரியவனுமாகிய சூடாமணிவர்மனின் ஒரே மகளாக இவள் பிறந்தாள். உலகின் நிலையாமையும், துன்பங்களும் இளம் வயதிலேயே இவள் மனத்தில் உறைந்து பதிந்து விட்டன. மற்றவர்கள் பாக்கியங்களாக நினைத்த அரசபோக ஆடம்பரங்கள் இவளுக்கு துர்ப்பாக்கியங்களாக உறுத்தின. ‘இவற்றிலிருந்து விடுபட்டுச் செல்! துன்ப விலங்குகளிலிருந்து விடுபட அறியாமல் தவிக்கும் மக்களுக்கெல்லாம் விடுபடும் வழியை விளக்கு என்று இவள் மனதில் இடைவிடாத தூண்டுதல் ஒன்று பெருகி வந்தது. நினைவு வாராப் பருவத்திலேயே இவள் தன் தாயை இழக்கும்படி நேர்ந்தது.

இவளுடைய ஒப்பிலா அழகையும், அறிவையும் பார்த்து இவள் தந்தை சூடாமணிவர்மன் என்னென்னவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தான். சுயம்வர ஏற்பாடுகள் நடந்தன. விசாகையின் அழகைக் கேள்விப்பட்டிருந்த இளவரசர்கள் எல்லாரும் சூடாமணிவர்மனின் சுயம்வர மண்டபத்தில் கூடினார்கள். கடல் கடந்த நாடுகளிலிருந்தும் விசாகையின் அழகைக் கேட்டு மயங்கியவர்கள் வந்திருந்தார்கள். ‘எந்தப் பிறவியிலோ செய்த தவப்பயன் இந்தப் பிறவியில் எனக்கு இப்படி ஒரு பெண்ணாய்ப் பிறந்திருக்கிறது என்று சூடாமணிவர்மன் கர்வப்பட்டுக் கொண்டிருந்தான். விசாகையின் சுயம்வர நாள் விழாவைச் சாவக நாடே களிப்புடன் கொண்டாடிப் போற்றிக் கொண்டிருந்தது. அறிவும், திருவும், வனப்பும், செல்வமும் ஒருங்கு வாய்ந்த நாயகன் விசாகைக்கு வாய்க்க வேண்டுமென்று மனத்தில் தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தான் சூடாமணிவர்மன்.

சுயம்வர மண்டபத்துக்கு வெளியே இனிய மங்கல வாத்தியக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அரண்மனையெங்கும் வாசனை வெள்ளம் பாய்ந்து பரவிக் கொண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பொன்னும், முத்தும், மணியும், அரசர் தம் முடிகளும் ஒளிர்ந்தன. பெண்களிற் பேரழகியாக வந்து பிறந்தவளைச் சொந்தமாக்கிக் கொள்ள ஆண்களிற் பேரழகர்களாக வந்து பிறந்தவர்கள் எல்லாம் கூடியிருந்தார்கள்.

தோழிகளும், பணிப் பெண்களும் அழகுக்கே அழகு செய்வது போல் விசாகையை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். விசாகை பொம்மையைப் போல் வீற்றிருந்தாள். பட்டுச் சிற்றாடையும், பவழ மணிமாலைகளும், பொன்னும், பூவுமாகத் தன் உடம்பைச் சிறை செய்து கட்டுவதாகத் தோன்றியது இவளுக்கு. ‘நீ இதற்காகவா பிறந்தாய்?’ என்று உள் மனத்தில் முள் குத்துவது போல் ஒரு கேள்வி நீங்க மாட்டாமல் குத்தி உறுத்திக் கொண்டிருந்தது. கோலக் குழல் முடித்துக் குங்குமத் திலகமிட்டு, நீலப் பட்டுடுத்தி, நித்தில மாலையிட்டுப் பணிப்பெண்கள் விசாகையின் தோற்றத்தில் கவர்ச்சியைப் பிறப்பிக்க முயன்று கொண்டிருந்த போது இவள் கண்களில் நீர் பிறந்தது. நெஞ்சினுள் எதிலிருந்தோ, எதற்காகவோ விடுபட்டுப் பறக்க வேண்டும் போலத் தவிப்புப் பிறந்தது. எப்போதோ, எங்கேயோ, ஏதோ ஒரு செயலை அரைகுறையாக விட்டு வந்திருப்பது போலவும், அதை நிறைவு செய்ய எழுந்து போக வேண்டிய நேரம் நெருங்குவது போலவும் உணர்வு பிறந்தது. விசாகையின் பின்புறம் இவள் கூந்தலில் பூச்சூடிக் கொண்டிருந்த பணிப்பெண்கள் எதிரேயிருந்த கண்ணாடியில், மௌனமாகக் கண்ணீர் வடித்தவாறு தெரியும் தங்கள் தலைவியின் முகத்தைக் கண்டு திகைத்தார்கள். ‘மனத்துக்கு விருப்பமான கணவனைத் தேர்ந்தெடுப்பதற்காக மாலையேந்திச் செல்லும் போது யாராவது இப்படி அழுவார்களா?’ என்று எண்ணிக் காரணம் புரியாமல் அஞ்சினார்கள் பணிப்பெண்கள்.

நம் தலைவி அழவில்லையடி; கண்களுக்கு மை தீட்டும் போது அதிகமாகத் தீட்டிவிட்டார்களோ என்னவோ? மை கண்களில் கரிந்து உறுத்துகிறது போலிருக்கிறது. அதனால் தான் கண்களிலிருந்து நீர் வடிகிறது என்று காரணத்தை ஆராய்ந்து கண்டவள் போல் சொல்லிச் சிரித்தாள் ஒரு பணிப்பெண். விசாகை ஒன்றும் பேசாமல் சிலையாக அமர்ந்திருந்தாள். பேசவராத பருவத்து சிறு குழந்தை தனக்கு உற்ற நோவு இன்னதெனச் சொல்லவும் மொழியின்றித் தாங்கவும் ஆற்றலின்றித் தாய் முகம் தேடி நோக்கி அழுவது போலத் தன் தவிப்பைக் கூற இயலாமல் பணிமகளிர் புனையும் அலங்கார விலங்குகளைத் தாங்கியவாறே கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் விசாகை. கண்களைப் போல் இவள் மனமும் அழுதது. உணர்வுகளும் அழுதன. எதிரே கண்ணாடியில் தெரியும் தன் முகத்தைத் தானே பார்த்தாள் விசாகை. கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்காக இவள் கை மேலே எழுந்த போது, ‘உன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்கு முன்னால் உலகத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டாமா, அம்மா? நீ இன்று அபூர்வமாக அழும் இதே அழுகையை ஏற்கெனவே பலர் தினந்தோறும் அழுது கொண்டிருக்கிறார்களே; அழுகைக்குக் காரணமான துக்கத்தையும், அந்தத் துக்கம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதையும், அதைப் போக்குவதையும் போக்குவதற்கான வழியையும் நீ காண வேண்டாமா அம்மா?’ என்ற தெய்வீகக் குரல் ஒன்று தன் மனத்துள்ளும் செவிகளுக்குள்ளும் ஒலிப்பதை விசாகை கேட்டாள். தன்னுடன் பிறந்து தன் உணர்வுடன் ஒன்றிப் பயின்று தன்னினும் வளர்ந்துவிட்ட தனது மனமே அந்தக் குரலை ஒலிக்கிறதென்று இவளால் விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் இவள் அதற்கு வசப்பட்டாள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடலின் அங்கமான மனம் உடலைக் காட்டிலும் பெருமையுடையதாய் நுண்மையுடையதாய் வளர்ந்து விடுகிறது. அப்படி வளர்வதால்தானோ என்னவோ, மனச்சான்று என்ற ஒருணர்வு உடம்பின் செயல்களிலேயே நல்லது கெட்டது தேர்ந்து நல்லதை ஏற்கவும், தீயதை இடித்துரைக்கவும் துணிகிறது.

 

கண்ணீர் வடியும் தன் முகத்தின் பிரதிபிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே, ‘எங்கோ விடுபட்டுச் செல்ல வேண்டும் என்ற தவிப்பை உணர்ந்தும் உணராமலும் தவித்த போது விசாகை என்ற உடம்பின் வலிமையை மீறிக் கொண்டு விசாகை என்ற மனத்தின் வலிமை ஓங்கி வளர்ந்து ஆட்கொண்டது. பணிப்பெண்கள் விசாகையை எழுந்திருக்கச் செய்து சுயம்வர மாலையைக் கையில் கொடுத்தார்கள். கண்ணீரைத் துடைப்பதற்காக அருகில் வந்தாள் ஒரு தோழி. அப்போது மறுபடியும் அந்தக் குரல் இவள் உள்ளத்திலிருந்து ஒலித்தது:

உன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்கு முன் உலகத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டாமா, அம்மா? இன்று அபூர்வமாக நீ அழும் இதே அழுகையை ஏற்கனவே பலர் தினந்தோறும் அழுது கொண்டிருக்கிறார்களே!’

தன் கண்ணீரைத் துடைப்பதற்காக முகத்தருகே நெருங்கிய தோழியின் கையை விலக்கி ஒதுக்கினாள் விசாகை.

தலைவிக்கு விருப்பமில்லையானால் கண்ணீரைத் துடைக்க வேண்டாம், விட்டுவிடு. சுயம்வரத்துக்கு வந்திருக்கிற அரச குமரர்கள் எல்லாம் நம் தலைவி ஆனந்தக் கண்ணீர் சிந்துவதாக நினைத்துக் கொள்ளட்டுமே என்று வேடிக்கையாகக் கூறினாள் குறும்புக்காரியான பணிப்பெண் ஒருத்தி.

ஆனந்தக் கண்ணீராமே, ஆனந்தக்கண்ணீர்! கண்ணீரே ஆனந்தம்தானே? பிறருடைய துன்பத்தினால் நம்முடைய மனம் நெகிழுகிறது என்பதற்கு அடையாளம்தானே கண்ணீர்? அன்பு செலுத்துவதிலும், மனம் நெகிழ்வதிலும் ஆனந்தமில்லாமல் துக்கமா உண்டாகும்? ஒருவர் இருவருக்காக மனம் நெகிழ்ந்து அழுவதிலேயே இவ்வளவு ஆனந்தமானால், பிரபஞ்சத்தையே எண்ணிப் பிரபஞ்சத்தின் துக்கத்துக்காகவே மௌனமாக அழுதவர்கள், தவம் செய்தவர்கள், சிந்தித்தவர்கள், மதம் கண்டவர்கள் எல்லாரும் எவ்வளவு ஆனந்தத்தை அடைந்திருக்க வேண்டும்!”

இப்படி எண்ணியவாறே சுயம்வர மண்டபத்துக்குள் நுழையும் வாயிலுக்கு இந்தப் பக்கத்தில் மாலை ஏந்திய கைகள் நடுக்க, மனம் நடுங்க, நினைவுகள் நடுங்க, கண்களில் நீர் நடுங்க விசாகை நின்றாள்.

அளவற்ற துக்கத்தையும், எல்லையற்ற அநுதாபப் பெருக்கையும் குறிப்பதற்கே தமிழில் ஆனந்தம் என்று ஒரு சொல் இருப்பது விசாகைக்கு நினைவு வந்தது. தமிழ்ப் புறப்பொருள் இலக்கணத்தில் போரின்போது வீரக்கணவனை இழந்த மனைவி அவன் நினைவில் மெலிந்து வருந்தும் வருத்தத்தைக் கூறும் பாடலுக்குஆனந்தம் என்று பெயர் வைத்திருப்பதை இவள் நினைத்தாள். எல்லையற்ற துக்கம் உண்டாகிறது. ஆனந்தத்துக்கும் துக்கத்துக்கும் ஆனந்தமே காரணமாவது பற்றித்தான் தமிழ்ப் புறப்பொருள் இலக்கண ஆசிரியர்கள் துயரத்துக்கும் ஆனந்தம் என்று பெயரிட்டிருக்க வேண்டுமென எண்ணினாள் விசாகை. சிந்தனை பெருகப் பெருக இவள் கண்களில் நீரும் பெருகிற்று.

 

கூட்டுக்குள்ளிருந்து வெளியே தலைநீட்டி எட்டிப் பார்க்கும் கிளிக்குஞ்சு போல், தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சுயம்வர மண்டபத்துக்குள் செல்லும் வாயிலில் எட்டிப் பார்த்தாள் விசாகை.

மண்டபத்தில் வரிசை வரிசையாய் அரச குமாரர்கள் வீற்றிருந்தார்கள். இயற்கையாகவே அழகுடையவர்கள் சிலர். செயற்கையாகப் புனைந்து அழகுப்படுத்திக் கொண்டு வந்திருந்தவர்கள் சிலர். நம்பிக்கையோடு வந்தவர்கள், ஆசைப்பட்டு வந்தவர்கள், நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலந்த மனத்தோடு வந்தவர்கள் எல்லாரும் இருந்தார்கள். எல்லாருடைய கண்களும் இவள் மண்டபத்திற்குள் நுழையப் போகிற வழியையே பார்த்துக் கொண்டிருந்தன. இவளோ எல்லாருடைய கண்களிலும் ஆசை ஒன்றே நிறைந்திருந்ததைப் பார்த்தாள். இவள் கைகளும் கைகளிலிருந்த மாலையும் முன்னிலும் அதிகமாய் நடுங்கின.

சுயம்வர மண்டபத்தில் முதன்மையான இடத்தில் அமைச்சர் பிரதானிகள் புடைசூழ இவள் தந்தை சூடாமணிவர்மன் இருந்தார். மண்டபத்தின் நடுவில் வெண்பளிங்குக் கல்லில் செய்த புத்தர் சிலை ஒன்று அமர்ந்த கோலத்தில் காட்சியளித்தது. அந்தச் சிலையின் சாந்தம் திகழும் முகத்தில் வாயிதழ்கள் எப்போதும் மெல்லச் சிரித்துக் கொண்டே இருப்பது போல் ஒரு பாவனை அமைந்திருந்தது.

சாதாரண மனிதர்களுடைய அழுகையிலும் ஆனந்தம் இருக்கிறாற்போல் ஞானிகளுடைய சிரிப்பிலும் துக்கம் இருப்பதை அந்த புத்தர் சிலையின் முகம் விசாகைக்குக் கூறியது.

இரண்டு தோழிப் பெண்கள் பக்கத்துக்கு ஒருவராக விசாகைக்கு அருகில் வந்து நின்று கொண்டு இவளைச் சுயம்வர மண்டபத்துக்குள் நடத்தி அழைத்துச் சென்றார்கள். இரண்டு கண்களின் அழகைக் காண்பதற்காக எத்தனையோ கண்கள் மலர்ந்தன. ஆனால் அத்தனை பேருடைய ஆவலையும் கிளரச் செய்த அந்த இரண்டு கண்களில் நீர் நெகிழ்ந்திருந்தது.

தோழிகளின் துணையோடு கைகால் நடுங்கிய நிலையில் விசாகை தளர்ந்தாற் போல் மெல்ல நடந்து வந்து சுயம்வர மண்டபத்தில் வீற்றிருந்தவர்களையெல்லாம் பார்த்தாள்.

தன் மகள் எந்த நாட்டு இளவரசனுக்கு மாலையிடப் போகிறாள் என்று ஆர்வம் பெருகும் விழிகளால் இமையாது பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை சூடாமணிவர்மனையும் நிமிர்ந்து நோக்கினாள். பெண்ணின் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன என்பது தந்தைக்குப் புரியவில்லை. தீவினைகளின் விளைவுகள் சூழ்ந்து வரும் போது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி நிற்கும் உயிர் போல் விசாகை தயங்கி நின்றாள். மருண்டு பார்த்தாள். கண்ணீர் பெருக்கினாள். ‘குழந்தை ஏன் அழுகிறாள்?’ என்று தோழிகளை அருகில் அழைத்துக் கேட்டான் சூடாமணிவர்மன். ‘கண்ணுக்கு இட்ட மை கரிந்து நீர் வழிகிறது. அழவில்லை என்று தங்களுக்குத் தோன்றியதைக் கூறினார்கள் அவர்கள். அரசனும் அப்படித்தானிருக்கும் என நம்பினான். உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக அவள் கண்ணில் நீர் பிறந்திருக்கிறதென்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? பாவம்! உண்மையைத் தெரிந்து கொள்ள இயலாதவரை தங்களுக்குத் தெரிந்ததைத் தானே உண்மையாகக் கொள்ள வேண்டும்?

சுயம்வர மண்டபத்திலிருந்து எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தயங்கி நின்ற விசாகை விரைந்து நடந்தாள். தோழிகள் இவளைப் பின் தொடர முடியாத வேகத்தில் நடந்தாள். மண்டபத்தின் நடுவில் சிரித்துக் கொண்டிருந்த புத்தர் சிலையை நெருங்கினாள். சுற்றிலும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்த பின் தன் கைகளிலிருந்த மணமாலையை அந்தச் சிலையின் பாதங்களில் பயபக்தியோடு வைத்துவிட்டு வணங்கினாள். இவள் கைகளிலிருந்த மாலையைப் பெற்ற பின் அந்தச் சிலையின் முகத்தில் சாந்தமும், சிரிப்பும் இன்னும் அதிகமானாற் போல் ஒரு தோற்றம் ஏற்பட்டது. சூடாமணிவர்மன் இருக்கையிலிருந்து எழுந்து மகளை நோக்கி ஓடி வந்தான்.

இது என்ன காரியம் செய்கிறாய் மகளே! நீ வாழ்க்கைப்பட வேண்டியவருக்குச் சூட்டும் மாலையை வணங்கப்பட வேண்டியவருடைய பாதங்களில் சூட்டுகிறாயே?’

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இவருடைய கொள்கைகளுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டேன் அப்பா. வேறு விதமாக மனிதருக்கு வாழ்க்கைப்படும் ஆசை எனக்கு இல்லை. ‘அப்படி வாழ நான் பிறக்கவில்லை என்று என் மனமே எனக்குச் சொல்கிறது! வாழ்க்கைப்படுவதற்கு ஒருவரும் வணங்கப்படுவதற்கு ஒருவருமாக இருவரிடம் பக்தி செலுத்த எனக்கு விதியில்லை. என்னை விட்டு விடுங்கள் நான் விடுபட்டுப் போகவேண்டும்!’

எங்கே போக வேண்டும், மகளே?’

உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்குப் போக வேண்டும்.’

நீ போனபின் என்னுடைய கண்ணீரை யார் துடைப்பார்கள்?’

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று விசாகைக்குத் தெரியவில்லை. தந்தையின் பாதங்களைப் பற்றிக் கொண்டு மேலும் கண்ணீர் பெருக்கினாள். தந்தையின் பாதங்களையும், பாசங்களையும் விலக்கி விட்டு இவள் எழுந்த போது தந்தை வேரற்ற பெருமரம் போல் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார். அழுக்குகளை நீக்குவது போலத் தன் உடம்பிலிருந்து பொன்னையும், மணியையும், பட்டையும் வேறாக்கி விட்டு விசாகை புறப்பட்டாள். உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் சுகங்களிலிருந்து விடுபட்டுப் புறப்பட்டாள்...”

----------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

10. தலைவணங்கிய தன்மானம்

 

விசாகையின் கதையை முற்றிலும் கேட்டு முடித்ததும் தான் மீண்டும் இளைத்துப் போய்விட்டதாக உணர்ந்தான் இளங்குமரன். மனத்தின் வலிமையால் உலகத்தை வென்று நிற்பவர்களைப் பற்றி அறிந்தாலும், நினைத்தாலும் அந்தக் கணத்தில் தான் குன்றி ஒடுங்கிப் போனதாக ஏற்படும் மனத்தாழ்வை அவனால் மீற முடியவில்லை.

உலகில் மிகச் சிறந்த வலிமை மனத்தின் வலிமைதா. மிகச் சிறந்த விடுதலையும் மனத்தின் விடுதலைதான். புலன்களிலிருந்து விடுபட்டுச் சிந்திக்கும் தூய மனம் தான் பெரிய சுதந்திரம். புலன்களுக்கும், உணர்வுகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்கள் உடம்பினால் விடுதலை பெற்று என்ன பயன்?’ என்றெல்லாம் விசாகையின் வரலாற்றைக் கேட்டிருந்த கிளர்ச்சியில் எண்ணினான் இளங்குமரன். அவள் வரலாறு அவன் மனத்தில் தூய்மைக் கிளர்ச்சியைத் தூண்டியிருந்தது.

உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தாமும் கண்ணீர் சிந்திய அந்த விழிகளை இன்னொரு முறை தரிசனம் செய்ய வேண்டுமென்று நிமிர்ந்தான் அவன். விசாகையின் அழகிய கண்களில் இப்போதும் நீர் நெகிழ்ந்திருந்தது. பழைய நிகழ்ச்சிகளைக் கேட்க நேர்ந்ததால் சிறிதளவு அவள் கலங்கியிருந்தாள்.

அடிகள் இளங்குமரனைக் கேட்டார்:

இவளுடைய வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறாய் இளங்குமரா?”

நினைப்பதற்குரிய வாழ்க்கை அன்று இது! வணங்குவதற்குரிய வாழ்க்கை ஐயா! இந்த அம்மையாருடைய மனத்தின் வலிமையைப் பற்றிக் கூறிய போது என்னுடைய மனத்தின் ஏழ்மையை நான் உணர்ந்தேன்.”

நல்லது! இவளுடைய கதையை எந்த விளைவுக்காக உன்னிடம் சொல்ல வேண்டுமென்று விரும்பினேனோ அந்த விளைவு உன்னிடம் நிகழ்ந்திருக்கிறது. மேலும் கேள். சாவக நாட்டிலிருந்து இவள் மணிபல்லவத்திற்கு வந்தாள். அங்கே புத்தபீடிகையைத் தரிசனம் செய்தாள். கோமுகிப் பொய்கையைக் கண்டாள். சமந்தகூட மலைக்குச் சென்று அங்குள்ள என் நண்பரான புத்த தத்தரிடம் சமய ஞானம் பெற்றாள். ‘மண் திணிந்த இவ்வுலகத்தில் வாழ்கிறவர்களுக்கு உணவு கொடுத்து உதவுகிறவர்கள் உயிர் கொடுப்பதற்கு இணையான செயலைச் செய்பவர்கள் என்ற கருத்துடன் தன் அட்சய பாத்திரத்தைப் பலரிடம் ஏந்தி உணவை நிரப்பி வந்து, நிரம்ப வழியின்றி தவிக்கும் ஏழை வயிறுகளுக்கு அளித்து மீந்ததைத் தான் உண்ணும் தியாக வாழ்வை இவள் தொடங்கினாள். சமயவாதத்திலும், இன்னும் சில நுணுக்கமான ஞான நூல்களிலும் இவள் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்று கருதிப் புத்த தத்தர் சமந்த கூட மலையிலிருந்து இவளை இங்கு அனுப்பியிருக்கிறார். புத்த தத்தரின் அறிமுக ஓலையோடு மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு கார்த்திகை மாதத்து அடைமழை நாளில், ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும் என்று அரும் பெரும் தத்துவ வாக்கியத்தை ஒலித்துக் கொண்டே இவள் இந்தக் கிரந்த சாலைக்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்தாள். இன்று சோழ நாட்டிலே இவள் பாதங்கள் பட்ட இடமெல்லாம் ஏழைகளுக்குப் பசி தீர்கிறது. நோயாளிகளுக்கு நோய் தீர்கிறது. துன்பப் படுகிறவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது...”

மற்றவர்கள் உங்களிடம் உங்களைப் பற்றியே புகழும் போது அதை விரும்பாத நீங்கள் இப்போது நான் எதிரே இருக்கும் போதே என்னை இப்படி மிகையாகப் புகழ்கிறீர்களே தாத்தா என்று விசாகை குறுக்கிட்டாள்.

இந்தப் புகழ் எல்லாம் உனக்கு அல்ல, விசாகை! நீ செய்கிற அறங்களுக்கு மட்டுமே உரியது. உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக உன் கண்களில் நீரைச் சுமக்கிறாயே, அந்தப் பண்புக்கு உரியது...” என்று பொருத்தமான மறுமொழி அடிகளிடமிருந்து வந்தது.

அதுதான்உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும் என்று நீங்களே தத்துவம் சொல்லியிருக்கிறீர்களே என்று முதன் முறையாக விசாகையிடம் பேசினான் இளங்குமரன்.

தத்துவம் என்னுடையதன்று, நியாய நூல்களிலிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் நான் கற்றது.”

தத்துவங்களைக் கண்டுபிடிக்கிறவர்களை விடக் கடைப்பிடிக்கிறவர்கள் தான் பெரியவர்கள். கடைப்பிடிக்கிறவர்கள் வாழும் தத்துவமாக உயிருடன் நிற்கிறார்கள். கண்டுபிடிக்கிறவர்கள் ஏட்டளவில் மட்டுமே நிற்கிறார்கள். நீங்கள் வாழும் தத்துவமாக என்முன் இருக்கிறீர்கள் என்றான் இளங்குமரன்.

வாழும் தத்துவம் என்று என்னைச் சொன்னால் பொருந்தாது ஐயா! நமக்கெல்லாம் ஞானப் பசி தீர்த்து வாழும் அடிகள் தான் மிகப் பெரிய தத்துவம். அடிகளைச் சுற்றியிருக்கிற ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒரு சிறிய காவியம். அவர் இவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மகாகாவியத்தைப் போன்றவர் என்று விசாகை இளங்குமரனிடம் தன்னைப் புகழ்ந்து சொல்லியதைக் கேட்டுச் சிரித்தபடி இருந்தார் நாங்கூர் அடிகள்.

நான் உன்னைப் புகழ்ந்ததற்கு நீ என்னைப் பழிவாங்குகிறாயா, விசாகை?”

இந்தப் புகழ் எல்லாம் உங்களுக்கு அல்ல தாத்தா! உங்களுடைய ஞானத்துக்கு மட்டுமே உரியது. பலருடைய ஞானப் பசியைத் தீர்ப்பதற்காக உங்களுடைய மனமாகிய அட்சய பாத்திரத்தில் ஞானத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அந்த நிறைவுக்கு உரியது.”

 

அவர் தனக்குக் கூறிய பழைய சமாதானத்தை அவரிடமே திருப்பினாள் விசாகை. அவர் குழந்தையைப் போல் சிரித்தவாறு தலைகுனிந்தார். பல நூறு பட்டிமண்டபங்களில் பல நூறு சமயவாதிகளை வென்று அவர்கள் நாட்டிய நாவல் மரக்கிளைகளைப் பறித்துநாவலோ நாவல்என வெற்றி முழக்கமிட்டிருக்கிற அந்தப் பெரியவருக்கு விசாகையிடம் விளையாட்டுக்காகத் தோற்றுப் போனதைப் போன்று விட்டுக் கொடுப்பதில் ஒரு திருப்தி உண்டு.

இளங்குமரன் சிரித்தான்.

இணையிலாத அழகின் வலிமையால் என்னை நெகிழச் செய்திட முயன்ற சுரமஞ்சரியிடம் நான் தோற்கவில்லை. நான் தன்னுடைய உடைமை என்று பேதைத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் வீரசோழிய வளநாடுடையார் பெண் முல்லையிடம் நான் தோற்கவில்லை. அவர்களெல்லாம் என்னுடைய காதலைக் கூடச் சம்பாதிக்க முடியவில்லை. எண்ணெயின்றீ முடிந்த சடையும், துறவுக்கோலமுமாக இப்போது என் எதிரே இருக்கும் விசாகை என்ற இந்தப் பெண்ணோ என்னைத் தன்மேல் பக்தி செலுத்துவதற்கே தூண்டுகிறாளே! இது என்ன விந்தை!’ உடம்பும், மனமும், புலன்களும், எல்லாமே வலிமையாக இருக்க வேண்டுமென்று கூறும் விசாகை, வாழும் தத்துவமாகத் தோன்றும் பூம்பொழில் நம்பியாகிய நாங்கூர் அடிகள், எல்லாரையும் இணைத்து நினைத்தது இளங்குமரனின் மனம். தான் கற்பதற்கிருந்த சுவடிகள் தவிர உலகமே பக்கத்துக்குப் பக்கம், ஏட்டுக்கு ஏடு வேறுபாடுள்ள மாபெருஞ் சுவடியாகத் தோன்றியது அவனுக்கு.

