புதுமை லோலன்:

பெயர்: வி. கே. கந்தசாமி
புனைபெயர்: புதுமைலோலன்

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

  • அன்பு மகள் அன்பரசிக்கு
  • புதுமைலோலன் கதைகள்
  • கசங்கிய ரோஜா
  • தாயின் மணிக்கொடி

இவர் பற்றி:

  • இவரது படைப்புக்கள் ஈழகேசரி, சுதந்திரன, ஆனந்தன், புதினம், ஐக்கிய தீபம், விவேகி முதலான ஈழத்துப் பத்திரிகைகளிலும் காதல், மஞ்சரி, பிரசண்டவிகடன், உமா போன்ற தமிழகப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவர் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியகலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று தனது பத்தொன்பதாம் வயதில் ஆசிரியராக வெளியேறினார். கிற்கிராங்கொடை, வெலிகந்த, யாழ்ப்பாணம் பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றி, ஆனைக்கோட்டை தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியப் பணியோடு நின்றுவிடாது அன்பு வெளியீடு என்ற பெயரில் பாடநூல்கள் வெளியிடுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டார். சிறந்த பேச்சாளர். ஆரம்பத்தில் மு.கார்த்திகேசன், வைத்திலிங்கம் ஆகியோரின் இடதுசாரி அணியில் இருந்தவர். பின்னர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தவராக இருந்தார். தமிழரசுக்கட்சியில் இணைந்தபின் பெரும் பேச்சாளப் பீரங்கியாக வலம் வந்தார். புதுமைலோலனின் பேச்சினைக் கேட்பதற்காகவே ஒரு கூட்டம் உருவாகியது. இவர் பின்னர் அமிர்தலிங்கத்திலன் வலக்கரமாகவும் விளங்கினார். ஈழத்து சிறுகதை வரலாற்றில் 1950 – 1963 காலகட்டத்தைச் சார்ந்த இவரது சிறுகதைகள் கணிப்பீட்டுக்கு உரியவை. இவருடைய முதலாவது சிறுகதை 1952 இல் சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. அதைத் தொடர்ந்து பிச்சைக்காரி, சிந்தனை அவதாரம், புகைந்த உள்ளம், அப்பே லங்கா, அழகு மயக்கம் முதலான குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவருடைய கதைகளில் ரொமாண்டிசப் பண்பு தூக்கலாக காணப்படும். அதனைவிட தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனைகள் கொண்டனவாக அவரின் பல சிறுகதைகள் அமைந்தன. அதனால் மார்க்சிய முற்போக்குவாதிகள் இவரை இனவாதக் கதையாளி என்று ஒதுக்கிவிட்டனர். இவரின் கதைகள் பல கௌதமபுத்தரோடு சம்மந்தப்பட்ட ஒழுக்கவிசாரமாக இருந்தன. நிறைய வாசிக்கும் பழக்கம் உடைய இவர் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார்.