நூல் : தென்கிழக்குத் தென்றல்
நூல் ஆசிரியர் :   முதுமுனைவர் வெ. இறையன்பு
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி
 

தாவோசூஃபி ஜென்! 

நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு ... அவர்கள் மகாகவி பாரதியார் அவர்களின் கூற்றுப்படி பிறமொழியில் உள்ள நல்ல கருத்துக்களை தமிழுக்கு கொண்டு வந்து தமிழுக்குப் பெருமை சேர்த்து உள்ளார்கள். 

நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்கள் பேச்சு எழுத்து என்ற இரு வேறு துறையிலும் தனி முத்திரை பதித்து வரும் பண்பாளர் .மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக மாணவர்களால் நேசிக்கப்படும் மாமனிதர் .மாணவர்களை நேசிக்கும் மாண்பாளர் .எழுத்துக்கும் ,பேச்சுக்கும் ,செயலுக்கும் வேறுபாடு இல்லாத நல்லவர். இனியவர் .நேர்மையான அரசு  அலுவலர் .கூடுதல் தலைமைச் செயலர் என்ற உயர்  பதவியில் இருந்தபோதும் எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் சிறந்த மனிதர் .அவரது நூல்களில் இந்த நூலுக்கு சிறப்பிடம் உண்டு . 

தாவோ - சூஃபிஜென் என்ற பிறமொழி தத்துவங்களை அழகு தமிழில் எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி உள்ளார்கள். விஜயா பதிப்பகம் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர். 

விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் அய்யாவின் பதிப்புரையிலிருந்து சிறு துளிகள்.

ஜென் தத்துவங்களும் கதைகளும் நுட்பமான அர்த்தங்களை உள்ளடக்கியவை. சூஃபிசம் - அமைதி, ஒற்றுமை, கருணை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை போதிப்பது, தாவோயிசம் கருணை, அடக்கம், பணிவு என்ற மகத்தான கருத்தியல்களுக்கு அடிப்படைக் கோட்பாடாக விளங்குகிறது.”

ஜென் தத்துவங்கள் பற்றி சில நூல்கள் வந்துள்ளன. படித்தால் பாமரருக்குப் புரியாது. கடுமையான மொழியிலேயே இருப்பதால் புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கும். ஆனால், இந்நூலில் தாவோ, சூஃபி - ஜென் என்ற மூன்று தத்துவங்களையும் எளிமைப்படுத்தி பலாப்பழங்களை உரித்து பலாச்சுளை தருவது போல மிக எளிமையாகவும் இனிமையாகவும் அழகு தமிழில் வழங்கி உள்ளார்கள்.  மூன்றும் முக்கனிகள் போன்று இனிக்கின்றன.

படிக்கும் வாசகர்களின் மனதை செம்மைப்படுத்தும் விதமாக கோபம் அகற்றி குணம் தரும் விதமாக மனிதநேயம், சகோதரத்துவம் கற்பிக்கும் விதமாக மனிதன் மனிதனாக வாழ்வதற்கு, வழி சொல்லும் விதமாக விலங்கிலிருந்து வந்த மனிதன் விலங்கு குணம் அகற்றும் விதமாக பல்வேறு தத்துவங்களை மிகவும் எளிமைப்படுத்தி புரியும் விதமாக கொட்டி வரும் அருவி போன்ற நடையில் அழகு தமிழில் வழங்கி உள்ளார்கள். பாராட்டுகள்.

ஒரே நூலில் மூன்று தத்துவங்கள் இருப்பதால் அதற்கு பொருத்தமான மூன்று ஆளுமைகள் அணிந்துரை வழங்கி உள்ளனர். தாவோ அணிந்துரை எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சூஃபி அணிந்துரை மௌலவி படகறை . முஹம்மது இஸ்மாயில் காஷிஃபி, ஜென்இனிய நண்பர் கவிஞர் ஆத்மார்த்தி ஆகியோர் வழங்கி உள்ளனர். ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் என்பது போல ஒரே நூலில் மூன்று தத்துவங்கள் அடங்கி உள்ளன.