சிறிது நேரம் கழித்து நாங்கூர் அடிகள் பூம்பொழிலில் உலவச் சென்றார். கிரந்தசாலையில் விசாகையும் இளங்குமரனும் மட்டுமே இருந்தார்கள். அப்போது விசாகை, இளங்குமரன் சற்றும் எதிர்பாராத காரியமொன்றைச் செய்தாள்.

இதில் ஏதேனும் இடுங்கள்! இன்றைக்கு முதல் பிட்சை உங்களுடையதாக இருக்கட்டும் என்று அட்சய பாத்திரத்தை அவனுக்கு முன் நீட்டினாள். கையில் சுவடிகளைத் தவிர இளங்குமரனிடம் அப்போது வேறு ஒன்றும் இல்லை. இளங்குமரன் எழுந்து நின்றான், அவனுக்கு மெய் சிலிர்த்தது.

என் இதயத்தில் உங்கள் மேல் எல்லையற்றுப் பெருகும் தூய்மையான பக்தியையே இந்த அட்சய பாத்திரத்தில் இடுகிறேன். அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி பிட்சைப் பாத்திரத்தின் விளிம்பைத் தொட்டு வணங்கினான் அவன்.

விசாகை கண்கள் மலர அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவ்வளவு பெரிய பொருளை ஏற்றுக் கொள்கிற சக்தி இந்தப் பாத்திரத்துக்கு இல்லை ஐயா!”

 

பாத்திரமறிந்து பிச்சையிடு என்று சொல்லியிருக்கிறார்கள், அம்மையாரே! இந்தப் பாத்திரத்தில் இடுவதற்கு ஏற்ற பொருள் பக்திதான்.”

இதைக் கேட்டு விசாகை சிரித்தாள். பொய்ம்மையைச் சிதைக்கும் அந்தச் சிரிப்பில் சத்தியம் ஒளிர்ந்தது.

உங்களை இதற்கு முன்பே நான் ஒரு நாள் பார்த்திருக்கிறேன் ஐயா! ஆனால் அப்போது உங்களிடம் இவ்வளவு பணிவையும், பண்பையும் விநயத்தையும் என்னால் பார்க்க முடியவில்லையே?”

எங்கே பார்த்தீர்கள் அம்மையாரே?”

காவிரிப்பூம்பட்டினத்து இந்திர விகாரத்து வாயிலில், ஒரு துறவியை முரட்டுத்தனமாக நீங்கள் கைப்பற்றி இழுத்துப் போன போது பார்த்தேன். இன்று பாத்திரமறிந்து இடும் பக்திப் பிச்சையில் சிறிது அன்றும் அவருக்கு இட்டிருக்கலாமே?” இளங்குமரன் முதல் அநுபவமாக ஒரு பெண்ணின் கேள்விக்கு முன் நாணித் தலைகுனிந்தான்.

-------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

11. வழித்துணை வாய்த்தது!

 

சினங்கொண்டு பாய்ந்த நகைவேழம்பரை எதிர்த்துத் தடுத்த போதுசிங்க நோக்கு என்று இலக்கிய ஆசிரியர்கள் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் நேராய் நிமிர்ந்த கம்பீரப் பார்வையை நீலநாகமறவரிடம் கண்டான் ஓவியன் மணிமார்பன். பக்கங்களிலும், பின்புறமும் விலகவோ, திரும்பவோ செய்யாமல் எதிரே மட்டும் பார்க்கும் நீலநாகரின் அந்தப் பார்வையே வாளாகவும், வேலாகவும் கூர்மை பெற்றுச் சென்று நகைவேழம்பரைத் தாக்குவதையும் அவன் கவனித்தான்.

தான் ஓர் ஓவியன் என்ற முறையில் விலங்குகளின் அரசனாகிய சிங்கத்தின் உருவத்தைப் பன்முறை தன் கையால் வரைந்திருக்கிறான் அவன். கம்பீரமான அரசர்களின் உருவங்களையும் வீரர்களின் உருவங்களையும் கூட வரைந்திருக்கிறான். ஆனால் குறுவாளை ஓங்கிக் கொண்டு சீறி வந்த நகைவேழம்பரை இடது கையால் அலட்சியமாகத் தடுத்து நிறுத்திய நீலநாகமறவரின் கம்பீரத்தை ஓவியத்தில் வரைவதற்கு முடியுமா என்று மலைத்தான் அவன். கொடுமைக்காரராகவும் கொலைகாரராகவும் தோன்றித் தன்னைப் பயமுறுத்தி நடுங்கச் செய்த அதே ஒற்றைக் கண் மனிதர், கையை அசைக்கவும் முடியாமல் நீலநாகமறவரின் இரும்புப் பிடியில் திணறுவதை இப்போது அவன் கண்டான். அழுத்திப் பிடிக்கப் பெற்ற எதிரியின் பிடியில் நரம்புகள் புடைத்து இரத்தம் குழம்பும் தமது கை வலுவிழந்து உணர்வு குன்றுவதை நகைவேழம்பர் புரிந்து கொண்டாலும் ஆற்றலின்றி இருந்தார். அவர் கை நடுங்கியது. விரல்கள் பிடி நழுவி விரிந்தன. குறுவாள் கீழே நழுவி விழுந்து ஈரமண்ணில் குத்திக் கொண்டு நின்றது.

நீலநாகமறவர் பிடியை விட்டு முறிந்த வாழை மட்டையை உதறுவது போல அந்தக் கையை உதறினார். விடுபட்டதும் குபீரென்று கீழே குனிந்து மீண்டும் வாளை எடுக்க முயன்ற நகை வேழம்பரை அவர் அப்படிச் செய்ய முயல்வார் என்றே எதிர்பார்த்தவர் போல் எச்சரிக்கையாயிருந்த நீலநாகமறவர் பின்னுக்குப் பிடித்துத் தள்ளினார். மலைமோதியது போன்ற அந்தத் தள்ளுதலால் தடுமாறி மண்ணில் மல்லாந்து சாய்ந்தார் நகைவேழம்பர். இதற்குள் படைக்கலச்சாலையின் கதவைத் திறந்து கொண்டு அங்கிருந்த இளைஞர்களெல்லாம் கூட்டமாக வெளிவரவே, நகைவேழம்பரோடு கூட வந்திருந்த யவன ஊழியர்கள் மெல்லப் பின்வாங்கினார்கள். நகைவேழம்பரும் மண்ணைத் தட்டி விட்டவாறு எழுந்து நின்றார். அளவற்ற கோபத்தால் அவருடைய உதடு துடித்தது.

இப்படிச் செய்ததற்கு உங்களைப் பழிவாங்காமல் விடப் போவதில்லை. நான் யாரென்று உங்களுக்குத் தெரியாது! சமயம் வாய்க்கும்போது தெரியச் செய்கிறேன் என்று நீலநாகமறவரை நோக்கி இரைந்து கூக்குரலிடுவதுபோல் முழங்கினார் நகைவேழம்பர். அதைக் கேட்டு நீலநாகர் நகைத்தார்.

பேசிப் பயனில்லை. முடியுமானால் செய்துகொள். கீழே விழுந்து விட்ட இந்த வாளையும், உன் தைரியத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டு மதிப்பாக வந்த வழியே போவதுதான் இப்போது நீ செய்யவேண்டிய செயல்!”

குறுவாளை எடுத்துக் கொண்டு திரும்புவதற்கு முன்னால்நீதானே இவ்வளவுக்கும் காரணம். என்றாவது மறுபடியும் என்னிடம் அகப்பட்டால் உன்னை நீர்மூலமாக்கி விடுவேன் என்று குறிப்பிடுவது போலக் கடுமையாக ஓவியனைப் பார்த்துவிட்டுச் சென்றார் நகைவேழம்பர். நீலநாகரின் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொண்டு அந்தப் பார்வையின் தாக்குதலிலிருந்து தப்பினான் ஓவியன்.

ஒற்றைக் கண்ணினாலேயே இப்படி நஞ்சைக் கக்குகிறானே! இந்தக் கொடியவனுக்கு இரண்டு கண்களும் இருந்து விட்டால் எதிரே தென்படுகிற நல்லவர்களையெல்லாம் இவன் பார்வையே சுட்டெரித்துவிடும். திட்டிவிடம் என்று பார்வையாலேயே கொல்கிற பாம்பு ஒன்று உண்டு என்றார் நீலநாகமறவர்.

ஓவியன் நாத் தழுதழுக்க அவருக்கு நன்றி சொல்லலானான்:

 

என் உயிரையும், என் நம்பிக்கைகளையும் அழியாமல் காப்பாற்றி எனக்கு அடைக்கலம் அளித்த கருணை வள்ளல் நீங்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.”

தெரியாத காரியத்தைச் செய்யாமல் விட்டுவிடுவதே நல்லது தம்பி! நீ நன்றி சொல்லவேண்டுமென்பதற்காக நான் உனக்கு உதவி செய்யவில்லை. உள்ளே போகலாம் வா. இன்றிரவு இங்கேயே என்னுடன் தங்கிவிட்டுப் போ. உன்னைப் பார்த்தால் மிகவும் பயந்த சுபாவமுள்ளவனாகத் தெரிகிறாய். இந்த நேரத்துக்கு மேல் இத்தனை எதிரிகளையும் வேறு வைத்துக் கொண்டு நீ வெளியே போவது நல்லதல்ல என்று கூறி இளங்குமரனின் ஓவியத்தோடு, மணிமார்பனையும் அழைத்துக் கொண்டு படைக்கலச்சாலைக்குள் சென்றார் நீலநாகமறவர்.

இந்த ஓவியம் இளங்குமரனே நேரில் நின்று கொண்டிருப்பது போல் நன்றாக வரையப்பட்டிருக்கிறது தம்பீ! இதை வரைந்தவர் யாராயிருந்தாலும் பாராட்டுக்குரியவர் என்று அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே கூறினார் நீலநாகமறவர். உடனே ஓவியன் மணிமார்பன், தான் அந்த ஓவியத்தை வரைய நேர்ந்த நிகழ்ச்சியையும், தானும் இளங்குமரனும் சந்தித்த பின் ஒவ்வொன்றாக நிகழ்ந்த சம்பவங்களையும் நீலநாக மறவருக்கு விவரித்துச் சொன்னான்.

அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நெட்டுயிர்த்தார். “ஓகோ! இவ்வளவும் நடந்திருக்கிறதா? இளங்குமரன் இவற்றில் ஒன்றையுமே என்னிடம் கூறவில்லையே?”

இப்போது அவர் எங்கே போயிருக்கிறார் ஐயா?”

எந்த இடத்துக்குப் போனால் அவன் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்க முடியுமோ, அங்கே அவனை அனுப்பியிருக்கிறேன். நீ பாண்டிய நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் திருநாங்கூர் அடிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். ஞான நூல்களைக் கற்பதற்காக அவருடைய பூம்பொழிலில் அவரோடு போய்த் தங்கியிருக்கிறான் இளங்குமரன்.”

எங்கள் மதுரை மாநகரத்து வெள்ளியம்பல மன்றத்தில் நாங்கூர் அடிகளின் சமயவாதச் சொற்பொழிவுகளை நானும் கேட்டிருக்கிறேன். அற்புதமான மனிதர் அவர்...”

அவரிடமிருக்கும் அற்புதங்களைக் கற்றுக் கொண்டு வருவதற்குத்தான் இளங்குமரன் போயிருக்கிறான்.”

இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் இங்கே காவிரிப்பூம்பட்டினத்தில் இருப்பதைக் காட்டிலும் திருநாங்கூரில் இருப்பதே நல்லது ஐயா! என்ன காரணத்துக்காகவோ பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வரும், இப்போது இங்கே துரத்திக் கொண்டு வந்தாரே இந்த ஒற்றைக்கண் மனிதரும் அவரை அழித்து ஒழித்து விடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதோ இப்போது நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, இந்த ஓவியத்தில் அவருடைய கழுத்தின் வலது பக்கத்துச் சரிவில் வரையப்பட்டிருக்கிற கறுப்பு மச்சத்தை முதலில் நான் வரையவில்லை. படத்துக்கு அது அழகாயிராது என்று தான் நான் வரையாமல் இருந்தேன். ஆனால் இந்த ஒற்றைக் கண்ணரும் இவரை வைத்துக் காப்பாற்றுகிற பெருநிதிச் செல்வரும் என்னைப் பயமுறுத்தி வற்புறுத்தி அவருடைய கழுத்தில் இந்த மச்சத்தை வரையச் செய்தார்கள். அவரைப் பற்றிப் பேசிக் கொள்ளும் போதெல்லாம் அந்த இருவருடைய கண்களிலும் ஏதோ பழி வாங்கத் துடிப்பது போல் வெறி தோன்றுவதை நான் சில நேரங்களில் கவனித்திருக்கிறேன். அதனால் தான் எனக்கு அச்சமாயிருக்கிறது. அப்பப்பா! இப்போது நினைத்தாலும் எனக்குக் குடல் நடுங்குகிறது, ஐயா! அந்த மாளிகையில் இந்த ஒற்றைக்கண் மனிதருடைய பாதுகாப்பில் நான் இருந்த ஒவ்வொரு கணமும் சாகாமலே செத்துப் போய்க் கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தப் பெண்ணரசி எனக்கு விடுதலையளித்துப் பரிசும் கொடுத்து வெளியே அனுப்பினாள். அவ்வளவு பெருஞ் செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏன் தான் அப்படிச் சூழ்ச்சிக்காரர்களாகவும், கொடியவர்களாகவும் இருக்கிறார்களோ?”

உலகத்தில் இரண்டு வகையான செல்வர்கள் இருக்கிறார்கள் என்பதை நீ அறிந்திருக்க நியாயமில்லை மணிமார்பா! தங்கள் செல்வச் செழுமைக்காக மட்டும் பெருமையும் செருக்கும் கொள்கிற செல்வர்கள் ஒருவகை, தங்கள் செழுமைக்காக மட்டுமின்றி பிறருடைய அழிவுக்கும் குறைவுக்கும் சேர்த்துப் பெருமைப்பட விரும்புகிற செல்வர்கள் ஒருவகை. இந்த இரண்டாவது வகைச் செல்வர்களுக்குத் தாங்கள் வளர்ந்து வாழ்வில் அடைகிற மனத்திருப்தியோடு பிறர் தளர்ந்து சீரழிவதைக் கண்டு கிடைக்கிற மிருகத்தனமான மகிழ்ச்சியும் அடையக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மனம் நிறையாது.”

ஆனால் இந்தக் கொடுமைக்காரர்களுக்கிடையிலே ஓர் அன்பு மலரும் மலர்ந்து மணந்து கொண்டிருக்கிறது, ஐயா! அந்தப் பெண் சுரமஞ்சரி உங்கள் மாணவர் இளங்குமரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். உங்கள் மாணவரோ அந்தப் பெண்ணின் பெயரை எடுத்தாலே சீறி விழுகிறார். இளங்குமரனின் இந்த ஓவியத்தை வரைந்ததற்காக அவள் எனக்குக் கொடுத்த பரிசைப் பார்த்தாலே அவளுக்கு அவர் மேலிருக்கும் அன்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதோ பாருங்கள்...” என்று சொல்லிவிட்டுத் தன் மடியிலிருந்த மணிமாலையை எடுத்து நீலநாக மறவருக்கு முன் நீட்டினான் ஓவியன்.

நீலநாகர் அதைக் கையில் வாங்கவில்லை. அவ்வளவாக விரும்பிப் பார்க்கவுமில்லை. ஏதோ சிறுபிள்ளை விளையாட்டைப் பார்த்துச் சிரிப்பது போல் மெல்லச் சிரித்தார்.

தம்பீ! நீ உன்னுடைய கலைத்திறனைக் காட்டி அதற்குச் சன்மானம் பெற்று வாழ்கிறவன். உனக்கு எவ்வளவு அதிகப் பெறுமானமுள்ள பொருளைப் பரிசு கொடுக்கிறார்களோ, அதையே அளவுகோலாகக் கொண்டு மனிதர்களின் பண்பை அளந்து பார்க்கிறாய். நானாகவோ இளங்குமரனாகவோ இருந்தால் இத்தகைய பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளவே இணங்கியிருக்க மாட்டோம். நம்முடைய திறமையைப் பாராட்டுகிறவர்கள் அப்படிப் பாராட்டுவதற்குத் தகுதியுடையவர்கள்தானா என்று சிந்திப்போம். பிறரிடமிருந்து பரிசு என்று எதையாவது வாங்கிக் கொண்டால் அது காரணமாகவே அவர்களுடைய சிறிய தகுதிகளும் நமக்கு மிகப் பெரியவையாகத் தோன்றத் தொடங்குகின்றன. நடுநிலை பிறழ்ந்து நமக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு வசப்பட்டு விடுகிறது நம் மனம். ஏதாவது ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டு அதற்காக மனத்தைத் தோற்கக் கொடுப்பதைக் காட்டிலும் எதையுமே பெற்றுக் கொள்ளாமல் மனத்தை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லதென்று நாங்கள் நினைக்கிறோம்.”

அவருடைய சித்தாந்தம் மணிமார்பனுக்குப் புரியவில்லை. ஆனால் இளங்குமரனிடமிருந்து பிடிவாதமும், முரட்டுக் குணமும் யாரிடமிருந்து அவனுக்கு வந்திருக்க வேண்டுமென்று இப்போது புரிந்தது. இந்த மணிமாலையை இளங்குமரன் ஒரு முறை தன்னிடமிருந்து வாங்கிக் கொள்ள மறுத்ததாகச் சுரமஞ்சரி கூறியதும் நினைவு வந்தது.

எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறாள் என்பதற்காக அந்தப் பெண் சுரமஞ்சரியை நான் புகழவில்லை ஐயா! இளங்குமரன் மேல் அவளுக்கு இருக்கும் அன்பு மெய்யானது. இல்லையானால் தன் தந்தை இளங்குமரனைத் தேடிப் பிடித்துச் சிறை செய்ய எண்ணியிருப்பதை என்னிடம் சொல்லி, ‘அவரை முன் எச்சரிக்கையோடு இருக்கச் செய்யுங்கள் என்று என்னை இங்கே அனுப்புவாளா?” என்று மணிமார்பன் மறுத்துக் கூறியதைக் கேட்ட பின்பும் அவர் அதை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை.

அப்படி இவர்கள் வந்து சிறைப்பிடித்துக் கொண்டு போகிற அளவு வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாத பருவத்துப் பிள்ளையல்ல அவன். ஒருவேளை அவனை இவர்கள் சிறை செய்தாலும் நாங்களெல்லாம் தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம்.”

அவருடைய இந்த உறுதிமொழிகளைக் கேட்டபின் இளங்குமரனைப் பற்றிய பயத்தையும் கவலையையும் விட்டுவிட்டு, தான் எப்படி ஊர் போய்ச் சேருவதென்ற சிந்தனையில் ஆழ்ந்தான் மணிமார்பன். மறுநாள் பொழுது விடிகிற வரை அந்த நகரத்தில் தங்கியிருந்து மணிமாலையை விற்றுப் பொற்கழஞ்சுகளாகக் கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம் இப்போது அவனுக்கு இல்லை. போது விடிவதற்குள் பாண்டிய நாட்டுப் பயணத்தை இருளோடு இருளாகத் தொடங்கிவிட வேண்டுமென்று எண்ணினான் அவன்.தன்னையும் தன்னிடமிருக்கும் மணிமாலையையும் சேர்த்துக் கைப்பற்றி விடுவதற்கு கறுவிக் கொண்டு வந்த நகைவேழம்பர் நீலநாகமறவரிடம் தோற்றுப் போய்த் திரும்பியதோடு அடங்கிப் போய் இருந்து விடுவாரென்று அவனால் நினைக்க முடியவில்லை. இடைவழியில் எங்காவது மீண்டும் தன்னை அவர் மறித்துக் கொண்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம் அவனை வாட்டியது. சில நாட்களுக்கு முன்பு வரையிலாவது பூம்புகாரின் இந்திர விழாவுக்கு மதுரையிலிருந்து வந்தவர்கள் கூட்டம் கூட்டமாகத் திரும்பியிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து போயிருக்கலாம். இப்போது எங்கே போய், யாரை வழித்துணை தேடுவது? இங்கிருந்து பாண்டிய நாட்டின் தலைநகரம் நினைத்தவுடன் போய்ச் சேர முடிந்த இடமில்லை. திருவரங்கத்தில் ஒருநாள், உறையூரில் ஒருநாள், தென்னவன் சிறுமலைத் தொடர்களைக் கடந்து திருமால் குன்றத்தில் ஒருநாள் என்று இடையிடையே ஓய்வுக்காகத் தங்கிப் பல நாட்கள் பயணம் செய்து வைகையின் வடகரையைக் காண வேண்டும்.

பயணத்தைப் பற்றிய தன் கவலையை நீலநாகமறவரிடம் வெளியிட்டான் அவன். “கவலைப்படாதே, மணிமார்பா! இந்த நகரில் இலவந்திகைச் சோலையின் மதிலுக்குப் பக்கத்தில் சைன சமயத்தைச் சேர்ந்த இல்லறத் துறவிகளாகிய சாவகர்கள் தங்கும் மடம் ஒன்று இருக்கிறது. அந்த மடத்திலிருந்து பாண்டிய நாட்டிற்குப் போகிறவர்களின் கூட்டம் அநேகமாக நாள்தோறும் புறப்படும். விடிவதற்கு முன்னாலேயே உன்னை அங்கே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அவர்களோடு புறப்பட்டுச் செல்வது உனக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்றார் நீலநாகமறவர்.

அடுத்த நாள் போது விடிவதற்கு நாலைந்து நாழிகைகள் இருக்கும் போதே தமது வழக்கம் போல் துயில் நீங்கி எழுந்துவிட்ட அவர் மணிமார்பனையும் எழுப்பி அழைத்துக் கொண்டு இலவந்திகைச் சோலைக்குப் புறப்பட்டார். அங்கே மணிமார்பன் மதுரை செல்வதற்கு வழித்துணை கிடைத்தது.

மறந்து விடாதே, தம்பீ! எல்லையற்ற வாழ்க்கைக் கடலில் சந்தர்ப்ப அலைகள் மறுபடி உன்னையும், என்னையும், இளங்குமரனையும் சந்திக்கச் செய்யலாம், சந்திக்கச் செய்யாமலும் போகலாம். நீ வரைந்த இளங்குமரனின் ஓவியம் என்னிடம் இருப்பதால் அதைக் காணும் போதெல்லாம் உன் நினைவு வரும்என்று விடைகொடுத்தார் நீலநாகர். ஓவியன் கண்ணில் நீர் நெகிழ அந்த கம்பீர மனிதரை நோக்கிக் கைக்கூப்பினான். பின்பு வழித்துணையாக வாய்த்த சாவகர்களோடு யாத்திரையைத் தொடங்கினான் மணிமார்பன்

-----------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

12. காவிரியில் கலந்த கண்ணீர்

 

மணிமார்பனைச் சாவகர்களின் வழித்துணையோடு மதுரைக்கு அனுப்பிவிட்டு நீலநாகமறவர் புறவீதி வழியே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். விடிவதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. பகல் நேரத்தில் இது போன்ற பொது விதிகளில் பலரும் காண நடந்து சென்று பழக்கமில்லை அவருக்கு. அவருடைய வாழ்க்கை முறை தனிப்பட்டதாக இருந்ததனால் விலகியும், ஒதுங்கியும் வாழ வேண்டியிருந்தது. அவர் வீரர்களுக்குள் துறவியாகவும், துறவிகளுக்குள் வீரராகவும் விளங்கி வந்தார். எனவே ஒளி பரவி விடிவதற்குள் பொது வீதிகளைக்கடத்து சென்று ஆலமுற்றத்தை அடைந்துவிடவேண்டும் என்று வேகமாக நடந்துகொண்டிருந்தார் அவர். வானத்தில் விடிவெள்ளி மின்னிக் கொண்டிருந்தது. விடிகாலையின் அமைதியில் தூரத்தே கடற்கரையின் அலை ஒசை ஒடுங்கியும், ஒடுங்காமலும் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. தென்னை ஒலைகளும் வேறு மரங்களின் இலைகளும் வைகறைக் காற்றில் சலசலவெனஒலியெழுப்பி இலக்கணத்தில் அடங்காத தொரு அழகிய மொழியைப் பேசிக் கொண்டிருந்தன. கொண்டைச் சேவல்கள் வீடுகளின் மாடங்களில் ஏறி விடிவதற்குமுன்பே விடிவுக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. வாயிற்புறங்களைத் தெளிப்பதற்காக வந்திருந்த பெண்களின் கைவளைகளும் காற்சிலம்புகளும், ‘இந்த வீதியின் இருளில் கண்ணுக்குப் புலப்படாமல் கந்தர்வப் பெண்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்களோ என்று நினைப்பதற்கேற்ற விதத்தில் கொஞ்சிக் கொஞ்சி ஒலித்தன.

தம்முடைய வழக்கப்படி ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் ஆலமுற்றத்துக் கடலருகில் நடந்து கொண்டிருப்பார் நீலநாக மறவர். கடற்கரையில் அலையோசையும் கரையோரத்துத் தாழம்புதரில் மடல்கள் காற்றில் மோதி அடித்துக் கொள்வதும் தவிர வேறு ஒசைகளை அவர் கேட்டதில்லை. இன்றோ நடந்துசெல்லும் இடமும், சூழ்நிலையும் ஒலிகளும் வழக்கத்துக்கு மாறான புதுமைகளை அவர் உணரும்படி செய்தன. நீலநாகமறவர் புறவீதியிலிருந்த வீரசோழியவளநாடுடையார் விட்டு வாயிலுக்கு எதிரே நடந்து சென்றபோது, அங்கே ஒலித்துக் கொண்டிருந்த வளையொலியும், சிலம்பொலியும் சில கணங்கள் ஒலிக்காமல் நின்றன.

தாத்தா!” என்று மிக இனிய பெண்குரல் ஒன்று அந்த இடத்திலிருந்து கூவியழைத்தது. அவர் திரும்பி நின்று பார்த்தார். நாள் புலரும் நேரத்தின் வைகறை அழகுகளேஒன்றுசேர்ந்து ஒரு சின்னஞ்சிறு பெண்ணாகிக் குடம் நிறைய நீருடன் கை நிறைய ஏந்திக்கொண்டு நிற்பது போலத் தூக்கத்தில் சரிந்த குழல் துவள, குழலில் சரிந்த பூவுந் துவளப் பெண்ணொருத்தி நின்றாள்.

அரைகுறை இருளில் முகம் நன்றாகத் தெரியாமல், “யார் அம்மா நீ?” என்று நின்ற இடத்திலிருந்தே வினவினார் நீலநாகமறவர்.

நான்தான் தாத்தா, வீரசோழிய வளநாடுடையாரின் மகள் முல்லை என்று பதில் சொல்லிக்கொண்டு அவருக்கு அருகில் வந்தாள் அந்தப் பெண். குடத்துள் நீர்த்தரங்கம் குலுங்கி ஒலித்தது.

 

என்னவேண்டும் உனக்கு?”

என் தந்தை இன்று காலை உங்களைக் காண்பதற்காகப் படைக்கலச், சாலைக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.”

என்னகாரியமாகப் பார்க்க வேண்டுமோ?”

உங்கள் படைக்கலச் சாலையில் இருக்கிறாரே அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் பிள்ளை, அவரைப் பற்றி உங்களிடம் ஏதோ பேசுவதற்காக, உங்களைப் பார்க்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தார்.”

