நூல் : தொல்காப்பியம் காட்டும் மகளிர் ஆளுமை !
நூல் ஆசிரியர் :  
பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி

 

நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க செந்தமிழ்க்கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். காந்தி கிராமியப் பல்கலைக்-கழகத்தில் தகைசால் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழக அரசின் 2015ஆம் ஆண்டிற்கான இளங்கோஅடிகள் விருது பெற்ற முதல் பெண்மணி. 

பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மாணவர்களுக்கு தொல்காப்பியம் பற்றி எடுத்து இயம்பிய அனுபவம் துணை நிற்க தொல்காப்பியம் பற்றிய ஆய்வு நூலை வடித்துள்ளார்கள். 

தமிழில் மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களால் ஆனது. பலாச்சுளை போன்றது தொல்காப்பியம். வெளியே கரடுமுரடாகவும், உள்ளே இனிக்கும் சுளையாகவும் இருக்கும். படித்த பண்டிதர்கள், புலவர்கள் இவர்களுக்கு மட்டுமே விளங்கிடும் தொல்காப்பியத்தின் வைர வரிகளை எளிமைப்படுத்தி எல்லோருக்கும் புரியும்வண்ணம் இனிக்கும் பலாச்சுளையாக வழங்கி உள்ளார்.

பெண்ணியம், பெண்ணுரிமை, பெண் விடுதலை என்றெல்லாம் குரல் எழுப்பப்படும் இன்றைய சூழலில் தொல்காப்பியம் காட்டும் மகளிரின் ஆளுமைத் தன்மைகளைப் புலப்படுத்துவது இந்நூலின் நோக்கம் ஆகும். 

நூலாசிரியர் தன்னுரையில் நூல் எழுதியதன் நோக்கத்தை நன்றாக உணர்த்தி உள்ளார். மதுரையில் இலக்கிய இணையர் என்று பாராட்டுப் பெற்றவர்கள் தமிழ்த்தேனீ இரா.மோகன் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன். அய்யாவின் தாக்கம் அம்மாவிடம் உள்ளது. அய்யா போலவே பாடல் எண், பக்க எண், அடிக்குறிப்புகள், உதாரண நூல்கள் என அனைத்தையும் குறிப்பிட்டு மிக நுட்பமாக நூலை வடித்துள்ளார். பாராட்டுக்கள்.

தலைவியின் அருமை பெருமையை தொல்காப்பிய பாடல்கள், எந்த எந்த இடத்தில் சொல்கின்றன. தலைவன் கூற்றாகவும், தலைவி கூற்றாகவும், தலைவியின் தாயின் கூற்றாகவும், தலைவியின் தோழி கூற்றாகவும் எவ்வாறு சிறப்பித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கு தொல்காப்பியர் எந்த அளவிற்கு மதிப்பு வழங்கி உள்ளார். ஆளுமைத் திறனை விளக்கி உள்ளார் என்பதை ஆய்வு நூலாக, அற்புத நூலாக வழங்கி தமிழ் விருந்து வைத்துள்ளார். தமிழாசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

தொல்காப்பியத்தின் சிறப்பு மட்டுமல்ல. பொருத்தமான இடங்களில் சங்க இலக்கியங்கள் நற்றிணை, திருக்குறள் போன்ற இலக்கியங்களையும் மேற்கோள் காட்டி உள்ளார்.

தலைவி, தலைவனுக்காக மோர்க்குழம்பு வைக்கும் பாடல், அதன் பொருள் அனைத்தும் நூலில் உள்ளது. மோர்க்குழம்பு என்பது இன்று நேற்று வந்ததல்ல. பழங்காலத்திலிருந்து தொடர்கிறது என்பதை உணர் முடிந்தது. நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், பல்லாயிரம் பட்டிமன்றங்களும் பேசியவர். இப்பாடலை மேடையில் கூறியபோதும் கேட்டுள்ளேன்.

தலைவியின் கோபத்திற்கு தலைவன் அஞ்சுவது, தலைவியின் கடமை, இப்படி பல வாழ்வியல் கருத்துக்கள், பண்புகள், மரபுகள் உள்ளது. எடுத்து எழுதி உள்ளார். தொல்காப்பியம் என்ற பெருங்கடலில் மூழ்கி நல்முத்துக்களை எடுத்து வந்து தொடுத்து முத்துமாலையாக இந்நூலை வழங்கி உள்ளார்.

தொல்காப்பியம் தொடர்பாக வந்திட்ட அனைத்து நூல்களையும் வாசித்து யோசித்து ஆய்ந்து ஆராய்ந்து இந்நூலை வழங்கி உள்ளார்.

தொல்காப்பியம் படித்திராதவர்களுக்கு பயனளிக்கும் நூல். படித்தவர்களுக்கு அசைபோட உதவிடும் நூல். தொல்காப்பியம் இலக்கணம் மட்டுமல்ல. இலக்கிய வளமும் மிக்க நூல். அறம், புறம் இரண்டு, ஐந்திணைகள் இப்படி எல்லாம் உள்ளது. தொல்காப்பியத்தில் என்று எடுத்தியம்பிடும் நூல். 

தொல்காப்பியம் குறித்து இதுவரை வந்த நூல்களில் இந்நூல் குறிப்பிடத்தகுந்த நூல். இந்நூலிற்கு பரிசும் பாராட்டும் விருதும் வந்து சேரும். நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது. 

இன்றைக்கு ஆணவக் கொலைகள் நடந்து வருவது வெட்கக்கேடு.  தொல்காப்பியம் காலத்திலேயே காதல் இருந்துள்ளது. தலைவன் தலைவி காதல் அங்கீகாரம் வழங்கி மணமுடித்தல் நடந்துள்ளது. காதலுக்கு தோழி உதவி உள்ளார்.

தமிழ்ச்சமூகம் தொல்காப்பியம் காலத்திலேயே நாகரிகம் மிக்க சமுதாயமாக அறிவுத்திறன் மிக்க பெண்கள், வலிமை மிக்க ஆண்கள், பண்பு, மனிதநேயம், பெண்களை மதிக்கும் சமுதாயமாக வாழ்வாங்கு வாழ்ந்து உள்ளனர் என்பதை தொல்காப்பியப் பாடல் வரிகளின் மூலம் நன்கு எடுத்தியம்பி உள்ளார். தமிழன்னைக்கு அணிகலன் வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.






வெளியீடு : அரசி பதிப்பகம்,
78/1,
ஆழ்வார் நகர், நாகமலை,
மதுரை
-625 019.
பக்கங்கள்
: 182, விலை : ரூ. 180. 
பேச
: 95975 34084                                   



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்