மனிதர்களும் முழுமையானவர்களல்லர். அவர்களிடம் பூரணத்-துவத்தை எதிர்பார்ப்பது பயனளிக்காது. குறைபாடுகளுடன் அவர்களை எற்றுக்கொள்வதே நலம். நாம் எதிர்பார்க்கும் சர்வ சாமுத்திரிகா லட்சணங்களுடன் உலகத்தில் ஒருவர் கூட இருக்க முடியாது. நாம் பூரணமானவர்களைத் தேடி வாழ்வைத் தொலைத்து விடுகிறோம். 

இந்த வைர வரிகளை தாவோ தத்துவத்தை புரிந்து உள்வாங்கி நடந்து கொண்டால் வீட்டில், வெளியில், அலுவலகத்தில் எங்கும் பிரச்சனை வராது. புரிதல் வேண்டும், ஏற்றல் வேண்டும், விட்டுக்-கொடுத்தல் வேண்டும், மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்கள் தாவோ-வில் கடல் போல் உள்ளன. கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல முத்தெடுத்து அழகிய முத்துமாலையாக வழங்கி உள்ளார்கள்.

ஒவ்வொரு கட்டுரையின் முடிவில் சிறிய பெட்டிக் கதை உள்ளது. இந்த பெட்டிக் கதைகளை நம் மனப்பெட்டியில் உள்வாங்கிக் கொண்டால் மென்மையான மனிதராக, பண்பான மனிதராக, பாசக்கார மனிதராக, மன்னிக்கும் மனிதராக, நேசிக்கும் மனிதராக, நேயமிக்க மனிதராக மாறி விடுவோம் என்பது முற்றிலும் உண்மை.

நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்கள், இந்த நூல் எழுதுவதற்காக பல நூல்களை தருவித்து படித்து ஆய்ந்து ஆராய்ந்து வடித்துள்ளார்கள். அவரது கடின உழைப்பை உணர முடியும்.

சூஃபி என்பது அன்பின் ஒருவகை வெளிப்பாடு. அர்ப்பணிப்பின் இன்னொரு வடிவம். அறிவின் மற்றொரு பரிணாமம். எப்படி அன்பைச் சொற்களால் சொல்ல முடியாதோ அப்படி சூஃபியையும் வார்த்தைகளால் வடிவமைத்து விட முடியாது. அதன் ஞானத்தை கதைகளில், கவிதைகளில், கலைகளில், நடன அசைவுகளில், வழிபாடுகளில் உணரலாம். தேடத் தெரிந்தவனுக்கே தென்படும் புதையல் அது 

நூலாசிரியருக்கு தேடத் தெரியும் என்பதால், தேடித்தேடி புதையலில் உள்ள தத்துவமென தங்கத்தை உருக்கி அணிகலன்-களாகவே வழங்கி உள்ளார். பாராட்டுக்கள். 

ஜென் இந்தியாவில் வேரூன்றி சீனத்தில் கிளை விரித்து ஜப்பானில் பூத்த அதிசய மலர். ஜென் தத்துவமல்ல, குழப்பிக் கொள்வதற்கு கோட்பாடு அல்ல, அத்து மீறுவதற்கு, அதில் நிபந்தனைகளும் இல்லை. நிர்ப்பந்தங்களும் இல்லை, விதிகளும் இல்லை, தண்டனைகளும் இல்லை.” 

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார் பேரறிஞர் அண்ணா. அப்படி மாற்றான் தோட்டத்து மல்லிகை மூன்றின் மணத்தை நுகர்ந்து வாசகர்களுக்கு தத்துவ விருந்து வைத்துள்ளார். முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்களின் சிறந்த நூல் வரிசையில் இந்நூலிற்கும் இடமுண்டு.



வெளியீடு : விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-641 001.

பக்கங்கள் : 480,
விலை
: ரூ.360.                                         




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்