ஆகா! நன்றாகப் பேசலாம். நான் இப்போது ஆலமுற்றத்துக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிறிது நேரங் கழித்து உன் தந்தையைப் புறப்பட்டு வரச் சொல்லேன் என்றார் நீலநாகமறவர். அவரிடமிருந்து இளங்குமரன் அப்போது எங்கிருக்கிறான் என்ற செய்தியை வரவழைத்து விடலாமென்றுதான் முல்லை அவரோடு பேச்சுக்கொடுத்தாள். ஆனால் அவருடைய மறுமொழிகள் அவளுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தன. அவரோ ஒளி பரவுவதற்குள் திரும்பிப் போய்விடவேண்டுமென்ற அவசரத்தில் இருந்தார். கேள்வியைச் சிறிது நெருக்கமாகத் தொடுத்தால் தான் எதிர்பார்க்கிற பதில் கிடைத்தாலும் கிடைக்கலாமென்று எண்ணியவளாய், “உங்களை அமரச் செய்து இந்த வீதி வழியாகஅவர் தேரைச் செலுத்திக்கொண்டு போனபோதுகூட நான் பார்த்தேன் தாத்தா என்று சிறு குழந்தை பேசுவதுபோல பன்னிப் பன்னிப் பேசினாள் முல்லை.

அப்படியும் அவரிடமிருந்து அவள் எதிர்பார்த்த செய்தி வரவில்லை. அதற்குள், வாயிலில் பெண் யாருடனோ பேசுகிற குரல் கேட்டு வளநாடுடையாரே வெளியே வந்துவிட்டார். “விடிந்ததும் விடியாததுமாக யாரோடம்மா பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டவாறே வெளியே வந்த தந்தையை எதிர்கொண்டு ஓடிச் சென்று, “இதோ ஆலமுற்றத்து தாத்தா வந்திருக்கிறார் அப்பா என்று உற்சாகமாகக் கூவினாள் முல்லை. ‘ஆலமுற்றத்துத் தாத்தா என்று தங்கை கூறிய குரல் கேட்டுக் கதக்கண்ணனும் உள்ளேயிருந்து விரைந்து வந்தான். வராதவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஆர்வம் அவனுக்கு.

அதன்பின் நீலநாகமறவரால் இத்தனை பேரையும் மீறிக் கொண்டு உடனே அங்கிருந்து போக முடியவில்லை.

இளங்குமரனை நீங்கள் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு போயிருப்பதாகக் கதக்கண்ணன் படைக்கலச் சாலையிலிருந்து தெரிந்து கொண்டு வந்து சொன்னான். இன்று நீங்கள் வரும் போது உங்களோடு அவனையும் திரும்ப அழைத்து வந்து விட்டீர்களல்லவா? நேற்றிலிருந்து இந்தப் பெண் முல்லைக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தப் பிள்ளையோடு வம்புப் பேச்சுப் பேசி அவனைச் சண்டைக்கு இழுப்பது இவளுக்கு விருப்பமான பொழுதுபோக்கு. இப்போது சில நாட்களாக அவன் இந்தப் பக்கமே வரவில்லை. அதனால் முல்லைக்கு அவனிடம் பெரிய கோபமே மூண்டிருக்கிறது என்று வளநாடுடையார் தம் ஆவல் மேலீட்டால் பேசிக்கொண்டேயிருந்தார்.

நீலநாகமறவர் அமைதியாகவும், அழுத்தமாகவும் இருந்தார். அவரிட மிருந்து வார்த்தை பெயரவில்லை. அவர் என்ன பதில் கூறப் போகிறாரென்று அறிவதற்காகவே முல்லையும் அங்கிருந்து போகாமல் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். வளநாடுடையார் விடாமல் மேலும் பேச்சை வளர்த்தார்.

திருநாங்கூருக்குப் போயிருக்கிறீர்கள் என்று கேள்விபட்டவுடன் உங்கள் ஆசிரியர்பிரானாகிய பூம்பொழில் நம்பியடிகளின் நினைவுதான் எனக்கு உண்டாயிற்று. நீங்களும், இளங்குமரனும் அடிகளைக் கண்டு வணங்கி விட்டுத்திரும்பியிருப்பீர்கள்.”

அடிகளைக் காண்பதற்குத்தான் போயிருந்தோம். ஆனால் திரும்பியது நான் மட்டும்தான், வளநாடுடையாரே!”

ஏன்? இளங்குமரன் வரவில்லையா?”

இல்லை! அவன் இன்னும் சிறிது காலத்திற்கு எங்கும் வரமாட்டான். நாங்கூர் அடிகள் தமது ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக அவனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அப்படியே திகைத்துப்போய் இருந்தார் வளநாடுடையார். பிள்ளைப் பருவத்திலிருந்து வேலும், வாளும் சுமந்து வீரனாகத் தன்னோடு தோழமை கொண்டு திரிந்த இளங்குமரன் வேறு வழிக்குத் திரும்பி விட்டான் என்பதைக் கேட்டதும் கதக்கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது. “எந்தத்துறையிலும் எல்லை மீறிய ஆழத்துக்கு உணர்வு பூண்டிருப்பவர்கள் விரைவில் இப்படி மாறிவிடுவார்கள்போலும் என்று எண்ணினான் அவன். முரட்டுப்பிள்ளையாய் அடக்க முடியாத காட்டாறு போலக் காவிரிப்பூம்பட்டினத்து வீதிகளில் தன்னையொத்த இளைஞர்களுடன் சுற்றித் திரிந்த பழைய இளங்குமரனை நினைத்தான். கடைசியில் நீராட்டு விழாவுக்குப் போன தினத்தன்று உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்திலும் மனமுருகி நின்ற இளங்குமரனை நினைத்தான். ‘என்னைப் போல் அகன்று போகும் உணர்ச்சி கொண்டவர் எப்படியாவது வாழ்ந்து கொண்டே இருப்போம். ஆனால் இளங்குமரனைப்போல் ஆழ்ந்து போகும் உணர்ச்சி கொண்டவர்கள்இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தாங்கள் வாழும் உயரத்தை மேலே மேலே ஓங்கச் செய்யாமல் இருக்கமாட்டார்கள் என்று தெரிகிறதுஎன நினைத்தான் கதக்கண்ணன்.

இளங்குமரன் சுரமஞ்சரியின் மாளிகைக்குப் போயிருப்பானோ?” என்று நினைத்து நிம்மதியிழந்திருந்த முல்லை இப்போது இதைக் கேட்டு அதிர்ச்சியே அடைந்தாள்.

 

அவன் திருநாங்கூருக்குப் போனது உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி, தரவில்லையென்று தோன்றுகிறது என்று அவர்களிருந்த மௌன நிலையைக் கண்டு கூறினார் நீலநாகர்.

இங்கே அடிக்கடி வந்து போய்ப் பழகிக்கொண்டிருந்த பிள்ளையைத் திடீரென்று இனிமேல் இந்தப் பக்கம் காண முடியாதென அறியும் போது, மனத்திற்குத் துன்பமாக இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.”

சற்றே உடைந்துதளர்ந்த குரலில் இவ்வாறு கூறினார் வளநாடுடையார்.

எனக்கு நேரமாகிறது. நான் புறப்படுகிறேன். முடிந்தால் மாலையில் ஆலமுற்றத்துப் பக்கம் வாருங்கள், பேசலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் நீலநாகர்.

வளநாடுடையாரும், நீலநாகமறவரும் வேண்டிய உறவும் நெருக்கமும் உள்ளவர்களானாலும் மனத்தினாலும் நோக்கங்களாலும் அடிப்படை வேறுபாடுடையவர்கள். வளநாடுடையார் வீரருக்குள் வீரராக மட்டும் வளர்ந்து பெருமை பெற்றவர். நீலநாகரோ வீரருக்குள் மாவீரராகவும் துறவியாகவும் உயர்ந்தவர். நாங்கூர் அடிகளை அடைந்தது இளங்குமரனின் நல்ல காலம் என்று அவர் நினைத்ததைப் போல் வளநாடுடையாராலோ, கதக்கண்ணனாலோ, முல்லையாலோ நினைக்க முடியாததற்கு இவர்கள் இயல்பான மானிட நிலைகளைக் கடந்து சிந்திக்க முடியாதவர்களாக இருந்தது தான் காரணம்.

இந்த மனிதர் என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இளங்குமரனைத் திருநாங்கூர் பூம்பொழிலிற் கொண்டு போய்ச் சேர்த்து விட்டாரே? சோழ நாட்டிலேயே வலிமைமிக்க வீரன் என்று பேர் வாங்கும்படி அவனை ஆக்கி விட வேண்டுமென்று நான் கனவு கண்டதெல்லாம் இனி வீணாக வேண்டியதுதானா? வருகிற புத்த பெளர்ணமியன்று அவனை மணிபல்லவத்துக்கு அழைத்து வருவதாக அருட்செல்வரிடம் தா" நான் வாக்களித்திருப்பது என்ன ஆவது? என் பெண்ணை அவனுக்கு மணம் செய்து கொடுக்க எண்ணியிருக்கும் எண்ணம் என்ன ஆவது?’ என்று மனதுக்குள் நினைத்துக் குழப்பமடைந்து கொண்டிருந்தார் வளநாடுடையார்.

முல்லையை அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் காணாததால் கதக்கண்ணன் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்குச் சென்று தேடலானான். புற வீதியின் பின்னால் மரங்களடர்ந்த வனத்தின் நடுவே காவிரியிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஒன்று உண்டு.

முல்லையைக் கதக்கண்ணன் தேடிச் சென்றபோது நன்றாக விடிந்துவிட்டது. அவள் காவிரி வாய்க்காலின் கரைமேல் குடத்தோடு அமர்ந்து தனிமையில் மெல்ல அழுது கொண்டிருந்ததைக் கண்டான் அவன். தங்கையின் நிலை அவனுக்குப் புரிந்தது.

 

எதற்காக அழுகிறாய், முல்லை?”

அழுகிறேனா? இல்லையே!” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனிடம் தன்னுணர்வை மறைக்க முயன்றாள் அவள். “இல்லையாவது! என்னிடம் ஏன் மறைக்கிறாய்? நீ அழுவதன் காரணம் எனக்குத் தெரியும்!” என்று சொல்லியபடி ஆதரவாகத் தங்கையின் அருகில் அமர்ந்தான் அவன். முல்லை தலைகுனிந்தாள். அவளுடைய கண்ணீரின் கடைசி இரண்டு துளிகள் காவிரிக் காலில் விழுந்து கலந்தன.

கலக்கமடையாதே, முல்லை! உன்னை நானே திருநாங்கூருக்கு அழைத்துப் போகிறேன். நாம் இருவரும் இளங்குமரனைச் சந்திக்கலாம் என்று தமயனின் குரல் அவள் காதருகே ஆறுதலாக ஒலித்தது.

-------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

13. வேங்கை சீறியது

 

தந்தையார் உடன் அனுப்பியிருந்த ஊழியன் நிழலைப் போல் விடாமல் அருகிலேயே இருந்ததனால் நெய்தலங் கானலின் அழகிய கடற்கரையில் சுரமஞ்சரியும், வசந்தமாலையும் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதற்காகத் தவித்துக் கொண்டிருந்தவற்றில் எதையும் பேச முடியவில்லை.

சுரமஞ்சரி இளங்குமரனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். பெண்ணின் மனம் சந்தனப் பேழையைப் போன்றது. சந்தனப் பேழையில் சந்தனம் இருந்தாலும் மணக்கும். சந்தனம் இல்லாவிட்டாலும் அது இருந்ததற்கு அடையாளமான மணம் கமழும். மனத்துக்குப் பிரியமானவர் அருகில் இருந்தாலும் விலகி இருந்தாலும் அவரைப் பற்றிய இனிய நினைவுகளை எண்ணாமலிருக்கப் பெண்ணால் முடிவதில்லை. சுரமஞ்சரியின் மனத்திலும் சந்தனப் பேழையைப் போல் இளங்குமரனின் நினைவுகள் மணந்தன.

பின்னால் துரத்திக் கொண்டு சென்ற நகைவேழம்பரால் ஒவியனுக்கு ஒரு துன்பமும் ஏற்பட்டிருக்காததனால் அவரிடம் தெரிவிப்பதற்கென நான் சொல்லியனுப்பிய செய்தி அவரை எட்டியிருக்கும் என்று நினைத்தாள் அவள்.

நான் இடைவிடாமல் இளங்குமரனையே நினைத்துக் கொண்டிருப்பது ஏன்? எப்படி இந்தப் பித்துக் கொண்டேன்?” என்று தனக்குத் தானே ஒரு கணம் விலகி நினைக்கும்போது அவளுக்கு வெட்கமாகக்கூட இருந்தது.

 

தன்னுடைய நெஞ்சத்தில் எனக்குச் சிறிதும் இடமளிக்காமல் என்னைக் கடிந்து ஒதுக்கும் அவர் என்னுடைய நெஞ்சில் புகுந்து இப்படி நினைவுகளாகத் தங்கி வேதனைப் படுத்துகிறாரே; வெட்கமில்லையா அவருக்கு?’ என்று காதலனைப் பிரிந்த காதலி துயரப்படுவதாக வள்ளுவர் பெருமான் எழுதியுள்ள அழகிய குறள் ஒன்று சுரமஞ்சரிக்கு நினைவு வந்தது.

 

தம்நெஞ்சத்(து) எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.”

 

இந்தக் குறளின் தலைவியாகத் தன்னையும், தலைவனாக இளங்குமரனையும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் சுரமஞ்சரி, கற்பனை மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அது உண்மையல்ல; கற்பனை மட்டுமே என்பதால் துயரமும் அதிலிருந்தே பிறந்தது. ‘என்னைப் பற்றி நினைத்து மகிழாதவருக்கு என் நினைவில் மட்டும் அடிக்கடி நுழைய உரிமை ஏது?’ என்று குறளில் வந்ததைப் போல் எண்ணினாலும் அவரைக் கடிந்து கொள்ளத் தனக்கு என்ன உரிமையிருக்கிறதென்ற வினாவும் அவள் மனத்திலேயே எழுந்தது. அவர்கள் உட்கார்ந்திருந்த அதே நெய்தலங் கானற் கரையின் கோடியில்தான் காவிரி கடலோடு கலக்கும் இடமும் இருந்தது. அந்த இடத்தில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்று இரண்டு ஏரிகளும் அவற்றின் கரையில் காமவேள் கோட்டம் என்னும் கோயிலும் அமைந்திருந்தன. இந்தப் பிறவியில் இன்பத்தையும் மறுமையில் போக பூமியையும் தரக்கூடிய புண்ணியப் பயன் வாய்ந்த இந்த ஏரிகளுக்குப் பூம்புகார் மக்கள் இருகாமத் திணை ஏரி என்று பெயர் வழங்கினார்கள். மனம் விரும்பிய நாயகனை அடைவதற்கும், அடைந்த நாயகனைப் பிரியாமல் இருப்பதற்கும், இந்த ஏரிகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தை வணங்கி வலங்கொண்டு வழிபடுவது பூம்புகார்ப் பெண்களின் வழக்கமாயிருந்தது. இதனால் இருகாமத்திணை ஏரிகளின் கரையிலும் காமவேள் கோட்டத்திலும் இளம் பெண்களின் பெருங்கூட்டத்தை எப்போதும் காணலாம். இரண்டு பிறவிகளிலும் நுகர்வதற்குரிய ஆசைகளை இணைத்தலால் இருகாமத்து இணை ஏரி என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த இடத்துக்கு இதற்கு முன் சுரமஞ்சரி பல முறை சென்றிருக்கிறாள். ஆனால், தன் மனத்துக்குள் ஒரு விருப்பத்தையோ, அந்தரங்கமான குறிக்கோளையோ அமைத்துக் கொண்டு அதற்கு வேண்டுதலாக இதுவரை அவள் சென்றதில்லை. இப்போது அப்படிப் போக வேண்டிய அவசியம் வந்திருப்பதை அவள் உணர்ந்தாள். நீராடியும், வலம் வந்தும், வழிபட்டும், இன்னொருவருடைய மனத்தை நம் பக்கம் இழுத்து விடுவதற்கு இயலுமோ, இயலாதோ, அப்படிச் செய்கின்ற சடங்குகளால் செய்யப்படுகிற செயலின் மேல் நமக்குள்ள பக்தியும் சிரத்தையும் வளர்ந்து விடுகிறது. அதற்காகவாவது எல்லாரையும் போல நானும் அவற்றை விட்டு விடாமல் செய்ய வேண்டும் என்று மனத்துக்குள் முடிவு செய்து கொண்டாள் சுரமஞ்சரி.

வந்து வெகு நேரமாகிவிட்டதே, புறப்படலாமா?” என்று வசந்தமாலை மாளிகைக்குத் திரும்புவதை நினைவூட்டினாள்.

இப்போது திரும்பலாம்; ஆனால் நாளைக்கு மறுபடியும் நாம் இந்தப் பக்கமாக வரவேண்டிய காரியமிருக்கிறது என்று கூறிக்கொண்டே சுரமஞ்சரி எழுந்தாள்.

இருவரும் தேரில் ஏறிக்கொண்டதும் ஊழியன் தேரைச் செலுத்தினான். மணிகளை ஒலித்துக் கொண்டு தேர் விரைந்தது. சுரமஞ்சரியும், வசந்தமாலையும் மாளிகையை அடைந்தபோது முன் கூடத்தில் தந்தையார் அமர்ந்திருந்தார். மாலையில் பாண்டிய நாட்டுக் கொற்கையிலிருந்தும், சேரநாட்டு விழிஞத்திலிருந்தும் வாணிகக் கப்பல்கள் வந்து துறை சேர்ந்திருந்தன போலும். தந்தையாருக்கு முன்னால் முத்துக் குவியலும் முற்றிப் பருத்து நீண்ட யானைத் தந்தங்களும் காட்சியளித்தன. அவற்றைத் துறைமுகத்திலிருந்து சுமந்து வந்த கப்பல் ஊழியர்கள் சுற்றிலும் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். தந்தையார் அவர்களிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.

இவற்றில் ஒன்றும் புதுமை இல்லை. அடிக்கடி அந்த மாளிகையில் தென்படுகிற காட்சிதான். சுரமஞ்சரியும், வசந்தமாலையும் உள்ளே போய்த் தங்களுக்காகக் காத்திருந்த தாயுடனும், வானவல்லியுடனும் உண்பதற்குச் சென்றார்கள்.

இன்றைக்கு முத்துக் கப்பல் வந்திருக்கிறது அம்மா! நல்ல முத்துக்களாகத் தேர்ந்தெடுத்து எனக்கு ஒரு மாலை செய்துகொள்ளப் போகிறேன் என்று வானவல்லி தாயிடம் கூறினாள்.

உனக்குத்தான் நாலைந்து முத்து மாலைகள் இருக்கின்றனவே. இன்னும் எதற்கு?”

முத்துக்களில் ஒவ்வொன்றும் ஒரு சாதி அம்மா. இந்தக் கப்பலில் இன்றைக்கு வந்திருக்கிற முத்துக்கள் எல்லாமே நன்றாக விளைந்தவை. பொதிகளை இறக்கிப் பிரித்துக் குவித்தவுடனே நான் போய்ப் பார்த்தேன்.”

முத்துக்களைப் புகழ்ந்து நீ இவ்வளவு பேசுகிறாயே வானவல்லி! உன் பக்கத்தில் அமர்ந்து உண்ணுகிற சுரமஞ்சரியும் அவள் தோழியும் ஏன் இப்படிப் பேசாமல் அமைதியாயிருக்கிறார்கள்?” என்று சொல்லி நகைத்துக் கொண்டே சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் உற்றுப் பார்த்தாள் அன்னை.

சுரமஞ்சரிக்கு இப்போது எதற்குமே நேரமில்லையம்மா! முன்பெல்லாம் மாலை வேளைகளில் மேல் மாடத்துக்குச் சென்று என்னை வேய்ங்குழல் வாசிக்கச் சொல்லி எதிரே அமர்ந்து நேரம் போவது தெரியாமல் கேட்பாள். இப்போதோ அவளும் அவள் தோழியும் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே வெளியே கடற்கரைக்கும், காவிரித்துறைக்கும் போகத் தொடங்கிவிட்டார்கள். திடீரென்று மெளனமாகி விடுவதற்கும், திடீரென்று சிரிப்பதற்கும் அவளுக்கு ஏதேதோ புதுப்புதுக் கவலைகளும், புதுப்புது மகிழ்ச்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன அம்மா என்று முத்து மாலையில் தொடங்கிய பேச்சு சுரமஞ்சரியைப் பற்றித் திரும்பியது.

தாங்கள் பழகுகிற முறையில் தாயும் சகோதரியும் மேலும் வேறுபாடு காணலாகாதே என்பதற்காகச் சுரமஞ்சரி அவர்களோடு சிரித்துப் பேச முயன்றாள். தோழியும் பேசினாள். ஆனால் சுரமஞ்சரியும் தோழியும் பேசிய பேச்சிலும், சிரித்த சிரிப்பிலும், இயற்கையான உற்சாகம் இல்லை என்பதைத் தாயினால் தெரிந்து கொள்ள முடிந்தது. ‘இந்தப் பெண் எதையோ மனத்துக்குள் வைத்துக் கொண்டு கலங்குகிறாள் என்பது பெற்ற உள்ளத் துக்குப் புரிந்தது. சமயம் பார்த்துப் பெண்ணிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் தாய். அந்த மாளிகையில் அவளுக்கு இருக்கிற ஒரே மன நிறைவு, நம்முடைய பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதுதான்! அதை இழக்க அந்தத் தாயுள்ளம் விரும்பாததில் வியப்பில்லை. தான் பெற்றவர்களின் மகிழ்ச்சியிலிருந்து தன்னுடைய மகிழ்ச்சியைத் தேடிப் பெறுகிறவள் தாய். அவள் தேடுகிற உள்ளங்களிலெல்லாம் மகிழ்ச்சியில்லையானால் அவளுக்கும் மகிழ்ச்சி இல்லை.

உணவு முடிந்ததும் முத்துக் குவியலிலிருந்து நல்முத்துக்களைப் பொறுக்கி எடுக்கத் தாயையும் துணைக்கு அழைத்தாள் வானவல்லி. தான் மட்டும் தனியாகப் போனால் தந்தையார் சீறி விழுவார் என்பது அவளுக்குத் தெரியும். தாயோ சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் உடனழைத்தாள்.

நீயும் வா, சுரமஞ்சரி! உனக்கும், உன் தோழிக்கும் கூட மாலைக்கு முத்துக்கள் தேர்ந்தெடுக்கலாமே! ஏன் இப்படி மகிழ்ச்சியில்லாமல் காணப்படுகின்றாய்? என்னிடம் மனம் திறந்து சொல்லக்கூடாதா?” என்று கேட்டாள் தாயார்.

அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. களைத்துப் போயிருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறேன் போலிருக்கிறது. நீங்கள் போய் முத்துக்களைப் பாருங்கள். என்னிடம் வேண்டிய முத்து மாலைகள் இருக்கின்றன. நான் உறங்கப் போகிறேன். தளர்ச்சியாயிருக்கிறது என்று கூறித் தோழியோடு தன் மாடத்துக்குப் புறப்பட்டு விட்டாள் சுரமஞ்சரி.

மாடத்தை அடைந்து தானும், தன் தலைவியும் தனிமை பெற்றதும் வசந்தமாலை, “ஏனம்மா, நாளைக்கு மறுபடியும் நெய்தலங்கானலுக்குப் போக வேண்டுமென்றீர்களே? எதற்காக அங்கே போக வேண்டும்?” என்று கேட்டாள்.

கடற்கரையிலேயே உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேனடி, வசந்தமாலை! தந்தையார் தேர் ஓட்டுவதற்காக நம்மோடு அனுப்பியிருந்த ஊழியன் நாம் எப்போது வாய்திறந்து பேசப்போகிறோம் என்று செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு பக்கத்திலேயே பழி கிடந்தான், அதனால் அந்தரங்கமாக ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. நாளைக்குக் காலையில் விடிவதற்கு முன்பே துயிலெழுந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளர்மல் நடந்தே நெய்தலங்கானலுக்குப் புறப்பட்டு விட வேண்டும். கதிரவன் உதயமாவதற்கு முன்பே, சோம குண்டம், சூரிய குண்டம், இரண்டு ஏரிகளிலும் நீராடிக் காமன் கோவிலை வலம் வந்து வணங்கிவிட்டுப் போனது தெரியாமல் மாளிகைக்குத் திரும்பிவிட வேண்டும்.”

இதைக் கேட்டு வசந்தமாலை நளினமாகச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே சுரமஞ்சரியின் கண்களைப் பார்த்தாள்.

அந்த இரண்டு ஏரிகளிலும் பொதுவாக எல்லாரும் நீராடுவதில்லையே, அம்மா! மனத்துக்குள் ஏதாவதொரு ஆசையை உருவேற்றிக் கொண்டு அது விளையவேண்டு மென்று அல்லவா அங்கு நீராடிக் காமன் கோவிலை வலம் வருவார்கள்? உங்களுக்கும், எனக்கும் இப்போது உடனே அந்த ஏரிகளில் நீராடித் தீரவேண்டிய அவசரம் ஒன்றுமில்லையே?”

அப்படியானால் நீயும், நானும் ஆசைகளே இல்லாத மனத்தையுடையவர்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா வசந்தமாலை?”

அதற்குச் சொல்லவில்லையம்மா. இருகாமத்திணை ஏரியில் நீராடிக் காமன் கோவிலை வலம் வருகிற ஆசை வேறு வகையைச் சேர்ந்தது. அங்கே நம்மைக் காண்கின்றவர்கள் குறும்பு பேசி நகைப்பார்கள்.”

குறும்புப் பேச்சுக்கும் நகைப்புக்கும் பயந்து நாணுவதாயிருந்தால் எந்தப் பெண்ணும் அங்கே போகாமல் அல்லவா இருக்க வேண்டும்? பொழுது புலர்ந்தால் நகரில் உள்ள பெண்களின் கூட்டமெல்லாம் அங்கேதான் போய்க் கூடுகிறது.”

வசந்தமாலை பதில் கூறாமல் சிரித்துக் கொண்டே தலைவியின் மேல் பதியவிட்ட பார்வையை மீட்காமல் இருவிழிகளையும் மலர விரித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தப் பார்வை தாங்காமல் சுரமஞ்சரி நாணிக் குழைந்தாள்.

என்னடி வசந்தமாலை? எதற்காக இப்படிப் பார்க்கிறாய்?”

ஒன்றுமில்லை! உங்களுடைய ஆசைகளிலும், தோற்றத்திலும் புதுமைகள் பிறந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன் அம்மா! நீங்கள் எவ்வளவோ மாறிவிட்டீர்கள். உங்களுடைய பிடிவாதமான உறுதிகளையும், செருக்கையும், எங்கேயோ தோற்கக் கொடுத்துவிட்டீர்கள்.”

இதைக் கேட்டு சுரமஞ்சரி மேலும் நாணமடைந்தாள். அவள் கைகள் பக்கத்தில் வைத்திருந்த பூக்குடலையிலிருந்த ஒரு செந்தாமரைப் பூவை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தன. தாமரைப் பூவின் மெல்லிளஞ் செவ்விதழ்களுக்கும் அவளுடைய கைகளுக்கும் வேறுபாடு தெரியாத விந்தை எழிலைப் பார்த்துக் கை எது தாமரைப் பூ எது என்று தெரியாமல் மயங்கிக் கொண்டிருந்த வசந்த மாலை விரல்களிலிருந்த மோதிரங்களைக் கொண்டு கையை அடையாளம் கண்டாள். தன் தலைவியிடம் வியந்து கூறலானாள் அவள்:

 

கமலத்தைப் பற்றியிருக்கும் இந்தக் கர கமலங்களைப் பிடிக்கப் போகிறவர் பாக்கியசாலியாகத்தான் இருக்க வேண்டும் அம்மா.”

இல்லையே தோழி! அந்தப் பாக்கியசாலி இந்தக் கைகளையும் உதறிவிட்டுச் செல்கிற கல்நெஞ்சுக்காரராக அல்லவா இருக்கிறார்?” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி.

