வாழ்த்தியே
மகிழ்ந்திடுவோம் !
கவிஞர் எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்

நிலவென்போம்
மலரென்போம் நீதானே உலகென்போம்
அழகெல்லாம் உன்னிடத்தே ஆரம்பம் ஆகுதென்போம்
வரமாக வந்திருக்கும் வாழ்வென்று கூறிநின்று
வையத்தில் மகளிர்தமை வாழ்த்தியே
மகிழ்ந்திடுவோம் !
பொன்னென்போம் புகழென்போம் பொறுமைக்கு நிகரென்போம்
மண்ணினையும் பெண்ணென்போம் மதிப்புடனே
வணங்கிடுவோம்
ஓடிகின்ற நதியினுக்கும் பெண்பெயரைச் சூட்டிநின்று
உலகினிலே பெண்மைதனை உயர்வென்றே
வாழ்த்திநிற்போம் !
மனிதனது வாழ்க்கையிலே மகளிர்நிலை உயர்வாகும்
மகளிர்நிலை தாழ்வுற்றால் மனிதவாழ்வு கீழாகும்
ஒழுக்கமுடை மகளிர்தாம் உன்னதத்தின் இருப்பிடமே
ஒழுக்கமது குலைந்துவிடின் உலகவாழ்வே
சீரிழக்கும் !
நாடுயர வீடுயர நல்மகளிர் தேவையன்றோ
நல்லொழுக்கப் பிறப்பிடமே நல்மகளிர்
பிறப்பாகும்
தீயொழுக்கம் மகளிரிடம் குடிகொண்டு விட்டுவிட்டால்
திறலுடைய சமுதாயம் சிறப்பிழந்து போகுமன்றோ !
அடக்கு முறைக்குள் அடங்கிநின்றார் மகளிர்கள்
அவர்வாழ்வில் சோதனைகள் அலையலையாய் வந்தனவே
இலக்கியத்தில் உயர்வாக வலம்வந்த மகளிர்கள்
இவ்வுலகில் இடர்பட்டு ஏக்கமுற்று இருந்தனரே !
பாரதியின் பாட்டாலே பலமகளிர் துடித்தெழுந்தார்
பட்டதுன்பம் எடுத்தெறிய பாய்ச்சலுடன்
வந்தார்கள்
எட்டய புரத்தாரின் வழிவந்த பலபுலவர்
கொட்டிநின்ற வார்த்தைகளால் கொடிபிடித்தார்
மகளிரெலாம் !
மகளிர்தொடா துறைகளிப்போ மாநிலத்தில் இல்லையன்றோ
மண்தொட்டு விண்வரைக்கும் மகளிர்தமைக்
கண்டிடலாம்
பட்டம்பல பெற்றுவிட்டார் திட்டம்பல தீட்டுகிறார்
பாருலகில் மகளிரிப்போ பகலவன்போல்
வந்துவிட்டார் !

சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்