அப்போது கீழே மாளிகையின் முன்புறத்தில் ஒரு நாளுமில்லாத புதுமையாய் நகைவேழம்பர், தந்தையாரிடம் இடிமுழக்கம் போன்ற குரலில் உரக்கப் பேசும் ஓசை மேன்மாடத்தையும் எட்டியது. தந்தையாரின் பதில் குரல் கேட்கவில்லை. ஆனால் எல்லை கடந்து சீறி ஒலிக்கும் நகைவேழம்பரின் குரலோ மாளிகையையே அதிரச் செய்து கொண்டிருந்தது.“இந்த இரவு நேரத்தில் இவர் எதற்காக இப்படிப் பேய்க் கூப்பாடு போடுகிறார்? யாருடைய குடி முழுகி விட்டது இப்போது? என் தந்தையை எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு இவரிடம் துணிவு வளர்ந்து விட்டதா? கீழே போய் என்னவென்று பார்த்து வா, வசந்தமாலை!” என்று தன் தோழியை அனுப்பினாள் சுரமஞ்சரி. தானும் தன் தோழியும் பேசிக் கொண்டிருந்த பேச்சின் இனிய நினைவுகளிலிருந்து கீழே எழுந்த கூப்பாடு தங்களைக் கலைத்து விட்டதே என்ற வருத்தத்தால் நகைவேழம்பர் மேல் சுரமஞ்சரிக்கு ஏற்கெனவே இருந்த சினம் பெரிதாய் மூண்டது.

கீழே சென்ற வசந்தமாலை சிறிது நேரத்தில் திரும்பி வந்து கூறினாள்:

பிரளய காலமே முன்னால் வந்து சீறிக் கொண்டு நிற்பதுபோல் உங்கள் தந்தையாருக்கு முன் கூப்பாடு போட்டுக் கொண்டு நிற்கிறாரம்மா நகைவேழம்பர். அவரைப் பார்க்கவே பயங்கரமாயிருக்கிறது. எங்கேயோ செம்மையாகத் தோல்வியடைந்து பூசைக்காப்பு வாங்கிக் கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது. அடிபட்ட புலி போலச் சீற்றம் கொண்டு அலைபாய்கிறார். இவ்வளவுக்கும் அசைந்து கொடுக்காமல் உங்கள் தந்தையார் கட்டுப்பட்டு அடங்கி நிற்கிறார். அந்த அரைக்குருட்டு அவலட்சணத்துக்குப் பணிந்து பேசுகிறார்.”

என்ன அநியாயமடீ இது? நான் போய்ப் பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் சுரமஞ்சரி.

உங்களால் பார்க்க முடியாதம்மா! தந்தையார் அவரை இழுத்துக் கொண்டு தமது அந்தரங்க மண்டபத்துக்குப் போய்க் கதவை அடைத்துவிட்டார்.”

ஐயையோ! அந்த ஒற்றைக்கண் வேங்கை தனிமையில் தந்தையாரை என்ன செய்தாலும் கேள்வி கேட்பார் இல்லையே?” என்று பதறினாள் சுரமஞ்சரி.

என்ன ஆனாலும் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை அம்மா! அவர்கள் இருவருமே எவரையும் நெருங்கவிடாமல் தனித்துப் பேசப் போயிருக்கிறார்களே! நாம் என்ன செய்வது?” என்றாள் தோழி.

--------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

14. நேருக்கு நேர்

 

அமைதியான இரவு நேரத்தில் பட்டினப்பாக்கத்து மாளிகையில் பெருநிதிச் செல்வரின் தனிமையான அந்தரங்க மண்டபத்தில், அவரும் நகை வேழம்பரும் நேருக்கு நேர் நின்றார்கள். பெருநிதிச் செல்வரின் அளவிட முடியாத நிதிச் செல்வமும் அந்த மண்டபத்தில் தான் இரத்தினக் குவியலாகவும், முத்துக் குவியலாகவும், தந்தங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், அணிகலன்களின் குவியலாகவும், பொற்காசுகளாகவும் குவிந்து கிடந்தன.

மண்டபத்துக்குள் கீழே கிடந்த இரத்தினக் குவியலிலிருந்து ஒரே ஒரு பெரிய சிவப்புக்கல் நகைவேழம்பருடைய முகத்தில் போய்ப் பதிந்துகொண்டு மின்னுவது போல் அவரது ஒற்றைக்கண் சிவந்து குரூரமாக மின்னியது. பெருநிதிச் செல்வர் தணிந்த குரலில் அவரிடம் கேட்டார்:

இன்றைக்கு என்ன இவ்வளவு சீற்றம்? பிரளயம் புகுந்ததுபோல் புகுந்து மாளிகையையே ஒரு கலக்குக் கலக்கி விட்டீர்கள்?”

எனக்கு உங்கள் மேல் அடக்க முடியாத கோபம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாளிகையையும், உங்களையும், இங்கு குவிந்து கிடக்கும் செல்வத்தையும் அழித்தொழித்து விட்டுப் போய்க் காவிரியில் தலை முழுக வேண்டும்போல் அவ்வளவு ஆத்திரத்தோடு வந்தேன்!”

காரணம் என்னவோ?”

காரணமா? இதோ இந்தக் கையைப் பாருங்கள், தெரியும்!” நகைவேழம்பர் தமது வலது கையைத் தூக்கிக் காண்பித்தார். மணிக்கட்டுக்குக் கீழே முழங்கையின் நடுவே ஒரு சுற்றுச் சிவந்து தடித்து வீங்கியிருந்தது அந்தக் கை.

இந்தக் கை ஒத்துழைக்கவில்லையானால் நீங்கள் இவ்வளவு செல்வத்தைக் குவித்திருக்க முடியுமா?”

முடியாது.”

இந்தக் கையின் துணையில்லையானால் பல்லாண்டு பெரிய மாளிகை வாழ்வும் எட்டிப் பட்டமும், பெருநிதிச் செல்வர் என்ற பீடும் நீங்கள் அடைந்திருக்க முடியுமா?”

முடியாது.”

 

இந்தக் கையின் துணையில்லையானால் பல்லாண்டுகளாக நீங்கள் செய்து வரும் கொலைகளும் பாதகங்களும், சூழ்ச்சிகளும் உலகத்துக்குத் தெரியாமல் காப்பாற்றியிருக்க இயலுமா?”

இயலாது

நீங்கள் செய்திருக்கிற கொடுமைகளும், துரோகங்களும் வெளியானால் சுட்ட செங்கல்லைத் தலையில் வைத்து ஊர் சுற்றச் செய்து அவமானப்படுத்தி நாடு கடத்துவார்கள்* என்பதில் சிறிதும் சந்தேகமில்லையே.”

* குடிப்பெருமை மீறிப் பெருங்குற்றஞ் செய்தாரை இப்படி அவமானப்படுத்துதல் அந்தக் காலத்து வழக்கம்.

சந்தேகமில்லைதான்.”

நகைவேழம்பரின் குரல் உரத்து ஓங்க ஓங்கப் பெருநிதிச் செல்வரின் குரலும், தோற்றமும் ஒடுங்கி நலிந்து கொண்டிருந்தன. ஒரு காலை நன்றாக ஊன்ற முடியாததால் ஏற்கெனவே சாய்ந்து கோலூன்றி நின்ற அவர் இந்தக் கேள்விகளால் தாக்குண்டு இன்னும் சாய்ந்தாற் போல் தளர்ந்து நின்றார். அவருடைய முகத்திலும், கண்களிலும் நடுக்கமும் பீதியும் தோன்றின. எதிரே நகைவேழம்பர் பாய்ந்து கிழிக்கப் போகிற புலியைப் போல் வலது கையைத் தூக்கிக் கொண்டு நின்றார். அவருடைய மெளனம் பேச்சைக் காட்டிலும் பயமூட்டுவதாயிருந்தது. மெளனத்தை உடைத்து விட்டு அவரே பேசத் தொடங்கினார்.

இந்தக் கை ஓங்கிய வாள் இதுவரை தவறியதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமல்லவா?”

நன்றாகத் தெரியும்?”

இதே கை இன்று தவறிவிட்டது என்பதைத்தான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.”

எங்கே தவறியது? எதற்காகத் தவறியது? யாரிடம் தவறியது? சொல்லுங்கள். நாளைக்குச் சூரியோதயத்துக்குள் உங்கள் கையை இப்படி ஆக்கிய கை எதுவோ அதை உணர்வு செத்துப் போகச் செய்துவிடுகிறேன் என்று பரபரப்போடு வினாவிய பெருநிதிச் செல்வரை நகைவேழம்பர் சொல்லிய பதில் திடுக்கிட வைத்தது.

அந்தக் கையை உணர்விழக்கச் செய்வதற்கு உங்களாலும் முடியாது! உங்கள் பாட்டனார் வந்தாலும் முடியாது!”

ஏன் முடியாது? என்னையும் உங்களையும் போலச் சூழ்ச்சியும் திறனும் உள்ளவர்களால் அழிக்க முடியாத வலிமைகூட இந்த நகரத்திலே இருக்கிறதா?”

 

இருப்பதாகத்தான் தெரிகிறது. இல்லாவிட்டால் என்னுடைய இந்தக் கை இப்படி வீங்குமா?”

யார் என்றுதான் சொல்லுங்களேன். நடந்ததை ஒன்றும் சொல்லாமல் ஆத்திரமாகப் பேசிக் கொண்டே போவதில் என்ன பயன்?”

நகைவேழம்பரின் குரல் சிறிது ஒலி குன்றியதும் பெரு நிதிச் செல்வரின் குரல் பெரியதாய் ஒலித்தது. சுரமஞ்சரியும் அவள் தோழியும் முயற்சி செய்து ஓவியனை விடுவித்து மணிமாலை பரிசளித்ததிலிருந்து தொடங்கித் தான் ஒவியனைப் பின் தொடர்ந்து சென்ற பின் ஆலமுற்றத்தில் நிகழ்ந்தது வரை, எல்லாவற்றையும் கூறினார் நகை வேழம்பர். நீலநாகமறவர் தம்முடைய கையைப் பற்றியதையும், தாம் அவரால் கீழே பிடித்துத் தள்ளப் பட்டதையும், மேலும் ஆத்திரம் மூளும் விதத்தில் விவரித்துச் சொன்னார் அவர்.

நமக்கு எதிரிகள் வேறெங்கும் இல்லை. நம்முடைய மாளிகையிலேயே இருக்கிறார்கள் என்று குறிப்பாகச் சொல்லிப் பெருநிதிச் செல்வரின் கோபமெல்லாம் சுரமஞ்சரியின் மேல் திரும்புமாறு செய்ய முயன்றார் அவர்.

ஆனால் பெருநிதிச் செல்வரோ, நீலநாக மறவருடைய பெயரைக் கேட்டதுமே அதற்குமேல் நகைவேழம்பர் கூறிய எதிலுமே கவனம் செலுத்த முடியாதபடி தளர்ந்து தரையிலே உட்கார்ந்திருந்தார்.

ஆலமுற்றத்து மலையை நம்மால் அசைக்க முடியாதென்று தெரிந்தாலும் பழிக்குப் பழி வாங்குவதாகச் சபதமிட்டு வந்திருக்கிறேன்! நேர் வழியில் முடியாவிட்டாலும் ஏதேனும் சூழ்ச்சி செய்தாவது என் சபதம் நிறைவேற நாம் இருவரும் பாடுபட வேண்டும் என்று நகைவேழம்பர் ஆவேசமாகச் சொல்லிய போதும் பெருநிதிச் செல்வர் தலையில் கையூன்றியபடி மெளனமாகவே அமர்ந்திருந்தார். நகைவேழம்பர் மறுபடியும் சீறினார்.

ஏன் இப்படி உட்கார்ந்து விட்டீர்கள்? என் பேச்சு இலட்சியமில்லையா உங்களுக்கு...?”

பதில் பேசுவதற்கு ஒன்றுமே தோன்றவில்லை நகைவேழம்பரே! இந்தப் பெரிய நகரத்தில் எந்த மனிதருக்கு முன்னால் அரச குடும்பத்துப் பிள்ளைகளும் வாளுடன் நிற்பதைக் கூட மதிப்புக் குறைவாக நினைத்துப் பயப்படுவார்களோ அந்த மனிதரோடு மோதிவிட்டு வந்திருக்கிறீர்களே நீங்கள்?” பெருநிதிச் செல்வரின் குரல் சோர்ந்து ஒலித்தது.

------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

15. பேய்ச் சிரிப்பு!

 

ஆலமுற்றத்துப் பெருவீரரான நீலநாகமறவரிடம் அவமானமடைந்து வந்திருந்த நகைவேழம்பரை ஆறுதல் அடையச் செய்வதற்குப் பெருநிதிச் செல்வர் அரும்பாடுபட வேண்டியிருந்தது. பல பேர்களை அடிமையாக வைத்துக் கொண்டு ஆள்கிற அளவுக்குப் பெருஞ்செல்வராக இருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் நகைவேழம்பர் என்னும் ஒரே ஒரு மனிதருக்கு முன் தாமே அடிமை போல் நின்று தணிந்துபோக வேண்டிய நிலை அன்று இரவில் அவருக்கு நேர்ந்துவிட்டது.

வெளிப்படையாக நேருக்கு நேர் அந்த ஒற்றைக்கண் மனிதரிடம் பணிந்தாற் போலவும், பயந்தாற் போலவும் நடந்து கொண்டிருந்தாலும் பெருநிதிச் செல்வருடைய மனத்தில் அவர்மேல் தாங்க இயலாத கொதிப்பு விளைந்திருந்தது. நீண்ட நேரத்து விவாதத்துக்குப் பின்னர், நகை வேழம்பரை அமைதி கொள்ளச் செய்திருந்தார் பெருநிதிச் செல்வர்.

நீலநாக மறவரை எதிர்த்து நேரடியாக ஒன்றும் செய்வதற்கில்லையென்பது உங்களுக்குத் தெரிந்த செய்தி தான் நகைவேழம்பரே! அவருடைய வலிமை உங்களையே தளரச் செய்து விட்டதென்று ஒப்புக் கொள்கிறீர்கள். அவருடைய கைகளை உணர்விழக்கச் செய்வதற்கு என்னாலும் முடியாது. என் பாட்டனாலும் முடியாது என்று என்னிடமும் மறுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த இரவு நேரத்தில் நமக்குள் வீண் விவாதம் எதற்கு? நீலநாக மறவரை வீழ்த்துவதற்கு மறைமுகமாக ஏதாவது செய்ய இயலுமா என்று நிதானமாகச் சிந்திக்கலாம். இப்போது நீங்கள் உணவுக் கூடத்துக்குச் சென்று பசியாறிவிட்டு நிம்மதியாகப் போய் உறங்குங்கள் என்று ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி நகைவேழம்பரை உறங்க அனுப்பியிருந்த பெருநிதிச் செல்வர் தம்முடைய உறக்கத்தை இழந்திருந்தார்.

இந்த மாளிகையையும் உங்களையும் இங்கு குவிந்து கிடக்கும் செல்வத்தையும் அழித்தொழித்துவிட்டுப் போய்க் காவிரியில் தலைமுழுக வேண்டும்போல் அவ்வளவு ஆத்திரத்தோடு வந்திருக்கிறேன் என்று நகைவேழம்பர் குமுறலோடு கூறியிருந்த சொற்களை நினைத்து நினைத்துக் கொதிப்படைந்தார். நச்சுப் பாம்பு வளர்ப்பது போல் நகை வேழம்பரை வளர்த்ததின் பயன் தம் மேலேயே அந்த நஞ்சு பாய்ந்து விடுமோ என்று அஞ்சுகிற நிலைக்கு இன்று வந்திருப்பது அவருக்குப் புரிந்தது. இந்த நிலைக்கு ஒரு முடிவு கண்டு இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டுமெனத் துணிந்துவிட்டார் பெருநிதிச் செல்வர்.

இத்தனை ஆண்டுகளாகத் தம்மிடமிருந்து அவரும், அவரிடமிருந்து தாமும் விலகியோ, பிரிந்தோ செல்ல முடியாமல் இருவரையும் பிணைத்துப் பின்னியிருந்த அந்தரங்கம் உடைந்து வெளிப்பட வேண்டிய காலம் நெருங்கிவிட்டதோ என்ற பயமும், நடுக்கமும் இன்று அவருக்கு ஏற்பட்டன. பெருநிதிச் செல்வர் தமது அந்தரங்க மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாகத் தனிமையில் நடந்து கொண்டே சிந்தித்தார். அவருடைய நெற்றி யில் வியர்த்தது. இடையிடையே ஊன்றுகோலைப் பற்றியிருந்த கை பிடியை இறுக்கியது. சிந்தனையில் ஏதோ ஒரு முடிவை ஊன்றிப் பதித்துக் கொள்வதைப் புறத்தே காட்டுவதுபோல் நடந்து கொண்டிருக்கும் போதே சில இடங்களில் வேண்டுமென்றே ஒசையெழும்படி ஊன்று கோலை அழுத்தி ஊன்றினார் அவர். வேகமாகக் கால்கள் நடந்தபோது சிந்தனை மெதுவாகவும், சிந்தனை விரைந்த போது கால்கள் மெதுவாகவும் அவர் நடந்த விதமே சிந்தனையின் சுறுசுறுப்பையும், துவண்ட நிலையையும் மாறிமாறிப் புலப்படுத்தின.

அரை நாழிகைக்குப் பின் நமது அந்தரங்க மண்டபத்துக்குள்ளிருந்து அவர் வெளியேறினபோது உறுதியான திட்டத்துடன் புறப்படுகிறவரைப் போலக் காட்சியளித்தார். அந்த உறுதி புலப்பட ஊன்றுகோலை இறுகப் பற்றி அழுத்தி ஊன்றி நடந்து மாளிகையின் உணவுக் கூடத்தை அடைந்தார். அவர் உணவுக் கூடத்தில் நுழைந்த அதே நேரத்தில் அவருக்குக் கொடுக்க வேண்டிய பால் நிறைந்த பொற்கலத்தோடு பரிசாரகர் எதிர்ப்பட்டார். பச்சைக் கருப்பூரம், ஏலம் முதலியனவும், பருகுவதற்குச் சுவையூட்டும் பிற பொருள்களும் இட்டுக் காய்ச்சப் பெற்ற பால் மணம் பரப்பியது.

மாளிகையின் தலைவரே எதிரில் வருவதைக் கண்டு பரிசாரகர் வணக்கமாகத் தயங்கி நின்றார். அந்த நேரத்தில் அவரை அங்கே கண்டதனால் பரிசாரகரின் மெய்யில் ஏற்பட்ட நடுக்கம் கைகளிலும் கைகளில் ஏந்தியிருந்த பொற்கலத்திலும், பொற்கலத்தில் நிறைந்திருந்த பாலிலும் கூடத் தோன்றியது.

நகைவேழம்பர் உண்பதற்கு வந்திருந்தார் அல்லவா?” என்று பெருநிதிச் செல்வரிடமிருந்து கேள்வி பிறந்தபோது, “ஆம்! இப்போதுதான் உணவை முடித்துக் கொண்டு சென்றார். அவருக்கு உணவு பரிமாறி முடித்ததும்தான் உங்களுக்குப் பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு புறப்பட்டேன் என்று பரிசாரகர் கூறிய மறுமொழியிலும் பதற்றமிருந்தது.

வயது மூத்த அந்தப் பரிசாரகரின் முகத்தையே உற்று நோக்கியபடி சில விநாடிகள் அமைதியாக நின்றார் பெருநிதிச் செல்வர். பரிசாரகர் ஒன்றும் புரியாமல் திகைத்து மேலும் நடுங்கினார்.

பாலைக் கீழே வைத்துவிட்டு வா.”

பரிசாரகர் பாலைக் கீழே வைத்துவிட்டு பெருநிதிச் செல்வரைப் பின்தொடர்ந்து நடந்தார். இருவரும் அந்தரங்க மண்டபத்தை அடைந்து கதவைத் தாழிட்டுக் கொண்ட பின்னும் பயந்த குரலில் இரகசியம் பேசுவது போல் பரிசாரகரிடம் ஏதோ காதருகில் பேசினார் பெருநிதிச் செல்வர். அவர் கூறியதைக் கேட்டு பரிசாரகரின் முகம் வெளிறியது. பேயறை பட்டதுபோல் பதில் சொல்லத் தோன்றாமல் மருண்டு நின்றார் பரிசாரகர்.

இதைச் செய்ய இத்தனை தயக்கமா உனக்கு?” என்றார் பெருநிதிச் செல்வர்.

 

மிகவும் கசப்பான காரியத்தைச் செய்யச் சொல் கிறீர்களே!”

கசப்பும் அறுசுவைகளில் ஒன்றுதான்.”

இருக்கலாம்... ஆனால்... இப்போது நீங்கள் செய்யச் சொல்வது எல்லை மீறிய கசப்பாயிருக்கிறதே?”

எல்லை மீறிய கசப்புக்குச் சுவைகளில் இட மில்லையோ?”

இடமிருக்கிறது! நஞ்சு என்ற பெயரில்...”

எல்லை மீறிய கசப்புடன் பழகத் தொடங்கிவிட்டவர்களுக்கும் எல்லை மீறிய சுவையை அளிக்க வேண்டியது தானே? போ, போய் நான் சொன்னபடி செய்துவிட்டு நிம்மதியாய்த் துாங்கு.”

ஒருநாளுமில்லாத வழக்கமாய் இன்று நான் அவருக்குப் பால் கொண்டு போய்க் கொடுத்தால் சந்தேகம் ஏற்படுமே? அந்த மனிதருடைய முகத்துக் கண் ஒன்றாயினும் சிந்தனைக் கண்கள் மிகுதியாயிற்றே?”

பயப்படாதே. பழியை என் தலையிற் போட்டுவிடு. நான் கொடுத்தனுப்பியதாகப் பாலை அவரிடம் கொடு. வாங்கிக் கொள்வார். காரியம் முடிந்ததும் வந்து சொல். கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய்ப் புலிக் கூண்டிலே தள்ளிவிடலாம்.”

பெருநிதிச் செல்வரின் இந்தக் கட்டளையை மீற முடியாமலும், மீறினாலும் தம் கதி என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பரிசாரகர் பாலில் மயக்கமூட்டி உயிரிழக்கச் செய்யும் நச்சு மருந்தைக் கலந்து கொண்டு நகைவேழம்பர் இருக்கும் பகுதியை நோக்கி நடந்தார்.

அவர் பாலை எடுத்துக் கொண்டு போகிறாரா, இல்லையா என்பதைப் பெருநிதிச் செல்வர் மற்றோர் இடத்தில் மறைவாக வந்து நின்று கண்காணித்துக் கொண்டார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த பரிசாரகரை எதிர் கொண்டு சந்தித்துஎன்ன ஆயிற்று என்று அடக்க முடியாத ஆவலோடு கேட்டார்.

நகைவேழம்பர் பொற்கலத்தோடு பாலை வாங்கி வைத்துக் கொண்டு, உங்களுக்கு நன்றியும் தெரிவிக்குச் சொன்னார். சிறிதும் சந்தேகம் கொண்டதாகுத் தெரியவில்லை. இன்னும் சில விநாடிகளில் பருகிவிடுவார் என்று பரிசாரகரிடமிருந்து பதில் வந்தது.

அங்கே வேறு யாராவது உடனிருந்தார்களா?”

அந்நியர் யாருமில்லை. வழக்கமாக அவருடைய பகுதியில் காவலுக்கு இருக்கும் காவலன் மட்டும் இருந்தான்.”

 

நல்லது! நீ உறங்கப் போ. இப்படி ஒரு பெரிய காரியத்தை இன்றிரவு சாதித்ததாக நினைத்துக் கொண்டே தூக்கத்தை விட்டுவிடாமல் உடனே மறக்கப் பழகிக் கொள். நாளைக்குப் பொழுது விடிந்ததும்நகைவேழம்பர் எங்கே?’ என்று யாராவது கேட்டால் பதறாமல் நீயும் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்க முற்படுகிற துணிவையும் பெற்றுக் கொள் என்று சொல்லிக் கொடுமை தோன்றச் சிரித்தார் பெருநிதிச் செல்வர்.

அப்போது நள்ளிரவுக்கு மேலும் சிறிது நாழிகை ஆகியிருந்தது. பெருமாளிகையின் எல்லா மாடங்களிலும் தீபங்கள் அணைக்கப் பெற்று இருள் சூழ்ந்திருந்தது. பெருநிதிச் செல்வர் தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான சில ஊழியர்களோடு நகைவேழம்பர் படுத்திருந்த பகுதிக்குச் சென்றார். இருண்டு போயிருந்த அந்தப் பகுதியில் மயான அமைதி நிலவியது. அந்த இருளின் நடுவே திசைக்குத் திசை, மூலைக்கு மூலை நகைவேழம்பரின் கோரமான முகம் தோன்றிஎன்னை இப்படியா செய்தாய் என்று பயங்கரமாக அலறுவதுபோல் பெருநிதிச் செல்வர் பிரமை கொண்டார். அவரும் அவருடன் துணைக்கு வந்திருந்த ஊழியர்களும், இருளில் தட்டுத் தடுமாறி நடந்து நகைவேழம்பரின் கட்டிலை நெருங்கினார்கள். கட்டிலுக்கு அருகில் எங்கிருந்தோ சிறகடித்துப் பறந்த வெளவால் எழுப்பிய ஓசையைச் செவியுற்று இயல் பான பயத்தின் காரணமாக நடுங்கிப் பின்புறம் நகர்ந்தார் பெருநிதிச் செல்வர். வியர்வையால் சொட்டச் சொட்ட நனைந்திருந்த அவருடைய பெரிய உடலின் சிறிய இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. கை, கால்கள் நடுங்கின. காலடியில் பரிசாரகர் பால் கொண்டு வந்திருந்த பொற்கலம் இடறியது. உதறல் எடுத்து வலுவிழந்திருந்த கை விரல்களால் அவர் கட்டிலில் தடவினார். பொற்கலத்து நச்சுப் பாலைப் பருகியிருந்த உடல் கட்டிலில் தாறுமாறாக உணர்விழந்து கிடந்தது. போர்வையை இழுத்து அந்த உடலைத் தலை முதல் கால்வரை மூடினார் பெருநிதிச் செல்வர்.

ஒற்றைக் கண்ணும் மூடி விட்டது என்று பயத்தினாற் குழறும் குரலில் உடனிருந்தவர்களிடம் சிரிக்க முயன்று கொண்டே கூறினார் அவர். சிரித்துக் கொண்டே கூற முயன்றாரே தவிரச் சிரிக்கும்போது தேகமே பற்றி எரிவது போல் வெம்மையுற்றது. தன்னுடைய சிரிப்பைச் சாடுவதைப் போல் வேறொரு பயங்கரச் சிரிப்பும் அந்த இருட்டில் எங்கிருந்தோ ஒலிப்பதாகக் கற்பனை செய்து கொண்டு தவித்தது அவர் மனம். கொடுமையும், சூழ்ச்சியும், அளவற்றுப் புரியும் திறமை வரம்பும் கடந்து தம் உடம்பிலும், மனத்திலும் இயல்பாக எவ்வளவு கோழைத்தனம் கலந்திருக்கிறது என்பதை அந்த இருட்டில் அவர் புரிந்து கொண்டார்.

கட்டிலை இப்படியே தூக்கிக் கொண்டு போய்ப் பாதாள அறையில் புலிக் கூண்டுகளுக்கு நடுவில் வையுங்கள் என்று உடன் வந்திருந்த ஊழியர்களுக்குக் கட்டளையிட்டார் அவர். அச்சத்தினால் தன்னியல்பான ஒலியும் கம்பீரமும் அவருடைய குரலிலிருந்து பிரிந்து போயிருந்தன. ஊழியர்கள் அவருடைய கட்டளையைச் செய்ய முற்பட்டனர். இருட்டில் கட்டில் தூக்கப் பெற்றுப் புறப்பட்டது.

இனிமேல் இந்தப் பகுதி பகலிலும் இப்படி இருண்டு கிடக்க வேண்டியதுதான். அந்தப் பாவியின் ஆவி குடியிருக்கிற இடத்துக்கு ஒளி வேறு வேண்டுமா?” என்று தனக்குத்தானே கூறிக் கொள்வதுபோல் அவர் இரைந்து கூறியபோது மீண்டும் அதே பேய்ச் சிரிப்பு ஒலிப்பதாக அவருடைய மனம் கற்பனை செய்தது. கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனவர்களைப் பின் தொடர்ந்து பெருநிதிச் செல்வரும் பாதாள அறைக்குச் சென்றார். அவருடைய முன்னேற்பாட்டின்படியே அங்கே தீப்பந்தங்கள் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன.

வாலைச் சுழற்றி அனல் விழி காட்டி உறுமும் புலிகளின் கூண்டுகளுக்கு நடுவே போர்த்தப்பட்டிருந்த உடல் கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. “என் தலையில் சுட்ட செங்கல்லை ஏற்றி ஊர் சுற்றிவரச் செய்வதாகத் திமிரோடு பேசினாயே! இப்போது திமிர் நிறைந்த உன் உடலின் சதையைக் கிழித்து விளையாடும் புலிகளைக் கண்டு நான் வெற்றிச் சிரிப்புச் சிரிக்கப் போகிறேன் பார் என்று கட்டிலை நோக்கி யாரும் எதிர்ப்பதற்கு இயலாத அறைகூவல் விடுத்தார் பெருநிதிச் செல்வர்.

கட்டிலைச் சுமந்து வந்தவர்கள் மேலும் அவரிடமிருந்து என்ன கட்டளை பிறக்கப் போகிறதோ என்று எதிர்பார்த்துக் காத்து நின்றனர். மிக விரைவிலேயே அவர்கள் எதிர்பார்த்திருந்த செயலைச் செய்யும்படி பெருநிதிச் செல்வர் அவர்களை ஏவினார்.

போர்வையை விலக்கிவிட்டு உடலைத் தூக்கி மேலேயுள்ள வளையத்தில் தலைகீழாகக் கட்டுங்கள் என்று அவர் கட்டளையிட்ட குரல் ஒலித்து அடங்கு முன் மேலே பாதாள அறைக்குள் வருவதற்கான படியருகிலிருந்து குரூரமானதொரு பேய்ச் சிரிப்பு எழுந்தது.

திகைப்புடனே எல்லாரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். பார்த்தவர்கள் சிலைகளானார்கள். அங்கே முதற்படியில் நகைவேழம்பர் நின்றார். உடனே முன்னால் பாய்ந்து கட்டிலை மூடியிருந்த போர்வையை விலக்கிப் பார்த்த பெருநிதிச் செல்வர் தாம் முற்றிலும் ஏமாந்து போயிருப்பதைப் புரிந்து கொண்டார். கட்டிலில் நகை வேழம்பர் வசிக்கும் பகுதியிற் காவலிருந்த ஊழியனின் உடல் கிடந்தது.

தீட்டிய இடத்திலேயே பதம் பார்க்கிறீர்களே, ஐயா! இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் யாரிடமிருந்து கற்றுக் கொண்டீர்களோ, அவனிடமே சோதனை செய்து பார்க்கத் துணிந்து விட்டீர்களே? இன்றிரவு இப்படி எனக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுமென்பதை நானே எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன். அப்படியே செய்துவிட்டீர்கள். நீங்கள் அன்புடன் அனுப்பிய பொற்கலத்துப் பாலை எனக்குக் காவலிருந்த ஊழியனைக் குடிக்கச் செய்து பார்த்த பின்புதான் உங்கள் நோக்கம் புரிந்தது. இப்போது நான் விரும்பினால் உங்கள் அத்தனை பேருடைய உயிரையும் சூறையாடலாம். இதோ இப்படிச் சிறிது பாருங்கள் என்று கூறிக் கொண்டே தன் கைக்கு எட்டுகிறபடி இருந்த புலிக் கூண்டுக் கதவுகளைத் திறப்பதற்குரிய இரும்புச் சங்கிலியைப் பிடித்துக் குலுக்கினார் நகை வேழம்பர். அப்படிக் குலுக்கியபோது அந்தச் சங்கிலி குலுங்கியதாலும் அவருடைய சிரிப்பினாலும் சேர்ந்து எழுந்த விகார ஓசை பாதாள அறையில் பயங்கரமாக எதிரொலித்தது. அவர்களுடைய உயிர்கள் எல்லாம் அவர்களை வெறுக்கத் தொடங்கிவிட்ட நகைவேழம்பருடைய கையில் இருந்தன.

-------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

16. தாயின் நினைவு

 

தரையில் நீர்த்துளி விழுவதற்கு முன் மண்ணுலகத்து வண்ணமும் சுவையும் கலவாத மேக மண்டலங்களிலேயே அவற்றைப் பருகும் சாதகப் புள்ளைப்போல் விசாகையின் ஞானம் உலகத்து அழுக்கையெல்லாம் காணாத பருவத்தில், முன் பிறவி கண்ட தொடர்பினால் அவளுக்கு வாய்த்த தென்பதை உணர்ந்தபோது இளங்குமரன் அவளைத் தவப்பிறவியாக மதித்துக் காணத் தொடங்கினான். அத்தகைய மதிப்பு அவள்மேல் ஏற்பட்டதனால்தான். இந்திர விகாரத்துத் துறவியிடம் தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதைப் பற்றி அவள் குறிப்பிட்டபோது அவன் மனம் குன்றி நாணமடையும்படி நேர்ந்தது. சுரமஞ்சரியிடம் குன்றாமல் வளர்ந்திருந்த அவனுடைய அதே மனத்தின் இறுமாப்பு விசாகையிடம் குன்றித் தளர்ந்ததோடன்றிப் பக்தியாகவும் மாறியிருந்தது.

விசாகையின் கதை தனக்குத் தெரிய வேண்டியது அவசியம் என்று நாங்கூர் அடிகள் வற்புறுத்திக் கூறியிருந்த காரணத்தை இப்போதுதான் இளங்குமரன் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. மற்போர்களில் எதிர்த்து வந்தவர்களை முதுகுக்கு மண்காட்டி வென்றதற்காகவும், இளவட்டக் கற்களைத் தூக்கியதற்காகவும், குறிதவறாமல் அம்பு எய்ததற்காகவும், பெருமைப்பட்ட நாட்களை நினைவின் அடிமூலையிலிருந்து புரட்டிக் கொணர்ந்து இன்று எண்ணினால் அவை சிறுமை நிறைந்தவையாகத் தோன்றின. வேறு பெரிய செயல்களைச் செய்வதற்குக் கையாலாகாத காலத்தில் செய்த சிறுபிள்ளைச் செயல் களாக நினைத்துக் கொள்ள முடிந்ததே தவிர, இன்று அவனாலேயே அவற்றை மதிக்க முடியவில்லை.

 

ஞானப் பசியோடு திருநாங்கூருக்கு வந்த அன்றே அவன் மனத்தில் மதிப்பிழந்திருந்த அந்தப் பழம் பெருமைகள், விசாகை என்னும் புதுமையை அறிந்தபின் இன்னும் மதிப்பிழந்தன. நீண்ட சாலையில் பார்வைக்குள் பிடிபடாத தொலைவுக்குச் சென்றுவிட்ட உருவங்களைப் போல் அவை மனத்திலிருந்தே விலகலாயின.

இனி எதிர்வரும் காலத்தைப் பற்றி அவன் மனத்தில் எழுகின்ற கற்பனைகள் ஓங்கித் தொட முயன்று கொண்டிருந்த உயரம் வேறுவிதமாக இருந்தது.

உலகெங்கும் உள்ள பேரறிஞர்கள் ஒன்று கூடி வரிசையாய் - அந்த வரிசைக்கு முடிவே தெரியாமல் - நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள் அப்படி நிற்பதால் நின்றபடியே தானாக நிறுவிக் கொண்ட வீதி ஞான வீதியாகி இளங்குமரனின் கண்களுக்குத் தோன்றுகிறது. வீதியின் நடுவில் நின்று இரு புறமும் பார்க்கிறான் அவன். அவனுடைய வலது கையில் ஞானக்கொடி அசைந்தாடுகிறது. அந்த வீதியின் நெடுமை அவன் மனத்தில் மலைப்பை உண்டாக்குகிறது. வீதியின் இருபுறமும் ஒளிமயமாய் நிற்கும் ஞானி களுக்கு முன்னால் ஒவ்வொன்றாய் நாவல் மரக்கிளை ஊன்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஞானியின் கையிலும் அந்த ஞானத்தின் வெற்றிச் சின்னம்போல் ஒரு கொடியும் காட்சியளிக்கிறது. அவர்களோடெல்லாம் அறிவு வாதம் புரியவேண்டுமென்று இளங்குமரனுக்கு ஆசையாயிருக்கிறது.

வாதிட்டு வென்றபின் அத்தனை பேருடைய கொடிகளையும் வீழ்ச்சியுறச் செய்து நாவற் கிளைகளையும் பறித்து எறிந்துவிட்டு, நாவலோ நாவல் என முழங்கிக் கொண்டே தான் அந்த வீதியின் முடிவு தெரிகிறவரை நடந்து சென்றாக வேண்டுமென்று இளங்குமரனுக்கு ஆசையாயிருந்தது, அதே சமயத்தில் தனக்கு அவ்வளவு சக்தியிருக்கிறதா என்ற பயமும், தயக்கமும் தடையாயிருக்கின்றன. ஆனால் மனமோ, ‘துணிந்து முன்னால் நடந்து போ என்று தூண்டுகிறது.

அன்று அந்த மாலை வேளையில் திருநாங்கூர் பூம்பொழிலின் தனிமையான பகுதி ஒன்றில் அமர்ந்து இளங்குமரன் இப்படித் தன் எதிர்காலத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தபோது தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த விசாகை அவனிருந்த நிலையைக் கண்டு அவனிடமே கேட்டாள்.

எந்தக் கோட்டையைப் பிடிப்பதற்கு இவ்வளவு ஆழமான சிந்தனையோ?”

சிறிது நேரத்திற்குப் பின் இளங்குமரனிடமிருந்து இதற்குப் பதில் கிடைத்தது.

ஞானக் கோட்டையைப் பிடிப்பதற்கு.”

பெரிய ஆசையாக அல்லவா இருக்கிறது இது?”

மன்னிக்க வேண்டும் அம்மையாரே! ஆசைகளை எல்லாம் மிக எளிதாக நீக்கிவிட்டு வந்திருக்கிற உங்களிடம் ஆசையைப் பற்றிச் சொல்வதற்காகக் கூசுகிறேன் நான்.”

அப்படியில்லை, கூசாமல் சொல்லுங்கள். இப்போது நீங்கள் கூறியது புதுமையான ஆசையாகத் தோன்றுகிறதே!” என்றாள் விசாகை.

இளங்குமரன் தன்னுடைய கற்பனையில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் இலட்சியத்தைத் தயங்கிய மொழிகளால் விசாகைக்குச் சொன்னான். அதைக் கேட்டு அவளுடைய முகம் அதில் ஏற்கெனவே அளவற்று நிறைந்திருக்கும் புனிதத் தன்மையே மேலும் பெருகினாற் போல் மலர்ந்தது. அவள் சிரித்தவாறே அவனை நோக்கி வினாவினாள்:

உங்களுடைய இந்த ஆசையை யார் கேட்டால் மெய்யான பெருமகிழ்ச்சி ஏற்படுமென்பதை சொல்லட்டுமா?”

ஏன்? அப்படியானால் உங்களுக்கு மகிழ்ச்சி தர வில்லையா என்னுடைய இந்த ஆசை இளங்குமரன் அவளிடம் பதிலுக்குக் கேள்வி தொடுத்தான்.

ஞானக் கோட்டையைப் பிடிக்கும் உங்களுடைய ஆசையைக் கேட்டு நானும், அடிகளும், எங்களைப் போன்ற பிறரும் அடைய முடியாத மகிச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சியை வேறொருவர்தான் அடைய முடியும்

யார் அவர்?”

உங்களைப் பெற்று உலகுக்கு அளித்த தாய்.

 

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.’

 

என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுடைய இந்த ஆசையை அறிந்து உலகம் உங்களைச் சான்றாண்மை உள்ளவராக ஏற்றுப் புகழ்வதை உங்கள் தாய் கேட்க வேண்டும். உங்களைப் பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியை நீங்கள் புகழைப் பெறுகிற போது உங்கள் அன்னை ஒருத்தியால்தான் அடைய முடியும்..!”

இளங்குமரன் திருநாங்கூருக்கு வந்ததிலிருந்து எந்தக் கலக்கத்தை அடையாமல் மறந்திருந்தானோ, அந்தக் கலக்கத்தை விசாகை நினைவூட்டி விட்டாள். அவளுக்கு மறுமொழி கூறத் தோன்றாமல் கண்கலங்கினான் அவன். அவனுடைய கலக்கத்தை விசாகையும் கவனித்தாள்.

ஏன் இப்படிக் கண் கலங்குகிறீர்கள்?”

கண் கலங்காமல் வேறென்ன செய்வது? என்னைப் பெற்று மகிழ்ந்தவளைப் பார்த்தும் மகிழாத பாவி நான்.”

இளங்குமரன் தாயில்லாப் பிள்ளையாக வளர்ந்திருப் பானோ?’ என்று நினைத்தாள் விசாகை. அதை அவனிடம் அப்போது கேட்டால் அவனுடைய கலக்கம் அதிகமாகுமோ என்றெண்ணிக் கேட்காமல் அடக்கிக் கொண்டாள்.

உங்கள் தாயைப் பற்றி உங்களுக்கு நினைவுண்டாக்கியது இப்படி ஒரு துயர விளைவைத் தரும் என்பது தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன் என்று மன்னிப்பைக் கோரும் குரலில் கூறினாள் விசாகை. அதற்கும் இளங்குமரனிடமிருந்து பதில் இல்லை.

அம்மா உன்னைக் காணும் மகிழ்ச்சியை உனக்கு அளிக்காமல், காணவில்லையே என்ற துயரத்தையே மகிழ்ச்சித் தாகமாகப் பெருக்கிக் கொண்டிருக்கிறாயே!” என்று தாயை எண்ணி ஏங்கினான் இளங்குமரன்.

அந்த நிலையில் இளங்குமரனைத் தனிமையில் விட்டுச் செல்வதே நல்லதென்றெண்ணி விசாகை அகன்றாள்.

மனம் கலங்கி வீற்றிருந்த இளங்குமரன் விசாகை சென்றதை அறியாமல் அவள் அங்கிருப்பதாகவே எண்ணி ஏதோ சொல்லத் தலை நிமிர்ந்தபோது நேர் எதிர்ப்புறம் பூம்பொழிலின் வாயிலில் முல்லையும், கதக்கண்ணனும் நுழைந்ததைக் கண்டான். அவன் விழிகளில் வியப்பு மலர்ந்தது.

--------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

17. பயங்கர நண்பர்கள்

 

அப்போது அந்த பாதாள அறையில் நிலவிய சூழ்நிலையில் கூண்டுக்குள் இருந்த புலிகளைக் காட்டிலும் கொடுமையான புலியாக மாறிப் பாய்வதற்கு முற்பட்டுக் கொண்டிருந்தவர் நகைவேழம்பர்தாம் என்பதை அங்கே இருந்த எல்லாரும் உணர்ந்தார்கள். எல்லாருடைய மனத்திலும் அடுத்த கணம் என்ன நிகழப் போகிறதோ என்ற பயம் தான் நிரம்பியிருந்தது. புலிக் கூண்டுகள் அமைந்திருந்த இடத்துக்கு மேலே முதற்படியில் தோன்றிப் பேயாக நகைத்துக் கொண்டிருந்த நகைவேழம்பருடைய கைகளில் அங்கே நின்ற அத்தனை பேருடைய உயிர்களும் இருந்தன. புலிக்கூண்டுகளைத் திறப்பதற்கு இணைத்திருந்த சங்கிலியை அவர் இழுத்தால் கீழே அந்தக் கூண்டுகளுக்கு நடுவே நிற்பவர்களின் கதி அதோகதிதான்.

தனக்குரிய செல்வங்களாலே கிடைக்கிற எல்லா வகைப் பெருமைகளையும் மீறி எந்தச் செல்வமும் இல்லாத அரைக் குருடன் ஒருவனுக்கு இரகசியங்களால் அடிமைப்பட்டுக் கிடந்து தவித்த பெருநிதிச் செல்வர்அந்த இரகசியங்களையும் அவற்றை மனத்தில் சுமந்து கொண்டிருந்தவனையும் சேர்த்து ஒழித்து விட்டோம் என்று திம்மதியோடு தலை நிமிர்ந்தபோதுநான் ஒழிய வில்லை என்று முன் வந்து நின்று மீண்டும் அவர் தலையைக் குனியச் செய்துவிட்டார் நகைவேழம்பர்.

தாம் இரையிட்டு வளர்த்த புலிகளுக்கு இன்று தாமே இரையாகும் நிலை வந்துவிட்டதே என்று மெய்நடுங்க நின்றார் பெருநிதிச் செல்வர். அவரை விளித்து நகை வேழம்பர் சிறிதும் நெகிழ்ச்சியில்லாத குரலில் பேசினார்:

நஞ்சு கலந்த பாலைப் பருகி நான் அழிந்தொழிந்து போயிருப்பேன் என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். உங்கள் பெருமை நீடிக்க வழியின்றி நானே முன்னால் வந்து நிற்கிறேன். ஒன்று நாமிருவரும் நண்பர்களாயிருக்க வேண்டும். அல்லது பகைவர்களாயிருக்க வேண்டும். ஆனால் நல்லதற்காகவோ, கெட்டதற்காகவோ, எதற்கென்று தெரியவில்லை; இப்போது நாமிருவருமே எப்படியிருக்கிறோமோ அப்படி இதற்கு முன்பு இருக்க நேர்ந்ததில்லை. நட்பின் நெருக்கத்தைக் குறித்து உயிர் நண்பர்கள் என்று சொல்வார்கள். ஆனால் நீங்களும் நானுமோ, இப்போது ஒருவருக்கொருவர் உயிரைக் கவர்ந்து கொள்ளத் துணிந்துவிட்ட நண்பர்களாயிருக்கிறோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நெருக்கத்தில் முன்பு இந்த நட்புத் தொடங்கிற்று என்பதை நீங்கள் மறந்து போயிருக்கலாம். இப்போது உயிர்களை அழிக்கும் ஆத்திரத்தில் முடிவதற்கிருக்கிறது. இந்த உறவு இப்படித்தான் முடிய வேண்டுமா, அல்லது வேறுவிதமாகவும் முடிய இடமிருக்கிறதா என்று சிந்திக்க வேண்டிய விநாடிகளில் நிற்கிறோம் நாம்...”

பெருநிதிச் செல்வர் தலைநிமிர்ந்து எதிராளியைப் பார்ப்பதற்கு வேண்டிய சுறுசுறுப்போ, ஆர்வமோ, சிறிதுமில்லாமல் சோர்ந்து போயிருந்தாலும் இந்தப் பேச்சைக் கேட்டதும் அடிபட்ட நாகம் படத்தைத் தூக்குகிறாற் போலத் தலைநிமிர்ந்து நகைவேழம்பரைப் பார்த்தார். பின்பு இயல்பாகப் பேசும் பேச்சின் விரைவு இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையாகத் தயங்கித் தயங்கி நிறுத்திக் கேட்டார்.

நீங்களும் நானும் சிந்திக்க வேண்டிய விநாடிகளில் இவர்களைப் போன்ற ஊழியர்களும் உடனிருக்க வேண்டியது அவசியம்தானா?”

அவசிய அநாவசியங்களைச் சிந்தித்துச் செயல்படுகிற நிலையில் இப்போது நான் இல்லை. நீங்கள் என்னை அப்படி இருக்கவும் விடவில்லை. ‘என்னைப் போல் ஒருவன் உங்களுக்கு அவசியமா இல்லையா?’ என்று நீங்களே சிந்தித்து உடனடியாக முடிவுகட்டி விட்ட பின் நான் சிந்திக்க என்ன இருக்கிறது? நான் அநாவசியமென்று நீங்கள் தீர்மானம் செய்தபின் நீங்கள் எனக்கு அவசியம் என்று நம்பி என்னை நானே ஏமாற்றிக் கொள்ளலாமா!”

இந்தக் கேள்வியின் பிடியிலிருந்து விடுபட்டுத் தாம் என்ன மறுமொழி கூறுவதென்று தெரியாமல் திகைத்தார் பெருநிதிச் செல்வர். உயிர்ப் பயமும், ஏவலுக்குத் தலை வணங்கும் ஊழியர்களுக்கு முன் இப்படி அவமானப் பட்டுக் கொண்டிருக்கிறோமே என்ற நாணமும் சேர்ந்து அவரை ஆட்கொண்டு அவருக்குப் பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காதபடி ஆக்கியிருந்தன.

பேசவராத உணர்ச்சிகளுக்கும் பேச வேண்டிய சொற்களுக்கும் நடுவே அகப்பட்டுக் கொண்டு அவர் திணறுவதை நகைவேழம்பர் கண்டு கொண்டார். தமக்கும் பெருநிதிச் செல்வருக்கும் இடையே உள்ள நட்பு, பகை, இரகசியங்கள் எல்லாம் ஊழியர்களும் விளங்கிக் கொள்ளும்படி தெரிவது நல்லதல்ல என்பதை அவராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு கையால் சங்கிலியைப் பற்றிக் கொண்டு மற்றொரு கையால் ஊழியர்களை மேலே வருமாறு குறிப்புக் காட்டினார். கிழே பெருநிதிச் செல்வர் நின்ற இடத்திலிருந்து சிறிது விலகி ஒதுங்கி நின்றிருந்த ஊழியர்கள் நகைவேழம்பர் தங்களை மேலே வரச் சொல்லிக் குறிப்புக் காட்டுவதைப் புரிந்து கொண்டாலும் தங்களுக்குப் படியளப்பவராகிய பெருநிதிச் செல்வரின் ஆணையின்றி எப்படி மேலே செல்வதெனத் தயங்கினர். அவர்களுடைய இந்தத் தயக்கத்தைக் கண்டு மேலே நின்ற நகைவேழம்பர் சிரித்தார்.

உங்களுக்குக் கட்டளையிட வேண்டியவரே இப்போது என்னுடைய கட்டளையை எதிர்பார்த்து நிற்கிறார். இந்தச் சமயத்தில் நீங்கள் அவரை எதிர்பார்த்துத் தயங்குவதில் பயனில்லை. நீங்கள் எல்லாரும் வெளியேறினால் நானும் அவரும் பேசிக் கொள்வதற்குத் தனிமை வாய்க்கும்.”

 

நகைவேழம்பர் இப்படிக் கூறிய பின்பும் அவர்கள் தயங்கியபடியே நின்றார்கள். பெருநிதிச் செல்வரே இந்தத் தயக்கத்தைத் தவிர்ப்பதற்கு முன் வந்தவராய், “அவர் சொல்கிறபடியே செய்யுங்கள் என்று ஊழியர்கள் பக்கம் திரும்பி மெல்லக் கூறினார்.

ஊழியர்கள் படியேறி மேலே வந்தனர். “நில்லுங்கள்! நீங்கள் செய்ய வேண்டிய வேலையொன்று மீதமிருக்கிறது என்று அவர்களைத் தடுத்து நிறுத்திக் கீழே வைக்கப்பட்டிருந்த கட்டிலில் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார் நகைவேழம்பர். என்ன செய்ய வேண்டுமென்று கேள்வி தோன்ற ஊழியர்கள் அவர் முகத்தைப் பார்த்தனர். அவருடைய நாவிலிருந்து அளவில் சுருக்கமாகவும் அர்த்தத்தில் பெரிதாகவும் இரண்டே இரண்டு சொற்கள் ஒலித்தன.

வழக்கம் போல் செய்யுங்கள்.”

இதற்குப்பின் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் விரைவுடையனவாகவும், மாறுதல் உள்ளவையாகவும் இருந்தன. நகைவேழம்பர் படிகளில் இறங்கிக் கீழே வந்து தனியாக நின்று கொண்டிருந்த பெருநிதிச் செல்வருக்கு எதிரே கம்பீரமாக நடந்து கொண்டே பேசினார்:

இந்த மாளிகையில் இதே சூழ்நிலையில் நின்று உங்களோடு பேச எனக்கு விருப்பவில்லை. இருவருமே ஒருவர் மேல் மற்றவருக்கிருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம். நீங்கள் என்னைக் கொல்லவும் துணிந்து விட்டீர்கள் என்பது எனக்கே புரிந்துவிட்டது. இனிமேலும் நான் உங்களை நம்ப வேண்டுமானால் நாம் நம்முடைய நம்பிக்கைகள் பிறந்து வளர்ந்த இடத்துக்குப் போக வேண்டும். நீங்கள் இனிமேல் என்னை நம்புவீர்களா என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு சோதனைப்போல் உங்களை இப்போது அழைக்கிறேன். பூம்புகார் நகரம் முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடக்கிற இந்த நேரத்தில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் தனியாக என்னோடு நீங்கள் வரவேண்டும். தேரிலோ குதிரையிலோ வரக்கூடாது. என்னைப்போல் நடந்துவர வேண்டும்.”

எங்கே வரவேண்டும்? எதற்காக வரவேண்டும்? வேண்டியதை இங்கேயே பேசலாமே! நாமிருவரும் தனியாகத்தானே இருக்கிறோம்.”

முடியாது இது உங்களுடைய எல்லை. இங்கே நான் எந்த விநாடியும் துன்புறுத்தப்படலாம். இன்னும் உங்கள் மேல் பழைய நம்பிக்கை எனக்குத் திரும்பவில்லை. அந்த நம்பிக்கை திரும்புவதும் திரும்பாததும் நீங்கள் என்னை நம்புகிறீர்களா, இல்லையா என்பதைப் பொறுத்தது.”

நான் உங்களை நம்புகிறேன் என்பதை மீண்டும் எப்படி நிரூபிக்க முடியும்?”

ஏன் முடியாது? என் அழைப்புக்கு இணங்கினாலே என்னை நம்புவதை ஒப்புக் கொண்டாற்போலத்தானே?”

ஒப்புக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள் நகைவேழம்பரே! இந்த நள்ளிரவில் ஒரு துணையுமின்றி வெறுங்கையனாக உங்களோடு வந்தால் நீங்கள் தனிமையில் என்னிடம் எப்படி நடந்து கொள்வீர்களோ என்று நான் சந்தேகப்பட இடமிருக்கிறதல்லவா?”

சந்தேகத்துக்கு இடமிருப்பதைப் போலவே சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவும் இடமிருக்கிறது. சற்று முன் நான் எந்த நிலையில் இருந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களையெல்லாம் கூண்டோடு எமபுரிக்கு அனுப்பும் வாய்ப்பு என் கைகளில் இருந்தது. ஏன் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை? அதுதான் போகட்டும். இப்போது இந்த விநாடியில்கூட நீங்கள் தன்னந்தனியாகத்தான் என் எதிரில் நிற்கிறீர்கள். நான் உங்களை ஏன் விட்டு வைத்திருக்கிறேன்? நம்பிக்கையை உண்டாக்கிக் கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. அதை நீங்கள் செய்ய வேண்டும்.”

என்ன செய்ய வேண்டும் நான்?”

பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். அவநம்பிக்கை கொள்ளாமல் இருக்க வேண்டும். நம்பிக்கை வளர அதுவே போதும்.”

பெருநிதிச் செல்வர் நகைவேழம்பரின் ஒற்றைக் கண்ணில் அந்த நம்பிக்கையைத் தேடுகிறவர் போல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றார். நகைவேழம்பர் அவருடைய சஞ்சலத்தைக் கண்டு சிரித்தார்.

 

நான் பழைய நாட்களில் நடிகன். முகத்திலும், கண்ணிலும் எந்த உணர்ச்சியின் சாயலையும் என்னால் மறைத்தும், மாற்றியும் காண்பிக்கச் செய்யமுடியும். என் முகத்தையும் கண்ணையும் பார்த்த நீங்கள் ஒன்றும் தெரிந்து கொண்டுவிட முடியாது. என் மனத்தையும் நான் கூறிய சொற்களையும் நம்பினால் என்னோடு வாருங்கள்.”

அவற்றிலும் நடிப்பு இருக்க முடியாதென்பது என்ன நிச்சயம்?”

இப்படி வாதம் புரிந்தால், இதற்குப் பதிலே சொல்ல முடியாது! மறுபடியும் முன்பு சொல்லியதையே திருப்பிச் சொல்கிறேன். நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு ஒரே வழி அவநம்பிக்கைப் படாமல் இருப்பதுதான்.”

நெடுநேரத் தயக்கத்துக்கும், சிந்தனைக்கும் பின்பு பெருநிதிச் செல்வர் அந்த நடுநிசிப் பொழுதில் நகை வேழம்பருடனே தனியாகப் புறப்பட்டுச் சென்றார்.

நடந்து போகும்போது இருவரும் பேசிக் கொள்ள வில்லை. ஒரு காலைச் சாய்த்துச் சாய்த்து நடக்க வேண்டியிருந்ததனால், பெருநிதிச் செல்வர் வேகமாக நடக்க முடியாமல் திணறினார். எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் நகைவேழம்பரைப் பின்பற்றி நடப்பதனால் உண்டான பயம் வேறு அவர் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது. அக நகர எல்லையைக் கடந்து காவிரி கடலோடு கடக்குமிடத்தை நெருங்கி வந்திருந்தார்கள் அவர்கள். மக்கள் பழக்கமே இல்லாத இரவு நேரமாகையினால் பகலில் இயற்கையழகு பொலியும் அந்த இடம் இப்போது பயப்படுவதற்கு உரியதாயிருந்தது. நதிக்கரைப் படுகையில் ஆள் நடந்தால் தோற்றம் மறைந்து போகிற உயரத்துக்கு நாணற்காடு புதர் மண்டியிருந்தது. பஞ்சு பூத்ததுபோல் வெண்மையான நீண்ட நாணற் பூங்கதிர்கள் இருளில் மங்கலாகத் தெரிந்தன. நாணற் புதரில் காற்று ஊடுருவுவதால் உண்டான சரசரப்பு ஓசையும், நீரலைகளின் சப்தமும், விட்டு விட்டு ஒரே சுருதியில் கேட்கிற தவளைக் குரலும், சூழ்நிலையின் பயங்கரத்துக்குத் துணை கூட்டின. ஊளையிட்டுக் கொண்டே நரிகள் புதரில் விழுந் தடித்துக் கொண்டு ஓடுகிற ஓசையும், நதி நீருடன் கரைசரிந்து தணியுமிடத்தில் நீர் நாய்கள் துள்ளும் சப்தமும், அவ்வப்போது எழுந்து அந்தப் பக்கமாக நடப்பவர்களுக்கு அச்சமூட்டிக் கொண்டிருந்தன.

----------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

18. நாணற் காட்டில் நடந்தது!

 

அந்த நாணற் காட்டின் நடுவே பெருநிதிச் செல்வரை அழைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர்.

இங்கே என்ன காரியம்? இவ்வளவு பெரிய காவிரிப் பூம்பட்டினத்தில் நீங்களும் நானும் பேசுவதற்கு இடமில்லயென்றா இங்கே அழைத்துக் கொண்டு வந்தீர்கள்?”

 

மேலே நடப்பதை நிறுத்திவிட்டுச் சந்தேகமுற்ற மன நிலையில் இந்தக் கேள்வியைக் கேட்டார் பெருநிதிச் செல்வர்.

காரியம் இல்லாமலா அழைத்துக் கொண்டு வருவேன்? பயப்படாமல் நடந்து வாருங்கள் என்று உள் நோக்கத்தை வெளிப்படுத்தாத அடங்கிய குரலில் கூறி விட்டு நகைவேழம்பர் மேலே நடந்தார்.

என்னால் நடக்க முடியவில்லை; கால் தளர்ந்து வருகிறது என்று சொல்லிக் கொண்டே மேலே செல்லாமல் நின்று கொண்டார் பெருநிதிச் செல்வர்.

 

மேலே போக வேண்டாம் - போவது நல்லதற்கல்ல என்று அவருடைய மனக்குரல் சொல்லிற்று.

அடடா! நீங்களே இப்படி அதைரியப் படலாமா?” என்று கூறியவாறே அருகில் வந்து பெருநிதிச் செல்வரின் கையைப் பற்றினார் நகைவேழம்பர். அவருடைய கை நடுங்கிக் கொண்டிருந்தது. பிடியை விடுவித்துக் கொண்டு திரும்பி நடக்கலானார் பெருநிதிச் செல்வர். எந்த நினைப்பினாலோ தெரியவில்லை; அவருக்கு நடக்கும்போதே கைகால்கள் நடுங்கின.”

அவசரப்படாதீர்கள்! கொஞ்சம் இப்படித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போகலாம் அல்லவா?” என்று மிக அருகே பின்னாலிருந்து நகைவேழம்பரின் குரல் கேட்டதைத் தொடர்ந்து தம் தோளில் அவர் கை தீண்டித் தடுப்பதையும் பெருநிதிச் செல்வர் உணர்ந்தார்.

அவர் அப்படிப் பார்த்தபோது நகைவேழம்பர் இருந்த கோலம் அவரைச் சிலிர்ப்படையச் செய்தது.

குறுவாளை ஒங்கிக்கொண்டு கொலை வெறியராகப் பாய்வதற்கு நின்று கொண்டிருந்தார் அவர்.

இப்போது இந்த இடத்தில் நான் உங்களைக் கொன்று போட்டால் என்னை ஏனென்று கேட்பாரில்லை...!”

வார்த்தைகளைத் தொடர்ந்து பேய்ச் சிரிப்பு ஒலித்தது. ஓங்கிய வாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாக நகர்ந்தது. பெருநிதிச் செல்வர் தாம் மோசம் போய்விட்டதை உணர்ந்தார்.

கடைசி விநாடி! அவருடைய உயிருக்கும் அந்த வாளின் கூர்மைக்கும் நடுவிலிருந்த காலத்தின் ஒரே ஓர் அற்ப அணு அது. அப்போது ஒர் அதிசயம் நடந்தது. நகை வேழம்பரின் ஓங்கிய கை தானாகவே தணிந்தது, வாளை இடுப்பிலிருந்த உறையிற் சொருகிக் கொண்டு இயல்பாக நகைத்தார் அவர்.

இவ்வளவு பெரிய பயந்தாங்கொள்ளியாக இருக்கிறீர்களே? உங்களைச் சோதனை செய்து பார்த்தேன். உங்களிடம் சேர்ந்திருக்கும் செல்வம் உங்களுக்கு அளித் திருக்கிற தைரியத்தைத் தவிர, உங்களுடைய மனத்தில் உங்களுக்கென்று இயல்பிலே அமைந்திருக்கும் தைரியம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதற்காகவே இப்படிச் செய்தேன். பாவம்! நீங்கள் அநுதாபத்துக்குரியவர். பயப் படாதீர்கள், உங்களை ஒன்றும் செய்துவிட மாட்டேன். ஆனால் ஒன்றைமட்டும் நினைவில் நன்றாகப் பதித்துக் கொள்ளுங்கள். எப்போதாவது என்னுடைய உயிருடன் விளையாட ஆசைப்பட்டீர்களோ, தொலைந்தீர்கள். நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டுமென்று ஆசைப் பட்டால் முதலில் நீங்கள் நன்றியுள்ளவராக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதை மறந்து செயல்படத் தொடங்கினால் முதலில் சாகிற உயிர் என்னுடையதாக இராது" என்றார் நகைவேழம்பர்.

எல்லாவற்றையும் கேட்டபடி பெருநிதிச் செல்வர் குனிந்த தலை நிமிராமல் இருளோடு இருளாக நின்றார். அவர் நின்ற நிலையே எதிரியிடம் மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது.

 

நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் அன்றிரவு அந்த நாணற்காட்டில் ஒருவரையொருவர் சோதனை செய்து கொண்டபின் திரும்பவும் நண்பர்களாக மாற வேண்டிய நிலைதான் ஏற்பட்டது. அவர்களுடைய நட்பிலும் பகையுண்டு. பகையிலும் நட்பு உண்டு. பகை, நட்பு என்னும் நேர் முரணான குணங்கள் அவர்களைப் பொறுத்தவரை நேர்முரணாகவும் இருப்பதில்லை; நேர் நெருக்கமாகவும் இருப்பதில்லை. அவர்களுக்கு நடுவே உறவைப் பின்னியிருந்த இரகசியங்களைப் பொறுத்த அந்தரங்கம் அது.

அன்று அதே இடத்தில் காவிரிப் படுகை மணலில் விடிகிறவரை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பல பழைய சம்பவங்களை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்திக் கொண்டார்கள். ஓர் உண்மையை மனம் நெகிழ்ந்து ஒப்புக் கொண்டார் பெருநிதிச் செல்வர்.

நகைவேழம்பரே! நீங்கள் கூறிய பின்பு என்னுடைய தைரியத்தின் எல்லை எனக்கே புரிகிறது. ஏழடுக்கு மாளிகையையும், செல்வத்தையும், எட்டிப் பட்டத்தையும், ஏவலாட்களையும் விட்டு விலகித் தனியாய் நிற்கும்போது நான் பலவீனமாகி விடுவது உண்மைதான்.”

பலவீனம் எல்லாருக்கும் உண்டு ஐயா! நான் கூட ஒரு சமயம் உங்கள் பெண் சுரமஞ்சரிக்கு முன்னால் நடுங்கி நின்றிருக்கிறேன். அவளுடைய அலங்கார மண்டபத்தில் அவள் தன் தோழியோடு பேசிக் கொண்டிருந்த செய்தி ஒன்றை நான் திரைமறைவிலிருந்து கேட்க முயன்றேன். அவள் அதைத் தந்திரத்தால் கண்டு கொண்டாள். அப்போது நான் தலைகுனிய வேண்டியதாயிற்று. கோழைத்தனத்தால் தலைகுனியவில்லை. ஒட்டுக்கேட்க வேண்டுமென்ற ஆசையால் ஒரு பெண்ணின் அலங்கார மண்டபத்துக்குள் நுழைந்தது தவறுதான் என்று உள்ளுற எனக்கே பயமாயிருந்ததுதான் காரணம். நான் அப்படிச் செய்ததைப் பற்றி நீங்களோ உங்கள் பெண்ணோ என்னைக் கூப்பிட்டுக் கண்டித்திருந்தால் கூட நான் தலை குனியத்தான் செய்வேன். ஆனால் அந்த நாணத்தை நீங்களோ உங்கள் பெண்ணோ என்னுடைய அதைரியமாக நினைத்துவிட்டால் என்னால் பொறுக்க முடியாது.”

நீங்களும் உங்கள் பேச்சும் எப்போதும் புதிராகவே இருக்கிறது.”

இருக்கலாம். ஆனால் பாலில் நஞ்சு கலந்து கொடுப்பதால் அந்தப் புதிருக்கு விடை கிடைத்துவிடாது.”

பார்த்தீர்களா! நண்பரான பின் மறுபடியும் பகையை உண்டாக்கிப் பேசுகிறீர்களே?”

பேச்சில் என்ன இருக்கிறது? நண்பர்களைப் போல் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பகைமையான செயலைச் செய்வதும், பகைவர்களைப் போலப் பேசிக் கொண்டிருந்து விட்டு நட்புக்கான காரியத்தை நடத்துவதும் நமக்குள் புதுமை இல்லையே?” என்று மேலும் ஆழமாக நெஞ்சில் இறங்கும்படி குத்திப் பேசினார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வருக்குச் சுருக்கென்று தைத்தது இந்த வார்த்தை.

நான் வேண்டுமானால் உங்களுக்குச் சத்தியம் செய்து தருகிறேன். பக்கத்திலுள்ள கடலும், காவிரியும் சாட்சியாக நாமிருவரும் இனிமேல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில்லை என்று வைத்துக் கொள்ளலாமே?”

வேண்டவே வேண்டாம். சத்தியம், சபதம் இப்படிப்பட்ட வார்த்தைகளின் பொருளை உங்களாலும் காப்பாற்ற முடியாது. என்னாலும் காப்பாற்ற முடியாது. தொடக்க நாளிலிருந்தே நியாயத்திலிருந்து வெகுதூரம் வழி விலகி வந்துவிட்டோம் நாம். எல்லாரும் நியாயமாகச் செல்கிற வழிக்கு நாம் இனிமேல் திரும்புவதைவிட நாம் வந்துவிட்ட வழிதான் நமக்கு நியாயம் என்று வைத்துக் கொள்வது நல்லது.”

பொழுது புலரும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. இருளில் மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்த நாணற் பூக்கள் வெண்பனிப் பாய் விரித்தாற்போல நெடுந்தொலைவுக்குத் தோன்றின. நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நண்பகல் வானம் போல் இரண்டு பேருடைய முகங்களிலும் எந்த உணர்ச்சியும் அதிகமாகத் தெரியாத அமைதி நிலவியது. நேற்றிரவு இதே நாணற் புதரில் பெருநிதிச் செல்வருடைய முகம் எப்படித் தோன்றி யிருக்கும் என்று நகைவேழம்பர் தமக்குள், கற்பனை செய்து பார்க்க முயன்றார்.

மேலே நடக்க வேண்டிய செயல்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருவரும் எழுந்து நடந்தார்கள். நீலநாக மறவருடைய உதவியால் ஓவியன் தப்பிவிட்டதையும், இளங்குமரனின் சித்திரம் படைக்கலச் சாலையில் பறித்து வைத்துக் கொள்ளப் பட்டதையும், சுரமஞ்சரியின் மணி மாலை ஓவியனிடம் இருப்பதையும் விவரித்துச் சொல்லிக் கொண்டே நடந்தார் நகைவேழம்பர்.

அருட்செல்வ முனிவருடைய தவச்சாலை தீக்கிரையான பின்பு இளங்குமரன் ஆதரவிழந்து போவான் என்று நினைத்தோம். இப்போதோ முன்னைவிடப் பலமான ஆதரவாக நீலநாக மறவரின் துணையில் அவன் இருக் கிறான் என்றார் பெருநிதிச் செல்வர்.

நீலநாக மறவர் மட்டுமில்லை. புறவீதியிலிருக்கும் அந்தக் கிழவர் வீரசோழிய வளநாடுடையாரும் அவர்களையெல்லாம் விடப் பெரிய ஆதரவாக அவனுக்கு உங்கள் பெண் சுரமஞ்சரியும் வேறு இருக்கிறாள் என்று சுரமஞ்சரியின் உள்ளம் இளங்குமரனுக்கு வசப்பட்டிருப்பதையும் நினைவூட்டினார் நகைவேழம்பர்.

அவர்கள் பேசிக்கொண்டே நெய்தலங்கனாலுக்கு அருகே வந்திருந்தனர்.

இனிமேல் சுரமஞ்சரி மாளிகையிலிருந்து வெளியேற முடியாதபடி தடுத்துவிட்டால் நல்லது என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று எங்கோ வேறுபக்கம் பார்க்கத் தொடங்கியிருந்த நகைவேழம்பரைக் கேட்டார் பெருநிதிச் செல்வர்.

இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறாமல், “அதோ காமன் கோவில் வாயிலில் குளக்கரையில் நிற்கிறவர்களைப் பாருங்கள் என்று பெருநிதிச் செல்வரின் கவனத்தைத் திருப்பினார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வர் பார்த்தார்.

இரு காமத்திணையேரியின் கரையில் நீராடிய கோலத்தோடு கையில் காமன் கோவிலில் வழிபடுவதற்குரிய பொருள்களை ஏந்தியவளாய்ச் சுரமஞ்சரியே தன் தோழியுடம் நின்று கொண்டிருந்தாள்.

காமன் கோவில் வழிபாடு யாருக்காகவோ?” என்று மெல்ல சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வருக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருந்தது அந்தச் சிரிப்பு.

-------------

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

19. பவழச் செஞ்சுடர்மேனி

 

ஒலிகள் ஒலியின்மையிலிருந்து பிறக் கின்றன. ஒலியின்மை, ஒலியுண்மையால் உணரப்படுகிறது என்று தருக்க நூற் பாடத்தின் போது அடிகள் தனக்குச் சொல்லியிருந்த உண்மையை நினைத்துக் கொண்டு எதிரே பார்த்தான் இளங்குமரன். முல்லை அவனையே வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டு நின்றாள். அவளுடைய கண்கள் எவ்வளவோ பேசித் தீர்ப்பதற்குத் தவிப்பது தெரிந்தது. ஆனால் வாய் திறந்து எதுவும் பேசாமல் நின்றாள் அவள். இளங் குமரனுக்கும் தான் அவளிடம் என்ன பேசுவதென்று தோன்றவில்லை. வாய் திறந்து பேசுவதைவிடச் சுவை நிறைந்த பேச்சை மெளனத்தினால் பேச முடிந்த சமயங்களும் உண்டு. நீண்ட மெளனத்துக்குப் பின் பிறக்கிற ஒரே ஒரு சொல்லுக்கும் ஆயிரம் சொற்களின் பொருளாற்றல் அமையும். அப்படி ஒரு சொல் தங்களில் யாரிடமிருந்து முதலில் பிறக்கப் போகிறதென்று இருவருமே ஒருவரை யொருவர் எதிர்பார்த்துத் தயங்கிய நிலையில் நின்றார்கள். இருவர் நெஞ்சிலும் கொள்ளை கொள்ளையாக நிறையப் பேச வேண்டும் என்று நினைத்தும், ஒன்றுமே பேச வராததொரு நிலை.

அங்கே பூம்பொழிலில் மலர்ந்திருந்த மாலைப் பூக்களின் நறுமணமெல்லாம் ஒன்று சேர்ந்து உருப்பெற்றுக் கண்ணும், சிரிப்பும், முகமுமாய் எதிரே வந்து நிற்பதுபோல் முல்லை நின்றாள். ஒப்புக்குச் சிறிது நேரம் பேசிவிட்டுக் கதக்கண்ணன் அவர்கள் இருவரையும் தனிமையில் விட்டுச் சென்றிருந்தான். கதக்கண்ணன் இவ்வாறு தங்களை விட்டுச் சென்றிராவிட்டால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதென்று எண்ணினான் இளங்குமரன். முல்லையின் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பராக்குப் பார்ப்பதுபோல் மேலே அண்ணாந்து நோக்கினான் அவன். சிறுசிறு வெண்மணல் திட்டுக்களைப் போல் சரிவு சரிவாய் வானில் மேக அடுக்குகள் மிகுந்தன. அனைத்தை யும் அளாவி நிற்கும் அந்த எல்லையற்ற பெருவெளியிலே சலனத்தைக் காட்டி இயங்குவதுபோலக் கூட்டமாக வெண்ணிறப் பறவைகள் சில பறந்தன. பூம்பொழிலின் வாய்க்கால்களில் நீர்பாயும் ஒலியும், காற்றில் இலைகள் அசையும் ஒரே விதமான சலசலப்பும் தவிர எங்கும் ஒரு நிதானமாகப் பரவி அழகு சேர்க்கும் மாலைப் போதின் மயங்கிய சூழ்நிலை. அங்கே வானுயர வளர்ந்திருந்த நாகலிங்க மரத்தின் பூக்கள் தரையில் உதிர்ந்திருந்தன.

ஒரே நிலையில் கற்சிலை போல் நிற்க இயலாமல் முல்லை பாதங்களை இடம் பெயர்த்து நின்றதனால் சிலம்பொலி கிளர்ந்தது. அந்தச் சிலம்பொலியும் கலைக்கக் கூடாத மெளனத்தை அநாவசியமாகக் கலைத்து விட்டதற்காக அஞ்சுவதுபோல மெல்லத்தான் ஒலித்தது. சிலம்பிலிருந்து பிறந்த ஒலியும் ஒலியிலிருந்து பிறந்த இனிமையும் பரவி அடங்கிய பின் மீண்டும் பழைய மெளனமே நீடித்தது. இலைகளின் அசைவு, நாகலிங்கப் பூவின் தெய்விக நறுமணம், நீரின் ஒலி, மேகக்கணங்கள் நகர்ந்து செல்லும் வானம், காலங்கணங்கள் நகர்ந்து செல்லும் பூமி, நகராமல் நீடிக்கும் பெரிய மெளனம்.

முல்லை பொறுமையிழந்தாள். நீண்ட மெளனத் துக்குப் பின் பிறக்கும் சொற்கள் அவளுடையவையாக இருந்தன.

வானத்திலும் மேகங்களிலும் யாரும் கால் கடுக்க நின்று கொண்டிருக்கவில்லை. நீங்கள் பார்க்க வேண்டிய பேதைப் பெண் இங்கே பூமியில்தான் உங்கள் எதிரே நின்று கொண்டிருக்கிறாள்.”

இந்தச் சொற்களைக் கேட்டு இளங்குமரனின் கவனம் திரும்பியது. அவன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். சிரித்தான்.

பூமியில் இருப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நீ சொல்கிறாய். அதற்கு மேலே உள்ளவற்றையுமே கண்டு உணர நான் விரும்புகிறேன்.”

விரும்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்காக என்னை மறந்துவிட முயலாதீர்கள்.”

முயற்சி செய்வதனால் உலகில் எந்த நினைவையும் மறந்துவிட முடியாது. முல்லை! மறக்க வேண்டும் என்று முயல்வதனாலேயே மறக்க இயலாதபடி நினைவில் ஆழமாகப் பதிந்துகொள்ளும் நினைவுகளும் இருக்கின்றன. ஒன்றை ஒழுங்காகவும், தொடர்பாகவும் நினைக்கத்தான் முயற்சி வேண்டும். பிடிவாதமாக ஒரு பொருளைத் தொடர்ந்து நினைப்பதை முனிவர்கள் தவம் என்கிறார்கள். மனிதர்கள் சிந்தனை என்கிறார்கள். மறதி என்பது நினைவில் தானாக வரும் சோர்வு. அதற்கு முயல வேண்டியதே இல்லை.”

அந்தச் சோர்வு என்னைப் பொறுத்தவரையில் முயலாமலே உங்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது.” முல்லையின் இந்தக் கேள்விக்கு இளங்குமரனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அவள் முகத்தில் பதிந்த தன் பார்வையை மீட்காமல் அவன் நின்று கொண்டிருந்தான்.

மேலேயிருந்து உருண்டையாய்ப் பெரிதாய்ச் செழுமையான நாகலிங்கப் பூ ஒன்று இளங்குமரனின் காலடியில் உதிர்ந்து விழுந்தது. முல்லையே பேச்சை மேலும் தொடர்ந்தாள்:

நீராட்டு விழாவன்று கழார்ப் பெருந்துறையில் உங்களைச் சந்திக்க முடியாமல் ஏமாந்தேன். அடுத்த முறை புறவீதியில் எங்கள் வீட்டு வாயில் வழியே நீங்கள் தேரைச் செலுத்திக் கொண்டு கைநீட்டிக் கூவியழைத்தேன். பார்த்தும் பாராதவர் போலத் தேரைச் செலுத்திக் கொண்டு போய்விட்டீர்கள். அப்போதும் ஏமாற்றமே அடைந்தேன். இப்போது கண் முன்னால் நேர் எதிரே வந்து நிற்கிற போதும் எவர் முன்பு நின்று கொண் டிருக்கிறேனோ, அவரிடமிருந்து எதையோ பெறமுடி யாமல் தவித்துக் கொண்டிருக்கிறேனோ, அதை வேறு யாரோ உங்கள் இதயத்திலிருந்து பெற்றுக் கொண்டு விட்டார்கள் என்று என் மனத்தில் சந்தேகமும் உண்டாகிறது. தேருக்கும் சிவிகைக்கும் சொந்தக்காரர்களான பெருமாளிகைப் பெண்கள் பூம்புகாரின் பட்டினப் பாக்கத்தில் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் எவரேனும் உங்களுடைய அன்பைப் பெற்றிருக்கலாம்...”

மிக விரைவாகப் படபடவென்று சீற்றம் உற்றவளைப் போலப் பேசிக் கொண்டே வந்த முல்லையின் குரலில் விம்மலும், ஏக்கமும் கலந்து அழுகையின் சாயல் ஒலித்தது.

இளங்குமரன் கீழே குனிந்து காலடியில் விழுந்திருந்த நாகலிங்கப் பூவை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தான். இதயத்தில் சேர்த்து வைத்திருந்த உணர்ச்சித் தவிப்பைச் சொற்களாகக் கொட்டித் தீர்த்தது போதாதென்று கண்ணீராகவும் கொட்டித் தீர்ப்பதற்கு இருந்தாற்போல் விழி கலங்கி நின்றாள் முல்லை. அவள் முகத்தை நேரே பாராமல் தன் வலது உள்ளங்கையில் நாகலிங்கப் பூவை வைத்து அதைப் பார்த்துக் கொண்டே அவளிடம் பேசினான் இளங்குமரன்:

உன்னைப் போன்ற உலகத்துப் பெண்களின் மனங்களையெல்லாம் சந்தேகத்தையும், ஆசையையும் இணைத்துப் படைத்திருக்கிறார் படைப்புக் கடவுள். நீங்கள் எல்லாரும் என்னைப் போன்ற ஆண்மகனிடமிருந்து எதிர்பார்க்கிற பொருள் ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றையும் உங்களுக்கே சொந்தமாக்கி வெற்றி கொள்ள விரும்புகிறீர்கள். எந்த ஒன்றை முதலாகக் கொண்டு உலகத்தின் மற்றப் பொருள்களையெல்லாம் நாங்கள் வெற்றி கொள்ள வேண்டுமோ அந்த முதலையே நீங்கள் கொள்ளையிட்டு வென்றுவிட முயல்கிறீர்கள்.”

அப்படியா? நாங்கள் கொள்ளையிட்டு வெற்றி கொள்ளத்தக்கதாக உங்களிடமிருக்கும் அந்த விசித்திரப் பொருள் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமோ!”

இதுவரை உனக்குத் தெரியாமலிருந்தால் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். உண்மையாகவே தெரியாதா? அல்லது தெரிந்து கொண்டே வாயைக் கிளறுகிறாயா?”

மெய்யாகவே தெரியவில்லை, சொல்லுங்கள் அந்த விந்தைப் பொருள் எது?”

வேறெதுவுமில்லை! ஆண்பிள்ளையின் மனம். ஒவ்வொரு பெண்ணும் அதை வெற்றிகொண்டு ஆள்வதற்குத்தான் ஆசைப்படுகிறாள். ஆசை நிறைவேறாத போது சந்தேகப்படுகிறாள். கண் கலங்கி நின்று மனம் கலங்கச் செய்கிறாள். என்னைப் பொருத்தவரையில் ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக என் மனத்தை அளித்திருக்கிறேன்.”

மிக்க மகிழ்ச்சி. அதே மனத்தின் ஒரு கோடியில் அன்பைப் பயிர் செய்து கொள்ளவும் சிறிது இடம் வேண்டி நிற்கிறேன் நான்.”

முல்லை! நீ அதை வேண்டுவது தவறில்லை! சுரமஞ்சரியும் அதைத்தான் வேண்டினாள். எனக்காக உங்களுடைய மனத்தைத் தோற்கக் கொடுப்பதாய்த்தான் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்களுடைய அந்தத் தோல்வியை, என்னுடைய வெற்றியாக அங்கீகாரம் செய்து கொள்ள நான் துணிய முடியாதவனாயிருக்கிறேன். காவிரிப்பூம் பட்டினத்துப் புறவீதியில் செருக்கு மிகுந்த இளைஞனாக உன்னுடைய சிரிப்புக்கும், நீ அளித்த சுவையான விருந்து உணவுகளுக்கும் ஆட்பட்டிருந்த பழைய இளங்குமரனை மறந்துவிட வேண்டும்.”

முயற்சி செய்வதனால் உலகின் எந்த நினைவையும் மறந்துவிட முடியாது. மறக்க வேண்டும் என்று முயல் வதனாலேயே மறக்க இயலாதபடி நினைவில் ஆழமாகப் பதிந்து கொள்ளும் நினைவுகளும் இருக்கின்றன என்று அவன் சற்றுமுன் தன்னிடம் கூறியிருந்த தத்துவத்தையே அவனுக்குத் திருப்பிச் சொல்லிச் சிரித்தாள் முல்லை.

நல்ல நேரத்தில் தன்னை அவள் வகையாகப் பேச்சில் மடக்கி விட்டாளே என்ற மலைப்பினால் சில கணங்கள் என்ன பேசுவதென்று தோன்றாமல் நின்றான் இளங்குமரன். உலகத்தின் கண்ணிரைத் துடைப்பதற்காகத்தான் கண்களில் நீரைச் சுமக்கும் விசாகையும், ஓர் ஆண்பிள்ளை யின் அன்பு தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்பதற்காகக் கண்கலங்கும் சுரமஞ்சரி, முல்லை போன்ற பெண்களையும் மனத்தில் நினைத்து நிறுத்துப் பார்த்தான் அவன்.

இளங்குமரன் தன்னைப் பார்க்காமல் இருந்த அந்த நேரத்தில் தன் இரு கண்களும் நிறைய அவனை நன்றாகப் பார்த்தாள் முல்லை. முன்பிருந்ததைவிட இளைத்திருந்தாலும் அந்த இளைப்பினாலேயே அவனுடைய அழகு வளர்ந்திருப்பதுபோல் தோன்றியது. காவிரிப்பூம் பட்டினத்தில் முரட்டுத் தனமாகச் சுற்றிக் கொண்டிருந்தவன் பூம்பொழிலுக்கு வந்த பின் மேனி நிறம் மாறி நளினமாகக் காட்சியளித்தான். பவழச் செஞ்சுடர் மேனியில் வைகறைக் கதிரவனின் வண்ணம் மின்னியது. முகத்தில் அறிவின் அடக்கமும் நிறைந்த ஒளியும் தெரிந்தன. அழகிய கண்களில் துணிவினாலும் உடல் வலிமையாலும் தோன்றும் பழைய செருக்கு மறைந்து பேரமைதி - எதையோ பருகக் காத்திருக்கும் அமைதி தென்பட்டது. நாகலிங்கப் பூவை ஏந்தியிருந்த வலது உள்ளங்கை அந்தப் பூவின் நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிவந்து காட்சியளித்தது. பொன்னில் வார்த்துப் பொருத்தினாற் போன்ற சுந்தர மணித் தோள்கள் காண்பவர் உள்ளத்தைக் கவர்ந்தன.

தான் இளங்குமரனுடைய சொற்களையே அவனிடம் திருப்பிச் சொல்லியதனால் அவன் மனம் நொந்து போயிருக்குமோ என்று வருந்திய முல்லை பேச்சை வேறு வழியில் மாற்றினாள்.

நானும் அண்ணனும் இங்கு வரும்போது நீங்கள் கூடக் கண்கலங்கி வருத்தத்தோடு உட்கார்ந்திருந்தீர்களே? உங்கள் வருத்தத்தின் காரணத்தை நான் தெரிந்து கொள்ள லாமோ?”

என்னுடைய தாயைப் பற்றி நினைவு வந்தது. கண்ணிலும், மனத்திலும் கலக்கமும் வந்தது.”

மறக்க வேண்டியவர்களை நினைத்துக்கொண்டு வருந்துவதும், நினைக்க வேண்டியவர்களை மறந்துவிட்டு மகிழ்வதுமாகச் சிறிது காலத்துக்குள் எப்படி எப்படியோ மாறிவிட்டீர்கள் நீங்கள். தோற்றத்திலும் மாறிவிட்டீர்கள்? சிந்தனையிலும் மாறிவிட்டீர்கள்.”

இன்னும் ஒன்றையும் அவற்றோடு சேர்த்துக் கொள். விருப்பங்கள், ஆசை, அன்பு இவற்றில் கூட மாறிவிட்டேன்.”

இல்லை! மாற்றிக் கொண்டு விட்டீர்கள்.”

எப்படியானால் என்ன? திருநாங்கூரில் இந்தப் பூம்பொழிலில் பழைய இளங்குமரனை நினைத்துத் தேடிக் கொண்டு வந்திருந்தால் உனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.”

முல்லை எந்த வழியிலிருந்து பேச்சை மாற்றினால் இருவருடைய மனமும் நோகாமல் உரையாடல் வளரும் என்றெண்ணினாளோ அந்த வழிக்கே திரும்பி வந்தது பேச்சு. முகத்தில் அறைவதுபோல் எடுத்தெறிந்து அவன் சொல்லிய ஒவ்வொரு சொல்லும் அவளை இரண்டாம் முறையாக அழுதுவிடுகின்ற நிலைக்குக் கொண்டு வந்தன.

அவள் முகம் வாடிவிட்டதைக் கண்டும் இளங்குமரன் புன்னகை புரிந்தான். “முல்லை ! உன்னுடைய நிலையைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது.”

பரிதாபத்தை உண்டாக்கியவரே அதைப் பார்த்து நகைப்பதில் பொருள் இல்லை என்று இதழ்கள் துடிக்க சினத்தோடு பதில் கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் முல்லை. அந்தச் சமயத்தில் பூம்பொழிலைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்த கதக்கண்ணன் திரும்பி வந்து சேர்ந்ததனால் அவர்களுடைய பேச்சு மேலே வளராமல் நின்றது. வளநாடுடையாருக்கு தன் அன்பையும் வணக்கங்களையும் தெரிவிக்கச் சொன்னான் இளங்குமரன்.

வருகிற பெளர்ணமியன்று முல்லைக்குப் பிறந்த நாள் மங்கலம். அன்றைக்கு நீ காவிரிப்பூம் பட்டினத்துக்கு வர வேண்டும். முல்லை உனக்கு விருந்து படைக்கப் போகிறாள். எங்கள் தந்தையாரும் உன்னைக் காண்பதற்கு ஆவலாயிருக்கிறார். எங்களால் உன்னைக் காணும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உன்னையும் பார்த்தாயிற்று. முல்லையின் பிறந்தநாள் மங்கலத்துக்கு வரவேண்டுமென்றும் அழைத்தாயிற்று என்று கதக்கண்ணன் மறுமொழி கூறியதைக் கேட்டு இளங்குமரன் சிறிது திகைத்தான். அந்தத் திகைப்பைப் பார்த்துவிட்ட கதக்கண்ணன், “ஏன் திகைக்கிறாய்? உன்னால் வர முடியாதா?” என்று சந்தேகத்தோடு கேட்டான்.

கதக்கண்ணா! நீங்கள் இருவரும் என்னை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். குருகுலவாசம் முடியும் வரை நான் திருநாங்கூர்ப் பூம்பொழிவிலிருந்து எங்கும் வெளியேறுவதற்கு இயலாது என்று இளங்குமரன் உறுதியாக மறுமொழி கூறியபோது, முல்லையின் முகம் மேலும் வாட்டம் கண்டது.

இவரை ஏன் அண்ணா தொல்லைப் படுத்துகிறீர்கள்? இவரால் இப்போது எதுவுமே இயலாது. அன்பு, ஆசை, பாசம் ஒன்றுமே இல்லாத இரும்பு மனிதராகி விட்டார் இவர். நீலநாகமறவருடைய மாணவர் அல்லவா? அதே வழியில் வளர்கிறார் என்று சினம் மாறாத குரலில் குமுறிப்போய்ப் பேசினாள் முல்லை.

அப்போது அவளுடைய பூ நெற்றியில் சினம் பரவியிருக்கும் செம்மையைக் கண்டு சிரிப்பைத் தவிர இளங்குமரனுக்கு வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. கதக்கண்ணனும் ஏதேதோ பழைய உறவுகளையும், நட்பையும் கூறி இளங்குமரன் மனத்தை நெகிழச் செய்ய முயன்றான். முடியவில்லை. முல்லையின் பிறந்தநாள் மங்கலத்துக்கு காவிரிப்பூம் பட்டினம் வர இயலாதென்று கண்டிப்பாக மறுத்துவிட்டான் அவன்.

அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததற்கு அருட் பயனாவது கிடைக்கட்டும் என்று முல்லையும், கதக்கண்ணனும் தவச்சாலைக்குள்ளே போய் நாங்கூர் அடிகளை வணங்கி வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வந்தார்கள். அவர்கள் சென்ற போது விசாகை ஏதோ ஒரு சுவடியை விரித்து வைத்துக்கொண்டு அடிகளிடம் தம் சந்தேகங்களைக் கூறி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தாள். விசாகையைப் பற்றி அவர்களுக்கும், அவர்களைப் பற்றி விசாகைக்கும் சுருக்கமாகக் கூறி அறிமுகம் செய்து வைத்தார் நாங்கூர் அடிகள்.

பூம்பொழிலிலே மேற்கு வானத்துப் பொன் வெயில் தங்க ஓடையாய் உருகித் தகதகத்துக் கொண்டிருந்த நேரம் முல்லையும், கதக்கண்ணனும் புறப்படுவதற்கிருந்தார்கள். நாகலிங்க மரத்தின் அருகே முன்பிருந்தபடியே இளங்குமரன் இருந்தான். மனத்துக்கு மனம் ஒட்டுதல் இல்லாமல் விட்டுப் போயிருந்தாலும் விடை பெற்றுக் கொள்ள வேண்டிய முறைக்காகப் போய் விடை பெற்றுக் கொண்டு பூம்பொழிலின் வாயிலை நோக்கி நடந்தார்கள் அவர்கள். சிறிது தொலைவு நடந்ததும், தன் பின்னால் யாரோ தொடருவது போலக் காலடி ஓசை கேட்டுத் திரும்பினாள். வேறு யாருமில்லை; இளங்குமரன்தான். அவன் கண்களில் நீர் நெகிழ்ந்திருந்தது.

முல்லை! இவற்றை உன்னுடைய பிறந்தநாள் மங்கலத்துக்கு நான் அளிக்கும் பரிசாக ஏற்றுக்கொள்.”

ஒற்றை ஓலையான ஒரே ஓர் ஏட்டையும், சற்று முன் கையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த நாகலிங்கப் பூவையும் அவளுக்கு அளித்தான் அவன். முல்லையின் கைகள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன் நீண்டிடாமல் தயங்கின. அந்த ஒலையை அவன் அப்போது தான் எழுதியதற்கு அடையாளம் போல் எழுத்தாணியும் கையில் இருந்தது.

வாங்கிக்கொள், முல்லை!”

அவள் தயங்கியபடியே வாங்கிக் கொண்டாள். கதக்கண்ணன் முன்னால் விரைவாக நடந்து போயிருந்தான். ஏட்டில் முத்து முத்தாகக் கீறப்பட்டிருந்த எழுத்துக்களை ஆர்வத்தோடு படிக்கலானாள் அவள்.

 

சித்தம் தடுமாறச் செய்கை நினைவழியப்

பித்தம் தலைகிறங்கப் பார்க்குமே - இத்தரையில்

சித்திரம்போற் சேர்ந்த விழிநோக்கும் முல்லையெழில்

முத்துநகை பூக்கும் முகம்

 

என்று அழகாகக் கீறப்பட்டிருந்த அந்த வெண்பாவின் பொருளும், அதனோடு இருந்த நாகலிங்கப் பூவின் நறுமணமும் முல்லையைக் கனவுகளில் மூழ்கச் செய்தன. ஆனால் அக்கனவுகள் நீடிக்கவில்லை. அதன் கீழேஒரு காலத்தில் இந்தச் சிரிப்புக்குச் சற்றே ஆட்பட்டிருந்தவனின் வாழ்த்து என்று எழுதப்பட்டிருந்த வாக்கியத்தைப் படித்து விட்டு, ‘அதற்கென்ன அர்த்தம்?’ என்று அவனையே கேட்டு விடுவதற்காகச் சீற்றம் கொண்டு முல்லை தலை நிமிர்ந்தபோது, அவள் நின்ற இடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு தவச்சாலையை நோக்கி விரைவாக நடந்து போய்க் கொண்டிருந்தான் அவன். மாலை வெயிலில் அவனுடைய பவழச் செஞ்சுடர் மேனி அக்கினியே நடந்து போவதுபோல் மின்னியது.

---------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

20. செல்வச் சிறை

 

பொழுது புலர்ந்து கொண்டிருந்த அந்த வைகறை நேரத்திலே இருகாமத்திணை ஏரியின் கரையும் காமவேள் கோயிலும் தனிமையின் அழகில் அற்புதமாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. கிழக்கு வானத்தில் வைகறைப் பெண் செம்மண் கோலம் இட்டுக் கொண்டிருந்தாற்போல ஒரு காட்சி. காமவேள் கோயில் விமானத்திற் பொற் கலசங்கள் மின்னிக் கொண்டிருந்தன. விடிகாலைக் காற்றினால் ஏரி நீர்ப் பரப்பிலே பட்டுத் துணியில் மடிப்புக்கள் விழுவது போலச் சிற்றலைகள் புரண்டன. நீர்ப் பரப்பின் தெளிவு கண்ணாடி போலிருந்தது. அந்தத் தெளிவுக்கு மாற்றாகச் செங்குமுதப் பூக்கள்.

மேகக்காடு போல நீராடிய கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு நின்றாள் சுரமஞ்சரி. தோழி வசந்தமாலையும் அப்போதுதான் நீராடி முடித்துவிட்டுக் கரையேறிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கிக் குறும்புநகை குலவக் கேட்டாள் சுரமஞ்சரி:

நீ யாரை நினைத்துக் கொண்டு நீராடினாய் வசந்த மாலை?”

நான் ஆண்பிள்ளை யாரையும் நினைத்துக் கொள்ள வில்லையம்மா. விடிந்ததும் விடியாததுமாக இந்தக் குளிரில் என்னை நீராடுவதற்காக இங்கே இழுத்து வந்த உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன்.”

கொடுத்து வைத்தவளடி நீ. உலகத்தில் மிகவும் துன்பமான முயற்சி நம்மிடம் அன்பு செலுத்தாதவர் மேல் நாம் அன்பு செலுத்திக் கொண்டு வேதனைப்படுவதுதான். உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு அப்படி ஒரு வேதனையும் இல்லையே?”

உங்களுக்கும் இந்த வேதனை மிக விரைவிலே தீர்ந்து விடும் அம்மா! சோமகுண்டம், சூரியகுண்டம் துறைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தை வலங்கொள்ளும் அளவுக்குப் பெரிய முயற்சிகளைச் செய்கிறீர்களே, இவற்றுக்கு வெற்றி ஏற்படத்தான் செய்யும்.”

தீர்த்தமாடுவதும், கோட்டம் வலங்கொண்டு சுற்றுவதும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்குத்தான். காமன் என்று தனியாக யாருமில்லை. நம்முடைய மனத்தின் உள்ளே ஊற்றெடுத்துப் பாயும் நளினமான ஆசைகளுக்கு உருவம் கொடுத்தால் அவன்தான் காமன். அவன்தான் ஆசைகளின் எழில் வாய்ந்த வடிவம், அவன் தான் அன்பின் பிறவி.”

இந்தக் கற்பனை மெய்யானால் நீங்கள் வணங்கி வழிபட வேண்டிய காமன் இங்கே இல்லை என்று கூறிச் சிரித்தாள் வசந்தமாலை. இருவரும் காமவேள் கோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஈர ஆடையும் நெகிழ முடிந்த கூந்தலும், ஆசையும், ஏக்கமும் தேங்கி நிற்கும் விழிகளுமாகச் சுரமஞ்சரி அன்றைக்குப் புதிய கோலத்தில் புதிய அழகோடு விளங்கினாள். மோகன நினைவுகளைக் கிளரச் செய்யும் நறுமணங்கள் அவள் பொன்னுடலிலிருந்து பரவிக் கொண்டிருந்தன. பூக்கள் சூட்டப்படுவதனால் பூக்களுக்கே இந்தக் கூந்தலிலிருந்து மணம் கிடைக்குமோ என்று எண்ணத்தக்க வாசனைகள் அவள் குழற் கற்றைகளிலிருந்து பிறந்தன. கரும்பாம்பு நெளிவது போலத் தழைத்துச் சரிந்த கூந்தலில்தான் என்ன ஒளி!

சுரமஞ்சரி ஈரம்பட்டு வெளுத்திருந்த தன் அழகிய பாதங்களினால் மணலில் நடக்கும் வேகத்தைப் பார்த்து வசந்தமாலை வியந்தாள். புகை மண்டலத்தினிடையே கொழுந்துவிட்டு தழல் கதிர்போல் ஈரப் புடவையின் கீழே பொன்னொளி விரிக்கும் அந்தப் பாத கமலங்கள் மணலில் பதிந்து பதிந்து மீளும் அழகை அதிசயம் போலப் பார்த்துக்கொண்டே உடன் சென்றாள் வசந்தமாலை.

என்னடி பார்க்கிறாய் வசந்தமாலை?”

உங்களுடைய பட்டுப் பாதங்கள் இன்னும் எவ்வளவு நாள் இந்தக் காமன் கோவிலை இப்படி வலம் வந்து வெற்றிபெறப் போகின்றனவோ என்று நினைத்துப் பார்த்தேன் அம்மா!”

என்னுடைய வேதனை மிக விரைவில் தீர்ந்துவிடும் என்று நீதான் முதலிலேயே வாழ்த்துக் கூறிவிட்டாயே, இனிமேல் எனக்கென்ன கவலை?” என்று தோழிக்குப் பதில் கூறிவிட்டு மேலும் வேகமாக நடந்தாள் சுரமஞ்சரி.

வழிபாடு முடிந்ததும் வந்ததைப் போலவே யாரும் அறிந்து ஐயம் கொள்ள இடமின்றி மாளிகைக்குப் போய் விட வேண்டுமென்று இருவரும் புறப்பட்டார்கள். வசந்த மாலை தன் தலைவியைத் துரிதப்படுத்தினாள்.

நாம் திட்டமிட்டிருந்ததை விட அதிக நேரமாகி விட்டதம்மா. ஆள் புழக்கம் ஏற்படுவதற்கு முன் இங்கிருந்து திரும்பிவிட வேண்டுமென்று வந்தோம். சிறிது நாழிகைக்கு முன்பு கூட இந்த நாணற் புதரருகே யாரோ நடந்து போனார்கள். விடிகிற நேரத்தில் புதர்களிலிருந்து நரிகளைக் கலைத்துவிட்டு வேட்டையாடுவதற்காகப் பரதவ இளைஞர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வருவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கூட்டமெல்லாம் வருவதற்குள் நாம் இங்கிருந்து போய்விட வேண்டும்.”

போகலாம். அதற்காக இறக்கை கட்டிக்கொண்டு பறக்க முடியுமா என்ன? விடிந்ததும் நரி முகத்தில் விழிக்கிற உரிமை பரதவ இளைஞர்களுக்கு மட்டும் சாசனம் இல்லையே? வாய்த்தால் நாமும் நரி முகத்தில் விழிக்கலாமே தோழி!” என்று விளையாட்டுப் பேச்சில் இறங்கினாள் சுரமஞ்சரி. பேச்சு விளையாட்டாயிருந்தாலும் நடை வேகமாகவே தான் இருந்தது. என்ன இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் வந்திருக்கிறோம் என்ற பயம் பயம்தானே? காமன் கோவிலிலிருந்து அவர்கள் மாளிகையை அடைந்தபோது யாருடைய சந்தேகத்திற்கும் இலக்காகவில்லை. மாளிகை அமைதியாயிருந்தது. பெருமாளிகைத் தோட்டத்தில் நகைவேழம்பரும் தந்தையாரும் தோளோடு தோள் இணைந்தபடி கனிவாகப் பேசிக் கொண்டிருந்ததையும் தன்னுடைய மாடத்தி லிருந்தே சாளரத்தின் வழியே சுரமஞ்சரி பார்க்க நேர்ந்தது.

வசந்தமாலை! இங்கே வந்து இந்த விந்தையைப் பாரேன் என்று தன் தோழியைக் கூப்பிட்டு அவர்களுக்கும் இதைக் காண்பித்தாள் சுரமஞ்சரி.

நேற்றிரவு இரண்டு பேரும் பயங்கரமான கருத்து மாறுபாடு கொண்டு கடுமையாகப் பேசினார்கள் என்றாயே? இப்போது என்ன சொல்கிறாய், தோழி?”

தோழி பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். “நல்ல வேளை, தோழி! தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்ததனால் இவர்கள் பார்வையில் தென்படாமல் உள்ளே வந்தோம். இவர்கள் பார்வையில் பட்டிருந்தால் நாமிருவரும் நிறைய பொய்கள் சொல்ல நேர்ந்திருக்கும். சொன்னாலும் நம் பொய்யை இவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள்.”

உங்கள் தந்தையார் நம்பினாலும் நம்புவார். நகைவேழம்பர் இருக்கிறாரே, அவர் உண்மைகளையே நம்பாத மனிதர். பொய்களை எப்படி நம்புவார் என்று எதிர் பார்க்க முடியும்!” என்றாள் வசந்தமாலை. யாருக்கும் தெரியாமல் செய்ய நினைத்த செயலை நினைத்தபடி செய்துவிட்டோம் என்று சுரமஞ்சரி அன்று மிகவும் மகிழ்ச்சியாயிருந்தாள்.

அன்றைக்கு மாலை ஆலமுற்றத்துக்குப் போய்வர வேண்டுமென்றும் அவள் நினைத்திருந்தாள். தந்தையாருக்கு சந்தேகம் ஏற்படாமலிருப்பதற்காகத் தன் தோழியோடு சகோதரி வானவல்லியையும் உடன் அழைத்துப் போகத் திட்டமிட்டிருந்தாள். ஓவியன் மணிமார்பன் தான் கூறியனுப்பியிருந்த செய்திகளை ஆலமுற்றத்தில் உரியவரிடம் போய்த் தெரிவித்திருப்பானென்றே சுரமஞ்சரி நம்பினாள். அன்றியும் இளங்குமரன் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் இருப்பதாகவே அவளுக்கு எண்ணம்.

தன் எண்ணப்படி மாலையில் ஆலமுற்றத்துக்குப் புறப்படுமுன் அவள் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். வசந்தமாலை அணிகலன்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்த வண்ணமிருந்தாள்.

தன் அலங்காரம் முடிந்ததும்நீ போய் வானவல்லியையும் புறப்படச் சொல்லு என்று தோழியை அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள் சுரமஞ்சரி. தோழி திரும்புவதற்கு வழக்கத்தை மீறிய நேரமாயிற்று.

தோழி திரும்பி வந்தபோது அவள் முகம் வாட்டம் கண்டிருந்தது.

ஏன் இவ்வளவு நேரம்?”

ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை அம்மா! நமக்குத் தெரியாமலே இங்கே என்னவெல்லாமோ நடக்கிறது.”

புரியும்படியாகத்தான் சொல்லேன்!”

நீங்களே என்னோடு வந்து பாருங்கள், புரியும்...” உடனே சுரமஞ்சரியும் தோழியோடு எழுந்து சென்றாள்.

அங்கே தன்னுடைய மாடத்திலிருந்து வெளியேறிச் செல்லும் வாயிலில் புதிய ஏற்பாடாக இரண்டு யவனக் காவலர்கள் நிற்பதைக் கண்டு திகைப்போடு தோழியின் முகத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி.

அங்கே பார்த்துப் பயனில்லை. என்னுடைய முகத்தைப் பாருங்கள். நான் சொல்கிறேன். உங்களுடைய அலங்கார மண்டபத்தில் நீங்கள் அரும்பெரும் சித்திரங்களைச் சிறை செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அதே போல் இந்த மாளிகையின் உயிர்ச் சித்திரமாகிய உங்களைத் தந்தையார் இந்த மாடத்திலிருந்து வெளியேறி விடாமல் பாதுகாக்க விரும்புகிறார் என்று தூண் மறைவிலிருந்து வெளிவந்த நகைவேழம்பர், வன்மம் தீர்க்கிற குரலில் அவளை நோக்கிச் சொல்லிக் கொடுமையாகச் சிரித்தார்.

------------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

21. தெய்வ நாட்கள் சில

 

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தனக்காகவே திருநாங்கூர் வந்திருந்த முல்லையினிடமும் கதக்கண்ணனிடமும் மனம் நெகிழ்ந்து பழகாமல் அவர்களுடைய அன்பையும் ஆர்வத்தையும் புறக்கணித்துத் திருப்பியனுப்பியதை நினைத்தபோது இளங்குமரனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. அன்று மாலை தூய நினைவுகள் பொங்கும் மனத்தோடு உலகத்துப் பேரறிஞர்கள் எல்லாம் அணி வகுத்து நிற்கும் ஞானவீதியில் தனியொருவனாக நடந்து தான் வெற்றிக் கொடி உயர்த்திச் செல்வதாக எண்ணியபடி அவன் இருந்த கனவு நிலையை முதலில் விசாகை வந்து கலைத்தாள். தாயைப் பற்றி நினைவூட்டிக் கலங்கச் செய்தாள். அந்தக் கலக்கத்திலிருந்து நீங்கு முன்பே முல்லையும், அவள் தமையனும் வந்து வேறொரு வகைக் கலக்கத்தை உண்டாக்கிவிட்டுப் போயிருந்தார்கள். தன்னுடைய கல்வி கலக்கத்திலிருந்து விலகி நிற்கும் தெளிவை இன்னும் அடையவில்லை என்பதை அவன் இப்போது உணர முடிந்தது.

கலக்கங்களில் இருந்துதான் தெளிவு பிறக்க வேண்டு மென்று அடிகள் பலமுறை கூறியிருந்தாலும், பழைய சார்புகளும் நினைவுகளும் தன்னை வழி. மாற்றிக் கொண்டு போய் விடலாகாதே என்ற பயம் அவனுக்கு இருந்தது. பருகி விடுவது போன்ற தாகத்தோடு தன் நீலோத்பல விழிகளை அம்புகளின் கூர்மையுடையன வாக்கிக் கொண்டு முல்லை பார்த்த பார்வையை நினைத்துக் கொண்டான் இளங்குமரன். அந்தக் கண்களின் வனப்புக்குத் தான் அளித்த காணிக்கையான கவிதையையும் நினைத்துக் கொண்டான்.

இயல்பாகவே எழும் பாசங்களைப் போக்கிக் கொள்வதென்பது தேர்ந்த மனித மனத்துக்கும் அரியது என்று அன்றைக்கு அவன் உணர்ந்தான். ‘நெல்லுக்குள் உமியும், செம்பிற் களிம்பும் போலப் பாசங்கள் மனத்துடனேயே பிறந்தவை - என்று அவன் கற்றிருந்ததன் அநுபவம் அவனுக்கே விளங்கிற்று. முல்லை வந்து எதிரே கண் கலங்கி நின்றிராவிட்டால் காவிரிப்பூம்பட்டினமும் பழைய சார்புகளும் அவனுடைய நினைவில் வந்திருக்கப் போவதில்லை. பாடல் எழுதப்பெற்ற அந்த ஏட்டையும், நாகலிங்கப் பூவையும் முல்லையின் கையில் கொடுக்கும் போது பேதைச் சிறு பெண்ணாய் அவள் தன் முன்னால் சிரித்துக் கொண்டு நின்ற பழைய நாட்கள் எல்லாம் நினைவு வந்து அவனையே மனம் நெகிழ்ந்து உருகும்படி செய்து விட்டன. அடுத்த நாள் பொழுது புலரும் வரை அவன் தன் மனத்தில் அவளை மறக்க முயன்று கொண்டே நினைத்துக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்த பின் நீராடித் தூய்மை பெற்றுப் பாடம் கேட்பதற்காக அடிகளின் கிரந்த சாலைக்குள் அவன் நுழைந்த போது விசாகை பளிரென்று மின்னும் புதிய சீவர ஆடை புனைந்து கையில் அட்சய பாத்திரமும் ஏந்தியவளாய் எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தாள். நிர்மலமான புனிதப் பூ ஒன்று பொன் நிறத்தில் பூமியையே காம்பாகக் கொண்டு பூத்து நிற்பது போல அந்த வைகறையில் தோன்றினாள். அவள் எங்கேயோ யாத்திரை போகிறாள் போலத் தோன்றியது.

இளங்குமரனை எதிரே பார்த்ததும் விசாகை நின்றாள். இளங்குமரனும் நின்றான். “இந்தப் பாத்திரத்தில் நிறைவதைக் கொண்டு ஏழைகளின் வயிற்றை நிறைப்பதற்காக ஊர் சுற்றப் புறப்பட்டு விட்டேன். மறுபடியும் விரைவில் நாம் சந்திப்போம். ஞான நூல்களைக் கற்கும் போது மனத்தில் எந்தக் கலக்கமும் இருக்கக் கூடாது. இரும்பில் தோன்றும் துரு வளர்ந்து பெருகி இரும்பையே அழித்துவிடுவது போலச் சஞ்சலம் மன உறுதியை அழித்து விடும். மந்தையில் ஊரார் பசுக்களைக் கணக்கிட்டு எண்ணி மேய்க்கின்ற ஆயனைப்போல, நமக்குப் பயன் கொள்ளாமல் நூல்களை எண்ணிப் படிப்பதில் உறுதியில்லை. இன்றிலிருந்து உங்களுடைய ஒவ்வொரு நாளும், தெய்வ நாளாகக் கழிய வேண்டும் என்று விசாகை கூறியபோது மனமும், மெய்யும் சிலிர்த்து அந்தப் பரிசுத்தவதியைக் கைகூப்பி வணங்கினான் இளங்குமரன்.

தூய்மையே வடிவமாகி ஒரு மின்னல் நகர்ந்து செல்வது போல விசாகை மேலே நடந்தாள். நேற்று மாலை ஒரு பெண் தன்னுடைய மோகம் நிறைந்த வார்த்தைகளால் எனக்குக் கலக்கத்தை உண்டாக்கினாள். இன்று காலையில் இன்னொரு பெண் தன்னுடைய ஞானம் நிறைந்த வார்த்தைகளால் என் கலக்கத்தைப் போக்கினாள் என்று நினைத்து வியந்த வண்ணமே தன் நாட்களைத் தெய்வ நாட்களாக்குவதற்காகக் கிரந்த சாலைக்குள் நுழைந்தான் இளங்குமரன். விசாகையின் வார்த்தைகள் அவனுக்குப் புதிய உறுதி அளித்திருந்தன.

அன்றைய தினத்துக்குப்பின் கால ஓட்டத்தைப் பற்றிய நினைவே அவனுக்கு இல்லை. அவன் மூழ்கிப் போன உலகத்தில் ஒரே ஒரு காலம்தான் இருந்தது. அதற்குப் பெயர் அழிவின்மை. அவன் கற்ற நூல்களில் காலத்தின் சிற்றெல்லை பற்றியும், பேரெல்லை பற்றியும் கருத்துக்கள் வந்தன. காலத்தின் மிகக் குறுகிய சிற்றெல்லைக்குக் கணிகம் என்று பெயர். காலத்தின் மிகப் பெரிய பேரெல்லைக்குக் கல்பம் என்று பெயர். ஏழு செங்கழுநீர்ப் பூவின் இதழ்களை வரிசையாய் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிப் பலசாலியான மனிதன் ஒருவன் மிகவும் கூரிய உளியைக் கொண்டு துளையிட்டால் ஆறு இதழ்களைத் துளைசெய்து முடித்துவிட்டுப் பின்பு ஏழாவது இதழிலும் புகுவதற்கு ஆகிற நேரம் ஒரு கணிகம். ஒரு யோசனைத் தொலைவுக்கு உயர்ந்து இறுகிய வச்சிரமலை ஒன்று கருக்கொண்ட பெண்டிர் உடுத்து நைந்த பட்டுத் துணியினால் தேய்க்கப்பட்டு முற்றிலும் தேய்ந்து போவதற்கு ஆகிற காலம் கல்பம். ‘ஆசீவக சமயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த உலகமும் இதில் வாழும் உயிர்களும் எண்பத்து நான்கு லட்சம் மகா கல்ப காலம்தான் வாழ்வார்கள் என்று கருத்துடையவர்கள். அந்தச் சமயத்தின் கொள்கைகளையும், தத்துவங்களையும் இளங்குமரனுக்குக் கற்பிக்கிறபோது அடிகள் காலத்தைப் பற்றிய இந்த அளவுகளையும் கற்பித்திருந்தார். பசித்து உண்பவன் அங்ஙனம் உண்பது பின்னும் பசிப்பதற்காகவே என்று ஒரு சித்தாந்தம் உண்டு. அந்தச் சித்தாந்தத்தைப் போலவே இளங்குமரனுடைய ஞானப் பசியும் தீரத்தீர வளர்ந்து கொண்டிருந்தது. எவ்வளவு கற்றாலும் அடங்காத பசியாக இருந்தது அது. எத்தனை திங்கட் காலம் வேறு உலக நினைவுகளே இல்லாமல் ஞான வேட்கையில் மூழ்கினாலும் ஒரு கணிக நேரம் தான் கற்றது போல் குறைவாகத் தோன்றியது. தன்னை நுகர்வதில் சோர்வு தராத அநுபவம் எதுவோ அதுவே தெய்வீகமானது. அதில் ஈடுபடும் நாட்களும் தெய்வ நாட்களே! உயரிய தத்துவங்களையும் சமயங்களின் நெறிகளையும், வாதிட்டு வெற்றி கொள்ளும் தருக்க முறைகளையும், கற்கக் கற்க இன்னும் கற்க வேண்டுமென்ற ஆர்வம் பெருகியது இளங்குமரனுக்கு.

ஒரு காலத்தில், மாமிசப் பர்வதம் போல எதிர்த்து வந்த மல்லர்களையெல்லாம் இடது கையால் சுழற்றிக் கீழே தள்ளக் கூடிய வலிமை பெற்றிருந்த தன் உடம்பு இப்போது கொடி போன்று இளைத்து வெளுத்திருப்பதையும், ஆனால் அந்தக் காலத்தில் ஞானபலமில்லாமல் இளைத்ததாயிருந்த தன் மனம் இப்போது அந்த வலிமையினைப் பெற்றுப் பெருத்து வருவதையும் சேர்த்து நினைத்தான் அவன்.

இனிமேல் கண் பார்வையின் ஒளியினாலும் இதயத்தின் ஆழத்திலிருந்து பிறக்கும் கனிந்த சொற்களாலும் ஆன்மாவின் பலத்தினாலுமே இந்த உலகத்தில் எதையும் வெற்றி கொண்டு நிற்க முடியும்போல் ஒரு நம்பிக்கை அவனுக்கு உண்டாயிற்று. அவன் மனத்திற்குள்ளே தொடங்கிய இந்த ஞான யாத்திரையில் பல மாதங்கள் கழிந்து போயிருந்த போதிலும் கற்றது குறைவே என்னும் உணர்வினால் கழிந்த காலம் எல்லாம் மிகச் சில நாட்களைப் போலவே அவனுக்குத் தோன்றின. ஐந்திரம், பாணினியம், தொல்காப்பியம் போன்ற இலக்கணக் கடல்களில் நீந்துவதற்குக் கழிந்த காலமும் தருக்கத்திற்காக வேத வியாசரின் பத்து அளவைகளையும் கிருத கோடியின் எட்டு அளவைகளையும் சைமினியின் ஆறு அளவைகளை யும் ஆழ்ந்து கற்ற காலமும், தெய்வத் திரு நாட்களாக அவன் வாழ்வில் வந்தவை. பெளத்தர்களின் திரிபிடக நெறியையும் பிற கருத்துக்களையும் அவன் கற்ற காலத்தில் விசாகை அவனுக்குப் பெருந்துணையாக இருந்தாள். வேதநெறிக்கு உட்பட்ட ஐந்து வகைச் சமயங்களின் வாதங்களையும், வேதநெறிக்குப் புறம்பான ஐந்து வகைச் சமயங்களின் வாதங்களையும், அவன் ஞானக்கடலாகிய நாங்கூர் அடிகளாரிடம் கற்று அறிந்து தெளிந்த காலம் மறக்க முடியாத பொற் காலமாயிருந்தது. இப்படிக் கழிந்த தெய்வ நாட்களினிடையே காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நீலநாக மறவரும் வீரசோழிய வளநாடுடையாரும் அடிக்கடி திருநாங்கூருக்கு வந்து இளங்குமரனைச் சந்தித்துவிட்டுச் சென்றார்கள். விசாகை இடையிடையே யாத்திரை செல்வதும் மீண்டும் திருநாங்கூருக்கு வந்து தங்குவதுமாக இருந்தாள். காலம் அடக்குவாரின்றி ஒடிக் கொண்டிருந்தது.

இளங்குமரன் திருநாங்கூருக்கு வந்த பின் ஓராண்டுக் காலம் கழித்து வைசாக பெளர்ணமிக்குப் பத்து நாட்கள் இருக்கும்போது வீரசோழிய வளநாடுடையார் மட்டும் தனியாக அவனைத் தேடிவந்தார். அவர் தேடி வந்த போது பிற்பகற் போதாயிருந்தது. “தம்பி! இன்றே நீ என்னோடு புறப்படவேண்டும். இருட்டுவதற்குள் நாமிருவரும் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்து அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு இன்று பின்னிரவில் மணிபல்லவத் தீவுக்குக் கப்பலேற வேண்டும் என்று அவசரமும், பதற்றமும், கலந்த குரலில் வேண்டினார் வளநாடுடையார். இளங்குமரன் அதற்கு இணங்கவில்லை. “உன் வாழ்வில் நீ அடைய வேண்டிய பெரும் பயன் இந்தப் பயணத்தில்தான் இருக்கிறது. மறுக்காமல் என்னோடு புறப்படு என்று வற்புறுத்தினார் அவர்.

என் வாழ்வில் நான் அடைய வேண்டிய பெரும் பயனை இந்தத் திருநாங்கூர்ப் பூம்பொழிலில் அடைந்து கொண்டு தானே இருக்கிறேன் என்று சொல்லிப் பிடிவாதமாக மறுத்தான் இளங்குமரன். அடிகளிடமே நேரில் சென்று இளங்குமரனைத் தன்னோடு மணிபல்லவத்துக்கு அனுப்ப வேண்டுமென்று மன்றாடினார் வளநாடுடையார். அடிகளும் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். உண்மையைச் சொல்லிக் கூப்பிடலாம் என்றால் சக்கரவாளக் கோட்டத்துக் காளி கோயிலில் அருட்செல்வ முனி வருக்குச் செய்து கொடுத்த சத்தியம் நினைவு வந்து வளநாடுடையாரைத் தடுத்தது. நாங்கூர் அடிகளிடம் கோபமாகவும் கேட்டுப் பார்த்தார் அவர்.

எப்போதுதான் இந்தப் பிள்ளையாண்டானை உங்களுடைய ஞானச் சிறையிலிருந்து விடுதலை செய்யப் போகிறீர்கள்?”

இன்னும் சிறிது காலத்துக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள் ஐயா! அவனே சிறைக் கதவுகளைத் திறந்து கொண்டு புறப்பட்டு விடுவான் என்று சிரித்தபடியே கூறி அவரை அனுப்பிவிட்டார் அடிகள். வளநாடுடையார் ஏமாற்றத்தோடு திரும்பினார். அவர் மட்டும் அன்று இரவு மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போய் வந்தார்.

உலகம் எங்கும் ஒரேவிதமாக ஓடிக் கொண்டிருந்த காலம் திருநாங்கூரில் இளங்குமரனுக்குத் தெய்வ நாட்களாகவும், காவிரிப்பூம்பட்டினத்தில் வளநாடுடையார் முல்லை முதலியவர்களுக்கு நைந்த நாட்களாகவும், எங்குமே வெளியேறிச் செல்ல முடியாமல் செல்வச் சிறையிலே அடைபட்டுக் கிடந்த சுரமஞ்சரிக்கும் அவள் தோழிக்கும் காலமே இயங்காதது போலவும் தோன்றின. சுரமஞ்சரி அளவிட்டுக் கொண்டு வந்த காலக் கணக்குப் பார்த்தால் அவள் நெடுங்காலம் அப்படி அடைபட்டபடியாயிருந்தாள் என்றே சொல்ல வேண்டும். அவள் நெஞ்சிற்குள்ளேயோ இளங்குமரனைப் பற்றிய நினைவு அடைபட்டிருந்தது.

வெயிலும் மழையும் காற்றும் பனியுமாகப் பருவங்களால் விளையும் அழகுகள் பூம்புகாரில் மாறி மாறி விளைந்து கொண்டிருந்தன. காலம் இயங்கிக் கொண்டிருந்தது. மனிதர்களின் நினைவுகளையும் ஆசைகளையும் ஏக்கங்களையும். சுமந்து இயங்கிக் கொண்டேயிருந்தது.

நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் வாணிக நிமித்தமாக அடிக்கடி கப்பல்களில் கடற்பயணம் செய்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். காவிரியில் புதுப் புனல் பெருகியது; தணிந்தது. மறுபடி பெருகியது! தணிந்தது. ஆண்டுகள் ஓடின. பூம்புகார்வாசிகள் மேலும் இரண்டு இந்திர விழாக்களை அனுபவித்து மறந்து விட்டார்கள். மூன்றாவது இந்திரவிழாவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

-----------

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம்

22. கடைசி நாளில் கற்றது

 

திருநாங்கூர்ப் பூம்பொழிலின் ஒரு மேடையில் அடிகளும் இளங்குமரனும் வீற்றிருந்தனர். சாயங்கால வேளை உலகம் பகல் என்னும் ஒளியின் ஆட்சியை இழந்து போய்விட்டதற்காகச் சோக நாடகம் நடத்துவதுபோல விளங்கும் மேற்கு வானம். போது ஒடுங்கும் அந்தி மாலைக்குச் சொந்தமான மேலைத்திசை மூலையிலே இந்தச் சோக நாடகத்துக்குத் திரையெழுதினாற் போன்ற காட்சிகள். மேற்கு நோக்கி அமர்ந்திருந்த அடிகளுக்கு முன்புறம் கிழக்கு முகமாகப் பார்த்தவாறு இளங்குமரன் இருந்தான். அவரிடமிருந்து ஏதோ நிறையக் கேட்டு அறிந்து கொள்வதற்கு இருப்பதுபோல அமைந்து அடங்கி இருந்தான் இளங்குமரன். அவரும் அவனுக்குக் கூறுவதாக மனத்துக்குள் சிந்தனைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருப்பது போன்ற முகபாவத்தோடு இருந்தார். மேற்கு வானத்தில் காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன.

இதே போன்ற ஒரு மாலைநேரத்தில் முதன் முதலாக நீலநாக மறவர் தன்னை அங்கே அழைத்துக் கொண்டு வந்த நாளை நினைத்தான் இளங்குமரன். இறந்த காலத்தின் நிகழ்ச்சியாக எங்கோ ஒரு கோடியில் நெடுந் தொலைவு நடந்து வந்த பின்னால் காலவிதியின் அந்தப் பழைய திருப்பத்துக்குப் பாவனைகள் மூலமாகவே பின்னோக்கி யாத்திரை போய்விட்டுத் திரும்பினான் அவன்.

அடிகளின் குரல் அவனை அழைத்துப் பேசத் தொடங்கியது:

இளங்குமரா! இன்று காலை நீ கற்கவேண்டிய கடைசி சுவடியின் கடைசி வாக்கியத்தையும் கற்று முடித்து விட்டாய். அடிக்கடி உன்னைத் தேடிக் கொண்டு இங்கே வருவாரே, அந்தப் பெரியவர் வீரசோழிய வளநாடுடையார் - அவர் எப்போதோ ஒருநாள் கோபத்தில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதை நான் இந்த விநாடி வரை மறக்கவில்லை. ‘இளங்குமரனை உங்களுடைய ஞானச் சிறையிலிருந்து எப்போது விடுதலை செய்யப் போ கிறீர்கள்?’ என்று என்னை அவர் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு நான் விடை சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அதாவது உன்னை இந்த ஞானச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டிய நேரத்துக்கு வந்தாயிற்று. விடுபட வேண்டிய தகுதி உனக்கும் வந்துவிட்டது.

இந்த உலகத்தில் எல்லாச் சிறைகளிலிருந்தும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுவதுதான் ஞானம் என்று நான் பல்லாண்டுகளாக நினைத்தும் கற்பித்தும் உணர்ந்தும் வந்ததை ஒரே ஒரு கணத்தில் மாற்றிஞானச் சிறை - என்று சொல்லிய தைரியத்தை அந்தக் கிழவரிடம் தான் கண்டேன் அப்பா!” என்று அடிகள் சொல்லிச் சிரித்தபோது -

அதை அடிகள் பொறுத்தருள வேண்டும். அவர் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அப்படிக் கூறியிருப்பார் என்று இளங்குமரன் குறுக்கிட்டுக் கூறினான்.

பொறுத்தருளாவிடில் இதுவரை இக்கேள்வி என் மனத்திலேயே தங்கியிருக்குமா? நான் பொறுத்துக் கொள்வதற்குக் கடமையும் உண்டு. என்னிடம் நீலநாகன் உன்னைப் பற்றி எப்போது முதல் முறையாகச் சொன்னானோ அப்போதிருந்து நானே உன்னைக் காண்பதற்குத் தவித்தேன் என்ற இரகசியத்தை இன்று நீ தெரிந்து கொள்வதனால் தவறில்லை. என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்ய ஏற்ற விளை நிலமாவதற்கு முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். என் போன்றவர்களுக்குஅவதிஞானம் என்று ஓருணர்வு உண்டு. முன்பின் தொடர்பின்றி இன்னதை இப்படிச் செய்தால் வெற்றிதான் கிடைக்கும் என நாங்கள் அவ்வப்போது மனத்தில் தோன்றும் தோற்றத்தால் உறுதி கொள்ளும் செயல்களும் மங்களமாகவே அமையும். நடந்ததையும் நடக்கப் போவதையும் நினைவினாலேயே உணர்ந்து கணிக்கும் அவதி ஞானத்தைப் பற்றி உனக்கும் கற்பித்திருக்கிறேன். மனம் கனிந்தால் அந்த அபூர்வ ஞானம் எளிது.

இளங்குமரா! உன்னைப் பற்றிக் கேள்விப்படுதற்கு முன், காண்பதற்கு முன், என்னுடைய நினைவுகளிலும் சங்கல்பத்திலும் நெடுங்காலமாக நான் பாவனை செய்து கொண்டு வந்த பரிபூரணமான மாணவன் எவனோ, அவனாகவே நீ விளைந்து வந்தாய். நீலநாகன் உன்னை இங்கே அழைத்து வந்த நாளில் நம்முடைய முதற் சந்திப் பின்போது நான் கூறிய வார்த்தைகளை நீ இன்னும் மறந்திருக்க மாட்டாய். சந்திக்கின்றபோது உண்டாகிற உறவு பிரிகிறபோது நினைவு வருவதைத் தடுக்க முடியுமானால் உலகத்தில் துக்கம் என்ற உணர்வே ஏற்பட்டிருக்காது. என்னைப் போலவே அந்தப் பழைய நினைவுகளை நீயும் இப்போது திரும்ப எண்ணிக் கொண்டிருப்பாயானால் நான் அப்போது கூறிய வார்த்தைகளையும் மறந்திருக்க மாட்டாய். ‘அறியாமையையும் ஆணவத்தையும் தவிர உங்களிடம் கொடுப்பதற்கு வேறொன்றும் கொண்டு வரவில்லை என்றாய் நீ. ‘உன்னையே எனக்குக் கொடு என்று வாங்கிக் கொண்டேன் நான். இன்னும் சில வார்த்தைகளும் அப்போது உன்னிடம் கூறினேன்.

என்னுடைய மனத்தில் உதயமாகும் காவியம் ஒன்றிற்கு நாயகனாக ஏற்ற முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். அவன் இன்று எனக்குக் கிடைத்துவிட்டான் என்று பூரிப்போடு உன் கைகளைப் பற்றிக் கொண்டு நான் மகிழ்ச்சிக் கூத்தாடியதையும் நீ மறந்திருக்க மாட்டாய். அவற்றை எல்லாம் திருப்பிக் கூறுவதன் நோக்கம் இளங்குமரன் காவியத்தின் நிறைவெல்லையாக நான் எதைக் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ அதைப் பொய்யாக்கி விடாதே என்று வற்புறுத்துவதுதான்.”

இப்படி இந்தச் சொற்கள் உணர்ச்சி தோய்ந்து அவரிடமிருந்து ஒலித்தபோது முகத்தை நன்றாகப் பார்க்கும் ஆவலோடு நிமிர்ந்து இளங்குமரன் அப்போது தான் கிழக்கே உதயமாகிக் கொண்டிருந்த சந்திரனையும் அவருடைய முகத்தையும் சேர்த்துப் பார்த்தான். நாளைக்கு விடிந்தால் சித்திரா பெளர்ணமி என்பதும் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா என்பதும் அவனுக்கு நினைவு வந்தன. தான் திருநாங்கூரில் குருகுல வாசம் செய்த காலத்தில் எத்துணை இந்திர விழாக்கள் நடந்திருக்கும் என்று கழிந்த ஆண்டுகளை எண்ணியது அவன் மனம், தான் நகரத்தில் இருந்தபோது நடந்த இந்திர விழாக்களையும் நாளைக்குப் புதிய மனிதனாகப் புதிய கண் பார்வையோடு சென்று காண்பதற்கிருக்கும் இந்திர விழாவையும் இணைத்து நினைத்தான் அவன். அடிகளின் பேச்சு மீண்டும் அவன் கவனத்தை ஈர்த்தது. அவன் அவருடைய சொற்களைக் கேட்கலானான்.

இளங்குமரா! நீ எங்கிருந்தாலும் திருநாங்கூரின் இந்தப் பூம்பொழிலிலிருந்து இரண்டு கண்கள் உன்னை இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பதாகப் பாவனை செய்து கொண்டிரு. அந்தப் பாவனை நீ செல்லுமிடங்களில் எல்லாம் உனக்கு வெற்றியை அளிக்கும். குருகுல வாசத்தை முடித்துக் கொண்டு எண்ணற்ற மாணவர்கள் உன்னைப் போல் இங்கிருந்து பிரிந்து போயிருக்கிறார்கள். அவர்கள் யாவரும் குருவைப் பிரிந்து போவதற்காகக் கவலைப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பிரிய நேருவதற்காக சாமான்ய மனிதரைப் போலக் குரு கவலைப்பட்டதில்லை. இன்றைக்கு உன்னுடைய குருவுக்கு நீதான் அப்படிப்பட்ட கவலையைத் தருகிறாய் என்று சொல்லிக் கொண்டே வந்தவர் குரல் நெகிழ்ந்து அதற்கு மேல் சொற்களே வராமல் கண்கலங்கி அவனைப் பார்த்தார். அவனிடமிருந்து பதில் இல்லை; பார்வையும் இல்லை.

இளங்குமரன் கீழே குனிந்தவாறு இருந்தான். அடிகள் அருகில் வந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். அவன் மெளனமாகக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.

நீ எதற்காக அழுகிறாய்?”

சுவாமி! நான் உங்களுடைய பேரறிவுக்கு முன்னால் அற்பமானவன். சுகதுக்கங்களினால் சிறிதும் சலிப்படையாமல் உபசாந்தி நிலை பெற்றவராகிய நீங்களே எனக்கு விடை கொடுக்கக் கண் கலங்குகிறீர்கள். உங்களைப் போன்ற ஞான தேசிகரைப் பிரிந்து புறப்படும் நான் அழாமல் தாங்கிக் கொள்ள இயலுமா? இதுவரை நான் கற்றதெல்லாம் இதற்கு முன்பு கல்லாதிருந்த காலத்து அறியாமையின் அளவைத் தெரிந்து கொள்ளும் அளவு தான். அற்பனாகிய எளியேனுடைய பிரிவு உங்களைக் கண்கலங்கச் செய்யுமானால் அடியேன் நிறையப் பாவம் செய்தவனாக இருக்க வேண்டும்.”

இளைத்த உடல் நடுங்கிட எழுந்து நின்ற இளங்குமரன் அழுது கொண்டே அடிகளுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவற்றைப் பற்றிக் கொண்டான். அவனுக்குத் தெரியாமல் தம்முடைய கண்ணிரைத் துடைத்துக் கொண்டு அவனுடைய கண்ணிரைத் துடைப் பதற்காக அவனை எழுப்பி நிறுத்தித் தோளோடு தோள் தழுவிக் கொண்டார் அந்தப் பெரியவர். கலங்கியறியாத அவர் மனமும் அன்று கலங்கியிருந்தது.

ஞானக் கடலும் ஞான ஆறும் கலப்பது போன்ற இந்தத் தூய்மையான ஞான சங்கமத்தைப் பார்க்கக் கூசியவனைப்போல் என்றும் களங்கமுடைய சந்திரன் தன்னை மேகத்தில் மறைத்துக் கொண்டான். தன்னுடைய ஆணவம் மெய்யாகவே அழிந்துவிட்டதா, இல்லையா என்பதைச் சோதிப்பதற்காகவே அடிகள் இந்தக் கடைசி நாளில் இப்படி விநயமாகப் பழகுகிறாரோ என்று இளங்குமரன் அஞ்சினான். அந்த அச்சத்தினால்தான் அவன் உடலே நடுங்கியது. அவனுடைய வீணான அச்சத்தை அடிகள் தம் பேச்சினாலேயே போக்கினார்.

பாசங்களை விட்டுவிட வேண்டும் என்று இவ்வளவு காலமாக உனக்குக் கற்பித்து வந்த எனக்கு உன்னிடமிருந்து கிடைத்தது என்ன தெரியுமா?”

என்ன சுவாமி?”

என்றும் விடமுடியாத பெரிய பாசம்.”

அவனுக்குத் தெரியாமல் மறுபடியும் கண்களில் அரும்பிய நீரைத் துடைத்துக் கொண்டார் அவர். அன்றிரவு விடிய விடிய இளங்குமரனுக்கு அவர் பல அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் விடிந்து சில நாழிகைக்குப் பின் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நீலநாகமறவர் இளங்குமரனை அழைத்துப் போவதற்கு வந்துவிட்டார். தம்முடைய மனத்தை ஆட் கொண்ட புதிய மாணவனைப் பழைய மாணவனாகிய நீலநாகனிடம் திரும்ப ஒப்படைக்கும்போதும் நாங்கூர் அடிகள் உணர்ச்சி வசப்பட்டார். இளங்குமரன் ஞானமலையாகிய தன் குருவை வணங்கிவிட்டுச் சமயவாதம் புரிவதற்கு அவர் ஆசியுடன் தனக்கு அளித்த ஞானக் கொடியை வலது கையில் தாங்கியபடி பூம்பொழிலுக்கு வெளியே பாதங்களைப் பெயர்த்து வைத்து நடந்தபோது யாத்திரை போயிருந்த விசாகை எதிரே திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

என்னுடன் வாதிடுங்களேன். முதல் வெற்றியை நான் உங்களுக்கு அளிக்கிறேன் என்று சொல்லிச் சிரித்தபடி நின்றாள் விசாகை, நீலநாகமறவர் திகைத்தார். இளங்குமரன் சிறிது தயங்கியபின், “அம்மையாரே! தொடக்க நாளில் என்னுடைய பயபக்தியையே பிட்சையாக ஏற்றுக் கொண்ட வகையில் நீங்களும் எனக்கு ஒரு குரு ! உங்களோடு வாதிட மனம் ஒப்பவில்லை. உங்களை வணங்குகிறேன், வாழ்த்துங்கள் என்று வணங்கினான். விசாகை அவனை வாழ்த்திவிட்டுச் சொன்னாள்: “இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும்.”

இளங்குமரன் நீலநாகமறவரோடு தேர் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவனைப் பூம்புகாருக்கு அழைத்துச் செல்லத் தேர் காத்திருந்தது. தன்னுடைய ஞான குருவின் கண்களை மானசீகமாகப் பாவனை செய்து கொண்டே நடந்தான். எதிரே அவனுடைய வழி நீண்டு விரிந்து கிடந்தது.

 

(இரண்டாம் பருவம் முற்றும்)

 

 

மணிபல்லவம் - முதல் பாகம் மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)